குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, July 29, 2025

கோவை புத்தக திருவிழா - தாத்தா - ஈகை பற்றிய புது விளக்கம்

வருடா வருடம் மகனுக்கும் மகளுக்கும் புத்தகத் திருவிழாவில் சுமார் 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த வருடம் மகன் படிக்கச் சென்றிருப்பதால், மகள் கோவை கொடிசீயாவில் நடந்து கொண்டிருந்த புத்தகத் திருவிழா 2025க்கு போக வேண்டுமென்று சொல்லி இருந்தார்.  ஞாயிற்றுக் கிழமை ஹாஸ்டலுக்குச் சென்று, அவரை அழைத்துக் கொண்டு நேரடியாக புத்தகத் திருவிழாவுக்குச் சென்று விட்டோம்.

இந்த வருடம் புத்தக விற்பனை மந்தமாக இருக்கிறது எனச் சொன்னார்கள். அரங்குகளில் கூட்டம் இல்லை. பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள். ஆளுக்கொரு தின்பண்டப் பையைக் கொடுத்து அதைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு புத்தக கடைக்குள்ளும் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

மகள் படிப்பதற்கு நல்ல நாவல் பரிந்துரைக்கவும் எனக் கேட்டார். கி.ராஜநாராயணனின் நாவல், சிறுகதை தொகுப்பு ஒன்றினைப் பார்த்தேன். வாங்கிக் கொடுத்தேன். 

முதலில் அகிலனின் சித்திரப்பாவையை எடுத்தேன். அதை விட மண்ணின் வாழ்வியல் தடத்தைப் பதித்த எழுத்துகள் மகளுக்கு தெரிய வேண்டுமென்ற ஆவலில், வாங்கிக் கொடுத்தேன்.

அடுத்து பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மடத்தின் புத்தக் கடைக்குச் சென்று நிவேதிதா பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். 

பின்னர் மகள் பல ஆங்கில புத்தகங்களை வாங்கினார்.  இறுதியில் முத்து காமிக்ஸ் சென்றோம். 

வழமை போல பல புத்தகங்களை வாங்கினார். நான் வீல்சேரில் அமர்ந்திருந்தேன். அப்போது அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் ஒரு சிறு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கினான். 20 ரூபாய் இருக்கும். அவனிடம் அது என்ன காமிக்ஸ் என்று காட்டச் சொன்னேன்.

”தாத்தா, அப்பாகிட்டே 200 ரூபாய் கேட்டேன். அவர் 100 ரூபாய் தான் கொடுத்தார். காமராஜர் வாழ்க்கை வரலாறு வாங்கலாம்னு வந்தேன். ஆனால் அது விலை அதிகமாக இருக்கு, அதனால இதை வாங்கினேன்” என்றான்.

மகளுக்கு அவன் என்னை தாத்தா என்று சொல்லுகிறானே என ஒரே சந்தோஷம். 

அவனிடம் இங்கே இருக்கும் காமிக்ஸ் புத்தகத்தில் உனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள் என்றேன். மறுத்தான். மகள் அவனை வற்புறுத்தி ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கிக் கொடுத்தாள். அவனை அழைத்துக் கொண்டு மீனாட்சி புத்தகக் கடைக்குச் சென்று, காமராஜரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எடுத்து அவனிடம் கொடுத்த போது வாங்கவே மாட்டேன் என சொல்லி விட்டான். 

விலை அதிகமாம். அந்த புத்தகத்தின் விலை 400 ரூபாய்.

”ஏற்கனவே காமிக்ஸ் வாங்கிக் கொடுத்திட்டீங்க, இது வேணாம்” என்று மறுத்தான். 

அவனை சரி செய்து புத்தகத்தை வாங்கி அவன் கையில் கொடுத்து விட்டு, ”நல்லா படி” எனச் சொல்லி விட்டு வந்தேன். அவன் மீண்டும் ”நன்றி தாத்தா” என்றான். 

மகளுக்கும், மனைவிக்கும் ஒரே சிரிப்பு.

அப்படியே ஒவ்வொரு புத்தக கடையாக வலம் வந்து கொண்டிருந்த போது, சுப அறவாணனின் மனைவி, அவரின் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் எனச் சொல்லி கேட்டார். அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கி புரட்டிக் கொண்டிருந்த போது, அருகில் ஒரு பெரியவரும், அவரின் பேத்தியும் கையில் நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தனர். 

அந்த அம்மா என்னிடம் ”அய்யா, இவரைப் பாருங்கள், இந்த புத்தகங்களை சிறைச்சாலை வாசிகளுக்கு படிக்க வாங்கிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

குள்ள உருவம், நரைத்த தலைமுடி, கனத்த கண்ணாடி, அருகில் அவரின் பேத்தி, அவர்கள் இருவரையும் பார்த்தேன். மனம் நெகிழ்ந்தது. 

நுழைவாயிலின் ஒரம் சிறைச்சாலை வாசிகளுக்கு புத்தகங்கள் தானம் செய்ய கேட்டு, ஒரு பாக்ஸ் இருந்ததைப் பார்த்தேன்.

நல்ல இதயங்களும், நான்கு பேருக்கு உதவ வேண்டுமென்ற நல்லவர்களும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைத்ததில் மகளுக்கு நிரம்பவும் சந்தோஷம்.

நான் கலீல் ஜிப்ரானின் புத்தகங்கள் சிலவும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புத்தகமும், தினவு இதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து விட்டேன்.

அந்த அரசுப் பள்ளி மாணவனைப் பற்றிய நினைவு வந்தது. பசங்க வேலைக்குச் சென்றதும், வருடம் தோறும் கொஞ்சம் பணத்துடன் புத்தக விழாவுக்குச் சென்று பசங்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தர வேண்டுமெனெ நினைத்துக் கொண்டிருந்த போது, கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன்.

”உன்னைக் காட்டிலும் எனக்கு மிகவும் தேவையானதை எனக்கு கொடுப்பது அல்ல ஈகை, என்னைக் காட்டிலும் உனக்கு மிகவும் தேவையானதை எனக்குத் தருகிறாயே அது தான் ஈகை.”

மண்டையில் சுத்தியலால் தட்டியது போல வலித்தது. 

அடச்சே, இது என்ன இப்படி சொல்லி இருக்கிறாரே என்ற எண்ணமும், தொடர்ந்து பல நினைவுகளும் ஊடாடின.

தமிழர் வரலாற்றில் தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று சொல்லி இருக்கிறார்கள். பாத்திரம் அறிந்து தானம் செய் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை ஏன் சொன்னார்கள் என்பதற்கான காரணங்கள் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடும் வார்த்தைகள் கலீல் ஜிப்ரான் சொன்னது.

மகாபாரதத்திலே கர்ணன் தான் செய்த புண்ணியங்களை கூட தானம் செய்திருந்தாலும், அன்னதானம் செய்யாத காரணத்தினாலே, அவனுக்கு சிவலோகத்தில் அனுமதி கிடைக்காமல், வைகுண்டத்திலே அனுமதி கிடைத்தது என்றுச் சொல்வார்கள். தர்மத்தையே பெயராக கொண்ட தர்மத்தில் சிறந்தவன் தர்மன் என்றெல்லாம் படித்திருக்கிறோம்.

இப்படி ஈகையிலும் கூட வகைகள் உள்ளன.

ஆனால் தமிழர்கள் இவை எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக இருப்பதும், கலீல் ஜிப்ரான் என்ற மேலை நாட்டுக்கார எழுத்தாளரின் வார்த்தைகள் எழுதப்படும் முன்பே,  அவர்கள் செயல்படுத்தியதும் நினைவிலாடியது.

தனக்குத் தேவையான தேரை, படர வழியின்றி காற்றில் அலைந்து கொண்டிருந்த முல்லைக் கொடி படர்ந்து தழைக்கக் கொடுத்து விட்டு, நடந்து வந்தவர் பாரி வள்ளல் என்ற தமிழ் மன்னன்.
 
கர்ணன் என்ற புராண கதைப் பாத்திரம் கூட தமிழ் மன்னனிடம் தோற்று விட்டது அல்லவா?

பாரி வள்ளல் தன்மைக்கு முன்னால் நாமெல்லாம் செய்யும் ஈகை ஈகையா?  தனக்குத் தேவையானதை செடிக்கு தானமளித்து விட்டு வரும் அரசனின் அப்போதைய மனநிலை நமக்கு வராது. கணக்கு வழக்குகள் பார்த்துதான் ஈகை செய்வோம். அரசன் செய்வான், நம்மால் முடியுமா? என்று தோன்றும். அதுவல்ல இங்கே காரணம் - அந்த நொடியின் மனநிலை. அவ்வளவுதான். 

* * * 

உலகில் சொல்லப்பட்ட எல்லா நாகரீகத்தினையும் விட, உயர்ந்த நாகரீகத்தையும், பண்பாட்டையும் கொண்ட தமிழர்கள் கீழடி நாகரீகத்தை வெளியிட மறுத்து விட்டார்கள் இந்திய ஒன்றிய மோடி அரசு. அதிகாரங்கள் மாறும் போது, தடை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அறம் எப்போதும் விழித்திருக்கும்.

யாரும் இங்கே தப்பவே முடியாது. செய்யும் செயலின் பலன்கள் அவரவரைச் சார்ந்தது.

வளமுடன் வாழ்க.


29.07.2025












Wednesday, July 16, 2025

வேத பாடசாலை சம்பவம்

போன் இன்றி ஒரு அணுவும் அசையாத நிலைக்கு உலகம் வந்து விட்டது. ஆதார் கார்டு இன்றி இனி அஃபீஷியலாக எதுவும் செய்ய முடியாது என்று அரசு சொன்னாலும், கோர்ட்டில் ஆதார் அடையாள அட்டை ஒரு ஆவணமே இல்லை என சொல்கிறது ஒன்றிய அரசு. பீகார் ஓட்டு லிஸ்ட் பிரச்சினை தெரியும் தானே உங்களுக்கு. அதைத்தான் சொன்னேன்.

போலி ஆதார் கார்டு கொடுப்பதும், குற்றம் சொல்வதும் அரசாங்கம். சரி செய்ய வேண்டிய அரசாங்கம் வழங்கும் ஒரு முக்கியமான ஆவணத்தை ஏற்க முடியாது எனக் கோர்ட்டில் சொல்வது, என்ன விதமானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

போனைத் திறந்தால் பெண் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. சோஷியல் மீடியாக்களில் பெண்களின் அரை நிர்வாணமும், பச்சை பச்சையாக பேசும் வீடியோக்களும், ஷார்ட்சுகளும் உலா. 

விஜய் டிவியில் ஆஃபீஸ் என்றொரு தொடரில் ஒரு பெண் நடிக்கிறார். முகத்தில் கொஞ்சம் சிவப்பு தழும்புகளாய். அந்தம்மாவின் இன்ஸ்டாகிராம் ஷார்ட்ஸ் - ஆபாசம். 

விஜய் டிவி தமிழ் கலாச்சாரத்துக்கு பால் ஊற்றிக் கொண்டிருக்கிறது. தாவணி பாவாடை போடச் சொல்லும், ஆனால் கண்டவனை கட்டிப் பிடிக்கச் சொல்லி கலாரசனை நிகழ்ச்சிகளை நடத்தும். யார் இதையெல்லாம் கேட்பது? 

ஒரு நகைக்கடை அதிபரிடம் ஒருவர் எதற்காக விளம்பரங்களுக்கு நடிகைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டார். பணமகள் வேண்டுமென்றால் விலை மகளும் வேண்டும் என்றாராம். மாற்றி எழுதி இருக்கிறேன். விலை மகள் என்றால் விபச்சாரம் என எடுத்துக் கொள்ள கூடாது. பணம் கொடுத்தால் நடிக்க வருகிறார்கள் அல்லவா? அப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சம்பவம். இன்றைய மாணவர்களின் நிலை என்னவாகி இருக்கிறது என அறிந்து கொள்ளுங்கள்.

அது ஒரு வேத பாடசாலை. அங்கு பல ஊர்களிலும் இருந்தும் அப்கோர்ஸ் பார்ப்பனர்களின் பசங்க - வேதம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அங்கு ஒரு மாணவன் - மிக நல்ல குணமும், நல்ல படிப்பும் கொண்டவன். வேதம் படித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பாடசாலைக்கு வேறொரு ஊரில் இருந்து, ஒரு பார்ப்பன சிறுவன் புதிதாக சேர்ந்திருக்கிறான். புதிதாக வந்தவனுக்கு வயது கொஞ்சம் அதிகம். அந்த சின்னப் பையன் நன்றாகப் படிக்கிறானே என உள்ளுக்குள் கொஞ்சம் பொறாமை. 

அவனை இவன் பாத்ரூமிக்குள் அழைத்துச் சென்று பெண்ணின் யோனி படத்தை சுவற்றில் வரைந்து காட்டி, இதைப் பார்த்திருக்கிறாயா? எனக் கேட்டிருக்கிறான். அது மட்டுமின்றி பல்வேறு காமம் தொடர்பான பல சில்மிஷ வேலைகளையும் செய்திருக்கிறான். அவனின் நோக்கம் அந்தச் சிறுவனின் படிப்பைக் கெடுப்பது. 

பையனும் வலையில் வீழ்ந்து அவன் சொன்னவாறு ஏதேதோ செய்திருக்கிறான். நாளடைவில் அந்தப் பையனின் அம்மாவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. பையன் மன உளைச்சலில் மனநிலை பிறழ்ந்து விட்டான். புதிதாக வந்தவன் இவனின் படிப்பையும், நன்னடைத்தையும் காலி செய்து விட்டான்.

இது போன்று வேத பாடசாலையில் மட்டும் நடக்கவில்லை. பல பள்ளிகளில், கல்விக் கூடங்களில் எல்லாக் காலங்களிலும் நடக்கும் கொடுமை. 

எனக்குப் பள்ளியில் எனது பள்ளி வாத்தியாரே செய்தார். அவருக்குப் பிடித்த மாணவனுக்கு அதிக மார்க் போட்டு விடுவார். அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பது போல செல்போன், இணையம் எதுவும் இல்லை. 

பி.இ படிக்க எனக்கு கட் ஆஃப் மார்க் இருந்தும், படிக்க முடியாது எனச் சொல்லி விட்டார். அவர் சொன்னது உண்மை என நம்பி பின்னர் பி.எஸ்.ஸி கணிப்பொறி டிகிரி படித்தேன். 

பின்னாளில் தான் தெரிந்தது, என் மீது எரிச்சலில் இருந்திருக்கிறார் என. ஏன் என எனக்குப் புரிந்தது. என் அப்பாவின் சொத்துக்கள்.

அவனின் அம்மா அந்தப் பையனை அழைத்துக் கொண்டு கோவில் கோவிலாக போய் இருக்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. மருத்துவமனையில் காட்டி மருந்துகள் கொடுத்திருக்கிறார்கள். ம்ஹூம்.

வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி - ஜோதி சுவாமியைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு குடும்பத்துடன் வாசியோகப் பயிற்சியைக் கற்றுக் கொடுத்து, ஒரு சில ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பையன் வெகு சிரத்தையாகப் பயிற்சியைச் செய்திருக்கிறான். பாடசாலைக்குச் சென்றிருக்கிறான். அந்தப் பையனை எதிர்த்துப் பேசி மூடிட்டு போடானுட்டான். 

பாட சாலையின் குருக்களுக்கு பையனின் நடத்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். பையனின் அம்மாவுக்குப் போன் செய்து என்ன நடந்தது என விசாரித்திருக்கிறார்.  

இப்போது பையன் மிகச் சரியான வகையில் வேதம் படித்துக் கொண்டிருக்கிறான். அதைக் கேள்விப்பட்ட எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவன் நன்றாக இருக்க வேண்டும். 

புதிதாக வந்த பையனின் வாழ்க்கையும் சிறக்க வேண்டும். அவனுக்கும் நல்லன நடக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

இன்றைய மக்களுக்கு உடனுக்குடன் சினிமாவில் ஒரே பாட்டில் பணக்காரன் ஆவது போல எல்லாமும் நடந்து விட வேண்டுமென ஆவல். அத்தனைக்கும் ஆசைப்படுவதால் வரும் வினை. எதுவும் நடக்காது. திட்டமிடல், செயல்படுத்தல், வெற்றி அடைதல் என்பது வார்த்தைகளில் இருக்கும். ஆனால் உண்மையில் எதுவும் நடக்காது. இழப்பு தான் வரும். அனுபவமே கற்றுக் கொடுக்கும்.

ஒரு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர், தன் ஓய்விற்குப் பிறகு 800 கோடி சம்பாதித்திருக்கிறார். அது எப்படி? சாத்தியமா? எனக் கேட்பீர்கள். ஆம் அவர் சாத்தியப்படுத்தினார். நிறைய வங்கியாளர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் அவர்களால் இந்தளவு சம்பாதிப்பது பற்றி யோசிக்கவே முடியாது.

அனுபவம் என்பது ரொம்பவும் முக்கியமானது வெற்றிக்கு.

உங்கள் குழந்தைகளின் நடத்தைகளை கொஞ்சமாவது கவனியுங்கள். அவர்களின் பாதையில் காமம் பற்றிய சேறு கொட்டிக் கிடக்கிறது. தெரிய கூடாத வயதில் தெரியக் கூடாதவைகளைத் தெரிந்து கொண்டு வழி மாறி விடுகிறார்கள்.

முதலில் சினிமாவை உங்கள் வீட்டில் இருந்து துரத்தி அடியுங்கள். சினிமா ஹீரோக்களும், ஹீரோயின்களும் போலிகள் என்பதை நினைவில் நீங்கள் வையுங்கள். அவர்களின் ஒவ்வொன்றும் போலியானவை - அதாவது நடிப்பு - அது உண்மையில்லை. அவர்கள் உங்களிடமிருந்து பெறுவது உங்கள் வாழ்க்கையை. போலியை நம்பி வாழ்க்கையை இழக்காதீர்கள்.

உங்கள் வாரிசுகளிடம் சொல்லி வளருங்கள். 

சினிமாவில் காட்டப்படுவது போல எவரும் வாழவே முடியாது அஃப்கோர்ஸ் நடிகர்களும் கூட அப்படித்தான் வாழ்கிறார்கள். திரை வாழ்க்கை திரையோடு போய் விடும் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். காமத்தின் வழியாக ஒவ்வொருவரின் மனதுக்குள் ஊடுறுவும் போலிகள் - நம்மை ஆட்சி செய்ய - நம்மிடமிருக்கும் செல்வத்தை ஆஹோவென வாழ பயன்படுத்த சினிமா மூலம் தூண்டில் போடுகிறார்கள்.

கவனமாய் இருங்கள்.