குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, September 10, 2019

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா?

இந்த மாத பிசினஸ் டுடேயை வாசித்த போது, நம் பாரதத்தின் மொத்தக் கடன் தொகை (மாநிலத்தையும் சேர்த்து) ஒரு லட்சத்து முப்பத்து ஓராயிரம் லட்சம் கோடி கடன் என்ற செய்தியைப் படித்தேன். 130 கோடி மக்கள் தொகை கொண்ட பாரதத்தின் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் கோடி கடன் இருக்கிறது. இத்தனைக் கடனும் ஏன் உண்டானது என்று பார்த்தால் தெளிவற்ற நிர்வாகமும், ஆட்சி முறையும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. 




என்ன நடந்தது? ஏன் இத்தனை கடன் என்பதற்கு ஒரே பதில் ஊழல். ஆம், இத்தனை தொகையும் ஊழலால் இந்தியாவிற்கு ஏற்பட்ட கடன். மக்களுக்கு இந்த சித்து விளையாட்டு புரிவதில்லை. புரியும் அளவிற்கு மீடியாக்கள் விடுவதில்லை. எவன் ஒருவன் டிவியும், செய்தி தாளும் படித்து, அதன் உண்மை என்னவென்று ஆராய்கிறானோ அவன் தான் புத்திசாலி. மீடியாக்களில் வரும் செய்திகள் உண்மையென நம்பினவன் முட்டாள். அந்தக் காலத்தில் இருந்து இதுதான் நடந்து வருகிறது. அவ்வப்போது அய்யோ குய்யோ என ஜன நாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது என்று கூக்குரலிடுவார்கள் பத்திரிக்கையாளர்கள். அதெல்லாம் சும்மா....!

நீதியின் பெயரால் உயர் மட்ட அளவில் நடக்கும் அக்கிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. நீதிபதிபதிகளை விமர்சிக்க கூடாது என்றும், அது தேச துரோகம் என்றும், அவமதிப்பு வழக்கு என்றும் மக்களைப் பயமுறுத்துவார்கள். பேட்டி கொடுத்த நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மீது எந்தச் சட்டத்தில் இந்த நீதித்துறை நடவடிக்கை எடுத்தது என்று எவராவது யோசித்திருக்கின்றீர்களா? யோசித்திருக்கமாட்டீர்கள். ஏனென்றால் உங்களின் சிந்தனையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்ற பயம் திணிக்கப்பட்டிருக்கிறது.

சரி விடுங்கள் எரிச்சல் தான் மேலோங்கும். இங்கு எவனும் நல்லவனில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெளிவு பெற வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவின் தன்னாட்சி பெற்ற உயர் நிர்வாகத்துறையின், உயர் அதிகாரி ஒருவரால் பாராட்டப்பட்டேன். அவர் எனது பிளாக்கைப் படிக்கிறார் என்கிற சிறு நேரத்து மகிழ்ச்சி உண்டானது.

“அய்யா, உங்களுக்கு எனது அனேக நன்றிகள்”

ஏதோ ஒரு வகையில் சிறு உதவியைச் செய்கிறேன் இந்த உலகிற்கு என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மூடுமந்திரம் போடப்பட்டிருக்கும் நம்மைச் சுற்றிய மாயையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி விட முயல்கிறேன். பட்டவர்த்தமாக எழுதினால் பலரின் மனசாட்சி விழித்துக் கொள்ளும். ஆகையால் புரிந்தும் புரியாதவாறு எழுதுகிறேன். புரிந்தவர்கள் தெளிவாகுங்கள். புரியாதவர்கள் இன்னும் ஆழப் படியுங்கள்.

சரி, ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும் ஒரு லட்சம் கோடி கடனை கட்ட வழி இருக்கிறதா என்று அறிந்து கொள்ள இங்கு தொடர்கின்றீர்கள். தொடருங்கள்.

எனது மனையிவியின் தூரத்து உறவினர் ஒருவர், தமிழகத்தின் பிரபலமான கட்சியில் பதவி வகித்தவரும், எம்.பியும் ஆன ஒருவருக்கு கடன் அதுவும் பெரிய அளவில் கடன் கொடுத்தார். உறவினர் தனது அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து வட்டிக்கு வாங்கி, கொஞ்சமே கொஞ்சம் வட்டி உயர்த்தி அந்த அரசியல்வாதிக்கு கொடுத்தார். கொஞ்ச நாட்களில் அந்த அரசியல்வாதியால் கடனையும், வட்டியையும் கொடுக்க முடியவில்லை. உறவினர் தற்கொலை செய்து கொண்டார். வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களின் கதி?

வங்கியும் இதே போலத்தான். வட்டிக்கு வாங்கியவர்கள் ஒழுங்காக கடனைக் கட்டவில்லை என்றால் என்ன ஆகும்? டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு எங்கிருந்து வட்டியைக் கொடுக்கும்? திவால் அல்ல வங்கியும் தற்கொலை செய்து கொள்ளும். அப்படித்தான் எனது பிரியமான விஜயா வங்கியும் தற்கொலை செய்து கொண்டது.

கலைஞர், ஒவ்வொரு வீட்டிற்கும் டிவி கொடுத்தார். அந்த டிவியால் சன் டிவி பயன் அடைந்தது. டிவியை டெண்டர் விட்டு வாங்கினார் அல்லவா? அந்த டிவியால் பொருளாதாரம் உயர்ந்ததா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மக்களின் பொருள் இன்னொருவரின் பாக்கெட்டில் சென்று சேர்ந்தது. டிவி வாங்கிய வகையில் பர்செண்டேஜ், சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கும். இதனால் சமூகத்திற்கு என்ன பயன்? ஒரு எழவும் இல்லை. மிக்சி, கிரைண்டரின் கதையும் இதேதான். இலவச பைக்கிற்கும் இதே கதைதான்.

எனது இனிய நண்பர்களே, கடனைக் கட்ட வழி என்னவென்று உங்களுக்கு தெளிவாகி விட்டதா? தெளிவாகவில்லை எனில் நானொன்றும் செய்ய முடியாது.

இதுவரை பிஜேபி அரசு பொருளாதாரத்தின் ஆணி வேர் எதுவென்று கண்டுபிடிக்கவில்லை. அது முதலில் உயர் ஜாதிய சிந்தனையிலிருந்தும், மதக் கோட்பாடுகளிலிருந்தும் வெளி வர வேண்டும். தற்போதையைப் பொருளாதாரம், தத்துவங்கள் எதுவும் நாட்டின் வளர்ச்சிக்கானதல்ல என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகின்றதோ தெரியவில்லை. ஒரு சாதாரண விவசாயிக்குத் தெரிந்த பொருளாதாரக் கோட்பாடு, பொருளாதார மேதைகளுக்குத் தெரியவில்லை என்கிற விடயம், நாட்டை வழி நடத்துபவர்களின் அறிவின் மீது சந்தேகத்தினை உண்டாக்குகிறது.

கிராமப்புறங்களில் ஒருவன் கடனாளியாகி விட்டால், அப்பன் சொத்து, தாத்தா சொத்து எங்கிருக்கிறது என்று தேடித் திரிந்து கண்டுபிடிப்பான். அதனால் கடன் தீருமா என்றால் தீராது. அதைப் போலத்தான் ஊழலைக் கண்டுபிடிக்கிறேன், பதுக்கிய பணத்தைக் கொண்டு வருகிறேன் என அமலாக்கத்துறையினரையும், சிபிஐயும் வைத்து பழம் சொத்தினைத் தேடித் திரிகிறது பிஜேபி அரசு. செமக் காமடி.

பொருளாதார மேதைகளே, 131 லட்சம் கோடியையும் வரக்கூடிய பத்தாண்டுகளில் கட்டி விடலாம். நிச்சயம் முடியும். கடனற்ற பாரதத்தினைக் கட்டமைத்து, மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கலாம். கொஞ்சம் உங்களின் பொருளாதார தத்துவங்களை ஆராயுங்கள். எங்கே நீங்கள் கோட்டை விட்டீர்கள் என்று.


1 comments:

நிகழ்காலத்தில்... said...

கணக்கு சரிபார்க்கவும். ஒரு ஆளுக்கு ஒரு இலட்சம் கோடி கடன்னு சொல்லி இருக்கறீங்க. வெறும் ஒரு லட்சம் என்றால் ஓரளவிற்கு ஓகே

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.