குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, November 14, 2018

மாறிய எண்ணம் மாற்றிய குரு

ஆற்றங்கரையில் துண்டினை விரித்துப் படுத்து இருந்தேன். அருகில் கருவை மரம். கருவைக்கு இலைகள் சிறிது. நிழல் தரா மரம். அதன் மலர்கள் மஞ்சள் நிறத்தவை. பொசு பொசுவென குமிழாக இருக்கும். அந்த மலர்களில் வாசம் வருமா என்று தெரியவில்லை. தரையில் சிதறிக் கிடந்தன. இடதுபுறம் மலை அருவியிலிருந்து கொட்டிய நீர் செடி கொடிகளுக்குள் புகுந்து செல்லும் சலசல சத்தம். சுற்றி இருந்த மரங்களின் ஊடே உலாவிக் கொண்டிருந்த பறப்பனவைகளின் கூட்டு ஒலிகள். ஆற்றங்கரையோரமாய் இருந்து ஒலித்த மலை மக்களின் குழந்தைகள் தண்ணீரில் விளையாடிய சத்தமும் அதனூடே ஒலித்த ஓசையும் கேட்டுக் கொண்டிருந்தன.


(சிப்பிப்பாறை ஸேக்கியுடன்)

ஆழ்ந்த அமைதியில் மனம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. புத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. மனமும் புத்தியும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். சிந்திக்கச் சொல்லும் புத்தி ஓய்வெடுக்க மனம் வெறும் பார்வை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ புல்லாங்குழலும் சாரங்கியும் இணைந்த ஓசை வந்தது. அந்த இசை ஈனக்குரலில் இசைப்பது போல இருந்தது.

ஆற்றில் குளித்து முடித்த மலை மக்களின் குழந்தைகள் காய்ந்து கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கி நெருப்புண்டாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகே மரத்தின் கிளை மீது அமர்ந்து கொண்டு அரும்பு மீசை அரும்பிய இளைஞனொருவன் அரை அடி நீளமிருக்கும் அந்த இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருந்தான். ஆழ்ந்த அமைதியான இடத்தில் ஈனக்குரலோசையில் மனதை தாலாட்டி ஒரு நிலைப் படுத்தும் அற்புதமான அந்த கானத்திற்குள் நான் புகுந்தது. தன்னை மறந்தது. இசை எங்கும் பரவியது.

பேரானந்தம்...!

சாமி ஆசிரமத்திலிருந்து சோறும் குழம்பும் கொண்டு வந்தார்.  ஈரம் மண்டிய சில்லிட்ட தரையில் அமர்ந்து கொண்டு குரு பரிமாறும் சாப்பாட்டைச் சாப்பிடவும் ஒரு வரம் வேண்டும். அது என்னவோ தெரிவதில்லை. வீட்டில் அறுசுவையாக உணவிருந்தாலும் பத்து கவளம் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விடுகிறது. குரு நாதர் உணவிடும் போது அதிகமாக ஆகி விடுகிறது.

அப்போது அங்கு ஒருவர் வந்தார். சாமியுடன் ஒருமையில் பேசி விளையாடிக் கொண்டிருந்தார். எனக்குள் அவர் மீது கொஞ்சம் எரிச்சல் கிளம்பியது. அவர் கிளம்பிச் சென்று விட்டார்.

”சாமி, அவர் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா?” என்றேன்.

”எதுக்கு ஆண்டவனே வரணும்? அது ஒரு உயிர். அதன் உடம்பும் எண்ணமும் செயலும் பேச்சும் எப்படியோ இருக்கட்டும். ஆனால் அதற்குள் ஒரு உயிர் இருக்கிறது. அந்த உயிரின் உடம்புக்கு அப்படித்தான் பேச முடியும். அதுதான் அதற்குத் தெரியும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் எவர் மீதும் எப்போதும் கோபமும் எரிச்சலும் வரவே வராது” என்றார்.

ஒரு தடவை ஆசிரமத்திற்குச் சென்றிருந்த போது வாயிலில் வங்கு பிடித்த ஒரு நாய் வந்தது. அதன் உடம்பிலிருந்து வேப்பெண்ணெய் வாடை வீசியது. முகத்தைச் சுளித்தேன். சாமி தான் அதன் உடம்பில் இருக்கும் புண்கள் ஆறுவதற்காக அந்த நாயைப் பிடித்து அதன் உடம்பு முழுவதும் வேப்பெண்ணையைத் தடவி விட்டார் என்று சொன்னார் அங்கிருந்த ஒருவர். சாமி எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரோ எனத் தெரியவில்லையே என்று  அப்போது நினைத்துக்கொண்டேன்.

விடை இன்று கிடைத்து விட்டது.

எனக்குள் இது காறும் அடாது செய்யும் மனிதர்களின் மீதும், அவர்கள் செய்யும் செயல்களினாலும் கோபம் வரும். ஆத்திரம் வரும். அவர் அப்படிச் சொன்ன அடுத்த நொடியில் கோட்டையாக இருந்த அகங்காரம் நொறுங்கியது. மனசு லேசானது.

அன்றிலிருந்து மனிதர்களை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் பேசும் பேச்சிலிருந்து அவரவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது சர்க்கார் படப்பிரச்சினை நடந்து முடிந்து விட்டது அல்லவா? விஜயும், அரசையும் பகடையாக்கி பெரும் பணம் சம்பாதித்துக் கொண்ட புத்திசாலித்தனத்தை என்னால் உணர முடிந்தது. ஆர்.பி.ஐக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பிரச்சினையின் மூலம் என்னவென்று தெரிந்து கொள்ள முடிந்தது. பெண்களை எளிதில் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கொரு தீர்வினை எடுக்கும் மனப்பக்குவம் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் எனது குரு அவர்களே காரணம். சொல்லிப் புரிவதை விட அனுபவப் புரிதல் மேல். அவ்வப்போது புரிந்து கொள்ள முடியாத பல்வேறு மர்மம் நிறைந்த விஷயங்களை எனக்கு புரிய வைத்து அவரின் அன்பு அருளில் நனைய வைக்கும் அந்த மகா சக்தி நிறைந்த அன்பு உள்ளத்துக்கு நானெப்போது செய் நன்றிக் கடனாற்றப் போகிறேன் என்று தெரியவில்லை.

அவரிடம் நானொரு உதவி கேட்டிருக்கிறேன். செய்கிறேன் என்றிருக்கிறார். செய்வார். அவளைப் பார்க்கப் போகும் அந்த நாள், அந்தப் பேரழகி உடன் உரையாடப்போகும் அந்த நாளே எனது பொன்னாள்.

எனது குருவால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.