குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, November 24, 2018

2018 திருக்கார்த்திகை தீபவிழா காட்சிகள்

கோவையில் கார்மேகங்கள் கவிழ்ந்து சூரியனை மறைத்து நின்று குளுரூட்டியது. குளிர் நடுக்கத்துடன் ஆங்காங்கே மழை தூறல்களையும் தூவி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது வானம். காலை புலர்ந்து மயில்களும், குயில்களும், குருவிகளும், கிளிகளும் உற்சாகத்துடன் குரலால் கீதமிசைத்து வரக்கூடிய பொழுதினை வரவேற்றுக் கொண்டிருந்தன. 

கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்த இந்த அற்புதமான நாளில் தமிழகமெங்கும் தமிழர்கள் இல்லங்களில் மாலை நேரத்தில் ஒளி விளக்குகளால் அலங்கரித்து, வீட்டுக்கும் உலகிற்கும் உயிராய் விளங்கும் ஒளியினை வணங்கி விழா எடுக்கும் இந்த நன்னாளில் தமிழகமே பொன்னை உருக்கி வார்த்தாற் போல ஒளிரக்கூடிய தினம் இது. சிறார்கள் பட்டாசுகளை பொறுத்தி தங்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியினை நிறைத்துக் கொள்ளும் சிறப்பு வாய்ந்த நாள். மழைமேகங்கள் கார்காலத்தைச் சொல்லி விட்டு பூமித் தாயைத் தழுவ வரும் நாள் என பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த நாளில் வழக்கம் போல நானும், மனையாளும் எமது குருவின் ஆசிரமம் நோக்கி பயணித்தோம். 

வழியெங்கும் அகல் விளக்குகள், வாழை மரங்கள், பூக்கள் விற்பனைக்காக கடைகள் மணம் வீசிக் கொண்டிருந்தன. மக்கள் பரபரப்பாய் பயணித்துக் கொண்டிருந்தனர். காலை பதினோறு மணிவாக்கில் ஆசிரமம் வந்து சேர்ந்தோம். மாவிலைத் தோரணங்களுடன் ஆசிரமம் மிளிர்ந்து கொண்டிருந்தது. மலையோரம் அமைதி தழுவ, சிற்றாரின் அருகில் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் எம் குருவின் ஆசீர்வாதத்தில் அவ்விடம் முழுவதும் அமைதியில் திளைத்துக் கொண்டிருந்தது. குருவினைத் தரிசிக்கவும், மாலையில் ஏற்றப்படவிருக்கும் தீபத்தின் உள்ளொளியைக் கண்டு, குருவின் ஆசியினைப் பெற்றிடவும் எங்கிருந்தோவெல்லாம் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். குரு அமைதியாக அமந்திருக்கும் அற்புதமான அந்த மேடை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஒளியில் சுடர் வீசிக் கொண்டிருந்தது எம் குருவின் முகம் போல.

பக்தர்கள் குருவின் முன்பு வந்து வணங்கி, திரு நீறு பூசி, அவரைச் சுற்றி வந்து தங்களின் வேண்டுதல்களை குருவிற்குத் தெரிவித்து ஆசி பெற்றபடி சென்று கொண்டிருந்தனர். பலர் தியானம் செய்து கொண்டிருந்தனர். வெளியில் பக்தர்களுக்கு அமுது வழங்கிக் கொண்டிருந்தனர் சில பக்தர்கள். பக்தர்களுக்கு வழங்க பிரசாதப் பையில் பிரசாதங்களை இட்டுக் கொண்டிருந்தனர் பலர். மகளிர் பலர் அகல் விளக்குகளுக்கு குங்குமம், சந்தனமிட்டு விட, ஐந்தெண்ணெய் வார்த்து திரிகளை சேர்த்து வைத்துக் கொண்டிருந்தனர்.

மாலையில் விளக்கேற்றி அந்த வெள்ளிங்கிரி நாதர் தீபத்தில் எழுந்தருளப் போகும் அற்புதமான தீபக்காட்சியைக் கண்டிட சாரி சாரியாகப் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். இளம் சிறார்கள் ஆங்காங்கே ஓடிக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்தனர். அங்கு வந்து கொண்டிருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அறுசுவை உணவு சுடச் சுடத் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட போது, ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய” வள்ளலார் பெருமகனாரின் அகவல் பாடல் உள்ளத்தே ஒலித்தது. பக்தர்கள் பசியால் வாடிடக்கூடாது என அங்கே அமுது தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மாலையில் தீபத்தினை எம் குருநாதர் பூஜை செய்து ஏற்றிட தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்தது. எம் பெருமான் வெள்ளிங்கிரி நாதரும், எம் குரு வெள்ளிங்கிரி சுவாமிகளும் இணைந்து பக்தர்கள் வாழ்விலே சூழ்ந்து கொண்டிருக்கும் இருளைப் போக்கி ஒளிச்சுடராய் மிளிர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். அந்தத் திருக்கார்த்திகையும் பெளர்ணமியும் இணைந்த நன்னாளில் தீப அருளில் தங்கள் உயிரையும், மனைதையும் புனிதப்படுத்திக் கொண்ட பக்தர்கள் பெரும் மகிழ்வெய்தி இன்புற்றனர்.

“எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என பரிந்து பாடிய தாயுமானவரின் பாடல் வரிகளின் படி எம் குருவினை நாடி வந்த அத்துணை பக்தர்களுக்கும் எல்லாமும் கிடைத்திட எம் குருவினை வேண்டி வணங்குகிறேன்.

கீழே 2018ம் ஆண்டின் கார்த்திகைத் தீப பெருவிழாவின் புகைப்படக்காட்சிகள்

















வாழ்க வளமுடன் !

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.