குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, October 16, 2017

அமேசான் ஜாக்கிரதை

ரித்திக் மியூசிக் பிளேயர் வேண்டுமென்று கேட்டிருந்தான். பாடலைக் கேட்டவுடன் கீபோர்டில் வாசிக்க முயற்சிக்கிறான். ஏற்கனவே பிளிப்கார்ட்டில் ஒரு எம்.பி 3 பிளேயரை வாங்கிக் கொடுத்திருந்தேன். அது ரிப்பேர் ஆகி விட்டது. ஆகவே மீண்டும் ஒரு பிளேயர் வேண்டுமென்றான். போன் வாங்கினாலும், எந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்கினாலும் விலை குறைவானதாகவே வாங்குவேன். ஐபோன் வாங்கி அதைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து ஒரு வருடம் முடிவதற்குள் அடுத்த வெர்சன் வந்து விட்டது. நான் வைத்திருந்த ஐபோன் இப்போது குப்பைக் கூடைக்குள் கிடக்கிறது. நிவேதிதா கேம் விளையாடுகிறார் அவ்வப்போது. 

பிளிப்கார்ட்டில் தேடினேன் கிடைக்கவில்லை. முதன் முதலாக அமேஜானில் தேடி ஆர்டர் செய்தேன். பத்து நாட்கள் கழித்து பதினைந்து தடவைக்கும் மேல் போனில் அழைத்து முகவரி கேட்டு ஒரு வழியாக வீடு வந்தார் டெலிவரி ஆள். 450 ரூபாய் கொடுத்து விட்டு பார்சலை வாங்கினேன். அப்போது சரியாக மழை பிடித்துக் கொண்டது. டெலிவரி ஆட்கள் இருவரும் வீட்டுக்குள் வர, பார்சலைப் பிரித்தால் உள்ளே ஒரு வாட்சும், விசிட்டிங் கார்டு ஹோல்டரும் இருந்தது. அதிர்ந்து விட்டேன். டெலிவரி ஆள் பணம் கொடுக்க முடியாது என்கிறான். கொரியர் அலுவலகத்திலிருந்து போன் செய்து நீங்கள் அமேசானில் கம்ப்ளைண்டு செய்து பணத்தை திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெத்தாகப் பேசினார்கள். கண் முன்னே பணம் இருக்கிறது, அதைக் கட்டி விட்டு மீண்டும் கிளைம் செய்து பணம் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். கதை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

விட்ட சவுண்ட் எஃபெக்டில் பணம் கைக்கு வர, பார்சலைத் திரும்பக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டேன்வி. இதோ கீழே போட்டோ இருக்கிறது. ஆகவே அமேஜானோ வேறு என்ன ஆன்லைன் கடையானாலும் சரி காசு கொடுப்பதற்கு முன்பு பிரித்துப் பார்த்து விட்டுக் கொடுங்கள். இல்லையென்றால் போன் செய்தே மண்டை காய்ந்து விடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். 


இந்த வருடம் ஆன்லைன் பிசினஸ் வர்த்தகம் 9000 கோடி ரூபாய் இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நேற்றைய ஒரு டிவி விவாவதத்தில் எனக்கு நிரம்பவும் பிடித்த விஜயதாரணி எம்.எல்.ஏ (தில்லு எம்.எல்.ஏ) அவர்கள் பொதுமக்களிடம் ரீடெயில் மார்க்கெட்டில் பொருள் வாங்குவது 40 சதவீதம் சரிந்து இருக்கிறது என்கிறார். பிஜேபியின் தலைவர் அமித்ஷாவின் குமாரர் பிரச்சினை பிரதமருக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி விட்டது.

எனது நண்பர் ஒரு நாள் திடீரென போனில் அழைத்து, “வாழ்க்கையில் ஒன்றுமே நிலையில்லைப்பா” என தத்துவம் பேச ஆரம்பித்தார். ஒன்று இவருக்கு ஏதோ பிரச்சினை அல்லது ஏதாவது சம்பவத்தைப் பார்த்திருக்க வேண்டுமென்று நினைத்தேன். இல்லை என்றால் ஆள் இப்படியெல்லாம் பேசமாட்டார்.

தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் ஒருவரின் மகன் தெருவில் பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் காசு கேட்கிறாராம். அவரைத் தெரிந்தவர்கள் இருந்தால் பணம் கொடுக்கின்றார்களாம். கஜானா கடைக்கு (டாஸ்மாக்) செல்கிறாராம். ஊட்டியில் படிக்க பங்களா, சென்று வர கார் என வசதியெல்லாம் செய்து கொடுத்தார் இசையமைப்பாளர். யாருக்காக ஓடி ஓடி உழைத்தாரோ அவரின் இன்றைய நிலையோ பரிதாபகரம்.

பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்றால் இப்படித்தான் ஆகி விடும். அமித்ஷா இருக்கும் பதவிக்கு அவரின் பிள்ளையால் வந்த தொல்லையினால் தலை(மை) பதவி போகுமா? தப்புமா? என்பதெல்லாம் பிரதமருக்கும் அமித்ஷா அவர்களுக்கும் இடையே இருக்கும்  பிணைப்பூ தான் நிர்ணயிக்க வேண்டும். 

பொருளாதாரம் சரிந்து இருக்கிறது என்று பேசிக் கொள்கின்றார்கள். அது என்ன எழவு பொருளாதாரமோ தெரியவில்லை. சாமானியனின் சம்பளம் மட்டும் ஏறாத பொருளாதாரத்தையும், அரசு அலுவலர்களின் சம்பளமும் கிம்பளமும் ஏறும் பொருளாதாரத்தையும், பதினெட்டு சதவீதம் லாபம் அடைந்த தனியார் நிறுவன பொருளாதாரத்தையும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐந்து லட்சம் கோடி வாராக்கடனாக இருந்த வங்கிக் கடன், இந்த வருடம் ஒன்பது இலட்சம் கோடியாக உயர்ந்திருப்பதன் (வாராக்கடன்) பொருளாதாரத்தையும்.  ஃபேன் வாங்கக் கூட காசில்லாத தலைவர்கள் கோடிகளில் சொத்துக்கள் வாங்கும் பொருளாதாரத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

வழக்கம் போல வந்து செல்லும் தீபாவளி பலருக்கு பல செலவுகளை வைக்கும். ஒரு சிலருக்கு கடனைக் கொண்டு வந்து சேர்க்கும். சமூகத்தில் வாழ வேண்டுமெனில் அதற்கென ஒரு விலையை நாம் காலமெல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். தவறாகப் பேசுவார்கள் என்ற ஒரு நிலைக்காக நாம் இழப்பது கொஞ்சம் நஞ்சமல்ல.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருங்கள். நல்லெண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். வாழ்க வளமுடன்!

1 comments:

ராஜி said...

நான் அந்த பக்கமே போறதில்ல

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.