குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label மசாலா ரசம். Show all posts
Showing posts with label மசாலா ரசம். Show all posts

Saturday, April 4, 2020

விட்மின்சி ரசம் எனும் தக்காளி மசாலா ரசம்


பிரதமர் டிவியில் பேசுகிறார் என்றாலே இந்தியாவே பதறுகிறது. என்றைக்கு டிமானிட்டிஷேசன் பற்றி அறிவித்தாரோ அன்றிலிருந்து இந்திய மக்கள் பிரதமரின் டிவி பேட்டி என்றாலே அலறுகின்றார்கள். ஒரு செயல் மக்கள் மனதில் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்திருக்கிறதோ அந்தளவு, அந்தச் செயலைச் செய்ய காரணமாய் இருந்தவர் மீது அன்பின்றி போகும் என்பது நிதர்சன உண்மை.

ஆகவே பிரதமர் பேட்டி என்றால் மக்கள் விரோத அறிவிப்பு என்ற மன நிலையில் இந்திய மக்கள் இருப்பது காலத்தின் கோலம் என்று தான் சொல்ல வேண்டும். இனி அவர் என்ன தான் நல்ல விஷயமாகச் சொன்னாலும், அவர் அதை அறிவிப்பதற்கு முன்பு மக்கள் மனதில் திடுக் என ஒரு பதட்டம் உண்டாவது இயல்பு. இது இப்போதைக்கு மாறப்போவதில்லை,

உலக மக்கள் கொரானா பாதிப்பிலிருந்து வெளிவர நாமெல்லாம் சேர்ந்து விளக்கேற்றி எல்லாம் வல்ல இறை சக்தியிடம் பிரார்த்தனை செய்வோம். மதம், இனம், மொழி, கலாச்சாரம் வித்தியாசத்தைப் பார்க்க வேண்டிய கட்டம் இதுவல்ல. நாத்திகர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கட்டும். ஆத்திகர்கள் வழக்கம் போல பிரார்த்தனை செய்யட்டுமே.

பிரதமரைப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற காரணமெல்லாம் இந்த இடத்தில் தேவையில்லை. நம்மை வாழ வைத்த இந்தியாவின் பிரதமர் அவர். ஆகவே அவரின் வேண்டுகோளை இந்தியாவின் குடிமகன் என்ற வகையில் நிறைவேற்றுவோம்.

சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கன் என்கிற உலக விதிக்குள் வந்து விடுவோம்.

கோடி கோடியாய் பணம், குவியல் குவியலாய் பொன்னும், வைரமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அறுசுவை உணவு. இவைகளை ஒரு மாதம் பட்டினியாய் கிடந்தவனிடம் காட்டினால் அவன் எதை முதலில் எடுப்பான்? உங்களுக்குத் தெரியும் தானே…

ஆகவே சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கன். வயிறு காய்ந்தால் காதல் வருமா? மமதை வருமா? ஆணவம் வருமா? டிக்டாக்கில் குண்டி ஆட்ட முடியுமா? கால்சட்டை ஓட்டை தெரியும்படி வீடியோ போட முடியுமா? ஒன்றும் வராது அல்லவா? ஆகவே தான் பசி என்னும் தீரா நோயை கடவுள் ஒவ்வொரு உயிருக்குள்ளும் வைத்தான்.

இன்றைக்கு விட்மின்சி (விட்டமின் சி ரசம்) ரசம் பற்றிப் பார்க்கலாம். இந்த ரசத்தின் காப்பிரைட் என்னிடம் உள்ளது. எவராவது சமைத்து சாப்பிடலாம் என்று நினைத்தால், என் அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் எழுத மாட்டேன். நானென்ன அடிக்கடி கைகழுவும் உலகப் பணக்கார ஏழை எழுத்தாளரா என்ன?

இனி விட்மின்சி ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரசம் தக்காளியை வைத்து எலும்பு ரசத்தின் சுவைக்கு போட்டி போடும் வகையில் செய்யப்படும் மசாலா ரசம். விட்டமின் சி அதிகம் உள்ள ரசம். உடல் இளைக்கவும் பயன்படுத்தலாம்.

நான்கு தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

இரண்டு பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி, இரண்டையும் ஒரு சட்டியில் சேர்த்து, அதனுடன் ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

மூன்று டீஸ்பூன் மல்லித்தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் சோம்புத்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள் நான்கையும் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

ஐந்து பூண்டு பற்களை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம் வெந்தவுடன் நீரை வடித்து விட்டு தக்காளியையும், வெங்காயத்தையும் மசித்து, பிறகு வடித்த நீரை விடவும். அதனுடன் கரைத்து வைத்த மசாலா கரைசல், தட்டி வைத்த பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி வரும்வரை கொதிக்க விடவும். மறந்து விடாதீர் இரண்டு கொதி. மீறினால் ரசம் கடுத்துப் போய் விடும்.

அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெந்தயம் அரை டீஸ்பூன் சேர்த்து சிவக்க வைக்கவும். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடல்பாசி, பிரிஞ்சி இலை இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதிக்க வைத்த ரசத்தை இதனுடன் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி விடவும்.

சூடான சாதத்தில் இந்த ரசத்தைச் சேர்த்து பிசைந்து, தொட்டுக்கொள்ள வாழைக்காய் வறுவல் சேர்த்துக் கொண்டால் ‘டிவைன்’.

இந்த ரசத்தில் தக்காளி அதிகம் சேர்ப்பதால் காரம் இரண்டு டீஸ்பூன் அவசியம். காரமும் புளிப்பும் சரி விகிதத்தில் சேர்ந்தால் தான் ரசம் சுவையாக இருக்கும். இப்படி ஒரு ரசத்தை எவரும் செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். தஞ்சாவூர் பக்கம், ஆட்டு எலும்புடன் முருங்கைக்காய், கத்தரி, உருளைக்கிழங்கு சேர்த்து ரசம் வைப்பார்கள். அதன் சுவைக்கு ஈடாக எந்த ஒரு ரசத்தையும் ஒப்பீடு செய்ய முடியாது. கரண்டி கரண்டியாக வாங்கிக் குடிப்பார்கள். அதே அளவு சுவையுடன் இந்த ரசமும் இருக்கும். ஆனால் இது சைவ ரசம் என்பது ஸ்பெஷல்.

வாரம் ஒரு தடவை வீட்டில் மனையாள் செய்வார். பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்பளம், இல்லையென்றால் வாழைக்காய் வறுவல் இதற்கு நல்ல காம்பினேஷன். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்.