குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நரலீலைகள். Show all posts
Showing posts with label நரலீலைகள். Show all posts

Monday, March 4, 2019

நரலீலைகள் - சிவராத்திரி - (2)

அனைவருக்கும் வணக்கம். அடியேன் நரலீலைகள் நாவலின் ஆசிரியன். இன்றைக்கு சிவராத்திரியாம். மஹா சிவராத்திரியாம். எனக்கு அதன் அர்த்தமெல்லாம் தெரியாது.

சின்ன வயதில் அம்மா, “தம்பி, இன்னைக்கு சிவராத்திரிப்பா, ராத்திரி முழுக்க தூங்காம இருந்தா நல்லா படிப்பு வருமாம், உன்னைக் கொண்டு போய் கோயில்ல விட்டுட்டு வர்ரேன். விடிகாலம்மா வந்து கூட்டிட்டு வர்ரேன், போறியா” என்பார்.

”சரிம்மா” என தலையாட்டுவேன்.

பெயிண்ட் அடிக்காத, சிதிலமடைந்த சிவன் கோவில். கிழக்கு வாசலில் பழைய துருப்பிடித்த கம்பிகள் வேய்ந்த மரக்கதவிடுக்கின் வழியே சிவலிங்கனார் இருப்பார். அந்த சிவலிங்கத்தை தாத்தா மாணிக்கதேவர் தான் மன்னார்குடிப் பக்கம் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போய் ஏற்றிக் கொண்டு  வந்து, பிரதிஸ்டை செய்தார்கள் என்று சொல்வார்கள். வடகிழக்கு மூலையில் சுத்த சன்மார்க்க சங்கத்தினரால் வைத்திருந்த வள்ளலார் புகைப்படம் இருக்கும். அதை ஒட்டினாற் போல தெற்குப் பார்த்தா மாதிரி யாரோ ஒரு பெண் சாமி இருக்கும். எனக்கு நினைவில் இல்லை. சிவபெருமான் சன்னதிக்கு எதிரில் பாழடைந்த ஒரு நந்தி மண்டபம் இருக்கும்.

எல் சேப்பில் இருக்கும் கோவிலில் வாசலை அடைத்தாற் போல பந்தலிட்டு அங்கே ஒரு மேடையிட்டு, அதன் மீது அமர்ந்து மழையூர் சதாசிவம் ஏதேதோ பாடிக் கொண்டிருப்பார். வாண்டுகளும், கொஞ்சம் பெரியவர்களும் உட்கார்ந்திருப்பார்கள். நான் அந்த மண்ணுக்குள் தவழ்ந்து கொண்டிருப்பேன். விடிய விடிய அவரும் விடாமல் பாடிக் கொண்டிருப்பார். நானும் கண் அசராமல் கேட்டுக் கொண்டிருப்பேன். அவ்வப்போது அங்கே கிடக்கும் கல்லுக்கால்களில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பேன். விடிகாலையில் யாரோ ஒருவர் சுக்கு மல்லிக்காப்பி கொடுப்பார். வாங்கிக் குடித்து விட்டு அங்கேயே சிவபெருமான் சன்னதி முன்னால் உருண்டு கொண்டிருப்பேன். தூக்கம் கண்ணைச் சுழட்டும். நல்லாப் படிப்பு வருமேன்னு தூங்க மாட்டேன்.

விடிகாலையில் அம்மா வந்து வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். இவ்வளவுதான் எனக்கு சிவராத்திரி பற்றித் தெரியும். சிவராத்திரிக்கு கண் முழிச்சா நல்லா படிப்பு வரும்னு அம்மா சொன்னாங்கல்ல, அதே மாதிரி நல்லாத்தான் படிச்சேன்.

”ஏய் நீர் யாரப்பா? இங்கே வந்து நின்னுகிட்டு இருக்கிறாய்?”

”எம் பேரு மாயன்”

“ஆ..... சிவபெருமானா????”

“அதே, அதே...! கொஞ்சம் கண்ணை மூடி என்னைத் தியானி!”

“அப்படியே செய்கிறேன் சிவபெருமானே!”

* * * * *



லூசுப்பய. இவென்லாம் நாவல் எழுத வந்துட்டான் பாருங்க. வாசகர்களே! நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்தானே. மீண்டும் நானே உங்களுடன்.

”தெரியாமத்தான் கேட்கிறேன். இந்த ஆசிரியன் சிவராத்திரி அன்னைக்கு கண் விழித்திருந்தால் நன்றாகப் படித்ததாகச் சொல்கிறானே, அமெரிக்காரனும், பிரிட்டிஷ்காரனும், ஐரோப்பியனும் எந்த சிவபெருமான் கோவிலில் உட்கார்ந்திருந்தார்கள் என்று சொல்கின்றானா? பாருங்கள்?”

”அடேய்! அடேய்!! நீ யாரடா இடையில்? நில்லு நில்லு !!!!”

”அண்ணா, அடியேன் பேரு சந்துசிந்து. இந்த நாவலில் வருகின்ற ஒரு பாத்திரம். இந்த நாவலாசிரியன் எப்போது என்னைப் பற்றி எழுத ஆரம்பிப்பானோ தெரியாது. ஆனால் எனக்கு கொஞ்சம் அவசரம். ஆத்திரம். அதான் வந்துட்டேன்”

”வாப்பா, வா! நாவலின் முதல் பாத்திரம். என்னைப்போல ஒருவனா நீ!  ஆசிரியன் சொல் கேட்காத ஒரு கதாபாத்திரம். பரவாயில்லை. அதென்ன பேரு சந்துசிந்து?”

”சிரிக்க மாட்டீங்கன்னா சொல்றேன்”

“சிரிக்க மாட்டேன் சொல்லு, அப்படி என்ன தான் சொல்லப்போறேன்னு பார்க்கிறேன். நான் பார்க்காத கதாபாத்திரங்களா?”

”இங்கே தான் கோயம்புத்தூர்ல ஈஷா ஈஷான்னு ஒரு இடம் இருக்கு. அங்கே ஒரு சிவராத்திரிக்கு அம்மாவும், அப்பாவும் போனார்களா? அடுத்த மாதம் நான் அம்மா வயித்துல கர்ப்பமாயிட்டேன்னாம். ஆனா ஏன் சந்துசிந்துன்னு பேர் வச்சாங்கன்னு கேட்டா, அம்மா சிரிக்கிறாங்க. ஒன்னும் புரியல”

“ஏன், உங்கப்பா கிட்டே கேட்க வேண்டியதுதானே?”

“அப்பா நான் பொறக்கறதுக்கு முன்னாடியே இல்லையே”

“என்ன????”

“அவரை நான் பாக்கவே இல்லை?”

என்ன இழவுடா இது? இந்த சந்துசிந்து மொத்தமா குழப்புகின்றானே. பார்த்தால் லூசுப் பய மாதிரி இருக்கான். இவனிடம் என்ன கேட்டு என்ன புரியப்போகிறது?

என் முகத்தைப் பார்த்த சந்துசிந்து,”எனக்கு இன்னொரு பெயர் இருக்கு”ன்னான்.

அவனே தொடர்ந்தான், “சநி”

மயக்கமே வந்தது எனக்கு...!

* * * * *

வெள்ளைக்காரனாவும் தெரியலை, நம்ம ஊர்க்காரனாவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கின்றானே யாராக இருப்பான் இவன்? இருக்கட்டும். என் பேரைக் கேட்டதும் தலையைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டான். அவன் போகட்டும். நான் வந்த விஷயத்தை சொன்னாத்தான் நல்லா இருக்கும். அதுவும் இந்த நன்னாளில்.

சவுக்கு சங்கர் அண்ணே, இருக்காப்லே அல்லவா? அவரு ஒரு படத்தைப் பேஸ் புக்குல போட்டிருக்காரு. அந்தப் படத்தை உத்துப் பார்த்தால் சிவன் சக்தி மேலே ஏத்தி மன்னிக்கவும், அருள் புரிந்த மகத்துவத்தைப் பார்க்கலாம். அந்தப் படம் கீழே. நான் ஏன் இதை இங்கே உங்களுக்குச் சொல்கிறேன் என்றால் புரியாதவர்கள் நரலீலைகள் நாவலைத் தொடர்ந்து படிக்காதீர்கள். உடனே விலகி விடுங்கள்.

* * * * *

அன்பு நண்பர்களே! நரலீலைகள் நாவலின் கதாபாத்திரங்கள் என்னைக் கேட்காமலே உருப் பெற்று உங்களுடன் உரையாடுவதை என்னால் நம்பவே முடியவில்லை. இப்படியும் நடக்குமா? என்றெல்லாம் நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை. நாவலின் கதாபாத்திரங்கள், நான் அறிமுகப்படுத்தும் முன்பே, உங்களுடன் பேசுவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை மட்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவலின் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என எனக்கு இன்னும் புரியவில்லை. நான் எழுத நினைத்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அது அதுபாட்டுக்கு வருவதால் ஒழுங்கின்றி நாவல் கலைந்து போகும் என்ற கவலைதான் ஏற்படுகிறது. இருப்பினும் இந்த நாவல் ஒரு சிலர் சைவத்துடன் அசைவ உணவையும் உண்பார்களே அதைப் போல வரும் என நம்புகிறேன். என் கதாபாத்திரங்களை கட்டி ஆள, சிவனை நோக்கி தியானம் செய்யப் போகிறேன். மனம் ஒழுங்கானால் எல்லாம் ஒழுங்காகும் அல்லவா?

”மாயனே! எனக்கு அருள்வாய்! என் நாவலின் கதாபாத்திரங்கள் என் சொல் கேட்கட்டும்..

மனத்தில் எழுகின்ற மாய நன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர்: இறைவன் 
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே - திருமூலர்

மாயனின் சிரிப்புச் சத்தம் காதில் ஒலிக்கிறது. அது உங்களுக்கும் கேட்கிறதா?

* * * * *
(04-03-2019)



Tuesday, February 19, 2019

நரலீலைகள் - நான் யார்? - 1






நரலீலைகள் - நான் யார்? - 1



உங்களுக்கு வணக்கம். நான் நாவல் பேசுகிறேன். இதுவரையிலும் நீங்கள் நாவலின் கதாபாத்திரங்கள் பேசியதாகத் தான் படித்திருப்பீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. கதாபாத்திரங்கள் மாறிக் கொண்டே இருப்பவை. ஆனால் நாவல் என்கிற நான் எப்போதும் மாறுவதில்லை.  நான் எப்போதும் இருந்து கொண்டிருப்பவன். நான் அழிவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை. ஆனால் நாவலின் கதாபாத்திரங்கள் அழிந்து போகின்றவை. அழிக்கப்படுகின்றவை. இந்த நாவலின் கதாபாத்திரங்களும் கூட அவ்வாறனவைதான். அதனாலென்ன? நாவல் ஆகிய நான் அழிவதில்லை. 

உங்களுக்கும் கூட குழப்பமாக இருக்கலாம். ஏனென்றால் இந்த உலகில் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் அடைமொழியாக இருக்கிறது. இவன் பொதுப்பெயரில் வந்து குழப்புகின்றானே என நீங்கள் சித்தம் கலையலாம். ஆகவே எனக்கொரு பெயர் வைத்து விடுகிறேன் முதலில். என்னை நீங்கள் மாயன் என்று அழைக்கலாம். அல்லது நினைவில் வைத்துக் கொள்ளலாம். இப்போது உங்களுடன் உரையாடுவது யார் தெரியுமா? நாவல் அல்ல மாயன்! மாயன் தான் நாவல். நாவல்தான் மாயன். புரிந்து விட்டதா?

நான் கடவுளும் அல்ல. கடவுள்களுக்கு கூட உருவங்கள் இருக்கின்றன. மொழிகள் இருக்கின்றன. ஆனால் எனக்கு அவ்வாறு அல்ல. எல்லா மொழிகளும், எல்லா கடவுள்களும் எனது கட்டுக்குள் அடைக்கப்பட்டவை.

முதலில் இந்த நாவலுக்குரிய படைப்பாளியாகிய ஆசிரியனைப் பற்றிப் பேச வேண்டும்.  இந்த நாவலுக்கு ’நரலீலைகள்’ என்று பெயர் வைத்திருக்கின்றான் இந்தப் பயல். 2009ம் வருடம் எழுதப் போவதாக இதே பிளாக்கில் அறிவிப்புக் கொடுத்தான். ஆஹா எனக்குள் புதிதாக கதாபாத்திரங்கள் உருவெடுத்து உலா வரப் போகின்றார்கள் என்ற எனது சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப்  போட்டான் இந்தப் படைப்பாளி. கிட்டத்தட்ட பத்து வருடம் காத்திருந்தேன். இன்றைக்கு ஆரம்பித்து விடலாம் என்று அவன் முடிவு செய்திருந்தான். ஆனால் பாருங்கள் நான் உங்களுடன் உரையாட வந்து விட்டேன். அவன் வெளியில் நின்று கொண்டிருக்கின்றான்.

”அதெப்படி என் வாசகர்களுடன் நீ உரையாடலாம்?” என என்னை அவன் முறைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இதெல்லாம் புரியாது. ஒரு நாவல் தான் கதையைச் சொல்லும். அதைப் படைப்பவன் படைப்புக்குள் மறைந்து போகின்றான். எப்படி தன் குழந்தைக்குள் தகப்பன் மறைந்து விடுகின்றானோ அப்படி. 

இனி அவனுக்கு வழி விட்டு நாவலைத் தொடரச் செய்யலாம் என நினைக்கிறேன். அடிக்கடி உங்களுடன் உங்கள் மாயனாகிய நாவல் ஆகிய நான் உரையாட வருவேன் இந்த ஆசிரியன் அசந்து உறங்கும் வேளையில் நாம் நம் கச்சேரியை ஆரம்பிக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடைபெறுவது நாவலாகிய மாயன்!



* * * * * *
19/02/2019


தொடரும்.....!

Tuesday, December 22, 2009

நரலீலைகள்

சாதனையென்ற சத்தம்

சாதனை என்ற சொல்லை மனிதர்கள் அனைவரும் கேட்டிருப்பார்கள். சாதனையின் பால் ஈர்க்கப்பட்ட மனிதன் மதி மயங்கி, மனம் குறுகி, இயக்கம்மாறி, வழி தெரியாமல், இது தான் வழி, இது தான் சாதனை என்றோடிக் களைத்தபிறகு திரும்பிப் பார்த்தானென்றால் அவன் முன்னே வெட்டவெளியாய் கடந்துபோன காலம் நகைக்கும். விரக்தி நிலையில் மனம் வெதும்பி, ஆயாசமாய், அனைத்தும் முடிந்து போய் விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து குமைந்துகுழப்பமுறுவான்.

அந்தச் சொல்லின் சத்தம் மூளையின் ஏதோ ஒரு நரம்புக்குள் சிக்கி உடம்பெங்கும்அதிர்வுகளை கிளப்பிக் கொண்டேயிருக்கும். ஒலியின் வேகம் தாங்காமல் மனம்அதனோடு கூட ஓடி ஓடி சத்தமடங்கும் வேளையிலே அவனைச் சுற்றும் வெளிப்பேய்களிடமிருந்து தப்பிக்க இன்னும் வேகமாக ஓடுவான். ஓடுவான்... வாழ்க்கையின் எல்லைக்கே. ஆம் எல்லைக்கே ஓடி முடிப்பான் சாதனையின்ஓட்டத்தை.

என்ன தான் வாழ்க்கை, என்ன இருக்கிறது வாழ்வில் என்று புரியாமல், சாரம்புரியாமல், சூட்சுமம் தெரியாமல், எங்கெங்கோ ஓடி, ஓடிக் களைத்து, இளைப்பாறவும் முடியாமல் உயிரை விடுவான்.

அந்த மனித வாழ்க்கையின் ஓட்டங்களில் பங்குபெற்ற பீமாவின் ஓட்டத்தையும், அவனோடு கூட ஓடி வந்த சில ஓட்டக்காரர்களின் ஓட்டத்தையும் நரலீலைகள் என்ற தலைப்பில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

வழக்கம் போல உங்களின் அன்பான உள்ளத்தில் எனக்கும் ஒரு இடத்தை தந்துஅருள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.