குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, June 17, 2025

நிலம் (121) - கட்டிடத்தின் ஒரு பகுதியை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியது என்ன?

சோஷியல் மீடியா மூலம் ஒருவர் என்னை அணுகினார். 

அவருக்கு கோவையில் ஒரு வீடும், நிலமும் இருப்பதாகவும், அந்த நிலத்தினை அவரது சொந்தக்காரர் ஆக்கிரமித்துக் கொண்டு, விற்க விடாமல் செய்கிறார் எனவும், ஆகவே நீங்கள் எனக்கு அந்தச் சொத்தை விற்பனை செய்து கொடுக்க முடியுமா? எனக் கேட்டார். 

ஆவணங்களை வாட்சப்பில் அனுப்பினார். ஒழுங்கற்றவைகளாக இருந்தன.  என்னால் படிக்க முடியவில்லை.

ஆகவே கொரியரில் அனுப்பச் சொன்னேன். 

கொரியரும் வந்தது. 

ஆவணங்களைப் படித்துப் பார்த்ததும் தலை சுற்றியது.

பத்து செண்ட் இடத்தில் கட்டப்பட்ட வீட்டின் மேல் மாடியில் ஒரு போர்சனை மட்டும் அவர் விலைக்கு வாங்கி இருந்தார். அந்த விற்பனைப் பத்திரத்தில் நிலத்தில் உரிமை இல்லை எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதெப்படி நிலத்தில் உரிமை இல்லாமல் தொங்கும் வீட்டினை விற்க முடியும் என சந்தேகம் வந்து விட்டது. அது சட்டப்படி தவறு.

அதைப் பற்றி மேலுமொரு ஒப்பீனியனுக்காக, எனது வக்கீல் நண்பருக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தேன்.  

இந்த சொத்து முறையற்ற பதிவு அதாவது முழுமையில்லாத பதிவு செய்யப்பட்ட சொத்து. இப்படியெல்லாம் சார் பதிவாளர்கள் சொத்துக்களை பதிவு செய்து கொடுக்கிறார்களா என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

இது விற்பனைக்கோ அல்லது வாங்கவோ தகுந்த சொத்து அல்ல என சொன்னார். 

அது தொடர்பான பல நீதிமன்ற வழக்கின் தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டினார்.

எனக்கு இது புது விதமான பிரச்சினையாக இருந்ததால், எனக்கும் எதற்கும் ஒரு மேல் ஒப்பீனியன் இருக்கட்டுமே என்பதற்காக அவரிடமிருந்து கருத்து பெற்றேன்.

இதில் கொடுமை என்னவென்றால் அந்தச் சொத்து வாங்க லோன் பெற்று, அந்த லோனும் திரும்ப கட்டப்பட்டிருக்கிறது. 

லோன் கொடுத்த மேனேஜர், அதை ஆராய்ந்த லீகல் டீம், வருடம் தோறும் ஆடிட்டிங்க் செய்த டீம் ஆகியோருக்கு இதெல்லாம் தெரியாதா? வங்கியை மோசடி ஆவணங்களை வைத்து, ஏமாற்றி கடன் பெற்று, கடன் கட்டப்பட்டிருக்கிறது.

அவரிடம் இதைச் சொன்ன போது, எப்படியாவது விற்றுக் கொடுங்கள் என  ஆரம்பித்தார். நான் முடியாது எனச் சொன்னேன்.

அடுத்த நிமிடம் எனக்கு ஆவணங்களைத் திரும்ப அனுப்பி வையுங்கள் என்றார். அனுப்பி வைத்து விட்டேன். 

பணம், நேர விரயம் என நினைக்கவில்லை.  அனுபவமாக எடுத்துக் கொண்டேன். 

கட்டப் பட்ட இடமாக இருக்கும் பட்சத்தில், அதில் ஒரு பகுதியை நீங்கள் வாங்க விரும்பினால், அந்த சொத்து அமைந்திருக்கும் இடத்தில் பிரிபடாத பாக நிலத்தினையும் குறிப்பிட்டு - வாங்கிக் கொள்ளுங்கள்.

அவ்வாறு வாங்க வில்லையெனில் அது சட்டப்படியான கிரைய ஆவணம் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு வாங்கவும் கூடாது, வாங்கினால் வங்கிக் கடன் பெறவும் கூடாது. இரண்டும் சட்ட விரோதம்.

வளமுடன் வாழ்க.


Tuesday, June 3, 2025

நிலம் (120) - மனை அப்ரூவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

டிடிசிபி, எல்.பி.ஏ., சி.எம்.டி.ஏ. ஆகிய மனை அப்ரூவல் செய்யும் அமைப்புகள் இருந்த போது, ரியல் எஸ்டேட் செய்த பலர், பஞ்சாயத்து போர்டு அப்ரூவல் என ஒரு பொய்யை சொல்லி வீட்டு மனைகளை விற்பனை செய்து வந்தனர்.

இது பற்றி ஆளும் அரசுகளுக்கு நன்கு தெரிந்தும் கண்டும் காணாமலும் இருந்தனர். யானை ராஜேந்திரன் என்பவர் ஹை கோர்ட்டில் வழக்கு தொடுத்து, 2016ஆம் ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகளை வரன்முறை செய்து கொள்ள அன்றைக்கு ஆண்ட அதிமுக அரசு வரன்முறை திட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்த திட்டத்தில் ஏக போக பலன் அடைந்தவர்கள் யார், எத்தனை ஆயிரம் கோடி பணம் வசூலிக்கப்பட்டது என்பது பெரும்பாலான பொது மக்களுக்கு தெரிந்திருக்காது. ஆனால் வீட்டு மனைகளை வாங்கிய மக்களுக்குத் தெரியும்.  

சதுர அடிக்கு இவ்வளவு என பணம் புரண்டது. ஏமாந்தவர்களுக்கு தண்டனை. ஏமாற்றியவர்களுக்கு அரசு அனுமதி,

ஒரு சட்ட மீறல், அதற்கு ஒரு அங்கீகாரம் என சட்டத்தை கேவலப்படுத்தினார்கள். தேவையில்லாமல் மேலே குறிப்பிட்ட மூன்று அமைப்புகளும் எதற்கு? 

என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஒரு புது அறிவிப்பைப் போட்டு, அதை சட்டமாக்கி விடுவோம் என்பதெல்லாம் எவ்வளவு அவலமானது. 

வரன்முறை படுத்தாத மனைகளை விற்றவர்கள் ஜாலியாக இருந்தனர். சட்டப்படி வீட்டு மனைகளை வரன்முறை செய்து விற்பனை செய்தவர்கள் ஏமாளிகள் அல்லவா?

சட்டத்தை மதித்தால் இதுதான் பலனா? 

ஏழைகளுக்கு மிக குறைந்த விலையில் வீட்டு மனை கிடைத்தது என்று பேசலாம். ஆனால் அது சட்டப்படி தவறு அல்லவா? இப்போது மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை. அதற்கு அப்ரூவல் மனைகளை வாங்கி இருக்கலாம் அல்லவா?

இது ஒரு பக்கம். நேற்று காளப்பட்டி வரை செல்ல வேண்டி இருந்தது. 

கோவையில் சாலை விதி மீறல்கள் வாடிக்கை. காவல்துறை எவ்வளவுதான் அபராதம் விதித்தாலும் எவரும் திருந்துவதாக இல்லை. இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல, பாதசாரிகளும் விதி மீறல்களை செய்கிறார்கள்.  நேற்று ஒரு பைக்கில் இரு வாலிபர்கள், அவிநாசி சாலையில் கட் அடித்து படு வேகமாக செல்கிறார்கள். அதைப் பார்க்கும் பலருக்கும் அதிர்ச்சி.  

என்ன செய்ய முடியும்?

சுய ஒழுக்கமும், சுய ஒழுங்கும் இல்லாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். 

சட்ட மீறலை ஹீரோயிசம் என நம்ப வைக்கப்படுகிறோம் பலரால். இந்த நிலை எல்லோருக்கும் பிரச்சினையை தரும். நன்மையை தராது.  மக்கள் தான் திருந்த வேண்டும். 

இனி செய்தி.

நேற்று திமுக அரசு அன் அப்ரூவ்டு வீட்டு மனைகளை அப்ரூவல் செய்யும் காலத்தை நீட்டித்து உள்ளது. கீழே இருக்கும் இணைப்பில் அப்ளை செய்து, செய்ய வேண்டியதை செய்து, பலன் பெறுக.

http://www.tnlayoutreg.in/

டிடிசிபி இணைய தளத்தில் முன்பு அப்ரூவ்ட் வீட்டு மனைகளின் வரை படங்கள் மற்றும் நிலத்தின் உபயோக தன்மையை அறிந்து கொள்ளும் வசதிகள் இருந்தன. இப்போது அவைகளை நீக்கி விட்டார்கள். அலுவலகம் சென்று விண்ணப்பித்து, வரைபடங்களை பெற வேண்டும். 

இது பற்றி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி வைத்தேன். டிடிசிபி அலுவலகத்திலிருந்து பதில் வந்தது, அந்த இணைய தள சுட்டி வேலை செய்கிறது என. ஆனால் வேலை செய்யவில்லை. மீண்டும் மேல் முறையீடு செய்தேன். பலன் இல்லை. இப்போதும் வேலை செய்யவில்லை. ஏற்கனவே இருந்த வசதியை நீக்கி விட்டார்கள். ஏன் என தெரியவில்லை. இரண்டாவது முறையீடு செய்தும் ஒரே பதில். 


மேலே இருப்பது எனக்கு வந்த பதில்.

ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட வீட்டு மனைகளின் வரைபடத்தையும், நில உபயோகம் ஆகிய விபரத்தையும் ஆன்லைனில் அரசு வெளியிட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இது நிலமோ அல்லது வீட்டு மனையோ வாங்குபவரகளுக்கு நன்மை தரும். 

ஒருங்கிணைந்த அந்த இணைய தள சுட்டியை மீண்டும் உபயோகப்படுத்த அனுமதிக்கவும். அரசு ஆவண செய்யும் என நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

நான் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய விண்ணப்பம் கீழே.



வளமுடன் வாழ்க.