குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, April 25, 2025

நரலீலைகள் (17) - உருவமற்றது உணர்வுடையது

கோவிட் நேரம்.  காலை ஏழு மணி போல பீமாவும், ரயானும், ஆறுமுகமும் தேனிக்கு கிளம்பினார்கள். சாலையில் வண்டி வாகனங்கள் ஏதுமில்லை. சாலை வெறிச்சோடிக் கிடந்தது. எந்தக் கடையும் திறந்திருக்கவும் இல்லை. ஆங்காங்கே ஒரு சில ஆட்கள் தென்பட்டனர்.

ஒட்டன் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு சிறு டீக்கடையின் முன்பு காரை நிறுத்தி ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டார் ரயான். வயது 23 இருக்கும். மாநிறம். தெளிவான முகம். சுடிதார் அணிந்திருந்தாள். கைகளில் வண்ண வளையல்கள்.

”அண்ணே, நம்முடன் வருகிறார் இவர். உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமேன்னு வரச் சொல்லி இருந்தேன்” என்றார் பீமாவிடம் ரயான்.

அடுத்த நாள் விடிகாலையில் கட்டிலில் மங்கலான வெளிச்சத்தில் கலைந்த ஓவியமாய் அவள் படுத்திருந்ததைப் பார்த்த பீமா, சத்தமிடாமல் எழுந்து ஷோபாவில் சென்று அமர்ந்தான். 

ஏசி சிறிய சத்தத்துடன் குளிர் காற்றை வீசிக் கொண்டிருந்தது. சன்னல் திரையை நகர்த்தினான். வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது.

இரவு அருகில் படுத்திருந்த மதிவதனியிடமிருந்து ஒரு சத்தமும் எழவில்லை. அடித்துப் போட்டது போல தூங்கினாள். அறை முழுவதும் நறுமணம் கமழ்ந்திருந்தது. வெளியில் கொட்டும் மழையின் சத்தம் சிறிதாக கேட்டுக் கொண்டிருந்தது. 

அன்று இரவு பதினோறு மணிக்கு கதவு தட்டப்பட்டது. 

”உள்ளே வரலாமா?” மதி நின்று கொண்டிருந்தாள்.

பெங்களூர் இரும்புத்தாது ஏற்றுமதியாளரைச் (தற்போது அவர் அரசியல்வாதி) சந்திக்கச் சென்றிருந்த போது, டிரைவரின் மீது கொண்ட அன்பினால் சூட் ரூமில் கீழே படுக்கச் சொல்லி இருந்தான். இரவில் அவர் விட்ட கொறட்டையில் அலறி அடித்துக் கொண்டு, அவரை எழுப்பி காருக்குச் சென்று தூங்கச் சொன்னது பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. அன்றிலிருந்து தனியாகத்தான் தங்குவான். 

”வாம்மா..! என்ன ஆச்சு?”

”ஓவராக சரக்கை போட்டுட்டு வம்பு செய்கிறார்கள் இருவரும். உங்க கூட தங்கிடவா? ப்ளீஸ்..!”

மாலையிலிருந்து இருந்து பீமாவை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். தயக்கத்துடன் சம்மதித்தான்.

”கீழே படுத்துக்கிறேன், தலையணை மட்டும் தாங்க”

”பெட்டில் படுத்துக் கொள்!”

பீமாவின் அருகில் படுத்துக் கொண்டாள்.

சன்னலோரமாய் அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரமானது தெரியவில்லை. அப்படியே அசந்து போய் கண்ணசந்து விட்டான்.

“சீக்கிரமா முழிச்சிட்டீங்களா?”

குரல் கேட்டு விழித்து, அவளைப் பார்த்தான். ஆமாம் என்பது போல தலையாட்டினான்.

முடியை ஒதுக்கிக் கொண்டே எதிரில் அமர்ந்தாள். 

”பல் விளக்கிட்டீங்களா? பேஸ்ட் எடுத்தாரவா? டீ கலந்து தரட்டா?”

அவளை அழைத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவளுக்கு வெட்கம் வர தலையை அவன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள். சன்னலுக்கு வெளியே பார்க்கும்படி சொன்னான். அவள் கண்ணாடிக்கு வெளியே கொட்டிக் கொண்டிருந்த மழையைப் பார்த்தாள். இடது கையை முதுகுக்குப் பின்னால் கொடுத்து அவனை நெருக்கிக் கொண்டாள். கண்ணை மூடிக் கொண்டாள். 

பீமா மழையை தன் நெஞ்சுக்குள் உணர்ந்தான்.

சிறிய மூக்கு, காதில் தொங்கட்டான்கள், நெற்றியில் புரண்ட முடிக்கற்றைகள், அவள் மீது வீசிய ஏதோ ஒரு டியோரண்டின் வாசம். அளவான உதடுகள். சற்றே உப்பிய கச்சிதமான உடல். 

மெல்லிய கொலுசு அணிந்திருந்தாள். அதன் ஓசை அலாதியானது. அவளின் இருப்பை அந்தச் சத்தம் அடையாளப்படுத்தியது.  அங்குமிங்கும் சென்று வரும் போது எழும் கொலுசின் ஒலி - பீமாவின் மனதுக்குள் சட்டென்று அமைதியைக் கொண்டு வந்து கொண்டிருந்தது. ஏகாந்தமான அந்த ஓசைக்குள் மூழ்கிக் தன் இருப்பை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தான். 

இருப்பென்பது பெயருமல்ல, உருவமும் அல்ல. இருப்பென்பது இல்லாமலிருப்பது. ஓசை அதை ஒரு வகையில் உருவாக்குகிறது. 

அந்த நொடியில் பீமாவுக்கு ரூமியின் கவிதை நினைவிலாடியது.


I choose to love you in silence…

For in silence I find no rejection,


I choose to love you in loneliness…

For in loneliness no one owns you but me,


I choose to adore you from a distance…

For distance will shield me from pain,


I choose to kiss you in the wind…

For the wind is gentler than my lips,


I choose to hold you in my dreams…

For in my dreams, you have no end.

― Rumi

அமைதியில், தனிமையில், தூரத்தில், காற்றில், கனவுகளில் உன்னை காதலிக்கிறேன் காதலி என்கிறார். காதலியால் விலகி விட முடியாத காதல். காதலுக்கு காதலி என்ற உணர்வு மட்டுமே தேவை. காதலியல்ல. காதல் உருவமற்றது ஆனால் உணர்வானது. 

அதெல்லாம் சாத்தியமா? 

அதன் பெயர் ஒரு காதலா? 

கேள்வி எழுகிறதா? 

தமிழை ஆண்ட ஆண்டாளின் காதல் கண்ணன் மீது. திருப்பாவையில் புலம்பி இருப்பாள் ஆண்டாள். 

அவளின் காதலும் ரூமியின் கவிதையும் ஒன்றிணைந்து விடுகிறது. 

ஒவ்வொன்றும் வேறொன்றாக பிறப்பது இயற்கை அல்லவா?

மாலையில் மீட்டிங்க் முடிந்ததும் நண்பர்களுடன் அறைக்குள் வந்த போது, அவள் அவனது அறையில் தான் இருந்தாள். தலைக்கு குளித்து விட்டு முடியைக் கோதிக் கொண்டிருந்தாள். கண்களில் மை இட்டிருந்தாள். 

”அண்ணா ரெஸ்ட் எடுப்பாங்க, நீ நம்ம ரூமுக்கு வந்துடு” ன்னு ரேயான் அவளை அழைத்து சென்றார். 

அதன் பிறகு தான் அன்று இரவு பதினோறு மணிக்கு மதியின் வருகை. 

பத்து மணி போல ஊருக்கு கிளம்பினார்கள். 

காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தாள் மது. 

ஒட்டன் சத்திரம் அருகில் வரும் போது, பீமாவுக்கு நெஞ்சு எரிச்சல் உண்டானது. எங்கெங்கோ சென்று அலைந்து தேடிப் பிடித்து ஒரு கடையில் தயிர் வாங்கிக் கொடுத்தாள் மது. 

அவளின் கொலுசொலியைக் கேட்டபடியே இருந்தான் பீமா. 

ஏதோ ஒரு இடத்தில் இறங்கிக் கொண்டாள்.

நான்காம் நாள் மதுவிடமிருந்து போன்.

”சென்னைக்குச் செல்ல இருப்பதாகவும், டிக்கெட் புக்கிங்க் செய்து தர முடியுமா?” எனக் கேட்டாள்.

ஏசி பஸ்ஸில் டிக்கெட் புக் செய்து அனுப்பினான். 

“பணம் வேண்டுமா?” எனக் கேட்டான். 

”எதுக்கு?”

”தோணுது மதி”

”நான் ஒன்றுமே செய்யவில்லையே உங்களுக்கு?”

அவளுக்குப் புரியுமா எனத் தெரியவில்லை. 

பீமாவின் நெஞ்சுக்குள் அந்த நாளின் ஹோட்டலின் அறையில் அந்த ஒரு நொடியில் மழையாய் நிறைந்து போனாள் அவள் என்பது. 

இப்போது மீண்டும் ரூமியின் கவிதை மீண்டும்.


I choose to love you in silence…

For in silence I find no rejection,


I choose to love you in loneliness…

For in loneliness no one owns you but me,


I choose to adore you from a distance…

For distance will shield me from pain,


I choose to kiss you in the wind…

For the wind is gentler than my lips,


I choose to hold you in my dreams…

For in my dreams, you have no end.

- ரூமி


***

நாவல் எழுதப்படாமல் நீண்ட நாட்கள் ஆகி விட்டதே என்ற கவலையில் இருந்த மாயாவுக்கு பெருமிதம் தாங்க முடியவில்லை. சந்து தலையைச் சொரிந்து கொண்டே வந்தான்.

”அண்ணே, இதென்ன? கையில் வெண்ணெய் கிடைத்த போது, மழை கிழைன்னு உளறிகிட்டு இருக்கார் நாவல் ஆசிரியர்.

”சந்து, அதெல்லாம் உனக்குப் புரியாதுடா பயலே..!”

“என்ன இழவோ... மொத்தத்தில் வடை போச்சு...! இதெல்லாம் ஒரு நாவலா? எனச் சொல்லியபடி கடுப்பானான் சந்து.

* * *

தொடரும்...!

Friday, April 18, 2025

பாஜக-அதிமுக கூட்டணியல்ல அது ஒரு சதி

ஒவ்வொரு தேர்தலிலும், ஒரே நாடகத்தை நாம் பார்க்கிறோம். பாஜக அதிமுகவுடன் கைகோர்க்க வலியுறுத்துகிறது. அதிமுக நாங்கள் பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம் என்றார்கள். எந்தக் காலத்தில் நடக்காது என்றார் தவழ்பாடி. வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொய். 

வெற்றி பெறத் தவறிய பிறகும் கூட, தமிழ்நாட்டு மக்கள் அவர்களை தெளிவாக நிராகரித்த பிறகும் கூட கூட்டணி ஏன்?  

பாஜக ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டணிக்காக துடித்தது? 

காரணம் என்ன தெரியுமா?

இது தமிழ் நாட்டு மக்களின் நலனுக்கான தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. இது ஒரு சதி வலை. பின்னுவது பிஜேபி. அடிமைக்கூட்டம் கைகட்டி மெய் வாய் மூடி தலையைக் கூட ஆட்டாமல் தமிழர்களைக் காவு கொடுக்க உதவி செய்கிறது.

அதிமுகவை படிப்படியான கையகப்படுத்தும் திட்டம். அமைதியான, கணக்கிடப்பட்ட சதி.

பாஜகவால் தமிழ்நாட்டில் தனியாக வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தி மேலாதிக்கம், வட இந்திய தேசியவாதம் மற்றும் தீவிர இந்துத்துவா ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட அவர்களின் சித்தாந்தத்திற்கு தமிழ் மக்களின் மனதில் இடமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள்?

அவர்கள் ஒரு பிராந்தியக் கட்சியின் பின்னால் மறைந்து கொள்கிறார்கள். அதிமுகவை ஒரு முகமூடியாக, ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

தமிழர்களே ஏமாறாதீர்கள் - இது இந்தியா முழுவதும் அவர்கள் பயன்படுத்திய அதே கதை.

மகாராஷ்டிராவில், அவர்கள் பல ஆண்டுகளாக சிவசேனாவைப் பிடித்துக் கொண்டனர். பின்னர் என்ன? உள்ளிருந்து பிரித்தனர். கட்சியை கடத்தினர். இன்று என்ன ஆனது?

பஞ்சாபில், அவர்கள் அகாலி தளத்தைப் பயன்படுத்தினர். பின்னர் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுடன் அவர்களை இணைத்து அழித்தனர்.

பீகாரில், அவர்கள் நிதிஷ் குமாருக்குப் பின்னால் நின்றனர், அவரது அரசியல் வாழ்க்கையை முடிக்க முயன்றனர்.

வடகிழக்கில், அவர்கள் பிராந்தியக் கட்சிகளை ஒவ்வொன்றாக உள்வாங்கினர் - பாஜக கொடியைத் தவிர வேறொரு கட்சியின் கொடியையும் காணவில்லை.

இது கூட்டணி அரசியல் அல்ல. இது அரசியல் மனித பட்சிணி.

அவர்கள் கூட்டணியை  உருவாக்கவில்லை - அதை உடைக்கிறார்கள்.

அவர்கள் கூட்டணியை ஆதரிக்கவில்லை - அவர்கள் கூட்டணிக் கட்சிகளை விழுங்குகிறார்கள்.

இப்போது, ​​தமிழ்நாடு அவர்களின் பட்டியலில் அடுத்தது என்ன?

அவர்கள் ஏற்கனவே விளையாட்டைத் தொடங்கிவிட்டனர்.

அதிமுகவுக்குள் பாஜக ஆதரவு முகங்களை ஊக்குவித்தல்.

உள்ளிருந்து கட்சியை பலவீனப்படுத்துதல்.

அழுத்தம் கொடுக்க மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துதல்.

ஊடகக் கதைகளை கட்டுப்படுத்துதல்.

மெதுவாக, திமுகவுக்கு முக்கிய மாற்றாக தங்களை நிலைநிறுத்துதல்.

நான் இதை உரத்த குரலில் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் - பாஜக அதிமுகவுக்கு ஆதரவளிக்க இங்கே இல்லை. பாஜக அதிமுகவை அழித்து ஒழித்து விட இங்கே உள்ளது.

சிவசேனாவிற்கு செய்தது போல. JD(U) உடன் முயற்சித்தது போல. நேர்மையாக வெற்றி பெற முடியாத ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் திட்டமிட்டது போல.

இது கூட்டணி அல்ல. இது அரசியல் கட்சிகளைக் கைதியாக்கும் உத்தி. 

அதிமுக விழித்தெழாது. துரோகம் அதன் வாடிக்கையானது. பொய்களே கொள்கையானது. தலையற்ற தலைமையின் கீழ் திக்குத் தெரியாது சுடுகாட்டில் போய் படுத்துக் கொண்டது. அழிந்தால் என்ன அழியாவிட்டால் தான் என்ன?

தமிழர்களுக்கு இதுபற்றிய எந்தக் கவலையும் தேவையில்லை. நச்சுக் களையொன்று ஊடுபயிரென பொங்கிப் பெருகும் தமிழர் வாழ்வுக்குள் ஊடுறுவத் துடிக்கிறது. அந்த நச்சுக் களைக்கு தமிழர்கள் நஞ்சிட வேண்டும்.

தமிழ்நாடு நினைவில் கொள்ள வேண்டும் - தமிழ்நாடு டெல்லிக்கு தலைவணங்கும் நிலம் அல்ல. டெல்லியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாட்டால் ஆளப்படும் மக்கள் அல்ல.

பாஜகவுக்கு இங்கே இடமில்லை. இந்தக் கூட்டணி அரசியலை நாம் இப்போது நிறுத்தவில்லை என்றால், அவர்கள் ஒவ்வொரு குரலையும், ஒவ்வொரு கட்சியையும், மாநிலத்தில் மீதமுள்ள ஒவ்வொரு ஜனநாயகத்தையும் அழிப்பார்கள். மகாராஷ்டிராவில் மூன்றாம் மொழியாக இந்தியைக் கட்டாயமாக்கி விட்டார்கள். 

இது வாக்குகள் பற்றியது மட்டுமல்ல.

இது தமிழர்களின் அடையாளம் பற்றியது. 

கூட்டாட்சியின் மகத்துவம் பற்றியது. சுய மரியாதையைப் பற்றியது. 

இதுவெல்லாம் அடிமைகளுக்குத் தெரியாது. ஒவ்வொரு அடிமையும் ஊழல் வழக்குகளால் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தலை தூக்கினால் அரசியலில் அவர்களின் முகம் காணாமல் போய் விடும் என்பதால் மவுனியாக அழிவுக்குத் துணை போகின்றார்கள்.

தமிழ்நாடு விற்பனைக்கு இல்லை.

தமிழக அரசியல் அவர்களின் விளையாட்டு மைதானம் அல்ல.

தமிழக மக்கள் இந்தச் சதிக்கு ஒருபோதும் சரணடைய மாட்டார்கள்.


Saturday, April 12, 2025

முருங்கைக்காய் ரசம் - அடிபோலி ரகம்

பக்கத்து வீடுகளிலிருந்து தினமும் முருங்கைக்காய் இலவசமாய் வீட்டுக்கு வந்து விடுகிறது. அம்மணியின் கைப்பக்குவ மெனுக்களில் முருங்கைக்காய் தவறாது இடம் பெற்று விடுகிறது. எங்கே திரும்பினாலும் முருங்கைக்காய் மயம்.

தட்டுகளில் பலவித மெனுக்களில் முருங்கைக்காய் வரிசை கட்டி நிற்கிறது. அத்துடன் எனக்குள் கற்பனையும் கலந்து விடுவதால் தட்டில் நெளியும் பச்சைப்பாம்பு போலவும் தெரிகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனப் புரிகிறது. மனித இயல்பு தானே?

பாக்கியராஜ் செய்த அடாவடிகளில் ஒன்று இந்த முருங்கைக்காய் மேட்டர். எல்லா மனிதர்களின் மனதிலும் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். பல் இருக்கும் சினிமாக்காரர்கள் அவல் மெல்லுகிறார்கள். ரசிகர்கள் வாய் ஹீட்டில் காய்ந்து போய் கிடக்கும். அது அவரவர் பிரச்சினை.

இப்போதைக்கு மனிதர்கள் சாப்பிடும் காய்கறிகளில் அக்மார்க் ஆர்கானிக் இந்த முருங்கைக்காய் மட்டுமே. 

இந்த முருங்கைக்காயில் ஒரு மகத்துவம் உண்டு. ஒன்றுக்குப் போன பிறகு ஒரு சிலருக்கு சிறுநீர் சொட்டுச் சொட்டாக நீண்ட நேரம் வடியும். அதற்கு இந்த முருங்கைக்காய் ஒரு வரப்பிரசாதம்.

அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சொட்டுச் சொட்டாய் நனைவது நின்று விடும்.

புதுக்கோட்டை - நெடுவாசல் பக்கம் முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து மசாலா ரசம் வைப்பார்கள். அது ஆட்டு எலும்பு ரசத்தின் சுவைக்கு ஈடு சேர்க்கும். கொஞ்சம் கலக்கி சேர்க்கும் வேலை தான். ஆனாலும் ஒரு தட்டு சோறு உள்ளே போகும். எப்படி செய்வது எனச் சொல்கிறேன்.

முதல் ஸ்டெப் :

ஒரு குக்கரில் இரண்டு லிட்டர் தண்ணீரில், பெரிய வெங்காயம்(1) அதனுடன் தக்காளிகளை(3) துண்டு துண்டாக நறுக்கி போட்டு, ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து விட்டு, குக்கரை மூடி நான்கு விஷில் விட்டு இறக்கவும். 

இரண்டாவதாய்ச் செய்ய வேண்டியது :

கத்தரிக்காய்(2), நன்கு நீண்ட முருங்கைக்காய்கள்(3), உருளைக் கிழங்குகளை(2) நறுக்கி கழுவி விட்டு குக்கரில் சேர்த்து வேகப் போடவும். அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.

மூன்றாவதாய் செய்ய வேண்டியது :

ஒரு மிக்ஸியில் இஞ்சி(1-துண்டு), பூண்டு(6 துண்டுகள்), பட்டை(1), கிராம்பு(4), ஏலக்காய்(3), கசகசா(1 ஸ்பூன்), முந்திரி(6), ஒரு ஸ்பூன் தேங்காய் துண்டு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு, நன்கு அரைத்து எடுத்து, இந்த மசாலாவை வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்க விடவும். மணக்க ஆரம்பிக்கும். இஞ்சி பூண்டு வாசனை போகும் வரை வேக விடவும். ஒரு ஐந்து நிமிடம் ஆகும்.

நான்காவதாய்ச் செய்ய வேண்டியது :

ஒரு பாத்திரத்தில் மல்லித்தூள்(2), மிளகாய் தூள்(1), சீரகத்தூள்(1), சோம்புத்தூள்(1) ஆகியவைகளைச் சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து வெந்து கொண்டிருக்கும் இஞ்சி பூண்டி வாசனை போன ரசத்துடன் சேர்த்து கலக்கி விடவும். தேவையான உப்புச் சேர்க்கவும்.

ஒரே ஒரு கொதி விட்டு இறக்கி விடவும். கவனிக்க சீரகமும், சோம்பும் கலந்திருப்பதால் கடுத்து விடும் ஆபத்து உள்ளது. வாயில் வைக்க முடியாது. அது ஒரு தினுசாக இருக்கும். 

ஐந்தாவதாகச் செய்ய வேண்டியது :

இலுப்பைச் சட்டியில் இரண்டு ஸ்பூன் நல் எண்ணெய் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயமும், ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு பிரிஞ்சி இலை அத்துடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்புடன் சேர்த்துக் கிளறி விட்டு மூடி வைக்கவும்.

ஆறாவதாகச் செய்ய வேண்டியது :

ஒரு தட்டில் சுடச் சுட சோற்றினைப் போட்டுக் கொண்டு, அதில் நடுவில் குழி பறித்துக் கொள்ளவும். ரசத்தையும், காய்கறிகளையும் அந்தக் குழிக்குள் நான்கு கரண்டி எடுத்து ஊற்றவும். காய்கறிகளை எடுத்து ஓரமாக வைத்து விட்டு, முருங்கைக்காயை எடுத்து வாயில் வைத்து - ஒரே உறிஞ்சு. உள்ளே போயிடுச்சா. எலும்பினை உறிஞ்சியது போல இருக்கும். செம டேஸ்ட்டா இருக்குமுங்க.

சோற்றுடன் கத்தரிக்காய், உருளைக்கிழங்குகளை சேர்த்துப் பிசைந்து ஒரு உருண்டையை உள் நாக்கில் வைக்கவும். லபக்கென வயிற்றுக்குள் சென்று விடும்.

ஆட்டு எலும்பு ரசம் இதன் அருகில் நிற்கமுடியாது. எப்படின்னா ராஷ்மிகா மந்தனாவும், சரோஜா தேவியையும் அருகருகில் நின்றால் நம் கண்ணும், கவனமும் யாரிடம் போகும்? அதே தான். ரசனை வேறு, ருசி வேறு.

மணமும், குணமும் - ரகமுமாக முருங்கைக்காய் ரசம் அடிபோலி ரகம்.

திருமணம் ஆன அம்மணிகள் கவனிக்க: இது புளி சேர்க்காத ரசம். ஒரு முறை வச்சு கொடுங்க. அப்புறம் அதே தான்....! அடி போலி ..... அடி போலி.....!

Tuesday, April 1, 2025

தனுஷின் நாய்க்காதல் - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?

ஆறறிவு கொண்ட மனிதன் விலங்குகளை விட கேவலமான நிலைக்குச் செல்வான் - வரலாறு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம்.

மார்கழி மாதம் நாய்கள் தெருவில் காதல் செய்வதைப் பார்த்திருப்போம். மனிதர்கள் செய்தால் - அதுவும் தனுஷின் அக்கா பையன் பவிஷ் ( சுவற்றில் வச்சு தேச்சாலும் கிளம்பாத முகம்) - விசிலடிச்சான் குஞ்சுகளுக்குப் புதுவழி காட்டிய நாய்க்காதல் படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். 

நாய்களுக்கு நேரமும் இல்லை, காலமும் இல்லை - தேவையென்னால் இடம் பொருள் பார்க்காமல் கோர்த்துக் கொள்ளும். அதை தான் தனுஷ் படமாக எடுத்து இருக்கிறார்.

தனுஷை கொண்டாடி ஆடி பாடி தீர்க்கும் ரசிகன் எவனையாவது ஹீரோவாக்கலாமே தனுஷ். ரசிகனின் காசு மட்டும் வேண்டும். ஆனா உங்க குடும்பம் மட்டுமே தான் ஹீரோவாக நடிக்கனுமா தனுஷ்? உம்ம பையன் அடுத்த ஹீரோ...வா? 

காசையும் நேரத்தையும் கொடுத்து, நாசமாக போகவென தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வரையிலும் உங்களைப் போன்றோர்களின் ஆட்டம் அடங்கவா போகுது?

நாயகி அனிகா சுரேந்திரன் - பிஞ்சிலே பழுத்தது. முகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தால் நித்தியானந்தாவாக இந்தியாவை விட்டு ஓடிப் போகனும்.  உருண்டு திரண்ட உடலிருந்தால் - அந்த நான்கு இஞ்ச் இடத்தை தவிர மற்றதெல்லாம் காட்டினால் ஹீரோயின். இன்ஸ்டாகிராமில் ஆட்டம்.

ப்ரியா பிரகாஷ் வாரியர் - ஒற்றை விரலை நீட்டி கண்ணடித்த கலையுலக நடிகை. இது நாள் வரை எங்கே போனாரோ தெரியவில்லை. தனுஷுக்கு மாமி நடிகைகளை ரொம்பவும் பிடிக்கும் போல. 

எங்கேயிருந்து பிடிக்கிறானுங்களோ? 

மேத்யூ தாமஸ் - மலையாள படங்களில் இருந்து ஓய்வு பெற்ற ஷகிலா இப்போது அம்மா ஆகி புனிதராகி விட்டார். சிலுக்கு நடித்த லயனம் பட ஹீரோ நந்து போல இருக்கிறார். விரைவில் மலையாள சூப்பர் ஹீரோக்களுக்கு ஷகிலா போல டஃப் கொடுக்கலாம். 

ரம்யா ரங்கநாதன்  - அச்சு அசல் மாமி. தனுஷ்ஷுக்குப் பிடிக்க இந்த ஒன்றே போதும்.

கவட்டிக்குள் சொரியும் கதையில் நடித்தால் தான் ரசிகனின் மனதைக் கொள்ளை கொள்ள முடியும். அதைத்தான் மாமியாரைத் தடவி ஹீரோவான  சோசப் - இப்போது முதலமைச்சராக வேண்டுமென கதறிக் கொண்டிருக்கிறான்.

ஆபாசப்படம் - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். 

ஒழுக்கமென்றால் என்னவென்று தெரியுமா தனுஷ் உங்களுக்கு?

சுய ஒழுங்கு என்றால் என்னவென்று உங்களைப் போன்றோருக்குத் தெரியாது. 

பெண்களை அசிங்கப்படுத்தும் போக்கினை எப்போதுதான் உணர்வீர்களோ தெரியவில்லை. 

சுயகவுரம் இல்லாத பெண்களை நடிகைகளாக்கி - நாசகாரம் செய்யும் இதைப் போன்ற படங்களை காசு கொடுத்துப் பார்க்கும் ரசிகர்களின் எதிர்காலத்தை நினைக்கும் போது ஆயாசம் தான் ஏற்படுகிறது.

தனுஷ் நீங்கள் வாழும் காலம் வரை - ஒரு நல்ல செயலையாவது செய்யுங்கள்.  மலத்தை தட்டில் வைத்து பரிமாறும் மனத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

பெண்கள் ஆலமரம் போன்றோர்கள். அவர்களை அசிங்கம் செய்யாதீர்கள். சரோஜாதேவி கதைப் படங்களை அமெரிக்கா சென்று எடுங்கள். அந்த ஃபீல்ட் தனி. 

சன்னிலியோன்களை தமிழ் நாட்டில் உருவாக்கிட முயலாதீர்கள்.