குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 8, 2022

ஸ்டாலினிசம் (2) - நான் முதல்வன்


ஆட்சிக்குப் பொறுப்பேற்றதும் அவர் தன்னை மக்களுக்கான ஊழியர் என அடையாளப்படுத்திக் கொண்டார். மக்களுக்கு சேவை செய்யும் ஊழியன் நான் என்று பெருமைப்பட்டார்.

அவர் தன் அமைச்சரவையை அரசியலுக்கு அப்பாற்பட்டு, தகுதியானவர்களுடன் உருவாக்கினார். ஒவ்வொரு அமைச்சர்களையும் மதியூகிகளாக தேர்ந்தெடுத்தார்.

தன் புதிய அரசியல் பயணத்தை, தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் இருக்க வேண்டுமென்ற உன்னத நோக்கில் தொடங்கினார்.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் எனப் பேசுகிறார். 

கண்ணிய அரசியல். 

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செயலால் காட்டுகிறார்.

கல்வி கரையில, கற்பவர் நாற் சில. கரையிலாக் கல்வியை எல்லோருக்கும் கிடைத்திட ஆவலாய் பணி செய்கிறார். 

மாணவர்களிடையே, உங்கள் தகப்பன் இடத்தில் இருந்து சொல்கிறேன், “நன்றாய் படியுங்கள்” என்று கேட்கிறார்.

நான் முதல்வன் என்பது அனைவருக்குமானது. 

ஒவ்வொருவரும் முதல்வன், எல்லாவற்றிலும் என்று மாணவர்களிடையே மன ஊக்கத்தை ஊக்குவிக்கிறார்.

கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்றதை பொய்யாக்க முனைகிறார். 

நானிருக்கிறேன் நீங்கள் கல்வி கற்க, கற்க பிச்சை எதற்கு என்று கேட்கிறார்.

தமிழர்களின் பிள்ளைகள் கல்வியில் முதல்வனாக வேண்டுமெனத் திட்டமிடுகிறார். 

அதற்கு சான்று, “ நான் முதல்வன்” திட்டம்.

உயர்கல்வி ஒவ்வொரு தமிழர்களின் பிள்ளைகளுக்கும் கிடைத்திட வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

இதோ அதற்கான முன்னோட்டமாக தமிழக அரசின் இணையதளம்.

https://naanmudhalvan.tnschools.gov.in/home

இதோ இப்படித் தொடங்குகிறது இணையதளத்தின் ஆரம்பம்.

”9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே இந்த இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்.

நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன. “

தகவல்களின் சுரங்கமாக கொட்டிக் கிடக்கிறது இந்த இணையத்தில். மாணாக்கர்கள் தங்களின் ஐ.டி வழியாக உள் நுழைந்து தேவையான தகவல்களைப் பெற்றுப் பயனடைதல் அவசியம். பலர் இத்தகவல்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். ஏழைகளால் இயலாதே. அவர்களுக்காக துல்லியமான தகவல்களுடன் இந்த இணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நம் முதல்வர் மாணவர்களை முதல்வர்களாக்க உருவாக்கிய திட்டமிது. தமிழர்களின் குழந்தைகள் முதல்வன் என்ற தகுதியை அடைவதே, நம் முதல்வருக்கு மாணவர்கள் செலுத்தும் நன்றி.

ஸ்டாலின்ஷத்தின் இரண்டாம் பகுதி நான் முதல்வன்.



ஊழலை ஒழிப்போம் - எப்படி என விளக்கம்

கிழட்டு நரி இந்தியர்களை ஏமாற்றி லோக்பால் வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சகம் தூங்கியதால் 70 ஆண்டுகால சதியின் வேரை கண்டு பிடிக்கவில்லை. இந்தியர்கள் கிழட்டு நரியின் நயவஞ்சக வலையில் சிக்கினார்கள். இன்று மீளாத் துயரில் ஆழ்ந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்கள். நம்பிக்கைத் துரோகம் செய்த நரி, ஊருக்குப் போய் உட்கார்ந்து கொண்டது. 

இந்திய ஒன்றியங்களின் பிரதமர், ஊழலை ஒழிப்போம் என்கிறார். 

எப்படி?

இதோ இப்படி தான். செய்தியைப் படித்துப் பாருங்கள். புல்லரிக்கும்.

ஊருக்கே தெரியுமாம் விபச்சாரி யார் என? ஆனால்..... !

அம்புட்டுதான்..

நன்றி : தினமணி (08.09.2022)




Wednesday, September 7, 2022

ஸ்டாலினிசம் (1) - புதுமைப்பெண் - தமிழர்களின் தந்தை


துரோகி எட்டப்பனின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, ஆட்சிக்கு ஏன் இவர் வரவில்லை என்று பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்கு நோக்கினும் ஊழல் மயம். தமிழக மக்கள் துன்பப்பட்டு, துயரப்பட்டு கட்டிய வரிப்பணத்தை ஸ்ட்ரா போட்டு, வித விதமான கமிஷன் வழியாக உறிஞ்சினார்கள் எட்டப்பன்களும் அவனுடைய கூட்டாளிகளும்.

கலைஞர் இருந்திருந்தால், ஊழல்வாதி ஜெ மறைவுக்கு பின்பு தமிழக அரசியல் தலைகீழாக மாறி இருக்கும் என்று வாய் இருக்கு, யூடியூப் இருக்கு, டிவிட்டர் இருக்கு, ஃபேஸ்புக் இருக்குவென பலரும் ஆலோசனைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தனர். 

ஆனால் எனக்கோ அவர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கமாட்டார் எனத் தோன்றியது. 

அவர் அப்படித்தான் இருந்தார். கண்ணியம்.

பூணூல் பத்திரிக்கைகள், பத்திரிக்கை விபச்சாரகர்கள் தேர்தலின் முதன் நாளில் கூட பத்திரிக்கைகளில் இதுவரை எவரும் வெளியிடாத வகையில் நூதனமாக அவர் மீது தாக்குதல் தொடுத்தனர். 

அவ்வளவு வன்மம் அவர் மீது. இருப்பினும் அவர் கட்டுப்பாட்டுடன் இருந்தார்.

அவர் திராவிட இனத்தின் வளர்ச்சிக்காக புதிய அத்தியாயத்தை உருவாக்கி விட்டால், சாதி, மத, வெறி பிடித்த மிருகங்களின் நயவஞ்சக எண்ணங்கள் தவிடு பொடியாகிடுமே என்ற கோப வெறியில் பல முனையிகளிலிருந்தும் தாக்குதல்களை  அவர் மீது தொடுத்ததை உலகமே கண்டது.

மனிதனாக வாழவே தகுதியில்லாத துரோகி எட்டப்பன், அவரை இழித்தும் பழித்தும் பேசினான். அழுதான், அரற்றினான், புரண்டான், ஊழலில் ஊறிய பெருச்சாளி, நாற்றம் பிடித்த நயவஞ்சகனான அவனால் இன்று தமிழர் குழந்தைகள் இன்று மருத்துவம் படிக்க முடியாமல் வழி இன்றி தடுமாறி நிற்கச் செய்த சுய நலப்பேயன், இனத்துரோகி எப்படியெல்லாமோ சதிகளைச் செய்து பார்த்தான். துரோகம் எப்போதும் அழியும், நம்பியவரையும் அழிக்கும்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் அவர் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார்.  அவரின் கடமை.

எனக்கு அறத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் ஜெயிப்பார் என நம்பினேன். ஜெயித்தார்.

அவர் துரோகிகளால், துரோகத்தால் வளர்க்கப்பட்டவர். கலைஞருக்கு பிள்ளையாகப் பிறந்தினாலே அவர் பெற்றது வலிகள் மட்டுமே. 

ஆனால் அவர் அவராகவே இருந்தார். 

ஆட்சிக்கு வந்தார். 

தூற்றியவர்கள் துயருற்று விம்மினார்கள். துன்பத்தினால் உளறினார்கள். இட்டுக்கட்டி ஏசினார்கள். இன்றும் செய்கிறார்கள்.

பாப்பனிய ஜன கட்சி நடத்தும் ஒன்றிய அரசின் மூலமாக நரித்தனத்தை இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

தினமும் அவர் மீதும், தமிழக மக்கள் மீதும் எந்தெந்த வகையினில் எல்லாம் தாக்குதல்களை நிகழ்த்த முடியுமோ அவ்வகையிலிலெல்லாம் தாக்குகின்றார்கள். 

வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகின்றார்கள். 

தமிழர்களுக்கு நன்மை கிடைத்து விடக்கூடாது என்பதில் ஒன்றிய அரசு மிக கவனமாக இருக்கிறது. ஏழைகள் இருக்கும் பகுதியாக, சாதி வெறி பிடித்தவர்களாக, மதவெறி பிடித்தவர்களாக மக்களை மாற்ற ஒரு தற்குறியை வைத்து முயன்று கொண்டிருக்கிறார்.

திராவிடத்தால் படித்தவர்கள், பலனடைந்த தமிழர்கள், சுயநலத்திற்காக, பேராசையினால் தமிழர் இன துரோகிகள் ஆனார்கள். இவர்களை வைத்து அரசியல் என்கிற போர்வையில் மதவெறி, சாதி வெறியை பாப்பனிய ஜன கட்சி மத அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.

போலிச் செய்திகளைப் பேசுகின்றார்கள். பொய்யை உண்மை என்கிறார்கள். இத்தனை அக்கிரமங்களைச் செய்து வந்தாலும் அவர் இன்னும் அவர்கள் மீது கண்ணியம் காட்டுகிறார். 

துரோகிகளாலும், துரோகத்தினாலும் வளர்ந்தவருக்கு இதெல்லாம் சாதாரணம்.

அவர், 06.09.2022ம் தேதியன்று ஒரு சிறப்பான நிகழ்வினை நிகழ்த்தினார்.  தமிழர்களின் தந்தையாக உயர்ந்தார்.  புதுமைப் பெண் திட்டம் - அவரின் கனவு. 

அக்கனவு நனவாகும், பெண்கள் 100 சதவீதம் கல்வி பெறுவார்கள். தமிழர்கள் வாழ்க்கை மேலும் மேலும் உயரும். ஏழைப் பெண் பிள்ளைகள் படித்தால் சமூகம் அவர்கள் வழியாக மேன்மை அடையும் என்ற உன்னத நோக்கினை அவர் உணர்ந்துள்ளார். 

கல்வி மட்டுமே தமிழர்கள் உயர வகை செய்யும் என்று அவர் நினைக்கிறார். பெண்களுக்கு இலவசப் பயணம், கல்விக்கு உதவி என அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிடக் கடமை.

அவர் கடமையைச் செய்கிறார்

கண்ணியமாக நடந்து கொள்கிறார்.

கட்டுப்பாடுடன் கட்சியினையும் தமிழர்களையும் வளர்க்கிறார்.

கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்பது ஸ்டாலினிசம்.

ஸ்டாலினிசம் தமிழர்களுக்கானது, அது திராவிட நாட்டின் மேன்மைக்கானது.

அவரின் ஒவ்வொரு நகர்வும் தமிழர்களுக்கானது என்பதே ஸ்டாலினிசம்.


லலிதமன்ற நாடகக் காட்சிகள் - காட்சி ஒன்று

லலித மன்றம் என்று அழைக்கக் கூடிய, ஆலமரத்தினடியில் சாமிகள் உட்கார்ந்திருந்தனர். இடுப்பில், தொடையில், காலில் பிறந்தவர்கள் மெய் வாய் பொத்தி நின்று கொண்டிருந்தனர். ஆகமத்தில் விதிகள் இல்லாத காரணத்தால், அவர்களுக்கு உட்கார சபையில் அனுமதி இல்லை. எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டவை. சாமிகள் யாரும் அதற்கு காரணமில்லை. வேதமே காரணம். 

குற்ற விபரம் : கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்ததாகக் குற்றம்

விசாரணை விரைவில்...!

வாசகர்களுக்கு இன்றையச் செய்தி. நன்றி தினமணி



மேற்கண்ட செய்தியில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விவசாயிகள் போராட்டத்தில் தானாகவே ஸ்டார்ட் ஆகி, வேகமாக வந்த கார் விவசாயிகள் மீது மோதியதாக இரண்டாம் பத்தியில் செய்தி இருக்கிறது. கார் இடித்ததால் வன்முறை உண்டானது என்பது கூடுதல் செய்தி. காரினால் தான் வன்முறை என்று தவறாக நினைத்து விடக்கூடாது.

இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திற்காக ராகுல்காந்தியின் நடைபயணம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்.

ஒன்பது வருடங்கள் நேரு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தார். தங்களது குடும்பச் சொத்தான நாடாளுமன்றக் கட்டிடத்தை நாட்டுக்கு கொடுத்தார். 

அந்தப் பரம்பரையில் வரும் ராகுல் காந்தி அவர்களுக்கு அவரது தந்தை இந்தியர்களை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். 

இந்தியா பன்முகத் தன்மை வாய்ந்த, மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்று தனது வாழ்க்கையை இந்தியர்களுக்குக் கொடுத்த மகாத்மா காந்தி விரும்பினார்.

இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம் காங்கிரசும், நேரு குடும்பத்தார் மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. சூரியனை பொய்களும், புராணங்களும் மறைக்க முடியாது.

காங்கிரஸ் ரயிலைக் கொளுத்தவில்லை, கொலைகள் செய்யவில்லை, எந்த மதத்தினருக்கும் வந்தேறிகளுக்கும் அடிமையாக இல்லை. நாட்டை விற்கவில்லை, இந்தியர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி விழுங்கவில்லை, எந்த அமைப்புக்கும் சார்பாக இல்லை. 

இந்திய மக்களை நேசித்தார்கள். இந்தியாவுக்கு உழைத்தார்கள். இந்தியா இன்று உயர்ந்து நிற்கிறது. காலம் இந்தியர்களுக்கு இப்போது பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய நாளில், ஒவ்வொரு இந்தியனும் பொய்களால் ஏமாற்றப்படுகிறான். வந்தேறிகளால் நாசமாக்கப்படும் இந்தியாவை, மீண்டும் மதவெறிக்கு எதிரான ஒரு சுதந்திரப் போரினால் தான் மீட்க முடியும். 

கடந்த 70 ஆண்டுகளாக துல்லியமான நோக்குடன் திட்டமிடப்பட்டு, இன்று இந்தியா மத வெறி எனும் போர்வையில் வந்தேறிக் கும்பலொன்றினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அடிமைகள் கலவரம் செய்கிறார்கள். வெடிகுண்டுகள் வீசுகின்றார்கள். கார்கள் ஏற்றி கொலைகள் செய்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்கின்றார்கள்.

பஞ்சைப்பராரிகளாய் இந்தியர்கள் நயவஞ்சமாக மாற்றப்படுகின்றார்கள். படிக்க அனுமதிக்க மறுக்கின்றார்கள். இந்தியர்கள் கற்காலத்துக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். 

இந்தியர்களை இந்த மதவெறி வந்தேறிக் கும்பலிடமிருந்து மீட்க, இந்தியாவை நேசிப்பவர்களால், உண்மை இந்தியர்களால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் பொய்கள் எனும் மாயையில் கட்டுண்டு கிடக்கும் இந்தியர்களுக்கு ராகுல் காந்தியின் பயணம் விழிப்புணர்வைத் தரும். இந்தியா மீண்டும் புத்துயிர் பெற்று எழும் என்று நம்புவோம்.

ராகுல் காந்தி அவர்களின் எண்ணம் நிறைவேறட்டும். அதனால் இந்தியா மேன்மையடையட்டும்.

Monday, September 5, 2022

லலிதமன்றம் நாடகக் காட்சிகள்


உலகின் ஒப்பற்ற சக்தி படைத்தது மேலே இருக்கும் வஸ்து. அணுகுண்டு எல்லாம் இந்த வஸ்தின் முன்னே தூசு. ஹைட்ரஜன் பாம் சும்மா சும்மா. இதன் ஆற்றலை வார்த்தைகளால் விவரித்து விடமுடியாது. அந்தளவுக்கு வலிமையான வஸ்து இது.

இந்த வஸ்துவினை அணிந்தவர்களுக்கு உலக மக்கள் யாவரும் சேவகர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்தப் பெருமித எண்ணத்தோடு, எஜமான அடிமைகளான நாம் இனி தொடர்ந்து லலித மன்றத்தில் நடத்தப்படும் நாடகக் காட்சிகளைத் தினம் தோறும் படித்து இன்புறலாம். 

இன்புற விரும்புவர்கள் தொடர்ந்து படிக்கவும். லலிதமன்றத்தில் நடத்தப்படும் நாடகங்கள் சுவாரசியமானவையாக இருக்குமா? என்பது படிக்கும் உங்களுக்கு வெளிச்சம்.

நாடகக் காட்சிக்கு முன்பு முன்னுரை:

இந்த மன்றத்திற்கு சுமார் இருபத்தெட்டு ஊர்களும், எட்டு உப ஊர்களில் இருந்தும் நாடகம் பார்க்க ஆட்கள் வருவதுண்டு. சாமிகள் தான் நடிப்பார்கள். நல்ல நடிப்பாக இருக்கும். நாடகத்தில் பல பாத்திரங்கள் உண்டு. அந்தப் பாத்திரங்களில் பலர் எங்கிருப்பர் என்று தெரியாது கடவுளைப் போல. ஆனாலும் பாத்திரங்களாய் இருப்பர்.

இந்த நாடகத்தில் நடிப்பவர்களுக்கு ஆக்கிர மங்கள் எனும் புத்தகமே வழிகாட்டியாக இருக்கிறது. நாடகத்துக்கும் விதிகள் உண்டு அல்லவா?

இனி விரைவில் திரைக்காட்சிகள் தொடரும் ... 


யாருக்கு வரும் இந்த புத்திசாலித்தனம்?

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஜி.வி. பிலிம்ஸ், ஜி.வெங்கடேசன். இவரது சகோதர பிரபல இயக்குனர் மணிரத்னம். இவரது மனைவி கமல்ஹாசனின் அண்ணன் மகள்  சுகாசினி.  இந்தக் குடும்பமே சினிமாக்குடும்பம். உலகளாவிய தொடர்புகள், இணைப்புகள், வரவுகள், செலவுகள் என்று எவ்வளவோ இருக்கும். அதெல்லாம் தனிப்பட்டவர்களின் ரகசியங்கள் என்பதால் அரசுக்கு ஒன்றும் இழப்பில்லை.

ஜிவி பிலிம்ஸின் பிரபலமான படம் கார்த்திக் நடித்த மெளனராகம். அதைத் தொடர்ந்து ரஜினி காந்தின் தளபதி.

கடனோ அல்லது ஏதாவது பிரச்சினையோ, காரணம் சரியாகத் தெரியவில்லை. வெங்கடேசன் தூக்கில் பரகதி அடைந்தார். ஆனால் அவர் வாங்கிய கடனுக்கு பரகதி கிடைக்கவில்லை. 

குடும்பத்தாரின் முயற்சியில் ஜி.வி பிலிம்ஸ் மீண்டும் படங்களைத் தயாரித்தது. ஆனால் நிர்கதி பிராப்தி அடையாத கடனுக்காக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த, கவனிக்க போர்ச்சுகல் நாடு, அங்கிருக்கும் ஒரு கம்பெனி நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிலிம்ஸ் லிமிட்டெட்டை வாங்குகிறது.

ஊரான் காசு இலவசமாய் கொட்டிக் கிடக்கும் வங்கியில் அந்த போர்ச்சுகல் கம்பெனி லோன் வாங்குகிறது. 

கவனிக்க, நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கம்பெனியை போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி, வங்கியில் கடன் பெற்று, ஜி.வி.பிலிம்ஸின் பங்குகளை வாங்குகிறது.

ஒரு வெளி நாட்டுக் கம்பெனி, இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டுமெனில் அன்னியச் செலவாணி மேலாண்மைச் சட்டத்தின் படி, அதற்கான அனுமதி பெற்று வாங்க வேண்டும். இது எதுவுமே நடக்கவில்லையாம்.

போர்ச்சுகல் அரசுக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும் ஒன்றும் தெரியாது இதைப் பற்றி என்று நம்பிக் கொள்வோம்.

இப்போதுதான் ஒன்றிய அரசின் ஒப்பற்ற அமலாக்கத்துறையின் கவனத்துக்கு இந்த பரிமாற்றம் தெரிய வந்து, ஜி.வி.பிலிம்ஸுக்கு சொந்தமான தஞ்சாவூர் தியேட்டரை பறிமுதல் செய்திருக்கிறார்களாம்.

தற்போது ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட்டின் இயக்குனர்கள் ஆறு பேர்கள். அதில் ஒரு சிலர் பத்துக்கு மேற்பட்ட கம்பெனிகளின் நிறுவனர்கள்.

இவர்கள் மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கையோ அல்லது சோதனையோ இட்டதாகச் செய்திகள் ஒன்றுமில்லை. கிட்டே போகமுடியுமா? 

அமலாக்கத்துறையில் குற்றம் நடைபெற்று இருப்பதாக ஆதாரங்கள் கிடைத்தால் தான் தியேட்டரை சீல் வைக்க முடியும். ஆனால் இதன் காரண கர்த்தாக்களை யாரால் என்ன செய்ய முடியும்? 

ஏன்? என்று காரண காரியம் தெரிந்த மகானுபாவர்கள் கமெண்டில் கருத்துக்களைப் பதிவிடவும். நூலிபான்கள் என்றும், பிராமணர்கள் என்று கமெண்டில் எழுதிவிட வேண்டாம் என்பது வேண்டுகோள்.

அவாளுக்கும் அவாளுக்கும் சண்டை - தினமணியில் செய்தி.

கமல்ஹாசன் உறவினர்கள் தொடர்பானது என்பதால் அரசியல் ஸ்பெஷல் நகர்வுகளாக இருக்குமோ என்று சிந்தித்து விடாதீர்கள். தேசத்துரோகம்.

நன்றி : தினமணி (02.09.2022 செய்தி)



Tuesday, August 16, 2022

ஜோதி சுவாமிகளின் வார்த்தைகளால் மாற்றமடைந்த பக்தர்

நானும் எனது முன்னாள் நண்பருமான தனபால் அவர்களும் வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு ஒரு மாலை நேரம் வந்தோம். அன்றைய மாலை நேரம், சுவாமியின் ஜீவசமாதியில் ஜோதி சுவாமிகள் வழிபடும் அம்பாளுக்கு  அர்ச்சனை மற்றும் நைவேத்தியம் ஆரம்பமானது. இருவரின் கையிலும் மலர்களைக் கொடுத்து, ஒவ்வொரு மந்திரம் ஓதும் போதும் அம்பாளின் பாதங்களில் மலரை அர்ப்பணிக்க கோரினார் ஜோதி சுவாமி.

சுவாமி மந்திரம் ஜெபிக்க, அந்த மாலை நேர அமைதியில் அம்பாள் விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்க, மனமொன்றிய நிலையில் இருவரும் அம்பாளின் பாத கமலங்களில் மலர்களைத் தூவினோம்.

அன்றிலிருந்து இன்று வரை ஜோதி சுவாமிகளைக் கவனித்து வருகிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ஆனால் இவரைப் பொறுத்தவரை இந்தக் கருத்து வெற்றி பெறாது.

சிறுவயதிலிருந்து ஆன்மீக நாட்டம் கொண்டு, குரு நாதரின் அழைப்பால் ஜீவசமாதியை நிர்வகித்து வருகிறார். 

எத்தனை பிரச்சினைகள்? எவ்வளவு அக்கப்போர்கள்? அத்தனையையும்  ஒரே ஆளாக நின்று சமாளித்து, நம் குருநாதரின் ஆசியோடு, வரக்கூடிய பக்தர்களைக் கவனிப்பதில் ஆகட்டும், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாகட்டும் என அவரைப் போல இன்னொருவர் இருக்கிறாரா என்றால் எனக்குத் தெரிந்து இல்லை.

பிரதிபலன் எதிர்பார்க்கின்றாரா என்றால் இல்லை. ஏதாவது கட்டணம் வாங்குகின்றாரா? அதுவும் இல்லை. இடுப்பில் ஒரு காவி வேஷ்டி. அதுவும் அழுக்குடன் இருக்கும். 

காலையில் எழுந்து சமைப்பதில் ஆரம்பித்து மாலை ஜீவசமாதியை கதவை மூடும் வரைக்கும் ஓடிக் கொண்டே இருப்பார். அத்தனை சுறுசுறுப்பு.

குருநாதரும் இவரும் வேறு வேறு என்று என்றைக்கும் வித்தியாசம் தோன்றியதே இல்லை. ஒரு சில சமயங்களில் குருநாதரைப் போலவே பேசுவார். அந்த நேரங்களில் எனக்குள் படபடப்பு எழுந்து விடும். சத்தம் காட்டாமல் அமைதியாகி விடுவேன். இதைப் போன்ற பல தருணங்களில் அவரைக் கண்டிருக்கிறேன்.

என் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ரூடோஸ் என்று பெயர் சொன்னார். இதென்ன? இப்படி ஒரு பெயரைச் சொல்கிறாரே? என்று யோசித்தாலும் அதே பெயர் தான். சரியான மூர்க்கம் அவளுக்கு.

ஒரு தடவை ஊருக்குச் சென்ற போது ஜீவசமாதியில் ரூடோஸைக் கொண்டு வந்து விட்டுச் சென்றேன். ஜோதி சுவாமிகள் தான் ரூடோஸைக் கவனித்துக் கொள்வார்.

தினமும் ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அழைத்து வருவாராம். அன்றைய நாளில் குருநாதரைத் தரிசிக்க வந்த ஒரு பக்தர் சுவாமியுடன் ஆற்றுக்கு வந்திருக்கிறார். ரூடோஸைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் போது, அவரைப் பார்த்து ஒரு சில வார்த்தைகள் சொன்னாராம் ஜோதி சுவாமி.

அந்த பக்தர் தன் மனைவி மக்களைப் பிரிந்து பல ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். சுவாமியின் வார்த்தைகளைக் கேட்டவர், மனைவி மகளை அழைத்து வந்து வாழ ஆரம்பித்து விட்டார். இந்தச் சம்பவம் பற்றி எனக்குத் தெரியாது.

அவர் என்னை ஆசிரமத்தில் ஒரு முறை நேரில் பார்த்த போது, “ரூடோஸ் எப்படி இருக்கு?” என்றார்.

ரூடோஸா, அவளுக்கும் இவருக்குமென்ன தொடர்பிருக்கும் என்று நினைத்துக் கொண்டே, “நல்லா இருக்கிறாள், உங்களுக்கு எப்படி அவளைத் தெரியும்?” எனக் கேட்டேன்.

”அவளால் தான் இன்றைக்கு நான் குடும்பத்தோடு வாழ்கிறேன்” என்றார்.

“ஙே” என விழித்தேன்.

“அவளை இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்ற போது, நானும் சுவாமியும் தான் அவளைக் குளிப்பாட்டினோம். அன்றைக்குத் தான் எனக்குள் மாற்றம் நடந்தது. இன்றைய எனது சந்தோஷத்துக்குக் காரணம் அவள்தான்” என்றார்.

இப்படித்தான் ஜோதி சுவாமிகள் திடீரென்று சொல்லும் வார்த்தைகள் பலவும் எனக்குள் பல மாற்றத்தை உண்டாக்கி இருக்கின்றன.

காதற்ற ஊசி, ஒரு மரண ஊர்வலம், இரயிலிருந்து தள்ளி விடப்பட்ட காந்தி ஆகியவற்றால் பட்டினத்தாரும், புத்தரும், மஹாத்மாவாக மாறினர்.

வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி உண்டு. 

குருநாதரைத் தரிசிக்க ஆயிரக் கணக்கானவர்கள் வருவதுண்டு. அவர்களுக்கு இது தாய்வீடு என்று சொல்லிக் கொண்டிருப்பார் ஜோதி சுவாமிகள். 

ஆமாம் குருநாதரின் ஜீவசமாதி உலக மக்கள் எல்லோருக்கும் தாய் வீடு. என்னைப் பொறுத்தவரை அப்படித்தான்.

எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அவரின் முன்பு உட்கார்ந்தால் ஒடுங்கும் மனத்தோடு வைக்கும் எல்லா பிரார்த்தினைகளும் நிறைவேறுகின்றன என அங்கு வரும் பக்தர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 வாழ்க வளமுடன்...! 

Sunday, August 14, 2022

சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளாக மாறாத ஒன்று

இந்தியா 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தென்னாஃப்ரிக்கா, பீட்டர்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு பிரயாணத்தினால் இந்தியாவின் தலையெழுத்து மாற்றப்பட்டது. 

ஒரு சில சிறு சம்பவங்கள் தான் ஒட்டு மொத்த உலகின் இயக்கத்தையே மாற்றும். 

அதே போல 2021ம் ஆண்டில் ஒரு கிருமி உலகை முடக்கிப் போட்டது. கிருமியின் முன்னால் கடவுள்கள், ஆட்டிப்படைக்கும் நிறுவனங்கள், அரசியல் ராஜதந்திரிகள் எல்லாம் தோற்றோடினர். கடவுள்களுக்கு பூஜை இல்லை. நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசியல் ராஜதந்திரிகள் முடங்கினர். 

இந்திய தேசத்தின் விடுதலைக்காக சத்யாகிரகம் நடத்தி, ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்திய, மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தவர்களை தேசபக்தர் என்று கொண்டாடும் மாயை வினோதங்களை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது.

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?

மருது சகோதர்களும், பூலித்தேவனும், திருப்பூர் குமரனும் செத்துப் போனார்கள். வ.உ.சிதம்பரனார்,  சிவா சிறையில் கிடந்தனர். இந்தியாவின் சிற்பி நேரு ஒன்பது ஆண்டுகாலம் சிறையில் கிடந்தார். இன்னும் லட்சோப லட்ச மக்கள் தங்கள் உயிரை இழந்து பெற்றது இந்த சுதந்திரம்.

இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் எவராக இருந்தாலும், அவர்களில் ஒருவருக்கும் கூட சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது. இன்றைக்கும் இந்தியர்கள் பசியாலும், பட்டினியாலும், வீடின்றியும் இருக்கின்றார்கள். எத்தனையோ ஆட்சிகள் நடந்து முடிந்து விட்டன. இன்னும் எதுவும் மாறவில்லை.

140 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி உள்ளார்கள். சுமார் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குத் தள்ளப்பட்டார்கள்.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

விண்ணை முட்டும் விலைவாசி, காயும் வயிறுகள், பட்டினியில் மக்கள்.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

இருக்க வீடில்லை, வீடெங்கும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென்கிறது அரசு.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.


* * *


சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒன்று தமிழர் பிரதமராவது.

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது 

இந்தியாவில் மாறாத ஒன்று இந்திய ஆட்சி மொழிப் பிரச்சினை. 

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறது. வீடெங்கும் தேசியக் கொடி ஏற்றி மகிழ வேண்டும் வயிற்றில் பசி இருப்பினும்.

இதோ ஒரு சாட்சி- இந்தியாவில் 75 ஆண்டுகாலமாக மாறாத ஒன்றின் சாட்சி.



நன்றி : காஞ்சி இதழ், தினமணி

Saturday, August 13, 2022

கொஞ்ச நேரம் பேசலாமா? - எனது முதல் புத்தகம் அமேசான் கிண்டிலில்

அன்பு நண்பர்களே, கடந்த 2008ம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறேன். முதன் முதலாக அமேசான் கிண்டிலில் ‘கொஞ்ச நேரம் பேசலாமா?” என்ற எனது புத்தகத்தை நேற்று வெளியிட்டிருக்கிறேன். தங்களின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.
கிண்டில் ஆப்பில் இப்புத்தகத்தைப் படிக்கலாம். 

புத்தகத்தைப் படித்து விட்டு தங்களின் மேலான கருத்தினை கிண்டிலில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

#கொஞ்ச_நேரம்_பேசலாமா?
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_புத்தகம்
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_கிண்டில்
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_அமேசான்