குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, September 7, 2022

இந்தியாவின் இரண்டாம் சுதந்திரத்திற்காக ராகுல்காந்தியின் நடைபயணம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்.

ஒன்பது வருடங்கள் நேரு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தார். தங்களது குடும்பச் சொத்தான நாடாளுமன்றக் கட்டிடத்தை நாட்டுக்கு கொடுத்தார். 

அந்தப் பரம்பரையில் வரும் ராகுல் காந்தி அவர்களுக்கு அவரது தந்தை இந்தியர்களை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். 

இந்தியா பன்முகத் தன்மை வாய்ந்த, மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்று தனது வாழ்க்கையை இந்தியர்களுக்குக் கொடுத்த மகாத்மா காந்தி விரும்பினார்.

இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம் காங்கிரசும், நேரு குடும்பத்தார் மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. சூரியனை பொய்களும், புராணங்களும் மறைக்க முடியாது.

காங்கிரஸ் ரயிலைக் கொளுத்தவில்லை, கொலைகள் செய்யவில்லை, எந்த மதத்தினருக்கும் வந்தேறிகளுக்கும் அடிமையாக இல்லை. நாட்டை விற்கவில்லை, இந்தியர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி விழுங்கவில்லை, எந்த அமைப்புக்கும் சார்பாக இல்லை. 

இந்திய மக்களை நேசித்தார்கள். இந்தியாவுக்கு உழைத்தார்கள். இந்தியா இன்று உயர்ந்து நிற்கிறது. காலம் இந்தியர்களுக்கு இப்போது பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய நாளில், ஒவ்வொரு இந்தியனும் பொய்களால் ஏமாற்றப்படுகிறான். வந்தேறிகளால் நாசமாக்கப்படும் இந்தியாவை, மீண்டும் மதவெறிக்கு எதிரான ஒரு சுதந்திரப் போரினால் தான் மீட்க முடியும். 

கடந்த 70 ஆண்டுகளாக துல்லியமான நோக்குடன் திட்டமிடப்பட்டு, இன்று இந்தியா மத வெறி எனும் போர்வையில் வந்தேறிக் கும்பலொன்றினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அடிமைகள் கலவரம் செய்கிறார்கள். வெடிகுண்டுகள் வீசுகின்றார்கள். கார்கள் ஏற்றி கொலைகள் செய்கிறார்கள். பெண்களைக் கற்பழிக்கின்றார்கள்.

பஞ்சைப்பராரிகளாய் இந்தியர்கள் நயவஞ்சமாக மாற்றப்படுகின்றார்கள். படிக்க அனுமதிக்க மறுக்கின்றார்கள். இந்தியர்கள் கற்காலத்துக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். 

இந்தியர்களை இந்த மதவெறி வந்தேறிக் கும்பலிடமிருந்து மீட்க, இந்தியாவை நேசிப்பவர்களால், உண்மை இந்தியர்களால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் பொய்கள் எனும் மாயையில் கட்டுண்டு கிடக்கும் இந்தியர்களுக்கு ராகுல் காந்தியின் பயணம் விழிப்புணர்வைத் தரும். இந்தியா மீண்டும் புத்துயிர் பெற்று எழும் என்று நம்புவோம்.

ராகுல் காந்தி அவர்களின் எண்ணம் நிறைவேறட்டும். அதனால் இந்தியா மேன்மையடையட்டும்.

Monday, September 5, 2022

லலிதமன்றம் நாடகக் காட்சிகள்


உலகின் ஒப்பற்ற சக்தி படைத்தது மேலே இருக்கும் வஸ்து. அணுகுண்டு எல்லாம் இந்த வஸ்தின் முன்னே தூசு. ஹைட்ரஜன் பாம் சும்மா சும்மா. இதன் ஆற்றலை வார்த்தைகளால் விவரித்து விடமுடியாது. அந்தளவுக்கு வலிமையான வஸ்து இது.

இந்த வஸ்துவினை அணிந்தவர்களுக்கு உலக மக்கள் யாவரும் சேவகர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். இந்தப் பெருமித எண்ணத்தோடு, எஜமான அடிமைகளான நாம் இனி தொடர்ந்து லலித மன்றத்தில் நடத்தப்படும் நாடகக் காட்சிகளைத் தினம் தோறும் படித்து இன்புறலாம். 

இன்புற விரும்புவர்கள் தொடர்ந்து படிக்கவும். லலிதமன்றத்தில் நடத்தப்படும் நாடகங்கள் சுவாரசியமானவையாக இருக்குமா? என்பது படிக்கும் உங்களுக்கு வெளிச்சம்.

நாடகக் காட்சிக்கு முன்பு முன்னுரை:

இந்த மன்றத்திற்கு சுமார் இருபத்தெட்டு ஊர்களும், எட்டு உப ஊர்களில் இருந்தும் நாடகம் பார்க்க ஆட்கள் வருவதுண்டு. சாமிகள் தான் நடிப்பார்கள். நல்ல நடிப்பாக இருக்கும். நாடகத்தில் பல பாத்திரங்கள் உண்டு. அந்தப் பாத்திரங்களில் பலர் எங்கிருப்பர் என்று தெரியாது கடவுளைப் போல. ஆனாலும் பாத்திரங்களாய் இருப்பர்.

இந்த நாடகத்தில் நடிப்பவர்களுக்கு ஆக்கிர மங்கள் எனும் புத்தகமே வழிகாட்டியாக இருக்கிறது. நாடகத்துக்கும் விதிகள் உண்டு அல்லவா?

இனி விரைவில் திரைக்காட்சிகள் தொடரும் ... 


யாருக்கு வரும் இந்த புத்திசாலித்தனம்?

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஜி.வி. பிலிம்ஸ், ஜி.வெங்கடேசன். இவரது சகோதர பிரபல இயக்குனர் மணிரத்னம். இவரது மனைவி கமல்ஹாசனின் அண்ணன் மகள்  சுகாசினி.  இந்தக் குடும்பமே சினிமாக்குடும்பம். உலகளாவிய தொடர்புகள், இணைப்புகள், வரவுகள், செலவுகள் என்று எவ்வளவோ இருக்கும். அதெல்லாம் தனிப்பட்டவர்களின் ரகசியங்கள் என்பதால் அரசுக்கு ஒன்றும் இழப்பில்லை.

ஜிவி பிலிம்ஸின் பிரபலமான படம் கார்த்திக் நடித்த மெளனராகம். அதைத் தொடர்ந்து ரஜினி காந்தின் தளபதி.

கடனோ அல்லது ஏதாவது பிரச்சினையோ, காரணம் சரியாகத் தெரியவில்லை. வெங்கடேசன் தூக்கில் பரகதி அடைந்தார். ஆனால் அவர் வாங்கிய கடனுக்கு பரகதி கிடைக்கவில்லை. 

குடும்பத்தாரின் முயற்சியில் ஜி.வி பிலிம்ஸ் மீண்டும் படங்களைத் தயாரித்தது. ஆனால் நிர்கதி பிராப்தி அடையாத கடனுக்காக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த, கவனிக்க போர்ச்சுகல் நாடு, அங்கிருக்கும் ஒரு கம்பெனி நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிலிம்ஸ் லிமிட்டெட்டை வாங்குகிறது.

ஊரான் காசு இலவசமாய் கொட்டிக் கிடக்கும் வங்கியில் அந்த போர்ச்சுகல் கம்பெனி லோன் வாங்குகிறது. 

கவனிக்க, நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கம்பெனியை போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி, வங்கியில் கடன் பெற்று, ஜி.வி.பிலிம்ஸின் பங்குகளை வாங்குகிறது.

ஒரு வெளி நாட்டுக் கம்பெனி, இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டுமெனில் அன்னியச் செலவாணி மேலாண்மைச் சட்டத்தின் படி, அதற்கான அனுமதி பெற்று வாங்க வேண்டும். இது எதுவுமே நடக்கவில்லையாம்.

போர்ச்சுகல் அரசுக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும் ஒன்றும் தெரியாது இதைப் பற்றி என்று நம்பிக் கொள்வோம்.

இப்போதுதான் ஒன்றிய அரசின் ஒப்பற்ற அமலாக்கத்துறையின் கவனத்துக்கு இந்த பரிமாற்றம் தெரிய வந்து, ஜி.வி.பிலிம்ஸுக்கு சொந்தமான தஞ்சாவூர் தியேட்டரை பறிமுதல் செய்திருக்கிறார்களாம்.

தற்போது ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட்டின் இயக்குனர்கள் ஆறு பேர்கள். அதில் ஒரு சிலர் பத்துக்கு மேற்பட்ட கம்பெனிகளின் நிறுவனர்கள்.

இவர்கள் மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கையோ அல்லது சோதனையோ இட்டதாகச் செய்திகள் ஒன்றுமில்லை. கிட்டே போகமுடியுமா? 

அமலாக்கத்துறையில் குற்றம் நடைபெற்று இருப்பதாக ஆதாரங்கள் கிடைத்தால் தான் தியேட்டரை சீல் வைக்க முடியும். ஆனால் இதன் காரண கர்த்தாக்களை யாரால் என்ன செய்ய முடியும்? 

ஏன்? என்று காரண காரியம் தெரிந்த மகானுபாவர்கள் கமெண்டில் கருத்துக்களைப் பதிவிடவும். நூலிபான்கள் என்றும், பிராமணர்கள் என்று கமெண்டில் எழுதிவிட வேண்டாம் என்பது வேண்டுகோள்.

அவாளுக்கும் அவாளுக்கும் சண்டை - தினமணியில் செய்தி.

கமல்ஹாசன் உறவினர்கள் தொடர்பானது என்பதால் அரசியல் ஸ்பெஷல் நகர்வுகளாக இருக்குமோ என்று சிந்தித்து விடாதீர்கள். தேசத்துரோகம்.

நன்றி : தினமணி (02.09.2022 செய்தி)



Tuesday, August 16, 2022

ஜோதி சுவாமிகளின் வார்த்தைகளால் மாற்றமடைந்த பக்தர்

நானும் எனது முன்னாள் நண்பருமான தனபால் அவர்களும் வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு ஒரு மாலை நேரம் வந்தோம். அன்றைய மாலை நேரம், சுவாமியின் ஜீவசமாதியில் ஜோதி சுவாமிகள் வழிபடும் அம்பாளுக்கு  அர்ச்சனை மற்றும் நைவேத்தியம் ஆரம்பமானது. இருவரின் கையிலும் மலர்களைக் கொடுத்து, ஒவ்வொரு மந்திரம் ஓதும் போதும் அம்பாளின் பாதங்களில் மலரை அர்ப்பணிக்க கோரினார் ஜோதி சுவாமி.

சுவாமி மந்திரம் ஜெபிக்க, அந்த மாலை நேர அமைதியில் அம்பாள் விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்க, மனமொன்றிய நிலையில் இருவரும் அம்பாளின் பாத கமலங்களில் மலர்களைத் தூவினோம்.

அன்றிலிருந்து இன்று வரை ஜோதி சுவாமிகளைக் கவனித்து வருகிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ஆனால் இவரைப் பொறுத்தவரை இந்தக் கருத்து வெற்றி பெறாது.

சிறுவயதிலிருந்து ஆன்மீக நாட்டம் கொண்டு, குரு நாதரின் அழைப்பால் ஜீவசமாதியை நிர்வகித்து வருகிறார். 

எத்தனை பிரச்சினைகள்? எவ்வளவு அக்கப்போர்கள்? அத்தனையையும்  ஒரே ஆளாக நின்று சமாளித்து, நம் குருநாதரின் ஆசியோடு, வரக்கூடிய பக்தர்களைக் கவனிப்பதில் ஆகட்டும், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாகட்டும் என அவரைப் போல இன்னொருவர் இருக்கிறாரா என்றால் எனக்குத் தெரிந்து இல்லை.

பிரதிபலன் எதிர்பார்க்கின்றாரா என்றால் இல்லை. ஏதாவது கட்டணம் வாங்குகின்றாரா? அதுவும் இல்லை. இடுப்பில் ஒரு காவி வேஷ்டி. அதுவும் அழுக்குடன் இருக்கும். 

காலையில் எழுந்து சமைப்பதில் ஆரம்பித்து மாலை ஜீவசமாதியை கதவை மூடும் வரைக்கும் ஓடிக் கொண்டே இருப்பார். அத்தனை சுறுசுறுப்பு.

குருநாதரும் இவரும் வேறு வேறு என்று என்றைக்கும் வித்தியாசம் தோன்றியதே இல்லை. ஒரு சில சமயங்களில் குருநாதரைப் போலவே பேசுவார். அந்த நேரங்களில் எனக்குள் படபடப்பு எழுந்து விடும். சத்தம் காட்டாமல் அமைதியாகி விடுவேன். இதைப் போன்ற பல தருணங்களில் அவரைக் கண்டிருக்கிறேன்.

என் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ரூடோஸ் என்று பெயர் சொன்னார். இதென்ன? இப்படி ஒரு பெயரைச் சொல்கிறாரே? என்று யோசித்தாலும் அதே பெயர் தான். சரியான மூர்க்கம் அவளுக்கு.

ஒரு தடவை ஊருக்குச் சென்ற போது ஜீவசமாதியில் ரூடோஸைக் கொண்டு வந்து விட்டுச் சென்றேன். ஜோதி சுவாமிகள் தான் ரூடோஸைக் கவனித்துக் கொள்வார்.

தினமும் ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அழைத்து வருவாராம். அன்றைய நாளில் குருநாதரைத் தரிசிக்க வந்த ஒரு பக்தர் சுவாமியுடன் ஆற்றுக்கு வந்திருக்கிறார். ரூடோஸைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் போது, அவரைப் பார்த்து ஒரு சில வார்த்தைகள் சொன்னாராம் ஜோதி சுவாமி.

அந்த பக்தர் தன் மனைவி மக்களைப் பிரிந்து பல ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். சுவாமியின் வார்த்தைகளைக் கேட்டவர், மனைவி மகளை அழைத்து வந்து வாழ ஆரம்பித்து விட்டார். இந்தச் சம்பவம் பற்றி எனக்குத் தெரியாது.

அவர் என்னை ஆசிரமத்தில் ஒரு முறை நேரில் பார்த்த போது, “ரூடோஸ் எப்படி இருக்கு?” என்றார்.

ரூடோஸா, அவளுக்கும் இவருக்குமென்ன தொடர்பிருக்கும் என்று நினைத்துக் கொண்டே, “நல்லா இருக்கிறாள், உங்களுக்கு எப்படி அவளைத் தெரியும்?” எனக் கேட்டேன்.

”அவளால் தான் இன்றைக்கு நான் குடும்பத்தோடு வாழ்கிறேன்” என்றார்.

“ஙே” என விழித்தேன்.

“அவளை இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்ற போது, நானும் சுவாமியும் தான் அவளைக் குளிப்பாட்டினோம். அன்றைக்குத் தான் எனக்குள் மாற்றம் நடந்தது. இன்றைய எனது சந்தோஷத்துக்குக் காரணம் அவள்தான்” என்றார்.

இப்படித்தான் ஜோதி சுவாமிகள் திடீரென்று சொல்லும் வார்த்தைகள் பலவும் எனக்குள் பல மாற்றத்தை உண்டாக்கி இருக்கின்றன.

காதற்ற ஊசி, ஒரு மரண ஊர்வலம், இரயிலிருந்து தள்ளி விடப்பட்ட காந்தி ஆகியவற்றால் பட்டினத்தாரும், புத்தரும், மஹாத்மாவாக மாறினர்.

வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி உண்டு. 

குருநாதரைத் தரிசிக்க ஆயிரக் கணக்கானவர்கள் வருவதுண்டு. அவர்களுக்கு இது தாய்வீடு என்று சொல்லிக் கொண்டிருப்பார் ஜோதி சுவாமிகள். 

ஆமாம் குருநாதரின் ஜீவசமாதி உலக மக்கள் எல்லோருக்கும் தாய் வீடு. என்னைப் பொறுத்தவரை அப்படித்தான்.

எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அவரின் முன்பு உட்கார்ந்தால் ஒடுங்கும் மனத்தோடு வைக்கும் எல்லா பிரார்த்தினைகளும் நிறைவேறுகின்றன என அங்கு வரும் பக்தர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 வாழ்க வளமுடன்...! 

Sunday, August 14, 2022

சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளாக மாறாத ஒன்று

இந்தியா 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தென்னாஃப்ரிக்கா, பீட்டர்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு பிரயாணத்தினால் இந்தியாவின் தலையெழுத்து மாற்றப்பட்டது. 

ஒரு சில சிறு சம்பவங்கள் தான் ஒட்டு மொத்த உலகின் இயக்கத்தையே மாற்றும். 

அதே போல 2021ம் ஆண்டில் ஒரு கிருமி உலகை முடக்கிப் போட்டது. கிருமியின் முன்னால் கடவுள்கள், ஆட்டிப்படைக்கும் நிறுவனங்கள், அரசியல் ராஜதந்திரிகள் எல்லாம் தோற்றோடினர். கடவுள்களுக்கு பூஜை இல்லை. நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசியல் ராஜதந்திரிகள் முடங்கினர். 

இந்திய தேசத்தின் விடுதலைக்காக சத்யாகிரகம் நடத்தி, ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்திய, மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தவர்களை தேசபக்தர் என்று கொண்டாடும் மாயை வினோதங்களை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது.

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?

மருது சகோதர்களும், பூலித்தேவனும், திருப்பூர் குமரனும் செத்துப் போனார்கள். வ.உ.சிதம்பரனார்,  சிவா சிறையில் கிடந்தனர். இந்தியாவின் சிற்பி நேரு ஒன்பது ஆண்டுகாலம் சிறையில் கிடந்தார். இன்னும் லட்சோப லட்ச மக்கள் தங்கள் உயிரை இழந்து பெற்றது இந்த சுதந்திரம்.

இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் எவராக இருந்தாலும், அவர்களில் ஒருவருக்கும் கூட சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது. இன்றைக்கும் இந்தியர்கள் பசியாலும், பட்டினியாலும், வீடின்றியும் இருக்கின்றார்கள். எத்தனையோ ஆட்சிகள் நடந்து முடிந்து விட்டன. இன்னும் எதுவும் மாறவில்லை.

140 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி உள்ளார்கள். சுமார் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குத் தள்ளப்பட்டார்கள்.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

விண்ணை முட்டும் விலைவாசி, காயும் வயிறுகள், பட்டினியில் மக்கள்.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

இருக்க வீடில்லை, வீடெங்கும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென்கிறது அரசு.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.


* * *


சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒன்று தமிழர் பிரதமராவது.

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது 

இந்தியாவில் மாறாத ஒன்று இந்திய ஆட்சி மொழிப் பிரச்சினை. 

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறது. வீடெங்கும் தேசியக் கொடி ஏற்றி மகிழ வேண்டும் வயிற்றில் பசி இருப்பினும்.

இதோ ஒரு சாட்சி- இந்தியாவில் 75 ஆண்டுகாலமாக மாறாத ஒன்றின் சாட்சி.



நன்றி : காஞ்சி இதழ், தினமணி

Saturday, August 13, 2022

கொஞ்ச நேரம் பேசலாமா? - எனது முதல் புத்தகம் அமேசான் கிண்டிலில்

அன்பு நண்பர்களே, கடந்த 2008ம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறேன். முதன் முதலாக அமேசான் கிண்டிலில் ‘கொஞ்ச நேரம் பேசலாமா?” என்ற எனது புத்தகத்தை நேற்று வெளியிட்டிருக்கிறேன். தங்களின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.
கிண்டில் ஆப்பில் இப்புத்தகத்தைப் படிக்கலாம். 

புத்தகத்தைப் படித்து விட்டு தங்களின் மேலான கருத்தினை கிண்டிலில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

#கொஞ்ச_நேரம்_பேசலாமா?
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_புத்தகம்
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_கிண்டில்
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_அமேசான்

Friday, July 29, 2022

வங்கிக் கடன் பிரச்சினையிலிருந்து வெளியேற உதவுகிறோம்

முன்னுரை :

தமிழகத்தில் வங்கியில் கடன் பெற்று கட்ட முடியாத நிலையில் இருக்கும் நிறுவனங்கள் எதுவாக இருப்பினும், ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கு புது புராஜெக்ட்டுக்கு நிதி உதவி பெற்று நல்ல லாபம் பெறவும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மிகச் சிறந்த முறையில் கடனைச் செலுத்தி, நிறுவனத்தை வெற்றிப் பாதையில் பீடு நடை போட வைக்க என்னால் இயன்ற உதவியினைச் செய்யத் தயாராக இருக்கிறேன். 

மேலும் வங்கியில் கடன் கட்ட எப்படி அணுகுவது என்ற வழி முறைகளையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

தொடர்பு கொள்ள - 9600577755 - காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை

பொருளாதாரம் சார்ந்த பணிகள் என்னென்ன என்பதறிய கீழே இருக்கும் இணையதளத்தினைப் பார்க்கவும்.

www.vsjinfra.com

* * *

அன்பு நண்பர்களே,

இதுகாறும் சொத்துக்களுக்கான 120 வருட ஆவணங்கள் ஆய்வு செய்யும் லீகல் அட்வைஸராக வேலை செய்து கொண்டிருந்த போது, நான் சந்தித்த ஒரு பிரச்சினை என்னை அதிர்ச்சியுற வைத்தது. எனக்கு ஏற்கனவே பொருளாதாரத்திலும், பங்கு வர்த்தகத்திலும் அனுபவம் இருப்பதால் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர் கொண்டேன் எனப் பார்க்கலாம்.

நண்பரொருவர் காலையில் அழைத்து, “எனது நிறுவனம் ஏலம் போகப் போகிறது தங்கம் என்று புலம்பினார். இனி இப்படி இந்தச் சமூகத்தை எதிர் கொள்ளப்போகிறேன்? என் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? என் நிலமை என்ன ஆகும் என்று தெரியவில்லை. தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை, இனி என் உயிரை வைத்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது?” எனப் பேசி அதிர வைத்துக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்றேன்.

நண்பரின் நிறுவனம் தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. லாபமும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் முன்பு வாங்கிய கடனுக்கான வட்டியை கொரானா பிரச்சினையினால் கட்ட முடியாமல் போனது. தற்போது வரக்கூடிய லாபம் நிறுவனத்தின் இயக்கத்துக்கும், பொருட்கள் வாங்கவும், சம்பளம், மின்கட்டணம் செலுத்தவுமே சரியாக இருக்கிறபோது வட்டி எங்கே கட்டுவது?

வங்கி கடனுக்கான நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பி வைக்க, அவர் யாரோ ஒரு வக்கீல் மூலம் கோர்ட்டில் தடை ஆணை பெற்று சமாளித்து வந்தார். இதற்கிடையில் வக்கீலுக்கு செலவு வேறு. வங்கி மேலாளர் சொத்து ரெக்கவரிக்கான வேலையினைச் செய்து விட்டார். ஓ.டி.எஸ்ஸுக்கு 10 சதவீதமே தள்ளுபடி செய்தாலும் உடனடியாக சொத்தினை விற்பனை செய்து கடனைக் கட்ட முடியாது. பெரிய அளவில் கடன் இருப்பதால் எவரிடமும் வாங்கவும் முடியாது.

வீடு, கார் எல்லாம் இ.எம்.ஐயில் போய் கொண்டிருக்கிறது. தப்பிக்கலாம் என்று சொத்துக்களை விற்கலாம் என்ற போது பாதி விலைக்குக் கேட்டிருக்கின்றார்கள்.

கடனுடன் கம்பெனியை விற்கலாம் என்று முடிவு செய்த பின்னார் கடன் தொகை அளவுக்கே வாங்க முடியும் என்று பலர் சொல்ல, வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டார் நண்பர்.

அடுத்த வாரம் வங்கி நிறுவனத்தையும், சொத்தினையும் முடக்கி விட்டு, இருக்கும் நிலையில் ஏலம் விட ஏற்பாடுகளைச் செய்து வந்தது கண்டு என்ன செய்வது என்று தெரியாத எல்லோரும் கைவிட்ட நிலையில் எனக்கு போன் செய்திருக்கிறார்.

முதலில் பதட்டத்தைத் தணியுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். எல்லாவற்றுக்கும் வழி இருக்கிறது. என்ன செய்யலாம் என்று பார்த்து, அதன் படி முனையலாம் என்று ஆறுதல் படுத்தினேன்.

அவரிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் பெற்று, ஆய்வு செய்து, எனக்கு தொடர்புடைய பொருளாதார நண்பர்களிடம் பேசினேன். இந்த நிறுவனத்தின் வங்கிக் கடனைத் தீர்க்க ஒரு செயல்திட்டத்தினை உருவாக்கினோம்.

வங்கியின் கடன் வசூலிப்பாணையை நிறுத்தி வைத்து, முன்பே வங்கியில் கடன் வாங்கி செலுத்தாத நிலையில் பாதிப்படைந்த சிபில் ஸ்கோர் பற்றி விவரித்தும், நிறுவனத்திற்கான செயல் திட்டத்தினை உருவாக்கி தனியாரிடம் கொடுத்து மீள் கடன் பெற அனுமதி பெற்றோம்.

அவ்வளவுதான்! நண்பர் மீண்டும் தனது நிறுவனத்தை வெற்றிகரமான பாதையில் நடத்தி வருகிறார்.

இப்போது அந்த நிறுவனத்தின் நிதிப் பொறுப்பினை கண்காணிப்பில் வைத்திருப்பதால், தொழிலில் இறக்கம் வரும் போது சரி செய்ய எனது நண்பர்களான பொருளாதார நிபுணர் குழு உதவி செய்திட ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறேன். மிகச் சிறந்த நிதி மேலாண்மை, ஆடிட்டிங்க், விற்பனைக்கான ஆலோசனைக் குழு என அவருக்கு உதவிட ஏற்பாடுகள் செய்து கொடுத்திருக்கிறோம். இனி அவர் தன் நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கியே ஆக வேண்டிய சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

இதைப் போன்ற சர்வீஸ்களை இனி எல்லோருக்கும் கொடுக்கலாம் என்ற நினைப்பில் இந்தப் பதிவினை எழுதுகிறேன். என்னென்ன பணிகளைச் செய்கிறோம் என்று கீழே இருக்கும் இணைப்பில் உள்ள இணையதளத்தினை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.

www.vsjinfra.com

தமிழகத்தில் வங்கியில் கடன் பெற்று கட்ட முடியாத நிலையில் இருக்கும் நிறுவனங்கள் எதுவாக இருப்பினும், ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கு புது புராஜெக்ட்டுக்கு நிதி உதவி பெறவும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மிகச் சிறந்த முறையில் கடனைச் செலுத்தி, நிறுவனத்தை வெற்றிப் பாதையில் பீடு நடை போட வைக்க என்னால் இயன்ற உதவியினைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.

மேலும் வங்கியில் கடன் கட்ட எப்படி அணுகுவது என்ற வழி முறைகளையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.


Tuesday, July 26, 2022

நிலம் (100) - PACL LTD நிலங்கள் ஜாக்கிரதை

பி.ஏ.சி.எல் (Pearl Agriculture Private Limited) நிறுவனமானது சிட் பண்ட்ஸ் வணிகத்தில் முதலீட்டாளர்களுக்கு நிலம் வாங்கித் தரப்படும் என்று அறிவித்திருந்தது கண்டு கிட்டத்தட்ட 5.6 கோடி முதலீட்டாளர்கள் மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்த தொகை சுமாராக ஆறாயிரம் கோடி.

இந்த நிறுவனமானது 1996ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 120 கோடி முதலீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிரந்தர நிர்வாகியாக சுப்ரதா பட்டாசார்யா நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனமானது குறைந்த விலையில் நிலங்கள் தருவதாக விளம்பரம் செய்தது. முதலீட்டாளர்கள் குவிந்தனர். இந்தியா முழுமையிலும் நிலங்களை வாங்கிக் குவித்தது. அதன் பிறகு இந்த நிறுவனம் சுமார் 640 புதிய நிறுவனங்களை உருவாக்கி ஷேர்மார்க்கெட் மற்றும் இதர தொழில்களைச் செய்தன.

இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கவனித்த செபி (SEBI) உசாரடைந்ததது. நிறுவனத்தின் செயல்களை நிறுத்தியதுடன் சுமார் 7269 கோடி ரூபாய் அபராதம் விதித்தது மட்டுமின்றி, இயக்குனர்களையும் கைது செய்தது. அன்றிலிருந்து இந்த நிறுவனம் செபி விதித்த அபராத தொகையினையும் கட்டவில்லை, முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற தொகையினையும் திருப்பிக் கொடுக்கவில்லை.  இதனால் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பிக் கொடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் கமிட்டி உருவாக்கி சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. முதலில் சொகுசுக் கார்கள் ஏலம் விடப்பட்டன. 

இந்த நிறுவனத்திற்கு 23 மாநிலங்களில் சுமார் 26,500 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் நாட்டில் மட்டும்  8,193 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. 

சென்னை, திண்டுகல், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராம நாதபுரம், சேலம், சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சொத்துக்களை வாங்கி உள்ளனர். உதாரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சொத்தின் ஆவணத்தினை கீழே பார்க்கவும்.


இவ்வாறு தமிழ் நாட்டில் வாங்கிக் குவிக்கப்பட்ட நிலங்களை அதிமுக ஆட்சியின் போது பல்வேறு சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த வித விசாரணையும் இன்றி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழக பதிவுத்துறையின் சுற்றறிக்கையை துச்சமென நினைத்து பல மாவட்ட துணைப்பதிவாளர்கள் மோசடியாக பல ஆவணங்களைப் பதிவு செய்து கொடுத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் நிறுவனம் வாங்கி வைத்திருந்த சொத்துக்களை முடக்க செபி முயற்சி எடுத்து சுமார் 523 கோடி சொத்துக்களையும், சுமார் 889 கோடி மதிப்புள்ள ஷெரட்டன் மிரேஜ் ஹோட்டல் சொத்துக்களையும் முடக்கியது. ஆனால் இந்தச் சொத்துக்களின் தற்போதைய நிலை என்ன என்று செபி தெரிவிக்கவில்லை என முதலீட்டாளர்கள் குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.


மேற்கண்ட நிலங்களை விற்பனை செய்து, வரக்கூடிய பணத்தினை முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்க செயல்பட்டுக் கொண்டிருந்த போது தமிழகத்தில் உள்ள நிலங்களை முறைகேடாக விற்பனை செய்தது போல ஆவணங்களை அதிமுக ஆட்சியின் போது பதிந்தார்கள். இந்த பதிவுகளை அறப்போர் இயக்கம் ஆர்.டி.ஐ மூலம் கண்டுபிடித்து பல்வேறு துணைப்பதிவர்கள் மீதும், பத்திரப்பதிவு துறையினர் மீதும் புகார் கொடுத்தது. 

இது பற்றி தற்போது ஆராய திமுக அரசு முறைகேடான பத்திரப் பதிவு ஆய்வுகளைக் கண்டறிய குழு அமைத்துள்ளது. பல துணைப்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் சொல்கின்றன.

இனி என்ன ஆகும்?

கோர்ட்டுகளில் இனி பத்திரம் பதிவு செய்தவர்கள் வழக்குத் தொடுப்பார்கள்.  பிஏசிஎல் முதலீட்டாளர்களுக்கு அவ்வளவு விரைவில் பணம் கிடைத்து விடுமா என்றால் வாய்ப்புகள் குறைவு என்பது நிதர்சனம்.  அதுமட்டுமல்ல இதுவரைக்கும் பிஏசிஎல் கம்பெனியில் முதலீடு செய்தவர்கள் அதற்கான ஆவணங்களை வைத்திருப்பார்களா? அப்படி வைத்திருப்பவர்கள் இறந்து போயிருந்தால் வாரிசுகளுக்கு அது தெரியுமா? என்ற பல கேள்விகள் இருக்கின்றன.

அப்படியே விற்றாலும் சுமார் 60 சதவீதம் தவிர இதர 40 சதவீதம் என்னவாகும் என்பதும் ஒரு கேள்விக் குறிதான்.

செபியில் சித்ரா ராமகிருஷ்ணன் போல பலர் வருவர். வந்தால் பிஏசிஎல் சொத்துக்களை  விற்பனை செய்ய விடுவார்களா? என்பது ஒரு கேள்விக் குறி.

ஆஸ்திரேலியாவில் முடக்கப்பட்ட ஹோட்டல் சொத்துக்கள் விற்கப்பட்டனவா என்று யாருக்கும் தெரியாது? அதன் நிலை என்னவென்றும் தெரியாது. 

தமிழ்நாட்டில் சொத்துக்கள் வாங்க விரும்புவர்களுக்கு பிஏசிஎல் சொத்துக்கள் எவையென்று தெரியாது. என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள். கட்டணத்துடன் கூடிய சேவை தர தயராக உள்ளேன்.

தெரிவிக்க வேண்டும் என நினைத்ததை எழுதி விட்டேன். 

தேவைப்படுபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.


Monday, July 25, 2022

நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்

2022ம் வருடத்திய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விடைபெற்று இருக்கும் என நினைக்கிறேன் சூர்யா. உங்களுக்கு முகம் தெரியாத எத்தனையோ ரசிகர்கள் வாழ்த்துக்களை சோஷியல் மீடியாக்கள் மூலம் தெரிவித்திருப்பார்கள். மனம் மகிழ்ந்திருப்பார்கள். நெருக்கமானவர்களின் அன்பில் நெகிழ்ந்திருப்பீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

தங்களின் ஆரம்பகால படங்களில் இருந்து தங்களைக் கவனித்து வரக் காரணம் உங்களின் தந்தையார் சிவகுமார். சுத்தமான நடிகரின் வாரிசுகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற ஆய்வுக்காகவும் உங்களைப் பின் தொடர்ந்தேன். அதைத் தொடர்கிறேன். தர்மத்தின் பாதை சூக்குமமானது அல்லவா? அதை அறியும் ஆவல் எனக்கு நிரம்ப உண்டு.

ஆரம்பகால திரைச்சித்திரங்களிலிருந்து தற்போது வரையுள்ள உங்களின் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் திரைச்சித்திர மாற்றங்களையும் கவனித்தே வருகிறேன். எவரும் செய்திடா ஒரு பணியை மக்களுக்குச் செய்து வருவதால், தாங்களின் அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி அறிவித்தவன் கடவுள் ஆவான் ஆனீர்கள் பலருக்கு.

கல்வியை காசுக்கு விற்பனை செய்யும் இந்திய ஜனநாயகத்தில் வாழவே தகுதியற்ற ஏழைகளின் வாரிசுகளுக்கு தாங்கள் செய்யும் பணிக்கு பாராட்டுகள் என்பது சரியாக இருக்காது. 

ஒரு சக மனிதனின் துயரத்தில், அவனது முன்னேற்றத்தில் ஒரு படியைக் கடக்க தாங்கள் செய்யும் அறச்செயலை இலவசம் என்றுச் சொல்ல முடியாது. கடமை என்றுச் சொல்வதுதான் சரியாக இருக்கும். அந்த வகையில் தாங்கள் பலரைக் கவர்ந்திருக்கின்றீர்கள்.

தாங்கள் நடித்த திரைச்சித்திரங்களில் ஜெய் பீம் படத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஃபிரிஞ்ச் எலிமெண்ட்ஸ் என்றுச் சொல்லக்கூடிய மத, இன, சாதிய விழுமியங்களை தங்களின் வயிற்றுப்பிழைப்புக்கு வைத்திருக்கும் பலர் எதிர்த்த்து போல உலகில் வேறு எங்கேயும் எவரும் எதிர்க்கவில்லை.

ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

ஜெய் பீம் படமானது எளியவர்களுக்கு நீதி கிடைப்பதைப் பற்றிப் பேசி இருக்கிறது. எளியவர்களுக்கு நீதி கிடைத்து விட்டால் ஃபிரிஞ்ச் எலிமெண்ட்ஸுகளுக்கு வயிற்றால் போய் விடும் என்பதை அவர்களின் எதிர்ப்பில் இருந்து கவனித்திருக்கலாம். எளியவர்களுக்கு எதுவும் கிடைத்து விடக்கூடாது என்பதில் இன, சாதிய வன்முறை ஜனநாயக போலி அமைப்புகள் மிகக் கவனம் கொண்டுள்ளன என்பது தாங்களுக்குப் புரிந்து இருக்கும்.

எத்தனையோ கொடுமைகள் அனு தினமும் நடந்து கொண்டிருக்கும் உலகில் ஒரு காலண்டரும், ஒரு பெயரும் தான் சாதிய வன்முறை ஜனநாயக போலிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர்கள் கதறிய போது அவர்களின் அரசியல் களம் எதுவென உலக மக்களுக்கு தெளிவுபடுத்தியது.

இந்தியா எவ்வளவு பெரிய போராட்டங்களைச் செய்து, எளியவர்களின் வாழ்க்கையை மைய நீரோட்டத்துடன் இணைத்துள்ளது என்பதை அறிய அம்பேத்கார் அவர்களின் ‘இந்துவாக சாகமாட்டேன்’ என்ற புத்தகத்தின் சிறிய பகுதியை இங்கு அவர்களின் அன்பு அனுமதியுடன் பதிகிறேன்.




Thanks to Periyar Kazhagam

மேலே இருக்கும் பகுதிகளைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். 

உருவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சக மனிதர்களுக்கு, தான் உயர் சாதி என்று கருதிக் கொண்ட மனிதர்களால் செய்யப்பட்ட   கொடுமைகளில் இருந்து இந்தியர்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதன் தாக்கம் இன்னும் சாதிய சுவடுகளாய் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

சுயநலத்திற்காகவும், தன் வயிற்றுப் பிழைப்புக்காகவும், அதிகார வெறிக்காகவும் ஜனநாயகம் வழங்கும் சட்டத்தின் பாதுகாப்பில் சுகமாக அமர்ந்து கொண்டு சாதிய வன்முறைகளை கட்டவிழ்த்து வரும் பல அமைப்புகள், சாதி வெறியினை இன்றைக்கும் நீரு பூத்த நெருப்பு போல ஊதிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

இன்றைய இந்தியாவிற்கும் அம்பேத்கர், பெரியார் வாழ்ந்த காலத்து இந்தியாவுக்குமான வேறுபாட்டினை நினைத்துப் பார்க்க வேண்டும். 

தூய்மையான துணி கூட உடுத்தக் கூடாது என்று அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில், பிரிட்டிஷாருடன் அதிகாரத்தில் அமர்ந்திருந்தவர்கள் செய்த கொடுமைகளைப் பட்டியல் இட்டுக் காட்டிட முடியுமா? அவ்வளவு எளிதில் நிறைவடையும் வேலையா அவைகள். கேரளாவில் பெண்களின் முலைக்கு வரி வசூலித்த வரலாற்று உண்மையைத் தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

அடிமைகள் இல்லாது போனால், தங்களது சுகபோகம் சின்னாபின்னமாகி விடுமே என்று கவலைப்பட்ட ஃபிரிஞ்ச் எலிமெண்டுசுகள் சாதியை மதமாக மாற்றி விட்டார்கள். மதத்தின் பின்னால் சாதியை மறைத்துக் கொண்டு வெறியூட்டப்படும் தன்மையில் மக்களை அரசியல் போர்வையில் வன்முறையாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஃபிரிஞ்ச் எலிமெண்ட்சுகள்.

சாதி போய் இப்போது மதம் வந்து விட்டது. மதத்தில் ஆகமங்கள், நியமங்கள், விதிகள் நீதிமன்றத்திலும் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கின்றன என்பதை சமீபத்திய தீர்ப்புகள் வழியாக தாங்கள் அறிவீர்கள். ஒரு எளியவனுக்கு கடவுள் என்பது தீண்டக் கூடாத ஒன்றாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. 

ஜெய் பீம் படத்தின் வெற்றி என்பது தாங்கள் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்திற்கு அளித்த ஒரு கோடி ரூபாயில் இருக்கிறது. அதுமட்டுமின்றி ரத்தமும் சதையுமாக நம் கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் அடிபட்டே செத்தவரின் குடும்பத்துக்கு பொருள் கொடுத்து கைதூக்கி விட்ட பண்பும் ஜெய் பீம் படத்தின் நோக்கத்தின் வெற்றிக்குச் சான்று.

சமூக பிரக்ஞையுடன் இனி வெளிவரப்போகும் தங்களின் திரைச்சித்திரங்கள் இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் மகிழ்ச்சியே. டிவிட்டரில் தங்களின் அடையாளமாக அகரம் பவுண்டேஷனை வைத்திருப்பது ஒன்றே போதுமானது. உலகில் நாம் பெற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்வதுதான் வாழ்க்கை. அதைத் திறம்பட செய்து கொண்டிருக்கும் பலரில் தாங்களும் ஒருவர் என்பது உலகறிந்தது.

இப்போது உங்களைச் சுற்றி வரும் ஒரு சில விஷயங்கள் தான் உங்களுக்கு ஒரு கடிதத்தை எழுதுவோம் என்று நினைக்க வைத்தது.

இவ்விடத்தில் ஒரு சிறு கதையைச் சொல்ல விரும்புகிறேன். 

”சூஃபி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?” என ஒரு மாணாக்கன் சூஃபி ஞானி அப்துல்லா பின் அப்துல் அஜீஸிடம் கேட்டான்.

”அதற்கு சாதாரண மனிதனாக இருந்தாலே போதும்” என்றார் சூஃபி.

“அப்படியென்றால்?”

“சக்திக்கு மீறி எதையும் செய்யாதவனாக இருந்தாலே போதும்”

“என் இளவயதில் என் சக்திக்கும் மீறி அதிகமாக கற்க விரும்புகிறேன். அது தவறா?” என்றான் மாணவன்.

“தவறில்லை” 

“பின்னே சூஃபி ஆவதுதான் எப்படி?” 

“சூஃபி என்ற பெயர் கூட பொது நலத்தால் மனிதனுக்கு கிடைக்கிறது. இந்தப் பெயர் மனிதனை எந்த விதத்திலும் உயர்த்துவதில்லை. அப்படி ஒருவன் நினைத்து விட்டாலே அவன் தன்னை இழக்கிறான் என்று பொருள்”

“ஓஹோ! பெருமை தேடி வரும் போது கூட அதைப் பெருமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது, அப்படித்தானே ஜனாப்?” 

சிரித்த சூஃபி அவனுக்கு ஒரு கதையினைச் சொல்கிறார்.

”அரண்மனையில் பணியாள் ஒருவன், அங்கு வரக்கூடியவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தான். அவ்வாறான நாளிலே, ஒருவன் தண்ணீர் குடிப்பது போல நடித்து, மறைத்து வைத்திருந்த கத்தியை பாதுஷா மீது எறிந்து அவரைக் கொல்ல முயன்றான். சமயோஜிதமாக செயல்பட்டு கத்தி வீச முயன்றவனை மடக்கிப் பிடித்து விட்டான். தன் உயிரைக் காப்பாற்றிய பணியாளனிடம், ’உனக்கு என்ன வேண்டுமென்று கேட்க, அதற்கு அவனோ எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றுச் சொல்லி விட்டான். பாதுஷாவோ மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்க, ’எனக்கு இந்த தண்ணீர் கொடுக்கும் பணியே போதுமானது’ என்றுச் சொல்லி விட்டான். இதைக் கேள்விப்பட்ட நாட்டு மக்கள் அவனை வான் அளவுக்குப் புகழ்ந்தனர். எத்தனையோ பேர் பாராட்டினர். அப்பாராட்டினால் மகிழ்ந்து அவன் தன் பணியைச் செய்யாமல் இல்லை. தொடர்ந்து தண்ணீர் கொடுக்கும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வந்தான். தன் பணி நிறைவான பின்பு அவன் சூஃபியாக மாறி விட்டான் என்று கேள்விப்பட்டேன்” 

”அந்த சூஃபி யாரென்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சொல்வீர்களா?” என்றான் மாணவன்.

“சூஃபி யாரென்று தெரியாது. ஆனால் அந்த அரண்மனையில் தண்ணீர் கொடுத்த பணியாள் நான் தான்” என்றுச் சொன்னார் அப்துல் அஜீஸ் என்கிற சூஃபி ஞானி.

கதை முடிந்தது சூர்யா.

புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தாங்கள் இனிமேல் எந்த வித எதிர்ப்புக்கும் பணிய மாட்டீர்கள் என்று தெரிந்து கொண்ட ஃபிரிஞ்ச் எலிமெண்ட்சுகள் உங்களை முற்றிலுமாக சமூகத்திலிருந்து நீக்க முனைந்திருக்கின்றன என தற்போது தங்களைச் சுற்றி நிகழ்ந்து வரும் நிகழ்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன.

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு அளிக்கப்பட்ட விருதுகளையும், ஆஸ்கார் அவார்டு கமிட்டியில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் நான் அவ்வாறே பார்க்கிறேன்.

விருதுகள் ஒருவனின் ஓட்டத்தை முடித்து விடும் தன்மை கொண்டவை. விருதுகள் என்பவை ஈகோவிற்கு கிடைத்த அங்கீகாரம். விருதுகளால் பெருபவர்களுக்கு பயன் ஒன்றும் இல்லை. ஓரிரு நாட்களுக்கு மக்களும், பத்திரிக்கை உலகமும் பேசும். பின்னர் மறந்து போகும். அப்துல் கலாம் விஞ்ஞானியாக தொடர்ந்திருந்தால் இந்தியாவிற்கு பல நலன்கள் கிடைத்திருக்க கூடும். ஆனால் அவரின் விதி மாற்றப்பட்டது. மனிதன் என்றைக்கும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

விருதுகள் என்பவை மனதிற்கு போடப்பட்ட கை விலங்குகள் போன்றவை. எதிர்ப்புகளும், சதிகாரர்களின் நய வஞ்சக நரித்தனமான அரசியல் நகர்வுகளுமே, எளியோரின் நன்மைக்காக வாழ்பவர்களுக்கு, அவர்களின் கடமையைச் செய்ய உதவும் தூண்டுகோல்களாக இருப்பவை. பெரியார் மூத்திரப்பையை சுமந்து கொண்டே சாதிய வன்முறைகளுக்கு எதிரான சமூக நீதிப்போரைத் தொடர்ந்தார் என்பதை நினைவில் கொள்க.

பெரியார் என்பது சாதாரண வார்த்தை இல்லை. அந்த வரிசையில் ஈரோட்டுப் பெரியாருக்குப் பின்பு தான் சார்ந்த, அசுர பலம் கொண்ட மீடியாவில் இருக்கும் தாங்களை ‘இளைய பெரியாராகப்’ பார்க்கிறேன்.

ஆகவே விருதுகளை அகத்திலிருந்து நீக்கி விட்டு, தொடர்ந்து எளியோரின் வாழ்க்கையில் ஃப்ரிஞ்ச் எலிமெண்ட்சுகள் செய்யும் வன்முறைகளை உலகறியச் செய்திடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மனத்தூய்மையே பலத்திற்கு அடி நாதமென்பார்கள். அத்துடன் அறத்தூய்மையும் சேர்ந்து உங்களின் முயற்சிக்கு உதவட்டும்.

அன்புடன்

தங்கவேல் மாணிக்கம்

காருண்யா நகர், கோவை.

25.07.2022


Wednesday, July 20, 2022

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஜெயகாந்தன் எழுதிய நாவல். அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததாக எழுதப்பட்ட இந்த நாவலை இன்றைக்குப் படிக்கும் போது வாழ்க்கையின் போக்கு என்பது அவரவர் முடிவில் தான் உள்ளது என்பது புரிந்தது.

கங்கா, அவளின் அம்மா, வெங்கு மாமா, கணேசன், பிரபு, மஞ்சு ஆகியோருடன் பயணிக்கும் இந்தக் கதையின் நாயகியான கங்கா இளம் வயதில் இக்கட்டான ஒரு நேரத்தில் முன் பின் அறியாத பிரபுவுடன் உறவு கொண்டு விடுகிறாள். அதை அவளின் அம்மாவிடம் சொல்ல கங்காவின் வாழ்க்கையை அவள் அம்மா சீரழிக்க ஆரம்பித்து விடுகிறார். பிராமணக் குடும்பத்தில் நிகழும் இந்தச் சம்பவத்தினால் கங்காவின் வாழ்க்கை பயணத்தில் ஏற்படும் சம்பவங்களின் தொகுப்பாய் விரியும் அந்த நாவலில் மன விசாரங்களை ஜெயகாந்தன் சம்பாஷனைகளாக விவரிக்கிறார்.



கங்காவை அவளின் அண்ணன் கணேசன் அடித்து விரட்டி விடுகிறான். வெங்கு மாமா அம்மாவையும் கங்காவையும் அழைத்துச் சென்று கங்காவைப் படிக்க வைக்கிறார். வெங்கு மாமா கங்காவை புணருவதற்கான கால நேரத்திற்காக விவாதங்களை கங்காவுடன் நிகழ்த்துவம் மட்டுமன்றி அவளுடன் பாலியல் சீண்டல்களை நிகழ்த்தி வருகிறார். 

பெண்களின் பெரும் பிரச்சினை இது. கையறு நிலையில் இருக்கும் பெண்கள் இந்தக் காலம் வரை ஆண்களால் வெங்கு மாமாவைப் போல சீண்டுகிறார்கள். வேறு வழி இன்றி பெண்கள் இணங்க வேண்டி வருகிறது.

சினிமாவில் பெண்களின் மீது ரகசிய வன்முறையை நிகழ்த்துகிறார்கள். எனது நண்பர் பைனான்ஸ் செய்திருந்த ஒரு படத்தின் சூட்டிங்க் சென்றிருந்தேன். நடிகை ஒத்து வர மாட்டேன் என்பதால் காலையில் மேக்கப் போட்டு சேரில் அமர வைக்கப்பட்டு மாலை வரை ஷூட் எடுக்காமலே அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்படி உட்கார்ந்திருப்பது எவ்வளவு நரகம் என்று அவளுக்கு மட்டுமே தெரியும். புரடக்‌ஷன் ஆளை அழைத்து விசாரித்தேன். அதெல்லாம் ஒரு கணக்கு சார் என்று சிரித்தார். கணக்கின் விடையையும் அவிழ்த்தார்.

பாலியல் சீண்டல்களை சினிமா ரகசியமாக நாசூக்காக செய்கிறது. பணம் வேண்டுமா? புகழ் வேண்டுமா? அப்போ இதைச் செய் என்று சொல்லாமல் சொல்கிறது. இப்போதெல்லாம் எல்லாக் கணக்குகளையும் தெரிந்து கொண்டுதான் சினிமா உலகம் பயணிக்கிறது. பணம் புகழின் முன்னால் அறம் என்ற ஒன்று இருக்கவே முடியாது. 

கங்காவுடன் அடையாளம் தெரியாத நிலையில் உறவு கொண்ட பிரபு தான் அவளின் கணவன், அவள் வேறு எவரையாவது திருமணம் செய்து கொண்டால் அது அறமல்ல என்ற கருத்தினை வெங்கு மாமாவும், கங்காவின் அம்மாவும் வைக்கிறார்கள். கங்காவின் மனதும் அதை நோக்கியே பயணிக்கிறது. கங்கா அவனைக் கண்டுபிடிக்கிறாள். அவனுக்கு திருமணமாகி குடும்பம் பிள்ளைகள் இருக்கிறது. அக்குடும்பத்துடன் நெருங்கிப் பழகுகிறாள். பிரபுவுடன் நெருங்கிப் பழகி அவனை உறவுக்கு அழைக்கிறாள். வப்பாட்டியாவது வைத்துக் கொள் என்கிறாள். அவன் மறுக்கிறான். கங்கா அவனை விட்டு விலகுகிறாள். கங்கா குடிக்கவும் புகைக்கவும் ஆரம்பிக்கிறாள். 

பெண் சூழலுக்கு கட்டுப்பட்டவள். தனித்தன்மையுடன் அவள் வாழ முற்பட்டால் சனாதன தர்மம் போல சூழல் தர்மம் அவளை நிர்மூலப்படுத்தி விடுகிறது. அவளைச் சார்ந்த உறவுகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி தன்னிலை குலைகிறாள்.

ஒழுக்கம் என்ற வேலியைத் தாண்டி அவள் வரும் போது, ஆண்களால் அவள் சூரையாடப்படுகிறாள். அவமானப்படுத்தப்படுகிறாள். கைவிடப்படுகிறாள். அவளின் மனம் குத்திக் கிழிக்கப்படுகிறது. பெரும்பான்மையான இந்திய பெண்களின் நிலை இன்றும் இப்படித்தான் இருக்கிறது. 

பொருளாதாரத்தில் நிறைவான பெண்கள் விட்டில் பூச்சிகளாய் மாறி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.எது சரி? எது தவறு? என்றும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் போக்கினை பொருளாதார சுதந்திரம் மறைத்து விடுகிறது.

என் தோழியிடம் கங்காவைப் பற்றிப் பேசினேன். இதெல்லாம் ஒரு கதையா என்று ஜெயகாந்தனை கிழித்து தொங்க விட்டாள். ஜெயகாந்தனுக்கு இவளைப் போல பெண்கள் வேண்டியிருக்கும். அதனால் இப்படியான கதைகளை எழுதி இருப்பார் போல என்று கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினாள். இன்றைய நவ நாகரீகப் பெண்ணின் மன நிலை இது. இந்த நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதினைப் பரிந்துரைத்தவர்கள் மடையர்கள் என்று சாடினாள்.

அப்படி அல்ல, அந்தக் காலத்தில் இந்த நாவல் ஒரு பெண்ணின் புரட்சியாகப் பார்க்கப்பட்டது என்பதால் விருது வழங்கப்பட்டிருக்கிறது. பிராமண சமூகத்தில் பெண்களை இழிவு செய்தது போல வேறு எந்தச் சமூகமும் இழிவு படுத்தவில்லை என்பதற்கான பல்வேறு தரவுகள் இருக்கின்றன என்று விவரித்தேன். சனாதன தர்மங்கள் அழிவுக்கானவை என்று சாட்சியங்களுடன் விவரித்தேன்.

பன்னாட்டு நிறுவனத்தின் மேலாளராக இருக்கும் அவருக்கு ஆண்கள் என்றால் யூஸ் அண்ட் த்ரோ. சிங்கிள் மதராக இருக்கிறார். கொடுமை என்னவென்றால் தன் மகன் மீது அவர் வைத்திருக்கும் பிரியம். மீண்டும் சிறைக்குள் சிக்கிக் கொண்டிருந்தார்.

வாழ்க்கையின் சிக்கல் இங்கு தான் ஆரம்பிக்கிறது. ஒரு ஆணை வெறுக்கும் பெண், தன் உறவில் உருவான மற்றொரு மகன் என்கிற ஆண் மீது வைக்கும் பாசமென்பது வேடிக்கையானது.

மனிதர்கள் சக மனிதர்களுடன் நேசம் கொள்ளவில்லை எனில் பைத்தியமாகி விடுவார்கள். அரவணைப்பு, அன்பு, பாசம், நட்பு இன்றி வாழவே முடியாது. அப்படி வாழ்ந்த எவரும் தன் இறுதிக் காலத்தில் நிலைகுலைவர்.

ஒரு பறவை முட்டை இட்டு, குஞ்சு பொறித்து, இரை கொடுத்து வளர்த்து, குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்தவுடன் விட்டு விடுகிறது. மனிதன் தான் கடைசி வரை இழுத்துக் கொண்டு தொங்குகிறான்.

என் அம்மாவுக்கும் மனைவிக்கும் சச்சரவு உண்டானது. நான் அம்மாவிடம் சொன்னேன், ”என்னுடன் அவள்தான் பயணிக்கப் போகிறாள், உனது பயணம் இவள் வந்தவுடன் நின்று விட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னேன். சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை. அம்மாவின் வாழ்வியல் சூழல் வேறு, மனைவியின் வாழ்க்கைச் சூழல் வேறு.  எப்படி சச்சரவு இல்லாமல் இருக்கும்? அதை சரி செய்யும் வழி என்ன? யோசித்தேன். விடை கிடைத்தது. இன்றைக்கு அம்மாவின் மனதுக்குப் பிடித்த மருமகள் ஆகி விட்டாள். அவ்வளவுதான் விஷயம்.

நான் என் தோழியிடம் சொன்னேன், ”உன் மகன் உனக்கு உரியவன் அல்ல, வேறு எவளுக்கோ உரியவன். அவனால் உருவாகும் பிள்ளைகளுக்கு அவன் தகப்பன். எவரோ ஒருவருக்கு மருமகன், மச்சான். அவனை நல்ல முறையில் வளர்த்து, நல் குணங்களுடன் இன்னொரு பெண்ணிடம் ஒப்படைப்பதே உன் வேலை, அதை விட்டு விட்டு என் மகன் தான் எனக்கு எல்லாம் என்று கதை விட்டுக் கொண்டிருக்காதே” என்று தெளிவு படுத்தினேன்.

மகன் இன்றைக்கு திருமணமாகி மிக நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 

கங்கா வாழ்ந்த காலமும், அவளின் சூழலும் யாரால் அவளுக்கு பிரச்சினைகள் உருவானதோ அவனுடனேயே உறவு கொண்டு, தன் அடையாளத்தை அவன் பின்னால் மறைத்துக் கொள்ள தூண்டியது. அவன் கிடைக்கவில்லை என்கிற போது அவளின் வாழ்க்கை முறை மாறுகிறது. சூழல் முடிவுகள் எப்போதும் சுதந்திரமானவை அல்ல. அது எப்போதும் சிக்கல்களையே தரும்.

பெண்கள் எப்போதும் வேலிகளைப் போட்டு வைத்துக் கொண்டு, அந்த வேலிக்குள்ளேயே நின்று கொண்டு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அது மேலும் மேலும் துயரங்களையே அவர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது.

தீராத சிக்கல்கள் அவர்களின் இறப்பின் வரை இருந்து கொண்டே இருக்கிறது.

சில நேரங்களில் சில மனிதர்கள் போலத்தான் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள். நேரமும் சூழலும் தான் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கிறது. ஆகவே எப்போதும் மறந்து விடவே கூடாதது,”சில நேரங்களில் சில மனிதர்கள்”.