குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, April 5, 2020

வெற்றியடைய சூட்சும ரகசியம்


வெற்றி என்பதன் விளக்கம் ’பணக்காரனாக இருப்பது’ என்று நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். பணக்காரர்களின் நிலை இன்றைக்கு என்னவென்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்னும் மூன்று மாதங்கள் கொரானாவால் வீட்டில் முடங்கினால் ஒவ்வொரு பணக்காரனும் பிச்சைக்காரனாகி விடுவான். கீழ்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கமும் ஏற்கனவே பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே வெற்றி என்பது மாயை என்று புரிந்து கொள்ளுங்கள்.

வாழும் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்கிறோமா என்பதைத் தான் என்னைப் பொறுத்தவரை வெற்றி எனக் கருதுவேன். நாம் ஒவ்வொருவரும் வாழும் சூழல்கள் விதவிதமானவை. சூழலுக்கு ஏற்ற பழக்க வழக்கங்கள், உணவுகள், மொழிகள், உடைகள் என ஒவ்வொருவரும் தனிப்பட்ட சூழலியல்வாதிகள்.

அமெரிக்கனைப் போல, இங்கிலாந்துக்காரனைப் போல, ஜப்பானியனைப் போலவெல்லாம் தமிழ்நாட்டில் வாழ முடியாது. பூமியின் தட்பவெட்பத்துக்கு ஏற்ப உருவான சூழ்நிலை, உருவாக்கி இருக்கும் சமூகக் கட்டமைப்புகளில் நம் வாழ்க்கையும் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதினை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இமயமலை, நேபாளம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழல் அவர்கள் தினமும் உணவு தேடுவதாகத்தான் இருக்கின்றன. உணவைத் தேடுவது, அதற்காக உழைப்பது தான் அவர்களின் முதல் வேலை. பிறகு உண்பது, உல்லாசம், உறக்கம், ஆட்டம், பாட்டமாய் வாழ்க்கை சுகத்தில் கழிகின்றது. பல யுடியூப் வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன. அவைகளைத் தேடிப் பிடித்துப் பாருங்கள். அங்கு வசிப்பவர்கள் நோய் நொடி இன்றி சர்வசாதாரணமாக 100 வயதுக்கும் மேல் வாழ்கிறார்கள்.

இங்கோ, பசிக்காக படிப்பு, வேலை என ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கையின் போக்கு படு கேவலமானதாக இருக்கிறது. படித்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்தால் காசு கிடைக்கும். அந்தப் பணத்தினால் சுகபோக வாழ்க்கை வாழலாம். ஆனால் வாழ்க்கை? இன்பம்? குழந்தையாக இருக்கும் போதே, படி படி படி. படித்து முடித்ததும் பணி, பணி, பணி. பணி கிடைத்ததும் வேலை, வேலை, வேலை. கிடைக்கும் பணத்தை அனுபவிக்க கூட முடியாமல் ஜக்கி, ரவிசங்கர், நித்தி ஆகிய அட்டைகளிடம் கொண்டு போய் கொட்டி விட்டு, தேடிக்கொண்டிருப்போம் மன நிம்மதியை, வாழ்க்கையை. எல்லாம் கை விட்டுப் போயிருக்கும். வயதும் போயிருக்கும். நல்ல சாப்பாட்டினைக் கூட சாப்பிட முடியாது. சாப்பிட்டால் உயிர் போய் விடும் என்பார்கள் மருத்துவர்கள்.

காசு சம்பாதிப்பதுதான் வாழ்க்கை என்று ஒவ்வொரு மனிதனும் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறான். இதிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதானதல்ல. மனம் எனும் அரக்கனிடமிருந்து விலகி, உண்மையை உணர்ந்து கொள்வது என்பது தற்போதைய சூழலில் முடியாத காரியம்.

இருக்கும் சூழலில் வெற்றியாக வாழ்க்கையை எளிதாக வாழ ஒரு சூத்திரம் ஒன்று உள்ளது.

அடியேனுக்கு சிறிய வயதில் இருந்து சாமியார்கள், வயதானவர்களுடன் தான் நட்பு. என் வயது நட்புக்காரர்கள் எனக்கு இல்லை. என்னை விட அனுபவசாலிகளுடன் பேசுவதையும், நட்புக் கொள்வதையும் விரும்புவன். அந்த வகையில் எல்லா மதங்களிலும், யோக, ஆன்மீக தொடர்பான விஷயங்கள் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறேன்.

தியானம், யோகம், யோகா, மூச்சுப்பயிற்சி எல்லாம் செய்து பார்த்தேன். எதுவும் எனக்கான தேடலை, நான் தேடிய வழியைக் காட்டக்கூட இல்லை. முதலில் என் மனத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கண்ணை மூடினால் அதுபாட்டுக்கு எங்கெங்கோ அலைகிறது.

சுழித்தோடும் ஆற்றை நினைக்கிறது. பெருகி வழிந்தோடும் அருவியைப் பார்க்கிறது. அமெரிக்காவின் நயாகராவிற்குச் செல்கிறது. உருளைக் கிழங்கு மசாலாவுக்குச் செல்கிறது. ஆலப்புழா செல்கிறது. நயன்தாராவை நினைக்கிறது. ரூடோஸ் நாய்க்குட்டி சாப்பிட்டாச்சா என நினைக்கிறது. நிமிட நேரத்தில் லட்சக்கணக்கான மைல்கள் செல்கின்றது. எண்ணங்கள் புற்றீசல் போல பெருகிக் கொண்டே இருக்கின்றன. எப்படிக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி, சூட்சுமத்தில் மனதை நிலைக்க வைத்து தியானிப்பது?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இப்படித்தான் மனது அலைந்து கொண்டிருந்தது வானத்தில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அலையும் மேகங்கள் போல.

மனதை அடக்க வேண்டும். இல்லையெனில் மனது எனும் குப்பைத் தொட்டிக்குள் அடங்கிப் போகனும். இதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை தான் நம் ஒவ்வொருவருக்கும். எனக்கும் அப்படித்தா இருந்தது.

தேடிக் கொண்டிருந்தேன் எளிய வழியை. அது கிடைத்தே விட்டது.

ஒரு ஜப்பானியன் போல அமைதியாக, எளிமையாக, வலிமையாக, அன்பாக வாழ துவங்கினேன். வெற்றி பெறுவது எங்கனம்? வாழ்க்கையின் போக்கிற்குத் தகுந்தவாறு எப்படி தொடர்வது என்று ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

2008ல் இருந்து பிளாக் எழுதுகிறேன். அன்றையிலிருந்து இப்போது வரையிலும் எழுதியிருக்கும் எழுத்துக்கள் சொல்லும் நானெப்படி மாறி இருக்கிறேன் என்று. அவ்வப்போது படித்துப் பார்ப்பேன். வேடிக்கையாக இருக்கும். இருப்பினும் அவைகள் நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதை எனப் புரிந்து கொள்வேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். இந்த வாக்கியம் உலகப் புகழ் பெற்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எதுவும் மாறவே இல்லை என்பதுதான்.

நான் கண்டடைந்த ‘அந்த எளிய’ வழியின் ஒரு பயிற்சியை நான் பழகத் துவங்கினேன். அது நான் தேடிய பாதைக்குத் தள்ளிக் கொண்டு சென்றது.

ஜப்பானியரின் வாழ்க்கையில் ‘டீ அருந்துவது’ என்பது ஒரு சமுதாய வழக்கம். அமைதியாக காலை மடக்கி அமர்ந்து அரைத்த பச்சைத் தேயிலைத் தூளில் சுடுநீர் விட்டு வடிகட்டிய தேநீரை அவர்கள் மகத்தான ஒரு மவுனத்தின் மூலம் அருந்துவார்கள்.

வெள்ளையும் பழுப்பும் நிறைந்திருக்கும் அமைதியான வீட்டு அறை ஒன்றில் அமைதியான, ஆனந்தமருளும் மவுனத்தின் பிடியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்துவதை தவமாகச் செய்வார்கள்.

அதுதான் ஆரம்பத்துவக்கம்.

மவுனம், அமைதி, புன் சிரிப்பு முதலில் இதை பழகிக் கொள்ளுங்கள்.

என் குரு நாதர் வெள்ளிங்கிரி சுவாமியின் வாக்கியம், ”பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”. இது ஏதோ ஒரு சாதாரண வாக்கியம் என்று நினைத்து விடாதீர்கள். பேச்சைக் குறைத்து விட்டு, உயிர் நாதமெனும் மூச்சைக் கவனி என்கிறார். கவனி என்பதுதான் எல்லாவற்றுக்குமான ஆரம்பப் புள்ளி.

தொடர்ந்து படியுங்கள்.

ஜப்பானின் புகழ் பெற்ற ஜென் தத்துவங்களைப் படித்திருப்பீர்கள். ஜென் என்பதைப் பற்றிய புரிதல்கள் பலப்பல. ஜென் தத்துவங்களின் ஒரே நிலை தன்னை அறிதல். தன்னை அறிதல் என்பது சூனியத்தில் தன்னைக் கரைப்பது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவுடனும் தன்னையும் இணைத்துக் கொள்வது. அவ்வாறு இணைத்துக் கொண்டவர்கள் தொட்டால் நோய் நீங்கும். பழுதானவற்றை நீக்கிப் பழையபடி உருவாக்குவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஒவ்வொரு அணுவும் இயங்கும். அவ்வாறானவர்கள் தான் புனிதர்கள் என்று அழைக்கிறோம்.

சரி, எங்கெங்கோ சென்று விட்டேன்.

ஒரு சிறிய பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். எல்லாமும் தெளிவாகி விடும்.

முன்பே பலரும் சொல்லி இருப்பதுதான் இது.

படிக்கின்றீர்கள் என்றால் நீங்கள் படிப்பதாக நினையுங்கள். சாப்பிடும் போது சாப்பிடுவதாக நினையுங்கள். எந்த வேலை செய்தாலும் வேலை செய்கிறேன் என நினையுங்கள்.

மனதினை இரண்டாகப் பிரியுங்கள். ஒரு மனதை வெளியில் கொண்டு வந்து நீங்கள் செய்வதை நீங்களே வேடிக்கைப் பாருங்கள். புரிகிறதா? நீங்கள் செய்வதை நீங்கள் வேடிக்கைப் பாருங்கள்.

ஆரம்பத்தில் சுவாரசியமாக இருக்கும். போகப்போக பழகி விடும். பின்னர் இரண்டு மனதும் ஒன்றாகும் போது நடக்கும் மாயா ஜாலத்தை அப்போது உணர்வீர்கள்.

அந்த மனதும் இல்லாது போக வேண்டுமெனில் அதற்கும் ஒரு பயிற்சி இருக்கு. அது இப்போது வேண்டாம். ஏனென்றால் நாமெல்லாம் லெளகீக வாழ்க்கையில் இருக்கிறோம். அது நமக்குச் சரிப்பட்டு வராது.

இதை வெற்றியின் முதல்படி என அடித்துச் சொல்கிறேன்.

நிதானம், நேர்மை, ஒழுக்கம், அமைதி, பேரமைதியுள்ளம் ஆகியவை உங்களுக்கு வெற்றிக் கனியை பறித்து தரும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

உங்களுக்கும் தானே…..

நம்பிக்கையே வாழ்க்கை….!


Saturday, April 4, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)


மறுநாள் நீதிபதி சங்கர் கோர்ட்டுக்கு வந்து அமர்ந்தார். ஏகப்பட்ட வக்கீல்கள் முகக் கவசத்துடன் அக்மார்க் குரங்கு போலவே உட்கார்ந்திருந்தார்கள். என்னே ஒரு காட்சி? மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும். எல்லோரும் குரங்குகள் போலவே இருக்கின்றார்கள். மனதுக்குள் சிரித்துக் கொண்டார். வக்கீல் அமித் இருக்கானா என்று பார்த்தார். ஆளைக் காணவில்லை. எங்கே போனானா அந்தக் கருமாந்திரம் புடிச்சவன், என்னை மாற்றப்போகிறானாமே, பார்ப்போம் இவன் என்ன கிழிக்கிறான்னு என மனதுக்குள் கருவிக் கொண்டார். ஒரு நீதிபதியையே மிரட்டுகிறானே அவன். அவனுக்கு ஒரு கொரானா பார்சல் செய்து விட வேண்டியதுதான்.

ஏதாவது எக்குத்தப்பாக இனி பேசினான் என்றால், கோர்ட்டை அவமதித்தான் எனச் சொல்லி கொரானா வார்டில் சுத்தம் செய்யப் போட்டு விடுகிறேன். அப்போதான் அவன் அடங்குவான் என மனதுக்குள் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

அன்றைக்குப் பார்த்து அமித்துக்கு காலையில் தும்மல் வந்து விட்டது. விடாமல் தும்மலாக போட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கோர்ட்டுக்கு வந்து, ஏற்கனவே நீதிபதியையே மிரட்டி இருப்பதால், அந்த ஆளு கொரானா டெஸ்ட் செய்த அறிக்கை வந்த பிறகு, கோர்ட்டுக்கு வா எனச் சொல்லி விட்டால், எந்த ஊரு ஆஸ்பத்திரியோ, எந்த வார்டோ? அதுவும் இது தமிழ்நாடு. இவனுக கையில் மாட்டினால் வச்சு செஞ்சுருவான்களே என்ற பயத்தில் தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார்.

இங்கே கோர்ட்டில் ஒரு புதிய வக்கீல் எட்டப்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

மனுவைப் படித்த நீதிபதி சங்கருக்கு தலையே சுற்றியது. என்ன எழவு மனுடா இது? என்று கோபத்தில் கொந்தளித்து வக்கீல் எட்டப்பனைப் பார்த்தார். வக்கீல் எட்டப்பன் கோர்ட்டில் நிற்கவில்லை. குனிந்தபடியே கை இரண்டையும் கூப்பியபடி வைத்துக் கொண்டு, டைனோசார் தலையை நீட்டுவது போல நீட்டியபடி நீதிபதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

”எட்டப்பன், நிமிர்ந்து நில்லுங்கள்” என்றார்.

”என்னால் முடியாது கனம் நீதிபதி அவர்களே, என் உடல் வாகுவே அதுதான். அது மட்டும் காரணம் அல்ல. நான் பிறரின் காலை வாரி விடுவதில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்தவன். ஆகவே குனிந்து கொண்டிருந்தால் தான் காலை வாரி விட முடியும். நான் பிறந்ததில் இருந்தே இப்படி இருப்பதால், என் உடல் வளைந்து போய் விட்டது. ஆகவே என்னால் நேராக நிமிர்ந்து நிற்க முடியாது ஆனர் அவர்களே…”

“ஓ… உங்கள் வழக்கமே அதுதானா? கொரானா வழக்கில் உங்களையும் இணைத்துக் கொள்ள மனுக் கொடுத்திருக்கின்றீர்களே? வழக்குப் போடச் சொன்னவர்கள் பெயர் தவறாக இருக்கிறதே, புரியும்படிச் சொல்கின்றீர்களா?”

கோர்ட்டில் டைப் செய்யும் பெண்மணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
“கனம் நீதிபதி அவர்களே, எனது கிளையண்டுகள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த அமைப்பின் பெயர் கள்ளக்காதலர் சங்கம். முறைப்படி பதிவு செய்யப்பட்டு, அரசிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது” என்றார் எட்டப்பன் வக்கீல்.

எல்லோரும் எட்டப்பனைப் பார்த்தனர். டிவி கேமராக்கள் அனைத்தும் எட்டப்பனை ஜூம் செய்தன. டிவி பார்த்துக் கொண்டிருந்த மக்களில் 90 சதவீதம் பேர் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தனர்.

(** இங்கு ஒரு விஷயத்தை உற்றுக் கவனித்தீர்களா வாசகர்களே. நிமிர்ந்து உட்கார்ந்தவர்கள் எல்லோரும் கள்ளக்காதல் சங்கத்தின் ரகசிய உறுப்பினர்கள். அவர்களின் வக்கீல் எட்டப்பனோ நிமிர்ந்து நிற்க முடியாதவர். கோவை தங்கவேல் தர்மம் தர்மம் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பார் அல்லவா? அவர் இந்த நாவலின் இந்த டிவிஸ்டை உற்று நோக்க வேண்டும். தர்மம் இல்லாத வக்கீல் கூனிப்போய் இருப்பதைக் கவனிக்க வேண்டும். ஆகவே அடியேனும் தர்மத்தைதான் இங்கு போதிக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இராமாயணத்தில் ஒரு கூனி, இந்த நாவலில் ஒரு எட்டப்பன். சரியா மிஸ்டர் கோவை தங்கவேல் அவர்களே. **)

சரி இனி வழக்குக்கு வந்து விடுவோம்.

நீதிபதி சங்கருக்கு ஏண்டா, இந்த வழக்கை விசாரணை செய்ய எடுத்தோம் எனத் தோன்றியது. ஆனாலும் கட்டழகு டைப்பிஸ்ட் கவிதாவைப் பார்த்தார். கவிதாவின் கண்கள் சங்கரைப் பார்க்க, சங்கரின் கண்ணுக்குள் மின்னல் அடித்தது. விசாரியுங்கள் என்று கண்ணாலே அம்பு விட, அந்த அம்பு நீதிபதி சங்கரின்  விழிகளுக்குப் பாய்ந்து நின்றது.

“கனம் நீதிபதி அவர்களே, இந்தக் கொரானா மனித உரிமைகளை மீறுகின்றது. மனிதர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் உரிமை தாம் விரும்புவதைச் செய்வது. எனது கிளையண்டுகள், அவரவர் கள்ளக்காதலிகளையும், காதலர்களையும் சந்திக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளி வர இயலாமல், தங்கள் கள்ளகாதலை வளர்க்க முடியாமல், எங்கே தங்கள் காதலின் புனிதச்செடி பட்டுப்போகுமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கொரானாஒ எல்லோரையும் வீட்டுக்குள் இருக்க வைத்து விட்டது. இதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகி உள்ளது தெரியுமா உங்களுக்கு?”

நீதிபதி சங்கருக்கு கூன் வக்கீல் எட்டப்பனின் வாதம் சுவாரசியமாக இருந்ததால் அவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார். டைப்பிஸ்ட் கவிதாவை ஒரு கண்ணால் லுக் விட்டு விட்டு, எட்டப்பனை நோக்கினார்.

எதேச்சையாக டிவியைப் பார்த்த பூஜா ஹெக்டேவுக்கு இந்த வழக்கின் லைவ் கன்னில் பட, டிவியில் அர்னாப் கோஸ்வாமி இந்தியாவே இந்த வழக்கை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்று லைவ் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து கேமரா நீதிபதி சங்கரைக் காட்டியது. அவரைப் பார்த்தவுடன் பூஜா ஹெக்டேவுக்கு பிடித்து விட்டது. நீதிபதி செல்வம் விரும்பிய பூஜா ஹெக்டேவுக்கே நீதிபதியைப் பிடித்துப் போன விஷயம் தெரியாமல், கோர்ட்டில் கூனன் வக்கீல் எட்டப்பனைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

(வாசகர்களே, உங்களின் பார்வை பூஜாவின் முகத்தில் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்)

இடைவேளைக்குப் பிறகு தொடரும்.... 

விட்மின்சி ரசம் எனும் தக்காளி மசாலா ரசம்


பிரதமர் டிவியில் பேசுகிறார் என்றாலே இந்தியாவே பதறுகிறது. என்றைக்கு டிமானிட்டிஷேசன் பற்றி அறிவித்தாரோ அன்றிலிருந்து இந்திய மக்கள் பிரதமரின் டிவி பேட்டி என்றாலே அலறுகின்றார்கள். ஒரு செயல் மக்கள் மனதில் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்திருக்கிறதோ அந்தளவு, அந்தச் செயலைச் செய்ய காரணமாய் இருந்தவர் மீது அன்பின்றி போகும் என்பது நிதர்சன உண்மை.

ஆகவே பிரதமர் பேட்டி என்றால் மக்கள் விரோத அறிவிப்பு என்ற மன நிலையில் இந்திய மக்கள் இருப்பது காலத்தின் கோலம் என்று தான் சொல்ல வேண்டும். இனி அவர் என்ன தான் நல்ல விஷயமாகச் சொன்னாலும், அவர் அதை அறிவிப்பதற்கு முன்பு மக்கள் மனதில் திடுக் என ஒரு பதட்டம் உண்டாவது இயல்பு. இது இப்போதைக்கு மாறப்போவதில்லை,

உலக மக்கள் கொரானா பாதிப்பிலிருந்து வெளிவர நாமெல்லாம் சேர்ந்து விளக்கேற்றி எல்லாம் வல்ல இறை சக்தியிடம் பிரார்த்தனை செய்வோம். மதம், இனம், மொழி, கலாச்சாரம் வித்தியாசத்தைப் பார்க்க வேண்டிய கட்டம் இதுவல்ல. நாத்திகர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கட்டும். ஆத்திகர்கள் வழக்கம் போல பிரார்த்தனை செய்யட்டுமே.

பிரதமரைப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற காரணமெல்லாம் இந்த இடத்தில் தேவையில்லை. நம்மை வாழ வைத்த இந்தியாவின் பிரதமர் அவர். ஆகவே அவரின் வேண்டுகோளை இந்தியாவின் குடிமகன் என்ற வகையில் நிறைவேற்றுவோம்.

சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கன் என்கிற உலக விதிக்குள் வந்து விடுவோம்.

கோடி கோடியாய் பணம், குவியல் குவியலாய் பொன்னும், வைரமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அறுசுவை உணவு. இவைகளை ஒரு மாதம் பட்டினியாய் கிடந்தவனிடம் காட்டினால் அவன் எதை முதலில் எடுப்பான்? உங்களுக்குத் தெரியும் தானே…

ஆகவே சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கன். வயிறு காய்ந்தால் காதல் வருமா? மமதை வருமா? ஆணவம் வருமா? டிக்டாக்கில் குண்டி ஆட்ட முடியுமா? கால்சட்டை ஓட்டை தெரியும்படி வீடியோ போட முடியுமா? ஒன்றும் வராது அல்லவா? ஆகவே தான் பசி என்னும் தீரா நோயை கடவுள் ஒவ்வொரு உயிருக்குள்ளும் வைத்தான்.

இன்றைக்கு விட்மின்சி (விட்டமின் சி ரசம்) ரசம் பற்றிப் பார்க்கலாம். இந்த ரசத்தின் காப்பிரைட் என்னிடம் உள்ளது. எவராவது சமைத்து சாப்பிடலாம் என்று நினைத்தால், என் அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் எழுத மாட்டேன். நானென்ன அடிக்கடி கைகழுவும் உலகப் பணக்கார ஏழை எழுத்தாளரா என்ன?

இனி விட்மின்சி ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரசம் தக்காளியை வைத்து எலும்பு ரசத்தின் சுவைக்கு போட்டி போடும் வகையில் செய்யப்படும் மசாலா ரசம். விட்டமின் சி அதிகம் உள்ள ரசம். உடல் இளைக்கவும் பயன்படுத்தலாம்.

நான்கு தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

இரண்டு பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி, இரண்டையும் ஒரு சட்டியில் சேர்த்து, அதனுடன் ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

மூன்று டீஸ்பூன் மல்லித்தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் சோம்புத்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள் நான்கையும் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

ஐந்து பூண்டு பற்களை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம் வெந்தவுடன் நீரை வடித்து விட்டு தக்காளியையும், வெங்காயத்தையும் மசித்து, பிறகு வடித்த நீரை விடவும். அதனுடன் கரைத்து வைத்த மசாலா கரைசல், தட்டி வைத்த பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி வரும்வரை கொதிக்க விடவும். மறந்து விடாதீர் இரண்டு கொதி. மீறினால் ரசம் கடுத்துப் போய் விடும்.

அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெந்தயம் அரை டீஸ்பூன் சேர்த்து சிவக்க வைக்கவும். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடல்பாசி, பிரிஞ்சி இலை இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதிக்க வைத்த ரசத்தை இதனுடன் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி விடவும்.

சூடான சாதத்தில் இந்த ரசத்தைச் சேர்த்து பிசைந்து, தொட்டுக்கொள்ள வாழைக்காய் வறுவல் சேர்த்துக் கொண்டால் ‘டிவைன்’.

இந்த ரசத்தில் தக்காளி அதிகம் சேர்ப்பதால் காரம் இரண்டு டீஸ்பூன் அவசியம். காரமும் புளிப்பும் சரி விகிதத்தில் சேர்ந்தால் தான் ரசம் சுவையாக இருக்கும். இப்படி ஒரு ரசத்தை எவரும் செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். தஞ்சாவூர் பக்கம், ஆட்டு எலும்புடன் முருங்கைக்காய், கத்தரி, உருளைக்கிழங்கு சேர்த்து ரசம் வைப்பார்கள். அதன் சுவைக்கு ஈடாக எந்த ஒரு ரசத்தையும் ஒப்பீடு செய்ய முடியாது. கரண்டி கரண்டியாக வாங்கிக் குடிப்பார்கள். அதே அளவு சுவையுடன் இந்த ரசமும் இருக்கும். ஆனால் இது சைவ ரசம் என்பது ஸ்பெஷல்.

வாரம் ஒரு தடவை வீட்டில் மனையாள் செய்வார். பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்பளம், இல்லையென்றால் வாழைக்காய் வறுவல் இதற்கு நல்ல காம்பினேஷன். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்.

Thursday, April 2, 2020

குருவைக் கண்டடைதல் மானிடக் கடைமை


உலகின் அத்தனை இன்பங்களும் கொட்டிக் கிடக்கும் அமெரிக்கா ஏன் இப்போது இத்தனை தடுமாற்றத்தில் தள்ளாடுகிறது எனத் தெரியுமா? உலகம் முழுவதையும் டாலரில் வர்த்தகம் செய்ய வைத்து, தன் நாட்டை வளமையின் உச்சிக்கு உயர்த்திய அமெரிக்காவின் பிம்பத்தை உடைத்தெரிந்த கொரானா என்ற கிருமி ஏதோ இயற்கையின் சீற்றத்தால் விளைந்ததா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது கர்ம வினைப்பயன். உலகத்தாரின் அத்தனை பேரின் நிம்மதியையும் குலைத்த பலனை அமெரிக்கா அனுபவிக்கிறது. அமெரிக்கா இனி தள்ளாட ஆரம்பிக்கும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அமெரிக்க அதிபராக டிரம்ப் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? வியாபாரிகளுக்கு நாட்டை ஆளத் தெரியாது. அவர்கள் வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டி இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. ஆட்சி என்பது வேறு. அமெரிக்கா என்பது பிற நாட்டினருக்கு கனவு உலகம். அமெரிக்க மக்களின் மனம் வாழ்க்கை ஒரு பிசினஸ் என்று நம்பத் தொடங்கியதன் விளைவுதான் இன்றைய நிலைக்கு காரணமாய் இருக்கும் என நம்புகிறேன். ஒரே நாளில் 1000 பேர் மரணம் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை 5000 ஆக இருக்கலாம் என நினைக்கிறேன். அது காலத்தின் விதி. செயல்பலன் அமெரிக்காவிற்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறது. அதன் முதல் விதை ஒரு பிசினஸ்மேன் அதிபராக வந்தது.

புரியும்படிச் சொல்கிறேன். விதி தனக்கான நிகழ்வுகளை எப்படி உருவாக்கும் என்பதை உங்களுக்குத் தெரிந்த புராணத்தைக் கொண்டு விளக்குகிறேன்.

மகாபாரதத்தில் காந்தார நாட்டின் இளவரசி காந்தாரி. காந்தாரியின் சகோதரன் சகுனி. பீஷ்மர், இளவரசர் திருதராஷ்டிரனுக்கு காந்தார மன்னர் தன் மகளை திருமணம் செய்து தர சம்மதிக்கவில்லை எனில், எடுத்துக் கொள்ள தகுதி உண்டு என அச்சமேற்படுத்துவார். காந்தார மன்னர் தன் மகன் சகுனி அடுத்த மன்னனாக வர வேண்டுமென்பதற்காக, ஹஸ்தினாபுரத்தை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆகையால் தன் மகளை இரு கண்களும் இழந்த திருதராஷ்டிரனுக்கு கன்னிகாதானம் செய்து வைக்க சம்மதிக்கிறார். சகுனிக்கு இந்த விஷயம் தெரியவர, ஹஸ்தினாபுரத்தை அடியோடு அழிக்க முடிவெடுக்கிறான். தொடர் நிகழ்வு உங்களுக்குத் தெரியும். சகுனியால் விஷமேற்றப்பட்ட துரியோதனன் முற்றிலுமாக அழிக்கப்பட்டான். அதர்மத்தின் பக்கம் நின்றவர்களை அழிக்க விதி செய்த சித்து விளையாட்டுதான் மஹாபாரதம். விதி தன்னை நிலை நிறுத்த, அதற்கான ஆட்களை சிக்க வைக்க பெரும் சதிராட்டங்களை நிறைவேற்றும். விதியை மதியால் வெல்ல முடியாது நண்பர்களே. பகவான் கிருஷ்ணரும் விதியின் முன்னாலே தோற்று, ஒரு வேடனின் அம்பாலே மாண்டார், விதியின் முன்னாலே கடவுளால் கூட வெற்றி அடைய முடியவில்லை அல்லவா?

ஆனால் விதியை ஒருவரால் வெல்ல முடியும். அது யார் தெரியுமா? குரு….!

குருவானவர்கள் (கோவில் குருக்களை மறந்து விடுங்கள். அவர்கள் குருவின் வேடத்தில் இருக்கும் வியாபாரிகள்) இறைவனுடன் ஒன்றி இருப்பார்கள். அவர்கள் தன்னையே நம்பி இருக்கும் சீடர்களுக்கு விதியால் வேகமாய் வீசப்படும் கத்தியைத் தடுக்கும் கேடயமாய் இருப்பார்கள். நல்ல குரு, சீடன் அமைவதும் குருவின் விருப்பத்தைப் பொறுத்தது. குருவானவர் தன் சீடனுக்குப் பல்வேறு பரிட்சைகள் வைப்பார். சீடன் தன் நிலை மாறுகிறானா என்று பார்ப்பார். ஏனென்றால் நாளை அந்தச் சீடன் இன்னொருவரின் குருவாவான். புடம் போட்ட தங்கம் தான் ஜொலிக்கும்.

ஒரு சூஃபிக் கதை உங்களுக்காக. படித்தவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நினைப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு படிப்பறிவில்லாத நாட்டுப்புறத்தான் ஒரு சூஃபிக் குருவை வைத்து என்ன செய்தான் என்பதைத் தொடர்ந்து படியுங்கள்.
அபுல்ஹசன் என்ற சூஃபி ஞானியை படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப்புறத்தான் சந்தித்து, “என்னுடைய கழுதை காணாமல் போய் விட்டது, அதை நீங்கள் தான் திருடினீர்கள் என எனக்கு நன்கு தெரியும். ஆகவே எனக்கு எல்லாமுமாக இருந்து என் வாழ்க்கை நடத்த உபயோகமாய் இருக்கும் அந்தக் கழுதையை உடனடியாக என்னிடம் திருப்பித் தாருங்கள். இல்லையென்றால் ஊரைக் கூட்டி, நீங்கள் என் கழுதையைத் திருடி விட்டதாகச் சொல்லி விடுவேன்” என்று முறையிடுகிறான்.

அதைக் கேட்ட அபுல்ஹசன், ”என்ன சொல்கிறாய்? நான் ஏன் உன் கழுதையைத் திருட வேண்டும். இதுவரையிலும் உன்னைப் பார்த்ததே இல்லையே, நீ சொல்லும் குற்றச்சாட்டை என்னால் ஏற்க இயலாது. சென்று விடு இங்கிருந்து” என்கிறார்.

“முடியாது. நீங்கள் தான் என் கழுதையைத் திருடினீர்கள். என் கழுதையை வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்” என்று சொல்லி கைகூப்பி நின்றான்.

செய்வதறியாது திகைத்து நின்ற அந்த சூஃபி இறைவன் மீது இறையச்சம் கொண்டவர். இறைவனிடம், “இறைவா, உன் நாட்டம் எதுவோ அதுவே நடக்கட்டும், உங்களின் விருப்பத்தின் படியே எல்லாம் நடக்கட்டும்” என முறையிடுகிறார்.

அங்கு, எங்கிருந்தோ வந்த ஒருவன், “உன் கழுதை கிடைத்து விட்டது” எனச் சொல்கிறான்.

அதைக் கேட்ட உடன், அந்த நாட்டுப்புறத்தான் சூஃபி அபுல்ஹாசனின் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, “குருவே, என்னை மன்னித்து அருளுங்கள். என் கழுதைக் காணாமல் போய் விட்டது. கழுதை இல்லையென்றால் என் வாழ்க்கை அழிந்து விடும். ஆகவே உங்களிடம் வந்து நீங்கள் தான் என் கழுதையைத் திருடினீர்கள் என்றால், நீங்கள் இறைவனிடம் முறையிடுவீர்கள். இறைவன் உங்களின் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றுவார் என தெரியும். ஆகவே தான் நீங்கள் தான் கழுதையைத் திருடினீர்கள் என்று சொன்னேன்” என சொல்லி மன்னித்து விடும்படி மன்றாடினான்.

அதற்கு அபுல்ஹாசன், “இதுவும் இறைவனின் நாட்டமே” என்றுச் சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தார்.

இன்றைக்கு பெரும்பாலானவர்கள் குருவினை அணுகுவது இந்த நாட்டுப்புறத்தான் போலத்தான். குருவிற்குத் தெரியும் யார் உண்மையானவர் என.

இறைவனின் நாட்டமும், வல்லமையும் ஒருங்கே அமையப்பெற்ற நல்ல குருவினை தேடிக் கண்டடைதல் ஒவ்வொரு மனிதனின் முதற்கடைமை. அவர்கள் போதகராக இருக்கலாம், சூஃபியாக இருக்கலாம், முனிவராக இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோரும் பல மணம் வீசும் மலர்களே…!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மணம். ஆனால் அவர்கள் அன்றலர்ந்த மலர்களே…!

மலர்கள் பூப்பது இயற்கை. தேனிக்கள் மலர்களைத் தேடிச் செல்வது வாழ்க்கை அல்லவா நண்பர்களே..! புரிந்து விட்டதா உங்களுக்கு….???

வாழ்க வளமுடன்…!


உலகை உலுக்கிய கொரானா வழக்கு(3)


வேலனின் வாதம் முடிந்தது.

வக்கீல் அமித் எழுந்தார்.

”நீதிபதி அவர்களே, குற்றம் சுமத்தப்பட்ட கொரானாவின் வக்கீல் சொல்லிய அனைத்து விஷயங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இதுவரையில் நான் அரசியல்வாதிகளுக்கு எதிராக வாதிட்டு இருக்கிறேன். அவர்கள் ஊழல் செய்வார்கள், அதற்காக இன்கம்டாக்ஸை வைத்து மிரட்டுவோம், பின்னர் தீர்ப்பையே நான் தான் எழுதி தருவேன். அதைத்தான் நீதிபதியும் படிப்பார். இந்தக் கோவை நீதிமன்றமும், நீங்களும் எனக்குப் புதிது. இன்னும் இந்த கோர்ட்டின் நடைமுறைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் வழக்கின் நீதிபதியா இருக்க வேண்டுமா? இல்லை என் தீர்ப்பினை படிக்கும் நீதிபதியை இங்கு கொண்டு வர வேண்டுமா? என யோசிக்க வேண்டும். ஆகவே எனக்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் தேவை என உங்களுக்கு உத்தர விடுகிறேன்”

“என்ன, உத்தரவா?” என்று சொல்லியபடி நாற்காலியில் அமர்ந்த அமித்தை கோபப்பார்வை பார்த்தார் நீதிபதி சங்கர்.

நீதிபதியை அவர் கண்டு கொள்ளவே இல்லை. செமகாண்டான நீதிபதி உன்னை வச்சு செய்யப்போறேண்டா அமித்து என்றுக் கருவிய படி எழுந்து சென்றார். கோர்ட் கலைந்தது.

தலைமைச் செயலர் நன்கு தூங்கிக் கொண்டிருந்தார். கொரானா வந்தாலும் வந்தது தூக்கம் போச்சு அவருக்கு. இந்தப் பயல்களை வீட்டுக்குள் இருங்கள் என்றுச் சொன்னால் ஒருவனும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். லேசாக அடித்தால் அய்யோ குய்யோ எனக் கத்துகிறார்கள். பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் படம் போட்டு விடுகிறார்கள். அந்தப் படங்களைப் பார்க்கும் எனக்கே பீதியைக் கிளப்புகிறார்கள். நான் செய்து கொண்டிருக்கும் ஊழல் சமாச்சாரங்கள் நாளைக்குத் தெரியவந்தால், என் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லையே எனக் கலங்கினார். காவல்துறையினர் இப்படியெல்லாம் அடிப்பார்களா எனத் தெரிந்ததும் குலை நடுக்கம் ஏற்படுகிறதே என்று எண்ணிப் பயந்தபடியே தூங்கச் சென்றார்.

அவரின் மனைவியோ இந்த மாதம் கூடுதல் பணம் வரவில்லையே என தூக்கம் வராமல் வீட்டுக்குள்ளேயே உலாவிக் கொண்டிருந்தார்.
இந்த சி.எம் என்ன செய்கிறார். புதிய டெண்டர்களை விட்டால் தானே 30 பர்செண்டேஜில் கொஞ்சமாவது வரும். சாலைகளைக் கழுவி விட மாம்பழப்பட்டி பார்ட்டிக்கு டெண்டர் விட்டிருக்கலாம். கழுவிய பிறகு கிருமி நாசினி தெளிக்க, நம் தம்பியின் கம்பெனிக்கு டெண்டர் தரலாம். கழுவியதாக கணக்கு காட்டினால் போதும். சொளையாக கிடைக்குமே பெட்டி பெட்டியாக என நினைத்த போதே அவருக்கு நாக்கில் எச்சில் சொட்டியது. நாளைக்கு சி.எம்மின் மனைவியிடம் சொல்லி விட்டால் காரியம் ஆகி விடும் என  நினைத்துக் கொண்டே பெட்டி வராத சோகத்தில் அலைந்து கொண்டிருந்தார். கொரானா என்ற வார்த்தையைக் கேட்டாலே கொதிக்க ஆரம்பித்தது தலைமைச் செயலர் மனைவிக்கு.

இது எது பற்றியும் தெரியாமல் தூக்கத்தில் இருந்த தலைமைச் செயலர் கனவு கண்டார். அக்கனவில் வந்தது சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா.

ஊழல் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தலைமைச் செயலர் கனவில் பரிசுத்தமான கடவுள் எப்படி வருவார் என உங்கள் அனைவருக்கும் வியப்பாக இருக்கும்.

நல்லவர்களும், நல்ல எண்ணங்களும், செயல்களும் உடையவர்களுக்கு கடவுள் தேவையே இல்லை. ஆனால் அயோக்கிய சிகாமணிகளுக்கு கடவுள் அவசியம் தேவை.

செய்யும் குற்றங்களுக்கு ஏற்ப உண்டியலில் காசு போட்டு, பரிகாரம் செய்து விட்டால் கடவுள் மன்னித்து விடுவார் அல்லவா? ஆகவே கடவுளுக்கும் காசு தேவை என்பதால் கடவுள் அயோக்கியர்களின் கனவில் தான் வந்து கொண்டிருக்கிறார் ஒவ்வொரு யுகங்களாக என்பதை புராணங்கள் வழியே நாமெல்லாம் படித்திருக்கிறோம் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ளுங்கள்.

பூஜா ஹெக்டே அன்றைக்குப் பார்த்து கிருஷ்ணரை வணங்கினார். 

தலைமைச் செயலர் கனவில் வந்த கிருஷ்ண பரமாத்மா அவரிடம் என்ன சொன்னார்?

இடை வேளைக்குப் பிறகு தொடரும்…

கொரானா ரசம் செய்வது எப்படி?


கோவையில் கொரானா பரவல் அதிகரித்து வருவது திகைக்க வைக்கிறது. கோவை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வெகு சிரத்தையாக கையாள்பவர்கள். தெருக்கள் எல்லாம் ஆள் அரவமற்று கிடக்கின்றன. கடைகளில் சொல்லும்படி கூட்டம் இல்லை. இருந்தாலும் கொரானா அதிகம் பரவிக் கொண்டிருக்கிறது மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், இன்றைய பத்திரிக்கைச் செய்தி அப்படித்தான் சொல்கிறது. மனது பெரும் கவலையில் சிக்குகிறது.

அன்பு நண்பர்களே…!

இந்த நேரம் நம்மையும், நம் நண்பர்களையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய தருணம். வெகு கவனமாக இருங்கள். நேற்றிலிருந்து இன்னும் 7 நாளைக்கு யாரும் வீட்டை விட்டு எந்த காரணத்துக்காகவும் வெளியில் வருவதை இயன்ற அளவில் நிறுத்துங்கள். ஓடிக் கொண்டிருந்த வேளையில் அமைதியாக இருப்பது உடலளவில், மனதளவில் பாதிப்பினை உண்டாக்கும். ஆனால் நம் ஓட்டத்திற்கு இது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓய்வு என்று நினைத்துக் கொள்ளுங்கள். உள்ளத்தையும், உடலையும் இரும்பாக்குங்கள். வரும் காலம் இன்னும் சவாலான காலகட்டமாய் இருக்கும். அதை எதிர் நோக்கிட மனபலமும், உடல் பலமும் தேவை.

உடலளவில் கொரானா பாதிப்பை தடுக்கும் வலிமை கொண்ட ரசம் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த ரசம் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சரியாக வருமா எனத் தெரியவில்லை. இருப்பினும் கொஞ்சமாய் முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள் என்னவென்று படித்துக் கொள்ளுங்கள்.

கைப்பிடி அளவு துவரம்பருப்பு
மஞ்சள் தூள் சிட்டிகை அளவு

மேற்கண்ட இரண்டையும் குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் (கடாய்) மூன்று தக்காளியை நான்காக வெட்டிப் போடவும், நான்கு பச்சை மிளகாயைக் கீறி போடவும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை நன்கு துருவி வாணலியில் போடவும். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடவும். கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் பெருங்காயத்தூள் ஆகியவற்றைப் போட்டு, இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இஞ்சி வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

பிறகு பருப்பை எடுத்து நன்கு மசித்து, இந்த தக்காளி வெந்த கலவையுடன் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் ரசப்பொடி சேர்த்து கிளறி விடவும். நுரை கட்டி வரும் போது கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.

ஒரு முழு எலுமிச்சைப் பழம் ஒன்றினைப் பிழிந்து சாறு எடுத்து அதனை இறக்கி வைத்த ரசத்தில் சேர்க்கவும்.

அடுத்து ஒரு சிறிய தாளிப்புக் கரண்டியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், சிவப்பு மிளகாய் வற்றல் இரண்டு, மீண்டும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டி கலக்கி விடவும்.

வெகு அருமையான சுவையில் இஞ்சி, லெமன் ரசம் தயார். தாளிப்பு நெய்யில் செய்தால் தான் ரசத்தின் தன்மை சரியாக வரும். இல்லையெனில் பித்தச் சூடு அதிகரித்து விடும். நெய் இல்லையெனில் இந்த ரசம் செய்ய வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Picture Courtesy : Google

இனி தேங்காய் துவையல் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

அரை மூடி தேங்காயை துருவியோ அல்லது பற்களாகவோ எடுத்துக் கொண்டு, அதனுடன் ஆறு சிவப்பு மிளகாய், கொஞ்சமே கொஞ்சம் புளி, நான்கு பூண்டு பற்கள், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்புச் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.

இந்த ரசத்துக்கு தேங்காய் துவையல் சேர்த்துக் கொள்வது இன்னும் சிறப்பு. துவையலில் தாளிப்பு, எண்ணெய் இல்லாததால் அனைவரும் சாப்பிடலாம்.

இப்போது இரண்டும் தயாராகி விட்டது.

தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். தட்டில் சுடு சாதத்துடன் ரசம் சேர்த்து கையால் நன்கு தளர பிசைந்து கொள்ளுங்கள். சோறு ரசத்தில் கலந்து இருக்க வேண்டும். நன்கு பிசைவது முக்கியம். ரசம் அப்போது தான் சாதத்துடன் கலக்கும்.

ஒரு வாய் ரசம் சாதம், ஒரு கிள்ளு தேங்காய் துவையல் எடுத்து, அருகில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு வாயும், மனைவிக்கு ஒரு வாயும் ஊட்டி விடுங்கள். பிறகு உங்களுக்கு.

வாழ்க்கை இந்த ரசம் சுவைப்பது போல சுவைக்கும்.

நம் வாழ்க்கை நமக்காக அல்ல நண்பர்களே…!

நாம் பிறருக்காக வாழ படைக்கப்பட்டவர்கள் என்பதை உணருங்கள். கொடுப்பதில் இருக்குமின்பம் பெருவதில் இல்லை. கொடுக்க கொடுக்க, பிறருக்குக் கொடுப்பதற்காகப் பெருகிக் கொண்டே இருக்கும் அது எதுவாக இருந்தாலும்.

அதற்காக நபிகள் நாயகம் வாழ்க்கை போல இல்லாமல், நமக்கும் கொஞ்சம் வைத்துக் கொண்டு, பிறருக்கும் கொடுக்கலாம் அளவோடு என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்க வளமுடன்..! நலமுடன்…!

Tuesday, March 31, 2020

காவக்காரர்கள்

கிராமங்களின் எல்லைப்புறமாய் கருப்புசாமி கோவில் இருக்கும். ஊர் காவல் தெய்வம் என்பார்கள்.  அந்தக் காலங்களில் ஒவ்வொரு ஊருக்கும் காவல் இருக்க, கையில் கம்புடன், பந்தத்தை ஏந்தியபடி ஊர் எல்லைகளில் காவல் இருப்பார்கள் என படித்திருக்கிறோம்.

காவல்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஊரிலிருந்து அவர்களுக்குத் தேவையானவை அனைத்தும் கொடுக்கப்படும். காவல்காரர்களாய் இருப்பவர்கள் சாமிகளாய் வணங்கப்பட்டார்கள்.

இதோ, இன்று தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள் நம் காவல் தெய்வங்கள். தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் கொரானாவை பரவ விடாமல் தடுக்க, ஐந்தறிவு படைத்த மனிதர்களுக்குப் புரிய வைப்பதற்காக கையில் தடியுடன் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

நடுவீதிகள், தெரு ஓரங்கள், வீடுகள், நிறுவனங்கள் என ஊன், உறக்கம் இன்றி 24 மணி நேரமும் அவர்கள் வேலை செய்கிறார்கள். வெயில், பனி, இரவு எனப் பாராமல் நின்று கொண்டிருக்கின்றார்கள். 

ஒருவர் கண்களில் கண்ணீருடன் வேண்டுகிறார். ஒருவர் பயமுறுத்தி தெருவுக்கு வராதே என்கிறார். ஒருவர் போதாத புத்திகாரர்களுக்கு பிரம்படி கொடுக்கிறார். 

இரவில் வீட்டுக்குச் சென்று தெருவில் கோணிப்பை விரித்து தூங்கி விட்டு, வீட்டின் பின்புறமாகச் சென்று குளித்து, துணிகளைத் துவைத்து, குடும்பத்தைப் பார்த்து விட்டு மீண்டும் காவல் பணிக்குத் திரும்புகிறார்கள்.

24 மணி நேரமும் பணி. மனசும், உடம்பு ஓய்வெடுக்க இயலா நிலையில் அவர்கள் படும் துயரங்கள், மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் இதயத்தில் ரத்தத்தை வரவைக்கும்.

அன்பு காவல்தெய்வங்களே...!

உங்கள் அனைவருக்கும் மனித சமூகம் சார்பாக எனது வணக்கத்தையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் காவலாய் இருக்கும் சூழலை எம்மைப் போன்றவர்கள் தான் உருவாக்கினோம். இனி அது நடக்காது.

உங்கள் தேவைகளை நிறைவேற்றிடவும், தர்மத்தின் தலைமகனாய் தலை நிமிர்ந்து வாழ்ந்திடவும், சட்டத்தையும், தர்மத்தையும் காக்கும் காவல்காரர்களாய் நிமிர்ந்து நடந்திட நாங்கள் நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

எங்களை எப்போதும் காவல்காத்து வரும் தெய்வங்களான உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிய உதவியாக இனி அதைச் செய்வோம்.

சுய நலமும், ஜாதியும், மதமும் இனி எங்களைப் பீடித்து, தீயவர்களையும், கொடியவர்களையும், சுய நலகும்பல்களையும் கண்டுணர்ந்து இருக்கிறோம். அவர்களை ஆட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி, நல்லவர்களை, வல்லவர்களை, மனிதாபிமானம் மிக்கவர்களை, மக்கள் நலத்தில் சுய நலமின்றி பொது நலமிக்க நல்லோர்களையும் தேர்ந்தெடுக்கிறோம்.

தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் நலமுடனும், வளமுடனும் வாழ எல்லாம் வல்ல இயற்கைச் சக்தியை வணங்கி பிரார்த்திக்கிறோம்.

பல்லாண்டு வாழ்க எங்கள் தெய்வங்களே....!


Monday, March 30, 2020

சைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி?


வீட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி நல்ல சத்தான உணவு சமைப்பதில் நம் தமிழர்கள் கில்லாடிகள். அப்படியான ஒரு குழம்பு தான் இந்த சைவ ஈரல் குழம்பு.


ஈரலுக்குத் தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு – ஒரு டம்ளர்
கொஞ்சம் உப்பு

மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:
தேங்காய் கால் மூடி
கசகசா – 1 ஸ்பூன்

குழம்பு வைப்பது எப்படி?

பச்சைப்பயற்றினை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரையளவு உப்புச் சேர்த்து, இட்லி தட்டில் மாவினை ஊற்றி வேக வைக்கவும். பதினைந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். வெந்த இட்லிகளை பார்த்தால் ஈரல் போலவே இருக்கும். அதனை நறுக்கிக் கொள்ளவும்.

அரை மூடி தேங்காய் பூவுடன், ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து வதக்கி அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி ஒரு துண்டு, பத்துப் பற்கள் பூண்டினைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு துண்டு பட்ட, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதனுடன் இரண்டு தக்காளி நறுக்கியதைச் சேர்த்து கிளறவும். தக்காளி வதங்கியவுடன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் மல்லித்தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் சோம்பு தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து கிளறி விட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பாதியாக குழம்பு வற்றியவுடன், தேங்காய் அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் போது, வெட்டி வைத்த பாசிப்பயறு இட்லி துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும்,

முடிவில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும்.

மல்லித்தழை சேர்த்து கிளறி விடவும்,

சூடான சாதம், சூடான இடியாப்பம், அல்லது சப்பாத்தி ஆகியவைகளுக்கு மிகச் சரியான சைடு டிஸ். ஈரல் குழம்பு போலவே சுவை இருக்கும். அந்த பாசிப்பயறு துண்டுகள் மசாலாவில் ஊறி ஈரல் போலவே இருக்கும். மிகச் சரியான சரிவிகித குழம்பு இது.

முயற்சித்துப் பாருங்கள்.


உலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)

நீதிபதி சங்கருக்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை. இந்தக் கொரானா செய்த வேலையால் அவரின் இமயமலைப்பயணம் சீரழிந்து போனது பற்றி அவருக்குள் புழுங்கினார்.

சரியாக 22.03.2020 இந்தியா முழுக்க 144 தடை விதித்தது மத்திய அரசு. வேறு வழியே இல்லாமல் இமயமலை ஆன்மீக பயணம் கேன்சல் செய்யப்பட்டது. 

அய்யோ...அய்யோ என மனதுக்குள் வெம்பினார் நீதிபதி சங்கர். அருமையான சான்ஸ் போச்சே என நொந்தார். கொரானா என்ற பெயரைக் கேட்டாலே காண்ட் ஆகினார். 

பூஜா ஹெக்டேவை நினைத்து நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். 

“ஏய்! கொரானாவே, நானென்ன கேட்டேன். ரஜினிகாந்த் செல்வது போல ஒரு ஆன்மீகப் பயணம். இமயமலைக்கு. உதவிக்கு பூஜா ஹெக்டே. வேறு என்ன எதிர்பார்த்தேன்? தியானம் செய்தேனா? முதலமைச்சர் பதவி கேட்டேனா? இல்லை ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கேட்டேனா? எதுவும் இல்லையே. அட்லீஸ்ட் கவர்னர் போஸ்டாவது கேட்டிருக்கேனா? இல்லையே. இரண்டு நாள் இமயமலைச் சுற்றுப் பயணம் தானே கேட்டேன். அதற்காகவா என்னை இந்தப் பாடு படுத்துகிறாய். இரு உன்னை கூண்டில் ஏற்றி தூக்கு தண்டனை தராமல் விடப்போவதில்லை. மருத்துவ உலகம் உன்னை ஒழிக்கட்டும். அதுவரையில் நான் சும்மா இருக்கப் போவதில்லை. சட்டம் உன்னை விடவே விடாது” என தன் மனதுக்குள் கருவினார்.

அந்த நேரம் பார்த்து கோவை சரவணம்பட்டி போலீஸ் மூலம் இந்த வழக்கு வந்தது. உடனே விசாரிக்கப்படும் என உத்தரவு போட்டு நீதிமன்றத்தில் உட்கார்ந்து விட்டார்.

கொரானாவை கூண்டுக்குள் ஏற்றி தூக்கில் போட அவரால் ஆன சட்டத்தின் வழியை அவர் செயல்படுத்த துணிந்து விட்டார். ஆகவே முகத்தில் மாஸ்கை கட்டியபடி சட்டப்பணி ஆற்ற கோர்ட்டுக்கு வந்து விட்டார் மாண்புமிகு நீதிபதி.

இந்த இமயமலை டீலிங்கைக் கேள்விப்பட்ட எதிர்கட்சி உதவிதலைவர் தன் மாமா மகன் மூலம் நயன்தாராவை ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தார். நீதிபதி அவர் பாட்டுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து விட்டால்,  நம்மால் ஜெயிலில் கிடக்க முடியாதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பூஜா ஹெக்டே நீதிபதியின் உள்ளம் கவர்ந்த கள்ளி என்பதை இவருக்கு யாரும் சொல்லவில்லை. 

நீதிபதி நயன் தாராவை கிழட்டு மூதி எனச் சொல்வது அவருக்குத் தெரியாது.  நல்லவேளை, இந்த டீலிங்கைச் சொல்லி இருந்தால், இமயமலை டீலிங்கை விட்டு விட்டு உடனடியாக கைது வாரண்டு பிறப்பித்து இருப்பார். 

அதற்குள் கொரானா வந்து எல்லாவற்றையும் கொலாப்ஸாக்கி விட்டது. எதிர்கட்சித் தலைவருக்கு நல்ல நேரம் தப்பித்துக் கொண்டார்.

இது எதுவும் தெரியாமல் பூஜா ஹெக்டேவும், நயன் தாராவும் அவரவர் வேலையில் இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த உயர் நீதிமன்ற வக்கீல் அங்கு வந்த வேலனைப் பார்த்து டென்சனார். வேலன் அவராபீசில் கூட்டித் துடைக்கிறவன். அவனிங்கே என்ன செய்கிறான் என குழம்பினார் ராஜ்.

கொரானாவுக்கு ஆதரவாக வாதாட வேலன் ஆஜராகி இருப்பதை கோர்ட்டில் இருந்த அனைவரும் வச்ச கண்ணின் இமை மூடாமல் பார்த்தனர். மீடியாக்கள் வேலன் முகத்தை ஜூம் செய்தன. நீதிபதி சங்கர் கடுப்போடு வேலனைப் பார்த்தார். அங்கு பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடுவதைப் போல தோன்ற, மீண்டும் மீண்டும் எரிச்சலானார்.

”கணம் நீதிபதி அவர்களே, எனது கட்சிக்காரர் கொரானாவுக்கு ஆதரவாக வாதாட அனுமதி வழங்கியமைக்கு எனது நன்றிகள் கோடானு கோடியைத் தெரிவித்துக் கொண்டு தொடர்கிறேன்” என்றான் வேலன்.

“ம்.. ஆகட்டும். தொடருங்கள்” என்றார் நீதிபதி.

“சரவணம்பட்டி போலீஸார் பதிந்த குற்றப்பத்திரிக்கையிலே, எனது கட்சிக்காரர் கொரானா மக்களை கொன்று வருவதாகவும்,  பெரும் துன்பத்தைத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதாவது கணம் நீதிமான் பரம்பரையில் தோன்றிய ஆன்மீகத்தில் ஈடுபாடு உடைய நீதிபதி அவர்களே.....” 

இதென்ன கூத்து? ஆன்மீக ஈடுபாடு என்கிறானே இவன்? இவன் ஆளும்கட்சி வக்கீலா? நம்ம டீலு இவனுக்கு எப்படித் தெரியும்? டவாலி போட்டுக் கொடுத்து விட்டானா? இல்லை ஆளும்கட்சியின் ராஜதந்திர வேலையா? எனத் தெரியவில்லையே எனக் குழம்பினார் நீதிபதி.

இது எதுவும் தெரியாமல் வேலன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..


”எம் கட்சிக்காரர் கொரானா அவர் பாட்டுக்கு சைனாவில் இருந்தார். அவராகவா இந்தியாவிற்கு வந்தார்? இல்லை உங்களைக் கேட்கிறேன். அவராகவா இந்தியாவிற்கு வந்தார். இல்லையே. அவர் சைனாவில் இருந்தார். சைனாவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தது கேரளாவைச் சேர்ந்த ஒருவர். அவரை உள்ளே விட்டு விட்டு, வேடிக்கை பார்ப்பது அரசாங்கம். அது மட்டுமல்ல, அவரின் இயல்பு என்னவோ அதைப் போலத்தான் அவர் இப்போதும் இருக்கிறார். அவரை தன் உடலுக்குள் விழ வைத்து, அவரின் வேலையை அதிகப்படுத்துவது நம்மைப் போன்றவர்கள். நம்மால் அவர் இரவு பகல் தூங்காமல் வேலை செய்கிறேன் எனப் புலம்புகிறார். அவர் யாரையும் கொல்லவும் இல்லை. கொலை செய்யவும் இல்லை.”

டிவியில் பார்த்துக் கொண்டிருந்த புள்ளிங்கோ குருப்பைச் சேர்ந்தவர்கள் உடனடியாக கொரானா புள்ளிங்கோ அமைப்பை உருவாக்கி டிஷர்ட்டுக்கு லோகோவைத் தயார் செய்தனர்.

ஒரு சிலர் தன் வக்கீலிடம், கொரானாவுக்கு ஆதரவாக எங்களையும் சேர்த்து விசாரிக்கும்படி மனுச் செய்யும்படி கேட்க, வழக்குகள் ஏதுமின்றி வீட்டுக்குள் கோவை தங்கவேல் எழுதிய அரிசி ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வக்கீல்கள் சுறுசுறுப்பாயினர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அரசாங்க வக்கீல், டெல்லி வக்கீல் அமித்தை நக்கலாகப் பார்த்தார். அமித்துக்கு கொலை, கொள்ளை, அடிதடி என்றால் புரியும். இந்த கொரானா வழக்கு பற்றி தலையும் புரியாமல், வாலும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.

புதிய தலைமுறையில் பிரதிவாதி கொரானா நல்லவரா? கெட்டவரா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது.



வேளைக்குப் பிறகு தொடரும்....

Sunday, March 29, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)


அந்த வளாகம் பரபரப்பாய் இல்லை. முகத்தில் மாஸ்க் கட்டியபடி அந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர் இருவர்.  

மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டன. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் நீதிபதி சங்கர் வந்தார்.

டவாலி தன் கையில் இருக்கும் குச்சியை தள்ளிப் பிடித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தும் பயம் அவனுக்கு.

வழக்கு எண் சிபி1/2020, வாதி எப்படிச்சாவேன், பிரதிவாதி கொரானா என்று சத்தமாக அழைத்தான் டவாலி.

காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர் ஆகியோருடன் எப்படிச்சாவேன் வாதி அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

வாதியின் வழக்கறிஞர் அமித் டெல்லியில் இருந்து ரகசியப் பயணமாய் தனி பிளைட் பிடித்து வந்திந்தார்.

பல டிவி சேனல்களின் கேமராக்கள் நீதிமன்றத்தை உற்று நோக்கின. நீதிபதிக்கு சினிமாவின் மீதும், சினிமா நடிகை பூஜா ஹெக்டேவின் மீது அபார மோகம். அதனால் இந்த வழக்கை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதற்காக அனுமதி வழங்கி இருந்தார்.

டிவி ஆட்களும் எவன் வந்து தும்முவானோ, எப்படி வந்து ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில் இருந்ததால், தெருத்தெருவாய் அலைவதை விட, அறைக்குள் அமர்ந்து கொண்டிருக்கலாம் என்பதற்காக, உடனடியாக இந்த லைவ் புரோகிராமிற்கு ஆதரவு தெரிவித்து கேமராக்களையும், மைக்கையும் கொண்டு வந்து நீட்டி விட்டார்கள்.

போன மாதம் எதிர் கட்சி அரசியல் தலைவர் மீது, ஆளும் கட்சி சி.யெம்முக்காக வக்கீல் சொட்டையனால் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்தார் நீதிபதி சங்கர். ஆளும் கட்சி சார்பில் ‘என்ன வேண்டுமானாலும் செய்து தர தயார்’ என அரசு வழக்கறிஞர் பன்னி மூலம் செய்தி தரப்பட்டது.

சங்கர் போனவாரம் டி.ஜேன்னு ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஹீரோயினைப் பார்த்ததும் அவரின் அல்லக்கை துடியாய் துடித்த வேதனை தாளாமல், ;கொஞ்சம் பொறு உனக்கு ஏதாவது வழி பிறக்கும்’ என சமாதானம் செய்து கொண்டார்.

’என்ன வேண்டுமானாலும்’ செய்தி காதுக்கு வந்ததும், டவாலி மூலம் பன்னிக்கு இமயமலையில் வழக்கு தொடர்பாக ஆன்மீக டிஸ்கசனுக்கு ஏற்பாடு செய்தால் அரஸ்ட் வாரண்ட் ரெடி என்று தகவல் தரப்பட்டது.

மறு நிமிடமே, பன்னி மூலம் டிஸ்கஸனுக்கு நாள் குறிக்கப்பட்ட விஷயம் நீதிபதிக்கு டவாலி வழியாக தெரிவிக்கப்பட்டது. அந்த நாள் தான் 22.03.2020.

நீதிபதியின் அல்லக்கை துடியாய் துடிக்க ஆரம்பித்தான். ’பொறுத்தார் பூமி ஆள்வார் என உனக்குத் தெரியாதா தம்பி. பொறுத்திரு. கடமையை முடிப்போம். பின்னர் கச்சேரியை வைப்போம்’ என்று சமாதானப்படுத்தினார் நீதிபதி. 

டிஸ்கஸனில் நடிகையின் அதை ஒரு கடி கடித்து விட்டு தான் அடுத்த வேலை உனக்கு என அல்லக்கையை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார்.

வாதியின் வழக்கறிஞர் ஒரு மாதமாக ரெஸ்ட்டில் இருந்தார். ஆகவே இது என்ன வழக்கு என புரிந்து கொள்ள இயலாமல் கசகசப்பாய் சரவணம்பட்டி காவல் அலுவலக ஏட்டு எழுதிய எஃப்.ஐ.ஆரை படித்துக் கொண்டிருந்தார்.

பிரதிவாதிக்கு ஆதரவாக ஆஜர் ஆக யார் வரப்போகிறார்கள் என்று இது வரையிலும் தெரியவில்லை. அரசின் வழக்கறிஞருக்கு எரிச்சலோ எரிச்சல். வழக்குப் போட்ட வாதி எப்படிச்சாவேனை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

உலகமே டிவியின் முன்னால் உட்கார்ந்திருந்தது. கொரானாவுக்கு ஆதரவாக யார் ஆஜராகி வாதாடப்போகின்றார்கள் எனத் தெரியாமல் கண் இமை மூடாமல் கேமராக்கள் வழியே கேமராமேன்கள் பார்த்துக் கொண்டிருக்க, வளாகத்துக்குள் கார் ஒன்று வந்து நின்றது.


(சினிமா உலகிற்கு கலைச் சேவை செய்து, கலைமாமனி, பத்மஸ்ரீ போன்ற விருதுகளை எதிர்காலத்தில் வாங்கப் போகும் கலைத்தாய் பெற்ற மரகதம் பூஜா ஹெக்டே இவர் தான்)

இந்தக் கொரானா வழக்கு தன்னால் தான் நீதிமன்ற விசாரணைக்கே வந்தது என்றுத் தெரியாமல் பூஜா ஹெக்டே பெடிக்கியூர், மெனிக்கியூர் செய்து கொண்டிருந்தாள்.

விளம்பர இடைவேளை முடிந்ததும் தொடரும் வழக்கு விசாரணை…..


முக்கியமான குறிப்பு:
இது நகைச்சுவைக்காக எழுதப்படுகிற நாவல். இதன் கான்செப்ட் உரிமை எனக்கு மட்டுமே. மற்றபடி இது எவருக்கும் எதிரான நாவல் இல்லை. இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நாவல் எழுதும் போது புளொவில் வந்தது. ஆகவே எவராவது மனம் கோணினால் தாங்களே நேராக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த நாவலில் வரும் சம்பவங்களும் யாரையும், எவரையும் குறிப்பிடுவன இல்லை.