குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, November 26, 2019

நிலம் (60) - பட்டா வழங்கப்பட்ட புறம்போக்கு நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம்.  அதற்கு முன்பாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விட்டு தொடர்கிறேன்.

முஸ்லிம் மதத்தினர் கண்டிஷனல் பட்டா நிலங்களை வாங்கலாமா? என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். பட்டாவின் கண்டிஷன் என்ன என்பது தெரிந்தால் தான் வாங்கலாமா? வேண்டாமா? என்று சொல்ல இயலும். பொதுவாக கருத்துரு வழங்க இயலாது. ஆகவே பட்டாவின் நகலினை எனக்கு அனுப்பி வைக்கவும்.

இனி வெகு முக்கியமான இந்த விஷயத்துக்கு வருகிறேன்.

ஒருவர் குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தினைப் பட்டா மாற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார். இப்போதெல்லாம் ஆன்லைனில் எளிதாகப் பட்டாவுக்கு அப்ளை செய்து விட்டால் இரண்டொரு மாதங்களில் இன்ஸ்பெக்‌ஷன் முடிந்தவுடன் பட்டா மாறுதல் ஆகி விடும். கொஞ்சம் அலைச்சல் ஆகும். இவர் எதற்கு என்னிடம் பட்டா மாற்றித் தரும்படி வந்திருக்கிறார் என்று தெரியவில்லையே என நினைத்துக் கொண்டேன். ஆனால் கேட்கவில்லை.

அவர் கொடுத்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் புறம்போக்கு நிலத்தினைப் பட்டா பெற்ற உரிமையாளரிடமிருந்து, இவர் கிரையம் பெற்று இருப்பதும், அந்த நிலத்தின் பட்டா இவர் பெயருக்கு மாறவில்லை என்பதும் தெரிய வந்தது. 

’பலமுறை பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பம் செய்து, ஒன்றும் ஆகவில்லை, என்னால் அலைய முடியவில்லை, எனவே நீங்கள் செய்து தாருங்கள் என்றும், அதற்கு கட்டணமும் கொடுத்து விடுகிறேன் எனவும், கட்டணமாக அதிகத் தொகையையும் குறிப்பிட்டார்’. குடுமி சும்மா ஆடாது என்று புரிந்து போனது.

ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். சொல்வதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும். கொஞ்சம் அசந்தால், நேரமும் உழைப்பும் வீண். ரியல் எஸ்டேட் தொழிலில் நிதானம் ரொம்பவும் முக்கியம். நிதானம் தவறினால் படுகுழிக்குள் தள்ளி சுவடு தெரியாமல் மூடி விடுவார்கள். அந்தளவுக்கு நல்லவர்கள் இந்தத் தொழிலில் அதிகம்.

ஒரு புரோக்கர், அவருக்கு கமிஷன் கிடைக்காது எனத் தெரிந்தால் போதும், இன்னொருவரின் பிழைப்பில் செம்மண்ணை அள்ளிப் போட்டு விடுவார். 16 ஆண்டுகால அனுபவத்தில் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், எப்படியெல்லாம் சிக்க வைப்பார்கள் என்று தெரிந்து கொண்டேன். வேற லெவல் ஆட்களை இங்குப் பார்க்கலாம். கசங்கிய சட்டையுடன், படிக்காதவர்கள் போல, அப்பிராணிகளாய் இருப்பார்கள். மனசாட்சியே இல்லாமல் பிடுங்கி விடுவார்கள்.

அதுமட்டுமல்ல ஒரு சில, நிலத்தின் உரிமையாளர்களிடமிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள முடியவே முடியாது. அக்ரிமெண்ட் போடுவார்கள், பணம் பெற்றுக் கொள்வார்கள். கிரையத்துக்கு ஆளைப் பிடிக்க முடியாது. அடித்துப் பிடித்து வீட்டுக்குச் சென்றால், ’எங்க வீட்டில் இந்த விலைக்கு விற்காதே, விற்றால் தூக்குப் போட்டுக் கொள்கிறேன் என்று ஒரே பிரச்சினை சார்’ என்பார்கள். இங்கு நான் சொல்வது ஒரே ஒரு பர்ஜெண்டேஜ் பிரச்சினை. பல வித முயற்சிகளுக்குப் பின் புரோக்கர் ஒருவர் நிலத்தினை விற்றுக் கொடுப்பார். அவருக்கு கமிஷன் கூட கொடுக்கமாட்டார்கள் ஒரு சிலர்.  இதெல்லாம் எளிய பிரச்சினைகள். இதை விட கொடூரமாக புதிய புதிய பிரச்சினைகள் வரும்.

பட்டா மாற்ற வந்தார் அல்லவா? அவருக்குத் தெரிந்திருக்கும் அந்த நிலத்தில் ஏதோ பிரச்சினை என்று. என்னிடம் இது ஏதோ எளிதான வேலை என்பது போலவும், நம்மால் அலைய முடியவில்லை என்பதால் தான், உங்களிடம் வந்திருக்கிறேன் என்பது போலவும் பேசினார்.

அய்யோ பாவம் என்று நினைத்தால் போதும். ஜபர்தஸ்தாக உட்கார்ந்து கொண்டு என்ன ஆச்சு சார்? என்று கேள்வி கேட்கலாம் அல்லவா? கொடுத்த பணமும் வேலை முடியவில்லை எனில் திரும்பக் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் அவர்  வந்து இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.

அவரால் ஏன் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை என்பதை இப்போது பார்ப்போம்.


அந்தக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் மேய்ச்சல் நிலம், மந்தை வெளி நிலம் என்று இரண்டு வகையான நிலங்கள் இருந்தன. சமீப காலமாக, அதை புறம்போக்கு நிலம் எனச் சொல்லி, அனுபோக பாத்தியம் ஏற்பட்டு விட்டதாக அறிக்கை கொடுத்து, அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்தவர்களுக்குப் பட்டா வழங்கினார்கள். ஒரு சிலர் அவ்வாறு பெறப்பட்ட பட்டாவை வைத்துக் கொண்டு, நில  உபயோகத்தின் தன்மையை மாற்ற கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்க ஆரம்பித்தனர். நிலத்தின் தன்மையை ஆராய்ந்த சென்னை அலுவலகம், மனுக்களைத் திருப்பி அனுப்பி வைத்தது.

ஒவ்வொரு ஊரிலும் ஏக்கர் கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்களையும், மந்தை வெளி நிலங்களையும், பல கில்லாடி வேலைகளைச் செய்து பட்டா பெறப்பட்டு மனை நிலங்களாக மாற்றப்பட்டதை அரசாங்கம் கண்டு பிடித்து அதற்கு தடை போட்டு விட்டது.

அதென்ன மேய்ச்சல் நிலம், மந்தை வெளி நிலம் என்று கேட்க தோன்றும். மேய்ச்சல் நிலம் என்பது கால் நடைகள் மேய்ச்சலுக்காக அரசால் விடப்பட்டிருக்கும் பொது உபயோகத்துக்கான புறம்போக்கு நிலமாகும். அதில் கால் நடைகள் மேயும்.

மந்தை வெளி நிலம் என்பது நத்தம் என்கிற பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக இருப்பதால், கால் நடைகளை ஓட்டிச் சென்று காலையிலும், மாலையிலும் இந்த இடத்தில் ஒன்று சேர்த்த பிறகு மேய்ச்சலுக்கும், வீட்டுக்கும் பிடித்துச் செல்வார்கள். அந்தக் காலத்தில் இது போல ஒன்று சேரும் மாடுகளை மேய்க்க ஆட்கள் தனியாக இருந்தனர். கால்நடைகள் ஒன்று சேர்க்கப்பட்டு மேய்ச்சலுக்கும், மாலையில் அவரவர் வீடுகளுக்கும் பிரித்து பிடித்துச் செல்ல பயன்படுத்திய நிலத்தினை மந்தை வெளி நிலம் என்று சொல்வார்கள். இந்த நிலத்தில் பொங்கல் விழா கொண்டாடுவார்கள். இந்த நிலத்தில் மாடுகளின் கழிவுகள் சேரும். அதனை விவசாயிகளுக்கு உரமாக விற்பனை செய்வார்கள். எனது கிராமத்தில் மாட்டுச் சாணத்திற்காக  ஏலம் விடுவார்கள். ஆள் வைத்து காலையிலும் மாலையிலும் சேரும் சாணத்தை சேகரம் செய்து, நெல் வயல்களுக்கு உரமாகப் போடுவார்கள்.

இந்த இரண்டு இடங்களும் அரசின் சொத்து. இந்த நிலங்களைக் கூட விடாமல் புறம்போக்கு என ஆவணங்கள் தயார் செய்து,பட்டா பெற்று விடுகின்றார்கள் ஒரு சிலர்.

இப்படியான நிலத்தில் ஒரு பகுதியை அவர் ஏமாந்து வாங்கி விட்டு, பட்டா பெற முடியாமலும், நிலத்தினை விற்றவரிடம் பணத்தினைப் பெற முடியாமலும் ஏமாந்து விட்டு, என்னிடம் வந்து நின்றார் அவர். இந்த விஷயம் அவருக்குத் தெரிந்து இருக்கும். தெரிந்து ஏன் என்னிடம் வந்தார் என்றால் ஏதாவது செய்து பட்டா மாற்றி தந்து விட்டால் லாபம் தானே என்ற நினைப்பு.

அவரிடம்,” இது மேய்ச்சல் நிலம் என்று உங்களுக்குத் தெரியும். அதனால் தான் பட்டா பெற முடியவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். அத்தனையும் தெரிந்து வைத்துக் கொண்டு என்னிடம் ஏன் வந்தீர்கள்?” என்று கேட்டேன்.

“அய்யோ...! சார்... ! எனக்குத் தெரியவே தெரியாது சார். இது மந்தை வெளி நிலமென்று ஊரில் ஒருத்தர் சொன்னார் சார். பல பேரு பட்டா வாங்கி இருக்காங்க சார். அதான் சார் உங்களிடம் வந்தேன்” என்று ஆரம்பித்தார்.

”அரசாங்கம் இந்த வகையான நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து விட்டது. இல்லை எனக்கு இந்த நிலம் தான் வேண்டும் என நீங்கள் விரும்பினால், நீங்கள் வைத்திருக்குமிடத்தின் அளவுக்கு வேறு இடத்தில் நிலம் வாங்கி, அதை சுத்தப்படுத்தி அரசிடம் ஒப்படைப்புச் செய்த பிறகு, இந்த நிலத்துக்கு பட்டா பெறலாம். இது ஒன்று தான் வழி, வேறு வழி ஏதும் இல்லை” எனச் சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

நிலம் (59) வது பகுதியில் பட்டாக்களின் தன்மையை ஆராய வேண்டுமென்று எழுதி இருந்தேன் அல்லவா? இதைப் போன்றதொரு நிலமாக இருந்தால் நிலம் வில்லங்கம் ஆகி விடும் அல்லவா? அதற்காகத்தான் லீகல் பார்க்கும் போது பட்டாவை ஆராய வேண்டும் என எழுதி இருந்தேன். இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இனி கிராமங்களில் மட்டும் அல்ல நகர்புறங்கள் கூட ஒரு காலத்தில் கிராமப்புறங்களாக இருந்தவை தான் என்பதையும், அந்தக் கிராமங்களில் மேய்ச்சல் நிலங்கள் இருந்திருக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

மேய்ச்சல் நிலம் என எப்படிக் கண்டு பிடிப்பது என்று கேட்டீர்கள் எனில் அதற்கு தான் அடியேன் இருக்கிறேன். என்னைத் தொடர்பு கொள்ளவும். ஒரு சிலர் போனில் ஆலோசனை கேட்கின்றார்கள். ஆவணங்களைப் படித்துப் பார்க்காமல் நிச்சயம் என்னால் எதுவும் சொல்ல இயலாது. அவ்வாறு சொன்னால் அது தவறாகப் போய் விடும் ஆபத்து உள்ளது என்று ஒரு சில ஆலோசனைகள் வழங்கிய பிறகு தெரிந்து கொண்டேன். ஆகையால் ஆவணங்களைப் படிக்காமல் ஆலோசனை வழங்க இயலாது என்பதினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேய்ச்சல் நிலம், மந்தை வெளி நிலம் என இருவகை நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* * *
ஒரு செய்தி உங்களுக்காக....!

மாடுகளைத் தெய்வம் எனச் சொல்லும் நம் பாரதப் பிரதமர் முன்பு முதலமைச்சராய் இருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களை, பாரதப் பிரதமரின் மலிவு விலை வீடுகள் கட்ட பயன்படுத்த ஒதுக்கும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி தர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர குஜராத் மந்திரி சபை முடிவு செய்திருக்கிறது என்கிறது கீழே இருக்கும் செய்தி. 

Saturday, November 23, 2019

நரலீலைகள் - எது நாவல்? (8)



முஸ்லிம் பெயரைக் கொண்ட ஒரு முகம் தெரியாத ஒருவர், ”நீ எழுதுவதெல்லாம் நாவலா?” என்று கேள்வி கேட்டிருந்தார்.  எது நாவல்? என்று கேள்வி கேட்டவருக்கு என்னிடமிருக்கும் ஒரு சில கேள்விகள் பதிலாய்.

’நீங்கள் வாழ்வது யாருடைய வாழ்க்கை? உங்கள் வாழ்க்கையா? இல்லை எவரின் வாழ்க்கை? நீங்கள் இந்த பூமியில் ஒரே ஒரு விஷயத்துக்காக இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று உங்களின் வேதம் சொல்கிறது. அது என்ன? உங்களின் பிறப்பின் நோக்கம் தான் என்ன?’ இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் நான் எழுதுவதும் நாவல் தான். கலைத்துப் போட்டு எழுத நானொன்றும் பின் நவீனத்துவப் படைப்பாளியும் இல்லை.  நாவலின் வடிவத்தை உடைக்க விரும்புகிறேன்.

என் மூளைக்குள் புகுந்திருக்கும் பல்வேறு குப்பை கூளங்களை நீக்கி, பரிசுத்தமாய், தேவகுமாரனாய், பரிசுத்த ஆவியாய், சுத்த ஆத்மாவாய், எல்லைகளற்ற பிரபஞ்சத்தை எனக்குள் உணர்வதற்காக, என்னைக் கட்டி ஆளும் அஸாஸில் எனும் மனதோடு போராடிக் கொண்டிருக்கும் பல துகள்களின் கூட்டிசைவுக் கரு நான்.

நாவல் என்றால் வடிவம் இருக்கும். வடிவம் என்றால் பொருள். பொருள் என்றால் உணர்வற்றது. உணர்வற்ற ஒரு பொருளை நான் உருவாக்க விரும்பவில்லை. எனது சொற்களுக்கு எங்காவது ஒரு காது கிடைக்கலாம். இல்லை கிடைக்காமலும் போகலாம். அது என் பிரச்சினை இல்லை. நான் விடுத்த சொற்களின் வீரம் பற்றியது அது. சொற்கள் மவுனத்தின் உடைப்பு என்பதையும், நான் சொல்ல விரும்புவது எனக்கே எனக்காக என்பதையும் நான் உணர்ந்து இருக்கிறேன். ஆகவே இந்த நாவல் உங்களுக்கானது அல்ல என்பதால் தயை கூர்ந்து நீங்கள் விலகி விடலாம். 

கேள்விகள் குறிகள் போல. அவை உம்மைத் தாக்கி அழித்து விடும். கேள்விகளின் பதில்கள் புரிதல் இல்லாத இடத்தில் சுயமோகம் கொள்ள வைக்கும். அகங்காரத்தின் தொனியில் மனித தன்மை இழக்க வைக்கும். ஆகவே விலகி விடுங்கள் என்னிடமிருந்து.

நீங்கள் ரசிக்க வேண்டுமென்பதற்காகவோ, உங்களிடமிருந்து எனக்கு பொருளோ, வேறு எதுவும் தேவை இல்லாத போது, நீங்கள் எனது நாவலைப் படிக்க வேண்டிய நிர்பந்தத்தை, நான் உங்களுக்கு தரவில்லை. 

நீங்கள் என்னை எளிதாகக் கடந்து போகலாம். உமது நாட்களை, இந்தப் பூமியில் பிரக்ஞையற்ற தன்மையாக நீங்கள் கழிப்பது போல. அதனால் எனக்கு துன்பம் இல்லை. இன்பமும் இல்லை. இன்பம் என்பது வேதனை மண்டியவை என நான் அறிந்து கொண்டிருக்கிறேன். 

எனது பெயர் தங்கவேல். தங்கவேல் இந்த உலகிற்கு தரப்போகும் இரண்டு சொற்கள் உண்டு. அந்தச் சொற்களால் தான் இவ்வுலகம் மேன்மை பெறும். உலகின் இயக்கம் அந்தச் சொற்களால் தான் உய்வு பெறும். உயர்வு பெறும். மனித உயிர்கள் மகிழ்ச்சியாய் வாழும். எனக்கு முன்னாள் வந்தவர்களும், வரப்போகின்றவர்களும், வந்து கொண்டிருப்பவர்களும் சொல்லிய, சொல்கிற, சொல்லக் கூடிய சொற்கள் தான் அவைகள். சொற்களில் என்ன இருக்கிறது மாற்றம் புரிதலுக்கு உட்படாத வரை? 

எவராலோ எழுதி வைக்கப்பட்ட குப்பைக் கூளங்களுக்கு அடிமையாக என்னால் வாழ இயலாது. எனது உலகம் வேறு. நான் பெற்றவை வேறு. பெற்றுக் கொண்டிருப்பவை வேறு. ஆகவே என்னைப் போன்ற தீவிரவாதியிடமிருந்து, அக்கிரமக்காரனிடமிருந்து, அயோக்கியனிடமிருந்து விலகி ஓடி விடுங்கள். 

ஏனென்றால் நெற்றியின் சுவடுகள் காய்த்து விடுவது தடுக்கப்பட்டு விடும் என நிமித்தம் கேட்கலாம். அந்த நிமித்தம் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரானதாய் இருக்கலாம். அதனால் நடுக்கம் உண்டாகலாம். பயம் ஏற்படலாம். சில்லிடும் உணர்ச்சி ஊசி போல குத்தலாம். கோபம் வரலாம். உடம்பு அதிரலாம். 

உண்மை என்னவென்று தெரியாத. அறியாமை விலகாத வரை, சித்தப் பிரமை விலகாத வரை என் எழுத்துக்கள் கோபம் கொள்ள வைக்கும் தன்மை உடையவைதான். 

உங்களைப் பொறுத்த வரை கரைகள் உடையவை ஆறுகள். எல்லைகள் உடையவை நாடுகள். எனக்கு கரைகளும் இல்லை, எல்லைகளும் இல்லை. நான் உங்களுக்கு முட்டாளாய் தெரிவேன். அறிவிலியாய் தென்படுவேன். என்னால் இந்த உலகிற்கு எந்தப் பயனும் இல்லாதவனாய் புரியப்படுவேன். பூமியில் புற்களுக்கு என்ன வேலை?

இப்படிக்கு நரலீலைகளின் நாவல் ஆசிரியன் கோவை எம் தங்கவேல்.

* * *

டிவியில் தங்கவேல் பேசிக் கொண்டிருந்தான். 

மக்கள் சேவையே மகேசன் சேவை, எனக்குப் பசிக்குச் சோறு போடுங்கள். உங்களுக்காக, உங்களின் குழைந்தைகளுக்காக, உங்களின் குடும்பத்திற்காக, உங்களுடன் இணைந்து பணி புரிய காத்து இருக்கிறேன். என் வீட்டு மின்சாரக் கட்டணத்தைக் கட்டுவாயா? என்று கேட்காதீர்கள். 

நீங்கள் உழைக்கும் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை, உங்களிடமிருந்து பிடுங்கித் தின்பதை தடுத்துப் பாதுகாத்திட உங்களுக்காக உழைத்திடுவேன் எனச் சொல்கிறேன். உழைப்பின் ஊதியம் மொத்தமும் உங்களுக்கு கிடைத்தால் உங்களின் கனவுகள் நிறைவேறும்.

ஆனால் உங்களுக்கு ஊதியம் முழுமையாகக் கிடைப்பதில்லை. உங்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை 95 சதவீதம் எவனோ ஒருவன் தின்று கொழுக்கிறான். கிடைக்கும் 5 சதவீதத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவர்கள், வரிகள் என்ற பெயரில் 2 சதவீதத்தைப் பிடுங்கி, தனக்கும், தன் குடும்பத்துக்கும், பிடுங்க உதவி பெறும் ஊழியக்காரர்களுக்கும் பங்கு கொடுத்து விடுகிறார்கள். 

மிச்சமிருக்கும் 3 சதவீதத்தையும் அவர்கள் மாற்று வழியில் பிடுங்கி உங்களை ஏழைகளாக, கனவுகளோடு போராட வைத்து, முடிவில் ஏக்கத்துடன் மரணிக்க வைக்கிறார்கள். உங்கள் கனவுகளை, உங்களின் வாரிசுகளின் மீது சுமத்தி விடுகின்றீர்கள்.

அவர்களின் ஊதியமும் பிடுங்கி தின்னப்படுகிறது. அவர்களின் கனவுகளை அவர்களின் வாரிசுகளிடம் ஒப்படைத்துப் போய் விடுகின்றார்கள். இது காலம் காலமாய் நடந்து வரும் அக்கிரம். இதை எவரும் உணர்ந்து கொள்வதாய் இல்லை. 1 சதவீதத்தில் இருக்கும் அவர்கள், உங்களிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கித் தின்று விடுகின்றார்கள். உங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. உங்களிடமிருப்பவை எல்லாமும் அவர்களுடையவை. உங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கின்றார்கள். 

உண்மை என்ன என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உணர்ந்து கொள்ள முயலுங்கள்.

* * *

டிவியில் இருந்த கவனத்தைத் திருப்பி, எதிரே உட்கார்ந்திருக்கும் டி.ஜி.பி.ராஜ்குமார் மீது வெற்றுப் பார்வையை வீசினார் சி.எம்.

“யாருய்யா, இந்தத் தங்கவேல்? கேட்கும் எனக்கு நெஞ்சுக்குள் ஊசியைச் சொருகிய மாதிரி இருக்கு?”

“எனக்கும், அப்படித்தான் இருக்கிறது சார். உண்மை அதுதானே? அதைத்தான் அவர் சொல்கிறார். மக்கள் கூட்டம் கூடுகிறது அவரின் பேச்சைக் கேட்க. ஆரம்பத்தில் பத்து இருபது எனக் கூடினார்கள். இப்போது பத்தாயிரம், இருபதாயிரம் என கூடுகிறார்கள். அவர் பொத்தாம் பொதுவாகத்தான் பேசுகிறார். ஆனால் அவ்வளவும் உண்மை”

“நம் அரசு அவருக்கு இணக்கமாக இருக்கும்படி, அவரின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு போடுங்கள். முடிந்தால் அவரின் வீட்டுக்கு நான்கைந்து காவல்காரர்களைப் போடுங்கள். அரசு அவரைப் பாதுகாக்கிறது என்று மக்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்யுங்கள் டி.ஜி.பி”

“நிச்சயம் சார், இவரின் பேச்சுக்களை மக்கள் புரிந்து கொள்ள முயன்றால், அடுத்த ஆட்சியில் நீங்கள் ஜெயிலில் கிடப்பீர்கள் சார்”

“ஆமாய்யா, அதான் எனக்கும் பயமாயிருக்கு”

* * *

”மாயாண்ணே...! மாயாண்ணே...!”

கூக்குரலிட்டான் சநி என்கிற சந்து.

நாவல் என்பது ஒரு பொருள். அது பிரக்ஞை அற்றது. மாயனை நாவல் ஆசிரியன் பொருள் எனச் சொல்லி விட்டான். மாயனுக்கு கோபம் கொப்பளித்து வருகிறது. சந்துவின் கூக்குரல் மாயனுக்கு கேட்கிறது. 

* * *

அம்மே நாராயணி !
தேவி நாராயணி ! !
லக்‌ஷுமி நாராயணி !!!

* * *

தொடரும்





Wednesday, November 20, 2019

நிலம் (59) - நில உரிமைக்கான பட்டாக்களின் வகைகள்

நண்பரொருவர் “சார் சொத்து உரிமைக்கு பட்டா மட்டும் இருந்தால் போதுமா? பத்திரம் தேவையில்லையா?” என்று கேட்டார். இது பற்றி பல முறை எழுதி இருந்தாலும் பட்டாக்களைப் பற்றி எழுத வேண்டுமென்பதால் இந்தப் பதிவு. 

ஆரம்பகாலத்தில் அதாவது பிரிட்டிஷ்ஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில் பத்திரங்கள் என்று எதுவும் இல்லை. நில உடமைப் பதிவு 1850ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. பின்னர் நில அளவை மூலம், நில உரிமைக்கானப் பதிவுகள் 1900, 1955 மற்றும் 1983ம் ஆண்டுகளில் தொடங்கி அரசின் நில உடமைப் பதிவேட்டில் உரிமையாளர்கள் பெயர்கள் பதியப்பட்டன.

1850ஆம் ஆண்டின் நில உரிமைப் பதிவேட்டிற்குப் பிறகு, இந்தியப்பதிவு சட்டம் 1908ன்படி பத்திரப்பதிவு தொடங்கப்பட்டிருக்கலாம். அதற்கு முன்பாக, நில உடமைப் பதிவேட்டில் உள்ளபடி நில உரிமை மாற்றங்கள், அந்தந்த கிராமக் கணக்காளர் மூலம் உரிமை மாற்றம் செய்யப்பட்டன என்கிறார்கள். பத்திரப்பதிவு வந்த பிறகு, நில உரிமை மாற்றத்திற்கான மூலம் பத்திரங்கள் என்று உறுதி செய்யப்பட்டன. பெரும்பான்மையான நில உரிமை மாற்றம் ,பத்திரங்கள் மூலம் தான் தற்போது செய்யப்படுகின்றன. இருப்பினும் சில நிலங்களின் உரிமை மாற்றங்கள் பட்டாக்களின் மூலமாக செய்யப்படுகின்றன. 

பட்டாக்களின் மாற்றங்கள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டிருக்கிறன. உரிமையை விட்டுக் விடுதல், ஒப்படைப்பு, அரசால் வாங்கப்பட்டவை, தனி நபரால் வாங்கப்பட்டவை, நீதிமன்ற ஆணையின் பெயரில் விற்பனை அல்லது மாற்றம், கொடையினால் பெறப்பட்டவை, வாரிசுகளால் உரிமை மாற்றம் செய்யப்பட்டவை, 12 ஆண்டுகளுக்கும் மேல் அனுபோகப் பாத்திய ஏற்பட்டவை, வாரிசு இன்றி அரசுக்கு சேர்ந்தவை, உட்பிரிவு செய்தல், பரிவர்த்தனை செய்தல், பாகப்பிரிவினை ஆகியவைகளின் மூலம் நிலத்தின் உரிமை மாற்றங்கள், பட்டாக்களில் பதிவு செய்யப்படுகின்றன என்பதினை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.

ஒரு சொத்து வாங்கப்படும் போது, அதன் உரிமை மாற்றங்கள் எப்படியானவை என்று கண்டுபிடித்து, அதன் உரிமை மாற்றம் மிகத் துல்லியமாக ஆராயப்பட வேண்டும். இதைத்தான் அடியேன் செய்கிறேன். எந்தெந்த ஆவணங்கள், யாரிடம் இருக்கும் என்ற அனுபவ அறிவினால், சொத்தின் உரிமை மாற்றத்துக்கான ஆவணங்களைப் பெற்று, ஆராய்ந்து பின்னர் தான் லீகல் எப்படி இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறேன். ஐந்து செண்ட், பத்து செண்ட் நிலங்களுக்கு அதாவது டிடிசிபி அப்ரூவல் மனைகளுக்கு என தனியான ஆராய்வுகள் உண்டு. 

ஒரு சிலர் கிராமம், புல எண்களைக் கொடுத்து, “சார், இந்தச் சொத்தினை வாங்கலாமா? வேண்டாமா? எனச் சொல்லுங்கள்” என போனில் கேட்பார்கள். அவர்களுக்கு என் பதில் மெளனம். இல்லையெனில் என்னால் இயலாது என்பதுதான். நான் ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.

பட்டாக்கள் பொதுவாக 
  1. தனிப்பட்டா 
  2. கூட்டுப்பட்டா
  3. 2சி (மரம் வளர்க்க) பட்டா
  4. நத்தம் பட்டா
  5. கண்டிஷனல் பட்டா (பஞ்சமி, எஸ்.ஸி/எஸ்.டி/, மலைவாழ் மக்கள் பட்டா இப்படிப்பல இனங்கள்)
  6. பி மெமோ பட்டா (புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளருக்கு வழங்கப்படுபவை),
  7. டி.கே.டி.(நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கண்டிஷனல்)பட்டா

என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட பட்டாக்களின் மூலமாக உரிமை மாற்றங்கள் பதியப்படுகின்றன.

தனிப்பட்டா என்பது ஒரு உரிமையாளருக்கு உரிமையான மொத்த நிலமும் தனியாகக் குறிப்பிடப்பட்டு வழங்குவது.

கூட்டுப்பட்டா என்பது பல உரிமையாளர்களுக்கு உரிமையான பல புல எண்களோ அல்லது ஒரே புல எண்ணோ கொண்ட மொத்த நிலத்தின் அளவு குறிப்பிடப்பட்டு வழங்குவது.

2சி பட்டா என்பது அரசின் புறம்போக்கு நிலத்தில் மரங்கள் வளர்க்க வழங்கப்படுவது.

நத்தம் பட்டா என்பது அரசால் நத்தம் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுபவை.

கண்டிஷனல் பட்டா என்பது பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

ஷெட்யூல்ட் கேஸ்ட் (SC) இனத்தினருக்கு வழங்கபடுவை, இராணுவத்தாருக்கும் வழங்கப்படுபவை, சிறப்பு வீட்டுமனை திட்டத்தின் கீழ் வழங்கப்படுபவை, நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்படுபவை, தியாகிகளுக்கு வழங்கப்படுபவை, அரசே நிலம் வாங்கி எஸ்.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டவை, பஞ்சமி (Depressed Class) நிலப்பட்டாக்கள் என மேலே குறிப்பிட்ட பட்டாக்க்கள் மூலம் நில உரிமையாளர்கள் ஆக்கப்படுவார்கள். ஆனால் அந்தப் பட்டாக்களில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கும். அந்த நிபந்தனைகள் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லாமல் கண்டிஷனல் பட்டா நிலங்களைக் கிரையம் பெறக்கூடாது.

தற்போது என்ன செய்கிறார்கள் என்றால், கணிணி பட்டா வந்தவுடன் அதைக்காட்டி கிரையம் செய்து விடுகிறார்கள். அவ்வாறு கிரையம் பெற்ற பலர் இன்றைக்கும், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய இயலாமல் திகில் அடைந்து கிடக்கின்றார்கள். 

நாட்டின் உயரிய பதவி வகிப்பவரின் ஆலோசகர் ஒருவர் இப்படித்தான் சிக்கி இருக்கிறார். நில ஆவணங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றம் செய்ய முற்பட்டால் பின்னாட்களில் மாற்றம் செய்தவர்கள் சிக்கிக் கொள்வார்கள் என்பதால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக இன்று வரைக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய இயலவில்லை.

பி மெமோ பட்டா என்பது ஊரின் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவருக்கு வழங்கப்படுபவை. அது பி மெமோ ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

டி.கே.டி பட்டா என்பது நிலம் இல்லா மலை வாழ் மக்களுக்கு அரசால் வழங்கப்படுபவை. ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் டி.கே.டி பட்டாக்கள் அதிகம். இங்கு நிலம் வாங்கும் போது, நல்ல லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெற்றால் நிம்மதியாக இருக்கலாம்.

சொத்து வாங்கும் முன்பு நிலத்தின் பட்டாவை பரிசீலனை செய்வது மிகவும் சாலச் சிறந்தது என்று இப்போது அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இது தவிர இன்னும் ஒரு சில பட்டாக்கள் உண்டு. அதையெல்லாம் பொதுமைப் படுத்தி தான் விவரித்திருக்கிறேன். பட்டாக்கள் பற்றி இந்த விஷயங்கள் போதுமானவை.

குறிப்பு: ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வகையான லீகல் பார்க்க வேண்டும். இந்தக் குறிப்புகளை வைத்து எந்த முன் முடிவுக்கு வர வேண்டாம் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

விரைவில் தர ஏக்கர் என்றால் என்ன என்பது பற்றிய விரிவான பதிவினை எழுத இருக்கிறேன். 

இந்த தர ஏக்கர் விபரம் தான் எதிர்காலத்தில் நிலம் வாங்குவதற்கு உண்டான முக்கியமான காரணியாக இருக்கப் போகிறது. நில உச்ச வரம்புச் சட்டத்தின் படி, பெரும் சொத்துக்காரர்களிடமிருந்து நிலத்தை அரசு கையகப்படுத்தப் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க...! வளமுடன்....!

மேலும் ஒரு குறிப்பு: 50 ஏக்கர் நிலம் வாங்கப் போகிறேன், பண்ணையம் செய்யப் போகிறேன் என்று திட்டமிடுபவர்கள் சரியான திட்டமிடல் செய்த பிறகு வாங்குங்கள். இல்லையெனில் நிலம் உங்களை விட்டு போய் விடும்.

Thursday, November 14, 2019

நரலீலைகள் - பீமா (18+ மட்டும்) (7)

அவர்கள் இருவர், பீமா மற்றும் ஜூனா.

விடிகாலைக்கும் முந்தைய பொழுது. செயற்பொறியாளர், பொதுப்பணித்துரை என பித்தளை தகட்டினில் எழுதப்பட்டிருந்த வீட்டு கேட்டினை தாண்டிக் குதித்தனர். பூட்டப்பட்ட கதவினை பீமா எதையோ ஒன்றினை வைத்து திறந்து உள்ளே சென்றான்.

செல்வம் கொழிக்கும் வீடு. கிரானைட்டால் மெழுகி இருந்தார் அந்த செயற்பொறியாளர்.

இருவரும் படுக்கை அறைக்குள் சென்றனர்.

செயற்பொறியாளர் நாற்காலியில் கட்டப்பட்டிருந்தார். வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. 

எதிரில் அவரின் செல்ல மகன்கள் இருவரும், அழகிய மனைவியும் கைகள் கட்டப்பட்டு, வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டுக் கிடந்தனர்.

செயற்பொறியாளரின் கண்கள் விரிந்து கிடந்தன. கண்ணீரில் கண்கள் குளமாகிக் கொண்டிருந்தன.

கத்தவும் முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் அந்த அகலமான ஏசி ஓடிக் கொண்டிருந்த படுக்கையில் மூவரும் கிடந்தனர். அவர்கள் மீது கைகளால் அழுத்தி அமர்ந்து கொண்டு, கையில் கூர்மையான கத்தியுடன் ஜூனா.

கையில் ஒரு பேப்பருடன் பீமா பொறியாளர் முன்னிலையில் நின்றிருந்தான். தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

இது வரை தாங்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளமாகப் பெற்றது ஒன்றைரைக் கோடி. லஞ்சமாகப் பெற்றது 20 கோடி. இது அத்தனையும் இதோ உங்கள் முன்னால் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் மனைவிக்கும், மகன்களுக்கும் பெறப்பட்டவை. ஆகையால் இவர்கள் மூவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்படப் போகின்றார்கள். உங்களைக் கொல்லப்போவதில்லை. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ரூபாய் லஞ்சமும், கமிஷனும் இவர்களுக்காக என்பதால், இனி இவர்கள் இருக்கப் போவதில்லை. 

இந்தக் கொலைகளைச் செய்வது பீமா மற்றும் ஜூனா ஆகிய நாங்கள். இதை ஒப்புதல் வாக்குமூலமாக உங்களிடம் கொடுத்து விடை பெறுகிறோம்.

”ஜூனா, மூவரின் கழுத்தையும் அறுத்து, தலையை மட்டும் இவரின் காலடியில் வைத்து விடு. இவர்களைக் கொன்றது இவரின் பேராசை”

“சரி, அண்ணா...!”

முதலில் மகன்களின் தலையை அறுத்தான். ஒவ்வொருவரின் உடம்பு துடித்து அடங்கியது. கடைசியில் மனைவியின் கழுத்தை அறுத்தான் ஜூனா. பீமா அமைதியாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். செயற்பொறியாளர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

அவர் கண்களை மூடிக் கொண்டார். கண்கள் பீமாவைப் பார்த்துக் கெஞ்சியது. அழுதன. எல்லாம் முடிந்தன.

ஆர்ப்பாட்டமின்றி இருவரும் வெளியில் சென்றனர்.

அவர்கள் வெளியேறுவதைக் கண்டு புன்னகைத்த அஸாஸில் அந்த வீட்டுக்குள் நுழைந்தான். 

* * *

”ஆஹா...! நாவல் ஆரம்பித்து விட்டது. எழுத்தாளன் எழுத ஆரம்பித்து விட்டான். இனி அதகளம் தான். நாவல் வடிவம் பெற ஆரம்பித்து உள்ளது. இனி பீமாவும், ஜூனாவும் உலகில் நடக்கும் ஒவ்வொரு அக்கிரமங்களுக்கு காரணமானவர்களைக் கொன்று ஒழிப்பார்கள். இனி உலகம் சுபிட்சம் பெறும். ஆஹா, அற்புதம். அஸாஸிலைக் காவல்துறையினர் கைது செய்து தூக்கில் போடுவர். இனி அஸாஸில் ஆட்டம் குளோஸ்” 

”மாயாண்ணே, இதெல்லாம் நடக்குமா?”

”சந்து, நிச்சயம் நடக்கும். இந்த நாவல் ஆசிரியன் ஆரம்பகாலத்தில் ராஜேஷ்குமார், பட்டுக்கொட்டைப் பிரபாகர், சுபா, ராஜேந்திரகுமார், எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களை படித்தவன். தர்மம், நியாயம் என்றெல்லாம் பேசுவான். யோக்கிய சிகாமணி”

“அண்ணே, ஒருத்தன் யோக்கியன் என்றால், அவனுக்குப் பயம் ஜாஸ்தி என்று அர்த்தம்னே. தைரியசாலிதான் அயோக்கியத்தனம் செய்வான். யோக்கியன் என்பவன் பேசிக்கல்லி பயந்தாங்கொள்ளிண்ணே”

“அட, சந்து, நீயாடா இதெல்லாம் பேசுறே, நீ சொல்றது கூட சரியாத்தான் படுது”

“உண்மைதாண்ணே, வாழும் வரை வாழ்ந்து பார்த்துடுவோம், பின்னால் எது வந்தாலும் பார்த்துக்கிடலாம்னு பயமின்றி இருப்பவன் தான் அக்கிரமங்களைச் செய்கிறான், இதுதான் உண்மையும் கூட”

“சந்து, நீ ரொம்ப அறிவாளியாப் பேசுகிறாயே, ஆச்சரியம் தான் போ...!”

”அண்ணா, எழுத்தாளன் வந்து விட்டான் மீண்டும். என்ன எழுதுகிறான் என பார்ப்போம்”

* * *

செயற் பொறியாளர் படுக்கையில் இருந்து பதறி எழுந்தார். வியர்க்க விறுவிறுக்க அருகில் பார்க்க மனைவியும், மகன்களும் ஆனந்தமாக உறங்கிக்கொண்டிருந்தனர்.

அவருக்கு சற்றே நிம்மதியானது. அறையின் மூலையில் நின்று கொண்டிருந்த அஸாஸில் புன்னகையுடன் வெளியேறினான்.

“நான் இருக்கும் வரையில் இங்கு எதையும் உங்களால் மாற்ற முடியாது பீமா. உங்களை விட சக்தி வாய்ந்தவன் இந்த அஸாஸில். நான் ராதை மீது காதலில் விழுந்து விட்டேன் என நினைத்தீர்களோ? அது காமம். இது எனது டிசைன். மனிதர்களை அயோக்கியர்களாக மாற்றி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் வரை விடமாட்டேன். ”

”நீதியின் பால் நம்பிக்கை வைத்திருந்தீர்களே! அதுவும் இனி நடக்காது. ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஐந்து லட்சம் தினமும் எடுத்துச் செல்ல வைத்திருக்கிறேன். இனி கோடிகளில் வீடு சென்று சேரும். என்னிடம் பணம் என்று ஒன்று இருக்கும் வரை மனிதர்கள் மாற மாட்டார்கள் பீமா. விடவும் மாட்டேன்”

கொக்கரித்தான் அஸாஸில்.

பீமாவும், ஜூனாவும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

* * *

செயற்பொறியாளரின் மனதில், கனவில் தன் முன்னே வந்து நின்று கொண்டு, தான் வாங்கிய சம்பளம் முதற்கொண்டு, லஞ்சம் பணம் மொத்தம் எவ்வளவு என சொன்ன பீமாவின் உருவமும், கையில் கத்தியுடன் ஆழ்ந்த அமைதியாக அவரைப் பார்த்த ஜூனாவின் பார்வையும் மறையவே இல்லை. உள்ளுக்குள் நடுங்கினார் அவர்.

அவர் காலத்தின் சுழல் அச்சை நோக்கி ஒரு இஞ்ச் நகர்ந்தார்.

அஸாஸிலின் கால் நகத்தில் சிறிய கரும்புள்ளி தோன்றியதை அவன் கவனிக்கத் தவறினான்.

காலம் சிரித்தது.
* * *

Friday, November 1, 2019

தெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று

நேற்று தூறல் இல்லாத, குளிரடிக்கும் மாலை நேரம். பிள்ளையை அழைத்து வர, பள்ளிக்குச் சென்று வந்த மனையாள் அரக்கப் பரக்க வீட்டுக்குள் ஓடி வந்தார்.

“என்னாங்க... என்னாங்க... அடுத்த தெருவில், அதாங்க தாமரை அக்கா வீட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிற ரோட்டில் யாரோ ஒரு மூட்டையைக் கொண்டாந்து போட்டு விட்டுப் போயிட்டாங்க. ஒரே நாத்தம். பிண வாடை அடிக்கிதுங்க”

“அட.... அப்படியா?” இது நானு.

”ஆமாங்க, பெய்லி வாக்கிங்க் போகும் போது அண்ணா பாத்தாராம். உடனே போலீசுக்குப் போன் போட்டுட்டாரு. நம்ம தெரு அண்ணாதிமுக்கா அண்ணனும் வந்துட்டாருங்க, நம்ம ஏரியா பீளமேடு ஸ்டேஷன் கண்ட்ரோலில் வருதாங்க. ரோட்டுக்கு அந்தப் பக்கம் சரவணம்பட்டி போலீஸ் கண்ட்ரோலாம். டவுன் போலீஸ்க்கும் தகவல் கொடுத்தாச்சாம்ங்க”

“அட... ஓ... சரிதான், நாத்தமெடுக்கிற மூட்டை.போலீஸ் வந்தாத்தான் சரியா இருக்கும்” - இது நானு.

ஒரே பரபரப்பு அவளுக்கு. மூட்டையில் என்ன இருக்கும்? குழந்தையாக இருக்குமோன்னு பாட்டி சொன்னாங்கன்னு இடையில் அவ்வப்போது ரூமிற்குள் வந்து ரன்னிங்க் கமெண்ட்ரி வேறு கொடுத்தபடி, அடுப்படிக்கும் ரூமிற்குமாய் ஓடிக் கொண்டிருந்தார்.

முளைக்கட்டின தானியங்கள் சூடு ஆறிப் போய் சுண்டலாய் கிண்ணத்தில் இருந்தது. காப்பியைக் காணோம். அதற்குள் மகளுக்கு ஹிந்தி வகுப்புக்கு நேரமாகி விட, சென்று விட்டார்.

எனக்குள் பலப்பல கேள்விகள் உதித்தன.

மூட்டைக்குள் யாராக இருக்கும்? குழந்தையாக இருந்தால், அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் ரேப் பண்ணி இருப்பார்களோ? இல்லை ஏதாவது முன் விரோதப் பகையின் காரணமாக துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கொண்டு வந்து போட்டு விட்டு போயிருப்பானோ? அது ஆணா இல்லை பெண்ணா? இல்லை குழந்தையா?

நாவரசுவைக் கொன்றது மாதிரி இருக்குமா? மூட்டை நாற்றம் அடிக்கிறது என்றாளே, அழுகி இருக்குமோ? அருவாளால் வெட்டி இருப்பானா? இல்லை கத்தியாக இருக்குமா?  ஆசிட் ஊற்றி எரித்திருப்பார்களோ? சதையெல்லாம் பிய்ந்து எலும்பில் ஒட்டிக் கிடக்குமா? புழுக்கள் பிணத்தை தின்று கொண்டிருக்குமா? 

இப்படியான கேள்விகள் எனக்குள் உதிக்க, சுண்டலை சாப்பிட மறந்து போனேன். அதற்குள் மகனை அழைந்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவள்,”என்னாங்க... என்னாங்க...!” என்று அழைத்தபடியே அறைக்குள் வந்தாள்.

என்ன என்பது போல ஏறிட்டுப் பார்க்க,

“பாட்டி, மொட்டை மாடி மீது நின்னு பார்க்கலாம் வான்னு கூப்பிட்டாங்களா? இரண்டு பேரும் போய் நின்னோம், போலீஸ்காரரு அங்கன இருந்து உள்ளே போங்கன்னு விரட்டுறாருங்க, வந்துட்டோம்ங்க” என்றாள்.

”அப்படியா? அது என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்?”

“தெரியலிங்க, ஆனா அந்த மூட்டைய போலீஸ்காரங்களே அவிழ்க்கிறாங்களாம்னு பாட்டி சொல்லுச்சு” என்றாள்.

பதிலுக்கு நானும், “ரூடோஸும், மணியும் விடாது குறைத்துக் கொண்டே இருந்தார்கள். பிண வாடையைப் பிடித்திருப்பார்கள் போல” எனச் சொல்லி வைத்தேன்.

ஆள் சமையல் கட்டுக்குள் சென்று விட, இந்த மாத காலச்சுவட்டிற்குள் மனதை நுழைத்துக் கொண்டேன்.

இரவில் எனக்கு சளித் தொந்தரவினால் காது அடைத்துக் கொள்ள, மருத்துவ நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். அரை மணி நேரத்தில் மாத்திரைகள் வர, சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன்.

இரவில் பொன் மாணிக்கவேல் விசாரித்து கொலைகாரனைக் கைது செய்வது போலவும், விவேக் ரூபலா இது பற்றி பேசிக்கொண்டிருப்பது போலவும், பரத் சுசீலா டீம் துப்பறிவது போலவும், இன்ஸ்பெக்டர் துரை ஜீப்பில் செல்வது போலவும் பலப்பல கனவுகள் என்னைத் தூங்க விடாது சில்மிஷங்கள் செய்தன. நரேந்திரன், வைஜெயந்தி ஜோடி பைக்கில் யாரையோ துரத்திக் கொண்டு செல்வது போல பரபரப்பாய் கனவு வந்தது. ராம்தாஸ் இன்னும் பைப்பிற்குள் புகையிலையை திணித்துக் கொண்டிருந்தார். ஜான் யாரையோ உளவு பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்ரேலின் என்.எஸ்.ஓ லோகோ வாட்ஸப்பில் புழு போல நுழைந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

பிரதமர் வழக்கம் போல இது பற்றி ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை என எதிர்கட்சிக்காரர்களின் பேட்டிகள் தினசரிகளில் வந்திருந்தன. அவர் இஸ்ரேலில் பிரதமருடன் இஸ்ரேலிய உணவுப் பதார்த்தங்களை ருசித்துக் கொண்டிருக்கும் செய்தியும், இஸ்ரேலில் பிரதமர் கையாலே சாப்பிட்டதாகவும், அதற்கு இஸ்ரேலிய பிரதமரிடம் ’இது நான் மட்டுமே எனக்கே எனக்காக பயன்படுத்தும் ஸ்பூன்’ என வலது கையைக் காட்டிச் சொன்னது கட்டம் கட்டி, இந்தியாவின் பெருமையை நிலை நாட்டினார் என புகழாரம் சூட்டிய செய்தி வெளியாகி இருந்தது. ஜக்கி வாசுதேவ் அவர்கள், இந்தச் செய்தி பற்றி, “இந்துத்துவ பெருமையை பிரதமர் வெளி நாட்டில் நிலை நாட்டி இருக்கிறார்” என கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் நினைவாக ஒற்றைக்கை மட்டும் சிலை வைப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளில் இருப்பதாகவும், அதற்காக அரசிடம் வெள்ளிங்கிரி மலையையே கைபோல செதுக்கி நம் பாரதப் பிரதமரைக் கவுரவிக்க திட்ட அனுமதிக்கு அனுப்பி இருப்பதாகவும் கூடுதல் செய்தியாகச் சொல்லியிருந்த செய்திகளும் கனவுகளில் ஒன்றன் பின் ஜூமில் வந்து வந்து சென்றன.

தந்தி டிவியில் இது பற்றிய “பிணத்தை மூட்டையில் போடும் அளவு கொலைகார கோவையா?” என்ற விவாதத்தில் சமூக ஆர்வலர் ராமசுப்ரமணியனுக்கும், ஜட்சு பொண்டாட்டி சாரி சாரி கணவருக்கும் சண்டை மூண்டது போலவும் கனா வந்து தூக்கத்தை விடாது கெடுத்தது.

விடி காலையில் விழிப்பு வர எழுந்து கொண்டேன். 

மூட்டைக்குள் யாராக இருந்திருக்கும்?  என்ற கேள்விகள் எழ, மீண்டும் கொலைக்கார கதைகளும், துப்பறியும் ஹீரோக்களும் நினைவிலாட, அருகில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தினசரியைப் பரபரப்புடன் புரட்டினால் இந்தக் கொலை பற்றிய செய்திகள் ஏதுமில்லை. காலை உணவு தயாரிப்பதில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவளிடம், “என்ன, செய்தி ஒன்றையும் காணவில்லையே, உனக்கு ஏதாவது தெரியுமா?” என்றேன்.

“அதாங்க, காலையிலேயே பாட்டி சொல்லிட்டாங்க. அது அழுகிய முட்டைக்கோஸ் மூட்டையாம்” என்றாள் விட்டேத்தியாக.

”ஙொய்யால....!” மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

செவனேன்னு இருந்தவனிடம் வந்து, மூட்டைக்கதை சொல்லி அது கடைசியில் முட்டைக்கோஸ் மூட்டையாக மாறிப்போன அவலத்தை சொல்லிய அவளின் முகத்தைப் பார்த்தால் ஒன்றுமே நடக்காத அப்பாவி போல சமைத்துக் கொண்டிருந்தாள்.

Friday, October 18, 2019

நரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)

அன்பே ராதே...!

எல்லைகளற்ற பிரபஞ்சத்தின் எண்ணற்ற தூசிகளில் ஒரு தூசியான பூமியில் பூத்த கள்ளம் கபடமற்ற ஒரே ஒரு ஜீவன் நீதானடி..!

சத்தங்கள் அற்ற உலகில் வசிக்கும் என் மென்மையான இதயத்தை, உன் புன்னகையால் கீறிச் செல்லும் ஒலியைக் கொண்டவளே...!

உதட்டோரம் நெளியும் சுளிவுகளில் நடனமாடும் புன்னகையை நிரப்பி, பூமியில் நிற்கவே முடியாமல் நிலை தடுமாறும் வகையில் நின்று கொண்டு, உன் மோகனப் புன்னகையால் கோடானு கோடி ஈட்டிகளை, என்னை நோக்கி எரியும் அன்பானவளே...!

உன்னால் உன்மீது காதலால் தகித்துப் பொங்கும் எரிமலையில் உன் அமுத கண்களில் துளிர்க்கும் ஒரு துளி நீரை விட்டு காதலால் அணைத்து முகிழும் அற்புத அழகே...!

பிரவாகத்தில் அமைதியாய் பூக்கும் மலரைப் போல மென்மையானவளே, உன் காதுகளில் அணிந்திருக்கும் அழகான பொன் வேய்ந்த காதணிகள் ஆடும் நர்த்தனம் கண்டு, உள்ளம் சோர்ந்து போனதடி....!

ராதே... உன் பெயர் தானடி காதல்... நீதான் காதல்... காதலில் மூழ்கிப் போய் மூச்சடைத்து பிரஞ்கையற்றுப் போய்க் கொண்டிருக்கிறேனடி....!

என்னை உன் காதலால் நிரப்பி விட்டாயடி மோகனத்தில் மோனத்தைக் காட்டும் தேவியே...!

காதல்...! காதல்...!! காதல்...!!!

ராதே...! ராதே...!! ராதே...!!!



* * *

வில்லன் இப்படி காதலில் மூழ்கி விட்டால், இந்த நாவல் எப்படி நகரும்? வாசகர்களே, நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். நாவல் ஆசிரியன் இந்த நாவலை எழுதிக் கொண்டே செல்வானென்று. ஆனால் அவனுக்கும் இந்த நாவலின் கதாபாத்திரங்களுக்கும் இடையில் சச்சரவுகள் எழும்பி விட்டதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் அல்லவா? கதாபாத்திரங்கள் ஆசிரியருடன் முரண்பாடு கொண்டால் என்ன ஆகும்? நாவல் வடிவு பெறாதே? கவலையாய் இருக்கிறேன் நாவலாகிய அடியேன்.

அஸாஸில் காதலில் மூழ்கிப் போனான். உலகம் இனி எப்படி இயங்கும்? என்னை இப்படி புலம்ப விட்டு விட்டானே ஆசிரியன். நாவல் இனி எப்படி உருவாகும் எனத் தெரியவில்லை. 

இந்தப் பாழாய்ப் போன காதல் அஸாஸிலுக்கு ஏன் வந்தது? ராதேயின் மீது காதல் கொண்டு, பித்துப் பிடித்தவன் போல அலைகிறான். ஏற்கனவே இந்த ராதே, இன்னும் கண்ணனை அடையாமல், ஏங்கி யமுனா நதிக்கரையோரம் அலைந்து கொண்டிருக்கிறாள். அவளை இவன் காதலிக்கிறானாம். என்ன கன்றாவியோ இது?

* * *

Monday, October 14, 2019

நிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்

ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புவது, துரோகம் என்று அலறுவது எல்லாம் மனிதனின் இயல்பு. ஏமாற்றவே புறப்பட்டவர்களிடம் ஏமாறுவது ஒன்றும் தவறு அல்ல. அது அவர்களின் டிசைன். இப்படித்தான் ஒருவன் என் உழைப்பை இரண்டு வருடம் உறிஞ்சினான். பின்னர் வசதியாக மாறிக் கொண்டான். அவனை இந்த உலகம் ஆஹா...! ஓஹோ... ! என்று பாராட்டுகிறது. இங்கு நியாயமும், தர்மமும் பேச்சிலும், புத்தகங்களிலும், வேதங்களிலும் மட்டும் தான் இருக்கின்றன. இன்னொருவனை ஏமாற்றுவது அல்லது அவனறியாமல் அவனிடமிருந்துது பிடுங்கிக் கொள்வது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் சிக்கல்கள் நிறைந்த ரெவின்யூ துறை. சாலைத்துறையில் ஆரம்பித்து பல துறைகள் நிலத்திற்கான ஆவணங்களைப் பராமரித்து வருகின்றன. அவைகளை ஒருங்கிணைப்பது மிகவும் சவால் நிறைந்த பணியாகும். எனக்குத் தெரிந்து அது அவ்வளவு எளிதானது அல்ல. தியாகமும், அர்ப்பணிப்பும், நிலத்தின் அத்தனை சிண்டு சிடுக்களைத்  தெரிந்த  ஒருவரால் தான் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அல்காரிதமை உருவாக்க முடியும். ஆமை போல நகரும் அரசின் ரெவின்யூ பிரிவில் அதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? ஒரு மனிதன் இப்படி காசுக்காக செய்யத் துணிவாரா? என்று இப்பதிவைப் படிக்கும் போது உங்களுக்கு கேட்க தோன்றும். அந்தளவுக்கு கொடு மதியாளர்கள் சூழ் உலகு இது.

சமீபத்தில் வெளிநாடு வாழ் நண்பர் ஒருவரின் வாழ் நாள் உழைப்பை  போட்டு வாங்கிய சொத்தின் ஆக்கிரமிப்பு கண்டு கொதித்த எனக்கு கிடைத்தது நல்ல வசவு. கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய கட்டம். நண்பரின் நலம் மட்டுமே முக்கியமாக தெரிந்தது. வாளா இருக்க வேண்டிய சூழல். நண்பரோ  அமைதி விரும்பி.  அவர் சரி எனச் சொல்லி இருந்தால் ஆக்கிரமிப்பாளனின் மூளையைச் சூடாக்கி வெளியில் கசிய வைத்திருப்பேன். அந்த அயோக்கியன் பெற்ற இரு புதல்வர்கள், என்ன ஒரு வினோதம் தெரியுமா? அவர்களும் அப்படியே....! இவர்களை நம்பி இரு பெண்கள். அவர்களுக்கு இனி வாரிசுகள்  வரும்... ! கருவில் அழிக்க வேண்டிய அற்பர்கள் பூமியில் மனிதர்களாய் நடமாடுகிறார்கள். இன்னொருவனின் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்கிறோம் என்பது  அவர்களுக்கு சரியானது. அது அவர்களின் தர்மம். அது அவர்களுக்கு நியாயம். 

இதோ இன்னும் ஒரு சம்பவம் உங்களுக்காக....!

கோவை, வேடப்பட்டியில் 1987ல் ஒரு வீட்டு மனை அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அனுமதி பெற்றவர் சுமார் 19 வீட்டு மனைகளை பணம் வாங்கிக் கொண்டு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருக்கிறார். அட்டர்னி வாங்கியவர் அரசு அனுமதி கொடுத்த மனைப்பிரிவை தனது வசதிக்காக மாற்றி புது பிளானை உருவாக்கி, பழைய அனுமதி எண்ணை வரைபடத்தில் போட்டு, ஊராட்சி மன்ற தீர்மானத்தின் படி விற்கிறேன் எனச் சொல்லி விற்று விட்டார்.

இரண்டு மூன்று கிரையங்கள் ஆகி விட்டன. கிரையம் வாங்கியவர்களில் பலர் மீண்டும் தற்போதைய மனை வரன்முறைப்படி பணம் கட்டி வரன்முறை பெற்றிருக்கின்றார்கள். யாரோ ஒருவர் இது பற்றி வழக்குப் போட பத்திரப்பதிவாளர் அந்த கிராமத்தின், அந்தக் குறிப்பிட்ட சர்வே நம்பர் நிலங்களின் கிரையங்களை நிறுத்தி விட்டார்.

பவர் எழுதிக் கொடுத்த உரிமையாளர், பவர் எழுதி வாங்கியவர் பணம் தரவில்லை, ஆகவே எல்லா பத்திரங்களையும் ரத்துச் செய்கிறேன் என்று சொல்லி கிளம்பி இருக்கிறார். அதுமட்டுமின்றி செண்டுக்கு ஒரு லட்சம் தாருங்கள் என்று தற்போதைய மனையை தன் பெயரில் வைத்திருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவராலும் எழுதிக் கொடுக்க முடியாது. இடியாப்பச் சிக்கலில் இருக்கிறது பிரச்சினை. இதை எப்படி தீர்ப்பது? தீர்வு இருக்கிறதா? 

இல்லாமல் இருக்குமா? காலமும், பொருளும் செலவாகும். மன அமைதி போகும். உளைச்சல் அதிகமாகும். உழைத்த காசை இப்படித் திருடுகின்றார்களே என ஆற்றாமை உண்டாகும். ஆனால் சரி செய்யலாம். சரி செய்து ஆக வேண்டும். வேறு வழி????

ஆகவே நண்பர்களே... ! உங்களுக்குச் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான். கவனமாய் இருங்கள். 

வெளி நாடுகளில் வசித்துக் கொண்டிருப்போர் கோவையில் சொத்துக்கள் வைத்திருந்தால், சொத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வரி வகையாறாக்கள், வாடகை வசூல் செய்ய அணுகலாம். கலிகாலம் இது. ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்....!

Tuesday, September 24, 2019

நிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்

என்னிடம் ஒருவர் ஒரு சிறிய சைட் ஒன்றிற்காக லீகல் ஒப்பீனியன் கேட்டிருந்தார். தேவைப்படும் ஆவணங்களை குறிப்பிட்டு, அவரிடம் இந்த ஆவணங்களைத் தருமாறு கேட்டேன்.

“சார், இதெல்லாம் எதுக்கு சார்? நீங்கள் இதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள்” என அவரின் வசதிக்காக என்னை வேலை செய்யச் சொன்னார். அதற்கு அடியேன் சரிப்பட்டு வர மாட்டேன் என்பதால், அவரிடம் ஆவணங்களைத் திருப்பிக் கொடுத்து, “உங்கள் விருப்பப்படி, என்னால் வேலை செய்ய இயலாது,  ஆகவே மன்னித்து விடுங்கள்” என்றேன்.

அவருக்கு பிபி அதாவது பிளட் பிரஷ்ஷர் உச்சத்தில் ஏறி விட்டது.

”அப்படி என்ன நீங்கள் லீகல் ஒப்பீனியன் பார்க்கின்றீர்கள்? வில்லங்கம் போடுவீர்கள், 1900லிருந்து ஆர்.எஸ்.ஆர் எடுத்துப் பார்ப்பீர்கள், ஒவ்வொரு பத்திரமாக டேலி பண்ணுவீர்கள், சரியாக இருந்தால் ஓகேன்னு சொல்வீர்கள், இதைத் தவிர வேறு என்ன புதிதாக லீகல் பார்க்கப் போகின்றீர்கள். என் வக்கீல் நண்பர்கள் இதைத்தான் செய்கின்றார்கள்” என்று கோபத்துடன் பேச ஆரம்பித்தார்.

சரி, இது வேற ஆள், இவருக்குப் புரிகின்ற மாதிரி சொல்லி ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டு, அவரை உட்காரச் சொன்னேன்.

மெதுவாக ஆரம்பித்தேன்.

”ஏரியல் வியூப்படி அரசு சாலைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ அல்லது அரசின் நிலங்களுக்கோ கையகப்படுத்தும் நிலையில் உள்ள நிலங்களின் அருகில் உங்களது நிலம் வருகிறதா என முதல் லீகல் ஆரம்பிப்பேன்” என்றேன்.

”என்ன? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது, இதையெல்லாம் ஏன் பார்க்கின்றீர்கள்?” என அடுத்த கேள்வி.

”இந்த நிலத்தை ஏன் வாங்குகின்றீர்கள்? வீடு கட்டணும் அல்லவா? அவ்வாறு வீடு கட்ட வேண்டுமெனில், உமது நிலம் இந்த விதிகளின் படி பாதிக்கப்படாமல் இருந்தால் தான் அனுமதி கிடைக்கும் என அரசு விதி இருக்கிறது” என்றேன்.

சட்டென்று உட்கார்ந்து விட்டார்.

”கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றீர்கள். ஒரு நிலம் வாங்குவதற்கு முன்பு ஏன் வாங்குகிறோம், என்ன பயன்பாட்டுக்கு வாங்குகிறோம் என முடிவெடுப்பீர்கள். தமிழக அரசும், மத்திய அரசும் குறிப்பிட்டிருக்கும் பல விதிகளின் படி நிலம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. சொத்தின் உரிமையை மட்டும் சரி பார்த்தல், லீகல் ஒப்பீனியன் ஆகாது. அரசு விதிகளுக்கு உட்படாமல் அதாவது பாதிக்கப்படாமல் அந்த நிலம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும் எனது வேலை” என்று விவரித்தேன்.

அமைதியானார் அவர்.

இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் எனத் தொடர்ந்தேன்.

“நீதிமன்றத்தில் வாதியால் சிவில் வழக்கொன்று தொடுக்கப்படுகிறது. பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கில் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடும். பிரதிவாதி என்பவருக்கு இன்னொரு பெயர் எதிரி. பிரதிவாதிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர் தனக்காக வாதாட வக்கீல் வைக்க வேண்டும். என்ன வழக்கு எனத் தெரிந்து அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்து, தன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என சட்டத்துக்கு உட்பட்டு வக்கீல் மூலம் வாதாட வேண்டும். ஆவண சாட்சியங்களை அளித்தல் வேண்டும். நீதிபதி வாதி, பிரதிவாதிகளின் வக்கீல்கள் மூலம் பெறப்படும் ஆவணங்கள், சட்ட மேற்கோள்கள், முன் தீர்ப்புகள், வாதி/பிரதிவாதிகளின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் இவற்றை எல்லாம் ஆராய்ந்து சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பு அளிப்பார். இது நடைமுறை.”

”ஆனால் ஒரு சில அறிவாளி வக்கீல்கள் என்ன செய்வார்கள் என்றால், பிரதிவாதிக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதத்தை ஆள் செட்டப் செய்து வாங்கிக் கொள்வார்கள்.  பிரதிவாதிக்கு தன் சொத்தின் மீது வழக்கு இருப்பதே தெரியாமல் போய் விடும். கோர்ட் மூலம் அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதத்தையும் பிரதிவாதிக்கு கிடைக்க விடாமல் செய்வார்கள். இன்னும் ஒரு சிலர் பிரதிவாதியின் முகவரியை தவறாக கொடுத்து விடுவார்கள்.”

”எந்த தபால்காரர் ஒழுங்காக தபாலைக் கொடுக்கிறார் இந்தக் காலத்தில். எனக்கு வர வேண்டிய புத்தகங்களைக் கூட, அவர் வசதிக்குத்தான் கொண்டு வந்து தருகின்றார். அந்த இலட்சணத்தில் தபால் அலுவலகம் இயங்குகிறது.”

”இப்படி பிரதிவாதியால் ஆஜராகாமல் இருக்கும் வழக்குகள் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு என ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். இந்த வகையில் வழங்கப்படும் எக்ஸ் பார்ட்டி தீர்ப்புகளை மீண்டும் அந்த பிரதிவாதி வழக்காக மாற்றலாம். அதற்கு இத்தனை நாட்கள் என கோர்ட் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்புகளின் படி உரிமை மாற்றம் செய்யப்படும் சொத்துக்களை வாங்கலாமா?” என்று அவரிடம் கேட்டேன்.

அயர்ந்து போய் உட்கார்ந்து விட்டார்.

”இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கின்றீர்கள்” என்று வினவினார்.

”நான் என் தொழிலை நேசிக்கிறேன்”

அவர் ஒன்றும் சொல்லவில்லை, நீங்கள் கேட்ட ஆவணங்களையும், உங்களது கட்டணத்தையும் இரண்டொரு நாளில் கொண்டு வந்து தருகிறேன் என்றுச் சொல்லி விட்டுச் சென்றார்.

அந்த இடத்திற்கான லீகல் பார்த்து, டிராப்ட் எழுதி, கிரையம் செய்து கொடுத்தேன். அதன் பிறகு அவர் ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. உண்மை தெரியாமல் இருப்பதன் விளைவு அவரின் கோபம், அதனால் அவரிடம் தப்பில்லை என்று அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டபோது, அவரின் கோபத்தை நியாயப்படுத்தினேன். கண்கள் கலங்கி விட்டது அவருக்கு. ஆனால் அதுதானே உண்மை?

ஒரு காரியம் செய்யப் போகும் முன்பு அதற்கான திட்டமிடல் அவசியம். ஒவ்வொரு துறைக்கான ஆவணங்கள் அனைத்தும் தேடித் தேடி கண்டுபிடித்து, வாங்கி வைத்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள நிலங்களில் 90 சதவீதம் விபரம் என்னிடம் இருக்கிறது. 10 வருட காலமாய் உழைத்ததன் பலன் அது. லீகல் பார்க்க என்னெவெல்லாம் தேவை என்பதையும், சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகளின் தீர்ப்புகளையும், தமிழக அரசு, இந்திய அரசுகள் வழங்கும் குறிப்பாணைகள், கெஜட்டுகள் எல்லாவற்றையும் படிக்கிறேன், குறிப்புகள் எடுக்கிறேன், தேவையானவற்றை சேமித்து வைத்துக் கொள்கிறேன். அதன் மூலம் ஒவ்வொரு நிலத்தின் தன்மை, அனுமதிக்கான விதிகளுக்கு உட்பட்டிருக்கின்றனவா என்றெல்லாம் ஆராய முடிகிறது. ஆனாலும் எனக்கே அவ்வப்போது அல்வா கொடுக்கும் ஒரு சில நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

ஒரு தனி மனிதனுக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. ஆனால் அதை என்னளவில் சாத்தியப்படுத்தினேன். ஒரே ஒரு நிலமோ வீடோ வாங்குபவர்களுக்கு இதெல்லாம் தேவை இல்லை எனலாம். இது கலிகாலம் அல்லவா? யார் என்ன செய்து வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும்? எல்லாம் சரியாக இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பதே பெரிய வேலை.

உங்களிடம் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். தமிழக அரசு அனுமதி பெறாத மனை இடங்களை அனுமதி பெற வரையறைகளை செய்து பணம் கட்டச் சொல்கிறது அல்லவா? இதே போல கோவையில் ஒரு வரையறை நடந்து, சுப்ரீம் கோர்ட்டில் அந்த வரையறைச் செல்லாது என தீர்ப்பு பெறப்பட்டது. அப்படி வசூலிக்கப்பட்ட சுமார் 400 கோடி ரூபாய் சும்மா கிடக்கிறது. பணம் கட்டியவர்களுக்கு அந்தப் பணம் இதுவரை திரும்பக் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் வீடுகள், இடங்கள் கிரையங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவரின் தேவை அல்லது ஆசைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

ஒரு விதியை மீற ஒரு வரையறை என்பதெல்லாம் சட்ட விரோதமானது. அரசு இந்த விஷயத்தில் கொள்கை முடிவெல்லாம் எடுக்க முடியாது. சட்ட விதிகளை மேம்படுத்தலாம், கொஞ்சம் எளிதாக்கலாம். ஆனால் அதை நீக்க முடியாது.

காஷ்மீர் 370 அப்படியே. சரியான வக்கீலிடம் இந்த வழக்குச் சென்றால், பிஜேபி அரசின் மூக்கு உடைக்கப்படும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பு அப்படி. பெரும்பான்மை பெற்றிருப்பதால் ஒரு காரியத்தைச் செய்து விடலாம் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை அடிமுட்டாள்தனம். வாழ்நாள் வரையிலும் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருக்க முடியாது. வரும் காலத்தில் வரக்கூடியவர் வெச்சு செய்வார்கள்.

ராஜீவ் காந்தி காலத்தில் உள்துறை அமைச்சகத்தில் இருந்தவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார். அன்றைக்கே ஆரம்பித்தார் அவர் தன் திருவிளையாடல்களை என என்னிடம் ஒரு முக்கியமான நபர் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

விதி ஆட விட்டு, என்றைக்கு முடியாத நிலையில் இருக்கின்றார்களோ, அன்றைக்குப் பார்த்து, கயிற்றை இருக்கி முடிச்சுப் போட்டு விட்டது. இனி விதி போட்ட முடிச்சை தில்லை வாழ் நாயகனால் கூட அவிழ்க்க முடியாது. கொஞ்சமாவது மக்கள் பணத்தை விழுங்குகிறோம் என்ற நினைப்பு இருந்திருக்க வேண்டும். எவருக்கு இருக்கிறது இங்கே?

நாம் அனைவரும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு ஆளைச் சந்தித்திருப்போம். அவர் பெயர் பொதுவாக துரோகி என அழைக்கப்படும். அவரை நம் வாழ் நாள் வரையிலும் மறக்க முடியுமா? நெஞ்சில் குத்தாமல், முதுகில் குத்தியிருப்பார் அந்த துரோகி. அப்படியானவர்களை நாம் முதலில் மன்னிப்போமா? ஆனால் இப்போது என்ன செய்கிறோம்? என்ன செய்ய முடியும்?

ஒழுங்கீனம் இப்போது ஒரு தகுதியாக மாறிப் போனது. எல்லாம் மனித வாழ்க்கையில் சாத்தியம் தான். ஆனால் எது ஒன்று காலை, மாலை, பிறப்பு, இறப்பு என மனிதனையும், அவன் சூழலையும் இயக்குகிறதோ அதன் வாசலில் நிற்கும் போது ஒவ்வொருவரின் கணக்கும் சரி செய்யப்படுகிறது என்பது நிதர்சனம்.

ஆடும் வரை ஆடி விடுவோம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது அறிவிலித்தனம். எதுவும் முடியாமல் ஓய்வாக இருக்கும் போது, கண் முன்னால் ஒவ்வொன்றும் அழிக்கப்படும் அவலத்தைக் கண்டு துடித்து துடித்துச் செத்துப் போக விரும்புவர்கள் ஆடுவார்கள். அது அவரவர் வசதிக்கு உட்பட்டது.

வாழ்க வளமுடன்...!



அடியேன் செய்யும் வேலைகளில் ஒரு சில உங்களுக்காக. தேவைப்படுபவர்கள் அணுகலாம். 

Tuesday, September 10, 2019

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா?

இந்த மாத பிசினஸ் டுடேயை வாசித்த போது, நம் பாரதத்தின் மொத்தக் கடன் தொகை (மாநிலத்தையும் சேர்த்து) ஒரு லட்சத்து முப்பத்து ஓராயிரம் லட்சம் கோடி கடன் என்ற செய்தியைப் படித்தேன். 130 கோடி மக்கள் தொகை கொண்ட பாரதத்தின் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் கோடி கடன் இருக்கிறது. இத்தனைக் கடனும் ஏன் உண்டானது என்று பார்த்தால் தெளிவற்ற நிர்வாகமும், ஆட்சி முறையும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. 




என்ன நடந்தது? ஏன் இத்தனை கடன் என்பதற்கு ஒரே பதில் ஊழல். ஆம், இத்தனை தொகையும் ஊழலால் இந்தியாவிற்கு ஏற்பட்ட கடன். மக்களுக்கு இந்த சித்து விளையாட்டு புரிவதில்லை. புரியும் அளவிற்கு மீடியாக்கள் விடுவதில்லை. எவன் ஒருவன் டிவியும், செய்தி தாளும் படித்து, அதன் உண்மை என்னவென்று ஆராய்கிறானோ அவன் தான் புத்திசாலி. மீடியாக்களில் வரும் செய்திகள் உண்மையென நம்பினவன் முட்டாள். அந்தக் காலத்தில் இருந்து இதுதான் நடந்து வருகிறது. அவ்வப்போது அய்யோ குய்யோ என ஜன நாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது என்று கூக்குரலிடுவார்கள் பத்திரிக்கையாளர்கள். அதெல்லாம் சும்மா....!

நீதியின் பெயரால் உயர் மட்ட அளவில் நடக்கும் அக்கிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. நீதிபதிபதிகளை விமர்சிக்க கூடாது என்றும், அது தேச துரோகம் என்றும், அவமதிப்பு வழக்கு என்றும் மக்களைப் பயமுறுத்துவார்கள். பேட்டி கொடுத்த நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மீது எந்தச் சட்டத்தில் இந்த நீதித்துறை நடவடிக்கை எடுத்தது என்று எவராவது யோசித்திருக்கின்றீர்களா? யோசித்திருக்கமாட்டீர்கள். ஏனென்றால் உங்களின் சிந்தனையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்ற பயம் திணிக்கப்பட்டிருக்கிறது.

சரி விடுங்கள் எரிச்சல் தான் மேலோங்கும். இங்கு எவனும் நல்லவனில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெளிவு பெற வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவின் தன்னாட்சி பெற்ற உயர் நிர்வாகத்துறையின், உயர் அதிகாரி ஒருவரால் பாராட்டப்பட்டேன். அவர் எனது பிளாக்கைப் படிக்கிறார் என்கிற சிறு நேரத்து மகிழ்ச்சி உண்டானது.

“அய்யா, உங்களுக்கு எனது அனேக நன்றிகள்”

ஏதோ ஒரு வகையில் சிறு உதவியைச் செய்கிறேன் இந்த உலகிற்கு என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மூடுமந்திரம் போடப்பட்டிருக்கும் நம்மைச் சுற்றிய மாயையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி விட முயல்கிறேன். பட்டவர்த்தமாக எழுதினால் பலரின் மனசாட்சி விழித்துக் கொள்ளும். ஆகையால் புரிந்தும் புரியாதவாறு எழுதுகிறேன். புரிந்தவர்கள் தெளிவாகுங்கள். புரியாதவர்கள் இன்னும் ஆழப் படியுங்கள்.

சரி, ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும் ஒரு லட்சம் கோடி கடனை கட்ட வழி இருக்கிறதா என்று அறிந்து கொள்ள இங்கு தொடர்கின்றீர்கள். தொடருங்கள்.

எனது மனையிவியின் தூரத்து உறவினர் ஒருவர், தமிழகத்தின் பிரபலமான கட்சியில் பதவி வகித்தவரும், எம்.பியும் ஆன ஒருவருக்கு கடன் அதுவும் பெரிய அளவில் கடன் கொடுத்தார். உறவினர் தனது அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து வட்டிக்கு வாங்கி, கொஞ்சமே கொஞ்சம் வட்டி உயர்த்தி அந்த அரசியல்வாதிக்கு கொடுத்தார். கொஞ்ச நாட்களில் அந்த அரசியல்வாதியால் கடனையும், வட்டியையும் கொடுக்க முடியவில்லை. உறவினர் தற்கொலை செய்து கொண்டார். வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களின் கதி?

வங்கியும் இதே போலத்தான். வட்டிக்கு வாங்கியவர்கள் ஒழுங்காக கடனைக் கட்டவில்லை என்றால் என்ன ஆகும்? டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு எங்கிருந்து வட்டியைக் கொடுக்கும்? திவால் அல்ல வங்கியும் தற்கொலை செய்து கொள்ளும். அப்படித்தான் எனது பிரியமான விஜயா வங்கியும் தற்கொலை செய்து கொண்டது.

கலைஞர், ஒவ்வொரு வீட்டிற்கும் டிவி கொடுத்தார். அந்த டிவியால் சன் டிவி பயன் அடைந்தது. டிவியை டெண்டர் விட்டு வாங்கினார் அல்லவா? அந்த டிவியால் பொருளாதாரம் உயர்ந்ததா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மக்களின் பொருள் இன்னொருவரின் பாக்கெட்டில் சென்று சேர்ந்தது. டிவி வாங்கிய வகையில் பர்செண்டேஜ், சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கும். இதனால் சமூகத்திற்கு என்ன பயன்? ஒரு எழவும் இல்லை. மிக்சி, கிரைண்டரின் கதையும் இதேதான். இலவச பைக்கிற்கும் இதே கதைதான்.

எனது இனிய நண்பர்களே, கடனைக் கட்ட வழி என்னவென்று உங்களுக்கு தெளிவாகி விட்டதா? தெளிவாகவில்லை எனில் நானொன்றும் செய்ய முடியாது.

இதுவரை பிஜேபி அரசு பொருளாதாரத்தின் ஆணி வேர் எதுவென்று கண்டுபிடிக்கவில்லை. அது முதலில் உயர் ஜாதிய சிந்தனையிலிருந்தும், மதக் கோட்பாடுகளிலிருந்தும் வெளி வர வேண்டும். தற்போதையைப் பொருளாதாரம், தத்துவங்கள் எதுவும் நாட்டின் வளர்ச்சிக்கானதல்ல என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகின்றதோ தெரியவில்லை. ஒரு சாதாரண விவசாயிக்குத் தெரிந்த பொருளாதாரக் கோட்பாடு, பொருளாதார மேதைகளுக்குத் தெரியவில்லை என்கிற விடயம், நாட்டை வழி நடத்துபவர்களின் அறிவின் மீது சந்தேகத்தினை உண்டாக்குகிறது.

கிராமப்புறங்களில் ஒருவன் கடனாளியாகி விட்டால், அப்பன் சொத்து, தாத்தா சொத்து எங்கிருக்கிறது என்று தேடித் திரிந்து கண்டுபிடிப்பான். அதனால் கடன் தீருமா என்றால் தீராது. அதைப் போலத்தான் ஊழலைக் கண்டுபிடிக்கிறேன், பதுக்கிய பணத்தைக் கொண்டு வருகிறேன் என அமலாக்கத்துறையினரையும், சிபிஐயும் வைத்து பழம் சொத்தினைத் தேடித் திரிகிறது பிஜேபி அரசு. செமக் காமடி.

பொருளாதார மேதைகளே, 131 லட்சம் கோடியையும் வரக்கூடிய பத்தாண்டுகளில் கட்டி விடலாம். நிச்சயம் முடியும். கடனற்ற பாரதத்தினைக் கட்டமைத்து, மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கலாம். கொஞ்சம் உங்களின் பொருளாதார தத்துவங்களை ஆராயுங்கள். எங்கே நீங்கள் கோட்டை விட்டீர்கள் என்று.


Saturday, August 24, 2019

நிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது

”டாக்குமெண்ட்  தவறு என்றால்  சப் ரெஜிஸ்டர் ஏன் ஆவணங்களைப் பதிவு செய்து கொடுக்கணும், அது தவறில்லையா?” என்று கேட்பார்கள். 

“பதிவாளர் என்பவர் லீகல் பார்ப்பவர் அல்ல, நீங்கள் கொடுக்கும் ஆவணங்களை, பதிவுத்துறை விதிகளின்படி பதிவு செய்து கொடுப்பது மட்டுமே அவரின் வேலை,  வில்லங்கம் பார்ப்பது அவரின் வேலை இல்லை” என்று சொல்வேன். 

”என்ன இருந்தாலும் அரசாங்கத்தின் தவறுதானே, அது?” என்று எதிர்கேள்வி கேட்பார்கள்.

அரசின் ஆணை சட்டத்துக்கு உட்படவில்லை எனில் கோர்ட் அந்த அரசாணையை ரத்து செய்து விடும் செய்திகளை நாம் தினசரிகளில் படித்து இருப்போம்.

கோவையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.தண்டபாணி அவர்கள், 18.07.2019ம் தேதியன்று, 34395/2007 அப்பீல் மனு மீது தமிழக அரசு வழங்கிய அரசாணை எண்.(பி) 245/21.06.2005  உத்திரவினை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

வெகு சுவாரசியமான சொத்து வழக்கு இது. கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பயனியர் மில்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணன் மில்ஸ் தொழிலாளர்களுக்காக சவுரிபாளையம் கிராமத்தில் க.ச.எண்.275/1,2 மற்றும் 276/3,4 ஆகிய காலைகளில் சுமார் 7.96 ஏக்கர் பூமியை, 1955ம் தேதியன்று சொசைட்டியாக பதிவு பெற்ற Peelamedu Industrial Worker's Co-operative House Construction Society Ltd சொசைட்டியின் பெயரில் கிரையம் பெற்று, மேற்படி நிலத்தினை வீட்டுமனையாகப் பிரிக்க விண்ணப்பம் செய்து, அது 1968ம் ஆண்டு டிடிபி 35.1968ம் நெம்பராக வீட்டுமனைகளாக அனுமதி பெற்றது. அந்த மனைகளில் மேற்கண்ட் மில்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த மனையில் டிடிசிபி அலுவலகத்தால் வழங்கப்பட்ட வீட்டுமனை வரைபடத்தில் வீட்டுமனைகளைத் தவிர சாலைகள், பொது இடங்கள், பூங்காக்கள், மின் கோபுர பாதையை ஒட்டிய இடங்கள் ஆகியவை கோயமுத்தூர்  மாநகராட்சிக்கு பொது இடமாக ஒப்படைக்கப் பட வேண்டும் என்ற உத்திரவும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த சொசைட்டியினர் பொது உபயோக இடங்களை மனைகளாகப் பிரித்து, அதையும் விற்பனை செய்து விட்டு, தமிழக அரசுக்கு மனுச் செய்து, பொது இடத்தினை மனைகளாக மாற்ற அனுமதி பெற்று விற்பனை செய்திருகின்றார்கள்.  தமிழக அரசும் யோசிக்காமல் அரசாணையை வெளியிட்டுக்கிறது. இந்த அரசாணை 2005ம் ஆண்டு வெளியானது. 

இந்த அரசாணைச் செல்லாது எனவும், அவ்வாறு வீட்டு மனையாக மாற்றம் செய்யப்பட்டு, பதிவு செய்த பத்திரங்கள் எதுவும் செல்லாது எனவும் கோர்ட் உத்தரவு வழங்கி இருக்கிறது. வீட்டு மனை வாங்கியவர்களுக்கு பணத்தினை கொடுக்கும்படி உத்தரவிட்டிக்கிறது. நீதிபதி அவர்கள் ஏன் அரசாணை செல்லாது என்பதற்கு பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டி விளக்கி இருக்கிறார்.

பொது இடத்தில் மனையாக இருந்ததை வீட்டுமனை என அங்கீகரித்த ஒரு வழக்கையும், அதன் தீர்ப்பினை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கோவை, காரமடைப் பகுதியில் அன் அப்ரூவ்ட் சைட்டில் மனை வாங்கிய ஒருவர் என்னிடம், அந்த மனையில் வீடு கட்ட அப்ரூவல் பெற்றுத் தரும்படி வந்தார். எங்கெங்கோ சென்று பார்த்து விட்டு, முடியாத பட்சத்தில் தான் என்னிடம் வருவார்கள். 

வீடு கட்ட -- கவனிக்க -- வீடு கட்ட பஞ்சாயத்து போர்டில் குறிப்பிட்ட சதுரடி அளவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாம். ஆனால் காரமடை பஞ்சாயத்தார் மறுக்க காரணம் என்னவோ என்று ஆராய்ந்தால், அந்த மனையினை விற்றவர் செய்த கில்லாடித்தனம் தெரிய வந்தது. அவர் முதலில் பேஸ்1 என்று மனையினை விற்பனை செய்திருக்கிறார். அந்த பேஸ் 1ல் பார்க் இடம் இதுவென வரைபடத்தில் காட்டப்பட்டிருக்கிறது. அவர் பேஸ் 2ல்,  பேஸ் 1ல் பார்க்குக்கு என விடப்பட்ட இடத்தையும் சேர்த்து மனையாக்கி விற்பனை செய்து விட்டு, வேறு இடத்தில் பார்க்குக்கு என இடம் விட்டிருக்கிறார்.

பேஸ்2ல் வீட்டு மனை, முன்பு பேஸ்1ல் பார்க்காக இருந்தது. இதில் என்ன விசேசம் என்றால், அந்த பார்க் இடம் பஞ்சாயத்து போர்டுக்கு தானம் கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த வீட்டுமனை அன் அப்ரூவ்ட் மனை. 

சென்னையில் வழக்குப் போட்டு, வீட்டு மனை அனுமதி பெற தீர்ப்புப் பெற்று, அதன்படி வீடு கட்டினார் அவர். எனக்கு அலைச்சலோ அலைச்சல் ஆனது. வக்கீலுக்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்து, அவருக்கு விஷயத்தை விளங்க வைத்து, வழக்குப் போட்டு தீர்ப்பு பெற இரண்டாண்டுகள் ஆயின. இந்த வழக்கில் ஏன் பார்க்கில் அமைந்த இடத்திற்கு மனை அப்ரூவல் கிடைத்தது எனில், அரசு அனுமதி பெற்றிருந்தால் நிச்சயம் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்திருக்கும். அரசு அனுமதி பெறாத மனை என்கிறபடியால், மனை புரோமோட்டர் அந்த இடத்தினை அரசுக்கு எழுதிக் கொடுக்காத காரணத்தால், கோர்ட் அவ்வாறு தீர்ப்பு வழங்கியது.

இரண்டும் ஒரே விதமான தீர்ப்புதான். ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் வேறு என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த நீண்ட பதிவு.

டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாம் என்ற எண்ணம் இருப்பின் அதை உடனே கலைத்து விடுங்கள். கோவை சரவணம்பட்டியில் இருக்கும் ஒரு பிரபலமான வீட்டு மனை அமைந்துள்ள இடத்தில், மனைகளின் அளவும், மனைகளின் எண்ணும், பொது உபயோகத்தின் இடங்கள் வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கின்றார்கள். கோர்ட்டுக்கு வழக்குச் சென்றால் மனை அனுமதி கோவிந்தா, கோவிந்தா தான். அதாவது ரத்தாகி விடும்.

கோவையில் இன்னொரு மிகப் பிரபலமான இடத்தில் வீட்டுமனை விற்பனை வெகு ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. பெரிய, பெரிய பணக்காரர்கள், கம்பெனி பிராப்பர்ட்டி என ஆளுக்கு நான்கைந்து சைட்டுகளை கிரையம் செய்து வருகிறார்கள். செம காஸ்ட்லி மனைகள் அவைகள். தீர்க்கவே முடியாத பிரச்சினை ஒன்று அந்த இடத்தில் உள்ளது. என்னிடம் அந்த மனைக்காக லீகல் பெற வந்தவரிடம் வேண்டாமென்றுச் சொன்னேன். அவர் விலகி விட்டார். 

கீழே தினமலர் செய்தியும், கோர்ட் தீர்ப்பின் முதல் பக்கத்தையும் இணைத்திருக்கிறேன். 

வாழ்க வளமுடன்....!

நீதிமன்ற தீர்ப்பின் முதல் பக்கம்
தினமலரில் வெளியான செய்தி