குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, August 21, 2019

நிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்

மனிதன் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காலம் எல்லாம் போயே போய் விட்டது. வார்த்தை சொல்லி விட்டேன் - ஆண்மைத் தனம் இப்போது எங்கும் காணப்படுவதில்லை.

ஆறு மணி நேரம் வரிசையில் நின்று, அத்திவரதரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பும் முன்பு வீட்டுக்குள் பணம் வந்து விட வேண்டுமென நினைக்கிறார்கள். திருப்பதி கோவிலுக்குள் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு ஆலந்துறைப் பக்கம் பாட்டி ஒருத்தி இட்லி விற்கிறார். கூட்டம் இன்றும் குறையவில்லை. ஒரு பக்கம் இரண்டு இட்லிக்கு 250 ரூபாய் கொடுத்து சாப்பிடும் கூட்டம். பாதி விள்ளலில் எழுந்து நாசூக்காய் கை துடைத்துக் கொள்ளும் அக்கிரமக்காரர்கள் அலட்டலாய் திரிகின்றார்கள்.

இரண்டொரு நாட்களுக்கு முன்பு வயதான ஒருவர் என்னைச் சந்தித்தார். ’எனக்கொரு பிரச்சினை, சரி செய்து தர இயலுமா?’ என்று கேட்டார். 

”பிரச்சினை என்னவென்று சொல்லுங்கள், இயலுமா? எனச் சொல்கிறேன்”

நண்பர்களே, கவனக்குறைவு என்று சொல்ல மாட்டேன். ஏமாற்ற வேண்டும் என நினைத்து விட்டால் எப்படியும் ஏமாற்றி விடலாம் என்றுதான் திட்டமிடுகின்றார்கள். அரசியல்வாதிகளும் சரி, சட்டக்காவலர்களும் சரி எவருக்கும் கொஞ்சம் கூட மனச்சாட்சி என்பதே கிடையாது. எவன் செத்தால் எனக்கென்ன, என் வீட்டு உலை கொதிக்கிறதா? என நினைக்கிறார்கள். அப்படி ஒரு அழிச்சாட்டியத்தைச் செய்திருக்கிறார் அந்த புரமோட்டர் ஒரு சில அயோக்கியர்களுடன் கூட்டு சேர்ந்து. ரத்தம் கொதிக்கிறது நினைத்து நினைத்து.

கோவையில் ஒரு பிரபலமான இடத்தில் டிடிசிபி அப்ரூவ்ட் சைட் விற்பனை ஆனது பல வருடங்களுக்கு முன்பு. பல அரசுத் தொடர்புடையவர்களுக்கு பல கட்ட அனுமதிகள் பெற்று அந்த வீட்டு மனையினை, மாதத்தவணை முறையில் வாங்கி இருக்கின்றார்கள். வீடும் கட்டி விட்டார்கள்.

டிடிசிபி அனுமதியை சென்னையில் பெற்று இருக்கிறார் அந்த புரமோட்டர். அந்த அனுமதியை பஞ்சாயத்தில் அப்ரூவ்ட் பெறும் போது மனை வரைபடத்தை மாற்றி அனுமதி பெற்று, வீட்டு மனைகளின் எண்கள் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கிறார். பொது இடத்திற்கு என ஒதுக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடத்தையும் வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்து விட்டார். எந்தப் பத்திரத்திலும் மனையின் அளவீடுகள் குறிப்பிடவில்லை. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?  இந்த இடத்தில் மனை வாங்கியவர்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை. சட்டம் தெரிந்தவர்கள், பெரிய மனிதர்கள். இனி என்ன, எவராவது கோர்ட்டுக்குச் சென்றால் மனை அனுமதி ரத்தாகிப் போகும். சரி செய்ய அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால், எனக்கு மிகவும் நெருங்கிய குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர்  அந்த இடத்தில் மனை வாங்க இருப்பதாகத் தெரிவித்து, பத்திரத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். 32 வகையான ஆவணங்கள் தேவையென லிஸ்ட் போட்டுக் கொடுத்தேன். ஆள் அவ்வளவுதான். கிரையம் பெற்று விட்டார். அவ்வளவு அவசரம் அவருக்கு. 

ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். வீடோ அல்லது மனையோ பிடித்து விட்டால், அவர்களே தங்களுக்குள் சமாதானம் செய்து கொள்வார்கள். எல்லோரும் வாங்கி இருக்கின்றார்கள், நாமும் வாங்கி விடலாம் என்று சமாதானமாகி விடுகின்றார்கள். பின்னர் அலையோ அலையென அலைந்து கொண்டிருப்பார்கள்.

இப்போது மனை அப்ரூவல் ரத்தாகுமா? இல்லையா? எனத் தெரியவில்லை. போராடிக் கொண்டிருக்கிறார்கள் வீட்டு மனை வாங்கியவர்களில் சிலர். புரமோட்டர் என்ன ஆனாரோ தெரியவில்லை. 

இரண்டு நாட்களுக்கு முன்புதான் யானை ராஜேந்திரன் அவர்களின் வழக்கின் மீது என்ஃபோர்ஜ்மெண்ட் தீர்ப்பு ஒன்றினை ஹைகோர்ட் வழங்கியது. முறைப்படி அனுமதி பெற்று கட்டப்படாத கட்டிடங்களை எவரின் அனுமதியும் இன்றி இடித்து தள்ளுங்கள் என்கிறது கோர்ட். மனைப்பிரிவும் அப்படி ஆனால் என்ன ஆகும்? 

அந்த புரமோட்டரின் ஆசையால், அக்கிரமத்தால் அந்த வீட்டு மனைகள் போலியாக பிளான் தயாரிக்கப்பட்டு, ஏமாளிகளுக்கு விற்று விட்டார். பாவம் அவர்கள் அலைகின்றார்கள். இன்னும் பட்டா வாங்க முடியவில்லை. மனைப்பிரிவினை ஒழுங்குப்படுத்தி சரி செய்ய வேண்டும். அதற்கான பணிகள் பலப்பல இருக்கின்றன. எப்படிச் செய்ய வேண்டுமெனச் சொல்லி அப்பெரியவரை அனுப்பி வைத்தேன்.

ஆகையால் நண்பர்களே, டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை வாங்கும் போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். என்னைப் போன்ற ஆலோசகர்களிடம் தகுந்த முறையில் ஆவணங்களை சரிபார்த்துக் கிரையம் பெறுங்கள்.

அப்பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் போனில் அழைத்தார்.

“தம்பி, ஒரு அபார்ட்மெண்ட் கிரையம் செய்ய வேண்டும், என்ன சார்ஜ் செய்கிறீர்கள்” என்றார்.

“முதலில், அபார்ட்மெண்ட் அனுமதி சரியாக இருக்கிறதா என ஆராய்ந்து விட்டுத்தான், பத்திரம் பதிவு செய்வேன், ஆகவே அனைத்து ஆவணங்களையும் கொண்டு வாருங்கள்” என்றேன்.

அவர் டென்சாகி விட்டார். ”பத்திரம் மட்டும் போட்டுத்தாங்க” என்றார்.

“முடியாது” என மறுத்து விட்டேன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், போனில், ”தம்பி, நீங்க பெரிய ஆளா வருவீங்க, வாழ்த்துகிறேன்” என்றார்.
* * *

Saturday, August 17, 2019

பிரதமர் நரேந்திரமோடியின் நம்பர் ஒன் விசிறி

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் நானும் சுவாமி ஆத்மானந்தாவும் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வியல் அனுபவங்கள், அவர் படித்த புத்தகங்களில் சிலாகிக்கும் இடங்கள் என என்னிடம் பகிர்ந்து கொள்வார். கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவரின் இளமை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அவரது தாய்மாமா கொடுத்த அப்துற் றஹீம் அவர்கள் எழுதிய ‘எண்ணமே வாழ்வு’ என்ற புத்தகத்தை இரவு முழுவதும் உட்கார்ந்து படித்தாராம். அன்றைக்கு முடிவு செய்தாராம், நானும் விவேகானந்தர் போல சன்னியாசம் ஏற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என. இப்போது அவர் இரண்டு கல்லூரிகளின் தாளாளர், எண்ணற்ற ஆதரற்றவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 86 வயது இளைஞராக, இன்னும் ஆற்றக்கூடிய பணிகள் இவைகள் என என்னிடம் பட்டியல் இட்டுக் கொண்டிருந்தார் சமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்ற போது. அவரின் மனவலிமைக்கு ஈடு இணை இல்லை.

வாழ்க்கையானது எல்லோருக்கும் சுகத்தை வழங்குவதில்லை. எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே தந்து கொண்டிருப்பதில்லை. அதன் தன்மை பூமியைப் போன்றது. இரவு, பகல் போல இன்பம் துன்பம் கலந்தது. அதைப் புரிந்து கொள்ள இயலாமல் துன்பம் தீர பல்வேறு வழிகளை நாடுவது மனித மனிதத்தின் இயலாமை எனும் மனம்.

பியருடன் நம் பாரதத்தின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ புரோகிராமைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண வாழ்க்கைச் சூழல், டீ விற்கும் நிலையில் பிறந்த அவர் ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதி. அவரின் இன்றைய நிலைக்கு காரணம் கடவுள், விதி என ஆன்மீகவாதிகள் சொல்வார்கள். 

கடவுளிடம் செல்லும் பக்தனுக்கு தெரியும், அவர் அவனுடன் பேச மாட்டான் என்பது. அவன் தன் மனதுக்குள் கடவுளுடன் பேசிக் கொள்வதாக நினைத்து, தன் தேவைக்கான எண்ணத்தின் வலிமையை கூட்டிக் கொள்கிறான். கடவுள் தன் வேண்டுகோளை நடத்தி வைப்பார் என்று நம்புகிறான். அவனின் அந்த நம்பிக்கையின் வலிமைதான் அவனது வேண்டுகோள் நிறைவேற காரணமாக இருக்கிறது. கடவுள் பக்தனுடன் பேசுவதாக இருந்தால், ஒருவர் கூட கோவிலுக்கோ, மசூதிக்கோ, சர்ச்சுக்கோ செல்லமாட்டார்கள். அவர் கடவுளே அல்ல என்றுச் சொல்வார்கள். 

ஜாதகத்தில் விதி என்று சொல்வார்கள். பிரபல திரைப்பட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் யூடியூப் பேட்டி ஒன்றினைப் பார்த்தேன். அவரின் இளவயதில் 'அஸ்ட்ராலஜி அண்ட் அதிர்ஷ்டா’ எனும் ஜோதிடப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததாகவும், அதில் யாரோ ஒருவர் தன் திருமணம் பற்றிக் கேட்ட கேள்விக்கு, இத்தனையாவது நாளில், உனது திருமணம் நடக்கும் என எழுதி இருந்ததாகவும், அச்சில் இருக்கிறதே, இவ்வளவு சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா? என்று நினைத்துக் கொண்டு, அந்த புத்தகத்தின் ஆசிரியரைப் பார்க்கச் சென்றதாகவும், அந்த பத்திரிக்கையின் ஆசிரியர், நீ நடிகனாகத்தான் வருவாய் என்று சொன்னதாகவும், அதன்படியே அவர் நடிகன் ஆனதாகவும், அதன் பிறகு அவரிடமே ஜோதிடம் கற்றுக் கொண்டதாகவும் சொல்லி இருந்தார். 

மூர்த்தி அவர்களுக்குப் போன் செய்தேன். அவர் தற்போது ஜோசியம் பார்ப்பது இல்லை எனவும், தன் பையன் வேறு எந்த வேலையும் செய்யகூடாது என்று சொல்லி இருப்பதாகவும் சொன்னார். நேரில் சந்திக்கலாமா எனக் கேட்டேன். சென்னை வரும் போது, வாருங்கள் சந்திக்கலாம் என்றுச் சொன்னார். அவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக போன் செய்யவில்லை. ஜோதிடத்தின் சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல். 

பாவம் சரவணபவன் அண்ணாச்சி. யாரோ ஒரு அயோக்கிய ஜோதிடனால் அவரின் வாழ்க்கையே போனது.  மிகத் துல்லியமான ஜோதிடம் சொல்ல இந்த உலகில் எவருமில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

கடவுளோ, விதியோ ஒருவனுக்கு உதவி செய்வதில்லை. அவன் தனக்குத்தானே உதவிக் கொள்ள, தன் மனத்தின் வலிமையை அதிகப்படுத்திக் கொள்ள ஜாதகமும், விதியும், கடவுளும் உதவுகின்றன. கடவுளால் கைவிடப்பட்டாலும் முயற்சி நிச்சயம் பலன் கொடுக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

பிரதமர் மோடி அவர்கள் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்பது சாதாரணமல்ல. அவருக்கு நான்கு மூளைகளும், ஐந்தாறு கைகளும், நான்கு தலைகளும் இல்லை. அவரும் நம்மைப் போல சாதாரண மனிதர் தான். பூமிபந்தின் ஒரே ஆனந்த பூமியான இந்தியாவின் முதல் மனிதராக இருக்கிறார். அவர் சார்ந்திருக்கும் கட்சி, கட்சியின் கொள்கைகள் பற்றி நான் இங்கு எழுத வரவில்லை. அதையும் தாண்டி இது வேறு. அவரின் இந்த உயரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய முயல்கிறேன். இது ஜோதிடமும் இல்லை.

பியரிடம், ’நான் ஒரு பணியை வெற்றிக்காகவே செய்கிறேன்’ என்றார் பிரதமர். ’தோல்வி அடைவதைப் பற்றி சிந்திப்பது இல்லை. வேறு வழிகளை ஆராய்வேன்’ என்கிறார்.

என்ன ஒரு வலிமை கொண்ட மனம் அவரது? பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் கொண்ட மனத்தின் வலிமைக்கு ஈடாக ஒன்றையும் சுட்டிக்காட்ட இயலாது. அவரின் அந்த மனம் - அவருக்கானவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. காலம் அவரின் வலிமையான மனத்தின் காலடியில் தன்னைச் சேர்த்து விட்டது. இந்தியாவே அவரின் அந்த வலிமையான எண்ணத்தின் பால் ஈர்க்கப்பட்டு உள்ளது. அவரின் அந்த எண்ணத்தின் வலிமையை நினைத்தால் எனக்கு சொல்லொண்ணா இன்பம் உண்டானது. எவ்வளவு வலிமை அவரிடம். தகர்த்தெறிய முடியா கோட்டையை விட அவரின் அந்த எண்ணம் வலிவானது அல்லவா நண்பர்களே!

நரேந்திரர் என்ற விவேகானந்தர், என்னிடம் 100 இளைஞர்களைக் கொடுங்கள், உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் அல்லவா?  அவரின் ஒவ்வொரு பேச்சும் எவ்வளவு வலிமையைக் கொடுப்பவை? படித்திருக்கின்றீர்களா நீங்கள் விவேகானந்தரின் பேச்சை? அவரின் புத்தகங்களை? கீழே உள்ள இந்த வாக்கியத்தின் வலிமைக்கு ஈடு எது? அதைப் போலத்தான் பிரதமரும் பியரிடம் சொன்னார். 

பிரதமர் அவ்வளவு எளிதில் இந்த நிலைக்கு வரவில்லை. ஆனாலும் வந்து விட்டார். அது எங்கணம்? அவரை மட்டும் ஏன் முதலமைச்சராக, பிரதமராக பிஜேபி தேர்ந்தெடுத்தது? கரை கண்ட பல அரசியல்வாதிகள் இருக்கும் அந்தக் கட்சியில், நரேந்திரருக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது ஏன்? அவரின் எண்ணத்தின் வலிமை, கட்சியின் தலைவர்களின் எண்ணங்களுக்குள் ஊடுறுவி அல்லவா, அவர் தான் வேண்டும் எனச் சொல்ல வைத்தது. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது நண்பர்களே...!

நாம் பெறும் ஒவ்வொன்றும் நாம் அதைப் பற்றி நினைக்காமலா கிடைத்திருக்கிறது? இல்லை அல்லவா?

மடக்கிய கை பெரிது அளவுள்ள அந்த இதயத்துக்குள் உதித்த எண்ணமல்லவா அவரை இந்த நிலைமைக்கு உயர்த்தியது. பாலைவனத்துச் சிங்கம் எனது மனம் கவர்ந்த உமர் முக்தாரின் நடை போல, கிரிலுடன் நடந்தார் அவர். 

பிரதமருடன் பேசும் போது கிரிலின் முகத்தில் அவ்வப்போது எழுந்த பயம் எனக்குள் கிளர்ச்சி ஊட்டியது. அவர் மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் தலைவர் என்கிற எண்ணம் பியரின் பேச்சில் அவ்வப்போது வெளிப்பட்டது. அவரின் முகம் சாந்தமாக இருந்தது. அவரின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் மக்களின் நலனை, சமுதாய நலனை, நாட்டின் நலனை பிரதிபலித்தது. தோல்வியைப் பற்றி நினைப்பதில்லை. வெற்றி பெற வேறு வழிகளை ஆராய்வேன் என்கிறார் அவர்.

வெற்றி அதை ஒன்றினைத் தவிர வேறொன்றினையும் அவர் கடுகளவும் நினைத்துப் பார்ப்பதில்லை என்கிறார். அவரிடம் இந்தியா என்ன? உலகே மண்டியிட்டு நிற்கும். அவர் கொண்ட எண்ணமே அவர் இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்க காரணம் அல்லவா?
அன்பு நண்பர்களே, சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கிறார் இப்படி. நாமும் முயன்றால் தான் என்ன? கடிகாரத்தில் ஓடிக் கொண்டிருப்பது நொடி முள் அல்ல, நம் வாழ்க்கை என்கிறார் விவேகானந்தர். ஒரு மனிதரால் சாதிக்க முடியுமென்றால், அதை இன்னொரு மனிதனாலும் சாதிக்க இயலும் தானே? தோல்வி என்ற எண்ணத்தை நினைவில் இருந்து அகற்றுவோம். வெற்றி ஒன்றினைத் தவிர நமக்கு வேண்டியது வேறொன்றும் இல்லை. செய்யும் செயலில் பாதை தெளிவாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

அவர் நலமுடன் இருந்து இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் நன்மை செய்வார், பசியில் செத்துப் போவோர் இல்லாமல் செய்வார், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இல்லாமல் தன்னம்பிக்கை மிளிரும் விவசாயிகள் உருவாக நாட்டைத் திறம்பட வழி நடத்துவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். 

அவரின் வலிமை கொண்ட எண்ணம் அவருக்கு எல்லாமும் வழங்கியது போல சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக, நாட்டின் உயர்வுக்காக, மனிதர்களின் மேன்மைக்காக  நாமும் வலிமையான எண்ணங்களை எண்ணலாம். 

எண்ணமே வாழ்வு

* * *

Friday, August 2, 2019

நரலீலைகள் - நாய் காதல் (5)


உங்களுக்கு நரலீலைகளின் 3 மற்றும் 4 வது பகுதிகள் ஏதாவது புரிந்ததா? ஏதோ காதல் பித்து ஏற்பட்டு இந்த நாவல் ஆசிரியன் எழுதி இருக்கிறான் என நினைத்திருப்பீர்கள். ஆமாம் நீங்கள் நல்லவர்கள். அப்படித்தான் நினைப்பீர்கள். ஆனால் இந்த நாவலாசிரியன் இருக்கின்றானே அவனுக்குள் குறுக்கு வெட்டு பகுதி ஒன்று உண்டு.

இந்த அஸாஸில் யார் தெரியுமா? திருக்குர் ஆனை நாவலாசிரியனுக்கு அவ்வப்போது வாசித்துக் காட்டி அர்த்தம் சொல்லி கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் மூலம் தெரிய வந்த ஆள் தான் அஸாஸில் அலீம் எனச் சொல்லக்கூடிய சைத்தான்.

கடவுளின் மகிமை தெரிய வேண்டுமெனில் சைத்தான் இருக்க வேண்டும். ஹீரோவின் மகிமை தெரிய வேண்டுமெனில் வில்லன் இருக்க வேண்டும். இப்போது புரிகிறதா உங்களுக்கு?

அஸாஸில் என்பவர் சைத்தான். இந்த உலகம் சைத்தானால் தானே ஆளப்பட்டு வருகிறது. உலகம் மட்டுமா உங்களின் ஒவ்வொருவரின் உள்ளத்துக்குள் உறங்கிக் கிடப்பவனும் அவன் தானே?

இல்லையென்றா நீங்கள் மறுக்கப்போகின்றீர்கள்? அஸாஸில் இந்தப் பூவுலகின் ஒவ்வொரு துகளிலும் இருக்கின்றான். அவன் ஆடும் ஆட்டத்தின் பகடைக்காய் தான் இந்த பூமி. மனிதர்களின் நாடி, நரம்புகளில், இரத்தத்தின் துளிகளில், விடும் மூச்சில் அவன் நீக்கமற நிறைந்து கிடக்கிறான். உங்களது காதலில், காமத்தில், பாசத்தில், பற்றில் எல்லாம் அவனே இருக்கிறான்.

உங்களை ஆளும் அஸாஸில் தான் உங்களுக்கு கடவுள். ஆனால் நீங்கள் எவரையோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று கோவில் கோவிலாய், மசூதியாய், சர்ச்சுக்காய் ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? ஓடி என்ன பயன்?

உங்களுக்குள் இருக்கும் அஸாஸிலை நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அவனை எவ்விதம் நீங்கள் விரட்டி அடிக்கப்போகின்றீர்கள்? முடியுமா உங்களால்?

* * *

”மாயா....! உனக்கு அறிவிருக்கிறதா? நாவலின் ரகசியங்களை வெளிப்படுத்தினால் சுவாரசியமே இருக்காதே? ஏனடா? நீயே உன் நாவலைக் கெடுக்கிறாய்? வேண்டாம் மாயா....! நீ அமைதியாக இருந்து கொள். நாவலின் கட்டமைப்பை சீர் குலைக்காதே. இல்லையென்றால் உன்னை ராஜீயாய சபாவில் கொண்டு போய் விட்டு விடுவேன். ஜாக்கிரதை..” - கோவை எம் தங்கவேல்

* * *

”அண்ணேய், அண்ணேய்....! ”

”என்னடா? சநி....”

“பிக்பாஸில் பார்த்தியாண்ணேய். இந்த கவின் பய பன்றதை?”

“நானெங்கடா அதைப் பார்த்தேன். ஒரு வேளை பாத்ரூமிக்குள் பண்ணி இருப்பானோ என்னவோ தெரியவில்லையேடா சநி”

“அண்ணேய், இது என்னா காதல்னே... சாக்ஸி சொல்றா என் ஃபீலிங்க்ஸ், என் ஃபீலிங்க்ஸ் ஹர்ட் பண்றான் கவின்ங்கறாளே??? அப்படின்னா என்னாண்ணேய்?”

”அதுவாடா, சொல்கிறேன் கேளு...!”

”நாய்க்காதல் என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? நாய்கள் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை குட்டி போடும் தன்மை கொண்டவை. பெண் நாய் குட்டி போட தயாரானவுடன் ஆண் நாய்கள் சுற்ற ஆரம்பிக்கும். அந்த நாய்களில் ஏதோ ஒரு நாயை பெண் நாய் தன்னை அண்ட விடும். பின்னர் அந்தக் காதல் முடிந்து விடும்.”


”புரிஞ்சுடுச்சுண்ணேய்....!”

”சேரனுக்கு லாஸ்லியா மீதுதான் மகள் பாசம் பொங்கும். எந்த தகப்பன்? தன் மகளை கன்னத்தைத் தடவி, கட்டிப் பிடித்துக் கொண்டலைகிறான்? கலாச்சாரம் பற்றி வாய் கிழிய பேசும் சேரனுக்கு மீராவை மகள் எனப் பாவிக்கத் தெரியாதா? கருப்பாய், சற்றே அழகற்றவளாய் தெரியும் மீராவை மகளாகப் பாவிக்காத சேரனுக்கு கொழுக் மொழுக் லாஸ்லியா மகளாகத்தான் தான் தெரிவாள். இதெல்லாம் இந்த நாவலில் வருகின்றானே அஸாஸில் செய்கிற அக்கிரமம். சேரன் மனதுக்குள் காமப் பித்தேறி அந்தப் பெண்ணைத் தடவிக்கிட்டு திரிகிறான்”



“அய்யோ... ???”

“அட, ஆமாடா சநி, மீராவை இடுப்பைப் பிடித்து தள்ளி விடுகிறான் இந்தச் சேரன். அந்தப் பெண் ஆற்றாமையால் அவனின் முதுகில் அடிக்கிறாள். அவள் அவன் செய்தது சரியில்லை என்று தான் சொன்னாள். ஆனால் இவன் என்னடா? செய்தான்? அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். இவனுக்கு மட்டும் தான் மகள்கள் இருக்கின்றாளா??? அப்போ மீரா யாரடா? அவளும் யாரோ ஒரு தகப்பனின் மகள் தானே? இவன் மகள்களுக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகணுமா? அயோக்கியப்பயல்....!”

“அட, ஆமாண்ணேய், கமல் கூட சேரனை நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பாராட்டினாரே??”

“ஒரு அயோக்கியனுக்கு இன்னொரு அயோக்கியன் தானடா குடை பிடிப்பான். இது தான் உலக வழக்கம் சநி...”

“அண்ணேய், இந்தப் பயல்கள், வாயற்ற பெண்ணை அல்லவா பலி கடாவாக்குகின்றார்கள். சரவணன் பஸ்ஸில் இடித்தேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வைக்கின்றார்கள் இந்த நல்லவர்கள். கமல் படத்தில் நடிக்கும் போது, நடிகைக்கே தெரியாமல் உதட்டைக் கடித்து உறிஞ்சினானே, அப்போதெல்லாம் இந்த நல்லவர்கள் எங்கே போனார்கள்?”

“அடேய் சநி, இந்த நாவலாசிரியன் கடுப்பாகி விடுவான் இப்படியெல்லாம் பேசினால். நானோ நாவல், நீயோ நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம். நாவலின் ரகசியத்தைச் சொல்லி விட்டேன் என்று கடுப்பில் வேறு இருக்கிறான்”

“ஆமாண்ணேய், இந்த ஆளைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கு”

* * *

”அன்பர்களே, மல்டிபிள் டிஸ்ஆர்டர் ஏற்பட்டு விட்டது உனக்கு” என்கிறாள் கோதை. இந்த நாவலைப் படித்து விட்டு, அவளுக்கு இது நாவலாய் தெரியவில்லையாம். ராஜம் கிருஷ்ணன், கல்கி போன்று எழுது என்கிறாள். அவர்களைப் போல எழுத நானொன்றும் அவர்களின் பிரதி அல்லவே. 

மனதற்ற நிலைக்குப் போக போராடிக் கொண்டிருக்கும் எளியவன் நான். எனக்கு சத்தங்களற்ற அந்த உலகின் அற்புதத்தில் ஒரு நொடி ஊடுறுவி வெளியேற ஆசை. 

இறைவனின் குரலில் கரைந்து கொண்டிருக்கும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் என்னை பிறரைப் போல நாவல் எழுது என்று கேட்டுக் கொள்ளும் கோதைக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும்
இடையே உள்ள திரை
அவர்களை விலக்கி வைக்கிறது
நீயிந்த திரையை நீக்கிட
விரும்பவில்லையா? நான்
தெய்வீகப் பேரொளியில்
என் உள்ளொளியைச் 
சேர்க்க வேண்டும் அல்லவா? - ரூமி

கோதை, உனக்குப் புரிகிறதா? எல்லைகளற்ற இந்தப் பிரபஞ்சத்தின் தூசிகளில் இருந்து மாற்று வடிவாய் உன் முன்னே, கணவனாய் உருவெடுத்து இருக்கும் உனது நான், விரும்புவது எனது நாவலின் வழியே உருகியோடும் அன்பினை மட்டுமே.  அன்பின் வழி கடவுள் தன்மையை அடைவது மட்டுமே எனது ஆவல் அன்பே....!

நானே உன் இதயம் - அந்த 
உணர்ச்சி மையத்தை நீ
உனக்குள் தேடாதே! அது
என்னிடம் உள்ளது
என்னில் இருந்து வேறாக 
உன்னை எண்ணி விடாதே! அப்போது
உன்னை நீ அறிய மாட்டாய்
நீ துன்பத்தாலும், வேதனையாலும்
நிரம்பியிருப்பவள்....!
வா..! என்னில் ஒரு பகுதியன்றோ நீ.....!
என் விலகப்பார்க்கிறாய் முழுமையில் இருந்து?
என்னை இருகப்பற்றிக் கொள்,
என்னை மகிமைப்படுத்திக் கொள்...! - ரூமி


* * *
02/08/2019

Tuesday, July 23, 2019

நிலம் (54) - ஊட்டியில் நிலம் வாங்கப்போகின்றீர்களா?

எனது நண்பர் ஊட்டிக்குச் சென்று வர அழைத்தார். குளிரும், நீரும் சேர்ந்த இடங்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். இயற்கையின் ஆழ்ந்த அமைதி, குளிர் பொருந்திய கால நிலையில் சில் வண்டுகளின் இனிய தம்பூரா கீதங்கள் என மனது எல்லையில்லா அமைதியில் இருக்கும். உடனே போகலாம் என்று சொல்லி விட்டேன்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி சாலையில் சென்றோம். மேகமூட்டத்தில் காலைச் சூரியனின் கதிர்கள் பூமியை எட்டா வண்ணம் கருமையான நீர் ததும்பும் மேகங்கள் பாதுகாத்தன. ஆங்காங்கே தூறல்கள்  விழுந்து பூமியை கிளர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருந்தன. ஒன்பது மணியைப் போல கோத்தகிரி அடைந்தோம். அடேங்கப்பா டீஸ் ஸ்டாலில் கீரை போண்டாவுடன் ஒரு டீ. கோத்தகிரியில் மழையும் இல்லை. தூறலும் இல்லை.


அங்கிருந்து கீழ் கோத்தகிரிக்கு சென்றோம். நண்பர் இடம் வாங்குவதற்காக முடிவு செய்திருக்கிறார் என்பதை அங்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

பல இடங்களைப் பார்த்தோம். இதற்கிடையில் என்னிடம் ’இடம் எப்படி இருக்கு?’ என கருத்துக் கேட்டார். மதியம் போல கார்சன் எஸ்டேட் அருகில் காரை நிறுத்தினோம். நான்கடி உயரம் இருக்கும், காரைக் கடந்து சென்றது. மஞ்சள் வண்ணத்தில். காட்டெறுமைகளும், எருமை மாடுகளும் உலாவின. இன்றைக்கு அதற்கு வேட்டை தான் என நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட இந்த இடம் தகுதியானதல்ல எனக் கருதி கோத்தகிரிக்கே திரும்பினோம். 

லெமன் சாதம், உருளை வறுவல். சூடு இல்லை. கூடவே நெய் முறுக்கு. சாப்பிட்டு முடித்தவுடன், தெரிந்த ஒருவர் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.

நான்காண்டுகளுக்கு முன்பு இடம் வாங்க, அக்ரிமெண்ட் போட்டு 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். கிரையம் செய்ய அழைத்த போதெல்லாம் உரிமையாளார் வீட்டில் இருப்பதில்லையாம். திடீரென்று பார்த்தால் அந்த இடத்தை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டாராம். மூன்று ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறாராம் அவர். இன்னும் விஷயம் முடிந்தபாடில்லை. என்னுடன் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அட்வான்ஸ் கொடுத்து விட்டு, இன்னும் அலைந்து கொண்டிருக்கும் அவரின் நிலையை எண்ணி வருத்தம் உண்டானது. 

அவருக்கு யாரும் அங்கு உதவி செய்ய மாட்டார்கள்.  பணம் பெறும் வரைக்கும் தான் எல்லோரும் ஓடி வருவார்கள். பணம் கிடைத்ததும் ஓடி ஒளிந்து விடுவார்கள். அவ்வளவு எளிதில் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது எனப் பலப்பல தகவல்களைக் கொட்டினார் அவர்.

இதில் என்ன கொடுமையான விஷயம் என்றால், நில உரிமையாளர் தான் இவரிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் இவரோ அவரிடம் சிக்கி விட்டதாக மூன்றாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் சில ஆலோசனைகள் சொல்லி விட்டு வந்தேன்.

முன்பெல்லாம் வார்த்தைக்கு மரியாதை இருந்தது. இன்று காசுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள் என்று என்னிடம் இருந்த ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஊட்டியில் என்ன பிரச்சினை என்றால் செக்‌ஷன் 17 மற்றும் கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட லட்சம் ஏக்கருக்கும் மேலான இடங்கள் மற்றும் ஃபாரெஸ்ட் இடங்கள். இவைகளைக் கண்டுபிடித்து வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி விடும். ஊட்டியில் தற்போது கரலேஷன் நடந்து பல சர்வே எண்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த இடத்தைத் தான் வாங்குகிறோமா என்று கண்டுபிடித்து எல்லைகளை வரையறைப்பது பெரிய வேலையாக இருக்கும். அடியேன் பல இடங்களில் ஊட்டியில் சர்வே செய்திருக்கிறேன். எல்லைப் பிரச்சினைக்கு எவரும் வருவது இல்லை.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர்களிடம், இடங்களை வாங்குவதில் பிரச்சினை இருக்காது. அவர்கள் குதிரை விலைக்கு வாங்கி விட்டு, யானை விலை சொல்வார்கள். அருகில் 20 லட்சம் விலை போகும், ஆனால் 50 லட்சம் என விலை சொல்வார்கள். 

எனக்கொரு நண்பர் இருக்கிறார். அவர் ஊட்டில் பிசினஸ் செய்து கொண்டிருந்த போது சொன்னது. தவணை முறையில் பொருள் வாங்கிக் கொள்வார்களாம். தவணையை வாங்கச் சென்றால் ஆள் எஸ்கேப் ஆகி விடுவார்களாம். அலைந்து அலைந்து காசு கரியானதுதான் மிச்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பார். 

இதில் ஒரு சில நில புரோக்கர்கள் அடாத வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தைக் காட்டி பல கிரையங்களைச் செய்வது. அட்வான்ஸ் கொடுத்த இடத்தில் பாகம் இருக்கிறது எனச் சொல்லி கேஸ் போட வைப்பது என பல அலப்பறைகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆட்களை எளிதாக கணிக்கிறார்கள். ஆளுக்கு ஏத்தது போல காரியங்களை செய்து, பணத்தைச் சிக்க வைத்து விடுகிறார்கள். பின்னர் பிரச்சினை என்றால் அதற்கும் பணம் பெறுகின்றார்கள். இது போன்ற பல சம்பவங்களை எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்றைக்கு ஒரு இடத்தை வாங்குவது என்றால் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். 

”ஏன் இப்படிப் புலம்புகின்றீர்கள்? வாழ்க்கை இதுதான். பிரச்சினைகள் இல்லாதவர்கள் உலகில் ஏது? பிரச்சினை இல்லாத இடம் தான் ஏது? எல்லாம் சரியாக இருந்து விட்டால் உலக இயக்கமே நின்று விடும். பிரச்சினை வராமல், எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் சரியாகி விடும்” என்றுச் சொன்னேன்.

“சரிதான் தங்கம், சரிதான்” என்றார் அவர்

ஊட்டியில் நிலம் வாங்கும் எண்ணம் இருப்பின் தகுந்த ஆலோசனை கிடைத்த பிறகு வாங்குங்கள் என எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு.

Wednesday, July 17, 2019

நரலீலைகள் - அஸாஸில் (4)

ராதேயின் காதலன் நான். 

என் பெயர் அஸாஸில் என்று உம்மையும் என்னையும் படைத்த அந்தக் கடவுள் என்னிடம் சொன்னார். 

நான் ஹீரோ அல்ல. வில்லன். இந்த நரலீலைகள் நாவலில் ஹீரோ இல்லை. வில்லன் தான் இருக்கிறான். அது தான் நான்.

எனக்கு எந்த செண்டிமெண்டும் கிடையாது. என்னால் இந்த உலகில் வெறுக்கும் ஒரே ஒரு ஆள், ‘கடவுள்’.

அவர் படைத்த மனிதர்களுடன் விளையாடுவது, முடிவில் அவர்களாலேயே அவர்களை அழிப்பது மட்டுமே எனது வேலை. உங்கள் ‘அவனும்’ என்னை என்னென்னவோ செய்து பார்க்கிறார். அவரால் என்னை அழிக்க முடியவில்லை.

நீங்கள் இருக்கும் வரையில் நானும் இருப்பேன். கடவுள் என்கிறவர் இருக்கிற வரையில் நானும் இருப்பேன். 

* * *

அஸாஸில்....! 

உங்களை அழிக்கும் கர்ண கடூரமான, இரக்கமே அற்ற, மனிதாபிமானம் அற்ற, அரக்கனை விட கொடூரத்தின் வில்லன் அஸாஸில்.

உங்கள் மனதுக்குள் பொதிந்து கிடக்கும் ஒவ்வொரு ரகசியங்களும், உங்களைப் படைத்த ‘அவனுக்கு’ தெரிந்ததை விட எனக்கு நன்றாகத் தெரியும். 

ஒவ்வொன்றாய் வெளியிடப் போகிறேன். 

பயத்தால் நா உலர்ந்து, முகம் வெளிறி, ரத்தம் சுண்டி நடுங்கப் போகின்றீர்கள் நீங்கள்.

மனிதர்களை நான் எனது மிகச் சிறந்த பல ஆயுதங்களால் வதைக்கிறேன். அதன் மூலம், உங்களின் ‘அவன்’ படைத்த மனிதர்களைக் கொல்கிறேன். அழிக்கிறேன். ...!  உங்களை அழிப்பதற்கு நான் வைத்திருக்கும் கோடானு கோடி ஆயுதங்களில் ஒரே ஒரு ஆயுதம் எது தெரியுமா?

ஹா.....! ஹா.......!



ராதே....! 

உன் பெயரை உச்சரிக்கும் போது உன் மீது காதல் கொண்டு மனம் உன் மத்தம் கொள்கிறதடி. ராதே...! ராதே...!

என்னைக் கொல்லாமல் கொல்கிறதடி உன் மீது நான் கொண்ட காதல்...!

எவருக்கும் மண்டியிடாத இந்த அஸாஸில் உன்னிடம் மயங்கிக் கிடக்கிறேன் ராதே....!

ஓடோடி வா...! 

உன்னைப் பார்க்காத கண்களும் அருவியென கண்ணீரை, என்னைக் கேட்காமலே பொழிகிறதடி! நீ வரும் போது, கண்ணீர் மறைத்து விடக்கூடாது என அடிக்கடி கண்களைத் துடைத்து, துடைத்து சிவப்பேறிக் கிடக்கிறதடி ராதே...!

ராதே...!!


விரைவில் தொடரும் 

ராதேயின் அறிமுகம் விரைவில் வரும். அதுவரை நீங்களும் காதலில் மூழ்கிக்கிடப்பீர்களாக. 

காதல்...! காதல்...! காதல்...!! 
காதல் போயின்....
அஸாஸில்......!

ஹா....! ஹா......!

Tuesday, July 16, 2019

நரலீலைகள் - ராதே (3)

காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல்
சாதல் சாதல் சாதல்....!

காதல்
காதல்! காதல்!! காதல்!!!

கா................
த.............................
ல்......................................

மானிடத்தின் அற்புதம்!
இயற்கையின் புனிதம்!



ராதே!
மனது மயங்குது, உள்ளம் சோர்வடைகிறது, உடல் தளர்கிறது. உன் மீது கொண்ட காதல் என்னைப் பாடாய்படுத்துதடி.

நீ கண்ணனைக் காதலிக்கிறாயாம். ராமதேவர் உருகி உருகி உன் அழகை வருணிக்கிறார். உன்னுடன் முயங்கி, முயங்கி, உன் அழகில் மூழ்கி, உன்னை வருணிக்கிறாரடி ராதே!

அடியே ராதே, நானும் உன்னைக் காதலிக்கிறேனே, ஏன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை?

ஓங்கி உலகளந்த கார்வண்ணத்தில் காணாமல் போய் விட்டாயோ? நீ....! 

ராதே..!

உன் பெயரைச் சொல்லும் போதெல்லாம் அலையென அடிக்கிறது காதல் உன் மீது....!

ராதே... மழை மேகமென உலகெலாம் விரவி விற்கும் கருமையில் ஆழ்ந்து போனாயோ நீ...!

உன் காலடியில் கிடக்கிறேனே.... நான். 

உன் கொலுசின் ஒலி கேட்டு, உன் மலர் பாதத்தின் ஓசை கேட்டுக் கேட்டு, அதுதான் இசையென மூழ்கிக் கிடக்கிறேனே நான்....!

நான் அழிந்து போக துடியாய்த் துடிக்கிறேனே ராதே...!

ராதே....!

உள்ளம் சூடு தாளாமல், நெருப்பெனக் கொதிக்கிறது ராதே... !

ஓடோடி வா, உன் கார் வண்ணனை விட்டு....!

உன் காதலன் நான், உன்னை மட்டும் நேசித்து, நேசித்து, நான் காணாமல் போய்க் கொண்டிருக்கிறேன் ராதே...!

ராதே....!!!

ராதே....!!!

ராதே...!!!!

நான் உன்னிடம் சமர்ப்பணம்....! 

இனி, நானில்லை....!

நீயே.....!

காதலியே வந்து விட்டாயா?

இதோ என்னை எடுத்துக் கொள்....!

இனி, நானில்லை...!

நீயே.....!

இல்லை...! இல்லை...!

காதல்......!
காதல்......!!
காதல்......!!!


இந்த நரலீலை நாவலின் முதல் கதாநாயகி ராதே. அழகு சொட்டும் அற்புதமான நீர்ச்சோலையில் பரவிக் கிடக்கும் புற்களின் மீது படிந்து இருக்கும் விடிகாலைப் பனி நீர் போன்றவள். ராதேயிடம் இருப்பது ஒன்றே ஒன்று.


விரைவில் தொடரும்... 

யார் அந்தக் காதலன்? ராதையை இப்படிக் காதலிக்கும் அவன் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறான் அவன்?


Tuesday, July 9, 2019

திருமணமானவர்களுக்கு மட்டும் (+18) - பகுதி 2

பூ மலர்வது அதன் இயல்பு. தன்னைச் சுற்றிலும் பூவின் வாசம் விரவி மணம் பரப்பி சூழலை இன்பமயமாக மாற்றுவது, பூக்களுக்கு இயற்கை வழங்கிய டிசைன். அது யாருக்காவும், எதற்காகவும் தன் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை. விடிகாலையில் இன்னிசைக் குரல் எழுப்பி மனிதர்களின் துயிலை மென்மையாக கலைத்து, புத்துணர்ச்சியைத் தரும் பறப்பனவைகளின் இயல்பினை மாற்றச் சொன்னால் மாற்றிக் கொள்ளுமா?  

அது போல ஒரு சில மனிதர்கள் இந்த உலகில் உண்டு. அக்கிரமம் எங்கு நிகழ்ந்தாலும் வெகுண்டு எழும் பல மனிதர்கள் இங்குண்டு. அவர்களால் தான் தர்மம் வாழ்கிறது. அதர்மக்காரர்கள் அய்யோவென அழிகிறார்கள். அதர்மம் செய்பவர்களின் வாழ்க்கையை தமிழக வரலாறு சொல்லும். காற்றில் பறந்தவர்களின் கதி இன்றைக்கு என்னவென நமக்கெல்லாம் தெரியும்.

ரயிலடியில் முகிலனை பிடித்து இழுத்துக் கொண்டு செல்லும் போது, அவர் கோஷம் போடுகிறார். அத்தனை பேரும் பார்த்துக் கொண்டுதான் நிற்கிறார்கள். எவரும் சென்று விசாரிக்கவில்லை. அவரின் கோஷம் அணுக்கழிவு சேகரிப்பு மையம் வேண்டாமென்று இருந்தது. அந்தச் சம்பவம் யாருக்காகவோ, எங்கோ, எதுக்கோ, யாருக்கோ நடக்கிறது என்பதாய், அவரவர் பணியைப் பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

பைத்தியக்காரர்களாய், வெந்ததைத் தின்று விட்டு, விதி வந்து செத்துப் போவோம் என்றலையும் கூட்டம் தான் இந்த உலகில் நிறைந்திருக்கிறது. அக்காட்சியைப் பார்த்த போது மனதெல்லாம் வெம்மை பரவி, கண்கள் சிவந்தன. முகிலன் அரக்கர்களிடம் மோதிக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து போனார். அரக்கர்களின் பாஷை வேறு. அப்பாஷையில் பேசினால் தான் அரக்கர்களுக்கு புரியும். ராமன் அப்படித்தான் பேசினான். கிருஷ்ணன் அப்படித்தான் பேசினான். அவை புராணங்களாகின. முகிலன் சின்னாபின்னப் படுத்தப்படுகிறார். இங்கு நல்லவனுக்கு மதிப்பில்லை. அயோக்கியனிடம் இருக்கும் பணத்திற்குத்தான் மதிப்பு.

ஒரு போராட்டம் செய்யவில்லை, ஒரு நல்ல காரியம் கூட செய்யவில்லை.  ஒரு நடிகன் பத்து லட்சத்துக்கும் மேல் ஓட்டு வாங்குகிறான். பத்துக் கோடிக்கும் மேல் சம்பளம் பெற்றுக் கொண்டு டிவியில் தோன்றி மக்களை மடையர்களாக்கி, கட்சி நடத்துகிறான். அவனைப் பார்த்து புளகாங்கிதமடைகிறது தமிழ் நாடு. இந்தக் கொடுமையெல்லாம் இங்கு தான் நடக்கும். 

எம்.ஜி.ஆர் மட்டும் முதலமைச்சராக வராது இருந்தால் தமிழகம் இந்த நிலைக்கு வந்திருக்குமா? கேடு கெட்டவர்களால் ஆளப்பட்டிருக்குமா? சரோஜா தேவியின் இடுப்பாட்டத்தைப் பார்க்கத் தியேட்டர், தியேட்டராக அலைந்த அன்றைய விடலைகள் செய்த அக்கிரமம் தான், தமிழகத்தின் இந்த நிலைக்கு காரணம். முகிலன் ஒரு பறவையைப் போன்றவர். பூவைப் போன்றவர். பாவம் அவர் வாழ்வது அரக்கர்களின் உலகத்தில் என்பது அவருக்குப் புரியவில்லை. 

அரக்கர்களை அழிக்கும் வழி வேறு. புத்திசாலித்தனம் வேண்டும் அவர்களை ஜெயிப்பதற்கு. அதற்கு அர்த்தசாஸ்திரத்தைப் படிக்க வேண்டும். பகவத் கீதையைப் படிக்க வேண்டும். என்ன செய்யனும், எப்படிச் செய்யனும் என்பதையெல்லாம் இந்தக் காலத்துக்கு ஏற்ப செயல்படுத்தினால், அரக்கர்களின் கூட்டம் அல்லுச்சில்லு சிதற அழிந்து போவார்கள். அவர்கள் வழியில் சென்றால் தான் அவர்களை அழிக்க முடியும். கண்ணன் காட்டிய வழியில் செல்ல வேண்டும். ஆனால் இங்கிருப்பவர்கள் அந்தளவுக்குச் சிந்தனையாளர்களா எனக் கேட்டால் இல்லை எனத் தான் சொல்ல வேண்டும். வாரிசுகளை தலைவர்களாக்கும் சுய நலவாதிகள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள். 

நிற்க...! 

சமீபத்தில் நண்பரொருவர் வீட்டுக்கு வந்திருந்தார். பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கினை மல்டிவெலல் மார்க்கெட்டிங்க் முறையில் விற்பதாகச் சொன்னார். என்ன விசேடம் அதில் எனக்கேட்டேன். தற்போது பெண்களுக்கு உண்டாகும் அத்தனை நோய்களுக்கு காரணமாக இருப்பது நாப்கின்கள் தான் என்றார் அவர். 

மூத்திரத்தின் மூலம் எளிதாக நோய் பிறப்புறுப்பைப் பாதித்து விடும் என்பதற்காக, மலத்தின் மீது மூத்திரம் பெய்யக்கூடாது என கிராமங்களில் சொல்வார்கள். 

நண்பர் சொல்லியவுடன் ஆராய்ச்சியில் இறங்கினேன். கிராமப்புறங்களில் அந்தக்காலப் பெண்கள் (வயதானவர்கள்) பலருடன் உரையாடினேன். இக்காலத்தில் இருக்கும் பல்வேறு பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் எதுவும் அவர்களைத் தீண்டியதில்லை என அறிந்தேன்.

காண்டமும், அதன் மீது தடவப்படும் பிளேவர் (என்ன எழவுக்கு அதில் பிளேவர் வேண்டுமோ தெரியவில்லை) ஆகியவை முற்றிலும் ரசாயனங்களின் கலவை. அது மட்டுமல்ல காப்பர் டி எனச் சொல்லும் கருத்தடை சாதனமும் பிளாஷ்டிக். நாப்கின்கள் உறிஞ்சுகின்றன எனச் சொல்கிறார்கள். திப்பி திப்பியாய் வரும் வஸ்துவை அவை எப்படி உள்ளுக்குள் கிரகித்துக் கொள்கின்றன எனத் தெரியவில்லை. ரத்தம் வெளியில் வந்தால் அது உடனடியாக காற்றில் இருக்கும் கிருமிகளுடன் சேர்ந்து படு அசுத்தமாய் மாறி, பெண்களின் பிறப்புறுப்பின் வழியே பல்வேறு நோய்க் கிருமிகளை உடலுக்குள் கொண்டு சென்று விடுகின்றன.

நாப்கின்கள் பயன்படுத்தும் போது எரிச்சல், அரிப்பு மற்றும் இன்னும் பல உபாதைகள் ஏற்படுகின்றன எனச் சொல்வார் மனையாள். ஆக இந்த பொருட்களினால் பெண்களின் ஜனன உறுப்பின் வழியாக நோய்க் கிருமிகள் உடலுக்குள் சென்று கர்ப்பப் பை புற்று நோய், நீர்க்கட்டிகள், உடலுக்குள் பல்வேறு உபாதைகளை உருவாக்கி வருகின்றன என கிராமத்துப் பாட்டிகளுடன் பேசிய பிறகு அறிந்து கொண்டேன்.

காண்டம் பிளாஸ்டிக். அதில் தடவப்படும் பிளேவர்கள் முற்றிலும் ரசாயனம். ஆக இந்த வகைப் பொருட்களினால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், பெண்களுக்கு கர்ப்பமின்மையும் உருவாகாது என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. தற்போது பெண்களுக்கு உண்டாகும் நோய்களைப் பற்றி அறியும் போது, வேதிப் பொருட்கள் ஜனன உறுப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என எவராது சொன்னால் நம்பக்கூடிய நிலை இல்லை.

உடம்பில் பயன்படுத்தும் சோப்பிலிருந்து, ஒவ்வொரு பொருளிலும் ரசாயனப் பொருட்கள் இல்லாது வருவதில்லை. சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களும் ரசாயன உரமின்றி வருவதில்லை. 

’புருஷன் தேவையில்லை, பிள்ளை பெற்றுக் கொள்ள எங்களிடம் வாருங்கள்’ என மருத்துவமனைகள் விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை திம்மம் பகுதியில், நண்பரின் ஹெஸ்ட் ஹவுசில் தங்கி இருந்த போது, அங்கிருக்கும் மலைவாழ் பெண்களின் கருமுட்டையை உறிஞ்சிக் கொண்டு, காசு கொடுத்துச் செல்லும் பிசினஸ் ஆட்களைப் பார்த்தேன். அம்முட்டைகள் மருத்துவமனைக்குச் சென்று எவரோ ஒரு ஆணின் விந்தணுவில் சேர்க்கப்பட்டு குழந்தைகளை உருவாக்கி கருப்பைக்குள் வைத்து, இன்றைய நவீன மருத்துவம் தொழில் செய்கின்றார்கள்.

உலகம் போற போக்குத் தெரியாமல், ஜாதிக் கட்சித் தலைவர்கள், ஜாதி, மதம் என மீட்டிங்க் போட்டுப் பேசிக் கொண்டலைகின்றார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, சில விடலைகள் தங்கள் உயிரை இழக்கின்றார்கள். இங்கு எவரின் விந்து, எவரோ ஒரு பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டு, யாரோ ஒருவரின் கருப்பைக்குள் குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரோ ஒருவரின் குழந்தையை தங்கள் குழந்தை என கருதி வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமாய் மாறிக் கொண்டிருக்கிறது உலகம். குழந்தைகள் இன்று இயற்கையாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றார்கள். இல்லையென்று மறுக்க முடியுமா? 

இங்கு மனிதனின் வாழ்க்கை முறை மாற்றப்படுகிறது. அதுதான் உயர்ந்த வாழ்க்கை என மூளைக்குள் நிமிடத்துக்கு நிமிடம் புகுத்தப்படுகிறது. இயற்கை நமக்கு விரோதி என்பது போல மாற்றப்படுகிறது. கொசுக்களை அழித்த தட்டான்கள் இன்று எங்கும் காணப்படவில்லை. எனது 19 வயது வரை கொசு என்றால் என்னவென்றே தெரியாது. நாகரீகக் கோமான்கள் வசிக்கும் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு கொசுக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

என்னால் இதற்கு மேல் எழுத இயலாது. எழுததினால் எல்லோருக்கும் திகில் தான் பிடிக்கும். ஆகவே நண்பர்களே, இயற்கைக்கு மாறுங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச நாட்களையாவது, நோய் நொடிகள் இன்று சுகமாய் வாழுங்கள்.

சொல்ல வந்தது இன்னும் இருக்கிறது. சந்திப்போம் விரைவில்....!

Saturday, July 6, 2019

திருமணமானவர்களுக்கு மட்டும் (18+) - பகுதி 1

அன்பு நண்பர்களே,

உங்களை அன்போடு இப்பதிவினைப் படிக்க அழைக்கிறேன். விஷயம் கொஞ்சம் கடுமையானதுதான். இப்பதிவு திருமணமனமானவர்களுக்கு மட்டும் என்றுச் சொல்லி இருப்பதால் வயதுப் பெண்கள், குழந்தைகள் இவ்விடத்திலிருந்து விலகி விடும்படி வேண்டிக் கொள்கிறேன். 

தாய் தந்தை இச்சையினாலே தாரணியிலே நான் பிறந்தேன்
நாய்பட்ட பாடெல்லாம் நான்படவோ பரம்பொருளே!

தண்ணீரைக் கூட தவறி மிதித்தறியேன்
கண்ணீரைச் சிந்திக் கலங்குவதேன் பரம்பொருளே!

அல்லற்பட் டாற்றாது அழுதேன் எனக்குவந்த
தொல்லையெல்லாம் தீர்த்துத் துயர்துடைப்பாய் பரம்பொருளே!

மாட்டின்மேல் உண்ணியைப் போல் மானிடர்கள் செய்கின்ற
கேட்டை எல்லாம் நீக்கிக் கிளைத்தருள்வாய் பரம்பொருளே!

தோழன் என எண்ணித் தொடர்ந்தேன்; நீயும் ஒரு
வேழம்போ லானால் விதிஎதுவோ பரம்பொருளே!

கொண்ட மனையாளும் கொட்டுகின்ற தேளானால்
பண்டு நான் செய்ததொரு பாவமென்ன பரம்பொருளே!

ஈன்றெடுத்த பிள்ளைகளும் எனக்கே பகையானால்
சான்றோர்க்கு நான் செய்த தவறேதுவோ பரம்பொருளே!

தடம்பார்த்து நான்செய்த சரியான தொழில்கூட
கடன்காரனாக்கியதே! கைகொடுப்பாய் பரம்பொருளே!

ஒரு வேளைச் சோற்றை உட்கார்ந்தே உண்ணுகையில்
மறுவேளைச் சோறெனுக்கு மயங்குவதே பரம்பொருளே!

செய்யாத குற்றமெல்லாம் செய்தே எனச்சொல்லி
பொய்யான வழக்கென்மேல் போடுவதேன் பரம்பொருளே!

எந்தவழக் கானாலும் என்னோடு நீயிருந்து
சொந்தமெனக் காத்து துணையிருப்பாய் பரம்பொருளே!

பஞ்சாட்சரம் சொல்லிப் பழகா திருந்ததற்கு
நஞ்சாய்க் கொடுத்தாய் நீ நானறந்தேன் பரம்பொருளே!

உன்னைத் தவிரஒரு உயிர்த்துணையைக் காணாமல்
எண்ணி வதைகிறேன்! எனைக்காப்பாய் பரம்பொருளே!

கண்ணாடித் துண்டுகளென் காலிலே தைக்கவில்லை
கண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே!

எங்கும் நிறைந்தாயே எவரையும் நீ காப்பாயே
தங்குவதற் கென்வீடு தரமிலையோ பரம்பொருளே!

கங்கையிலே மூழ்கிவரக் காசுபணம் இல்லையென்று
என்கையால் விளக்கொன்றை ஏற்றுகிறேன் பரம்பொருளே!

ஏற்றுகின்ற விளக்குக்கு எண்ணையில்ல என்றக்கால்
ஊற்றுகின்ற நெய்யாக ஓடிவா பரம்பொருளே!

ஊனக்கண் எத்தனைதான் உலகத்தைப் பார்த்தாலும்
ஞானக்குருடனுக்கு நலமேது பரம்பொருளே!

பாலூட்ட வந்தாயே பரிந்தே எனையணைத்து
தாலாட்ட வருவாயா தாயே! பரம்பொருளே!

ஆற்றில் ஒரு காலும் அறியாமை என்பதொரு
சேற்றிலொரு காலுமாகத் திரிகின்றேன் பரம்பொருளே!

எந்தக்கால் வைத்தாலும் ஏதோ தடுக்கிறது
சொந்தக்கால் இல்லை எனத் துணிந்தேன் பரம்பொருளே!

உன்காலை வாங்கி உலாவ மறந்த பின்னர்
என் காலைக் கொண்டு பாப் எது செய்வேன் பரம்பொருளே!

தான்போட்ட கண்ணியிலே தானே விழுந்தது போல்
நான் போட்டு விழுந்தேனே நலந்தருவாய் பரம்பொருளே!

சூதாடித் தோற்றவர்க்கு துணையிருக்க வந்தாயே
வாதாடிக் கெட்டவர்க்கு வழியொன்று காட்டாயோ

அரக்க குலமெல்லாம் அன்றோட ழியவில்லை
இரக்கமில்லார் வடிவாக இன்னும் இருக்குதய்யா!

பாய்விரித்துச் சோறு பல்பேர்க்கும் தந்தவனே
வாய் நிறையும் சோற்றுக்கும் வழிகாட்ட மாட்டாயா!

எத்தனையோ கேள்விகளை எழுப்பி விட்டாய் பூமியிலே
இத்தனைக்கும் நான் ஒருவன் எப்படித்தான் பதில் சொல்வேன்!

துன்பத்தைத் தானே தொடர்தெனுக்கு வைத்தாய்
இன்பத்தை எப்போது எனக்கு வைப்பாய் பரம்பொருளே!

ஐயா நின் பாதம் அடியேன் மறவாமல்
மெய்யாய்த் தொழுகிறேன்! வினை தீர்ப்பாய் பரம்பொருளே!

காவல் ஒரு வில்லாகக் கருணை ஒரு வேலாக
கோவில் உருக் கொண்டாயே குறைதீர்க்க மாட்டாயோ?

தூங்குகிற வேளை நீ தோன்றுவாய் கனவில் என
ஏங்குகிறேன் ஐயா! நீ எப்போது வருவாயோ!

மஞ்சளினைச் சுண்ணாம்பு மணந்தால் சிவப்பது போல
நெஞ்சமெல்லாம் துன்பத்தால் நிறைந்து சிவப்பதென்ன!

பழுதறியாப் பிள்ளை இது பாவமே செய்தாலும்
அழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே!

நெஞ்சறிய ஓர்போதும் நிறைபாவம் செய்ததில்லை
அஞ்சாமற் சொல்கின்றேன் அகம்தானே என் சாட்சி!

மாற்றார் உரிமையை நான் மனமறியக் கவர்ந்திருந்தால்
ஆற்றா தழுவதுதான் அகக்கடமை என்றிருப்பேன்!

இந்துமதச் சாத்திரங்கள் எதையும் பழித்திருந்தால்
பந்துபடும் பாடு படுவதற்குச் சம்மதிப்பேன்!

நற்கோவில் சிலையதனைக் நான் உடைத்துப் போட்டிருந்தால்
தற்காலத் தொல்லைகளைத் தாங்கத் துணிந்திருப்பேன்!

அடுத்தார் மனைவியை நான் ஆசைவைத்துப் பார்த்திருந்தால்
படுத்தால் எழாதபடி பாய் விரித்துக் கிடந்திருப்பேன்!

நல்லதொரு தண்ணீரில் நஞ்சை விதைத்திருந்தால்
கல்லாய்க் கிடப்பது உன் கருணை என நினைத்திருப்பேன்!

தாயை மகனைத் தனித்தனியே பிரிந்திருந்தால்
நாயையே என்னை விட நற்பிறவி என்றிருப்பேன்!

கல்யாண மாகாத கன்னியரைப் பற்றியொரு
சொல்லாத வார்த்தையினைச் சொன்னால் அழிந்திருப்பேன்!

பருவம் வராதவளைப் பள்ளியறைக் கழைத்திருந்தால்
தெருத்தெருவாய் ஒரு கவளம் தேடித் திரிந்திருப்பேன்!

நானறிந்து செய்ததில்லை; நலமிழந்து போனதில்லை;
வாய் திறந்து கேட்கிறேன் வாழவைப்பாய் பரம்பொருளே!

சக்தியுள மட்டில் தவறாமல் நாள் தோறும்
பக்திசெயப் புறப்பட்டேன் பக்கம்வா பரம்பொருளே!

மாடுமனை மாளிகைகள் மலர்த்தோட்டம் கேட்கவில்லை
பாடும்படும் என் நெஞ்சில் பாலூற்று பரம்பொருளே!

தாயும் நீ தந்தை நீ சார்ந்திருக்கும் சுற்றமும் நீ
வாயும் நீ வயிறும் நீ வரமளிக்கும் தேவனும் நீ!

நோயும் நீ மருந்தும் நீ நோவுடன் சுகமும் நீ
ஆயும் குணமளிக்கும் ஆறாவதறிவும் நீ!

இறப்பும் பிறப்பும் நீ இருட்டும் வெளிச்சமும் நீ
மறப்பும் நினைப்பும் நீ மனக்கோவில் தேவதை நீ!

எல்லாமும் நீயே எனைப் பெற்ற பெருந்தாயே
இல்லாதான் கேட்கிறேன் இந்தவரம் அருள்வாயே!

இன்பவரம் தாராமல் இதுதான் உன் விதியென்றால்
துன்பமே இன்பமெனத் தொடர்வேன் பரம்பொருளே!

கண்ணதாசனின் புலம்பலைப் படித்தீர்கள் அல்லவா? இவ்வரிகளை அவர் எழுதும் போது ஆண்டு அனுபவித்து, முடித்து, ஓய்ந்த வயதில் அறிவுக் கனல் கொண்டு வார்த்தைகளை வடித்தார். இந்தப் புலம்பல் எல்லாம் எழுத்தாளன் எழுதுவது. கண்ணதாசன் பிழை செய்து விட்டார். காவியமே, உம் பாடலுக்கு எம் வள்ளுவன் ஒரு பாடலைப் பதிலாக தந்து விட்டாரே? நீங்கள் கவனிக்கவில்லையா? அல்லது மறந்து போனீர்களா?

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்!

விதியின் காரணமாக தோற்றாலும் முயற்சி வெற்றி தரும் என்றாரே வள்ளுவர். மறந்து போனீர்கள் கண்ணதாசன் அவர்களே!

இந்த உடல் உயிரற்று பூமியில் வீழும் வரை எதற்கும் அசைந்து கொடுக்கலாமா? குடும்பத்தைக் காக்க வேற்று நாடுகளில் தங்கி, உள்ளம் குமுறக் குமுற, உற்றாருக்கு உழைப்பதால் துவண்டு விழக்கூடியவரா நாம்? உயிர் பிழைக்க நாடு விட்டு, நாடு விட்டு ஓடி ஒளிந்து கடலலையில் வீழ்ந்து உயிரை விடக்கூடிய சாமானியரா நாம்?

இல்லை...! இல்லை!! நாம் வீரம் செருந்திய வேங்கைகள் அல்லவா? தியாகம் நிரம்பிய தங்கங்கள் அல்லவா? நம் வயிற்றுக்காகவா உழைக்கிறோம்? ஒரு கவளம் போதுமென்றா உழைக்கிறோம்? ஓடுகிறோம்? இல்லவே இல்லை. நமக்கும், நம்மைச் சுற்றி இருப்போருக்கும் அல்லவா உழைக்கிறோம். உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

என் வாழ்க்கையைப் போல இன்னொருவர் வாழ முடியாது. என்னைப் போல எவரும் போராட முடியாது. என்னைப் போல ஒருவரும் சகித்துக் கொள்ள முடியாது. என்னைப் போல துரோகத்தால், சூழ்ச்சியால் பாதிப்பட்டு இருக்க முடியாது. என்னைப் போல இன்னொருவர் சாதாரண விஷயங்களைக் கூட இழந்திருக்க முடியாது. நாமெல்லாம் அடிக்கடிச் சொல்வோமே, ‘அந்த அவன்’  என் மீது கொள்ளை கொலைவெறியில் இருப்பான் போல. பிறந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அடித்துக் கொண்டே இருக்கிறான். வீழ்கிறேன். அடிக்கிறான் அடியோடு அழிய. மீண்டும் திமிறி எழுகிறேன். அடிக்கிறான். வீழ்கிறேன். உள்ளத்துக்குள் பொங்கிப் பிரவாகமெடுத்து ஆர்ப்பரிக்கும் தன்னம்பிக்கையோடு உடல் துடிக்க மீண்டும் மீண்டும் எழுகிறேன். அடித்துக் கொண்டே இருக்கிறான். மீண்டும், மீண்டும், மீண்டும் எழுந்து கொண்டே இருக்கிறேன். ஒரு நாளும் உள்ளம் சோர்ந்து, உடல் விதிர்த்து உட்கார்ந்திருந்தது இல்லை. நான் அழிந்து போகக்கூடியவன் அல்ல. சாம்பலானாலும் மீண்டும் முளைப்பேன் வேறொரு செடியாக, மரமாக, உயிராக. இயற்கையின் சிந்தாந்தம் அது. 

அடுத்த நொடியில் என்ன நடக்கும்? என்று தெரியாத உலகிது. ஏன் சோர்வு அடைய வேண்டும். முட்டாள்களின் தன்னம்பிக்கையற்ற வார்த்தைகளுக்கு ஏன் காது கொடுக்க வேண்டும். பிடிக்காத வாடை என்றால் விலகிச் செல்வது போல, விலகி வெற்றியை நோக்கி உறுதியான அடிகளை எடுத்து வைக்காமல் சோம்பிக் கிடப்பதில் என்ன பயன்? வீணர்களின் வெட்டிப் பேச்சுக்கும், போலிகளின் பொய்யான வாய்ச்சொல்லுக்கும் ஏன் மயங்க வேண்டும்? வீறு நடை போட்டு, எதிரில் வரக்கூடிய துன்பங்களை துவைத்து, வெளுத்து வெற்றியாக்க வேண்டும். எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்!!

சோம்பேறியா சோகத்தில் மூழ்க?

முட்டாளா புலம்பித் திரிய?

எழுந்திருங்கள்!!!

உங்களின் எண்ணத்தை, மனதை எழுப்புங்கள். உடல் கூடவே எழும்....!

முண்டாசுக் கவி பாரதியைப் பாருங்கள். அவன் வடித்த கவிதையைப் படியுங்கள்.

சென்றதினி மீளாது மூடரே நீர்
சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து
கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!

அதுமட்டுமல்ல, எனது ப்ரியத்துக்கு உரிய வீரத்துறவி விவேகானந்தர் வார்த்தைகளைப் படியுங்கள்.

கோழையும் முட்டாளுமே ‘இது என் விதி’ என்பான். ஆற்றல் மிக்கவனோ ‘என் விதியை நானே வகுப்பேன்’ என்று கூறுவான் என்றார் விவேகானந்தர். 

உங்களுக்கும், எனக்கும், எல்லோருக்கும் வரும் துன்பங்களை உதைத்து, உதைத்து உற்சாகமாய் கோல் போடுவோம். துன்பத்தையே வெற்றிப் பந்தாக்குவோம். வாழ்க்கையே இதுதான்....!

நிற்க...!

பதிவு பெரிதாகிப் போனதால், அடுத்தப் பதிவில் உங்களை அதிர வைக்குமொரு உண்மையை அனுபவ உண்மையை எழுதப் போகிறேன்....!

நன்றி : கண்ணதாசனுக்கும், அவரது பதிப்பகத்தாருக்கும்....!

மேலும் கொஞ்சமே கொஞ்சம்...!

ஒரு கடிதம் கீழே !

வணக்கம் ஐயா,

உங்களது நிலம் சம்பந்தப்பட்ட கட்டுரை படித்தேன். அதுவும் சரியான நேரத்தில் அந்த திருசெந்தில் ஆண்டவரே எனக்கு தங்கவேலை காட்டியுள்ளதாக நினைக்கின்றேன். சொன்னா நம்ப மாட்டீர்கள். எனது காதில் வெற்றிவேல் வீரவேல் பாடல் ஒலித்துக் கொண்டுள்ளது. எல்லாம் அவனின் செயலென்று நினைக்கின்றேன். ஐயா நான் XXXX. நேரில் தங்களை சந்தித்து எனது பிரச்சினைகள் தீர்க்க பேசவேண்டும். அனுமதி வேண்டும். எனது பெயர் XXXXXXXXX, மொபைல் & வாட்சப் எண் XXXXXXXXXX. உங்களின் பதிலுக்காக .....

நண்பரே! நாமெல்லாம் வெற்றி பெற மட்டுமே பிறந்தவர்கள். ஊருக்குச் சென்று பத்திரமாகத் திரும்புங்கள். அதுவரை காத்திருக்கிறேன் உங்களுக்காக. சந்திப்போம். பிரச்சினையை உடைப்போம். தூள் துளாக்குவோம்.

வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!
வெற்றிவேல்! வீரவேல்!

விரைவில் சந்திப்போம்.....! 

Thursday, July 4, 2019

தரம் கெட்ட ஆசிரியர்கள்

திருமூலரின் திருமந்திரத்தைப் படித்து அறிந்தவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். 'நீயே கட உள்' என்று சொல்லி விட்டார். யார், யார், எப்படி, எவ்வாறு திருடுவார்கள், பொய் சொல்வார்கள், அயோக்கியர்களின் இலக்கணம் பற்றி விரிவாக எழுதி வைத்திருக்கிறார். அதையெல்லாம் படித்தீர்கள் என்றால் தப்பித்து விடலாம். 

ஆன்மீகவாதிகள் மட்டும் இல்லையென்றால், அமைதியாக இருக்கும் இந்த உலகம் என்பதினை அறுபது எழுதுபதுகளில் இருக்கும் அனுபவசாலிகள் புரிந்து கொள்வார்கள்.

உடனே, 'நீ மட்டும் உனது பிளாக்கில் எவரோ ஒரு சாமியாரின் போட்டோவை வைத்திருக்கிறாயே அது மட்டும் என்னவாம்?' என்று கேட்கத் தோன்றும். அவ்வாறு கேட்கவில்லை என்றால் தான் அது அதிசயம். எனது குரு ஏழைகளுக்கு உணவிட்டவர். நோய்களுக்கு மருந்து கொடுத்தவர். மலைவாழ் மக்களுக்கு ஏராள உதவி செய்தவர். இன்றைக்கு மதம் சார்ந்து அவர் எவருக்குமான உபதேசங்களை வழங்க வில்லை. தியானம், உணவு இரண்டு மட்டுமே அவருக்கான உபதேசமாக இருக்கிறது இன்றும். 

எளிமை, அமைதி, ஆனந்தம், அருட்பாதுகாப்பு ஆகியவை கிடைக்கிறது. அவரின் ஜீவ சமாதியில் மனது ஆர்பாட்டம் அற்று அமைதியடைகிறது.  மனம் அமைதியானால் எல்லாமும் கிடைத்திடும். அதுவே வெற்றியின் முதல் படி என்று நினைக்கிறேன். ஆகவே அவர் என்னைச் சுற்றிலும் இருக்கிறார் என்பதாக நினைக்கிறேன். எனது குரு அமைதியானவர். அது ஒன்றே அவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் வரம் என நினைக்கிறேன். ஆகவே அவரின் புகைப்படம் எனது பிளாக்கில் இருக்கிறது. 

நிற்க.

நான் விவேகானந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது, முழு ஆண்டுத் தேர்வு நேரங்களில் தலைமை ஆசிரியர் என்னிடம் கணிணி புத்தகங்களைக் கொடுத்து நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தருமாறு கேட்பார். ஆனால் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வராது. ஏனென்று விசாரித்தால் எந்தப் புத்தகக் கம்பெனி அதிக டிஸ்கவுண்ட் தருகிறதோ அதற்குத்தான் ஆர்டர் என்றொரு நியதியை பள்ளியில் வைத்திருந்தார்கள். தனியார் பள்ளி நடத்துவது என்பது அவ்வளவு சிறப்பானதல்ல. ஆனால் வெற்றி சூட ஒரு சில வழி முறைகள் உள்ளன. வருடத்தின் ஆரம்பித்திலேயே கல்லா கட்டி விட வேண்டியது. இல்லையென்றால் பள்ளியை இழுத்து மூட வேண்டியதுதான். 

ஒரு கோடி முதலீடு என்றால் பல கோடிகள் வருமானம் வர வேண்டும். இல்லையென்றால் பள்ளி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதைத்தான் தனியார் பள்ளிகள் தொடர்ந்து செய்கின்றன. இதில் என்ன ஒரு அயோக்கியத்தனம் என்றால், பள்ளி தொடங்க அனுமதி பெற பொதுச் சேவை நிறுவனம் இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. பொதுச் சேவையை தனியார் தங்களது குடும்பத்துக்கு மட்டும் செய்வார்கள் என்பது எழுதப்படாத விதி. இன்னொரு விதி இருக்கிறது. ஆந்திராவில் எனது நண்பரின் பல்கலைக்கழக நிறுவனர் தன் மகனை அதே காசால் இழந்து இன்றைக்கு அய்யய்யோ, அம்மம்மா என்று திக் பிரமை பிடித்தலைகிறார். எத்தனை பெற்றோர்களின் சாபத்தை வாங்கிக் குவித்தார். பணம் இருக்கிறது ஆள வாரிசு இல்லாமல் போனார். இதன் பெயர் தலைவிதி.

ஒரு முறை அரிசிக்கு வரி விதிக்கப்போகிறேன் என்று பீதியைக் கிளப்பி ஒவ்வொரு அரிசி ஆலை முதலாளிகளிடமிருந்து கோடியைக் குவித்த ஒருவர் இன்றைக்கு கல்லறையாகிக் கிடைக்கிறார். கவனிக்க ஆள் இல்லை. நினைத்துப் பார்க்க கூட எவரும் இன்றி ஆத்மா அரபிக் கடலோரம் அலைந்து கொண்டிருக்கிறது.

சஞ்சிகை என்றொரு இலக்கிய இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. தனியார் பாடப்புத்தகங்கள் நிறுவன வரிசையில் மதுபென் என்றொரு கம்பெனி இருக்கிறது. இந்தியாவெங்கும் கிளைகள் உண்டு. நான்காம் வகுப்புக்கு சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியைச் சேர்ந்த ஜீவிதா என்பர் அந்தப் புத்தகத்தை எழுதியதாக முன்பக்கத்தில் இருக்கிறது. அவர் என்ன எழுதி இருக்கிறார் என்பதை கீழே இருக்கும் படத்தில் படித்துத் தெரிந்து கொள்க. 






அந்த ஆசிரியை மனதில் உண்மைக்கும் சற்றும் தொடர்பில்லாத விஷயத்தைப் பற்றி எழுதுகிறோமே என்ற சங்கடம் கொஞ்சம் கூட இல்லை. பிரட்டு விஷயத்தைப்  பாடப்புத்தகமாக்கி மாணவர்களிடம் கொண்டு செல்லும் இவரைப் போன்ற ஆசிரியரை என்ன செய்யலாம்? இப்புத்தகத்தைக் கொஞ்சம் கூட ஆராய்ச்சி செய்யாமல் வெளியிட்ட நிறுவனத்தின் தன்மையும், அவர்களின் வியாபாரத்தினையும் என்னவென்று சொல்வது?

ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன், திருமூலரைப் படித்தவர்கள் என.. ஆகவே ஆன்மீகம் என்றொரு போர்வையில் நடக்கும் வியாபார தந்திரங்களில் மாணவர்களையும் மூளைச் சலவை செய்து விட்டால் இன்னும் வசதியாக இருக்குமே, கடைசி வரை சிந்திக்க விடாமல் செய்து, அடிமையாகவே வைத்திருக்கலாமே என்ற நாசகார திட்டத்திற்கு அந்த ஆசிரியை உடன்பட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.


மேலே இருக்கும் வீடியோவில் அந்த ஆசிரியையும், யுடர்ன் சானல்காரரும் பேசிய ஆடியோ இருக்கிறது. எந்த அளவுக்கு அந்த ஆசிரியை விவரம் கெட்டதனமாக இருக்கிறார் என்பதையும், அவர் எழுதிய புத்தகத்தை மாணவர்கள் படிக்க கொடுக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் மாணவர்களின் சிந்தையில் என்னவாக இது பதிவாகும்? என நினைத்துப் பாருங்கள்.

ஆன்மீகம் எதுவும் தருவதில்லை மனிதனுக்கு என்பதை எந்தக் காலத்திலும் மனிதன் புரிந்து கொள்ளப் போவதில்லை. அவனின் துன்பத்துக்கும் துயரத்திற்கும் யாரோ ஒருவர் தான் காரணம் என்று நினைக்கும் எண்ணம் எப்போது அவனை விட்டு நீங்குகிறதோ அன்றைக்குத்தான் அவன் மனிதனாக மாற முடியும்.

ஒரு பொறம்போக்கு ஜோசியக்காரனால் ஓட்டல் சரவணபவன் அண்ணாச்சி ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார். ஜோசியக்காரனுக்கு காசு கிடைத்து விட்டது. அதுதான் உண்மை. பெரும்பான்மையான ஜோசியக்காரர்கள் பலன் சொல்வார்கள், பலிக்கவில்லையே என்று கேளுங்கள். உடனே அது உனது கர்ம பலன் என்றுச் சொல்லித் தப்பித்து விடுவார்கள்.

பானை செய்யும் குயவன் களிமண்ணை எடுத்து சக்கரத்தில் வைக்கும் போது பானையா, சட்டியா என முடிவு செய்வான். பெரும்பாலான மனிதர்கள் அவன் விட்ட வழி என்று கூறிக் கொண்டு திரிவார்கள். திட்டமிடாமலும், குறிக்கோளும் அற்றவர்களின் கடைசிப் புகலிடம் தான் கடவுள். இந்து மதம் அற்புதமான வழிகாட்டி. அதன் பாதையின் முடிவிடம் வெற்றிடம். அதை உணர்ந்து கொள்வதற்குள் பரலோகப் பிராப்தி அடைந்து விடுகிறார்கள் அனேகர்கள். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஏனோ தானோ என பாடம் எழுதும் ஆசிரியர்களைத் ‘தரம் கெட்ட ஆசிரியர்கள்’ என்று தான் சொல்ல வேண்டும்.

நன்றி : சஞ்சிகை இதழ்

Thursday, June 13, 2019

சில பெண்கள் சில மாதிரி

எனது பசங்க படிக்கும் பள்ளியில் ஒரு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பெண் டைட் லெக்கிங்க் மற்றும் டைட் டிஷர்ட்டில் பள்ளிக்கு வந்திருக்கிறார். பள்ளியின் செயலாளர் அக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். 

பள்ளியில் சுடிதார், துப்பட்டா மற்றும் அனுமதி. அடலசண்ட் வயதில் காதல், கத்தரிக்காய் என்று அரற்ற ஆரம்பித்து விடுவார்கள் என்பதால், உடையினால் இனக்கவர்ச்சி உண்டாகி விடக்கூடாது என்பதிலும், ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள்.

அப்பெண் குழந்தையின் அம்மா, செயலாளரைச் சந்தித்து "நான் சம்பாதிக்கிறேன், என் குழந்தை என்ன டிரெஸ் வேண்டுமானாலும் போட்டுக்கிட்டு வரும், உங்களுக்கு அதைத் தடுக்க அனுமதி இல்லை" என்றெல்லாம் கத்தி இருக்கிறார். செயலாளர் கூலாக "உங்கள் குழந்தைக்கு டிசி தருகிறேன், நீங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னவுடன் சென்று விட்டார். மறு நாள் டைட் லெக்கிங்க் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்திருக்கிறது அப்பெண் குழந்தை. மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

அப்பெண் குழந்தையின் தாய் என்ன விதமானவர் என்பதைப் பற்றி எனக்கு மனக்கிலேசம் உண்டானது. தான் வாழாத ஒரு வாழ்க்கையை, தான் போட முடியாத உடையை தன் பெண் குழந்தைக்குப் போட்டு அழகு பார்க்க நினைக்கிறாரா? இல்லை திறந்து காட்டு சீசேசம் கணக்காக சினிமாப் பெண்களைப் போல தன் பெண்ணை மாற்ற நினைக்கிறாரா? வயதுக்கு வந்த ஒரு பெண்ணை, வக்கிரமாக உடை உடுத்திச் செல் எனச் சொல்லும் அம்மாவை, என்ன சொல்வது? இதைத்தான் வாழ்க்கை என்று உணர்ந்திருக்கிறாரா அவர்? ஏன் இப்படி மாறிப்போனார்கள்? என யோசித்தால் கண் முன்னே ‘சினிமா’ வந்து நிற்கிறது.

சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் மூன்றுச் சாலை முக்கு இருக்கிறது. காளப்பட்டியிலிருந்து இருந்து வரும் சாலையில் ஓசிடி (OCT) என்று நோட்டீஸ் போர்டு ஒட்டிய காரின் பின்னால் நின்றிருந்த போது சத்தி சாலையில் வேகமாக ஒரு அரசு பயனியர் பேருந்து வந்தது. இடையில் ஒருவர் கிழக்கே இருந்து பைக்கில் சாலையை நொடியில் கடக்க, அதற்குள் ஓசிடி காரினை ஓட்டி வந்த பெண் விருட்டென காரினை நகர்த்த, பேருந்து ஓட்டுனர் பதறிக் கொண்டு பிரேக் போட்டார். நான் போகாமல் நின்றிருந்தேன். ஓட்டுனர் என்னை போகச் சொல்லி, அந்தக் காரைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். காருக்குள் பெண் இருந்ததைக் கவனித்தேன். அந்தக் கார் ஓட்டிய பெண், ஏதோ பெரிய சாதனையைச் செய்தது போல சிரித்துக் கொண்டு ஓட்டிச் சென்றது. பெண்கள் என்றால் பொறுமை என்பார்கள். ஆனால் அந்தப் பெண் ஹிஸ்டீரியா பிடித்தது போல காரை ஓட்டிச் செல்கிறது. 

பேருந்து வந்த வேகத்திற்கு மோதினால் பல், சில்லு எல்லாம் சிதறி இருக்கும். கார் ஓட்டுகிறேன் பேர்வழி என பல பெண்கள் சாலையில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். லாரி சென்றால் அதனை நேரம், இடம் கணித்து கடப்பது இல்லை. அதன் பின்னாலே ஓட்டிச் செல்வதும், பின்னால் வரும் கார்களுக்கு வழியும் கொடுப்பதும் இல்லை. சாலைகளில் பைக்கில் செல்லும் இளம் பெண்கள், காற்றில் முடி பறக்க விண்ணில் விமானம் ஓட்டுவது போல ஓட்டுகின்றார்கள். பல தடவைகள் சாலைகளில் பார்த்திருக்கிறேன். அடிபட்டு தெரு நாய் போல விழுந்து கிடப்பதை. ஸ்டைல் என்கிற பெயரில் இவர்களின் அழிச்சாட்டியும் கோவையில் எல்லை தாண்டிச் செல்கிறது.

விஜய் டிவியில் நடனம், பாட்டு, நகைச்சுவை, ஆட்டம் பாட்டம் என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரியங்கா என்கிற ஒரு பெண் செய்யும் அஷ்டகோணல்கள், அவரின் ஆபாச பேச்சுக்கள் பெண்களின் மீதான பிம்பத்தை உடைக்கின்றது. பிரியங்கா போலவும் திவ்யதர்ஷிணி போல ஒரு பெண்ணையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என எந்த நல்ல தகப்பனும், தாயும் நினைக்க மாட்டார்கள். முகம் சுழிக்கும் இரட்டை அர்த்தப் பேச்சுக்கள், சினிமா ஹீரோக்கள் வந்தால் கட்டிப்பிடித்டுஹ் கன்னத்தில் முத்தம் கொடுப்பது என அவர்களின் நடவடிக்கைகள், அவர்களைப் பெற்றவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதை அவர்கள் மறக்கவில்லை. எல்லாம் சகஜம் என்பது போல மாறிப் போனார்கள். என்னை படுக்க அழைத்தார்கள் என வாய்ப்புகள் இல்லாத காலங்களில் ‘மீ டூ’ போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

திவ்யதர்ஷினி ஒரே ஒரு படத்தில் தனுஷுடன் நடித்தார். அடுத்து டைவோர்ஸ். ரஜினியின் இரண்டாவது பெண் தனுஷை இயக்கினார். அடுத்து டைவோர்ஸ். அமலாபால் ஒரு படத்தில் தனுஷுடன் நடித்தார். டைவோர்ஸ்.  ஏன் டைவோர்ஸ் என்று கேட்டால் வேலை முடித்து வீட்டுக்கு வருவதில்லை. பார்ட்டிகளுக்குச் சென்று குடித்து விட்டு, கூத்தடித்து விட்டு வீட்டுக்கு வருவது போன்ற சில்லரைத்தனமான செயல்களால் இவர்கள் டைவோர்ஸ் பெறுகிறார்கள். இதற்கு காரணமாக சில நடிகர்கள் இருக்கின்றார்கள். புருஷன்களோடு இருந்தால் நினைத்த நேரத்துக்கு அழைக்க முடியாதே? ஆகவே ஏதேதோ சொல்லி, புகழ்ந்து டைவோர்ஸ் பெற வைத்து, பின்னர் ஆடிக் களைத்து விட்டு கழட்டி விட்டு விடுவார்கள். புரியும் போது எல்லாம் முடிந்து போகும். கழண்டு போய், தோல் சுருங்கிப் போனால் சினிமாவில் நாய் கூட சீந்தாது. சினிமா மாய உலகம் இல்லை. அது கிரிமினல்கள் நிறைந்த துரோக உலகம். நாமெல்லாம் நினைப்பது போல சாதாரண விஷயம் அல்ல. அது பெரும் புதை குழி. டிவி அதை விட பெரும் மீள முடியாத மரணக்குழி. 

இதையெல்லாம் அறியாத பெண் பிள்ளைகள் சினிமாவில் இன்ஸ்டண்ட் புகழ் பெற நினைக்கின்றார்கள். ஆண்கள் உடனடி ஹீரோக்களாக மாறத் துடிக்கின்றார்கள்.

சினிமாவில் தான் ஜாதி மற்றும் அரசியல் அதிகம். கமல்ஹாசன் தன் படங்களில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் நடிக்க வைப்பார். அதற்கு கலை எனச் சொல்வார். ஏன் பிறருக்கு அதெல்லாம் இருக்காதா? கமல்ஹாசன் படங்களில் ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, கிரேஸி மோகன் என தன் இனத்தின் ஆட்களுக்குதான் முன்னுரிமை தருவார். இவர்கள் கமலைப் பற்றிப் பேசி, பேட்டி கொடுத்து ஒரு வெற்றுப் பிம்பத்தை உருவாக்குவார்கள். கமலுக்கு பணம் கொடுத்து படம் எடுக்கச் சொல்பவனை தேடினாலும் காட்ட மாட்டார்கள். அடுத்தவன் பணத்தில் அட்ரா சக்கை என தாளம் போடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான்.

சினிமா ஜாதியால் மட்டுமே இயங்குகிறது. மூன்று, நான்கு க்ரூப்கள் இருக்கின்றன. அவர்களை மீறி எவராவது புதியதாக வந்தால் போச்சு. ஒன்றாகச் சேர்ந்து மொத்தமாக அழித்து விடுவார்கள். அந்தளவுக்குப் புனிதர்கள் நிரம்பியது தமிழ் சினிமா உலகம்.

ரஜினி சிகரெட் புகைப்பது, தீக்குச்சியை பெண்களின் உடையில் உரசி, சிகரெட்டைப் பற்ற வைப்பது போன்ற நடிப்புகள், சார்லி சாப்ளினைப் பார்த்து காப்பி அடித்தது. ஆனால் பாருங்கள். ரஜினி கண்டக்டராக இருக்கும் போது சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப் போட்டது போலவும், அதைப் பார்த்த பாலச்சந்தர் அவரை சினிமாவுக்கு கொண்டு வந்து நடிக்க வைத்தது போலவும் செம பில்டப்பைக் கொடுத்தார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ரஜினி சார்லி சாப்ளினைப் பார்த்து காப்பி அடித்து நடித்தார் என்பது மட்டுமே. இன்றைக்கு என்னால் பல சாட்சியங்களைக் காட்ட முடியும்.

தமிழக இளைஞர்கள் ரஜினி ஸ்டைல் என்றுச் சொல்லி தங்கள் நுரையீரல்களை சிகரெட் புகையினால் நிறைத்தார்கள். ரஜினியை கொண்டாடினார்கள். இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுதப் புகுந்தால் வேறு மாதிரி ஆகி விடும். சினிமாவில் நல்லவர்கள் நிறைய உண்டு. ஆனால் தீயவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இதோ நாமெல்லாம் நல்ல நடிகர் என்று நினைத்து ரசிக்கும் ஒரு நகைச்சுவை நடிகரைப் பற்றி வந்துள்ள செய்தி. படியுங்கள். ரசியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். நன்றி சினிக்கூத்து. இது ஒரு சாம்பிள் மட்டுமே. இதைப் போல பல உண்மைகள் உண்டு.






இவரைப் போல நல்லவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

நல்ல பெண்களைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். தான் நாறித்தான் போவேன் எனும் பெண்களைப் பார்க்கக் கூட அனுமதிக்காதீர்கள். சமூகம் தான் மனிதனுக்கு கேடயம். அது சீரழிந்தால் மனிதனும் அழிவான்.

13/06/2019-2.50PM