குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, November 24, 2018

2018 திருக்கார்த்திகை தீபவிழா காட்சிகள்

கோவையில் கார்மேகங்கள் கவிழ்ந்து சூரியனை மறைத்து நின்று குளுரூட்டியது. குளிர் நடுக்கத்துடன் ஆங்காங்கே மழை தூறல்களையும் தூவி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது வானம். காலை புலர்ந்து மயில்களும், குயில்களும், குருவிகளும், கிளிகளும் உற்சாகத்துடன் குரலால் கீதமிசைத்து வரக்கூடிய பொழுதினை வரவேற்றுக் கொண்டிருந்தன. 

கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்த இந்த அற்புதமான நாளில் தமிழகமெங்கும் தமிழர்கள் இல்லங்களில் மாலை நேரத்தில் ஒளி விளக்குகளால் அலங்கரித்து, வீட்டுக்கும் உலகிற்கும் உயிராய் விளங்கும் ஒளியினை வணங்கி விழா எடுக்கும் இந்த நன்னாளில் தமிழகமே பொன்னை உருக்கி வார்த்தாற் போல ஒளிரக்கூடிய தினம் இது. சிறார்கள் பட்டாசுகளை பொறுத்தி தங்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியினை நிறைத்துக் கொள்ளும் சிறப்பு வாய்ந்த நாள். மழைமேகங்கள் கார்காலத்தைச் சொல்லி விட்டு பூமித் தாயைத் தழுவ வரும் நாள் என பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த நாளில் வழக்கம் போல நானும், மனையாளும் எமது குருவின் ஆசிரமம் நோக்கி பயணித்தோம். 

வழியெங்கும் அகல் விளக்குகள், வாழை மரங்கள், பூக்கள் விற்பனைக்காக கடைகள் மணம் வீசிக் கொண்டிருந்தன. மக்கள் பரபரப்பாய் பயணித்துக் கொண்டிருந்தனர். காலை பதினோறு மணிவாக்கில் ஆசிரமம் வந்து சேர்ந்தோம். மாவிலைத் தோரணங்களுடன் ஆசிரமம் மிளிர்ந்து கொண்டிருந்தது. மலையோரம் அமைதி தழுவ, சிற்றாரின் அருகில் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் எம் குருவின் ஆசீர்வாதத்தில் அவ்விடம் முழுவதும் அமைதியில் திளைத்துக் கொண்டிருந்தது. குருவினைத் தரிசிக்கவும், மாலையில் ஏற்றப்படவிருக்கும் தீபத்தின் உள்ளொளியைக் கண்டு, குருவின் ஆசியினைப் பெற்றிடவும் எங்கிருந்தோவெல்லாம் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். குரு அமைதியாக அமந்திருக்கும் அற்புதமான அந்த மேடை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஒளியில் சுடர் வீசிக் கொண்டிருந்தது எம் குருவின் முகம் போல.

பக்தர்கள் குருவின் முன்பு வந்து வணங்கி, திரு நீறு பூசி, அவரைச் சுற்றி வந்து தங்களின் வேண்டுதல்களை குருவிற்குத் தெரிவித்து ஆசி பெற்றபடி சென்று கொண்டிருந்தனர். பலர் தியானம் செய்து கொண்டிருந்தனர். வெளியில் பக்தர்களுக்கு அமுது வழங்கிக் கொண்டிருந்தனர் சில பக்தர்கள். பக்தர்களுக்கு வழங்க பிரசாதப் பையில் பிரசாதங்களை இட்டுக் கொண்டிருந்தனர் பலர். மகளிர் பலர் அகல் விளக்குகளுக்கு குங்குமம், சந்தனமிட்டு விட, ஐந்தெண்ணெய் வார்த்து திரிகளை சேர்த்து வைத்துக் கொண்டிருந்தனர்.

மாலையில் விளக்கேற்றி அந்த வெள்ளிங்கிரி நாதர் தீபத்தில் எழுந்தருளப் போகும் அற்புதமான தீபக்காட்சியைக் கண்டிட சாரி சாரியாகப் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். இளம் சிறார்கள் ஆங்காங்கே ஓடிக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்தனர். அங்கு வந்து கொண்டிருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அறுசுவை உணவு சுடச் சுடத் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட போது, ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய” வள்ளலார் பெருமகனாரின் அகவல் பாடல் உள்ளத்தே ஒலித்தது. பக்தர்கள் பசியால் வாடிடக்கூடாது என அங்கே அமுது தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மாலையில் தீபத்தினை எம் குருநாதர் பூஜை செய்து ஏற்றிட தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்தது. எம் பெருமான் வெள்ளிங்கிரி நாதரும், எம் குரு வெள்ளிங்கிரி சுவாமிகளும் இணைந்து பக்தர்கள் வாழ்விலே சூழ்ந்து கொண்டிருக்கும் இருளைப் போக்கி ஒளிச்சுடராய் மிளிர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். அந்தத் திருக்கார்த்திகையும் பெளர்ணமியும் இணைந்த நன்னாளில் தீப அருளில் தங்கள் உயிரையும், மனைதையும் புனிதப்படுத்திக் கொண்ட பக்தர்கள் பெரும் மகிழ்வெய்தி இன்புற்றனர்.

“எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என பரிந்து பாடிய தாயுமானவரின் பாடல் வரிகளின் படி எம் குருவினை நாடி வந்த அத்துணை பக்தர்களுக்கும் எல்லாமும் கிடைத்திட எம் குருவினை வேண்டி வணங்குகிறேன்.

கீழே 2018ம் ஆண்டின் கார்த்திகைத் தீப பெருவிழாவின் புகைப்படக்காட்சிகள்

















வாழ்க வளமுடன் !

Monday, November 19, 2018

நிலம் (47) - அன் அப்ரூவ்ட் மனைகள் அரசு மீண்டும் அவகாசம்

20.10.2016ம் தேதிக்கு முன்பு வரை அனுமதியற்ற மனைப்பிரிவில் வீட்டு மனை வாங்கியவர்களும், அந்த மனைப்பிரிவு உரிமையாளர்களும் மனைப்பிரிவு வரன்முறைச் சட்டத்தின் படி வீட்டு மனைகளை வரன்முறைப்  படுத்தி அனுமதி பெறலாம் என தமிழக அரசு கடந்த 04.05.2017ம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு வரன்முறைக்கட்டணமும், மேம்பாட்டுக் கட்டணமும் குறைக்கப்பட்டு மீண்டும் காலக்கெடு வழங்கப்பட்டது. இந்த மாதம் 03.11.2018ம் தேதியோடு மூன்றாவது காலக்கெடுவும் முடிந்து விட்டது. இனியும் உள்ளாட்சிகளால் சேகரிக்கப்பட்டு மனைப்பிரிவு வரைபடங்களாக அனுமதிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் 50 சதவீதம் வரன்முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன.

அரசு அனுமதியல்லாத மனைப்பிரிவினை அனுமதி பெற்றுக் கொள்ள வசதிகள் செய்து கொடுத்தும் மக்கள் கவனத்தில் கொள்ளாதிருப்பது சரியல்ல. 

அனுமதியற்ற மனைப்பிரிவினை ஏன் பத்திரப்பதிவு செய்தார்கள், அது அரசின் தவறல்லவா? என்று என்னிடம் பலரும் கேள்வி கேட்டார்கள். பத்திரப்பதிவு அலுவலகம் பதிவு செய்து கொடுக்க மட்டுமே உள்ளது. லீகல் ஒப்பீனியன் எல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். பத்திரப்பதிவாளர்கள் அது பற்றிய கேள்விகள் எழுப்ப வேண்டியதில்லை என்று பத்திரப்பதிவுச் சட்டங்கள் சொல்கின்றன. ஆனால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதால் அரசும் அவ்வப்போது பல விதிகளை உருவாக்கி மக்களின் தேவையற்ற கால விரயத்தையும், பொருளையும் இழக்கவிடாமல் செய்து வருகிறது. இருப்பினும் ஏமாறவே பிறப்பெடுத்த மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருப்பது வேதனையான விஷயம்.

03.11.2018ம் தேதி கடைசிக்காலக்கெடு. இனி என்ன ஆகும்? என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். திட்டக்குழுமம் அதற்கொரு வழியினைச் அரசுக்குப் பரிந்து செய்திருக்கிறது. 03.11.2018க்குப் பிறகு வரும் வரன்முறை செய்யும் மனைகளுக்கு அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கலாம் என்றொரு அறிக்கையை அரசின் கவனத்திற்காக அனுப்பி இருக்கிறது. அதன் படி 03.11.2018க்குப் பிறகு மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஆனால் அதற்கு வரன்முறைக்கட்டணத்தில் 03.11.2018ம் தேதியிலிருந்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பித்தால் வரன்முறைக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும், அடுத்த ஆறாவது மாதத்திற்குள் விண்ணப்பித்தால் 25 சதவீதம் அபராதமும், 12 மாதங்களுக்குப் பிறகு விண்ணபித்தால் 50 சதவீதமும் அபராதக்கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன் முறை செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறை செய்து கொள்ளுங்கள். தவறும் பட்சத்தில் அந்த மனைகளை எக்காலத்தும் விற்கவும் முடியாது. அதில் வீடுகள் கட்டவும் முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

Saturday, November 17, 2018

நிலம் (46) - அன் அப்ரூவ்டு வீட்டுமனைகள் என்ன நடக்கிறது?

அன் அப்ரூவ்டு வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் அரசு முழு மூச்சாக வீட்டு மனைகள் அப்ரூவல் திட்டத்திற்கான அமைப்புகள் மூலம் வரன் முறை செய்ய இரண்டு முறை கட்டணக் குறைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியும் இன்றும் அன் அப்ரூவ்டு மனைகளில் பாதி கூட வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று பத்திரிக்கைச் செய்திகள் வெளிவருவது கொடுமையான விஷயம்.

இனி அரசு அதிரடி முடிவுகள் எடுக்கலாமென்று பேசிக் கொள்கின்றார்கள். வரன்முறை செய்யாத வீட்டு மனைகளை ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் உரிய அலுவலகத்திற்கு விபரங்கள் அனுப்பி, அந்த மனைகள் பற்றிய வரைபடங்களைத் தயாரித்து மீண்டும் உள்ளாட்சிக்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். முன்பு போல பல ஆவணங்கள் தேவையில்லை என்றும் அரசு சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கிறது. இருப்பினும் மீண்டும் பாதி மனைகள் அப்ரூவல் செய்ய வரவில்லை என அரசு சொல்கிறது.

இனி அரசு ஏதாவது மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்குமா? என்று தெரியவில்லை. மக்கள் வரன்முறைக்கட்டணம் அதிகம் என்றுச் சொல்கிறார்கள். இன்னும் கட்டணத்தைக் குறைக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்கள். என்ன செய்யப்போகிறது அரசு என்று தெரியவில்லை.

மீண்டும் அரசு கால நிர்ணயம் செய்தால் உடனுக்குடன் அன் அப்ரூவ்டு மனைகளை வாங்கியவர்கள் விண்ணப்பம் செய்து வரன்முறை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வரலாம். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் அர்த்தமில்லை.

2018 திருக்கார்த்திகை தீப திருவிழா அழைப்பிதழ்


அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். 

திருக்கார்த்திகை தீப விழா அன்று வெள்ளிங்கிரி மலை மீது ஏற்றப்படும் தீபத்தை தரிசித்து, இறை அருள் பெறவும், மன அமைதி பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ குருவருளின் ஆசி அருளை அடைந்து மகிழ வருகை தரும்படி அனைவரையும் மீண்டும் அன்புடன் அழைக்கிறேன்.

ஆஸ்ரமத்திற்குச் செல்லும் வழி : செம்மேடு தாண்டி பூண்டி வெள்ளிங்கிரி கோவில் செல்லும் வழியில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகில் இடது புறமாகச் செல்லும் வழியில் உள்ளது ஆசிரமம். அனைவரும் தியானம் செய்து குருவருள் பெற்று, அன்னம் அருந்தி ஆசிகள் பெறலாம். 

தொடர்புக்கு 
ஜோதி ஸ்வாமி - 98948 15954

Wednesday, November 14, 2018

ஞானயோகமா? கர்மயோகமா? எது சரி


(சேலம் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் தாளாளரும், சுவாமி சித்பவானந்தரின் உண்மை சீடரும், எனது குருவும் ஆன ஸ்ரீ மத் சுவாமி ஆத்மானந்தாவுடன் - ஆனந்தனும், நிவேதிதையும்)

கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இடையில் ஒரே ஒரு முறை சுவாமியை கோவையில் இருக்கும் பள்ளப்பாளையம் விவேகானந்தர் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் அனாதைச் சிறார்கள் ஆஸ்ரமத்தில் சந்தித்தேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் நிவேதிதைக்கு பள்ளியில் ’நிவேதிதா பற்றி’ பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. என்னிடம் மகள் நிவேதிதா பற்றிக் கேட்டதும், அவருக்கு சுவாமியின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவரிடம் பேசும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சுவாமியைத் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அடுத்த வாரத்தில் நிவேதிதைக்கு காரைக்குடி ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரியிலிருந்து நிவேதிதை பற்றிய புத்தகங்களும், சுவாமி விவேகானந்தர் பற்றிய புத்தகங்களும் வந்திருந்தன. சுவாமி அவருக்கு புத்தகங்களை அனுப்பி இருந்தார். என்னிடம் பேசிய போது குழந்தைகள் இருவரையும் அழைத்து வரும்படியும், ஆசிரமத்தில் தங்கி இருந்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற உள்ளூர ஆவல். ஐந்தாறு வருடங்கள் அவருடனே இருந்தவன். அவருடன் உண்டு, உறங்கி, பேசி, தொண்டு செய்து வாழ்ந்தவன். என் மீது அவருக்கு ப்ரியம் அதிகம். 

தீபாவளி மறுநாள் சந்திப்பதாகச் சொன்னேன். சேலத்தில் இருக்கும் கல்லூரியில் இருப்பதாகச் சொன்னார். சேலம் ஓமலூர் வழியாக கல்லூரியைச் சென்றடைந்தோம். குடும்பத்துக்கே உடைகள் எடுத்து தந்தார். குழந்தைகளுடன் உரையாடினார். இருவருக்கும் அனேக புத்தகங்களைப் பரிசளித்தார். எனக்கும், இல்லாளுக்கும் ஆசீர்வாதங்களையும் புத்தகங்களையும் பரிசளித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பனிரெண்டு மணி ஆரத்தியில் பங்கெடுத்தேன். மனசு நிறைவாக இருந்தது.  உணவருந்தி விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். 

எனக்குள் அமைதியாக வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. அது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ஞான யோகம் பற்றிப் பேசினேன். அவர் உடனே,” மனிதப் பிறவி எடுத்து யாருக்கும் உபயோகமின்றி யோகத்தில் அமர்ந்து தன்னை மட்டும் உயர் நிலைக்குக் கொண்டு சென்று முக்தி அடைவதில் என்ன பயன்? ஒரே ஒருவருக்கு மட்டுமே அதனால் பலன் கிடைக்கும். ஆனால் இவ்வுலகில் பிறந்து பலரின் உதவியால் உயிர் பெற்று வாழ்ந்து விட்டு, தான் மட்டுமே உய்ய முனைவது சரியல்ல. சுவாமி விவேகானந்தர் இந்தப் பூமியில் ஒரே ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் மீண்டும் மீண்டும் மனிதனாகப் பிறந்து அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுச் சொல்லி இருக்கிறார்” என்றார். 

தொடர்ந்து, ”எனக்கு இன்னும் பல்வேறு கடமைகள் இருக்கின்றன. கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மடங்களைக் கட்டி அன்னதானம் செய்ய வேண்டும். பகவான் ராமகிருஷ்ணருக்கும், சாரதா தேவியாருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் மூன்று கோவில்கள் கட்ட வேண்டும், ஏழை மக்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியைக் கொடுத்து அவர்களை வாழ்வில் உயர வைக்க வேண்டும்” என்றார்.

அந்த 81 வயது இளைஞரின் பேச்சைக் கேட்ட எனக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவரின் உயர்ந்த நோக்கம் எங்கே? எனது தனி மனிதச் சிந்தனை எங்கே? உள்ளம் வெம்பி வெதும்பியது. அவரின் கனவுகளுக்கு சிறிய அணில் போன்றாவது உதவி செய்ய வேண்டுமே என்ற ஆவல் மேலோங்கியது. 

ஐந்து வருடம் அவருடன் இருந்து தொண்டாற்றினேன். திருமணப் பந்தத்தில் இணைந்து தனி மனித வாழ்க்கைத் தொடரில் மூழ்கி விட்டேன். இருப்பினும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற முடிவு செய்தால் எவ்வழியிலேனும் அதைச் செய்யலாம் என முடிவெடுத்தேன்.

கர்ம யோகமே மிகச் சிறந்த யோகம். பிறருக்குப் பணி செய்தலே மனிதப் பிறவிப் பயன். அதை விடுத்து தனி மனித சுகத்திற்காக, உள்ளொளிக்காக இந்த உடம்பைப் பயன்படுத்துவது சரியல்ல என்று அவர் சொன்ன அந்தக் கருத்து, எனது உள்ளத்தில் தராசு தட்டு உயர்வது தாழ்வது போல ஆடிக் கொண்டிருந்தது. நீண்ட மனசின் துணை கொண்டு ஆராய்ச்சி செய்த பிறகு, ஒரு  வழியாக இரண்டும் தேவை என்று அறிந்து கொண்டேன்.

உள்ளத்தைச் செம்மைபடுத்திட ஞான யோகமும், ஊருக்கு உழைத்திட கர்ம யோகமும் அவசியம். கர்ம யோகத்தில் திழைத்திட்ட பக்தை நிவேதிதாவும், அன்னை தெரசாவும், மூவரின் பிம்பமான சுவாமி ஆத்மானந்தரும், எனக்குப் பிடித்த இன்றைய மனிதர் வ.மணிகண்டனும் என்றென்றும் மனித குல வரலாற்றில் உதாரண புருஷர்களாய் இருப்பார்கள், இருந்து கொண்டிருமிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றிப் பேசும் இந்த உலகம், சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதில்லை.

இந்தப் புண்ணியத்தை விட வேறென்ன பெரிதாய் வேண்டும் அழியப்போகும் நாற்றமெடுக்கும் உடம்புக்கு? ஞான யோகத்தில் மனதைச் செம்மைப்படுத்தி, கர்மயோகத்தில் உழைத்திடுவதைத் தவிர இந்த மனித உடம்புக்குச் சாலச் சிறந்த வேறு எதுவும் இல்லை.

சரி எனக்குப் பிடித்த ஒரு சிவபெருமானைப் பற்றிய திருவாசகப் பாடலைப் பற்றி கொஞ்சம் படியுங்களேன். எப்போதாவது உங்களுக்குள் அது ஒரு மலர்ச்சியை உருவாக்கலாம்.

கண்க ளிரண்டு மவன்கழல்
கண்டு களிப்பன வாகாதே
காரிகை யார்கடம் வாழ்விலென்
வாழ்வு கடைப்படு மாகாதே
மண்களில் வந்து பிறந்திடு
மாறு மறந்திடு மாகாதே
மாலறி யாமலர்ப் பாத
மிரண்டும் வணங்குது மாகாதே
பண்களி கூர்தரு பாடலொ
டாடல் பயின்றிடு மாகாதே
பண்டிநன் னாடுடை யான்படை
யாட்சிகள் பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம்
வந்து வெளிப்படு மாயிடிலே

இந்தப் பாடல் பன்னிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பாடப்பட்டது.

மேற்கண்ட பாடலைப் பதம் பிரித்து எளிதில் படிக்க முடியாது. திருப்பராய்த்துறையில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் தபோவனத்தை நிறுவியவரும், மிகச் சிறந்த எழுத்தாளரும், சுவாமி ஸ்ரீமத் ஆத்மானந்தர் அவர்களால் பெரியசாமி என்று அழைக்கப்படுபவருமான சுவாமி சித்பவானந்தர் அவர்கள் கீழ்கண்டவாறு மேலே இருக்கும் பாடலை தனது திருவாசகம் நூலில் விரித்து எழுதி இருக்கிறார். அது கீழே.

கண்கள் இரண்டும் அவன் கழல்
கண்டு களிப்பன ஆகாதே
காரிகையார்கள் தம் வாழ்வில்
என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திரும் ஆறு
மறந்திடும் ஆகாதே
மால் அறியா மலர்ப் பாதம்
இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண் களி கூர் தரு பாடலோடு
ஆடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான்
படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே
விண் களி கூர்வது ஓர் வேதகம்
வந்து வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன்
வந்து வெளிப்படும் ஆயிடிலே


இதன் அர்த்தம் கீழே !

மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன் எழுந்தருளினால், இரண்டு கண்களும் அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை, மகளிரோடு கூடி வாழ்வதில் முடிவு பெற்று விடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தினை மறத்தல் ஆகாதோ போகுமா? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன் ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளக்கூடிய தன்மைகளை பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் வந்து தோன்றுதல் ஆகாது போகுமோ?

திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் எனது சிற்றறிவுக்கு எட்டிய இந்தப் பதிவில் ஏதாவது பிழை இருப்பின் மன்னித்தருள் வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

மாறிய எண்ணம் மாற்றிய குரு

ஆற்றங்கரையில் துண்டினை விரித்துப் படுத்து இருந்தேன். அருகில் கருவை மரம். கருவைக்கு இலைகள் சிறிது. நிழல் தரா மரம். அதன் மலர்கள் மஞ்சள் நிறத்தவை. பொசு பொசுவென குமிழாக இருக்கும். அந்த மலர்களில் வாசம் வருமா என்று தெரியவில்லை. தரையில் சிதறிக் கிடந்தன. இடதுபுறம் மலை அருவியிலிருந்து கொட்டிய நீர் செடி கொடிகளுக்குள் புகுந்து செல்லும் சலசல சத்தம். சுற்றி இருந்த மரங்களின் ஊடே உலாவிக் கொண்டிருந்த பறப்பனவைகளின் கூட்டு ஒலிகள். ஆற்றங்கரையோரமாய் இருந்து ஒலித்த மலை மக்களின் குழந்தைகள் தண்ணீரில் விளையாடிய சத்தமும் அதனூடே ஒலித்த ஓசையும் கேட்டுக் கொண்டிருந்தன.


(சிப்பிப்பாறை ஸேக்கியுடன்)

ஆழ்ந்த அமைதியில் மனம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. புத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. மனமும் புத்தியும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். சிந்திக்கச் சொல்லும் புத்தி ஓய்வெடுக்க மனம் வெறும் பார்வை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ புல்லாங்குழலும் சாரங்கியும் இணைந்த ஓசை வந்தது. அந்த இசை ஈனக்குரலில் இசைப்பது போல இருந்தது.

ஆற்றில் குளித்து முடித்த மலை மக்களின் குழந்தைகள் காய்ந்து கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கி நெருப்புண்டாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகே மரத்தின் கிளை மீது அமர்ந்து கொண்டு அரும்பு மீசை அரும்பிய இளைஞனொருவன் அரை அடி நீளமிருக்கும் அந்த இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருந்தான். ஆழ்ந்த அமைதியான இடத்தில் ஈனக்குரலோசையில் மனதை தாலாட்டி ஒரு நிலைப் படுத்தும் அற்புதமான அந்த கானத்திற்குள் நான் புகுந்தது. தன்னை மறந்தது. இசை எங்கும் பரவியது.

பேரானந்தம்...!

சாமி ஆசிரமத்திலிருந்து சோறும் குழம்பும் கொண்டு வந்தார்.  ஈரம் மண்டிய சில்லிட்ட தரையில் அமர்ந்து கொண்டு குரு பரிமாறும் சாப்பாட்டைச் சாப்பிடவும் ஒரு வரம் வேண்டும். அது என்னவோ தெரிவதில்லை. வீட்டில் அறுசுவையாக உணவிருந்தாலும் பத்து கவளம் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விடுகிறது. குரு நாதர் உணவிடும் போது அதிகமாக ஆகி விடுகிறது.

அப்போது அங்கு ஒருவர் வந்தார். சாமியுடன் ஒருமையில் பேசி விளையாடிக் கொண்டிருந்தார். எனக்குள் அவர் மீது கொஞ்சம் எரிச்சல் கிளம்பியது. அவர் கிளம்பிச் சென்று விட்டார்.

”சாமி, அவர் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா?” என்றேன்.

”எதுக்கு ஆண்டவனே வரணும்? அது ஒரு உயிர். அதன் உடம்பும் எண்ணமும் செயலும் பேச்சும் எப்படியோ இருக்கட்டும். ஆனால் அதற்குள் ஒரு உயிர் இருக்கிறது. அந்த உயிரின் உடம்புக்கு அப்படித்தான் பேச முடியும். அதுதான் அதற்குத் தெரியும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் எவர் மீதும் எப்போதும் கோபமும் எரிச்சலும் வரவே வராது” என்றார்.

ஒரு தடவை ஆசிரமத்திற்குச் சென்றிருந்த போது வாயிலில் வங்கு பிடித்த ஒரு நாய் வந்தது. அதன் உடம்பிலிருந்து வேப்பெண்ணெய் வாடை வீசியது. முகத்தைச் சுளித்தேன். சாமி தான் அதன் உடம்பில் இருக்கும் புண்கள் ஆறுவதற்காக அந்த நாயைப் பிடித்து அதன் உடம்பு முழுவதும் வேப்பெண்ணையைத் தடவி விட்டார் என்று சொன்னார் அங்கிருந்த ஒருவர். சாமி எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரோ எனத் தெரியவில்லையே என்று  அப்போது நினைத்துக்கொண்டேன்.

விடை இன்று கிடைத்து விட்டது.

எனக்குள் இது காறும் அடாது செய்யும் மனிதர்களின் மீதும், அவர்கள் செய்யும் செயல்களினாலும் கோபம் வரும். ஆத்திரம் வரும். அவர் அப்படிச் சொன்ன அடுத்த நொடியில் கோட்டையாக இருந்த அகங்காரம் நொறுங்கியது. மனசு லேசானது.

அன்றிலிருந்து மனிதர்களை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் பேசும் பேச்சிலிருந்து அவரவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது சர்க்கார் படப்பிரச்சினை நடந்து முடிந்து விட்டது அல்லவா? விஜயும், அரசையும் பகடையாக்கி பெரும் பணம் சம்பாதித்துக் கொண்ட புத்திசாலித்தனத்தை என்னால் உணர முடிந்தது. ஆர்.பி.ஐக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பிரச்சினையின் மூலம் என்னவென்று தெரிந்து கொள்ள முடிந்தது. பெண்களை எளிதில் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கொரு தீர்வினை எடுக்கும் மனப்பக்குவம் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் எனது குரு அவர்களே காரணம். சொல்லிப் புரிவதை விட அனுபவப் புரிதல் மேல். அவ்வப்போது புரிந்து கொள்ள முடியாத பல்வேறு மர்மம் நிறைந்த விஷயங்களை எனக்கு புரிய வைத்து அவரின் அன்பு அருளில் நனைய வைக்கும் அந்த மகா சக்தி நிறைந்த அன்பு உள்ளத்துக்கு நானெப்போது செய் நன்றிக் கடனாற்றப் போகிறேன் என்று தெரியவில்லை.

அவரிடம் நானொரு உதவி கேட்டிருக்கிறேன். செய்கிறேன் என்றிருக்கிறார். செய்வார். அவளைப் பார்க்கப் போகும் அந்த நாள், அந்தப் பேரழகி உடன் உரையாடப்போகும் அந்த நாளே எனது பொன்னாள்.

எனது குருவால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

Monday, October 8, 2018

நிலம் (45) - பீமா பட்டா நிலங்கள் ஜாக்கிரதை

நண்பர் இந்தியாவெங்கும் கிளை பரப்பி இருக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர். நண்பரின் வேண்டுகோளுக்காக சென்னையில் இருக்கும் சொத்து ஒன்றின் வில்லங்கம் பார்க்க நேரிட்டது. 

மூதாதையர் சொத்து என்று கிரையப்பத்திரங்கள் சொல்லியது. வில்லங்கச் சான்றிதழ்களும் அதையே உறுதிப்படுத்தின. எனக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. பட்டாவைக் காணவில்லை. அதற்குப்பதிலாக ஆர்டியோவின் பட்டா வழங்கலாம் என்ற பரிந்துரை மட்டும் இருந்தது. துலாவ ஆரம்பித்தேன். நான் கேட்ட ஆவணங்களைக் கொண்டு வரும்படி நண்பரிடம் சொன்னேன். அவர் தொடர்புடைய ஆளை அனுப்பி வைத்தார்.

என் முன்னால் நான் கேட்டிருந்த ஆவணங்களுடன் அமர்ந்திருந்தார் அவர். எனது பாட்டியின் சொத்து, பரம்பரையாக எனது அனுபோகத்தில் வந்தது என்றும், அதற்காகத்தான் ஆர்.டி.ஓவின் பரிந்துரைக் கடிதம் பெற்றேன் என்றும் விளக்கம் சொன்னார். சொத்து இருப்பது சென்னை அருகில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில். ஆன்லைன் பட்டாவும் கிடைத்தது. எல்லாம் சரி. ஆனால் எங்கோ ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உள்ளுக்குள் உதறிக் கொண்டிருந்தது. வந்த ஆளின் நடவடிக்கை திமிர் தனமாக வேறு இருந்தது.

அரை மணி நேரம், அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். சென்னையில் இருக்கும் நிலங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க என்னிடமிருக்கும் ஒரு சில ஆவணங்களை எடுத்தால், எதிரில் உட்கார்ந்து இருந்தவர் கொண்டு வந்து கொடுத்த நிலங்கள் பீமா பட்டா பெற்றவை எனத் தெரிந்தது. உள்ளுக்குள் கடுப்பு ஏற, ”பீமா(பி மெமோ) பட்டான்னு ஒன்னு இருக்கே அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.

ஆளுக்கு பதட்டம் அதிகரித்து விட்டது. அது மட்டுமல்ல இவரின் நிலத்தின் அருகில் ஒரு அரசியல் தொடர்புடைய ஒருவரின் டிரஸ்ட் பெயரில் ஏகப்பட்ட புறம்போக்கு இடங்கள் டிரஸ்ட்டின் பெயரில் பதிவாகி இருந்ததையும் கண்டேன். விட்டு வெளுத்து வாங்கினேன். ”நீங்க கோயமுத்தூரில் அமர்ந்து கொண்டு சென்னையில் இருக்கும் சொத்துக்களைப் பற்றிக் கண்டுபிடிப்பீர்கள் என கனவா கண்டேன், தெரியாமல் வந்து விட்டேன், ஆளை விட்டு விடுங்கள்” என்றுச் சொல்லி கிளம்பி விட்டார். எந்த வங்கி மேனேஜர் மாட்டிக் கொள்ளப்போகின்றாரோ தெரியவில்லை. அந்தச் சொத்தினை வைத்து லோன் வாங்கி விடலாமல்லவா என பேச்சு வாக்கில் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

அரசு பட்டா நிலங்களை ஒட்டி இருக்கும் புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்க்கவும், பயிர் செய்து கொள்ளவும் வரி விதித்து பட்டாக்களை வழங்கும். அந்தப் பட்டாக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலங்கள் அரசுக்குத்தான் சொந்தமே தவிர தனிப்பட்டவருக்குச் சொந்தமாகாது. உடனே மூன்று வருடங்களுக்கு மேல் அனுபோகப்பாத்தியம் இருந்தால் பட்டா பெறலாமே என கோர்ட்டு உத்தரவு இருக்கிறதே என்று ஆரம்பித்து விடாதீர்கள். அது வேறு, இது வேறு.

சென்னை ஆள் என் நண்பரிடம் சென்று, ”எங்கேய்யா, பிடித்தாய் அவரை?” என்று விசாரித்திருக்கிறார். நண்பரிடம் ”அது புறம்போக்கு நிலம்” என்று சொன்னேன். ”அடப்பாவி ஏற்கனவே ஐந்து லட்சத்தை விழுங்கி விட்டானே, இனி எப்போ எப்படி அந்தக்காசைப் பெறப்போகின்றேனோ தெரியவில்லையே” என கதறிக் கொண்டிருந்தார். அரசு நிலத்துக்கு ஐந்து லட்சம் கொடுத்த பரோபகாரியானார் எனது நண்பர். ஒரு வார்த்தை இந்தச் சொத்தினை வாங்கப் போகின்றேன், பார்த்துச் சொல் என்று கேட்டிருந்தால் ஐந்து லட்சம் தப்பித்திருக்கும். எனக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்துக்காக அவர் இழந்தது ஐந்து லட்சம். 

பில் அனுப்பி வைத்திருக்கிறேன். என்ன செய்கிறார்? எனப் பார்க்க வேண்டும்.

இதே போல கவுண்டம்பாளையத்தில் ஒரு பிரபல சினிமா நடிகர் ஒருவர் பண்ணை வீடு ஒன்றினை வாங்கி வைத்திருந்தார். பாதி பட்டா பூமி, மீதி பீமா பட்டா பூமி. மொத்தமாக முடித்து காசைக் கறந்து விட்டனர். அதை விற்க என்னை அணுகியவுடன் தான் இந்த விஷயம் தெரிந்தது. நடிகருக்கு உள் மன வேதனை ஏற்பட்டு அந்தப் பண்ணையை விற்கவும் இல்லாமல், பராமரிக்கவும் இல்லாமல் சும்மா போட்டு விட்டார். சும்மா கிடக்கிறது அது பராமரிப்பு இன்றி. சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை என்பதை  என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.

Thursday, September 27, 2018

நஞ்சுக் காய்கறிகள்

சமீபத்தில் அக்கா பையன் திருமணத்திற்காக தஞ்சாவூர் வரை செல்ல வேண்டிய சூழல். தஞ்சைப் பக்கம் சென்று நீண்ட நாட்களாகி விட்டன. கல்லூரியில் படித்த போது இருந்த தஞ்சைக்கும் இப்போதைய தஞ்சைக்கும் வித்தியாசங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. தஞ்சாவூரைச் சுற்றிலும் கட்டிடங்கள் எழும்பி இருந்தன. ஆனால் ஊர் அப்படியே இருந்தது. ஆங்காங்கே வீடுகளும் கடைகளும் புதிதாக முளைத்திருந்தன. காவிரியில் தண்ணீர் வந்ததால் ஆங்காங்கே பச்சைகள் தெரிந்தன. கிளை ஆறுகளில் தண்ணீர் நிரம்பிச் சென்று கொண்டிருந்தன. கல்லூரிப் பருவத்தில் எங்கெங்கு நோக்கிலும் தண்ணீர் மயமாகத்தான் இருக்கும். தற்போது கொஞ்சம் பரவாயில்லை ரகம். 

நெற்பயிர்கள் ஆங்காங்கே பச்சை விரித்துக் கொண்டிருந்தன. ஆட்கள் நான் சென்ற மாலை வேலையிலும் வயல்களில் நாற்று நட்டுக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக தஞ்சாவூரில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்குள் தஞ்சமடைந்தேன். சட்டை நாதர் சித்தர் அமர்ந்திருக்கும் திருப்பாம்புரம் கோவிலுக்குச் செல்லும் போது கும்பகோணம் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கி வைத்துக் கொண்டேன். கும்பகோணத்தில் ஒரு அய்யர் ஹோட்டலில் இரண்டு இட்லி ஒரு வடை கொஞ்சம் காஃபி. வழக்கம் போல காஃபி சொதப்பியது. 

உணவகத் தொழிலில் எவரும் சுவை, ஆரோக்கியம் பற்றி கொஞ்சம் கூட கவனம் கொள்வதில்லை. கொடுமை! சாப்பிட வருபவன் இருந்தாலென்ன செத்தாலென்ன நம்ம கல்லாவில் காசு வருகிறதா? என மட்டுமே பார்க்கின்றார்கள். எல்லாம் வியாபாரமாகிப் போன கொடும் அவலம் உணவகத் தொழிலில் நடந்து கொண்டிருக்கிறது. 

இப்போது மீந்து போகும் விஷ உணவுகளை 50 சதவீதம் டிஸ்கவுண்டில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் ஸ்விக்கி, உபர் மற்றும் ஜூமாட்டோவில். அதையும் வாங்கி விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். 

நோய் வராமல் தடுக்க முனையாமல் நோய் வந்தால் மருத்துவமனை செல்ல இன்சூரன்ஸ் பாலிசியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அரசு. இதற்கு வெட்டிப் பெருமை வேறு. கொடுமை!

மறு நாள் காலையில் கோவை வீட்டில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. சாம்பாரின் மணம் வீடெங்கும் நிறைந்து புது வித நறுமணத்தை அக்கம் பக்கமெல்லாம் பரவிக் கொண்டிருந்தது. முட்டைகோஸ் பொறியலின் வாசமும், பறங்கிப் பிஞ்சுப் பொறியலின் வாசமும் சமையலறை முழுவதும் நிறைந்து ஒரு தெய்வீக மணத்தை தெளித்துக் கொண்டிருந்தது. அரை மணி நேரத்தில் சாம்பார், கூட்டு, பொறியல் எல்லாம் தயாராகியது. ஒன்றரை மணி நேரம் ஆகும் சமையல் இன்றைக்கு அரை மணி நேரத்தில் முடிந்ததன் அதிசயம் தான் என்ன? 

என் சிறு வயதில், அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார் என நினைவு. மழை ஊத்திக் கொண்டிருக்கும். இப்போது பெய்யும் மழையெல்லாம் ஒரு மழையே இல்லை. ஐந்து நிமிடம் தான் ஓய்வாக இருக்கும். விடாமல் கொட்டிக் கொண்டிருக்கும். ஓட்டு வீடு ஆகையால் சிலீரிட்டுக் கிடக்கும் வீடு. சத சதவென ஈரமாகிவிடும். சனல் சாக்குகளைப் போட்டு அதன் மீது பாய் போட்டுத்தான் இரவில் தூங்க முடியும். அப்போது காய்கறிகள் எல்லாம் கிடைக்காது. வீட்டுத் தோட்டத்தின் பின்புறம் இருக்கும் முருங்கை மரத்திலிருந்து கொஞ்சம் கீரையைப் பறித்து வந்து  கழனிசாறு தான் வைத்து தருவார்கள் அம்மா. அடுப்பில் வேகும் போதே கீரையும் பருப்பும் சேர்ந்த வாசம் நாவில் எச்சிலூற வைக்கும். கோவையில் இருக்கும் முருங்கைக் கீரை கூட தன்னிலை மாறி முடை நாற்றமடிக்கிறது.எங்கெங்கு பார்த்தாலும் சாக்கடை நீர் பூமிக்குள்ளே. மரமெல்லாம் விஷமாக மாறிப் போய் விட்டது. குளிக்கும் தண்ணீரையும், டாய்லெட் தண்ணீரையும் பூமிக்குள் இறக்கிக் கொண்டிருந்தால் பூமிக்கு மேல் வருபவை எல்லாம் விஷமாகத்தான் வரும்? அதைத்தானே ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் கோடிகளைக் கொட்டி கட்டப்போகின்றார்கள் அறிவார்ந்த பிசினஸ் மேன்களும், அரசியல்வியாதிகளும்.

கோவையில் ஒரு மழை பெய்த அடுத்த நாள் கொசுக்கள் படையெடுக்கின்றன. நானெல்லாம் கொசு என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவன். நாகரீகம் என்ற பெயரில் நகரங்கள் நரகங்களாகி மனிதர்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பன்றி சாக்கடையில் இருக்கும் போது, அதுதான் இன்ப உலகம் என்று நினைத்துக் கொள்ளுமாம். நாமும் நரகத்தில் வாழ்ந்து கொண்டு இதுதான் வாழ்க்கை என சிலாகித்து பீத்திக் கொண்டலைகின்றோம். 

கடந்த ஞாயிறு அன்று சிங்கா நல்லூர் உழவர் சந்தைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஊட்டிக் காய்கறிகள் விற்பனை செய்பவர் முட்டைக்கோஸ் விவசாயத்தைப் பற்றி விவரித்தார். ’பிராய்லர் கோழி போல இப்போதெல்லாம் இருபதே நாட்களில் முட்டைக்கோஸ் வந்து விடுகிறது’ என்றார். 

முட்டைக்கோஸ் நாற்றமெடுக்கும், அவரைக்காயை குக்கரில் வேக வைக்க வேண்டும். கத்தரிக்காய்  சப்பென்றிருக்கும். முருங்கைக்காயோ குடலைப் பிடுங்கும் வாசம் அடிக்கும். பீட்ரூட் அது ஒரு வித்தியாசமான முடை நாற்றமடிக்கும். புடலை, பீர்க்குப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பீன்ஸ், கேரட் வைக்கோலைப் போல கிடக்கும். இவைகள் தான் கோவையில் கிடைக்கும் காய்கறிகளின் சுவை. இவைகள் வேக ஒரு மணி நேரம் ஆகும்.

கும்பகோணத்திலிருந்து வாங்கி வந்த காய்கறிகள் அதன் உண்மையான தன்மையுடன் அடுப்பில் போட்ட அடுத்த பத்தாவது நிமிடத்தில் கூட்டாகவோ பொறியலாகவோ மாறி விடுகின்றன. அந்த அந்தக் காய்கறிகளின் மணமும் சுவையும் அலாதியானவை. வாழைக்காய் எப்படி மணத்தது தெரியுமா? முருங்கைக்காயை வாயில் வைத்தாலே கரைந்தது. புடலையும் பீர்க்கும் அள்ளி வீசிய நறுமணத்தில் வித்தியாசமான சுவையான கூட்டும், பொறியலும் கிடைத்தது.

கோவையில் விற்கும் அத்தனை காய்கறிகளும் விஷம்! விஷம்!! விஷம்!!! இதனால் எவர் கோபம் கொண்டாலும் சரி, அதுதான் உண்மை. அதன் உண்மையை உணர வேண்டுமெனில் கும்பகோணம் பக்கம் சென்று வாருங்கள். விபரம் தெரியும் உங்களுக்கு. இயற்கையாக விளைந்த காய்கறிகளின் தன்மைக்கும், உரமும் பூச்சி மருந்தும் கொட்டி வளர்க்கப்படும் காய்கறிகளுக்கும் மலையளவு வித்தியாசம். புற்றுநோய் வராமல் வேறு என்ன வரும்? 

மீன் மார்க்கெட்டில் வரும் மீன்கள் எல்லாம் மூன்று மாதங்களுக்கு ஃப்ரீஷரில் இருப்பவை என உக்கடம் மொத்த விலை மார்க்கெட் வியாபாரி என்னிடம் சொன்னதிலிருந்து ஏன் கோவை மீன்கள் கருவாட்டு வாசம் வீசுகிறது என அறிந்தேன். முட்டையில் மருந்து, கோழியில் மருந்து, ஆட்டுக்கறியில் கூட கறியில் தண்ணீர் நின்று எடை கூட்டுவதற்காக சோடா உப்பு கலந்த தண்ணீர் கொடுக்கின்றார்களாம்.

கடந்த ஆறு ஆண்டுகளாக சுத்த சைவம். மருத்துவமனை பக்கம் அதிகம் செல்வதில்லை. கோவையில் விற்கும் காய்கறிகளை நினைக்கையில் பச்சாதாபம் எழுவதை தடுக்கவே முடியவில்லை. வீட்டுத்தோட்டம் போட முனைந்திருக்கிறேன். 

Tuesday, August 14, 2018

இரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்

ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் இன்றும் என்னை விட்டு அகலாது அவ்வப்போது காலை நனைக்கும் கடலலைகள் போல நினைவுகளைச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி என்றொரு ஓவிய ஆசிரியர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். ஆறாம் வகுப்பிற்கு அவர் ஓவியப்பயிற்சியுடன், ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தார். கதைகள் சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு ஒரு உள் பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது. ஆங்கிலம் அவருக்குச் சரியாக வராது. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். ஏனென்றால் அடியேன் தான் வகுப்பின் லீடர். பேப்பர் திருத்துவதிலிருந்து மக்கு பசங்களுக்கு மாலையில் டியூசன் சொல்லிக் கொடுப்பதிலிருந்து அவருக்கு நிரம்பவும் பிடித்த மாணவன் நான். வாரம் தோறும் அவரின் வீட்டுக்கு நானும் தங்கையும் சென்று விடுவோம். தனியாகத்தான் இருந்தார். எனக்கு ஆங்கில இலக்கணமும் படிக்கவும் சொல்லித்தருவார்.

என்னென்னவோ செய்து பார்ப்பேன். ஓவியம் மட்டும் எனக்கு வரவே வராது. முடிந்த அளவு முயற்சிப்பேன். ஓவியத்தில் இருக்கும் நாசூக்கு எனக்கு வரவில்லை. அவரும் பல தடவை சொல்லிக் கொடுத்தார். இருந்தால் தானே வருவதற்கு? ஒரு தடவை கூட முகம் சுளித்ததே இல்லை.


என்னைப் படைத்த இறைவனுக்கு எப்போதுமே என் மீது அதிக கரிசனம் உண்டு. என்னிடம் இருக்கும் ஒவ்வொன்றாய் பிடுங்கிக் கொண்டு ”இவன் என்ன செய்வான்னு பார்ப்போம்” என விளையாடிக் கொண்டே இருக்கிறான். பால் குடி மறக்கா குழந்தையாக இருக்கும் போது நடக்கமுடியாமல் கால்களை பறித்துக் கொண்டான். அசரவில்லையே நான். அது அவனுக்கும் எனக்குமான கணக்கு. அதை நான் அவனுடன் தீர்த்துக்கொள்கிறேன். இப்படித்தான் எனக்கு மிகவும் பிடித்த என் ப்ரிய ஆசிரியரை அவன் வேறு பள்ளிக்கு மாற்றினான். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னை விட்டு வேறோரு ஊருக்குச் சென்றார். இப்போது அவர் எங்கிருக்கின்றாரோ? இல்லையோ? தெரியவில்லை.

அதன் பிறகு ஜோசப் அமல்தாஸ் என்றொரு வாத்தியார் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை டியூசன் சொல்லிக் கொடுத்தார். அவரின் பெல்பாட்டம் பேண்ட் ரொம்ப பேமஸ். சைக்கிளில் வருவார். சட்டைக்காலர் கூட ஆட்டுக்காது போல கிடந்து அல்லாடும். ஒரு பைசா என்னிடம் வாங்கியதில்லை. நானும் அவர் எனக்குச் சொல்லித்தரும்படி வைத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் அவரிடம் படித்தேன். படித்துக் கொண்டே இருந்தேன். ரொம்பவும் கண்டிப்பான ஆசிரியர். அவரைப் நெஞ்சுக்குள் திடுக்கென்று இருக்கும். ஆங்கிலத்தில் டென்ஸ் (TENSE) வைத்து வாக்கியங்கள் எழுதக் கற்றுக் கொடுத்தவர் அவர். அதை வைத்துதான் கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில புயலைச் சமாளித்தேன். இன்றைக்கும் எனது ஆங்கிலப் புலமையில் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவரே !

டியூசனுக்குச் செல்லும் போது அவர் அறையின் அருகில் இருந்த மற்றொரு அறையில் வேறொரு பள்ளியில் வேலை செய்து வரும் ஆசிரியர் தங்கி இருந்தார். பார்க்கும் எவரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் பழக்கம் எனக்கு. அந்த ஆசிரியருடன் பழகிக் கொண்டேன். ஒரு மண்ணெண்ணய் ஸ்டவ். இரண்டு மூன்று பாத்திரங்கள். ஒரு சில கரண்டிகள். நான்கைந்து உடைகள். கைலிகள் இரண்டு. ஏதோ ஒரு ஊர்ப் பெயர் சொன்னார். நினைவில் இல்லை. கல்யாணம் ஆகி விட்டது என்றார். அவர் சமைக்கும் போது அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். நாசூக்கு என்றால் அப்படி ஒரு நாசூக்கு. சுத்தமென்றால் அப்படி ஒரு சுத்தம். ஆனால் சமையலில் மண்ணெண்ணெய் வாடை அடிக்கும். ஏதேதோ பேசிக்கொண்டிருப்பார். கேட்டுக் கொண்டிருப்பேன். சிறிது நேரம் அமைதியாக இருப்பார்.

புல்புல்தாராவை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அவர் வைத்திருந்த புல்புல்தாராவை எடுத்து வாசிப்பார். அது அழுது கொண்டே இருக்கும். அவரின் நெஞ்சுக்குள் எந்தக் காதலி அமர்ந்து கொண்டு சோக கீதத்தை வாசித்துக் கொண்டிருந்தாரோ? தெரியவில்லை. அதைப் பற்றி என்னிடம் அவர் ஏதும் சொன்னதும் இல்லை. அவர் புல்புல்தாராவை வாசிக்கும் போதெல்லாம் சோகமாகவே இருக்கும். ஞாயிறுகளில் அவரைச் சந்திக்கச் சென்று வருவேன். அவரின் அந்த வாசிப்பு எனது அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அவர் அறையின் நேர் கீழே இருந்த வீட்டில் ஒரு குடும்பம் தங்கி இருந்தது. அந்தக் குடும்பத்தின் தொழில் ஐஸ் விற்பது. மலர்ந்த மல்லிகை போன்ற ஒரு முகம் எனக்கு மாலையில், விற்காமல் மீதமிருக்கும் ஐஸைக் கொண்டு வந்து நீட்டும். எனக்கு மட்டுமே நீட்டும். முக்காடிட்டு ஒற்றைக் கண்ணில் வழிந்தோடும் பாசத்தைக் காட்டும் அந்தக் கண்கள் இப்போதும் என் கனவுகளில் வந்து என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொள்வேன். பின்னர் தூக்கம் வராது. மனது தவியாய் தவிக்கும். அந்தக் கண்கள் இப்போது என்னவாக இருக்குமோ தெரியவில்லை.


கண்கள் என்றைக்கும் அழிவதில்லை. அதன் அழகும் குறைவதில்லை. கண்கள் சொல்லும் கவிதைகளும், அதன் பேச்சுகளையும் இதுவரை எழுதி எழுதியே களைத்துப் போன கவிதையாளர்களால் கூட கண்களின் பேச்சை எழுத முடியவில்லை. கண்களுக்கு மொழியே தேவையே இல்லை அல்லவா?

கருணை பொங்கி, ப்ரியமாய் வழிந்தோடிய அந்தக் கண்களின் அன்பில் நனைந்து, நனைந்து மூழ்கி அதிலேயே கரைந்து போக மனது தவிக்கிறது. 

Monday, August 13, 2018

தமிழகம் ஒரு தர்மபூமி

திருவள்ளுவர் !  இதைத்தவிர வேறொன்றினையும் தமிழகம் ஒரு தர்ம பூமி என்பதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டியதில்லை. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அதை எவரும் நம்புவதும் இல்லை. ஆனால் இப்போது நம்பித்தான் ஆக வேண்டும். இந்தக் காலத்தில் தர்மமாம், அதர்மமாம் என்று கேலி பேசுபவர்கள் அதிகமிருக்கின்றார்கள். புத்தகங்களில் இருப்பவை எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்றெல்லாம் அடுக்கடுக்காக காரணங்களை அடுக்குவார்கள். 

இப்படித்தான் கண்ணதாசன் ஆரம்பத்தில் கடவுளே இல்லை என்று கடுமையான நாஸ்திக உணர்வில் கடவுள் மறுப்பு கட்டுரைகளைத் தீட்டி வந்தார். பேசியும் வந்தார். அவரின் கடைசிக் காலத்தில் கண்ணனின் கீதைக்கு உரை எழுதினார். ”கண்ணா ! கண்ணா !!” என்று உருகினார். 

இதை இப்போது எழுதக்காரணம் இருக்கிறது. எழுதத்தான் வேண்டுமா? என்று கூட யோசித்தேன். 

பதினோறு வயசுக் குழந்தையைக் கூட கற்பழிக்கும் காமாந்தகர்கள் இங்கு இருக்கின்றார்கள். இன்றைக்கு என்ன? என்பது பற்றிச் சிந்திக்கும் சிந்தனாவாதிகளுக்கு, நின்று கொல்லும் தர்மம் பற்றிய ஒரு சில விஷயங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். 

குறுக்கே நூல் போட்டவெனெல்லாம் கடவுள்கள் என்று பேசும் அறிவிலிகள் இங்கு அதிகமிருக்கின்றார்கள். கடவுளையும் காசு பண்ணும் அதிபுத்திசாலி மடையர்களும் இருக்கின்றார்கள். ஆன்மீகத்தின் பெயரால் ஒன்றுமறியா எதார்த்த மனிதர்களின் சொத்துக்களை உறிஞ்சிக் கொழுத்து காமத்தில் திளைத்து, உலகியல் இன்பங்களை நுகர்ந்து தெரியும் சாமியார்ப்பயல்களும் இங்கு இருக்கின்றார்கள். மதத்தின் பெயரால், வேதப் புத்தகங்களின் பெயரால் கொலை செய்யும் கொடூர மதிபடைந்த மாந்தர்களும் இங்கு இருக்கின்றார்கள். அரசியலின் பெயரால், அதிகாரத்துக்கு வந்து அடாத கொலைகளையும், துடிக்கதுடிக்க பறித்துத் தின்னும் கொள்ளையர்களும் இங்கு இருக்கின்றார்கள். நீதியின் பெயரால் அதிகாரத்திற்கு வரும் நீதிமான்களும் பதவிக்காக தர்மத்தை விற்றுக் காசாக்கும் அற்ப மனம் படைத்த அயோக்கியர்களும் இங்கு இருக்கின்றார்கள். தானொன்றே நிதர்சனம் என்று பேசித் திரிபவர்களும் இங்கு இருக்கின்றார்கள். பேனாவிற்குள் ரத்தத்தையும், நீதியைக்கொன்ற பாதகத்தையும், அரசியல்வாதிக்கும் அடிபணிந்து நக்கி விடும் எச்சிலையும் போட்டு எழுதும் பத்திரிக்காவாதிகளும் இங்கு இருக்கின்றார்கள். எது உண்மை? எது பொய்? என்று உணரா வண்ணம் தீது பேசி, புறம் கூறி வாழ்க்கை நடத்தும் இழிபிறந்தார்களும் இங்கு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் தர்மம் என்ற ஒன்று இருக்கிறது என்பது பற்றிய சிந்தனை இருப்பதில்லை. அதிகாரமும், அகங்காரமும் அனைத்தையும் மறைத்து விடுவதால் அடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அப்படியானவர்களின் கடைசி என்ன என்று எவருக்கும் தெரிந்திருக்கப்போவதில்லை. அதைப் பற்றித்தான் இப்போது படிக்கப்போகின்றோம். 

ஆட்டோ ஷங்கர் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது நமக்கு இப்படி ஒரு முடிவு இருக்குமா? என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? ஹிட்லர் தன் முடிவு இப்படித்தான் இருக்கும்? என நினைத்தாவது பார்த்திருப்பாரா? உலகையே ஆள நினைத்த நெப்போலியனுக்கும், அலெக்‌ஷாண்டருக்கும் அவர்களின் இறுதிக்காலம் இப்படி ஆகி விடும் என்று தெரிந்திருக்குமா? நிச்சயம் தெரிந்திருக்காது. அவ்வாறு தெரிந்து இருந்தால் எவரும் ஒருவரையாவது நாட்டினைப் பிடிக்கும் ஆசையில் கொலை செய்திருப்பார்களா? 

ஒரு காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் நான்கு கைகளாலும் லஞ்சம் வாங்கி சொத்துக்களைக் குவித்தார். தனது இரண்டு மகன்களும் அவரின் கண் முன்னே காரில் நசுங்கிச் செத்ததைப் பார்த்து பைத்தியமாகிப் போனார். கல்விக்கு காசு வாங்குவது தலைமுறைக்குற்றம். கல்வி அறிவித்தவன் கடவுள் ஆவான் என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால் அதற்காக காசு வாங்கிக் குவித்த ஒருவர் தன் ஒரே மகனைப் பரிகொடுத்து இன்றைக்குப் படுக்கையில் இருக்கிறார். ஓடி ஓடி, அடித்துப் பிடித்து, அடுத்தவனைக் கெடுத்துப் பிடுங்கிச் சம்பாதிக்கின்றவர்களின் இறுதிகாலம் கொடுமையானதாக இருக்கிறது. வயதானவர்களிடம் பேசிப்பாருங்கள். பெற்ற பிள்ளைகள் பெற்றோர்களை காப்பகத்தில் கொண்டு போய் தள்ளி விட்டு விடுகின்றார்கள். பின்னே எதற்கு ஓடி ஓடி சம்பாதித்தார்கள் என்றால் அப்போது தெரியவில்லை, இப்போதல்லவா தெரிகிறது என்று தத்துவம் பேசுவார்கள். நோயில் வீழ்ந்து நொடிக்கு நொடி அவஸ்தைப் பட்டு அனாதையாகச் செத்துப் போவார்கள்.

பூமி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. எல்லாமும் இருக்கிறது. ஆனால் அதை ஆளும் ஆட்கள் எங்கே போனார்கள்? தமிழகத்தை ஆண்ட அரசியல்வாதிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பார்த்தால் அவர்கள் ஆடிய ஆட்டங்களும், அவர்களின் கடைசிக்கட்ட வாழ்க்கை முடிவுகளும் கண் முன்னே சாட்சியாக வந்து நின்று கொண்டிருக்கின்றன. இத்தனையும் தெரிந்தும் மனிதர்கள் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது அவர்களின் அறிவிலித்தனமாகத்தானே இருக்க முடியும்?

அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டுக்குள் காவிரியில் பொங்கி வரும் தண்ணீரை திருப்பி விட முடியுமா? அவர் காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடக்கூடாது என்று பேசினாரே இப்போது பேசச் சொல்லிப் பாருங்களேன்.

அணையில் இத்தனை அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கக்கூடாது என்று கோர்ட்டில் அடாது செய்தார்களே இப்போது தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறார்களே, அந்த மழையிடம் சென்று அதிகாரத்தைக் காட்ட முடியுமா? கோர்ட்டில் வழக்குப் போட்டு, சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி மழையைத் தடுக்க முடியுமா? குறைந்த பட்ச மனிதாபிமானமும் இன்றி பேசியவர்களுக்கு இப்போது பிறரின் மனிதாபிமானம் தேவைப்படுகிறது அல்லவா? இதுதான் தர்மத்தின் கணக்குத் தீர்க்கும் வழி!

தண்ணீர் - உயிர் நீர். இயற்கையின் அற்புதப் படைப்பு. இயற்கையின் முன்னே மனிதர்கள் எல்லாம் அற்பத்திலும் அற்பமானவர்கள். எந்தத் தண்ணீரால் பாதிப்பு என்று பொய் பேசினார்களோ அது உண்மையாக நின்று அவர்களின் முன்னே “நாட்டியம் ஆடுகிறது”

அதைத் தரமாட்டோம் என்று பேசியவர்கள் எல்லோரும் இப்போது என்ன பேசுவார்கள்? இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தால் ஒரு மாநிலமே கடலுக்குள் சென்று விடும். இன்னொரு மாநிலமோ கதிகலங்கிப் போகும். அண்டை மாநிலங்களை நோக்கி நீளும் அவலக்குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. அன்றைக்கு ஆணவக்குரல்கள் ஒலித்தன. இன்றைக்கு அவலக்குரல்கள் எழும்புகின்றன. ஒவ்வொரு  மாநில மக்கள்களையும் தன் சுய நலத்துக்காக பிரித்தாண்ட அரசியல்வாதிகள் இப்போது தங்கள் கட்சியினரை வைத்து எல்லாம் செய்ய வேண்டியதுதானே? ஏன் செய்ய முடியவில்லை? உதவுங்கள் என்று அலறுகின்றார்களே ஏன்?

தர்மம் நின்று கொல்லாது. சுத்தமாகத் துடைத்துப் போட்டு விடும். சென்னையில் அட்டூழியங்கள் அதிகரிக்கையில் சுனாமியும் வந்தது. மழையும் வந்தது. சுத்தமாகத் துடைத்து போட்டு விட்டுப் போனது.

இந்தியா தர்ம பூமி. அதில் தமிழகமோ ஆன்மீக பூமி. ஆடும் வரை ஆட விட்டு, பின் மொத்தமாகப் பிடுங்கிக் கொண்டு விடும் தர்மத்தின் கடவுள்கள் உறையும் அற்புதமான பூமி. தமிழகம் மட்டுமே மனிதர்கள் வாழ மிகத் தகுதி வாய்ந்த அற்புதமான பூமி. வேறு எங்கிலும் தமிழகத்தைப் போன்ற வாழ்விடம் இல்லை.  தமிழகத்துக்கு அடாது செய்தால் படாதபாடுபடுவார்கள் என்பது உண்மை.

தமிழகத்தில் தமிழராய் வாழ நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

இந்தப் பூமிப் பந்தில் மனிதர்கள் வாழும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு தமிழனும் வாழ்வான். வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். ஏனென்றால் அவன் தர்ம பூமியில் பிறந்தவன். அவனின் பாதை தர்மத்தின் பாதை. 

(இக்கட்டுரை யாரையும் எவரையும் புண்படுத்த வேண்டுமென்று எழுதவில்லை. உண்மையை எடுத்துச் சொல்லி இருக்கிறேன். தர்மத்தின் பாதையைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வாழும் வரை பிறரை நிந்திக்கா வண்ணமாவது வாழலாம். நிந்தனை செய்து வாழ்பவர்கள் நித்தமும் சித்ரவதைப்பட்டு சீரழிந்து போவார்கள் என்கிறது தர்மம்)