குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, November 11, 2017

கடவுளின் கவலை

கமல்ஹாசனுக்குத் திடீரென வீரம் வர, சினிமா ஹீரோ போலவே அரசியலும் இருக்குமென நினைப்பில் அல்லுப்படுத்திக் கொண்டிருக்கிறார். கமல் வந்தாலே எனக்கு பூநூலும் நினைவுக்கு வந்து விடுகிறது. சிறிய வயதுப் பழக்கம். வாழ்ந்தாலும் செத்தாலும் அய்யர் சொல் கேளாமல் ஆகாது எங்களூர் பக்கம். அய்யர் வந்து சொன்னால் தான் எல்லாமுமாக இருந்து வந்த ஊர் எமது பிறந்த ஊர். இன்றைக்கும் என்னால் விடவே முடியவில்லை. குலதெய்வத்திலிருந்து எல்லா தெய்வங்களையும் தரிசிப்பது என்பது இரத்தத்தோடு ஊறிய ஒன்றாகிப் போனது. அய்யர் வந்து சொன்னால் தான் நல்ல நாள் தெரியும். வீடுகட்ட, கலப்பை ஏர் உழ, விதை விதைக்க இப்படி எல்லாவற்றுக்கும் அவர்கள் தான் நாள் குறிப்பார்கள். நாள் குறித்தால் தவறாது வேலை. கோவில் குளங்களுக்குச் செல்வதென்றாலும் அவர்கள் சொன்னால் தான் உண்டு. இந்தப் பழக்கம் இன்றைக்கும் என்னிடமிருந்து விலகி விடமாட்டேன் என்கிறது. பூநூல் போட்டவர் என்றால் சாமி என்ற சொல்லைத்தவிர வேறு சொல் வருவதில்லை.

அதுபோல கோவில் பக்கம் சென்றால் கைகள் தானாகவே உயர்ந்து கொள்கின்றன. நவீன யுகத்து யுவனாகையால், சினிமா ஹீரோயினிக்கள் போல உதடுகளில் கையால் தட்டிக் கொள்ளும் வழக்கமும் உண்டு.

இந்த நாத்திகர்கள் இருக்கின்றார்களே அவர்களுக்கு என்ன தான் பிரச்சினை என்றே புரியவில்லை. கடவுள் இருக்கிறார் என்றால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று எவரும் வாளா இருப்பதில்லை. எதையாவது எழுதி வைத்துப் போய் விடுகின்றார்கள். அப்படியும் இருக்குமோ இப்படியும் இருக்குமோ என மனசைக் கிளறி விட்டு விடுகின்றார்கள். அண்ணாதுரையின் கடவுளின் கவலை பற்றிய கட்டுரையைப் படித்து விட்டு குழம்பித்தான் போய் விட்டேன். அதுமட்டுமல்ல எனது குருநாதரின் “அது உங்களின் அறியாமை” என்ற வார்த்தைகளும் என்னைச் சூழ்ந்து கொண்டு கும்மி அடிக்கின்றன. குழம்பினால் தான் தெளிவாகும். நான் குழம்பி விட்டேன். நீங்கள்?????

இதோ அந்தக் கட்டுரை கீழே....!



நன்றி : அறிஞர் அண்ணாத்துரை மற்றும் இதைப் பதிப்பித்தவர்களுக்கும். இந்த நூல் நாட்டுடைமை யாக்கப்பட்டிருப்பதால் இங்கு வெளியிடப்படுகிறது. ஆகவே எவருக்கும் உரிமை உண்டு இந்த நூல் மீது. அது மட்டுமின்றி அடியேன் பக்கா ஆத்தீகன். எத்தனை அண்ணாத்துரை வந்தாலும் எனக்கு நெற்றியில் திருநீறு வைக்காமல் பொழுது விடிவதில்லை. அவ்வப்போது தர்ஹாவின் பாங்கு அழைப்பும் கேட்க வேண்டும் எனக்கு.

திருவையாற்றங்கரை நினைவலைகள்

கடந்த வாரம் என நினைவு. இரு கரை தொட்டு பொங்கிப் புரண்டோடும் திருவையாரில் செல்லும் காவிரியின் போட்டோவை தினமலரில் பார்த்தேன்.  நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அதற்கு முன்பு தினமலரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

இப்போதெல்லாம் ராமசுப்பு என்கிற அந்துமணி அடிக்கடி தினமலரில் தென்படுகிறார். தலையில் வெளிர் நீல நிற தொப்பி அணிந்து திமுக மேடையில் அமர்ந்திருந்தார். பிரதமர் தமிழக விசிட்டின் போது பார்வையாளர்களில் பகுதியில் அமர்ந்திருக்கிறார். தினமலர் வாரமலரில் அந்து மணி என்ற கேரக்டர் இவர்தான் என பத்து வருடங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. இப்போது அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 

தொடர்ந்து தினமலரை வாசித்து வருவதால் அதன் செய்தி வடிவம் நெகடிவ் தன்மையாக மாறி வருவதை என்னால் அறிய முடிகிறது. அதுமட்டுமின்றி அரசியல் சார்பும் தெளிவாகத் தெரியும்படி தினமலர் நடந்து கொள்கிறது. பையன் பள்ளியில் நியூஸ் வாசிக்க செய்திகளைக் குறித்துத் தரும்படி கேட்பான். அப்போது எந்தச் செய்தியை எடுத்தாலும் நெகட்டிவ் தலைப்பு வருகிறது. 

குறிப்பாக மன்னார்குடியினரைப் பற்றியும், அதிமுகவினரைப் பற்றியும் சமீபத்திய செய்திகள் தான் முழு பக்கத்தையும் நிரப்புகின்றன. மன்னார்குடிக்கும் தினமலருக்கும் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. அது அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை. இந்த ஒரு பிரச்சினை பற்றிப் படிக்க செய்தி தாள் வாங்கவில்லை என்று தினமலர் உணர வேண்டும். இந்தச் செய்தியைத் தலைப்புச் செய்தியாக்குவது தினமலருக்கு வேண்டுமெனில் நன்மையாக இருக்கலாம். ஆனால் படிக்கும் வாசகர்களுக்கு எரிச்சல் தான் வரும். தினமலர் என்ற மாபெரும் நிறுவனம் தனி மனித செய்திக்காக இல்லை என்றே நினைக்கிறேன்.

தினமலரின் தலைப்புச் செய்திகள் உட்பட உள் செய்திகளின் தலைப்புகள் நெகட்டிவ் செய்திகளாகவே வருவது தலைமை மாறியதால் வந்த பிரச்சினையா என்று தெரியவில்லை. தினமலர் தலைமைப் பொறுப்பாளர்கள் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதும் அதை புகைப்படத்தில் வெளியிட்டு மகிழ்வதும் தினமலரின் தகுதிக்கு குறைவான செயல் என்றே படுகிறது. தலைவர்கள் வரலாம் போகலாம். ஆனால் தினமலர் என்ற மாபெரும் அமைப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே அந்துமணி அவர்கள் எனது இந்த பதிவை சற்றே கவனிக்க வேண்டுமென நினைக்கிறேன். 

எனக்கு பனிரெண்டு வயதாகிய போது தந்தை நாடி மாணிக்க தேவர் காலமானார். அறியாத வயது. கருமாதிக்காக தாய் மாமக்களுடன் திருவையாறு சென்றிருந்தேன். அப்போதெல்லாம் பஸ் தான் ஒரே வழி. ஊரிலிருந்து பட்டுக்கோட்டை, பின்னர் தஞ்சாவூர், பிறகு திருவையாறு. இரவில் சென்று ஒரு மடத்தில் தங்கிக் கொண்டோம். சரியான குளிர். எனக்கு மேலே போர்வை போர்த்தவில்லை என்றால் தூக்கமே வராது. பாயில் இரவு முழுவதும் தூக்கம் வராமல் குளிரில் நடுங்கிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தேன். விடிகாலையில் எழும்பியதும் சலூனுக்குச் சென்று முடி மழித்து அய்யருடன் சென்றோம்.

கரை புரண்டோடும் காவிரியாற்றினைக் கண்டு மலைத்துப் போனேன். பனி படர்ந்து குளிர்ந்த அந்த விடிகாலைப் பொழுதில் தண்ணீருக்குள் குளித்து வர வேண்டுமென்று நினைத்தாலே நடுங்கியது. வேறு வழி இன்று படிகளில் இறங்கி குளித்தால் காவிரித்தாய் தன் வெது வெதுப்பான நீரில் உடலைத் தழுவினாள். குளிர் உடம்பை விட்டு ஓடியே போனது. அய்யர் ஏதோதோ செய்யச் சொன்னார். எல்லாம் முடித்து மீண்டும் குளியல் போட்டு பஸ்ஸில் வரும் போது நீண்ட அந்தப் பாலத்தின் வழியாக காவிரியைப் பார்த்தேன். இரு கரை தொட்டு கடல் போல விரிந்து சென்றாள் அவள். கரைகளோரம் வாழைகள் செழிப்பாக வளர்ந்து இருந்தன. எங்கு நோக்கினும் பச்சைப்பசேல் செடிகொடிகள். விவசாயம் என செழித்திருந்தன.

ஆறேழு வருடங்களுக்கு முன்பு, ஒரு சினிமா ஷூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அப்பாவின் நினைவு நாள் மறு நாள் வந்தது. அப்போது திருவையாறு சென்றிருந்தேன். அகன்று விரிந்த காவிரியின் நடு மத்தியில் சள்ளைப் பிள்ளை போல ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடந்தது. மனசே ஆறவில்லை. 

சின்ன விஷயம் தான். மனிதனிடம் இருந்த மனிதம் இறந்து போனது. காவிரியில் தண்ணீர் வரவில்லை. விவசாயிகள் செத்தார்கள். தண்ணீரை எவரும் கண்டு பிடிக்கவும் இல்லை, அதற்கு உரிமையாளர்களும் இல்லை. ஏன் இந்தப் பூமியில் மனிதன் வந்து செல்லத்தான் இயற்கை அனுமதித்திருக்கிறதே ஒழிய உரிமை கொண்டாட அல்ல. ஆனால் மனிதன் என்ன செய்கிறான்?

எத்தனை தெய்வங்கள் வந்தாலும், எத்தனை நன் நூல்கள் இருந்தாலும், எத்தனை மதங்கள் மனிதனை நல் வழிப்படுத்தினாலும் அவன் இதுவரையிலும் சரியானதே இல்லை. சக மனிதனை மனிதனாகக் கூட நினைக்க மாட்டேன் என்கிறான். அவனின் மிருக உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாகவே மாற்றி விட்டிருக்கின்றன.

தன் பிள்ளை பசியாக இருப்பதை அறிந்த உடன் தன் தட்டில் இருக்கும் உணவைக் கொடுத்து பசியாறச் செய்யும் ஒருவன், அதே பக்கத்து வீட்டுக்காரன் என்றால் கொடுக்க மாட்டேன் என்கிறான். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும். 

பூண்டியில் கணிணிப் பட்டயப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, கல்லூரி விழாவில் திருவையாறு கல்லூரியிலிருந்து வந்த ஒரு பெண் காயத்ரி என நினைவு, ஆசை அதிகம் வச்சு என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். அன்றிலிருந்து பூண்டி கல்லூரியே காயத்ரியின் மீது மயக்கம் கொண்டது. ஒரு சிலர் திருவையாறுக்கே சென்று அவளைக் கல்லூரியில் தேடினார்கள் என்றுச் சொல்லக் கேட்டேன். பாத்ரூம்களில் காயத்திரியின் படங்கள் வரையப்பட்டிருந்தன. அதுவும் கொஞ்ச நாள் தான். கல்லூரி காயத்ரியை மறந்து போனது.

ஆனால் என் நினைவுகளில் காவிரி ஆறு இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது.

Friday, October 27, 2017

பிள்ளைகளின் அன்பு பொய்யானதா?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதமான அனுபவத்தைத் தருபவை. விடிகாலையில் எழும் போது இன்றைக்கு நடக்க இருப்பவைகளைப் பற்றியும், புதிதாகச் சந்திக்க இருப்பவர்களைப் பற்றியும் ஆர்வமிருந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். 

ஓஷோ சொல்வார் வாழ்க்கை மீது ஆர்வம் வேண்டும் என. 

ஆர்வம் இல்லாதவர்கள் ’வெந்த சோற்றைத் தின்று விதி வந்த அன்று செத்துப் போவார்கள்’. வாழ்க்கையில் ஆர்வமின்றி இருப்பவர்களால் இந்த உலகிற்கு மட்டுமல்ல அவர்களைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கும் துன்பமேயன்றி வேறொன்றுமில்லை. தற்கால மனிதன் இழந்தது இந்த ஆர்வம் என்ற குணத்தை என்பார் ஓஷோ. வாழ்வதற்காக வேலை என்பவர்கள் தான் புலம்பிக் கொண்டிருப்பார்கள். வேலையை ஆர்வமுடன் நேசிக்கும் ஒருவன் உயர உயர உயர்ந்து கொண்டே இருப்பான்.

விஜய் டிவியின் சந்திர நந்தினி (செம அழகு இந்தப் பெண்) தொடரை அடிக்கடிப் பார்ப்பதுண்டு. சந்திரகுப்தர் மவுரியருக்கு ஒரு பெண்ணை காதலிக்கத் தெரியவில்லை என்பதுதான் இந்தத் தொடரின் கதை முடிச்சு. இயக்குனர் சுற்றும் பூ உடல் முழுதும் பரவினாலும் அழகுப் பெண்களைப் பார்க்கும் போது சூரிய ஒளியில் மலரும் காந்திப் (எதார்த்தமாக வந்து விட்டது) பூ போல உள்ளம் மலர்ச்சி அடைகிறது. அவர்கள் நலமுடனும் நன்றாகவும் இருக்கட்டும். (அது ஏன் சூரிய காந்தி எனப் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. காந்திக்கும் மலர்ச்சிக்கும் என்ன தொடர்பு?)

இந்தத் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மகள் சூடான சாதத்தில் பருப்பு விட்டு பிசைந்து கொண்டு சாப்பிடுவதற்காக ஷோபாவில் அமர்ந்தார். என்னைப் பார்த்ததும், “அப்பா, நல்ல மணமாக இருக்கிறதப்பா, ஊட்டி விடுகிறேன், சாப்பிடுகின்றாயா?” என்று கேட்க, மறுக்க முடியுமா?

சாதத்தைப் பிசைந்து கவளமாக எடுத்து என் உதட்டில் படாமல் வாய்க்குள் வைத்து ஊட்டி விட்டார். மணோன்மணியே அருகில் இருந்து ஊட்டிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. மகள் கையில் தகப்பன் சாப்பிடுவது என்பது எவ்வளவு மகிழ்வு தரும் நிகழ்வு? ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு குறுகுறுப்பு ஏற்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் அந்தக் குறுகுறுப்புக்கு விடை தேடி மனசு அலை பாய்ந்தது. விடை கிடைக்குமா?

மனைவி உணவு ஊட்டுகையில் வாய்க்குள் வைத்து உணவை ஊட்டுவார். அம்மாவும் அப்படித்தான். ஆனால் மகளோ தன் விரல் கூட உதட்டில் படாமல் உணவை ஊட்டி விட்டதனால் எனக்குள் ஏற்பட்ட அந்த குறுகுறுப்புக்கு விடை காணாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். காரணமின்றி காரியம் இல்லை. ஏதோ ஒரு மறைபொருள் இருக்க வேண்டுமென்ற சிந்தனையில் தூங்கிப் போனேன்.

விடிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து மனையாளுக்கு காய்கறிகள் நறுக்கிக் கொடுத்து விட்டு ஓஷோவின் மனிதனின் புத்தகம் புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். நான்காம் பாகத்தில் மகன் என்றொரு தலைப்பில் விவரிக்க ஆரம்பித்தார்.

ஒரு தாய் தன் பிள்ளை மீது அன்பு கொண்டிருப்பது இமயமலையில் இருந்து வழிந்தோடும் கங்கை நீரைப்போல. தாய்க்கு தன் பிள்ளை மீது அன்பு கொள்வது இயற்கை நியதி. பிள்ளைக்கு தாயின் அரவணைப்பும் அன்பும் தேவை. அதற்கான நான் உன் மீது அன்பாயிருக்கிறேன், ஆகவே நீயும் என் மீது அன்பாயிருக்க வேண்டுமென்று குழந்தையைக் கேட்பது மடத்தனம். அந்தக் குழந்தைக்கு தன் குழந்தையின் மீது தான் அன்பு இருக்குமே ஒழிய தன் தாயின் மீது இருக்காது என்று போட்டுடைத்தார் ஓஷோ.

ஓ...! இதுதான் காரணமா? என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல ஜோதி சாமியை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ”இது என்ன ஆண்டவனே பிரமாதம், இன்னொன்றும் சொல்கிறேன்” என்றார்.

”சொல்லுங்க சாமி” என்றேன். 

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

திரு மூலரின் ”யாக்கை நிலையாமையில் வரும் பாடலொன்று” இது.

ஆவி நீங்கிய உடல் ஊர்முனி பண்டமாகும். ஆவி நீங்கியதும் அவ்வுடம்பினைச் சூழ்ந்திருந்து உறவோடு ஊரெலாம் ஒன்று கூடி யழுவர். முறைப்பெயர் சிறப்புப்பெயர் முதலிய பெயர்களை ஒழித்துப் பிணமென்று பெயரிடுவர். பெயரிட்டு முட்செடியாகிய சூரையடர்ந்த சுடுகாட்டிற்குக் 'காலைக் கரையிழையாற் கட்டித்தாங்கை யார்த்து, மாலை தலைக் கணிந்து மையெழுதி - மேலோர், பருக்கோடி மூடிப் பலரழ' எடுத்துச் செல்வர். சென்று அவ்வுடம்பினை ஈமத்தேற்றி வாய்க் கரிசியிட்டுக் குடமுடைத்துக் கொள்ளி வைத்து எரிகொள்ளி இட்டுச்சுடுவர். சுட்டபின் நீரின் மூழ்கி இறந்தவரைப்பற்றியேனும் இனி இறக்கப் போகும் தம்மைப் பற்றியேனும், இதற்கு வாயில்களாகவுள்ள நிலையாமை, மாயை, வினை, மலங்களைப் பற்றியேனும் ஒரு சிறிதும் நாடாது நினைப் பொழிந்திருப்பர். (பொழிப்புரை  ப.ராமநாதப் பிள்ளை)

”ஆண்டவனே, ஒவ்வொரு மனிதனும் எப்போதும் தனியாள் தான். மேலே சொல்லி இருக்கிற பாடலையும் அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார். 

“ நச்சுன்னு மண்டைக்குள் ஏறிவிட்டது சாமி” என்றேன்.

ஆகவே நண்பர்களே, யாக்கை நிலையாமையும், அன்பின் தத்துவத்தையும் பற்றி நன்கு அறிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கையை ஆர்வமுள்ளதாக மாற்றுவோம். 

Thursday, October 26, 2017

உள்ளம் சிவமானால் உடம்பு கோவிலாகும்

தீபாவளி அன்று இரண்டு மணிக்கு எழுப்பி விட்டார் மனையாள். தூக்கக் கலக்கத்தோடு சென்றால் ஒரு கூடை சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய், வெல்லம், சுக்கு, ஏலக்காய் என்னைப் பார்த்துச் சிரித்தன.

”இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்கிறது, அதற்குள் வடை, சுழியம், பாலப்பம் செய்ய வேண்டும், படபடவென வெங்காயத்தை உரித்து நறுக்கி, மிளகாயை மெல்லிதாக நறுக்கி, இஞ்சியை வெகு சிறிதாக கட் செய்து விட்டு, அப்படியே சுக்குவை தனியாகவும், ஏலக்காயைத் தனியாகவும் பொடித்து தனித்தனியே வைத்து விடுங்கள். வெல்லத்தை பொடிப்பொடியாக தூள் செய்து வையுங்கள், அப்படியே அந்த ஆறு மூடி தேங்காயைத் துருவி வைத்து விடுங்கள்” என்றுச் சொன்னார். மலைத்துப் போய் விட்டேன். முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. செய்து தான் ஆக வேண்டும். நானே விரும்பி காதலித்து திருமணம் செய்து பதினேழு வருடங்கள் கடந்து விட்டன. இருந்தாலும் சின்னதா ஒரு பிட்டைப் போடுவோமென நினைத்து, ”உடம்பு வலிக்கிறா மாதிரி இருக்கே”ன்னு சொல்வதற்குள் ”சுக்கு மல்லிக்காப்பி அதோ இருக்கிறது, குடித்து விட்டு, லூசுத்தனமா பேசாம வேலையைச் செய்யுங்கள்” என்றார்.

கண்கள் எண்ணைத் தேய்த்துக் குளிக்காமல் குளிக்க சிறிய வெங்காயத்தை உரித்து நறுக்கி, பச்சைமிளகாயை வெகு மெல்லிதாக நறுக்கி, இஞ்சியை தோல் உறித்து நறுக்கிக் கொடுத்தேன். கொஞ்ச நேரத்தில் வடையின் வாசனை வந்தது. அடுத்து கத்தியால் வெல்லத்தைச் சீவி(புதிய டெக்னிக், காப்பிரைட் என்னிடம் உள்ளது) பருப்புடன் சேர்த்து அதனுடன் சுக்கு  கொஞ்சமும், ஏலக்காய் கொஞ்சமும் சேர்த்து வறுத்த தேங்காய்த் துருவலைச் சேர்த்து கொடுத்தேன். சுழியம் அடுத்த அடுப்பில் வெந்தது. பாலப்பத்திற்கு தேவையானவைகளைச் சேர்த்து அம்மணியே பலகாரத்தைச் செய்தார்கள். 

ஒரு வழியாக சமைத்து முடிக்க பசங்க இருவரும் எழுந்து வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர். நல்ல நேரம் பார்த்து நால்வரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து பலகாரங்கள் சாப்பிட்டு குருவினைத் தரிசிக்க கிளம்பினோம்.

இந்த வருடம் வெடிச்சத்தங்கள் அதிகம் இல்லை. சாலையெங்கும் பரவிக்கிடக்கும் பட்டாசுக் காகிதங்கள் சுத்தமாக இல்லை. ஆங்காங்கே ஊசிப்பட்டாசு வைத்துக் கொண்டு கையில் புகையும் ஊதிபத்தியுடன் சிறுவர்கள் திரிந்தார்கள். எவரின் முகத்திலும் மலர்ச்சி இல்லை. 

வரி என்கிற பெயரில் ஏகப்பட்ட பணத்தை மக்களிடமிருந்து பறிக்கிறது அரசு. வருமான வரி போக, ஒவ்வொரு பொருளுக்கும் வரி கொடுக்க வேண்டியதாகி உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருக்கும் பணத்தை கஜானாவுக்குள் கொண்டு சேர்க்கிறது மத்திய மாநில அரசுகள். லூசில் விற்கப்படும் பருப்புகளுக்கு வரி இல்லையாம். பாக்கெட் போட்டால் வரியாம். இந்தக் காலத்தில் எந்தக் கடை லூசில் பருப்பு விற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. வரி வாங்குங்கள் தப்பே இல்லை. ஆனால் ஊழல் இல்லாமல் செய்ய முடியவில்லையே? கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக கொடுக்க மாட்டேன் என்கிறதே அரசு. மிக நல்ல சிகிச்சைக் கிடைக்க வேண்டுமெனில் தனியாரிடம் அல்லவா செல்ல வேண்டி இருக்கிறது. 

முன்பெல்லாம் பில் இல்லாமல் பொருள் வாங்கினோம். அண்ணாச்சிகள் பெரும் பணக்காரனானார்கள். இப்போது பில் போடாத பெட்டிக்கடை அண்ணாச்சிகள் கல்லாவைக் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். இவர்களை மத்திய அரசு என்ன செய்து விட முடியும்? வாட்சப்பில் ஒரு மெசேஜ் கிடைத்தது.

2000 ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருந்தால் 8 சதவீதம் வட்டி ரூ.200 கிடைக்கும். அதே இரண்டாயிரம் ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்று நாம் வட்டி கட்டினால் 13 சதவீதம் ரூ.260 கட்ட வேண்டும். ஆனால் அதே இரண்டாயிரம் ரூபாய்க்கு ஹோட்டலில் சாப்பிடச் சென்றால் ரூ.300 வரியாகக் கட்ட வேண்டும். இதைத்தான் பகல் கொள்ளை என்கிறார்கள்.

ஏற்கனவே வருமானத்துக்கு வரி பிடித்துக் கொள்கின்றார்கள். மிச்சம் இருக்கும் பணத்துக்கும் ஒவ்வொரு பொருளிலும் வரி வாங்குகின்றார்கள். இப்படியே தொட்டதுக்கெல்லாம் வரி வாங்கினால் மக்களிடம் பணம் எப்படி மிச்சமாகும்? பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. வேறு வழியே இன்றி பொருட்கள் விலை குறையும் சூழல் உருவாகும். இது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கச் செய்யும் அல்லவா?

இந்த அக்கப்போரு என்றைக்கும் முடியப்போவதில்லை. அரசு எனும் பூனைக்கு மக்கள் எனும் எலிகள் என்றைக்கும் மணி கட்டபோவதில்லை. அது முடியவும் முடியாது.

அரசியல் களம் என்பது துரோகமும், அக்கிரமமும், அயோக்கியத்தனமும், திருட்டுத்தனமும், பொய்யும், சூதும், வாதும் நிரம்பியவை. அக்களம் அப்படித்தான் இருக்கும். உண்மையானதாக மாறவே முடியாது. அரசியல் என்பது அதுதான். ஊழலும், அதிகாரத் துஷ்பிரயோகமும் அரசியலின் இரு கண்கள். சுய நலம் என்பது அரசியலின் அடி நாதம். அதில் அயோக்கியத்தனம் என்பது தூண்கள். ஆகவே அரசியல் அக்கப்போரு பேசி ஒன்றும் ஆவப்போவதில்லை. பட்டுத்தான் தீர வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் அல்லவா அரசியல்வாதி நல்லவராக இருப்பார்.

நடிகனுக்கு நாட்டைத் தூக்கிக் கொடுக்கும் நமக்கெல்லாம் மானம், ரோசம், நல்லவை, கெட்டவை எதுவும் இருப்பதில்லை என்கிற போது அரசியல் பற்றிப் பேச தகுதியே இல்லை. முட்டாளாக இருப்பதே சுகம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம் புத்திசாலித்தனத்தைப் பற்றிப் பேசுவதால் என்ன பிரயோஜனம்?

ஒரு வழியாக வெள்ளிங்கிரி ஸ்வாமியின் ஜீவ சமாதிக்குச் சென்று சேர்ந்தோம். அங்கு இரண்டு பேர் காத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தீபாவளி அன்றைக்கும் வீட்டிலிருந்து செல்லும் பலகாரங்களைச் சாப்பிடுவதற்காக வருடம் தோறும் வந்து விடுவார்களாம். ஏன் தாமதம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். மதியம் போல நானும் ஜோதி சாமியும் பேசிக் கொண்டிருந்தோம்.

அடியேன் ஓஷோவின் புத்தகங்களை வாசிப்பவன். அடிக்கடி அவரின் பல கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டிருக்கும். கடவுள் இல்லவே இல்லை என்கிறார் அவர். ”அது சரிதானா? சாமி” என்றுக் கேட்டேன்.

“ஆமாம், கடவுளே!” என்றார் சாமி.

அதிர்ச்சியாக இருந்தது.

”பின்னே நான் ஒவ்வொரு கோவிலாகச் சென்று வழிபாடு செய்வது என்பதெல்லாம் என்ன?” என்றொரு கேள்வியைக் கேட்க, அவரோ ”அது உங்களின் அறியாமை” என்றார்.

கேட்ட எனக்கு குழப்பமே மிஞ்சியது.

“கோவில்கள் மட்டும் இல்லையென்றால் மனிதர்கள் மிருகமாகி விடுவார்கள் ஆண்டவனே!” என்றார் தொடர்ந்து.

“ஒன்றுமே புரியவில்லை சாமி” என்றேன்.

அதற்கு அவர், “உள்ளம் சிவமானால் உடலே கோவிலாகும்” என்றார்.

எனக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?


Monday, October 16, 2017

அமேசான் ஜாக்கிரதை

ரித்திக் மியூசிக் பிளேயர் வேண்டுமென்று கேட்டிருந்தான். பாடலைக் கேட்டவுடன் கீபோர்டில் வாசிக்க முயற்சிக்கிறான். ஏற்கனவே பிளிப்கார்ட்டில் ஒரு எம்.பி 3 பிளேயரை வாங்கிக் கொடுத்திருந்தேன். அது ரிப்பேர் ஆகி விட்டது. ஆகவே மீண்டும் ஒரு பிளேயர் வேண்டுமென்றான். போன் வாங்கினாலும், எந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்கினாலும் விலை குறைவானதாகவே வாங்குவேன். ஐபோன் வாங்கி அதைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து ஒரு வருடம் முடிவதற்குள் அடுத்த வெர்சன் வந்து விட்டது. நான் வைத்திருந்த ஐபோன் இப்போது குப்பைக் கூடைக்குள் கிடக்கிறது. நிவேதிதா கேம் விளையாடுகிறார் அவ்வப்போது. 

பிளிப்கார்ட்டில் தேடினேன் கிடைக்கவில்லை. முதன் முதலாக அமேஜானில் தேடி ஆர்டர் செய்தேன். பத்து நாட்கள் கழித்து பதினைந்து தடவைக்கும் மேல் போனில் அழைத்து முகவரி கேட்டு ஒரு வழியாக வீடு வந்தார் டெலிவரி ஆள். 450 ரூபாய் கொடுத்து விட்டு பார்சலை வாங்கினேன். அப்போது சரியாக மழை பிடித்துக் கொண்டது. டெலிவரி ஆட்கள் இருவரும் வீட்டுக்குள் வர, பார்சலைப் பிரித்தால் உள்ளே ஒரு வாட்சும், விசிட்டிங் கார்டு ஹோல்டரும் இருந்தது. அதிர்ந்து விட்டேன். டெலிவரி ஆள் பணம் கொடுக்க முடியாது என்கிறான். கொரியர் அலுவலகத்திலிருந்து போன் செய்து நீங்கள் அமேசானில் கம்ப்ளைண்டு செய்து பணத்தை திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெத்தாகப் பேசினார்கள். கண் முன்னே பணம் இருக்கிறது, அதைக் கட்டி விட்டு மீண்டும் கிளைம் செய்து பணம் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். கதை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

விட்ட சவுண்ட் எஃபெக்டில் பணம் கைக்கு வர, பார்சலைத் திரும்பக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டேன்வி. இதோ கீழே போட்டோ இருக்கிறது. ஆகவே அமேஜானோ வேறு என்ன ஆன்லைன் கடையானாலும் சரி காசு கொடுப்பதற்கு முன்பு பிரித்துப் பார்த்து விட்டுக் கொடுங்கள். இல்லையென்றால் போன் செய்தே மண்டை காய்ந்து விடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். 


இந்த வருடம் ஆன்லைன் பிசினஸ் வர்த்தகம் 9000 கோடி ரூபாய் இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நேற்றைய ஒரு டிவி விவாவதத்தில் எனக்கு நிரம்பவும் பிடித்த விஜயதாரணி எம்.எல்.ஏ (தில்லு எம்.எல்.ஏ) அவர்கள் பொதுமக்களிடம் ரீடெயில் மார்க்கெட்டில் பொருள் வாங்குவது 40 சதவீதம் சரிந்து இருக்கிறது என்கிறார். பிஜேபியின் தலைவர் அமித்ஷாவின் குமாரர் பிரச்சினை பிரதமருக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி விட்டது.

எனது நண்பர் ஒரு நாள் திடீரென போனில் அழைத்து, “வாழ்க்கையில் ஒன்றுமே நிலையில்லைப்பா” என தத்துவம் பேச ஆரம்பித்தார். ஒன்று இவருக்கு ஏதோ பிரச்சினை அல்லது ஏதாவது சம்பவத்தைப் பார்த்திருக்க வேண்டுமென்று நினைத்தேன். இல்லை என்றால் ஆள் இப்படியெல்லாம் பேசமாட்டார்.

தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் ஒருவரின் மகன் தெருவில் பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் காசு கேட்கிறாராம். அவரைத் தெரிந்தவர்கள் இருந்தால் பணம் கொடுக்கின்றார்களாம். கஜானா கடைக்கு (டாஸ்மாக்) செல்கிறாராம். ஊட்டியில் படிக்க பங்களா, சென்று வர கார் என வசதியெல்லாம் செய்து கொடுத்தார் இசையமைப்பாளர். யாருக்காக ஓடி ஓடி உழைத்தாரோ அவரின் இன்றைய நிலையோ பரிதாபகரம்.

பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்றால் இப்படித்தான் ஆகி விடும். அமித்ஷா இருக்கும் பதவிக்கு அவரின் பிள்ளையால் வந்த தொல்லையினால் தலை(மை) பதவி போகுமா? தப்புமா? என்பதெல்லாம் பிரதமருக்கும் அமித்ஷா அவர்களுக்கும் இடையே இருக்கும்  பிணைப்பூ தான் நிர்ணயிக்க வேண்டும். 

பொருளாதாரம் சரிந்து இருக்கிறது என்று பேசிக் கொள்கின்றார்கள். அது என்ன எழவு பொருளாதாரமோ தெரியவில்லை. சாமானியனின் சம்பளம் மட்டும் ஏறாத பொருளாதாரத்தையும், அரசு அலுவலர்களின் சம்பளமும் கிம்பளமும் ஏறும் பொருளாதாரத்தையும், பதினெட்டு சதவீதம் லாபம் அடைந்த தனியார் நிறுவன பொருளாதாரத்தையும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐந்து லட்சம் கோடி வாராக்கடனாக இருந்த வங்கிக் கடன், இந்த வருடம் ஒன்பது இலட்சம் கோடியாக உயர்ந்திருப்பதன் (வாராக்கடன்) பொருளாதாரத்தையும்.  ஃபேன் வாங்கக் கூட காசில்லாத தலைவர்கள் கோடிகளில் சொத்துக்கள் வாங்கும் பொருளாதாரத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

வழக்கம் போல வந்து செல்லும் தீபாவளி பலருக்கு பல செலவுகளை வைக்கும். ஒரு சிலருக்கு கடனைக் கொண்டு வந்து சேர்க்கும். சமூகத்தில் வாழ வேண்டுமெனில் அதற்கென ஒரு விலையை நாம் காலமெல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். தவறாகப் பேசுவார்கள் என்ற ஒரு நிலைக்காக நாம் இழப்பது கொஞ்சம் நஞ்சமல்ல.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருங்கள். நல்லெண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். வாழ்க வளமுடன்!

Wednesday, September 27, 2017

16347 கோடி முதலீட்டிற்காகக் கொட்டிக் கொடுக்கப்போகும் இந்தியர்கள்

கிரிக்கெட் இந்தியாவின் மர்ம விளையாட்டு. ஐபில் கிரிக்கெட்டைப் பற்றி அடியேன் எழுதிய கட்டுரை பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் வெளியானது. அதன் இணைப்பையும் அக்கட்டுரையினையும் கீழே இருக்கும் இணைப்பினை சொடுக்கிப் படித்துக் கொள்ளவும்.


கடந்த செம்டம்பர் மாதம் 6ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு செய்தி வெளிவந்தது. செய்தி கீழே,

Star Sports under the Star India umbrella shelled out an exorbitant Rs 16,347.5 crore or $2.55 billion for IPL media rights over the next five years till 2022. This is nearly triple of what Sony, the previous TV rights holders, had paid for ten years in 2009. In all it converts to Rs 55 crore from every IPL match or Rs 23.3 lakhs for every legal delivery bowled. It leaves the IPL sandwiched between the English Premier League (Rs 84 crore per match) and the NBA (Rs 18 crore per match) in terms of highest grossing sporting leagues in the world, with the NFL the clear leader earning Rs 150 crore per match. But beyond the sheer astronomical numbers, the query for the fans, other broadcasters and the DTH providers revolves around how to compete with their sheer might.


படித்து விட்டீர்களா? இப்போது விஷயத்துக்கு வருவோம்.

சாதாரண டிவிதானே, நாம் பொழுதைப் போக்குகிறோம் அதை வைத்து இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமா? என்று திகைக்கின்றீர்கள். ஆமாம் உங்களின் பொழுதுபோக்கையும் காசாக்கிட முடியும் என்பது தான்  முக்கியமான சாரம்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் விளையாட்டினை ஐந்து வருடம் ஒளிபரப்புச் செய்ய ஸ்டார் குழுமம் 16347 கோடி ரூபாய் கொடுக்கிறது என்றால் ஒளிபரப்புச் செலவு, அலுவலகச் செலவு, அட்மின் செலவுகள் இதையெல்லாம் சேர்த்து 20000 கோடி என்று வைத்துக் கொண்டாலும் இந்தளவு முதலீடு செய்வது நஷ்டமடையவா செய்வார்கள்? இல்லை அல்லவா? 20000 கோடி முதலீடு 100000 லட்சம் கோடி வருவாய் கிடைக்கத்தான் இவ்வளவு முதலீடு போடுவார்கள். இத்தனையும் எங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கிறது? விளம்பரதாரர்களிடமிருந்து அவர்களுக்கு கொட்டக்கூடிய பணமும் எங்கிருந்து கிடைக்கிறது? டிவி பார்க்கும் மக்களிடமிருந்து விளம்பரதாரர்கள் வசூலித்து அதில் பத்து பர்செண்டேஜ் அளவு பணத்தினை மீடியாக்களிடம் கொடுக்கின்றார்கள். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். மலைத்து விட வேண்டாம். 

ஒரு சோப்பின் உண்மையான அடக்கவிலை 5 ரூபாய் இருக்கலாம். ஆனால் விற்கும் விலை 40 லிருந்து 60 ரூபாய் வரை. இந்தக் காசுதான் மீடியாக்களுக்கும் செல்கிறது. அரசியல்வாதிகளுக்கும் செல்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கும் செல்கிறது. ஆக மக்களிடமிருந்து பறிக்கப்படும் பணம் தான் இத்தனை கோடி. 5 ரூபாய் சோப்புக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச விலை தான் இப்படியாகச் செல்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் விளம்பரங்களைப் பார்த்து தானே வாங்குகிறோம். தேவைக்கு ஏற்ப என்று எவராவது சிந்திக்கின்றீர்களா? பிராண்டட் தான் போடுவேன் என்பவர்களிடமிருந்து எப்படி காசைப் பறிக்கின்றார்கள் என்று நினைத்துப் பாருங்கள். 

காலம் நேரம் தெரியாமல் டிவி முன்னாள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்களே அதற்கு நீங்கள் கொடுக்கும் விலையில் ஒரு சதவீதம் தான் மேலே எழுதி இருப்பவை.

டிவியின் முன்பு உட்காரும் போது இந்தக் கணக்கை நினைவில் கொள்ளுங்கள். வீட்டிற்குள் இருக்கும் வில்லன் யார் என்று தெரிய வரும்.  

ஒழுக்கம் என்றால் என்ன விலை என்று கேட்கும் நடிகன் முதல்வராக ஆசைப்படுவதையும் தடுக்கலாம். ஒழுக்கம் கெட்டவர்கள் தலைவர்கள் ஆனால் தமிழகத்தின் நிலை என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

அடியேன் டிவி பார்ப்பதை முற்றிலுமாக நிறுத்தியே விட்டேன். எப்போதாவது டிராவல்ஸ் அன்ட் லிவிங், டிஸ்கவரி சானல், ஹிஸ்டரி சானல் பார்ப்பதோடு சரி. முக்கியமாக செய்தி சானல்களைப் பார்ப்பதே இல்லை. விவாத நிகழ்ச்சிகளை எட்டிக் கூடப் பார்க்கமாட்டேன். காலையில் செய்திதாள்கள் படிப்பேன். அவ்வளவுதான். வேலை இல்லையென்றால் புத்தகங்கள் படிப்பதோடு என் நேரம் கழிந்து விடுகின்றது. ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை. மாதம் ஒரு தடவை சும்மாவாச்சும் லாக்கின் செய்வேன். 

நீங்களும் ஒரே ஒரு நாள் அவ்வாறு இருந்து பாருங்கள்.செம ஜாலியாக இருக்கும்.


Tuesday, September 19, 2017

சமையல் எண்ணெயில் பருத்தி எண்ணெய்

வீட்டுக்கு அருகில் ஆப்பக்கடை உணவகம் ஒன்று இருக்கிறது. எப்போதாவது அந்தப்பக்கமாகச் செல்லும் போது இரண்டு ஆப்பமும், கொஞ்சம் கொண்டக்கடலைக் குருமாவும் சாப்பிட்டு வருவது வழக்கம். அந்த ஆப்பக்கடை அம்மாவிடம் ”என்ன எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்ட போது ”ஆயில்தான்” என்றார். ”என்ன ஆயில்?” என்றேன். ”ரீஃபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துகிறேன், நானும் அதைத்தான் சாப்பிடுகிறேன். பிரச்சினை இல்லை” என்றுச் சொன்னார்.

அதே போல மிட்டாக்கடையில் முருக்கு வாங்கிய போது அந்த அம்மாவிடம்,”என்ன ஆயில் பயன்படுத்துகின்றீர்கள்?” என வினவிய போது “ரீஃபைண்ட் ஆயில்தான், ஹோட்டல்களில் பயன்படுத்துகின்றார்களே அதே தான்” என்றுச் சொன்னார். லிட்டர் 65 ரூபாய் என்றார் அவர். ஹோட்டல்களில் கரண்டி கரண்டியாய்க் கொட்டுகின்றார்களே அதே ஆயில் தான் என்ற போது மனதுக்குள் ஃபாமாயிலைத்தான் சொல்கின்றார்கள் போல என நினைத்தேன். 

மூன்று மாதங்களுக்கு முன்பொருனாள் கவுண்டரின் தோட்ட வீட்டிற்குச் சென்றிருந்தேன். இளநீரைப் பருகிக் கொண்டிருந்த போது சமையல் எண்ணெய் பற்றிப் பேச்சு வந்தது. ஊரின் அருகாமையில் இருக்கும் செக்கில் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும், விலை குறைவாக இருப்பதாகவும் சொன்னார். ”விலை எப்படி குறைவாக கிடைக்கும்?” என்று கேட்டேன். ஆட்கள் கேட்க ஆட்டிக் கொடுக்கிறார்கள் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். ஐந்து லிட்டர் கடலை எண்ணெய் வாங்கினேன். 

சமைக்கும் போது கடலை வாசனை வீசியது. நன்றாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் மனையாள். சாப்பிட்டவுடன் வயிறு மந்தமாக இருந்தது. சுத்தமான கடலை எண்ணெய் அல்லவா? அதனால் அப்படி இருக்கும் போல என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சரியாகவே இல்லை. இரண்டு நாட்கள் சமையலில் அந்த எண்ணெய் தான் பயன்படுத்தினார்கள். ஏதோ பிரச்சினை என்பது மட்டும் புரிந்தது. 

எண்ணெய் பாட்டிலில் இருந்த நெம்பரைத் தொடர்பு கொண்டு “எப்படி விலை குறைவாக விற்க முடிகிறது?” எனக் கேட்டேன். ”வெகு சுத்தமான கடலை எண்ணெய் விலை அதிகம் சார். அதனால் கடலை எண்ணெயில் அரைவாசி காட்டன் சீட் எண்ணெய் கலந்து விற்பனை செய்கிறோம்” என்றார். அதாவது பருத்திக் கொட்டை எண்ணெய். ”வாங்குபவர்களிடம் சொல்லி விற்கின்றீர்களா?” என்றேன். ”ஆமாம்” என்றார். ஆனால் என்னிடம் அதுபற்றிச் சொல்லவே இல்லை. அது விற்பனைத்தந்திரம் என்று என்னால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. பச்சை அயோக்கியத்தனம்.

பத்து வருடங்களுக்கு முன்பு ரைஸ்பிரான் ஆயில் என்று மார்க்கெட்டில் வந்தது. கொலெஸ்ட்ரால் இல்லை என்றார்கள். அதை தொடர்ந்து பயன்படுத்தி வந்து ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டேன். விவசாய வேலை முடிந்ததும் வயலில் எள்ளை விதைத்து, அறுவடை செய்து ஊரில் இருந்து நல்லெண்ணெய் வந்து கொண்டிருந்த போது எண்ணெய் பிரச்சினை எனக்கு வரவில்லை. விவசாயம் பொய்த்த பிறகு கடையில் எண்ணெய் வாங்க ஆரம்பித்த போதுதான் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஆரம்பமாகின.

கடைகளில் பலகாரம் சுடவும், சிறிய ஹோட்டல்களில் பயன்படுத்துவதும் ரீஃபைண்ட் ஆயில் என்று அழைக்கக் கூடிய பருத்திக் கொட்டை எண்ணெய் தான் பயன்படுத்துகிறார்கள் போலும். 

யாரைத்தான் நம்புவதோ என்று தெரியவில்லை. உணவு என்கிற பெயரில் விஷத்தை விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எண்ணெய் இல்லா சமையல் செய்வது எப்படி என்ற புத்தகத்தை வாங்கி வீட்டில் கொடுத்து விட்டேன். எதற்கு வம்பு? ஹாஸ்பிட்டல் பக்கம் சென்றால் சொத்தில் கால் வாசியைக் கட்டணமாக வசூலித்து விடுகின்றார்கள். 

தமிழக அரசின் காப்பீடு திட்டத்தில் கிளைம் செய்ய முடியுமா? என்றால் அதெல்லாம் இங்கே ஆகாது என்கிறார்கள். எனக்காக கட்டப்படும் ப்ரீமியம் தொகை எங்குதான் போகின்றதோ தெரியவில்லை. கலப்படத்தைக் கூட கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறார்கள்.  தமிழகம் இந்தளவுக்கு கீழான நிலைக்குச் செல்லும் என நினைக்கவே இல்லை. வாக்குச் சுத்தம் என்று முன்பெல்லாம் சினிமாவில் பேசுவார்கள். இப்போது வாக்கு அசுத்தமாகி விட்டது. 




Monday, August 28, 2017

நிலம் (41) - இந்து ஒருவரின் முஸ்லிம் மகனுக்கு சொத்துரிமை உண்டா?

நண்பரே எனக்கும் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லுங்கள்,

ஒருவர் இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு சொத்து உரிமை உள்ளதா?  அவரின் தந்தை 1991ம் ஆண்டும், தாய் 2002ம் ஆண்டும் இந்துவாகவே இறந்தனர். அவர் முஸ்லிமாக மாறிய ஆண்டு 2008. முஸ்லிமாக மாறிய பிறகுதான் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு அண்ணன், இரண்டு சகோதரிகள். அனைவரும் இந்துவாகவே உள்ளனர். அவர்களின் தந்தை பெயரில் தற்போது 10 சென்ட் நிலம் உள்ளது. அவரால் அந்த சொத்தில் பங்கு கேட்க உரிமை உள்ளதா? இதற்கு ஒரு வழி சொல்லுங்கள். 

நன்றி,  தஸ்.கார்த்தி.


இப்படி ஒரு மெயில் தஸ் கார்த்தி என்பவர் அனுப்பி இருக்கிறார். அவர் யார்? எங்கிருக்கிறார் என்று எதுவுமே தெரியாது. ஒரு சட்ட விளக்கம் கேட்கிறார். வக்கீலிடம் சென்றால் செலவு செய்தாக வேண்டும். இலவச சட்ட விளக்கம் கேட்கின்றோமே நம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டாவது கேள்வியைக் கேட்கலாம் என்று நினைக்கவில்லை. மொட்டையாக ஒரு மெயில் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிறிய அறிமுகத்துக்கு கூட சிரமப்படுகின்றார்கள். அது அவர்களின் பிரச்சினை. என்னிடம் உதவி கேட்டால் செய்ய முடியாது என்றா சொல்ல முடியும்?

கார்த்தி உங்களின் மெயிலைப் படித்தேன். தாங்கள் கேட்டிருக்கும் கேள்வியின் சாராம்சம் என்னவென்றால், இந்து ஒருவரின் மகன் முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு தந்தையின் சொத்தில் பாகம் கிடைக்குமா? என்பதுதான். சரியா?

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமைச் (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமைச்(திருத்தம்) சட்டம் 2005 ஆகியவைகளின் படி பிரிவு 26ல் மதம் மாறியவர்களின் சொத்துரிமையை இந்தப் பிரிவு தடை செய்யவில்லை. ஆனால் முஸ்லிமாக மாறியவரின் வாரிசுகள் அந்தச் சொத்தில் பாகம் கோர முடியாது என்கிறது அப்பிரிவு. இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக 1850 ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட கேஸ்ட் டிஸெபிளிட்டி ரிமூவல் சட்டத்தின் (Caste Diablities Removal Act 1850) படி மதம் மாறியவர்களுக்கான மத வேறுபாடு உரிமை நீக்கம் மாற்றியமைக்கப்பட்டது.

ஆகவே அந்த 10 செண்ட் நிலத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய வாரிசுக்குப் பங்கு உண்டு. அந்த வாரிசு உயிருடன் இல்லை என்றால் அவரின் வாரிசுகளுக்கு அந்தப் 10 செண்ட் நிலத்தில் உரிமை இல்லை.

ஒரு உபகுறிப்பு:

இந்தியாவில் முஸ்லிம் மதத்தைப் பொறுத்தவரை ஹனபி, ஷபீ, இத்னா ஆஷாரி மற்றும் இஸ்லாமி என நான்கு சட்டங்கள் இருக்கின்றன. இஸ்லாமி சட்டத்தில் நிஸாரி மற்றும் முஸ்தாலி ஆகிய உட்பிரிவுகளும் இருக்கின்றன. இருப்பினும் மாலிகி மற்றும் வஹாபி ஆகிய சட்டங்களும் இந்தியாவில் அனுசரிக்கப்படுகின்றன. இத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் பல வழக்குகளை இந்தியாவின் மற்ற குடிமக்களுக்கு உள்ள பொதுவான சட்டங்களின் படியே தீர்க்கின்றன. முஸ்லிம் சட்டத்தில் சொத்துக்களின் வாரிசுரிமை, விற்பனை ஆகியவற்றில் பல பிரிவுகள் உள்ளன. சொத்துக்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்க வேண்டும். தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழலைத் தவிர்த்து விடலாம்.

மேலும் ஒரு உபகுறிப்பு:

உங்களின் கேள்வி பொதுப்படையானது என்பதாலும் எனது நிலம் (40) இந்துவானவர் முஸ்லிமானால் வாரிசுரிமை எப்படி இருக்கும் தொடருக்குத் தொடர்பு உடையதாக இருப்பதாலும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவினை எழுதி இருக்கிறேன். ஒரு உதவி கேட்கும் போது முறையாக கேள்வி கேட்டல் அவசியமென்று கருதுகிறென். ஆகவே இனிமேல் வேறு எவரிடமும் உதவி கேட்க விரும்பினால் முறைப்படி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அதன் பிறகு கேள்வி கேளுங்கள் என்று விரும்புகிறேன். அது உதவி செய்பவருக்கு மகிழ்வைத் தரும் என நினைக்கிறேன். அதைச் செய்வது செய்யாததும் உங்கள் விருப்பம். 

தொடர்ந்து இணைந்திருங்கள். சுவாரசியமான பல வழக்குகளை அலசலாம்.

Sunday, August 27, 2017

நன் மனைவி கிடைப்பதரிது

கடந்த வாரம் என்று நினைவு. விஜய் டிவியின் நீயா நானாவில் திருமணத்திற்கு பெண் தேடும் ஆண்களின் பிரச்சினைகள் பற்றி  கோபி நாத் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு பெண்கள் போடும் மிக முக்கியமான கண்டிஷன்கள் தனி வீடு இருக்க வேண்டும், நல்ல வேலையில் இருக்க வேண்டும், அக்கா தங்கைகள் இருக்கக் கூடாது, கடன் இருக்கக் கூடாது, கடன் வாங்கிக் கட்டுபவராகவும் இருக்கக் கூடாது என்பவை. ஒரு சிலர் அமெரிக்காவில் செட்டில் ஆவது வரவேற்கப்படுகிறது. இதெல்லாம் இருந்தால் தான் செலக்‌ஷன் செய்வார்கள். அதன் பிறகு இன்னபிற கண்டிஷன்கள் போடப்படலாம். அது அந்தந்தக் குடும்பத்தைப் பொறுத்தது. 

அந்த விவாதத்தில் பேசிய பெண்களில் ஒருவர் கூட நல்லியல்பு கொண்ட குடும்பத்திலிருந்து ஆண்மகன் இருந்தால் என் மகளைக் கட்டிக் கொடுப்பேன் என்று சொல்லவே இல்லை. கண் இமை முடியை மழித்துக் கொள்வது போல நல்லியல்புகளை மழித்துக் கொண்டு விட்டார்கள் போலும். பணம், பொருள் இருந்தால் தான் ஆண்மகன் என்கிறார்கள். அவனுக்குத்தான் பெண் கொடுப்போம் என்கிறார்கள் பெண்களைப் பெற்றவர்கள்.

சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம்
இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத்
திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார். ( பழமொழி நானூறு - 321 )

கணவனின் முகக் குறிப்பறிந்து  கணவன் நினைத்த காரியத்தை அறிந்து கொள்ளும் மனையாளும், வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்று உபசரித்து அனுப்பும் மனையாளும், செல்வத்துடன் வாழும் மனையாளைக் கொண்டவனே என்றைக்கும் நீங்காத இன்பமுடையவர்கள். இனி வருங்காலத்தில் இப்படி ஒரு நன் மனைவியை எவராலும் அடையவே முடியாது போலும் என்று நினைக்க வைத்தது அன்றைய நீயா நானாவில் பேசிய பெண்களும், பெண்களின் தாயார்களும், தந்தைகளும் பேசிய பேச்சுக்கள்.

பெண் என்பவளுக்கு எது முக்கியம் என்பதை ஒரு பழம் பாடல் விளக்குகிறது.

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல்.  (பழமொழி நானூறு - 327)

இந்தப் பாடலின் விளக்கம்: அறுசுவை உணவின்றி உடலுக்கு உயிர் இல்லை. பணமின்றி காரியங்களைச் செய்ய முடியாது. வித்து இன்றி விளைச்சலும் இருக்க முடியாது. அது போல பெண்களுக்கு நாணம் என்பது முக்கியம். இப்போதையப் பெண்களுக்கு நாணம் என்பது என்னவென்று தெரியுமா என்று தெரியவில்லை.

இத்தகைய நறுங்குணங்கள் கொண்ட பெண்மையைப் பார்ப்பது இனிமேல் அரிதிலும் அரிதாகி விடும் போல. 

அதுவாவது பரவாயில்லை. அந்தக் காலத்தில் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கோ ஒரு குழந்தைக்கே படாதபாடு பட வேண்டி இருக்கிறது. குழந்தைபெற ஹாஸ்பிட்டல் இருந்தாலே போதும், தாம்பத்யம் வேண்டியதில்லை என்கிறது ஒரு விளம்பரம். ஆண் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். 


ஏரோப்ளேன் ஓட்ட ஆரம்பித்த பெண்கள் இனி ஆண்கள் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஆண்களின் பாடு இனி திண்டாட்டம் தான் போலும். பெண்கள் ஆண் குழந்தைகளே வேண்டாமென்று முடிவெடுத்தால் மேலும் சிக்கலாகி விடும் போல. என்னவோ நடக்கின்றது. அது நல்லதாக இல்லை என்பது மட்டும் புரிகிறது.

Saturday, August 26, 2017

நிலம் (40) - இந்துவானவர் முஸ்லீமானால் வாரிசுரிமை எவ்வாறு இருக்கும்?

ஒரு வழியாக பிக் பாஸில் பிந்து மாதவியின் தோளில் கை போடும் அளவுக்கு வையாபுரி நெருங்கி விட்டார் அண்ணன்(??) என்கிற உறவில். புறம் பேசும் அளவுக்கு ஈனப்புத்தி உள்ளவர்கள் பிக்பாஸில் இல்லாதிருப்பது நன்றாக இருக்கிறது. குரோதங்களும், துரோகங்களும், கொலைகளும், கெடுமதியும் இல்லாமல் இருக்கும் சூழலைப் பார்க்கும் போதும், அது பற்றிப் படிக்கும் போதும் மனது கொஞ்சம் ஆறுதல் அடைகிறது. 

எனக்கு நீண்ட நாட்களாக ஏன் ஜானகிராமனின் படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன என்பது புரியாமல் இருந்தது. பிக்பாஸ் பார்த்த பிறகு அவரின் நாவல்களின் அடிநாதம் புரிபடுகிறது. அவரது படைப்புகளில் உறவுகளின் இடையே உண்டாகும் உணர்ச்சிகளால் விளையும் செயல்களால் நாவல் தொடர்ந்து நடைபெறும். அடிதடி இல்லை, கொலைகள் இல்லை. அவரின் நாவல்கள் மனதை வருடி விட்டுச் செல்லும் தன்மையானவை.

மனிதர்களுக்கு எதுவும் இன்பகரமானதாக இருந்தால் தான் மகிழ்வார்கள். அதை ஜாரா அருமையாக கையாண்டிருக்கிறார். இவரைப் போன்ற நாவலாசிரியர்கள் இப்போது இல்லை என்பது முகத்திலறையும் உண்மை. தற்கால பிரபலமான நாவலாசிரியர் பாலகுமாரனின் நாவல்கள் மனித குலத்துக்கு தவறான வழிகாட்டுதல்களை சொல்லிச் செல்பவை. ஆன்மீகம் என்பது என்னைப் பொறுத்தவரை வியாபாரப் பொருள். அதை தன் நாவல்களில் புகுத்தி ஏற்கனவே குழம்பிக் கிடப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார் பாலகுமாரன். அது ஒரு பக்கம் போகட்டும். 

சமீபத்தில் கேரளாவிலிருந்து ஒரு மலையாளி முஸ்லிம் என்னை அழைத்திருந்தார். கோவையில் தான் வசித்து வந்தாராம். எர்ணாகுளத்தில் செட்டிலாகி விட்டாராம். அவர் சொத்து ஒன்றினைக் கிரையம் பெற இருப்பதாகவும் அது பற்றிய ஆலோசனையை போனிலேயே சொல்ல முடியுமா என்று கேட்டார். பெரும்பாலும் ஆவணங்களைப் படிக்காமல் எதுவும் சொல்வது வழக்கமில்லை என்றாலும் பொதுவான சந்தேகம் என்றால் சொல்கிறேன் என்றும் சொத்தில் வில்லங்கம் இருக்கிறதா என்று கேட்டால் ஆவணங்களைப் படிக்காமல் சொல்ல இயலாது என்றும் சொன்னேன்.

பொதுவான விஷயம் தான் என்றுச் சொல்லி விட்டு தொடர்ந்தார். படியுங்கள், உங்களுக்கு மண்டை காய ஆரம்பித்து விடும்.

அதாவது என்னிடம் போனில் பேசியவர் வீடு ஒன்றினை விலைக்கு வாங்க இருப்பதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர் இந்துவாக இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்தவரின் மகன் என்றும், அவரின் அப்பா இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணுடன் திருமணமாகி அவர்களுக்கும் வாரிசுகள் இருக்கின்றார்கள் என்றும் சொன்னார். இந்துப் பெண்ணுக்கு ஒரு ஆண் வாரிசு இருப்பதாகவும் சொன்னார். நான் அந்த வீட்டினைக் கிரையம் பெற விரும்புகிறேன், எனக்குத் தெரிய வேண்டியது இந்துப் பெண்ணுக்குப் பிறந்த பையனுக்கு அந்த வீட்டில் சரி பாதி பாகம் வருமா?  வராதா? எனக் கேட்டார். 

அவர் கேள்வியை வெகு சாதாரணமாகக் கேட்டு விட்டார். எனக்கோ தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. சொத்துரிமைச் சட்டம் இந்தியாவில பல அலகுகளாக பிரிந்துள்ளது. இந்து, கிறிஸ்து, முஸ்லிம், பார்சி, காஷ்மீர் என பல பிரிவுகள் இருக்கின்றன. ஏன் பாண்டிச்சேரிக்கும் தனி சட்டம் இருக்கிறது. பெரும்பாலும் இதுவரை இந்துக்கள் சொத்துக்கள் பற்றியே கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. அது பற்றிய வழக்குகள், விபரங்கள், சட்டங்கள் படித்திருக்கிறேன். 

என் வக்கீல் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். ’உனக்கு மட்டும் தான்யா இப்படியெல்லாம் கிளையண்ட் வருவார்கள்’ என்று அலுத்துக் கொண்டனர். ஒரு சிலர் இருவருக்கும் சரிபாகம் என்றுச் சொன்னார்கள். ஒரு சிலர் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். எனக்கோ அது என்ன விஷயம் என்று அறிந்து கொள்ளும் வரை உறுத்திக் கொண்டிருக்கும். ஆகவே அதற்கான முயற்சிகளை எடுத்தேன். சட்டப்புதையல்களில் தேட ஆரம்பித்தேன். கிடைத்தது அவரின் கேள்விக்கான விடை.

இந்து ஒருவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய பின்பு அந்த மார்க்கத்தின் படி வாழ்ந்து இறந்து உள்ளார் என்றால் அவரின் சொத்துக்கள் முஸ்லிம் சட்டப்படித்தான் பாகம் பிரியும். உங்களது கேள்விக்கு விடை என்னவென்றால் இந்து ஒருவர் இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார். அவர் மட்டும் பின்னால் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து குழந்தைகள் பெற்றிருக்கிறார். அவர் காலமான பிறகு அந்தச் சொத்துக்கள் முஸ்லிம் பெண்ணுக்கும் அவரது முஸ்லிம் மகனுக்கு மட்டுமே பாத்தியமாகும். இந்துப் பெண்ணுக்குப் பிறந்த மகனுக்கோ அல்லது அவரது இந்து மனைவிக்கோ சொத்தில் பாகம் கிடைக்காது என்றுச் சொன்னேன். முகம்மதியர் பாகப்பிரிவினைச் சட்டத்தில் இயல் 14வது பிரிவில் இந்தக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

ஒரு வழியாக அவருக்கு விடை கிடைத்து விட்டது. உங்களுக்கும் ஒரு விஷயம் தெரிந்து விட்டது.

தொடர்ந்து இணைந்திருங்கள். பல்வேறு சட்டங்களைப் பற்றி அலசுவோம்.