குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 15, 2016

ரகசிய வன்முறை - உயிரோசையில் வெளிவந்த பதிவு - மீள்பார்வை

நானும் எனது நண்பரும் சென்னை செல்ல இரயிலில் டிக்கட் பதிவு செய்தோம். எனக்கு நடக்க இயலாது என்பதால் கன்செஸன் சர்டிஃபிகேட் மூலம் டிக்கெட் பதிவு செய்தேன். மூன்றாம் வகுப்பு ஏசி. அதென்னவோ தெரியவில்லை. கன்செஸன் என்றால் சன்னலோரம் தான் இடம் கிடைக்கும். நடைபாதையின் ஓரமாக நடப்போர் எல்லோரும் இடித்து இடித்து ஒரு வழியாகி விடுவோம். ஊனமுற்றோருக்கு மத்திய அரசின் தொடர் வண்டித்துறை செய்யும் உபகாரம் இது.

இரவு உணவு அருந்தலாம் என்று பார்த்தால், கைகழுவ இயலவில்லை. சன்னல்கள் எல்லாம் அடைபட்டு இருந்தது. கழிவறை சென்று கழுவி வந்தால், மீண்டும் கையை கீழே வைக்க வேண்டும். சரிப்பட்டு வராது என்றபடியால் வாழைப்பழமும் பாலும் சாப்பிட்டுவிட்டு படுத்தாகிவிட்டது. நடுநிசி ஒரு மணி இருக்கும். இயற்கை உபாதை அழைக்க, மெதுவாகத் தவழ்ந்து கழிவறை சென்றேன். அங்கே.... மூத்திரமும், மலமும் சந்தனம் போல ஒட்டிய பாத்ரூம். சாக்கடை போல பார்த்ததும் வாந்தி வருவது போல இருந்தது. அதற்குள் எப்படிச் செல்வது. உபாதையைக் கழிப்பது? நொந்து கொண்டேன்.

வருத்தத்துடன் படுக்கைக்குத் திரும்பி வந்து, இயற்கை உபாதையைக் கழிக்க இயலாமல் தூங்கவும் இயலாமல் நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். ஒரு மணியிலிருந்து விடிகாலை வரை அடிவயிறு கட்டிக் கொண்டு விண் விண்ணென்று வலி உசிரை எடுத்தது. விடிகாலையில் சென்னைக்கு வந்தாகி விட்டது. இரயில் நின்ற பிளாட்பாரத்திலிருந்து வெளியில் செல்ல வேண்டும். போர்டரை அழைத்து சக்கர நாற்காலி கிடைக்குமா என்றார் என் நண்பர். அது எங்கோ இருக்கும். எனக்குத் தெரியாது என்றார். நண்பருக்கு டென்ஷனாகி விட்டது. ஸ்டேசன் மாஸ்டரிடம் கேட்கலாம் என்று சென்றார். நான் அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்துவிட்டேன். விடிகாலைக் குளிர் உடம்பில் பட்டு சில்லிப்பை ஏற்படுத்தியது. ஆனால் வலியின் காரணமாக எப்போது வெளியில் செல்வோம் இயற்கை உபாதையைக் கழிப்போம் என்ற அவஸ்தைதான் என்னைப் பீடித்திருந்தது. சேரைத் தேடிப்போன நண்பர் வெறுங்கையோடு வந்தார். சார் ஒருத்தரும் பதிலே பேச மாட்டேன் என்கிறார்கள் என்றார். போர்ட்டரைக் கூப்பிட்டு அவருக்கு ஏதாவது காசு கொடுங்கள். சேரைக் கொண்டு வந்து தருவார் என்றேன்.

போர்ட்டரிடம், "என்ன கேட்கிறீங்க?" என்றார் நண்பர். அம்பது ரூவாய் கேட்டார். நண்பர் சரி என்று சொல்ல, எங்கோ இருந்த நாற்காலி சடக்கென்று என் முன்னே வந்தது. நமக்கு அதில் உட்கார்ந்து அனுபவம் இல்லையாதலால், போர்ட்டரின் அன்பு மிரட்டல்களை வாங்கிக் கொண்டு எழும்பூர் இரயில் நிலையத்தின் வாசலில் இறக்கப்பட்டேன்.

ஊனமுற்றோருக்கென வைக்கப்பட்டிருக்கும் சக்கர நாற்காலிகளை காசு கொடுக்காமல் கண்ணிலேயே காட்ட மாட்டார்கள் ரயில்வே போர்ட்டர்கள். ஏதாவது ஒரு புண்ணியவான் சக்கர நாற்காலியினைக் கொடுத்தால் போர்ட்டர்கள் வந்து பிடுங்கிக் கொள்வார்கள். அடையாள அட்டையைக் காட்டு. டிக்கெட்டைக் காட்டு. பணம் கொடுத்துவிட்டு எடுத்துச் செல் என்றெல்லாம் பேசுகின்றனர் ரயில்வே ஸ்டேஷனில்.

ஊருக்குத் திரும்பும் பொருட்டு நான் சென்ற வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் எழும்பூர் இரயில் நிலையத்துக்கு வந்து ஏழு மணி அளவில் வந்து சேர்ந்து, ரயில் நிலையத்தின் படியில் அமர்ந்தேன். இரயிலில் ஏற, கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். எனது நண்பர் சக்கர நாற்காலியினை எங்காவது பிடித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். பத்து மணிக்கு இரயில் புறப்பட்டுவிடும். அதற்குள் ரயிலில் ஏறிவிட வேண்டும். மணி ஒன்பது இருபது அதுவரையிலும் சக்கர நாற்காலியினைத் தேடிச்சென்ற நண்பர் வரவில்லை. எங்கே சென்றாரிவர் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ஓட்டை நாற்காலியினை வியர்க்க விறுவிறுக்கத் தள்ளிக் கொண்டு வந்தார் நண்பர். நாற்காலி கிடைத்த கதையினைச் சொன்னார்.

யாரோ ஒரு ஸ்டேசன் மாஸ்டரிடம் நாற்காலி வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். தருகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாற்காலியினைக் கொடுத்து இருக்கிறார். அதற்குள் போர்ட்டர் வந்து எதுக்கு நாற்காலியினை எடுக்கின்றீர்கள் என்று எடுக்க விடாமல் தடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் டெபுட்டி ஸ்டேசன் மாஸ்டர் உயர்திரு பாஸ்கர் என்பவர் நண்பரிடம் இந்த நாற்காலி விஐபிக்கு மட்டும் தான் தருவோம் என்று சொல்லி எடுத்த நாற்காலியினைப் பிடுங்கி உள்ளே வைத்துவிட்டாராம். அந்தச் சமயத்தில் அங்கு வந்த வேறொரு போர்ட்டர் அந்த நாற்காலியினை எடுத்துச் சென்று விட்டாராம். அதற்கு டெபுட்டி ஸ்டேஷன் மாஸ்டர் பாஸ்கர் ஒன்றும் சொல்ல வில்லையாம். நண்பருக்கு என்ன செய்வது என்று தடுமாற்றம். அப்போது அங்கு வந்த விஜயகுமார் என்ற ஸ்டேசன் சிக்னல் இன்சார்ஜ் ஒரு ஓட்டை நாற்காலியினைத் தந்து இருக்கிறார். கால் ஒடிந்த நாற்காலி கால்கள் இல்லாத எனக்குக் கிடைத்தது. என்னைப் போலவே அந்த நாற்காலியும் ஊனமுற்றது. அதில் என்னை அமர வைத்து, நண்பர் இரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு தள்ளிச் சென்றார். நண்பர் வியர்வையில் குளித்து இருந்தார். நாற்காலியின் சக்கரம் சுழலாமல் சண்டித்தனம் செய்தது. தள்ளி வரும் போது பாதையில் விலகாமல் இருந்த ஒருவரின் மீது இலேசாக இடித்து விட அவர் சண்டைக்கு வந்துவிட்டார். அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தார் எனது நண்பர், இரு ஊனமுற்றவர்களுடன். ஒரு வழியாக இரயிலில் இருவரும் ஏறிவிட்டோம்.

இந்திய அரசு மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகிறது, மக்களே தங்களின் தேவைகளுக்காகப் பணிசெய்யும் ஆட்களைத் தேர்வு செய்து எங்களுக்குத் தேவையான வசதிகளை நாங்கள் கொடுக்கும் வரிப்பணத்தின் மூலமாக செய்து தாருங்கள் என்றும், அப்படிச் செய்யும் வேலைக்கு எங்களது வரிப்பணத்திலிருந்து சம்பளமும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார்கள். அப்படி என்ன வரி கொடுக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பீர்கள். இருந்தாலும் சொல்லுகிறேன் கேளுங்கள் உயர்திரு பாஸ்கர் அவர்களே.... கேளுங்கள்.....!

புரபஸனல் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ், கஸ்டம் டியூட்டி, இன்கம் டாக்ஸ், முனிஸபல் டாக்ஸ், ஃபயர் டாக்ஸ், எக்ஸைஸ் ட்யூட்டி, ஸ்டாஃப் புரபஸனல் டாக்ஸ், டர்னோவர் டாக்ஸ், கேஷ் ஹேண்ட்லிங்க் டாக்ஸ், ஃபுட் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ், ஃப்ரிஞ் பெனிஃபிட் டாக்ஸ், சர்வீஸ் டாக்ஸ், கிஃப்ட் டாக்ஸ், வெல்த் டாக்ஸ், எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ், ஸ்டாம்ப் டுயூட்டி, ரெஜிஸ்ட்ரேஷன் டாக்ஸ், சர் சார்ஜ், எடுகேஷனல் டாக்ஸ், சொத்து வரி என்று தொட்டதுக்கெல்லாம் டாக்ஸ், டாக்ஸ்.... வரி.. வரி...வரி.... முட்டை வாங்கினாலும் வரி... புண்ணாக்கு வாங்கினாலும் வரி. இப்படி எங்களது உழைப்பில் கிடைக்கும் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெருவது அரசு ஊழியர்களாகிய நீங்கள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மக்களாகிய எங்களின் வரிப்பணத்தில் இரயில்கள் எங்களுக்காக விடப்படுகிறது. அதை நிர்வாகம் செய்ய உங்களைப் போன்றவர்களை நாங்கள் எங்களுடைய வேலைக்காரராகப் பணி அமர்த்துகிறோம். அப்படிப்பட்ட பொதுமக்களின் வேலைக்காரராகிய தாங்கள் விஐபிக்கு என்று ஒரு சட்டமும், சாதாரண மக்களுக்கு என்று ஒரு சட்டமும் இருப்பதாகச் சொல்வது என்ன நியாயம்? அந்தச் சட்டத்தையும் இயற்றுவது நாங்கள்தான் என்பது தெரியுமா உங்களுக்கு. மந்திரியாகட்டும், பிரதமராகட்டும் அவரெல்லாம் பொதுமக்களின் வேலைக்காரர்கள். பொதுமக்களுக்குப் பணி செய்ய பொது மக்களால் அமர்த்தப்பட்டவர்கள். டெபுட்டி மாஸ்டரும் பொது மக்களின் ஊழியர்தான் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் ஏதேனும் இருக்கிறதா?

நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை டாக்ஸ் என்ற போர்வையில் வசூலித்து வரும் பணத்தில் சம்பளம் வாங்கி உங்கள் குடும்பத்துக்குச் சோறு போடும் நீங்கள் எங்களுக்குச் செய்யும் கொடுமைக்கு அளவே இல்லையா?

விஐபின்னா யாருங்க? தலையில் மூன்று கண்களும், ஐந்து கால்களும் மூன்று வயிறுகளும் உடைய விநோத ஜந்துவா? அந்த விஐபியும் எங்களால் தான் விஐபியாகி இருக்கின்றார் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா ?

மஹாத்மா காந்தியைத் தேசத்தலைவராகக் கருதும் இந்தியாவில் பொதுமக்களாகிய கஸ்டமர் என்ற எங்களைப் பற்றியும் நீங்கள் எங்களுக்கு யார் என்பது பற்றியும் சொல்லி இருப்பது மத்திய அரசு ஊழியராகிய உங்களுக்குத் தெரியுமா? தெரியாது எனில் கீழே படித்துப் பாருங்கள்.

A customer is the most important visitor on our premises.
He is not dependent on us.
We are dependent on him.
He is not an interruption of our work.
He is the purpose of it.
He is not an outsider to our business.
He is part of it.
We are not doing him a favour by serving him.
He is doing us a favour by giving us the opportunity to do so.
- மஹாத்மா காந்தி

எங்களுக்கு உதவத்தானே அரசாங்கப் பணியாளர்களாகிய நீங்கள் இருக்கின்றீர்கள். அரசியல் சட்டத்தில் விஐபிக்கு ஒரு நடை முறையும் என்னைப் போன்ற ஊனமுற்றோருக்கென ஒரு நடை முறையும் பின்பற்ற வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கின்றதா? சொல்லுங்கள் எழும்பூர் நிலைய டெபுட்டி ஸ்டேஷன் மாஸ்டர் பாஸ்கர் அவர்களே... சொல்லுங்கள். 

உங்கள் மகனோ அல்லது மகளோ என்னைப்போல இருந்து எனது அனுபவம் போல அவர்களுக்கு நடந்தால் தாங்கள் மகிழ்ச்சியாய் இருப்பீர்களா? சொல்லுங்கள்.. தர்மம் சூட்சுமமானது அய்யா. நின்று கொல்லும். உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். என்னை வதைத்த தாங்கள், உலகையே படைத்து ஆண்டு கொண்டிருக்கும் இறைவனால் வதைக்கப்படுவது நிச்சயம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று படித்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா டெபுட்டி ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களே. ஹிட்லர், முஸொலினி நிலை எல்லாம் என்ன? வரலாற்றைப் படித்திருப்பீர்களே... மறந்துவிட்டீர்களா ?

பொதுமக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் என்னைத் துன்பத்தில் ஆழ்த்திய பாஸ்கர் அவர்களை அவர் எனது பணியாளர் என்ற வகையில் ஏதாவது செய்யத்தான் இயலுமா? ஏதாவது கம்ப்ளைண்ட் கொடுத்தால் நடவடிக்கைதான் எடுப்பார்களா? இந்திய அரசு பொதுமக்களின் அரசு என்று எழுத்தளவில் தான் இருக்கின்றது. நடைமுறை என்பது வேறாக இருக்கிறது. சட்டங்கள் சட்டப்புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சட்டங்களை சினிமாவில் ஹீரோக்கள் காப்பாற்றுவார்கள். எங்கே? யாராவது ஒருவர் ஒரு அரசு ஊழியரைக் குற்றம் சுமத்திப் பாருங்கள். கம்ப்ளெயிண்ட் கொடுத்தவருக்கு என்னென்ன தொல்லைகள் கொடுக்க முடியுமோ அத்தனை தொல்லைகளையும் தருவார்கள் வேறு வேறு ரூபத்தில்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றி எழுதப்பட வேண்டும். இல்லையெனில் உங்களைப் போன்ற மக்களின் வேலைக்காரர்கள் எஜமானர்களாகிய எங்களை வதைப்பது என்றும் மாறப்போவதில்லை.

சாதாரண பொது மக்களையே உதாசீனப்படுத்தும் அரசு ஊழியர்கள் ஊனமுற்றோருக்குச் செய்யும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. வாயில்லா ஜீவன்களைத் துன்பத்தில் ஆழ்த்தினால் அதைக் கேட்கவும் ஒரு இயக்கம் இருக்கிறது. ஆனால் ஊனமுற்றவர்களுக்கு என்ன இருக்கிறது? எண்ணற்ற துறைகள் அரசால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை எல்லாம் என்ன செய்து கிழித்து விட்டன. அந்த அனுபவத்தையும் சொல்கிறேன் கேளுங்கள் பாஸ்கர் அவர்களே.....

கல்லூரியில் படிக்கும் போது சமூக நலத்துறை மூன்று சக்கர நாற்காலி வழங்கியது. அலுவலகம் எங்கோ ஓரிடத்தில் இருந்தது. அதைச் சென்றடையவே ஏகப்பட்ட காசும், உடல் துன்பமும் பட்டேன். கொடுத்த வண்டியின் மூன்று சக்கரங்களில் காற்றும் இல்லை ஒழுங்காக இணைக்கப்படவும் இல்லை. வண்டியைக் கொடுத்துவிட்டு மாலையில் விழா நடக்கவிருக்கும் விழாத் திடலுக்கு வந்துவிடுமாறும், அங்கு வண்டியினை மந்திரிகள் தருவார்கள் என்றும் சொன்னார்கள். சமூக நல அலுவலகத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்தது. வண்டியினை அருகில் இருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் கொடுத்து ரிப்பேர் செய்து தரச் சொல்லி அதை உருட்டிக் கொண்டு அந்த விழா நடந்த இடத்திற்குச் சென்ற பின்பு அங்கு வந்த சில அதிகாரிகள் வண்டியைப் பூட்டி சாவியினை எடுத்துச் சென்றுவிட்டனர். மாலை நான்கு மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை வண்டியிலேயே உட்கார்ந்து கொண்டு இயற்கை உபாதை, பசி, இடுப்பு வலி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு காத்திருந்தேன். என் அருகில் பெண் ஒருவர் வண்டியின் மீது அமர்ந்திருந்தார். அவரின் நிலைமையை எண்ணிப் பாருங்கள் வாசகர்களே. மந்திரிகள் வந்தார்கள். பேசினார்கள். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சென்றுவிட்டார்கள். அதிகாரிகள் வந்து சாவியினைக் கொடுத்துவிட்டு மந்திரிகளுக்கு வேறு வேலைகள் இருப்பதால் சென்றுவிட்டார்கள் என்று சொல்லிச் சென்றார்கள். அதன் பிறகு வண்டியினை எடுத்துக் கொண்டு ஊர் சென்று சேர வேண்டும். எப்படி முடியும். ஊரே உறங்கிக் கொண்டிருக்கும். யாரைப் பிடித்து என்ன செய்ய இயலும். கிடைத்த இடத்தில் நான் படுத்துக் கொள்வேன். என்னுடன் வந்த அந்தப் பெண்ணின் நிலைமை? இப்படி எங்களை வதைத்த இரு மந்திரிகளின் நிலைமை என்ன ஆனது தெரியுமா? இன்று அவர்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டு மண்ணுக்குள் சென்றுவிட்டார்கள்.

இன்னுமொரு சம்பவத்தில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கணிப்பொறி உதவியாளர் பணி இடம் இருப்பதாகக் கேள்விப்பட்டு மனு கொடுக்கச் சென்ற போது, அங்கிருந்த அதிகாரிகள் அப்படி ஏதும் இல்லை என மறுத்துவிட்டனர். அந்தப் பதவி காலியாய் இருக்கிறது என்று அங்கு வேலை செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார். அரசாங்கப் பதவிகளையும் விலைக்கு விற்கின்றீர்களே... இதெல்லாம் நியாயமாகப் படுகிறதா உங்களுக்கு...

ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்க வருமாறு அறிவிப்பு செய்தனர். நண்பருடன் சென்ற போது, போட்டோ எடுக்கப் பணம் கேட்டனர். அதற்கென்று தனியார் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் வந்திருந்தார். பணம் கொடுத்தாகிவிட்டது. அட்டையில் பெயர் எழுதிய பின்னர், கலெக்டர் ஆஃபீஸில் இருந்து ஆறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அரசு மருத்துவ மனையில் இருக்கும் எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்று கையெழுத்து வாங்க வேண்டுமாம். அதன் பின்னர் தான் அட்டை செல்லும் என்று கூசாமல் சொல்கின்றனர்.. எங்கு சென்றாலும் கஸ்டப்படுத்தப்படும் , உதாசீனப்படுத்தப் படும் ஊனமுற்றவர் என்ன பாவம் செய்தார்கள். அரசு அதிகாரிகளே, என்னைப் போன்றோரைப் பார்த்தால் கொஞ்சம் விஷம் கொடுத்து விடுங்களேன். புண்ணியமாகப் போகும்.

இப்படி அரசால் துரத்தித் துரத்தி அடிக்கப்படும் என்னைப் போன்றவர்களின் மனத்துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஊனமாகப் பிறந்ததுதான் குற்றமா ? குற்றமெனில், அரசாங்கமே எங்களைக் கருணைக் கொலை செய்து விடலாம் அல்லவா ? உயிரோடு வைத்து வேதனை செய்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லாமல் கொல்லுவதுதான் அரசாங்கத்துக்கு வாடிக்கையா ?

ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தாராம். வரலாறு சொல்கிறது. அது உடல் துன்பம் பாஸ்கர் அவர்களே. அது உடல் துன்பம். மனத்துன்பம் இருக்கிறதே அது நரகம் அய்யா... நரகம்.. மனவேதனை மனிதனின் உச்சக்கட்ட துன்பம் பாஸ்கர் அவர்களே....

உயர்திரு பாஸ்கர் அவர்களே, உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, மக்கள் சேவைக்கு வந்து வசதியாக அதை மறந்து விட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் உங்களைக் குற்றம் சொல்லி இனி என்ன ஆகப்போகிறது. ஒன்றும் இல்லை. நான் பட்ட வேதனை வேதனைதான். ஆனால் அந்த வடு இன்னும் மாறவில்லை. இனிமேலாவது என்னைப் போன்றவர்கள் வந்தால் அவருக்கு நாற்காலி கொடுத்து உதவி செய்யுங்கள். அதுதான் எனக்குத் தேவை.

இந்தப் பதிவைப் படிக்கும் எனதருமை நண்பர்களே....

பாவத்தின் சுமைகளை சுமந்து கொண்டு, அரசால் புறக்கணிக்கப்பட்ட, எந்தச் சுகத்தையும் அனுபவித்தும் பார்க்க முடியாத, வேதனையிலும் வெந்து கொண்டு, என்று சாவு வரும் என்று காத்துகொண்டு இருக்கும் ஊனமுற்ற உள்ளங்கள் தவழ்ந்து வரும் போது, பாதையில் குறுக்கிடாமல் சற்று விலகி நின்று அவர்கள் செல்ல வழி விட்டால், எனது இந்தக் கட்டுரைக்கு ஒரு அர்த்தம் உண்டு. என்ன செய்வீர்களா ?

குறிப்பு : பொத்தாம் பொதுவாகக் குற்றம் சொல்வது எனக்குப் பிடிக்காது என்பதால் எனக்குத் துன்பமிழைத்த பாஸ்கர் அவர்களின் பெயரைக் குறிப்பிடும்படி அமைந்து விட்டது.


08-12-2008 அன்று எழுதப்பட்ட பதிவு.

இந்தப் பதிவிற்கு “ரகசிய வன்முறை” என்று தலைப்பிட்டு உயிரோசையில் வெளியிட்ட மனுஷ்யபுத்திரனுக்கு நன்றி.

தாய்மை உணர்வுக்கு நிகர் வேறு ஏது?

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழி சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அனுபவ ரீதியில் நான் தகப்பனாக மாறிய பிறகு தான் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஒரு டிவியில் இறந்து போன தன் குழந்தையின் நினைவாகவே சுடுகாட்டில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு தாய் தினமும் சென்று அழுது புரண்டு கொண்டிருக்கின்றார் என்று டீசர் வெளியிட்டிருந்தார்கள். 

குழந்தையை வயிற்றில் சுமந்து வலியுடன் பெற்றெடுத்து அவஸ்தைகளை அனுபவித்து, நேரம் காலம் பாராது கண் விழித்து, சிறு நீர் கழித்தவுடன் உடை மாற்றி, மலம் கழித்தவுடன் முகம் சுழிக்காது சுத்தம் செய்து கழுவி விட்டு உடைகள் துவைத்து, குளிக்க வைத்து, அழுகையில் அது என்ன அழுகை எனக் கண்டுபிடித்து உணவு ஊட்டி, இரவும் பகலும் ஓயாது பாதுகாத்து வளர்க்கும் தாய்மைக்கு ஈடு இந்த உலகில் ஏது? 

தான் இல்லையென்றால் தன் குழந்தைகளும் இந்த உலகில் துயரப்படும் என்று நினைத்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு சிலர் தங்களோடு தங்கள் குழந்தைகளையும் கொன்று தானும் செத்துப் போகின்றார்கள். இது தாய்மை உணர்வின் அதீத உச்சகட்டம்.

அம்மா, அப்பா இல்லாத பல குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் பழகி இருக்கிறேன். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அந்தத் தாய்மை உணர்வின் மகத்துவம் பற்றி. கிடைக்காத அந்த பாசமழையின் அற்புதங்கள் அவர்களின் கண்களின் ஊடாக சோகத்தின் நிழலாகப் படிந்து கிடக்கும். அது அவர்களுக்கு நிரந்தரச் சோகக் குறியீடாகவே இருந்து விடும் அவர்களின் வாழ் நாள் முழுவதும்.

நல்ல ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு விதம் என்றால் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் அர்ப்பணிப்பு அந்த உணர்வின் உண்மையை எந்த வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும்?

என்னையும் என் தாய் அப்படித்தான் வளர்த்தார். எல்லாக் குழந்தைகளும் ஓடி விளையாடும் போது தன் குழந்தை மட்டும் தவழ்ந்து செல்வதைப்பார்க்கும் என் தாயின் மன நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கையில் அவர் பட்டிருக்கும் மனத்துன்பத்தின் வீச்சினை என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. அவரவர் துன்பம் அவரவருக்கு. ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்து கொள்ளவே முடியாது. உதட்டளவில் வேண்டுமானால் துயரப்படுவதைப் போல காட்டலாம். ஆனால் உண்மையில் அது ஒரு நடிப்புச் சுபாவமே.

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் வசிக்கும் வீட்டின் கீழ்புறம் ஒரு குடும்பம் இருந்தது. அங்கு ஒரு பெண் குழந்தையைப் பார்த்தேன். இரண்டு கால்களும் சூம்பி இருந்தன. பாதங்கள் வளைந்து இருந்தன. முதுகுத்தண்டு பின்புறமாக வளைந்து இருந்தது. அப்பெண் குழந்தை நடந்தது. நன்கு பேசியது. அதைப் பார்த்ததும் எனக்குள் வலி பரவ ஆரம்பித்தது. சொல்லொண்ணாத் துன்ப உணர்வில் மூழ்க ஆரம்பித்தேன். 

ஆவணம் கிராமத்தில் எனக்குத் தெரிந்த ஒரு ஊனமுற்ற பையன் சாப்பாடு கிடைக்காமல், சரியாக பராமரிப்பு இல்லாமல் இறந்தே போனான். அவனது தாயும் தந்தையும் இருக்கும் வரையில் அவனைப் பாதுகாத்து வந்தனர். ஒருவரில் இருவர் இல்லாமல் போன பிறகு அவன் பிணமானான். அவன் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பான் என்று நினைக்கையில் மீண்டும் மீண்டும் துன்ப உணர்ச்சி மேலிடுகிறது.

அந்தப் பெண் குழந்தையின் தாயைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தார். அவரிடம் சொன்னேன், உங்கள் குழந்தையை தைரியமான பெண்ணாக வளருங்கள் என்றேன். நிச்சயம் சார் அதை அவளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறேன் சார் என்று உறுதி கொடுத்தார். அந்தத் தாய் அப்படித்தான் வளர்ப்பார் என்று நம்புகிறேன். 


(தங்கவேல் மாரியப்பன் - பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்ற சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்)

இதோ இந்தியாவின் மானத்தை ஒலிம்பிக்கில் காப்பாற்றியவர்கள் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளே. வரலாறு சொல்லிக் கொண்டிருக்கும் இனிக் காலம் காலமாக. திறமையும், அர்ப்பணிப்பு மண்டிக்கிடக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணிகளைக் கொடுக்கக் கூட இந்த கார்ப்பொரேட் உலகம் தயங்குகிறது. இன்று இந்தியா அவர்களிடத்தில் தலை வணங்குகிறது. இந்த வீரர்களின் தாய்கள் தான் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் தியாக உணர்வுதான் அவ்வீரர்களை வெற்றி பெற வைத்துள்ளது.

தாய்மை என்பது சொல்லிப் புரிந்து கொள்ள முடியாத வார்த்தை. அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் தன்மை.

இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சித்ரவதைக்கூடமாகவே இருக்கிறது. பள்ளிகளும், கல்லூரிகளும், அரசு அமைப்புகளும் கொடூரங்களைச் செய்து வருகின்றன. 

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் எனக்கு டேட்டா எண்ட்ரி வேலை கிடைத்து இண்டர்வியூக்கு வரச் சொல்லி இருந்தார்கள். அங்கு சென்றேன். கலெக்டரிடம் ஆர்டரைக்காட்டினேன். கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து பணி ஆர்டர் கொடுக்கச் சொன்னார். அதற்கு அவர் யாரிடமோ காசை பெற்றுக் கொண்டு வேறொருவருக்கு பணி கொடுத்து விட்டதாகக் கூசாமல் சொன்னார். ஊனமுற்ற அடையாள அட்டை வாங்கச் சென்றேன். என்னிடமும் பணம் கேட்டார்கள். உங்கள் அடையாள அட்டையும் வேண்டாம் உங்கள் உதவியும் வேண்டாம் என்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைவரின் முன்பும் சத்தமிட்டு அப்ளிகேஷனை கிழித்து போட்டு விட்டு வந்தேன்.

ட்ரெயினில் செல்வதற்கு ஊனமுற்றோர் பாஸ் வைத்திருக்கிறேன். டிக்கெட் பதிவு செய்யச் சென்றால் கோவையிலிருந்த டிக்கெட் முன்பதிவு கவுண்டரில் இருந்த பெண் எரிச்சலடைகிறார். அதைக் கொண்டா இதைக் கொண்டா என்று விரட்டுகிறார் என்றார் என் மனையாள். அவ்வளவு கடுப்பாக இருக்கிறது அந்தப் பெண்ணுக்கு.

வெற்றியடைந்த மாற்றுத்திறனாளிகளைப் பாரட்டக்கூட இவர்களுக்கு எந்த விதத் தகுதியும் இல்லை. வெட்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் மனம் கூசாமல் பாராட்டுகின்றார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு பணிகள் கொடுக்க மறுக்கும் தனியார் துறைகளும், ஒதுக்கும் அரசும் இன்று அவர்கள் பெற்ற பதக்கங்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றன. அசிங்க உணர்வு கொஞ்சம் கூட இல்லை. மாற்றுத்திறனாளிகளை வாழவே விடாத சமூகமும், அரசாங்கமும் அவர்களின் வெற்றிக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்கு இங்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை அதற்கான தகுதியும் இல்லை.

Wednesday, September 14, 2016

கிட்டி

கிட்டி என்றவுடன் கிட்டிப்புள் என்று நினைத்து விடாதீர்கள். இது வேறு. இது ஒரு கொலைகார ஆயுதம். மாட்டினால் உயிர் நிச்சயம் போய் விடும். இரக்க உணர்வே இல்லாமல் இதுவரையில் கோடிக்கணக்கான உயிர்களை பலி கொண்டிருக்கிறது இந்த ஆயுதம். அப்படி என்ன ஆயுதம் அது என்று நினைப்பீர்கள்.

இதோ இந்த புகைப்படத்தைப் பாருங்கள். 



( கிட்டியில் சிக்கிய எலிகள் )

வீட்டில் நூறு கிட்டிக்கு மேல் இருந்தது. பின்னர் கொக்கு பிடிப்பதற்கு என்று தனி வலையொன்று இருந்தது. எல்லாம் வீணாகப் போய் விட்டன. கதிர் பால் பிடித்து நிற்கையில் இந்த எலிகள் நெல் மணிகளை கடித்து குதறி விடும். அதற்காக வயல் வரப்புகளில் உளுந்தை நட்டு வைப்போம். அது காய் பிடிக்கையில் எலிகள் தொந்தரவு கொஞ்சம் குறையும். இருப்பினும் வருடா வருடம் இந்தக் கிட்டியை வைத்து எலிகளைக் கொல்வது வழக்கம்.

காவிரியில் தண்ணீர் வராது. வந்தாலும் போதாது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்ற நிலையில் சாப்பாட்டுக்கு நெல் வருமா என்றும் தெரியவில்லை.

காவிரி நதி நீர் ஒப்பந்தம் 1824ல் கையெழுத்து இடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1974ம் ஆண்டு காலாவதியானது. அதற்கு முன்பு வரை பங்கீட்டில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. மேற்கண்ட ஒப்பந்தத்தை நீடிக்க முயற்சித்த போது கர்நாடகா எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதுமட்டுமல்ல அப்போது இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது. காமராஜர் ஆட்சியிலிருந்தார். அப்போதே இந்த ஒப்பந்தத்தை நீடித்திருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிருக்கவே முடியாது. அதை அனைவரும் மறந்து விட்டனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் காவிரி நதீ  நீர் பங்கீட்டுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆண்டிற்கு 393லிருது 414 டிஎம்சியும், கர்நாடகாவிற்கு 239லிருந்து 261 டிஎம்சியும் வழங்கும்படி உத்தரவிட்டிருந்தார். அதையும் கர்நாடகா மறுத்து விட்டது.

1991 அன்று காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிற்காக முன்னாள் கர்நாடகா முதல்வர் பங்காரப்பாவும், வட்டாள் நாகராஜ் மற்றும் மறைந்த நடிகர் ராஜ்குமார் ஆகிய மூவரும் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் மிகப் பெரும் வன்முறையை தூண்டி நடத்தினார்கள். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

2007ம் வருடம் பிப்ரவரி மாதம் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் முயற்சியினால் காவிரி ஆணையம் தமிழகத்து 419 டிஎம்சி தண்ணீரையும், கர்நாடகாவிற்கு 217 டிஎம்சி தண்ணீரையும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரையும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அன்றைக்கும் கர்நாடகா தண்ணீர் தர மறுத்தது. 

இதற்கிடையில் கபினி, ஸ்வர்ணாவதி, கேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளை கர்நாடகா கட்டி காவிரி நீரினைத் தேக்கி வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காமல் உபரி நீரை மட்டும் வெளியேற்றி வந்து கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் போராடி தீர்ப்பு பெற்று வந்திருக்கிறார் நம் முதலமைச்சர். எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்தன. நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. பல தீர்ப்புகள் உத்தரவுகள் வழங்கப்பட்டன. இருந்தாலும் காவிரி நதி நீரைப் பங்கிடுவதில் கர்நாடகா செய்யும் செயல் அட்சர சுத்தமான சட்ட மீறல் என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வேண்டியதில்லை. பேச்சு வார்த்தையில் நீதி கிடைத்தும் அதை கர்நாடகா நிறைவேற்றவில்லை என்கிற போது கோர்ட்டை நாடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?

தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழர்களின் சொத்துக்கள் சூரையாடப்படுகின்றன. அகதிகளாக தமிழகம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இனி என்ன நடந்து சரியாகப் போகின்றது எனத் தெரியவில்லை. இனி யார் சொல்லி கர்நாடகா கேட்கப்போகின்றது என்றும் தெரியவில்லை. தீர்ப்புச் சொன்னால் அதை நிறைவேற்றுவது போல நிறைவேற்றுகின்றார்கள். ஆனால் அடுத்த பக்கம் அழிக்கின்றார்கள். இது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது வைக்கப்படும் தாக்குதல் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

தமிழகத்தில் கலவரம் ஏற்பட நம் அரசு அனுமதிக்கவில்லை. கடும் நடவடிக்கைகளை எடுக்கிறது. நாம் நம் கடமையைச் செய்வோம். பாரதப் பிரதமர் இருக்கிறார், நீதிபதிகள் இருக்கின்றார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. 

ஆனானப்பட்ட எத்தனையோ அக்கிரமங்களைச் செய்தோர் கதி என்ன என்று வரலாறு பக்கம் பக்கமாய் பதிவு செய்திருக்கிறது. இனி என்ன சொல்ல இருக்கிறது? 

கிட்டிகள் இனி எலியைப் பிடித்து தான் ஆக வேண்டும். ஆனால் எலிகளுக்கு உணவு?


Sunday, September 11, 2016

நிலம் (28) - அன் அப்ரூவ்ட் சைட் வீடுகள் கிரையம் செய்ய முடியாது

சென்னை யானை ராஜேந்திரன் என்பவர் கோர்ட்டில் பொது நல வழக்கொன்றினைத் தொடுத்திருந்தார். இதன் விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் மகாதேவன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. அந்த விசாரணையின் போது செப்டம்பர் 10ம் தேதி முக்கியமான இடைக்காலத் தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.

மனைப்பிரிவு செய்து அனுமதியளிக்கப்படாத மனைகளை, அம்மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பத்திரப்பதிவுத் துறை இனிமேல் பதிவு செய்யக்கூடாது என்பதுதான் அது.


(  நீதிபதி எஸ்.கே.கவுல் )

ஒரு பத்திரப்பதிவாளரின் கடமையாக சொல்லப்படுவது என்னவென்றால் தகுந்த மூலப்பத்திரங்களுடன் இருந்தால் ஆவணப்பதிவினை செய்து தர வேண்டும் என்பதுதான். அவர் அரசுக்கு வருமானம் வருவதைத்தான் உறுதி செய்வார். லீகல் பார்ப்பது, பத்திரங்கள் சரியாக எழுதப்பட்டிக்கிறதா என்று பார்ப்பது எல்லாம் அவரின் வேலை அல்ல என்பதை சொத்துக்கள் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்க.

சமீபத்தில் என்னிடம் ஒருவர் ரெஜிஸ்டரே பதிவு செய்து விட்டார் அதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று கேட்டார். விபரம் தெரியாத காரணத்தால் இப்படிப்பட்ட கேள்விகளைப் பலரும் கேட்கின்றார்கள். இது அவர்களின் அறியாமை.

இனிமேல் அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகள் விற்பனை செய்ய முடியாது. அன் அப்ரூவ்ட் மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் விற்பனை செய்ய முடியாது. பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்ட் என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். பஞ்சாயத்து போர்டு 2000 சதுரடிக்குள் கட்டப்படும் வீட்டு பிளானை அப்ரூவல் செய்யலாம் என்று இருந்தது. அது தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது. ஆனால் அது அப்ரூவ்ட் செய்யப்பட்ட வீட்டுமனை ஆகாது என்பதையும் நினைவில் கொள்க.

ஆகவே நண்பர்களே, அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகளை இனி நீங்கள் விரும்பினாலும் வாங்க முடியாது. கோர்ட் அதற்கு செக் வைத்து விட்டது. இது போன்ற வீட்டு மனைகளை விற்போர் இனி மக்களை ஏமாற்ற முடியாது. இதற்கு முன்பு மாதத் தவணையில் பணம் கட்டி இருப்போர் உடனடியாக தாங்கள் கட்டிய பணத்தினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும். 

பணம் கிடைக்காது என்றால் இதற்கு இன்னொரு வழியும் உண்டு. அது பற்றி பிறிதொரு நாளில் எழுதுகிறேன். இப்போதைக்கு சொல்ல வந்த விஷயம் அவ்வளவுதான்.

செய்தி  ஆதாரம்:

தி ஹிந்து பத்திரிக்கை

The Madras High Court on Friday issued an order banning registration of plots and houses in unapproved housing layouts as well as conversion of agricultural land for non-agricultural use in an unplanned manner in Tamil Nadu.
“We direct that no registering authority in the State shall register any sale deed in respect of any plot in unauthorised layout or any flat/ building constructed on such plots,” said the First Bench of Chief Justice S.K. Kaul and Justice R. Mahadevan.
The Bench said the order was necessary to save the ecology and prevent flooding while simultaneously giving time to the State government to come up with legislative changes.
It then directed the Inspector General of Registration to circulate the order to all registering authorities (Sub-Registrars) in the State.
The interim directions were passed on a public interest litigation petition filed by advocate ‘Elephant’ G. Rajendran seeking a direction to the government to forebear the local administration from giving approval or permission to convert agricultural lands into housing layouts and forebear the Registration Department from registering such property.
The Bench expressed its concern over the absence of any provision for regulating conversion of agricultural lands that were uncultivated for more than three years.

Saturday, September 10, 2016

காவிரிக்கு குட்பை சொல்லி விடலாம்

தஞ்சாவூர் கடைமடைப் பாசனத்தில் எனக்கும் கொஞ்சம் வயல்கள் உண்டு. அந்த வயலில் இருந்து வரும் அரிசியில் தான் உண்கிறேன். குருவை, சம்பா சாகுபடிகள் இன்னும் நினைவில் இருக்கின்றது. விவரம் தெரிந்த நாளில் இருந்து குருவைச் சாகுபடி செய்வதில்லை. ஒரே ஒரு சாகுபடி தான். குருவையில் சீக்கிரமே விளையும் நெல் விதைப்பு நடக்கும். இரண்டு வருமானங்கள் கிடைக்கும். இப்போதெல்லாம் ஒரே ஒரு சாகுபடி. சாப்பாட்டுக்குப் போக உபரியை விற்று வரும் பணத்தில் தான் பிள்ளைகள் படிப்பு, மருத்துவம், உடை, உறவுச் செலவுகள், விவசாயச் செலவுகள் அத்தனையும் அந்த வருமானத்தில் தான் சமாளிக்க வேண்டும். முடியுமா?

புட் சட்னி இணையதளத்தில் ராஜ்மோகன் அவர்களின் வீடியோவைப் பார்த்தேன். பிரமாதம். மணல் மாஃபியா தான் காவிரியில் தண்ணீர் வருவதை தடுக்கிறது என்று பேசி இருக்கிறார். பொய் பேச வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆகவே அவர் மணல் மாஃபியா பற்றிப் பேசியது எந்த ஆதாரத்தை வைத்து என்று கூட ஆயுத எழுத்தில் கேட்க மாட்டேன் என்கிறார் ஹரிஹரன். பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படிப் பாதுகாக்கிறார் ஹரிஹரன் என்று நினைக்கையில். யாரோ ஒருவர் தான் பிழைப்பதற்காக தமிழகத்தின் ஆதாரத்தையே அசைக்கிறார் என்றால்? என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இதோ அந்த வீடியோ இணைப்பு, நீங்களும் பாருங்கள்.


ராஜ்மோகனுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். மிகப் பெரிய தூண்டுதலை அவர் உருவாக்கி இருக்கிறார். ஆனால் யாரும் எதுவும் செய்யப்போவதும் இல்லை, செய்ய விடவும் மாட்டார்கள்.

ஆனால் ராஜ்மோகன் உங்களுக்கு ஒன்றினை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. பெரும்பாலான தமிழர்களின் பிள்ளைகள், அவர்களின் உறவினர்கள் என்று பலரும் கர்நாடகாவில் வேலை செய்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் வருகிறது. ஆகவே காவிரியாவது ஒன்றாவது என்று தான் பேசுவார்கள். எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

காவிரி ஆறு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படப்போகிறது ராஜ்மோகன். அதை அனைவரும் வேடிக்கைதான் பார்ப்பார்கள். யாரும் எதுவும் செய்யப்போவதில்லை, செய்யவும் விட மாட்டார்கள். ஆகவே  நாம் விரைவில் காவிரிக்கு குட்பை சொல்லி விடுவோம். தமிழர்களின் வாழ்வாதாரம் அழிய அழிய அவன் அகதியாய் வெவ்வேறு நாடுகளில் தஞ்சமடையத்தான் போகின்றான். இது நடக்கத்தான் போகிறது.

விரைவில் நாமும் வேறு ஏதாவதொரு நாட்டினை தேர்வு செய்து வேலை விசாக்களுக்கு தயார் செய்து கொள்ள வேண்டியதுதான்.

வாய்ச் சொல்லில் வீரர்கள் நாம். அடிக்க அடிக்க ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு இனம் இந்த உலகில் உண்டென்றால் அது நாம் தான். சினிமாக்காரர்களுக்கு ஆட்சியையே தூக்கிக் கொடுத்தவர்கள் நாம். கர்நாடகாவிற்கு காவிரியை தாரை வார்த்து விடுவோம். விடவும் வைப்பார்கள். முல்லைப் பெரியார் அணையில் நீரைத் தேக்கி வைக்கக் கூட முடியவில்லை. அதற்கும் எதிர்ப்பு வருகிறது. தண்ணீர் இல்லா மாநிலமாக மாற்றி விட்டால் தமிழகமும் தமிழர்களும் வேறு வழி இன்றி அகதிகளாக மாறி விடுவார்கள்.

நாமெல்லாம் அகதிகளாக மாறி விடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. பிழைத்துக் கிடந்தால் எங்காவது ஒரு நாட்டில் நம் சந்திதிகள் சந்திப்பார்கள்.

இதுவரை நமக்கு உணவிட்டு வந்த காவிரிக்கு அனைவரும் சேர்ந்து குட்பை சொல்லி விடுவோம்.

காவிரியே உனக்கு குட்பை !

Thursday, September 8, 2016

ஜியோ சலுகை கொள்ளையா?

ரிலையன்ஸ் எனக்கு பெரிய பாடத்தை முன்பு புகட்டிய அனுபவம் இருக்கிறது. முன்பு 150 ரூபாய்க்கு போன் கொடுத்தார்களே நினைவிலிருக்கிறதா அந்தச் சம்பவம்? அப்போதெல்லாம் அவுட்கோயிங் காலுக்கு பெரும் தொகை செலவாகும். செங்கல் சைசில் நோக்கியா போன் இருந்தது. முதலில் பேஜர் வந்தது, அதன் பிறகு செல்லுலர் வந்தது. அந்தக் காலத்தில் தான் ரிலையன்ஸ் செல் போன் விற்பனையில் பத்தாயிரமோ ஒரு லட்சமோ சரியாக நினைவில் இல்லை வாங்கிக் கொண்டு ஏஜென்சிகளை உருவாக்கி செல்போன் விற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த ஏஜென்சி எடுத்தவர் எனது நண்பர். பல லட்சம் இழந்தார். அடியேனும் சப் ஏஜென்சியில் பெரும் தொகையினை இழந்தேன்.

ஆகவே ரிலையன்ஸ் என்றாலே எனக்குள் அலாரம் அடிக்கும். முகேஷ் அம்பானியின் ஜியோ பற்றி எனக்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே ஏற்படவில்லை. ரிலையன்ஸ் என்றாலே பாலியஸ்டர் பிரின்ஸ் என்ற இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட புத்தகம் நினைவில் வந்து விடும். பெரும் முதலாளிகள், அரசே சலாம் போடும் போது நாமெல்லாம் என்ன சுண்டைக்காய்.

இவர்களால் அன்லிமிடெட் வாய்ஸ் காலினை எப்படி இலவசமாகக் கொடுக்க முடியும்? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. வேலைப்பளுவால் அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்க முடியவில்லை.

நேற்றைய தினமலர் இது உங்கள் இடம் பகுதியில் தினமலர் வாசகர் சென்னை வினோத் அவர்களின் கடிதம் படிக்க கிடைத்தது. 

இதோ அந்தக் கடிதம்.

ஆர்.வினோத், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்று, நாடு முழுவதும் இளைஞர்கள் அதிகமாக உச்சரிப்பது, 'ஜியோ' என்ற சொல்லை தான். முகேஷ் அம்பானியின், 'ஜியோ' தொலைத் தொடர்பு நிறுவனம், பல அதிரடி சலுகைகளை அறிவித்து உள்ளது.அதில், 'கால்கள், எஸ்.எம்.எஸ்., முற்றிலும் இலவசம்; பயன்படுத்தும் இன்டர்நெட் டேட்டாவுக்கு மட்டும் கட்டணம். அதிலும், '149 ரூபாய் திட்டத்தில், 300 'எம்பி' முதல், 4,999 ரூபாய் வரை, பல பிளான்கள்' என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நமக்கு எப்படி லாபம், கம்பெனியால் எப்படி தர முடிகிறது என, ஆராய்ந்தால் அதில் பெரிய சூட்சமமே அடங்கியுள்ளது. தொலைத்தொடர்பில், '2ஜி, 3ஜி'க்கு அடுத்தபடியான ஆற்றல் கொண்டது, '4ஜி' தொழில்நுட்பம்.

இதை விட மேம்பட்ட, '4ஜி வோல்டி' தொழில்நுட்பத்தில், 'ஜியோ' சேவை வழங்குகிறது. இதில், அழைப்பு அல்லது, எஸ்.எம்.எஸ்., செய்யும்போது, டேட்டா கணக்கில் கழியும். 'அவுட் கோயிங்' காலுக்கோ அல்லது, 'இன்கம்மிங்' காலுக்கோ, டேட்டா கணக்கில், ஒரு நிமிடத்திற்கு, 0.75-1 'எம்பி' டேட்டா செலவாகும்.தினமும் ஒரு மணி நேரம், 'அவுட் கோயிங்' கால் பேசினாலும், 30 நிமிடங்களுக்கு 'இன்காம்மிங்' கால்கள் வந்தாலும், 8,0-90, 'எம்பி' வரை டேட்டா கணக்கில் குறையும்! இன்டர்நெட் பயன்படுத்தினால் கூட, இரண்டு நாட்களுக்குக் கூட தேறாது.

அதுவே, 499 ரூபாய் பிளானில் ஓரளவிற்கு பயன்பாடு உள்ளது. 499 மற்றும் அதற்கு மேல் செலவு செய்பவர்களுக்கு லாபம்; மற்றவர்களுக்கு இருக்காது.

'ஜியோ'வுக்கு மாதம் ஒருவர், 499 ரூபாய் செலவு செய்வார். அது, கம்பெனிக்கு மிகப்பெரிய லாபம் தானே! அது மட்டுமின்றி, டிசம்பர் வரை இலவசம் என, அறிவித்து உள்ளனர். இதை பயன்படுத்துவோரை போக பொருளாக ஆக்க பழக்கி, அதற்கு அடிமையான பின், கட்டணம் வசூலிப்பது ராஜதந்திரம்!

இணைப்பு :

தாய் மொழி என்று அழைக்காதீர்கள்

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்காக ஆன்லைனில் செய்தால் ரிஜெக்டட் என்றே வருகிறது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பிரச்சினை. ஆகையால் கோவை பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தின் வளாகத்தில் இருக்கும் ஏஜென்சியை அணுகினேன். ஐம்பது ரூபாய் கட்டணம் பெறுகின்றார்கள். பெட்ரோல் செலவு வேறு. மதியம் உணவுச் செலவு வேறு. எப்படியும் இருநூறைத்தாண்டி விடுகிறது. இதுவே தின வேலைக்குச் செல்பவராக இருந்தால் ஒரு நாள் சம்பளம் போய் விடும். 

தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற இங்குள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் அப்ளை செய்ய வேண்டுமாம். சித்ராவில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகம் நார்மலாக பாஸ்போர்ட் அப்ளை செய்பவர்களுக்கானதாம். இரண்டு அலைச்சல்.

எனக்கு பாஸ்போர்ட் ரினிவல் செய்யும் போது ஆன்லைனில் புக்கிங்க் செய்தேன். அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்ததும் நேரில் சென்றேன். கைரேகை, போட்டோ எடுத்தார்கள். கட்டணத்தை அங்கேயே செலுத்தி விட்டேன். பதினைந்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வீடு வந்து சேர்ந்து விட்டது. 

இந்த வளாகத்தில் இருந்த ஒரு ஏஜென்சியில் ஆன் லைன் அப்ளை செய்வதற்கும், இன்ன பிற வேலைகளுக்கும் 2500 ரூபாய் ஆகும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒருவர். அப்படியா என வாயில் ஈ போவது கூட தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தார் கசங்காத சட்டை போட்டு விரைப்பாக நின்றவர். 

அப்போது ஒரு காரிலிருந்து காச் மூச்சென்று சத்தம் கேட்டது. என்னவென்று திரும்பிப் பார்த்தால் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்மணி ஆகியோர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி என்னைப் பார்ப்பதும் பின்னர் ஆங்கிலத்தில் அந்தக் குழந்தைகளை திட்டுவதுமாக இருந்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாடுகின்றாராம். நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேனாம். இது தெரியாத அந்தக் குழந்தைகள் இருவரும் தமிழில் அம்மா, அம்மா எனப் பேச ஆரம்பிக்க அதற்கும் திட்டு விழுகிறது. என்ன சொல்லித் திட்டுகிறார் தெரியுமா? ”லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க வைக்கின்றேன், தமிழிலா பேசுகின்றீர்கள்?”.

அதன் பிறகு அந்தக் குழந்தைகள் இருவரும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தனர். அந்தப் பெண்மணியின் புருஷன் என்னிடம் வந்து பேசினார். ”நீங்கள் தமிழரா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ”நான் பச்சைத் தமிழன்” என்று பெருமையாகச் சொன்னார். 

நதிகளுக்கு பெண்கள் பெயர்களை வைத்திருக்கிறோம், நாட்டையே தாய் நாடு என்கிறோம். மொழியை தாய் மொழி என்கிறோம். அம்மா என்றால் பெரும்பான்மையான பெண்களுக்கு கசக்கிறது. மம்மி என்று தான் அழைக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். கிராமத்திலிருக்கும் பெண்களை விடுங்கள். நகரத்தில் இருக்கும் பெண்கள் என்ன செய்கின்றார்கள் என்று யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

தமிழில் பேசினால் என்ன? ஏன் அதைக் கூடச் செய்ய தயங்குகின்றார்கள் இந்தப் பெண்கள்? வெற்று ஈகோவினால் என்ன கிடைக்கப்போகின்றது? இந்த தற்பெருமையினால் கிடைக்கப்போகும் பயன் தான் என்ன? ஒன்றுமில்லை. வெற்றுப்பெருமை.

தாய் மொழி என்று இனிச் சொல்லவே கூடாது என நினைத்தேன். இந்த எரிச்சலில் இருந்த போது குஜராத் சிங் ஒருவர் வெகு அழகாக போனில் யாரோ ஒருவருடன் தமிழில் பேசிக் கொண்டே நடந்து சென்றார். சில்லென்று இருந்தது.

தமிழை யாரும் வளர்க்க வேண்டாம். தமிழால் தான் பலரும் பிழைக்கின்றார்கள் என்ற சிந்தனை மேலோட வீட்டுக்குத் திரும்பினேன்.

தமிழ்ப் பெண்களே, வீட்டிலிருக்கும் போது உங்கள் குழந்தைகளைத் தமிழில் பேச வையுங்கள். தமிழ் பேப்பரை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். ஆங்கிலம் என்பது வயிற்றுப் பிழைப்புக்கு என தெளிவாகச் சொல்லிக் கொடுங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவை அம்மா என்று தான் அழைத்தீர்கள் என்பதினை மறந்து விடாதீர்கள். எங்கெங்கும் ஆங்கிலத்தில் பேசுவது அடிமைத்தனம். வேலையின் போது, படிக்கும் போது ஆங்கிலத்தில் பேசினால் போதுமே. 

கணபதி, பாரதி நகரில் இருக்கும் கிராமத்துக்கடையில் ராகிக்களியும், காரப்புளிக்குழம்பும், மிளகாய் வற்றலும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.  ”சார், கருவாட்டுக்குழம்பு இருக்கிறது, அதையும் பார்சல் செய்து தரவா?” என கேட்டார்கள். 35 வயது வரை சாப்பிட்ட கருவாட்டுக்குழம்பின் வாசம் திடீரெனெ நினைவுக்கு வர பெருமூச்சு தான் வெளிப்பட்டது. சென்று வா கருவாட்டுக்குழம்பே என மனம் அதற்கு விடை கொடுத்து நீண்ட நாட்களாகி இருந்தன.

ஆதார் கார்டில் முகவரி மாற்ற செய்ததில் மீண்டும் ஒரு தவறு நேர்ந்திருக்கிறது. இன்றைக்கும் மறுபடியும் செல்ல வேண்டும்.

Monday, September 5, 2016

ஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு?

எங்க ஊர் பக்கம் இப்படித்தான் சொல்வார்கள். உழுவும் ஏர் இதற்கு இன்னொரு பெயர் கலப்பை. கொழு என்றொரு வஸ்து இருக்கும். அது கலப்பை மரத்தின் நுனியில் இரண்டு போல்டு போட்டு இணைத்திருப்பார்கள். மொத்தமாக நான்கு மரத்துண்டுகள் தான். நுகத்தடி தணி. 


இதோ இப்படித்தான் இருக்கும் ஏர் கலப்பை. நுகத்தடியில் மாடுகளைக் கட்டி கைப்பிடியை அழுத்திட மாடுகள் முன்னே செல்ல, கொழு மண்ணைக் கீறி இரண்டு பக்கமும் மண்ணைத் தள்ளும். வடம் பிடித்தல் என்றுச் சொல்வார்கள். அதாவது மாடு திருப்புவதற்கு வசதியாக நீண்ட அகலமான செவ்வக வடிவத்தில் முதலில் ஏரோட்டி பின்னர் நான்கு ஐந்து வரிசைகள் உழுத பிறகு அடுத்த இணைச் செவ்வகத்தினை உருவாக்கி உழுவார்கள். வெற்று வயலில் உழுவது இப்படித்தான். சேறடிக்கும் போது வேறு மாதிரி உழுவார்கள்.

குறுவைச் சாகுபடி வருவதற்கு முன்பே போஸ் ஆசாரியைக் கூட்டி வருவான். அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு குடி ஆசாரிகள் என தனியாக இருப்பார்கள். ஒவ்வொரு பொங்கலின் போது அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் புத்தம் புதிய அகப்பையைத் தான் பயன்படுத்துவோம். எங்கள் குடும்பத்திற்கு நெடுவாசல் கருப்பன் ஆசாரி தான் வருவார். புதுக் கொழு வாங்கி வந்து இணைப்பார்கள். இரண்டு ஏர் கலப்பை இருக்கும். ஏதாவது உடைந்து விட்டால் அடுத்த ஏர் கலப்பையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?


பெரிய வண்டிமாடு ஜோடி ஒன்று, கட்டை மாடுகள் ஜோடி ஒன்று என இரண்டு ஜோடிகள் இருக்கும். மாட்டு வண்டியில் சக்கரத்தில் பழைய ஆயிலுடன் காட்டன் துணியை ஊற வைத்து சக்கரத்துக்குள் நுழைத்து, வண்டிச் சக்கரங்கள் எளிதாக சுழல ஏற்பாடு செய்வான் போஸ். 

இப்படித்தான் ஏற்பாடுகள் நடக்கும். உழவு செய்வதற்கு முன்பு வீட்டில் சேரும் குப்பையை வண்டியில் கொண்டு போய் வயலில் கொட்டி நிரவி விட வேண்டும். அதன் பிறகு உழவு செய்ய வேண்டும். இரண்டு முறை உழவு செய்வார்கள். பின்னர் சேற்று உழவு செய்வார்கள். 

நாற்றங்கால் உழவுக்கு கிட்டப்பிடித்து உழ வேண்டும். ஊற வைத்து முளை கட்டின நெல்மணிகளை நாற்றங்காலில் பாவ வேண்டும். அது முளைத்து பயிராகி நிற்கும் போது, அதைப் பிடுங்கி வயல்களில் நடவு செய்ய வேண்டும். பிறகு களை எடுக்க வேண்டும். உரமிட வேண்டும். பூச்சிகள் வராதவாறு மருந்து அடிக்க வேண்டும். வயலில் தண்ணீர் காயக்காய தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கதிர் விளைந்து நிற்கும் போது அறுவடை செய்து நெல்மணிகளை நீக்கி சுத்தம் செய்து கோணியில் இட்டு வீடு வந்து சேர்க்க வேண்டும். தக தகவென தங்கமென மின்னும் நெல்மணிகளை பத்தாயத்துக்குள் சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு சேகரித்த நெல்மணிகள் அடுத்த விவசாயம் செய்வதற்கு முன்பு வியாபாரிகளிடம் விலை பேசி விற்போம். கிட்டத்தட்ட முன்னூறு மூட்டைகள் விற்பனை செய்வோம். அது தவிர சாப்பாட்டுக்கு தனியாக இருக்கும். வீட்டில் இருந்த இரண்டு பத்தாயங்கள் (பாக்ஸ் வடிவ மரப்பட்டி - நூறு மூட்டைகள் நெல் மணிகள் சேகரிக்கலாம்).

சமீபத்தில் வீட்டுக்குச் சென்றிருந்தேன். கலப்பை இற்றுப் போய் கிடந்தது. கொழுவில் மாட்டி இருந்த போல்டுகள் துருப்பிடித்திருந்தன. பத்தாயங்கள் காணவில்லை. மரம் உழுத்துப் போய் விட்டதாம். நெல் அவிக்கும் வெங்கல அண்டா மட்டும் இருந்தது. அதைத் தூக்கவே நான்கு ஆட்கள் வேண்டும். அவ்வளவு கனமான அண்டா அது.

ஏர் கலப்பையோடு நடந்து நடந்து உடம்பு உரமாகி இருந்த உழவர்கள் எல்லாம் இப்போது சர்க்கரை வியாதியில் சிக்குண்டு இருக்கின்றார்கள். விடிகாலை நான்கு மணிக்கு உழ ஆரம்பித்து மதியம்  ஒரு மணிக்குள் உழவை முடித்து ஆற்றில் குளித்து வீடு வரும் உழவனை இனிக் கண்ணால் காண முடியுமா? காவிரி வறண்டு போனது. உழவு செய்ய தண்ணீரைத் தர மாட்டேன் என்கிறார்கள். மாறிப்போன மனிதர்களும் மாறவே மாறாத அரசியலும் இருக்கையில் என்ன ஆகப்போகின்றது?

அடுத்த தலைமுறைக்காக இந்தப் பதிவு எழுதுகிறேன் மன வலியுடன்.

Wednesday, August 31, 2016

நான் தாத்தாவாகப் போகின்றேன்

அண்ணன் முத்துகிருஷ்ணனின் மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஒரு பெண் வேமங்குடியில் வாழ்க்கைப்பட்டிருக்கிறது. ஆவணம் அருணாசலம் மாமா வீட்டுக்குப் பின்னால் தான் இரண்டாவது பெண் வாக்கப்பட்டிருக்கிறது. இருவரும் எனக்கு மகள்கள் அல்லவா? நான் சித்தப்பா அல்லவா?

அம்மு பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன்,”அம்மு உன்னை ஒருத்தர் சித்தின்னு அழைக்கப்போகிறார்! ரித்திக் நீ மாமாவாகப் போகின்றாய்!” என்றார்.

அம்மு. ‘என்ன? என்ன?’ என்று கேட்டு விழித்தது. ரித்திக் சிரித்தான்.

”ஆமா அம்மு, உன் அக்காவிற்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆகையால் நீ சித்தி தானே?” என்றார்.

ஒரே சிரிப்பு அம்முவுக்கு.

என்னைப் பார்த்தார். எனக்குத் திக்கென்றது. பக்கத்தில் கோதை உட்கார்ந்திருந்தார்.

’நீ தாத்தாவாகப் போகிறாய் தங்கம்’ என்றார் அண்ணன்.

கோதை என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது.

”நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது, எனக்கு அண்ணணும் இல்லை, தம்பியும் இல்லை” என்றேன் படக்கென்று.

சிரி சிரியென சிரித்து விட்டு எங்கள் குடும்ப வரலாற்றினைச் சொல்ல ஆரம்பித்தார். அது தனி பதிவில் (குடும்ப வரலாறு பகுதி 1)

இனி என்ன ஆகப்போகின்றது? நான் தாத்தாவாகப் போகின்றேன். வேறு வழியே இல்லை. நான் தாத்தா தான்.

குடும்ப வரலாறு பகுதி 1

தாத்தாவின் தாத்தா பெயர் என்ன? என்று கேட்டால் கிட்டத்தட்ட அனைவரும் விழி பிதுங்கி விடுவார்கள். அந்தக் காலத்து ராஜாக்கள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நாம், நமது குடும்ப முன்னாள்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்வதில்லை. வயதாகி விட்டாலே போதும், ஓரமாய் ஒதுக்கி விடுவோம். இறந்து போனால் நினைவில் வைத்துக் கொள்ளவா போகிறோம்?

அண்ணன் முத்துகிருஷ்ணன் களத்தூரிலிருந்து வந்திருந்தார். முள்ளங்கி சாம்பார், சுண்டல்காய் புளிக்குழம்பு, தக்காளி ரசம், வாழைக்காய் வறுவல், பாகற்காய் இனிப்பு பொறியல், ஆதண்டங்காய் வற்றல், எலுமிச்சை  ஊறுகாய், தயிர் என அவருக்கு உணவு அளித்தோம். திருப்தியாக உண்டு விட்டு அரை மயக்கத் தூக்கத்திலிருந்தார். மூன்று மணி வாக்கில் எழுந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். ஊர்க்கதை தான். அப்போது தான் எங்கள் குடும்பம் பற்றி பேச்சு வந்தது. ’அண்ணே, நீ எப்படி எனக்குச் சொந்தம்?’ என்று ஆரம்பித்தேன். 

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு எல்லை, தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை இவற்றில் இருப்பது ஆவணம் கிராமமும், நெடுவாசல் கிராமமும். நெடுவாசல் எனது ஊர். ஆவணம் அண்ணன் ஊர். இனி எங்க குடும்ப உறுப்பினர்கள் விவரம்.

ஆப்புநாததேவர், ஏயி என்கிற ஏகாத்தாள், அலமேலு, ஆவா நால்வரும் சகோதர சகோதரிகள். ஆவணத்தில் பிறந்தவர்கள். இவர்களின் அப்பா அம்மா பெயர் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.

ஆப்புநாததேவருக்கு இரண்டு பையன்கள் அவர்கள் பெயர் சம்மள மாணிக்கதேவர் மற்றும் சுப்பையா தேவர் என இரு பையன்கள்.

ஏயி என்கிற ஏகாத்தாளை கட்டிக் கொடுத்தது நெடுவாசல் கிராமத்தில் இவரின் கணவர் பெயர் அருணாசலதேவர். இவர்களுக்கு நாடி மாணிக்கதேவர், ராமசாமி தேவர், ராமாயி, சின்னப்பிள்ளை மற்றும் வள்ளி என ஐந்து குழந்தைகள். ராமசாமி தேவர் சிறு வயதில் காலரா வந்து இறந்து போய் விட்டார். ராமாயியை நெடுவாசல் தெற்குத் தெருவில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் ஏதோ சண்டை வந்து காஞ்சிராத்தி இலையை அரைச்சுக் குடிச்சிட்டு செத்துப் போச்சாம்.

அலமேலுவை ஆவணத்தில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷன் பேரு முத்துக்கருப்பண்ணதேவர். இவர்களுக்கு ஆவுடைத்தேவர் மற்றும் சிவந்தி மாணிக்கதேவர் என்று இரு பையன்கள். 

ஆவாவை வேமங்குடியில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷன் பேர் என்னன்னு தெரியவில்லை, விசாரிக்கணும். இவருக்கு ராமதேவர், விசாலாட்சி மற்றும் மன்னார்குடியில் செட்டிலான ஒரு டாக்டர் (இவரின் பெயரும் தெரியவில்லை) ஆக மூன்று குழந்தைகள்.

ஆப்புநாததேவர் பையன் சம்மள மாணிக்கத்தேவருக்கு நெடுவாசல் ஏகத்தாளுக்குப் பிறந்த சின்னப்பிள்ளையை திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு குழந்தைவேலு, குட்டியம்மாள், அருணாசலம் மற்றும் ருக்குமணி என நான்கு குழந்தைகள்.

ஆப்பு நாததேவர் அடுத்த பையன் சுப்பையாதேவருக்கு வேமங்குடியில் கட்டிக் கொடுத்த ஆவாவின் மகள் விசாலாட்சியை திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு ஒரே ஒரு பையன் அவர் பெயர் சிங்காரவேல்.

நெடுவாசலில் கட்டிக் கொடுத்த ஏயி என்கிற ஏகாத்தாளின் மகன் நாடி வீட்டு மாணிக்கதேவருக்கு ஆவணம் சம்மள மாணிக்கதேவருக்கும் சின்னப்பிள்ளைக்கும் பிறந்த குட்டியம்மாளை இரண்டாவது திருமணம் செய்து கொடுத்தார்கள். சொத்து ஆள வாரிசு இல்லையென்பதால் தனது தங்கை மகளான குட்டியம்மாளை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஞானேஸ்வரி, ஜானகி, தங்கவேல், டிம்பிள்கபாடியா என நான்கு வாரிசுகள். நாடி மாணிக்கதேவரின் முதல் சம்சாரத்துக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த பெண்ணை ஆவணம் சம்மள மாணிக்கதேவரின் மூத்த பையன் குழந்தைவேலுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். குழந்தைகள் ஏதுமின்றி இறந்து போனார். இரண்டாவது மகள் காளியம்மாளை நெடுவாசலில் இருந்தவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு பழனிவேலு, அலமேலு இரண்டு வாரிசுகள்.

அடுத்து ஏகாத்தாளின் மகள் வள்ளியம்மையை வீரியன்கோட்டையில் கட்டிக் கொடுத்தார்கள். இவரின் வீட்டுக்காரர் பெயர் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும். இவர்களுக்கு வீராயி, செவையாள், வீரப்பன், குட்டியப்பன், பாப்பாத்தி, அபூர்வம் மற்றும் நாகம்மாள் என்று ஏழு வாரிசுகள்.

ஆவணத்தில் கட்டிக் கொடுத்த அலமேலு மகன் ஆவுடைத்தேவருக்கு முத்துலட்சுமி (நெடுவாசல்), ராஜேஸ்வரி (பைங்கால்), முத்துகிருஷ்ணன் (ஆவணம்), செல்வராணி (பூக்கொல்லை), மஞ்சுளா (துறையூர்), இந்துமதி (ஆண்டாகோட்டை) ஆகிய ஆறு வாரிசுகள்.

ஆவணத்தில் கட்டிக் கொடுத்த அலமேலுவின் இரண்டாவது மகன் சிவந்தி மாணிக்கதேவருக்கு செண்பகவல்லி(சென்னை), ராஜ்குமார் (மலேசியா மிலிட்டரியில் வேலை திருமணமில்லை), காந்திமதி (சென்னை), குணசுந்தரி (மலேசியா), ஜெயபாரதி (மலேசியா), சரவணன் (மலேசியா) என ஆறு வாரிசுகள் இருக்கின்றனர். இதில் சமீபத்தில் தான் செண்பகவல்லி சென்னையில் காலமானார்.

ஆவணம் ஆப்பு நாததேவரின் மகன்களில் சுப்பையாதேவரின் மகன் சிங்காரவேலுவிற்கு வேமங்குடியிலிருந்து பெண் எடுத்தார்கள். மனைவி பெயர் பானு. இறந்து விட்டார். இவர்களுக்கு ஜெயம் என்கிற ஃபேமஸ் ஸ்டார்னி, சின்னப்பொன்னு என்கிற செஸ்மின் வாணி, ஃப்ரான்சிஸ்காசன் மற்றும் சிஸ்பான் விசாலம் என்கிற நான்கு வாரிசுகள். தலையைச் சுற்றுகிறதா? மாமா குசும்பு பிடித்தவர். பிள்ளைகளின் பெயர்களைப் பார்த்தீர்களா? 

இது முதல் வாரிசு குடும்ப விவரம் அடுத்த தலைமுறை வாரிசுகளை எல்லாம் விசாரித்து அடுத்த பதிவில் எழுதுவேன். எங்கள் குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவும்.