குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 6, 2016

மனிதனின் இரண்டு முகங்களும் ஒரு ஜென் கதையும்

ஒரு மதுச்சாலையில் ஒருவன்
தனக்குள்ள உறுதியான வைராக்கியம் பற்றி
பெருமையடித்துக் கொண்டான் :

“மதுவை இனித் தொடவே மாட்டேன்” என்றான்.

ஆனால் அன்று மாலையே
அங்கே வந்து விட்டான்.

எல்லோரும் கேட்க, இப்படி உரக்கச் சொன்னான்:

“நான் என் மன வைராக்கியத்தை விடப் பலமானவன்!
நான் முழுதும் போராடி என் வைராக்கியத்தைத்
தோல்வியடைச் செய்து விட்டேன்.
இரண்டு மடங்கு மதுவைக் கொடு!”

(நன்றி : ஓஷோவின் ஒரு கோப்பைத் தேநீர் )

இதை ஓஷோ ஒரு மனிதனின் சுய வஞ்சனை என்கிறார். எந்த ஒரு செயலையும் அவன் நியாயப்படுத்திக் கொள்கிறான் என்கிறார் ஓஷோ.

* * *

அடுத்து ஒரு ஜென் கதை.  இந்தக் கதை உங்களுக்குப் புரிந்து விட்டால் !



கடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன மீனுக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்.

’கடல், கடல் என்று பேசிக் கொள்கிறார்களே, அப்படியென்றால் என்ன?’ என்பது தான் அந்தச் சந்தேகம். அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு பெரிய மீனிடம் சென்று,

“கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது?” என்று கேட்டது.

“அதுதான் உன்னைச் சூழ்ந்திருக்கிறது. அதற்குள் தான் நீ இருக்கிறாய்!” என்றது பெரிய மீன்.

“ஆனால் அது எனக்குத் தெரியவில்லையே!” என்றது சின்ன மீன்.

“நீ அதற்குள் இருப்பதால் தான் உனக்குத் தெரியவில்லை. நீ பிறந்ததும் கடலில். வாழ்ந்து கொண்டிருப்பதும் கடலில். உன்னைச் சுற்றி இருப்பதும் கடல். உனக்குள் இருப்பதும் கடல். உனது தோலைப் போல் அது உன்னை விட்டு நீங்காமல் சூழ்ந்திருக்கிறது. நீ பிறந்து வாழ்ந்து மறையப் போவதும் இந்தக் கடலில் தான். அதற்குள் இருப்பதால் அது தெரியவில்லை” என்றது பெரிய மீன்.

* * *

இந்த ஜென் கதை புரிந்து விட்டால் வாழ்வில் படும் துயரங்களில் இருந்து மனிதன் விடுதலை பெற்று விடுவான். புரியவில்லை என்றால் அடுத்து ஒரு அருமையான கதையொன்றினை வெளியிடப் போகிறேன். அந்தக் கதை சொல்லும் உங்களுக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.

ஜென் கதைக்கு முன்பு இருக்கும் கவிதை உங்களின் மனதை நிச்சயம் கீறி விட்டிருக்கும். சுய நிந்தனையில் மனிதனை விட மிகவும் உயர்ந்தது எதுவுமே இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. அந்த சுய வஞ்சகத்தன்மையினால் அவன் இழப்பது தன் வாழ்க்கையை என்று அவர் என்றைக்குமே உணருவது இல்லை.

கவிதை மனிதனின் ஒரு முகத்தையும், ஜென் கதை மனிதனின் அறியாமை எனும் முகத்தையும் காட்டுகிறது. இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

* * *


குருநாதரின் பேரருள் - உண்மைச் சம்பவம்

எனது குரு நாதர் ஜோதி ஸ்வாமி குழந்தைகள் இருவரையும் வெள்ளிங்கிரி ஆண்டவர் அருள் பாலிக்கும் ஏழாம் மலைக்கு அழைத்துச் சென்று வரக் கோரியிருந்தேன். சுவாமியும் அதற்கொரு தகுந்த நாளினைச் சொல்வதாகச் சொல்லி இருந்தார். கடந்த செவ்வாய்கிழமையன்று ரித்திக் நந்தாவும், நிவேதிதாவும் வெள்ளிங்கிரி ஆண்டவரின் அருள் பெறுவதற்காக மலையேறுவதற்கு ஆசிரமம் அழைத்துச் சென்றேன். 


எனக்கு எப்போதுமே தண்ணீரும், பசுஞ்சோலைகள் நிறைந்த இடமும் நிரம்பவும் பிடிக்கும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கேரளா சென்று வருவதுண்டு. சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் ஆசிரமத்தின் பின்புறம் வளைந்தோடும் நொய்யல் ஆற்றில் சுவாமியுடன் உதவியோடு அவ்வப்போது குளிப்பது உண்டு. செவ்வாய் அன்றைக்கு நானும், குழந்தைகள் இருவரும், சாமியுடன் ஆற்றில் உடம்பு சூடு குறைய குளியலை முடித்து விட்டு ஆசிரமம் சென்றோம்.

சுவாமியைத் தரிசித்து விட்டு, உணவு அருந்த அமர்ந்திருந்த போது ஒரு வாளிப்பான வாலிபர் ஒருவர் முகமெல்லாம் சிரிப்போடு அனைவருக்கும் கேட்டுக் கேட்டு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். ஓடியாடி ஆசிரம பணிகளைச் செய்து கொண்டும், சுவாமியைத் தரிசிக்க வந்தவர்களுக்கு உணவு பரிமாறியும் துருதுருவென திரிந்து கொண்டிருந்தார்.

ஆசிரமத்திலிருந்து பசுமடத்திற்கு வரும் வழியில் சாமியிடம் அவர் பற்றி விசாரித்தேன். 

“ஆண்டவனே, அவருக்கு நுரையீரலில் பிரச்சினை, கிட்னி பெயிலியர் என்று இன்னும் ஒரு சில மாதங்களே உனக்கு இருக்கிறது என்றுச் சொல்லி மருத்துவர் அனுப்பி விட்டார். அவருக்கு எந்த வித கெட்டபழக்கமும் கிடையாது. திருமணத்திற்கும், அதற்குபிறகு பிறக்கும் குழந்தைக்கும் kuuta பொருள் சேர்த்து வைத்திருக்கிறார். இடையில் உடல் நிலை சரியில்லாத போது மருத்துவரிடம் காட்டி இருக்கிறார்.  ஏகப்பட்ட ஸ்கேன் அது இதுவென்று எடுத்துப் பார்த்து நுரையீரல் பாதிப்பு, கிட்னியில் ஒன்று போச்சு என்றுச் சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நிலையில் யார் மூலமாகவோ ஆசிரமத்திற்கு வந்தார்.

யாருக்கு எத்தனை நாள் என்பதை அந்த ஆண்டவர் தான் முடிவு செய்யனும், குரு நாதரிடம் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்லுங்கள். ஒன்றும் ஆகாது. பதினைந்து நாட்கள் சென்று எல்லா டெஸ்டும் செய்து விட்டு ஆசிரமத்திற்கு மீண்டும் வாருங்கள் என்று சொன்னேன். வருத்தத்தோடு சென்றார். எல்லா டெஸ்டுகளையும் மீண்டும் எடுத்துப் பார்த்தால் அனைத்து சரியாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். உடனே இங்கு வந்து விட்டார். அதுதான் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்” என்றார்.

”சரிங்க சாமி, ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது உடம்பு தேய்ப்பதற்கு மண்ணை எடுத்தேன். நீங்கள் வேண்டாமென்று தடுத்தீர்கள். அடுத்த நொடியில் எனது கையில் புத்தம் புதிய பீர்க்கின் குடல் கிடைத்தது. அதை வைத்து தேய்த்துக் குளித்தேன். மீண்டும் அதைக் காணவில்லை. அப்போது அது எப்படி வந்தது என்றும் எப்படிப் போனது என்றும் எனக்குத் தோன்றவில்லை. இப்போது கேட்கிறேன், அது எங்கிருந்து வந்தது?  எங்கே போனது எனச் சொல்லுங்கள்”

“அதுவா ஆண்டவனே, சொல்கிறேன்” என்றார்.


Tuesday, May 3, 2016

நிலம் (18) - அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கிடைக்குமா?

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 20.02.2015ம் வருடம் வெளியான ஒரு தீர்ப்பு பல்வேறு மக்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கியது. இந்தியாவில் வீடில்லா ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் முழுமையான தீர்வு என்பது எப்போது கிடைக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது. அரசு அறிவிக்கும் வீட்டு திட்டங்களைச் செயல்படுத்தும் தகுதியில் உள்ளவர்களின் சுய நலப் போக்கால் பலருக்கும் வீடு கட்டுவது பெரும் கனவாகவே இருந்து வருகிறது.

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போருக்கு வீடு கட்டும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு குறைந்த வட்டியில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்ட கடனும் அளிக்கிறது. இத்தனை வசதி வாய்ப்பும் இருந்தும் அதைச் செயல்படுத்திட பெரும் பிரயத்தனங்களை மக்கள் செய்ய வேண்டி உள்ளது. அவ்வளவு எளிதில் இவ்வகைத் திட்டத்தினை செயல்படுத்திட முடிவதில்லை. பல்வேறு ஆவணங்கள், அலைச்சல்கள் என்று அன்றாடம் கூலி வேலைக்குச் செல்வோருக்கு சாத்தியமில்லாத திட்டங்களாகத்தான் இவ்வகைத் திட்டங்கள் இருந்து வருகின்றன. 

இந்த நிலையில் ஏதோ ஒரு அரசு புறம்போக்கில் வீடு கட்டி 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்தால்,  அதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்கள் இருந்தால் தமிழக அரசின் சட்டத்தில் இடமுண்டு என்று வழக்கு எண். எம்.பி(எம்.டி) 1 / 2015 மற்றும் மேல்முறையீட்டு வழக்கு எண்.டபிள்யூ.பி(எம்.டி)1649/2015 மனுதாரர் வள்ளியம்மாள் தொடர்ந்த வழக்கில் மதுரைக் கிளை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.பி.ராஜேந்திரன் அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல அரசு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்போருக்கு ஒரு முறை வரன்முறை செய்யப்பட்டு, வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் பல்வேறு மாறுதல் செய்யப்பட்டன. அது தொடர்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது. இருப்பினும் அந்த உத்தரவு 2015ம் வருடம் வரை நீட்டிப்பும் செய்யப்பட்டது. அது பற்றிய அரசாணையை நீங்கள் கீழே படிக்கலாம். ஆகவே அடுத்து ஆட்சிக் கட்டிலில் ஏறும் அரசு ஏதாவது பட்டா வழங்க கால நீட்டிப்புச் செய்தால் புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருவோர் அந்த அரசாணையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு பட்டா பெற்றுக் கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு என்னை அணுகவும். உதவ முயற்சிக்கிறேன். 








Sunday, May 1, 2016

நிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்

சமீபத்தில் கொடைக்கானலுக்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். நண்பருக்கு வேண்டிய குடும்பத்தாரின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தினசரி வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

நண்பர் அவர்களிடமிருந்து சில ஆவணங்களை என்னிடம் கொடுத்து பார்வையிடச் சொன்னார். அனைத்தும் ஒரிஜினல் சொத்துப் பத்திரங்கள். அனைத்தையும் படித்துப் பார்த்தேன். அந்தக் குடும்பத்தின் தாத்தாவால் சுய சம்பாத்தியத்தால் கிரையம் பெற்று, வாங்கப்பட்ட பூமிகள் ஏக்கர் கணக்கில் இருந்தன. பட்டாவும் அவரின் தாத்தா பெயரில் இருந்தன. அந்தப் பூமிகளின் தற்போதைய நிலைமை என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக எனது லேப்டாப்பை உயிர்ப்பித்தேன். அந்தச் சொத்துக்கள் அனைத்தும் கோடிகள் மதிப்புக் கொண்டவை.

நிறைய பொருட்செலவுகள் செய்து பல மாவட்டங்களின் நில தொடர்புடைய ஆவணங்களை கணிணியில் வைத்திருப்பதால், இருக்குமிடத்திலிருந்தே எளிதில் அந்த பூமிகளின் தற்போதைய நிலையை அறிய நேர்ந்தது.

தற்போதைய சொத்துப் பத்திரம் வேறொரு பெயரில் இருந்தது. பட்டாவோ மற்றொருவர் பெயரில் இருக்கிறது. ஏன் இந்தப் பிரச்சினை என்று கண்டுபிடிப்பதற்காக அந்த ஆவணங்களின் நகல்களைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பி விட்டேன்.

1986ம் வருடம் நில அளவையின் போது புதிய சர்வே எண்கள், பட்டா எண்கள் வழங்கிய போது பல்வேறு முறைகேடுகளும், தவறுகளும் ஏற்பட்டன. உரிமையாளர் பெயர்களும் மாற்றப்பட்டன. அந்த நேரத்தில் நடந்த பல்வேறு குளறுபடிகளால் நில உரிமையாளர்களின் பல சொத்துக்களின் பட்டாக்கள் மாற்றப்பட்டன. போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டு பல சொத்துக்களை பலர் பறித்துக் கொண்டனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு மாத காலம் ஆயிற்று. 1986ம் ஆண்டு கால கட்டத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதை அறிந்தேன். மூலப் பத்திரங்கள் இல்லாமல் பல ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தேன். அனைத்து ஆவணங்களையும் தகுந்த முறையில் சேர்த்து அவர்கள் தான் உரிமையாளர்கள் என்பதை ஒரு ரிப்போர்ட்டாக தயார் செய்து அவர்களிடம் கொடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை விவரித்தேன். 

அந்தக் குடும்பமே கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்களே தகுந்த இடத்தில் முறையிட்டு சொத்தினைப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். அவர்கள் இனி கோடீஸ்வரர்கள். 

எனக்குரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு மன நிறைவுடன் வீடு திரும்பினேன். அன்று மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.

உங்கள் பாட்டனார் சொத்து ஆனால் எவரோ உரிமை கொண்டாடி வருகின்றார்களா? கவலையே பட வேண்டாம். அனைத்து ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வாருங்கள். சரியான தீர்வினைத் தருகிறேன்.

கோர்ட்டில் தீர்ப்பு பெற்று உங்கள் சொத்தினைப் பறித்துக் கொண்டார்களா? கவலை வேண்டாம். அந்தச் சொத்தினை மீண்டும் பெற்று விடலாம். அனைத்துக்கும் சட்டப்படியான தீர்வுகள் உண்டு.

அது மட்டுமல்ல உங்கள் சொத்தில் எந்த வித பிரச்சினை இருந்தாலும் சரி, ஆவணத்தின் நகல்களை எனக்கு அனுப்பி வையுங்கள். சரியான தீர்வினைக் கண்டுபிடித்து சரி செய்து விடலாம்.

உங்கள் சொத்தினை யாரோ ஒருவர் ஆக்கிரமித்து இருக்கின்றாரா? கவலை வேண்டாம். அவரை சட்டப்படி வெளியேற்றி விடலாம். உங்கள் சொத்தினை மீட்டு விடலாம். அதற்குரிய ஆவணங்களின் பிரதிகளுடன் என்னைச் சந்தியுங்கள்.

பிரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Friday, April 29, 2016

திருச்சி ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோவில் அருகில் வீட்டு மனைகள் விற்பனைக்கு

தமிழகத்தின் மத்திய பாகத்தில் அமைந்துள்ள திருச்சி மாநகரிலே அமைந்துள்ள ஸ்ரீரங்கம் வழியாகப் பாய்ந்தோடும் காவிரித்தாயின் மடியிலே எருந்தருளி இருக்கும் சுவாமி ஸ்ரீரங்கநாதப்பெருமானின் கோவில் சன்னதியிலிருந்து 7 நிமிடம் பொடி நடையில் அடைந்து விடும் தூரத்தில் (சுமார் 600 மீட்டர்), கொள்ளிடத்துக் கரை அருகில் செல்லும் சாலையின் வலது புறமாய், யாத்ரி நிவாஸ் தங்குமிடத்தின் அருகிலே சாலை வசதியுடன் அமைந்திருக்கிறது எமது வீட்டு மனைகள். கோவிலின் கிழபுறம் சன்னதியிலிருந்து சடுதியில் நடந்து சென்று சேரும் தூரத்தில் அமைந்திருக்கிறது. 

இந்த இடத்தினை கூகுள் மேப்பில் காண விரும்பினால் இந்தப் புகைப்படத்தினை கிளிக் செய்து பார்த்தீர்கள் என்றால், படத்தின் பச்சை வண்ணம் இட்டிருக்கும் பகுதிதான் எமது மனைகள் இருக்கும் பகுதி. சாலைகள் அனைத்தும் அரசுச் சாலைகள்.


கூகுள் மேப்பிற்குச் சென்று  10.865110, 78.696000 இந்த அளவீடுகளை உள்ளீடு செய்து பார்த்தீர்கள் என்றால் இடத்தின் படம் மிகத் தெளிவாய் தெரியும்.

30 அடிச் சாலை வசதியுடன் தனித் தனி மனைகளாக விற்பனைக்கு வைத்திருக்கிறேன். மிகவும் குறைந்த விலை. உடனடிக் கிரையம், வீடுகள் வேண்டுவோருக்கு தரமான வீடுகள் கட்டித்தரப்படும்.

தமிழகத்தின் பூலோக சுவர்க்கமான ஸ்ரீரங்கத்திலே, அதுவும் ஸ் ரங்கன் கோவில் அருகிலும், காவிரியாற்றின் கரையோரமாகவும் வீடுகள் கட்டி அமைதியாக வாழ விரும்புவோருக்கு அற்புதமான இடம் அது.

மிகவும் குறைந்த அளவு மனைகளே இருக்கின்றன. விரைந்து தங்களுக்கான இடத்தினை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

வீட்டு மனைகளின் அளவுகளையும், விலையையும் தெரிந்து கொள்ள அல்லது வீட்டு மனையினைப் பார்வையிட விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

அழைக்க : 96005 77755 
மேலும் மேலதிக விபரங்களுக்கு : covaimthangavel@gmail.com

- அன்புத் தோழன் - கோவை எம் தங்கவேல்

Tuesday, April 19, 2016

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம்

லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே!

18-03-2016ம் தேதியன்று ஜீ டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற உங்களின் நிகழ்ச்சியைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. ஆச்சரியம் அடைந்தேன். டிவியில் ஆங்கராக இருப்பதால் எல்லாமும் தெரியும் என்பது போல நீங்கள் பேசுவது சரியில்லை என்று நினைத்தேன். அதற்காகத் தான் இந்தக் கடிதம்.

அலோபதி மருத்துவத்தில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஒரு சாமியாரைக் கூட்டி வந்து அவர் தவறான சிகிக்சை அளிப்பதாய் அவரிடம் சொல்லி குற்றம் என்றெல்லாம் பயமுறுத்துகின்றீர்கள். இந்த அதிகாரத்தை அரசு உங்களுக்கு கொடுத்திருக்கிறதா?  இது கட்டப்பஞ்சாயத்து செய்யும் முறையாகும். அரசிடம் இதற்கு அனுமதி பெற்றிருக்கின்றீர்களா என்பது தெரியவில்லை. 

சரி அலோபதி மருத்துவம் மட்டுமே மிகவும் சிறந்தது போன்ற உங்களின் பேச்சு எனக்கு உங்களின்  மீது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகின்றது.

அலோபதி மருத்துவத்தில் இருக்கும் யாராவது ஒரு மருத்துவரை அழைத்து வந்து நீங்கள் தவறான சிகிக்சை அளித்துள்ளீர்கள், அது குற்றம் என்று உங்களால் குற்றம் சாட்ட முடியுமா? அதற்கு உங்களுக்கும் உங்கள் டிவிக்கும் தைரியம் இருக்கிறதா?

அலோபதி மருத்துவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மருந்துகளின் தாக்கத்திலும், பின் விளைவுகளில் உயிரழப்போர் கோடிக்கணக்கானவர்கள் என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன. அலோபதி மருந்துகள் பின் விளைவுகள் ஏற்படுத்துகிறது என்றுச் சொல்லி அரசுகள் அம்மருந்துகளைத் தயாரிக்கத் தடை விதிக்கின்றன. தடை விதிப்பதற்கு முன்பு அம்மருந்தைச் சாப்பிட்டவர்களின் கதி என்ன என்று யாருக்குத் தெரியும்? இதைப் பற்றி ஏன் நீங்கள் பேசுவது இல்லை.

அலோபதி என்கிற நவீன மருத்துவத்தில் அனைவரும் பிழைத்து விடுகின்றார்களா?  என்று உங்களால் 100 சதவீதம் உறுதியாகச் சொல்ல முடியுமா? முழு உடலுக்கும் வைத்தியம் பார்க்காமல் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு உடலைக்கூறு போட்டு வைத்தியம் பார்க்கும் அலோபதி மருத்துவத்தின் கொடுமைகளை விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

எந்த விதப் புற்று நோய்க்கும் மிகச் சரியான முறையில் உணவும், மருந்தும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். உணவே மருந்து என்ற முறையில் வாழ்வியல் நெறி கொண்டது தமிழர் பண்பாடு. 

எந்த ஒரு மருத்துவரும் அது அலோபதி மருத்துவராக இருந்தாலும் சரி, நோயாளியிடம் அவரின் உணவு பழக்கம், இன்ன பிற பழக்கங்கள் பற்றி விசாரிப்பர். அடுத்து அவரொரு முடிவிற்கு வந்து மருந்துகளை கொடுப்பர். இதுதான் அனைத்து மருத்துவரும் செய்யும் சிகிக்சை முறை. 

நீங்கள் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவரும் அதைத்தான் செய்தார். உடனே நீங்கள் ஏன் அவர்களின் உணவுப் பழக்கங்களை விசாரிக்கின்றீர்கள் என்று கேட்கின்றீர்கள். நாடி பிடித்துப் பார்த்துச் சொல்ல வேண்டியதுதானே என்று கேள்வி வேறு கேட்டீர்கள். இதெல்லாம் என்ன? நாடியில் பிழை இருப்பது தெரியும். ஆனால் அது என்ன பிழை என்பதை அவர்களின் உணவுப் பழக்கத்தை வைத்துத்தான் ஓரளவு நிதானிக்க முடியும். அப்படிச் செய்வது தவறு என்கின்றீர்கள். அது குற்றம் என்கின்றீர்கள். இதையே அலோபதி மருத்துவரிடம் பேசிப்பாருங்கள். உங்களின் நிலமை என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 

ஏழைகளை அழைத்து வந்து மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து டிவியில் ஒளிபரப்பிக் காசு பார்க்கும் திறமையே திறமைதான். வேறு யாருக்கு வரும் இப்படி ஒரு திறமை.

உங்களுக்கு ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக்குச் சளி பிடித்து விடும். கண்கள் சிவந்து, மூக்கு சிவந்து பெரும் கொடுமையாக இருக்கும். தலைவலி வேறு வந்து விடும். உடனே அலோபதி மருத்துவரை நாடுவேன். மருந்து கொடுப்பார். நான்கு நாட்களுக்கு மருந்தைச் சாப்பிடுவேன். உடம்பு அசதியாக இருக்கும். சளி கொஞ்சம் கொஞ்சமாக அமுங்கி விடும். அடுத்த நாளில் மூக்கிற்குள் நாற்றமெடுக்கும். சளி கட்டி விடும். அதைக் கரைக்க அடுத்த மருந்து. இப்படி மருத்துவருக்கும் மருந்துக்கும் என 1000 ரூபாய் செலவாகி விடும். அதுமட்டுமல்ல உடம்பு சொல்லொண்ணா துயரத்தைத் தரும். இந்த மருத்துவ முறையினைத்தான் நான் கிட்டத்தட்ட் 30 ஆண்டுகள் பயன்படுத்தினேன். எனது குழந்தைகள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ஆனால் இப்போது அப்படி அல்ல மேடம். எனது மனையாள் தொடு வர்ம சிகிக்சையளிக்க முறையான வர்ம மருத்துவரிடம் பயிற்சி பெற்றார். சளி வந்தால் அவரது விரலால் சிறிய அழுத்தம் தருகிறார். இரவில் உணவினைத் தவிர்க்கச் சொல்கிறார். நீராகாராம் தருகிறார். அடுத்த நாளே சளி இருக்குமிடம் தெரிவதில்லை. 

அலோபதி மருத்துவத்தில் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது மேடம்.

சர்க்கரை சர்க்கரை என்று இந்த உலகம் அலறுகின்றதே அது ஏன் தெரியுமா மேடம். WHO நிறுவனத்தின் சர்க்கரை கட்டுப்பாட்டு அளவீடு மாறியதால் ஒரே நாளில் உலகமெங்கும் சர்க்கரை நோயாளிகள் அதிகமாகிவிட்டார்கள். இரத்தக் கொதிப்பு அளவீடும் இதே கதிதான்.

தொடு வர்மத்தில் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவரிடம் சென்றால் சர்க்கரை நோய் இருக்குமிடம் தெரியாது. சர்க்கரை நோய்க்கு மருந்தே தேவையில்லை மேடம்.

மருத்துவ உலகத்தில் இன்னும் பல்வேறு மிக முக்கியமான நிலைகள் இருக்கின்றன. நாடி பிடித்துப் பார்ப்பதிலும் காலம் உண்டு. ஒரு சில கத்துக் குட்டி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளை, என்னவோ அனைவரும் செய்வது போன்ற காட்சியினை நீங்கள் மக்கள் வெளியில் உருவாக்க முனைகின்றீர்கள்.

முற்றிலும் தெரியாத விந்தை உலகமான மருத்துவத்தை நீங்கள் ஒரு சார்பாகக் கிண்டலடிப்பதும், கீழ்தரமானது என்று பிறர் நினைக்கும் படி செய்வதும் சரியல்ல மேடம்.

ஒவ்வொருவரும் இந்தச் சமூகத்தில் பெற்று வாழ்ந்ததை, சமூகத்திற்கே திரும்பவும் கொடுத்து விட்டுச் செல்வதுதான் மிக உயர்ந்த வாழ்க்கை.

காசு பணம் புகழ் என்பதெல்லாம் எதுவும் தந்து விடப்போவதில்லை மேடம்.

சேலம் பைபாஸ் சாலையில் நானும் ஒரு சில நண்பர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் ஏற்காடு சென்றிருந்தோம். நூற்றி இருபது கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற காரின் முன்புற இடது பக்க டயர் திடீரென வெடித்தது.

”டயர் வெடித்து விட்டது பிரேக் போடுங்க” என்றுச் சொன்னேன். நண்பர் காரை நிறுத்தி இடது பக்கமாக ஓரம் கட்டினார். யாருக்கும் எந்த காயமும் இல்லை. கார் கவிழவும் இல்லை. இது சாத்தியமா என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

நண்பருக்கு ஆச்சரியம்.

”என்னால் நம்பவே முடியவில்லை, கார் உருண்டு விடும் என்று நினைத்தேன்” என்றார். 

”நீங்கள் பதட்டமே கொள்ளாமல் இருக்கின்றீர்களே?”என்று கேட்டார். 

”யாருக்கும் எவருக்கும் எந்தக் கெடுதலையும் நீங்களும் நானும் செய்வதில்லை. ஆகவே எதுவுமே நடக்காது, ஸ்டெப்னியை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடரலாம்” என்றேன்.

என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

உங்களின்  சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மனித குலத்துக்கு நன்மை செய்கிறது என்றால் மகிழ்ச்சியே.

மருத்துவத்தில் அலோபதி ஒரு சில நோய்களுக்கு மிகச் சரியான தீர்வைத் தரும். சித்த, ஆயுர்வேதம், வர்மம் போன்றவை பல நோய்களுக்கு நல்ல தீர்வைத் தரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

பல அலோபதி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சரியான மருந்தினைக் கொடுப்பதில்லை என்பது உங்களுக்கும் தெரியும். பல நோய்கள் அலோபதியில் சரி செய்யப்படுவதும் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.

எழுத வேண்டுமா என நினைத்தேன். வேறு வழி இல்லை என்பதால் எழுதி விட்டேன். மனது வருத்தமேற்பட்டால் மன்னித்து விடவும். உங்களைச் சங்கடப்படுத்த வேண்டுமென்பதில் எனக்கு ஆர்வமில்லை. உண்மையறியாமல் பேசுகின்றீர்களே என்ற நினைப்புத்தான் எனக்கு.

மிக்க நன்றி !

- கோவை எம். தங்கவேல்



Friday, March 18, 2016

ஆப்ஸ் மூலம் வரும் ஆபத்துக்கள்

ஒரு மாதமிருக்குமென்று நினைவு. ஒரு பிரபலமான ஆப்ஸ் ஒன்றினை எனது ஐபோனில் இன்ஸ்டால் செய்தேன். ஒரு மணி நேரமிருக்கும். புதியதாக ஒரு குறுஞ்செய்தியை போன் கொண்டு வந்தது. புதிய ஆப்ஸ் வழியாக ஒரு சினேக வேண்டுகோள்.  ஏற்றுக் கொண்டு அந்த முகம் தெரியாதவரிடம் சாட்டிங் செய்ய ஆரம்பித்தேன். சிறிது நேரம் சென்ற பிறகு அது ஒரு பெண் என்று தெரிந்தது. 

சாட்டிங்கில் இருந்தவர் திடீரென்று வீடியோ அழைப்பு கொடுத்தார். ஏற்றுக் கொண்டு பார்த்தால் அது அவரின் படுக்கை அறை. முதலில் கையை மட்டும் காட்டினார். பின்னர் கால் என்று தொடர்ந்த காட்சியில் அவர் முழு நிர்வாணமாக படுத்திருப்பதைக் கண்டேன். சிரிப்புத்தான் வந்தது. அவரிடம் கேட்டேன்.

“என்ன ஆயிற்று உங்களுக்கு? முன்பின் தெரியாதவரிடம் இவ்வாறு தன் உடம்பைக் காட்டலாமா? “

“காட்டக்கூடாதுதான், ஆனால் என் தேவையை என் கணவனால்  நிறைவேற்ற முடியவில்லையே? நான் என்ன செய்ய? “ என்று அவரொரு கேள்வி கேட்டார்.

அவரொரு மேலை நாட்டுப்பெண். கல்யாணம் ஆகி விட்டது. குழந்தைகள் இருக்கிறார்கள்.  

அவரின் இந்தக் கேள்வி மிகச் சிக்கலானது. 

வாழ்வியல் சூழலில் ஆண்கள் சுயச்சார்பு உடையவர்கள். ஆனால் உளவியல் முறையிலும், உடல் முறையிலும் பெண்கள் சார்பு நிலை கொண்டவர்கள். காலச் சூழலின் காரணமாக பெண்களின் உள்ளக்கிடக்கையை ஆண்கள் உணர்ந்து கொள்ள தவறி விடுகின்றார்கள். பிரச்சினை வேறு மாதிரியாக வடிவமெடுத்து விஸ்ரூவமாகிக் கொண்டிருக்கிறது.

அப்பெண்ணின் பிரச்சினையை தீர்க்கவே முடியாது. எந்த வழியாக தீர்க்க முயன்றாலும், அதன் தொடர்ச்சியாக எண்ணற்ற உபப் பிரச்சினைகள் உருவாகி அப்பெண்ணின் வாழ்க்கையே வீணாகப் போய் விடும் ஆபத்துகள் அதிகம். இது போன்ற கணவர்களால் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இந்த செக்ஸ் என்ற உளவியல் பிரச்சினை காரணமாக சின்னாபின்னமாகி விட்டது. நண்பர் ஃப்ரான்சில் வசிக்கிறார். தன் பிள்ளைகள் படிப்புக்காக குழந்தைகளையும், மனைவியையும் இந்தியா அனுப்பி வைத்திருக்கிறார். வந்த இடத்தில் நண்பரின் மனைவிக்கும் யாரோ ஒருவருக்கும் தொடர்பு ஆகி அது பெரிய பிரச்சினை ஆகி விட்டது. எந்த வயதில் வழிகாட்டியாக பெற்றோர் இருக்க வேண்டுமோ அந்த வயதில் அந்தக் குழந்தைகளுக்கு இருவரும் அருகில் இல்லை. நண்பரும் சோக கீதம் வாசித்துக் கொண்டிருக்கிறார். வாழ்க்கைக்கும் பணம் வேண்டுமென்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வேண்டியதில்லை. ஆனால் யாரோ ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு உழைக்கும் நேரத்தில் மனைவிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருந்தால் இந்தச் சூழல் வந்திருக்குமா?

உடனடியாக அந்த ஆப்ஸை அன் இன்ஸ்டால் செய்தேன். பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்து விடும் இது போன்ற ஆபத்தான ஆப்ஸ்களை வெகு கவனமுடன் கையாள வேண்டும். இல்லையென்றால் பெரும் பிரச்சினைகளைக் கொண்டு வந்து விட்டு விடும்.

மிக நல்ல குடும்பங்கள் இது போன்ற பிரச்சினைகளில் சிக்கி சிதறிக் கொண்டிருக்கின்றன. ஒரு நிமிட சபலம் தீர்க்கவே முடியாத சிக்கல்களில் கொண்டு போய் தள்ளி விடும்.

போன் என்பது இப்போது மிகப் பெரிய ஆபத்தான ஒரு கருவியாக மாறிக் கொண்டிருக்கிறது. போனைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது. இல்லையென்றால் ஆபத்துதான்.


Sunday, February 28, 2016

எம்.ஜி.ஆரின் அபூர்வ பாலிசி

எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவரின் ஒரு பிரதான பாலிசியைப் பற்றி நானும் எனது நண்பரும் பேசிக் கொண்டிருந்த போது, எனது நண்பர் (கேள்வியின் நாயகன்) சிலாகித்து சொன்ன விஷயம் கீழே.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் நினைவிலாடலாம். அவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் பிறர் அறிவுரை சொல்வது போல காட்சிகள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவரின் மனசாட்சி தான் அவருடன் பேசும். பின்னர் அந்த மனசாட்சி அவரின் உடலோடு இணைந்து விடும்.

தன்னை உணர்ந்த காரணத்தால் தரணியினை உணர்ந்தவர் அவர். தனக்குரியதையும், தன் குறைகளைச் சரிசெய்யும் நிலையிலும் அவர் இருந்தார். தனக்கென வகுத்த பாதையில் தானே நடந்து சென்றார். அப்பாதையில் அவரைப் பின் தொடர்ந்தவர்கள் ஓடுவதற்கு வழி செய்து கொடுத்தார். நாற்பது வயதுக்குள் மேலே உள்ளவர்களுக்கு எம்.ஜி.ஆரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களைத் தரும் என்பது புரியும். திரைப்படப்பாடல்கள் ஒவ்வொன்றும் அவருக்காக எழுதப்பட்டன. அதற்கு அவர் தகுதியானவராக இருந்தார். அவரின் ஒவ்வொரு படமும் மகிழ்ச்சியானதாகவும், கொண்டாட்டங்களை உள்ளடக்கியதாகவும், வெற்றியைத் தருபவையாகவும் இருந்தன. காலம் அவருக்காகப் பலரை உருவாக்கி அவரைச் செதுக்க உதவியது. நாற்பதாண்டுகாலம் வரை அவர் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு ஜென் துறவியைப் போன்ற வாழ்க்கையில் சமூகப் பிரக்ஞை கொண்டவராக வாழ்ந்தவர்.

இப்படிப்பட்ட அபூர்வ பாலிசியை இந்த உலகில் பின்பற்றியதில்லை. அந்த வகையில் எம்.ஜி.ஆர் ஒரு தனித்துவமானவர்.

எம்.ஜி.ஆரின் தனித்துவத்துக்கும் நன்றியுணர்ச்சிக்கும் மற்றொரு சம்பவம் நினைவில் வருகிறது. அதை பிறிதொரு நாளில் எழுதுகிறேன்.


Friday, February 5, 2016

சற்குரு ஞானி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் - குருபூஜை அழைப்பிதழ்



Wednesday, December 30, 2015

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

பீப் சாங் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுவும் ஒரு சினிமாப்பாடல் தான். 

என்ன ஒரு பாடல்? இசைக் கோர்ப்பு? அந்தக்காலமெல்லாம் இனிமேல் வரத்தான் கூடுமா? நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது.





வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே கோவிலின் தேரழகோ முன்னழகிலே கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது