குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, April 19, 2016

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம்

லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே!

18-03-2016ம் தேதியன்று ஜீ டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற உங்களின் நிகழ்ச்சியைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. ஆச்சரியம் அடைந்தேன். டிவியில் ஆங்கராக இருப்பதால் எல்லாமும் தெரியும் என்பது போல நீங்கள் பேசுவது சரியில்லை என்று நினைத்தேன். அதற்காகத் தான் இந்தக் கடிதம்.

அலோபதி மருத்துவத்தில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஒரு சாமியாரைக் கூட்டி வந்து அவர் தவறான சிகிக்சை அளிப்பதாய் அவரிடம் சொல்லி குற்றம் என்றெல்லாம் பயமுறுத்துகின்றீர்கள். இந்த அதிகாரத்தை அரசு உங்களுக்கு கொடுத்திருக்கிறதா?  இது கட்டப்பஞ்சாயத்து செய்யும் முறையாகும். அரசிடம் இதற்கு அனுமதி பெற்றிருக்கின்றீர்களா என்பது தெரியவில்லை. 

சரி அலோபதி மருத்துவம் மட்டுமே மிகவும் சிறந்தது போன்ற உங்களின் பேச்சு எனக்கு உங்களின்  மீது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகின்றது.

அலோபதி மருத்துவத்தில் இருக்கும் யாராவது ஒரு மருத்துவரை அழைத்து வந்து நீங்கள் தவறான சிகிக்சை அளித்துள்ளீர்கள், அது குற்றம் என்று உங்களால் குற்றம் சாட்ட முடியுமா? அதற்கு உங்களுக்கும் உங்கள் டிவிக்கும் தைரியம் இருக்கிறதா?

அலோபதி மருத்துவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மருந்துகளின் தாக்கத்திலும், பின் விளைவுகளில் உயிரழப்போர் கோடிக்கணக்கானவர்கள் என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன. அலோபதி மருந்துகள் பின் விளைவுகள் ஏற்படுத்துகிறது என்றுச் சொல்லி அரசுகள் அம்மருந்துகளைத் தயாரிக்கத் தடை விதிக்கின்றன. தடை விதிப்பதற்கு முன்பு அம்மருந்தைச் சாப்பிட்டவர்களின் கதி என்ன என்று யாருக்குத் தெரியும்? இதைப் பற்றி ஏன் நீங்கள் பேசுவது இல்லை.

அலோபதி என்கிற நவீன மருத்துவத்தில் அனைவரும் பிழைத்து விடுகின்றார்களா?  என்று உங்களால் 100 சதவீதம் உறுதியாகச் சொல்ல முடியுமா? முழு உடலுக்கும் வைத்தியம் பார்க்காமல் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு உடலைக்கூறு போட்டு வைத்தியம் பார்க்கும் அலோபதி மருத்துவத்தின் கொடுமைகளை விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

எந்த விதப் புற்று நோய்க்கும் மிகச் சரியான முறையில் உணவும், மருந்தும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். உணவே மருந்து என்ற முறையில் வாழ்வியல் நெறி கொண்டது தமிழர் பண்பாடு. 

எந்த ஒரு மருத்துவரும் அது அலோபதி மருத்துவராக இருந்தாலும் சரி, நோயாளியிடம் அவரின் உணவு பழக்கம், இன்ன பிற பழக்கங்கள் பற்றி விசாரிப்பர். அடுத்து அவரொரு முடிவிற்கு வந்து மருந்துகளை கொடுப்பர். இதுதான் அனைத்து மருத்துவரும் செய்யும் சிகிக்சை முறை. 

நீங்கள் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவரும் அதைத்தான் செய்தார். உடனே நீங்கள் ஏன் அவர்களின் உணவுப் பழக்கங்களை விசாரிக்கின்றீர்கள் என்று கேட்கின்றீர்கள். நாடி பிடித்துப் பார்த்துச் சொல்ல வேண்டியதுதானே என்று கேள்வி வேறு கேட்டீர்கள். இதெல்லாம் என்ன? நாடியில் பிழை இருப்பது தெரியும். ஆனால் அது என்ன பிழை என்பதை அவர்களின் உணவுப் பழக்கத்தை வைத்துத்தான் ஓரளவு நிதானிக்க முடியும். அப்படிச் செய்வது தவறு என்கின்றீர்கள். அது குற்றம் என்கின்றீர்கள். இதையே அலோபதி மருத்துவரிடம் பேசிப்பாருங்கள். உங்களின் நிலமை என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 

ஏழைகளை அழைத்து வந்து மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து டிவியில் ஒளிபரப்பிக் காசு பார்க்கும் திறமையே திறமைதான். வேறு யாருக்கு வரும் இப்படி ஒரு திறமை.

உங்களுக்கு ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக்குச் சளி பிடித்து விடும். கண்கள் சிவந்து, மூக்கு சிவந்து பெரும் கொடுமையாக இருக்கும். தலைவலி வேறு வந்து விடும். உடனே அலோபதி மருத்துவரை நாடுவேன். மருந்து கொடுப்பார். நான்கு நாட்களுக்கு மருந்தைச் சாப்பிடுவேன். உடம்பு அசதியாக இருக்கும். சளி கொஞ்சம் கொஞ்சமாக அமுங்கி விடும். அடுத்த நாளில் மூக்கிற்குள் நாற்றமெடுக்கும். சளி கட்டி விடும். அதைக் கரைக்க அடுத்த மருந்து. இப்படி மருத்துவருக்கும் மருந்துக்கும் என 1000 ரூபாய் செலவாகி விடும். அதுமட்டுமல்ல உடம்பு சொல்லொண்ணா துயரத்தைத் தரும். இந்த மருத்துவ முறையினைத்தான் நான் கிட்டத்தட்ட் 30 ஆண்டுகள் பயன்படுத்தினேன். எனது குழந்தைகள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ஆனால் இப்போது அப்படி அல்ல மேடம். எனது மனையாள் தொடு வர்ம சிகிக்சையளிக்க முறையான வர்ம மருத்துவரிடம் பயிற்சி பெற்றார். சளி வந்தால் அவரது விரலால் சிறிய அழுத்தம் தருகிறார். இரவில் உணவினைத் தவிர்க்கச் சொல்கிறார். நீராகாராம் தருகிறார். அடுத்த நாளே சளி இருக்குமிடம் தெரிவதில்லை. 

அலோபதி மருத்துவத்தில் இதற்கு விளக்கம் சொல்ல முடியாது மேடம்.

சர்க்கரை சர்க்கரை என்று இந்த உலகம் அலறுகின்றதே அது ஏன் தெரியுமா மேடம். WHO நிறுவனத்தின் சர்க்கரை கட்டுப்பாட்டு அளவீடு மாறியதால் ஒரே நாளில் உலகமெங்கும் சர்க்கரை நோயாளிகள் அதிகமாகிவிட்டார்கள். இரத்தக் கொதிப்பு அளவீடும் இதே கதிதான்.

தொடு வர்மத்தில் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவரிடம் சென்றால் சர்க்கரை நோய் இருக்குமிடம் தெரியாது. சர்க்கரை நோய்க்கு மருந்தே தேவையில்லை மேடம்.

மருத்துவ உலகத்தில் இன்னும் பல்வேறு மிக முக்கியமான நிலைகள் இருக்கின்றன. நாடி பிடித்துப் பார்ப்பதிலும் காலம் உண்டு. ஒரு சில கத்துக் குட்டி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளை, என்னவோ அனைவரும் செய்வது போன்ற காட்சியினை நீங்கள் மக்கள் வெளியில் உருவாக்க முனைகின்றீர்கள்.

முற்றிலும் தெரியாத விந்தை உலகமான மருத்துவத்தை நீங்கள் ஒரு சார்பாகக் கிண்டலடிப்பதும், கீழ்தரமானது என்று பிறர் நினைக்கும் படி செய்வதும் சரியல்ல மேடம்.

ஒவ்வொருவரும் இந்தச் சமூகத்தில் பெற்று வாழ்ந்ததை, சமூகத்திற்கே திரும்பவும் கொடுத்து விட்டுச் செல்வதுதான் மிக உயர்ந்த வாழ்க்கை.

காசு பணம் புகழ் என்பதெல்லாம் எதுவும் தந்து விடப்போவதில்லை மேடம்.

சேலம் பைபாஸ் சாலையில் நானும் ஒரு சில நண்பர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் ஏற்காடு சென்றிருந்தோம். நூற்றி இருபது கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற காரின் முன்புற இடது பக்க டயர் திடீரென வெடித்தது.

”டயர் வெடித்து விட்டது பிரேக் போடுங்க” என்றுச் சொன்னேன். நண்பர் காரை நிறுத்தி இடது பக்கமாக ஓரம் கட்டினார். யாருக்கும் எந்த காயமும் இல்லை. கார் கவிழவும் இல்லை. இது சாத்தியமா என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

நண்பருக்கு ஆச்சரியம்.

”என்னால் நம்பவே முடியவில்லை, கார் உருண்டு விடும் என்று நினைத்தேன்” என்றார். 

”நீங்கள் பதட்டமே கொள்ளாமல் இருக்கின்றீர்களே?”என்று கேட்டார். 

”யாருக்கும் எவருக்கும் எந்தக் கெடுதலையும் நீங்களும் நானும் செய்வதில்லை. ஆகவே எதுவுமே நடக்காது, ஸ்டெப்னியை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடரலாம்” என்றேன்.

என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

உங்களின்  சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மனித குலத்துக்கு நன்மை செய்கிறது என்றால் மகிழ்ச்சியே.

மருத்துவத்தில் அலோபதி ஒரு சில நோய்களுக்கு மிகச் சரியான தீர்வைத் தரும். சித்த, ஆயுர்வேதம், வர்மம் போன்றவை பல நோய்களுக்கு நல்ல தீர்வைத் தரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

பல அலோபதி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சரியான மருந்தினைக் கொடுப்பதில்லை என்பது உங்களுக்கும் தெரியும். பல நோய்கள் அலோபதியில் சரி செய்யப்படுவதும் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.

எழுத வேண்டுமா என நினைத்தேன். வேறு வழி இல்லை என்பதால் எழுதி விட்டேன். மனது வருத்தமேற்பட்டால் மன்னித்து விடவும். உங்களைச் சங்கடப்படுத்த வேண்டுமென்பதில் எனக்கு ஆர்வமில்லை. உண்மையறியாமல் பேசுகின்றீர்களே என்ற நினைப்புத்தான் எனக்கு.

மிக்க நன்றி !

- கோவை எம். தங்கவேல்



Friday, March 18, 2016

ஆப்ஸ் மூலம் வரும் ஆபத்துக்கள்

ஒரு மாதமிருக்குமென்று நினைவு. ஒரு பிரபலமான ஆப்ஸ் ஒன்றினை எனது ஐபோனில் இன்ஸ்டால் செய்தேன். ஒரு மணி நேரமிருக்கும். புதியதாக ஒரு குறுஞ்செய்தியை போன் கொண்டு வந்தது. புதிய ஆப்ஸ் வழியாக ஒரு சினேக வேண்டுகோள்.  ஏற்றுக் கொண்டு அந்த முகம் தெரியாதவரிடம் சாட்டிங் செய்ய ஆரம்பித்தேன். சிறிது நேரம் சென்ற பிறகு அது ஒரு பெண் என்று தெரிந்தது. 

சாட்டிங்கில் இருந்தவர் திடீரென்று வீடியோ அழைப்பு கொடுத்தார். ஏற்றுக் கொண்டு பார்த்தால் அது அவரின் படுக்கை அறை. முதலில் கையை மட்டும் காட்டினார். பின்னர் கால் என்று தொடர்ந்த காட்சியில் அவர் முழு நிர்வாணமாக படுத்திருப்பதைக் கண்டேன். சிரிப்புத்தான் வந்தது. அவரிடம் கேட்டேன்.

“என்ன ஆயிற்று உங்களுக்கு? முன்பின் தெரியாதவரிடம் இவ்வாறு தன் உடம்பைக் காட்டலாமா? “

“காட்டக்கூடாதுதான், ஆனால் என் தேவையை என் கணவனால்  நிறைவேற்ற முடியவில்லையே? நான் என்ன செய்ய? “ என்று அவரொரு கேள்வி கேட்டார்.

அவரொரு மேலை நாட்டுப்பெண். கல்யாணம் ஆகி விட்டது. குழந்தைகள் இருக்கிறார்கள்.  

அவரின் இந்தக் கேள்வி மிகச் சிக்கலானது. 

வாழ்வியல் சூழலில் ஆண்கள் சுயச்சார்பு உடையவர்கள். ஆனால் உளவியல் முறையிலும், உடல் முறையிலும் பெண்கள் சார்பு நிலை கொண்டவர்கள். காலச் சூழலின் காரணமாக பெண்களின் உள்ளக்கிடக்கையை ஆண்கள் உணர்ந்து கொள்ள தவறி விடுகின்றார்கள். பிரச்சினை வேறு மாதிரியாக வடிவமெடுத்து விஸ்ரூவமாகிக் கொண்டிருக்கிறது.

அப்பெண்ணின் பிரச்சினையை தீர்க்கவே முடியாது. எந்த வழியாக தீர்க்க முயன்றாலும், அதன் தொடர்ச்சியாக எண்ணற்ற உபப் பிரச்சினைகள் உருவாகி அப்பெண்ணின் வாழ்க்கையே வீணாகப் போய் விடும் ஆபத்துகள் அதிகம். இது போன்ற கணவர்களால் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இந்த செக்ஸ் என்ற உளவியல் பிரச்சினை காரணமாக சின்னாபின்னமாகி விட்டது. நண்பர் ஃப்ரான்சில் வசிக்கிறார். தன் பிள்ளைகள் படிப்புக்காக குழந்தைகளையும், மனைவியையும் இந்தியா அனுப்பி வைத்திருக்கிறார். வந்த இடத்தில் நண்பரின் மனைவிக்கும் யாரோ ஒருவருக்கும் தொடர்பு ஆகி அது பெரிய பிரச்சினை ஆகி விட்டது. எந்த வயதில் வழிகாட்டியாக பெற்றோர் இருக்க வேண்டுமோ அந்த வயதில் அந்தக் குழந்தைகளுக்கு இருவரும் அருகில் இல்லை. நண்பரும் சோக கீதம் வாசித்துக் கொண்டிருக்கிறார். வாழ்க்கைக்கும் பணம் வேண்டுமென்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வேண்டியதில்லை. ஆனால் யாரோ ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு உழைக்கும் நேரத்தில் மனைவிக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருந்தால் இந்தச் சூழல் வந்திருக்குமா?

உடனடியாக அந்த ஆப்ஸை அன் இன்ஸ்டால் செய்தேன். பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்து விடும் இது போன்ற ஆபத்தான ஆப்ஸ்களை வெகு கவனமுடன் கையாள வேண்டும். இல்லையென்றால் பெரும் பிரச்சினைகளைக் கொண்டு வந்து விட்டு விடும்.

மிக நல்ல குடும்பங்கள் இது போன்ற பிரச்சினைகளில் சிக்கி சிதறிக் கொண்டிருக்கின்றன. ஒரு நிமிட சபலம் தீர்க்கவே முடியாத சிக்கல்களில் கொண்டு போய் தள்ளி விடும்.

போன் என்பது இப்போது மிகப் பெரிய ஆபத்தான ஒரு கருவியாக மாறிக் கொண்டிருக்கிறது. போனைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது. இல்லையென்றால் ஆபத்துதான்.


Sunday, February 28, 2016

எம்.ஜி.ஆரின் அபூர்வ பாலிசி

எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவரின் ஒரு பிரதான பாலிசியைப் பற்றி நானும் எனது நண்பரும் பேசிக் கொண்டிருந்த போது, எனது நண்பர் (கேள்வியின் நாயகன்) சிலாகித்து சொன்ன விஷயம் கீழே.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் நினைவிலாடலாம். அவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் பிறர் அறிவுரை சொல்வது போல காட்சிகள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவரின் மனசாட்சி தான் அவருடன் பேசும். பின்னர் அந்த மனசாட்சி அவரின் உடலோடு இணைந்து விடும்.

தன்னை உணர்ந்த காரணத்தால் தரணியினை உணர்ந்தவர் அவர். தனக்குரியதையும், தன் குறைகளைச் சரிசெய்யும் நிலையிலும் அவர் இருந்தார். தனக்கென வகுத்த பாதையில் தானே நடந்து சென்றார். அப்பாதையில் அவரைப் பின் தொடர்ந்தவர்கள் ஓடுவதற்கு வழி செய்து கொடுத்தார். நாற்பது வயதுக்குள் மேலே உள்ளவர்களுக்கு எம்.ஜி.ஆரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களைத் தரும் என்பது புரியும். திரைப்படப்பாடல்கள் ஒவ்வொன்றும் அவருக்காக எழுதப்பட்டன. அதற்கு அவர் தகுதியானவராக இருந்தார். அவரின் ஒவ்வொரு படமும் மகிழ்ச்சியானதாகவும், கொண்டாட்டங்களை உள்ளடக்கியதாகவும், வெற்றியைத் தருபவையாகவும் இருந்தன. காலம் அவருக்காகப் பலரை உருவாக்கி அவரைச் செதுக்க உதவியது. நாற்பதாண்டுகாலம் வரை அவர் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு ஜென் துறவியைப் போன்ற வாழ்க்கையில் சமூகப் பிரக்ஞை கொண்டவராக வாழ்ந்தவர்.

இப்படிப்பட்ட அபூர்வ பாலிசியை இந்த உலகில் பின்பற்றியதில்லை. அந்த வகையில் எம்.ஜி.ஆர் ஒரு தனித்துவமானவர்.

எம்.ஜி.ஆரின் தனித்துவத்துக்கும் நன்றியுணர்ச்சிக்கும் மற்றொரு சம்பவம் நினைவில் வருகிறது. அதை பிறிதொரு நாளில் எழுதுகிறேன்.


Friday, February 5, 2016

சற்குரு ஞானி வெள்ளியங்கிரி ஸ்வாமிகள் - குருபூஜை அழைப்பிதழ்



Wednesday, December 30, 2015

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

பீப் சாங் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுவும் ஒரு சினிமாப்பாடல் தான். 

என்ன ஒரு பாடல்? இசைக் கோர்ப்பு? அந்தக்காலமெல்லாம் இனிமேல் வரத்தான் கூடுமா? நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது.





வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே கோவிலின் தேரழகோ முன்னழகிலே கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Saturday, November 14, 2015

எம்.எல்.ஏ - 4

”அண்ணே ! இந்த உலகத்தில் நல்லவர்களே கிடையாதா?” என்று கேட்டார் சுதந்திரம்.

”சுதந்திரம், நீ அர்ச்சுனனும் இல்லை, நான் கிருஷ்ணனும் இல்லை, உனக்கு எது சொன்னாலும் புரியாதய்யா, அதனால தான் நீ என்கிட்ட அல்லக்கையா இருக்கிற, புரியுதா?” என்று கேட்டார் எம்.எல்.ஏ

கார் விரைவாகச் சென்று கொண்டிருந்தது. சுதந்திரத்துக்கு கழிவிரக்கம் வந்து விட்டது. இத்தனை நாளா அண்ணன் கூட இருக்கிறோம், நம்மைப் போய் இப்படிச் சொல்லிட்டாரே என்று அவருக்கு மனதுக்குள் வருத்தமேற்பட்டது. 

சுதந்திரத்தைப் பார்த்த எம்.எல்.ஏவுக்கு மனதுக்குள் அவரின் மீது இரக்கம் ஏற்பட்டது. 

“சுதந்திரம், உன்னோடு பெரிய அழிச்சாட்டியமாய் போயிடுச்சுய்யா. ஏதாவது கேட்டு என்னைப் பாடாய் படுத்துகிறாய். சரி நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன் கேளும்” என்றார்.

பளிச்சென்று சுதந்திரம் எம்.எல்.ஏ பக்கமாய் திரும்பினார்.

“இந்த உலகத்தில் நல்லவர்கள் என்று யாருமே இல்லவே இல்லைய்யா சுதந்திரம். மகாபாரதத்தை எடுத்துக் கொள். அந்தத் தர்மனே உண்மையை மெதுவாகச் சொல்லித்தான்யா துரோணரைக் கொல்ல உதவி செஞ்சாரு. சத்தமா சொன்னாலும், மெதுவாச் சொன்னாலும் பொய் பொய்தான்யா. ஜெயிப்பதற்கு உண்மை தேவையில்லைய்யா. பொய் தான் தேவை” என்றார் எம்.எல்.ஏ

சுதந்திரக்கு புரியற மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.

மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள்

மாலை நேரம் !

மனதை மயக்கும் பறவைகளின் ஒலியில் கரைந்து கொண்டிருக்கும் காலத்தினூடே நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் இருவர் ஆற்றங்கரை ஓரமாய் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் குரு மற்றொருவர் சீடன்.

ஆற்றங்கரையோரமாய் இருக்கும் தவக்குடிலுக்கு அவ்வப்போது வரும் சீடன் குருவிற்கு பணிவிடைகள் செய்து, குடிலுக்கான காரியங்களைச் செய்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுவான். இப்படியோ கொஞ்ச நாட்கள் கழிந்து கொண்டிருந்தன.

சீடனுக்கும் குருவைப் போல சந்நியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் ஆவல். ஆனால் அழகே உருவான மனைவி, ஆசைப் பிள்ளைகள், அன்பே உருவான தாய், தந்தை மற்றும் உறவினர்களையும், அவர்கள் இவன் மீது வைத்து இருக்கும் பாசத்தை எண்ணியும் சந்நியாசம் பற்றி மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.

சீடனின் மனக்குழப்பத்தின் காரணம் அறிய குரு” சீடனே  உனக்குள் என்ன பிரச்சினை? “ என்று கேட்டார்.

சீடனும் குருவிடம் விஷயத்தை மறைக்காமல் சொன்னான். அதற்கு குரு ”சீடனே, உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். அதை நீ வீட்டுக்குச் சென்ற உடன் சொன்னாயானால், உன் குழப்பத்துக்கு ஒரு விடை கிடைக்கும் ” என்றார்.

அதன்படி குரு சீடனுக்கு அந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

சீடனும் வீட்டை நோக்கி பீடு நடை போட்டுச் சென்றான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அழகான மனைவி அவனுக்கு அமுது படைத்திட அருகில் குழந்தைகளுடன் ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தான்.

அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கை அறைக்குச் சென்றனர்.

சீடன் குரு உபதேசித்த மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் சீடனின் உடல் தானாகவே படுக்கையில் விழுந்தது. மூச்சு நின்றது. உடம்பு பிணம் போல ஆனது. ஆனால் சீடன் அவன் உடம்பை பார்த்துக் கொண்டிருந்தான். இது என்ன குழப்பம் என்று யோசித்த போது குரு உபதேசித்த மந்திரத்தின் மகிமை என்று அவன் புரிந்து கொண்டான்.

படுக்கையறைக்கு வந்த மனைவி பிணம் போல கிடந்த கணவனைக் கண்டு அலறினாள், துடித்தாள், துவண்டாள். கண்ணீரில் அவளின் கண்கள் குழமாயின. அழுது அழுது அவள் முகம் சிவந்து போனது. மணாளன் மறைந்து விட்டானென்று அவளும், சீடனும் உறவினர்களும் அழுது புரண்டனர். வீடே அழும் வனமாக மாறிப்போனது.

இது அத்தனையும் சீடனின் ஆன்மா பார்த்துக் கொண்டிருந்தது. உறவினர்களை எண்ணி அவன் மனம் துடித்தது. எவ்வளவு பாசக்காரர்கள் இவர்கள் என்று அவன் புளகாங்கிதமடைந்தான்.

சீடனின் குருவிற்கு தகவல் எட்டி அவர் சீடனின் வீட்டுக்கு வந்தார்.

அழும் அனைவரையும் பொறுமையாகப் பார்த்து விட்டு அனைவரையும் அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.

”என் சீடனுக்காக இவ்வளவு பாசம் கொண்ட உறவினர்கள் இருப்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆகையால் நானொரு காரியம் செய்யலாமென்று நினைக்கிறேன்” என்றார்.

அனைவரும் குருவினைப் பார்த்தனர்.

”என் தவ வலிமையால் சீடனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வேறொரு உயிர் வேண்டும். யார் இவனுக்கு உயிர் கொடுத்து உதவுகின்றீர்கள்” என்று கேட்டார்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஒருவரும் சீடனுக்காக உயிரைக் கொடுக்க முன் வரவில்லை.

குரு சீடனின் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சென்றார். அவர்களைப் பார்த்து, “உங்களில் யார் என் சீடனுக்காக தங்கள் உயிரைக் கொடுக்க விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.

சீடனின் மனைவி குருவிடம், “அவர் இறந்தது இறந்தது போலவே இருக்கட்டும், இனி உயிர் பெற்று ஒன்றும் ஆகப் போவதில்லை. நான் என் குழந்தைகளுடன் வாழ்ந்து கொள்கிறேன்” என்றாள்.

குரு சிரித்துக் கொண்டே கமண்டலத்தை எடுத்தார். தண்ணீரை சீடனின் முகத்தில் தெளித்தார். தூக்கத்திலிருந்து எழுந்த சீடன் யாரிடமும் எதுவும் பேசாமல் குருவின் பின்னே நடந்தான்.






Wednesday, September 9, 2015

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இறுதிப்பகுதி

மனிதன் ஒரு கோமாளி. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. படுத்தவன் பரலோகம் போய் விடுகிறான். துயிலிருந்து நிச்சயம் எழுவோமா என்பதெல்லாம் கேள்விக்குறி. இருப்பினும் என்ன? கோபம், பொறாமை, சூது, வஞ்சகம் அது மட்டுமா இன்னும் என்னென்னவோ வித்தியாசமான எண்ணங்களால் சூழப்பட்டு தன்னை ஒரு அழியாப்பொருளாய் நினைத்துக் கொள்கிறான். அதனால் வருவதும், விளைவதும் தான் கர்மபலன் !

இப்போது விஷயத்துக்கு வந்து விடுகிறேன். உங்களுக்கு ஒரு கதையைச் சொல்ல விரும்புகிறேன். அவசியம் படியுங்கள் !

ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.

உடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார்.

சீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே,  நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார்.

குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான். 

”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.

சீடன் மீண்டும் குருவிடம் சென்றான். 

“சீடனே ! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான்  அனைத்துக்கும் பொறுப்பானவர், ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.

மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்

“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும்  தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்மபலனைத்தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.

ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே கடவுளை விட குருவே உயர்வானவர்” என்றார் கடவுள்.

அன்பு நண்பர்களே! என்னைத் துரத்து துரத்து என்று துரத்திய கர்மவினைகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு இன்றைய அமைதியான வாழ்க்கைக்கு காரணம் என் குருநாதர்கள் சற்குரு வெள்ளிங்கிரி ஸ்வாமியும், ஜோதி ஸ்வாமிகள், எனக்கொரு துன்பம் என்றால் உடனடி உதவி என் குருநாதர்களிடமிருந்து உடனடியாக வந்து சேரும். அம்மாவின் மடியில் பாதுகாப்பாய் இருப்பது போன்று உணர்கிறேன்.

எந்த துன்பம் வரினும் அது பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இருப்பதில்லை. குரு நாதர் இருக்க பயமேன் !

நண்பர்களே, நல்ல குருவை தேடிக்கண்டுபிடியுங்கள். நான் அப்படித்தான் தேடியடைந்தேன். 

Thursday, August 20, 2015

எம். எல். ஏ - தொடர் 3

”சுதந்திரம் என்னய்யா ஒரே குஷியாய் இருக்கிறாய்?”

“அண்ணே, நம்ம தமிழர் ஒருவர் கூகுள் கம்பெனிக்கு தலைவராயிட்டாராம், எல்லோரும் இதைப்பத்திதான் பேசிக்கிறாங்க, அவருக்கு நம்ம தலைவர்களெல்லாம் பாராட்டுறாங்க, நமக்கும் எவ்வளவு பெருமை?” என்று சொல்லி எம்.எல்.ஏவைப் பெருமையாகப் பார்த்தார்.

“ஏய்யா, சுதந்திரம் கூகுள் கம்பெனியில அந்த ஆளு வேலைதானே பார்க்கிறாரு?”

“ஆமாண்ணே?”

“என்னவோ அந்த ஆளு அந்தக் கம்பெனிக்கே முதலாளி ஆனமாதிரி ஏன்யா பேசுறே. அமெரிக்ககாரன் கம்பெனியில பெரிய வேலை கிடைச்சா அது பெருமையாய்யா? உங்களுக்கு வெட்கமா இல்லை? நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களாய்யா?”

சுதந்திரத்துக்கு ஏண்டா சொன்னோம் என்று ஆகி விட்டது.


குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? பகுதி 2

துன்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை எவரும் அறிவார் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம். அதுதான் சரி என்று உடும்பாய் இருப்பர். அதனால் விளையும் செயல்களால் உருவாகும் துன்பங்களை அவர்கள் அறிவதுமில்லை. அதைப் பற்றிய சிறிய அலசல் கூட செய்ய மாட்டார்கள்.

சர்க்கரை வியாதி வந்து விட்டது என்பார்கள். என்ன மருந்து சாப்பிட்டாலும் குறைய மாட்டேன் என்பார்கள். ஆனால் வாயைக் கட்ட மாட்டார்கள். நாக்கைக் கட்டுப்படுத்தி விட்டால், பின் நடப்பவை எல்லாமே நன்மைதான். நாற்பது வயது வந்து விட்டதா? உடனே அசைவ உணவுக்கு டாட்டா சொல்லி விட வேண்டும். ஆனால் யார்தான் செய்கிறார்கள்? உழைத்து உழைத்து ஓய்ந்து போகும் உடல்பாகங்களுக்கு மென்மையான வேலைகளை அல்லவா கொடுக்க வேண்டும். சிக்கன் 65 பார்த்தால் நாக்கில் எச்சில் ஊற்று எடுக்கிறது. மசாலா வாசனையை நுகர்ந்தால் வயிறு கபகபவென பசிக்கிறது. நாக்கில் உமிழ் நீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. பிறகென்ன பாதி மென்றும், மெல்லாமலும் வயிற்றுக்குள் அவை சேகரமாகி விடுகின்றன. அதன் பலனை தொடர்ந்து அனுபவித்துதானே ஆக வேண்டும்?

நம் உடல் என்ன வேலை செய்கிறது அதற்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உடம்பினைச் சீராக வைத்துக் கொண்டால் உடம்புத் துன்பம் அற்றுப் போய் விடும். அதையும் மீறி உடல் துன்பம் வருகிறது என்றால் அது கர்ம வினை என்று உணரத் தெரிய வேண்டும்.

ஜோசியக்காரர்களிடம் சென்றால் பல நல்ல விஷயங்கள் உங்களின் எதிர்கால வாழ்வில் நடக்கப்போகிறது என்பார்கள். ஆனால் எதுவும் நடக்காது. ஏன் என்று கேள்வியைக் கேட்டால் உங்கள் கர்மபலன், உங்களுக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களைத் தடுக்கிறது என்பார்கள். ஒரு சிலர் பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்பார்கள். அதற்கு தனிக் கட்டணம் என்பார்கள். 

ஆறறிவுக்கு எட்டாத கர்மபலனை நினைத்து நாம் ஒரு சில சமயம் வருத்தப்படுவதுண்டு. இந்தக் கர்மபலனைத் தீர்க்கவே முடியாதா? என்று ஏங்கும் நிலைமையும் ஒரு சிலருக்கு வரும். 

விதி கர்மபலனை அனுபவித்துதான் தீர வேண்டும் என்றுச் சொல்கிறது. கீதையும் அதைத்தான் சொல்கிறது. மனுதர்மமும் அதைத்தான் சொல்கிறது. வேதமும் அதைத்தான் சொல்கிறது.

நாம் அறியாமல் செய்யும் அற்பச் செயலின் பலனைக்கூட நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும் என்கிறது அனைத்தும். சுவற்றில் மீது வீசப்பட்ட பந்து திரும்பவும் வரத்தானே செய்யும்?

இதற்கு என்னதான் வழி ? என்று யோசிக்கின்றீர்கள்? அப்படித்தான் நானும் ஒரு நாள் யோசித்தேன். விடாது தொரத்திய கர்மபலனை விட்டொழித்து விட்டு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென யோசித்தேன். 

அதன் விடை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்... !