குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, December 30, 2015

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

பீப் சாங் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுவும் ஒரு சினிமாப்பாடல் தான். 

என்ன ஒரு பாடல்? இசைக் கோர்ப்பு? அந்தக்காலமெல்லாம் இனிமேல் வரத்தான் கூடுமா? நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது.





வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே கோவிலின் தேரழகோ முன்னழகிலே கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Saturday, November 14, 2015

எம்.எல்.ஏ - 4

”அண்ணே ! இந்த உலகத்தில் நல்லவர்களே கிடையாதா?” என்று கேட்டார் சுதந்திரம்.

”சுதந்திரம், நீ அர்ச்சுனனும் இல்லை, நான் கிருஷ்ணனும் இல்லை, உனக்கு எது சொன்னாலும் புரியாதய்யா, அதனால தான் நீ என்கிட்ட அல்லக்கையா இருக்கிற, புரியுதா?” என்று கேட்டார் எம்.எல்.ஏ

கார் விரைவாகச் சென்று கொண்டிருந்தது. சுதந்திரத்துக்கு கழிவிரக்கம் வந்து விட்டது. இத்தனை நாளா அண்ணன் கூட இருக்கிறோம், நம்மைப் போய் இப்படிச் சொல்லிட்டாரே என்று அவருக்கு மனதுக்குள் வருத்தமேற்பட்டது. 

சுதந்திரத்தைப் பார்த்த எம்.எல்.ஏவுக்கு மனதுக்குள் அவரின் மீது இரக்கம் ஏற்பட்டது. 

“சுதந்திரம், உன்னோடு பெரிய அழிச்சாட்டியமாய் போயிடுச்சுய்யா. ஏதாவது கேட்டு என்னைப் பாடாய் படுத்துகிறாய். சரி நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன் கேளும்” என்றார்.

பளிச்சென்று சுதந்திரம் எம்.எல்.ஏ பக்கமாய் திரும்பினார்.

“இந்த உலகத்தில் நல்லவர்கள் என்று யாருமே இல்லவே இல்லைய்யா சுதந்திரம். மகாபாரதத்தை எடுத்துக் கொள். அந்தத் தர்மனே உண்மையை மெதுவாகச் சொல்லித்தான்யா துரோணரைக் கொல்ல உதவி செஞ்சாரு. சத்தமா சொன்னாலும், மெதுவாச் சொன்னாலும் பொய் பொய்தான்யா. ஜெயிப்பதற்கு உண்மை தேவையில்லைய்யா. பொய் தான் தேவை” என்றார் எம்.எல்.ஏ

சுதந்திரக்கு புரியற மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.

மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள்

மாலை நேரம் !

மனதை மயக்கும் பறவைகளின் ஒலியில் கரைந்து கொண்டிருக்கும் காலத்தினூடே நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் இருவர் ஆற்றங்கரை ஓரமாய் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் குரு மற்றொருவர் சீடன்.

ஆற்றங்கரையோரமாய் இருக்கும் தவக்குடிலுக்கு அவ்வப்போது வரும் சீடன் குருவிற்கு பணிவிடைகள் செய்து, குடிலுக்கான காரியங்களைச் செய்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுவான். இப்படியோ கொஞ்ச நாட்கள் கழிந்து கொண்டிருந்தன.

சீடனுக்கும் குருவைப் போல சந்நியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் ஆவல். ஆனால் அழகே உருவான மனைவி, ஆசைப் பிள்ளைகள், அன்பே உருவான தாய், தந்தை மற்றும் உறவினர்களையும், அவர்கள் இவன் மீது வைத்து இருக்கும் பாசத்தை எண்ணியும் சந்நியாசம் பற்றி மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.

சீடனின் மனக்குழப்பத்தின் காரணம் அறிய குரு” சீடனே  உனக்குள் என்ன பிரச்சினை? “ என்று கேட்டார்.

சீடனும் குருவிடம் விஷயத்தை மறைக்காமல் சொன்னான். அதற்கு குரு ”சீடனே, உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். அதை நீ வீட்டுக்குச் சென்ற உடன் சொன்னாயானால், உன் குழப்பத்துக்கு ஒரு விடை கிடைக்கும் ” என்றார்.

அதன்படி குரு சீடனுக்கு அந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

சீடனும் வீட்டை நோக்கி பீடு நடை போட்டுச் சென்றான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அழகான மனைவி அவனுக்கு அமுது படைத்திட அருகில் குழந்தைகளுடன் ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தான்.

அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கை அறைக்குச் சென்றனர்.

சீடன் குரு உபதேசித்த மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் சீடனின் உடல் தானாகவே படுக்கையில் விழுந்தது. மூச்சு நின்றது. உடம்பு பிணம் போல ஆனது. ஆனால் சீடன் அவன் உடம்பை பார்த்துக் கொண்டிருந்தான். இது என்ன குழப்பம் என்று யோசித்த போது குரு உபதேசித்த மந்திரத்தின் மகிமை என்று அவன் புரிந்து கொண்டான்.

படுக்கையறைக்கு வந்த மனைவி பிணம் போல கிடந்த கணவனைக் கண்டு அலறினாள், துடித்தாள், துவண்டாள். கண்ணீரில் அவளின் கண்கள் குழமாயின. அழுது அழுது அவள் முகம் சிவந்து போனது. மணாளன் மறைந்து விட்டானென்று அவளும், சீடனும் உறவினர்களும் அழுது புரண்டனர். வீடே அழும் வனமாக மாறிப்போனது.

இது அத்தனையும் சீடனின் ஆன்மா பார்த்துக் கொண்டிருந்தது. உறவினர்களை எண்ணி அவன் மனம் துடித்தது. எவ்வளவு பாசக்காரர்கள் இவர்கள் என்று அவன் புளகாங்கிதமடைந்தான்.

சீடனின் குருவிற்கு தகவல் எட்டி அவர் சீடனின் வீட்டுக்கு வந்தார்.

அழும் அனைவரையும் பொறுமையாகப் பார்த்து விட்டு அனைவரையும் அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.

”என் சீடனுக்காக இவ்வளவு பாசம் கொண்ட உறவினர்கள் இருப்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆகையால் நானொரு காரியம் செய்யலாமென்று நினைக்கிறேன்” என்றார்.

அனைவரும் குருவினைப் பார்த்தனர்.

”என் தவ வலிமையால் சீடனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வேறொரு உயிர் வேண்டும். யார் இவனுக்கு உயிர் கொடுத்து உதவுகின்றீர்கள்” என்று கேட்டார்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஒருவரும் சீடனுக்காக உயிரைக் கொடுக்க முன் வரவில்லை.

குரு சீடனின் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சென்றார். அவர்களைப் பார்த்து, “உங்களில் யார் என் சீடனுக்காக தங்கள் உயிரைக் கொடுக்க விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.

சீடனின் மனைவி குருவிடம், “அவர் இறந்தது இறந்தது போலவே இருக்கட்டும், இனி உயிர் பெற்று ஒன்றும் ஆகப் போவதில்லை. நான் என் குழந்தைகளுடன் வாழ்ந்து கொள்கிறேன்” என்றாள்.

குரு சிரித்துக் கொண்டே கமண்டலத்தை எடுத்தார். தண்ணீரை சீடனின் முகத்தில் தெளித்தார். தூக்கத்திலிருந்து எழுந்த சீடன் யாரிடமும் எதுவும் பேசாமல் குருவின் பின்னே நடந்தான்.






Wednesday, September 9, 2015

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இறுதிப்பகுதி

மனிதன் ஒரு கோமாளி. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. படுத்தவன் பரலோகம் போய் விடுகிறான். துயிலிருந்து நிச்சயம் எழுவோமா என்பதெல்லாம் கேள்விக்குறி. இருப்பினும் என்ன? கோபம், பொறாமை, சூது, வஞ்சகம் அது மட்டுமா இன்னும் என்னென்னவோ வித்தியாசமான எண்ணங்களால் சூழப்பட்டு தன்னை ஒரு அழியாப்பொருளாய் நினைத்துக் கொள்கிறான். அதனால் வருவதும், விளைவதும் தான் கர்மபலன் !

இப்போது விஷயத்துக்கு வந்து விடுகிறேன். உங்களுக்கு ஒரு கதையைச் சொல்ல விரும்புகிறேன். அவசியம் படியுங்கள் !

ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.

உடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார்.

சீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே,  நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார்.

குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான். 

”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.

சீடன் மீண்டும் குருவிடம் சென்றான். 

“சீடனே ! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான்  அனைத்துக்கும் பொறுப்பானவர், ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.

மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்

“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும்  தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்மபலனைத்தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.

ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே கடவுளை விட குருவே உயர்வானவர்” என்றார் கடவுள்.

அன்பு நண்பர்களே! என்னைத் துரத்து துரத்து என்று துரத்திய கர்மவினைகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு இன்றைய அமைதியான வாழ்க்கைக்கு காரணம் என் குருநாதர்கள் சற்குரு வெள்ளிங்கிரி ஸ்வாமியும், ஜோதி ஸ்வாமிகள், எனக்கொரு துன்பம் என்றால் உடனடி உதவி என் குருநாதர்களிடமிருந்து உடனடியாக வந்து சேரும். அம்மாவின் மடியில் பாதுகாப்பாய் இருப்பது போன்று உணர்கிறேன்.

எந்த துன்பம் வரினும் அது பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இருப்பதில்லை. குரு நாதர் இருக்க பயமேன் !

நண்பர்களே, நல்ல குருவை தேடிக்கண்டுபிடியுங்கள். நான் அப்படித்தான் தேடியடைந்தேன். 

Thursday, August 20, 2015

எம். எல். ஏ - தொடர் 3

”சுதந்திரம் என்னய்யா ஒரே குஷியாய் இருக்கிறாய்?”

“அண்ணே, நம்ம தமிழர் ஒருவர் கூகுள் கம்பெனிக்கு தலைவராயிட்டாராம், எல்லோரும் இதைப்பத்திதான் பேசிக்கிறாங்க, அவருக்கு நம்ம தலைவர்களெல்லாம் பாராட்டுறாங்க, நமக்கும் எவ்வளவு பெருமை?” என்று சொல்லி எம்.எல்.ஏவைப் பெருமையாகப் பார்த்தார்.

“ஏய்யா, சுதந்திரம் கூகுள் கம்பெனியில அந்த ஆளு வேலைதானே பார்க்கிறாரு?”

“ஆமாண்ணே?”

“என்னவோ அந்த ஆளு அந்தக் கம்பெனிக்கே முதலாளி ஆனமாதிரி ஏன்யா பேசுறே. அமெரிக்ககாரன் கம்பெனியில பெரிய வேலை கிடைச்சா அது பெருமையாய்யா? உங்களுக்கு வெட்கமா இல்லை? நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களாய்யா?”

சுதந்திரத்துக்கு ஏண்டா சொன்னோம் என்று ஆகி விட்டது.


குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? பகுதி 2

துன்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை எவரும் அறிவார் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம். அதுதான் சரி என்று உடும்பாய் இருப்பர். அதனால் விளையும் செயல்களால் உருவாகும் துன்பங்களை அவர்கள் அறிவதுமில்லை. அதைப் பற்றிய சிறிய அலசல் கூட செய்ய மாட்டார்கள்.

சர்க்கரை வியாதி வந்து விட்டது என்பார்கள். என்ன மருந்து சாப்பிட்டாலும் குறைய மாட்டேன் என்பார்கள். ஆனால் வாயைக் கட்ட மாட்டார்கள். நாக்கைக் கட்டுப்படுத்தி விட்டால், பின் நடப்பவை எல்லாமே நன்மைதான். நாற்பது வயது வந்து விட்டதா? உடனே அசைவ உணவுக்கு டாட்டா சொல்லி விட வேண்டும். ஆனால் யார்தான் செய்கிறார்கள்? உழைத்து உழைத்து ஓய்ந்து போகும் உடல்பாகங்களுக்கு மென்மையான வேலைகளை அல்லவா கொடுக்க வேண்டும். சிக்கன் 65 பார்த்தால் நாக்கில் எச்சில் ஊற்று எடுக்கிறது. மசாலா வாசனையை நுகர்ந்தால் வயிறு கபகபவென பசிக்கிறது. நாக்கில் உமிழ் நீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. பிறகென்ன பாதி மென்றும், மெல்லாமலும் வயிற்றுக்குள் அவை சேகரமாகி விடுகின்றன. அதன் பலனை தொடர்ந்து அனுபவித்துதானே ஆக வேண்டும்?

நம் உடல் என்ன வேலை செய்கிறது அதற்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உடம்பினைச் சீராக வைத்துக் கொண்டால் உடம்புத் துன்பம் அற்றுப் போய் விடும். அதையும் மீறி உடல் துன்பம் வருகிறது என்றால் அது கர்ம வினை என்று உணரத் தெரிய வேண்டும்.

ஜோசியக்காரர்களிடம் சென்றால் பல நல்ல விஷயங்கள் உங்களின் எதிர்கால வாழ்வில் நடக்கப்போகிறது என்பார்கள். ஆனால் எதுவும் நடக்காது. ஏன் என்று கேள்வியைக் கேட்டால் உங்கள் கர்மபலன், உங்களுக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களைத் தடுக்கிறது என்பார்கள். ஒரு சிலர் பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்பார்கள். அதற்கு தனிக் கட்டணம் என்பார்கள். 

ஆறறிவுக்கு எட்டாத கர்மபலனை நினைத்து நாம் ஒரு சில சமயம் வருத்தப்படுவதுண்டு. இந்தக் கர்மபலனைத் தீர்க்கவே முடியாதா? என்று ஏங்கும் நிலைமையும் ஒரு சிலருக்கு வரும். 

விதி கர்மபலனை அனுபவித்துதான் தீர வேண்டும் என்றுச் சொல்கிறது. கீதையும் அதைத்தான் சொல்கிறது. மனுதர்மமும் அதைத்தான் சொல்கிறது. வேதமும் அதைத்தான் சொல்கிறது.

நாம் அறியாமல் செய்யும் அற்பச் செயலின் பலனைக்கூட நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும் என்கிறது அனைத்தும். சுவற்றில் மீது வீசப்பட்ட பந்து திரும்பவும் வரத்தானே செய்யும்?

இதற்கு என்னதான் வழி ? என்று யோசிக்கின்றீர்கள்? அப்படித்தான் நானும் ஒரு நாள் யோசித்தேன். விடாது தொரத்திய கர்மபலனை விட்டொழித்து விட்டு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென யோசித்தேன். 

அதன் விடை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்... !

Tuesday, August 18, 2015

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் - பகுதி 1

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். தினமும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நல்லதும் கெட்டதும் வந்து கொண்டே இருக்கின்றன. 

விடிகாலைப் பொழுதில் துயிலெழ ஆரம்பிப்பதிலிருந்து உறங்கச் செல்லும் வரை எத்தனை எத்தனையோ சம்பவங்கள், நிகழ்வுகள், திடீர் திருப்பங்கள், ஒன்றுமே இல்லாத செக்கு மாட்டு வாழ்க்கை நிகழ்ச்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவங்கள். துன்பம் அழுத்த முனையும் பொழுது கடவுளின் கோவில்களைத் தேடி ஓடுவோம். துன்பத்திற்கு விடிவு கிடைக்காதா என்று மனதுக்குள் அழுது புலம்புவர். கடவுளிடம் சண்டைகள் போடுவர். 

ஒரு சிலர் மாய மந்திரவாதிகளை தேடுவர். ஒரு சிலர் டெம்ப்ளேட் ஜோசியக்காரர்களைத் தேடி ஓடுவர். ஒரு சிலர் கோவில்களை நோக்கிச் செல்வர். ஒரு சிலர் கோவில்களில் பரிகாரங்கள் செய்வர். இப்படி இன்னும் எத்தனையோ விதங்களில் துன்பங்களிலிருந்து விடுதலை பெற துடிப்பர். 

நாமெல்லாம் மைக்ரான் குடும்பங்களாகி விட்டோம். கணவன், மனைவி, குழந்தை என்றாகி விட்டதால் நம் பெரியோர்களைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. வயிற்று உப்புசமாக இருந்தால் இப்போதெல்லாம் நாம் ஜெலுசில் குடிப்போம் அல்லவா? ஒரு தம்ளர் நீரில் எலுமிச்சையைப் பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டுக் குடித்தால் ஓடிப்போகும் வயிற்று உப்புசம். எத்தனை பேருக்குத் தெரியும் இந்த விஷயம்? எனக்கு இந்த விஷயமே என் வீட்டுக்கு வந்த ஒரு விருந்தினர் சொல்லக் கேட்டது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாய் ஒரு வழி முறை உள்ளது. அந்த வழி முறைகள் குடும்பம் குடும்பமாய் பாதுகாக்கப்பட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லப்பட்டு வந்தன. சுய நலமும், பொருட்கள் மீதான ஆசையும், நுகர்வின் மீதான மோகம் கொண்ட பெண்களாலும் வாழ்க்கை முறை மாறி விட்டது. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

நண்பரின் வீட்டில் திருமணம் நடைபெற்றது.  நண்பரின் பையன் நன்றாகச் சம்பாதித்தான். வரப்போகும் மனைவிக்கு லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை எடுத்தான். நண்பரின் மனைவியோ 500 லிருந்து 750 ரூபாய்க்கு மேல் புடவையே எடுக்கமாட்டார். மனைவி மகனிடம் கடிந்து கொண்டார். அதற்கு பையன் நான் சம்பாதிக்கிறேன்.செலவு செய்கிறேன் என்றான். 

அறுபதாயிரம் ரூபாய்க்கு மனைவிக்குச் செல்போன் வாங்கிக் கொடுத்தான். இரண்டு இலட்ச ரூபாய்க்கு டிவி மற்றும் பிற. இனிதாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அவனுக்கு வேலை பறிபோனது. கையில் காசும் இல்லாமல் போனது. செலவுக்கே திண்டாட்டம். பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது லட்ச ரூபாய் பட்டுப்புடவை. ஹாலில் உட்கார்ந்திருந்தது இரண்டு இலட்சரூபாய் டிவி. அதனால் என்ன பலன்?

கையிலிருந்த புதிய போனை விற்க முனைந்தான், வெறும் பத்தாயிரத்திற்கு கேட்டார்கள். வாங்கி ஒரு மாதம் இல்லை. அதற்குள் ஐம்பதாயிரம் போச்சு. இன்னும் இரண்டு மாதம் போனால் இரண்டாயிரம் ரூபாய்க்குக் கேட்பார்கள். செல்போன் கடை முதலாளி கையில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் போனைப் பார்த்தான். அவரின் கடை ஷோரூமிலோ கோடிக்கணக்கான ரூபாய்க்கு மொபைல்கள் விற்பனைக்கு இருந்தன. அவனுக்கு அப்போதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்தது.

தனி வீட்டில் மனைவியோடு சந்தோஷமாக வாழச் சென்றவன் வீட்டைக் காலி செய்து கொண்டு பெற்றோரின் வீட்டுக்கே வந்து சேர்ந்தான். மீண்டும் வேலை கிடைத்தது. மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்தான். சம்பளம் முழுவதையும் அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்தான். குடும்பத்தின் தலைவியின் கையில் நிதியின் நிர்வாகம் வந்தது. 

அவன் மனைவி இப்போது மசக்கையாக இருக்கிறார். அவன் அம்மாவிடம் இப்போது லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது. வரப்போகும் பேரனுக்கு சொத்துக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார் நண்பர்.

அதே போல துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட ஒரு வழி உள்ளது. அது என்ன??? அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.... !

Wednesday, August 5, 2015

நிலம்(16) - தொல்லியல்துறை நிலங்களை கிரையம் பெற்றால் என்ன ஆகும்?

அமெரிக்க சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் தந்தையார் என்னைச் சந்திக்க வேண்டுமென போனில் கேட்டார். 

வீட்டிற்கு வரச்சொல்லி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கை நிறைய டாக்குமெண்ட்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். 

”சார், என் பையன் அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் உழைப்பில் கிடைக்கும் காசில் கொஞ்சம் நிலம் வாங்கி வைத்தால் அவன் எதிர்காலத்துக்கு பயன்படுமே என நினைத்துக் கொண்டிருந்த போது, எனது நண்பர் மூலமாக இந்த பத்து ஏக்கர் நிலம் விலைக்கு வந்திருக்கிறது. பத்து இலட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துதான் இந்த பேப்பர்களை வாங்கி இருக்கிறேன். என் பையன் உங்களின் பிளாக்கைப் படிப்பானாம். அதனால் உங்களிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டு வாங்கிய பிறகு கிரையம் செய்யலாம் என்றுச் சொன்னான், அதனால் தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றார்.

”நாளை மாலை என்னை வந்து பாருங்கள்” என்றுச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அவர் கொண்டு வந்த ஆவணங்களில் வக்கீல் ஒருவரின் கருத்துரையும் இருந்தது. முதலில் அதனை ஆராய்ந்தேன். அனைத்தும் சரியாக இருந்தன. வில்லங்கச்சான்றிதழ், மூலப்பத்திரங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. அடுத்து எனது மேல் கட்ட ஆவண ஆய்வினைத் தொடர்ந்தேன்.

மேற்படி நிலத்தின் மொத்த மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி இருக்கும். கிரையச் செலவு அது இதென்று கிட்டத்தட்ட இரண்டு கோடியே இருபது இலட்சம் செலவாகும்.

எனது ஆய்வில் மேற்படி நிலம் தொல்லியல் துறையினால் தடைசெய்யப்பட்ட  நிலம் என அறிந்து கொண்டேன். தொல்லியல் துறையினால் எடுக்கப்பட்டு, அதில் எந்த வித கட்டிடங்களோ அல்லது வேறு எந்த வித நடவடிக்கையுமே எடுக்க முடியாத நிலம் அது. அதுமட்டுமல்ல அந்த நிலத்தின் அருகிலிருந்து 300 அடியிலிருந்து 900 அடி வரை எந்த வித கட்டிடங்களோ வேறு எந்த மாற்றமும் செய்ய நினைத்தால் தொல்லியல் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இதே போல நிலம் சென்னையில் இருக்கிறது. இந்த நிலத்தினைக் கிரையம் பெற்ற பல சென்னைவாசிகள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்ல தமிழகமெங்கும் இது போன்ற நிலங்கள் இருக்கிறது. கோவையில் ஒரு முக்கியமான ஊரில் இந்த நிலங்கள் இருக்கின்றன. நிலத்தின் உரிமையாளர் பெயர், பட்டா போன்றவைகளில் எந்த வித மாற்றத்தினையும் தொல்லியல் துறையினர் ஏற்படுத்தவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.

ஆகவே அந்த நிலம், நிலமாகத்தான் இருக்குமே ஒழிய வேறு ஒன்றினையும் செய்ய முடியாது. அப்படி செய்ய  முனைந்தால் அபராதம் மட்டுமின்றி சிறை வாசமும் உண்டு என்கிறது தொல்லியல்துறை.

மறு நாள் மாலை பெரியவர் வந்தார். காஃபி கொடுத்து உபசரித்து விட்டு அதன் பிறகு மேற்படி விஷயத்தை சொன்னேன். அதற்குரிய ஆவணங்களை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவருக்குப் படபடவென்று வியர்க்க ஆரம்பித்து விட்டது. கொடுத்த அட்வான்ஸ் தொகையை எப்படி வாங்குவது என்று இப்போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்.

இப்படி பல்வேறு சிக்கல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நிலத்தினை வாங்கும்போது சரியான லீகல் ஒப்பீனியன் தருபவரிடம் லீகல் பெறவில்லை எனில் சம்பாதித்த பணம் வீணாய்ப் போய் விடும்.

அமெரிக்காவிலிருந்து சாஃப்ட்வேர் இன்ஞ்சினியர் போனில் அழைத்து பல முறை நன்றி நன்றி எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

Thursday, July 23, 2015

எம்.எல்.ஏ - தொடர் 2

டிவியில் பிரதமர் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்வதாக காலில் சுடுதண்ணீர் கொட்டியவன் கதறுவது போல கதறிக் கொண்டிருந்தார்கள்.

”சுதந்திரம், பிரதமர் காங்கிரஸ் கட்சியை அறுபதாண்டுகால ஊழல் ஆட்சி என்றுச் சொல்லிக் கிழித்தார், இப்போ என்ன செய்யறாருன்னு பார்த்தீயா? கம்முனு இருக்காரு?”

“ஆமான்னா, ஒரு அமைச்சர் இந்திய அரசால் தேடப்படுவருக்கு உதவி செய்கிறார். அது சட்டப்படி தேசத்துரோக குற்றம் என்கிறார்கள். ஆனால் அது மனிதாபிமான செயல் என்கிறார்கள் இவர்கள், இதென்னன்னா மனச்சாட்சியே இல்லாமல் இப்படிப் பேசுகிறார்கள்? சாதாரண மனுஷன் இப்படிச் செய்தால் சும்மா விடுவானுவங்களா இவனுங்க?”

”மனச்சாட்சியா? மண்ணாங்கட்டி! ஏன்யா சுதந்திரம், நல்லவன் வாரான்னா மரியாதையா குடுக்குது இந்த சமூகம்? பணக்காரன் வந்தாதான்யா எழுந்து நிக்கிறாங்க. திருடனா இருந்தாக்கூட பணக்காரனா இருந்தால் தான் அவனை மதிக்கிறாங்க. இவனுககிட்டே மனசாட்சிப்படியா நடந்துக்க முடியும்?”

”இருந்தாலும் கூசாமா பேசுகிறார்களே, அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல”

“அதனாலதான்யா நீ என்கிட்டே பிஏவா கையைக் கட்டிக்கிட்டு நிக்கிற, இல்லேன்னா நீயும் ஒரு தலைவரா இருந்துருப்பே. சுதந்திரம், கூசாம பொய் பேசறவந்தான் அரசியல்வாதியா இருக்க முடியும், தெரிஞ்சுக்க! பதவி கிடைக்கிற வரைக்கும் யோக்கியனா நடிக்கனும், பேசனும். பதவி கிடைத்து விட்டால் காது கேக்காதவன் மாதிரி இருந்துக்கணும். இதற்குப் பெயர் தான்யா அரசியல்”

வாசலில் ஆள் நடமாடும் சத்தம் கேட்க, சுதந்திரத்தைப் பார்க்கிறார் எம்.எல்.ஏ.

“யாருன்னு பாருய்யா?”

“ரெகமெண்டேசனுக்கு வந்துருக்காங்கய்யா”

“சரி, சரி ! லூசுப்பயலுவலுக்கு ஒரு லெட்டர் பேடு வச்சுருக்கேமே அதை எடு” 

அரை மணி நேரம் கழித்து வாசலில் சென்று கொண்டிருந்தவர்கள் இப்படி பேசிக் கொண்டே நடந்து சென்றார்கள்.

”நம்ம எம்.எல்.ஏவைப் பார்த்தீங்களா, தொகுதிக்காரன்னு சொன்னவுடனே ஒரு வார்த்தைப் பேசாம ரெகமெண்ட் லெட்டர் கொடுத்தாரு, ரொம்ப நல்ல மனுஷன்யா நம்ம ஆள்”

குறிப்பு: லூசுப்பயல்கள் லெட்டர் பேடில் எழுதப்படும் எந்த ஒரு ரெகமெண்டேசனுக்கு யாரும் எந்த வித ரெஸ்பான்ஸும் குடுக்கமாட்டார்கள் என்றொரு ஏற்பாடு சம்பந்தப்பட்டவர்களுக்குள் உள்ளது.

Wednesday, July 15, 2015

கடவுளைப் பார்க்க முடியுமா?

”கடவுளைக் கண்ணால் பார்க்க முடியுமா? ” உலக மாந்தர்களின் உள்ளத்தே விடை தெரியா கேள்வியாய் காலம் காலமாய் உதித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் எவராலும் விடை சொல்ல முடியவில்லை. 

ஞானிகளைக் கேட்டால் ”அவர் உன்னுள்ளே இருக்கிறார்” என்கிறார்கள். போகிகளைக் கேட்டால் ”கடவுளா? அவர் அந்தக் கோவிலில் இருக்கிறார், இந்தக் கோவிலில் இருக்கிறார்” என்று சொல்கிறார்கள். நாத்திகர்களைக் கேட்டால்,”கடவுள் இல்லை, கல் தான் உண்டு” என்கிறார்கள்.

எவரைக் கேட்டாலும் பதில் கிடைக்கிறது. ஆனால் கடவுளைக் காணமுடியவில்லை. அன்பர்களே, சீர்காழி கோவிந்தராஜனின் இந்தப் பாடலைத் தனிமையில் கேளுங்கள் ! கேட்டு விட்டு மனதூடே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று உங்களுக்குப் புரிய வரும். அப்படியும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ....



ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த குழந்தையைத் திடீரென்று காணவில்லை என்றால் குழந்தையைக் காண்பதற்காக மனது துடிதுடிக்குமே! அழுது புலம்புமே ! அலறுமே ! உடல் சோர்ந்து போமே ! இதயம் வலித்து வலித்து கண்களில் கண்ணீர் வழிந்தோடுமே ! உடல் செயலற்றுப் போய் இடிந்து போகுமே? செத்துப் போய் விடலாமே! என்று துடித்து துடித்து துன்பத்தில் உழலுமே ! ஒரு குழந்தையைக் காணாவிடில் இப்படியெல்லாம் வேதனையில் வீழ்ந்து வெம்பி வெந்து துயரத்தில் ஆழ்ந்து அழுகின்ற மனிதர்கள் என்றாவது ஒரு நாள் கடவுளைக் காண இப்படித் துடித்ததுண்டா? அழுததுண்டா? ( கேள்வி கேட்டவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்).

- அன்புடன் கோவை எம் தங்கவேல்