குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, February 25, 2014

தன்னாலே மனதுக்குள் எழும் கேள்வி

மன்னர் ஒருவர் ஓவியப் போட்டி ஒன்றினை வைத்தார். இரண்டு ஓவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஆளுக்கொரு சுவர் எதிரெதிரே கொடுக்கப்பட்டது. சுவருக்கிடையில் திரைச்சீலை தொங்க விடப்பட்டது.

முதல் ஓவியர் சுவற்றில் அற்புதமான ஓவியத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்.

இரண்டாவது ஓவியர் சுவற்றினை பட்டை தீட்டி பாலிஷ் செய்து கொண்டிருந்தார்.

போட்டிக்கான கடைசி நாளும் வந்து விட மன்னர் வந்தார். திரைச்சீலை விலக்கப்பட்டது.

முதல் ஓவியரின் ஓவியம் கண்ணைப் பறித்தது.

இரண்டாவது ஓவியர் பாலிஷ் செய்த சுவற்றில் முதல் ஓவியரின் ஓவியம் பிரதிபலித்தது.

இரண்டாவது ஓவியருக்கே பரிசைக் கொடுத்தார் மன்னர்.

- எங்கோ படித்தது. எழுதியவருக்கு நன்றி



ஆண்கள் அவசியம் படிக்க வேண்டியது

எது நல்லது? இதுவா?

ஜெர்மனியில் இருந்து ஒரு தமிழ் பெண் அழைத்தார். எனக்குத்தான் வசியம் பற்றி நிறைய அழைப்புகள் வரும் என்று முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா? அதே பிரச்சினைதான் இப்போதும்.

அவர் துயரத்தை என்னவென்று கேட்போம் என்று தொடர்ந்து பேசினேன்.

திருமணம் ஆன நாள்  முதலாய் அவரின் கணவர் எப்போதும் அவர் குடும்பத்தாரோடுதான் பேசிக் கொண்டிருப்பாராம். இவர் தனியாளாய் அறைக்குள் அடைந்து கிடப்பாராம். இரவு வந்தால் அறைக்கு வந்து குடும்பம் நடத்துவாராம்(???). அவரின் அம்மா, அப்பா, தங்கைகளுக்குத்தான் முதல் மரியாதை. இப்பெண்ணிடம் ஏதும் அதிகமாய் பேசிக் கொள்வதில்லையாம். இப்படியே காலங்கள் கழிந்த நாட்களில் இருவருக்கும் இரண்டு பசங்கள் பிறந்து விட்டார்கள்.

திடீரென்று சில நாட்களாகவே அவர் கெட்ட சகவாசப் பெண்களுடன் ஊர் சுற்றுகின்றாராம். வீட்டுக்கும் வருவதில்லை. அம்மா வீடே கதியென்று கிடக்கின்றாராம். அப்பெண் பெரும் துயரத்தோடு என்னிடம் கதைத்துக் கொண்டிருந்தார். வேதனையாக இருந்தது.

பிரச்சினை ஆணிடம் உள்ளது. 

இந்த ஆண்களுக்கு ஒரு விஷயம் புரிபடவே இல்லை.

அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பிகளுக்கு மரியாதையும், அவர்களுக்குச் செய்ய வேண்டியதையும் செய்துதான் தீர வேண்டும். அது கடமை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் இன்னொரு வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண் புகுந்த வீட்டுக்கு வரும் போது அவளின் ஒரே நம்பிக்கை, ஆதாரம் எல்லாம் கணவன் தான். ஆடித் திரிந்த அவள் இனிமேல் வேறொருவருக்குச் சொந்தம் என்று வரும் போது அவளுக்குள் ஏற்படும் சில உள்மனப் போராட்டங்களை ஆண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. தன் வீட்டாருடன் அவள் திடீரென்று சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் நடந்து கொள்வது போல, புகுந்த வீட்டாரிடம் ஒட்டிக் கொண்டு அனைவரிடம் நல்ல பேர் எடுக்க வேண்டுமென நினைக்கும் மனோபாவத்தில் தான் பெரும்பாலான ஆண்கள் இருக்கின்றார்கள்.

சினிமா ஒவ்வொரு காட்சியாக எடுக்கப்பட்டு பின்னர் கோர்க்கப்படுவது.

அதுவும் வாழ்க்கையும் ஒன்றில்லை என்பதை ஆண்களின் மனது புரிந்து கொள்ள மறுக்கிறது. அதே போல சில பெண்களும் இருக்கின்றார்கள்.

தன் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் புரிந்து கொண்டு அவள் தனக்கொரு குடும்பத்தை நிர்மாணிக்க தயாராக வேண்டும். அதற்குரிய மனப்பக்குவம் சிலருக்குத்தான் இருக்கும். இப்போதையப் பெண்களுக்கு அது கிடையாது. ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம்.

ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு குடும்பம் என்கிற ஆலமரத்தினை உருவாக்குவதுதான் இறைவனின் படைப்பியல் நோக்கம். இதற்கொரு முழு உதாரணமாய் சொல்ல வேண்டுமெனில்  எழுத்துச் சித்தர், தமிழர்களின் தலைவர் திரு. கலைஞரைத்தான் சொல்ல வேண்டும். அவர் ஒரு மிகச் சிறந்த குடும்பத்தலைவர். அவர் ஒருவரால் எத்தனை வாரிசுகள் இருக்கின்றார்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இதைத்தான் வாழ்க்கை என்பது.
ஒரு ஆணுக்கு அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, அக்கா செய்ய முடியாததை அவனின் மனைவி செய்வாள். திருமணம் ஆன ஆணுக்கு மிகவும் முக்கியமானவர் அவனின் மனைவி. 

அவள் சரியில்லை என்றால் நிதர்சனம் என்னவென்றுச் சொல்லிக்கொடுக்க வேண்டும். அவளை நிதர்சன வாழ்க்கைக்குத் தயார் செய்தல் வேண்டும். அவளை தன் வாரிசுகளை உருவாக்கி அதை நல்வழியில் சீர்படுத்திச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லிக்கொடுத்து அவளை முழுமையாகத் தயார் செய்தல் வேண்டும்.

என் அம்மா சொல்வதைத்தான் கேட்பேன். என் உடன்பிறந்தார் தான் முக்கியம் என்றால் நீ சும்மா இருக்க வேண்டும். வேறொரு வீட்டுப் பெண்ணைக் கொண்டு வந்து லூசுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது.

இப்போதெல்லாம் குழந்தை பெறுவதை தள்ளிப் போடுவது ஒரு பேஷனாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பப்புக்குச் செல்வது, குடிப்பது, கூத்தடிப்பது தான் வாழ்க்கை என்றால் குடும்பம் என்கிற அமைப்பு எதற்கு? திருமணம் ஆன உடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். குடும்பப் பொறுப்பு தன்னாலே வந்து விடும். எக்காரணம் கொண்டும் பிள்ளை பெறுவதை தள்ளிப்போடாதீர்கள்.

இப்படித்தான் ஹிப்பிகள் என்றொரு கூட்டம் கஞ்சா, குடி, கூத்து, பல ஆண்களிடம் படுப்பது, பல பெண்களை சுகிப்பது என்று திரிந்து கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் எங்கே என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு ஹிப்பி கூட கிடையாது.

இயற்கைக்கு மாறான எந்த ஒரு விஷயமும் நாளடைவில் அழிந்து போகும் என்பது இயற்கை.

சில பெண்கள் கல்யாணம் ஆன நாள் முதல் கணவன் தன்னுடனேயே இருக்க வேண்டும். அவன் தான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம். அது ஒரு கடைந்தெடுத்த முட்டாள்தனமானதும் கூட. 

சுற்றமும், நட்பும் இல்லையென்றால் இந்த உலகில் மனிதன் எவனும் உயிருடன் வாழலாம். ஆனால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதுதான் மனித வாழ்க்கையின் தத்துவம். 

அதை விடுத்து தன் புருஷனை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் செல்வது. பின்னர் மாமியார் சொல்வதை மந்திரமெனக் கேட்பது என்று மாற்றி விடுகின்றார்கள். இதே நடத்தையை நாளை அவள் பிள்ளைகள் செய்வார்கள். உடனே இவர்கள் மருமகள் கொடுமை என்பார்கள். இவர்கள் முன்பே செய்ததை அவர்கள் பிள்ளைகள் செய்தால் கொடுமை என்று கதறுவார்கள்.
ஒவ்வொரு தனி ஆணுக்கும் பெண்ணுக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

கணவன், மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது. அது ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி தன் இருப்பை உலகுக்கு விட்டுச் செல்லும் ஆலமரம் போன்றது. அதை மறந்து விட்டு பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் இப்படித்தான் குடும்பம் சிக்கி சின்னாபின்னமாகப் போய் விடும். 

இதுவா?

எங்கெங்கும் நோக்கினும் கை விடப்பட்ட வயதானவர்களாய் தெரு ஓரத்தில் விழுந்து உழல்வீர்கள். அந்த நிலைக்குச் செல்ல வேண்டுமெனில் ஆடுங்கள், பாடுங்கள், குடியுங்கள், கூத்தடியுங்கள். சில லூசுத்தனமான எழுத்தாளர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்யுங்கள். 

எதைச் செய்யினும் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்தச் செயல் என்ன நன்மை தரும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். விஷயம் விளங்கி விடும். விஷமமானவற்றை புரிந்து கொள்வீர்கள்.

Monday, February 24, 2014

யார் ஞானி பகுதி இரண்டு



எனது பால்ய பிராயத்தில் எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் பெயர் வேலாயுததேவர். அவர் சிவபெருமானைப் போற்றி பாடல்களை எழுதுவார். ஆவணம் பெரியகுளத்துகரையில் உள்ள சிவபெருமானிடம் அவருக்கு அவ்வளவு பக்தி. அவர் சிவபெருமானைத் துதித்து எழுதும் பாடல்களை புத்தகமாகப் பிரிண்ட் போடுவார். பிரிண்ட் போடுவதற்கு அச்சகத்தில் எழுத்துக் கோர்ப்பவர் தான் தாத்தாவுக்குப் பிரச்சினை.

தாத்தாவின் கையெழுத்து வீச்சு வீச்சாய் இருக்கும். அவ்வளவு  எளிதில் படித்து விட முடியாது. அச்சகத்தில் வேலை பார்ப்பவருக்கு வீச்செழுத்துப் படிப்பதில் பிரச்சினை. புத்தகம் பிரிண்ட் ஆகி வரும் போது பார்த்தால் ஒற்றுப் பிழை, புள்ளிகள் பிழை, எழுத்துப் பிழை என்று ஒவ்வொரு பக்கமும் பெரியவரின் திருத்திய சுவடுகளாய் இருக்கும். அதற்காக பெரியவர் ஒரு வேலை செய்தார்.

அந்தப் பிரச்சினையின் காரணமாகத்தான் அவர் தன் பாடல்களை அழகிய கையெழுத்தில் தன் பாடல்களை எழுத என்னைத் தேர்ந்தெடுத்தார். 

என் அம்மாவிடம் தாத்தா பேசி, தன் பாடல்களை என்னை எழுதரச் சொல்லக் கேட்டிருப்பார் போல. அம்மா என்னிடம் வந்து தாத்தாவுக்கு பாட்டு எழுதிக் கொடுப்பா என்றுச் சொல்ல அன்றிலிருந்து நானும் அவர் கொண்டு வந்து கொடுக்கும் வீச்சுக் கையெழுத்தினைப் பிரதியினைப் படித்து புரியாதவற்றை அவரிடம் கேட்டு அதன்படி எழுதிக் கொடுப்பேன். அவர் என் கையெழுத்துப் படியை எடுத்துக் கொண்டு போய் அச்சகத்தில் கொடுத்து புத்தகமாக்கி கொண்டு வருவார். அதில் ஒரு புத்தகமும் எனக்குத் தருவார்.

நான் ஐந்தாவது படித்த காலத்தில் இருந்து பனிரெண்டாவது படிக்கும் காலம் வரை அவருக்கு பாடல்களை எழுதிக் கொடுப்பேன்.

ஆவணம் ஆவிகுளத்துக்கரையில் இருக்கும் பள்ளியின் பின்புறம் பெரிய புளிய மரம் ஒன்றிருக்கும். பரந்து விரிந்து நிழல் கொடுக்கும் அம்மரத்தின் அடியில் பயிர் அடிப்பது,  நெற்போர் வைப்பது, நெற்போரடிப்பது,  நெல் காயப்போடுவது என்று பல வித விவசாய வேலைகளுக்கும் பயன்படும். அங்குதான் மதிய வேலையில் பள்ளிச் சிறார்களாகிய நாங்கள் விளையாடுவோம். அது பெரிய புளியமரம். அப்படி ஒரு விருட்சத்தை இதுவரையில் நான் எங்கும் கண்டதில்லை. 

திடீரென்று ஒரு நாள் அவர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டு என்னை அந்த புளியமரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அமர்ந்து சில பாடல்களை எழுதினோம். அவர் சொல்லச் சொல்ல அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுத்தேன். பாடல்கள் எல்லாம் எழுதி முடித்த பிறகு பழமையான அந்த சிவபெருமான் சன்னதிக்கு என்னை அழைத்துச் சென்றார். சன்னதியில் உட்காரச் சொல்லி விட்டு பின்புறம் சென்றார். கம்பிகள் பாவிய மரக்கதவுகளூடே சிவபெருமான் பிரம்மாண்டமாக தெரிந்தார். கோவிலின் பின்புறம் சென்றவர் கையில் சில இலைகளுடன் வந்தார். அதைக் கொண்டு போய் சிவபெருமானின் சன்னதியின் முன்பு இருக்கும் படிக்கட்டில் வைத்து விட்டு என் அருகில் வந்து நின்று கொண்டு கை கூப்பி எம்பெருமானை தொழுத நேரத்தில் அந்தப் பச்சை இலைகள் திடீரென்று தீபம் போல பற்றி எரிந்தது. 

எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். என்னடா இது இலைகள் இப்படி எரிகின்றனவே என்று நினைத்துக் கொண்டிருந்த போது என் தலைமீது கை வைத்து என்னவோ சொன்னார். பின்னர் எரிந்து கொண்டிருக்கும் இலைகளை தொட்டு கும்பிட்டார். நானும் கும்பிட்டேன். இலைகள் கருகி சாம்பலாய் கிடந்தது. அங்கிருந்து வந்து விட்டோம். 

அடுத்த நாள் மதியம் நானும் என சக வகுப்புத் தோழர்கள் சிலருடன் மீண்டும் சிவபெருமான் சன்னதிக்குச் சென்று தோழர்களிடம் சொல்லி இலைகளைப் பறித்து வந்து படியில் வைத்து “இம்..இம்” சொல்ல ஒன்றும் நடக்கவில்லை. நான் சொன்னதை என் சக தோழர்கள் எவரும்  நம்பத் தயாரில்லை. வெட்கமாய்ப் போய் விட்டது.

அடுத்த நாள் காலையில் தாத்தாவைப் பார்த்து இது பற்றிக் கேட்க, அவர் என்னைப் பார்த்து சிரி சிரியென்று சிரித்தார். பின்னர் ஏதோ சொன்னார். அது என்னவென்று எனக்கு நினைவில் இல்லை.

தொடர்ந்து இணைந்திருங்கள் என்னுடன்....


Saturday, February 8, 2014

யார் ஞானி?


தன்னை அறிந்தவர் தன்னை வெளிப்படுத்தார். எப்படி திடீரென்று வந்தோமோ அப்படியே திடீரென்று சென்று விடுவதையும், நிழல் மறைவது போல மனிதனும் மறைந்து விடுவான் என்பதையும், நிலையற்றவையே நிலையானது என்பதையும் அறிந்தவர்கள் எவரும் தன்னை வெளிக்காட்டவே மாட்டார்கள்.

ஆறு சட்டைகள் போட்டுக் கொண்டு ஒருவர் பைத்தியக்காரனைப் போல பேரூர் தாண்டிய பகுதியில் அவ்வப்போது தென்படுவார். அவர் யார்? எங்கிருந்து வந்தார்? அவருக்கு என்னதான் வேலை? இப்படி எந்தக் கேள்விக்கும் அவரிடம் இருந்து பதிலே கிடைக்காது. அவர் யாரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. ஆனால் கேட்டோருக்கு அவர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இன்னொருவர் கடந்த இருபத்தைந்தாண்டு காலமாக ஒரே சடாமுடி, ஒரே உடையுடன் மருதமலைக்கும் பழனிக்குமாய் நடந்து கொண்டே இருக்கிறார். ஏன் அவர் அப்படி நடக்கிறார்? அவர் என்ன செய்கிறார்? யாருக்காவது தெரியுமா? அவரிடம் நெருங்கினால் சிரிப்பொன்றே பதிலாய் தருவார். இப்படிப்பட்டவர்கள் ஏன் பூமியில் அவதரிக்கின்றார்கள். இதெல்லாம் புரிந்து கொள்ளவே முடியாத ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள்.

நிலையற்ற வாழ்க்கையின் நிலையாமைத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் எவரும் எந்த போதிலும் தான் யார், தன்னிடமிருக்கும் மகிமை என்பது பற்றி எவரிடமும் சொல்வதில்லை.

என் சிறுவயதில் நான் கண்ட ஒருவரைப் பற்றிய அனுபவம் இது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமான ஆவணத்தில் இருக்கும் சிவன் கோவில் நான் சிறு வயதாக இருந்த போது சிதிலமடைந்து கிடக்கும். சிவன் கோவிலின் எதிரே மிகப் பெரிய புளிய மரமொன்று இருக்கும். சிவன் கோவிலின் வடபுறமாய் குளமொன்று பரந்து விரிந்து கிடக்கும். 

இக்கோவிலின் அருகில் தான் நான் படித்த அரசுப்பள்ளி இருக்கும். தாத்தா என்னிடம் அடிக்கடிச் சொல்வார், ”சிவன் கோவிலிலிருக்கும் லிங்கத்தை மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போய் மன்னார்குடி பக்கமிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார்கள்” என்று.  மஹா சிவராத்திரியன்றும் இன்னுமொரு விஷேசத்தின் போது வெகு விமர்சையாக விழா கொண்டாடுவார்கள். அப்போது சிவ பெருமான் தகதகவென்று ஜொலிப்பார். இப்படியான காலத்தில் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் காலத்தில் தான் இந்த அனுபவம் எனக்கேற்பட்டது.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா? அவர்கள் இறைவன் பால் பக்தி கொண்டு தன்னையே அவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியும் வாழ முடியுமா என்றெல்லாம் நாம் சிறு வயதில் படித்த அவர்களின் வரலாறு நமக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும்.

லிங்கத்தின் கண்ணில் ரத்தம் வடிந்ததற்காக தன் கண்ணையே தோண்டி எடுத்து லிங்கத்தில் பதித்த கண்ணப்ப நாயனார் கதை உங்களுக்குத் தெரியும் தானே? இதெல்லாம் சாத்தியம் தானா? என்று உங்களுக்கு தோன்றுகிறதல்லவா? இப்படியும் இருப்பார்களா ? நம்பமுடியவில்லையே என்றெல்லாம் தோன்றுபவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

Wednesday, January 29, 2014

கும்பகோணம் டிகிரி காபி

சமீப காலமாக என்.எச் சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபி - மட்டும் என்றெல்லாம் அழைப்புகள் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தில் அன்னூர் தாசில்தார் அலுவலகம் சென்று விட்டு வரும் போது ஒரு கும்பகோணம் டிகிரிக் காபிக்கடையின் அருகிலேயே பசு மாடுகளைப் பார்த்தேன். சரி கறந்த பாலில் காபி ஒன்றினைக் குடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு காபிக்கடைக்குள் சென்றேன்.

முதலில் டிகிரி காபி என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.

தஞ்சாவூர் பக்கம் ஐயங்கார் ஆத்தில்(வீட்டில்) இந்த டிகிரிக் காபி பிரபல்யம். ஐயர்கள் என்றால் டிகிரி காபி நினைவுக்கு வந்து விடும். 

ஒரிஜினல் நயம் காபிக் கொட்டைகளை வாங்கி வந்து, விறகு அடுப்பில் மண்சட்டியில் வைத்து வறுக்க வேண்டும். வறுக்கும் போது காபி கொட்டையிலிருந்து கசியும் ஒரு வித எண்ணெய் வெளிப்படும் முன்பு பக்குவமாய் எடுத்து ஆற வைக்க வேண்டும். வறுபட்ட காபிக் கொட்டைகளை கொரகொரப்பாக அறைத்து காபி பில்டரில் போட்டு சுடுதண்ணீரை ஊற்றி வைத்தால் காபி டிகாஷன் இறங்கும். கறந்த காராம் பசு மாட்டின் பாலை ரொம்பக் காய்ச்சாமல் பக்குவமாய் ஒரு கொதி கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பித்தளை டம்ளரில் சர்க்கரை  போட்டு, அதில் காபி டிகாஷனை ஊற்றி அதன் பிறகு தேவைக்கு ஏற்ப பாலைச் சேர்த்து டபராவில் ஒரு ஆற்று ஆற்றி குடித்தால் கிடைக்கும் கசப்பும், இனிப்பும், பாலின் நறுமணமும், காபியின் சுவையும் தொண்டையில் இறங்கும் போது கிடைக்கும் இன்பத்தினை சொல்ல முடியாது. அனுபவித்துக் குடித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் அருமை.

திருவையாற்றில் இருக்கும் எனது ஐயாராத்து தோழியின் வீட்டில் இந்தக் காபி கிடைக்கும். அப்பக்கம் போகும் வாய்ப்புக் கிடைத்தால் காபிக்காவே தோழியைப் பார்க்கச் செல்வதுண்டு. கடைகளில் நான் காபி குடிப்பது கிடையாது.

சில நண்பர்கள் வீடுகளில் கிடைக்கும் காபியைக் குடித்து விட்டு “இன்றைக்கு நாள் நன்றாக இல்லை” என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். என்ன செய்வது? பிறர் மனம் நோகக்கூடாது என்ற கொள்கையால் அடிக்கடி நான் நொந்து போய் விடுவேன்.

சரி கோவை கும்பகோணம் டிகிரி காபிக் கடைக்குள் செல்வோம்.

பித்தளை டம்ளரில் காபிக் கொண்டு வந்து கொடுத்த போதே ஒரு வீச்சம் அடித்தது. பாக்கெட் பாலில் தான் இந்த வீச்சம் இருக்கும். ஒரு வித கவுச்சி வாடை. பெயரில் தான் கும்பகோணமே தவிர இந்தக் காபி கலனித் தண்ணீர் .

காபி கொண்டு வந்து கொடுத்தவரிடம் ”பசுமாட்டுப்பாலா?” என்று கேட்க, அவர் ”இல்லை சார் பாக்கெட் பால் ”என்றார். அத்துடன் தெரியாத்தனமாக சாம்பார் வடையொன்றும் ஆர்டர் செய்ய அதுவும் வந்து விட்டது. வடை ரசத்தில் மிதந்தது. மேலே கொத்தமல்லி கிடந்தது. 

கும்பகோணம் டிகிரி காபி எனக்குள் மறக்க முடியாத நினைவினைப் பதிப்பித்தது.

Monday, January 13, 2014

வாசியோகமும் வெட்கமும்

நேற்று வாசியோகப் பயிற்சியில் இருக்கும் எனது மனையாளை அழைத்துக் கொண்டு, குருநாதரின் முள்ளங்காடு ஆஸ்ரமம் சென்றிருந்தேன். மனையாளின் பயிற்சி சரியாகச் செல்கிறதா என்பதை ஜோதி சுவாமி கண்காணித்து ஒழுங்கு படுத்துவார். அதற்காக வேண்டி ஆஸ்ரம் செல்வோம். 

கரூரில் இருக்கும் போது வாரா வாரம் நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதிக்குச் செல்வேன். அதன் பிறகு கரூராரின் ஜீவசமாதிக்குச் செல்வேன்.

கோவைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடம் சென்ற பிறகுதான் சற்குரு சுவாமி வெள்ளிங்கிரி அவர்களின் ஜீவசமாதிக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. அமைதி தவழும் அற்புதமான வனத்தில் குரு நாதரின் ஜீவசமாதியில் பத்து நிமிடம் அமர்ந்து இருந்தாலே போதும் மனம் செத்துப் போய் விடும். மனம் செத்தால் தன்னிருப்பு மறைந்து போய் இயற்கையோடு ஒன்றிடுவோம். அந்த இன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இயற்கையோடு அல்லது இறைவனோடு ஒன்றிடுதலே தவம்.


நேற்று ஒரு சம்பவம் நடந்தது. ஒரு குடும்பம் ஆஸ்ரமம் வந்திருந்தது. ஒரு பெரியவர் தன் இளைய மகனுக்கு வாசியோக உபதேசம் வழங்கிட ஜோதி சுவாமிகளிடம் வேண்டிக் கொண்டார். அக்குடும்பமே வாசியோகப்பயிற்சியில் இருப்பார்கள் போல. அப்பெரியவரின் பெண் ஒருவர் தியானத்தில் அமர்ந்து விட்டார். நீண்ட நேரம் ஆகி விட்டது என்று அவரின் கணவர் அவரை எழுப்பி விட்டு விட்டார். அப்பெண் கண்கள் சிவந்து தியான அறையிலிருந்து வெளியில் வந்து விட்டார். அவர் மெதுவாக வெளியேறி வனத்தில் உலாவ ஆரம்பித்தார்.

அப்போது அங்கு வந்த ஜோதி ஸ்வாமி அப்பெண்ணின் கணவரிடம் தியானத்தில் இருக்கும் போது எழுப்பி விடக்கூடாது என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பெண்ணின் கணவருக்கோ சங்கடம் வந்து விட்டது. அவர் மனது வருத்தப்படக்கூடாதே என்பதற்காக, சுவாமியிடம் ”சாமி அவரவர் பிரச்சினை அவரவர்களுக்கு” என்றேன்.

ஜோதி சாமி சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கோ வெட்கம் வந்து விட்டது.

ஏனென்றால் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் வாசியோகப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அம்மணி ஒரு மணி நேரத்திற்கு மேல் தியானத்தில் உட்கார்ந்து விட்டார். எனக்கோ பயம் வந்து விட்டது. குரு நாதரின் சிஷ்யர் ஜோதி சுவாமிகள் தியானத்திலிருந்து வந்து விட மனையாளோ எழுந்திருக்க காணோம்.மேலும் அரை மணி நேரம் ஆனது. எனக்கோ திகிலடிக்க ஆரம்பித்து விட்டது. மனையாளோ அசைவற்று உட்கார்ந்திருந்தார். கண்கள் மேலே நோக்கி நிலை குத்தியிருக்க, மெதுவாக விசில் சத்தம் வந்து கொண்டிருந்தது. சத்தம் கொடுத்து அவரை நினைவுக்கு கொண்டு வந்தேன். 

கண்கள் சிவக்க மனையாள் எழுந்தார். ஜோதி சுவாமி தியானத்தில் இருப்பவரை திடுக்கென்று எழுப்பி விடக்கூடாது என்றும், அது பெரிய பிரச்சினையை உண்டு செய்து விடும் என்றுச் சொல்ல அன்றிலிருந்து மனையாள் எத்தனை மணி நேரம் தியானத்தில் அமர்ந்தாலும் பார்த்துக் கொண்டுதானிருப்பேன். அப்பெண்ணின் கணவருக்கு ஏற்பட்ட பிரச்சினை தான் அன்று எனக்கும் ஏற்பட்டது.

பின்னர் அவரிடம் நானும் உங்களைப் போலத்தான், அதற்காகத்தான் சிரிக்கின்றார்கள் என்று விளக்கம் கொடுத்தேன்.

அது என்ன வாசியோகம் என்கின்றீர்களா?

வாசியோகம் ஸ்வாசம் அல்லது மூச்சு பற்றியது. இயல்பாக நாம் நாசி வழியாக காற்றை உள்வாங்கி பிறகு வெளிவிடுவதை ஸ்வாசம் என்கிறோம். சரியாக சொல்லவேண்டுமானால் இது வெளிமூச்சு. வாசியோகத்தில் நாம் கட்டுபடுத்தி பயிற்சி செய்வது உள் மூச்சு என்று அழைக்கப்படுகிறது. வெளிமூச்சுக்கும் உள் மூச்சுக்கும் மற்றபடி ஏதும் தொடர்பில்லை. 

வாசியோகம் மூலம் பல பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கும், இப்பிறவியில் சேர்த்துக்கொண்டிருக்கும் வினைப்பயங்களை எரித்துவிடலாம். வாசியோகம் பயிலாதவர்கள் வினைப்பயன்களை அனுபவித்துத் தான் தீர்க்க முடியும். ஒன்று முடியும் முன் மற்றொன்று சேர்ந்துவிடும். முடிவில்லாமல் பல பிறவிகளை மனிதன் எடுத்துக்கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம். இந்த சுழற்சியை கட்டுப்படுத்தி முழுதுமாக துண்டித்து பிறவிக்கான காரணங்களை அறவே எரித்துவிட்டு பிறவிக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அந்த நிலைக்கு மீள்வதற்கு வாசி யோகம் வழிகாட்டுகிறது. 

இதை புத்தகத்தில் படித்தோ அல்லது பிறர் சொல்லி கேட்டோ பயில முடியாது. இதுகுருமுகமாக பயிலவேண்டிய ஒன்று. வேறு மாற்றுவழி கிடையாது. ( நன்றி ஆனந்தவள்ளல் இணையதளம் - www.anandavallal.com )

சுருக்கமாகச் சொன்னால் வாசி = சிவா

Friday, January 10, 2014

சுரைக்காயும் நாட்டுப் பொன்னாங்கண்ணியும்


எனது பிறந்த ஊரான தஞ்சைப் பக்கம் நாட்டுச் சுரைக்காய் போட்டு இரால் குழம்பு வைப்பார்கள். சுவை என்றால் சுவை அப்படி ஒரு சுவையாக இருக்கும். எனது பைங்கால் சித்தி அபூர்வம் அவர்களின் கைப்பக்குவம் என்றால் பக்குவம் தான். சித்தியின் சமையலைச் சாப்பிட்டு விட்டு வேறு எங்கேயும் சாப்பிடவே பிடிக்காது. சுரைக்காயுடன் இராலை உறித்துப் போட்டு தேங்காய் சோம்பு அரைத்து ஒரு குழம்பு வைப்பார்கள் பாருங்கள். அடடா ! அதற்குப் பெயர் தான் குழம்பு. எங்களூர் பக்கம் இக்குழம்பு அடிக்கடி வைப்பார்கள்.

கோவை வந்ததிலிருந்து நானும் தேடாத இடமில்லை. கேட்காத ஆளில்லை. நாட்டுச் சுரைக்காயைத் தேடித் தேடி அலுத்துப் போய் விட்டது. 

ஒரே ஒரு முறை வரதராஜபுரம் சந்தையில் ஒரு பாட்டி ஒரு நாட்டுச் சுரைக்காயை விற்பனைக்கு வைத்திருந்தார். அடித்துப் பிடித்து வாங்கிக் கொண்டு சென்றேன்.

சிங்கா நல்லூர் உழவர் சந்தை, கணபதி சந்தை என்று ஒவ்வொரு சந்தையாக தேடியும் காய்கறிக் கடைகளிலும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய் விட்டது. கணிணியில் வேலை செய்வதால் கண்ணுக்கு நல்லது என்று சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரையைத் தேடி ஒரு வழியாக பச்சைப் பொன்னாங்கண்ணிக் கீரையை உக்கடம் சந்தையில் பிடித்து விட்டேன். தொடர்ந்து கிடைக்கவில்லை.

எங்கள் வீட்டு குப்பைக்கிடங்கின் ஓரமாக விதை போட்டு விட்டால் செடி வளர்ந்து அழகழகாய் சுரைக்காய்கள் காய்க்கும். காலையில் ஒரு சுரைக்காயை பறித்து வந்து தோல் சீவி அம்மா பொறியல் செய்து தருவார்கள். தட்டில் சுடச்சுட சாதத்தைப் போட்டு, வெண்ணெய்  கடைந்த மோர் ஊற்றி தட்டில் சுரைக்காய் பொறியலை வைத்துச் சாப்பிட்டால் அந்த சுவைக்கு எந்த உணவுப் பொருளும் ஈடாகாது. குண்டுச் சுரைக்காயின் சுவையே அலாதியானது.

ஆனால் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் சுரைக்காய் இருக்கிறதே அது ஒரு கொடுமை. சக்கையை போன்று இருக்கும். அதைப் பார்த்தாலே எனக்கு வாந்திதான் வரும். 

என்னடா சுரைக்காயைப் பற்றி இவ்வளவு எழுதுகின்றாரே என்று உங்களுக்குத் தோன்றும். சுரைக்காய் உடல் சூட்டைத் தணிக்கும். தோல் மினுமினுப்பாக மாறும். கபத்தைப் போக்கும். அது என்ன கபம் என்கின்றீர்களா? நம் உடம்பில் நமக்குத் தேவையே இல்லாத நம்மை நோயில் தள்ளும் சளியைத் தான் கபம் என்கிறேன். இந்தக் கபத்தை நீக்கினால் உடன் திண்மை பெரும். பித்தமிருப்பவர்களுக்கு இது உதவாது. பகலில் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இரவில் தவிர்த்து விடுங்கள். 

கபத்தை நீக்கும் செயல்முறைதான் “எண்ணெய்க் கொப்பளிப்பு”. தொண்டையில் இருக்கும் சளியை நீக்கி விட்டால் உடல் நல்ல ஆரோக்கியமாய் இருக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை கணிணியில் வேலை செய்யும் அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டும். சந்தைகளில் விற்கும் பொன்னாங்கண்ணி சரியில்லை. இந்தப் பொன்னாங்கண்ணிக் கீரையில் இலையின் முன்புறம் பசுமையாகவும், பின்புறம் பிங்க் நிறத்திலும் இருக்கும். படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


கீரையில் பொன்னைப் போன்றது. பொன் என்றால் தங்கம். இக்கீரை கண்ணுக்குத் தங்கம். உடலுக்கு அமிர்தம் போன்றது. அவசியம் அனைவரும் சாப்பிடுவதற்கு முயற்சியுங்கள்.

இந்தக் கீரை கிடைத்தால் எங்கு கிடைக்கிறது என்பதை பின்னூட்டத்தில் எழுதுங்கள். அப்படி சுரைக்காய் பற்றியும் தகவல் கிடைத்தால் எழுதுங்கள்.

* * *

Monday, December 23, 2013

குதிரை சொல்லும் செய்தி

"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் என்ன செய்யட்டும்?" என்றான் குருவிடம் சீடன்.

"தம்பி- நீ வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறாய் ? எருமையாகவா,கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.

"புரியல குருவே.." என்றான்.

"எருமை பின்னால் தட்டினால், எதையும் கண்டு கொள்ளாது. கழுதை, தட்டியவரை எட்டி உதைக்கும். ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து செல்லும்.

புரிந்ததா...நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது தான் வாழ்வின் ரகசியம் என்றார்.


* * *

Friday, December 13, 2013

நிலம்(3) - பவர் அல்லது பொது அதிகார ஆவணம்

நிலம் ஒரு மனிதன் பூமிக்கு வந்து சென்றதன் அடையாளம். அவன் பெயரைப் பூமியின் வரலாற்றில் ஏதோ ஒரு பக்கத்தில் பதிய வைக்கும் மகத்துவம் பெற்றது.

அப்படிப்பட்ட நிலத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் பல. அதைப் பிரச்சினைகள் என்றுச் சொல்வதை விட அறிந்து கொள்ளாமல் இருப்பது என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க முடியாது.

கோவையில் ஒரு இடத்தினை விற்க என்னை ஒருவர் அணுகினார். அவரிடமிருந்த டாக்குமெண்ட்கள் அனைத்தையும் படித்த பிறகு அவர் சொத்து வாங்கிய சர்வே எண்ணில் கிட்டத்தட்ட 300 கிரையம் ஆகி இருந்தது. அதில் பெரும்பான்மையானவை நேரடி கிரையம் பெற்றவை. அதில் ஒரு டாக்குமெண்ட்டினை எடுத்துப் படித்ததில் கிரையம் கொடுத்தவர் பவர் ஹோல்டர். அந்த சர்வே எண்ணில் இருக்கும் வீட்டு மனைகளை அவர் பவரின் மூலம் விற்றிருப்பது தெரிய வந்தது.

அவரின் பொது அதிகார ஆவணத்தை நகல் எடுத்துப் படித்த போது அந்த சர்வே எண்ணில் மொத்தம் இருந்த 15 ஏக்கர் பூமியில் 2 ஏக்கர் பூமிக்கு மட்டும் அதிகாரம் பெற்று இருந்தார். ஆனால் அவர் அந்த சர்வே எண்ணில் இருந்த 15 ஏக்கர் பூமியையும் இந்தப் பவர் மூலமாக விற்றிருப்பது தெரிய வந்தது. இது மிகப் பெரும் மோசடி.

அதுமட்டுமல்ல, அடுத்த பிரச்சினை, பவர் கொடுத்தவர் இந்த பவரை பவர் கொடுத்த மூன்றாவது நாளில் ரத்துச் செய்திருக்கிறார். மிகவும் புத்திசாலியாக அன் அப்ரூவ்ட் சைட்டுகளை மேற்படி பவர் ஹோல்டர் விற்றிருப்பது தெரிய வந்தது.

நபர் கொண்டு வந்த கொடுத்த ஆவணம் சட்டப்படி சரியான ஆவணம் இல்லை. ஆகவே அந்த பூமியை அவர் விற்கவே முடியாது. அவரின் முதலீடு இனி என்ன செய்தாலும் கிடைக்கப்போவதில்லை என்பது தான் உண்மை. கிரிமினல் கேஸ் போடலாம். கோர்ட்டுகளில் சிவில் கேஸ் நடத்தி ஜெயிப்பது என்பது இப்போது நடக்குமா? அதுமட்டுமல்ல பூமியின் உண்மையான உரிமையாளர் நில ஆக்கிரமிப்பு புகாரளித்தால் நிலம் வாங்கியவரும் மாட்டிக்கொள்வார். இப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் அந்த நபர் சிக்கி இருந்தார்.

பொது அதிகார முகவர் மூலம் பூமி கிரையம் பெறும் போது அனேக விஷயங்களைக் கவனித்தல் அவசியம். இல்லையென்றால் இப்படிப்பட்ட மோசடியில் சிக்கிக் கொள்வீர்கள்.

நிலம் தொடரைப் படித்து விட்டு பலரும் ஆலோசனைகள் கேட்கின்றார்கள். ஆலோசனை கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும் நிலம் சம்பந்தமான ஆவணங்களைப் படித்து ஆலோசனை சொன்னால் அது சரியாக இருக்கும். ஒரு சில சின்ன பாயிண்டுகள் கூட மிகப் பெரிய பிரச்சினையைத் தரலாம். இல்லையெனில் அதிர்ஷ்டத்தையும் தரலாம் என்பதினை ஆலோசனைகள் கேட்போர் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

வேறேதேனும் நிலம் சம்பந்தமான கேள்விகளுக்கு அழையுங்கள் : 96005 77755 (காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மட்டுமே ஆலோசனை தர இயலும்)

தேவைப்படுவோருக்கு கட்டண சேவைகளும் உண்டு.


Thursday, December 12, 2013

கோவையில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா


கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் முள்ளங்காடு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமத்தில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா நடைபெற உள்ளது.

விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழி :
பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குச் செல்லும் வழியில் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு இடதுபுறம் செல்லும் சாலையில் ஆற்றோரத்தில் இருக்கிறது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமம். இங்குதான் விழா நடைபெற உள்ளது.

தேதி : 15.12.2013 

நிகழ்ச்சி நிரல்:
  • காலை 8.00 மணி முதல் 9.30 வரையிலும் கூட்டு தியானம்
  • காலை 9.30 மணி முதல் 10.00 வரை காலைச் சிற்றுண்டி 
  • காலை 10.00 மணி முதல் 12.00 வரை சொற்பொழிவு
  • காலை 12.00 மணி முதல் 1.30 வரை ஒருங்கிணைந்த தியானம்
  • பகல் 1.30 மணி முதல் 4.30 வரை அன்னமளிப்பு
  • மாலை 6.00 மணிக்கு தீபமேற்றுதல்

வித்தியாசமான சூழலில் அமைதியை உணரும் அற்புத தருணத்தை தரக்கூடிய விழாவாக இருக்கும். இந்த ஆன்மீக அனுபவத்தை உணர்ந்திட விழைவோர் விழாவில் கலந்து கொள்ள முயற்சியுங்கள். நிச்சயம் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அடிக்கடி பேருந்துகள் வரும். முள்ளங்காடு ஸ்டாப் என்றுச் சொல்லி இறங்கிக் கொள்ளவும்.

* * *