குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 16, 2013

துண்டு


கிராமத்தானுக்கு துண்டு என்பது நண்பன். வெயிலில் உழும் போது தலைக்கு பாதுகாப்பாகவும், வியர்வையைத் துடைக்கும் போதும், குளிக்கும் போதும் இப்படி துண்டு என்பது அவனுடன் ஒட்டிப் பிறந்த உறுப்பாகவே இருக்கும். இதே துண்டு விழாக்காலங்களிலும், உறவுகளின் வீடுகளிலும் அவனுக்கு மரியாதையை அளிக்கும். இப்படிப்பட்ட துண்டுக்கு வேறொரு முகமும் உண்டு. 

இந்த ஆண்டு இந்தியாவின் பட்ஜெட்டில் விழுந்த துண்டு 5.13 லட்சம் கோடி. மேலும் மேலும் துண்டு அதிகமாகிக் கொண்டே போகிறது. 

கிராமத்தானுக்கு உதவியாய் இருந்த துண்டு, மரியாதையை அளித்த துண்டு இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலாய் மாறிய அவலம் இருக்கிறதே அதற்கு காரணம் யார் தெரியுமா ?அனைவரின் விரலும் சுட்டும் ஒரே ஒரு நபர் “ பாரதப் பிரதமர்”. 

வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் எக்ஸ்ட்ராவைத் தான் துண்டு என்கிறோம். இந்தியாவிற்கு துண்டு எப்படி விழுகிறது என்பதை திரு க்ருமூர்த்தி அவர்கள் துக்ளக்கில் பதிவு செய்திருக்கிறார். 

அரசின் வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் துண்டு நம்பர் ஒன்.

ஏற்றுமதி செய்யும் மதிப்பை விட இறக்குமதி செய்யும் மதிப்பு அதிகமானால் வர்த்தகத்தில் துண்டு விழுகிறது. இது நம்பர் டூ.

நம்பர் ஒன்னுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதில் நம்பர் ஒன் - மானியம். மானியம் கொடுப்பதினால் அரசின் வரவில் இருந்து செலவழிக்க வேண்டி இருக்கிறது. துண்டு விழுகிறது.

நம்பர் டூ - வரி விலக்கு. அரசுக்கு கிடைக்கக் கூடிய வரவில் பெரும் வெடியை வைப்பது இந்த வரிவிலக்குகள். இதனாலும் துண்டு விழுகிறது.

நம்பர் த்ரீ - இலவசம். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அக்மார்க் அயோக்கியத்தனம். இதனாலும் பெரிய துண்டு விழுகிறது.

வரி வசூலில் காட்டப்படும் மந்தம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதால் அதிலும் ஒரு துண்டு விழுகிறது.

ஆகவே நான்கு துண்டுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் பொருளாதாரக் கழுத்தை நெரிக்கிறது. மக்கள் மூச்சுத் திணற ஆரம்பிக்கின்றார்கள். விலைவாசி உயர ஆரம்பிக்கிறது. மக்கள் துன்பத்தில் உழல ஆரம்பிக்கின்றார்கள்.

நம்பர் டூ துண்டுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஏற்றுமதி இறக்குமதியில் வித்தியாசம் ஏற்படும் போது, உலக அளவில் இந்திய ரூபாய்க்கு இருக்கும் மதிப்புக் குறைகிறது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் நாம் குறைவான ரூபாய் கொடுத்தால் போதுமானது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் அதிக ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த அதிக ரூபாயும் துண்டாய் மாறி விடுகிறது.

இப்படி விழுந்து கொண்டே செல்லும் துண்டினைச் சமாளிக்க கடன் வாங்குகிறது அரசு. கடனுக்கு கொடுக்கும் வட்டியும் ஒரு துண்டு. இப்படியே எல்லாத் துண்டுகளும் ஒன்று சேர்ந்து தான் இந்தியாவின் நடப்பாண்டு பற்றாக்குறை 5.13 லட்சம் கோடி ரூபாய் ஆகி விட்டது. 

இந்த துண்டு விழாமல் தடுக்க எஸ்.க்ருமூர்த்தி சில கருத்துக்களை எழுதி இருக்கிறார்.

1. வரியை உயர்த்த வேண்டும்.
2. வரிச்சலுகைகளை நீக்கிட வேண்டும்.
3. ஓட்டுக்காக வழங்கப்படும் இலவசங்களை ஒழித்திட வேண்டும்.
4. மானியங்களை முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தான் இந்தியாவின் கழுத்தை நெறிக்கும் துண்டினை எடுக்க முடியும் என்கிறார் அவர்.

துண்டு எப்பேர்பட்ட வேலைகளைச் செய்கிறது என்று பாருங்கள். நாம் என்னவோ துண்டினை வெகு சாதாரணமான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

 நன்றி : துக்ளக் மற்றும் எஸ்.க்ருமூர்த்தி அவர்கள். (க்ருவிற்கு காரணம் இருக்கிறது)

திரு சுப்புவிற்கு ஒரு கேள்வி விரைவில்

Thursday, December 27, 2012

செப்பிடு வித்தைக்காரனின் கும்கி



( எனது நண்பர் இயக்குனர் கதிரின் ரீமிக்ஸ்- சொய் சொய் பாடல்) 

என் மகளின் பத்து நாள் போராட்டம், நேற்று வெற்றியடைந்தது. வழக்கம் போல அரசாங்கம் (அடியேன்)தோல்வியுற்றது. யானைப் படம் போச்சு, போச்சுன்னுச் சொல்லிச் சொல்லி நச்சரிப்பு தாங்காமல் அழைத்துச் சென்றேன்.

கும்கி படத்தில் யானையை போஸ்டரிலும், விளம்பரத்திலும் இடம்பெற வைத்து, தேர்வு விடுமுறையில் இருக்கும் மாணவர்களைக் கவர்ந்தார் ஞானவேல்ராஜா. இவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. வெறும் இரண்டு கோடி ரூபாயில் வாங்கப்பட்ட அட்டக்கத்தி பதினாறு கோடியைத் தந்தது என்றால் அவரின் சுக்ரதிசையை என்னவென்றுச் சொல்வது? அப்பா, அண்ணன், தம்பி, மாமா என்று ஒரு குடும்பமே “சுக்ரதிசையில்” சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று கோடிகளைக் குவிக்கின்றார்கள். அது அவர்கள் முன்பிறப்பில் செய்த பலன். அனுபவிக்கின்றார்கள். சுக்ரதிசை வந்தால் ரோட்டில் போகிறவன் கூட வீட்டுக்கு வந்து காசைக் கொடுத்து விட்டுப் போவான் என்பார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது எனக்கும்.

’நானும் செத்துருவேன்’ என்றுச் சொல்லும் அல்லியினால், பொம்மன் இழப்பது அவனுக்கு நடையாய் நடந்து சம்பாதித்துப் போட்ட யானை, மாமா, எடுபிடி உண்டியல் ஆகியோரை. எப்போதுமே பெண்களுக்கு இழப்பு அதிகமில்லை. பெரும்பாலும் ஆண்கள் தான் இழக்கின்றார்கள். பெண்களின் சில சொற்கள் ஒருவனை வாழவைக்கும், சிலரை அழித்து விடும்.ஹஸ்தினாபுரத்திலே பாஞ்சாலி தண்ணீர் என்று நினைத்து ஏமாந்து நின்ற துரியோதனனைப் பார்த்து சிரித்த சிரிப்பு, துரியோதனால் பலபேரின் முன்னிலையில் பாஞ்சாலியின் துகிலுரிய வைத்தது. அன்று அவள் அவிழ்த்து விட்ட கூந்தல் துரியோதனா வகையறாவையே அழித்தது. பெண்கள் எப்போதும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒன்றே ஒன்றுதான். பெண்கள் ஆயுதம் போன்றவர்கள். சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் குறுக்கே திரும்பி குத்திக் குதறி விடும். ஜாக்கிரதை நண்பர்களே !

என் மனையாள் படம் பார்த்து விட்டு திரும்பும் போது, ”ஏங்க, ஓங் பேக் என்ற படத்தில் சிறுவன் ஒருவன் யானையுடன் விளையாடுவதை அப்படியே வைத்திருக்கிறார்கள். அப்படத்தைப் பார்த்திருப்பார் போல, உடனே ஒரு ‘ நாட்’ கிடைத்து படத்தை எடுத்து விட்டார்” என்று கூறினாள். அப்படியும் இருக்கலாம். எப்போதுமே நம்மவர்களுக்கு சுயச் சிந்தனை வருவது குறைந்து வருகிறது. கூக்கிள் சிண்ட்ரோமினால் மூளை இறப்பு நோய் வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு இவ்விடத்தில் ஒரு கூடுதல் தகவல். ஆகவே நெட்டில் உலவும் நண்பர்கள் ஜாக்கிரதை.இதற்கென்று தனி வைத்தியம் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

கும்கி ஒன்றுமே இல்லாத வெறுமையான, முழுமையற்ற, விட்டேத்தியான கதை. காட்டுவாசிகளின் வீடுகள் அனைத்தும் செட்டிங்குகள். பச்சைப் பசேலைக் காட்டினால் ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற பிரபு சாலமனின் நினைப்பு பலித்தே விட்டது. கோவில் யானை, காட்டு யானையை விரட்டி அடிப்பதுதான் கதை. அதாவது சொங்கி ஒருவன் வீரனை வெல்வது. கதைக்களமும், காட்சிப்படுத்தியதும் வித்தியாசமானது என்பதால் படம் போரடிக்கவில்லை என்பதுதான் உண்மை. மற்றபடி எரிச்சல் தரும் கிளைமேக்ஸ். முழுமையைத் தராத படமாக்கம். 

அதென்னவோ தெரியவில்லை, பிறரை அடிப்பதும், கேவலப்படுத்துவதும் தான் நகைச்சுவை என்பதாய் அனைத்து சினிமாப்படங்களும் வருகின்றன. கவுண்டர் மேனியா போய் அரை நூற்றாண்டு காலம் ஆகி விட்டது. இன்றைக்கும் இயக்குனர்கள் இப்படிப்பட்ட லூசுத்தனமான நகைச்சுவைக் காட்சிகளை படமாக்குவது எரிச்சலோ எரிச்சல்.

ஹீரோ யானைமீது வருகிறார். காதல் வந்தால் பைத்தியம் போல குதிக்கிறார். தலையை ஆட்டுகிறார். கையை விரித்து விரித்து காதலை வானத்தைப் பார்த்துச் சொல்கிறார். காதல் வேதனையில் முள்ளில் கையை வைத்து அழுத்தி ரத்தம் வர வைக்கிறார். (அதென்னவோ தெரியவில்லை, சினிமா காதலர்கள் கையை மட்டும் அறுத்துக் கொள்கிறார்கள்). 

அல்லிக்கு பின்புறம் அழகாவே இல்லை. சப்பைக் குண்டி ஹீரோயின். மூக்கு புடைத்து, உதடு புடைத்து இருக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறார். எத்தனையோ படங்களில் பார்த்திருக்கும் ஹீரோயின் போலவே தண்ணீரில் மூழ்குகிறார். பாடுகிறார். சிரிக்கிறார். சிணுங்குகிறார்.கொடுமை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஹீரோயின்கள் இப்படியே நடிப்பார்களோ தெரியவில்லை. ஹீரோயின் சுந்தரபாண்டியனில் கொஞ்சம் முற்றிப் போய் இருக்கிறார். காதல் வருவதும், அதைச் சொல்வதும், பின்னர் அதை மறுப்பதும் எரிச்சலைத் தரும் படமாக்கம். பொம்மனின் மாமாவாக வரும் தம்பி ராமையா மைண்ட் வாய்சிலேயே பேசிக் கொண்டு படம் நகர உதவி செய்கிறார்.

சிவாஜியின் பையனுக்கு முதல் படம் சூப்பர் ஹிட். பாடல்கள் அனைத்தும் படத்தில் ஒட்டாமல் தனியே நிற்கின்றன. படத்தின் களத்திற்கும் பாட்டுக்கும் இசைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. சிந்து பைரவி படத்தில் சிவகுமார் கர் நாடக சங்கீத மேடையில் வெஸ்டர்ன் மியூசிக் பாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அப்போது புரியும் நானென்ன சொல்ல வருகிறேன் என்று.

ஒன்றுமே இல்லாத கதை. எல்லாம் இருக்கிறது என்பதாய் காட்டும் செப்பிடு வித்தையைத்தான் பிரபு சாலமன் கும்கியில் செய்திருக்கிறார். இன்னும் 100 ஆண்டுகள் ஆக வேண்டும் தமிழர்களின் ரசனை மாற. 

Monday, December 24, 2012

மூன்று வகை உணவுகள் எது?


முதல் வகை உணவு :- ஆயுளை வளர்ப்பது, மனவலிமை அளிப்பது, உடலுக்கு தின்மை தருவது, நோய் அளிக்காதது, சுகம் தருவது, ரசமாய் இருப்பது, குழம்பாய் இருப்பது, நெய் கலந்தது, மனதுக்கு இதம் தருவது

இரண்டாம் வகை உணவு :- கசப்பு, புளிப்பு, உப்பு, உலர்ந்தது, சூடு, காரம் கொண்டவை. பசி வராமல் தடுப்பது, குடலுக்கு புண் அளிப்பது.

மூன்றாம் வகை உணவு :- வேகாதது, பழையது, குழம்பில்லாமல் வற்றியது, கெட்ட வாடை, மிச்சம் மீதியைச் சாப்பிடுவது.

சாத்வீக குணத்துடையவனுக்கு உரியது முதல் வகை உணவு. ராஷச குணத்துக்குடையவன் உரியது இரண்டாவது. மூன்றாவது முட்டாளுக்கு (தாமச) உரியது என்கிறான் கண்ணன்.

கண்ணன் கீதையிலே சொல்கின்றான் இப்படி என்று எழுதுகிறார் கண்ணதாசன். ( நன்றி : கண்ணதாசன்)

பகவத் கீதையின் பதினேழாவது அத்தியாயத்தில் 8,9,10 ஸ்லோகங்களில் மேற்கண்ட உணவுகள் பற்றிக் “கண்ணன்” அருளியிருக்கின்றான். 

அன்பு நண்பர்களே, நல்ல உணவை கண்டுபிடித்து உடலுக்கு நன்மை தரும் உணவை மட்டும் உண்டு, தன்னையே நம்பி வந்திருக்கும் மனைவிக்கும், உங்களுக்கு குழந்தையாய் அவதரித்து இருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்து உதவுங்கள்.

பேக்கிங் உணவுகள், ஹோட்டல் உணவுகளை அறவே தவிருங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் கோவையின் ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன. ஹாஸ்பிட்டல்களில் டாக்டரைப் பார்க்க மூன்று மணி நேரம் காத்திருக்கும் அளவுக்கு கூட்டம் வழிகின்றன. மருத்துவர்கள் அருவியாய்க் கொட்டும் பண மழையில் நனைகின்றார்கள். உங்கள் உடம்புகளுக்குள் நோய்க் கிருமிகள் புகுந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்கின்றன. எனது பிரியத்துக்கு உரிய சக ஆன்மாக்களை தங்களின் உடம்புகளில் தாங்கி வந்திருக்கும் அழிவற்ற ஆன்மாக்களை உடைய உள்ளங்களே, கொஞ்சம் யோசியுங்கள்.

ஹோட்டல்கள் உங்களுக்கு சுவையுடன் நோயையும் சேர்த்து தருகின்றன. காசைக் கொடுத்து வம்பினை விலைக்கு வாங்காதீர்கள். 

Tuesday, December 18, 2012

ரசம்



தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத உணவு என்றால் முதலிடம் பிடிப்பது ரசம். தமிழர் உணவு முறை மருந்து சார் உணவாக, உடலுக்கு எந்த வித தீங்கும் தராத இருந்து வந்தது. இதுகாறும் பல கிராமங்களில், பண்டைய வாழ்க்கைமுறையை கடைபிடித்து வாழும் குடும்பங்களில் உணவுகள் என்றும் மாறாமல் ஒரே வகையானதாக சமைக்கப்பட்டு வருகின்றன.

நவீன கலாசாரத்தின் பின்விளைவுகள் ஏற்படுத்திய பல தாக்கங்கள் தமிழர் உணவுகளுக்கும் நுழைந்து விட்ட காரணத்தால் தமிழர்கள் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் பிடியில் சிக்கியுள்ளார்கள். இந்தச் சர்க்கரை நோய் உடம்பிலிருந்து முழுவதுமாய் விரட்டி அடிக்க கை வைத்திய முறை இருக்கிறது. உடனடி நிவாரணம் மட்டுமே இக்கால மனிதர்கள் விரும்புகின்றார்கள். ஜலதோஷம், சளி, இருமல், நாட்பட்ட காச நோய்க்கு வீட்டிலேயே செய்யும் அருமையான பல வைத்திய முறைகள் இருக்கின்றன. அதுமட்டுமா என் அம்மா குழந்தை பிறக்காத பெண்களுக்கு ஒரே ஒரு முறை மருந்து கொடுப்பார். உடனடியாக கரு உண்டாகி விடும். இதெல்லாம் கை வைத்திய முறையில் செய்வது. குழந்தை உண்டாக இப்போதெல்லாம் எத்தனையோ லட்சங்களைச் செலவழிக்கின்றார்கள். 

படித்து முடித்து வேலை செய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது, உடம்பையும் மனதையும் பாதுகாத்திட எந்த  கல்வியும் தமிழரிடையே இல்லை. அக்காலத்தில் குருகுலவாசத்தில் இறை வணக்கம், தியானம், யோகா, உடலுழைப்புச் சார்ந்த வாழ்வியல் கல்வி முறைகளை பிரதிபலன் பாராது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வந்தார்கள். பணம் சார்ந்த வாழ்வியல் நவீன கலாச்சாரத்தின் தாக்கத்தில் ஆசிரியர்களும் மாறி விட்டார்கள். கல்வி முறையும் மனிதனை எந்திர மயமாக்கி விட்டது. ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் இயந்திர பாகங்கள் தேய்வடைந்து ஒரு நாள் தொழிற்சாலையை விட்டு குப்பைக்கு அனுப்பப்படுவதைப் போல இன்றைய மக்கள் பணியிடங்களில் இருந்து குப்பையைப் போல வெளித்தள்ளப்படுகின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் உணர்ந்து கொள்வதே இல்லை. இது தான் பணத்தின் மீதான மாயை எனப்படுவது.

இப்படிப்பட்டவர்களிடமிருக்கும் மிச்ச சொச்ச பணத்தையும் கார்பொரேட் சாமியார்கள் பயிற்சிகள் கொடுக்கிறேன் பேர்வழி என்று உறிஞ்சிக் கொள்கின்றார்கள். சில முதியவர்கள் தங்கள் பிள்ளைகளை தொழிற்சாலையில் பணிசெய்யும் எந்திரங்களாக மாற்றி அவர்கள் மூலம் பெறும் பணத்தின் வசதியின் காரணமாய் தனிமைப்படுத்தப் பட்டு முடிவில் எந்திரமாகவே மாறிப் போன பிள்ளைகளின் ஆதரவு இன்றி இது போன்ற சாமியார்களின் வசீகரப் பிடியில் சிக்கி இருக்கும் சொத்துக்களையும் அவர்களின் பெயரில் எழுதி வைத்துச் சென்று விடுகின்றார்கள்.

சில தனியார் சாமியார்களின் ட்ரஸ்டுகள் எப்படிக் கோடிகளைக் குவிக்கின்றார்கள் தெரியுமா? தொண்டு என்றுச் சொல்லி சில பல அடிமுட்டாள்களை சிஷ்யர்களாக்கி சம்பளமே கொடுக்காமல் சோறு மட்டும் போட்டு தங்கள் நிறுவன வேலைகளை செய்து கொள்வதால் அப்படிச் சேரும் பணமே பெரும் கோடிகளைக் குவித்து விடுகின்றன. நானும் ஒரு காலத்தில் இப்படியான ஒரு சூழலில் நான்காண்டுகள் எனது காலத்தைச் செலவழித்திருக்கிறேன். 

சரி அது அவர்களின் பாடு !

ரசத்திற்கு வந்து விடுகிறேன். கடுகு, சீரகம், மிளகு, புளி, பெருங்காயம், பூண்டு, உப்பு ஆகிய ஏழு பொருட்களின் மிகச் சிறப்பான கூட்டுக் கலவையே ரசம்.  இந்த ரசத்தின் வேலை ஜீரணத்திற்கு உதவுவது. இப்போதைய அவசர உலகத்தில் எவரும் உணவை மென்று தின்பதே இல்லை. உமிழ் நீரில் இருக்கும் என்சைம்கள் உணவை பற்களால் நன்கு மெல்லும் போது குழம்பாய் மாற்றி ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றுக்குள் செல்லும் உணவின் சத்தை எளிதில் பிரித்து சேர வேண்டிய இடங்களுக்குள் வயிறு செலுத்தி விடுகிறது. ஆனால் இப்போதைய மக்கள் பற்கள் செய்யும் வேலையை வயிற்றினைச் செய்ய வைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு இந்த ரசம் பெரும் உதவிகரமாய் இருக்கிறது. மென்று தின்னாமல் கடித்து விழுங்குகின்றார்கள். அதன் காரணமாய் வயிறு படாதபாடு படுகின்றது. 

எந்த நாட்டிலும் உணவே மருந்தாய் உட்கொள்வது கிடையவே கிடையாது. ஆனால் பாரம்பரியமும், பழைமையும் மிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையே உணவே மருந்து என்று காயத்தை நன்கு பாதுகாத்து வந்தது. கிராமத்தில் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண் நகரத்திற்குச் சென்றால் தன்னையே ஒரு மாதிரியாக மாற்றிக் கொண்டு அவ்வாழ்க்கையை கிராமத்திற்குள் வந்து காட்டி பெருமையடைவது எப்படி ஒரு நகைச்சுவைக் காட்சியாய் இருக்குமோ அந்தளவுக்கு தமிழர்களின் உணவும் இப்போது மாறிப் போய் விட்டது. அது காலத்தின் கொடுமை அல்ல. மனிதர்களின் மடைமை என்றுதான் சொல்ல வேண்டும்.

Thursday, December 13, 2012

தாரா என்ற அழகி


தனக்குத் துன்பம் ஏன் வருகிறது? என்று யாரும் சிந்திப்பதே இல்லை. இறைவா, என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறாய் என்று இறைவனைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளைத் தன்னை நோக்கி ஒருவன் கேட்டுக் கொண்டான் என்றால் துன்பத்தின் ஆரம்ப விதைகள் என்ன என்று கண்டுகொள்ளலாம். ஆனால் எவரும் அவ்வாறு செய்வதே இல்லை.

ஏதோ இறைவன் வேறு வேலையே இல்லாமல் இவனுக்கு மட்டும் துன்பங்களை கொடுத்துக் கொண்டே இருப்பதாக ஒவ்வொருவருக்கும் நினைப்பு. அவர் என்னதான் செய்வார் ? பாவம் மனிதனை விட படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

தன் குழந்தைகள் தான் செய்யும் செயல்களாலே துன்பங்களை வரவழைத்துக் கொண்டு அவஸ்தைப்படுவதைக் கண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டிருப்பவர் அவர்தான்.

ரேஸ்கோர்ஸில் இருக்கும் மசானிக் குழந்தைகள் மருத்துவமனை அருகில் ஒரு வேன் நின்றிருந்தது. வேன் உள்ளே கருப்பாய் காக்கிச் சட்டை போட்ட மனிதர் ஒருவர் அழகான குழந்தை ஒன்றினை வைத்துக் கொண்டிருந்தார். மனதில் சந்தேகம் எழ அவர் அருகில் சென்று யார், என்ன என்ற கேள்விகளைக் கேட்டேன்.

குறைப்பிரவசமாய் பிறந்த அக்குழந்தையை யாரோ ஒரு பெண் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டுச் சென்று விட்டாராம். யாரோ ஒரு நபர் அக்குழந்தையைக் கண்டுபிடித்துப் பார்த்த போது, உயிர் மட்டும் இருந்ததாம். யார் யாரிடமோ சென்று தாய்ப்பால் வாங்கி வந்து அதற்கு ஊட்டி விட்டு ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் விடுதியில் கொண்டு வந்து விட்டு விட்டாராம். அக்குழந்தையை கண்ணும் கருத்துமாய் பார்த்து வளர்த்து வருகின்றார்கள். இப்படியும் சில பெண்கள் இருக்கின்றார்கள். இதை விட கொடுமையான மனம் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அந்த நிறுவனம் மேலும் மேலும் வளர்ந்து இது போன்ற மக்கட் சேவையை ஆற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தாய் என்பவளுக்கு ஏன் இப்படிப்பட்ட முடிவு எடுக்கத் தோன்றுகிறது என்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால் சமூகக்கட்டுப்பாடுகள் நீங்கிய ஒரு சூழலில் அவர் வாழ்ந்து வருவது என்ற ஒரு காரணத்தைத் தவிர வேறு எதையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயகட்டுப்பாடு அத்துடன் சமூகக் கட்டுப்பாடு வேண்டும் என்பது எனது முடிவு. சமூகத்திலிருந்து பிரிந்து தனியாய் வாழும் மனிதர்களால் தான் இப்படிப்பட்ட கொடூர முடிவுகளை எடுக்க நேரிடும்.

மேல்தட்டு மக்களிடம் மட்டுமே காணப்படும் இவ்வகையான கொடூர மனப்பான்மை கீழ்த்தட்டு மக்களிடமும் மிகுந்து வருவது வேதனை தருகிறது. சமூகம் சிதைக்கப்பட்டு விட்டது என்பதையே மேலே இருக்கும் தாராவின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.

சமூகம் என்பது உறவு, உற்றார் என்று கொள்க.

Tuesday, December 4, 2012

ரனதந்திராவில் ஹரிப்ரியாவின் நீச்சலுடை காட்சிகள் புலம்பும் இயக்குனர்




சிலந்தி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய எனது நெருங்கிய நண்பர் ஆதியின் அடுத்த படம் கன்னடத்தில் ரனதந்திரா. திரு ரமேஷ் அவர்களின் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அப்படத்தின் திரைப்பட ஷூட்டிங் பெங்களூரில் விறுவிறுப்பாய் நடந்து வருகிறது. 

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும், டாக்டர் ராஜ்குமாரின் மருமகனுமான விஜய ராகவேந்திரா ஹீரோவாகவும், தமிழ் படங்களில் நடித்த ஹரிப்பிரியா ஹீரோயினாகவும் நடிக்கின்றார்கள்.

ஷூட்டிங்கில் ஹரிப்பிரியாவின் நீச்சலுடைக் காட்சிகளை வெகு நேர்த்தியாய் அதற்கென்றிருக்கும் பிரத்யேகமான கேமராவினால் ஷூட் செய்திருக்கின்றார். 

"ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்தேன் சார்” என்றார். 

”பின் ஏன் சோகமாய் பேசுகின்றீர்கள்?” என்றேன்.

”அட அத ஏன் சார் கேட்கின்றீர்கள்?”

“ ஹரிப்பிரியா அந்த சீனைப் பார்த்து விட்டு, புரோமோவில் வெளியிடக்கூடாது என்று அக்ரிமெண்ட் போட்டுடுட்டாங்க சார் !” என்றார்.

தான் பெற்ற இன்பம் ரசிகர்கள் பெற வேண்டுமென்ற ஆவல் இயக்குனருக்கு. 

ஆனால் நடந்ததோ வேறு !

மொத்தத்தில் ரசிகர்களுக்கு ” வடை போச்சே !”






Wednesday, November 28, 2012

தர்மம் பேசுகிறது - ஒன்று



அம்புஜம் என்றொரு பெண்மணி. எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு ஒரு பெண், சற்றே பெருத்த சுமாரான அழகுடைய பெண். அம்புஜத்தின் கணவர் இருக்கும் இடம் தெரியாது. தன் பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளையைத் தேடினார்கள். அவர் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குனர். நல்ல குடும்பம். வெகு சுமாரான குடும்பத்தினைச் சேர்ந்த அம்புஜம் மகள் அப்பெரிய இடத்திற்கு மருமகளாய் சென்றார். வாழ்க்கை வெகு அழகாய்ச் சென்று கொண்டிருக்கிறது. அம்புஜமும், அவள் கணவனும் மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்புஜம் எங்குச் சென்றாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருப்பவள். அம்புஜத்தின் கணவரோ பேசுவது என்றால் என்ன என்று கேட்பவர். அதிர்ந்த சத்தம் வராது. அந்தளவிற்கு மென்மையானவர். அம்புஜத்தினால் அவர்கள் உறவினர்கள் வீட்டில் ஒரு பிரச்சினையும் வராது. சென்ற தடம் கூட தெரியாமல் வீடு திரும்பும் வழக்கமுடையவர் அம்புஜம்.

இப்படியான அம்புஜத்தின் வாழ்விலே துன்பத்தின் சாயல் கொஞ்சம் கூட படியவில்லை. சாதாரண குடும்பத்தினைக் கட்டிக் காத்து, வேறு எவர்களின் கோபத்திற்கோ, வேறு எந்த வித பிரச்சினைக்கோ ஆளாகாமல் வாழ்ந்து வரும் அம்புஜம் எப்போதும் மகிழ்வாகத்தானே வாழணும்? அவர் அப்படித்தான் வாழ்கிறார்.

தர்மம் என்பது சத்தியம். சத்தியம் என்பது உண்மை. உண்மை என்பது நன்மை. நன்மை என்பது பிறருக்கு தீங்கு நினையாமை.

மகாபாரதத்திலே தண்ணீர் என்று கருதி தரையில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்துச் சிரித்தாள் பாஞ்சாலி. ஆன்றோர்களும் சான்றோர்களும் நிரம்பிய அரசவையிலே பலர் பார்க்க அவளை அவமானப்படுத்தினான் துரியோதனன். ஒரு சாதாரண கேவலச் சிரிப்பிற்கே கடவுள் இத்தனை பெரிய தண்டனையைக் கொடுக்கின்றான் என்றால் பெரிய தவறுகளுக்கு கடவுள் எத்தனை பெரிய தண்டனைகளைக் கொடுப்பான்?

இப்படித்தான் ஒருவர் பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வந்தார். அவரின் கதை என்ன? ..... ( அடுத்த பகுதியில் )

Monday, November 26, 2012

இயல்பாய் இருங்களேன்

மனித சமூகம் ஈகோவினால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எது நல்லது, எது கெட்டது என்பதை எந்த வித முன் யோசனையின்றி தற்போதைய மனித குலம் முடிவெடுக்கிறது. பிறகு அவஸ்தைப் படுகின்றார்கள்.

சாலைகளில் பாருங்கள். வேடிக்கையாக இருக்கும். புதுச் சட்டை போட்டாலோ, ஹேர் ஸ்டைல், செல்போன், கார், பைக் வாங்கினால் என்னவோ உலகே அவர்களையே உற்று உற்றுப் பார்ப்பதாய் நினைத்துக் கொண்டு சேஷ்டைகள் செய்து கொண்டுச் செல்வார்கள். அவரவருக்கு அவரவர் வேலை. நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்களாவது இவர்களைப் பார்ப்பதாவது? இதாவது பரவாயில்லை.

ஒரு கோடி கொடுத்து கார் வாங்குபவன் எதற்கு வாங்குகிறான் என்று நினைக்கின்றீர்கள்? அவனைச் சுற்றி இருப்போர் அவனைப் பார்த்து பொறாமைப் பட வேண்டும் என்பதற்காகத்தான் அவன் அந்தக் காரை வாங்குகிறான். பிறர் தன்னை உயர்த்திப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரும்பான்மையான மனிதர்கள் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த் ஈகோவினால் தான் பிராண்டட் கம்பெனிக்காரர்கள் கோடிகளைக் குவிக்கிறார்கள்.

உங்கள் வீட்டில் என்ன டிவி இருக்கிறது? எங்கள் வீட்டில் எல் ஈ டி டிவி இருக்கிறது என்று பெருமையடித்துக் கொள்வார்கள். அந்த எல் ஈ டி கொஞ்ச நாள் கழித்து குப்பையாகி வேறு ஒரு டிவி மார்க்கெட்டில் வந்து விடும். டிவி கம்பெனிக்காரர்கள் புதிய புதிய பொருட்களாய் விற்று சம்பாதிப்பார்கள். வாங்குபவர்களுக்கு காசும் போய்  எல்லாம் போய் விடும்.

நேற்றைய நீயா நானாவில் எதிர்கால சந்ததிகளுடன் பாக்கெட் மணி பற்றிப் பேசினார்கள். அதில் பேசிய எந்த ஒரு இளைஞனும், இளைஞியும் படிப்பைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நண்பர்கள் என்பதைத் தவிர அவர்கள் பெரிதாய் வேறு எதையும் சொல்லவில்லை.

எப்படிப்பட்ட இளைஞர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்த்த போது வேதனையாக இருக்கிறது.

நோக்கியா ஹெட் போன் வாங்கினால் அதைக் காதில் மாட்டிக் கொண்டு அலப்பறை செய்வது என்று பிறர் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இயல்பு மாறி விடுகின்றார்கள்.

இயல்பாய் இருந்தால் என்ன? குடியா முழுகிப் போய் விடும்?

பெரும்பான்மையான மக்கள் தனக்கென வாழாமல் பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காக வாழ்கிறார்கள். இப்படியான வாழ்க்கை முடிவில் வெற்று வாழ்க்கையைத்தான் தரும்.

பத்தாயிரம் ரூபாய் ஷூ போட்டால் தான் சமூகம் உங்களை மதிக்கும் என்று எவராவது நம்பினால் அதை விடக் கேனத்தனமானது எதுவும் இல்லை.

கீழே இருக்கும் இரண்டு படங்களில் உலகம் இன்றும் யாரை நினைவில் வைத்து வணங்கி வருகிறது என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நிதர்சனம் புரியும். பகவான் ரமணரிடம் ஒரு கோவணம் தான் இருக்கிறது. ஆனால் பாகவதரிடம்?

( ரமண மகரிஷி )


(தியாகராஜ பாகவதர்)


Wednesday, November 7, 2012

பாலத்தின் மீது வீடு கட்டாதே


“என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன். ஸ்திரீயானவள், சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்” - ஆதியாகமம் 3-12-13 பைபிள்




பாவம் செய்தோரே பரலோகப்பிதாவின் முன்னே மண்டியிட்டு பிரார்த்தியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் பலனாய் துன்ப உலகில் துயருரும் அனைவரையும் அவர் விடுவிப்பார். 

விடுதிகளின் அறைகளூடே தங்கிச் செல்லும் யாத்ரீகர்கள் போலே பிரசங்கங்களின் முடிவில் காசு மழை கொட்டும். கொட்டும். கொட்டும்.

பாவங்களை மன்னிப்பாரா பரிசுத்த ஆவியானவர்? சிலுவை பதில் சொல்கிறது. ஏனப்பா இயேசு சிலுவையில் அறையப்பட்டார்?

ஆதாம் - விவேகம், ஏவாள் - உணர்ச்சி. 

முதுகுத்தண்டை திருப்பி போட்டுப் பார்! 

மரத்தின் இலைகள் முதுகுத்தண்டின் பாதி வரை தொங்குகின்றது. கனியைப் பார். அதைப் புசிக்க விடாமல் செய்தது யார்? 

உணர்ச்சியின் பிடியிலே சிக்கிய ஏவாளா?

முள்ளம் தண்டினூடே ஓடும் ஆற்றல் அணுவை விட உச்சமானது. அக்கனியைப் புசித்தார்கள் புத்தரும் ஏசு நாதரும்.

ஏதன் தோட்டத்தின் வாயிலை அடைத்தது யார்? பாம்பு ! 

நெளியும் பாம்பின் பிடியிலே மனிதர்கள். பாம்பு தன் உடம்பால் சுற்றிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாயா உலகின் மாயையின் காலடியிலே கனியைப் பற்றிய புரிதல் இன்றி ஆப்பிளை வெட்டி வெட்டி முழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். கனி தொங்கிக் கொண்டே இருக்கிறது. தோட்டம் பராமரிப்பின்றி கிடக்கிறது.

அவன் காத்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் எவரும் அவரிடம் எதுவும் கேட்பதும் இல்லை. அவரைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை.

பாலத்தின் மீது வீடு கட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். பாலம் என்பது கடக்கத்தானே ஒழிய தங்கி விடும் இடம் அல்ல.

- கோவை எம் தங்கவேல்

Thursday, October 11, 2012

காய்கறிகளில் விஷத்தன்மையை நீக்குவது எப்படி?

கறிவேப்பிலை, மிளகாய், பசலைக்கீரை, கத்தரி, வெண்டை, புடலை போன்றவற்றின் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் படிந்திருக்கின்றன. இம்மருந்துகளை நீக்கி விட்டு உணவாகச் சமைத்தால் தான் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வரக்கூடிய எழுதவே முடியாத பல்வேறு வகை நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

சாதாரண தண்ணீரில் கழுவி விட்டு காய்கறிகளைச் சமைப்பது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதுக்கு ஒப்பாகும்.

பூச்சுக் கொல்லி விஷத்தன்மையை எப்படி நீக்குவது?

மஞ்சள் தண்ணீர் அல்லது வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்கறிகளை நன்கு அமிழ்த்தி ஊற விட்டு பின்னர் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்யும் போது காய்கறிகளின் மீது படிந்திருக்கும் 95 சதவீத மருந்து நீக்கப்படும் என்று கேரளாவைச் சேர்ந்த தனியார் அமைப்பின் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா)

பணக்காரர்களின் அரிசியான பாசுமதியில் மிக அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து இருக்கிறது என்கிறது அவ்வறிக்கை.

சுகாதாரத் துறையின் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதில் மட்டுமே வாழ்க்கை என்பதாய் வாழ்வதால், இது போன்ற மக்களைக் கொல்லும் நஞ்சுகளில் இருந்து தப்பிப்பது என்பது முடியாத ஒன்று.

கேஎஃப்சி சிக்கனில் புழு இருந்தது என்று திருவனந்தபுரத்தின் செய்தி. உலகெங்கும் கடை விரித்திருக்கும் கேஎஃப்சி இது போல அமெரிக்காவில் புழு சிக்கனை விற்றிருந்தால் இந்த நேரம் கடை என்னவாகி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கடையை சோதனை செய்யக்கூட கடைச் சிப்பந்திகள் அனுமதிக்கவில்லையாம்.

நேற்று திரு.குருமூர்த்தியின் கட்டுரை ஒன்றினை வாசித்தேன். சேமிக்கும் வழக்கமுடைய நம் இந்திய மக்களை திரு மன்மோகன் சிங் அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் சொல்கிறார், இதைத்தான் புது பொருளாதார வளர்ச்சி என்கிறார் என்று குருமூர்த்தி சொல்கிறார். காலம் காலமாய் ஒரே வழக்கமுடைய மக்களை திசை திருப்பி அமெரிக்கர்களைப் போல பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைத்து மக்களை கடன்காரர்களாக்கி, குடும்பங்களை தனிமைப்படுத்தி, சமூக கட்டமைப்பையே உடைத்துப் போடும் அளவுக்கு திரு மன்மோகன் சிங்கின் பொருளாதார சிந்தனை இருக்கிறது என்கிறார் அவர்.

அதுமட்டுமல்ல அமெரிக்காவில் திவாலான மிகப் பெரிய வங்கிகளைப் போல இந்தியாவிலும் உருவாக்கி விட வேண்டுமென்ற திரு.ப.சிதம்பரத்தின் கொள்கையை இப்பொருளாதார சித்தாந்தம் ஊக்குவிக்கின்றது என்றும், இதை நோக்கித்தான் திரு.ப.சி அவர்கள் சென்று கொண்டிருக்கின்றார் என்கிறார் அவர்.

கோவையில் பெரிய பணக்காரர்கள் எல்லோரும் பல சிலிண்டர் கனெக்‌ஷன்களை வைத்துக் கொண்டு, தங்கள் கார்களுக்கு மானியச் சிலிண்டர்களை பயன்படுத்தி உல்லாச வாழ்க்கை வாழ்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதைப் போல அமைச்சர்களும் பயனடைகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றே. இதைக் காரணமாய் வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய சிலிண்டர்களைக் குறைப்பது பெரிய திருடர்களை ஒழிக்க வீடுகளே இல்லாமல் ஆக்குவது போன்றது. இது  என்னவிதமான பொருளாதார வளர்ச்சியோ தெரியவில்லை.

இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் போலி அடையாள அட்டை, ரேஷன் அட்டைகளை களைவது வெகு எளிதானது. அதைச் செய்து போலிகளைக் களைந்து விடாமல் இப்படி மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது மக்கள் விரோத சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கோவையில் மின்சாரம் வரும் நேரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. காலையில் 6-8, மதியம் 12-2, இரவு 6-7, 9-10, 11-12, 1-2, 4-5. இப்படி ஒரு மின்சார சப்ளையை உலகத்தில் வேறு எங்கும் மக்கள் அனுபவித்தே இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் மின்வெட்டு சரிசெய்யப்படவில்லை. அல்லது ஒழுங்கு படுத்தக்கூட இல்லை. இப்படியே சென்றால் தமிழர்கள் பீகாரிகள் போல அகதிகளாய் மாறி விடும் சூழ் நிலை வந்தே தீரும். அதற்குள் ஆட்சியாளர்கள் மின்வெட்டினை ஒழுங்குபடுத்தி விட வேண்டும். ஆனால் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

ஓட்டுப்போடும் போது வாங்கிய காசுக்கு பலனை அனுபவித்துத்தானே தீர வேண்டும்? தமிழகம் அனுபவிக்கின்றது.