குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 18, 2012

ரசம்



தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத உணவு என்றால் முதலிடம் பிடிப்பது ரசம். தமிழர் உணவு முறை மருந்து சார் உணவாக, உடலுக்கு எந்த வித தீங்கும் தராத இருந்து வந்தது. இதுகாறும் பல கிராமங்களில், பண்டைய வாழ்க்கைமுறையை கடைபிடித்து வாழும் குடும்பங்களில் உணவுகள் என்றும் மாறாமல் ஒரே வகையானதாக சமைக்கப்பட்டு வருகின்றன.

நவீன கலாசாரத்தின் பின்விளைவுகள் ஏற்படுத்திய பல தாக்கங்கள் தமிழர் உணவுகளுக்கும் நுழைந்து விட்ட காரணத்தால் தமிழர்கள் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் பிடியில் சிக்கியுள்ளார்கள். இந்தச் சர்க்கரை நோய் உடம்பிலிருந்து முழுவதுமாய் விரட்டி அடிக்க கை வைத்திய முறை இருக்கிறது. உடனடி நிவாரணம் மட்டுமே இக்கால மனிதர்கள் விரும்புகின்றார்கள். ஜலதோஷம், சளி, இருமல், நாட்பட்ட காச நோய்க்கு வீட்டிலேயே செய்யும் அருமையான பல வைத்திய முறைகள் இருக்கின்றன. அதுமட்டுமா என் அம்மா குழந்தை பிறக்காத பெண்களுக்கு ஒரே ஒரு முறை மருந்து கொடுப்பார். உடனடியாக கரு உண்டாகி விடும். இதெல்லாம் கை வைத்திய முறையில் செய்வது. குழந்தை உண்டாக இப்போதெல்லாம் எத்தனையோ லட்சங்களைச் செலவழிக்கின்றார்கள். 

படித்து முடித்து வேலை செய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது, உடம்பையும் மனதையும் பாதுகாத்திட எந்த  கல்வியும் தமிழரிடையே இல்லை. அக்காலத்தில் குருகுலவாசத்தில் இறை வணக்கம், தியானம், யோகா, உடலுழைப்புச் சார்ந்த வாழ்வியல் கல்வி முறைகளை பிரதிபலன் பாராது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வந்தார்கள். பணம் சார்ந்த வாழ்வியல் நவீன கலாச்சாரத்தின் தாக்கத்தில் ஆசிரியர்களும் மாறி விட்டார்கள். கல்வி முறையும் மனிதனை எந்திர மயமாக்கி விட்டது. ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் இயந்திர பாகங்கள் தேய்வடைந்து ஒரு நாள் தொழிற்சாலையை விட்டு குப்பைக்கு அனுப்பப்படுவதைப் போல இன்றைய மக்கள் பணியிடங்களில் இருந்து குப்பையைப் போல வெளித்தள்ளப்படுகின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் உணர்ந்து கொள்வதே இல்லை. இது தான் பணத்தின் மீதான மாயை எனப்படுவது.

இப்படிப்பட்டவர்களிடமிருக்கும் மிச்ச சொச்ச பணத்தையும் கார்பொரேட் சாமியார்கள் பயிற்சிகள் கொடுக்கிறேன் பேர்வழி என்று உறிஞ்சிக் கொள்கின்றார்கள். சில முதியவர்கள் தங்கள் பிள்ளைகளை தொழிற்சாலையில் பணிசெய்யும் எந்திரங்களாக மாற்றி அவர்கள் மூலம் பெறும் பணத்தின் வசதியின் காரணமாய் தனிமைப்படுத்தப் பட்டு முடிவில் எந்திரமாகவே மாறிப் போன பிள்ளைகளின் ஆதரவு இன்றி இது போன்ற சாமியார்களின் வசீகரப் பிடியில் சிக்கி இருக்கும் சொத்துக்களையும் அவர்களின் பெயரில் எழுதி வைத்துச் சென்று விடுகின்றார்கள்.

சில தனியார் சாமியார்களின் ட்ரஸ்டுகள் எப்படிக் கோடிகளைக் குவிக்கின்றார்கள் தெரியுமா? தொண்டு என்றுச் சொல்லி சில பல அடிமுட்டாள்களை சிஷ்யர்களாக்கி சம்பளமே கொடுக்காமல் சோறு மட்டும் போட்டு தங்கள் நிறுவன வேலைகளை செய்து கொள்வதால் அப்படிச் சேரும் பணமே பெரும் கோடிகளைக் குவித்து விடுகின்றன. நானும் ஒரு காலத்தில் இப்படியான ஒரு சூழலில் நான்காண்டுகள் எனது காலத்தைச் செலவழித்திருக்கிறேன். 

சரி அது அவர்களின் பாடு !

ரசத்திற்கு வந்து விடுகிறேன். கடுகு, சீரகம், மிளகு, புளி, பெருங்காயம், பூண்டு, உப்பு ஆகிய ஏழு பொருட்களின் மிகச் சிறப்பான கூட்டுக் கலவையே ரசம்.  இந்த ரசத்தின் வேலை ஜீரணத்திற்கு உதவுவது. இப்போதைய அவசர உலகத்தில் எவரும் உணவை மென்று தின்பதே இல்லை. உமிழ் நீரில் இருக்கும் என்சைம்கள் உணவை பற்களால் நன்கு மெல்லும் போது குழம்பாய் மாற்றி ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றுக்குள் செல்லும் உணவின் சத்தை எளிதில் பிரித்து சேர வேண்டிய இடங்களுக்குள் வயிறு செலுத்தி விடுகிறது. ஆனால் இப்போதைய மக்கள் பற்கள் செய்யும் வேலையை வயிற்றினைச் செய்ய வைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு இந்த ரசம் பெரும் உதவிகரமாய் இருக்கிறது. மென்று தின்னாமல் கடித்து விழுங்குகின்றார்கள். அதன் காரணமாய் வயிறு படாதபாடு படுகின்றது. 

எந்த நாட்டிலும் உணவே மருந்தாய் உட்கொள்வது கிடையவே கிடையாது. ஆனால் பாரம்பரியமும், பழைமையும் மிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையே உணவே மருந்து என்று காயத்தை நன்கு பாதுகாத்து வந்தது. கிராமத்தில் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண் நகரத்திற்குச் சென்றால் தன்னையே ஒரு மாதிரியாக மாற்றிக் கொண்டு அவ்வாழ்க்கையை கிராமத்திற்குள் வந்து காட்டி பெருமையடைவது எப்படி ஒரு நகைச்சுவைக் காட்சியாய் இருக்குமோ அந்தளவுக்கு தமிழர்களின் உணவும் இப்போது மாறிப் போய் விட்டது. அது காலத்தின் கொடுமை அல்ல. மனிதர்களின் மடைமை என்றுதான் சொல்ல வேண்டும்.

Thursday, December 13, 2012

தாரா என்ற அழகி


தனக்குத் துன்பம் ஏன் வருகிறது? என்று யாரும் சிந்திப்பதே இல்லை. இறைவா, என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறாய் என்று இறைவனைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளைத் தன்னை நோக்கி ஒருவன் கேட்டுக் கொண்டான் என்றால் துன்பத்தின் ஆரம்ப விதைகள் என்ன என்று கண்டுகொள்ளலாம். ஆனால் எவரும் அவ்வாறு செய்வதே இல்லை.

ஏதோ இறைவன் வேறு வேலையே இல்லாமல் இவனுக்கு மட்டும் துன்பங்களை கொடுத்துக் கொண்டே இருப்பதாக ஒவ்வொருவருக்கும் நினைப்பு. அவர் என்னதான் செய்வார் ? பாவம் மனிதனை விட படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

தன் குழந்தைகள் தான் செய்யும் செயல்களாலே துன்பங்களை வரவழைத்துக் கொண்டு அவஸ்தைப்படுவதைக் கண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டிருப்பவர் அவர்தான்.

ரேஸ்கோர்ஸில் இருக்கும் மசானிக் குழந்தைகள் மருத்துவமனை அருகில் ஒரு வேன் நின்றிருந்தது. வேன் உள்ளே கருப்பாய் காக்கிச் சட்டை போட்ட மனிதர் ஒருவர் அழகான குழந்தை ஒன்றினை வைத்துக் கொண்டிருந்தார். மனதில் சந்தேகம் எழ அவர் அருகில் சென்று யார், என்ன என்ற கேள்விகளைக் கேட்டேன்.

குறைப்பிரவசமாய் பிறந்த அக்குழந்தையை யாரோ ஒரு பெண் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டுச் சென்று விட்டாராம். யாரோ ஒரு நபர் அக்குழந்தையைக் கண்டுபிடித்துப் பார்த்த போது, உயிர் மட்டும் இருந்ததாம். யார் யாரிடமோ சென்று தாய்ப்பால் வாங்கி வந்து அதற்கு ஊட்டி விட்டு ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் விடுதியில் கொண்டு வந்து விட்டு விட்டாராம். அக்குழந்தையை கண்ணும் கருத்துமாய் பார்த்து வளர்த்து வருகின்றார்கள். இப்படியும் சில பெண்கள் இருக்கின்றார்கள். இதை விட கொடுமையான மனம் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அந்த நிறுவனம் மேலும் மேலும் வளர்ந்து இது போன்ற மக்கட் சேவையை ஆற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தாய் என்பவளுக்கு ஏன் இப்படிப்பட்ட முடிவு எடுக்கத் தோன்றுகிறது என்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால் சமூகக்கட்டுப்பாடுகள் நீங்கிய ஒரு சூழலில் அவர் வாழ்ந்து வருவது என்ற ஒரு காரணத்தைத் தவிர வேறு எதையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயகட்டுப்பாடு அத்துடன் சமூகக் கட்டுப்பாடு வேண்டும் என்பது எனது முடிவு. சமூகத்திலிருந்து பிரிந்து தனியாய் வாழும் மனிதர்களால் தான் இப்படிப்பட்ட கொடூர முடிவுகளை எடுக்க நேரிடும்.

மேல்தட்டு மக்களிடம் மட்டுமே காணப்படும் இவ்வகையான கொடூர மனப்பான்மை கீழ்த்தட்டு மக்களிடமும் மிகுந்து வருவது வேதனை தருகிறது. சமூகம் சிதைக்கப்பட்டு விட்டது என்பதையே மேலே இருக்கும் தாராவின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.

சமூகம் என்பது உறவு, உற்றார் என்று கொள்க.

Tuesday, December 4, 2012

ரனதந்திராவில் ஹரிப்ரியாவின் நீச்சலுடை காட்சிகள் புலம்பும் இயக்குனர்




சிலந்தி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய எனது நெருங்கிய நண்பர் ஆதியின் அடுத்த படம் கன்னடத்தில் ரனதந்திரா. திரு ரமேஷ் அவர்களின் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அப்படத்தின் திரைப்பட ஷூட்டிங் பெங்களூரில் விறுவிறுப்பாய் நடந்து வருகிறது. 

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும், டாக்டர் ராஜ்குமாரின் மருமகனுமான விஜய ராகவேந்திரா ஹீரோவாகவும், தமிழ் படங்களில் நடித்த ஹரிப்பிரியா ஹீரோயினாகவும் நடிக்கின்றார்கள்.

ஷூட்டிங்கில் ஹரிப்பிரியாவின் நீச்சலுடைக் காட்சிகளை வெகு நேர்த்தியாய் அதற்கென்றிருக்கும் பிரத்யேகமான கேமராவினால் ஷூட் செய்திருக்கின்றார். 

"ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்தேன் சார்” என்றார். 

”பின் ஏன் சோகமாய் பேசுகின்றீர்கள்?” என்றேன்.

”அட அத ஏன் சார் கேட்கின்றீர்கள்?”

“ ஹரிப்பிரியா அந்த சீனைப் பார்த்து விட்டு, புரோமோவில் வெளியிடக்கூடாது என்று அக்ரிமெண்ட் போட்டுடுட்டாங்க சார் !” என்றார்.

தான் பெற்ற இன்பம் ரசிகர்கள் பெற வேண்டுமென்ற ஆவல் இயக்குனருக்கு. 

ஆனால் நடந்ததோ வேறு !

மொத்தத்தில் ரசிகர்களுக்கு ” வடை போச்சே !”






Wednesday, November 28, 2012

தர்மம் பேசுகிறது - ஒன்று



அம்புஜம் என்றொரு பெண்மணி. எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு ஒரு பெண், சற்றே பெருத்த சுமாரான அழகுடைய பெண். அம்புஜத்தின் கணவர் இருக்கும் இடம் தெரியாது. தன் பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளையைத் தேடினார்கள். அவர் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குனர். நல்ல குடும்பம். வெகு சுமாரான குடும்பத்தினைச் சேர்ந்த அம்புஜம் மகள் அப்பெரிய இடத்திற்கு மருமகளாய் சென்றார். வாழ்க்கை வெகு அழகாய்ச் சென்று கொண்டிருக்கிறது. அம்புஜமும், அவள் கணவனும் மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்புஜம் எங்குச் சென்றாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருப்பவள். அம்புஜத்தின் கணவரோ பேசுவது என்றால் என்ன என்று கேட்பவர். அதிர்ந்த சத்தம் வராது. அந்தளவிற்கு மென்மையானவர். அம்புஜத்தினால் அவர்கள் உறவினர்கள் வீட்டில் ஒரு பிரச்சினையும் வராது. சென்ற தடம் கூட தெரியாமல் வீடு திரும்பும் வழக்கமுடையவர் அம்புஜம்.

இப்படியான அம்புஜத்தின் வாழ்விலே துன்பத்தின் சாயல் கொஞ்சம் கூட படியவில்லை. சாதாரண குடும்பத்தினைக் கட்டிக் காத்து, வேறு எவர்களின் கோபத்திற்கோ, வேறு எந்த வித பிரச்சினைக்கோ ஆளாகாமல் வாழ்ந்து வரும் அம்புஜம் எப்போதும் மகிழ்வாகத்தானே வாழணும்? அவர் அப்படித்தான் வாழ்கிறார்.

தர்மம் என்பது சத்தியம். சத்தியம் என்பது உண்மை. உண்மை என்பது நன்மை. நன்மை என்பது பிறருக்கு தீங்கு நினையாமை.

மகாபாரதத்திலே தண்ணீர் என்று கருதி தரையில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்துச் சிரித்தாள் பாஞ்சாலி. ஆன்றோர்களும் சான்றோர்களும் நிரம்பிய அரசவையிலே பலர் பார்க்க அவளை அவமானப்படுத்தினான் துரியோதனன். ஒரு சாதாரண கேவலச் சிரிப்பிற்கே கடவுள் இத்தனை பெரிய தண்டனையைக் கொடுக்கின்றான் என்றால் பெரிய தவறுகளுக்கு கடவுள் எத்தனை பெரிய தண்டனைகளைக் கொடுப்பான்?

இப்படித்தான் ஒருவர் பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வந்தார். அவரின் கதை என்ன? ..... ( அடுத்த பகுதியில் )

Monday, November 26, 2012

இயல்பாய் இருங்களேன்

மனித சமூகம் ஈகோவினால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எது நல்லது, எது கெட்டது என்பதை எந்த வித முன் யோசனையின்றி தற்போதைய மனித குலம் முடிவெடுக்கிறது. பிறகு அவஸ்தைப் படுகின்றார்கள்.

சாலைகளில் பாருங்கள். வேடிக்கையாக இருக்கும். புதுச் சட்டை போட்டாலோ, ஹேர் ஸ்டைல், செல்போன், கார், பைக் வாங்கினால் என்னவோ உலகே அவர்களையே உற்று உற்றுப் பார்ப்பதாய் நினைத்துக் கொண்டு சேஷ்டைகள் செய்து கொண்டுச் செல்வார்கள். அவரவருக்கு அவரவர் வேலை. நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்களாவது இவர்களைப் பார்ப்பதாவது? இதாவது பரவாயில்லை.

ஒரு கோடி கொடுத்து கார் வாங்குபவன் எதற்கு வாங்குகிறான் என்று நினைக்கின்றீர்கள்? அவனைச் சுற்றி இருப்போர் அவனைப் பார்த்து பொறாமைப் பட வேண்டும் என்பதற்காகத்தான் அவன் அந்தக் காரை வாங்குகிறான். பிறர் தன்னை உயர்த்திப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரும்பான்மையான மனிதர்கள் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த் ஈகோவினால் தான் பிராண்டட் கம்பெனிக்காரர்கள் கோடிகளைக் குவிக்கிறார்கள்.

உங்கள் வீட்டில் என்ன டிவி இருக்கிறது? எங்கள் வீட்டில் எல் ஈ டி டிவி இருக்கிறது என்று பெருமையடித்துக் கொள்வார்கள். அந்த எல் ஈ டி கொஞ்ச நாள் கழித்து குப்பையாகி வேறு ஒரு டிவி மார்க்கெட்டில் வந்து விடும். டிவி கம்பெனிக்காரர்கள் புதிய புதிய பொருட்களாய் விற்று சம்பாதிப்பார்கள். வாங்குபவர்களுக்கு காசும் போய்  எல்லாம் போய் விடும்.

நேற்றைய நீயா நானாவில் எதிர்கால சந்ததிகளுடன் பாக்கெட் மணி பற்றிப் பேசினார்கள். அதில் பேசிய எந்த ஒரு இளைஞனும், இளைஞியும் படிப்பைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நண்பர்கள் என்பதைத் தவிர அவர்கள் பெரிதாய் வேறு எதையும் சொல்லவில்லை.

எப்படிப்பட்ட இளைஞர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்த்த போது வேதனையாக இருக்கிறது.

நோக்கியா ஹெட் போன் வாங்கினால் அதைக் காதில் மாட்டிக் கொண்டு அலப்பறை செய்வது என்று பிறர் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இயல்பு மாறி விடுகின்றார்கள்.

இயல்பாய் இருந்தால் என்ன? குடியா முழுகிப் போய் விடும்?

பெரும்பான்மையான மக்கள் தனக்கென வாழாமல் பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காக வாழ்கிறார்கள். இப்படியான வாழ்க்கை முடிவில் வெற்று வாழ்க்கையைத்தான் தரும்.

பத்தாயிரம் ரூபாய் ஷூ போட்டால் தான் சமூகம் உங்களை மதிக்கும் என்று எவராவது நம்பினால் அதை விடக் கேனத்தனமானது எதுவும் இல்லை.

கீழே இருக்கும் இரண்டு படங்களில் உலகம் இன்றும் யாரை நினைவில் வைத்து வணங்கி வருகிறது என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நிதர்சனம் புரியும். பகவான் ரமணரிடம் ஒரு கோவணம் தான் இருக்கிறது. ஆனால் பாகவதரிடம்?

( ரமண மகரிஷி )


(தியாகராஜ பாகவதர்)


Wednesday, November 7, 2012

பாலத்தின் மீது வீடு கட்டாதே


“என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன். ஸ்திரீயானவள், சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்” - ஆதியாகமம் 3-12-13 பைபிள்




பாவம் செய்தோரே பரலோகப்பிதாவின் முன்னே மண்டியிட்டு பிரார்த்தியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் பலனாய் துன்ப உலகில் துயருரும் அனைவரையும் அவர் விடுவிப்பார். 

விடுதிகளின் அறைகளூடே தங்கிச் செல்லும் யாத்ரீகர்கள் போலே பிரசங்கங்களின் முடிவில் காசு மழை கொட்டும். கொட்டும். கொட்டும்.

பாவங்களை மன்னிப்பாரா பரிசுத்த ஆவியானவர்? சிலுவை பதில் சொல்கிறது. ஏனப்பா இயேசு சிலுவையில் அறையப்பட்டார்?

ஆதாம் - விவேகம், ஏவாள் - உணர்ச்சி. 

முதுகுத்தண்டை திருப்பி போட்டுப் பார்! 

மரத்தின் இலைகள் முதுகுத்தண்டின் பாதி வரை தொங்குகின்றது. கனியைப் பார். அதைப் புசிக்க விடாமல் செய்தது யார்? 

உணர்ச்சியின் பிடியிலே சிக்கிய ஏவாளா?

முள்ளம் தண்டினூடே ஓடும் ஆற்றல் அணுவை விட உச்சமானது. அக்கனியைப் புசித்தார்கள் புத்தரும் ஏசு நாதரும்.

ஏதன் தோட்டத்தின் வாயிலை அடைத்தது யார்? பாம்பு ! 

நெளியும் பாம்பின் பிடியிலே மனிதர்கள். பாம்பு தன் உடம்பால் சுற்றிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாயா உலகின் மாயையின் காலடியிலே கனியைப் பற்றிய புரிதல் இன்றி ஆப்பிளை வெட்டி வெட்டி முழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். கனி தொங்கிக் கொண்டே இருக்கிறது. தோட்டம் பராமரிப்பின்றி கிடக்கிறது.

அவன் காத்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் எவரும் அவரிடம் எதுவும் கேட்பதும் இல்லை. அவரைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை.

பாலத்தின் மீது வீடு கட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். பாலம் என்பது கடக்கத்தானே ஒழிய தங்கி விடும் இடம் அல்ல.

- கோவை எம் தங்கவேல்

Thursday, October 11, 2012

காய்கறிகளில் விஷத்தன்மையை நீக்குவது எப்படி?

கறிவேப்பிலை, மிளகாய், பசலைக்கீரை, கத்தரி, வெண்டை, புடலை போன்றவற்றின் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் படிந்திருக்கின்றன. இம்மருந்துகளை நீக்கி விட்டு உணவாகச் சமைத்தால் தான் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வரக்கூடிய எழுதவே முடியாத பல்வேறு வகை நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

சாதாரண தண்ணீரில் கழுவி விட்டு காய்கறிகளைச் சமைப்பது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதுக்கு ஒப்பாகும்.

பூச்சுக் கொல்லி விஷத்தன்மையை எப்படி நீக்குவது?

மஞ்சள் தண்ணீர் அல்லது வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்கறிகளை நன்கு அமிழ்த்தி ஊற விட்டு பின்னர் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்யும் போது காய்கறிகளின் மீது படிந்திருக்கும் 95 சதவீத மருந்து நீக்கப்படும் என்று கேரளாவைச் சேர்ந்த தனியார் அமைப்பின் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா)

பணக்காரர்களின் அரிசியான பாசுமதியில் மிக அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து இருக்கிறது என்கிறது அவ்வறிக்கை.

சுகாதாரத் துறையின் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதில் மட்டுமே வாழ்க்கை என்பதாய் வாழ்வதால், இது போன்ற மக்களைக் கொல்லும் நஞ்சுகளில் இருந்து தப்பிப்பது என்பது முடியாத ஒன்று.

கேஎஃப்சி சிக்கனில் புழு இருந்தது என்று திருவனந்தபுரத்தின் செய்தி. உலகெங்கும் கடை விரித்திருக்கும் கேஎஃப்சி இது போல அமெரிக்காவில் புழு சிக்கனை விற்றிருந்தால் இந்த நேரம் கடை என்னவாகி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கடையை சோதனை செய்யக்கூட கடைச் சிப்பந்திகள் அனுமதிக்கவில்லையாம்.

நேற்று திரு.குருமூர்த்தியின் கட்டுரை ஒன்றினை வாசித்தேன். சேமிக்கும் வழக்கமுடைய நம் இந்திய மக்களை திரு மன்மோகன் சிங் அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் சொல்கிறார், இதைத்தான் புது பொருளாதார வளர்ச்சி என்கிறார் என்று குருமூர்த்தி சொல்கிறார். காலம் காலமாய் ஒரே வழக்கமுடைய மக்களை திசை திருப்பி அமெரிக்கர்களைப் போல பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைத்து மக்களை கடன்காரர்களாக்கி, குடும்பங்களை தனிமைப்படுத்தி, சமூக கட்டமைப்பையே உடைத்துப் போடும் அளவுக்கு திரு மன்மோகன் சிங்கின் பொருளாதார சிந்தனை இருக்கிறது என்கிறார் அவர்.

அதுமட்டுமல்ல அமெரிக்காவில் திவாலான மிகப் பெரிய வங்கிகளைப் போல இந்தியாவிலும் உருவாக்கி விட வேண்டுமென்ற திரு.ப.சிதம்பரத்தின் கொள்கையை இப்பொருளாதார சித்தாந்தம் ஊக்குவிக்கின்றது என்றும், இதை நோக்கித்தான் திரு.ப.சி அவர்கள் சென்று கொண்டிருக்கின்றார் என்கிறார் அவர்.

கோவையில் பெரிய பணக்காரர்கள் எல்லோரும் பல சிலிண்டர் கனெக்‌ஷன்களை வைத்துக் கொண்டு, தங்கள் கார்களுக்கு மானியச் சிலிண்டர்களை பயன்படுத்தி உல்லாச வாழ்க்கை வாழ்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதைப் போல அமைச்சர்களும் பயனடைகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றே. இதைக் காரணமாய் வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய சிலிண்டர்களைக் குறைப்பது பெரிய திருடர்களை ஒழிக்க வீடுகளே இல்லாமல் ஆக்குவது போன்றது. இது  என்னவிதமான பொருளாதார வளர்ச்சியோ தெரியவில்லை.

இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் போலி அடையாள அட்டை, ரேஷன் அட்டைகளை களைவது வெகு எளிதானது. அதைச் செய்து போலிகளைக் களைந்து விடாமல் இப்படி மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது மக்கள் விரோத சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கோவையில் மின்சாரம் வரும் நேரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. காலையில் 6-8, மதியம் 12-2, இரவு 6-7, 9-10, 11-12, 1-2, 4-5. இப்படி ஒரு மின்சார சப்ளையை உலகத்தில் வேறு எங்கும் மக்கள் அனுபவித்தே இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் மின்வெட்டு சரிசெய்யப்படவில்லை. அல்லது ஒழுங்கு படுத்தக்கூட இல்லை. இப்படியே சென்றால் தமிழர்கள் பீகாரிகள் போல அகதிகளாய் மாறி விடும் சூழ் நிலை வந்தே தீரும். அதற்குள் ஆட்சியாளர்கள் மின்வெட்டினை ஒழுங்குபடுத்தி விட வேண்டும். ஆனால் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

ஓட்டுப்போடும் போது வாங்கிய காசுக்கு பலனை அனுபவித்துத்தானே தீர வேண்டும்? தமிழகம் அனுபவிக்கின்றது.




Saturday, September 29, 2012

கோவிலும் மனித உடலும்


தமிழர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியை, குமரிக் கண்டத்தினை கீழே இருக்கும் படத்தில் பாருங்கள். இப்படி இருந்த தமிழர் வாழ்விடம் இப்போது இருக்கும் அவலத்தையும் பாரீர். இருக்க இடம் இல்லாமல் தவிப்பதைப் பாரீர். பரிசோதனைக் கூடங்களில் கொல்லப்படும் எலி போல தமிழர்கள் கொல்லப்படுவதைப் பாரீர். ஏன் என்று கேட்க நாதியற்றுப் போனதைப் பாரீர். உலகின் மூத்த குடியான தமிழர்கள் தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் கையேந்தி நிற்கும் அவலத்தைப் பாரீர். 


ஆனால் உங்களுக்கு ஒரு உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். காலத்தின் சூழலில் மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தான் இன்றைக்கும் என்றைக்கும் அசைக்கவே முடியாத உலக கோடீஸ்வரர்களுக்கெல்லாம் கோடீஸ்வரர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது ஒரு ரகசியம். அதையெல்லாம் பட்டவர்த்தனமாக வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும் போது தெரிந்து கொள்ளுங்கள். அது சுனாமியைப் போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

நம் தமிழர்களின் அறிவிற்கு எந்த மனிதனாலும் ஈடே கொடுக்க முடியாது. ஒவ்வொரு தமிழனின் வாழ்வியல் கோட்பாட்டிலும் அசைக்க முடியாத பங்கீட்டாய் இருப்பவை கோவில்கள். “கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?” பதிவில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலையும் கீழே வரும் விபரங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கோவிலின் அமைப்பும் மனித உடலின் பாகங்களும்

முன்கோபுரம் - பாதங்கள்
முன்மண்டலம் - முழங்கால்
நிருத்தமண்டபம் - தொடை
பலிபீடம் - தொப்புள்
மகாமண்டபம் - மார்பு
அர்த்தமண்டபம் - கழுத்து
கர்ப்பகிரகம் - சிரம்
தட்சிணாமூர்த்தி - வலது செவி
சண்டிகேஸ்வரர் - இடது செவி
ஸ்தபனமண்டபம் - மூக்கு
ஸ்தபனமண்டலவாசல் - வாய்
லிங்கம் - புருவத்தின் மத்திய பகுதி
விமானம் -தலையின் உச்சி
சரீரப்ப்ரஸ்தாரம் ஷேத்திரம் (தலம், கோவில் இருப்பிடம்)

அன்ன மயம், பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என்கிற ஐந்து பிரகாரங்களையும் ஐந்து வித கோஷங்கள் என்று குறிப்பிடுவார்கள்.  இதனைப் பின்பற்றித்தான் சாமியை வழிபடல் வேண்டும். 

கோவில்களுக்குச் சென்று வழிபடுவது எப்படி  என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுவோம்.

மன ஒருமை செய்து, வேற்று சிந்தனை களைந்து, இறையுடன் ஒன்றி கோவிலுக்குள் நுழைய வேண்டும். பலிபீடத்தின் அருகில் வீழ்ந்து தீய எண்ணங்களை பலிகொடுத்து, சுத்தமான உணர்வுடன் எழுந்து கொடிமரத்தின் அருகில் சென்று விழுந்து வணங்க வேண்டும்.

ஆண்கள் - தலை, இரண்டு கைகள், இரண்டு காதுகள், இரு முழங்கால்கள், மார்பு போன்றவை மண்ணில் பட வணங்க வேண்டும்.

பெண்கள் - இரண்டு கைகள், இரண்டு முழங்கால்கள், தலை பூமியில் படும்படி வணங்க வேண்டும்.

சன்னதி கிழக்கு என்றால் பலிபீடத்தின் அக்னி மூலைக்கு எதிரில் தலைவைத்து வணங்க வேண்டும். தெற்கு, மேற்கு நோக்கிய சன்னதி என்றால் பலிபீடத்தின் நிருதி மூலையியில் தலைவைத்து வணங்க வேண்டும். வடக்கு நோக்கிய சன்னிதியானால் பலிபீடத்தின் வாயு மூலையில் தலைவைத்து வணங்க வேண்டும்.

கொடிமரத்தைத் தாண்டி மண்டபத்தில் நுழைந்த பிறகு வேறு எந்தச் சன்னிதியிலும் வணங்கக்கூடாது. எவருக்கும் வணக்கம் செலுத்துதல் கூடாது. நந்தியை வணங்கி, அவரிடம் சிவ பெருமானை வணங்க உத்தரவு கேட்ட பிறகுத்தான் சிவனை வழிபட செல்ல வேண்டும்.

இதன் பின்னர் கருவறை வாசலில் இருக்கும் துவாரபாலகரை தரிசித்து விட்டு அதன் பின்னர் கருவறை சென்று சிவனை வழிபடல் வேண்டும். அதன்பிறகு பிற சன்னிதிகளை வணங்கலாம்.
-
நேற்று நண்பர் ஒருவர், உலகில் மாபெரும் கலவரங்கள் நடக்கப்போவதாகச் சொன்னார். இப்போதுள்ள காலத்தின் வெளிப்பாடு மிகக் கொடூரமாய் இருக்கிறது. அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்கள் எல்லாம் அக்கிரமங்களே அல்ல. அது ஒன்றுமே இல்லாதவை. ஆனால் அரசியல்வாதிகளை முன்னிருத்திக் கொண்டு சில சுய நலவாதிகள் செய்யும் அக்கிரமங்கள் அளவுகடந்து செல்கின்றன. அரசியல்வாதி 0.000001 பர்செண்டேஜ் தின்கிறான். ஆனால் இவனை துணையாக்கும் சுய நலவாதிகள் தின்பது 9.99999 பர்செண்டேஜ். இச்சுய நலவாதிகளுக்கெதிரான மக்கள் கலவரங்கள் நடக்கப் போகின்றது என்பதைக் குறிகள் சுட்டிக் காட்டுகின்றன. விதிப் பலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். மீண்டும் ஒரு உலகப் போர் நிகழப்போகின்றது. அதிலே கவுரவர்கள் என்கிற சுய நலவாதிகள் அழிக்கப்படப்போகின்றார்கள். இப்போது ஊழல்வாதிகளாய் வெளிப்படுவது அரசியலாதிகள் அல்ல. கார்பொரேட் கம்பெனிகள் என்ற சுயநலவாதிகள். இவர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் உலகெங்கிலும் ஆரம்பமாகி விட்டது. அது பரவும் ! சுய நலசக்திகளை, மக்கள் விரோத சக்திகளை அழிக்கும். அந்தப் போரில் மக்களும் தங்கள் இன்னுயிரை இழப்பர். இழப்பினும் உலகம் சுத்தமடையும்.

* * * * * * *

கட்டுரை ஆக்க உதவியும் நன்றியும் : கழுகூர் வரலாற்றுத் தழும்புகள் - கவிஞர் கழுகூர் பழனியப்பன்

Monday, September 24, 2012

கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?


கோவில்களுக்குச் செல்வது, பூஜைகள் செய்வது, அபிஷேகம் செய்வது, கோவில் பணிகள் செய்வது, தளம் போடுவது, விளக்குகள் வாங்கிக் கொடுப்பது, பூக்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற இறைப்பணிகளைச்  செய்பவர்களைக் கடவுள் காப்பாற்றுவாரா? 

அவ்வாறு திருப்பணி செய்பவர்கள் எல்லாம் கோடிகளில் அல்லவா மிதக்க வேண்டும்? அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே?. நோய் நொடி இல்லாமல் அல்லவா வாழ வேண்டும். ஆனால் அப்படி யாருக்கு கடவுள் ஆசி வழங்குவதில்லையே? 

அதுமட்டுமா? கடவுளுக்கு நாள்தோறும் பூஜை,புனஸ்காரங்களைச் செய்து வரும் பூஜாரிகளும், ஐயர்களும் கோடீஸ்வரராய் அல்லவா மாறி இருக்க வேண்டும்? இன்றைக்கும் ஐந்து, பத்து தட்டுகளில் விழுகிறதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்?  இவர்களுக்கு நோய் நொடி வந்தால் மருத்துவரிடம் அல்லவா செல்கின்றார்கள்? கடவுளுக்கு நாள்தோறும் தொண்டு செய்பவர்களுக்கே இந்த நிலை என்றால் அவ்வப்போது கோவில்களுக்குச் சென்று வருபவர்களின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.

ஏன் கடவுள் வேண்டி நிற்போருக்கு உடனுக்குடன் எதுவும் செய்வதில்லை? கல் மனதாய் இருக்கின்றானே ஏன்? இந்தக் கடவுள் நம்மைக் காப்பாற்றுவானா? இது போல இன்னும் என்னென்னவோ கேள்விகள் இருக்கின்றன. இக் கேள்விகளுக்குப் பதில் தான் என்ன?

மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்பவர்களில் சில நாடுகளில் இருப்போர் மாயா உலகின் உச்சபட்ட இன்ப வாழ்வினை வாழ்கின்றார்கள். அவர்கள் என்றைக்கும் கோவில்களுக்கோ, சர்ச்சுகளுக்கோ செல்வதில்லை. அழகான வீடு, கார், மனைவி, வற்றவே வற்றாத பொருளாதாரம், ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்கின்றார்கள். கடவுளை தினம் தோறும் வணங்குபவனை விட, கடவுளைப் பற்றி சிந்தித்தே பாராதவர்கள் இன்ப வாழ்வில் திளைக்கின்றார்களே எப்படி?

நமக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்கள் சில அனுபவங்களைப் பாடல்களாய் பாடி வைத்திருக்கின்றார்கள். அப்பாடலில் இரண்டு பாடலை முதலில் படியுங்கள்.

கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா? 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே - சிவவாக்கியர்

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியைக் கட்ட வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே – அகத்தியர்

மேலே இருக்கும் இரண்டு பாடல்களை ஊன்றி கவனித்துப் படித்துப் பாருங்கள். கடவுளின் தந்திரம் புரியும். 

நியூமராலஜி உண்மையா?


நேற்று மாலை நண்பர்களுடன் சந்திப்பு. எனது நண்பரொருவரால் எனக்கு அறிமுகமான நண்பரோடு எந்த வித தயக்கமோ, முதன் முதலில் பேசுகிறோம் என்கிற எண்ணமோ இன்றி வெகு சகஜமாகப் பேசினேன். அடிக்கடி பேசிக் கொள்வோம்.  

இப்படியான நாட்கள் கழிந்து கொண்டிருந்த போது நேற்றைக்கு திரு கண்ணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். எந்தக் காரணத்தை வைத்து நாம் நண்பர்கள் ஆனோம் என்று கண்ணன் அவர்களிடம் கேட்ட போது நிமித்த பிரசன்னத்தில் நாங்கள் போன ஜன்மத்தில் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்களாக இருந்தோம் என்றார். அதனால் தான் அந்த முன் ஜென்ம தொடர்பின் காரணமாய் நாங்கள் முன்பே பழகியவர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.முன் பின் பழக்கமில்லை. நேருக்கு நேராய் பார்த்தது இல்லை. முகம் எப்படி இருக்கும் தெரியாது. இப்படியான பல இல்லைகளுக்கும் தாண்டிய ஒரு அன்பு, நெருக்கம், வியப்புத்தான். அதற்கொரு காரணம் இருக்கிறது. 

திரு கண்ணன் அவர்களிடம் பேசினால் எனக்கு பயம் வந்து விடும். காலையில் யாரிடம் பேசினீர்கள், யாரைச் சந்தித்தீர்கள் என்றெலாம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார். சினிமாக்காரர்களுடன் தொடர்பில் இருப்பதால் அவரிடம் பேசினாலே எனக்கு திக் திக் என்றிருக்கும். என்னைப் போல ஆட்களுக்கு, ரொம்ப டேஞ்சரான “ஜோதிட திலகம்” அவர். இருப்பினும் நேற்று நடந்தைதையும், ஒரு மணிக்கு முன் நடந்ததையும் சொல்ல ஒரு “தில்” வேண்டுமல்லவா? அலட்டிக் கொள்ளாமல் எதிரில் உட்கார்ந்திருப்பவரை அலற அடிக்கும் ரகளையானவர். எதிர்கால, கடந்தகால, நிகழ்காலத்தினைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். ஒரு மாற்றத்தின் அறிகுறி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வாழ்க்கைப் பாதையின் போக்கு நேராகலாம் அல்லது சரி செய்யப்படலாம். 

ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று.

ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருக்கிறார். அவரின் பையன் பனிரெண்டாவது வகுப்பு எக்ஸாம் எழுதப் போகின்றான். கண்ணன் ”அவன் அடுத்த வருடம் வெளி நாட்டுக்குச் செல்வான்” என்கிறார். அட, இன்னும் எக்ஸாமே எழுதவில்லை, அவன் எப்படி வெளி நாடு செல்வான் என்று கேள்வியைக் கேட்டு விட்டு அவர் சென்று விட்டார். பையன் எக்ஸாம் எழுதி முடித்து சிங்கப்பூரில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் படிக்க அப்ளை செய்திருக்கிறான். தமிழ் நாட்டிலும் மேற்படிப்பிற்கு அப்ளை செய்திருக்கிறான். இரண்டுக்கும் அனுமதி கிடைத்து விட்டது. ஜாதகம் பார்க்க வந்தவர் போனில் “சார்” என்று அலறி இருக்கிறார். இப்படியான ஒரு சம்பவம் பற்றிச் சொல்லியவர், வாழ்க்கை நொடிக்கு நொடி மாற்றத்துக்கு உரியது என்றார். உண்மைதானே ?

நியூமராலஜி உண்மையா என்று விஷயத்திற்கு வருவோம். மெட்ரிக் அளவுகள் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த மெட்ரிக் அளவுகள் உலகையும் மனித வாழ்வினையும் சூட்சுமாய் சூழ்ந்திருக்கும் கிரகங்களை எந்த விதத்திலும் பாதிக்கவே பாதிக்காது. பெயரில் ஒரு எழுத்தை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ வெற்றி கிட்டும் என்றால் அப்படி மாற்றிக் காட்டுபவர் முதலில் கோடீஸ்வரனாக மாறி இருப்பார். அப்படி அவர் மாறாத பட்சத்தில் நியூமராலஜியை எப்படி உண்மை என்று ஏற்றுக் கொள்ள இயலும். கையெழுத்தே போடத்தெரியாத ஒருவனுக்கு நியூமராலஜியால் பயன் இல்லை என்கிறபோது நியூமராலஜி ஒரு வெற்று தத்துவம்.

மெய்யறிவியலில் ஒரு ரகசியம்: 

மனித மனத்தை ஊடுறுவ முடியுமா என்ற கேள்விக்கு என்ன பதில்? 
குருடன் முத்தை துளைத்தான்
விரலில்லாதவன் அதை நூலில் கோர்த்தான்
கழுத்தில்லாதவன் அதை அணிந்தான்
நாவில்லாதவன் அதைப் புகழ்ந்தான்
- தைத்தீரிய ஆரண்யம்

தன் எதிரே அமர்ந்திருக்கும் ஒருவனிம் மனதுக்குள் அவன் நினைக்கும் எண்ணத்தில் ஊடுறுவி அறிந்து கொள்ளும் திறமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இயற்கை மனிதனுக்கு எண்ண ரகசியங்களை மறைத்து வைக்கும் திறமையை அருளினாலும் அதையும் உடைத்து விடும் வழியையும் மனிதனுக்கு தந்து இருக்கிறது.

* * *