குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 13, 2012

முழுமுதற் இறைவன் யார்? ஒரு விளக்கம்



குரு வாழ்க ! குருவே துணை !!

மெய்யன்பர்களே !
பலவிதமான தெய்வ வழிபாடுடைய இந்துக்களில் பலருக்கும், எந்த மூர்த்தியை வழிபட்டால் எல்லா மூர்த்திகளையும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது தெரியாதிருக்கிறது. அதைப் பலரும் அறியும்படி தெரிவிக்கவே, சிவன் கோவல்களில் மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தைத் தவிர வேறு பிரதிஷ்டை ஒன்றுமின்றி அமைத்துக் காட்டி இருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

சிவலிங்கம் மூன்று கூறுகளுடையன. அடிப்பாகம் நாற்கோண வடிவமாய் பூமிக்கு அதிபதியான சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம பாகத்தை உணர்த்துவதாகும். மத்தியபாகம் எட்டுப் பட்டமுடைய அட்டகோண வடிவமாய், வாமை, சேஷ்டை, ரெளத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரதமணி, சர்வ பூத தமனி என்னும் மகாவிஷ்ணுவின் எட்டு சக்திகளும். அதனோடு பொருந்த இருக்கும் ஆவுடை எனப்படும், மனோன்மணியாகிய ஒன்பதாவது சக்தியும் சேர்ந்து மகாவிஷ்ணுவின் நவசக்திகளாகி, நீருக்கு அதிபதியான காத்தல் எனப்படும் ‘ஸ்திதி’ கர்த்தரான விஷ்ணுபாகத்தை உணர்த்துவதாகும். அரன் என்பதன் பெண்பாலே அரி என்பதாகும். அதனாலேயே ‘அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயரனார்க்கே’ என்று திரு நாவுக்கரசு நாயனாரும், திருமழிசையாழ்வார் தமது இயற்பாவிலே ‘மாதாயமாலவனை மாயவனை’ என்றும் அருளிச் செய்திருக்கின்றார்கள்.

அதனால் தான்  நமது அப்பனாகிய மகா விஷ்ணுவின் பாகமாகவும், மாதொருபாகன், உமா மகேஸ்வரன், அர்த்தனாரி, சங்கர நாராயணன் என்ற ஆணும் பெண்ணும் சேர்ந்த அபூர்வ மூர்த்தங்களாகவும், அமைந்து திகழ்கின்றன. அதற்கு மேலுள்ள பாகம் நெருப்பிற்கு அதிபதியும், அழித்தல் எனப்படும் சம்ஹாரம், மறைத்தல் எனப்பரும் த்ரெளபவம், அருளல் எனப்படும் அனுக்கிரஹம் ஆகிய முத்தொழில்களுக்கும் அதிபதியான சிவபாகமாகும்.
பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம் பூமிக்கும் மறைந்து ஒடுங்கி நிற்கும். நீருக்கு அதிபதியான விஷ்ணுபாகம் அபிஷேக நீரைத் தாங்கி விரிந்து நிற்கும். நெருப்புகதிபதியான சிவபாகம் மேலோங்கி ஜோதிபோன்று ஜொலித்துக் கொண்டிருக்கும். 

இம்மூன்றும் சேர்ந்த அருவமும், உருவமுமற்ற ஆதியும், அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி வடிவே சிவலிங்கம் ஆகும். ஆகவே சிவலிங்கத்தை வழிபட்டால் பிரம்மாவை வழிபட்ட பலனும், மகாவிஷ்ணுவின் பத்துத்திரு அவதாரங்களை வழிபட்ட பலனும், சிவபெருமானின் 25 மூர்த்தங்களை வழிபட்ட பலனும் ஒருங்கே கிடைக்ககூடியதாகவும் இருக்கின்றதென்பதை வேதாகமங்கள் வலியுறுத்துகின்றன.

புராண இதிகாசங்களும், அனுபூதிமான்களது அனுபவங்களும் அந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அரசமரம் சுற்றிவரும் அன்பர்கள் சைவர்களாக இருந்தாலும், வைணவர்களாக இருந்தாலும் எல்லோரும் ஒன்று போல சொல்லி வரும்,

மூலதோ பிரஹ்மரூபாய, 
மத்தியதோ விஷ்ணுரூபிணி,
அக்ரஹ்த சிவரூபாய,
விருக்‌ஷராஜாயதே நம.

என்ற மந்திரமும் சிவலிங்க தத்துவத்தின் உண்மையை நன்றாக வலியுறுத்துகிறதல்லவா? அல்லாமலும் உலகிலுள்ள எல்லா மரங்களும் அவற்றின் விதைகளும், கனிகளும், எல்லா வகையான முட்டைகளும், ஜீவராசிகளின் தலைகளும், பிண்டங்களும், பூமியும், சந்திரனும், சூரியனும், நட்சத்திரங்களும், அண்டங்கள் பலவும், ஆகாயமும், சிவலிங்க வடிவின் மேற்பாகம் போல அமைந்திருப்பது சிந்திக்கத்தக்கது.

மேலும் பாவங்களிலெல்லாம் மிகவும் கொடியது பிரம்மஹத்தி தோஷம் எனப்படும். மனிதரைக் கொன்ற கொலைப்பாவம். அதை நீக்க வேண்டுமானால் தனியான எந்த மூர்த்தியையும் வழிபட்டு, நீக்கிக் கொள்ள முடியாது என்பது வேதாகம விதி. அதை நீக்க வேண்டுமானால் சிவலிங்க பூஜையே செய்தாக வேண்டும். 

அதனாலாயே திருவிளையாடல் புராணத்தில் பஞ்சமாபாதகம் செய்தவனுக்கும், மதுரை மீனாக்‌ஷிசுந்தரேசுவரர் அவன் பாவங்களை மன்னித்து, நற்கதி கொடுத்ததாகக் காண்கிறோம். காஞ்சிபுரத்தில் அம்மையார் சதாவும் இலிங்க பூஜை செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களும் சிவபூஜா துரந்தர்களாக இருக்க, அர்ஜூனன் சிவபெருமானிடமிருந்து பாசுபதம் பெறுவதற்கு விஷேசத் தவம் புரிந்தது யாவரும் அறிந்ததே. இராமாயணத்தில் இராவண சம்ஹாரத்திற்குப் பிறகு, ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்தில் இராம நாதரை சிவலிங்கத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் ஹனுமார் தனியாக காசியிலிருந்து இலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் காணலாம்.
கந்த புராணத்தில் சூரசம்ஹாரத்திற்குப் பிறகு ஸ்ரீசுப்ரமணியப் பெருமான் திரிச்செந்தூரில் சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். 

கஜமுகா சூரனைச் சம்ஹாரம் செய்த பிறகு ஸ்ரீவிநாயகப் பெருமான் திருச்செங்காட்டங்குடியில் சிவலிங்கப் பூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். மேலுலகத்தில் அதிகாரம் பெற்ற சகலருமே சிவபூஜை செய்தே அவ்வப் பதவிகளைப் பெற்றிருப்பதாக, நமது நாயன்மார்களும் மாணிக்கவாசகரும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

- தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1 இல் பக்கம் 89,90,91 ( திருப்புறம்பயத் தல வரலாறு பகுதி)

சிந்திக்கவும், சிலிர்க்கவும் ஒரு குறிப்பு :

நமது தமிழர் பாரம்பரியத்தின் கல்வி ஐந்திரம் என்பதாகும். எண்ணியம்(சாங்கியம்), ஓகம், உலகாய்தம் ஆகிய இம்மூன்று கோட்பாடுகளும் வேதங்களை விட உயர்வானதாக மதிக்கப்பட்டனவாம். அரசர்கள் கல்வியில் இம்மூன்றும் முதன்மை பெற்றிருந்தனவாம். கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐந்திரம் கல்வியின் பிறப்பிடமாய் தமிழகம் திகழ்ந்தது. வட நாட்டிலிருந்தெல்லாம் இக்கல்வியைக் கற்றிட வந்தனராம். தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவராம். ஐந்திரக்கல்வி அறிவு வேட்கையைத் தூண்டி, மக்களை நன்னெறிபடுத்தியதாம். உலகிலேயே இரண்டே இரண்டு ஐந்திர நூல்கள் மாத்திரமே உண்டாம். அவை தொல்காப்பியமும், திருக்குறளுமேயாம். ( க. நெடுஞ்செழியன் - தமிழரின் அடையாளங்கள் நூலில் இருந்து)

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Tuesday, September 11, 2012

முழுமையான கடவுள் எது?

இந்து சமயத்தில் பல கடவுள்கள் இருப்பதை பலரும் கிண்டல் அடித்திருப்பார்கள். அதற்கான பதிலை ஒரு புத்தகத்தில் படித்தேன். எனக்கு அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருந்ததால் விரைவில் அப்பதிவு வெளியிடப்படும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, September 10, 2012

இயக்குனர் சுந்தர்ராஜனுடன் ஒரு மணி நேரம்


குரு வாழ்க ! குருவே துணை !!





எனது நண்பர் கோவையில் ஃபில்ம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் இருக்கிறார். இன்ஸ்டிடியூட் சம்பந்தமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, வேறு யாரிடமாவது கருத்துக்களை கேட்கலாம் என்று நினைத்தோம். இயக்குனர் சுந்தர் ராஜன் அவர்களுக்கு அழைத்தேன். ”கோவையில் தான் இருக்கிறேன் தங்கம், எட்டு மணிக்குச் சந்திக்கலாமா?” என்றார்.

நானும் நண்பரும் நேரு விளையாட்டு அரங்கம் சென்று பாப்கார்ன் கொரித்து விட்டு, இயக்குனர் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாங்கள் அன்று முதன் முதலாய் சந்தித்தோம். 

காருக்குள் அமர்ந்து கொண்டார். 

”குங்குமச் சிமிழில் விழுந்தவன் இன்றும் எழுந்து கொள்ள முடியவில்லை சார், ரேவதி போன்ற நடிகைகளைப் பார்ப்பது அரிதாயிருக்கிறது ” என்றேன். 

அவருக்கு நிரம்பப் பிடித்த படம் “குங்குமச் சிமிழ்” என்றார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன். இன்ஸ்டிடியூட்டுக்கு நிறைய ஆலோசனைகளும், கருத்துக்களும் சொன்னார்.
பத்து சில்வர் ஜூப்ளி கொடுத்த வெற்றி இயக்குனர். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். இன்றைய எதிர்கட்சித் தலைவரின் சினிமா வளர்ச்சிக்கு அவரின் பல திரைப்படங்கள் எவ்வளவு உதவி இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. வெகு சாதாரணமாய் இருக்கிறார். பெரியவர்கள் எப்போதும் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அலட்டிக் கொள்வதில்லை. பெரியாரிசத்தின் பிடிப்பில் தன்னை முழுதாய் ஈடுபடுத்தி இருக்கிறார். 

ஆன்மீகவாதியான எனக்கும் பெரியாரிசத்தில் ஈடுபாடுடைய அவருக்குமான நட்பை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறேன். எனக்குள் உதிக்கும் சிரிப்பின் அர்த்தம் எனக்கே புரியவில்லை. அர்த்தம் விரைவில் விளங்கும் என்றே நினைக்கிறேன்.

சில்லிட்ட காற்று வீச இனிய வருகையாய் கை குலுக்குகினார். அவரின் கை “சில்லென்று” இருந்தது.

வெகு விரைவில் கோவையில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் அனைவருக்கும் சினிமா, டிவி, மீடியாக்களில் வாய்ப்புக்கள் உருவாக்கித் தரவும், நாடகக் கலையினை வளர்த்தெடுக்கவும், கற்பனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்களுக்கு உதவிடவும் இந்த இன்ஸ்டிடியூட் செயல்படும் விதமாய் உருவாக்க வேண்டுமென்பது ஆவல். 



எங்களது ஃபெமொ மாடலிங் கம்பெனியின் மாடல்களை முழு வார்ப்பாக வார்த்தெடுக்க முயல்வோம். திறமைசாலிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு எட்டாத சினிமாக் கனவுகளை எட்ட வைக்கவும், பலருக்கு ஏணியாகவும் ஃபெமொவை விளங்கிட வைக்க விரும்புகிறோம். 

எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.  நண்பர்களின் ஆசீர்வாதங்களையும், அன்பினையும் எதிர் நோக்கும்

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Sunday, September 9, 2012

பில்லி, சூனியம் வைப்பது எப்படி?


குரு வாழ்க ! குருவே துணை !!

சாப்பாட்டுக் கொண்டிருந்த போது உணவில் உப்பு, காரம், புளி குறைந்திருந்தது. உடம்பு கிடம்பு சரியில்லையோ என்று நினைத்துக் கொண்டேன். உப்பெல்லாம் கம்மியா இருக்கேன்னு கேட்டேன். போதும் போதும் என்று குரல் வந்தது அம்மணியிடமிருந்து. என்னடா இது? எப்பவும் மறந்துட்டேங்கன்னு சொல்ற ஆளு போதும் போதும்னு சொல்லுதுன்னு நினைச்சுக்கிட்டே சாப்பிட்டேன். 

முகமூடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது, “சுந்தரபாண்டியன்” திரைப்படத்தின் ட்ரையிலர் காட்டினார்கள். அட அம்மணியின் தங்கை மாதிரியே இருக்காளே ஹீரோயின் என்று நினைத்தேன். அத்துடன் சும்மா இருந்தால் பரவாயில்லை. அதை அம்மணியிடம் வேறு சொல்லி விட்டேன். சாப்பாட்டில் காரம், புளி, உப்பு எல்லாம் காணாமல் போய் விட்டது. 

இப்படித்தான் எனக்கு நானே சூனியம் வைத்துக் கொண்டேன். அது என்னவோ தெரியவில்லை மனைவிகளின் தங்கை மட்டும் அழகா இருக்காங்க. அதை வெளிப்படையா(!???) சொன்னா மனைவிகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. மூன்று நாளா உப்பில்லாம சாப்பிட்டதில் மூன்று கிலோ வெயிட் குறைந்து போய் விட்டது. இனி உப்பு போட்டு உணவு எப்போ கிடைக்குமோ தெரியவில்லை. 

அத்துடன் விட்டேனா? அடுத்து பில்லி வேறு வைத்த கதை இருக்கிறது. அதைக் கேளுங்கள் !

”தங்கையை பார்த்து விட்டு வருவோம்” என்றாள் அம்மணி. ”சும்மா போனா  நல்லாயிருக்காது, ஏதாவது வாங்கிக்கிட்டு போவோம்னு” சொன்னேன். நாங்கள் இருந்தது உழவர் சந்தை ஆகையால் இரண்டு கிலோ தக்காளியும், ஒரு கிலோ கேரட்டும் வாங்கிக் கொண்டு போனோம். போய்ப் பார்த்துட்டு சும்மா வந்திருந்தால் பில்லியிடம் இருந்து தப்பித்திருப்பேன். 

”என்ன மாமா தக்காளி, கேரட்டுன்னு” அம்மணியின் தங்கை கேட்க, தப்பா நினைத்துக் கொள்ளப் போகிறாளே என்று நினைத்துக் கொண்டு, ”உடம்பு சரியில்லை என்று சொன்னாயா? அதனால் கலர் கிலர் குறைஞ்சிருக்கும்னு தக்காளியும், கேரட்டும் வாங்கிக் கொண்டு வந்தேன்னு” சொன்னேன். 

வீட்டுக்குத் திரும்பி வரும்போது, “எவ்வளவு அக்கறை உங்களுக்கு?” என்றாள்.

“என்ன என்ன சொன்னாய்?”

“என் தங்கச்சிக்கு கலர் குறைஞ்சிருச்சுன்னு எவ்வளவு கவலை உங்களுக்கு?” என்றாள்.

பில்லியை நானே எப்படி வைத்துக் கொண்டேன் என்று பார்த்தீர்களா?

இப்படித்தான் பில்லி, சூனியம் வைப்பது. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். 

வாழ்க வளமுடன் ! மனைவியின் தங்கைகள் ஏதும் இன்றி !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

குறிப்பு : வாயைக் கட்டவில்லை என்றால் இப்படித்தான் ஆகும் என்பது பதிவின் மெசேஜ்.

Saturday, September 8, 2012

புளி

குரு வாழ்க ! குருவே துணை !!

ஆனந்த விகடனில் மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் “ஆறாம் திணை” தொடரில் ஒரு பகுதி இங்கே. புளியில் சமைத்த உணவின் சிறப்பைப் பற்றி எழுதி இருக்கிறார். புற்று நோய் வரக்கூடிய காரணிகளை ஆராய்ந்திருக்கிறார். படித்து மனதில் ஓரத்தில் குறிப்பிட்டு வையுங்கள். உபயோகமாய் இருக்கும்.

சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லும் விகடன் நிறுவனத்தாருக்கும், மருத்துவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் சமுதாயத் தொண்டு மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அனைத்து வளங்களையும் அருளட்டும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

ஆறாம் திணை - மருத்துவர் கு.சிவராமன் (ஆனந்த விகடன்)



குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்குச் சமையல் அறையில் பெண்கள் அதிக நேரம் செலவிட்டது அந்தக் காலம். அதே குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அதே பெண்கள், அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவது இந்தக் காலம். 'ஈவது விலக்கேல்’ என்பது மறந்து 'ஈ.எம்.ஐ. தவறேல்’ என்று வாழ்ந்துவரும் நம்மில் பலர் உடனடிக் கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம்.

சமைத்த உணவு, சில மணி நேரங்களில் கெட ஆரம்பிக்கும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் துவங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சி ஒவ்வொன்றாகத் தொடங்குவது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைக்க, நொதிக்காமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாது இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்களைச் சேர்த்துதான் 'உடனடியாகச் சாப்பிடலாம் வாங்க’ எனச் சந்தைக்கு வரு கின்றன, உடனடிச் சாப்பாட்டுச் சமாசாரங்கள். அதுவும் எதில் வருகின்றன? பாலிதீன் பைகள் அல்லது பிளாஸ்டிக் புட்டிகளில். இதை வாங்கிப்போய் நீங்கள் எங்கே வைப்பீர்கள்? ஃப்ரிஜ்ஜுக்குள். அவ்வளவும் சொந்த செலவில் சூனியம்வைத்துக்கொள்ளும் விஷயங்கள்தான்.

'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும் போது சமைத்து வசதியாக ஃப்ரிஜ்ஜில்வைத்துச் சாப்பி டலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். ஃப்ரிஜ்ஜில் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டி லில்வைப்பது ஆகட்டும்; காய் கறிக் கடையில் வாங்கிய காய்கனிகளைப் பத்திரமாக பிளாஸ்டிக் பையில் பிரித்துவைப்பது ஆகட்டும்;  இன்னும் புத்திசாலித்தனமாக இரவே காய்களை வெட்டி, பிளாஸ்டிக் பையில் போட்டு சமர்த்தாக ஃபிரிஜ்ஜில்வைத்து, காலையில் சமையல் செய்து வேகமாகக் கிளம்பு வது ஆகட்டும்... உங்கள் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நீங்களே வழிவகுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

அதிசூட்டிலும் அதிகுளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து 'டயாக்ஸின்’ வாயு கசிந்துவருமாம். இரவு முழுவதும் ஃப்ரிஜ்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உங்கள் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். அப்புறம் அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டின் தருமோ என்னவோ... கண்டிப்பாக புற்றுநோயைத் தரக்கூடும்.

பள்ளிக்கூடத்துக்கு எவர்சில்வர் பாத்திரங்களில் தண்ணீரோ, சாப்பாடோ எடுத்துச் செல்ல முடியுமா? அதெல்லாம் அசிங்கம் என்று சொல்லும் குழந் தைகள் அதிகமாகிவிட்டார்கள். எல்லாம் நம் வளர்ப்புதான். அழகான பிளாஸ்டிக் டப்பர் வேர் வாங்கி, அதில் சூடான வத்தல் குழம்பைக் கொடுத்து அனுப்புவீர்கள் நீங்கள். வத்தல் குழம்பில் மெள்ளக் கசியும் டயாக்ஸின் அப்போது ஒன்றும் செய்யாதுதான். எப்போதுமே ஒன்றும் செய்யாமல் இருக்குமா என்ன?

புற்றுநோய்க்கான காரணிகளில் ரொம்ப முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையறாக்களும்தான்.

புற்றுநோய் மட்டுமா? சர்க்கரை நோய் அதிக ரித்து இருப்பதற்கு, தண்ணீர் விநியோகத்துக்கு பி.வி.சி. குழாய்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்று இப்போது ஆராய்கிறார்கள். பி.வி.சி. குழாய்கள் வளைந்து நெளிந்து வீட்டுக்குள் செல்ல, அதில் பயன் படுத்தப்படும் சில 'பாலிமர் துணை கள்’ கொஞ்சமாகக் கசிந்து இன்சுலின் சுரப்பில் சிக்கல் உண்டாக்கி இருக்க லாம் என்று சந்தேகிக்கிறது இந்த ஆய்வு.

ரொம்பப் பயமுறுத்துவதற்கோ, அதிகப்படியான கற்பனையிலோ இதை எல்லாம் எழுதவில்லை. சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை வெளி யிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் மேற் சொன்ன பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது புற்றுநோயை உறுதியாகத் தோற்றுவிக்கும் என்று பொருள். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவாக உறுதிப்படுத்தாத காரணிகள்).

இந்த நேரத்தில், தேசிய உணவியல் கழகம் சொல்லும் உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான  தகவலைத் தருகிறேன்.

'நீர்க் காய்கறியைக் கூட்டாகவைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும் முற்றிய காயைப் பொரியலாகவும் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக் கரைசலில் வேக விடவும் வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா? 'புளியில் வேக வைத்தால் அதன் புரதச் சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை.  நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்ட மின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது’ என்று சொல்கிறது தேசிய உணவியல் கழகம்.

நம் முன்னோர்கள் எவ்வளவு பாதுகாப்பாகத் தந்த வாழ்க்கையை எவ்வளவு அபாயகரமானதாகவும் நாசகரமானதாகவும் நாம் மாற்றிக்கொண்டு இருக்கிறோம்... பார்த்தீர்களா?

Thursday, September 6, 2012

ஆன்மீகம் அறிவியல் மிஷ்கினின் முகமூடி பின்னும் உன்னால் முடியும் கோபிநாத்தும்




குரு வாழ்க ! குருவே துணை !!

மேற்கத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றின் முன்மாதிரிகள் அல்லது முன் வடிவங்களை நாம்  கிழக்கிந்திய ஆன்மீக நூல்கள் வாயிலாக கண்டு கொள்ளலாம். புஷ்பக விமானம் முதற்கொண்டு, ஏவுகணைகள் வரை அத்தனையும் தொன்மையான இந்திய ஆன்மீகப் பாதையில் புரண்டு கொண்டிருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போஸான் துகள் கூட அப்படியே. 

மனிதனும் பிரபஞ்சமும் - சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எழுதிய நூலைப் படித்துக் கொண்டிருந்த போது, நூலின் பத்தாவது பக்கத்தில் ஒரு அடிக்குறிப்பு எழுதி இருந்ததைக் கண்டு வியப்பேற்பட்டது. பிரபஞ்சத்தில் இருப்பது இரண்டே இரண்டு பொருட்கள்தான். ஒன்று ஜடப்பொருட்கள் மற்றொன்று உயிராற்றல். கபிலர் இப்படித்தான் வரையறுத்து உள்ளார் என்கிறார் சுவாமி. மேலும் போஸான் பற்றிய முன்குறிப்பாய், 2008ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அந்த நூலில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பின்வருமாறு எழுதி இருக்கிறார்.

“அணுவை மட்டுமின்றி அதனுள்ளிருக்கிற புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் கூடப் பிளக்க முடியும், துகள் துகளாக்க முடியும் என்று கண்டு பிடித்திருக்கிறது நவீன விஞ்ஞானம். இறுதியில் இன்னும் பிளக்க முடியாத, உடைக்க முடியாத ஒரு துகள் எஞ்சியிருக்கிறதா என்பது புதிராக இருந்து வருகிறது. அப்படி ஒரு துகள் கிடைத்தால், பிரபஞ்சக் கட்டிடத்திற்கு அதுவே செங்கல்”

போஸானைப் பற்றிய  மறைக் குறிப்பினை சுவாமிகள் எழுதி இருப்பதை நாம் அறியலாம். இது போன்ற எண்ணற்ற அடிக்குறிப்புகள் பலவும் பல ஆன்மீக புத்தகங்களில் மறைபொருளாய் கிடக்கின்றன. இந்திய ஆன்மீகத்தைப் பற்றிய அறிவு பரவலாக்கப்பட்டால் மேலும் மேலும் இயற்கையில் ஒளிந்திருக்கும் எத்தனையோ விஷயங்களை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியும்.  போஸானின் தத்துவம் சிதம்பர நடராஜர் சிலையில் இருக்கிறது என்று தற்போது பேசிக் கொள்வது நமக்குத் தெரியும்.

உங்களுக்கு ஒரு விஷயத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அக்னி, நெருப்பு, தீ, ஜோதி, ஜ்வாலை என்றெல்லாம் அழைக்கக்கூடிய நெருப்பு எப்படி உருவானது என்று சிந்தித்துப் பாருங்கள். அது ஏதோ ஒரு கல்லில் அல்லவா மறைந்து கிடந்தது. சாதாரண கல்லில் உலகை வாழ வைக்கும் அல்லது அழிய வைக்கும் ஊழித் தீயை உண்டாக்கும் கருப்பொருள் இருக்கிறது என்றால் பிறபொருட்களில் மறைந்து கிடப்பவை எத்தனையோ? அறிவியல் புலனின்ப அறிவுக்குள் அத்தனை காரணத்தையும் கண்டுபிடிக்க முனைந்து கொண்டே இருக்கிறது. அது நான்கு குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து கருத்துச் சொல்வது போலத்தான் இருக்கும் என்கிறார் சுவாமி தம் நூலில். 

வழிகாட்டுதல்களுக்கு ஆன்மீக நூல்கள் அறிவியலுக்கு துணை செய்கின்றன. ஆனால் சிலர் வழிகாட்டுகிறேன் என்று வேறு எங்கோ சமூகத்தின் பாதையை திருப்பி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று இயக்குனர் நண்பரொருவரின் வற்புறுத்தல் காரணமாய் முகமூடி திரைப்படத்திற்குச் செல்ல நேரிட்டது. தியேட்டர் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த போது ”அட்டகத்தி அளவுக்கு படம் கலெக்‌ஷன் சரியில்லை சார்” என்றார். ஆனால் தியேட்டரினுள் ஒரே ஒரு வரிசை மட்டுமே பாக்கி இருந்தது. தியேட்டர் ஃபுல். மேனேஜர் சரடு விட்டிருப்பாரோ என்று நினைத்தேன். முகமூடி திரைப்படம் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இப்படத்தோடு போட்டி போடக்கூடிய வேறு ஏதும் திரைப்படம் இல்லாத காரணத்தால் நிச்சயம் முகமூடி நல்ல கலெக்சனை கொடுத்திருக்கும். வெளியீட்டில் கூட நேரம் காலம் பார்க்கணும். பெரிய படங்களோடு போட்டி போட்டால் இரண்டாவது நாளே படம் பொட்டிக்குள் போய் இருக்கும். யுடிவியின் சாமர்த்தியம் சரியானது தான்.

மூன்று மணி நேர தன் நினைவு மறப்பு என்பதற்காக, பொழுதினை போக்குவதற்காக படம் பார்க்கச் செல்லும் போது செல்போனை ஏன் எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்றே தெரியவில்லை. எப்போதும் பேச்சுத்தானா? எதிலும் முழு ஈடுபாடு எவருக்கும் இருப்பதில்லை. பாட்டு வரும்போது சீட்டினை விட்டு எழுந்து செல்வது, வேறு எவராவது சினிமா ஹீரோ பெயரைச் சொல்லும் போது கழுதை தொண்டைக்குள் புகுந்தாற்போல வறட்டுக் கத்து கத்துவது, சீட்டி அடிப்பது, எழுந்து ஆடுவது போன்ற கோணங்கித் தனங்களைச் செய்யும் சக மனிதர்கள், இந்தச் சேட்டைகள் பிறருக்கு எரிச்சலைத் தரும் என்று ஏன் நினைக்க மறுக்கின்றார்கள் என்பது புரியவில்லை. அமைதியாய் உட்கார்ந்து சில்லிட்ட காற்றையும், இயக்குனரின் கலைப்படைப்பையும் ரசித்து விட்டு வந்தால் என்ன? மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மிருகத்தன்மைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சினிமா தியேட்டர்கள் ஒவ்வொன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றன. அது போகட்டும் !

பிரபல எழுத்தாளர் தஸ்தாவேயெஸ்கியின் ஏதோ ஒரு நாவலின் கதாபாத்திரத்தை தன் பெயராக வைத்திருக்கும் மிஷ்கினின் திரைப்படத்தில் மஞ்சள் சேலை குத்துப் பாட்டு கேட்கவும், பார்க்கவும் வெகு ரசனையாக இருக்கும். அப்படி ஒரு பாட்டு முகமூடி திரைப்படத்தில் இருக்கும் என்று நம்பினேன். மனிதர் ஏமாற்றி விட்டார். ஆனால் கொலை, போலீஸ் கதைக்களத்திலிருந்து மனிதர் இன்னும் திரும்பவில்லை. அஞ்சாதே, யுத்தம் செய் இரண்டு படங்களும் வன்புணர்ச்சி சம்பந்தப்பட்டதாய் இருந்தது. இளம்பெண்களை கற்பழிப்பது, வயதானவர்கள் இளம் பெண்களைக் கற்பழிப்பது போன்ற சித்திரங்கள் மிஷ்கினின் ட்ரேட்மார்க். சித்திரம் பேசுதடியில் ரவுடி தளம், நந்தலாலா - இவரின் படைப்பு அல்ல என்பதால் எழுதத் தேவையில்லை. நல்ல வேளை முகமூடியிலும் நரேன் முதிய மாமிகளை வன்புணர்ச்சி செய்யாமல் கொலையோடு விட்டு விட்டார். ஆகவே மிஷ்கினின் முகமூடி ரசனை எனக்குப் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இந்த முகமூடி ஓகே ரகம். இதற்கு மேல் ஏதும் செய்யமுடியாது. பாடல்கள் எல்லாம் அவரின் முந்தைய படங்களின் காப்பி போலவே இருக்கிறது. பிற்பகுதியை காமெடியாக்கி ஜிவ்வாவை கலாய்த்து விட்டார். ஜிவ்வா ரசிகர்கள் ஒருவரும் தியேட்டரில் விசில் கூட அடிக்கவில்லை.

தன் தாத்தாவிடம் உரையாடுவார் ஜிவ்வா.

”நான் ப்ரூஸ் லீ போல ஆவனும்” - ஜிவ்வா

“ஆகி என்ன செய்வாய்?” - தாத்தா

“ நல்லா ஃபைட் பண்ணுவேன்” - ஜிவ்வா

“ஃபைட் பண்ணி???” - தாத்தா

முழிப்பார் ஜிவ்வா.

ப்ரூஸ் லீ தனக்கென தனிப்பாதையை வகுத்து அதில் அவர் வெற்றி பெற்றார். அவரைப் போல மற்றொருவர் ஆக முடியாது. நீ யாராக வேண்டுமென்பதை நீயே தேடி கண்டுபிடி என்றுச் சொல்வார் ஜிவ்வாவின் தாத்தா.

இதைக் கண்டுபிடிக்க நம் கல்வி முறை உதவுவது இல்லை. மெட்டீரியல்ஸ் வாழ்க்கையை நோக்கிய பணத்தை சாரி பயணத்தைதான் இன்றைய கல்வி முறை சொல்லித் தருகிறது. அது மட்டுமல்லாமல் மீடியாக்களில் இதே கூத்துதான்.

உன்னால் முடியும் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கோபிநாத் பல தொழிலதிபர்களை வரவழைத்து அவர்களின் வெற்றிக் கதைகளையும், பிரச்சினைகளையும் கேட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சி வர உதவி செய்கிறார் என்று எனது பல நண்பர்கள் பேசினார்கள். நல்ல நிகழ்ச்சி என்றும் சொன்னார்கள். எனக்கு அந்த நிகழ்ச்சி சுத்தமாய் பிடிக்கவில்லை. ஏன் தெரியுமா?

இந்தியாவில் இருக்கும் துடிப்பான இளைஞர்களைக் கேட்டுப்பாருங்கள்? ஒவ்வொருவனும் நான் அம்பானி போல வரணும் என்பார்கள். கோல்கேட் ஊழலில் நிலக்கரியை சட்ட விரோதமாய் வேறொரு தெர்மல் பவர் பிளாண்டுக்கு மாற்றிய வகையில் மட்டும் ரூபாய் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள் அம்பானி குழுமத்தார் என்கின்றன பல பத்திரிக்கைகள். அதுமட்டுமா பாலியஸ்டர் பிசினஸ்ஸில் இவர்கள் செய்திருக்கும் கோல்மால்களை வெளி நாட்டுக்காரர் புத்தகமாய் எழுதி வெளியிட, அதை இந்திய அரசு தடை செய்திருக்கிறது. இவரைப் போல ஆக வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்த குற்றவியல் பின்னணி கொண்ட குழுமத்தின் செயல்பாடுகளைக் கேட்டால் திரும்பவும் அதே போல சொல்வார்களா? மனச்சாட்சியும், இந்தியாவின் மீதும், சமூகத்தின் மீதும் பிடிப்பு உள்ள எவரும் திரும்பவும் அதே பதிலை நிச்சயம் சொல்லமாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையானவன். அவனது சூழலும் தனித்தன்மை வாய்ந்தது. வழிகாட்டுதல் என்பது மட்டுமே சரியாக இருக்குமே ஒழிய அவரைப் போல ஆவது, இவரைப்போல ஆவது என்று சமூகத்தினை தவறான வழிப்பாதையில் அழைத்துச் செல்லும் உன்னால் முடியும் நிகழ்ச்சி முற்றிலும் தவறானது. பிரபலங்களின் வெற்றிக் கதைகள் நமக்குத் தேவையில்லை. அவர்கள் வெற்றி பெற்றது அவர்களின் தனித்தன்மையினாலும், அவர்களின் சூழலினாலும் மட்டுமே. அதே சூழலும், அதே தனித்தன்மையும் எல்லோருக்கும் இருக்கவே இருக்காது. கோபிநாத்திற்கு மட்டுமே உதவியாக இருக்கும் இந்த வித நிகழ்ச்சிகள் வளரக்கூடிய எந்த ஒரு சமூகத்திற்கும் எந்த வித பிரதிபலனையும் தராது என்று நிச்சயம் என்னால் அடித்துக் கூற முடியும்.இதோ அதற்கான காரணம் கீழே இருக்கிறது.

ஒரு பெரிய பணக்காரனின் பையன் பிசினஸ் செய்ய வேண்டுமெனில் எளிதில் செய்வான், அதில் வெற்றியும் அடைவான். பிரபல அரசியல்வாதியின் பையன் நினைத்தால் அவனால் என்ன பிசினஸ் வேண்டுமானாலும் செய்ய முடியும். அதில் வெற்றியும் பெற முடியும். ஆனால் சாமானியன் ஒருவனால் முடியுமா? உன்னால் முடியும் கோபி நாத் இதற்கொரு பதிலைத் தருவாரா? பணமும், அதிகாரமும் இருப்பவர்களால் மட்டுமே பல பெரும் தொழில்கள் தொடங்க முடியும். சாமானியமானவன் காளான் வளர்க்க முடியும், சோப்புக்கட்டி விற்க முடியும். அந்தக் காலம் அல்ல இந்தக் காலம். இப்போது இருக்கும் காலம் சுய நலமும், ஈகோவும் நிரம்பிய மனிதக் கூட்டங்களால் நிரம்பியது. இதில் சாமானியனுக்கு எந்த வித வாழ்வியல் உரிமைகளும் எளிதில் கிடைப்பதில்லை. இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஏதாவதொரு அரசு சார்ந்த அமைப்புகளின் வாசல்களில் சென்று நில்லுங்கள். அப்போது உங்களுக்குத் தெரியும் நிதர்சனம் என்னவென்று.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


Thursday, August 30, 2012

பாலையைக் கடப்பானேன்?


உலகில் தோன்றிய எத்தனை எத்தனையோ நாகரீகங்களில் தமிழ் நாகரீகத்தில் மட்டுமே குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று ஐவகை பூமிகள் வரையறுக்கப்பட்டன. தமிழர் நாகரீகத்தில் மட்டுமே மனித வாழ்வியல் கோட்பாடு அகம், புறம் என்று வகுக்கப்பட்டன. குமரிக் கண்டம்தான் மனித குலம் வாழ மிகச் சிறந்த பூமியாக, அற வாழ்வில் பிடிப்புடைய மனிதர்களால் நிரம்பிய புண்ணியத்தலமாய் சிறந்திருக்கும் பூமி. இப்பூமியில் உதித்தவர்களால் மனித குலம் தழைத்தோங்க, சீரும் சிறப்புடன் வாழ பல் வகை அறிவு சார் நூல்கள் உதித்தன. முதன் முதலாக யூஸ் அன் த்ரோ கான்செப்ட்டை வாழை இலையில் உணவு படைத்து உருவாக்கிய பூமி நம் குமரிக்கண்டம். 

இப்படியான புண்ணிய பூமியில் இப்போது நடந்து கொண்டிருக்கும் கால மாற்றம் ஏற்படுத்தப்போகும் விளைவுகளுக்கு காரணம் இங்கிருக்கும் தமிழர்களே. குமரிக் கண்டத்தின் பூமி தீய எண்ணமுடையவர்களை தன்னிடமிருந்து நீக்கிட துணிந்து பல செயல்களை நிகழ்த்துகின்றது. அதில் ஒரு செயல்தான் மழைவளம் குன்றி மண் வளம், மக்கட் வளமும் சீரற்று இருக்கின்றன. 

தமிழர்கள் மோகத்திலும் குடியிலும் கூத்திலும் மூளை செயலிழந்து போய் தன் உடலையும், மனத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். அலோபதி மருந்தைப் போல உடனடிப் பலன் கிடைக்கும் என்பதாய் நினைத்துக் கொண்டு ஆன்மீகம் என்ற பெயரில் காசு பிடுங்கும் கூட்டத்தின் மாயைப் பிடியில் சிக்கி, எங்கெங்கோ சென்று வருகின்றனர். எத்தனை எத்தனை ஆன்மீக வழிகளில் சென்று முயன்றாலும், செய்வினைப்பலன் துரத்திக் கொண்டே இருக்கின்றது. மாயையில் சிக்கி மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தங்களின் பூமிக்கு தீங்கு செய்யின் அதன் பலனையும் அனுபவித்தாக வேண்டும். அதைத்தான் தமிழர்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மோகம், குடி, கூத்தாட்ட மாயையை விலக்கி உண்மையை அறிந்திட நல்லோர் இடம் சேர வேண்டும். இளைஞன் ஒருவன் தான் எப்போதுமே இளமையாகவே இருப்பேன் என்று நினைத்துக் கொள்வது மாயை. பெண்ணொருத்தி தான் மட்டுமே அழகு என்று நினைப்பது மாயை. இது போன்ற எண்ணற்ற மாயை என்கிற வலையில் சிக்கி எது உண்மை, எது மாயை என்பதை அறியக்கூடிய அறிவுத்திறனும் மழுங்கிப் போய் “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று வாழ்கிறார்கள் இன்றைய தமிழர்கள். 

மாயையின் காரணமாய் மனிதர்கள் செய்யும் ஒவ்வொரும் செயலின் பலனையும் அவனும், அவன் சார்ந்த உறவுகளும் அனுபவித்து ஆகவேண்டியது இயற்கையினைப் படைத்த “அவன்” கட்டளை. மீறவும் முடியாது, ஓடி ஒளிந்தாலும் தப்பிக்கவும் முடியாது.

செய்த வினைக்கு பலன் கிடைத்தே ஆக வேண்டும், உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டுமென்கிறார்கள். நிகழ்காலத்தில் இருப்போர்கள் “பாவம் செய்தவர்களும், தவறு செய்பவர்களும் தான் நன்றாக வசதி வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்” என்பார்கள்.  அது உண்மையே இல்லை. பாவம் செய்கிறவன் தன் வாழ் நாளுக்குள்ளே அத்தனை துன்பங்களையும் அடைந்து நொந்து நூலாய் போவான். இதற்கு உங்களுக்குத் தெரிந்த உதாரணம் சொல்லவேண்டுமெனில் “கண்ணதாசனை”த் தவிர வேறு யாரைக் காட்ட முடியும்? கோவில் கோவிலாய் சுற்றினாலும், பூஜைகளும் புனஸ்காரங்களும் செய்தாலும், அன்னதானம் செய்தாலும், அற வழியில் நின்றாலும் செய்த பாவத்தின் பலன் வேறொருவனைச் சேரவே சேராது. உப்பை அள்ளி அள்ளி முழுங்கியவனுக்குத்தான் தாகம் எடுக்கும்.

”கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னைத் தியானிப்பானானால், அவன் கடந்த கால தீய வினைகள் விளைவுகளைச் சீக்கிரம் கழித்து விடுகிறான். விரைவில் அவன் அறவாளன் ஆகிறான். நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசம் அடைவதில்லையென்று நிச்சயமாக அறிக !- கீதை அத்தியாயம் IX, பாடல்கள் 30-31 (உதவி : ஒரு யோகியின் கதை )”

கீதையிலே பகவான் சொல்கின்றான் செய்த வினைப்பலனை நீ எளிதில் கழிக்கலாம். அவனைத் தியானித்தால் மட்டும் வினைப் பயனை நீக்கி விட முடியாது என்கிறான். வினைப்பலனை சீக்கிரம் கடக்கலாம் என்றுதான் சொல்கிறான். ஆக, பாவத்திற்கு பரிகாரம் இல்லை என்று முடிவு செய்யலாம். 
எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொள்ள ஒன்று,

பாலைவனத்தில், கொழுத்தும் வெயிலில், தகிக்கும் நெருப்புக் காற்றில் நடந்து செல்வது வினைப்பயன் என்கிற போது, பகவானை தியானிப்பதால் சற்று நேரம் வெயில் மங்க கூடும், அல்லது பாலைவனத்தில் திடீர் மழை பெய்யலாம். ஆனால் பாலையைக் கடந்து தான் ஆக வேண்டும்.

உங்களுக்குத் தெரிந்த பிற உதாரணங்கள்

மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் தன் கர்மாவைக் கழித்த பிறகு தான் மோட்ச நிலை கிடைத்தது அனைவருக்கும். கடவுளே கிருஷ்ணனாய் பிறந்தாலும் அவனும் கர்ம வினைப் பலனை அனுபவித்த பிறகுதான் மோட்சம் பெற முடிந்தது. எவரும் வினைப் பலனை அனுபவிக்காமல் தட்டிக் கழிக்க முடியவில்லை.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் கடவுள் ராமனும் விதிப்பயனை அனுபவித்தார்.

கண்ணதாசன் சொல்வார் “ விதியை மதியால் வெல்வதும் விதியே”.


வினையை விதைப்பானேன், பாலையைக் கடப்பானேன் !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, August 27, 2012

லிட்டில் மைண்ட் பிக் மைண்ட் ( little mind big mind )


குரு வாழ்க ! குருவே துணை !!

ஒவ்வொரு பதிமூன்று செகண்ட்ஸ் வித்தியாசத்தில் மனிதனின் பிறப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. கால தேவனின் கணக்கு இது. ரெட்டையர்களின் ஜாதகத்தை பெரும்பாலானவர்கள் ஒரே ஜாதகம் என்றுதான் கணிப்பார்கள். ஆனால் அது சரியான கணிப்பாக இருக்க இயலாது. கட்டங்கள் மாறி விடும். இரண்டு நொடிகள் அல்லது இரண்டு நிமிடங்கள் வித்தியாசம் கூட கணிப்பின் கட்டங்களை மாற்றிப் போடும். ஜாதகக் கணிப்பின் உச்சகட்டம் - இன்று நடந்தது என்ன என்பதைச் சொல்வது பற்றி தான். பஸ்ஸில் வரும் போது என் நினைவில் நிழலாடிய, சிந்தித்ததை சரியாகச் சொன்னார் திரு கண்ணன் என்றார் எனது நண்பர்.  இவ்வுலக வாழ்க்கையில் மனிதர்களால் ஆறறிவு பெற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியாத, புலனின்ப பிடிப்பு கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு முடிச்சுக்கள் இருக்கின்றன. இதோ அதில் ஒன்று.

ஆதிசங்கரர் தன் தாய்க்கு கோவையில் இருக்கும் பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்து தன் தாய்க்கு முக்தி அளித்தார். இந்தியாவெங்கும் இந்து சமய  நெறியை ஒழுங்கு படுத்தி, அமைப்பியலாக்கிய மாபெரும் ஆன்மீக சக்தி உடையவர் ஏன் பேரூர் படித்துறைக்கு வந்தார்? வேறு எங்கும் கோவில்களே இல்லையா?ஏன் இங்கு வந்த அக்காரியத்தைச் செய்தார்? இதற்கு என்ன காரணம்? இன்னும் இன்னும் பலப்பல விஷயங்கள் இருக்கின்றன நமக்குத் தெரியாமலே அல்ல புரியாமலே. 

கண்பார்வையின் தூரம் எவ்வளவு என்று கேட்டால் சிலர் நூறடி, சிலர் ஒரு மைல் என்றுச் சொல்வார்கள். இது அஞ்ஞானம். கோடானு கோடி ஒளிப்பயணத்தின் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தை நம் கண்கள் காண்கின்றன என்றுச் சொன்னால் அது மெய்ஞானம். உண்மையை அறிதல் என்பதுதான் மெய்ஞானம்.

அஞ்ஞானத்தினை குறுகிய அல்லது சிறிய அறிதல் என்றும், மெய்ஞானத்தை பரந்த, உண்மையை அறிதல் எனலாம். அதை லிட்டில் மைண்ட் பிக் மைண்ட் என்கிறார்கள் திபெத்தியன் புத்திஸ்ட்.

லிட்டில் மைண்ட், பிக் மைண்ட் என்பதன் விளக்கம் கீழே இருக்கிறது. யாரெல்லாம் லிட்டில் மைண்ட், யாரெல்லாம் பிக் மைண்ட் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இப்பாராவை படித்த பின்பு மெய்யறிவு என்கிற மெய்ஞானம் பற்றி புரிந்து கொள்ளுங்கள்.

Tibetan Buddhist teachers have a simple yet powerful teaching to open us to who we really are. It may be seen as the teaching of Little Mind-Big Mind; or in Tibetan, Sem Chungchung-Sem Chenpo . Little mind is everyday-mind for most of us - ranging from simple planning, coping, anxiety about minor or major things, escalating to self-preoccupation, self-contraction and narrowness.

Little-mind living results in spending a good portion of our time disconnected from who we really are, not acknowledging our inherent Buddha-nature. And at the end of a day of doing all that needs to be done, marked by moments of anxiety, impatience, anger and aggression, we feel exhausted or empty. As one teacher put it, "Our day job has changed from practising our enlightened qualities to covering them up."

Big mind, on the other hand, acknowledges and appreciates its own capacity for enlightenment. It is characterised by having confidence in our inherent joy, wisdom and compassion. Small mind deserves small attention; big mind deserves big attention. However, most of us end up doing just the reverse! If we do not trust in our own natural greatness, we can't easily recognise it in others.

Interestingly, psychologist Richard Alpert, better known as Ram Dass, laid out what he sees as the difference between the western psychological tradition and the Hindu/Buddhist model of mind.
If we experience our lives as if confined to a prison cell made up of the concepts of society, culture, family and personal experience that condition us, we may find it hard to see a way out. Perhaps some have orderly, comfortable cells, while some have messed up, cluttered cells. We name these states of relative order or disorder, being 'mentally well' or 'mentally ill'.

Most of western psychology, he says, acts like a kind of caretaker that comes in and tidies up the place, giving it better order and cleanliness; we remain, however, locked inside the cell. This, while it works in some sense, he considers the psychology of the ego, or what Buddhism calls the little-mind approach. Hindu or Buddhist psychology, through not only inter-ventions, but by including methods of mindfulness and meditation, shows the way to the door that leads us out of the cell - into the world of expansive potentiality, into what Buddhism calls Big Mind.

A story is told of one of Tibet's great female yogis, Machig Lobdron, who perplexingly used to cry one minute and laugh the next.

When someone asked her why she acted that way, she replied, "I laugh with delight because enlightenment always lies right below the surface of life, right in front of our nose. This is truly a joyous and wondrous discovery. I cry because beings are anxious, in pain, and depressed, when our enlightened qualities are so nearby, yet so covered up."

Living out of big mind does not require us not to give up everyday concerns - that would be too unrealistic - but to place them firmly in perspective. And this cannot happen without some slowing down and reflection. Then, we will need to make time and space for attention to big mind; and see how little mind will slip into second place - MARGUERITE THEOPHIL


- ப்ரியங்களுடன்

கோவை எம் தங்கவேல்

நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் மர்கரெட் தியோபில்

Wednesday, August 22, 2012

ஆதியில் இறைவன் வாக்கியமாய் இருந்தார்


குரு வாழ்க !
குருவே துணை!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பன ந்தானா? பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? - வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றாம் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலோ - நித்தம் விதிதொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம் - மகாகவி பாரதி

சித்தன் பாரதியின் பாடல்கள் புரியாத ஒன்றையும் புரிய வைத்திடும் செதுக்கல்கள். எதுவும் உண்மையில்லை, எல்லாமே சொற்பனம் என்கிறார். இப்பாடலை மூன்று நான்கு முறை தொடர்ந்து படியுங்கள். பாரதி ஒரு சித்தன் என்று உணர்வீர்கள்.

பெருவெடிப்பில் நிகழ்த்தப்பட்ட அற்புதத்தின் பேராற்றல் துண்டு துண்டாய் சிதறிய போது, ’எப்போதான் விடியுமோ, என்றைக்குத்தான் வருவானோ’வால் மனித வாழ்க்கைத் துவங்கிய அன்று முதல் இன்று வரை விரிவடைந்து கொண்டே செல்லும் வெடிப்பின் துகள்கள் ஒன்று சேரும் நாளுக்கு அடுத்து சிவத்தலம் தெரியும். வெடித்தவை பேராற்றல் ஈர்ப்பினால் மீண்டும் ஒன்று சேரும், பின்பு வெடிக்கும். 

மனித குல நன்மைக்கு,அண்டக்கல்லைத் தாண்டிச் சென்று திரும்பி வந்த மூவர் மட்டுமே இன்றைக்கும் மனித குலத்தின் அடையாள விருட்சமாய் திகழ்ந்து நிற்க, மனித கூட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது அந்த எல்லையின் எல்லைக்குள் தஞ்சமடைய.

பேராற்றலும், பெருமையும் உடைய நாட்டின் மகாராஜா அவர். அவரின் கொடையின் கீழ் சுகம், துக்கம், இன்பம், துன்பம் என்பனவற்றின் ஆட்சியின் கீழ் மனித குலம் வாழ்ந்து வந்தது. இந்த மகாராஜாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அழகின் தத்துவமாய், அறிவின் சிகரமாய் திகழ்ந்த அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் ஒரு விபரம் கிடைத்தது.

21ம் வயதில் இக்குழந்தை சன்னியாசம் போய் விடும். ஆசையாய் பெற்ற மகவு இப்படிப்போக எந்த தகப்பனுக்குத்தான் மனது வரும். வேறொருவரிடம் கேட்டபோது அரண்மனைக்குள் வைத்தே வளர்த்து வாருங்கள், அந்த வயது வரும் வரைக்குள் என்று பாசிட்டிவ் அப்ரோச் கான்செப்ட் கிடைத்தது மன்னருக்கு. அதன் படி வாழ்க்கையின் அத்தனை சுகமும் அந்தக் குழந்தைக்கு அரண்மனைக்குள்ளே கிடைக்க ஆரம்பித்தன.

21 அகவையில் வீட்டின் வாயிலுக்கு வந்த மகாராஜாவின் மகன் கண்களில் பட்டது ஒரு சவ ஊர்வலம். ஒரு சவ ஊர்வலம் மன்னாதி மன்னனின் தவப்புதல்வனை சன்னியாசம் கொள்ள வைத்தது. (ஏன்?) எல்லாவற்றையும் உதறிவிட்டு கிளம்பினார். அவர் புத்தர். எத்தனை எத்தனையோ புத்திசாலிகள், முனிவர்கள், அறிவாளிகள், உறவினர்கள் எல்லோரும் அவரை திரும்ப அழைக்கச் சென்றனர். சென்ற எவரும் வீடு திரும்பவில்லை. ஏன் ? மூவரில் சிவத்தலம் சென்று திரும்பிய சித்தார்த்தனின் அருட்வளைவில் சிக்கினர். ஆசையை துற என்றார் சித்தார்த்தன்.

மூவரில் ஒருவர் சித்தார்த்தன். மற்ற இருவர் யார்? 

ஓம் என்ற வார்த்தைக்குள் அகரம், உகரம், மகரம் மூன்றும் மறைந்து கிடக்க “ஆதியில் இறைவன் வாக்கியமாய் இருந்தார் ”.

குருவின் ஆசீர்வாதப்படி -

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


Tuesday, August 21, 2012

தென்னாடுடைய தமிழனே

சமீபத்தில் தேனியில் எடுக்கப்பட்ட டிஎன்யே(DNA) டெஸ்ட்டில் உலகின் மூத்த டிஎன்யே இது என்று செய்தி வந்திருக்கிறது. தமிழன் தான் உலகின் மூத்த குடி என்று அர்த்தம் ஆகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழ் நாடு தான் உலகத்தில் வேறு எங்கும் இல்லாத சீதோஷ்ண நிலை கொண்ட பூமி. வேறு இடங்களில் ஒன்று குளிர் அதிகமாய் இருக்கும். அல்லது வெப்பம் அதிகமாய் இருக்கும். மழை அதிகமாய் இருக்கும். ஆனால் நான்கு காலங்களும் மனிதர்கள் வசிக்கத் தகுந்த பூமியாக இருப்பது தமிழகம் தான். இப்படிப்பட்ட பூமியில் வசிப்போரின் சிந்தனைகள் தான் உலகிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் வாழ்வியல் நெறிமுறைகள்.

தமிழர்களின் அறிவுக்கும் திறமைக்கும் முன்னால் எந்த மனிதர்களும் ஈடு கொடுக்கவே முடியாது. வாழ்வியல் நெறி சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, கொடூரமானாலும் சரி, வீரமானாலும் சரி, தியாகமானாலும் சரி. எல்லாவற்றிலும் தமிழர்களுக்கு நிகர் தமிழர் தான். அப்பேர்பட்ட தமிழர்கள் வாழும் புண்ணிய பூமி நம் தமிழகம். தென்னாடு என்றழைக்கப்படும் ஆன்மீக பூமியில் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள். எங்கு நோக்கினும் கோவில் விழாக்கள், பூஜைகள், புனஸ்காரங்கள் என்று ஆண்டு முழுமையும் கோவில் விழாக்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும். கோவில் விழாக்கள் இல்லையென்றாலும் குடும்பங்களில் சுபகாரியங்கள் நடந்து கொண்டே இருக்கும். தமிழர்கள் ஒன்று கூடிக் கொண்டே இருப்பார்கள். ஆன்மீகத்தில் தழைத்து, அறத்தில் திளைத்து வாழும் மனித கூட்டம் தான் தமிழர்கள் கூட்டம். தமிழர்கள் தியாக உணர்வும், நன்றியுணர்ச்சியும் உள்ளவர்கள்.

எத்தனை எத்தனை புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும் அவைகள் எல்லாம் தமிழர்கள் வாழ்வியலில் புதை பொருளாய், மறை பொருளாய் மறைந்து கிடக்கும். எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. வானவியலில் இருந்து, மரணமில்லா பெருவாழ்வு வரை தமிழர்களிடம் அத்தனைக்கும் விடை கிடைக்கும். அதுவும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் இருக்கின்றன.

தமிழகத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் மறைந்து, புதைந்து போய் கிடைக்கும் மெய்ஞான அறிவியலில் ஒரு சதவீதம் கூட மேல் நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லை. சித்தர்களுக்கெல்லாம் தலைவர் சுப்ரமண்யர் என்பார்கள். அப்பேர்ப்பட்ட சித்தர்கள் பூமியில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, இப்போதிருக்கும் எந்த சயின்ஸ் உபகரணங்கள் இன்றி உடம்பின் அத்தனை ரகசியங்களையும் சித்தர்கள் பாடி வைத்திருக்கின்றார்கள். இதெல்லாம் எப்படி அவர்களுக்குச் சாத்தியமாயிற்று என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளவே முடியாத மர்மம் தான் நம் முன்னே நிழலாடும். பிண்டோற்பத்தி பற்றிய ஒரு பாடல் கீழே,

கேளப்பாமனமான வாயுகூடி
கெடியானசித்தமா காசம்பொங்கி
வேளப்பா ஆங்கார சிகாரமிஞ்சி
மேவுதற்குப்பெண்மேலே மோகமாகும்
நாளப்பா ஐந்துக்கும் மலமேதென்றால்
நலம்பெறவே சொல்கின்றேன் நன்றாய்க்கேளு
தனியானநாதத்தில் பானன்தானே
தானென்றவிந்துவினிற் சமானன்கூடும்
தனியானசித்தத்தில் வியானன்சேரும்
 நானென்ற ஆங்காரம் கர்ச்சிப்போடே
கலந்து நிற்கும் உதானனப்பா கண்டுகொள்ளு
வேனென்றபத்துமொன்றாய் மனதுங்கூடி
மேவியவன்கலந்துவந்து விழுகும்போது
மானென்றமெளனபர வசமேயாஅவாள்
மருவுகின்ற பெண்ணுக்கும் முறைதன்கேளே

இப்படிப் போய்க் கொண்டே இருக்கிறது இப்பாடல். கருத்தரிக்கும் விதம் பற்றி விவரித்துச் செல்லும் பாடல்களை எங்கனம் உருவாக்கினார்கள்? ஆராய்ச்சிகள் செய்தார்களா? அதெல்லாம் அந்தக் காலத்தில் எப்படிச் சாத்தியமாயிற்று என்று கேள்விகளை முன்வைத்தால் மனதின் முன்பு மாபெரும் புதிர் முடிச்சொன்று வந்து நின்று நம்மை ஏளனம் செய்யும். உலகில் புரியாத எத்தனையோ மர்மங்கள் இருக்கின்றன. இதுவரையிலும் வெஸ்டர்ன் சயின்ஸால் மனித உடம்பில் உயிர் எங்கே இருக்கிறது என்று ஆதாரபூர்வமாய் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் சித்தர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

யோகிகள், சித்தர்கள் பரம்பரை நம் தமிழர்களின் வாழ்வியலில் தான் உண்டு. வேறு எங்கேனும் தேடினாலும் கிடைக்கவே கிடைக்காது இப்பேர்பட்ட மனித குல வரலாறு. இப்படிப்பட்ட நம் தமிழர்களின் வரலாற்றில் இன்னும் கண்டுபிடிக்க முடியாத, புரிந்து கொள்ள இயலாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அந்த விஷயங்களில் எனக்குத் தெரிந்த ஏதேனும் அனுபவப் பூர்வமாய் உணர்ந்த சில விஷயங்களை எழுத முயல்கிறேன். அதுவும் எனது ஆன்மீகக் குருவின் அளப்பறிய அன்பின் காரணமாக. அவரின் கட்டளைக்கு இணங்க அவரின் வழிகாட்டுதல்கள் படி எழுதுவேன்.

மனிதர்கள் தானாக பிறப்பதில்லை. தானாக வளர்வதில்லை. அவர்கள் பிறக்கவும், வளரவும் சக மனிதர்களின் உதவி தேவை. ஓவ்வொரு மனித உயிர்களின் கடமை பிற உயிர்களுக்கு உதவுவது மட்டுமே. அனுபவமும், அறிவும், உழைப்பும் பிறருக்காக வாழ வேண்டும். அந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை.

ராஜ ராஜசோழனும் வாழ்ந்தான், மன்னாதி மன்னர்களும் வாழ்ந்தார்கள் பெரும் பொருளாதாரத்துடன், அழிக்கவே முடியாது பலத்துடன். இன்றைக்கு அவர்கள் எங்கே? காலம் கொடுக்கும், எடுக்கும், கொடுக்கும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்