குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, February 18, 2012

மதமும் மனிதனும் - மயிலிறகுகள்

ஒவ்வொரு மனிதனையும் கேட்டுப்பாருங்கள். ஆயிரமாயிரம் ஏமாந்த கதைகளைச் சொல்வான். அக்கா, தங்கை, மாமன், மைத்துனன், மாமியார், மாமனார், மகள், மகன், மனைவி என்றொரு தான் ஏமாந்த லிஸ்டை எடுத்து விடுவான். அதுமட்டுமின்றி தான் செய்த தவறாலே தான் சில துன்பங்களை அனுபவிக்கிறேன் என்று கூட வேதாந்தியாய் பேசுவான். மனிதனுக்கு துன்பங்கள் அவனது உறவுகளாலே, நட்புக்களாலே வரலாம். சில துன்பங்கள் சம்பந்தப்படாத பிறராலே வரலாம். இந்தத் துன்பங்கள் எல்லாம் விலகக்கூடியன. இப்படியான துன்பங்களிலிருந்து விடுபட அனுபவம் மட்டுமே உதவி செய்யும்.

மனிதனுக்கு வயது ஏற ஏறத்தான் உலகத்தின் மாயை மீதான உண்மைகள் புலப்படும். ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி என்பார்கள். உலகத்தின் நியதி மனிதனை தனிமைப்படுத்தி விடுவது. ஆனால் மனிதன் தானொரு பெரும் கூட்டத்தினை உடையவன் என்று நம்பிக் கொள்கிறான். அது உண்மையல்ல. ஒவ்வொரு மனிதனும் தனிமையானவன்.

ஒரு நண்பர் பெரிய கம்பெனி ஒன்றில் மேலதிகாரியாய் இயங்கிக் கொண்டிருந்தார். அவரைக் கேட்காமல் முதலாளி ஒரு ஃபைலில் கூட கையெழுத்துப் போடமாட்டார். இவர் தான் அக்கம்பெனியின் முக்கியமான ஆதாரமாய் இருந்தார். அது உலகெங்கிலும் கிளைகள் பல கொண்ட கம்பெனியின் அத்துணை பணியாட்களுக்கும் தெரியும். அப்படியானவருக்கு திடீரென்று உடல் நோய் கண்டது. ஹாஸ்பிட்டலில் ஐசியூவில் ஒரு மாதம் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. கம்பெனியிலிருந்து முதல் நாள் அனைவரும் வந்து விசாரித்துச் சென்றார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் கம்பெனி ஆட்களின் வரத்து நின்று விட்டது. நோயில் படுத்திருக்கும் போது கூட கம்பெனி நினைவாகவே இருந்தார். மனைவியோ பிரபல கல்லூரியின் முதல்வர். மகளும் மகனும் அமெரிக்காவில். பேரன் பேத்திகள் ஹாஸ்டல் கல்விக் கூடங்களில் படித்துக் கொண்டிருந்தார்கள். நாளாக நாளாக அவர் பரபரப்பான உலகத்தின் கவனிப்பில் இருந்து ஒதுக்கப்பட்டார். அவர் தனிமைப் படுத்தப்பட்டார். இதுவரையில் அவரின் நினைவுக்கே வராத “கடவுள்” அவரின் நினைவுகளில் நிழலாடினார். துன்பப்படுபவர்களை நோக்கி தன் கரங்களை நீட்டும் ஒன்று தான் மதம் என்கிற கடவுள். ஆதரவிற்கு யாருமின்றி தவிப்போருக்கு இதோ நானிருக்கிறேன் என்றுச் சொல்லி அரூபமாய், தோற்றமின்றி, கதைகளாய், கருத்துக்களாய்,வேதாந்தமாய், நிச்சயமற்ற பலவகை உருவங்களாய் தோற்றத்தினைக் காட்டி தன் இருப்பினை கடவுள் காட்டுவார். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை ஆராய்ச்சி செய்வதல்ல நோக்கம்.

எந்த மதமாக இருந்தாலும் சரி அது நோயுற்ற மனிதர்களை நோக்கி உங்களைக் குணப்படுத்துகிறேன் என்று அழைப்பு விடுக்கும். பிரச்சார கூட்டங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். யோகா முதற்கொண்டு பரிசுத்தமளிக்கும் கூட்டம் வரை நோயுற்றவர்களையே மதம் அதிகம் அழைக்கிறது. ஆரோக்கிய மனிதர்களுக்கு மதத்தின் தயவு தேவை இல்லை. ஆரோக்கியம்மற்றவர்களுக்கும், ஏழ்மையில் வாடுபவர்களுக்கும் மதம் வரம் தரும் ஒரு அற்புதமாய் தென்படுகிறது. கடவுளின் மீதான அதிகப்பட்ட நம்பிக்கையை நோயுற்ற மனிதனும், ஏழ்மை நிலையில் இருப்போரும் அதிகமாகக் கொண்டுள்ளனர். நன்றாக இருப்போர் எவராவது தினசரி வாழ்வில் கடவுளைப் பற்றி நினைப்பதுண்டா என்று கேட்டால் “சிரிப்பார்கள்”. அவர் ஒரு பக்கம் இருக்கட்டும், எனக்குத் தேவையென்றால் அவரிடம் செல்வேன் என்பார்கள்.

இது தான் உலகியலின் தன்மை. தேவையான போது பயன்படுத்திக் கொள்வதுதான் மனித இயல்பு. தேவையற்ற போது அது மூலையில் கிடைக்கும் ஏதோ ஒரு வஸ்துவாகிவிடும்.

ஒவ்வொரு மதமும் அன்பினைத்தான் போதிக்கின்றன. ஆனால் உலகில் ஒவ்வொரு நொடியும் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதன் பிறக்கும் முன்பே அவன் என்ன மதம் என்கிற முத்திரை குத்தப்படுகிறது. மதத்தினை அவன் தாய்ப்பாலுடன் சேர்த்து அருந்துகிறான். அப்பேர்ப்பட்ட மத போதனைகளால் மனிதன் தன் துர்குணத்தினை விட்டானில்லை. மீண்டும் மீண்டும் அவன் துர்ச்செயல்களைச் செய்து கொண்டே தான் இருக்கிறான். ஆக மதத்தின் பயன் தான் என்ன?

மதம் இருக்கிறது. அது இயலாதவர்களுக்குத் துணையாய் இருக்கிறது. இயன்றவர்களுக்கு மதம் பற்றிய கவலையோ கடவுள் பற்றிய பயமோ இல்லை. ஆக மதத்தின் இருப்பு என்பது ஒரு கேள்விக்குறியை நம்மை நோக்கி எழுப்புகிறது. விடை என்ன?

அது யாருக்குத் தெரியும்?


- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்


Tuesday, February 14, 2012

மயிலிறகுகள் - நாராயணசாமி வாத்தியார்

ஆவணம் கிராமத்தின் வடக்கே இருக்கும் ஆவிகுளத்தின் வடக்குப்புறமாய் இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பழைய சைக்கிள் ஒன்றில் குட்டையாய், முறுக்கிய வெள்ளி மீசையுடன் வாயில் ஒரு அங்குலம் குறுகலும், ஐந்து அங்குலம் நீளம் இருக்கும் சுருட்டை வாயில் வைத்து புது வித சைக்கிள் புகை வண்டியாய், குனிந்த வளைந்த முதுகுடன் ஒரு உருவம் செல்வதை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு படித்த போது செட்டியாரின் பொட்டிக் கடையில் அடிக்கடி அந்த உருவம் எதிரில் தென்படும். அவர் யார் என்பது எனக்குத் தெரியாது.

தேர்வு முடிவு எப்பவும் எதிர்பார்த்தது போலத்தான் வரும். ஆகவே அடுத்த வருடம் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்ல வேண்டும். அக்கா “விக்டோரியா டீச்சரு மாசமா இருக்காரு, அவரு பிள்ளைய தொட்டில் ஆட்டலாம்” என்பார். விக்டோரியா டீச்சரு கைத்தொழில் கற்றுத்தரும் டீச்சர்.  முஸ்லிம் தெருவில் குடியிருந்தார். நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது அவருக்கு “செந்தில்” என்றொரு மகன் பிறந்திருந்தான். நம்பவே மாட்டீர்கள். அக்கா சொல்லியது போல “பையனை” நான் பார்த்துக் கொண்டேன்.

ஆறாம் வகுப்பு “ஏ” கிளாஸ் ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்த அறையில்தான் நடந்தது. மண்ணில் தான் உட்கார வேண்டும். சுவற்றில் போர்டு இருக்கும். அதற்கு கரி,ஊமத்தம் இலைக் கலவையைக் கொண்டு கருப்பு வண்ணம் ஏற்றுவோம். போர்டுக்குப் பின்னால் சமையல்கட்டு. மதியம் நேரம் சாம்பார் வாசம் தூக்கும். ஆனால் என்னால் சாப்பிட முடியாது. சாப்பிட்டது தெரிந்தால் மாமாவால் முதுகு தோல் உரிக்கப்பட்டு உப்பு தடவப்படும். அந்தப் பயத்திலேயே பத்தாம் வகுப்பு வரை அந்தச் சாப்பாட்டினை “திருட்டுத் தனமாய்” சாப்பிட்டுக்கின்றேனே தவிர சந்தோஷமாய் சாப்பிட்டது கிடையாது. மாமாவிடம் போட்டுக் கொடுக்க பக்கத்து வீட்டு கடுகுத்தேவரின் பையன் பாலு ரெடியாக இருப்பான். அவனுக்குத் தெரியாமல் சாப்பிட நாகராஜன் என்ற நண்பன் தான் உதவி செய்வான்.

ஆறாம் வகுப்பில் சேர்ந்த புதிதில் தான் அந்த சுருட்டு வாத்தியாரை பிரேயரின் போது பார்த்தேன். அவரின் மீசை என்னைப் பயமுறுத்தியது. மாமாவின் மீசைக்கு முன்னால் சாரின் மீசை பிச்சை வாங்கனும். இருப்பினும் அதன் கத்தி போன்ற அமைப்பு என்னைப் பயமுறுத்தி விடும். அவரைப் பார்த்தாலே அடிவயிற்றில் புளி சுரக்கும். அவர் எங்களுக்கு வரலாறு பாடம் எடுக்க வந்தார். அடிக்கடி இருமிக் கொண்டு, அந்தச் சுருட்டினை விடாமல் புகைத்துக் கொண்டிருப்பார். கர கர குரலில் பாடம் சொல்லிக் கொடுப்பார். கல்லூரி படிப்பு முடித்து விட்டு ஒரு முறை வீட்டிற்குச் செல்லும் போது அவரை பார்க்க நேர்ந்த போது, அதே பய உணர்வு என்னிடத்தில் தோன்றி மறைந்தது. அதே பழைய சைக்கிளில் வாயில் சுருட்டைக் கவ்வி புகை விட்ட படியே சைக்கிள் புகை வண்டியியை மெதுவாக நடத்திக் கொண்டு சென்றார் “நாராயணசாமி வாத்தியார்”.

குளிரும், வெக்கையும் கலந்த இந்த கோவையின் காலைப் பொழுதின் நேரத்தில் அவரைப் பற்றி நான் யோசிக்க காரணம் சென்னையில் நடந்த படுகொலை. அது கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை. அதைச் செய்தது அந்தப் பையன் அல்ல. இந்தச் சமூகம்.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Monday, February 13, 2012

பூச்சுமை

கரிசல் பூமி ஏழைகளை கொன்று போடும் கந்தகம் தகிக்கும் பூமி. மழையற்ற பூமியின் மண்ணுக்குள் ஏழ்மையோடு போராடி போராடி தோற்றவர்களின் எத்தனையோ கதைகள் புதைந்து போய் கிடக்கின்றன. உழைப்பின் பயனை அனுபவத்தறியா மக்கள் வாழும் மரணத்தின் சுவடுகள் புகையாய் கவிழ்ந்த பூமி கரிசல் பூமி.

சம்சாரிகளுக்கு ஒரு கஷ்டமென்றால் ஏழைபாழைகளுக்கு வேறு கஷ்டம், இப்படியே வாழ்க்கை வண்டியை அதனதன் துன்பத்தோடு ஓட்டிச் சென்று முடியாத வாழ்க்கைப் பாதையில் வழியில் ஏதோ ஒரு திருடனால் கழட்டி விடப்படும் ஜனங்கள் நிரம்பிய அப்பூமியின் சில நிகழ்வுகளை மேலாண்மைப் பொன்னுச்சாமியின் பூச்சுமை புத்தகம் எழுத்துக்களில் காட்சியாய் வடித்திருந்தது.

புத்தகத்தைப் படிக்கப் படிக்க மனதில் பாரொமொன்று படிந்து விலக நேரம் பிடித்தது. பூச்சுமையில் அனைத்தும் சிறு கதைகள். என்னைப் பாதித்த ஒரு சிறுகதை “மைதானம்”.

பேச்சி என்கிற ஒன்பது வயதுச் சிறுமி தன் தாயின் துயரத்தில் பங்கெடுக்க தன் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்த தன் மைதானத்தை விட்டு தீப்பெட்டித் தொழிற்சாலைக்குச் செல்கிறாள். அங்கு தன் வயதின் காரணமாய் அடிபைப்பில் தண்ணீர் அடிக்க அதைக் கண்டு மேஸ்திரி திட்டுகிறான். கோபத்தில் அவரை எதிர்த்துப் பேசுகிறாள். மறு நாள் அவளை பஸ்ஸில் ஏற்றிக் கொள்ள மறுக்க அச்சிறுமிக்கு பயமேற்பட்டு விட, ஏஜெண்ட் ஏதேதோ பேசி சமாளித்து கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறான். பல பேர் முன்னிலையில் அவமானப்பட்ட அச்சிறுமியின் கண்களில் நீர்ப் பூக்கிறது. அதை மறைக்க அவள் சன்னலோரம் முகத்தை திருப்புகிறாள். அங்கு அவள் விளையாண்ட மைதானம் அவளை விட்டு தூரப் போய்க் கொண்டிருக்கிறது. அவள் தனக்குள் நினைக்கிறாள் “ விளையாடுவது தவறா?” என்று.

மனதைக் கனக்கச் செய்த சிறுகதை. அதன் தாக்கம் தீர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

வார்த்தைகளில் காட்சியைப் பிடிப்பது என்பது “ மேலாண்மை பொன்னுச்சாமி” அவர்களுக்கு கை வந்த கலை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு படம். மனித வாழ்க்கையின் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.  அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

இன்றைக்கு செய்தி தாளில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பவர் கட் ஆன நேரத்தில் பக்கத்து வீட்டுப் பசங்களால் ஒரு பெண்மணி கற்பழிக்கப்பட்டிருக்கிறார் என்று. பவர் கட் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறதோ தெரியவில்லை. தங்கம் விற்கும் விலைக்கு பவர் கட் பல பேரின் வாழ்க்கையை கட் செய்து விடாமல் இருக்க வேண்டும். அரசு விரந்து ஆவண செய்தால் நலம்.

- ஃப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Thursday, February 9, 2012

புத்தக இடுக்கினுள் மறைந்து கிடக்கும் மயிலிறகுகளும் ஒன்பது மணி நேர மின்வெட்டும்



கோவையில் இதுவரையிலும் காணாத மின்வெட்டு. காலையில் மூன்று மணி நேரம், மதியம் மூன்று மணி நேரம், இரவில் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்து அடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டு செய்கிறார்கள், இதுவும் போதாது என்று விடிகாலையில் ஒரு மணி நேரம் என்று மின்வெட்டினை அமல்படுத்துகின்றார்கள் மின்சார வாரியத்தார். மொத்தமாய் ஒன்பது மணி நேர மின்வெட்டு.

எங்கள் பகுதியில் காலை ஒன்பது மணிக்கே மின்சாரம் போய் விடுகிறது. ஆன்லைனில் வேலை பார்க்கும் என்னைப் போன்றோரின் கதியை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கஸ்டமருடன் தொடர்பு கொள்ள முடியவே இல்லை. இரவிலோ தொடரும் அசாதாரண மின்வெட்டினை நினைத்தாலே “டென்ஷன்” ஏறுகிறது. விடிகாலையில் மின்வெட்டு வேறு. பேசாமல் வீட்டினை சென்னைக்கு மாற்றி விடுங்கள், இப்பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்றார் நண்பர்.

நடக்கக்கூடிய காரியமா இது? ஏன் இப்படியானது தமிழகம்? தமிழகத்தில் மக்கள் வாழக்கூடிய சூழ் நிலைகள் ஒவ்வொன்றாய் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. மின்சாரம் இல்லையென்றால் மனிதன் எப்படித்தான் வாழ்வது? ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் மின்வெட்டு சரி செய்யப்படும் என்றார்களே, என்ன ஆயிற்று? யாரிடம் கேட்பது இப்பிரச்சினை பற்றி? விரைவில் சரிசெய்கிறோம் என்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடக்க மாட்டேன் என்கிறது.

கேபிள் டிவிக்கு 70 ரூபாய் கட்டணம் என்கிறது அரசு, ஆனால் எங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டர் 100 ரூபாய் வாங்குகிறார். ஒளிபரப்பும் சரியில்லை. ஏன் என்று கேட்டால் அங்கிருந்து அப்படித்தான் வருகிறது என்கிறார்கள். இதுபற்றி யாரிடம் முறையிடுவது? எங்கே கம்ப்ளைண்ட் செய்வது என்றே புரியவில்லை. அரசு போடும் உத்தரவை கேபிள் ஆபரேட்டர் கூட மதிக்கமாட்டேன் என்கிறார்கள்.

உறவுகளால், நண்பர்களால் பிரச்சினை வரும். துன்பம் வரும், துயரங்கள் வரக்கூடும். ஆனால் வாழ்க்கையில் பிரச்சினைகளை அரசே உருவாக்குகிறது என்பது கொடிய விஷயம்.

தலைப்பிற்கும் இப்பதிவிற்குமான சம்பந்தம் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

மேலே இருப்பது புலம்பல்கள். எழுதியாவது மன ஆற்றாமையை தீர்த்துக் கொள்ளலாம் என்று எழுதியதால் மனவெழுச்சி கொஞ்சம் குறைந்திருக்கிறது.

மதத்திற்கு மனிதன் தேவையா? இல்லை மனிதனுக்கு மதம் தேவையா? என்பது பற்றிய முகத்தில் அறையும் அப்பட்டமான உண்மை பற்றிய பதிவினைத்தான் எழுத நினைத்தேன். ஆனால் ஆளும் அரசால் படும் வேதனை முன்னே வந்து நின்று கொண்டு மூளையை வேலை செய்ய விடமாட்டேன் என்கிறது. ஆகவே மின்சாரம் இருக்கும் போது, நேரம் கிடைக்கும் போது எழுத முயற்சிக்கிறேன். அதுவரை

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Sunday, February 5, 2012

தாம்பத்ய ரகசியம் என்பது என்ன?





”86 வயசு தம்பி” என்றார். இடமொன்றினைப் வாங்குவதற்காக பார்வையிடச் சென்றிருந்த போது, அருகிலிருந்த வீட்டில் வாயிலில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தன் பெரியவரிடம், தண்ணீர் கேட்க, கொடுத்த முதியவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது இப்படி.

”13 குழந்தைகள்” என்றார் தொடர்ந்து. விழிகள் விரிய அவரைப் பார்த்தேன். வீட்டுக்கார அம்மாள் சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்றார் மேலும் தொடர்ந்து. சுவாரசியமான மனிதராக இருப்பதை விட அனுபவசாலியாய் இருக்கின்றாரே, அவருடன் சற்றே உரையாடலாம் என்று நினைத்து, காரை ஓரமாக நிறுத்தச் சொல்லி, வீட்டு வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தேன்.

முதியவரின் மனைவி வீட்டினுள் இருந்து வந்து வரவேற்றார். பூமி வாங்கவா வந்தீர்கள் ? என்று விசாரணையை ஆரம்பித்து, கல்யாணம் ஆகிடுச்சா, எத்தனை குழந்தைகள் என்று தொடர, நானோ ”உங்க அளவுக்கு இல்லை பாட்டி, ஏதோ என்னால் முடிந்தது ஆணொன்று பெண்ணொன்று ”என்றேன். பாட்டி ரகளையான ஆள் போல. பேச்சில் எள்ளலும், துள்ளலும் விளையாடியது.

”இந்தக் கிழவனிருக்காரே, பெரிய ஆளு. மூனு மாசத்துக்கொருதடவை அணைச்சாருன்னா, இடுப்பொடுஞ்சி போகும். அடுத்து பத்து மாசத்துக்கு பக்கத்துலே விட மாட்டேன். போதும் போதும்னு சொன்னாக்கூட விடாமல், அதைச் சொல்லி, இதைச் சொல்லி 13 பேராக்கிட்டாரு தம்பி” ன்னாரு பாட்டி.

13 பெருக்கல் 10 - 130 மாதம் கிட்டத்தட்ட கல்யாணம் ஆகி பதினோறு வருடமாய் அலுக்காமல் சலிக்காமல் பிள்ளை பெற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள் இருவரும். அத்தனை பிள்ளைகளும் உயிரோடாதினிருக்கின்றார்களாம். திருமணமாகி பேரக்குழந்தைகளுடன் வசித்துக் கொண்டிருக்கிறார்களாம். திருமணம் ஆன ஒரு மாதத்தில் தனிக்குடித்தனம் வைத்து விடுவாராம் பெரியவர். இப்படியே அனைவருக்கும். பெண்பிள்ளைகளுக்கு காலத்தே சொந்தத்தில் திருமணம் செய்து வைத்து விடுவார்களாம். வரதட்சிணைப் பிரச்சினையெல்லாம் இல்லை தம்பி, ஏன்னா சொந்தக்கார பசங்களுக்கே பொண்ணுங்களைக் கொடுத்து, பெண் எடுத்தேன் என்றார் பெரியவர்.

இரவில் நீண்ட நேரம் கழித்து பார்ட்டிக்குச் சென்று வீடு திரும்பிய மனைவியைப் பற்றி அவள் அம்மாவிடம் ரிப்போர்ட் சொன்ன ஒரே காரணத்திற்காக, மருமகன் மீது பாகிஸ்தான் தீவிரவாதி இல்லை இல்லை சைனாக்காரன் அளவுக்கு பகை கொண்டு டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்த பெண்மணியைப் பார்த்திருக்கிறேன். அதை பெண் சுதந்திரம் என்றுச் சொல்லி சப்பைக்கட்டு கட்டிய கணவருக்கு இன்று ஒரு வாய் சோறு போடக்கூட நேரமில்லாமல் பார்ட்டி, மீட்டிங், பேச்சு, அரசியல் என்று அலைந்து கொண்டிருக்கும் பெண்மணியை சமூகத்தில் பெண்ணுரிமைவாதி என்று பலர் பேசக் கேட்டிருக்கிறேன்.

இப்படியான ஒரு காலகட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, தள்ளாத வயதில் தன் கணவனின் சளித் தொந்தரவிற்கு “தூதுவளை ரசம்” வைத்துக் கொண்டிருக்கும் முதிய பெண்மணியைப் பார்க்கின்ற போது மனதுக்குள் ஆயாசம் எழுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

எனக்குத் தெரிந்த அரசியல்வாதிப் பெண்மணி ஒருவரைப் பற்றி இங்கே நான் உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும். கணவன் சம்பாதித்துக் கொடுக்கும் காசில் குடும்பம் நடத்த தெரியாதவள் பெண்ணே அல்ல என்பார்கள் கிராமப்புறத்தில். இந்தப் பெண்மணிக்கு கணவன் சம்பாதித்துக் கொண்டு வரும் காசு வாரம் ஒரு முறை சேலை வாங்கவே போதவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அருகாமை வீட்டிலிருந்த ஒரு கிளைச்செயலாளர் ஒருவருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. கிளைச் செயலாளர் கட்சிக்குப் பணி செய்தாரோ இல்லையோ, இந்தப் பெண்மணிக்கு நன்றாக ஆயில் சர்வீஸ் செய்து, ஒருவழியாக பிரச்சாரத்திற்கு வந்த தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன் தொடர்பாக தலைவருக்கு இவர் செய்த சர்வீஸ் காரணமாக, உயர்ந்த மாவட்டப் பிரதி நிதித்துவம் கிடைக்க காசு கொட்ட ஆரம்பித்தது. அதன் பிறகு அந்த தலைவருக்கு சப்ளை செய்யும் பிரதான வேலையைச் செய்ய ஆரம்பித்து என்னென்னவோ ஆகி விட்டது. இத்துடன் அரசியல் பெண்மணியைப் பற்றி முடித்து விடுகிறேன். மேலும் கிளறினால் “ நாறிப் போய்விடும்”.

மிடில் கிளாஸ் குடும்பங்களிடம் காணப்படும் ஜாதி வெறிகள் பணமுடையவர்களிடம் கிடையாது. பெரும் தனக்காரர்கள் பணம், பதவிகளை முன்வைத்து திருமணங்களை நடத்துகின்றனர். அவர்கள் ஜாதி பார்ப்பதில்லை. ஏனென்றால் பணத்திற்கு ஜாதி கிடையாது. ஏழ்மையான குடும்பத்திற்கும், மிடில் கிளாஸ் குடும்பத்திற்கும் ஜாதி, ஜாதகம் போன்றவை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை. இது ஒரு மாயவலை என்றே நினைக்கத்தோன்றுகிறது.

இதற்கிடையில் பெண்ணீயவாதிகள் பெண்களுடனான தனிமையை பெரிது படுத்தி, நீ இதற்காகவா பிறப்பெடுத்தாய் என்றெல்லாம் ஊதி ஊதி குடும்ப வாழ்க்கைக்கு வெடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனிமை மனிதர் அனைவருக்குமான பொதுவான ஒன்று. அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி. பெண்களின் வாழ்க்கையில் வெறுமை மட்டுமே மிச்சம் என்பதாயும், அவர்கள் ஆண்களின் ஆக்கிரமிப்பில் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதாயும் இல்லாததும், பொல்லாததுமான புரட்டுக்களை கட்டுக்கதைகளாக்கி, குடிப்பதையும் கண்டவனுடன் படுப்பதையும் பெண்ணுரிமை என்று பேசி வருபவர்களால் குடும்ப அமைப்பு சீரழிந்து கொண்டிருக்கிறது. எங்கோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ செய்யும் தவறுகளை சில பத்திரிக்கைகள் பெரிது படுத்தி, பெரும்பான்மை சமூகத்தில் இந்த வகையான கொடுமைகள் நடந்து கொண்டிருப்பதாய் கதை விட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, பெண்களைத் தனிமைப்படுத்தி தன் இச்சைகளுக்கு ஆளாக்கி வருகின்றனர். ஆணோ பெண்ணோ தனக்காக மட்டுமே வாழ முடியாது. மனிதர்கள் பிறரிடமிருந்து பெற்று கொண்டு, பெற்றுக் கொண்டதை பிறருக்கு வழங்கி வாழ வேண்டியவர்கள்.

திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்க்கையில் சலிப்பு தட்டி விடக்கூடாது என்பதற்காகத்தான் காலத்தே குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். இல்லற இன்பத்தில் சலிப்புத் தட்டுமுன் குழந்தை உருவாக்கம் ஒரு நீண்ட இடைவெளியை தம்பதியினரிடையே உருவாக்கி விடும். தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த இல்லற இன்பம் வாரிசுக்காக தள்ளி வைக்கப்படும் போது, மனைவியின் மீதான ப்ரியம் கணவனுக்குக் குறைந்து விடாது. அவள் நல்ல முறையில் குழந்தை பெற்று வந்து மீண்டும் தனக்கு இல்லற இன்பத்தைத் தர வேண்டும் என்ற ஆவலில் கணவன் ஆசையாய் உழைத்துக் கொண்டிருப்பான். மனைவியைக் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து, அவள் வேண்டுவன வாங்கிக் கொடுத்து அரவணைத்து வருவான். அந்தப் பாட்டியும் பெரியவரும் இத்தகைய வாழ்க்கையை வாழ்ந்ததால் தான் 13 குழந்தைகள் பெற முடிந்தது. இன்னும் அவர்களுக்கிடையேயான இல்லறம் இனிதே நடந்து கொண்டிருக்கிறது.

ஆணும் பெண்ணும் தனியாய் வாழலாம் என்று இயற்கை நினைக்கவில்லை. அதை சில செக்ஸ் வெறி பிடித்த மனித அரக்கர்கள் நினைக்கின்றார்கள். ஆகையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட இத்தகைய பெண்ணீயம் பேசும் வாதிகள், பத்திரிக்கைகளிடம் இருந்து தன் குடும்பத்தை மட்டுமல்லாது தன் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Sunday, January 29, 2012

சேலை கட்டினால் கேன்சர் வரலாம்


”நிம்மதியாக வாழ வேண்டுமா, யார் வாயிலும் விழாமல் வாழக் கற்றுக் கொள்” என்பார்கள். பிரச்சினைகள் நம்மைத் தேடி வருவதில்லை, அதை நாம் தேடிக் கொள்கிறோம் என்பார்கள். அதை எனது நண்பர் சொன்ன உண்மைச் சம்பவம் மூலம் அறிய நேர்ந்தது. ஆனானப்பட்ட ஹிட்லருக்கும் விதி ஒரு நாள் குறித்தது. உலகையே வெல்ல முயன்ற அலெக்சாண்டருக்கும் விதி தன் முடிவை எழுதியது. உலகில் நிரந்தரமானது எதுவுமில்லை அது எதுவானாலும் சரி !

பெண் பிள்ளை சரியில்லை என்றால் குடும்பம் மட்டுமல்ல, பரம்பரையே படுகுழிக்குள் சென்று விடும். அப்படி ஒரு அடாவடியான பெண்மணி ஒருவருக்கு விதி அடித்த ஆப்பு இருக்கிறதே அது தான் இந்தக் கதை. இந்தக் கதை நடந்தது திருநெல்வேலிப்பக்கம். அந்தப் பெண்மணி சற்றே வசதியானவள். திமிர், அகங்காரம், ஆணவம், எடுத்தெறிந்து பேசும் குணம் இவற்றின் மொத்த உருவம் அந்தப் பெண். கணவனோ அப்பாவி. வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு வசூல் செய்து கொண்டிருக்கிறாள் அப்பெண். வாடகைக்கு வருவோரை ஆட்டிப் படைப்பது அவளின் பொழுதுபோக்காம். பணம் பற்றிய கவலை இல்லை என்றால் மனிதனுக்கு வேறு குணங்கள் வந்து விடும். இப்படியான பெண்மணிக்கு விதி ஒரு முடிவு கட்ட எண்ணியது.

அவளின் வீட்டுக்கு குடி வந்திருந்த குடும்பத்தில் ஒருவன் ஏதோ குடும்பப் பிரச்சினையில் அவனது நண்பனைக் கொன்று விட்டான். அவனை மூட்டையாகக் கட்டி வெளியில் கொண்டு போய் போட்டு விட வீட்டு ஓனரின் பைக்கை இரவல் கேட்க, அவரும் கொடுத்திருக்கிறார். ஒரு வாரத்தில் கொலையாளியை ட்ரேஸ் செய்த போலீஸார், வீட்டு ஓனரையும் கைது செய்து சிறையில் அடைத்து, கொலைக்கு சாட்சியாய் பைக்கையும் பறித்து விட்டார்கள். ஒருவழியாக ஜாமீனில் வெளிவந்து செத்த பாம்பாய் நடந்து கொண்டிருக்கிறார் அந்த ஆசாமி. இப்போது அந்தப் பெண்மணி அரண்டு போய் திரிகின்றாராம்.

இப்படி ஒரு சம்பவம் தன் வாழ்க்கையில் நடக்கும் என்று அந்தப் பெண்மணி நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார். கோடியாய் பணமிருந்து என்ன பலன்? ஜெயிலில் போட்டு விட்டார்களே? இனி அந்த அவமானத்தை எங்கு போய் துடைக்க? இதற்குத்தான் சொல்வார்கள் “ஓவராக ஆடக்கூடாது” என்று.

அடக்கம் இல்லையென்றால் இறைவன் அடக்கி விடுவான்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சேலை உடுத்தும் பெண்கள் பயன்படுத்தும் பாவாடை நாடாவை இறுக கட்டுவதால் கேன்சர் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்று செய்தி வெளியாகி இருக்கிறது. நாடா அகலமானதாக இருக்க வேண்டுமாம். அதுவும் இறுக்கமாய் கட்டக்கூடாதாம்.  இக்கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Saturday, January 28, 2012

சரியாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்

கல்கண்டில் வெளியாகி இருக்கும் ஒரு கட்டுரை உடல் நலத்திற்கு சில நல்ல கருத்துக்களை கொண்டிருப்பதால் அதை இங்கு அவர்கள் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். நன்றி : கல்கண்டு மற்றும் ஜே.டி.எஸ்

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

உடல் எடையைக் குறைக்க சரிவரச் சாப்பிடுங்கள்

உங்களுக்குப் பிடித்தமான உணவுகளை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் உங்கள் இடுப்பளவும் குறையும். நீங்கள் விரும்பியதை விட இரண்டு மடங்கு வேகத்தில் உடல் பருமன் குறையவும் வாய்ப்புள்ளது. மென்று சாப்பிடுவதால் பசி எடுப்பதும் குறைவதால் உடல் பருமன் குறைவதும் உறுதி.

உதாரணமாக உணவிற்குப் பிறகு காபி, தேநீர் அருந்தினால் இரும்புச் சத்து உடலில் சேராது என்பார்கள். ஆனால் உணவிற்குப் பிறகு அருந்தும் காபி அல்லது தேநீர் வளர்சிதை மாற்றத்தை 12% கூடுதலாகத் துரிதப்படுத்துவதால் சாப்பிட்ட உணவுகள், குறிப்பாக கொழுப்புகள் தங்காமல் எரிக்கப்பட்டு ஜீரணமாகி விடுகின்றன. சாப்பிட்ட உணவில் கண்டிப்பாக புளி, மிளகாய், ஏலக்காய், இஞ்சி என ஏதாவது ஒன்று இடம் பெற்றிருக்கும். இவற்றில் உள்ள வைட்டமின் சி, தேநீரில் உள்ள (காபியில் உள்ள) இரும்புச் சத்தை அழிக்காமல் ஜீரணிக்க வைத்து விடும்.

எனவே, மதியம் பிரியாணி, பரோட்டா என்று சாப்பிட்டால் ஒரு கப் தேநீர் அல்லது காபி அருந்துங்கள்.

பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், அசைவம் என எதைச் சாப்பிட்டாலும் அவை வேகமாக எரிய நன்கு மென்று சாப்பிட்டு ஒரு கோப்பை தேநீர் அருந்துங்கள். ஆப்பிள், திராட்சை போன்றவற்றை நன்கு மென்று சாப்பிடுங்கள்.

கலோரியை வேகமாக எரிப்பதுடன் குறைவாகச் சாப்பிட வைப்பது கைக்குத்தல் அரிசி, சம்பா ரவை, கேழ்வரகு, சோளம், பருப்புவகைகள். பருப்பு வகை 50% என்ற கணக்கில் சாப்பிட்டால் குறைவாகச் சாப்பிடுவோம். இவற்றில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பும் துத்தநாக உப்பு அதிகம் சாப்பிட்ட திருப்தியைத் தரும். இதனால் கு றைந்த அளவு உடலில் சேர்ந்த உணவும் உடலில் வேகமாக எரிக்கப்படும்.

மூன்றாவதாக சக்தி தரும் உணவுகளையும் நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் சேர்க்காத கறுப்பு தேநீரிலும் காபியிலும் உள்ள காஃபைன், சாப்பிட்ட உணவுகளை வேகமாக எரிக்கிறது. பால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துங்கள். ஐஸ் கிரீம் சாப்பிடாமலும் பார்த்துக் கொள்ளவும். கிரீன் டீயும் பால் சேர்க்காமல் அருந்த வேண்டும்.


கிரீன் டீயில் காஃபைன் இல்லை. ஆனால், காட்சின்ஸ் என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. இது தினமும் 80 கலோரிகளை வளர்சிதை மாற்றமடைய விரைவுபடுத்தி எரித்துவிடுகிறது.

கறுப்பு நிற சாக்லெட்டுகளில் காஃபைன், காட்சின்ஸும் இருப்பதால் தினமும் 18 கிராம் அளவே சாப்பிட்டு வரவும். இவ்விரண்டும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் கலோரி வேகமாக எரிக்கப்படும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது சாக்லெட்டை சாப்பிடுவது நல்லது.

சாக்லெட்டில் கொழுப்பும் கலோரியும் அதிகம். எனவே 18 கிராமைத் தாண்டக்கூடாது.

நான்காவதாக, உடலுக்கு வெப்பம் தரும் உணவுகளைச் சேர்க்க வேண்டும். சமையலில் இஞ்சி, மிளகு, பூண்டு, கடுகு, கிராம்பு, ஏலக்காய் சேரவேண்டும். இவை கொழு ப்பையும் தீவிரமாக எரித்து விடும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் போல எனத் தினமும் சாப்பிட்டால் இவை வரமிளகாய் துவையல், கறிவேப்பிலைத் துவையல், மிளகு போன்றவை 100 கலோரியை தினந்தோறும் எரிக்கும்.

இத்துடன் கொழுப்பு நீக்கப்பட்ட, பால், தயிர், இரண்டு டம்ளர் சுடுநீர், மூன்று தக்காளி, அன்னாசிப்பழம், 100கிராம் திராட்சை போன்றவையும் உணவில் இடம் பெறுவது நல்லது.

சாதம் ஒரு கரண்டி அல்லது இரண்டு கரண்டி என்று குறைத்துக் கொண்டு மற்ற உணவுகளை சற்று தாராளமாக சேருங்கள். நன்கு மென்றும் சாப்பிடுவதே மிக முக்கியமானது. இதுவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும்.

- கே.டி.எஸ்.

Friday, January 27, 2012

கண் திருஷ்டி பிரச்சினை

மனிதனின் சில துன்பங்களுக்கு காரணம் பிறரின் கண் பார்வை. நான் அதை இது நாள் வரையிலும் அனுபவித்து வருகிறேன். எனக்கு திருமணமான புதிது. நானும் மனைவியும் தனியாக குடித்தனம் நடத்தி வந்தோம். அன்றொரு நாள் மதியம் மனைவி சாப்பாடு கொண்டு வந்தார். அப்போது அடிக்கடி வியாபாரம் தொடர்பாய் யூபிஎஸ் விற்கும் விற்பனை பிரதிநிதி வந்தார். ஆஃபீஸ் அறையின் கதவு மூடியிருந்தும், தட்டினார். யாரென்று பார்க்க கதவைத் திறந்த போது உள்ளே வந்து விட்டார். உள்ளே வந்தவரை வெளியேவா போகச் சொல்ல முடியும். அப்போது தட்டில் சாப்பாடு பரிமாறி இருந்தது. தட்டைப் பார்த்தார், என்னைப் பார்த்தார், “வாழ்ந்தால் உங்களைப் போல வாழ வேண்டும் சார் !” என்றார். சாப்பிடுங்கள் என்றுச் சொல்லியும் கேட்கவில்லை.

நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ தெரியவில்லை, அன்றிலிருந்து சாப்பாடு கொண்டு வரமுடியவில்லை. நேரத்திற்குச் சாப்பிடவும் முடியவில்ல நீண்ட காலத்திற்கு.

நானும் குழந்தைகளோடு மனைவியும் எங்காவது சென்று வந்தால் சரியாக ஒரு மாதம் எங்களுக்கு காய்ச்சல் வந்து விடும். படாத பாடு படுவோம். சிங்காநல்லூரிலிருக்கு மசூதிக்குச் சென்று கயிறு போட்டுக் கொண்டு வந்தால் உடனடியாக காய்ச்சல் நிற்கும். அதே போல வீறு வீறு என்று அழுதுகொண்டு காய்ச்சலில் அவதிப்படுவர்களை மந்திரித்து தாயத்துக்கட்டுபவரிடம் அழைத்துச் சென்று வந்த பிறகு குழந்தை அது பாட்டுக்கு சிரித்துக் கொண்டு, ,காய்ச்சல் நின்று போய் இருக்கும். இரண்டு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன் மேற்கண்ட சம்பவங்கள் உண்மையாய் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன.

என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்டால், வரக்கூடிய திருஷ்டிகளை வேற்றுப்பக்கமாய் திருப்புவது தான் பரிகாரம் என்கிறார்கள். வீடென்றால் வாழை வைக்கலாம். அல்லது திருஷ்டிப் பூசணிக்காய் கட்டலாம். மனிதனென்றால் கருப்புக் கயிறு கட்டலாம், இல்லை தாயத்து அணியலாம்.

கண் திருஷ்டி என்பது மனிதனைத் தாக்கும் கொடிய ஒரு வகை பார்வை நோய்.  அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது என்பது முடியவே முடியாத காரியமாக இருக்கிறது.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Thursday, January 26, 2012

ஒரு குவளை நீருக்குள் காந்தி - ஆத்மா பற்றிய அறிவியல் விளக்கம்


நேற்றைக்கு முதல் நாள் இரவு ஒன்பது மணி போல நேஷனல் ஜியாகரபி சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வுலகம் அணுக்களால் ஆனது என்றார்கள். குடிக்கும் தண்ணீருக்குள் கோடிக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன என்றார்கள். எந்த அணுவும் அழிவதில்லை என்றார்கள். அது உருவம் மட்டுமே மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீருக்குள் மஹாத்மா காந்தியை உருவாக்கிய அணுக்கள் இருக்கலாம். அதாவது சுருக்கமாய்ச் சொன்னால் நாம் காந்தியைக் கூட குடித்திருக்கலாம்.

இந்து மார்க்கத்தில் ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்றும், உடல் மட்டுமே அழிகிறது என்றும் ஆனால் ஆத்மா அழிவதே இல்லை என்றும் விரிவாக எழுதி இருக்கின்றார்கள்.

ஆன்மீகத்தினைப் புரிந்து கொள்ள எளிதில் முடியாது என்று எனது நண்பர் ஒருவர் சொல்வார். ஆன்மீகத் தத்துவங்கள் பல அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. எனது வாழ்வில் நான் பல உண்மை ஆன்மீகவாதிகள், போலி ஆன்மீகவாதிகளுடன் பழகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஜீவாத்மாவிற்கு(மனிதனின் ஆத்மா) அழிவில்லை என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவ்வாக்கியம் எனக்கு குழப்பத்தையே இதுகாறும் தந்து கொண்டிருந்தது. ஆனால் அதை ஜியாகிரபிக் சேனல் நிவர்த்தி செய்து விட்டது.

ஆமாம் நண்பர்களே, ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான மேலதிக விபரத்திற்கு நீங்கள் நேஷனல் ஜியாகிரபிக் சேனலைத் துருவிப் பார்க்கவும்.

அணுக்களால் உருவம் மாற்றமடையுமே தவிர அந்த அணு அழிவதில்லை என்பதுதான் ஆத்மா அழிவதில்லை என்பதாகும். அதாவது அணுக்கள் ஒன்று சேர்ந்து மனிதனாய், விலங்காய், செடியாய், கொடியாய், புல்லாய், பூண்டாய், மரமாய், தண்ணீராய் மாறும். அதே அணுக்கள் பிறகு வேறொரு மாற்றம் பெரும். இதைத்தான் இன்று அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. இதைப் பற்றி முன்னே சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. அணுவை ஆத்மா என்றார்கள். அவ்வளவுதான். அதைத்தான் நாம் குடிக்கும் நீருக்குள் காந்தியை உருவாக்கிய அணுவோ அல்லது அன்னை தெரெஸாவை உருவாக்கிய அணுவோ இருக்கலாம். இதை வைத்துப் பார்க்கும் போது, முன் ஜென்மம் என்பதெல்லாம் இருக்க 100% சதவீத வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மை, நம் ஆன்மீகத்தில் என்றோ கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை நினைக்கும் போது, ஆன்மீகத்தின் வழி சென்றால் அறிவியலில் என்னென்னவோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம் என்று நம்பிக்கை வருகிறது.

இந்துக் கலாச்சாரத்தின் மேன்மைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது அல்லவா?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Tuesday, January 24, 2012

நடிகர் விஜய்யின் சரியான நகர்தல்


குருவி படத்தில் விஜய் எங்கிருந்தோ பறந்து பறந்து வந்தெல்லாம் அடித்து தூள் கிளப்புவார். சினிமா தியேட்டரில் இண்டர்வல்லில் ரசிகன் ஒருவன் தன் நண்பனிடம் இது பற்றி அலுத்துக் கொள்ள, "நண்பன் இதே சூர்யா செய்தால் ஒத்துக் கொள்வோமா? இதற்கு விஜய்தான் லாயக்கு" என்றான். சினிமா தியேட்டருக்கு ரெகுலராக வருகை தரும் ரசிகன், தன் நண்பரான தியேட்டர் மேனேஜரிடம் “ என்னாங்க இது, காத்துல பறக்கறாரு, படம் பார்க்க புடிக்கல காசைக் கொடுங்க” என்றுச் சொல்லி வந்து நின்றார். இதெல்லாம் விஜய் படத்தின் ரிலீசின் போது அவரின் ரசிகர்கள் பேசிக் கொண்டது.

ஆனந்த விகடன் நேர்காணலின் போது பிரபல இயக்குனர்களின் லிஸ்ட்டில் விஜய்யின் பெயரே இல்லை என்று எழுதி இருந்தார்கள். அப்போது புது இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்றுச் சொன்ன விஜய் தற்போது உண்மை நிலவரத்தைப் புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

அவர் விரும்பிய, நம்பிய பறந்து பறந்து போடும் சண்டை இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை, ஆனால் படம் வெற்றி. விஜய்யிடம் என்ன பிரச்சினை என்றால் தான் செய்யும் சில அசட்டைகளை அவர் இன்னும் விடாமல் நடிப்பில் பயன்படுத்துவதுதான். ஒரே மாதிரியான அசட்டைகள் எரிச்சலை உருவாக்கும் என்பதை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று நண்பன் படத்தினைப் பார்க்கின்ற போது தெரிய வருகின்றது.  இது மாதிரியான விஷயங்கள் எல்லாம் நண்பன் படத்தின் வெற்றிக்கு முன்னால் காணாமல் போய் விட்டன என்பதால் அதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபிக்கத் தேவையில்லை.

இவருக்குப் பின்னால் வந்த சூர்யா பிரபல இயக்குனர்களின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார். சூர்யா நடிப்பில் எங்கோ சென்று விட்டார். தனுஷோ இன்னும் ஒரு படிமேல் சென்று விட்டார். போக்கிரி, வில்லு, வேட்டைக்காரன், சுறா போன்ற அக்மார்க் அட்டர் பிளாப்புகளால் தன் இமேஜ்ஜை வேறு விதமாக புரிந்து கொண்டிருந்தார் விஜய். ஆனால் தற்போது அவரின் நண்பன் படம் அந்த அடிதடி இமேஜ்ஜை உடைத்து, அவருக்கு வேறு விதமான பாதையைக் காட்டி இருக்கிறது. அவர் நிச்சயம் தற்போது தன் நிலையையும், ரசிகர்களின் போக்கினையும் புரிந்து கொண்டிருப்பார் என நம்பலாம்.

இயக்குனர் சங்கருக்கென்று இருக்கும் ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்திருக்கும் விஜய், அடுத்து வரப்போகும் முருகதாஸின் “துப்பாக்கி”, கவுதம்மின் “யோகன் அத்தியாயம் ஒன்று” போன்ற படங்களினால் நிச்சயம் அமீர்கான் போன்ற சிறந்த நடிகராக மிளிர்வார் என்று நம்பலாம். இயக்குனர் முருகதாஸுக்கு என்று இருக்கும் ஆடியன்ஸ், கவுதமிற்கு என்று இருக்கும் ஆடியன்ஸ் என்று பல பிரபல இயக்குனர்களின் ஆடியன்ஸ்களை தன் பக்கம் ஈர்ப்பதில் தான் நடிகரின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். வியாபாரமும் அதிகமாகும். இந்த நடிகரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் வரும். அதற்காக புதிய இயக்குனர்களின் படங்களை ஒத்துக் கொள்ளக் கூடாது என்றுச் சொல்லவில்லை. கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். ரசிகர்களைக் கவரும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும். தமிழ் சினிமா உலகின் சாபக்கேடு கதை திருட்டு. அதை விஜய்யின் தந்தை செய்கிறார் என்று சில சர்ச்சைகள் இருக்கின்றன.  இதன் காரணமாக கூட நல்ல  நல்ல கதைகள் கூட விஜய்யை எட்டி விடாமல் போகலாம். விஜய் இது போன்ற சின்ன சின்ன விசயங்களைச் சரி செய்து கொள்ள வேண்டியது அவரின் வெற்றிக்கு முக்கியம்.

இப்போதிருக்கும் காலம் எம் ஜி ஆர் காலம் அல்ல. இது டெக்னாலஜி ஆட்சி செய்யும் டெக் உலகம். அதை நடிகர்கள் உணர்ந்து தன் மீதான வியாபார உத்தியைப் பெருக்க வழி வகை செய்ய வேண்டும். அதை விடுத்து, “ நான் போகும் பாதை தனிப்பாதை” என்றெல்லாம் பஞ்ச் டயலாக் விட்டு, தானும் ரஜினி போன்று வரலாம் எனக் கனவுக் கோட்டை கட்டினால் அது காற்றின் சிறு சலசலப்பில் கலைந்து போகும்.

விஜய் அதை உணர்ந்து கொண்டால் மிக நல்ல நடிகராக பரிணமளிக்கலாம். இல்லை என்றால் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான, பெண்களால் அதிகம் காதலிக்கப்பட்ட “திரு மோகன்” கதி போல ஆகி விடுவார் என்பது நிச்சயம். உலகம் மாறிக்கொண்டிருக்கிறது, அதே போல மாற்றப்பட்ட வியாபார உத்திகளை புகுத்தாத எவரும் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்