குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, November 15, 2011

புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்

கீரீம்,  எடிபிள் கம் ஆகியவற்றை எடுத்த பிறகு உருவாகும் எண்ணெய் தான் ரீஃபைண்டு ஆயில். முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான் ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும் போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம். இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான், ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். கூவிக் கூவி மீடியாக்களில் பல்வேறு கலர் கலரான விளம்பரங்கள் மூலம் இன்று சமையல் எண்ணெய் மார்க்கெட் படு சூடு பிடித்திருக்கின்றது. இந்த எண்ணெய் தான் பல்வேறு நோய்களுக்கும் காரணம் என்று விஜயபாரதத்தில் வெளியான கட்டுரையை தினமணிக் கதிர் வெளியிட்டு இருக்கிறது. கீழே இருப்பது அதன் கட்டிங். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


நேற்றைய பதிவான “வெள்ளை மரணம் - பரோட்டா” பற்றிய பதிவிற்கு ஒரு சகோதரர் அச்செய்தியை அனுப்பும்படி கோரியிருந்தார். அவருக்காக கீழே அந்தச் செய்தியின் பட இணைப்பை வெளியிட்டு இருக்கிறேன்.

  
குறிப்பு : முடிந்த வரையில் எனது பிளாக்கில் எனது அனுபவங்களையும், நண்பர்களின் அனுபவங்களையும் எழுதி வருகிறேன். படிக்கும் ந்ண்பர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற ஆவல்தான் காரணம். பின்னூட்டத்தை நிறுத்தி விட்டேன். என்னை மெயில் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவும். அல்லது போனில் அழைக்கவும்.

விரைவில் ஹாஸ்பிட்டல்களில் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள உங்களை அறிவுறுத்தும் ஒரு பதிவினை எழுத இருக்கிறேன். இது உங்களுக்கு நிச்சயம் உதவிகரமாய் இருக்கும் என நம்புகிறேன்.

இதைத் தொடர்ந்து லே அவுட்களில் சொத்துக்கள் வாங்குவது பாதுகாப்பானதா என்பதைப் பற்றியும் எழுத உள்ளேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

-அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *

Monday, November 14, 2011

வெள்ளை மரணம் - பரோட்டா

 
 
 
 
 
நேற்றுக் காலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை படித்துக் கொண்டிருந்த போது, பரோட்டா பற்றிய பத்தியை படித்தேன். ஆச்சரியமும், வெறுப்பும் ஒருசேர உண்டாகியது.

நன்கு அரைக்கப்பட்ட கோதுமையுடன் பென்சாயில் பெராக்ஸைட் சேர்த்த பின்னர்  உருவாவதுதான் “மைதா”. இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் எதுவும் உடலுக்கு நன்மை செய்வதை விட தீங்குகளைத் தான் தருமாம். இந்த மைதா மாவை ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கிறதாம்.

மைதா உணவுகள் கிட்னி ஸ்டோன் உருவாக காரணமாக இருக்கின்றனவாம். அதுமட்டுமல்ல இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்கும் என்று கோழிக்கோடு மெடிக்கல் கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக வேலை செய்யும்டாக்டர் மாயா சொல்லி இருக்கிறார் என்கிறது அப்பத்தி.

தமிழகம் மட்டுமல்ல கேரளாவில் மைதா உணவுகள் அதிக அளவு உண்ணப்படுகின்றன. உடலுக்குத் தீங்கு செய்யும் இவ்வகையான மைதா உணவுகளைத் தவிர்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் உடலுக்கு நாமே தீங்கினை கொடுத்தது போலாகி விடும். இது பற்றிய முழு கட்டுரையும் நேற்றைய (13.11.2011) சண்டே எக்ஸ்பிரஸ்ஸில் “ WHITE DEATH ON YOUR PLATE - MAIDA, THE COMMONLY USED WHITE FLOUR, COMES WITH A LONG LIST OF ILL -EFFECTS - BY RAGHURAM.R) இருக்கிறது. எனது டிரைவர் நண்பருக்கு கிட்னி ஸ்டோன் வந்து விட்டது. இத்தனைக்கும் அவர் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர். காரணம் என்னவென்று நேற்றுத்தான் புரிந்தது.
 
இந்திய அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் உலகிலேயே அதிக சர்க்கரை வியாதி உள்ள நாடு என்ற அடைமொழி பெற்ற இந்தியா, உலகிலேயே அதிக நோயுள்ளவர்களின் நாடு என்ற அடைமொழியைப் பெற்று விடும் தூரம் அதிகமில்லை. ஆரோக்கியத்திற்கு கேடான எவற்றையும் விற்க அனுமதி மறுக்கப்பட்டாலே போதும். இந்திய அரசு செய்யுமா என்பதெல்லாம் கடவுளுக்கு வெளிச்சம். அரசாங்கம் செய்வதற்கு முன்பு நாம் எந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு தரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். பரோட்டா உணவு ஆரோக்கியமற்ற உணவு என்பதை. அதையாவது நாம் செய்யலாம்.

ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய் என்று இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த ஒரு வகை எண்ணெய் பற்றி நாளை எழுதுகிறேன். படித்தவுடன் உங்களுக்கு நிச்சயம் திகில் தான் கிளம்பும். கோவை மட்டுமல்ல தமிழகமெங்கும் கடை விரித்திருக்கும் ஒரு மெடிக்கல் செண்டரில் என் நண்பருக்கு நடைபெற்ற திகில் அனுபவத்தையும் எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் !
 
- அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * * * *


Saturday, November 12, 2011

சிவன்-எமன்-உணவு

 (ராமேஸ்வரம் ஆயிரம் கால் மண்டபம்)
 
சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று வர சந்தர்ப்பம் கிடைத்தது.  காவிரி புரண்டோடும் இயற்கை கொஞ்சும் அழகிய பூமியான தஞ்சாவூரில் இருக்கும் எனது நெருங்கிய நண்பரொருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பரின் அம்மா, வெகு ஆச்சாரமானவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொல்லியது கீழே.

மனிதர்களின் ஆயுள் முடிந்த பிறகு எமன் வந்து பாசக்கயிற்றை வீசி மேலே அழைத்துச் செல்வானாம். அப்போது ஒவ்வொருவரும் எமனைத் திட்டியும், வைதும், பழி போட்டும், இன்னபிறவும் செய்து கடிந்து கொள்வார்களாம். உனது காலம் முடிந்து விட்டது, வா போகலாம் என்றழைத்தாலே வசைமாரி பொழிவார்களாம். எமனுக்கோ ஒரே அவஸ்தை. நானும் ஒரு கடவுள் தானே. தர்மத்தின் தலைவன் அல்லவா நான். என்னை மட்டும் மக்கள் இப்படி வைகின்றார்களே என்ற ஆதங்கத்தில், சிவபெருமானிடம் மக்கள் ஏன் என்னை மட்டும் திட்டுகின்றார்கள், இதற்கொரு வழியை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அதன்பிறகு சிறிது நேரம் யோசித்த சிவபெருமான், எமனிடம் இனிமேல் மக்கள் உன்னைத் திட்டமாட்டார்கள் என்றுச் சொல்கிறார். எப்படி என்று உங்களுக்குப் புரிகிறதா?

இன்றைய காலத்தில் ஆக்சிடெண்டில் இறந்து போய் விட்டார், ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் விட்டார், காய்ச்சலில் போய் விட்டார், புற்று நோயில் போய் விட்டார், கிட்னிப் பிராப்ளத்தில் போய் விட்டார் என்றுச் சொல்கிறார்கள். எவரும் எமன் கொண்டு போய் விட்டான் என்றுச் சொல்ல மாட்டார்கள். இங்குதான் பகவானின் சூத்திரம் இருக்கிறது என்றார் நண்பரின் அம்மா.

எமனின் வேண்டுகோளினை ஏற்று மனிதர்களுக்கு நோயை உண்டாக்கினார் சிவபெருமான். அன்றிலிருந்து எவரும் எமனைத் திட்டுவதில்லை என்றார். நோய் ஏன் வருகிறது என்று யோசித்துப் பாருங்கள். உணவு, காற்று இவற்றிலிருந்து தான் நோய் வருகிறது. ஆக மனிதனுக்கு நோயை அவன் உண்ணும் உணவின் மூலமாக உண்டாக வைத்தார் சிவபெருமான் என்று முடித்தார் அம்மா.

நண்பர் சாப்பிடலாம் வாங்க என்று அழைக்க, சாப்பிடச் சென்றேன்.

வடை, பாயசம், சாம்பார், ரசம், தயிர், உருளைக் கிழங்கு பொறியல், வாழைக்காய் வறுவல், மரவள்ளிக் கிழங்கு பொறியல், கீரை என்ற மெனுவைப் பார்த்தேன். அம்மாவைப் பார்த்தேன். சிவபெருமானும் எமனும் மனதுக்குள் நிழலாடினார்கள்.

- கோவை எம் தங்கவேல்.

Monday, November 7, 2011

கொழுப்பைக் குறைக்கும் மாங்காய் இஞ்சி


எனக்குப் பிடித்த ஊறுகாய் மா இஞ்சி. உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வேன். மாங்காய் இஞ்சி பற்றிய முக்கியக் குறிப்புகள் தேடிக் கொண்டிருந்த போது குமுதம் ஹெல்த்தில் இக்கட்டுரை கிடைத்தது. மாங்காய் இஞ்சியின் மகத்துவம் பற்றித் தெரியாதவர்களுக்கு உபயோகப்படுமே என்பதால் இங்கு பதிவிடுகிறேன். இப்பதிவு படிப்பவர்களுக்கு உபயோகமாய் இருக்குமென்று நம்புகிறேன். நன்றி : குமுதம் ஹெல்த்

இனி மாங்காய் இஞ்சி பற்றிய கட்டுரை

இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து என்பது யாவருக்கும் தெரியும். மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது என தாவரஇயல் வல்லுனர்களும், மருந்தியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளார்கள்.

மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிரா, ஆந்திரா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

பயன்பெறும் பாகம்:
இச்செடியின் மண்ணிற்குக் கீழ் உள்ள தண் டுக்கிழங்குதான் நாம் பயன் படுத்தும் மாங்காஇஞ்சி. இதை தாவரவியலில் ரைசோம்  என்று அழைக்கிறார்கள்.

பெயர் வந்த விதம்:
மாங்காயைப் போன்று வாசனையும், இலேசான இஞ்சிச்சுவையும், இஞ்சியைப் போன்று உருவமும் கொண்டதால், தாவர இயல் நிபுணர்கள் தமிழில் இதற்கு ‘மாங்காய்இஞ்சி’ என்று மிகப் பொருத்தமாக பெயர் சூட்டியுள்ளார்கள்.

அடங்கியுள்ள சத்துப் பொருள்கள்:
நாம் சாப்பிடும் மாங்காய் இஞ்சியில் புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ப்பொருட்கள், வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ அடங்கியுள்ளன.

மாங்காய் வாசனையின் காரணம்:
மாங்காய் இஞ்சியிலுள்ள மாங்காய் வாசனைக்கான காரணம் இதில் உள்ள சீஸ் - ஓசிமென், டிரான்ஸ் டை ஹைட்ரோசிமின், மிர்சீன் ஆல்பா முதலிய வேதிப் பொருட்கள் ஆகும். இதில் அடங்கி உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருள் இதற்கு மிக லேசான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கிறது. இதிலுள்ள ஒரு வகை ஒலியோரெசின், போர்னியால், ஆர்டர்மிரோன் இவை இஞ்சியின் சுவையை அளிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

’மாங்காய் இஞ்சி’ புதுமொழிகள் மாதா ஊட்டாத சோறை மாங்காய் இஞ்சி ஊட்டும்.வாய்ப்புண்ணிற்கு தேங்காய் வயிற்றுக்கோளாறுக்கு மாங்காய் இஞ்சி!கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பாங்கான மருந்து மாங்காய் இஞ்சி!
மருத்துவப் பயன்கள் ஏதாவது ஒருவகையில் மாங்காய் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர் களுக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டமாக நறுக்கி சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது சாலச்சிறந்தது.

வயிற்றிலுள்ள தீமைதரும் பூச்சிகளை அழித்து மலத்துடன் வெளியேற்றும்  தன்மை மாங்காய் இஞ்சிக்கு உண்டு. வயிறு, குடல் பகுதிகளில் பூசணங்களை அறவே ஒழிக்கும். சுருங்கச் சொன்னால் மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த இயற்கை வயிற்றுக் கழுவி ஆகும். மாங்காய் இஞ்சியை துவையல் அரைத்து  சாதத்துடன்   சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லையை வேரறுக்கும். உணவு செரியாமையை சீர்செய்யும். நன்கு பசி ருசி ஏற்படுத்தும்.

குண்டான உடல்வாகு உள்ளவர்கள் மாங்காய் இஞ்சியை தொடர்ந்து  சமையலில் சேர்த்து வர, உடல் எடை கணிசமாகக் குறையும் என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.

வயிற்று உப்புசத்திற்கு ஒரு எளிய இயற்கை மருந்து மாங்காய் இஞ்சி. சரும நோய் வராது காக்கும் குணமுடையது. சிலவகை டானிக்கு களில் இதன் சாறு ஒரு உபபொருளாகச் சேர்க்கப்படுகிறது.

மாங்காய் இஞ்சி ஒரு வலி நிவாரணி. குடல் வலிக்கு மிகவும் சிறந்த இயற்கை மருந்து. மூட்டுவலியைத் தணிக்கும். வெங்காயத்துடன் மாங்காய் இஞ்சியையும் சேர்த்து சாலட் ஆக சாப்பிட்டுவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் மாங்காய் இஞ்சியை தாராளமாய் உணவில் சேர்த்துக் கொண்டால் குளிர் உடம்பைப் பாதிக்காது காக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.

மாங்காய் இஞ்சியை சிறிய வட்டத் துண்டுகளாக நறுக்கி, சீரகத்தூள் தூவி சாலட்டாக சாப்பிட்டு, ஒரு தம்ளர் மோர் குடித்தால் பித்தம் குணமாகும்.
மாங்காய் இஞ்சி ரெசிபீஸ்

1. மாங்காய் இஞ்சி சாலட் :
மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டத்துண்டுகளாக நறுக்கி, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
2. துவையல் :
மாங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், வெள்ளைப்பூண்டு, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
3. மாங்காய் இஞ்சி சட்னி:
சட்னி செய்து இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்துடன் சேர்த்து உண்ண சுவையோ சுவை.
4. மாங்காய் இஞ்சி தயிர்ப் பச்சடி :
தயிர்ப் பச்சடி தயாரித்து, சைட்டிஸ் ஆக பயன்படுத்தலாம்.
5. மாங்காய் இஞ்சி கறி :
மாங்காய் இஞ்சியை துண்டுகளாக நறுக்கி, சிறிது நல்லெண்ணெயில் வதக்கி எடுத்து, அத்துடன் சீரகம், வத்தல், வெள்ளைப் பூண்டு, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இத்துடன் சிறிது புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இந்தக் கறியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து.
6. மாங்காய் இஞ்சி ஊறுகாய் :
நறுக்கிய மாங்காய் இஞ்சியுடன் மிளகாய்த்தூள், எலுமிச்சைசாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊறுகாய் செய்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.
7. மாங்காய் இஞ்சி தொக்கு :
சிறு சிறு துண்டுகளாக்கிய மாங்காய் இஞ்சியை மிக்ஸியிலிட்டு தொக்கு பதத்தில் அரைத்து எடுக்கவும். இத்துடன் சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய் வத்தல்கள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் சேர்த்து வேகவைத்து இறக்கவும். மாங்காய் இஞ்சி தொக்கு ரெடி. எல்லாவகை சாதத்துடனும் தொட்டுக் கொள்ள சுவையோ சுவை.
8. மாங்காய் இஞ்சி புலவு :
பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்து எடுத்து, துருவிய மாங்காய் இஞ்சி, நெய், உப்பு சேர்த்து புலவு செய்து, வெங்காய தயிர்ப் பச்சடி சேர்த்து சாப்பிட, சூப்பர் சுவைதான்.
9. மாங்காய் இஞ்சி, வத்தக்குழம்பு :
மிளகாய் வத்தல், மாங்காய் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும். தேவையான புளிக் கரைசலில் இவற்றைச் சேர்த்து வத்தக்குழம்பு செய்து இறக்கவும். நன்கு சுவையானது இக்குழம்பு.
10. மாங்காய் இஞ்சி பக்கோடா :
சாதாரணமாக நாம் பக்கோடாவுக்கு மாவு சேர்க்கும்போது, மாங்காய் இஞ்சியைத் துருவி இட்டு நன்கு கலந்து பின்னர் பக்கோடா பொரித்து எடுக்கவும். இது சூப்பர் சுவையான பக்கோடா. 

* * *

Saturday, October 29, 2011

மறக்க முடியாத தீபாவளி

ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், தீபாவளி நாள் அன்று நண்பரைச் சந்திக்க சென்றிருந்தேன். நண்பர்களுடன் தீபாவளி வாழ்த்த்துக்களை பகிர்ந்து கொண்டு, இனிப்புகள் சாப்பிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது என்னிடம் படித்த ஆறாம் வகுப்பு பையன் ஒருவன் என்னைப் பார்த்துக் கையை ஆட்டினான்.

வண்டியை நிறுத்தி, அவனை அருகில் வரும்படி அழைத்தேன். 

“வீட்டுக்கு வாரீங்களா சார் !” என்றான்.

”வீடு எங்கேப்பா இருக்கு ?” என்று கேட்டு அவனை அழைத்துக் கொண்டு அவன் வீடு நோக்கி சென்றேன்.

குளிர்ச்சி தரும் தென்னை ஓலைகள் வேய்ந்த, அழகாய் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீடு. வீட்டின் முகப்பில் கோலமிட்டு இருந்தது. மாணவனின் அப்பாவும், அம்மாவும் வண்டிச் சத்தம் கேட்டு வெளியில் வர மாணவன் வண்டியில் இருந்து குதித்து அவர்கள் அருகில் ஓடி என்னை “அப்பா, எங்க இவருதான் கம்யூட்டர் சாரு” என்றான்.

இருவருக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அருகில் வந்து “வாங்க வாங்க” என்றழைத்தவர்கள் வீட்டிற்குள் அழைக்க தயக்கத்தோடு நின்றனர்.

”சாப்பிட ஏதாவது கிடைக்குமா? “ என்றேன். வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கி வீட்டுக்குள் சென்றேன்.

வழு வழுவென்று மெழுகிய தரைகள். அதன் மீது பாய் போடப்பட்டு அமர்ந்து கொண்டேன்.

இடதுபுறமாய் சமையலறை. மண்சட்டிகள் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மாவரைக்கும் கல்லில் அரைத்த மெதுவடை, சுழியம் இரண்டும் கொண்டு வந்து தந்தார்கள். வயிறு நிறைய சாப்பிட்டேன். அப்பா என்ன ஒரு சுவையாக இருந்தன தெரியுமா? என்னைப் பற்றி விசாரித்தார்கள்.மாணவனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டே அவர்கள் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தேன்.

“மதியம் என்ன சமைக்கப் போகின்றீர்கள்?” என்றேன்.

“சாம்பார், பாயசம் சார்” என்றான் மாணவன்.

”எனக்கும் கொஞ்சம் சேர்ந்து சமைத்து விடுங்களேன், இருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறேன்” என்றேன்.

நிகழ்காலத்தில் படித்த போது பாத்திரத்திப் பொறுத்தது உணவின் சுவையும் தரமும் படித்த போது என் மாணவன் வீட்டில் சாப்பிட்ட சாம்பாரின் சுவை நினைவுக்கு வந்தது. இதுவரை எத்தனையோ ஹோட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன். வித விதமாய் சமைத்துப் போடும் மனைவியின் கைப்பக்குவம் கூட மாணவன் வீட்டில் வைத்திருந்த சாம்பாருக்கு நிகராக இல்லை.

அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்வார்கள். நான் ஆசிரியராக இருந்த காலம் முழுவதும் தீபாவளி தினங்களில் மாணவனின் வீட்டுச் சாப்பாடே எனக்கு அமிர்தமாய் இருந்தது. அம்மாணவன் இப்போது என்ன செய்கின்றானோ தெரியவில்லை. அவன் வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

* * *

Wednesday, October 26, 2011

ஷூட்டிங்கில் இருக்கும் திரைப்படத்தின் காட்சி

எங்களது மாடல் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ஒரு ஸ்டில். படத்தின் இயக்குனரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் அடுத்த அடுத்த ஷூட்டிங் காட்சிகள் சிலவற்றை தொடர்ந்து வெளியிடுவோம்.

இளம் இயக்குனரின் கடின உழைப்பில் வளர்ந்து வரும் இப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

படத்தின் பெயர், டிரெயிலர் போன்றவை தொடர்ந்து வெளியிடப்படும்.


* * *


Tuesday, October 25, 2011

உறவுகளில் சிறந்தது எது?


”எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பார் எனது நண்பர். 

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு.

தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் பாதுகாவலனாய் இருப்பவன் தாய் மாமன்ம் மட்டுமே.

அண்ணன் தன் தங்கையை வாழ வைப்பான். அதுமட்டுமா தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான். 

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது. அதுமட்டுமா கூடப்பிறந்தவனை எதிரியாக நினைக்கும் பெண்கள் சீரழிந்து போவார்கள்.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ கண்கள் குருடாகவோ, ஊனமாகவோ இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

அந்த வகையில் பாசமலர் என்ற திரைப்படத்தினை உதாரணமாய்ச் சொல்லலாம். உறவுகளில் எவராவது ஒருவர் தீய எண்ணமுடையவராக இருந்தால், அதன் பிறகு உருவாகும் பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகும் அண்ணன், தங்கை பற்றிய அருமையான படம் தான் பாசமலர். இதுவரை இதைப் போன்ற தமிழ்ப்படத்தினை காண இயலவில்லை. 

அப்படத்தின் பாடல்களை ஒருமுறை கேட்டு வையுங்கள். 


பாடலில் வரும் சில வரிகள்

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்



வாழ்க நலமுடன்,வளமுடன் - கோவை எம் தங்கவேல்

* * *

Monday, October 24, 2011

காதல் என்பது என்ன?


”சார், எனக்கொரு பிரச்சினை, நீங்கள் தான் உதவ வேண்டும்” என்றது போன் குரல்.

“என்னவென்று சொல்லுங்கள், என்னால் ஆன உதவியைச் செய்ய முயல்கிறேன்” என்றேன்.

"சார், நான் சிங்கப்பூரில் இருக்கும் பெண் ஒருத்தியை காதலித்தேன். அப்பெண்ணும் என்னைக் காதலித்தாள். எனக்கு அங்கு வேலை கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். என் அப்பா, அம்மாவிடம் கூட பேசி இருக்கிறாள். நானொரு சேல்ஸ் மேன். இப்படியான நாட்களில் ஒரு நாள் அவள் கூட சின்ன சண்டை ஆகி விட்டது. மேலும் அத்துடன் அவள் என்னுடன் பேசவே இல்லை. நானும் என்னென்னவோ முயற்சிகள் செய்துபார்த்தேன். விடாமல் சில சுலோகங்களைச் சொன்னால் நினைப்பது நடக்குமென்றுச் சொன்னார்கள். அவ்வாறு சொல்லியும் பார்த்தேன். இதுவரை எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. கோவில் கோவிலாய் ஏறி இறங்குகிறேன். அவள் இன்னும் என்னுடன் பேசவில்லை. ஒருமுறை என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது, என்னைத் திருமணம் செய்தால் உனக்கு நன்மை, ஆனால் எனக்கு என்ன நன்மை என்று கூட கேட்டாள். அதையெல்லாம் நினைவில்  வைத்துக் கொள்ளாமல் அவளை சின்சியராக லவ் பண்ணினேன். இதுவரை அவளிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை” என்றார் படபடப்பாக.

”சரி, இதற்கு நான் என்ன உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?” என்றேன்.

”சார், நெட்டில் தேடிய போது உங்களின் பதிவைப் படித்தேன்” என்றார்.

அவர் எங்கே வருகிறார் என்று புரிந்து கொண்டேன். அவரிடம், “ நான் மந்திரவாதியுமில்லை, வசியமும் உண்மையில்லை “ என்று சில விளக்கங்களைச் சொல்லி கட் செய்தேன்.

எனக்குத் தெரிந்த ஒரு பையனின் நண்பன் பதினைந்து வயதுப் பெண்ணைக் காம வயப்படுத்தி வேறு ஊருக்கு வர வழைத்து விட்டான். பெண்ணின் பெற்றோர் படிக்காதவர்கள் என்பதால் ஒரு வழியாகச் செட்டில் செய்தார்கள். பெண் யாரோ ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கப்பட்டு செத்துக்கொண்டிருக்கிறாள். அதே பையன் மீண்டும் ஒரு பெண்ணை (வயதுக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை என்றான் நண்பன்) காம வயப்படுத்தி, அழைத்துக் கொண்டு ஓடி மீண்டும் அடிதடி ரகளையாகி பஞ்சாயத்தில் வந்து முடிந்திருக்கிறது. 

என் வீட்டின் அருகில் இருக்கும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுமி ஒருத்தி, கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் நனைந்து கொண்டே, யாரோ ஒரு கல்லூரி மாணவனுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பற்றி விசாரித்தேன். அவளுக்கு இது இரண்டாவது பாய் பிரண்டாம். காதல் எப்படி புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

காதல் என்பது என்ன?  என்பது பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்வதால் வரும் வினை இது. சினிமாக்களில் காதல் என்பது ”காதலைக் காட்டுதல்” என்ற வகையில் வருவது. காதல் காட்டப்படுவது அல்ல வாழ்ந்து காட்டுவது. சினிமாக் காதலுக்கும் நிஜ காதலுக்கும் 10000 மடங்கு வித்தியாசம் உள்ளது. அதை உண்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சொல்லித் தெரிய வேண்டுமென்றால் அது காதலே அல்ல.

வசியம், மாந்திரீகம் பற்றி பலமுறை எழுதி விட்டேன். இனிச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும் குறுக்கு வழியில் இன்பம் தேடும் சிலர் இருக்கும் போது, போலிச் சாமியார்கள் ஏமாற்றுவது நிற்கப் போவதில்லை. 

மனித குலத்தில் சினிமாக்களும், மீடியாக்களும் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் மிகக் குறைந்த அளவே வாழும் காலம் உள்ள மனிதன் வாழ்வில் மிகப் பெரும் அழிவுகளை உருவாக்கி வருகின்றன. புரிந்து கொண்டிருப்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். புரியாதவர்கள் மேற்கண்ட பையனைப் போல அலைவார்கள்.

வாழ்க நலமுடன், வளமுடன்

* * *


Saturday, October 8, 2011

பாவக்காய் மாமரத்தின் கதை





எங்கள் வீட்டில் மாமரங்களும், பலா மரங்களும், தென்னைகளும் அதிகம். மாமரம் என்றால் இப்போது இருக்கும் குச்சி போன்ற மரங்கள் அல்ல. மூன்று பேர் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவுக்கு பெரிய மரம். ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். கிளிகள் மற்றும் பல பறவைகள் கூடு கட்டியிருக்கும். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மரமாய் இருக்கும். அந்தளவுக்கு பெரிய மரம். மாங்காய் கார மாணிக்கதேவர் வீடு என்றால் பிரபலம். ஒவ்வொரு மாங்காய்களும் கிட்டத்தட்ட இரண்டு கிலோ இருக்கும். படுபயங்கர புளிப்பு சுவை. மரத்திலே பழுத்த பழமானால் இனிப்பு சும்மா தூக்கும்.

இம்மரத்தில் ஒரு முறை தேன் எடுத்த போது கிட்டத்தட்ட 10 லிட்டர் தேன் கிடைத்தது. வீட்டிற்குப் பின்புறமாய் இருந்த இடத்தில் பெரிய மாமரம் ஒன்றும், காசா லட்டு மாமரம் ஒன்றும், ஒட்டு மாமரம் ஒன்றும், பாவக்காய் மாமரம் ஒன்றும், குடத்தடி மாமரம் ஒன்றும் இருந்தது.

காசா லட்டு மாமரம் படர்ந்து விரிந்து கிடக்கும். ஒவ்வொரு மாங்காயும் லட்டுதான். மாங்காயைப் பறித்து வந்து வைக்கோல் போருக்குள் மூன்று நாள் வைத்திருந்து எடுத்தால் கமகம வாசனையுடன் கொழ கொழவென பழுத்து இருக்கும். அப்படியே சிமெண்ட் தரையில் வைத்து உருட்டி உருட்டி எடுத்து, முனையில் ஒரு கடி கடித்து ஓட்டை போட்டு உறிஞ்சினால் மாங்காய் ஜூஸ் சாப்பிட சாப்பிட அமிர்தம். எத்தனையோ மாம்பழங்களை சாப்பிட்டுக்கிறேன்.

அடுத்து ஒட்டு மாமரம். அது  இப்போது மார்க்கெட்டில் விற்கிறதே அது போல. அதற்கு எங்கள் வீட்டில் மவுசு இல்லை.

பாவக்காய் மாமரம் என்ற ஒரு மரம். பக்கத்து வீட்டின் நிலத்திற்கும் எங்கள் வீட்டின் நிலத்திற்கும் இடையில் இருக்கும் ஒற்றை நாடி மரம். இதன் மாங்காய் அசல் பாவக்காய் போலவே இருக்கும். எப்போதாவது ஒன்றோ இரண்டோ காய்க்கும். அதையும் பக்கத்து வீட்டு மாமா தெரியாமல் பறித்து விடுவார். இந்த மாமரத்திற்குப் பக்கத்தில் மாட்டினைக் கொண்டு வந்து கட்டி வைப்பார். அது மூத்திரமாகப் பேய்ந்து பேய்ந்து பாவக்காய் மாமரம் ஒரு நாள் உசிரை விட்டு விட்டது. அவர் நிலத்தில் மாடு கட்டி வைப்பதை நாம் எப்படி தடுப்பது. இந்த மாமா சரியான லொள்ளுப் பேர்வழி. சண்டைக்குப் போவெதென்றால் அவருக்கு அம்பூட்டு இஸ்டம். நம்ம வீட்டுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இந்த மாமா கோபத்தில் மண்வெட்டியை எடுத்து வந்து தரையில் ஓங்கி ஓங்கி வெட்டுவார். பதிலுக்கு என் மாமா வெட்டுவார். ஒரே பேச்சு ரகளையாய் இருக்கும்.

இப்படியெல்லாம் அடித்துக் கொண்டாலும் கொஞ்ச நாட்களில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.

கொடைக்கானலுக்கு தாத்தா போய் வரும் போது வாங்கி வந்த அந்த பாவக்காய் மாமரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒற்றை நாடியாய் சோம்பிப் போய் இருக்கும் அம்மாமரத்தின் இலைகள் பெரிது பெரிதாய் இருக்கும். ஜெனடிக்ட் மாடிபைடு மரம் என்று சொன்னார் மாமா.

தாத்தா இறக்கும் முன்பே அந்த மாமரமும் இறந்து போய் விட்டது. வீட்டின் பின்பக்கம் போவது என்றாலே எனக்கு கிலியடிக்கும்.

வீட்டின் எல்லையில் இருந்த பனைமரத்தில் ஒரு முறை முதன் முதலாய் ஆந்தையைப் பார்த்து விட்டேன். அது தலையை அப்படியே திருப்பியது கண்டு பயத்தில் நடுங்கிப் போய் விட்டேன். வேலைக்காரனை அழைத்து அதைக் காட்டியது போது, அதற்கு அவன் "தங்கம் அது பேய்" என்று சொல்லி விட்டான். தூரத்தே இருந்து பாவக்காய் மாமரத்தினைப் பார்ப்பதோடு சரி. வயது ஏற ஏற ஆந்தையின் மீதான் பயம் குறைந்து போய், அடிக்கடி பாவக்காய் மாமரத்தினைப் பார்க்க சென்று விடுவேன். எப்போதாவது காய்க்கும் மாங்காய்க்காக காத்திருந்து, பறித்து பழுக்க வைக்க முனைந்தேன். அது பழுக்கவில்லை. குழம்பில் போட்டு அம்மா தந்தார்கள். வெகு டேஸ்ட்டியாக இருந்தது.

பக்கத்து வீட்டு மாமாவிடம் ஒரு முறை கேட்டேன் "மாட்டை ஏன் மாமா இங்கே கட்டுகிறாய், மாமரம் பட்டுப் போய் விடும் பாரு" என்றேன்.

" போடா அதெல்லாம் உனக்குத் தெரியாது" என்றார்.

தாத்தா வைத்த மாமரம்,  பக்கத்து வீட்டு மாமாவின் கைங்கரியத்தால் பட்டுப்போய் விட்டது. ஒரு தலைமுறை மாங்காய் மரம் செத்துப் போய் விட்டது.

பக்கத்து வீட்டு மாமா, தாத்தாவின் தம்பியின் பையன் என்பதுதான் இக்கதையின் விசேஷம்.

* * *

Saturday, October 1, 2011

நன்றியும் ஒரு செய்தியும்

நேற்றோடு பத்து வருடங்கள் மணவாழ்க்கையின் நாட்கள் கடந்திருக்கின்றன. ஆரம்பகாலத்திலும் இன்றைக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்னென்ன என்று யோசித்துப் பார்த்தேன்.

ஏதாவது தவற்றினைப் பார்த்தால் தலைக்கேறிய கோபம் இன்றைக்கு அறவே குறைந்து விட்டது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறன் கொஞ்சம் மேம்பட்டிருக்கிறது. தீய எண்ணமுள்ளவர்களை எளிதில் அடையாளம் ஓரளவு முடிகிறது. குடும்பத்தின் மீதான ஈடுபாடு அதிகரித்திருக்கிறது. உணவுக்கட்டுப்பாடு வந்திருக்கிறது. பேச்சில் நிதானம் ஓரளவு வந்திருக்கிறது. வாழ்க்கையின் ஓட்டம் ஒரளவு புரிபட்டிருக்கிறது. இன்பம் என்றால் என்ன, நன்மை என்றால் என்ன என்பதை உணர முடிகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் பல வழிகளில் தீர்வினைக் காணலாம் என்று புரிகிறது. அவசரப்படாத நிதானமான வேலைகள் வெற்றிகளைத் தரும் என்று தெரிய வருகிறது. 

துன்பத்தைத் தருபவர்களுக்கு இன்பத்தை தர மனது விழைகிறது. எதையும் ஆராய முடிகிறது. லட்சியம் பற்றிய பாதைகள் தெரிகின்றது. எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று தெரிகிறது. நேர்மைக்கும், பொய்மைக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. இன்னும் என்னென்னவோ? 

வாழ்க்கை மனிதனுக்கு கற்பிக்கும் அனுபவ பாடங்கள் பலருக்குப் புரிந்து கொள்ள முடியாமலே போய் விடும்.

"மனைவிக்கு சேலை வாங்கிக் கொடுத்தீர்களா? பூ வாங்கிக் கொடுத்தீர்களா? எங்காவது போய் வரலாமா?" என்று நண்பர் போனில் கேட்டார். எனக்கு வெளியில் செல்வதை விட வீட்டில் இருப்பது தான் பிடிக்கும் என்றேன். அவர் ஒன்றும் பேசவில்லை.

எத்தனையோ பெற்றோர், காதல், முதியோர், அப்பா, அம்மா தினங்கள் வருகின்றன. போகின்றன. மீண்டும் வருகின்றன. எனக்கு அந்த தினங்களில் நம்பிக்கை இருப்பதில்லை. காதல் என்பது சேலையிலோ, பூவிலோ தான் இருக்கவில்லை என்று மட்டும் தெரியும்.

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் இல்லை. கொடுத்துக் கொண்டே இருப்பது தான் என்னளவில் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். எதைக் கொடுப்பது? 

தீரவே தீராது அன்பினை தான் பிறருக்கு கொடுக்க வேண்டும். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி. 

அமுதாஸ் ஹோட்டலில் காருக்குள் இருந்து தயிர்சாதமும், கொஞ்சம் காய்கறிகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த இரண்டு அரவாணி சகோதரிகள் என்னருகில் வந்து “ நீங்கள் நீண்ட ஆயுளோடு, நூறாண்டுகள் வளமோடு வாழ வேண்டும்” என்று வாழ்த்தினார்கள். காசு ஒன்றும் என்னிடம் கேட்கவில்லை. வாழ்த்தி விட்டுச் சென்று விட்டார்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர்களைக் காணவில்லை. டிரைவரிடம் விசாரித்தேன். ”சார் அப்படி யாரும் இங்கே தென்படவில்லையே” என்றார்.

திடீரென தோன்றி மறைந்த அந்த அரவாணிகளுக்கு என் நன்றி. நேற்று போனில் வாழ்த்துக்களும், மெயில் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களுக்கு நன்றி. 

ஒரு கட்சியில் அமைப்பாளர் பதவியில் இருப்பவர் என் நண்பர். எதேச்சையாக என்னைப் பார்த்து விட “ தங்கம், ஒரு கப் டீ சாப்பிடலாமா?” என்று பிடித்துக் கொண்டார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இன்றைக்கு இந்திய நீதித் துறை வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்றிருக்கும் “வாச்சாத்தி தீர்ப்பு” வழங்கிய நீதிபதி நண்பரின் நெருங்கிய உறவினர். ”கடவுள் போன்றவர்கள் மனிதர்கள் ரூபத்தில் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இப்போது உணருகிறேன்” என்றுச் சொன்னேன். 

ஒரு நிமிடம் யோசித்து, பின் திகைத்தார். சிரித்து விட்டு விடை பெற்றுக் கொண்டேன்.

மாலையில் வீடு திரும்பினேன். சிலருக்கு சாப்பாடு போடச் சொல்லி இருந்தேன். அதைப் பற்றி விசாரித்தேன். நன்றாகச் சாப்பிட்டார்கள் என்றுச் சொன்னார் மனைவி. அவ்வார்த்தை மனதுக்கு இதமாய் இருந்தது. 

மீண்டும் நண்பர் போனில் அழைத்து “இரண்டு முழம் மல்லிகைப்பூவாது வாங்கிக் கொடுங்கள் ” என்றார்.

நண்பரிடம் சொன்னேன், “பூவுக்கு எதற்கு பூ”. மனைவியைப் பார்த்தேன். கண் சிமிட்டிச் சிரித்தாள். அதில் காதல் தெரிந்தது. 

இனி வரப் போகும் நாட்களில் திருமண நாள் கொண்டாடப்போகும் சகோதர, சகோதரிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

* * *