குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, January 18, 2011

வீடு பற்றிய தொடர் - 4

இன்றைக்கு தென்கிழக்குத் திசையில் அமைந்த வீடுகள் மற்றும் தென் மேற்குத் திசையில் அமைந்த வீடுகள் பற்றியும் பார்க்கலாம்.

தென்கிழக்குத் திசையில் வீடு அமைவது உசிதமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தென் கிழக்குத் திசையில் உஷ்ணம் அதிகமிருக்கும். இத்திசைக்கு உரியவர் அக்னி பகவான். அக்னியினால் வாழ்வும் உண்டு, வீழ்ச்சியும் உண்டு என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அக்னி உணவு சமைக்கவும் உதவும், அதே வீட்டை எரிக்கவும் செய்யும். இந்த வீடுகளில் வசிப்பவர்கள் மிகுந்த பிடிவாத குணமுடையவர்களாய் இருப்பார்கள். கடின உழைப்பு இருந்தாலும் ஏழ்மை இருக்கும். இந்த வீடு பலர் கை மாறும். வயிறு, சிறு நீரகம் சம்பந்தமான நோய்களுக்கு இவ்வீடுகளில் வசிப்பவர்கள் உட்படுவார்கள். ஆகவே தென் கிழக்குத் திசை வீடுகள் வசிக்க உகந்தது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க.

அடுத்து,  தென் மேற்குத் திசையின் கடவுளாய் இருப்பவர் நிருதி என்பவர் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இவர் அரக்க குணம் கொண்டவராய் இருக்கிறார் என்றும், இவரின் குணமாக செருக்கு, தாழ்ந்த குணம், பிடிவாதம் மற்றும் அகம்பாவம் கொண்டவராய் இருப்பதாகவும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மேற்பட்ட குணங்களும் இருக்குமென்றும், நோய்களுக்கு ஆட்படுவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தலைவர்களாய் மாற துடிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

மொத்தத்தில் மேற்கண்ட திசைகளில் இருக்கும் வீடுகள் மனிதர்கள் வசிக்க உகந்ததல்ல என்பது முன்னோர்களின் கருத்து.

- கோவை எம் தங்கவேல்

Friday, January 14, 2011

வீடு பற்றிய தொடர் - 3 (அனைவருக்குமானது)

வடக்குத் திசையில் தலைவாயில் கொண்ட வீடுகள் பற்றிப் பார்ப்போம். வடக்குத் திசைக்கு அதிபதியானவர் குபேரன். இவனின் தேகம் பலவீனமானது. ஆகையால் உள்ளமும் சாந்தமானது. ஆனால் செல்வத்தில் பெரியவன். வியாபாரம் செய்வதில் இவனுக்கு நிகர் எவருமில்லை. திசைக்கு அதிபதியைப் பற்றிப் பார்த்தோம். இனி இந்த வீட்டில் வசிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று பார்க்கலாம். 

மிகவும் பண ஆசை பிடித்தவர்களாய் இருப்பார்கள். வடக்கு காற்றில் ஈரமும், பிசுபிசுப்பும் இருப்பதால் சளிக்காய்ச்சல் நோயால் அவதிப்படுவார்கள். இவர்கள் வீட்டில் மருந்துகள் இருந்து கொண்டே இருக்கும். இவ்வீட்டிலுள்ளவர்கள் பிறருக்கு தீங்கு செய்ய விரும்பமாட்டார்கள்.

வடகிழக்கு திசைக்கு ஈசானிய மூலை என்றுச் சொல்லுவார்கள். இந்தத் திசைக்கு அதிபதி ஈசுவரன். இத்திசையில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷடம் அடிக்கும் பாக்கியம் உண்டு. மிகவும் கோபமானவர்களாகவும், எவரையும் எளிதில் நம்பாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஆன்மீக வழியில் ஈடுபடுவார்கள். கல்வியில் சிறந்தவராய் இருப்பார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுவார்கள்.

இனி ஃபார்ச்சூன் பிரிக்சின் மிக முக்கியமான சர்வீஸ் ஒன்றினைப் பார்க்கலாம். வெளி நாடுகளில் வசிக்கும் பலருக்கு இந்தியாவில் வீடோ அல்லது வேறு சொத்துக்களோ இருக்கும். இச்சொத்துக்களை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் எவராவது அத்துமீறி சொத்தினை ஆக்கிரமித்து விடுவர். ஆக்கிரமிப்பினை அகற்ற பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். காலமும், பணமும் விரயமாவதுடன், பெரும் வேதனையையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இம்மாதிரி சொத்துக்களை ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தங்களது நேரடிப்பார்வையில் கொண்டு வந்து அதை மெயிண்டெய்ன் செய்து வருகிறது. தற்போது கோவையிலும், திருப்பூரிலும் மட்டும் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது. சேவையின் முக்கியமான சில அம்சங்களைக் கீழே பார்க்கலாம்.

1) வீடு என்றால் வாடகைக்கு விட்டு மாதா மாதம் பணம் வசூல் செய்து, சொத்தின் உரிமையாளரின் வங்கி கணக்கில் செலுத்தி அதன் ரசீதை ஆன்லைனில் அப்டே ட் செய்கிறோம்.


2) அட்வான்ஸ் தொகை முழுவதையும் அவ்வாறே செய்கிறோம்


3) வீட்டுக்கு பெயிண்ட் மற்றும் இதர மராமத்து வேலை, தோட்ட வேலை போன்றவற்றையும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களை வைத்து செய்கிறோம்.


4) பிற வகைச் சொத்துக்களையும் விவசாய பூமியென்றால் அதை வேலியிட்டு, தகுந்த பயிர் செய்ய குத்தகைதாரரை ஒப்பந்தம் செய்து, அதன் பலனையும் வருடம் தோறும் உரிமையாளருக்கு பெற்றுத் தருகிறோம்.


5) வெறும் இடமென்றால் வேலியிட்டு அதை பாதுகாப்பாய் வைத்திருக்கிறோம்.


6) வரி மற்றும் இதர கட்டணங்களையும் செலுத்தி அதை ஆன்லைனிலே உரிமையாளர் மட்டும் பார்க்கும் படியும் செய்கிறோம்.


7) மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் சர்வீஸ்களையும் வழங்கி வருகிறோம். 

இதனை ப்ராபர்ட்டி மெயிண்டனன்ஸ் என்று நாங்கள் அழைக்கிறோம். இது பற்றிய இதர விபரங்களை எங்களது நிறுவன இணையதளத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படிச் சேவைக்கு வருடம் தோறும் ஒரு சிறிய கட்டணத்தை சர்வீஸ் சார்ஜாக வசூல் செய்கிறோம். மேலே பட்டியலிடப்பட்ட சர்வீஸ் தவிர வேறு எந்த சர்வீஸ் என்றாலும், நிறுவன விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். மேலும் விபரங்கள் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளவும்.


கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்
தொடர்புக்கு : +91 422 4275976

Thursday, January 13, 2011

வீடு பற்றிய ஒரு தொடர் - 2 (அனைவருக்குமான அத்தியாவச தொடர்)

இனி வீடுகளின் வாசல்கள் பற்றிய பலன்களைக் காணலாம். 

கிழக்கு தலைவாசல் :

கிழக்கு திசையிலிருந்து வரும் காற்று, மழை, வெப்பம் போன்றவை உடலுக்கு நன்மை தரக்கூடியது. இத்திசைக்கு உரியவர் இந்திரன் என்றுச் சொல்லுவார்கள். இவர் தேவர்களுக்கு அரசர். இவர் அதிக செல்வமும், கல்வி, தொழில், அமைதி போன்றவற்றை அளிப்பவர் என்றுச் சொல்லுவார்கள். சுகபோகமான, சந்தோஷமான வாழ்க்கை வாழ நல்ல பலன்களைத் தர வல்லது இந்த கிழக்குத் திசையில் தலைவாசல் கொண்ட வீடுகள். அதிகமான சுப பலன்களைத் தரக்கூடிய வலிமை வாய்ந்த கிழக்குத் திசை வீடுகள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.

மேற்கு தலைவாசல :

மழைக்கு அதிபதியான வருண பகவானின் திசை என்றும், மனித குலத்தை மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் தேவையான மழை பொழிபவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.  மேற்குத் திசையில் தலைவாசல் வைத்திருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் விவசாயத்தில் செழிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.  மேலும் நல்ல திடமான மனது, தன்மானம், ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சி போன்றவற்றில் ஆர்வமுடையவர்களாய் இருப்பார்கள். அது மட்டுமின்றி மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று வெப்பமுடையதாய் இருக்கும். சூடு அதிகமானால், உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் உருவாகும். இவ்வகை வீடுகளில் வசிப்போய் சூடு சம்பந்தமான நோய்களுக்கு ஆட்படுவார்கள் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

நாளை மற்ற வாசல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஊட்டியில் உள்ள சொத்துக்களை வாங்க விரும்புவோர் கவனத்திற்கு

ஊட்டியில் மிக நல்ல பங்களாக்களும், டீ எஸ்டேட்டுகளும்,நல்ல வருமானம் தரும் காட்டேஜ்ஜுகள், ஹோட்டல்களும் விற்பனைக்கு எங்களிடம் கிளையண்டுகள் கொடுத்திருக்கின்றார்கள். 

எந்த சொத்திலும் எந்த விதமான வில்லங்கங்களும் கிடையாது. மார்கெட்டு விலைக்கு ஏற்ப மிக நல்ல விலையுடன், உடனடிக் கிரயத்திற்கு தயாராய் இருக்கின்றன. இச்சொத்தை பார்வையிட விரும்புவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தர ஆர்வமாயிருக்கின்றோம்.

10 ஏக்கரிலிருந்து 3000 ஏக்கர் வரையிலான டீ எஸ்டேட்டுகள், மிக நல்ல வருமானம் தரக்கூடிய ஹோட்டல்கள், காட்டேஜ்ஜுகள் இருக்கின்றன. தனி பங்களாக்களும் எங்களிடம் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்க.

மேற்படிச் சொத்துக்களை பார்வையிட விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களுடன், தங்களுக்குத் தேவையான அல்லது விரும்பக்கூடிய சொத்துக்கள் பற்றிய விபரங்களை கீழே இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். போன் மூலமும் தொடர்பு கொள்ளவும்.

இமெயில் : info@fortunebricks.net அல்லது info@fortuneenterprise.in அல்லது covaimthangavel@gmail.com

தொலைபேசி எண் : + 91 422 4275976 

மிக்க அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்சூன் பிரிக்ஸ் /  ஃபார்சூச் எண்டர்பிரசைசஸ் / ஃபெமொ மாடலிங் கம்பெனி

எங்களது நிறுவன இணையதளங்கள்
===================================



Wednesday, January 12, 2011

வீடு பற்றிய ஒரு தொடர் - 1

ஒவ்வொருவருக்கும் வீடு என்பதுதான் தாயின் கருவறைக்கு அடுத்த அறை. எத்தனையோ இன்னல்கள், துன்பங்களில் சிக்கி வீடு வருபவர்கள் நிம்மதியாய் தூங்கி துன்பங்களை மறந்து மறு நாள் காலை புத்துணர்ச்சியாய் எழுந்து கொள்ள, தாயின் மடிபோல் விளங்கும் இடம் தான் வீடு. வீட்டினை கோயில் என்று சொல்ல வேண்டும். இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று வீடு. இந்த வீடு தான் மனிதனின் அனைத்துக்குமான இடம். ஒருவன் வாழ்வாங்கு வாழ இந்த வீடு தான் அடையாளம். இத்தகைய பெருமை வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கும் வீட்டினைப் பற்றி இனி நாம் கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்கலாம். நாம் வசிக்கும் வீடு எப்படிப்பட்டது ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டியது அனைவரின் கடமை. 

முதலில் வீட்டு மனையின் வடிவம் எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வகமாக இருந்தால் அது வீடு கட்ட தகுந்த நிலம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட மனையில் வீடு கட்டினால் செல்வம் பெருகும் என்றும் சொல்லி இருக்கின்றார்கள். அடுத்து, அகலமான பக்கங்கள் சம அளவிலும், நீளப்பக்கங்கள் உள்ளடங்கி இருந்தாலும் அதுவும் சிறந்த மனைதான். அதுவுமன்று அகலமான பக்கங்கள் அகன்றிருந்தால் கூட பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கும் மனைகளைத் தவிர வேறு வடிவம் கொண்ட மனைகளில் வீடு கட்டுவது அவ்வளவு நல்ல பலனைத் தராது என்றுச் சொல்கின்றார்கள்.

இன்றைக்கு மனையின் வடிவம் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பார்த்தோம். நாளை வீட்டு வாசல்களைப் பற்றிப் பார்ப்போம்.

சரி, எங்களது ஃபார்சூன் பிரிக்ஸ் ( FORTUNE BRICKS) நிறுவனமும் மற்றொரு பில்டர் நிறுவனமும் இணைந்து கோவையில் இருக்கும் ஒண்டிப்புதூரில் 2.50 செண்ட்டில் மனையும், அதில் 1000 சதுர அடிக்கு இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், போர்டிகோ வைத்து 24 நான்கு தனித்தனி வீடுகளைக் கட்ட இருக்கிறோம். இதன் விலையாக ரூபாய் 25 லட்ச ரூபாய் நிர்ணயித்து இருக்கிறோம். ஒண்டிப்புதூர் திருச்சி சாலையில் நெசவாளர் காலனி அருகில் தான் மேற்படி வீடுகள் அமைய இருக்கின்றன. விரைவில் வீட்டின் வரைபடம் மற்றும் இதர விபரங்களை வலையேற்றுவோம். வீடு வேண்டுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும். எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 0422 4275976

- கோவை எம் தங்கவேல்
எக்ஸிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம்
www.fortunebricks.net

Tuesday, January 11, 2011

கோவை ஹோப் காலேஜ் சாலையில்....

காலையில் கையின் மேற்புறம் காயமாகி விட்டது. அதன் மீது மருந்து தடவி இருந்தேன். ஒரே வலி. ரத்தமும், மருந்தும் காய்ந்து போய் இருந்தது.

எனது வண்டியில் இருக்கும் சைலென்சர் வெயிட் அதிகமாதலால் அடிக்கடி கழண்டு விடும். அதற்கொரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் அல்லாடிய போது, எனது நண்பர் பிஎஸ் ஆரின் அறிவுறுத்தலின் படி, மாலையில் ஹோப் காலேஜ் மெக்கானிக்கிடம் சென்றேன்.

அவர் ஒவ்வொரு பாகமாய் கழட்டி எடுத்து, கிட்டத்தட்ட அரைமணி நேரமாய் உட்கார்ந்து ஏதேதோ கணக்குகளைப் போட்டு, ஒரு வழியாய் ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி வந்து, சைலென்சரைப் பொறுத்தினார்.

நான் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சாலை வழியே சென்று கொண்டிருந்த ஒரு பெரியவர் என் அருகில் வந்தார். என் முகத்தினைப் பார்த்தார். கையைப் பிடித்து ”காயமாயிடுச்சா?” என்றார். நான் ஆம் என்பது போல தலையை ஆட்டினேன். காயத்தைச் சுற்றி விரல்களால் தடவி விட்டார். “காயம் சீக்கிரம் ஆறிடும்” என்றார். ”எல்லாம் சரியாகி விடும்” என்றார் தொடர்ந்து. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”மட்டன், சிக்கன் சாப்பிடாதீர்கள்” என்றார்.

நான் இவை இரண்டுமே சாப்பிடுவதே இல்லை. சிரித்தார் சென்று விட்டார்.

”யார் அவர்?” என்று கேட்டார் மெக்கானிக். 

“தெரியவில்லை” என்றேன் குழப்பமாய்.

யார் அவர்? ஏன் என் அருகில் வந்தார். ஏன் அப்படி நடந்து கொண்டார்? ஒன்றுமே தெரியவில்லை.



Monday, January 10, 2011

கோவையில் சொத்து வாங்கப் போகின்றீர்களா?

எங்களது நிறுவனம் “ ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” ஒரு பதிவு செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம். கடந்த இரண்டு வருடங்களாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மிகக் குறைந்த விலையில் மனைகளையும், வீடுகளையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வாங்கிக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கோவையில் சொத்துக்களை வாங்கவும், விற்கவும் நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு உதவி வருகிறோம்.

சொத்துக்களை விற்க விரும்புவரிடம் அவரின் எதிர்பார்ப்பு என்ன, மார்கெட் நிலவரம் என்ன என்பது பற்றியெல்லாம் பேசி முடிவெடுத்து, சொத்துக்களின் வில்லங்கள், கடன்கள் போன்றவைகளையெல்லாம் சேகரித்து, எங்களின் நிறுவன வக்கீல் மூலம் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து அதன் பிறகே எங்களது வாடிக்கையாளர்களிடம் சொத்து விபரங்களைச் சமர்பிக்கின்றோம்.

சிலர் கூடுதல் விலை வைத்து, சொத்துக்களை வாங்குபவர்களிடம் விற்று விடுவார்கள். ஆனால் ஃபார்சூன் பிரிக்ஸ் இதில் மிகக் கவனமாய் இருக்கிறது. எங்களின் பலமே ‘நேர்மையான, நம்பிக்கையான' விற்பனை மட்டுமே. சொத்து வாங்குபவர்களுக்கு மார்க்கெட்டை நிலவரத்துக்கு ஏற்ற நல்ல விலையும், விற்பவருக்கு மார்கெட்டை ஒட்டிய விலையையும் பெற்றுத்தருகிறோம்.

எங்களிடம் சொத்துக்கள் வாங்க விரும்புவர்களின் தேவைகளை முழுமையாகக் கேட்டறிந்து அதற்கேற்ப சில ஆலோசனைகளை வழங்கி, அதன்பிறகே வாடிக்கையாளர்களுக்கு சொத்துக்களை காட்ட முற்படுகிறோம். 

ஒவ்வொரு முறையும் வில்லங்கங்கள், மற்ற பிற வேலைகளுக்கு அலையாமல் அத்தனை வேலைகளையும் நாங்களே செய்து கொடுத்து விடுகிறோம். சொத்து விற்பவருக்கும், வாங்குபவருக்கும் தேவையான அத்தனை உதவிகளையும் செய்து நல்ல முறையில் விற்பனையில் உதவி வருவதால் பல இடங்களில் இருந்து புதிய வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இவை அனைத்துக்கும் மிகக் குறைந்த கட்டணம் மற்றுமே பெற்றுக் கொள்கிறோம். 

சொத்துக்கள் விற்க விரும்புவோரும், வாங்க விரும்புவோரும் எங்களை தொடர்பு கொள்ளலாம். 

Phone : + 91 422 4275976

வெளி நாடுகளில் வசிப்பவர்களின் சொத்துக்களை நிர்வகித்து, வாடகை வசூல், வரி கட்டுதல் போன்றவற்றிலும் நாங்கள் மிகச் சிறந்த சேவையினை வழங்கி வருகிறோம். இது பற்றிய விபரங்களை அறிய எங்களின் இணைய தளத்தினை பார்க்கவும்

மேலும் சொத்துக்களை விற்கவோ அல்லது வாங்கவோ விரும்புவர்கள் எங்களது நிறுவனம் நடத்தும் இலவச இணைய தளத்தில் உறுப்பினராகி பதிவு செய்தால் நேரடியாக வாடிக்கையாளர்கள் கிடைக்கவும் உதவுகிறோம்.

எங்களது இணையதள முகவரி : http://www.fortunebricks.net

* * *




Friday, January 7, 2011

கோயமுத்தூரில் கீரைக்கட்டு பத்து ரூபாய்


நம்பவே முடியவில்லை. சரியாக 30 நாட்களுக்கு முன்பு வரை, கோவையிலிருக்கும் சிங்கா நல்லூர் உழவர் சந்தையில் ஒரு கட்டு கீரை ரூபாய் 4.00 என்று விற்பனை ஆனது. இன்று காலையில் ஒரு கட்டு ரூபாய் 10 என்று விற்றார்கள். யார் இந்த விற்பனையாளர்கள் என்று பார்த்தால், ஒருவர் கூட விவசாயிகள் கிடையாது. விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட 'உழவர் சந்தை' இன்றைக்கு வியாபாரிகள் சந்தையாக மாறிப் போய் விட்டது. நேரடியாக விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு மொத்தமாக கீரைக்கட்டுகளை வாங்கி அடுத்த அரைமணி நேரத்தில் மிக அதிக விலைக்கு விற்கின்றார்கள் இந்த வியாபாரிகள். இவர்களுக்கு அன்றாடம் கிடைக்கக் கூடிய லாபம் ஒன்று மட்டுமே குறிக்கோள். இவ்வகை வியாபாரிகளை ‘கோயமுத்துர் சிங்கா நல்லூர் உழவர் சந்தை'யின் அதிகாரிகள் உள்ளே நடமாட விட்டு, அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்று விடுகின்றார்கள். 

ஒரு முறை, நான் நேரில் கண்டது உண்மைச் சம்பவத்தை இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன்.ஒரு அதிகாரி, வெங்காய வியாபாரியிடம் ‘காளான்' இருக்கிறதா என்று கேட்டார். அனைத்துக் காளான்களும் விற்று விட்ட நிலையில், அந்த வியாபாரி அந்த அதிகாரியிடம் சொன்னது “சார் ஐந்து நிமிடத்தில் தருவித்து தருகிறேன்” என்றார். சொன்னபடியே இரண்டு பாக்கெட் காளானை இலவசமாய் வழங்கினார் அந்த வியாபாரி. அதிகாரியும் கெத்துக் குறையாமல் வாங்கிச் சென்றார். 

இதே போன்று, போர்டில் இருக்கும் விலை ஒன்றாகவும், விற்கும் விலை ஒன்றாகவும் சிலர் விற்பனையாளர்கள் விற்பதை கம்ப்ளெயிண்ட் செய்தால் அப்போதைக்கு காமாச் சோமாவென்று சொல்லி சரி செய்கிறார்கள். ஆனால் அதே வியாபாரி தொடர்ந்து கடை போட்டுக் கொண்டிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறினால் ஆளும் அரசுக்கு மக்களிடம் மிகப் பெரும் வெறுப்பு உண்டாகி விடும். அரசு கொண்டு வரும் திட்டங்களை சரியாக அமல்படுத்தாமல், அலட்சியப் போக்கில் செயல்பட்டு வரும் இவ்வகை அதிகாரிகளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. மக்களால் அரசு அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க இயலாமல், தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதை நாம் பல சம்பவங்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அரசு அலுவலர்கள் மட்டுமல்ல சமூகம் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் கோவையில் 'அல்பேனியா' பள்ளியில் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பெற்றோர்கள் கோபமடைந்து சாலை மறியல் செய்தார்கள். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததாக ‘சன் செய்திகள்' வெளியானது. குற்றம் செய்தவனை விட, குற்றம் செய்யத்தூண்டியவர்கள் மீது நடவடிக்கை ஒன்றினையும் எடுக்காத காவல்துறையினரின் 'சட்டம் ஒழுங்கு' பற்றி என்ன சொல்லமுடியும்? பள்ளியின் நிர்வாகியை அல்லவா கைது செய்திருக்க வேண்டும் காவல்துறை. காவல்துறையினரின் சில செயல்பாடுகள் மக்கள் விரோதமாய் சென்று விடுகின்றன. மக்கள் இல்லையென்றால் நாம் இல்லை என்பதை காவல்துறையினர் உணர வேண்டும்.

கீரைக்கட்டு 10 ரூபாய் என்றால் வருங்காலத்தை நினைக்கையில் நிலைமை என்னாகுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

தமிழக அரசு உழவர் சந்தைகளில் நடக்கும் 'கோல்மால்களை' சரி செய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களைச் சரிவரச் செயல்படுத்தாத அதிகாரிகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் தயங்கக்கூடாது என்பது பெரும்பாலான மக்களின் எண்ணம்.

Wednesday, January 5, 2011

கிணறுகள்

வீட்டிற்குப் பின்புறம் வடமேற்கு மூலையில் கிணறு இருக்கும். பத்தடியில் நீர் நிறைந்திருக்கும். மழைக்காலங்களிலோ தண்ணீர் ததும்பி வழியும். விடிகாலை ஐந்து மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, வாளியை கிணற்றுக்குள் விட்டு, தண்ணீரை இறைத்து இறைத்து அருகில் இருக்கும் மண் பொக்கையில் நிரப்பி வைப்பேன்.


நான்கு படப்பைக் கற்கள் அருகருகே பாவி இருக்கும். அதன் மீது அமர்ந்து தான் குளிப்பேன். குளிக்கும் தண்ணீர் வாய்க்கால் மூலம் காசா லட்டு மாமரத்தின் அடியில் பாயும்.எனக்குப் பிடித்த சோப்பு மைசூர் ஜாஸ்மின். மல்லிகை மணம் வீசும். வெது வெதுப்பான கிணற்று நீரில் குளித்தால், உடம்பும், மனதும் எல்லையில்லா ஆனந்தத்தில் மிதக்கும். 


குளித்து முடித்து விட்டு, துவைத்து காய வைத்திருக்கும் உடைகளை அணிந்து கொண்டு வீட்டுக்கு வருவேன்.

எனது பால்ய காலத்தில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் கிணற்று நீரைத்தான் நான் அதிகம் பயன்படுத்தி வந்தேன்.

ஒரு முறை கிணற்றுக்குள் பாம்பு விழுந்து விட்டது. அதை எடுக்க வீட்டு வேலைக்காரர் போஸால் முடியவில்லை. பாம்பு பிடிக்கும் மாரிமுத்துவை அழைத்து வந்தார் தாத்தா. தட்டுக்கூடையில் வைக்கோலைப் பரப்பி நான்கு புறமும் கயிற்றினைக் கட்டி, தாம்புக் கயிறு மூலம் கிணற்றுக்குள் விட பாம்பு வசதியாய் கூடையில் வந்து விட்டது. மேலே கொண்டு வந்து, அதற்கு மேலோக பிராப்தி கொடுத்தார்கள்.

அதன்பிறகு, கிணற்றடிக்குச் செல்லுகையில் பாம்பு நினைவு வந்து விடும். கொஞ்ச நாள் தான். பயம் தெளிந்து விடும்.

கிணற்றுக்கு வடக்கே நானும் எனது மச்சானும் இணைந்து தோட்டம் ஒன்றினை உருவாக்கினோம். தினந்தோறும் தோட்டச்செடிகளுக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவோம். தக்காளிச் செடியில் தக்காளி காய்த்து பழுத்து வருகையில் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம் கிளம்பும். அக்காவிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் சமையலுக்குப் பயன்படுத்துவார். மீன் குழம்பில் மிதக்கும் அந்த தக்காளியை ஆவலோடு எடுத்து சாப்பிடுவேன். இம்மாதிரியான சந்தோஷங்களை அளித்த அந்தக்கால வாழ்க்கையை இன்று என குழந்தைகளுக்கு என்னால் அளிக்க முடியவில்லையே என்ற நீங்காத வருத்தம் என்னை விட்டு நீங்கவில்லை. கிராமங்களில் இன்றைக்கெல்லாம் கிணறுகள் மறைந்து போய், ஆழ்துளைக்கிணறுகள் வந்து விட்டன.  சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, எங்காவது கிணறுகள் தென்படுகின்றனவா என்று தேடிப்பார்த்தேன். பார்க்க முடியவில்லை. என் பிள்ளைகளுக்கு கிணறுகள் என்றால் என்ன என்பதைக் காட்டக் கூட முடியவில்லை. 

இன்றைய காலத்தில் பைப்பில் கொட்டும் நீரை, மக்கில் அள்ளி தலையில் கொட்டிக் கொண்டு வருகையில், கிணற்று நீரும் அதன் வெது வெதுப்பான தன்மையும் மனதோடு வந்து செல்வதை மறக்க முடியவில்லை. தாயின் கதகதப்பை அந்தக் கிணற்று நீர் தந்ததை எப்படித்தான் மறப்பது.

* * *



Thursday, December 16, 2010

தெய்வம் இருக்கிறதா? இல்லையா?

ஆத்தீகம் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நாத்தீகம் பற்றிய அனுபவ கதைகள் குறைவு என்பதாலும், நாத்தீகம் பேசிய தலைவர்கள் பிற்பாடு ஆத்தீகத்தின் பால் ஈடுபாடுடையவர்களாய் மாறிய கதைகளைக் கேட்டதாலும் நாத்தீகம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றுச் சொல்வார்கள். இம்மாதம் முழுவதும் நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். மார்கழி மாதத்தில் எங்கள் வீட்டில் முதல் தேதியன்றி தாதர் சங்கும், சிகண்டியும் அடித்துக்கொண்டு விடிகாலையில் வீடுதோறும் வருவார். அவர் முகத்தைக் காண நான் பல முறை முயன்றிருக்கிறேன். தைமாதம் நெல் வாங்க வரும்போதுதான் அவர் முகத்தைப் பார்க்க முடியும். போர்வை போர்த்திய உடல், கையில் சங்கு, சிகண்டியை அடித்துக் கொண்டே வீடுதோறும் வேக வேகமாய் நடந்து செல்வார். அம்மா, பரங்கிச் செடியின் பூவினைப் பறித்துக் கொண்டி, மாட்டுச் சாணத்தில் சொருகி வைப்பார். பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து, கோலமிட்டு, அதன் மீது பூசணிப்பூவை வைத்து, பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி சங்கினை முழக்குவார். நான் அவரருகில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.
தினந்தோறும் பூசணிப்பூ வாசலில் மலர்ந்து இருக்கும். மாக்கோலமிடுவதால் வெயில் ஏறுகையில் எறும்புகள் படையெடுக்கும் சாரை சாரையாய். மார்கழி மாதம் முழுவதும் அம்மா இடும் கோலத்தைப் பார்க்க விடிகாலையில் எழுந்து விடுவேன். இப்படியே செல்லும் அந்த மார்கழி முழுவதும்.

நிற்க.

காதல் திருமணம் முடித்து வீட்டில் மனைவியை விட்டு விட்டு தொழில் பார்க்க வெளியூர் வந்து விட்டேன். அம்மாவிற்கும், சுற்றத்தாருக்கும் நான் வேற்று ஜாதி பெண்ணை மணந்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. பிறப்பிலேயே முரட்டுக் குணமுடையவனாய் இருந்தால் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள்.அதுவுமின்றி ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதாலும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பர்.

மனதுக்குகந்த மருமகள் என்றால் எல்லாம் கிடைக்கும். பிடிக்காத மருமகள் என்கிறபோது மண் சட்டியும் பொன் சட்டிதானே. பொன்னி அரிசி சாப்பிட்டு பழகிய மனைவிக்கு கோ 43 அரிசி சோற்றை வாயில் வைத்தாலே வாந்தி வந்து விடும். அவள் கர்ப்பினியாய் வேறு இருந்தாள். வாயில் வைப்பதும், பின்னர் அதை வெளியில் தள்ளுவதும்தான் வேலையாய் இருந்தாள்.

மனைவிக்கு விடிகாலையில் பசி வந்து விடுவாம். கிராமத்தில் எங்கே விடிகாலையில் சமைப்பார்கள்? சமையலுக்கு எட்டு ஒன்பது மணி ஆகி விடும். அதற்குள் பசி தாங்காமல் சுருண்டு விடுவாளே? பசிக்கிறது என்று சொல்லவும் பயம். என்ன செய்வது? மிகச் சரியாய் அந்த நேரத்தில் அவளுக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். எப்படி என்பதைச் சொல்கிறேன்.

மார்கழி மாதம் வந்தால் எங்கள் கிராமத்தில் பஜனை செய்வார்கள். விடிகாலையில் பஜனைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தவழ ஆரம்பிக்கும். பஜனை முடிந்ததும் சுண்டலோ அல்லது பொங்கலோ சிறார்களுக்கு கொடுப்பார்கள். இவ்வழக்கம் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது. எனது மாமாவின் மகன் நாள்தோறும் தவறாமல் பஜனைக்குச் சென்று வருவான். வரும்போது அவன் கையில் பொங்கல் இருக்கும். அந்தப் பொங்கலைச் சாப்பிட்டு மார்கழி மாதம் முழுவதும் பசியாறி இருக்கிறாள் மனைவி. அப்பையன் தற்போது பெரிய ஆளாகிவிட்டான். அவ்வப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம், விருந்து தடபுடலாய் நடக்கும்.

மகனுடன் எங்காவது வெளியில் சென்றால், கோவிலைப் பார்த்ததும் பய பக்தியுடன் இறங்கி வணங்கி விட்டு வருவான். அப்போதெல்லாம் நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்வோம்.

எங்கோ பிறந்து, வளர்ந்தவள் பசித்திருக்கும் போது, யார் மூலமாகவோ அவளுக்கும், அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உணவை அனுப்பி வைத்தது யார்?

இனி நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். தெய்வம் இருக்கிறதா? இல்லையா என்பதை.

Thursday, September 30, 2010

காதல் திருமணத்தின் பத்தாவது ஆண்டு - அனுபவ வாழ்க்கை

இதோ இன்றைக்கு எனது காதல் திருமணத்தின் பத்தாம் ஆண்டு நாள். பத்து வருடத்திற்கு முன்பு, இன்றைய காலையில் தான் தஞ்சாவூரில் இருக்கும் அய்யனார் கோவிலில் மதியம் பனிரெண்டு மணிக்கு எனது காதலிக்கு திரு மாங்கல்யம் அணிவித்தேன். நான் படிக்க வைத்த மோகன் என்ற பையனும், டிரைவரும் ஆசீர்வாதம் செய்ய ஏதும் இல்லாத காரணத்தால், கோவிலின் அருகில் இருந்த செம்பருத்தி பூவை பறித்து, மலர் தூவினர். எங்கள் கல்யாணம் சம்பிரதாயங்களை மீறிய ஒன்று. எவரும் அய்யனார் கோவிலில் திருமணம் செய்யமாட்டார்கள் என்றுக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அய்யனார் எனக்குப் பிடித்தவர்.

திருமணம் முடிந்த பிறகு தான் அடுத்த போராட்டமே ஆரம்பிக்கும். உறவுகளின் எதிர்ப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நானும் என் மனைவியும் அனுபவிக்க ஆரம்பித்தோம். ஆனால் யாரையும் எதிர்ப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. ஆண்டாண்டு காலமாக இருந்த ஒரு நம்பிக்கைக் கோட்டை இருவரும் தகர்த்தோம். அதன் அதிர்வுகள் தீர நாட்களாகும் என்று நாங்கள் அமைதியாய் வாழ்க்கையின் சிக்கல்களில் மாட்டினோம்.

தொழிலில் 30 லட்ச ரூபாயை இழந்தேன். மாட்ரிட்டில் நடந்த குண்டு வெடிப்பில், நான் இழந்தது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். இருந்த வசதி வாய்ப்பெல்லாம் எங்களை விட்டுக் காணாமல் போனது. ஒரு ரூபாய் காசின்றி இருப்பேன். இந்தச் சமயத்திலும், ஏக்கர் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் நான் எந்த வித உதவியையும் என் வீட்டிலிருந்து எதிர்ப்பார்த்ததில்லை. ஆட்களை வைத்து வேலை செய்தவன், மற்றொருவரிடம் வேலை செய்தேன். இரவு பகல் பாராமல் உழைத்தேன். இந்தச் சமயங்களில் உணவுக்குப் பிரச்சினையாக இருக்கும். இரண்டு வருடம் தினந்தோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டேன். என் பையனும், மனைவியும் சோற்றில் உப்பும், தண்ணீரும் சேர்த்துதான் சாப்பிடுவார்கள். என்றாவது ஒரு நாள் காய் கறிகள் வாங்குவோம். இடையில் வந்து சென்ற தீபாவளி, பொங்கல் எல்லாம் வந்த சுவடுகள் இன்றியே சென்றன. புது உடைகள் அணிய பணமிருக்காது. ஆனால் எங்கள் வீட்டில் இருக்கும் எந்தப் பிரச்சினையும் யாருக்கும் தெரியாது. அந்தளவுக்கு மனைவி வீட்டினைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள்.

நீண்ட நாட்கள் கழித்து தேடி வந்த உறவுகளை வரவேற்றோம். ஏனென்றால் குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதில் நாங்கள் இருவரும் உறுதியாக இருந்தோம். இக்கால கட்டங்களில் நான் அடைந்த பக்குவங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இன்றைக்கு எங்களது உறவு வட்டத்தில் நாங்கள் ஒரு முன்னுதாரண தம்பதிகள். ஏனென்றால் நாங்கள் வாழ்க்கை என்றால் என்ன என்பதனை நன்கு புரிந்தவர்கள். நண்பர்களும், உறவுகளும், சமூகமும், உலகமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. நாங்கள் எங்களை அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டோம். பிரச்சினைகளில் இருந்து தப்பித்து, மற்றவர் பிரச்சினைக்கு ஆலோசனை சொல்லும் இடத்திற்கு முன்னேறி விட்டோம்.

என் மனைவியிடம் “ நீங்கள், ஹீரோயின் மாதிரி இருக்கின்றீர்கள்? எப்படி இவரைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள் என்று எல்லோரும் கேட்கின்றார்கள்” என்று ஒரு பெண்மணி கேட்டிருக்கின்றார். அதற்கு என் மனைவி சொன்னது “ என் வீட்டுக்காரரை விட அழகானவர், அன்பானவரை நான் இதுவரை சந்தித்தது இல்லை”.

தாம்பத்தியம் என்றால் விட்டுக் கொடுத்தல் என்று தான் அர்த்தம் வரும். எனக்கு கோபம் வரும். கன்னா பின்னாவென்று சத்தமிடுவேன். ஆனால் அடுத்த நொடி அக்கோபம் என்னை விட்டுக் காணாமலே போய் விடும். ஏனென்றால் கோபம் இருக்குமிடத்தில் தான் குணமிருக்கும் என்பார்கள் என்று என் மனைவி சொல்வார்.

காய்கறிகள் வெட்டுவதிலிருந்து, சமைப்பதிலிருந்து, துணி துவைப்பது வரையில் நான் உதவிகள் செய்து வருவேன். ஏனென்றால் நான் செய்வது என் குடும்பத்திற்கு என்பது எனக்குத் தெரிகிறது.

எங்களுக்கு இரண்டு வாரிசுகள் இருக்கின்றனர். பையன் ரித்திக் நந்தா, பெண் நிவேதிதா இருவரும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

டிவியில் ஒரு நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்தவர்களில் நூற்றுக்கு 90 பேர் பிரிந்து விடுகின்றனர் என்றார். அவர்கள் காதல் செய்யவில்லை. காமம் செய்தார்கள் என்று புரிந்து கொண்டேன்.

காமத்தில் ஆரம்பிக்கும் அன்பு, காதலில் முடிந்து அது குழந்தைகளாய் வடிவெடுத்து வளர ஆரம்பிக்கும் தருவாயில் வாழ்க்கையின் மற்றொரு பாதையில் நாம் பயணிப்போம். அந்தப் பாதையில் நாங்கள் வெற்றிகரமாய் பயணம் செய்கிறோம்.

என் லட்சியங்கள் நிறைவேற நான் மிகக் கடுமையாக உழைத்து வருகிறேன். என்னை உற்சாகப்படுத்தி,ஊக்கப்படுத்தி வருகிறார் மனைவி. இந்த நேரத்தில் என் லட்சியங்கள் வெற்றி பெற, என்னை நெறிப்படுத்தி, ஒழுங்குப் பாதையில் அழைத்துக் கொண்டு, என்னோடு சேர்ந்து வரும் எனது சகோதரருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் என் வாழ்க்கையில் நான் நன்றிச் சொல்ல வேண்டியவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சேர்த்துச் சொல்கிறேன்

“இறைவா எங்களை ஆசீர்வதியுங்கள்”