குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, August 8, 2010

அம்முவும் புஜ்ஜுவும்





அம்முவும், புஜ்ஜுவும் தோழிகள். புஜ்ஜு அம்முவின் பக்கத்து வீட்டுக்கார பெண் குழந்தை. வெகு சூட்டிகையான பெண். அம்முவின் அருமை பெருமைகளை எழுத ஆரம்பித்தால் அது ஒரு அம்முபாரதம் ஆகி விடும்.

அம்மு ஒரு தாதா. புஜ்ஜு ஒரு தாதா. இரண்டு தாதாக்களும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும். வீடே அதகளப்படும். ஞாயிறுகளில் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கும், கலாட்டாவுக்கும் இறுதிப் பரிசு இவர்கள் அம்மாக்களின் மொத்துகள். அதைத் தொடர்ந்து பஞ்சாயத்து என்று இரவு வரை நீண்டு கொண்டே இருக்கும் இவர்களின் ராஜ்ஜியம்.




கோவை ஹோப் காலேஜ் - காதலர்கள்

நேற்று நானும் எனது நண்பரும் கோவை ஹோப் காலேஜ்லிருக்கும் ஃப்ரூட் லேண்டில் விற்கப்படும் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதற்காக சென்றிருந்தோம். நல்ல கூட்டம். அரை மணி நேரம் காத்திருந்து சூடான, ஆவியில் வேக வைக்கப்பட்ட சோளப்பிஞ்சை வாங்கிக் கொண்டு காரை ஃப்ரூட் லேண்ட் அருகில் இருக்குமொரு சந்தில் பார்க் செய்து விட்டு பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

இந்த ஸ்வீட் கார்ன் சாப்பிட வெகு சுவையாக இருக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. ஆனால் இதன் மேல் உப்பையும், வெண்ணெயையும், லெமன் கலந்த மிளகாய்பொடியையும் தடவி தருவார்கள்.அதைத் தவிர்த்து விட்டுச் சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும்.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு மாருதி கார் பார்க் செய்யப்பட்டிருந்தது. காரின் சன்னல்கள் லேசாக திறந்து வைக்கப்பட்டிருந்தன. நண்பர் அதைக் கவனித்து விட்டு என்னிடம் காருக்குள் என்னவோ நடக்கிறது என்றார். மறந்து விட்டுச் சென்றிருப்பார்கள் என்று சொல்லி விட்டு கார்னில் மூழ்கி விட்டேன்.

சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த போது கார் கதவு திறந்து ஒரு பெண் இறங்கினாள். நண்பர், சார் அங்கே பாருங்க என்று அலறினார். அந்தப் பெண் எங்கள் காருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காருக்குச் சென்றார். நல்ல விளக்கொளியில் அவரைக் கவனித்தபோது திருமணமான பெண் என்று தெரிந்தது. ஏன் தவறாக நினைக்க வேண்டுமென்று சொல்லி அந்தப் பெண்ணின் உறவுக்காரராக இருக்கும் என்று நண்பரிடம் சொன்னேன். அதற்கு நண்பர் என்னைப் பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தார்.

அந்தப் பையனை பாருங்க என்றார். கல்லூரியில் படிக்கும் பையன் அவன். காரின் பின் சீட்டிலிருந்து டிரைவர் சீட்டுக்கு மாறி காரை எடுத்துக் கொண்டு சென்றான். அந்தப் பெண்ணும் தன் காரை எடுத்துக் கொண்டு சென்றார். இதெல்லாம் நடந்த நேரம் இரவு 7.30க்கு.

நண்பரிடம் இதுவும் ஒரு காதல் தான் என்றேன். தவறாகச் சொல்கின்றீர்கள், இதற்குப் பெயர் கள்ளக்காதல் என்றார்.

கள்ளக்காதல், நல்லகாதல் என்று காதலில் இன்னும் எத்தனை வகைகள் இருக்கின்றனோ தெரியவில்லை. வாழ்க்கையின் போக்கு சிலருக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுக்கும். அது மேற்படிச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கிடைக்கும்.

வாழ்க தமிழ் சமுதாயமும், கலாச்சாரமும்

- அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

Wednesday, August 4, 2010

அன்றும் இன்றும்


பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது எனது தோழனும், எங்கள் வீட்டு விவசாய வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சந்திர போஸுக்கு கல்யாணம் பேசிக் கொண்டிருந்தார்கள். பெண் பார்த்து அனைவருக்கும் பிடித்து விட்டது. வீட்டு வாசலில் மாமா, தாத்தா, அம்மா, அக்கா, போஸ் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். நான் அவனிடம் சொன்னேன். போஸு கல்யாணம் முடித்தவுடன் உன் பொண்டாட்டியை கொண்டு வந்து இங்கே விட்டு விட்டு வீட்டுக்குப் போயிடு என்று அவனைக் கலாட்டா செய்தேன். அவனும் சரிடா என்று சொல்லி விட்டான்.

கொஞ்ச நாட்களில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்தான். நான் வாசலில் சேரில் அமர்ந்திருந்தேன். அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு என் அருகில் வந்தனர்.

வந்தவன், தங்கம், நான் கிளம்புறேண்டா, அண்ணி கையை பிடித்து என் கையில் கொடுத்து, நீயே பாத்துக்க என்று சொல்ல வெட்கத்தில் நெளிய ஆரம்பித்தேன். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரி சிரி என சிரிக்க ஆரம்பித்தனர். அண்ணியோ ஒரு படி மேலே போய் என்னங்க, ஒன்னும் பேச மாட்டேங்குறீங்க என்று சொல்ல வெட்கத்தில் எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

அன்றைக்கு சரியான கலாட்டா.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஓடி விட்டன. போஸின் பையன் இஞ்சினியரிங் படிக்கப் போகிறான். பெண்ணும் படித்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு திடீரென்று பலா பிஞ்சு சாப்பிடனும் போல இருக்க, அவனுக்கு போன் போட்டேன். அண்ணி வாய்ஸ் கேட்டது. என் குரல் கேட்டவுடன் அடையாளம் தெரியாமல் போஸிடம் கொடுத்து விட்டார்கள்.

டேய் போனைக் அங்கே கொடுடா என்றேன். அண்ணி வாங்கிப் பேசினார்கள்.

என்ன அண்ணி, அப்படியே தான் இருக்கின்றீர்களா? இல்லை வயதாகி விட்டதா என்றேன். ஏன் நீங்களே வந்து பாருங்களேன் என்றார். நீங்க அப்படியே இருந்தா, வந்து கூட்டிக்கிட்டு வருகிறேன். என்னுடன் வருகின்றீர்களா என்றேன். அவரும் உடனே கிளம்புன்னு சொல்லுவாரு, நீங்க வாங்க உங்க கூட வந்துடுறேன் என்றார். சிரி சிரியென்று சிரித்தேன்.

அருகில் அமர்ந்திருந்த என் மனைவி, உங்களுக்கு ரொம்பவும் தைரியம் தான் என்றாள். அவ்ளுக்கு எங்கே தெரியப்போகிறது எங்களைப் பற்றி?

போஸிடம் பலா மோசு அனுப்பி வை என்றுச் சொன்னேன். இப்போ எங்கேடா போறது என்றான். அம்மாகிட்டே சொன்னேன், அவங்க உன்னிடம் சொல்லச் சொன்னாங்க, சொல்லிட்டேன் என்றேன். எங்காவது பிடித்து அனுப்பி வைப்பான்.

எனது உயிரோடு கலந்து, என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போஸ் அடுத்த பிறவியில் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.

* * * * *

Tuesday, August 3, 2010

கோவைக்கு வந்த முதல்வரும் இந்திய ஜன நாயகமும்


மதியம் பனிரெண்டு மணிக்கு காந்திபுரம் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் ட்ரெண்டியில் சென்று கொண்டிருந்தேன். நேற்றைக்கு சற்றே வெயில் கடுமையாக இருந்தது. குளிர் காற்று வீசினாலும் வெயிலின் சூடு உடம்பிலேறி வியர்வை பெருகியது. என்னடா இது கோவைக்கு வந்த சோதனை என்று வெயிலை நொந்து கொண்டு எரிச்சலுடன் காந்திபுரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நேரம் வெயிலில் நிற்க முடியவில்லை. சோர்வும், எரிச்சலும் ஒரு சேர வந்தன. மனதில் அயர்ச்சியும் ஏற்பட்டது.

இள நீர் கடையில் செவ்வெளநீர் ஒன்றை பருகினேன். கடைக்காரர் புன்னகை முகத்தோடு பேசினார். வெயில் ரொம்ப போலிருக்கு என்றேன். அடுத்த வார்த்தையாக அயோக்கியப்பயல்கள் அதிகம் சார் அதனால் தான் வெயில் இப்படிக் கொளுத்தி எடுக்கிறது என்றார். அயோக்கியப் பயல்களுக்கும் வெயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

அவினாசி சாலை முழுதும் துடைத்து வைத்தாற்போல இருந்தது. இருபக்கமும் வழி நெடுகவும் காவல்துறையினர் பத்தடிக்கு ஒருவராய் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். முதல்வர் வருகிறார் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ஒருபக்கம் போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் மறுபக்கம் சுத்தமாய் நிறுத்தி விட்டார்கள்.

முதல்வர் வந்தால் அவர் பாட்டுக்கு அவர் வேலையைச் செய்வார். நீங்கள் எதற்கு இப்படி வேகாத வெயிலில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்கத் தோன்றியது. கேட்க முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட அயர்ச்சியும், எரிச்சலும் அவர்களுக்கும் ஏற்படும் தானே என்று நினைத்தேன். ஒருத்தருக்காக இத்தனை பேர் வெயிலில் நிற்கின்றார்களே இது தான் மக்களாட்சியா என்று தோன்றியது.

அரை மணி நேரம் அவினாசி, மசக்காளிபாளையம் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். அத்தனை வண்டிகளும் உறுமியபடியே நின்றன. வெயிலும், டீசல் பெட்ரோல் புகையும் சேர்ந்து கருக்கி எடுத்தன. தீங்கு விளைவிக்கும் புகையினை சுவாசித்துக் கொண்டிருந்தோம். முதல்வர் பத்திரமாய் ஹோட்டலுக்கு சென்று சேர எத்தனையோ பேரின் உடலாரோக்கியம் கெட்டது.

ஏன் நிற்கிறோம் என்று யோசித்தேன். இந்திய ஜன நாயகத்தின் காரணமாய் நிற்கிறாய் என்றது மனது.

உண்மைதானே?


* * * * *

Monday, August 2, 2010

மனிதர்களுள் மாணிக்கங்கள் - குமார்





கோவை மசக்காளிபாளையத்தில் சில நண்பர்களுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். சில்லிட்ட காற்று உடம்பைத் தழுவ அந்தச் சமயத்தில் சூடாக ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற நினைப்புடன், அருகிலிருந்த பேக்கரியில் லெமன் டீ ஆர்டர் செய்தோம்.

கம கம வாசனையுடன் லெமன் டீ சாப்பிட்டு விட்டு, எதிர்ப்புறமாக இருந்த அகண்ட சாலையில் காருக்குள் அமர்ந்து கொண்டு சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்த போது, மீன் வறுவல் வாசத்தை, காற்று எங்களிடம் கொண்டு வந்தது.

ஒரு தள்ளுவண்டியில் மீன் வறுத்துக் கொண்டிருந்தார்கள். சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று தட்டுகள் நிறைய மீனை வறுத்தவர், அந்த எண்ணெயை அருகில் இருந்த சாக்கடையில் கொட்டினார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. என்னடா இது உலக அதிசயம் என்று எண்ணி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதற்குள் நண்பரொருவர் ஒரு தட்டு வறுவல் மீனை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

சார் என் கடைக்கு நிறைய கஸ்டமர்ஸ் இருக்காங்க. சின்னப் பிள்ளைகள் நிறைய பேர் வருவார்கள். இரண்டு லிட்டர் பாமாயிலை மீன் வறுத்தவுடன் கொட்டி விடுவேன். மேலும் மேலும் எண்ணெய் சேர்த்து வறுப்பது கிடையாது. என்னால் பிறரின் உடலுக்கும், குழந்தைகளின் நலத்துக்கும் தீங்கு நேரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் சார் அடிக்கடி எண்ணெயை மாற்றுகிறேன் என்றார்.

ஆச்சர்யம். மீந்து போன பொருட்களை மறு நாள் சூடாக விற்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் வெளியிட்டு மகிழ்வார்கள். கால்வதியான மருந்துப் பொருட்களை விற்பவர்களும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்கும் பன்னாட்டு விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழிலதிபர்கள் என்று அவார்டுகளை வழங்கும் நமது அரசாங்கம். வியாபாரம் என்ற பெயரில் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற கொலைகாரர்கள் உலவும் இந்தப் பூமியில் தன்னை நம்பி சாப்பிட வரும் மனிதனின் நலத்தில், கவனம் வைத்துச் செயல்படும் மிஸ்டர் குமார் என்பவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைவோம். ஏனென்றால் இவர்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மனித நேயம் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பது தெரிய வருகிறது.

அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

Thursday, June 10, 2010

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

நிவேதிதா எல்கேஜி படிக்கிறார். நான்கு வருடங்களாக எங்கும் செல்லாமல் கூடவே இருந்த செல்லமகளை பள்ளியில் அட்மிஷன் செய்து விட்டு வந்தோம்.

இரண்டு நாட்கள் கழிந்த பிறகு அவர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். வேனில் பயணம். மாலை நான்குமணிக்குத்தான் வருவார். அவர் கூடவே ரித்திக் நந்தாவும் செல்கிறார். அட்மிஷன் போட்டு விட்டுவந்த பிறகு மனசுக்கு பாரமாக ஆகிவிட்டது. இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன்.

நிவேதிதாவின் அம்மா என்னிடம் சரியான ரகளை செய்து கொண்டிருந்தார். பிள்ளையை கூடவேவைத்திருக்கப்போகின்றீர்களா என்று வம்பு செய்து கொண்டிருந்தார். எனது சோகத்தைப் பார்த்துசிரித்துக் கொண்டிருந்தார். பிள்ளை படிக்கப் போகிறாள் அதற்கு ஏன் இத்தனை அழிச்சாட்டியம்செய்கின்றீர்கள் என்று கோபப்பட்டார். ஆனால் அவர் என்ன சொன்னாலும் மனசுக்கு அதுதெரியவில்லை.

அந்த இரண்டு நாட்களும் சோகமாகவே கழிந்தது. திங்கள் அன்று ஆறு மணிக்கு நிவேதிதா எழுந்துகுளித்து விட்டு சாப்பிட்டு விட்டு ஜம்மென்று பள்ளிக்கு கிளம்பினார். வேனில் ஏற்றி விட்டு வந்தநிவேதிதாவின் அம்மா என்னிடத்தில் வந்து நின்றார். என்னவென்று அவர் முகத்தை நோக்க, கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது இதுதானோ?

Sunday, May 30, 2010

வாழ்வின் சூட்சுமம் தெரிந்த நாள்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் மெட்ரிக் பள்ளியின் கணிணி ஆசிரியராகவும், இரண்டு சாரதா கல்லூரி மேலும் ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பள்ளிகளின் கணிணி நிர்வாகியாகவும் பணி புரிந்த போது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களும் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

ஊனத்தின் காரணமாய் எனக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையின் காரணமாக திருமண வாழ்வு பற்றி நான் என்றைக்கும் எண்ணிப் பார்த்தது இல்லை. எதை வேண்டாமென்று எண்ணுகிறமோ அந்தச் சூழலில் தான் நீ வாழ வேண்டுமென்று கடவுள் நினைத்தானோ என்னவோ தெரியவில்லை நான் வேலை செய்தது மகளிர் கல்லூரியில். ஆனால் இருந்ததோ சாமியார்கள் அருகில்.

தனி அறையும் அட்டாச் பாத்ரூம் வசதியுடன் மிகவும் வசதியாக தங்கி இருந்தேன். அறையில் இரண்டு கட்டில்கள் இருக்கும். யாராவது கெஸ்ட் வந்தால் அவர்கள் என்னுடன் தங்கி இருப்பர். அப்படி ஒரு நாள் வந்தவர்தான் பசுபதீஸ்வரானந்தா அவர்கள். வயது 96 இருக்கும். கை கால்களும் ஒரு தாள லயத்தில் உதறிக் கொண்டிருந்தன. தலையோ நிற்காமல் அங்குமிங்கும் ஆடியபடியே இருந்தது. கண்களில் கண்ணாடி அணிந்திருந்தார். தலையாட்டத்தின் காரணமாய் கண்ணாடி கழன்று விடாமல் இருக்க அழுக்கேறிய கயிறு ஒன்று தலையைச் சுற்றி கட்டியிருப்பார்.

என்னைப் பற்றி விசாரித்தார். சொன்னேன். விடிகாலையில் நான்கு மணிக்கு ஏதோ சத்தம் கேட்டு விழிப்பு வந்தது. வலது காலின் கட்டை விரலை ஊன்றி லங்கோடுடன் சுமார் முக்கால் மணி நேரமாய் ஆடாமல் அசையாமல் கல்லில் வடித்த சிலைபோல நின்று கொண்டிருந்தார் பசுபதீஸ்வரானந்தா. ஆடிய தலையும், கைகால்களும் ஆடாமல் அசையாமல் இருந்தன. முக்கால் மணி நேரம் சென்ற பிறகு பத்து நிமிடம் நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின்னர் பாத்ரூமிற்குள் சென்று குளித்தார். விபூதி அணிந்தார். கட்டிலில் உட்கார்ந்தார். அதன் பிறகு தலையும், உடலும் ஆட்டம் போட்டன. போர்வைக்குள்ளிருந்து நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டார். இல்லையென்றேன். அதைப் பற்றி யோசிக்கவே இல்லையென்றேன். உனக்கு திருமணம் நடக்கும். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இருப்பார்கள். தெய்வமே உனக்கு மனைவியாய் வரும் என்றார். சாமி, ஏன் சாமி இப்படி ரகளை செய்கின்றீர்கள் என்று கோபப்பட்டேன். நான் கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்றும் அதுதான் என் ஆசையென்றும் சொன்னேன். ஆத்மானந்தா சொன்னாரா என்று கேட்டு விட்டு தொடர்ந்தார்.

என் இளவயதில் நானும் கடவுளைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் சாமியாராய் மாறினேன். இமயமலை சென்றேன். ரிஷிகேஷ் சென்றேன். திருவண்ணாமலை சென்றேன். எனக்குத் தெரியாத யோகமும் தவமும் இல்லை. சாப்பிடாமலயே ஒரு வருடம் கூட இருப்பேன். தியானத்தில் ஆழ்ந்தால் எத்தனை நாட்களோ தெரியாது. அப்படிப்பட்டவன் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேட்டுக் கொள் என்றுச் சொல்லி தொடர்ந்தார்.

இன்னும் சில வருடங்களில் நான் இறந்து போய் விடுவேன். நான் செய்த இத்தனை தவத்தினாலும் யோகத்தினாலும் இதுவரை கடவுள் எனக்கு காட்சி தரவே இல்லை. கடவுளைப் பார்க்காமல் விடமாட்டேன் என்று இமயமலையில் திரிந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்ப்பட்ட சாமியார் சொன்னார் ” நீயே தெய்வம் ”

அன்றைக்கு புரிந்தது எனக்கு. என் கடந்து போன நாட்கள் இனிமேல் கிடைக்குமா? கிடைக்காது. இதோ என் வாழ்வையும் சேர்த்து நீ வாழ். நீ விரும்புகிறாயோ இல்லையோ உனக்கு திருமணம் நடக்கும். குழந்தைகள் பிறக்கும். ஒவ்வொரு கட்டமாய் நீ பக்குவப்படுவாய். வாழ்வின் அத்தனை சூட்சுமங்களையும் தெரிந்து கொள்வாய் என்று சொன்னார்.

இதோ எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். மனைவி என்னை தன் குழந்தை போல கவனித்துக் கொள்கிறாள். என் தாய் என் மனைவியைப் பார்த்து என்னிடத்தில் சொன்னார் “ நான் உன்னிடத்தில் எப்போதும் இருப்பேன்” என்று.

”நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை ” :- இயேசு நாதர்.

Friday, May 28, 2010

அண்ணனின் தவிப்பறியா மறைந்த தங்கையின் கதை

எனது இளமைக்காலம் கொடுமையானதாகவே இருந்தது. அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் எனது ஊனத்தின் காரணமாய் தட்டிக் கழிக்கப்பட்டன என்பது இன்றைக்கும் என்னால் மறக்க முடியாத ஒன்று. இதுவரையிலும் எந்த ஒரு கல்யாண வீட்டிலும் சாப்பிட்டது கிடையாது. காரணம் எனது ஊனம். இளமைக்கால வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியிலும் ஊனத்தை நினைவுபடுத்தும் சம்பவங்களே என்னைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டு கூடவே வந்தன. அதன் காரணமாய் நான் அடைந்த மனத்துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு ஏதுமின்றியே என் நாட்கள் கழிந்தன.

நட்பு என்பதும் உடலை முன்வைத்து வருபவையோ என்று கூட எனக்குச் சில சமயம் நினைக்கத் தோன்றும். அதற்கு சில சம்பவங்களும் சாட்சியாய் என் முன் வந்து நிற்கும். இப்படி நான் கடந்து வந்த வாழ்க்கையின் நாட்கள் இன்றைக்கும் எனது இரவுகளில் கனவுகளின் மீட்சியாய் என் முன்னே நின்று தன் எச்சத்தை என் மீது உமிழ்ந்து விட்டுச் சென்ற பிறகு தூக்கம் வராமல் அவதிப்படுவேன்.

எனது மேல் நிலைப் பள்ளிப் படிப்பு எனக்கு மிகவும் கசப்பானவையாக இருந்தது. காரணம் நான் விரும்பிய படிப்பு எனக்குக் கிடைக்கவில்லை. தஞ்சாவூரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியும், புனல்வாசலில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியும் என் ஊனத்தை முன் வைத்து கணிப்பொறிக் கல்வியை தர முடியாது என்று சொன்னது. ஸ்டூலில் ஏறி உட்காரமுடியாது என்று அவர்களாக ஒரு முடிவெடுத்துக் கொண்டு என் ஆசையை நிராகரித்தார்கள். என் கனவு நிறைவேற நான் மேலும் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதற்கு நான் பட்டபாடு இருக்கிறதே அதை எழுத்தில் வடிக்க முடியுமா என்றால் மீண்டும் அந்த ஒரு துன்பத்தை அனுபவிக்க வேண்டுமா என்று மனது கேள்வி கேட்கிறது.

என் எம்எல்ஏ உறவினர் ஒருவரின் சிபாரிசில் தான் கணிப்பொறியியல் பட்டப்படிப்பு கிடைத்தது. அதையும் மறைந்த திருமெய்ப்பொருள் என்ற எனது கல்லூரி முதல்வர் மறுதலித்தார். ஆனால் பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளர் திரு துளசி அய்யா வாண்டையார் எனக்கு கணிணி அறிவியல் துறைப்படிப்புக் கிடைக்கவும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். அன்றைக்கு அய்யா கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் எனக்கு கம்ப்யூட்டர் படிப்பு கானலாகவே ஆகியிருக்கும். சரி போகட்டும் பழங்கதை.

எனது பனிரெண்டாம் வகுப்பு முடியும் தருவாயில் பைங்கால் என்ற கிராமத்திலிருக்கும் எனது சித்தியின் வீட்டில் தங்கிப் படித்தேன். என்னை அழைத்துச் செல்வது சித்தியின் மூத்த கொளுந்தனாரின் மகன். அவனும் என்னோடு கீரமங்கலத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்தான். சில உறவுகளின் நினைவுகள் இறக்கும் வரையிலும் மறக்க முடியாதவைகளாக இருக்கும். அப்படிப்பட்ட உறவுகளில் என் தங்கை ஒருத்தியை நான் இழந்து சில இரவுகளில் வரும் அவளின் நினைவுகளின் தொந்தரவால் தவித்திருக்கிறேன். அவள் பெயர் மாலதி. என்னை விட்டுப் பிரிந்த என் உயிருக்கும் மேலான என் அருமைத் தங்கை இவள்.

அடுத்த பகுதி விரைவில்

வாழ்விற்கு தேவை சந்தோஷமா? பணமா?


இன்றைய காலச் சூழலில் மனிதர்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். உடல் நலம், மன நலம் பற்றி மனிதர்கள் கொஞ்சம்கூட யோசிக்கும் திறமையற்றவர்களாய் காசுக்கு வேலை பார்க்கும் இயந்திரமாய் உலவிக் கொண்டிருக்கிறார்கள். லட்சங்களில் கொடுக்கப்படும் சம்பளம் பின்னர் மால்களின் மூலமாக வசூல் செய்து விடுகிறார்கள்.

வெறும் 200 ரூபாய் பொருமானமுள்ள சாதாரண டிசர்ட் 2000 ரூபாய்க்கு பிராண்ட் பெயரில் விற்கப்பட்டு கொள்ளை அடிக்கப்படுகிறது. பிராண்ட் மோகத்தில் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமலே, ஏமாளிகளாய் திரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தனது ஈகோவினால் தனது உழைப்பை பிறர் திருடுகிறார்கள் என்பது தெரியாமல் ஏமாந்து போவதுதான் வேதனை.

வாழ்க்கை என்பது வேறு வகையானது. அது கொண்டாடப்பட வேண்டியது. மனித வாழ்க்கையின் தத்துவமே பிறருக்காக வாழ்வது தான். ஆனால் இன்றைய நவ நாகரீக மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

வெறும் பத்து செண்ட் நிலத்தில் தனக்குத் தேவையான பொருளைச் சம்பாதிக்கும் ஒரு விவசாயியின் பேட்டியைக் படித்துப் பாருங்கள். இந்த விவசாயிக்கு முதலாளி என்று எவரும் இல்லை. காலை 10 மணி இரவு 7 மணி என்ற கணக்கு இல்லை. தானே முதலாளி தானே தொழிலாளி என்று வாழும் இந்த விவசாயியை விடவா நீங்கள் சந்தோஷமாய் இருக்கின்றீர்கள்?



பசுமை விகடனில் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதியும், விவசாயியின் புகைப்படமும். நன்றி பசுமை விகடன்

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள சிங்கான்ஓடையைச் சேர்ந்த பாஸ்கரன் சொல்கிறார்.

''ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டுஇருந்தேன். அதுல பெருசா வருமானம் கிடைக்காததால விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு 100 குழி (33 சென்ட்) நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புடலங்காயை நட்டு வெச்சேன். ஓரளவுக்கு வருமானம் கிடைக்கவே, புடலங்காய் விவசாயத்தையே தொடர ஆரம்பிச்சுட்டேன். விவசாயத்துக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாச்சு. குத்தகை நிலத்துல விளைஞ்ச புடலங்காயை வித்துக் கிடைச்ச வருமானத்துல, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு ஆறு வருசத்துக்கு முன்ன ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.

நான் வாங்கின நிலம் கடலுக்குப் பக்கத்துல இருக்கறதால, ஒரு குளத்தை வெட்டி அதுல ஊறுற தண்ணியைத்தான் பாசனத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது மணல் பாங்கான நிலம். வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, கடலை, வெள்ளரி, கொத்தவரை, பாகல், நீளப்புடலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷமாதான் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கேன். ஆனா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு எதையும் தயாரிச்சுப் பயன்படுத்தறது இல்லை. எரு, கடலைக் கொடி, கொளுஞ்சிச் செடி... இது மூணை மட்டுமே வெச்சுதான் முழு வெள்ளாமையும் செய்றேன். புடலையில காய்ப்பு ரொம்ப நல்லாவே இருக்குது. எப்பவும் சித்திரைப் பட்டத்துல அரை ஏக்கர்லயும், தை பட்டத்துல கம்மியாவும்தான் சாகுபடி செய்வேன்'' என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன், பத்து சென்ட் நிலத்தில் புடலை சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்த பாடத்தை ஆரம்பித்தார்.

புடலைச் சாகுபடி செய்வது எப்படி என்பது நமக்கு இவ்விடத்தில் தேவையில்லை. பாஸ்கரனின் உழைப்பு என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. உடல் நலம், குடும்ப நலம், சந்தோஷம் போன்றவைகளுக்கு மொத்த குத்தகைதாரராக அல்லவா இருக்கிறார். எங்கே இந்த சந்தோஷமும் நிம்மதியும் உங்களிடம் இருக்கிறதா என்பதை சற்றே நிதானித்து ஆராய்ந்து பாருங்கள்.

அன்புடன் - தங்கவேல் மாணிக்கம்

Tuesday, May 11, 2010

பிரேமானந்தாவுடன் ஒரு நாள்

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் - அலங்கார வளைவுகள், கொடிகள், தோரணங்கள் என்று கல்லூரி அதகளப்பட்டது. வழக்கம்போல வகுப்பிற்கு சென்றிருந்தேன். பதினோறு மணிவாக்கில் அனைவரும் கல்லூரிக்குள் இருக்கும் மேடைக்கு வரும்படி சர்க்குலர் வந்தது. என்னவோவென்று நினைத்துக் கொண்டு கல்லூரிக்குள் இருக்கும் ஹாஸ்டலுக்கு மூன்று சக்கர சைக்கிளில் சென்றேன். கேட்டில் வாட்ச்மேன் நின்று கொண்டு உள்ளே விட மறுத்தார். ஏன் என்று கேட்க, அனைத்து மாணவர்களும் சுவாமி பிரேமானந்தாவின் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று நிர்வாகத்தினர் உத்தரவிட்டதால் ஹாஸ்டல் ஒரு மணிக்குப் பிறகுதான் திறக்கப்படும் என்றார். வேறு வழி இன்றி மாமரத்தின் அடியில் இருக்கும் பெஞ்சு ஒன்றின் மீது தஞ்சமடைந்தேன். சிலு சிலுவென காற்று வீசிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரிய மீன் குளத்தில்( ஆராய்ச்சிக்காக வளர்க்கின்றார்கள்) பெரிய பெரிய சைஸில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. அதையடுத்து பச்சைப் பசேல் வயல்களில் பசுங்கதிர்கள் சலசலவென பேசிக்கொண்டிருந்தன. அதையும் தாண்டி நாகப்பட்டினத்திற்கு ரயில் ஒன்று ஓசையிட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தது. 

இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே சிவப்புக் கலர் கார் ஒன்றும் தொடர்ந்து பல கார்களும் வந்தன. காரிலிருந்து இறங்கினார் சுருள் முடி பிரேமானந்தா. அதைத் தொடர்ந்து இறங்கினார் திவ்யா மாதாஜி. மஞ்சள் கலரில் சேலை. பார்த்தவுடனே பற்றிக் கொள்ளும் அழகு. இறங்கியவுடன் தன்னை வரவேற்ற கல்லூரியின் நிர்வாகிக்கு ஒரு ரோஜாவை வரவழைத்துக் கொடுத்தார். கல்லூரிப் பையன்களுக்கு திவ்யாவைப் பார்த்ததும் சுறு சுறுப்பு வந்து விட்டது. அடித்துப் பிடித்துக்கொண்டு மேடைக்குப் பறந்தனர். கவனிக்க பறந்தனர். கூட்டமெல்லாம் நமக்கு ஒத்து வராது என்ற நினைப்புடன் மெதுவாக ஹாஸ்டலுக்கு மீண்டும் சென்றேன். வாட்ச்மேன் கதவைத் திறந்து விட்டார். அறைக்குச் சென்று ரீகிரியேஷன் ஹாலுக்கு சென்று அங்கிருந்த பொறுப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். சாமியார் வரப்போவதாக சொன்னார். சரி வரட்டும் என்று குமுதம் புத்தகத்தைக் கையெலெடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

சரியாக ஒரு மணி நேரம் சென்ற பிறகு பிரேமானந்தாவுடன் கல்லூரி நிர்வாகியும் அவர் கூடவே திவ்யா மாதாஜியும் வந்தனர். ரீகிரியேஷன் ஹாலைப் பார்த்தார். நான் பய பக்தியுடன் வணக்கம் சொன்னேன். பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்லி, ராஜா என்ன படிக்கிறாய் என்று கேட்டார். சொன்னேன். கண்ணை மூடினார் கையை தலைமீது கொண்டு சென்றார். விபூதியாய்க் கொட்டியது. நெற்றியில் கொஞ்சம் இட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பக்தியுடன் பரவசத்தில் ஆழ்ந்தனர். நன்றாகப்படி என்று சொன்னார். அவர் அறையினை விட்டு வெளியே சென்ற பிறகு பின்னால் வந்த திவ்யா மாதாஜி அருகில் வந்து எந்த ஊர், என்ன படிக்கின்றீர்கள் என்றெல்லாம் விசாரிக்க நானும் பக்தியுடன் பதில்களை உதிர்த்தேன். சிரித்துக் கொண்டே ஒரு கையால் தலைமுடியைக் கலைத்து விட்டு அவசியம் ஆசிரமத்திற்கு வரும்படி சொல்லிச் சென்றார்.

அதன்பிறகு நடந்த விஷயம் தான் முக்கியமானது.

அவர்கள் சென்ற பிறகு அறைக்கு வந்த என் தோழர்களும், நண்பர்களும் என் தலைமீது கொட்டப்பட்டிருந்த விபூதியை எடுத்து பூசிக் கொண்டனர். ஆனால் வழக்கம்போல திவ்யாவைப் பாத்ரூமில் படம் வரைந்து பாகம் குறித்து விட்டனர் என்பது தான் மிகப் பெரிய சோகம். டெர்ம் எக்ஸாம் முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்று விட்டோம். லீவு முடிந்து வந்து பார்த்தால் அனைவரும் நக்கீரனும் கையுமாய் அலைந்து கொண்டிருந்தனர். என்ன விஷயமென்று பார்த்தால் பிரேமானந்தா மாட்டிக் கொண்டார். திவ்யா தூர தேசம் ஓடினார் என்பது தான். வகையாக என்னையும் நண்பர்கள் சற்று வறுத்தனர். நக்கீரனில் வெளியிடப்பட்டிருந்த நல்லம்மா என்ற அழகு தேவதையை அவர் கற்பழித்த விஷயம் தான் இன்னும் என் மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறது. நக்கீரனில் வெளியிட்டிருந்த அப்பெண்ணின் முகம் அப்படியே இன்னும் என் நினைவில் இருக்கிறது.