குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, August 27, 2017

நன் மனைவி கிடைப்பதரிது

கடந்த வாரம் என்று நினைவு. விஜய் டிவியின் நீயா நானாவில் திருமணத்திற்கு பெண் தேடும் ஆண்களின் பிரச்சினைகள் பற்றி  கோபி நாத் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆண்களுக்கு பெண்கள் போடும் மிக முக்கியமான கண்டிஷன்கள் தனி வீடு இருக்க வேண்டும், நல்ல வேலையில் இருக்க வேண்டும், அக்கா தங்கைகள் இருக்கக் கூடாது, கடன் இருக்கக் கூடாது, கடன் வாங்கிக் கட்டுபவராகவும் இருக்கக் கூடாது என்பவை. ஒரு சிலர் அமெரிக்காவில் செட்டில் ஆவது வரவேற்கப்படுகிறது. இதெல்லாம் இருந்தால் தான் செலக்‌ஷன் செய்வார்கள். அதன் பிறகு இன்னபிற கண்டிஷன்கள் போடப்படலாம். அது அந்தந்தக் குடும்பத்தைப் பொறுத்தது. 

அந்த விவாதத்தில் பேசிய பெண்களில் ஒருவர் கூட நல்லியல்பு கொண்ட குடும்பத்திலிருந்து ஆண்மகன் இருந்தால் என் மகளைக் கட்டிக் கொடுப்பேன் என்று சொல்லவே இல்லை. கண் இமை முடியை மழித்துக் கொள்வது போல நல்லியல்புகளை மழித்துக் கொண்டு விட்டார்கள் போலும். பணம், பொருள் இருந்தால் தான் ஆண்மகன் என்கிறார்கள். அவனுக்குத்தான் பெண் கொடுப்போம் என்கிறார்கள் பெண்களைப் பெற்றவர்கள்.

சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம்
இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத்
திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார். ( பழமொழி நானூறு - 321 )

கணவனின் முகக் குறிப்பறிந்து  கணவன் நினைத்த காரியத்தை அறிந்து கொள்ளும் மனையாளும், வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்று உபசரித்து அனுப்பும் மனையாளும், செல்வத்துடன் வாழும் மனையாளைக் கொண்டவனே என்றைக்கும் நீங்காத இன்பமுடையவர்கள். இனி வருங்காலத்தில் இப்படி ஒரு நன் மனைவியை எவராலும் அடையவே முடியாது போலும் என்று நினைக்க வைத்தது அன்றைய நீயா நானாவில் பேசிய பெண்களும், பெண்களின் தாயார்களும், தந்தைகளும் பேசிய பேச்சுக்கள்.

பெண் என்பவளுக்கு எது முக்கியம் என்பதை ஒரு பழம் பாடல் விளக்குகிறது.

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல்.  (பழமொழி நானூறு - 327)

இந்தப் பாடலின் விளக்கம்: அறுசுவை உணவின்றி உடலுக்கு உயிர் இல்லை. பணமின்றி காரியங்களைச் செய்ய முடியாது. வித்து இன்றி விளைச்சலும் இருக்க முடியாது. அது போல பெண்களுக்கு நாணம் என்பது முக்கியம். இப்போதையப் பெண்களுக்கு நாணம் என்பது என்னவென்று தெரியுமா என்று தெரியவில்லை.

இத்தகைய நறுங்குணங்கள் கொண்ட பெண்மையைப் பார்ப்பது இனிமேல் அரிதிலும் அரிதாகி விடும் போல. 

அதுவாவது பரவாயில்லை. அந்தக் காலத்தில் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இன்றைக்கோ ஒரு குழந்தைக்கே படாதபாடு பட வேண்டி இருக்கிறது. குழந்தைபெற ஹாஸ்பிட்டல் இருந்தாலே போதும், தாம்பத்யம் வேண்டியதில்லை என்கிறது ஒரு விளம்பரம். ஆண் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். 


ஏரோப்ளேன் ஓட்ட ஆரம்பித்த பெண்கள் இனி ஆண்கள் இல்லாமல் குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். ஆண்களின் பாடு இனி திண்டாட்டம் தான் போலும். பெண்கள் ஆண் குழந்தைகளே வேண்டாமென்று முடிவெடுத்தால் மேலும் சிக்கலாகி விடும் போல. என்னவோ நடக்கின்றது. அது நல்லதாக இல்லை என்பது மட்டும் புரிகிறது.

Saturday, August 26, 2017

நிலம் (40) - இந்துவானவர் முஸ்லீமானால் வாரிசுரிமை எவ்வாறு இருக்கும்?

ஒரு வழியாக பிக் பாஸில் பிந்து மாதவியின் தோளில் கை போடும் அளவுக்கு வையாபுரி நெருங்கி விட்டார் அண்ணன்(??) என்கிற உறவில். புறம் பேசும் அளவுக்கு ஈனப்புத்தி உள்ளவர்கள் பிக்பாஸில் இல்லாதிருப்பது நன்றாக இருக்கிறது. குரோதங்களும், துரோகங்களும், கொலைகளும், கெடுமதியும் இல்லாமல் இருக்கும் சூழலைப் பார்க்கும் போதும், அது பற்றிப் படிக்கும் போதும் மனது கொஞ்சம் ஆறுதல் அடைகிறது. 

எனக்கு நீண்ட நாட்களாக ஏன் ஜானகிராமனின் படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன என்பது புரியாமல் இருந்தது. பிக்பாஸ் பார்த்த பிறகு அவரின் நாவல்களின் அடிநாதம் புரிபடுகிறது. அவரது படைப்புகளில் உறவுகளின் இடையே உண்டாகும் உணர்ச்சிகளால் விளையும் செயல்களால் நாவல் தொடர்ந்து நடைபெறும். அடிதடி இல்லை, கொலைகள் இல்லை. அவரின் நாவல்கள் மனதை வருடி விட்டுச் செல்லும் தன்மையானவை.

மனிதர்களுக்கு எதுவும் இன்பகரமானதாக இருந்தால் தான் மகிழ்வார்கள். அதை ஜாரா அருமையாக கையாண்டிருக்கிறார். இவரைப் போன்ற நாவலாசிரியர்கள் இப்போது இல்லை என்பது முகத்திலறையும் உண்மை. தற்கால பிரபலமான நாவலாசிரியர் பாலகுமாரனின் நாவல்கள் மனித குலத்துக்கு தவறான வழிகாட்டுதல்களை சொல்லிச் செல்பவை. ஆன்மீகம் என்பது என்னைப் பொறுத்தவரை வியாபாரப் பொருள். அதை தன் நாவல்களில் புகுத்தி ஏற்கனவே குழம்பிக் கிடப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார் பாலகுமாரன். அது ஒரு பக்கம் போகட்டும். 

சமீபத்தில் கேரளாவிலிருந்து ஒரு மலையாளி முஸ்லிம் என்னை அழைத்திருந்தார். கோவையில் தான் வசித்து வந்தாராம். எர்ணாகுளத்தில் செட்டிலாகி விட்டாராம். அவர் சொத்து ஒன்றினைக் கிரையம் பெற இருப்பதாகவும் அது பற்றிய ஆலோசனையை போனிலேயே சொல்ல முடியுமா என்று கேட்டார். பெரும்பாலும் ஆவணங்களைப் படிக்காமல் எதுவும் சொல்வது வழக்கமில்லை என்றாலும் பொதுவான சந்தேகம் என்றால் சொல்கிறேன் என்றும் சொத்தில் வில்லங்கம் இருக்கிறதா என்று கேட்டால் ஆவணங்களைப் படிக்காமல் சொல்ல இயலாது என்றும் சொன்னேன்.

பொதுவான விஷயம் தான் என்றுச் சொல்லி விட்டு தொடர்ந்தார். படியுங்கள், உங்களுக்கு மண்டை காய ஆரம்பித்து விடும்.

அதாவது என்னிடம் போனில் பேசியவர் வீடு ஒன்றினை விலைக்கு வாங்க இருப்பதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர் இந்துவாக இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்தவரின் மகன் என்றும், அவரின் அப்பா இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணுடன் திருமணமாகி அவர்களுக்கும் வாரிசுகள் இருக்கின்றார்கள் என்றும் சொன்னார். இந்துப் பெண்ணுக்கு ஒரு ஆண் வாரிசு இருப்பதாகவும் சொன்னார். நான் அந்த வீட்டினைக் கிரையம் பெற விரும்புகிறேன், எனக்குத் தெரிய வேண்டியது இந்துப் பெண்ணுக்குப் பிறந்த பையனுக்கு அந்த வீட்டில் சரி பாதி பாகம் வருமா?  வராதா? எனக் கேட்டார். 

அவர் கேள்வியை வெகு சாதாரணமாகக் கேட்டு விட்டார். எனக்கோ தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. சொத்துரிமைச் சட்டம் இந்தியாவில பல அலகுகளாக பிரிந்துள்ளது. இந்து, கிறிஸ்து, முஸ்லிம், பார்சி, காஷ்மீர் என பல பிரிவுகள் இருக்கின்றன. ஏன் பாண்டிச்சேரிக்கும் தனி சட்டம் இருக்கிறது. பெரும்பாலும் இதுவரை இந்துக்கள் சொத்துக்கள் பற்றியே கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. அது பற்றிய வழக்குகள், விபரங்கள், சட்டங்கள் படித்திருக்கிறேன். 

என் வக்கீல் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். ’உனக்கு மட்டும் தான்யா இப்படியெல்லாம் கிளையண்ட் வருவார்கள்’ என்று அலுத்துக் கொண்டனர். ஒரு சிலர் இருவருக்கும் சரிபாகம் என்றுச் சொன்னார்கள். ஒரு சிலர் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். எனக்கோ அது என்ன விஷயம் என்று அறிந்து கொள்ளும் வரை உறுத்திக் கொண்டிருக்கும். ஆகவே அதற்கான முயற்சிகளை எடுத்தேன். சட்டப்புதையல்களில் தேட ஆரம்பித்தேன். கிடைத்தது அவரின் கேள்விக்கான விடை.

இந்து ஒருவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய பின்பு அந்த மார்க்கத்தின் படி வாழ்ந்து இறந்து உள்ளார் என்றால் அவரின் சொத்துக்கள் முஸ்லிம் சட்டப்படித்தான் பாகம் பிரியும். உங்களது கேள்விக்கு விடை என்னவென்றால் இந்து ஒருவர் இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார். அவர் மட்டும் பின்னால் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து குழந்தைகள் பெற்றிருக்கிறார். அவர் காலமான பிறகு அந்தச் சொத்துக்கள் முஸ்லிம் பெண்ணுக்கும் அவரது முஸ்லிம் மகனுக்கு மட்டுமே பாத்தியமாகும். இந்துப் பெண்ணுக்குப் பிறந்த மகனுக்கோ அல்லது அவரது இந்து மனைவிக்கோ சொத்தில் பாகம் கிடைக்காது என்றுச் சொன்னேன். முகம்மதியர் பாகப்பிரிவினைச் சட்டத்தில் இயல் 14வது பிரிவில் இந்தக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

ஒரு வழியாக அவருக்கு விடை கிடைத்து விட்டது. உங்களுக்கும் ஒரு விஷயம் தெரிந்து விட்டது.

தொடர்ந்து இணைந்திருங்கள். பல்வேறு சட்டங்களைப் பற்றி அலசுவோம்.

Monday, August 21, 2017

கமல்ஹாசன் தமிழகத்தின் முதலமைச்சராகலாம்

எனக்கொரு பிரச்சினை இருக்கிறது. சொல் பொறுக்க மாட்டேன். மனதளவில் யாரைப் பார்த்தும் பொறாமையோ அல்லது எரிச்சலோ, கெடு எண்ணமோ எந்தக் காலத்திலும் நினைத்ததும் இல்லை, நினைக்கப்போவதும் இல்லை. இது எனது இயல்பு. இந்த இயல்பின் காரணமாக பல பேரின் அக்கிரமங்களைக் காணும் போது எரிச்சலும், ஆற்றாமையும் ஏற்பட்டு மனது வெம்பி விடும் எனக்கு. கமல்ஹாசனின் மஹாநதி படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். விமர்சனம் படித்தேன். அன்றைக்கு மனதுக்குள் வலித்த வலியில் அப்படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை. அதே போல விக்ரம் நடித்த காசி படத்தைப் பார்க்கச் சென்று பாதியில் எழுந்து வந்து விட்டேன். அந்தளவுக்கு துரோகமும், அக்கிரமங்களும் நிகழும் பட்சத்தில் அதைக் காட்சியாக்க் கூட காண என் மனது விரும்பாது. மன உளைச்சல் அதிகமாகி விடும். சமீபத்தில் அதை நான் பிக்பாஸ் பார்த்த போது அனுபவித்தேன். 

எவிக்சனில் குறைவான ஓட்டுப் பெற்றவரை ஒப்புக்குச் சப்பாணிக் காரணத்தைச் சொல்லிக் காப்பாற்றினார்கள். அன்றைக்கு நடத்தப்பட்ட இந்த அறம் மீறிய செயலால் எனக்கு மனது ஒரு மாதிரியாகப் போய் விட்டது. அதை கமல் நியாயப்படுத்தினார் வெகு சாதுரியமாக. கமல்ஹாசனின் பிக்பாஸ் அறம் அவர் மீதான அவ நம்பிக்கையின்மையை உருவாக்கியது. நான் அவர் மீது அவ நம்பிக்கை அடைவதால் அவருக்கு ஒன்றும் இழப்பு இல்லை. நான் யாரென்றே அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதால் எனக்கோ இல்லை அவருக்கோ ஒரு பயனும் இல்லை என்பது வேறு விஷயம். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று வெற்று ஜம்பமாகப் பேசிக் கொள்வதில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்திருக்கிறேன். பொருளை முன் வைத்து உலகம் இயங்க ஆரம்பித்ததிலிருந்து யாரும் யாருக்கும் எதையும் இலவசமாகவோ அல்லது தானமாகவோ செய்து விட மாட்டார்கள். பிரதி பிரயோஜனம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. கொடுத்தால் தான் உறவு என்பார்கள். ஒரு சில விதிவிலக்குகளை உடனே முன்னிறுத்தி விடக்கூடாது. 

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் காயத்ரியிடம், நீங்களும் நானும் ஒரே ஜாதி என்பதால் உங்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறேன் நான் என்றுச் சொல்கிறார்கள் என்றார். எனது பிளாக்கில் “அவா” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதை ஸ்ரீபிரியா அவர்களுக்கு டிவீட்டிருந்தேன். அது உண்மையில்லை என்பதற்கு உரிய காரணங்களை அவர் தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் போட்டியாளர்களைப் போல உண்மையை மறைத்து நழுவி விடமுடியாது. 

ஜூலி என்கிற பெண் என்ன பாவம் செய்தாள்? அவளுக்கு மட்டும் படம் போட்டு சுருக்கென்று ஊசி தைப்பது போல கேள்வி கேட்டாரே? காயத்ரிக்கு மட்டும் படமும் போடாமல், தானும் கேள்வி கேட்காமல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தவர்களைக் கேள்வி கேட்க வைத்து ஏன் நழுவினார்?மோதிரைக் கை அவர்கள் என்று கை காட்டி கழுவுற தண்ணியில நழுவும் மீன் போல் நழுவினார். இந்தச் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் ’அவா’ விற்குத்தான் வருமே ஒழிய பிறருக்கு வரவே வராது. 

ஜூலிக்கு படம் போட்டு விளக்கம் கேட்ட கமல்,  காயத்திரிக்குப் படம் போட்டுக் காட்டவில்லை என்பதற்கான ஒரு மிகச் சரியான காரணத்தை சொல்ல முடியுமா? இந்தக் கனிவு ஏன் இதர போட்டியாளர்களிடம் காட்டவில்லை என்று சொல்வாரா? 

தமிழன் என்றொரு வார்த்தையை அவர் நிகழ்ச்சியின் முடிவில் சொன்னார். உலக நாயகன் என்றொரு அடைமொழியைக் கொடுத்தார்களே அப்போது நான் உலக நாயகத் தமிழன் என்று சொல்ல மறந்து விட்டாரா? திடீர் தமிழ்ப்பாசமும் பற்றும் கமல்ஹாசனின் அடுத்த கட்ட நகர்வினைக் காட்டுகிறதா?

பிக்பாஸில் இருப்போர்களிடம் கேள்விகள் கேட்டார்கள். ஒருவர் கூட உண்மையைப் பேசவே இல்லை. வையாபுரி மட்டும் ஆமாம் நான் பாட்டுப் பாடினேன், தவறுதான் என்று சுஜாவிடம் மன்னிப்புக் கேட்டார். கூட்டாகச் சேர்ந்து கொண்டு ஒருவரை ஏமாற்றுவது, ஃபன்னிக்காகத்தான் செய்தோம், அது மனதை ஹர்ட் செய்து விட்டால் மன்னித்து விடுங்கள் என்று கொலை செய்து விட்டு செத்துப் போனவரிடம் மன்னிப்புக் கேட்பது போல பிந்து மாதவி சுஜாவிடம் கேட்டார். 

டிவி பார்ப்பவர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கு ஒருவரும் உண்மையானப் பதிலைச் சொல்லவே இல்லை. காயத்ரி உண்மையைப் பேசவே இல்லை. ஹாட்ஸ்டாரில் அந்தப் பகுதி உள்ளது. மீண்டும் பாருங்கள். போலியாக நடித்தே பழக்கமானவர்களுக்கு உண்மை பேசுவது என்றால் மறந்து போய் விட்டது என்றே நினைக்கிறேன். அந்த விஷயத்தைக் கூட அவர் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் சினிமாக்காரர்கள் அல்லவா?

சினிமா ஹீரோக்களை உண்மையான ஹீரோக்கள் என்று நம்பி நம்பியே தன் சுய கவுரவம், இனம், மொழி, செல்வம், கலை, கலாச்சாரம் அனைத்தையும் இழந்து நிற்கும் எம் தமிழர்களை ஆள்வதற்கு அத்தனை தகுதியும் கமலிடம் இருக்கிறது என்று உள்ளம் சொல்கிறது. இந்தச் சாமர்த்தியமும், பிறரை தான் சொல்வது சரிதான் என்று நம்ப வைக்கும் சாணக்கியத்தனமும் கமல்ஹாசனுக்கு உள்ளது. ஆகவே அவர் தமிழகத்தினை ஆள சரியான ஆள் என்றே நினைக்கிறேன். ஏமாறுவது என்பது தமிழர்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம். தமிழர்களின் மரபணுவில் சினிமாக்காரர்கள் தான் நம்மை ஆள வேண்டும் என்று பதிவாகி விட்டது. மரபணுவை இனி மாற்றவெல்லாம் முடியாது. ஆகவே கமல்ஹாசன் தமிழகத்தின் சி.எம் ஆக வரலாம். மறக்காமல் காயத்ரியை உள்ளாட்சித்துறை அமைச்சராக்கி விடுங்கள். அது ரொம்பவும் முக்கியம்.

Tuesday, August 15, 2017

அறத்தின் கோடு - கமலின் தர்மம் - பிக்பாஸ்

கடந்த வாரம் பிக்பாஸில் காயத்ரியை எளிமையான கேள்வி கேட்டு அவர் எலிமினேசனில் இருந்து காப்பாற்றபடுகிறார் என்று அறிவித்தார்கள். உலகமே பார்க்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பங்கெடுக்க வைக்கும் அற்புதமான நிகழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பார்வையாளர்களையும் பங்கேற்க வைத்து தர்ம நியாயத்தை வளர்க்கும் அற்புதமான நிகழ்ச்சி அது என்றும் நம்பிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் தினமும் காலையில் நெட்டில் ஓட்டும் போட்டுக் கொண்டிருந்தேன். 

ஆனால் அவை அனைத்தையும் யாரோ ஒருவருக்காக பல கோடி மக்களின் முகத்தில் கரியைப் பூசிய விஜய் டிவியும், அதற்கு ஒத்து ஊதிய கமலையும் நினைத்தாலே அறத்தின் சீற்றம் பெருமூச்சாய் எழுகிறது. எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனம் தான் முன்னே நின்றது. எவ்வளவு பைத்தியக்காரர்களாக நாம் இருக்கிறோம் என்பதற்கு கமலும், விஜய் டிவியும் சேர்ந்து நமக்கு உணர்த்தின. அவர்கள் தாங்கள் விரும்பியதை நாம் விரும்பியதாக எவ்வளவு சாதுரியமாக மாற்றுகின்ற மாயாஜாலத்தில் நமக்குள் இருக்கும் அறத்தினை, தர்மத்தினை அழிக்க முனைந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

பதினைந்து பேரில் அகங்காரம், ஆணவம், சிண்டு முடிதல், புறம் பேசுதல், புரணி பேசுதல், ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி பிறரை அசிங்கப்படுத்துதல் என அத்தனை அயோக்கியத்தனத்தினையும் செய்து வரும் ஒருவரை உலகமே வெளியேற்று என்றது. ஆனால் அதை மறுத்து ஓட்டளித்தவர்களின் அறத்தின் மீது உமிழ்ந்து, உங்கள் அறம் ஒன்றும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனச் சொல்லிக் காப்பாற்றுகின்றார்கள். கமல் அதற்கு ஸ்ரீபிரியாவை வைத்து சாதுரியமாக காய் நகர்த்தியதைக் கண்டதும் நாமெல்லாம் கேனயர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை அறிய முடிந்தது. யூடியூப்பில் கமெண்ட் போட்டு ஆத்திரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். வேறு என்ன செய்ய முடியும்? ஒருவராலும் ஒரு ’ஹேரையும்’ புடுங்க முடியாது. அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதைச் செய்வார்கள். அதை நாமெல்லாம் வேடிக்கை தான் பார்க்க முடியும்.

இது ஒன்றும் நமக்கு பெரிய விஷயம் இல்லைதான். ஏற்கனவே நம்பி நம்பி ஓட்டுப் போட்டு செருப்படி வாங்கிக் கொண்டிருப்பவர்கள் தான் நாம். இருந்தாலும் சினிமாவில் அறத்தைப் பற்றிப் பேசி வரும் கமல் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையை, அவ்வாறு நினைக்காதீர்கள், நானும் இப்படித்தான் என்று உடைத்தார். என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார் அவர். 

பின்னர் ஏன் தமிழக அரசியல் பற்றி கமெண்டுகளை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வாறு எழுதுவதற்கு தனக்கு தகுதி இருப்பதாக அவர் நினைக்கிறார் என்பது புரிந்தாலும் கமலுக்கு தமிழக அரசியல் பற்றிய அறச்சீற்றம் எழுவது போல விஜய் டிவியைப் பார்த்து, அதில் பங்களித்தவர்களுக்கும் இருக்கும் அல்லவா? அதை அவர்கள் எளிதாக புறம் தள்ளி ஒதுக்கி விட்டார்கள். மீண்டும் ஒரு நம்பிக்கைத் துரோகம். அதற்கு துணை போனவர் கமல்ஹாசன். தமிழக அரசியலுக்கு வாருங்கள் கமல். உங்களை வச்சு செய்வார்கள் நம் மக்கள் என்று நினைக்கிறேன். 

தவறு செய்தால் அது தவறுதான். அதற்கு எந்த வித சப்பைக்கட்டு கட்டினாலும் தவறு நியாயமாகி விடுமா கமல் அவர்களே? கம்பெனி ரூல், சுவாரசியம் ஆகிய இன்னபிற காரணங்களை அடுக்கினாலும் தவறு செய்தீர்கள், உங்களை நம்பி நியாயமாக இருந்தவர்களை ஏமாற்றி இருக்கின்றீர்கள் என்பதுதானே உண்மை.

தர்மம், நியாயம், நல்லவர்கள் இவர்களைப் பற்றிப் பேச இனி விஜய் டிவிக்கு என்ன அருகதை இருக்க முடியும்? கமல்ஹாசனுக்கும் அந்த கோடு இல்லை என்பதும் உண்மைதானே?

கமல்ஹாசனுக்கும் விஜய் டிவிக்கும் ஒரு திருக்குறளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.

ஒருவனுக்குச் செய்யும் நன்மை இதுகாறும் கமல் காத்து வந்த அறத்தினை அழித்து விட்டது. நீயா நானா? நடத்தும் விஜய் டிவியின் அறக்கோடும் அழிந்து போனது.

கமல்ஹாசனுக்கு மட்டும் கீழே இருக்கும் திருக்குறள் சமர்ப்பணம்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது.

இங்கு பயன் தூக்கார் என்பது தமிழக மக்கள் என்று அர்த்தம் கொள்க. அவர்களுக்கு கமல் செய்தது என்ன? என்று அவரே நினைத்துப் பார்த்துக் கொள்ளட்டும்.

இருப்பினும் கமலின் தர்மம் மறுத்துப்பேசும் சாதுர்யமும், பிக் பாஸிடம் காயை நகர்த்தும் “அவா” புத்தித்தந்திரமும், காயத்ரியின் மீது கொண்டுள்ள ”அவா” பாசத்தின் காரணமும் அசத்தல் தான்.

Wednesday, August 2, 2017

சாண்டியின் ஏழு குட்டிகளும் கொஞ்சம் ஓவியாவும்

குழந்தைகளும் நானும் பிக் பாஸ் பார்த்து வருகிறோம். இருவரும் அதிர்கிறார்கள். அப்பா இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா? என்று கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். பையன் மாணவர் துணைத் தலைவனாக வேறு இருப்பதால் பிக் பாஸ் மூலம் சக மனிதர்களை புரிந்து கொள்ள முயல்கிறான். மனிதர்கள் இப்படித்தான் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் புதிய உலகைக் காணும் குழந்தைகளுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது. சகமனிதர்களின் உள் ரகசியங்கள் இப்படித்தான் இருக்கும் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆகவே எவராவது உன்னைத் தவறாகப் பார்த்தால், பேசினால், துன்பமிழைத்தால் எளிதில் கடந்து விடுங்கள் என்று புரிய வைக்கிறேன். ஓவியா அதற்கு உதவுகிறார். மிக்க நன்றி ஓவியா! 

காயத்ரி என்று கேரக்டரைப் போல என் வாழ் நாளில் ஒரு பெண்ணை இதுவரை நான் சந்தித்ததே இல்லை. கொடூரத்தின் சாயல்.  தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கியவர்களைக் கழுத்தை அறுப்பார்கள். அதைக்கூட எளிதாகக் கடந்து விடலாம் போல. இப்படியெல்லாம் பெண்கள் இருப்பார்களா என்றொரு கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. தமிழகமே அதிர்ந்து போய் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இந்தப் பெண் எலிமினேஷனுக்கு வரவே இல்லை. அதுதான் அந்தப் பெண்ணின் நரித்தனம்.

விகடனில் வெளியான ஒரு பத்தி கீழே !

ஓவியாவை எப்படியெல்லாம் துரத்தலாம்” என்று காயத்ரி தூங்காமலேயே யோசித்துக் கொண்டிருந்தாரோ என்னமோ, திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிப்பதற்கு முன்பே எழுந்து விட்டார். காலைக்கடன்களில் ஒன்றான புறம் பேசுதலை அப்போதே துவங்கி விட்டார். கூட பிந்துமாதவி.

‘பரணி வெளியேற்றத்தின் போது ஏன் எவருமே தடுக்கவில்லை. வெளியே வந்து குரலாவது தந்திருக்கலாமே?’ என்பது பிந்து மாதவியின் கேள்வி. இது அவருடைய கேள்வி மட்டுமல்ல, பிக் பாஸ் பார்வையாளர்களின் அனைவரின் மனதிலும் இன்னமும்கூட நெருடிக் கொண்டேயிருக்கிற கேள்வி.  

“அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமே?’ என்று பிந்துமாதவி கவலையோடு கேட்டபோது ‘என்ன கால் உடைஞ்சிருக்கும். அவ்வளவுதானே’ என்றார் காயத்ரி. ஒரு நாளின் தொடக்கத்தைக் கூட இத்தனை வன்மத்துடனும் மனிதத்தனம் துளிகூட இல்லாமலும் ஆரம்பிக்க முடியும் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ‘நீங்கள்தானே தலைவர், தடுத்திருக்கலாமே’ என்கிற லாஜிக்கான கேள்வியைப் பிந்து மறுபடியும் கேட்க, அப்போதும் திமிராக ‘அவர் என்ன பேபியா?’ என்றார் காயத்ரி. ‘காயூ பேபி’ என்று மற்றவர்கள் அழைக்கும் போது உச்சி குளிர சிரிக்கும் காயத்ரி, பரணியை ‘பேபியா’ என்கிறார். 

ஓவியா கார்ப்பெட்டை இழுத்ததால் ‘ஜூலிக்கு ஏதாவது ஆகியிருக்கும்’ என்கிற போலிப்பதட்டத்துடன் பஞ்சாயத்து வைக்கிற காயத்ரி, பரணியின் நிலைமையை ரத்தம் x தக்காளி சட்னி என்று அலட்சியமாக அணுகுவது அராஜகமானது. 

திருடர்களின் கூட்டத்தில் புகுந்த உளவாளி போலவே தள்ளியிருந்து நாசூக்காக விசாரணை செய்கிறார் பிந்துமாதவி. இதுவரையான காட்சிகளை அவர் ‘வெளியில்’ இருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம். 

பரணி முதலிலேயே தப்பித்துவிட்ட பிறகு அந்த வீட்டில் உளைச்சலையும் தனிமையையும் மற்றவர்களின் ஒதுக்குதலையும் அதிகமாக எதிர்கொண்டவர் ஓவியா மட்டுமே. நமக்குக் காணக்கிடைத்த காட்சிகளிலேயே அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கோபம் வந்தது. மிகக் குறிப்பாக அவரைத் தூங்க விடாமல் பெண்களின் படுக்கையறையில் காயத்ரி. நமீதா கும்பல் இணைந்து செய்த அடாவடித்தனம். இதுவே இப்படியென்றால் நமக்குக் காட்டப்படாத காட்சிகளில் இன்னமும் என்னவெல்லாம் அவருக்கு அவமானங்கள் தரப்பட்டிருக்கும்? ‘நீ ஒரு ஹேரும் கேட்க மாட்டே’ என்று காயத்ரி குரூரமாகக் கூறுவதைக் கூட ஒரு புன்னகையுடன் கடந்தவர் ஓவியா. ( நன்றி விகடன்)

ஓவியா நல்ல பெண்...! இப்படி ஒரு பெண்ணைப் பார்ப்பது இன்று வெகு அரிதாக இருக்கிறது. ஆச்சரியம்தான்.

இந்த விஷயத்தைக் கடந்து விடலாம்.

பக்கத்து வீட்டில் இந்தியாவின் மிகப் பிரபலமான ஒருவரின் சகலை கெஸ்டாக தங்கி இருந்தார். அவர் சாண்டி என்கிற பெண் நாயை வளர்த்து வந்தார். வீட்டு ஓனரும் அவரும் நண்பராகையாலும், வீட்டு ஓனரும் சேர்ந்து சேண்டியை வளர்த்தனர். அந்த கெஸ்ட் ரூடோஸைப் பார்த்து ஹாய் சொன்னால் சாண்டி அழ ஆரம்பித்து விடும். என்னிடம் சொல்லிச் சொல்லி மாய்வார். அவர் வேலை முடிந்ததும் ஊருக்குச் சென்று விட்டார். வீட்டு ஓனர் வீட்டைப் பூட்டி விட்டு, சாண்டியை வெளியில் விட்டு விட்டுச் சென்று விட்டார். சாண்டி நிறைமாசமாக இருந்திருக்கும் போல. எனக்குத் தெரியாது. காலையில் பார்த்தால் வீட்டு வாசலில் இருக்கும் தென்னை மரத்தடியில் ஏழு குட்டிகளோடு படுத்து பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது சாண்டி. ஒரு குட்டி வேறு பக்கம் கிடக்க அதை எடுத்து அதன் அருகில் போட்டால் விர்ரென்று சீறியது. அன்று முழுவதும் படுத்தே கிடந்தது. அதற்கு உணவு கொடுத்து, தண்ணீர் வைத்தோம். அழகான கண்கள் திறக்காத ஏழு குட்டிகள். அவைகளுக்கு சண்டி, மண்டி, டியூஸ்டி, வென்னிஸ்டி, தர்ஸ்டி, பிரைடி, சாட்டி என்று பெயர் வைக்கலாம் என பேசிக் கொண்டிருந்தோம்.

சாண்டி இரண்டு நாட்களாக படுத்தே கிடந்தது. ஒரு பிரச்சினையும் இல்லை. நேற்றைக்குப் பிரச்சினை ஆரம்பித்தது. அதற்கு உடம்பில் தெம்பு ஏறியவுடன் அந்தப் பக்கம் யாராவது வந்தால் துரத்த ஆரம்பித்தது.

வீட்டில் வளரும் நான்கு மாத ரூடோஸ் சாண்டியைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தது. அதற்கு சாண்டியைப் பிடிக்கவில்லை. இருப்பினும் சகித்துக் கொண்டது. ரூடோஸ் அடிக்கடி சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தது. சமாதானப்படுத்த வேண்டி இருந்தது. நேற்று காலையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்த சாண்டி ரூடோஸ்ஸைக் கழுத்தில் கடித்து விட்டது. மருத்துவரிடம் காட்டி சிகிச்சை முடித்து வீட்டுக் கூட்டி வந்தார் மனையாள். நானும் வீட்டுக்குச் சென்று விட்டேன். ரித்திக் வந்ததும் சாண்டியின் நிலை என்ன ஆகப்போகிறதோ என்ற பதட்டம் ஏற்பட ஆரம்பித்தது. வாசலில் ரூடோஸைக் கட்டி வைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். சாண்டி நைசாக ரூடோஸைக் கடிப்பதற்கு முயன்று கொண்டே இருந்தது. வீட்டுக்கு தபால் கொண்டு வந்த தபால்காரர் சாண்டியின் அதிர்ச்சித்தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடினார். கேஸ் கொண்டு வந்தவர் அலறிக் கொண்டோடினார். சாண்டி தன் குட்டிகளைக் காப்பதற்காக வீராவேசம் கொண்டு வீரத்தாயாக மாறியது.

மழை பெய்வது போல வானம் இடித்துக் கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்தால் சாண்டி தன் குட்டிகளுடன் ரூடோஸ் இடத்துக்கு வந்து விட்டால் ரூடோஸின் நிலை என்னவோ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தேன். சரியாக பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். அவரிடம் விபரம் சொன்னால் எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை, இந்த வீடே என் வீடு இல்லை என்றுச் சொல்லி நழுவ ஆரம்பித்தார். எனக்கு வந்த டென்சனுக்கு கத்த ஆரம்பித்தேன். அதற்குள் பையன் வந்து விட்டான். ரூடோஸை சாண்டி கடித்து விட்டது என்றதும் தடியைத் தூக்கிக் கொண்டு நிற்கிறான். அவனைச் சமாளித்து இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படித்தான் வெளிவருவது என்று டென்சன் ஏறிக் கொண்டிருந்தது.

(சாண்டியும் அதன் ஏழு குட்டிகளும்)

வீட்டுக்காரரை கோபமாக எகிறியவுடன் ஒரு வழியாக சாண்டியை நெருங்கி கம்பி போட்டுக் கட்டினார். அவர் தொட்டால் சிவனேன்னு நிற்கிறது. நாங்கள் அருகில் சென்றால் உர்ர்ர்ர் என்கிறது. அவர் எங்கோ பேசி, அவரின் நண்பரின் தோட்ட வீட்டுக்கு குட்டிகளையும், சாண்டியையும் கொண்டு சென்றார். தோட்ட வீட்டில் விட்டு விட்டு திரும்பவும் வீட்டிற்கு வந்தார். அவருடன் நான் பேசவே இல்லை. சாண்டியைக் கட்டிப் போட்டு வளர்த்து அதற்கு உணவிட்டு விட்டு, குட்டி போட்டதும் அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்கிறார் அவர். அதுமட்டுமாவது பரவாயில்லை. அந்த வீடே என் வீடு இல்லை, நான் கெஸ்ட் என்றார். அதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த வீடு இதுவரைக்கும் அவர் பெயரில் கிரையம் ஆகி உள்ளது. (யார் கிட்டே?)

ஹிந்தி வகுப்பு முடிந்து வந்ததும் ரித்திக்கும், நிவேதிதாவும் ரூடோசுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சேண்டியும், அதன் குட்டியும் வெயிலில் துயரப்படக்கூடாது என்பதற்காக அடியேனால் பின்னப்பட்ட தென்ன ஓலைத் தட்டி சும்மா கிடந்தது. குட்டிகளுக்குப் பால் கொடுத்து விட்டு யாராவது வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் சேண்டியின் நினைவு என்னைப் பாடாய்ப்படுத்த ஆரம்பித்தது. இரவில் கனவில் சேன்டி ஒரு குட்டியைக் கவ்விக் கொண்டு வீடு தேடி வருவது போல இருந்தது. தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்து கொண்டேன். விடிகாலையில் தென்னைமரத்தடியில் சேண்டி தன் காலால் சமன் செய்து வைத்த இடம் வெறுமையாக இருந்தது. எனக்குள் ஆற்றாமையும், எரிச்சலும் மண்டியது.

”சாண்டி உன் இயல்பு அது. ஆனால் அது பிறருக்கு கொடுமையாக இருக்கிறதே? நானென்ன செய்ய? என்னை மன்னித்து விடு தாயே!” என்று மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தேன். இதில் நானென்ன செய்வது? கையாலாகத்தனத்தின் வேதனை தான் மனசெல்லாம் நிரம்பி இருக்கிறது.

Wednesday, July 26, 2017

சிவன் ருத்ரன் விஷ்ணு பிரம்மா - குழப்பிய திருமூலர்

திருமூலரின் திருமந்திரம் எனக்கு மிகவும் பிடித்த நூல். அதன் பாடல்களின் அர்த்தம் தெரிந்து கொள்வதற்காக மூவாயிரம் பாடல்களின் தெளிவுரை புத்தகம் ஒன்றினை சமீபத்தில் வாங்கினேன். படிக்க ஆரம்பித்தேன். மண்டை காய வைத்தார் திருமூலர். பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் ஆறாவது பாடலைப் படித்ததும் திகில் தான் ஏற்பட்டது. ஏதோ ஒரு உணர்ச்சியால் பீடிக்கப்பட்டேன். அறியாமையா, போதாத அறிவா, தெளிவடையாத புத்தியா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

இதுகாறும் நான் பிரம்மன், விஷ்ணு, சிவன் என்ற மூன்று தெய்வங்கள் தான் படைத்தல், காத்தல், அழித்தல் செய்கின்றார்கள் என்று நினைத்திருந்தேன். நீங்களும் என்னைப் போலத்தான் நினைத்திருப்பீர்கள். வழி வழியாக நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட ஆன்மீகம் இதுதான். ஆனால் திருமூலர் இந்த மூவருக்கும் மூத்தவன் ஒருவர் உளார். அவரின் பெயர் சிவன் என்று பாடி இருக்கிறார். கிறுகிறுவென ஆகியது எனக்கு.

அதுமட்டுமின்றி அந்தச் சிவன் எப்படி இருப்பார்? அவருக்கு உருவ வழிபாடு இருக்கிறதா? அப்படி இருந்தால் எந்த இடத்தில் இருக்கிறார். இதுவரை சிவன் என்றால் சிவபெருமான், சிவலிங்கம் என இரண்டு உருவ வழிபாடு தானே செய்து வந்தோம். சிவன் வேறு, ருத்ரன் வேறு என்றால் ருத்ரன் எப்படி இருப்பார்? அவரின் உருவம் எப்படி இருக்கும்? இப்படி பல்வேறு கேள்விகள் ஊற்றுக்குள் இருந்து கொப்பளிக்கும் தண்ணீரைப் போல மனதுக்குள் எழும்ப ஆரம்பித்தது. ஜோதி ஸ்வாமியிடம் கேட்டேன் அவர் விளக்கங்கள் சொன்னார்.

ஆனாலும் பழைய வாசனை என்னை விட்டு அகலவே மாட்டேன் என்கிறது. குழப்பமான குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறேன். என் அறிவுக்கு எட்டியவாறு எனக்கு இருக்கும் புத்தியில் பதியும் படி திருமூலர் தான் அதற்கொரு விடையைச் சொல்ல வேண்டும். நான் மட்டும் குழம்பினால் போதாது என்று உங்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டேன். விடை தெரிந்தால் மெயில் அனுப்பி வையுங்களேன். புண்ணியமாகப் போகும்.


இதோ திருமூலர் என்னை திக்குமுக்காடச் செய்த அந்தப் பாடல்.

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

இதன் உரையை கீழே படியுங்கள்.

ஒவ்வொரு தொழிலே உடைய அயன் அரி அரன் என்னும் மூவரும் அவ்வத் தொழில் ஒன்றேபற்றி தம்முள் ஒப்பாவர். அம் மூவர்க்கும் முழுமுதலாய்ச் சிறந்தோனாய் என்றும் காணப்படுபவன் சிவன். மூப்பு - சிறப்பு. அச் சிவன் தன்னை யொப்பாக ஒரு பொருளுமில்லாத தனிமுதல்வன். அவனை விட்டு நீங்காது ஒட்டியுறைவோன் என்னுங் கருத்தால் அப்பன் என்று அன்பாய்ச் கூறின், அப்பனுமாவன். அவன் ஆருயிர்களின் நெஞ்சத் தாமரையின் உன்னிடத்தான். அந்நெஞ்சத்தாமரையின்கண் பொன்னொத்துத் திகழ்கின்றனன். பொன் : பொதுப்பெயர்; அஃது இரும்பு, பொன் என்னும் இரண்டினையும் குறிக்கும் ஆருயிரின், நெஞ்சம் ஆணவச் சார்பால் இரும்பொக்கும்; அருட்சார்பால் பொன்னொக்கும்.

இணைப்பு : http://www.ssivf.com/ssivf_cms.php?page=262


Thursday, July 20, 2017

நிலம் (39) - சுவாரசியமான வழக்கு - எது முதலில்

ரியல் எஸ்டேட் தொழில் தற்போதைய சூழலில் கடலுக்குள் அகப்பட்ட தோணி போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ரெரா என்கிறார்கள், ஜிஎஸ்டி என்கிறார்கள் இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். மணல் விலையை யார் நிர்ணயிக்கின்றார்கள் என்பது தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது போல மர்மமாக இருக்கிறது. அரசு ஒரு விலை சொல்கிறது, மார்க்கெட்டில் ஒரு விலை விற்கப்படுகிறது. வீடு வாங்கவோ அல்லது வீட்டு மனை வாங்கவோ விரும்பினால் குதிரைக்கு கொம்பு முளைக்கிற கதை தான் இனி. மிடில் கிளாஸ் மக்களின் அத்தியாவசிய தேவையான வீடு இனி அவர்களுக்கு வசப்படுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இரண்டொரு நாட்களுக்கு முன்பு அனுமதி பெறப்பட்ட மனைக்கு பட்டா தரமாட்டேன் என்று ஒருவர் அணுகினார். என்னவென்று பார்த்தால் எனக்கு தலையே கிறுகிறுத்தது. சுமார் 25 வீட்டு மனைகளுக்கான பட்டா பிரச்சினையாக இருக்கிறது. தற்போது அரசு நிலம் என்று வருகிறது. வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் ரிட்டயர்ட் ஆகி வீட்டில் இருக்கின்றார்கள். இதைச் சரி செய்து தர முடியுமா? என்றுக் கேட்டிருக்கின்றார்கள்.

ஒரு ஊரில் பெரும் தனக்காரர் இருந்திருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. அவைகளில் அவர் விவசாயம் செய்து வந்தார். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக தன் நிலத்தில் பெரிய ஏரியைக் கட்டி அதில் தண்ணீர் தேக்கி பரம்பரை பரம்பரையாக தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்திருக்கிறார். தன் நிலத்தில் விளையும் விவசாய பொருட்களை அருகில் இருக்கும் ரெயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு சென்று ரயிலில் ஏற்றி பக்கத்து ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று ஒரு நாள் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஏரி நிரம்பி உடைப்பெடுத்து வழிந்து அது ரயில்வே தண்டவாளங்களைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விட்டன. ரயில் பாதை முற்றிலுமாக அழிந்து விட்டது. அரசாங்கம் இவரின் மீது ஏரியைக் கவனமாக பராமரிக்காத காரணத்தினால் உடைப்பு ஏற்பட்டதாகவும், ஆகவே இந்த இழப்புக்கு அவர் நஷ்ட ஈடு தர வேண்டுமென்று வழக்குத் தொடுத்தது.

அந்த ஊரில் புகழ் பெற்ற வக்கீல் ஒருவரிடம் வழக்கு விவரத்தினைத் தெரிவித்து ஜெயித்துக் கொடுக்கும்படியும், அட்வான்ஸாக பணமும் கொடுத்து விட்டு வந்து விட்டார் விவசாயி. நீண்ட நாட்களாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. திடீரென்று ஒரு நாள் வக்கீலுக்கு வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது என அறிவிப்பு வர ஆள் சரியான டென்ஷன் ஆகி விட்டார். வழக்கு விபரங்கள் ஏதும் இல்லை, ஆவணங்கள் ஏதும் இல்லை. வழக்குதாரர் ஊரில் இருப்பதால் உடனடியாக வரச்சொல்லவும் முடியவில்லை. என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார். இரவெல்லாம் தூக்கமில்லாமல் சிந்தனையில் இருந்தவர், விடிகாலையில் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு வழக்கு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டு சமையற்காரன் நேரமாகி விட்டது எனவும், சாப்பிட வரும்படியும் அவரை அழைக்க, வருகிறேன் என்றுச் சொல்லி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் சமையற்காரன் இவரை சாப்பிட அழைக்க, அவனிடம் இவர் எரிந்து விழுந்திருக்கிறார். வழக்கு விபரத்தைச் சொல்லி என்ன செய்வதென்று தெரியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன் உனக்கு நான் சாப்பிடுவது தான் முக்கியமா? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த சமையற்காரன் எது முன்னாலே என்று கேட்டுப் பாருங்கள். வழக்கே முடிந்து விடும் என்றுச் சொல்ல வக்கீலுக்கு பொறி தட்ட குஷியாகி விட்டார். ரயில்வே நிலையம் அமைப்பதற்கு முன்பு ஏரி கட்டப்பட்டதா? இல்லை ரயில்வே நிலையம் வந்த பிறகு ஏரி கட்டப்பட்டதா? இந்தக் கேள்விக்குப் பதில் தான் வழக்கின் தீர்ப்பும். எந்த வித இழப்பீடும் தர வேண்டியதில்லை என வழக்கில் வெற்றி பெற்று விட்டார் அந்த வக்கீல். சட்டப்புத்தகத்தைப் படித்து பெரும் புகழ் பெற்றவரானாலும், அவரின் சமையறகாரனின் புத்திசாலித்தனம் தான் அந்த வழக்கில் அவர் வெற்றி பெற உதவியது. 

இந்தக் கதையில் இருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். வழக்கே ஆனாலும் சட்டப்புத்தகத்தினால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது. அனுபவம் என்றொரு விஷயம் இருக்கிறது. அந்த அனுபவ அறிவு தான் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வினைத் தரும்.

ரியல் எஸ்டேட் தொழிலில் பலரும் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு வருகின்றனர். கொஞ்ச நாளில் ச்சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்பதாய் கருதத் தொடங்கி விடுகின்றனர். நொடிக்கு நொடி மாறும் உலகம் இது. இந்த நிமிடத்தில் இருக்கும் ஒரு விஷயம் அடுத்த நொடியில் இருப்பதில்லை. ரியல் எஸ்டேட் தொழில் கற்றுக் கொள்வதல்ல. ஒவ்வொரு சம்பவத்திலும் கற்றுக் கொள்பவை. 

ஆயிரக்கணக்கில் பத்திரங்கள் படித்திருக்கிறேன். கோயம்புத்தூர் நகரின் ஒட்டு மொத்த சொத்தின் விபரமும் என்னிடத்தில் இருக்கின்றன. ஒரு சொத்தின் தன்மையை நான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொண்டு விடுவேன். லீகல் சரி செய்யலாம். ஆனால் நடை முறை என்பது வேறு. தமிழகத்தின் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் சீரமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ரெவின்யூ டிபார்ட்மெண்டில் இருப்போருக்கு எல்லா விஷயமும் தெரிந்து விடுவதில்லை. ரெவின்யூ டிபார்ட்மெண்ட் என்பது ஒரு கடல். என் அறிவு என்பது அதில் இரு துளி மட்டும் தான். பிற விஷயங்கள் அனுபவத்தில் மட்டுமே தான் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் விஷயங்களைத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். 

வெறும் ஏட்டறிவு மட்டும் இருந்தால் அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை என்பதைத்தான் அந்த சுவாரசியமான வழக்குச் சொல்கிறது.

குறிப்பு : மேலே இருக்கும் வழக்கு விபரம் அப்துற் றஹீம் அவர்களின் ’எண்ணமே வாழ்வு’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. நன்றி!


Tuesday, July 18, 2017

பிக்பாஸ் கமலின் நியாயம்

காயத்ரி ரகுராம் - கன்ஃபெக்சன் அறையில் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் வேண்டுமென்று கேட்ட போது மருத்துவரிடம் செக்கிங்க் செய்த பிறகு கால்சியம் சரியாக இல்லை என்றால் தரப்படும் என்று சொல்லப்படுகிறது. பிறகு மருத்துவரிடம் ஆலோசித்தால் காயத்ரியின் கால்சியம் லெவல் சீராக இருப்பதாகவும் ஆனாலும் இந்த வாரத்தின் குடும்பத்தின் தலைவராக இருப்பதால் அவர் கேட்டதைக் கொடுப்பதாகவும் குரல் ஒலிக்கிறது. வெளியில் வந்த காயத்ரி எனக்கு கால்சியம் லெவல் குறைவாக இருக்கிறது என்றுச் சொல்லி விட்டு, அதனால் பிக்பாஸ் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் பாக்கெட் தந்தார் என்கிறார்.

அவர் ஒரு பெண். பெண்கள் எப்போதும் சுய நலமாகத்தான் யோசிப்பார்கள். அதுவும் காயத்ரியின் தந்தை பிரபல நடன ஆசிரியர். தலைக்குள் கொஞ்சம் மமதை ஏறி விடும். இது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். அதில் தவறில்லை. தன்னை பிறரிடமிருந்து தனிப்படுத்திக் காட்டிக் கொள்வதற்காகவும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் காயத்ரி ரகுராம் சாக்லேட் மில்க் பவுடர் கேட்டார். அதைக் கொடுத்தார்கள். அதற்கொரு காரணத்தையும் சொல்லி விட்டார். தன் படுக்கையின் அருகே வெகுபாதுகாப்பாக வைத்துக் கொண்டு அவர் மட்டும் பயன்படுத்தி வருகிறார். இதில் எதுவுமே தவறில்லை.

ஆனால் கமல் செய்த விஷயம் தான் மனதை உறுத்துகிறது. கமல்ஹாசன் கலைத்தாகத்தைப் பற்றி பல செய்திகள் படித்திருக்கிறோம். ஒருவர் ஒரு துறையில் பிரபலமாக இருப்பது என்பது பெரிய விஷயம் இல்லை. தொழில் பக்தியின் காரணமாக மிளிர்வது என்பது சகஜம். தியாகராஜ பாகவதருக்கு மிஞ்சியா கமல் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்? ஆனானப்பட்ட அவரே தன் இறுதியில் என்ன ஆனார் என்பது வரலாறு. 

கோடிக்கணக்கான பேர் டிவி நிகழ்ச்சியைப் பார்க்கின்றார்களே அதில் தீர்ப்புச் சொல்லக்கூடிய இடத்தில் நாம் இருக்கின்றோமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உறுத்தல் கொஞ்சம் கூடவா இல்லாமல் போகும்?

காயத்ரி ரகுராம் பொய் சொன்ன விசயத்தை அப்பட்டமாக மறைத்தாரே அது என்ன விதமான செயல் என்று தான் எனக்குப் புரியவில்லை. கால்சியம் சீராக இருக்கிறது என்றால் காயத்ரிக்குத் தெரியாதா? அவர் என்ன சின்னப்பாப்பாவா? சீர் என்றால் என்ன என்று சினேகனைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டாராம். அட ஙொய்யாலே, அப்போ இருப்பினும் நீங்க தலைவராக இருப்பதால் தருகிறோம் என்று அந்தக் குரல் சொன்னதே அதை ஏன் இவர் மறந்தார்? அல்லது மறைத்தார் என்று கமலுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு சீராக இருக்கிறது என்றால் என்னவென்று தெரியாதாம்? காயத்ரிக்கு வாயில் கை வைத்தால் கடிக்கவே தெரியாது என்கிறார். அதையும் கமல் ஏற்றுக் கொள்கிறார். உங்க நியாயம் எனக்குப் பிடித்திருக்கிறது மிஸ்டர் கமல்! 

புரொகிராம் முடிந்தவுடன் காயத்ரி அந்த சாக்லேட் மில்க் பவுடரை எடுத்துக் கொடுத்து விடுகிறார். அவருக்கு வேண்டாமாம். அதையும் காட்டினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது என்றால் அது மிகையில்லை. உலகம் அப்படித்தான் இருக்கும். எல்லாமே சரியாக இருந்தால் மனித வாழ்க்கை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. மக்களிடம் பிரச்சினை இருந்தால் தான் அரசு இருக்கும். பிரச்சினையே இல்லை என்றால் அரசு எதற்கு? ராணுவம் எதற்கு? நாடு எதற்கு? ஒன்றும் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தாமதமாகத் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்டு உடனுக்குடன் தெரிந்து விடுகிறது என்பது போல நம்ப வைக்கப்படுகிறது.

காயத்ரி பொய் சொன்னதில் தவறில்லை. ஆனால் கமல்ஹாசன் அதை சாதுர்யமாக மறைத்தாரே அதுதான் எதற்கு என்று புரியவில்லை. 

Saturday, July 15, 2017

முதல் தேர்தலில் வெற்றியடைந்த கதை

மாலை நேரம், குழந்தைகள் இருவரும் பள்ளியிலிருந்து வந்தனர். ரூடோஸின் அட்டகாசம் ஆரம்பித்து ஒரு வழியாக இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். பையன் அப்பா என்று இழுவை போட ஆரம்பித்தான். மனையாள் மெதுவாக ஆரம்பித்தாள்.

”ஏங்க (எத்தனை நாளைக்குத்தான் ஏங்குறதோ தெரியவில்லை?), ஸ்கூலில் சேர்மன் தம்பியை ஏ.எஸ்.பி.எல் பதவிக்கு தேர்தலில் நிற்க வேண்டுமென்று சொல்லி இருக்கின்றாராம்? என்னங்க செய்யறது?” என்று இழுத்தாள்.

“அவனுக்கு அனுபவமாக இருக்கும் கோதை. நிக்கட்டுமே?” என்றேன்.

பையனுக்கு குஷி ஆகி விட்டது. அப்போதைக்கு சொல்லி விட்டேன். இருந்தாலும் மனதுக்குள் ஒரு நெருடல். நன்றாகப் படிக்கும் பையன். பதவியில் அமர்ந்தால் படிப்புக் கெட்டு விட்டால் என்ன செய்வது என்ற சிந்தனை. அப்படி ஏதேனும் நேர்ந்தால் பார்த்துக் கொள்ளலாம். அவனுக்கும் தேர்தல் பற்றிய அனுபவம் கிடைத்தால் அது நல்ல விஷயம் தான் என்று நினைத்துக் கொண்டேன். இருப்பினும் அவன் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் என்ன நினைப்பானோ? என்றொரு பதட்டமும் ஏற்பட்டது.

மறு நாள் மாலையில் “அப்பா, காய்கறிகளில் ஏதாவது ஒரு காயைத்தான் சின்னமாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லி இருக்கின்றார்கள்,  எனது போட்டோவுடன், அருகில் சின்னத்தை வைத்து நோட்டீஸ் தயார் செய்யச் சொல்லி இருக்கின்றார்கள்” என்றுச் சொன்னான்.

என்னைப் பொறுத்த வரையில் தேர்தலில் சின்னம் என்பது மக்கள் மனதில் பதியக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இரட்டை இலை, கைச் சின்னம், உதய சூரியன் ஆகியவை அதனால் தான் மக்கள் மனதில் பதிந்து விட்டன. ஆகவே பையன் முதன் முதலாக பள்ளியில் நடக்கும் தேர்தலில் நிற்கின்றான். ஆகவே சின்னம் வெகு முக்கியம் என்று திட்டமிட்டேன். காய்கறிகளில் தான் சின்னம் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டது. பல சிந்தனைகளில் ஒரு வழியாக ஒரு சின்னத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  

ரெட் சில்லி - சிவப்பு மிளகாயைத் தேர்ந்தெடுத்தேன்.  அடியேன் கம்யூனிஸ்ட் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய அரசியல்வாதிகள் பலர் பிரதமரை விமர்சித்தால் கூட தேசத்துரோகி என்கிறார்கள். சிவப்பு உடை உடுத்தி இருந்தாலே கம்யூனிஸ்ட் என்கின்றார்கள்.

பையனை போட்டோ ஸ்டுடீயோவிற்கு அழைத்துச் சென்று போட்டோ எடுத்து அதனுடன் ரெட் சில்லி சின்னைத்தை இணைத்து சிறிய நோட்டீஸ் தயாரித்து கொடுத்து அனுப்பி வைத்தாகி விட்டது.

பையனே பிரச்சாரம் செய்து கொள்ள வேண்டுமென்பதால் அவன் பிரச்சாரத்திற்காக சிறு உரையும் தயார் செய்து, அதை எப்படிப் பேச வேண்டுமென்று பயிற்சியும் கொடுத்து இருந்தேன்.

தேர்தல் அன்று மாலையில் ஓட்டு போட்டு விட்டு வீடு வந்த போது, ”அப்பா, ரிசல்ட் என்னாகும் என்று தெரியவில்லை” என்றுச் சொல்லிக் கொண்டிருந்தான். நிவேதிதா அண்ணன் தான்பா ஜெயிப்பான் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ரிசல்ட் வெளியிட மூன்று நாட்கள் ஆகி விட்டன. எனக்குள் பதட்டம் அதிகமாயிருந்தது. ரிசல்ட் அன்று கூட காலையில் பதட்டத்துடன் தான் இருந்தேன். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முதன் முதலாக தேர்தலில் போட்டி இடுகிறான். வெற்றி பெற்றால் அது அவனின் நினைவலைகளில் அழிக்க முடியாத சுவடாக நின்றிடுமே என்றொரு அற்ப சந்தோஷம் எனக்கு. ஆனால் என்ன நடக்கும் என்று தெரியாது.

மாலையில் பள்ளியிலிருந்து வீடு வந்த பையன், அப்பா ஜெயித்து விட்டேன் என்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தான். விஷயம் என்னவென்றால் பள்ளியின் எஸ்.பி.எல்லை விட இரு நூறு ஓட்டுக்கள் இவனுக்கு அதிகம் கிடைத்திருக்கின்றது. ரித்திக் தன்னுடன் போட்டி போட்ட இரண்டு சக மாணவர்களை விட 400 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தான்.

பதவி ஏற்புக்காக சிறு விழா நடைபெற்று ஏ.எஸ்.பி.எல்லாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றான்.

”யார் எதைச் சொன்னாலும் கோபப்படாதே. சரி, ஆகட்டும், பார்க்கலாம் என்ற வார்த்தைகளைத் தவிர வேறோன்றும் சொல்லி விடாதே” என்று அவனிடம் சொல்லி இருக்கின்றேன்.

Friday, July 7, 2017

இறைவனின் கண்ணீர்

மனிதனுக்கு பகுத்து அறியும் அறிவு இருப்பதினாலே அவன் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அனுபவத்தின் அறிவு கிடைக்கும் போது எல்லாமும் முடிந்து சமூகத்தில் இருந்து ஒதுங்கி விடுகிறான். பிறகு புலம்புகிறான். இறந்து போகின்றான்.

தற்சமயம் தமிழ் நாட்டில் (எவன் சொன்னான்னு தெரியவில்லை?) பிரபலமாக இருப்பது “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சி என்கிறார்கள். யூடியூப்பில் பிக் பாஸும் சீமானும் டிரண்டில் இருக்கின்றார்கள். சீமானின் நாம் தமிழர் கட்சி படு வேகமாக வளர்கிறது என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். பிக் பாஸில் ஜூலியான டிரண்ட் என்கிறார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு சில தடவைப் பார்த்திருக்கிறேன். காயத்ரி என்றொரு பெண்(?????). அந்தப் பெண்ணின் மூளைக்குள் இருப்பது ஒன்றே ஒன்றுதான் - ஈகோ. உடம்பு, மனசு முழுவதும் ஈகோ. இதனால் அவருக்குக் கிடைப்பது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அந்த ஈகோவிற்காக அவர் வாழ்கிறார். அவரின் முழு மனித தன்மை அவரிடமிருந்து விலகி ஓடி விட்டது. அவர் எந்த நொடியும் எந்தப் பொழுதும் தனக்காக என்றொரு வாழ்க்கையை வாழவே இல்லை. 

கஞ்சா கருப்பு - கஞ்சா இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு போதைப் பொருள். அதை தன் பெயரோடு இணைத்துக் கொண்டவரிடம் மனிதத் தன்மை இருக்குமா என்று எதிர்பார்ப்பது வீண்.

சக்தி - இயக்குனர் வாசுவின் மகனாக இல்லை என்றால் ஒரு தெரு நாய் கூட இவரைத் திரும்பிப் பார்க்காது. அது ஒன்று தான் இவருக்கான தகுதி. ஆனாலும் மனசு முழுக்க அகங்காரம். தன் நிலை மறந்து வாழும் ஒரு ஜீவாத்மா.

ஓவியா, ரைசா, ஜூலி, பரணி, வையாபுரி, நமீதா, அனுயா, ஆர்த்தி, ஸ்ரீ, கணேஷ், சினேகன் (டயனமிக் திருமணப் புகழ்), ஆரார் - இவர்களைப் பற்றி நீங்களே நான் எப்படி அவதானித்துள்ளேன் என அவர்களையும் அவதானித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் யோசியுங்கள். உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு நொடியும் நம்மிடமிருந்து போவது நம் வாழ் நாளும் இளமையும். ஆனால் அடைவது அனுபவம். குழந்தைப் பருவத்திலிருந்து இது நாள் வரையிலும் நம்மை வாழவே விடாமல் பலரின் சிந்தனைகளுக்காக, வழிகாட்டுதலுக்காக, பிறரின் மூளையை நம் மூளைக்குள் திணித்துக் கொண்டு அந்த வழியாகவே வாழ்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். உண்மையாக நமக்காக வாழ்ந்து வந்திருந்தால் கோபம், தாபம், எரிச்சல், பொறாமை இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால் சமூகத்தின் கட்டுப்பாடு என்ற பெயரில் தனி மனிதன் தன் இயல்பு மறைந்து, தன் நிலை மறந்து வேறு எவருக்காகவோ வாழ்ந்து வருகின்றான். யோசித்துப் பாருங்கள்.

திரு மூலர் அன்றே எழுதி வைத்துச் சென்றார். நீயே கடவுள் என்று. எவரும் நம்புவதும் இல்லை. அதைப்பற்றிச் சிந்திப்பதும் இல்லை. இங்கே இந்த வீடியோவைப் பாருங்கள். கடவுளின் கண்ணீர் என்ற ஒன்று உங்களுக்குத் தெரிய வரும். இந்த மனது உங்களிடம் இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் நீங்களும் கடவுளே!