குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 13, 2021

நிலம் (75) - சூலூரில் பிரபல பில்டரின் மோசடி - லீகல் ஒப்பீனியன்

ஒரு இடத்தின் விலை எப்படி உயர்கிறது? எப்போதாவது யோசித்தது உண்டா? 

கோவை நூறடிச் சாலையில், பஸ் ஸ்டாண்ட் நோக்கி இருக்கும் இடத்தின் ஒரு செண்ட் விலை இரண்டு கோடியே நாற்பது லட்சம். அதே நூறடிச் சாலையில் குறுக்குச் சாலையில் இருக்கும் நிலத்தின் ஒரு செண்ட் விலை ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாய்.

இப்படியான விலை உயர்வுக்கு காரணம் என்ன? தேவையா? இல்லை என்னவாக இருக்கும்? யோசித்தது உண்டா?

ஒரு பொருளின் தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை உயரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு செண்டின் விலை கோடிகளுக்கு மேல் சென்றால் அந்த நிலத்தினை வாங்க போட்டி அதிகமிருக்காது. ஆனாலும் விலை உயர்ந்து கொண்டே போகிறது என்ன காரணம்?

யோசித்துப் பாருங்கள். இது உங்களுக்காக எழுப்பபட்ட கேள்வி. பதில் எனக்குத் தெரியும். ஆனால் எழுதப் போவதில்லை. நீங்கள் தான் யோசிக்க வேண்டும்.

சார், வங்கியில் ஆவணம் வைத்திருக்கிறோம். எதற்கு லீகல் பார்க்கணும்? வங்கியிலேயே லீகல் பார்த்துதான் லோனே கொடுப்பார்கள் என்று என்னிடம் அடிக்கடிச் சொல்வார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? தற்போது வங்கிகள் சொத்தினை மட்டும் நம்பிக் கடன் கொடுப்பதில்லை. கடன் வாங்குபவர் மீது இன்ஸ்சூரன்ஸ் போடச் சொல்லி விடுகிறது. 

வங்கிகளின் லீகல் பிராசசிங் 30 வருடங்கள் மட்டுமே இருக்கும். அதனால் அந்த சொத்தானது வில்லங்கம் இல்லாதது என்று சொல்ல இயலாது.

சூலூரில் ஒரு பிரபல கட்டுமான நிறுவனம் இரண்டு ஏக்கர் நிலத்தினை அக்ரிமெண்ட் போட்டு சுமார் 30 வீடுகளை கட்டி விற்றிருக்கிறது. அதில் மோசடி நடந்திருக்கிறது என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியின் விபரம் புகைப்படத்தில் இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள்.



இந்த வீட்டினை வாங்கியவர்களின் கதி இனி என்ன? முறைகேடான பத்திரம் போட்டு கிரையம் செய்யப்பட்டிருக்கிறது. நிலத்தின் உரிமையாளர் கையொப்பம் இல்லாமல் கட்டுமான நிறுவனம் வீடுகளை விற்றிருக்கிறது. அதைக் கூடவா வீடு வாங்கியவர்கள் பார்க்கவில்லை? லீகல் பார்த்திருப்பார்களே அவர்களால் இதைக் கண்டு பிடிக்க இயலவில்லையா?

அந்தளவுக்கா கேனத்தனமாக லீகல் பார்க்கப்பட்டிருக்கும்? 

இனி வழக்கு, இழப்பு, பிரச்சினை? இந்தச் செய்தி சொல்ல வருவது எனன்வென்றால் இழப்பு வீட்டினை வாங்கியவர்களுக்கு மட்டுமே. கட்டிட ஒப்பந்ததாரர் பணத்தைப் பெற்று விட்டார். அவர் இனி அதைத் திருப்பிக் கொடுத்தாலும், அவருக்கு அது வட்டி இல்லாத பணம். நிலத்தின் உரிமையாளருக்கு நிலம் உரிமையாகி விடும். முறைகேடாக வீடு வாங்கியவர்களுக்கு மட்டுமே இழப்பு.

இந்தப் பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்றால் இனி என்னென்ன செலவுகளும், அலைச்சலும் உண்டாகும். விளைவு ஏண்டா இந்த வீட்டினை வாங்கினோம் என்கிற நிலை. வங்கிக் கடன் வாங்கி இருந்தால் அது வேறு பிரச்சினை. 

ஒரு கட்டிய வீடு வாங்கப் போகின்றீர்கள் என்றால் அதற்கென என்னென்ன ஆவணங்களைப் பார்க்க வேண்டுமென்ற லிஸ்ட் இருக்கிறது. அது மட்டுமின்றி நிலத்தின் உரிமை முதலில் சரி பார்க்கப் பட வேண்டும். அதன் பிறகு கட்டிடத்தின் அனுமதி மற்றும் ஒப்பந்த அனுமதி ஆராயப்பட வேண்டும்.

சமீபத்தில் கோவையில் பிரபலமான ஒரு கட்டிட நிறுவனத்தின் வீட்டினை என் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க பார்க்கச் சென்றிருந்தேன். அப்கோர்ஸ் கட்டணச் சேவை. அந்த வீட்டினை வாங்கலாமா வாங்க கூடாதா என அடியேன் சொல்ல வேண்டும். 

வீட்டின் அமைப்பினைப் பார்க்கும் முன்பு நிலத்தின் அமைப்பினை ஆராய்ந்தால் வாஸ்து அல்லது நில அமைப்பு முற்றிலும் நெகட்டிவாக இருந்தது. அதுமட்டுமல்ல அவர்கள் வீட்டின் தன்மையையே மாற்றி இருந்தார்கள். மின் விளக்கு இல்லாமல் இருக்க இயலாது. மின் கட்டணம் அதிகமாகும். வீட்டிற்குள் அலுவலக செட்டப் வேறு. விலையோ கோடிக் கணக்கில். மாதா மாதம் சுமார் 6000 ரூபாய் மெயிண்டனன்ஸ் கட்டணம் வேறு வரும். இப்படியான ஒரு நவீன கட்டமைப்பில் இருந்தது அவ்வீடுகள். இம்மாதிரியான வீடுகளை விரும்பும் நபர்களும் இவ்வுலகில் உண்டு. அப்ரிஷியேசன் ஆகும் என்று சொல்வார்கள். ஒரு வீடு அப்ரிஷியேசன் ஆகும் என்றுச் சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். வீடு இருக்க இருக்க பழையதாகும் என்பதை மறந்து விடக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை செங்கலுக்கும், கம்பிக்கும், சிமெண்டுக்கும் கொடுக்கும் விலையானது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். ஆடம்பரமாக வாழ்வதன் அர்த்தமற்ற செலவுகள், செலவு செய்பவர்களின் எதிர்காலம் சூனியமாகி விடும். எத்தனையோ வீடுகள் விற்பனைக்கு வருகின்றன. பார்த்துப் பார்த்துக் கட்டி இருப்பார்கள். கடைசியில் விற்பனைக்கு வந்து விடும். வியாபாரம் என்பது வேறு, வசிப்பிடத்தினை விற்பது என்பது வேறு. 

லீகல் பார்க்கும் போது அதற்கென ஒரு சில வரையறைகள் உண்டு. அதை வைத்து லீகல் சரிபார்கக் வேண்டும். நான் என்னிடம் லீகல் செக்கிங்க் வருபவர்களிடம் பல வித ஆவணங்களைக் கேட்பேன். வெகுவாகச் சலித்துக் கொள்வார்கள். இன்றைய சலிப்பு நாளைக்கு ஆபத்தினை உருவாக்கி அமைதியின்மையை தருவிக்கும் சூழல் உண்டாகலாம்.

ஆகவே வீடோ அல்லது நிலமோ எதுவாக இருப்பினும் நல்ல அனுபவம் தெரிந்தவர்களிடம் லீகல் பார்த்து வாங்குங்கள். 

நிலம் என்பது நம்மை வாழ வைக்கும் ஒரு உயிரிடம். ஒரு சிலருக்கு ஒரு சில இடங்களே வாழ்க்கையில் முன்னேற்றத்தினையும், சந்தோஷத்தையும் தரும். அதற்காக அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.

குறிப்பு: ஒரு சில இடங்களில் வீடுகள் வாங்கினால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். ஆகவே வீடுகள் வாங்கும் போது வெகு கவனம் தேவை.

Saturday, January 9, 2021

ஆறு நாய்க்குட்டிகளும் நிவேதிதா ரித்திக்நந்தாவும்

தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை கருணை. வாக்கியங்களில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’. வள்ளலால் பெருமகனார் சொன்னது.

பயிர் அது வாடத்தான் செய்யும். அதைக் கண்ட போது மனது வாடினேன் என்கிறார் பெருமான். அவரின் நெஞ்சமெல்லாம் நிரம்பிய கருணையின் வெளிப்பாடு.

கருணை இல்லா உயிர்கள் இவ்வுலகில் வாழவே அருகதை அற்றவை. பெற்றவளின் கருணையினால் உயிர் பிழைக்கும் கருவானது உருவாகி பின்னர் தலைவராகி பிறரைக் கொல்கிறது. கொன்று தின்கிறது. கொல்லச் சொல்லி வேடிக்கை பார்க்கிறது. நான் எவரையும் சொல்லவில்லை. பொதுவாகச் சொன்னேன்.

அம்மாவை வணங்குகிறார்கள். இன்னொரு அம்மாவின் குழந்தையை நடு வீதியில் மல்லாக்க கிடத்தி, கருவறையை அறுத்து குழந்தையை எடுத்து அதைக் கத்தியால் குத்தி விளையாடும் மாபெரும் வீரர்களின் விளையாட்டை வேடிக்கை பார்த்த மாபெரும் வீரப்பெருமகனார் வாழ்கின்ற தேசம் இது.

ஆனால் பாருங்கள் அவரவருக்கு அவரவர் நியாயம் இருக்கிறது. எல்லா குற்றங்களுக்கும் செயல்களுக்கும் பின்னால் அவரவர் நியாயங்கள் உண்டு. நியாயங்கள் வேறு உண்மை வேறு.

அவரவர் தர்மங்கள் அவரவருக்கு கர்மங்களாகின்றன. கர்மத்தின் கணக்குகளை விதி டிரம்புக்கு தற்போது தீர்த்து வைப்பது போல தீர்த்து வைக்கும். நம் இந்தியாவில் இருந்து கூட டிரம்புக்கு ஒருவர் பிரச்சாரம் மேற்கொண்டார் அல்லவா? இருந்து டிரம்ப் தோற்றுப் போனார். அதுதான் கர்ம வினைகளின் கணக்குத் தீர்க்கும் தொடக்கம்.

நான் தர்மத்தை நம்புகிறவன். உண்மையை நம்புகிறவன். எல்லோருக்கும் தர்மத்தின் முன்னாலே, உண்மையின் முன்னாலே தீர்ப்பு வழங்கப்படும் நாட்கள் இப்போதெல்லாம் உடனுக்குடன் வந்து விடுகிறதை நினைத்து மகிழ்ச்சி உண்டாகிறது.

பிக்பாஸ் பார்க்கின்றீர்கள் என நினைக்கிறேன். ஆரி அர்ஜுனனை அங்கிருந்த பதினேழு நபர்களும் எவ்விதம் நடத்துகிறார்கள் என்று பாருங்கள். உலகத்தின் டிசைன் இது. உலகோடு ஒத்து வாழ், இல்லையெனில் நாங்கெல்லாம் உன்னை ஒழிப்போம் என்கிறார்கள் அந்த பேதைகள். பேசாமலே இருந்து கொண்டு பாம்பினைப் போல ஒரு பெண் (அவள் பெயரைச் சொல்லக்கூட கூசுகிறது எனக்கு) உள்ளே இருக்கின்றாளே என்ன ஒரு கொடூரம். இவளுக்கும் கருவிலே பெண்ணைக்கொல்லும் தாய்க்கும் என்ன வித்தியாசம் இருக்க இயலும். அப்படி ஒரு கொடூரமான மனதுடைய பெண்ணை இனிமேல் என்னால் பார்க்கவே கூடாது என நினைக்கிறேன். அவள் வருவதால் பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்தியே விட்டேன்.

கருணையற்ற கொடூரத்தின் உச்சம் அவள்.

நேற்றிலிருந்து வீட்டில் ஒரு அக்கப்போர்.

மாலை நேரம், ரித்திக் வந்து தயங்கி நின்றான்.

“அப்பா, வீட்டுக்குப் பின்னாலே நாய் குட்டிங்க கிடக்குது” என்றான்.

“அதுக்கென்ன? கிடக்கட்டுமே?”

“இல்லைப்பா, தூக்கி வந்து பால் கொடுத்துட்டு, ஆஸ்ரமத்துக்கு அனுப்பி வைக்கலாமா” இது நிவேதிதா குரல்.

என் வீட்டு மகாராணியைப் பார்த்தேன். கண்களில் நெருப்பு தகித்தது.

பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே ரூடோஸும், மணியும் இருக்கிறார்கள். ரூடோஸ் குட்டிகளைப் பார்த்து விட்டால், சாப்பிடாமல் பட்டினி கிடப்பாள். அவள் முகம் வாடினால் அடியேனுக்குத் தாங்காது. ஆகவே மகாராணியின் கண்களில் அக்னி.

தயங்கினேன்.

“காலையில் பார்த்துக்கலாம்” என்றேன்.

இன்றைக்கு காலையில் நிவேதிதா மீண்டும் என்னிடம்.

“சரி, என்னவோ செய்யுங்கள்”

அட்டைப்பெட்டி ஒன்றினை எடுத்து அதற்குள் துணி வைத்து மெத்தை போலச் செய்து வெளியில் சென்றார்கள் இருவரும். சிறிது நேரத்தில் ஆறு நாய்க்குட்டிகள். இன்னும் கண்கள் திறக்காதவை. பால் குடிக்ககூட தெரியாதவை. யாரோ ஒருவர் அவற்றைக் கொண்டு வந்து வீட்டின் பின்னால் போட்டு விட்டுச் சென்ற காலடித்தடம் இருந்தது என்றான் ரித்திக்.

ஊசி மூலம் பால் எடுத்து ஆறு குட்டிகளுக்கு ஊட்டி விட்டனர் இருவரும். மாடியில் கொண்டு போய் வைத்து விட்டனர். இன்றைக்குப் பார்த்து ஆன்லைன் வகுப்பு இல்லை. காலை ஆறுமணிக்கு நிவேதிதாவைப் பார்த்தது. குளிக்கவில்லை, சாப்பிடவில்லை. மதியம் போலத்தான் சாப்பிட வந்தார்.

யார் யாருக்கோ போன் செய்து ஆறு குட்டிகளில் ஐந்து குட்டிகளை அவரவர் நண்பர்களுக்கு கொடுத்து விட்டனர். காரில் வந்தெல்லாம் நாய்க்குட்டியைக் கொண்டு போனார்கள். யாரோ ஒரு பையன் பக்கத்து வீட்டுப் பையனுக்கு எனச் சொல்லி வாங்கிக் கொண்டு போனானாம். ஆனால் அவனே இரண்டு குட்டிகளையும் வைத்துக் கொண்டு விட்டானாம். அது ஒரு பிரச்சினையாக வந்தது.

இன்னும் ஒரு குட்டி மட்டும் அதுவும் பெண் குட்டி அட்டைப் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது. சிரிஞ் மூலம் பால் ஊட்டினார் நிவேதிதா. குடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.

பிள்ளைகள் இருவர் முகத்திலும் மலர்ச்சி தெரிந்தது. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் வள்ளலார் பெருமகனார் என் பிள்ளைகளிடத்தில் கொஞ்சம் தெரிகிறார்.

எனக்குள் கொஞ்சம் நம்பிக்கை.

பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்திருக்கிறேன் போல. இனிமேலும் இக்குணம் மாறாமல் அவர்கள் இருவரும் வாழ்ந்தாலே அதுவே எனது வாழ்வின் அர்த்தம் என நம்புகிறேன்.

கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா?

அவர்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களையும், அன்பினையும் வழங்குங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.

ஏமாளி தமிழர்களே - திருந்துங்கள் - உதயசந்திரா கதை

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழரும் தமிழ் இனமும் எவ்வாறெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் வந்தன என்பதை பல்வேறு புத்தகங்கள் மூலம் கடந்த காலத்தில் படித்துத் தெரிந்து கொண்டேன்.

இணையதளங்களில் அவ்வகையான பல்வேறு புத்தகங்கள் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் எழுதியவை படிக்க கிடைக்கின்றன.

நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்கள். இரத்தம் கொதிக்கும்.

சுய நலப் பேய்களால், நய வஞ்சகர்களால் தமிழினமும், தமிழர் பண்பாடும் அதிகாரத்துக்காகவும், சொகுசாக வாழவும் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அது இன்றும் தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கின்றன. இனி இழக்க ஒன்றுமில்லை என்கிற போது நாம் எல்லாவற்றையும் இழந்திருப்போம். அதற்குள் விழித்துக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம் என்பதை மறந்து விடாதீர்கள்.

பொங்கலுக்கு 2500 ரூபாய் வாங்க வரிசையில் நிற்கும் அவலமான வாழ்வியல் சூழலில் நாமெல்லாம் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கு காரணமானவற்றை ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதிலிருந்து வெளி வர முயற்சியுங்கள்.

நம் பாரம்பரிய தமிழர் விளையாட்டான ஜல்லிக்கட்டையும் தடை செய்தார்கள். போராடிய மாணவர்களை முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு பன்னீர்செல்வம் போலீஸை வைத்து அடித்து துவைத்து எறிந்த காட்சிகளும், கடலுக்குள் அவர்களை உயிரோடு சமாதி வைக்க துணிந்த காட்சிகளையும், காவல்துறையினர் ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்திய வீடியோக்களும் இன்னமும் இணையதளங்களில் காணக்கிடைக்கின்றன. 

ஒவ்வொன்றையும் என்றைக்கும் மறந்து விடாதீர்கள். மறக்கவே மறக்காதீர்கள். இனி வரக்கூடிய நாட்களில் எவரெல்லாம் என்னென்ன செய்தார்கள் என்பதை உள்ளத்தில் அணையா எரிமலை போல வளர்த்து வாருங்கள். இவற்றை உலகிற்கும், உங்கள் நட்புக்களுக்கும் கொண்டு செல்லுங்கள். அதுதான் நம்மைத் தொடர்ந்து வாழ இருக்கும் சந்ததியினருக்கு நாம் செய்யும் பேருதவி.

இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்தக் கதை நிஜக்கதை. சாட்சிகள் உண்டு.

ஒரு நடிகை நகைக்கடை திறக்க வந்தால், அங்கு கூடும் கூட்டத்தின் அளவு எண்ணிலடங்காதவை. ஏன் நடிகை வந்தால் இத்தனை கூட்டம் கூடுகிறது? காரணம் அவள் நடிகை. கூட்டம் கூடி என்ன செய்யும்? அவள் சிரிப்பதையும், கை ஆட்டுவதையும், அவளின் அங்கங்கள் அசைவதையும் பார்த்து ரசிக்க. 

கூட்டம் அவளை ரசித்த பிறகு, அவள் கடை திறப்பு விழாவுக்கு வந்து கையை ஆட்டி விட்டு போகும் போது கை நிறைய காசைக் கறந்து கொண்டு போய் விடுவாள். கூடிய கூட்டமோ வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் ஈ என இளித்துக் கொண்டு கிளம்பும்.

ஒரு நிமிடம் யோசித்தீர்களா? இதனால் யாருக்கு என்ன பயன் என்று. இன்றைக்கு ஒவ்வொரு நடிகைகளும் இன்ஸ்டாவில் தீயாய் சூட்டைக் கிளப்பும் புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றார்கள். ஏனென்று என்றாவது ஒரு நாள் யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? இத்தனை கோடி ரசிகர்கள் அவளைப் பின் தொடர்கிறார்கள் என்றால் இன்ஸ்டா மற்றும் ஒரு சில நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அவளுக்கு வாரி வழங்குகின்றன என்பது எவருக்கேனும் தெரியுமா? 

கஷ்டப்பட்டு ஜிபிக்கு ரீசார்ஜ் செய்து, நடிகை போடும் ஆபாச படத்தினைப் பார்த்து விட்டு கவட்டிக்குள் நாய் காலால் சொரிவதைப் போல சொரிந்து கொள்வதைத் தவிர வேறு என்ன பலன் கிடைக்கும்?

யோசித்திருக்க மாட்டீர்கள் என்பதை நன்கு அறிவேன். 

ஏனென்றால் நடிகனுக்கு நாட்டை ஆளக் கொடுத்த பரம்பரை நாம். நடிகைக்காக கோவில் கட்டிய பரம்பரை நாம். 

உலகிற்கு பொது மறை கொடுத்த திருவள்ளுவர் பிறந்த நாட்டில் வாழும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் ஊன் குழியைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் அவலத்தில் வாழ்கிறோம்.

வயதான நடிகன், நடிகையை திரையில் தடவுவதைப் பார்த்து, அவன் அவளின் கவட்டியை விரித்துக் காட்ட, அதனை விழி பிதுங்கப் பார்த்துக் கொண்டிருக்கும் படு ஈனமான வாழ்க்கையில் வாழ்கிறோம்.

ஒவ்வொருவருக்கும் சொத்துக்கள், உறவுகள், படிப்பு ஆகியவை இருக்கின்றனவோ என்னவோ, ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் சினிமா ஹீரோவுக்கு ரசிகனும், ரசிகையும் இருக்கிறார்கள். அவரவர் வீட்டிலும் ஒரு நடிகன் போட்டோவோ அல்லது நடிகையின் போட்டோவோ இருக்கும்.

நானும், என் பிள்ளைகளின் உங்களின் தீவிர ரசிகர்கள் என்றுச் சொல்வதில் புளகாங்கிதம் அடையும் உள்ளங்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம்.

ஒரு நடிகை வருகிறாள் என்றால் பசி, தூக்கம், துன்பம், வெயில் எதுவும் பார்க்காமல் அவளைப் பார்க்க மணிக்கணக்கில் விழித்திரை மூடாமல் காத்துக் கொண்டிருக்கும் பரம்பரையில் நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்படியெல்லாவற்றையும் நடிகனுக்கும், நடிகைக்கும் கொடுத்துக் கொடுத்தே எல்லாவற்றையும் இழந்து கல்வி படிக்க சீட்டுக்கும், மருத்துவத்துக்கும் ஆலாய் பறந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு நடிகை படத்தில் நடிக்கிறாள் என்றால் அவளின் திரைப்படத்திற்கு பின்பான வாழ்க்கை என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்க மாட்டீர்கள். 

இதோ உதயசந்திரா என்ற நடிகையின் வாழ்க்கையும், அவரின் சொத்துக்கள் பற்றிய ஒரு சில விபரங்கள் கீழே.

ஆர்.ஆர்.ஹாலிடேஸ் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இதன் கீழ் யூடிஎஸ் ஹோட்டல் நிறுவனத்தில் கோவளத்தில் ஒரு ஹோட்டல், சங்குமுகம் என்கிற இடத்தில் ஒரு ஹோட்டல், ஆலப்புழாவில் ஒரு ஹோட்டல், வாகாமன் என்கிற இடத்தில் ஒரு ஹோட்டல், ஹவ்தியார் என்ற இடத்தில் ஒரு ஒரு அழகு நிலையம். இது மட்டுமா இரண்டு எலக்ட்ரோட் தயார் செய்யும் நிறுவனங்கள், இரண்டு உணவு ஹோட்டல்கள் இது போல இன்னும் பல சொத்துக்கள். இத்தனைச் சொத்துக்களையும் நடிகையும், நடிகையின் அன்புக் கணவரும், இவர்களின் பிள்ளைகளும் நிர்வகிக்கின்றார்கள். மொத்தமாய் ஒரு ஆயிரம் கோடிக்கும் மேல் வரும் சொத்து மதிப்பு.

அவர்கள் நன்றாக வாழணும், வாழ வேண்டும். கடின உழைப்பைக் கொட்டி சம்பாதித்த துட்டு. ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் ஒய்யாரமாய் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு, ரசிகனின் கனவுக் கன்னியாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. அவர்கள் நன்றாக வாழட்டும். அவர்களை வாழ்த்துகிறோம். 

கனவுக் கன்னிகளை உருவாக்கும் ரசிகனின் நிலை என்னவாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். கனவு ஹீரோக்களை சிலாகித்து அவர்கள் பின்னே திரியும் ஒவ்வொருவரின் வாழ்க்கை சூழல் என்னவாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.

கனவுக் கன்னியும், ஹீரோவும் ஒவ்வொரு ரசிகனால் எவ்வளவு துட்டுகளை சம்பாதிக்கின்றார்கள் என்று பாருங்கள்.

உலகமே கொரானாவினால் செத்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஆறு மாத காலம் நடிக்க 50 கோடியைச் சம்பளமாக வாங்கும் நடிகன் சினிமா தியேட்டரில் முழு கொள்ளளவு ரசிகர்களை அமர வைக்க வேண்டுமென்று மாபெரும் போராளி, மக்களுக்காகவே வாழும் உத்தமர் எடப்பாடி பழனிசாமி முதல்வரிடம் சென்ற அடுத்த நொடி, அரசே ஆணை பிறப்பிக்கிறது.

அப்படி என்ன அந்த நடிகன் அரசுக்கும், மக்களுக்கும் செய்திருக்கிறான் என்று தெரியவில்லை. 

ரசிகன் என்று வீட்டில் எவராது சொன்னால் வாயில் சுடு தண்ணீரை கொட்டுங்கள். தீவிர ரசிகர்கள் என்றால் அவர்கள் நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு என்று தெரிய வையுங்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர் கையில். அதை நாம் தான் வாழ வேண்டும். நடிகனோ கனவுக் கன்னியோ வாழ வைப்பதில்லை.

ஏமாளி ரசிகனால் கோடிகளுக்கு அதிபதி ஆகின்றார்கள். அதை உணர்ந்து கொள்ளுங்கள். நடிகன் வந்தால் நாய்க்கு கொடுக்கும் மரியாதை கூட கொடுக்காதீர்கள். அவனைப் பார்க்க செல்கிறேன் என்று எவராவது கிளம்பினால் சூட்டுக் கோலால் சுட்டு வையுங்கள். அடுத்த வேளை பசிக்கும். அப்பசிக்கு நீங்களும் நானும் உழைக்க வேண்டும். இல்லையெனில் வயிற்றில் எரியும் தீக்கு இரையாவோம்.

எது நிதர்சனம்? எது உண்மை? எது அவசியம்? எது தேவை? எது தேவையில்லாதது? எது நம்மை அழிக்கிறது? எது நம்மை வாழ வைக்கிறது? என்று உணருங்கள்.

சரி, இனி சாட்சிக்கு வருகிறேன்.

யார் அந்த உதய சந்திரா? என்று கேட்பீர்களே? இதோ அவரின் புகைப்படம். இவரின் கட்டுரை இணைப்பு கீழே இருக்கிறது. ஏதோ பொறாமையால் எழுதி இருக்கிறேன் என்று நினைப்பீர்கள். அவ்வாறு நினைக்காவிட்டால் அது அதிசயம். அப்படி நினைத்தால் அது உங்கள் பிரச்சினை. எனக்கு நான் வாழும் சமூகம் தெளிவாக வாழ வேண்டுமென்ற ஆவல் உண்டு. அதற்குதான் இந்தப் பதிவு.

நன்றி விகடன்.


நடிகை ராதாவின் உண்மை  பெயர் உதயசந்திரா

இவரின் ஹோட்டல் இணையதளம் : https://udshotels.com/


நேரம் இருப்பின் ஹோட்டல் இணைப்பினை சொடுக்கிப் பாருங்கள். விருப்பமிருந்தால் ஹோட்டலில் தங்கி இளைப்பாறலாம். அடியேன் ஆலப்புழாவில் ராதாவின் ஹோட்டல் அருகில் இருக்கும் புராதன ரிசார்ட்டில் ஒரு நாள் வாசம் செய்திருக்கிறேன். ஆலப்புழா இயற்கையின்  சொர்க்கம்.

Thursday, December 24, 2020

மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பற்றிய விபரங்கள்

மத்திய அரசின் நேரடி ஸ்காலர்ஷிப் உதவித் தொகை பற்றிய விபரங்கள் கீழே இருக்கின்றன. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


இனிமை இதோ இதோ இதோ


காஞ்சி மரத்தின் காஞ்சிப் பூ


நீருக்குள் மீனுக்காகக் காத்திருந்து நீரினைக் கிழித்துக் கொண்டு பாயும் நீல நிற மீன் கொத்திப் பறவை

அரசியல் அக்கப்போர்களையும், பொடிக்கும் உதவாத சினிமா பற்றியும் எழுதியும் படித்தும் என்ன கண்டோம். ஒன்றுமில்லை. பொழுதினைப் போக்கவா நாட்கள் பிறப்பெடுக்கின்றன. ஒவ்வொரு நாளுமினி மீண்டும் வருமா? வராத நாட்களை இனி வரும் நாள்களில் அர்த்தமுள்ளதாக மாற்றுவது ஒன்றே இனிது.

விடிகாலையில் மயில்கள் அகவ, மார்கழிக் குளிரில் சொற்களை உதிர்க்கும் பற்கள் குளிரில் தந்தியென மாற, வாசலில் வெண்மையாக படரும் அழகிய கோலம் கண்டு உள்ளம் மலர இன்றைய நாளும் துவங்கியது அர்த்தத்துடன். கிழக்கே இளங்காலைச் சுடர் மெதுவாக வெளித்தெரிய சூரியன் தன் கடமையைச் செய்ய ஆரம்பித்து விட்டான்.

இனிமை என்றால் என்ன? அதனை நுகர்ந்திருக்கின்றோமா? அனுபவித்திருக்கின்றோமா என்று ஒரு நொடியேனும் சிந்தித்து இருக்கின்றோமா நாம்?

திடீரென எனக்குள் இந்த வார்த்தையின் அர்த்தம் தான் என்னவாக இருக்கும் எனத் தோன்றியது புலர் காலையில். இனிமை, இனிமை, இனிமை இதன் அர்த்தத்தை மனசு உணர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை எனத் தோன்றிற்று.

இனிமை என்றால் இனிப்பு என்று கூட அர்த்தம் கொள்ளலாம் என்றாலும், இனிப்பு சுவை உணர்வு கொண்டது. இனிப்புச் சுவையும் இனிமையும் ஒன்றா? இருக்காது. இனிமை என்ற சொல்லின் அர்த்தத்தை மனசு உணர்ந்திருக்கிறதா என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். நிச்சயம் என்னால் அதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. தேடலும் துவங்கியது.


நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை

குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி

நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து

புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்

வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை

முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது

கொங்கு கவர் நீல செம் கண் சேவல்

மதி சேர் அரவின் மான தோன்றும்

மருதம் சான்ற மருத தண் பணை –  சிறுபாணாற்றுபடை பாடல் 178 – 186

 

இந்தப் பாடலை எழுதியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவர். ஓய்மா நாட்டு நல்லியக்கோடனின் நாட்டில் வசித்து வந்த புலவர், நாட்டில் நீர் நிறைந்த வயல் வெளிகளைத் தன் பாடலிலே பாடி இருக்கிறார்.

இந்தப் பாடலின் அர்த்தத்தைக் கீழே படியுங்கள்.


நறு மலர்களின் மாலை போல நாள் தோறும் பூக்கும் கிளைகளைக் கொண்ட

குட்டையான அடி மரத்தை உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,

நிலையான நீர் இல்லாத குளத்தைக் கூர்ந்து பார்த்து, நெடும் பொழுதிருந்து

புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீல நிற மீன்கொத்தியின்

பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன்

முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்

தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம்

திங்களைச் சேர்கின்ற கரும்பாம்பு போலத் தோன்றும்,

மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல்வெளிகள்


இப்பாடல் மூலப் பாடலின் வரிக்கு வரி பெயர்த்தவை. பாடலையும் அப்பாடலின் வரியினையும் ஒப்பிட்டுப் படித்துப் பார்க்கவும்.

இப்பாடலின் எனக்குத் தெரிந்த விரிவாக்கம் கீழே.

குட்டையான அடி மரத்தினைக் கொண்ட காஞ்சி மரத்தின் பூக்கள் பூமாலை போல இருக்கும். தினமும் பூக்கும் காஞ்சி மரத்தின் கிளையில், எப்போதும் நிறைந்தே இருக்காத நீரினைக் கொண்ட குளத்தினை கூர்ந்து பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் ஒரு நீல நிற மீன் கொத்திப் பறவையானது, மீனைக் கண்டதும் தண்ணீருக்குள் ஈட்டி போலப் பாய்ந்து மீனைக் கொத்திப் பிடிக்கிறது. அப்போது நீருக்குள் பாய்ந்த மீன் கொத்திப் பறவையின் கால் நகங்கள் விரிந்த பச்சை இலையுடன் விரிந்தும் விரியாமலிருக்கும் தாமரையின் இலைகளைக் கிழித்து விடுகின்றன. அப்போது அன்றலர்ந்த தாமரையின் மீது தேனைக் குடிக்க அமர்ந்திருந்த நீல நிற, சிவந்த கண்களை உடைய தேனிக்கள், சூரிய கிரகணத்தின் போது பூமி மீது படரும் சந்திரனின் பாம்பு போன்ற இருளைப் போல கூட்டமாய் பூவிலிருந்து வெளி வருகின்றன என்று மருத நிலத்தின் வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் நீர் நிரம்பிக் கிடக்கும் காட்சியினைப் பாடலாய் எழுதி இருக்கிறார் அப்புலவர்.

இப்போது சிறுபாணாற்றுப்படைப் பாடலைப் படித்துப் பாருங்கள். அர்த்தம் அழகாக மனதுக்குள் விரியும்.

இனிமை என்றால் என்ன என இப்போது தெரிந்திருக்கும். இனிமை என்ற சொல்லின அர்த்தம் இப்பாடலைப் படிக்கும் போது நம் மனதுக்குள் கிளரச் செய்யும் உணர்வினை நீங்களும் உணர்ந்திருந்தால் அதுதான் இனிமை.

தமிழைப் போல ஒரு மொழியும் இவ்வுலகினில் உண்டோ?

தமிழைப் போல இனிமையும் வேறு உண்டோ?

ஒரு மலர் மலர்ந்து பின் உலர்வதினை கீழே படியுங்கள்.

அரும்பு என முகிழ்த்து, நனையென துளிர்த்து, முகையென வளர்ந்து, மொக்குள்ளாகி, முகிழ் என முகிழ்ந்து, மொட்டு என உருவாகி, போதுவென மலர்ந்து, மலர் என பூத்து, பூவாகி வீயாகியது அதுமட்டுமா பொதும்பராகி, பின்பு பொம்மலாகி இப்போது செம்மலாகிப் போனது – வாழ்க்கை.

மலரின் ஒவ்வொரு நிலைக்கும் தமிழ் வார்த்தைகளைப் படித்தீர்களா? இனிமை என்பது இதுதானே?

தமிழ் என்றால் இனிமை….!

இனிமை இதோ இதோ இதோ – தமிழ்

Wednesday, December 16, 2020

நிலம் (74) - உபரி நிலங்கள் - ஜாக்கிரதை

விரைவில் தமிழகத்தில் போர் தொடங்கப் போகிறது. 

முன்னெடுப்பாக பத்திரப்பதிவுத் துறையில் அதிகமான பத்திரங்கள் பதியப்படுகின்றன. பொங்கலுக்குள் உச்சத்தைத் தொடும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று மாதங்கள் பதிவுத் துறையில் ஒன்றும் பதிவாகாது.

இந்தப் போர் அரசியல்வாதிகள் அனேகரின் வாழ்க்கையை முடித்து வைக்கும் என நினைக்கிறேன்.

வரவு செலவு கணக்கு வழக்குகள் இந்தப் போரில் சரி பார்க்கப்படும். விதியின் விளையாட்டில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது யாரோ தெரியவில்லை. பள்ளம் மேடாவதும், மேடு காணாமல் போவதும் விதியின் கையில் உள்ளது.

தேர்தலைப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிகாரத்துக்கு வரப் போர் நடக்கிறது. இது மகாபாரதப் போரை விட கொடிதானதாக இருக்கும். துரியோதன சேனை மிகப் பெரிது. வலிமையானது. 

அதற்குத் தேர்தல் என்று பெயர். 

இந்தியாவில் சமீபத்தில் நடப்பது தேர்தல் இல்லை என்பது மனச்சாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும். எல்லாமும் விற்பனைக்கு மனச்சாட்சியும் கூடத்தான். சட்டம் எப்போதோ விற்பனைக்கு வந்து விட்டது.

சரி இந்த அக்கப் போர் எப்போதைக்கும் நடந்து கொண்டே தானிருக்கும். மக்களும் ஆட்டு மந்தைக் கூட்டம் போலத்தான்.

சமீபத்தில் கோவையின் மேற்கு மலைச்சாரல் பக்கம் ஒரு பிசினஸ் விஷயமாகச் சென்றிருந்த போது ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

அதற்கு முன்பாக ஒரு இடைச்செருகல்.

டேன் இந்தியா என்றொரு கம்பெனியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஒரு வித்தியாசமான வழக்கு நடந்தது. 

டேன் இந்தியாவிற்குச் சொந்தமான சொத்துக்களை விற்று, முதலீட்டாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கும்படி கோர்ட் மூலம் சொத்து கைப்பற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு வந்தார்கள்.

அந்த நேரத்தில் டேன் இந்தியா வைத்திருந்த நிலங்கள், நில உச்சவரம்பு மற்றும் சீர்திருத்தச் சட்டத்தின்படி, அனுமதி பெறாமல் இருந்த நிலமானது அரசின் சொத்து என வாதிடப்பட்டது.

அதாவது டேன் இந்தியா வாங்கிய நிலங்கள், இன்ன காரணத்துக்காக வாங்கப்படுகிறது, ஆகவே அனுமதி தாருங்கள் என நில உச்சவரம்பு ஆணையத்திடம் அனுமதி பெறாத காரணத்தால், ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட சீலிங் லிமிட் நிலத்தை விட, அதிகமாயுள்ள நிலமானது அரசுக்கு சொந்தமானது என்று வாதிடப்பட்டது.

இது சட்டப்படி சரியானதுதான். பின்னர் அரசுக்குச் சொந்தமான சொத்தினை எப்படி விற்று, முதலீட்டாளர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுக்க இயலும்? முடியாது. இடியாப்பச் சிக்கலுக்கு உள்ளானது அப்பிரச்சினை.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பக்கம் இருக்கும் ஒரு சில கிராமங்களில் சுமார் 1800 ஏக்கர் நிலங்கள் உபரி நிலங்கள் என அறிவிக்கப்பட்டவை. அந்த நிலங்களைக் கிரையம் பெறுவது கூடாது. ஒரு சில பேராசை பிடித்தவர்களால் அந்த நிலங்களுக்குப் பட்டாக்கள் பெறப்பட்டு விற்பனை செய்ய முற்படுகிறார்கள்.

ஒரு சிலர் இன்னும் வியாக்கினமாக, வங்கியில் அடகு வைத்து பணம் பெற்று விடுகின்றார்கள். பத்திரப்பதிவு அலுவலகங்களில் இப்படியான நிலங்களின் தரவுகள் இருப்பதில்லை. ஆகவே பதிவு அலுவலகங்கள் பத்திரங்களைப் பதிவு செய்து விடுகின்றன.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, தாராபுரம் போன்ற தாலுக்காக்களில் பெரும்பாலான நிலங்கள் உபரி நிலங்கள். அது பற்றிய நோட்டீஸ் நில உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பலரும் இதை மறைத்து விடுகின்றார்கள். 

இது பற்றிய விவரம் எவருக்கும் தெரிந்தபாடில்லை. 25 ஏக்கருக்கும் மேல் என்றாலோ, பிரித்து விற்பனை செய்கிறார்கள் என்றாலோ ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால் மிக நல்ல விஷயம் தெரிந்த லீகல் ஒப்பீனியன் வழங்குபவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

அதுமட்டுமல்ல மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் பஞ்சமி பூமிகள் அதிகமுள்ளன. பெரும்பாலான கம்பெனிகள் இந்தப் பஞ்சமி பூமிகளில் தான் கட்டப்பட்டுள்ளன எனத் தெரிய வருகிறது.

கடும் உழைப்பில் கிடைக்கும் பணத்தினை சரியான நிலத்தில் முதலீடு செய்வது முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

உபரி நிலங்கள் மற்றும் சீலிங்க் லிமிட் பற்றித் தெரிந்து கொள்ள என்னை அணுகலாம். நிச்சயம் கட்டணம் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலம் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவற்றை கவனித்து வாங்குங்கள்.

வாழ்க வளமுடன்...!




2020ம் வருட மார்கழி மாதம் ஒன்றாம் தேதி

ஐப்பசி மாதம் மழை பெய்து கொண்டே இருக்கும். குளிர் எலும்பினை ஊடுறுவிச் செல்லும். தாத்தாவின் ஐ.என்.ஏ யூனிபார்ம் சட்டை ஒன்று இருக்கும். அதை எடுத்துப் போட்டுக் கொள்வேன். ஓட்டு வீடாகையால் குளிர் வீட்டுக்குள்ளே இறங்கும். விடிகாலைப் பொழுதில் தாதன் வாசலில் சிகண்டி அடித்து சங்கு ஊதிச் செல்வான். சிகண்டி கண்டு விழித்து விடுவேன். சரியாக பள்ளி வாசலில் இருந்து தொழுகைக்கு பாங்கு சொல்லி அழைப்பார்கள்.

கல் வேய்ந்த வாசல். கிராமத்திலேயே எங்கள் வீட்டில் தான் இருந்தது. வாசலைச் சுற்றி சிமெண்ட் பூசி, தண்ணீர் செல்ல வழி வைத்த சமமான கல்வாசல். நெல் காய வைப்பது, ஊறுகாய்கள், வத்தல், வடாம், உளுந்து இன்னும் என்னவெல்லாமோ வாசலில் தான் காய வைப்போம். மாலையில் சூடு கொப்பளிக்கும். நான்கைந்து வாளி தண்ணீர் தெளித்து சூட்டைக் குறைத்து, இரவில் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பாயைப் போட்டு தூங்குவதும் உண்டு. ஆகாயத்தில் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும். அதை எண்ணிக் கொண்டே இருக்குங்கால் தூக்க தேவதை அழகாய் தழுவி விடுவாள்.

வீட்டின் இடது புறம் நீண்ட ஆண் பனைமரம் இருக்கும். தென் கிழக்கு மூலையில் நாவல் மரம் பெரியது. வாசலை ஒட்டி வண்டி செல்லும் வண்டிப்பாதை. வீட்டு வாசலின் நேராக ஒரு பூவரசு மரம். அம்மாச்சி செத்துப் போனப்போது அதற்கு பயன்படுத்திய பூவரசம் குச்சியை அம்மா வாசலின் நேராக ஊன்றி வைத்தார்கள். அது பிழைத்துக் கொண்டது. அம்மாச்சியைப் பார்ப்பது போல தினமும் அந்தப் பூவரச மரத்தை அம்மா வாஞ்சையோடு பார்ப்பார்கள்.

பூவரசு மரம் அதன் இலைகளைத் தைத்து சோறு போட்டுச் சாப்பிடுவார்கள் திடீரெனெ வீட்டுக்கு வரும் வேலைக்காரர்கள்.

தீபாவளி சமயங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும். ஒரு மழை நாளில், தீபாவளி அன்று என் தோழியை முத்தமிட்ட சம்பவம் என் ஊடே மின்னல் என வந்துச் சென்று விட்டது. ஹா…

எனக்கு நிறைய மாமா பெண்கள் இருந்தார்கள். எனக்குப் பிடித்த சில மாமா பெண்களும், தோழிகளும் உண்டு. அது உள்ளூர இருக்கும் அன்புணர்வு. தீபாவளி நாட்களில் பலகாரங்களைக் கொடுத்து அன்பினை வெளிப்படுத்துவார்கள். அதெல்லாம் ஒரு காலம். எனக்கு நிரம்பவும் பிடித்த என்னை விட மூத்த வயது மாமா பெண் ஜெயம் மட்டுமே. மீதமுள்ளவர்களைக் கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும்.

சமீபத்தில் தான் எனது நெருங்கிய நண்பன் மாரிமுத்துவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஊரில் அவன் வீடுதான் மிகவும் பெரியது. வேலைப்பாடுகள் நிறைந்த அற்புதமான வீடு. வீடு என்றுச் சொல்வதை விட குட்டி அரண்மனை என்றுச் சொல்லலாம். அவனின் தாத்தா ஊரில் பெரிய வீட்டுக்காரர். ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவனுடன் நெருக்கம் அதிகமானது. வீட்டுக்கு அடிக்கடிச் செல்வேன். அவனின் அக்காக்கள், அவனின் அண்ணன் எல்லோரும் பார்ப்பதற்கு ராஜா வீட்டுப் பிள்ளைகள் போல இருப்பார்கள். நானோ சொங்கிப் போய் இருப்பேன். படிப்பதில் கொஞ்சம் கெட்டிக்காரத்தனமுண்டு என்னிடம். நானும் அவனும் கணக்குப் பாடங்களை எழுதுவது போன்ற படிப்புத் தொடர்பாக பழகினோம். அவன் வீட்டில் சாப்பிடுவதுண்டு.

பழைய நண்பனுடன் பேசும் போது மனக்கண்ணில் அந்தக் காலத்துக்கே சென்று விடுவோம் அல்லவா? அதைப் போல எனக்கும் நேர்ந்தது. கடந்த காலம் இனி வராது. என்னதான் செய்தாலும் அந்த நேரமும் பொழுதும் இனி கிடைக்காது. ஆனால் அதன் நினைவுகள் தரும் சுகமானது மகிழ்ச்சியை விட வேதனையைத் தந்து விடும் எல்லோருக்கும் அல்லவா? அன்றைக்கு டிவி இல்லை, மொபைல் இல்லை. தினசரிகள், மாதப் பத்திரிக்கைகள் தவிர வேறொன்றும் இல்லை. மனிதர்களைப் பார்ப்பதும், பேசுவதும், விளையாடுவதும் ஆன பொழுதுகள் இன்றைக்கு நம் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.

மார்கழி மாதம் என்பது சாதாரணமானது அல்ல. இறைவனை நினைத்து போற்றக்கூடிய காலம் இது. காலம் காலமாக ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம். கண்ணன் மட்டுமா துயில் களைய வேண்டும்?

தமிழர்களும் துயில் களைய வேண்டும். இன்னும் சினிமாக்கனவுகளில் மூழ்கி தூங்கிக் கொண்டிருக்காமல் விழித்து எழ வேண்டிய நாள் இது. விழித்துக் கொள்ளுங்கள்.

கிழட்டு நரிகள் அழகிய இளம் பெண்களுடன் ஆடிப் பாடிக் களித்து அதைக் காட்டி கிளர்ச்சியுறச் செய்து ஓட்டு வாங்கி அதிகாரம் செய்ய, நரித்தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் சம்பளம் பெற்றுக் கொள்வது பணிக்காக. ஆனால் மக்களுக்கு வேலை செய்ய கையூட்டுப் பெற்றால் மட்டுமே வேலை செய்யும் போக்கினை மாற்ற வேண்டும். அதற்குக் காரணமான ஆட்சியை மண்ணுக்குள் தள்ளி மூட வேண்டும்.

பசியாற்றும் விவசாயிகள் டெல்லிச் சாலையிலே பனி மூட்டத்தின் ஊடே போராடிக் கொண்டிருக்கிறார்கள். வயிற்றுப் பசி தீர்த்தவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் கார்ப்பொரேட் கூலியாக நின்று விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. விவசாயத்தைப் பிடுங்கி தன் அரசியல் நண்பர்களிடம் கொடுத்து விடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவே விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

எழுந்திருங்கள் தமிழர்களே…! எழுந்திருங்கள்…!!

சொந்தம் உற்றார், உறவினர், ஜாதி, இனம், மதம், மொழி, கட்சி என எதுவும் பார்க்க வேண்டாம். நம்மை வழி நடத்த, நாட்டை நல் வழியில் ஆள நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்லவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  

மார்கழித் திங்களில், இந்த நன்னாளில் நீராடும் போது, எண்ணங்களில் இருக்கும் இன, மத, மொழி, கட்சி விரோதங்களை அழுக்கோடு கழுவி விடுங்கள்.

உலகம் நம்மை வாழ வைத்தது. நாம் நம் சந்ததியினருக்கு அவ்வாறே விட்டுச் செல்ல வேண்டிய கடமை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

கோவையில் குளிர் இல்லை. சில்லடிக்கும் குளிர் சுத்தமாக இல்லை. விடிகாலைப் பொழுதில் எழுந்து குளித்து விட்டு, நெற்றியில் விபூதியும், குங்குமமும் இட்டு வாசலில் வந்து அமர்ந்தேன். வாசல் தெளித்து, கூட்டிப் பெருக்கி விட்டு, கோலம் போட்டுக் கொண்டிருந்தார் மனையாள். தெருவில் எந்த வீட்டிலும் விளக்குப் போடவும் இல்லை, கோலம் போடவும் இல்லை. எங்கோ தூரமாக சாமிப் பாட்டு ஒலித்தது. மனையாளும் நானும் ஏதோ தனித்து விடப்பட்டவர்களாக தெரிந்தோம். மக்களின் மனோபாவம் மாறிப் போனது. ஒழுங்கும், நியதியும், சமூக வழக்கங்களும் மாறிப் போனதன் விளைவினை பூமி அனுபவிக்கிறது. பூமியை ஆதாரமாகக் கொண்ட மனிதனும் அதன் தொடர்ச்சியாக அனுபவிக்கிறான். 

ஊரில் இந்த நேரத்தில் மழையூர் சதாசிவம் சிவன் கோவிலில் திருவாசகத்தையும், அகவலையும் உருகி உருகிப் பாடிக் கொண்டிருப்பார். குழந்தைகள் கோவிலுக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இன்றைக்கு சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும்.

காலம் வசதி வாய்ப்புகளை மட்டும் தான் தந்தது. மனிதர்கள் அதற்காக தங்கள் வாழ்வியலை மாற்றி விட்டார்கள். ஆனால் பசியும் கோபமும் தாபமும் காமமும் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன என்பதை எல்லோரும் மறந்து போனார்கள்.

இந்த மார்கழி அன்று நாம் தமிழகத்தில் இருவரை முடக்க வேண்டுமென சபதம் கொள்வோம். எந்தத் தகுதியும் இல்லாமல் நம்மை ஆளத்துடிக்கும் அற்ப எண்ணமுள்ள நரிகளான, தமிழினத்துக்கு ஒரு கேடாக இருக்கும் கமலஹாசனையும், ரஜினி காந்தையும் முடக்கி அவரவர் வேலையச் செய்ய வைக்க வேண்டும்.  

கொரானா, பொருளாதாரச் சீரழிவு, துரோகிகளின் தமிழ் இன அழிப்பு சம்பவங்கள் எல்லாவற்றையும் கடந்து இனி தெளிவடைவது மட்டுமே முக்கியம். கடந்து போனவை போனதுதான், இனி அது திரும்பப் போவதில்லை. ஆனால் வரும் காலம் நமக்கானது. அதை நமக்கேற்றபடி எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

உங்கள் அனைவருக்கும் மார்கழி முதல் நாளன்று இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, December 14, 2020

நிலம் (73) - பதிவுத்துறை மோசடி - பத்திரங்களின் நிலை என்ன?

இரண்டு நாட்களாக பத்திரப்பதிவுத் துறை அல்லோலகலப் பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் யார்?

வேறு யார்? துணைப்பதிவாளரைத் தவிர. அங்கிருக்கும் காண்ட்ராக்ட் பணியாளர்களின் உதவியுடன் இந்த அக்மார்க் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் துணைப்பதிவாளர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை எவரும் வாய் திறக்கவில்லை. எந்தெந்தப்பத்திரத்திற்கு போலி ரசீது காட்டி பதிவு செய்தார்களோ தெரியவில்லை. திருப்பூர் துணைப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட அயோக்கியத்தனத்தை இத்தனை காலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள்.

பாதிக்கப்படுவது மக்கள். 

வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி, நல்லது கெட்டதுக்கும் போகாமல், உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து ஒரு இடத்தை வாங்க படாத அவஸ்தைப் பட்டு, அதைக் கிரையம் செய்யச் செல்லும் இடத்திலும் இப்படியான ஊழல், அயோக்கியத்தனத்தைச் செய்தால் என்னதான் செய்ய முடியும் மக்களால்?

வங்கியில் பணம் போட்டால், அது எப்போது திவாலாகுமோ தெரியாமல் விழி பிதுங்கி, அதை நிலத்தில் போட்டாலாவது கிடக்குமே என்று அவரவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து ஒரு இடத்தைப் பார்த்து விலை பேசி கிரையத்துக்கு வந்தால் பதிந்த பத்திரமும் போலியாகப் பதிந்திருக்கின்றார்கள் என்றால் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்தவர்களை உடனடியாக பதவி நீக்கமோ பணி விடுப்போ செய்யாமல், அங்கேயே வைத்திருக்கும் அரசின் லாவணிக்கு அளவே இல்லை.

மக்களிடம் ஜி.எஸ்.டி எனச் சுரண்டி சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஒரு பக்கம். காணும் இடமெல்லாம் ஊழல் செய்து கொண்டிருக்கும் தமிழக அரசு அதிகாரிகள் ஒரு பக்கம்.

இதற்கிடையில் மக்கள் இரயில் தண்டவாளத்தின் இடையில் மாட்டிய கதையாக கதி கலங்கிப் போய் கிடக்கின்றார்கள்.

பத்திரத்திரத்தைப் பதிவு செய்யவே மோசடி வேலை செய்திருக்கும் அந்தப் பதிவாளர் என்ன விதமானவர் என்று யோசிக்க கூட முடியவில்லை. இப்படியுமா ஒரு அதிகாரி இருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. கணிணி அலுவலக நடைமுறையின் இன்னொரு கோர முகம் இது. 

பட்டா மாற்றத்தில் நடத்தப்பட்ட பல்வேறு முறைகேடுகள் இன்னும் சரி செய்யவில்லை.  நத்தம் பட்டாவில் நடத்தப்பட்ட பெரும் முறைகேடுகள் இன்னும் சரி செய்யப்படவில்லை.

இதற்கிடையில் பத்திரப்பதிவு செய்யவே முறைகேடு. 

ஏன் இப்படி ஆகிப்போனது தமிழக அரசு? காரணம் மக்கள். மக்களைத் தவிர வேறு யாரும் காரணம் இல்லை. 

இது பற்றி நிறைய பேசியாகி விட்டது. ஆனாலும் எவரும் திருந்தப் போவதில்லை. 

ரஜினிக்கு ஓட்டுப் போடுவோம் என்று சொல்லுபவர்கள் எந்த மாதிரியான ஆட்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. 

தமிழருவி மணியன் அவர் அருகில் நிற்கிறார் வெட்கமில்லாமல். கோவையைச் சேர்ந்த ஒருவர் வேறு. அதிகாரத்தின் போதையில் இப்படியும் கீழ் மன நிலையில் மனிதர்கள் இருப்பார்களா என அதிர்ச்சியாக இருக்கிறது.

சீமான் சொன்ன மாதிரி, ஸ்ரெயிட்டா கல்யாணத்தில் தாலி கட்டத்தான் ரஜினி வருவார். 

அரசியல் என்பது இன்றைக்கு இவ்வளவு கீழ் தரத்திற்கு தமிழகத்தில் போய் விட்டது. ஆனால் பாருங்கள் அவர்களை உலகம் தலைவர்கள் என்கிறது. இதுதான் வேதனையிலும் வேதனை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இனி போலி பத்திரப்பதிவினை எப்படித் தடுப்பது என்று பார்க்கலாம்.

ஆன்லைனில் டோக்கன் பதிவு செய்த பிறகு, ஸ்டாம்பு கட்டணம், பதிவு கட்டணம் இரண்டையும் நேரடியாக ஆன்லைனில் கட்டி ரசீது பெற்றுக் கொள்ளவும். இதை தனிப்பட்ட முறையில், எவரிடமாவது கொடுத்தால் இப்படியான சிக்கலில்தான் சிக்க வேண்டி வரும்.

அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி ரசீது காட்டி பதிவு செய்து விட்டார்கள். ஆனால் உண்மையில் அரசுக்குப் பணம் போகவில்லை. அந்தப் பத்திரத்தின் நிலை இப்போது NULL AND VOID.

ஆகவே நண்பர்களே, கொஞ்சமாவது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

உழைப்பு உங்களது. பணம் உங்களது. அது உங்களிடம் இருக்க வேண்டும். ஆகவே கவனம் தேவை.

பதிவுத்துறை மோசடி இணைப்புச் செய்தி : https://www.dinamalar.com/news_detail.asp?id=2670493


மேலும் ஒரு குறிப்பு : கமல்ஹாசனுக்கோ, ரஜினிக்கோ ஓட்டுப் போட கிஞ்சித்தும் நினைத்து விடாதீர்கள். அவர்கள் இன்னும் தமிழ் நாட்டை கூறு போட முனைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும் அதிமுக, திமுக தவிர அவர்களால் பதவிக்கு வர இயலாது என. ஆனாலும் இந்த வேலையைச் செய்கிறார்கள். நோக்கம் ஒன்றுதான் செட்டில்மெண்ட். அல்லது அயோக்கியத்தனம். 

போதும் சினிமாப் பைத்தியமாகி அலைந்து திரிந்தது. சினிமாக்காரர்களுக்கு தமிழ் நாட்டை எழுதி வைத்த காலத்தை மலையேற்றுவோம். 

நல்லவர்கள் எவரோ அவர்களுக்கு ஓட்டுப் போடுவோம். 

தர்மம் ஜெயிக்க வேண்டும். அறம் ஜெயிக்க வேண்டும். அதுதான் நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும். 

இவர்கள் இரத்தம் உறிஞ்சும் கொடிய அட்டையை விட கொடியவர்கள். அட்டை பசிக்கு உறிஞ்சும். ஆனால் இவர்களோ கொடூரர்கள்.

மேலும் சில செய்திகள் - செய்தி உதவி தினமலர் - நன்றி

சும்மா படிச்சு வையுங்க. என்னைக் கவர்ந்த செய்திகள் இவை.




Wednesday, December 9, 2020

சித்ராவுக்கு ஒரு கடிதம்


(சின்னத்திரை நடிகை சித்ரா)

அவ்வளவு அவசரம் ஏனோ சித்ரா? 

உணர்வுகளின் பிடியில் சிக்கி விட்டீரோ?

உணர்வுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என நிருபித்து விட்டாயே சித்ரா.

இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து சென்றிருக்கலாமே?

உன்னிடம் விளம்பரப் படத்திற்காகப் பேசி இருக்கிறேன். உன் குரலைக் கேட்டால், எனக்கு உன் மீது காதல் கொப்பளித்து அருவி போல கொட்ட ஆரம்பித்து விடும்.

அதைத் தவிர எனக்கும் உனக்குமான நேரங்கள் ஏதும் இல்லை. 

என்னிடம் உனக்கும், உன்னிடம் எனக்கும் எந்த வித பயனும் இருந்ததில்லை.

ஆனால்,

இரண்டொரு நாள் உன் குரலின் தாக்கத்தால் பெரும் மன வலி அடைவேன். 

இருப்பதே ஒரு மனசு. 

எனக்கு கடவுளின் மீது எல்லையில்லா கோபம் உண்டு இந்த விஷயத்தில்.

ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் மனசைப் படைத்து இருக்கலாம்.

அதில் இன்னொரு விஷேசத்தையும் இணைத்திருக்கலாம். ஒவ்வொரு மனசுக்கும் தொடர்பில்லா வண்ணம் செய்திருக்கலாம்.

மனித உலகினை கடவுள் வஞ்சித்து விட்டார்.

அது கிடக்கட்டும் அழகு தேவதையே….. !

மனசு வலித்து வலித்து உதிரம் கொட்டுகிறதடி உன் பிரிவால்.

எல்லாமும் முடித்து வைத்து விட்டாய்.

உன் சின்னஞ்சிறு உதடுகளைச் சுழித்துச் சுழித்து நீ பேசுகையில் சின்னக் குழந்தையின் மழலைப் பேச்சை கேட்பது போல இருக்கும். குழந்தையாகத் தானே இருந்தாய். அதற்குள் என்ன அவசரமோ உனக்கு?

உன் உருவமும், அழகும் ஒரு கிராமத்து அத்தியாயத்தின் நடிகையாக வந்த மருத்துவரைப் போல உள்ளத்தை அள்ளிச் செல்லுமே? இனி எவரிடம் காண்பது அதை? உன்னோடு எல்லாமும் போனதடி.

அத்தனை அழகையும், உன் அறிவையும் இரக்கமே இல்லாத நெருப்பிடமா கொண்டு போய் சேர்த்தாய்? மிச்சம் சொச்சமில்லாமல் தின்று விடுமே உன்னை.

இதற்குத்தானா இத்தனை அழகாய் ஆடினாய், பாடினாய்?

ஏனடி உனக்கு இத்தனை கோபம் வாழ்க்கை மீது?

வாழ்க்கை சிக்கலானது இல்லை சித்ரா.

நாம் தான் சிக்கலாக்கி வைத்திருக்கிறோம். நாமே பின்னிய வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது கூட தெரியவில்லையா உனக்கு?

மதியம் போல உன் செய்தி.

வேதனையில் கண்கள் குளமாயின.

இன்றைக்கு தமிழகமே தண்ணீரில் மிதக்கிறது.

உனக்காத்த்தான் மழையும் அழ ஆரம்பித்ததோ சித்ரா? இயற்கைக்கு எல்லாமும் தெரிந்திருக்குமோ?

என் பெரிய மாமன் மகள் பெயர் சித்ரா. என்னைக் கண்டு கொள்ளவே மாட்டாள். அதனாலோ என்னவோ உன் மீது எனக்குப் பிரியம் அதிகம்.

எனக்கும் சித்ராவுக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது போல. அதைப் போல நீயும் விட்டுப் பிரிந்து போனாயோ?

சித்ரா உனக்காக உலகக் கவிஞன் கலீல் ஜிப்ரானின் ஒரு சில வரிகளைக் கடன் வாங்கி இருக்கிறேன்.

இதோ....!


நான் எக்காலமும் இந்த கரைகளில் கடல் மணலுக்கும்

நுரைக்கும் நடுவே உலாவிக் கொண்டிருக்கிறேன்.

உயர் அலைகள் என் காலடிச்சுவடுகளை அழித்துவிடும்

அவ்வாறே காற்று நுரையினை ஊதித்தள்ளிவிடும்.

ஆனால் இந்த கடலும் அதன் கரையும் எக்காலமும் இருக்கும்.

 

ஒருமுறை பனிப்புகையை என்கைகளில் ஏந்தியிருந்தேன்.

கைகளை விரித்து பார்த்தபோது பனிப்புகை ஒரு புழுவாய் மாறி இருந்தது.

மீண்டும் கைகளை மூடி திறந்தபோது அங்கே ஒரு பறவை இருந்தது

 

இன்னொருமுறை கைகளை மூடி திறந்தபோது

அதனிடுக்கில் கவலை தோய்ந்த முகத்துடன்

மேல்நோக்கி பார்த்தபடி ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான்!!

 

நான் மீண்டும் கைகளை மூடி, திறந்தபொழுது

அங்கே பனிப்புகையை தவிர ஒன்றுமில்லை.

ஆனால் இனிமையிலும் இனிமையான ஒரு பாடலை நான் கேட்டேன்.


(கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் எனும் கவிதையிலிருந்து)

ஆம் சித்ரா உலகம் இருக்கும் வரை துன்பங்களும் துயரங்களும் உண்டு மனதுக்கு மட்டும். ஆனால் உனக்கு அல்ல சித்ரா.

மனதுதான் துன்பத்தினை அனுபவிக்கிறது உன் ஆன்மா அல்ல சித்ரா.

மனதை வெல்லத் தெரிந்து கொள்ள வேண்டும் சித்ரா.

ஆனால் நீ இருந்த துறை முற்றிலும் உணர்வுகளால் பீடிக்கப்பட்ட ஒரு சாக்கடை.

ஒரு பன்றிக்கு எப்படி சாக்கடை இன்பமோ அதைப் போல பல கோடி மனிதர்களுக்கு சாக்கடை மனதே இன்பம்.

சித்தாந்தமும் தத்துவமும் பேசுவதால் பயனில்லை சித்ரா.

உனது ஆன்மா அமைதியாகட்டும்.

க்

கு

ரு

நினைவூட்டல்

நான் வாழ்ந்து வரும் இக்காலத்தில் ‘இனிமையிலும் இனிமையான ஒரு பாடலைக் கேட்டேன்’

அப்பாடல்

சித்ரா…..!

* * *

உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை என்னிடம் பேசி விடுங்கள் நண்பர்களே. ஒரு சில மணித்துளிகள் நாம் பேசலாம். ஏனென்றால் நான் உங்களின் நண்பனாக, தோழனாக, தோழியாக, மகனாக, மகளாக இருக்க விரும்புகிறேன்.

உங்களின் உணர்வுகளில் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்க முற்பட்டால், அந்த வாழ்க்கையை எனக்குத் தந்து விடுங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். சித்ராவைப் போல முடிவெடுக்கும் முன்பு ஒரு சில வார்த்தைகள் என்னிடம் எனக்குக் கடனாய் தந்து விடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது மொபைல் : 96005 77755 (இந்தியா)

* * *

என்றைக்குமே இனி கேட்காத ஒரு பாடலாக மாறிப் போன நடிகை சித்ராவிற்காக எழுதப்பட்டது.

Thursday, November 19, 2020

லட்சுமி விலாஸ் வங்கி மூலம் வெளிப்படுகிறதா பெரும் ஊழல்?

அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் மருத்துவக்கல்லூரியில் கோடிக் கணக்கில் சீட் வழங்க துட்டு வாங்கப்படுகிறது என்றுக் காரணம் சொல்லி, நீட் வந்தது.

அரசியல்வாதிகளுக்கு பணம் எப்படி வந்தது என்று கண்டுபிடித்தால் அவர்கள் எப்படி கல்லூரி திறப்பார்கள்? அதை எவரும் எந்த உத்தமரும் கேள்வி கேட்கமாட்டார்கள்.

ஆனால் மக்கள் பரிட்சை எழுதி பாஸ் செய்ய வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு எதுக்கு பரிட்சை வைக்கணும்? நேரடியாக நீட் எழுதலாமே? 

ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள். இதன் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு புறம்போக்கு கிழட்டு மூதி டெல்லியில் லோக் ஆயுக்தா வேண்டுமென்று போராடியது. அது இப்போ எங்கே போனது என்று தெரியவில்லை. அப்பட்டமான அயோக்கியத்தனத்தைச் செய்து இந்திய மக்களை ஏமாற்றினான் அந்தக் கிழட்டு பச்சோந்தி. யோக்கிய உத்தமர் இவரே என்று சொல்லாமல் சொல்லிச் சென்றான் அவன். ஜி.டி.பி. மைனஸ் 23 சதவீதத்திற்கும் கீழ் சென்று விட்டது. 

ஏழை எளியவர்களுக்கு கிடைத்த படிக்கும் வாய்ப்பினை ஏன் பறிக்கிறது மத்திய அரசு? இதிலும் அரசியல் இருக்கிறது.

ஐடியில் கோலோச்சியவர்களுக்கு இனி அது சரிப்படாது என்று தெரிந்து விட்டது. ஆகவே இந்தக் குறுக்கு வழி. இனி ஆட்சிப்பணி, மருத்துவப் பணி எல்லாவற்றிலும் வேறொரு இனத்தினர் கோலோச்ச வழி வகைகள் செய்யப்பட்டு விட்டன.

அடுத்து எய்ம்ஸ் பிஜி கோர்ஸுக்கும் டெஸ்ட்.

டிமாண்டிசேஷன் போது சேகர் ரெட்டிக்கு கிடைத்த 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றி இன்றைக்கு வாய் திறக்காதவர்கள் இன்று கணக்குக் காட்டப்பட்டு விட்டதாக சொல்லுகின்றார்கள்.

சட்டசபையில் பதினோறு எம்.எல்.ஏக்கள் கட்சி விரோதமாக ஓட்டளிக்கின்றார்கள். இன்றைக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. ஆனால் உலக பொய்யன் அர்னாப் கோஸ்வாமிக்கு உடனடியாக ஜாமின் விசாரணை நடத்தப்பட்டு ஜாமின் அளிக்கப்படுகிறது. நீதிமன்றத்தினை கேள்வி கேட்டால் வழக்குப் போடுகின்றார்கள்.

அக்கிரமம் தலை விரித்தாடுகிறது. பொய்யும் புரட்டும் செய்திகளாகி வெளியாகின்றன. 

டிமாண்டிசேசனில் ஏகப்பட்ட ஊழல் நடத்தப்பட்டிருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள். அதற்கு கட்டியம் கூறுகிறதா இந்தச் செய்தியைப் படித்த போது கேள்வி எழுகிறது.

இந்திய நாட்டினருக்குச் சொந்தமான ஒரு வங்கியை எதற்கு அடிமாட்டு விலைக்கு இன்னொரு வெளி நாட்டு வங்கிக்கு விற்க ஆர்.பி.ஐ அனுமதிக்க வேண்டும்? ஏன் இப்படித்துடிக்கிறது ஆர்.பி.ஐ என்று கேட்கிறார்கள் செய்தியாளர்களும், முதலீட்டாளர்களும். மிகக் குறைந்த ஆஃபர் செய்யும் வெளி நாட்டு வங்கியுடன் ஏன் எல்.வி.பிஐ இணைக்கத் துடிக்கிறது ஆர்.பி.ஐ? காரணம் என்ன?

ஏனென்றால் வெளியேறிய கருப்பு பணம் இப்படி உள் நுழைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

பதில் சொல்வார் யாருமில்லை. இதோ அந்தச் செய்தி. 

இதில் நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அரசு எப்படி இந்திய மக்களை ஏமாற்றுகிறது என்பது மட்டும் தான். மக்கள் நலன் என்கிற போர்வையில் பிடிக்காத பிரைவேட் நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறார்கள். 

அதாவது ஒரு சமூகத்தால் உருவாக்கப்பட்ட வங்கியை அவர்கள் அழிக்கத் துடிக்கின்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அடுத்து கரூர் வைசியா வங்கி என்று பேசிக் கொள்கிறார்கள்.

ஏன் அவ்வாறு நடக்கிறது? பிறர் எவரும் தொழிலதிபராக வரக்கூடாது, பெரியவர்களாக வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணம் தவிர வேறு என்னவாக இருக்க இயலும்? 

இந்தியா மீண்டும் மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தப்படுகிறது என்பது கண்கூடு.

விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. துரோகிகள் கூட்டம் மதம் பேசித் திரிபவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. நாம் என்றைக்கும் ஒரு துரோகியை மன்னித்ததே இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். பெண்களிடம் வீரம் காட்டும் உலக மகா யோக்கிய சிகாமணிகள் உலவும் நாடு இது. வெட்கம் கெட்டவர்கள். பணத்தின் முன்னால் வெட்கமாவது ஒன்றாவது. 

நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதையும் வெளிக்காட்ட வேண்டியதில்லை. நேரம் வரும் போது நல்லது எதுவோ அதைச் செய்ய வேண்டும்.

நன்றி செய்தி உதவி : பிசினஸ் ஸ்டாண்டர்ட்