குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, June 30, 2020

நிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை


அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

தற்போதைய சூழலில் பெரும்பான்மையான வெளி நாடு வாழ் இந்தியர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி விடலாம் என்ற சிந்தனையில் உள்ளனர். எனக்கு வரக்கூடிய அழைப்புகள், அவர்கள் இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கின்றனர் என்று சொல்கின்றன.

எதார்த்தம் என்பது இதுதான்.

வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு உண்மை இப்போது புரிந்து இருக்கும். சொந்த நாடு என்பது சொந்த நாடுதான்.

அடியேன் பெரும்பாலான நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, லேண்ட் சீலிங், லேண்ட் அக்குசேசன், பாதை எடுப்பு போன்ற வகைகளுக்குள் சிக்காத விவசாய நிலங்களாகவும், வாஸ்துவுக்குள் இருக்கிறதாகவும், தண்ணீர் வசதி உள்ளதாகவும் பார்த்து, லீகல் பார்த்து ஆன்லைனில் அப்டேட் செய்கிறேன்.

நமது யூடியூப் சானல் www.youtube.com/c/GoldOnline



மேற்கண்ட இணைப்பில் நிலங்களைப் பற்றி விவரித்துள்ளேன். அவசியம் பாருங்கள்.

வெளி நாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்கள் வாங்க நல்ல அனுபவம் பெற்ற ஆலோசகரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். தற்போது ஏகப்பட்ட கெடுபிடிகளை இந்திய அரசு விதித்திருக்கிறது.

என்னைப் போன்ற நிதி மற்றும் நில ஆலோசகர்களை அவசியம் தொடர்பு கொள்க. எனக்கு இதுதான் பணி. ஆகவே மிகத் துல்லியமான, சரியான, சட்ட விதிகளுக்கு உட்பட்ட ஆலோசனையை அவசியம் தருவேன்.

இனி வெளி நாடு வாழ் இந்தியருக்கு வந்த பிரச்சினையும், தீர்வும் பற்றிய செய்தியைப் பார்க்கலாம்.

டென்மார்க்க்கில் வசித்து வந்த ஒரு வெளி நாடு வாழ் இந்தியர் ஒருவர் டெல்லியில் ஒரு கடை ஒன்றினை வாங்கி, வியாபாரம் செய்ய முடிவெடுத்து, கடைகள் கட்டி வாடகைக்கு விடும் பில்டர் ஒருவரை அணுகி, விலை பேசி முழு தொகையினையும் வழங்கி விட்டார்.

ஆனால் அந்த ரியல் எஸ்டேட்காரர் குறித்த நேரத்திற்குள் கடையை அவரிடம் ஒப்படைக்காமல் காலதாமதம் செய்து வந்திருக்கின்றனர்.

டென்மார்க்–காரர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார். அங்கே ரியல் எஸ்டேட்காரர் வக்கீல் மூலம் ஆஜராகி, டென்மார்க்காரர் கன்ஸ்யூமர் கேட்டகரியில் வரமாட்டார் எனவும், அவர் கடையினை வியாபாரத்துக்காக வாங்குகிறார் என வாதிடுகிறார்கள். தீர்ப்பு ரியல் எஸ்டேட்காரருக்கு ஆதரவாக கிடைக்கிறது. பின்னர் டென்மார்க்காரர் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தில் (NCDRC) வழக்குத் தொடுக்கிறார். அங்கேயும் ரியல் எஸ்டேட்காரரின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது. அதாவது டென்மார்க்காரர்  நுகர்வோர் அல்ல என்று வழக்கு திசை மாற்றப்படுகிறது.

வேறு வழிகள் இன்றி எதிர்காலத்தில் மாநில ஆளுநர்களாக வரப்போகும் வராமலும் போகும் நீதிபதிகள் பரிபாலனம் செய்யும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார் டென்மார்க்காரர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. எதிர்பாராத சூழ் நிலைகளில் ஒரு சில வழக்குகள் சில விதிகளை மாற்றி விடும் போக்குடையவை. இதைப் பற்றி பிரிதொறு நாளில் எழுதுகிறேன்.

அவ்வாறு நடந்த ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அதாவது கன்ஸ்யூமர் புரொடெக்‌ஷன் ஆக்ட் 1986- செக்சன் 2(1)d  சட்ட விதியின் படி, சில சூழல்களில் கமர்ஷியல் நோக்கத்திற்காக எதை வாங்கினாலும், அது நுகர்வோர் எனும் வகைக்குள் அடங்கும் என்பதால் டென்மார்க்காரரும் ஒரு நுகர்வோர் தான் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இப்போது டென்மார்க்காரர் நுகர்வோர் என்று உறுதி செய்யப்பட்டார். இனி அடுத்த வழக்கு தனி.

இந்த வழக்கு சுவாரசியமான ஒன்று. தற்போது பி.எம்.கேர் ஃபண்ட் பற்றி சர்ச்சைகள் இருக்கின்றன அல்லவா? அதைப் போன்றது தான் நுகர்வோர் - கமர்ஷியல் வழக்குகள். பி.எம்.கேர் ஃபண்ட் வெகுசுவாரசியமானது. அதைப் பற்றி பின்னர் ஒரு நாளில் எழுதுகிறேன்.

அந்த டென்மார்க்காரர் செய்த தவறென்ன? கடை வாங்க ரியல் எஸ்டேட்காரரிடம் விலை பேசி மொத்த பணத்தையும் செலுத்தி விட்டார். ஆனால் குறிப்பிட்ட ஒப்பந்த நாளுக்குள் கடையினை ஒப்படைக்கவில்லை. ஒப்படைக்க உத்தரவு போடுங்கள், எனக்கான தீர்ப்பினை வழங்குங்கள் என கோர்ட்டுக்குப் போனார். கோர்ட்டில் நடந்ததோ இவர் நுகர்வோரே அல்ல என்ற வழக்கு. பொருள் இழப்பு, நேர விரயம், வழக்குச் செலவுகள், மன உளைச்சல் என அவர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார். ஆகவே இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினாலும், நிலம் வாங்க விரும்பினாலும் தக்க ஆலோசனை பெற்ற பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்லவும். இந்திய இணையதளச் செய்திகள் அப்டேட் செய்யப்படுவதில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.

புரிகிறதா உங்களுக்கு?

இதைப் போன்றதொரு சிக்கல்களில் சிக்கி விடாமல் இருக்க எம்மைப் போன்றோரை அணுகி (கொஞ்சம் செலவாகும்) ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பின்னர் இன்னொரு விஷயம் கூட இருக்கிறது.

எங்களது வியாபாரத் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் ஸ்பெயின் மற்றும் டென்மார்க்கில் ரியல் எஸ்டேட் செய்கிறார்கள். அடியேனும் அவர்களில் ஒரு அங்கம். மேற்கண்ட நாடுகளில் நிலமோ அல்லது முதலீடோ செய்ய விரும்பினால் அழையுங்கள். இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, முறைப்படி நிலங்கள் பதிவு செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


Monday, June 29, 2020

தர்மத்தின் பாதையினை யார் அறிவார்?


அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களாகிப் போகின மீண்டும் எழுத. கொரானா லாக்டவுன் நாட்களில் வீட்டில் இருந்தேனல்லவா, அதை ஈடுபடுத்தும் விதமான ஏதாவது பொருளீட்டி விடலாமென்ற முனைப்பில் பல வேலைகளைச் செய்திருந்தேன். தமிழகத்தில் கொரானா சமூகப் பரவல் அதிகமாகியதால், அவைகள் மீண்டும் முடங்கிப் போயின.

காலம் எல்லாவற்றுக்குமான பதிலை தன்னுள் வைத்திருக்கும் என்ற தத்துவத்தை நினைத்து மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டாலும், ஆளும் ஆட்சியாளர்களின் திறமையற்ற தன்மையினால் இந்தியர்கள் அடையும் கொடுமைகளை எண்ணி வேதனைதான் அதிகப்படுகிறது.

சார்பற்ற நிலையில் யோசித்துப் பாருங்கள்.

திறமையற்ற ஆட்சித்திறனாலேதான் இந்தியாவில் இவ்வளவு இழப்புகளும் உண்டாகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது அல்லவா?

குஜராத்தில் மதக்கொலைகள் நடைபெற்ற போது வாளாயிருந்தார் அன்றைய சி.எம்.மோடி என்பதால் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்த சம்பவத்தை நாமெல்லாம் படித்திருக்கிறோம். அதன் பிறகு அவர் சீனாவை நோக்கி தன் வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டார். இதுவரை எந்த ஒரு இந்திய தலைவரும் மேற்கொள்ளாத அளவு, சீன பயணங்கள் சென்றார். சமீபத்தில் கூட சீனா கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழகத்தில் சீன அதிபதிருடன் சந்திப்புகள் நிகழ்த்தி பல வியாபார ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். ஆனால் தற்போது நடந்து வருபவைகள் என்ன? சீனாவை நம்பிய பிரதமருக்கு ஏன் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன?

அதுமட்டுமல்ல, நம் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கொரானா தொற்று பற்றி பேசும் போது, எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது என்றுச் சொல்லி இருக்கிறார் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அதிகார பலமும், ஆட்சியும், அசுரபலமும் கொண்ட ஆட்சியாளர்கள் இன்று கைபிசைந்து நிற்கும் அவலம் ஏன் உண்டானது? என்ன காரணம்? இதைப் பற்றி அலசி ஆராய பல ஆட்கள் இருக்கின்றார்கள். அவரவர் சிந்தனைகளுக்கு ஏற்ப பல வழிகளில் அரசியல், பொருளாதாரம் போன்ற காரணிகளை வைத்து ஆராய்வார்கள் பெரும்பாலானோர்.

ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? சுவாரசியமான அந்த காரணத்தைக் காணலாம் வாருங்கள் என்னுடனே!

இப்போது உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு கூறுகிறேன்.

கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.

நம் பாரத பிரதமர் இந்தியாவிற்கு பிரதமரான வரலாற்றினை மனதுக்குள் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். அதே போல தமிழக முதலமைச்சர், முதலமைச்சரான வரலாற்று  நிகழ்வுகளை ஒரு நிமிடம் யோசித்து விடுங்கள்.

கட்சி சார்பற்ற, மதச் சார்பற்ற நிலையில் மனதை தெளிவாக வைத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள். செய்து விட்டீர்களா? இனி தொடர்ந்து படியுங்கள்.

நேர்மையாக இருக்கிறேன், கடுமையாக உழைக்கிறேன், எவருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை, யாரையும் கொல்லவில்லை, எவரையும் கொடுமைப்படுத்தியதில்லை, எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன். ஆனால் எனக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படித் துன்பங்களையே தொடர்ந்து செய்கிறான் என்று கவலைப்பட்டிருக்காத மனிதர்களே இப்பூமியில் இருக்கமுடியாது. அதில் நீங்களும் ஒருவர்தான் என்பதில் உங்களுக்கு எந்த வித சந்தேகமும் இல்லையே? நீங்களும் ஒருவர் தான் என்றால் தொடர்ந்து படியுங்கள்.

ஒரு கதை சொல்கிறேன்.

இரவு கவிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மழையில் நனைந்து கொண்டே வந்த ஒருவர், எதிர்பட்ட சத்திரத்திற்குள் நுழைகிறார். அங்கே ஏற்கனவே இருவர் தங்கி இருப்பதைப் பார்க்கிறார்.

”நானும் உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா?” என்று கேட்கிறார். இருவரும் சம்மதிக்கின்றார்கள்.

இரவு ஆகிறது. பசி நேரம். புதிதாக வந்தவர், ”எனக்குப் பசியாக இருக்கிறது. அவசரத்தில் உணவு கொண்டு வர மறந்து போனேன். உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

முதலாமானவர் ”என்னிடம் மூன்று ரொட்டிகள் உள்ளன” என்றும், இரண்டாமாவர் ”என்னிடம் ஐந்து ரொட்டிகள் உள்ளன” என்றும் சொல்கிறார்கள்.

மூன்று பேர், எட்டு ரொட்டிகள் உள்ளன, சமமாகப் பிரித்து உண்டால் நன்றாக இருக்குமே, எப்படிப் பிரிப்பது என்று யோசிக்கிறார்கள். புதிதாக வந்தவர் ”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டாக்கினால் மொத்தமாக இருபத்து நான்கு ரொட்டித் துண்டுகள் வரும். ஆளுக்கு எட்டுத் துண்டுகளாக உண்ணலாம்” என்று சொல்கிறார். மூவரும் அதன்படியே செய்து, உண்டு விட்டு உறங்கினர்.

மறுநாள், புதிதாக வந்தவர் மீண்டும் தன் பயணத்தை துவக்கிய போது இருவரிடமும் எட்டு தங்க காசுகளைக் கொடுத்து பிரித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

முதலாமாவர் ”ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்ளலாம்” என்றார். 

இரண்டாமாவர் ”அதெப்படி சரியாக வரும்? நான் தானே அதிகம் கொடுத்தேன்? எனக்கு ஐந்து, உங்களுக்கு மூன்று என பிரித்துக் கொள்ளலாம்” என்றார். முதலாமாவரோ, ”என்னிடம் குறைவாக ரொட்டிகள் இருந்த போது கூட, நான் அவருக்கு உணவு கொடுத்தேன் அல்லவா? இருவரும் சேர்ந்து தானே அவருக்கு உணவு கொடுத்தோம். அவரின் பசி ஆற்றியதிலே இருவருக்கும் சமபங்கு உண்டுதானே? ஆகவே சமபங்காக பிரித்துக் கொள்ளலாம்” என்றார்.

எட்டு காசுகளைப் பங்கு பிரிப்பதில் இருவருக்கும் பிரச்சினை வந்து விட்டது.

மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு மூன்றும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஐந்து தங்க காசும் பிரித்துக் கொடுப்பது சரியா?

மூன்றாவதாக வந்தவரின் பசிக்காக இருவரும் சேர்ந்து உணவு கொடுத்ததற்தாக தானத்தில் அளவு வித்தியாசம் பாராமல் சரி சமமாகப் பிரித்துக் கொடுப்பது சரியா?

இந்த இரண்டு தீர்ப்புகளில் ஒரே ஒரு தீர்ப்புதான் சரி அல்லவா? அது எது என்று யோசித்துப் பாருங்கள். முடிவெடுத்து விட்டீர்கள் அல்லவா?

ஆம் நாமெல்லாம் இந்த இரண்டு தீர்ப்பினை மட்டும் தான் யோசிப்போம்.

ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தர்மம் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்தப் பிரச்சினை அந்த நாட்டு மன்னனிடம் செல்கிறது. பிரச்சினையைக் கேட்டு மன்னன் குழம்பினான். அதே மனநிலையில் சென்று தூங்கிய போது, அவனது கனவில் அவன் வணங்கும் கடவுள் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்ப்பினை வழங்கினார்.

மறுநாள் அரசவை கூடியது. இருவரும் தீர்ப்புக்காக மன்னன் எதிரில் வந்து நின்றனர்.

”மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஏழு காசும் கொடுக்கும்படி” மன்னர் தீர்ப்பு வழங்கினார். கூடியிருந்த சபையினருக்கு இந்த தீர்ப்பின் அர்த்தம் புரியவில்லை. எதன் அடிப்படையில் இந்த தீர்ப்பினை மன்னர் வழங்கினார் என்று குழம்பினர்.

முதலாமானவரோ ”இது அக்கிரமமான தீர்ப்பு” என்றுச் சொன்னார்.

மன்னர் அனைவரையும் நோக்கினார்.

முதலாமானவரைப் பார்த்து, ”உங்களிடம் இருந்த ரொட்டிகள் எத்தனை” என்று கேட்டார்.

”மூன்று” என்றார் அவர்.

”எத்தனை துண்டுகளாக பிரித்தீர்?”

”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப் பிரித்தேன்” என்றார்.

”ஆக உங்களிடமிருந்த மூன்று ரொட்டிகளைப் பிரித்தால் ஒன்பது துண்டுகள் வந்திருக்கும். அதில் எட்டு துண்டுகளை நீங்களே சாப்பிட்டு விட்டீர்கள். ஒரே ஒரு துண்டை மட்டுமே புதிதாக வந்தவருக்கு தானம் செய்தீர்கள். ஆனால் இரண்டாமாவரோ ஐந்து ரொட்டிகளைப் பிரித்து, ஏழு துண்டுகளைத் தானம் செய்தார். அதன்படி உங்களுக்கு ஒரு தங்கக் காசு, அவருக்கு ஏழு தங்கக் காசு வழங்கும்படி ஆணையிட்டேன். தீர்ப்பு சரிதானே?” என்றார் மன்னர்.

நண்பர்களே,

தர்மம் வழங்கும் தீர்ப்பு உண்மை என்னவோ அதன்படிதான் இருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். நாம் ஒவ்வொருவருக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நாம் செய்த தான தருமங்களின் படியே நடத்தப்படும். அதன் பலன்களே நமக்கு கிடைக்கும் அல்லவா? அதிக நற்பலன்களைச் செய்தவர்களுக்கு கடவுள் அதிகமாகவும், குறைவான நற்பலன்களைச் செய்தவர்களுக்கு குறைவாகவும் கிடைப்பதுதானே அறம்? தர்மம்? அதுதானே சரியாக வரும்.

கடவுள் அதிகாரத்திற்குப் பயப்படுவதில்லை. யார் என்ன நற்பலன்களைச் செய்திருக்கின்றார்களோ அப்பலன்களுக்கு ஏற்ற நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். பிரதமரானாலும் சரி, முதலமைச்சரானாலும் சரி அவர்களுக்கும் அவ்வாறே.

தர்மத்தின் தீர்ப்பு கட்சி சார்பற்றது. மதச் சார்பற்றது. என்றும் அழியாத உண்மையின் வழியில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு மனித வாழ்க்கையும் இப்படித்தான்.

கடவுள் என்பவர் உண்மையானவர். அவர் எப்போதும் யாரையும் தண்டிப்பதும் இல்லை. கணக்கு வழக்குகள் பார்ப்பதும் இல்லை. மனித வாழ்க்கையின் சாரம் தர்மத்தின் பால் அமைக்கப்பட்டிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள். உங்களுக்கும், எனக்கும் நடக்கும் ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் காரணம் நாமே….!

இல்லையென உங்களால் மறுக்க முடியுமெனில் எனக்கு எழுதுங்கள்.

வாழ்க நலமுடன்….!

Wednesday, May 27, 2020

ஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை

அன்பு நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும்  வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காரில் ஒரு நீண்ட பயணம் சென்று வந்தேன். பல மாவட்டங்களை தாண்டிய பயணம். 

பயணத்தின் போது, தமிழகம் கொரானாவின் காரணமாக முடங்கி விட்டது தெரிந்தது. எல்லோருக்குள்ளும் உயிர் மீதான பயம் இருக்கிறது. 

கிராமங்கள் வழமை போல இயங்குகின்றன. கிராமங்களை ஒட்டிய முன்னேறிய ஊர்களில் கடைகள் திறந்திருந்தாலும், வியாபாரம் இல்லை.

என்னையும், என் நண்பர்களையும் நன்கு கவனித்துக் கொண்ட ஹோட்டலுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நேரத்தில். ஏனென்றால் எங்கள் மூன்று பேருக்காக இருபது பேர் பணி செய்தனர். அதை என்னால் மறக்க முடியவில்லை. 

எங்களுக்காக இந்தக் கொரானா நேரத்திலும் மதிய அறுசுவை உணவை தயார் செய்து, பரிமாறிய அன்பு நண்பருக்கு என் அன்பு நன்றிகள். எந்த ஒரு மாவட்ட எல்லையிலும் எங்களின் காரை நிறுத்தாமல், அனுமதித்த காவல்துறையினருக்கு நன்றிகள். முறைப்படி இபாஸ் பெற்றிருந்தோம்.

பெயர்களைத் தவிர்க்க பல காரணங்கள் உண்டு. 

இனி விஷயத்துக்கு வந்து விடுவோம்.

வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறொருவருக்கு
எட்டாத புட்பம், இறைக்காத தீர்த்தம், இனி முடிந்து
கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் கருத்தின் உள்ளே
முட்டாத பூசை அன்றோ குரு நாதன் மொழிந்தது வே.

படித்து விட்டீர்களா பட்டினத்தாரின் பாடலை. வார்த்தைகளைப் பிரித்திருக்கிறேன். அர்த்தம் உங்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காக. இந்தப் பாடலின் அர்த்தம் என்னவென்றால் கடவுள் உங்களுக்குள்ளே இருக்கிறார் என்பதுதான். அதைத்தான் பட்டினத்து அடிகளார் வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், இன்னொருவருக்கு கிடைக்காத பூ, நீர் இறைக்காத தீர்த்தம், கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் என்கிறார். அவரின் குரு நாதர் அவருக்கு உபதேசித்தது.

* * * 
இங்கு ஒரு அரசியல்:

பிஜேபியினர் பெரியாரை எதிர்ப்பதை விட்டு விட்டு, பட்டினத்து அடிகளையும், வடகரை சிவானந்த பரமஹம்சரையும் அல்லவா எதிர்க்க வேண்டும்? வடகரை சிவானந்த பரமஹம்சரின் சித்தவேதம் கோவிலே தேவை இல்லை என்கிறது. பிஜேபியினரின் எதிர்ப்பு இவர்களிடம் எடுபடுவதில்லையே ஏன்? 

பெரியார் திகவினர் இதையெல்லாம் கவனத்தில் வைத்து பதிலடி கொடுங்கள். அரசியல் களம் இன்னும் சூடு பிடிக்கும். எங்களுக்கும் பொழுது போகும். 
* * * 

சுவாமி சங்கரானந்தர் அவர்கள் எம் குரு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் குரு. அக்கா ராஜேஸ்வரியும், சாமியும், மனையாளும் ஆஸ்ரம் சென்று சுவாமியின் ஜீவசமாதியினைத் தரிசித்து அருளாசி பெற்று வரும் படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதன்படி குற்றாலத்துக்கும் சென்றிருந்தேன். சாலையில் நடமாட்டமே இல்லை. தங்குமிடங்களும், கடைகளும் மூடி இருந்தன. உலகம் இயற்கையோடு இயைந்து ஒடுங்கி இருந்தது போலத் தோன்றியது எனக்கு.

குற்றாலம் சங்கரானந்தா ஆஸ்ரமத்தின் நிர்வாகி பிரம்மஸ்ரீ அய்யா சிவராமகிருஷ்ணன் அவர்கள் சுவாமி சங்கரானந்தர் அவர்கள் எழுதிய ஞானத்தாழிசை விளக்கப் புத்தகத்தை வழங்கினார். 

திருத்தொண்டர் புராணத்தை பெரியபுராணமாக்கிய புண்ணிய ஆத்மாக்கள், மாணிக்கவாசகப் பெருமான் மனம் லயித்து, கடவுளைக் கண்ட ‘ஞானத்தாழிசை பாடல்களை” வசதியாக திருவாகசகத்திலிருந்து நீக்கி விட்டது வரலாற்றுத் துரோகம்.

அப்படியென்ன அப்பாடல்களில் மாணிக்கவாசகப் பெருமான் எழுதி இருக்கிறார் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றுகிறது அல்லவா? ஆம் அதே கேள்விதானெனுக்கும் அய்யா சிவராமகிருஷ்ணன் அவர்களிடம் உரையாடிய போது ஏற்பட்டது.

வீட்டுக்குத் திரும்பினேன். உடல் வலி, இருந்தாலும் எண்ணமெல்லாம் ஞானத்தாழிசை மீது மொய்த்தது. 

அன்பு நண்பர்களே,

உண்மைக்கு எப்போதும் அழிவில்லை. பொய் புனைவுகளோடு வரும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அதன் பொழிவு நீற்றுப்போய் போலி எனத் தெரிந்து விடும். உண்மையை எவரும் சொல்லால் விவரிக்க முடியாது. உணர வேண்டியது உண்மை. ஆனால் அது என்றும் மாறாதது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ஆனால் உண்மைக்கு அப்படி இல்லை. ஏனென்றால் அதுவே மாற்றம், அதுவே உண்மை.  

எத்தனை பேர் சதிசெய்தாலும், உண்மை உறங்குவதில்லை. மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகம் என்பது புலம்பல். பக்திப் புலம்பல். சிவபெருமானிடம் பக்தி கொண்டு, அவர் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி புலம்புவது திருவாசகம். திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பார்கள்.

அப்படியான ஒரு ஞானப்புலம்பல் பக்தி இலக்கியம் தான் திருவாசகம். 

பக்தி மேலீட்டில் கருணை வடிவினன், கல்லில் உறைந்திருக்கும் ஒப்புயர் அற்றவன் என கடவுளை உருவடிவில் கண்டு மனத்தை இமைப்பொழுதும் மறக்கா வண்ணம் பக்தியில் மூழ்கி, காலம் செல்லச் செல்ல பக்தியின் வடிவம் மாறுதல் பெற்று எண்ணமில்லா மனத்தைப் பெற்று, ஓசையில்லா உலகிற்குள் மனது நுழைந்து, ஆங்கே ஆனந்த தாண்டவமாடிடும் எல்லையில்லா பெரும்பொருளின் அசைவோடு இயைந்து மனம் ஒன்றி மூழ்கி விடும்.

மாணிக்கவாசகப் பெருமானின் உள்ளமும் அவ்வண்ணமே ஒன்றியது போலும். இல்லையெனில் ஞானத்தாழிசை பாடல்களை அவரால் எங்கணம் எழுதக்கூடும்? பக்தியில் மனம் லயித்து, அதன் அடுத்த நிலையான ஞானத்தில் திளைத்த காரணத்தால் தான் அவர் ஞானத்தாழிசை பாடினார் என்பதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகமும் வேண்டியதில்லை. 

அப்பாடல்களை, தொண்டர் புராண இலக்கியத்திலிருந்து காணாமல் போகும் வண்ணம் சதிச்செயல்களை பலரும் செய்து வந்திருக்கின்றனர். அதைக் கண்ட சங்கரானந்தர் சுவாமிகள் அதற்கு விளக்கவுரை எழுதி பல பதிப்புகள் கண்டிருக்கின்றன அப்பாடல்கள். ஏன் அவ்வாறான செயலைச் செய்தார்கள் எனில், கோவில்களுக்குப் பிரச்சினை வந்து விடும் என்பதைத்தவிர வேறொரு காரணத்தையும் என்னால் கண்டு உணர முடியவில்லை.

படிக்கட்டு தேவைதான். அதற்காக படிக்கட்டிலேயே நின்று விட முடியாது அல்லவா? பக்தியின் அடுத்த கட்டம் கடவுளை தன்னுள் உணர்வது.

இதோ கீழே மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ஞானத்தாழிசை பாடல்கள்.

பாடல்-1

சுழியாகிய முனைகண்டபின் உற்றாருற வற்றாய்
சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்
வழியாகிய துறைகண்ட பின் அனுட்டானமுமற்றாய்
வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய்
விழியாகிய மலர்கண்டபின் உயரர்ச்சனை யற்றாய்
மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய்
அழியாப்பதி குடியேறினை அச்சம்பல வற்றாய்
யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே

பாடல்-2‏

நெஞ்சிற்பொரு ளடிகண்டபின் நெஞ்சிற்பகை யற்றாய்
நேசத்தொடு பார்மங்கையர் மேலும்நினை வற்றாய்
மிஞ்சிச்சொலு முரையாண்மையும் வீம்பும்இடும் பற்றாய்
விரதங்களும் வேதங்களும் வீணாகம றந்தாய்
அஞ்சும்உட லாய்க்கண்டபின் ஆசைத்தொடர் பற்றாய்
ஆருந்திதிருக் கோயில்சிவம் அதுவும்தனில் உற்றாய்
தஞ்சம்எனும் ஞானக்கடல் மூழ்குந்திற மாகித்
தாள்சேர்ந்தனை குறைவேதினி சலியாதிரு மனமே

பாடல்-3‏

நாசிநுனி நடுவேதிருக் கூத்தாகிய நடனம்
ஞானக்கண் ணாலதனை நாடிச்செயல் கண்டு
சீசீ என முரையற்றனை சினமற்றனை உயிர்கள்
செய்யுமந்நி னைவற்றனை நேசத்துடன் கூடிக்
கூசிக்குல வரவற்றனை கோளற்றனைப் பாவக்
குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாங்
காசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி
கண்டாய் அரன் கொலுவாகிய சபைமேவினை மனமே

பாடல்-4‏

வெளிபெற்றிடு சொருபப்பொருள் வெளியாகிய ஒளியில்
விளையாகியநாதத் தொனிவிந்தின் செயல்கண்டு
களிபெற்றனை தயவுற்றனை பிறவிக்கட லென்னும்
களையற்றனை உலகத்தினில் வரவற்றனை காணா
ஒளிபெற்றனை மயலற்றனை ஒழிவற்றனை ஓதும்
உரையற்றனை களிபெற்றனை பசியற்றனை ஊறல்
குளிபெற்றனை அரனுற்றிடு கொலுவுற்றனை கோமான்
கொடைபெற்றனை அறிவுற்றனை கோளற்றனை மனமே

பாடல்-5

பத்தோடிரு கலையாகிய பனிரெண்டினில் நாலும்
பாழ்போகிட மீண்டே வரும் பதியின்கலை நாலும்
பெற்றோடிவந் திங்கேறிய பேர்மைந்தனைக் கண்டு
பேசும்நிலை யோடும்உற வாகிப்பிணக் கற்றாய்
கற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமு மற்றாய்
கானற்புன லோகப்பிடி மானத்தையு மற்றாய்
சித்தோடிரு சித்தாகிய சிற்றம்பல மீதே
சேர்ந்தாய் குறை தீர்ந்தாய் இனி வாழ்வாயிரு மனமே

பாடல்-6

அல்லற்படு மோரொன்பது வாசல் பெருவாசல்
ஆருமறி வார்கள் அறியார்க ளொருவாசல்
சொல்லப்படு தில்லைச்சிறு வாசற்படி மீதே
சூழும்பல கரணாதிகள் வாழும் மணிவாசல்
தில்லைப்பதி யருகே யடையாள மெனலாகும்
சேருங்கனி காணும்பசி தீரும் பறந்தோடும்
சொல்லப்படு மல்லற்பல நூல்கற் றதனாலே
சின்னஞ்சிறு வாசல்புக லாமோசொலு மனமே

பாடல்-7

விண்டுமொரு வர்க்கும்உரை யாடப்பொருள் தானும்
பீஜாட்சர வீதித்தெருக் கோடிமுடிந் திடத்தே
கண்டுமிருந் தார்க்குள்ளிரு பரிபன் னிருகாலாற்
காணுமது தானும்பனி ரெண்டங்குலம் பாயும்
பிண்டம்புகு மண்டம்புகு மெங்கும்விளை யாடிப்
பீடமென்னும் நிலைசேர்ந்திடு பெருமைதனைக் காண்பாய்
என்றும்மொழி யற்றார்பரத் தோடும்உற வாகி
ஏதும்உரை யாமல்இருப் பார்களறி மனமே

பாடல்- 8

முப்பாழ் கடந்தப்பா லொரு முகப்புண்டதினடுவே
முச்சந்திகள் கூடும்அது தானும்முதற் பாழாம்
அப்பாழ்கடந் தப்பாலொரு கணவாயதன் பெருமை
அறுகுநுனி யிடமுமென அறிவார் பெரியோர்கள்
செப்பாதது தானுமறிந் தப்பாற் கடந்திட்டால்
சேருங்கலை நாலும்வரு திசையுமறிந் திட்டால்
ஒப்பாரினி இப்பாரினில் ஒப்பாருமே யில்லை
ஒன்றைப்பிடி தன்மைப்படு மெண்ணப் படுமனமே

பாடல்-9

நாதமெழுந் தெழுந்தோடி வந்துறையும் திருக்கூத்து
ஞானக் கண்ணினாலும்அதை நாடிச் செயல் கண்டு
பூதமெனும் பயமற்றனை பொறியற்றனை மெய்யிற்
பூசும்பரி மளமற்றனை பூவற்றனை லோகஞ்
சூதமென வரவற்றனை சுசியற்றனை எச்சில்
சுத்தஞ்செயு நினைவற்றனை சுவையற்றனை ஞானப்
பாதம்முடி மேல்வைத்தனை பற்றற்றனை யுற்று
பதிபெற்றனை இகலற்றனை பதையாதிரு மனமே

பாடல்-10

ஆயும்பல நூல்சாத்திர வேதத்தொடு புராணம்
ஆய்வந்திடு வழிகண்டறி யார்கள்அது தானும்
பாயுங்கலை பனிரெண்டினி லுண்டாகிய பருவம்
பாரும்அறி யாதுபனி ரெண்டின்செயல் கண்டு
நாயின்கடை கெட்டாய் வழிபாடும்முதற் பெற்றாய்
நாள்கோள் பலவற்றாய் கொலைகளவென்றது மற்றாய்
வாயும்வல தற்றாய்உயிர் வீடும்நெறி யற்றாய்
மண்ணின் வரவற்றாய் இனிபொன்னம் பலமனனே

பாடல்-11

கலையாகிய பிறவிக்கடல் அலையாம லுழன்றேன்
கற்கும்பல சமயங்களும் தர்க்கங்களும் விட்டேன்
நிலையாதெனப் பொருள்செல் வமும்நினைவும் பிறர்க்கிட்டேன்
நித்தம் செயும் நியமங்களும் நேமங்களு மற்றேன்
தொலையாத உறக்கத்தொடு சுகதுக்கமு மற்றேன்
துணையாகிய ஞானக்கடல் மூழ்குந்துறை கண்டேன்
அலையாம லிருக்கும்மன மதிலேகுடி கொண்டேன்
ஆனந்தம் வெளிப்பட்டபின் நானென் றறியேனே.

பாடல்-12

உருவானது விந்தின் பெயர் குருவானது ஞானம்
உடலுக்கு யிரீறாதி லொருநான்க னுள்முதலும்
குருவானது முனைமீதினி லணுவாகிய வெளியிற்
குடியாகிய பதிகண்டவர் அருள்வாத வூரரே
ஒருவாசக திருவாசகம் புவிமீதில் மகிழ்ந்தே
உரைசெய்தனர் தமிழ்த்தாழிசை நெறியின்படி நின்றோர்
கருவாசலி லணுகாமலே பிறவாநெறி பெறுவார்
கடவுட்செய லறியாதவர் கருவாசலிற் புகுவார்.

திருச்சிற்றம்பலம்

பாடல்களைப் படித்து விட்டீர்களா? 

பனிரெண்டாம் பாடலில் “கருவாசலில் அணுகாமலே பிறவா நெறி பெறுவார்கள், கடவுள் செயல் அறியாதவர் கரு வாசலில் புகுவார்” என்று சொல்கிறார் பெருமானார்.

பெண்ணின் கருப்பையிலே மீண்டும் மீண்டும் தரித்து, உடல் பெற்று, பின் உயிர் பெற்று, பூவுலகிலே கொடியதாம் இல் அற வாழ்க்கையில் வீழ்ந்து உழன்று செத்துப் போவார்கள் கடவுளின் செயல் இன்ன தானென்று அறியாதவர்கள். மீண்டும் கருப்பையிலே தங்கி, பூலோக வாழ்க்கை வாழாமல் பிறவாது வாழ்வார்கள் கடவுளின் செயல் இன்னதென்று அறிந்தவர்கள் என்கிறார் பெருமானார்.

கடவுளின் செயல் என்னவென்று அறிய நல்லதொரு குருவினைத் தேடிக் கண்டடையுங்கள். அவர் தான் உங்களுக்கு ஏற்றவாறு வழி நெறி காட்டி அருள் புரிவார்.

வாழ்க வளமுடன்...!

Wednesday, May 20, 2020

இ.எம்.ஐ தள்ளி வைப்பு – ஓர் அலசல்

நண்பர்களே,

இந்திய அரசு இ.எம்.ஐ தள்ளி வைப்பு அறிவிப்பு வெளியிட்ட நாள் மார்ச் 25ம் தேதிக்குப் பின்னால். என்ன சொன்னார்கள்? மார்ச், ஏப்ரல், மே மாதம் இ.எம்.ஐ கட்ட வேண்டாம் என்றார்கள் அல்லவா? உங்களுக்குத் தெரியும், மார்ச் மாத இ.எம்.ஐ பெரும்பாலும் இருபது தேதிக்குள் வசூலித்திருப்பார்கள். பத்து பர்சண்டேஜ் ஆட்கள் கட்டி இருக்க மாட்டார்கள். ஆனால் பெரும்பாலும் மார்ச் மாதம் இ.எம்.ஐ கட்டப்பட்டிருக்கும். ஆனால் என்ன சொன்னார்கள். மூன்று மாதம் இ.எம்.ஐ கட்ட வேண்டியதில்லை என்றார்கள். உண்மை என்ன? இரண்டு மாதம் மட்டுமே இதன் உண்மையான அர்த்தம் அல்லவா?

சரி, கட்டாத இ.எம்.ஐ மீண்டும் கட்ட வேண்டும். எப்போது? என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? மூன்று மாதம் இ.எம்.ஐ கட்டணத்தை அவர்கள் டாப் அப் செய்திருக்கிறார்கள். அதாவது கடன் தொகையுடன் சேர்த்து விட்டார்கள். மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இந்த மூன்று மாத இ.எம்.ஐ கடன் தொகை எப்போது கட்டுப்படுகிறதோ அப்போது வரை வட்டி சேர்த்து வசூலிக்கலாம் என அறிவித்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. வங்கி நட்டமாகி விடக்கூடாது என்று தான் நினைக்கிறது.

இப்போது ஒருவர் வீட்டுக்கடனுக்காக மாதம் நாற்பதாயிரம் கட்டுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று மாதத்தின் மொத்த இ.எம்.ஐ ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய். ஆனால் வீட்டுக்கடன் கட்ட வேண்டிய வருடம் பத்து வருடம் என்றால் பதினோராவது வருடத்தில் இந்த இ.எம்.ஐ சேர்க்கப்பட்டு, அதனுடன் வட்டியும் வசூலிக்கப்படுகிறது. ஒரு இலட்சத்துக்கு இருபதாயிரம் ரூபாய்க்கு, பத்தாவது வருடம் கடன் கட்டி முடிக்காமல், மேலும் மூன்று மாதங்கள் இ.எம்.ஐ சேர்த்துக் கட்ட வேண்டும். அப்போது இந்தத் தொகையுடன் இன்னும் மூன்று லட்ச ரூபாய் வட்டியும் சேர்த்துக் கட்ட வேண்டும். கடன் தள்ளி வைக்கப்படுகிறது எனும் மாய அறிவிப்பின் பின்னணியின் உண்மை இதுதான்.

இ.எம்.ஐயை இப்போதே கட்டி விட்டால அரசின் இந்த வலையிலிருந்து தப்பி விடலாம். ஆனால் இப்போது கட்ட முடியாது. வேலையில்லை, தொழில் நடக்கவில்லை, சம்பளத்திலும் பிடித்தம் செய்து விட்டார்கள்.

மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலில் அரசு கடன் இ.எம்.ஐ தள்ளுபடி செய்திருந்தால் மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு எனச் சொல்லி இருக்கலாம். அதைச் செய்யாமல் தள்ளி வைப்புச் செய்திருக்கிறார்கள். தள்ளி வைப்புச் செய்திருந்தாலும் வட்டி வசூலிக்க வேண்டாமென்றுச் சொல்லி இருக்கலாம். ஆனால் அதையும் செய்யவில்லை. அதற்கு குஜராத்திகளாகப் பிறந்திருக்க வேண்டும். தள்ளுபடியே செய்திருப்பார்கள்.

அதற்குள் ஆகா, பாருங்கள், பாருங்கள்.. இந்திய அரசு எப்படியெல்லாம் சிந்தித்து மக்களுக்கு நன்மை செய்கிறது என? என மகிழ்ச்சியில் துள்ளினார்கள், ஆடினார்கள், பாடினார்கள், புகழ்ந்தார்கள். உலகமே அதாவது அமெரிக்காவே பாராட்டுகிறது என்று புளகாங்கிதமடைந்து மகிழ்ந்தார்கள்.

ஆனால் உண்மையோ அவ்வாறு இல்லை.

இன்னொரு விஷயம். வீட்டுக்கடனோ அல்லது கார்கடனோ எது வாங்கி இருந்தாலும், இ.எம்.ஐ கட்டும்போது, வட்டி தான் வசூலிக்கப்படுகிறது. பத்து வருடம் இ.எம்.ஐ என வைத்துக் கொள்ளுங்கள். ஒன்பது வருடம் கட்டி விட்டீர்கள், பத்தாவது வருடம் இ.எம்.ஐ கட்டவில்லை எனில் வங்கி கவலைப்படாது. ஏனெனில் வங்கிக்கு வர வேண்டிய வட்டி வந்து விட்டது. அசல் வீடாகவோ அல்லது காராகவோ இருக்கும். கடன் கட்டவில்லை என சொல்லி வீட்டை அல்லது காரை ஏலம் விட்டு வசூலித்து விடுவார்கள். வீடு என்றால் விலை அதிகமாக அல்லவா இருக்கும். எந்த வகையிலும் வங்கிக்கு நட்டமே உண்டாகாது என்பதை மனதில் கொள்ளுங்கள். இது எல்லாமும் மக்களின் உழைப்பு. அரசோ, வங்கியோ மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்வதில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.

அடுத்து இன்னொரு சம்பவம்.

மாஸ்க் ஏற்றுமதி தடை பற்றி அலசலாம்.

உலகெங்கும் இப்போதைய டிமாண்ட் என்ன?

மாஸ்க்.

தையல் மிஷின் வைத்திருக்கும் அத்தனை பேரும் மாஸ்கை தயாரிக்கலாம் அல்லவா? ஜட்டிக்கு ஆகும் துணியை விட குறைந்த துணி தான் ஆகும். அதை இந்தியாவில் இருக்கும் ஏழை, எளியவர்கள் அனைவரும் தயாரிக்கலாம் அல்லவா? ஒரு ஏழைப்பெண் வைத்திருக்கும் தையல் மிஷின் மூலமாக மாஸ்க் தயாரித்து விடுவார்.

மாஸ்க் ஏற்றுமதிக்கு தரக்கட்டுப்பாட்டு விதிகளை உருவாக்கி, தயாரிப்பு, ஏற்றுமதிக்கு அனுமதி தந்திருந்தால் அரசுக்கும் வருமானம் வந்திருக்கும். மக்களுக்கும் வருமானம் வந்திருக்கும். ஏற்றுமதி தொழிற்சாலைகள் குறைந்த பட்ச ஆட்களை வைத்துக் கொண்டு இயங்கி இருக்கும். வீட்டுக்குள் இருந்து கொண்டு சம்பாதிக்க மக்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் உதவி செய்து, பொருளாதார இறக்கத்தில் கொஞ்சமேனும் சேமித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்ததா மத்திய அரசு?

உண்மையில் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டியது மருந்துப் பொருட்களுக்கு. ஆனால் நம் உலகப் புகழ் அரசு என்ன செய்தது? மாஸ்க் ஏற்றுமதியை தடை செய்திருக்கிறது.

அது மட்டுமா? 20 லட்சம் கோடி திட்டம் அறிவித்திருக்கிறது அரசு?
இந்திய திரு நாட்டில் 20 லட்சம் கோடி பணம் எங்கே அய்யா இருக்கிறது எனக் கேளுங்களேன் உங்கள் அரசியல் நண்பர்களிடம்?

நண்பர்களே, இந்திய அரசு இந்திய மக்களுக்கு இந்த இக்கட்டான சூழலில் என்ன செய்திருக்கிறது என சிந்தித்துப் பாருங்கள்.

இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் நம்பர் ஒன்றில் இருந்த தமிழகம் இப்போது என்ன ஆகி இருக்கிறது தெரியுமா?

புரியும்படிச் சொல்ல வேண்டுமெனில் தமிழகத்தில் இருந்தவர்கள் 100 ரூபாய் தினம் சம்பாதித்தார்கள். பிற மா நிலத்தவர்கள் 35 ரூபாய் சம்பாதித்தார்கள். இன்று பிற மாநிலத்தவர் 100 ரூபாய்க்கு உயர்ந்து விட்டார்கள். தமிழகம் 100 ரூபாயில் நிற்கிறது.

யார் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதும், அது எப்படி நடந்தது என்பது பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இன்னும் இருக்கிறது தொடர்ந்து இணைந்திருங்கள்.

நம் வாழ்வியல் நடைமுறையில், நம் குழந்தைகளிடம் சொல்லித் தர வேண்டிய அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்று எழுதப் போகிறேன். மறந்து விடாமல் நீங்களும், உங்கள் குழந்தைகளும் கற்றுக் கொள்ளுங்கள்.

விரைவில் …

வாழ்க வளமுடன்…!

Sunday, May 17, 2020

நிலம் (65) – விவசாய நிலங்கள் வாங்குவது எப்படி?


கொரானாவில் தப்பித்து விடலாம் போல. ஆனால் இந்த இந்தியப் பொருளாதார திட்டங்களிடமிருந்தும், தினந்தோறும் வரும் தமிழக அரசின் அறிவிப்புகளைப் புரிந்து கொண்டும், வாழ்வியலை நகர்த்திச் செல்வது பெரும் பாடாய் இருக்கிறது.

ஒவ்வொரு அரசியல்வாதியும் கல்லூரிகள், பள்ளிகள் வைத்திருக்கின்றார்கள். பலர் பள்ளி, கல்லூரிகளில் முதலீடுகளை ரகசியமாகச் செய்திருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையினரின் செயல்பாடுகளைக் காணும் போது சந்தேகம் எழுகிறது.

குழந்தைகள் மீது கொரானா தொற்று எனும் கத்தியைத் தொங்க விடுகிறது கல்வித்துறையின் அறிவிப்புகள். கொரானாவில் இருந்து தப்பித்து வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்துதான் கல்வியை வளர்க்க வேண்டுமா? அப்படி என்ன அவசரம் ஏற்பட்டு விட்டது?

இயற்கைப் பேரழிவு நடந்து கொண்டிருக்கும் போது, நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்காத போது ஏன் இப்படியான அவசரத்தை தமிழக கல்வித்துறை காட்டுகிறது என்று சிந்தித்தால், கல்வி நிலையங்கள் வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் தானா என்றும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. ஆனால் பதில் கிடைக்குமா? கிடைக்காது. இட்லிகள்-கோடி ரூபாய் கதைதான் நினைவுக்கு வருகிறது.

எல்லாம் அந்த கதிர்-வேலனுக்கே வெளிச்சம்.

தேர்வு எழுத வரப்போகும் குழந்தைகளுக்கு கொரானா தொற்று ஏற்பட்டு, தொடர்ந்து விபரீதம் ஏற்பட்டால் தமிழக கல்வித்துறை இரங்கல் செய்தி வெளியிட்டு, நிவாரணம் கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகளின் உயிர்?

கதிர்வேலா, கதிர்வேலா கொஞ்சம் கருணை வை தமிழக குழந்தைகள் மீது. 

கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாடசாமி, தமிழக குழந்தைகளைக் காப்பாற்றி அருளும்.

***
அன்பு நண்பர்களே,

இந்த கொரானா லீவில் பெரும்பாலானோர் விவசாய நிலம் வாங்குவது பற்றி தொலைபேசினீர்கள். உங்கள் அனைவருக்கும் வணக்கத்தையும், அழைப்புக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயத் தொழில் – காதலியைப் பார்த்துக் கொள்வது போல இருக்க வேண்டும். ஒரு நாள் கவனம் இல்லையென்றாலும் மகசூல் குறைந்து போகும்.

உங்களுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லப் போகிறேன்.

முன்பு பெருநடவுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவார்கள். வீட்டில் விதை நெல் சி.ஆர் குதிருக்குள் வைத்திருப்போம். வெயிலில் காய வைத்து, சூடு ஆறியவுடன், சணல் மூட்டையில் கட்டி மாலையில் குளத்துக்குள் ஊற வைப்போம். ஒரு நாள் பூராவும் குளத்துக்குள் ஊறிக் கொண்டிருக்கும். இரண்டாம் நாள் மாலையில் எடுத்து வந்து தண்ணீரை வடிய விட்டு, விதை நெல் மூட்டைகளின் மீது மேலும் பல சணல் சாக்குகளைப் போட்டு இறுக்கமாக மூடி வைப்போம். மீண்டும் மறுநாள் மாலையில் குளத்துக்கு கொண்டு சென்று நீரில் முக்கி, மீண்டும் எடுத்து வந்து, சாக்குகளைப் போட்டு சூடாக இருக்கும் படி மூடி வைப்போம். மறுநாள் நெல்மணிகளில் இருந்து வெண் நிறத்தில் முளை வெளி வந்திருக்கும்.

இதற்கிடையில் நாற்றங்கால் சேறு அடித்து, இலை தழைகளைப் போட்டு நெய் கணக்காக மண்ணை சேறாக்கி வைத்திருப்பார்கள். விதை நெல் மணிகளை நாற்றங்காலுக்குள் பாவி, நீர் விட்டு வளர்த்து – வெகு கவனமாக பூச்சிகள் தீண்டா வண்ணம் பாதுகாத்து, உரமிட்டு வளர்த்து அதன் பிறகு நாற்றுக்களைப் பறித்து வயல்களில் நட்டு வளர்த்து, அது வளர்ந்து நெற்மணிகளை வெளியில் தள்ளும் போதுதான், அந்த விதை நெல்லின் மகசூல் எப்படி என்று தெரிய வரும்.

சி.ஆர் வகை நெல் ஏக்கருக்கு (100 செண்ட்) 36 மூட்டைகள் (60 கிலோ) கிடைக்கும். விதை நெல்லின் தரம் குறைவானால் விளைச்சல் 30 மூட்டையாகவோ அல்லது 20 மூட்டையாகவோ குறைந்து விடும். இந்த விஷயத்தை விளைச்சல் ஆனவுடன் தான் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

இப்போது புரிகிறதா விவசாயம் என்பது காதலியைப் பார்த்துக் கொள்வது போல என ஏன் சொன்னேன் என?

ஆனால் எந்தத் தொழிலும் தராத நிம்மதியை விவசாயம் தரும். கொரானா வந்தாலும் வந்தது எனது பெரும்பாலான நண்பர்கள் தோட்டத்துக்குச் சென்று குடும்பத்தோடு நிம்மதியாக இருக்கின்றார்கள்.

பத்து கத்தரிச் செடி, நான்கு வெண்டைச் செடி, அவரைக் கொடி, பூசனிக்கொடி, சுரைக்காய் கொடிகள், நான்கு தென்னை மரம், இரண்டு கொய்யா மரங்கள், வாழை, சப்போட்டா மரம் இரண்டு, நாவல் மரம் ஒன்று, மாமரம் ஒன்று – அரை ஏக்கர் தோட்டம் அதில் 400 சதுர அடியில் ஓடு வேய்ந்த வீடு – அசைவமென்றால் நான்கைந்து கோழிகள் - இது போதாதா நான்கு பேர் நிம்மதியாக வாழ?

ஐந்து தேங்காயை விற்றால் ஒரு கிலோ அரிசி. ஒரு நாளைக்கு போதும். இரண்டு கத்தரி, இரண்டு முருங்கைக்காய் – சாம்பாரோ குழம்போ ஆச்சு. கூட்டா பொறியலா? என்ன காய் தோட்டத்தில் கிடைக்கிறதோ அதைச் செய்தால் போதும். நாலு தென்னமரமும், கொஞ்சம் மரங்களும் போதும்  கேஸ் எதுக்கு? அசைவமா? நாட்டுக்கோழி கோழி இருக்கே. குளத்துப் பக்கம் தூண்டிலோடு போனால் நாலு கெண்டை, இரண்டு கெளுத்தி, நான்கு கொறவை மீன் – குழம்பு ரெடி. தீபாவளி பொங்கலா மட்டன். பசு மாடு இரண்டு இருந்தால் நெய், மோர், வெண்ணை.

அப்புறமென்ன? பிள்ளைகளைப் படிக்க வைக்க அரசு பள்ளி. சமூகம், சுற்றம், நட்பு போதும். அமைதியான வாழ்க்கை. ஏசி எதற்கு? கார் எதற்கு? கொஞ்சம் காசு சேர்த்தால் மாதம் ஒரு கோவில், இன்னும் கொஞ்சம் சேர்த்தால் வருடம் ஒரு சுற்றுலா.

நிம்மதி நம்மிடம் அல்லவா?

கொரானாவாவது தொற்றாவாவது?

தோட்டத்துக்கு செல்ல கொரானாவால் முடியுமா?

இனி விவசாய நிலம் வாங்குவது பற்றி பார்க்கலாம்.

முதலீடு எவ்வளவு? – இது உங்களின் தினசரி வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது

யார் விவசாயம் செய்வது? நீங்களா? இல்லை உறவினரா? இல்லை மேஸ்திரி மூலமா? – நீங்களாக இருக்கும் பட்சத்தில் கவலை இல்லை. ஆனால் உறவினர் அது அப்பாவாகவோ இல்லை மாமன் மச்சான்களாகவோ இருந்தால் – அவர்களின் அனுபவம், வயது, நிர்வகிக்கும் தன்மை ஆகியவை அவசியம் விசாரிக்கவும். மேஸ்திரி மூலம் எனில் இன்னும் கூடுதல் கவனம் தேவை.

விவசாயம் தான் இனி உங்கள் வேலை எனில் எந்தக் கவலையும் வேண்டியதில்லை. ஆனால் ஆட்களை வைத்து நிர்வாகம் செய்யலாம் எனில் யோசித்து, அதற்கேற்ப ஆட்கள் கிடைத்தால் செய்வது நலம்.

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற, உங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலோ அல்லது உங்களின் விருப்பமான ஊரிலோ நிலம் வாங்கினால் – நிர்வாகச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், விவசாயச் செலவுகள் என எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

விவசாயத்தில் நிம்மதியான, பராமறிப்புக் குறைவான பயிர்கள் உண்டு. தென்னை மரம் அது தொடர்பான விவசாயம் என்பது குறைந்த அளவு ஆட்களை வைத்து நிர்வாகம் செய்யலாம். பணப்பயிர் விவசாயத்தில் கவனம் அதிகம் செலுத்தினால் கோடிகளில் லாபம் ஈட்டலாம். 

இதெல்லாம் உங்களின் விருப்பம், சூழல் சார்ந்த விஷயங்கள். எந்த மாதிரியான விவசாயம் செய்யப் போகின்றீர்கள் என்பது உங்களின் எண்ணம் சார்ந்தது.

தண்ணீர் வசதி, மழை நிலவரம், மண் தன்மை, ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ற, பருவத்துக்கு ஏற்ற பயிர்கள் எவை, இப்படியெல்லாம் யோசித்து முடிவெடுக்கனும். இன்னும் அனேக காரணிகள் இருக்கிறது. அதை நாம் நேரில் சந்திக்கும் போது பேசலாம். இனி வரும் நிலம் பதிவுகளில் விவசாயம் தொடர்பான செய்திகளை எழுதுகிறேன்.

இத்தனை காரணிகளை ஆலோசித்து, முடிவெடுத்து அதன் பிறகு விவசாய நிலத்தினை வாங்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

***

லீகல், சர்வே, பத்திரப்பதிவு, பட்டா ஆகியவற்றுக்கு எங்களை அணுகுங்கள்.

மெக்கனைஸ்ட் ஃபார்ம்கள் தான் அதிகப் பிரச்சினைகள் இல்லாதவை.

விவசாயத்துக்கு அரசு கொடுக்கும் மானியங்கள், உதவிகள், இயந்திரங்கள் அதற்கான மானியங்கள் ஆகிய அனைத்து விபரங்களும் நமது நிறுவனத்தில் இருக்கின்றன. அனைத்து விபரங்களும் தரப்படும்.

நமது நிறுவனத்துடன் இணைந்து பணி ஆற்றும், பல ஆர்கானிக் விவசாய பொருட்களை உருவாக்கி வரும் பல்வேறு இணை நிறுவனங்களும், விவசாயத்துக்கு உரிய ஆலோசனைகள் தரும் வல்லுனர்களும் உண்டு.

தண்ணீர் இல்லாத காடு, கல்லும் மண்டிக்கிடக்கும் பயனற்ற பூமிகள் உங்களிடம் இருப்பின் என்னை அழைக்கவும். அப்பூமியிலிருந்து தங்கத்துக்கு நிகரான லாபம் தரும் விவசாயத்தை உருவாக்கி தருவோம்.

ஆ. அதெப்படி என நினைப்பீர்கள். அவ்வாறு உருவான நிலங்களைப் பார்வை இட என்னை அழைக்கலாம். வந்து பாருங்கள். அசந்து போவீர்கள்.

வாழ்க வளமுடன்…!

Friday, May 15, 2020

தமிழகம் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகிறதா? ஒரு அலசல்

அண்ணா தன் ஆட்சிக்காலத்தில் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்று சொன்னார். அவர் இறந்து போய் இன்றைக்கு ஐம்பது வருடங்கள் ஆயின. இன்றைக்கும் தெற்கு தேய்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கலைஞர் ஆட்சிக்கு பின்பு தமிழகத்தில் ஊழல்களுக்காக பாலங்கள் கட்டப்பட்டனவே தவிர எதிர்காலத்திற்காக இல்லை என்பது மனச்சாட்சி உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

சாலைகளும், பாலங்களும், அரசு கட்டிடங்களும் ஊழல்களின் ஊற்றுக் கண்களாகவே இருந்து வருகின்றன. சாலைகள் ஒவ்வொரு கட்சியினருக்கும் அள்ள அள்ளக் குறையா செல்வத்தை தந்து கொண்டிருக்கும் அட்சயபாத்திரம். போதாது என குடிமராமத்துப் பணி, 100 நாள் வேலைத்திட்டம் என அள்ள அள்ளக் குறையா அட்சய ஊழல் திட்டங்கள் மட்டுமே கடந்த வருடங்களாக செயலிலிருக்கின்றன.

இன்றைக்கு தமிழகத்தில் பணம் வைத்திருப்போர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் தான். தொழிலதிபர்களிடமும், மக்களிடமும் எந்தப் பணமும் இல்லை.

கடந்த பனிரெண்டு வருடமாக தமிழக தொழிலதிபர்கள் சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்து செய்யும் தொழிலை மீட்க உயிரைப் பணயம் வைத்து வருகின்றார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கின் அதிகாரத்தால் வங்கிகள் தொழிலதிபர்களின் கழுத்தை அறுக்க ஆரம்பித்தன.

மத்திய அரசும், மாநில அரசும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தை முன் வைத்து ஊழல், தனி இன பலன் ஆகியவற்றுக்காக தமிழக தொழில்களை முடக்கி வருவதை பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

சிங்கிள் விண்டோ சிஸ்டம் அனுமதி என்பார்கள்.அதில் ஆயிரம் உள்குத்துக்கள். காசு செலவாகாமல் அனுமதி கிடைக்காது. 

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழகத்தில் வட இந்தியர்கள் அனேகம் பேர் வேலை செய்ய வந்தனர். மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் இன்னும் அதிகமானோர் தமிழகம் தேடி வந்தனர். சமீபத்தில் நெய்வேலியில் பாய்லர் வெடித்ததில், அங்கு வேலை செய்த வட இந்தியர்களின் எண்ணிக்கையை பத்திரிக்கைகளில் படித்ததும் உண்மை என தெரிகிறது.

இந்த ஒன்பது வருட, காலகட்டத்தில் தமிழகத்தில் காணும் இடமெல்லாம் வட இந்தியர்கள் தெரிந்தார்கள். ஆங்காங்கே சண்டைகள், திருட்டுகள், கொலைகள், கொள்ளைகளை அவர்கள் செய்து வந்தார்கள் என்பதை தினசரி பத்திரிக்கைகள் வெளியிட்டன.

அவர்கள் அனைவரும் தமிழக தொழிற்சாலைகளில் பணியாளர்களாக பரவி தொழிலைத் திறம்பட கற்று வந்தனர். எல்லா தொழிற்சாலைகளிலும், எல்லா தொழில்களிலும் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். தொழிற்சாலைகள் மட்டுமல்ல, எல்லா தொழில்களையும் செய்து வந்தனர்.

தமிழர்கள் அந்த தொழிற்சாலைகளில் நிர்வாக பொறுப்புக்கு வந்தனர். தொழிலாளர் நிலையிலிருந்து, நிர்வாக வேலைக்கு பெரும்பாலான தமிழர்கள் உயர்ந்தனர். இதற்கிடையில் அம்மா அரசு, தன் தமிழக குழந்தைகளுக்கு (தமிழர்களுக்கு) சாராயத்தை புகட்டி (உபயம்: ஆனந்த விகடன் அட்டைப்படம்) அவர்களின் திறமை, கல்வி, உடல் திறன் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, விதவைகளை உருவாக்கியது தன் பங்குக்கு. போதாது என பிராமணீய இயக்குனர்கள் (இயக்குனர் சங்கர்-காதலன் திரைப்படம்) குடி குடும்பத்தோடு குடிக்க வேண்டியது என தமிழர்களுக்கு பாடம் எடுத்தனர்.

இப்படியான சூழலில் கொரானா உலகை ஆள ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. இந்த நாட்களில் தமிழகத்தில் வாழ்ந்த வட இந்தியர்கள் எவரும் பசியால், பட்டினியால் செத்துப் போகவில்லை என்பது டிவி செய்திகள் சொல்லின. ஆங்காங்கே ஒரு சிலர் உணவின்றி இருந்தால், அங்கு சமூக அன்பர்கள் சென்று உணவளித்து அவர்களைப் பாதுகாத்தனர். தமிழ் நாட்டில் வட இந்தியர் எவரும் பசியால் சாகவில்லை. பாதுகாப்பாக இருந்தனர். இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே இருந்தால் தொழிற்சாலைகளை இவர்களை வைத்து இயக்கி இருக்கலாம். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. சொல்லி வைத்தாற் போல அனைவரும் அவரவர் ஊர்களுக்கு கிளம்ப முயன்றனர்.

கொரானா தொற்றின் தீவிரம் அதிகமாகிக் கொண்டிருக்கின்ற வேளையில் வட இந்தியர்கள் அனைவரும் தங்கள் ஊருக்கு கிளம்புவதற்கு போராட்டங்களை அறிவிக்கின்றனர். தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தனர்.

மத்திய அரசு ரயில்களை இயக்கியது.  காங்கிரஸ் கட்சி அவர்களுக்கான ரயில் கட்டணத்தை தருவதாக அறிவித்தனர். நாடு இருக்கும் நிலையில் மத்திய அரசு உடனே 85 சதவீதம் கட்டணத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கும் என உத்தரவிட்டது.

கொடுமை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியிடம் இருக்கும் பணத்தை இந்த நேரத்தில் செலவு செய்கிறார்களே என நினைத்து அதற்கு ஒரு நன்றியைத் தெரிவித்து இருக்கலாம். மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் தான் தள்ளுபடி கொடுத்தார். நம் பிரதமரின் அரசியல் சாணக்கியதனம் எப்படியானது என்று பாருங்கள்?

காங்கிரஸ் கட்சியினரின் பணம் அங்கேயே இருக்கிறது. ஊர் கூடித் தேர் இழுக்கலாம். ஆனால் இழுக்க வருபவர்களையும் அரசியல் நோக்கில் தடுக்கும் மாபெரும் சிந்தனையாளரானார் நம் பாரதப் பிரதமர். கட்சியினர் செலவு செய்தால் அது ஊழல் பணம் என்பதாக நினைத்துக் கொண்டு வேண்டாம் என்று சொன்னார்களோ என்னவோ தெரியவில்லை.

தமிழகத்தில் வேலை செய்து வந்த வட இந்தியர்கள் பெரும்பாலானோர் பீகார், அசாம் போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டனர். இங்கிருப்பதோ கொஞ்சம் பேர். இனி அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று விடுவார்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கொரானா இருந்தாலும் தொழிற்சாலைகளை இயக்குங்கள் அதுவும் 33 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்டு என்று அறிவிக்கின்றார்கள் தமிழக ஆட்சியாளப் பெருந்தகைகள்.

சேவைத்துறையில் வேண்டுமானால் 33 சதவீதம் செல்லுபடியாகும். ஆனால் ஒரு தொழிற்சாலை இயங்க வேண்டுமெனில் கேட்-டு-கேட் ஆட்கள் வேலை செய்தால் இயக்க முடியும். வெறும் 33 சதவீதத்தினரை வைத்துக் கொண்டு எப்படி இயக்குவது? பாய்லர் வெடிக்கும். விபத்து தான் ஏற்படும். சமீபத்தில் ஆந்திராவில் அப்படித்தான் நடந்து மக்கள் செத்தார்கள்.

ஒரு அறிவிப்பின் இலட்சணம் இது. அதன் காரணமாக மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்பது நிதர்சனம்.

வட இந்தியர்கள் அவரவர் ஊர்களுக்குச் சென்று சேர்ந்த பின்னர் மத்திய அரசு 20 லட்சம் கோடி (ரிவர்ஸ் பொருளாதாரம்) ரூபாய்க்கு திட்டத்தை அறிவிக்கிறது. அதற்கு பல்வேறு ரைடர்ஸ்களையும் சேர்க்கிறது.

இனி நிறுவனங்களுக்கு பணம் கிடைக்கும் என்கிறார்கள். வேலை துவங்கலாம் என நம்பிக்கை ஊட்டினார்கள். சரி, பணம் கிடைக்கும்? வேலை செய்ய ஆட்கள் எங்கே?

நிர்வாகத்தில் இருந்தவர்கள் கீழ் பணிகளை செய்வதற்கு உடனே சாத்தியமாகுமா என்றால் நிச்சயம் முடியாது. கிட்டத்தட்ட ஒன்பது வருடமாக தொழிலை நன்கு கற்றுக் கொண்ட வட இந்தியர்கள் இப்போது தமிழகத்தில் இல்லை. இனி தொழிற்சாலைகளை இயக்குவது எப்படி? புரிகிறதா நண்பர்களே?

தமிழகத்தின் அத்தனை தொழில்களையும் கற்றுக் கொண்ட வட இந்தியர்கள் அவரவர் ஊர்களில் இருக்கின்றார்கள்.

இடையில் ஒரு சின்ன விஷயம்.

முன்பு கோவை, கரூர் பக்கம் நூல் மில்களில் வேலை செய்வதற்கு திண்டுக்கல் பக்கம் இருந்து ஆட்களை அழைத்து வருவார்கள். அடுத்த கட்டமாக ஏன் நாம் தொழிற்சாலைகளை திண்டுக்கல் பக்கம் கட்டக்கூடாது என நினைத்து, திண்டுக்கல் ஏரியாக்களில் நூல் மில்களை உருவாக்கினர். வேலை செய்ய ஆட்கள் இருக்கும் பகுதியில் தொழிற்சாலைகளை உருவாக்குவது என்பது புத்திசாலித்தனமானது. யார் வேண்டுமானாலும் தொழிற்சாலைகளை உருவாக்கலாம். ஆனால் வேலை செய்ய ஆட்கள் வேண்டுமல்லவா?

சரி மீண்டும் விட்ட இடத்திலிருந்து.

எம்.எஸ்.எம்.இகளுக்கு நிதி உதவி என்கிற மத்திய அரசின் பொருளாதார  மீட்டெடுப்பு அறிவிப்பு யாருக்குச் சாதகமாக இருக்கும்? வட இந்தியாவில் தொழில்களைக் கற்றுக் கொண்டவர்கள் உள்ளனர். இனி அங்கிருக்கும் தொழிலதிபர்கள் புதிய ஆலைகளை உருவாக்குவார்கள். வேலை வாய்ப்புகள் பெருகும். ஆளும் பிஜேபியினர் இனி தொழில்களை வட இந்தியாவில் உருவாக்குவார்கள். வங்கி வட்டி இல்லை, சொத்துக்கள் பிணை இல்லை. இப்படி பலப்பல பலன்களை மக்களின் வரிப்பணத்தில் வெகு இன்பமாக அனுபவிக்கப் போகின்றவர்கள் வட இந்தியர்கள்.

ஆனால் இங்கோ, ஸ்கில்டு லேபர்கள் இல்லாமல் தொழிற்சாலைகள் இயங்காமல் இருக்கும். இனி புதிய ஆட்களுக்குப் பயிற்சி கொடுத்து, நிர்வாகத்தில் இருந்தவர்களை கீழ்  நிலைப் பணிகளுக்கு பழக்கப்படுத்தி தொழிலை விரிவாக்குவது என்பது எவ்வளவு கடினமானது.

இருபது லட்சம் கோடி திட்டம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான பலன்களை அனுபவிக்கப் போவது வடக்கு. வழக்கம் போல தமிழகமும், அதன் தொழிலும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பே. காலத்தின் கோலமாக என்னால் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வடக்கிலிருந்து ஏவப்படும் ஒவ்வொரு அழிவாயுதமும் இங்கு பெரும் பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

ஆட்சியிலிருப்பவர்களாலும், எதிர்கட்சிகளாலும் பேச முடியா ஊழல் மன்னிக்கவும் சூழலில் இருக்கின்றார்கள். எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசினால் ரெய்டு, கைது. அதற்கேற்ப மத்திய அரசு சட்டங்களை திருத்தி வைத்திருக்கிறது. எதிர்க்க வேண்டியவர்கள் தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக தமிழகத்தைப் பலி கொடுக்கின்றார்கள். ரெய்டு, கைதுகளுக்கு பயப்படாத நேர்மையாளர்களாக இங்கு எந்த அரசியல்வாதியும் அதிகாரத்தில் இல்லை என்பது கொடுமை.

இதை எல்லாவற்றையும் தாண்டி எம் தமிழகம் துணிவு கொண்டு மீண்டு எழும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

Saturday, May 9, 2020

இந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன?


நண்பர்களே,

தினக்கூலிகள் பற்றி நமக்குத் தெரியும். சாலைகளின் ஓரமாய் மேஸ்திரிக்காகவும், அவர் ஒதுக்கும் வேலைக்காகவும் காத்துக்கிடப்போரை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம். தினமும் வேலை செய்து கிடைக்கும் கூலியில் டாஸ்மாக் பறித்துக் கொண்டது போக, மீதி உள்ள காசில் சாப்பிடுபவர்கள் 130 கோடியில் 110 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்களை நாமெல்லாம் படித்திருக்கிறோம். மீதி இருக்கும் 20 கோடியில் நாமும் ஒருவர் என்று மகிழ்ச்சி கொண்டிருப்போம்.

இந்தியாவின் கடன் தொகை 85 லட்சம் கோடி, தமிழகத்தின் கடன் தொகை 3.5 லட்சம் கோடி. ஒரே மாதம், வரி வருமானம் போதவில்லை என்ற உடனே இந்தியாவின் பிரதமர் டிவியில் உரை ஆத்த வரவில்லை. தமிழ்நாட்டிலோ சம்பளம் கட். இன்னும் ஒரு மாதம் வரி வருவாய் இல்லையென்றால் நாடு மூழ்கிப் போய் விடும். அரசு அதிகாரிகளுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ராணுவ வீரர்களுக்கும் கொடுக்க முடியாது. என்ன ஆகும் அதன் பின்னால்? நாடு ஸ்தம்பித்துப் போய் விடும். ஆக தினமும் வரி வசூல் என்பது நாட்டின் மூச்சு. அதாவது ஒரு தினக்கூலி கதை.

இப்போது சொல்லுங்கள்.

யார் அன்றாடம் காய்ச்சி?

இதற்கிடையில் ஒரு விஷயம். இந்திய மக்கள் தொகையில் சுமார் பத்து லட்சம் பேரிடம் நமது பணமெல்லாம் முடங்கிக் கிடக்கிறது. கொங்குப்பக்கம் ஒரு சிலரிடம் ஐம்பத்தாயிரம் கோடிக்கும் மேல் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்தப் பணத்தைத் தோண்டி எடுத்தால் ஐந்து வருடங்கள் வரி வசூலிக்காமலே இந்தியாவை ஆளலாம். மக்கள் எல்லோரும் மகிழ்வாக இருப்பார்கள். அந்த பத்து லட்சம் பேர் யார் யார் என எல்லோருக்கும் தெரியும். வசூலிப்பதும் எளிதுதான்.

யார் செய்வது? செய்வார்களா? செய்யமாட்டார்கள்.

மக்களுக்கு வருமானமே இல்லை. ஆனால் அரசு விலையேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்? இது எரியும் வீட்டில், ஆக்சிடெண்டில் பிடுங்கும் திருட்டு புத்தி அல்லவா? மக்கள் நலம் பற்றி நல்ல சிந்தனை உள்ளவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.

இந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி முதலீட்டுக்கு வருவோம்.

உலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் விரல் நுனியில். கட்டுப்பாடுகளற்ற இணையவெளியில் கிடைக்காத விஷயங்களே இல்லை. ஒவ்வொரு நாட்டின் அத்தனை விபரங்களும் உட்கார்ந்த இடத்திலிருந்து பெற்று அதை ஒப்பீடு செய்து விடலாம்.

இந்தக் காலத்திலும் பொய்யாகப் பேசியே மக்களை ஏமாற்றும் ஏமாளிக்கூட்டம் திரிந்து கொண்டுதான் இருக்கின்றது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். எட்டு நாள் தேவையில்லை. எட்டு நொடி போதும் பொய்யா உண்மையா என தெரிந்து கொள்ள.

உலக நாடுகளில் பெரும்பான்மையாக இருப்பவை முஸ்லிம் நாடுகளும், கிறிஸ்துவ நாடுகளும். மற்றபடி இரண்டே இரண்டு இந்து(??) நாடுகள் மற்றும் மதம் சாரா ஒரு சில நாடுகள்.

இந்தியாவை ஆளும் பாஜக கொண்டு வந்திருக்கும் சமீபத்திய சட்டமான சிட்டிசன் சிப் அமெண்ட்மெண்ட் படி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பும், இந்தியர்கள் கணக்கெடுப்பும் பல இடங்களில் பல வித சர்ச்சைகளையும், தொடர்ந்து போராட்டங்களையும் உருவாக்கியது. கொரானாவினால் இப்போதைக்கு அந்த இரு விஷயங்களுக்காக போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

போராட்டம் என்றாலே பிரிட்டிஷ்காரர்கள் இந்திய சுதந்திரபோராட்டத்தினை வெறி கொண்டு அடக்கியது போல ஜன நாயக அரசும் நடந்து கொண்டதை நாமெல்லாம் பல்வேறு டிவி செய்திகள் மூலம் ஏற்கனவே தெரிந்து இருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் கணக்கெடுப்பு வெகு முக்கியமானது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியர்கள், வெளிநாட்டினர், அகதிகள், தஞ்சமடைந்தவர்கள் எனும் துல்லிய கணக்கு விபரங்கள் தேவை. இந்த தரவுகள் இனி வரும் காலத்தில் அவசியம் தேவைப்படும், அதே நேரத்தில் அரசு கட்சி சார்பற்ற, அரசின் கட்டுப்பாடுகளற்ற சுதந்திர அமைப்பின் வழியாக இவற்றைப் பாதுகாத்திட சட்ட வரையறைகள் செய்தல் அவசியம். இல்லையெனில் அரசியல் பழிவாங்கல்களும், அரசியல் கொலைகளுக்கும் இத்தரவுகள் இடமளித்து விடும் அபாயம் நிச்சயம் உருவாகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய நலமற்றர்களாக இருப்பார்கள் என்று மனிதகுலம என்றைக்கும் நம்பி விட கூடவே கூடாது.

இத்தரவுகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி வசம் இருந்தால், அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் எதிர்கட்சி ஆட்களையோ அல்லது விமர்சனங்கள் செய்பவர்களையோ இல்லாமல் மாற்றி விடலாம். நான் இந்தியன் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் தனிமனிதனிடம் வந்தால், அதை ஏற்கவோ நிராகரிக்கவோ அரசுக்கு அதிகாரம் இருந்தால் என்ன ஆகும்? அவன் அழிக்கப்படுவான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியான நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கும் என்பது 100 சதவீதம் உண்மை.

ஆனால் அகதிகள் விஷயத்தில் அரசு இன்னும் சில கவனமான ஊள்ளீடுகளை சேர்த்து, மதம், இனம், மொழி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

சிறுபான்மையினராக குறிப்பிடப்படும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் இச்சட்டத்தினை ஆதரரிக்கவில்லை என்பது உண்மை. அதற்கான போராட்டங்களை அவர்கள் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நடத்தி இருக்கிறார்கள்.

இப்படியான நிலை இருக்கையில் பெரும்பான்மை நாடுகளைக் கொண்ட முஸ்லிம் மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும், கிறிஸ்து மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும் எப்படி இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருவார்கள் என்று நம்ப முடியும்? முதலீட்டாளர்கள் பெருத்த லாபம் கருதி முதலீடுகள் செய்வார்கள். இருப்பினும் முதலீட்டாளர் தங்கள் முதலீடுகளைச் செய்யும் முன்பு பல்வேறு தரவுகளை ஆராய்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் பிறப்பின் போது, அவனின் மதம் நிர்ணயிக்கப்பட்டு அதன் வழி வளர்க்கப்படுகிறான். மதச்சார்பு கொண்ட மனிதன், தன் மதத்தினருக்கு இந்தியாவில் வாழ அனுமதிப்பார்களா என்ற சூழல் இருக்கிறது என்று தெரிந்தபடியால், இந்தியாவில் எப்படி முதலீடுகள் செய்ய முன்வருவார்கள் என்று நினைக்க முடியும்? இந்தியாவை ஆளும் அரசுக்கு இனம், மொழி, மதம் முக்கியம் என்பது போல முதலீட்டாளர்களுக்கும் இருக்குமல்லவா?

அதற்கான சாத்தியக்கூறுகளை சிட்டிஷன்சிப் அமெண்ட்மெண்ட் சட்டம் குறைத்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டல்லவா?

பணக்காரனுக்கு அப்படியெல்லாம் மதம் சார்ந்த சிந்தனைகள் இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். பெரும்பான்மையான நிறுவனங்களின் தலைவர்கள் என்ன இனமோ அந்த இனத்தினருக்கு வேலையில் முன்னுரிமை கொடுத்திருப்பது உலகிற்கே தெரிந்த விஷயம். சப்பைக்கட்டு கட்ட இப்படியெல்லாம் பேசுவார்கள். ஆனால் நிதர்சன உண்மை மதம், மொழி, இனம் சார்ந்த பணியாளர்கள் என்பது.

சைனாவில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள் இந்தியாவிற்கு எப்படி வருவார்கள் என்று எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? இந்தியாவில் முதலீடு செய்தால் தான் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்று நினைத்து வருவார்கள் என்றும் சொல்வார்கள். அதெல்லாம் சாத்தியமில்லாத வெற்றுக் கூச்சல்.

இரண்டு ரூபாய் பதிவாளர்களின் பதிவுகள்  இனி முதலீட்டாளர்களுக்கு இந்தியாதான் ஒரேஅ வழி என்று சொல்கின்றன?  

இரண்டு ரூபாய் கொடுக்கும் முதலாளி மதிகெட்டவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சிட்டிசன்ஷிப் அமெண்ட்மெண்ட் இப்போதைக்கு தேவையில்லாத ஆணி. இந்த ஆணியைப் பிடுங்கி விட்டு வேறொரு மேட்டரைச் செய்தால் போதும். நினைத்த காரியம் செவ்வனே நடந்திருக்கும்.

உங்களுக்கு என்ன சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக மாறி விடுகிறார்கள் என்பதுதானே பிரச்சினை? அதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது.

ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி, இரண்டு குழந்தை பெற்றால் குழந்தைக்கு வரி கொடுக்க வேண்டுமென்று உத்தரவு போடுங்களேன். மேட்டர் ஓவர். சிறுபான்மையினர் எப்போதும் சிறுபான்மையினர் தான், பெரும்பான்மையினர் எப்போதும் பெரும்பான்மையினர்தானே?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகிறோம் பேர்வழி என சட்டம் ஒன்றினை போட்டால் மேட்டர் ஓவர். (எனக்கு எவ்வளவு கொடூர சிந்தனை என்று பாருங்கள். இதற்கு நான் பொறுப்பல்ல, வெறும் ஐடியாதான்)

கண்ணை மூடிக் கொண்டு நம்பி விட இன்னும் நாமெல்லாம் மூளையைக் கழற்றி வீசி விட்டு திரியவில்லை என்று நம்புகிறேன்.

இந்திய அரசின் இந்தச் சட்டங்கள், வெளிநாடு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்காது என நம்பலாம். ஏனெனில் உலகில் இந்தியா ஒரு சிறுபான்மை நாடு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்டிருந்தால், அந்த இரத்தத்தில் முஸ்லிம், கிறிஸ்து, கீழ்சாதி இரத்தம் இல்லையென சொல்ல முடியுமா?

உலகம் ஒரே கொடைக்குள் வந்து விட்டது. இனம், மொழி, மதம் சார்ந்து அரசுகள் இயங்க முடியாது ஆளும் அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய உத்தரவு.

இல்லை நாங்கள் இப்படித்தான் என்றால் காலுக்குதான் செருப்பே தவிர செருப்புக்கு கால் இல்லை என உலகம் நம்மை உதறி தள்ளிவிடும் அபாயம் உண்டு.

கொரானாவினால் பல நாடுகளிலும் வேலை இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இனி வேலைகள் அந்தந்த நாட்டின் பிரஜைகளுக்கே கிடைக்கும் என நம்பித்தான் ஆக வேண்டும். வெளி நாட்டில் வேலை எனும் கனவு கனவாகவே முடிந்து போகும்.

ஒவ்வொரு இந்தியருக்கும் மாதம் பத்தாயிரம் ரூபாய் சாத்தியமா? என்றால் சாத்தியம்தான். பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் பணம் கொடுக்கலாம். யாருக்கும் எந்த நட்டமும் வராது. நாட்டின் வருமானத்துக்கும் பிரச்சினை இருக்காது. அது எப்படி என்கின்றீர்களா? அது ரகசியம். எவன் கண்டுபிடிக்கின்றான் என பார்க்கலாம்.