குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, May 17, 2020

நிலம் (65) – விவசாய நிலங்கள் வாங்குவது எப்படி?


கொரானாவில் தப்பித்து விடலாம் போல. ஆனால் இந்த இந்தியப் பொருளாதார திட்டங்களிடமிருந்தும், தினந்தோறும் வரும் தமிழக அரசின் அறிவிப்புகளைப் புரிந்து கொண்டும், வாழ்வியலை நகர்த்திச் செல்வது பெரும் பாடாய் இருக்கிறது.

ஒவ்வொரு அரசியல்வாதியும் கல்லூரிகள், பள்ளிகள் வைத்திருக்கின்றார்கள். பலர் பள்ளி, கல்லூரிகளில் முதலீடுகளை ரகசியமாகச் செய்திருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையினரின் செயல்பாடுகளைக் காணும் போது சந்தேகம் எழுகிறது.

குழந்தைகள் மீது கொரானா தொற்று எனும் கத்தியைத் தொங்க விடுகிறது கல்வித்துறையின் அறிவிப்புகள். கொரானாவில் இருந்து தப்பித்து வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்துதான் கல்வியை வளர்க்க வேண்டுமா? அப்படி என்ன அவசரம் ஏற்பட்டு விட்டது?

இயற்கைப் பேரழிவு நடந்து கொண்டிருக்கும் போது, நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்காத போது ஏன் இப்படியான அவசரத்தை தமிழக கல்வித்துறை காட்டுகிறது என்று சிந்தித்தால், கல்வி நிலையங்கள் வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் தானா என்றும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. ஆனால் பதில் கிடைக்குமா? கிடைக்காது. இட்லிகள்-கோடி ரூபாய் கதைதான் நினைவுக்கு வருகிறது.

எல்லாம் அந்த கதிர்-வேலனுக்கே வெளிச்சம்.

தேர்வு எழுத வரப்போகும் குழந்தைகளுக்கு கொரானா தொற்று ஏற்பட்டு, தொடர்ந்து விபரீதம் ஏற்பட்டால் தமிழக கல்வித்துறை இரங்கல் செய்தி வெளியிட்டு, நிவாரணம் கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகளின் உயிர்?

கதிர்வேலா, கதிர்வேலா கொஞ்சம் கருணை வை தமிழக குழந்தைகள் மீது. 

கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாடசாமி, தமிழக குழந்தைகளைக் காப்பாற்றி அருளும்.

***
அன்பு நண்பர்களே,

இந்த கொரானா லீவில் பெரும்பாலானோர் விவசாய நிலம் வாங்குவது பற்றி தொலைபேசினீர்கள். உங்கள் அனைவருக்கும் வணக்கத்தையும், அழைப்புக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயத் தொழில் – காதலியைப் பார்த்துக் கொள்வது போல இருக்க வேண்டும். ஒரு நாள் கவனம் இல்லையென்றாலும் மகசூல் குறைந்து போகும்.

உங்களுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லப் போகிறேன்.

முன்பு பெருநடவுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவார்கள். வீட்டில் விதை நெல் சி.ஆர் குதிருக்குள் வைத்திருப்போம். வெயிலில் காய வைத்து, சூடு ஆறியவுடன், சணல் மூட்டையில் கட்டி மாலையில் குளத்துக்குள் ஊற வைப்போம். ஒரு நாள் பூராவும் குளத்துக்குள் ஊறிக் கொண்டிருக்கும். இரண்டாம் நாள் மாலையில் எடுத்து வந்து தண்ணீரை வடிய விட்டு, விதை நெல் மூட்டைகளின் மீது மேலும் பல சணல் சாக்குகளைப் போட்டு இறுக்கமாக மூடி வைப்போம். மீண்டும் மறுநாள் மாலையில் குளத்துக்கு கொண்டு சென்று நீரில் முக்கி, மீண்டும் எடுத்து வந்து, சாக்குகளைப் போட்டு சூடாக இருக்கும் படி மூடி வைப்போம். மறுநாள் நெல்மணிகளில் இருந்து வெண் நிறத்தில் முளை வெளி வந்திருக்கும்.

இதற்கிடையில் நாற்றங்கால் சேறு அடித்து, இலை தழைகளைப் போட்டு நெய் கணக்காக மண்ணை சேறாக்கி வைத்திருப்பார்கள். விதை நெல் மணிகளை நாற்றங்காலுக்குள் பாவி, நீர் விட்டு வளர்த்து – வெகு கவனமாக பூச்சிகள் தீண்டா வண்ணம் பாதுகாத்து, உரமிட்டு வளர்த்து அதன் பிறகு நாற்றுக்களைப் பறித்து வயல்களில் நட்டு வளர்த்து, அது வளர்ந்து நெற்மணிகளை வெளியில் தள்ளும் போதுதான், அந்த விதை நெல்லின் மகசூல் எப்படி என்று தெரிய வரும்.

சி.ஆர் வகை நெல் ஏக்கருக்கு (100 செண்ட்) 36 மூட்டைகள் (60 கிலோ) கிடைக்கும். விதை நெல்லின் தரம் குறைவானால் விளைச்சல் 30 மூட்டையாகவோ அல்லது 20 மூட்டையாகவோ குறைந்து விடும். இந்த விஷயத்தை விளைச்சல் ஆனவுடன் தான் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

இப்போது புரிகிறதா விவசாயம் என்பது காதலியைப் பார்த்துக் கொள்வது போல என ஏன் சொன்னேன் என?

ஆனால் எந்தத் தொழிலும் தராத நிம்மதியை விவசாயம் தரும். கொரானா வந்தாலும் வந்தது எனது பெரும்பாலான நண்பர்கள் தோட்டத்துக்குச் சென்று குடும்பத்தோடு நிம்மதியாக இருக்கின்றார்கள்.

பத்து கத்தரிச் செடி, நான்கு வெண்டைச் செடி, அவரைக் கொடி, பூசனிக்கொடி, சுரைக்காய் கொடிகள், நான்கு தென்னை மரம், இரண்டு கொய்யா மரங்கள், வாழை, சப்போட்டா மரம் இரண்டு, நாவல் மரம் ஒன்று, மாமரம் ஒன்று – அரை ஏக்கர் தோட்டம் அதில் 400 சதுர அடியில் ஓடு வேய்ந்த வீடு – அசைவமென்றால் நான்கைந்து கோழிகள் - இது போதாதா நான்கு பேர் நிம்மதியாக வாழ?

ஐந்து தேங்காயை விற்றால் ஒரு கிலோ அரிசி. ஒரு நாளைக்கு போதும். இரண்டு கத்தரி, இரண்டு முருங்கைக்காய் – சாம்பாரோ குழம்போ ஆச்சு. கூட்டா பொறியலா? என்ன காய் தோட்டத்தில் கிடைக்கிறதோ அதைச் செய்தால் போதும். நாலு தென்னமரமும், கொஞ்சம் மரங்களும் போதும்  கேஸ் எதுக்கு? அசைவமா? நாட்டுக்கோழி கோழி இருக்கே. குளத்துப் பக்கம் தூண்டிலோடு போனால் நாலு கெண்டை, இரண்டு கெளுத்தி, நான்கு கொறவை மீன் – குழம்பு ரெடி. தீபாவளி பொங்கலா மட்டன். பசு மாடு இரண்டு இருந்தால் நெய், மோர், வெண்ணை.

அப்புறமென்ன? பிள்ளைகளைப் படிக்க வைக்க அரசு பள்ளி. சமூகம், சுற்றம், நட்பு போதும். அமைதியான வாழ்க்கை. ஏசி எதற்கு? கார் எதற்கு? கொஞ்சம் காசு சேர்த்தால் மாதம் ஒரு கோவில், இன்னும் கொஞ்சம் சேர்த்தால் வருடம் ஒரு சுற்றுலா.

நிம்மதி நம்மிடம் அல்லவா?

கொரானாவாவது தொற்றாவாவது?

தோட்டத்துக்கு செல்ல கொரானாவால் முடியுமா?

இனி விவசாய நிலம் வாங்குவது பற்றி பார்க்கலாம்.

முதலீடு எவ்வளவு? – இது உங்களின் தினசரி வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது

யார் விவசாயம் செய்வது? நீங்களா? இல்லை உறவினரா? இல்லை மேஸ்திரி மூலமா? – நீங்களாக இருக்கும் பட்சத்தில் கவலை இல்லை. ஆனால் உறவினர் அது அப்பாவாகவோ இல்லை மாமன் மச்சான்களாகவோ இருந்தால் – அவர்களின் அனுபவம், வயது, நிர்வகிக்கும் தன்மை ஆகியவை அவசியம் விசாரிக்கவும். மேஸ்திரி மூலம் எனில் இன்னும் கூடுதல் கவனம் தேவை.

விவசாயம் தான் இனி உங்கள் வேலை எனில் எந்தக் கவலையும் வேண்டியதில்லை. ஆனால் ஆட்களை வைத்து நிர்வாகம் செய்யலாம் எனில் யோசித்து, அதற்கேற்ப ஆட்கள் கிடைத்தால் செய்வது நலம்.

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற, உங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலோ அல்லது உங்களின் விருப்பமான ஊரிலோ நிலம் வாங்கினால் – நிர்வாகச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், விவசாயச் செலவுகள் என எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

விவசாயத்தில் நிம்மதியான, பராமறிப்புக் குறைவான பயிர்கள் உண்டு. தென்னை மரம் அது தொடர்பான விவசாயம் என்பது குறைந்த அளவு ஆட்களை வைத்து நிர்வாகம் செய்யலாம். பணப்பயிர் விவசாயத்தில் கவனம் அதிகம் செலுத்தினால் கோடிகளில் லாபம் ஈட்டலாம். 

இதெல்லாம் உங்களின் விருப்பம், சூழல் சார்ந்த விஷயங்கள். எந்த மாதிரியான விவசாயம் செய்யப் போகின்றீர்கள் என்பது உங்களின் எண்ணம் சார்ந்தது.

தண்ணீர் வசதி, மழை நிலவரம், மண் தன்மை, ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ற, பருவத்துக்கு ஏற்ற பயிர்கள் எவை, இப்படியெல்லாம் யோசித்து முடிவெடுக்கனும். இன்னும் அனேக காரணிகள் இருக்கிறது. அதை நாம் நேரில் சந்திக்கும் போது பேசலாம். இனி வரும் நிலம் பதிவுகளில் விவசாயம் தொடர்பான செய்திகளை எழுதுகிறேன்.

இத்தனை காரணிகளை ஆலோசித்து, முடிவெடுத்து அதன் பிறகு விவசாய நிலத்தினை வாங்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

***

லீகல், சர்வே, பத்திரப்பதிவு, பட்டா ஆகியவற்றுக்கு எங்களை அணுகுங்கள்.

மெக்கனைஸ்ட் ஃபார்ம்கள் தான் அதிகப் பிரச்சினைகள் இல்லாதவை.

விவசாயத்துக்கு அரசு கொடுக்கும் மானியங்கள், உதவிகள், இயந்திரங்கள் அதற்கான மானியங்கள் ஆகிய அனைத்து விபரங்களும் நமது நிறுவனத்தில் இருக்கின்றன. அனைத்து விபரங்களும் தரப்படும்.

நமது நிறுவனத்துடன் இணைந்து பணி ஆற்றும், பல ஆர்கானிக் விவசாய பொருட்களை உருவாக்கி வரும் பல்வேறு இணை நிறுவனங்களும், விவசாயத்துக்கு உரிய ஆலோசனைகள் தரும் வல்லுனர்களும் உண்டு.

தண்ணீர் இல்லாத காடு, கல்லும் மண்டிக்கிடக்கும் பயனற்ற பூமிகள் உங்களிடம் இருப்பின் என்னை அழைக்கவும். அப்பூமியிலிருந்து தங்கத்துக்கு நிகரான லாபம் தரும் விவசாயத்தை உருவாக்கி தருவோம்.

ஆ. அதெப்படி என நினைப்பீர்கள். அவ்வாறு உருவான நிலங்களைப் பார்வை இட என்னை அழைக்கலாம். வந்து பாருங்கள். அசந்து போவீர்கள்.

வாழ்க வளமுடன்…!

Friday, May 15, 2020

தமிழகம் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகிறதா? ஒரு அலசல்

அண்ணா தன் ஆட்சிக்காலத்தில் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்று சொன்னார். அவர் இறந்து போய் இன்றைக்கு ஐம்பது வருடங்கள் ஆயின. இன்றைக்கும் தெற்கு தேய்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கலைஞர் ஆட்சிக்கு பின்பு தமிழகத்தில் ஊழல்களுக்காக பாலங்கள் கட்டப்பட்டனவே தவிர எதிர்காலத்திற்காக இல்லை என்பது மனச்சாட்சி உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

சாலைகளும், பாலங்களும், அரசு கட்டிடங்களும் ஊழல்களின் ஊற்றுக் கண்களாகவே இருந்து வருகின்றன. சாலைகள் ஒவ்வொரு கட்சியினருக்கும் அள்ள அள்ளக் குறையா செல்வத்தை தந்து கொண்டிருக்கும் அட்சயபாத்திரம். போதாது என குடிமராமத்துப் பணி, 100 நாள் வேலைத்திட்டம் என அள்ள அள்ளக் குறையா அட்சய ஊழல் திட்டங்கள் மட்டுமே கடந்த வருடங்களாக செயலிலிருக்கின்றன.

இன்றைக்கு தமிழகத்தில் பணம் வைத்திருப்போர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் தான். தொழிலதிபர்களிடமும், மக்களிடமும் எந்தப் பணமும் இல்லை.

கடந்த பனிரெண்டு வருடமாக தமிழக தொழிலதிபர்கள் சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்து செய்யும் தொழிலை மீட்க உயிரைப் பணயம் வைத்து வருகின்றார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கின் அதிகாரத்தால் வங்கிகள் தொழிலதிபர்களின் கழுத்தை அறுக்க ஆரம்பித்தன.

மத்திய அரசும், மாநில அரசும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தை முன் வைத்து ஊழல், தனி இன பலன் ஆகியவற்றுக்காக தமிழக தொழில்களை முடக்கி வருவதை பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

சிங்கிள் விண்டோ சிஸ்டம் அனுமதி என்பார்கள்.அதில் ஆயிரம் உள்குத்துக்கள். காசு செலவாகாமல் அனுமதி கிடைக்காது. 

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழகத்தில் வட இந்தியர்கள் அனேகம் பேர் வேலை செய்ய வந்தனர். மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் இன்னும் அதிகமானோர் தமிழகம் தேடி வந்தனர். சமீபத்தில் நெய்வேலியில் பாய்லர் வெடித்ததில், அங்கு வேலை செய்த வட இந்தியர்களின் எண்ணிக்கையை பத்திரிக்கைகளில் படித்ததும் உண்மை என தெரிகிறது.

இந்த ஒன்பது வருட, காலகட்டத்தில் தமிழகத்தில் காணும் இடமெல்லாம் வட இந்தியர்கள் தெரிந்தார்கள். ஆங்காங்கே சண்டைகள், திருட்டுகள், கொலைகள், கொள்ளைகளை அவர்கள் செய்து வந்தார்கள் என்பதை தினசரி பத்திரிக்கைகள் வெளியிட்டன.

அவர்கள் அனைவரும் தமிழக தொழிற்சாலைகளில் பணியாளர்களாக பரவி தொழிலைத் திறம்பட கற்று வந்தனர். எல்லா தொழிற்சாலைகளிலும், எல்லா தொழில்களிலும் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். தொழிற்சாலைகள் மட்டுமல்ல, எல்லா தொழில்களையும் செய்து வந்தனர்.

தமிழர்கள் அந்த தொழிற்சாலைகளில் நிர்வாக பொறுப்புக்கு வந்தனர். தொழிலாளர் நிலையிலிருந்து, நிர்வாக வேலைக்கு பெரும்பாலான தமிழர்கள் உயர்ந்தனர். இதற்கிடையில் அம்மா அரசு, தன் தமிழக குழந்தைகளுக்கு (தமிழர்களுக்கு) சாராயத்தை புகட்டி (உபயம்: ஆனந்த விகடன் அட்டைப்படம்) அவர்களின் திறமை, கல்வி, உடல் திறன் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, விதவைகளை உருவாக்கியது தன் பங்குக்கு. போதாது என பிராமணீய இயக்குனர்கள் (இயக்குனர் சங்கர்-காதலன் திரைப்படம்) குடி குடும்பத்தோடு குடிக்க வேண்டியது என தமிழர்களுக்கு பாடம் எடுத்தனர்.

இப்படியான சூழலில் கொரானா உலகை ஆள ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. இந்த நாட்களில் தமிழகத்தில் வாழ்ந்த வட இந்தியர்கள் எவரும் பசியால், பட்டினியால் செத்துப் போகவில்லை என்பது டிவி செய்திகள் சொல்லின. ஆங்காங்கே ஒரு சிலர் உணவின்றி இருந்தால், அங்கு சமூக அன்பர்கள் சென்று உணவளித்து அவர்களைப் பாதுகாத்தனர். தமிழ் நாட்டில் வட இந்தியர் எவரும் பசியால் சாகவில்லை. பாதுகாப்பாக இருந்தனர். இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படியே இருந்தால் தொழிற்சாலைகளை இவர்களை வைத்து இயக்கி இருக்கலாம். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. சொல்லி வைத்தாற் போல அனைவரும் அவரவர் ஊர்களுக்கு கிளம்ப முயன்றனர்.

கொரானா தொற்றின் தீவிரம் அதிகமாகிக் கொண்டிருக்கின்ற வேளையில் வட இந்தியர்கள் அனைவரும் தங்கள் ஊருக்கு கிளம்புவதற்கு போராட்டங்களை அறிவிக்கின்றனர். தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தனர்.

மத்திய அரசு ரயில்களை இயக்கியது.  காங்கிரஸ் கட்சி அவர்களுக்கான ரயில் கட்டணத்தை தருவதாக அறிவித்தனர். நாடு இருக்கும் நிலையில் மத்திய அரசு உடனே 85 சதவீதம் கட்டணத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கும் என உத்தரவிட்டது.

கொடுமை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியிடம் இருக்கும் பணத்தை இந்த நேரத்தில் செலவு செய்கிறார்களே என நினைத்து அதற்கு ஒரு நன்றியைத் தெரிவித்து இருக்கலாம். மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் தான் தள்ளுபடி கொடுத்தார். நம் பிரதமரின் அரசியல் சாணக்கியதனம் எப்படியானது என்று பாருங்கள்?

காங்கிரஸ் கட்சியினரின் பணம் அங்கேயே இருக்கிறது. ஊர் கூடித் தேர் இழுக்கலாம். ஆனால் இழுக்க வருபவர்களையும் அரசியல் நோக்கில் தடுக்கும் மாபெரும் சிந்தனையாளரானார் நம் பாரதப் பிரதமர். கட்சியினர் செலவு செய்தால் அது ஊழல் பணம் என்பதாக நினைத்துக் கொண்டு வேண்டாம் என்று சொன்னார்களோ என்னவோ தெரியவில்லை.

தமிழகத்தில் வேலை செய்து வந்த வட இந்தியர்கள் பெரும்பாலானோர் பீகார், அசாம் போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டனர். இங்கிருப்பதோ கொஞ்சம் பேர். இனி அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று விடுவார்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கொரானா இருந்தாலும் தொழிற்சாலைகளை இயக்குங்கள் அதுவும் 33 சதவீதம் தொழிலாளர்களைக் கொண்டு என்று அறிவிக்கின்றார்கள் தமிழக ஆட்சியாளப் பெருந்தகைகள்.

சேவைத்துறையில் வேண்டுமானால் 33 சதவீதம் செல்லுபடியாகும். ஆனால் ஒரு தொழிற்சாலை இயங்க வேண்டுமெனில் கேட்-டு-கேட் ஆட்கள் வேலை செய்தால் இயக்க முடியும். வெறும் 33 சதவீதத்தினரை வைத்துக் கொண்டு எப்படி இயக்குவது? பாய்லர் வெடிக்கும். விபத்து தான் ஏற்படும். சமீபத்தில் ஆந்திராவில் அப்படித்தான் நடந்து மக்கள் செத்தார்கள்.

ஒரு அறிவிப்பின் இலட்சணம் இது. அதன் காரணமாக மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்பது நிதர்சனம்.

வட இந்தியர்கள் அவரவர் ஊர்களுக்குச் சென்று சேர்ந்த பின்னர் மத்திய அரசு 20 லட்சம் கோடி (ரிவர்ஸ் பொருளாதாரம்) ரூபாய்க்கு திட்டத்தை அறிவிக்கிறது. அதற்கு பல்வேறு ரைடர்ஸ்களையும் சேர்க்கிறது.

இனி நிறுவனங்களுக்கு பணம் கிடைக்கும் என்கிறார்கள். வேலை துவங்கலாம் என நம்பிக்கை ஊட்டினார்கள். சரி, பணம் கிடைக்கும்? வேலை செய்ய ஆட்கள் எங்கே?

நிர்வாகத்தில் இருந்தவர்கள் கீழ் பணிகளை செய்வதற்கு உடனே சாத்தியமாகுமா என்றால் நிச்சயம் முடியாது. கிட்டத்தட்ட ஒன்பது வருடமாக தொழிலை நன்கு கற்றுக் கொண்ட வட இந்தியர்கள் இப்போது தமிழகத்தில் இல்லை. இனி தொழிற்சாலைகளை இயக்குவது எப்படி? புரிகிறதா நண்பர்களே?

தமிழகத்தின் அத்தனை தொழில்களையும் கற்றுக் கொண்ட வட இந்தியர்கள் அவரவர் ஊர்களில் இருக்கின்றார்கள்.

இடையில் ஒரு சின்ன விஷயம்.

முன்பு கோவை, கரூர் பக்கம் நூல் மில்களில் வேலை செய்வதற்கு திண்டுக்கல் பக்கம் இருந்து ஆட்களை அழைத்து வருவார்கள். அடுத்த கட்டமாக ஏன் நாம் தொழிற்சாலைகளை திண்டுக்கல் பக்கம் கட்டக்கூடாது என நினைத்து, திண்டுக்கல் ஏரியாக்களில் நூல் மில்களை உருவாக்கினர். வேலை செய்ய ஆட்கள் இருக்கும் பகுதியில் தொழிற்சாலைகளை உருவாக்குவது என்பது புத்திசாலித்தனமானது. யார் வேண்டுமானாலும் தொழிற்சாலைகளை உருவாக்கலாம். ஆனால் வேலை செய்ய ஆட்கள் வேண்டுமல்லவா?

சரி மீண்டும் விட்ட இடத்திலிருந்து.

எம்.எஸ்.எம்.இகளுக்கு நிதி உதவி என்கிற மத்திய அரசின் பொருளாதார  மீட்டெடுப்பு அறிவிப்பு யாருக்குச் சாதகமாக இருக்கும்? வட இந்தியாவில் தொழில்களைக் கற்றுக் கொண்டவர்கள் உள்ளனர். இனி அங்கிருக்கும் தொழிலதிபர்கள் புதிய ஆலைகளை உருவாக்குவார்கள். வேலை வாய்ப்புகள் பெருகும். ஆளும் பிஜேபியினர் இனி தொழில்களை வட இந்தியாவில் உருவாக்குவார்கள். வங்கி வட்டி இல்லை, சொத்துக்கள் பிணை இல்லை. இப்படி பலப்பல பலன்களை மக்களின் வரிப்பணத்தில் வெகு இன்பமாக அனுபவிக்கப் போகின்றவர்கள் வட இந்தியர்கள்.

ஆனால் இங்கோ, ஸ்கில்டு லேபர்கள் இல்லாமல் தொழிற்சாலைகள் இயங்காமல் இருக்கும். இனி புதிய ஆட்களுக்குப் பயிற்சி கொடுத்து, நிர்வாகத்தில் இருந்தவர்களை கீழ்  நிலைப் பணிகளுக்கு பழக்கப்படுத்தி தொழிலை விரிவாக்குவது என்பது எவ்வளவு கடினமானது.

இருபது லட்சம் கோடி திட்டம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான பலன்களை அனுபவிக்கப் போவது வடக்கு. வழக்கம் போல தமிழகமும், அதன் தொழிலும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பே. காலத்தின் கோலமாக என்னால் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வடக்கிலிருந்து ஏவப்படும் ஒவ்வொரு அழிவாயுதமும் இங்கு பெரும் பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

ஆட்சியிலிருப்பவர்களாலும், எதிர்கட்சிகளாலும் பேச முடியா ஊழல் மன்னிக்கவும் சூழலில் இருக்கின்றார்கள். எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசினால் ரெய்டு, கைது. அதற்கேற்ப மத்திய அரசு சட்டங்களை திருத்தி வைத்திருக்கிறது. எதிர்க்க வேண்டியவர்கள் தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக தமிழகத்தைப் பலி கொடுக்கின்றார்கள். ரெய்டு, கைதுகளுக்கு பயப்படாத நேர்மையாளர்களாக இங்கு எந்த அரசியல்வாதியும் அதிகாரத்தில் இல்லை என்பது கொடுமை.

இதை எல்லாவற்றையும் தாண்டி எம் தமிழகம் துணிவு கொண்டு மீண்டு எழும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

Saturday, May 9, 2020

இந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன?


நண்பர்களே,

தினக்கூலிகள் பற்றி நமக்குத் தெரியும். சாலைகளின் ஓரமாய் மேஸ்திரிக்காகவும், அவர் ஒதுக்கும் வேலைக்காகவும் காத்துக்கிடப்போரை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம். தினமும் வேலை செய்து கிடைக்கும் கூலியில் டாஸ்மாக் பறித்துக் கொண்டது போக, மீதி உள்ள காசில் சாப்பிடுபவர்கள் 130 கோடியில் 110 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்களை நாமெல்லாம் படித்திருக்கிறோம். மீதி இருக்கும் 20 கோடியில் நாமும் ஒருவர் என்று மகிழ்ச்சி கொண்டிருப்போம்.

இந்தியாவின் கடன் தொகை 85 லட்சம் கோடி, தமிழகத்தின் கடன் தொகை 3.5 லட்சம் கோடி. ஒரே மாதம், வரி வருமானம் போதவில்லை என்ற உடனே இந்தியாவின் பிரதமர் டிவியில் உரை ஆத்த வரவில்லை. தமிழ்நாட்டிலோ சம்பளம் கட். இன்னும் ஒரு மாதம் வரி வருவாய் இல்லையென்றால் நாடு மூழ்கிப் போய் விடும். அரசு அதிகாரிகளுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ராணுவ வீரர்களுக்கும் கொடுக்க முடியாது. என்ன ஆகும் அதன் பின்னால்? நாடு ஸ்தம்பித்துப் போய் விடும். ஆக தினமும் வரி வசூல் என்பது நாட்டின் மூச்சு. அதாவது ஒரு தினக்கூலி கதை.

இப்போது சொல்லுங்கள்.

யார் அன்றாடம் காய்ச்சி?

இதற்கிடையில் ஒரு விஷயம். இந்திய மக்கள் தொகையில் சுமார் பத்து லட்சம் பேரிடம் நமது பணமெல்லாம் முடங்கிக் கிடக்கிறது. கொங்குப்பக்கம் ஒரு சிலரிடம் ஐம்பத்தாயிரம் கோடிக்கும் மேல் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்தப் பணத்தைத் தோண்டி எடுத்தால் ஐந்து வருடங்கள் வரி வசூலிக்காமலே இந்தியாவை ஆளலாம். மக்கள் எல்லோரும் மகிழ்வாக இருப்பார்கள். அந்த பத்து லட்சம் பேர் யார் யார் என எல்லோருக்கும் தெரியும். வசூலிப்பதும் எளிதுதான்.

யார் செய்வது? செய்வார்களா? செய்யமாட்டார்கள்.

மக்களுக்கு வருமானமே இல்லை. ஆனால் அரசு விலையேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்? இது எரியும் வீட்டில், ஆக்சிடெண்டில் பிடுங்கும் திருட்டு புத்தி அல்லவா? மக்கள் நலம் பற்றி நல்ல சிந்தனை உள்ளவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.

இந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி முதலீட்டுக்கு வருவோம்.

உலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் விரல் நுனியில். கட்டுப்பாடுகளற்ற இணையவெளியில் கிடைக்காத விஷயங்களே இல்லை. ஒவ்வொரு நாட்டின் அத்தனை விபரங்களும் உட்கார்ந்த இடத்திலிருந்து பெற்று அதை ஒப்பீடு செய்து விடலாம்.

இந்தக் காலத்திலும் பொய்யாகப் பேசியே மக்களை ஏமாற்றும் ஏமாளிக்கூட்டம் திரிந்து கொண்டுதான் இருக்கின்றது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். எட்டு நாள் தேவையில்லை. எட்டு நொடி போதும் பொய்யா உண்மையா என தெரிந்து கொள்ள.

உலக நாடுகளில் பெரும்பான்மையாக இருப்பவை முஸ்லிம் நாடுகளும், கிறிஸ்துவ நாடுகளும். மற்றபடி இரண்டே இரண்டு இந்து(??) நாடுகள் மற்றும் மதம் சாரா ஒரு சில நாடுகள்.

இந்தியாவை ஆளும் பாஜக கொண்டு வந்திருக்கும் சமீபத்திய சட்டமான சிட்டிசன் சிப் அமெண்ட்மெண்ட் படி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பும், இந்தியர்கள் கணக்கெடுப்பும் பல இடங்களில் பல வித சர்ச்சைகளையும், தொடர்ந்து போராட்டங்களையும் உருவாக்கியது. கொரானாவினால் இப்போதைக்கு அந்த இரு விஷயங்களுக்காக போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

போராட்டம் என்றாலே பிரிட்டிஷ்காரர்கள் இந்திய சுதந்திரபோராட்டத்தினை வெறி கொண்டு அடக்கியது போல ஜன நாயக அரசும் நடந்து கொண்டதை நாமெல்லாம் பல்வேறு டிவி செய்திகள் மூலம் ஏற்கனவே தெரிந்து இருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் கணக்கெடுப்பு வெகு முக்கியமானது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியர்கள், வெளிநாட்டினர், அகதிகள், தஞ்சமடைந்தவர்கள் எனும் துல்லிய கணக்கு விபரங்கள் தேவை. இந்த தரவுகள் இனி வரும் காலத்தில் அவசியம் தேவைப்படும், அதே நேரத்தில் அரசு கட்சி சார்பற்ற, அரசின் கட்டுப்பாடுகளற்ற சுதந்திர அமைப்பின் வழியாக இவற்றைப் பாதுகாத்திட சட்ட வரையறைகள் செய்தல் அவசியம். இல்லையெனில் அரசியல் பழிவாங்கல்களும், அரசியல் கொலைகளுக்கும் இத்தரவுகள் இடமளித்து விடும் அபாயம் நிச்சயம் உருவாகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய நலமற்றர்களாக இருப்பார்கள் என்று மனிதகுலம என்றைக்கும் நம்பி விட கூடவே கூடாது.

இத்தரவுகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி வசம் இருந்தால், அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் எதிர்கட்சி ஆட்களையோ அல்லது விமர்சனங்கள் செய்பவர்களையோ இல்லாமல் மாற்றி விடலாம். நான் இந்தியன் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் தனிமனிதனிடம் வந்தால், அதை ஏற்கவோ நிராகரிக்கவோ அரசுக்கு அதிகாரம் இருந்தால் என்ன ஆகும்? அவன் அழிக்கப்படுவான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியான நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கும் என்பது 100 சதவீதம் உண்மை.

ஆனால் அகதிகள் விஷயத்தில் அரசு இன்னும் சில கவனமான ஊள்ளீடுகளை சேர்த்து, மதம், இனம், மொழி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

சிறுபான்மையினராக குறிப்பிடப்படும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் இச்சட்டத்தினை ஆதரரிக்கவில்லை என்பது உண்மை. அதற்கான போராட்டங்களை அவர்கள் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நடத்தி இருக்கிறார்கள்.

இப்படியான நிலை இருக்கையில் பெரும்பான்மை நாடுகளைக் கொண்ட முஸ்லிம் மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும், கிறிஸ்து மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும் எப்படி இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருவார்கள் என்று நம்ப முடியும்? முதலீட்டாளர்கள் பெருத்த லாபம் கருதி முதலீடுகள் செய்வார்கள். இருப்பினும் முதலீட்டாளர் தங்கள் முதலீடுகளைச் செய்யும் முன்பு பல்வேறு தரவுகளை ஆராய்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் பிறப்பின் போது, அவனின் மதம் நிர்ணயிக்கப்பட்டு அதன் வழி வளர்க்கப்படுகிறான். மதச்சார்பு கொண்ட மனிதன், தன் மதத்தினருக்கு இந்தியாவில் வாழ அனுமதிப்பார்களா என்ற சூழல் இருக்கிறது என்று தெரிந்தபடியால், இந்தியாவில் எப்படி முதலீடுகள் செய்ய முன்வருவார்கள் என்று நினைக்க முடியும்? இந்தியாவை ஆளும் அரசுக்கு இனம், மொழி, மதம் முக்கியம் என்பது போல முதலீட்டாளர்களுக்கும் இருக்குமல்லவா?

அதற்கான சாத்தியக்கூறுகளை சிட்டிஷன்சிப் அமெண்ட்மெண்ட் சட்டம் குறைத்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டல்லவா?

பணக்காரனுக்கு அப்படியெல்லாம் மதம் சார்ந்த சிந்தனைகள் இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். பெரும்பான்மையான நிறுவனங்களின் தலைவர்கள் என்ன இனமோ அந்த இனத்தினருக்கு வேலையில் முன்னுரிமை கொடுத்திருப்பது உலகிற்கே தெரிந்த விஷயம். சப்பைக்கட்டு கட்ட இப்படியெல்லாம் பேசுவார்கள். ஆனால் நிதர்சன உண்மை மதம், மொழி, இனம் சார்ந்த பணியாளர்கள் என்பது.

சைனாவில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள் இந்தியாவிற்கு எப்படி வருவார்கள் என்று எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? இந்தியாவில் முதலீடு செய்தால் தான் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்று நினைத்து வருவார்கள் என்றும் சொல்வார்கள். அதெல்லாம் சாத்தியமில்லாத வெற்றுக் கூச்சல்.

இரண்டு ரூபாய் பதிவாளர்களின் பதிவுகள்  இனி முதலீட்டாளர்களுக்கு இந்தியாதான் ஒரேஅ வழி என்று சொல்கின்றன?  

இரண்டு ரூபாய் கொடுக்கும் முதலாளி மதிகெட்டவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சிட்டிசன்ஷிப் அமெண்ட்மெண்ட் இப்போதைக்கு தேவையில்லாத ஆணி. இந்த ஆணியைப் பிடுங்கி விட்டு வேறொரு மேட்டரைச் செய்தால் போதும். நினைத்த காரியம் செவ்வனே நடந்திருக்கும்.

உங்களுக்கு என்ன சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக மாறி விடுகிறார்கள் என்பதுதானே பிரச்சினை? அதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது.

ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி, இரண்டு குழந்தை பெற்றால் குழந்தைக்கு வரி கொடுக்க வேண்டுமென்று உத்தரவு போடுங்களேன். மேட்டர் ஓவர். சிறுபான்மையினர் எப்போதும் சிறுபான்மையினர் தான், பெரும்பான்மையினர் எப்போதும் பெரும்பான்மையினர்தானே?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகிறோம் பேர்வழி என சட்டம் ஒன்றினை போட்டால் மேட்டர் ஓவர். (எனக்கு எவ்வளவு கொடூர சிந்தனை என்று பாருங்கள். இதற்கு நான் பொறுப்பல்ல, வெறும் ஐடியாதான்)

கண்ணை மூடிக் கொண்டு நம்பி விட இன்னும் நாமெல்லாம் மூளையைக் கழற்றி வீசி விட்டு திரியவில்லை என்று நம்புகிறேன்.

இந்திய அரசின் இந்தச் சட்டங்கள், வெளிநாடு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்காது என நம்பலாம். ஏனெனில் உலகில் இந்தியா ஒரு சிறுபான்மை நாடு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்டிருந்தால், அந்த இரத்தத்தில் முஸ்லிம், கிறிஸ்து, கீழ்சாதி இரத்தம் இல்லையென சொல்ல முடியுமா?

உலகம் ஒரே கொடைக்குள் வந்து விட்டது. இனம், மொழி, மதம் சார்ந்து அரசுகள் இயங்க முடியாது ஆளும் அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய உத்தரவு.

இல்லை நாங்கள் இப்படித்தான் என்றால் காலுக்குதான் செருப்பே தவிர செருப்புக்கு கால் இல்லை என உலகம் நம்மை உதறி தள்ளிவிடும் அபாயம் உண்டு.

கொரானாவினால் பல நாடுகளிலும் வேலை இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இனி வேலைகள் அந்தந்த நாட்டின் பிரஜைகளுக்கே கிடைக்கும் என நம்பித்தான் ஆக வேண்டும். வெளி நாட்டில் வேலை எனும் கனவு கனவாகவே முடிந்து போகும்.

ஒவ்வொரு இந்தியருக்கும் மாதம் பத்தாயிரம் ரூபாய் சாத்தியமா? என்றால் சாத்தியம்தான். பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் பணம் கொடுக்கலாம். யாருக்கும் எந்த நட்டமும் வராது. நாட்டின் வருமானத்துக்கும் பிரச்சினை இருக்காது. அது எப்படி என்கின்றீர்களா? அது ரகசியம். எவன் கண்டுபிடிக்கின்றான் என பார்க்கலாம்.

Thursday, May 7, 2020

நட்பின் உன்னதமும் மனையாளும்


தலைப்பு ஏதோ வில்லங்கமாக இருக்கிறதே என உங்கள் மனசு நினைப்பது எனக்குத் தெரிகிறது. பச்சே, நீங்கள் நினைப்பது அல்ல, நான் உங்களிடம் பறைய இருப்பது. 

அதற்கு முன்பாக இந்த மலையாளப்பாடலைக் கேட்டு விடுங்கள். மனதை வருடும் அற்புதமான குரலில், உங்கள் உள்ளத்தை நிரப்பும் இசையால் இப்பாடல்.



ஒருவர் மூச்சுக்கு முன்னூறு தரம் ‘இன்ஷா அல்லா” என்று சொல்லும் ஒரு முசல்மான். இன்னொருவர் “எண்டே பெருமாளே…!” என்று நொடிக்கொரு தரம் கூவக்கூடிய பிராமின்.இவர்கள் இருவரும் நண்பர்கள். ஆதியந்தம் முதலாய் நெருங்கிய நண்பர்கள்.

சம்பவத்திற்குள் போவதற்கு முன்பு உங்களிடம் பறைய வேண்டி இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

நண்பர்களே, ஓர் இறைவன் தத்துவம் தமிழர் இனத்திலும், முஸ்லிம் மற்றும் கிருஸ்துவ மதத்திலும் உள்ளது பற்றி அறிவீர்கள். 

திருமந்திரத்திலும், குரானிலும், பைபிளிலும் சொல்லப்பட்டிருப்பது ஒன்றே. மொழிகள் வேறு. ஆனால் சொல்லப்பட்டவை ஒன்றே.

ஒவ்வொரு மதத்திலும் சித்தம் கலங்கியவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சித்தம் கலங்கிய நரித்தனமானவர்கள் சுய நலத்துக்காகச் செய்வதுதான் சண்டைகள், கொலைகள், கொள்ளைகள். இவற்றைப் புரிந்து கொள்வதில் நமக்கு ஏழாம் அறிவு தேவை.

தமிழர்கள் முடிந்தால் ஓஷோவின் புத்தகங்களை படித்துப் பாருங்கள். ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் நயவஞ்சகர்களை அவர் நேரடியாக சுட்டிக் காட்டுவார்.

மதத்தையும், அரசியலையும் ஒன்று சேர்த்த அயோக்கியர்களால் தான் உலக மாந்தர்களின் வாழ்க்கையில் எந்த வித மகிழ்ச்சியும் உண்டாவதில்லை. எல்லாவற்றையும் அவர்கள் நரித்தனமாக தன் கொள்கைகளால் அபகரித்து, நாம் அனைவரும் ஏதோ அபாயத்தில் எப்போதும் இருந்து கொண்டிருப்பது போலவும், அவர்கள் தான் நம்மை காக்க, ரட்சிக்க வந்த வல்லமை மிக்கவர்கள் என நம்மையெல்லாம் ஏமாற்றி வருகின்றார்கள்.

ஒரே ஒரு உதாரணம் மட்டும் உங்களுக்காக.

செட்டியாரே காசு கொண்டு வா,
நாயரே காசு கொண்டு வா,
தேவரே காசு கொண்டு வா,
கவுண்ட்ரே காசு கொண்டு வா

என்றுச் சொல்லி காசு வசூல் செய்து கட்டப்படும் கோவிலில், நீங்கள் எல்லோரும் வெளியே இருங்கள், நான் மட்டும் பூஜை செய்கிறேன், உள்ளே வந்தால் தீராத பாவம் உண்டாகும் என்று சொல்லி, தன் பின்புறத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் உத்தம சீலர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நாம் இதுவரையிலும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் அல்லவா?

இந்த உதாரணம் போதுமா? இன்னும் வேண்டுமா?

ஆக மதத்தின் பெயரால் ஆட்சியும், அதிகாரமும் செலுத்துபவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யமாட்டார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் எழுதி இருந்தார் ஃபேஸ்புக்கில்.

ஆதிசங்கரர் மட்டும் இல்லையென்றால், இந்தியா எப்போதே முஸ்லிம் நாடாகவோ அல்லது கிறிஸ்து நாடாகவோ மாறி இருக்கும். தன் 32 வயதுக்குள் சைவத்தையும், வைணவத்தையும் இணைத்து வடக்கு வரை இந்து மதத்தை ஸ்தாபித்து காட்டினார் என்று.

மூவாயிரம் ஆண்டுகள் இந்தியாவை ஆண்டார்கள் முஸ்லிம்களான மொகலாயர்கள். ஆயிரம் ஆண்டுகள் ஆண்டார்கள் கிறிஸ்துவ பிரிட்டிஷ்காரர்கள். அவர்கள் நினைத்திருந்தால் இந்தியர்களை மதம் மாற்றி இருக்கலாமே? ஆனால் முடியவில்லை. இந்தியாவில் முஸ்லிமாகவும், கிறிஸ்துவர்களாகவும் இருப்பவர்கள் இந்துக்கள்.

ஆதிசங்கரர் தான் காரணம் என்ற கட்டுக்கதைகளை இன்னும் கண்ணை மூடி நம்பிக் கொண்டிருப்பது எவ்வளவு மடத்தனம் பாருங்கள். இந்தியா உலகிற்கே வழி காட்டும் அற்புதமான ஆன்மீக பூமி. தமிழகம் தான் இந்தியாவின் முதன்மை மாநிலம். எவர் வந்தாலும் என்ன செய்தாலும் இங்கு மதமாற்றமெல்லாம் சாத்தியப்படாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மதம் மாறியவர்களின் மீது, ஜாதி எனும் பெயரால், ஜமீன் என்ற பெயரால் நடத்தப்பட்ட அக்கிரமங்களைத் தாங்க முடியாமல், அவர்கள் மதம் மாறினார்கள். வயிற்றுப் பசி தீர்ப்பது எதுவோ, பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்வது எதுவோ அதை அவர்கள் பின்பற்றினார்கள்.

பசி இல்லா, ஏற்ற தாழ்வுகள் இல்லா சமூகத்தை இதுகாறும் எந்த ஒரு அரசியல்வாதியாலும், கட்சியாலும் உருவாக்க முடியவில்லை. மக்களாக தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக மதங்களை உயர்வாகப் பேசுவதும், பிற மதத்தவரை இழிவு படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதும், அதன் காரணமாக அரசியல் அதிகாரத்துக்கு வருகிறார்கள்.

புரிந்து கொள்ள வேண்டும்.

பொய்களை, புனைவுகளை, கட்டுக்கதைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

யாரோ சொன்னார்கள், எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதற்காக நம்பி விடக்கூடாது.

இன்னும் நிறைய இருக்கிறது உங்களிடம் பறைவதற்கு. இனி சம்பவத்துக்கு வந்து விடுகிறேன்.

அந்த இருவரும் நீண்ட கால நண்பர்கள். முசல்மான் அடிக்கடி கோவிலுக்குச் செல்வதுண்டு. பிராமின் நண்பர் பூஜைகளை முடித்து, தீபாராதனைக் காட்டி விட்டு, அம்பாள் பி்ரசாதம் இந்தா என முசல்மானிடம் கொடுப்பார். அவரும் தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொண்டு, கோவில் பிரசாதத்தை வாங்கி ருசித்துச் சாப்பிடுவார். இது வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கும் சம்பவம்.

இருவருக்குமான நட்பு கொடுக்கல் வாங்கலிலும் இருக்கும். அய்யரிடம் காசு கொடு என முசல்மான் கேட்டால், தட்டில் விழும் தட்சினையை எடுத்து சேர்த்து வைத்து கொடுப்பதும் இப்படியான நட்பு அவர்களுக்கிடையில்.

முசல்மானுக்குள் ஒரு ஐயம். இன்றைக்கு அய்யரிடம் கேட்டு விட வேண்டியதுதான் என அவர் வரும் வரை காத்திருந்தார்.

“அய்யரே, நீர் கொடுக்கும் சுண்டல், பொங்கல் எல்லாவற்றையும் சாப்பிடுகிறேனே, நீ ரம்ஜானுக்கு எங்க வீட்டு மட்டன் பிரியாணியைச் சாப்பிடுவீரா” எனக் கேட்க,

அய்யர், உடனே, ”என்ன இப்படிக் கேட்டுட்டேள். கொண்டாங்கோ, சாப்பிடுகிறேன்” எனச் சொல்லி, முசல்மான் எதிரில் அமர்ந்து கொண்டு பிரியாணியைச் சாப்பிட்டார்.

ஒரு முசல்மானுக்கும், அய்யருக்குமான நட்பின் ஆழமும், அவர்கள் தங்கள் மதத்தின் மீதும், அவர்களின் நட்பின் மீதும் கொணடிருந்த நம்பிக்கையும் வார்த்தைகளால் எழுத முடியாது.

அந்த அய்யர் சமீபத்தில் இறைவனிடம் சேர்ந்து விட்டார். அவரின் மறைவுக்கு முசல்மானால் செல்ல முடியவில்லை. காரணம் கொரானா. 

வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட அவரின் மனைவி, தன் மகனிடம், ‘வாப்பா, ஏன் அமைதியாக இருக்கிறார்?” எனக் கேட்க, அவன் விஷயம் சொல்லி இருக்கிறான்.

கணவரிடம் வந்தவர், “ஒங்க, மொத சம்சாரம் இறந்து போச்சா?”

* * *

நண்பர்களே, இப்பதிவு இரண்டு நண்பர்களைப் பற்றி அல்ல. இப்பதிவு மதம் பற்றியும் அல்ல.

ஒரு கணவன் மனைவியின் இல்லறத்தைப் பற்றியது.

இப்படியும் கணவன் மனைவி இருக்கிறார்கள் உலகிற்கே சாட்சியாக.

வாழ்க வளமுடன்…!

* * *

குறிப்பு : வெகு சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது.


Saturday, May 2, 2020

கண்ணாடிவிரியன் பாம்பு


நேற்றைக்கு முதல் நாள் மாலையில் தண்ணீர் மோட்டார் வேலை செய்யவில்லை. ஃஃபியூஸ் போயிடுச்சு. ஃபியூஸ் போட்டு மாட்டினால் திரும்பவும் வேலை செய்யவில்லை. தண்ணீர் இல்லாமல் எப்படி? டென்ஷனாகி விட்டார் மனையாள். இரவில் எவரும் வரமாட்டார்கள். இபி மணி சொந்த ஊருக்குச் சென்று விட்டார். இருந்தால் அரை மணி நேரம்தான்.

மறு நாள் காலையில் ஆள் இருக்காரா என பார்த்து அனுப்பி வைப்பதாகச் சொல்லி விட, சிக்கனமாக பயன்படுத்தும்படி பசங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மனையாள்.

விடிகாலை, வழக்கம் போல எழுந்தேன். எனக்கு ஒரு நாளின் ஆரம்பம் சில்லென்ற தண்ணீரில் குளிப்பதுதான். குளிக்கவில்லை என்றால் அன்றைக்குப் பூரா எனக்கு ஆகாது. ஆகவே காக்கா குளியல் ஒன்றினைப் போட்டு விட்டு, இன்னைக்கு என்னங்க சமைக்கணும் என்று கேட்டுக் கொண்டிருந்தவரிடம், வெங்காய சாம்பார் வை என்றுச் சொல்லி விட்டேன்.

சட்டியில் வெங்காயத்தை வதக்கிக் கொண்டிருந்த போது வெளியில் சத்தம். ரூடோஸும், மணியும் விடாமல் குலைக்க, பக்கத்து வீட்டு ஆள் அய்யோ பாம்பு பாம்பு என கதற வெளியில் சென்று பார்த்தால், கேட்டின் அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் மூளையில் குழந்தை போல படுத்துக் கிடந்தது கண்ணாடிவிரியன் பாம்பு.

கண்ணாடிவிரியன் விஷத்தின் தன்மை வீரியமானது. இது பார்ப்பதற்கு மலைப்பாம்பு போல இருக்கும். புஷ் புஷ் என சத்தம் விட்டுக் கொண்டே இருக்கும். கடித்தால் நான்கு நிமிடம்தான். இந்தப் பாம்பு கடித்தால், முதலில் இதயம் செயல்படுவது நின்று விடும். அடுத்த நான்காவது நிமிடத்தில் உயிர் போய் விடும். கடுமையான விஷம் கொண்டவை இப்பாம்புகள். இவைகளைச் சீண்டினால் கோபத்தில் நாய்கள் கடிப்பது போல சீறிக் கொண்டு கடிக்கும்.

நல்ல பாம்பு கடித்தால் 20 நிமிடம் தாங்கும். பயப்படாமல் இருந்தால் 25 நிமிடம் வரை விஷம் பெரிதாக பாதித்து விடாது. ஆனால் விரியன் வகை பாம்புகளின் விஷம் உடனடி மரணம்.

மூலையில் படுத்து இருந்தது சுமார் மூன்றரை அடி நீளம். கைபெருசு கணம். பாம்பின் தலையோ பெரியது. பக்கத்து வீட்டு நண்பர்(???) ராஜ்குமாரை அழைத்தால், நான் சிறு பையனாக இருக்கும் போது, பாம்பு என் தலைக்கு மேல் படம் எடுத்து ஆடியது. அதன் பிறகு அடிப்பதில்லை என்றுச் சொல்லி விட்டார். பக்கத்து வீட்டு ஆள், கேட்டைத் திறக்கும் போது அவர் வீட்டுக்குள் நுழைய சென்ற பாம்பை மிதிக்கப் போய், தவறியதால், நடு நடுங்கிக் கொண்டு வீட்டுக்குள் உட்கார்ந்து விட்டார். அந்த அதிர்ச்சியில் அவர், என் வீட்டுக்குள் வந்து விட்டார்.

எதிர்த்த வீட்டு செந்தில் மாடியில் நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். எட்டிக் கூட பார்க்கவில்லை. எதிர்த்த வீட்டு கீழ் வீட்டில் இருக்கும் பாட்டி, பாம்பை வந்து பார்த்து விட்டு அய்யோ ஆத்தா என்று ஓடியே போய் விட்டார்.

ஊட்டி நண்பர் வந்தார். பாம்பு பெரிதாக இருக்கிறது. அடிக்க முடியாது என்று சொல்லி விட்டார்.

அடியேனுக்கு பாம்பு என்றால் அதைக் கொல்வது என்றால் சர்க்கரை சாப்பிடுவது போல. சிறிய வயதில் கரட்டான்கள், எலிகள், பாம்புகள் இவைகளை கொல்வது எனக்கு ஜாலிலோ ஜிம்கானா.

கிராமத்து வீட்டில் வேல்கம்பு, ஈட்டிக்கம்பு, வீச்சறிவாள், கொடுவாள் என ரக ரகமாய் இருக்கும். எனக்கு கொஞ்சம் விபரம் வந்தவுடன் ஒன்றரை அடிக்கு சுளுக்கி செய்து வைத்திருந்தேன். சுளுக்கி என்றால் என்ன தெரியுமா? கைப்பிடியிலிருந்து நான்கு கீற்றுகளாக நீன்று, முனையில் கொக்கி போல இருக்கும். ஈரக்குலைக்குள் சொருகி இழுத்தால் ஆள் காலி. வயிற்றுக்குள் சொருகி இழுத்தால் குடல் வெளியில் வந்து விடும். ஊரில் ஏர்கன் ஒன்று வைத்திருந்தேன். புல்லட்டைப் போட்டு அடித்தால் பாம்பின் தலைக்குள் புல்லட் பாய்ந்து விடும். சுருண்டு விடும். சுளுக்கியால் கரட்டானைக் குத்தி அது துடிப்பதை ரசித்துக் கொண்டிருப்பேன். சின்ன வயதில் அப்படி இருந்தேன். இப்போது ஜீவகாருண்யம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். அது ஒரு காலம், அனுபவமறியா வயது.

இங்கு கோவையில் அதெல்லாம் ஏது?

கோவை வீட்டில் பாம்புகள், முயல், கவுதாரி, மயில்கள் அதிகம். மயில்களில் ஒன்று கூட பாம்பு பிடித்துப் பார்க்கவே இல்லை. வாசலில் உட்கார்ந்திருப்பேன். ஏழு அடி நீளத்தில் சாரையார் கேட்டின் வழியாக தலையை நீட்டுவார். பார்த்துக் கொண்டிருப்பேன். நான் ஏதாவது எதிர்க்கிறேனா என்று உளவு பார்ப்பார். ஒன்றும் சிக்னல் இல்லை என்ற உடன் சுவற்றைச் சுற்றிக் கொண்டு தவளை பிடிக்கச் செல்வார். பெட்ரூம் சன்னலில் சென்று பார்ப்பேன். சந்து பொந்துகளுக்குள் தலையை விட்டு ஏதாவது சிக்குகிறதா என்று பார்த்துக் கொண்டிருப்பார். மேற்கு மூலையோரம் பாம்பு புற்றுக்குச் சென்று விடுவார். இப்போது வீட்டைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டி விட்டதால் வருவதில்லை.

இந்த கண்ணாடி விரியனார் வேப்பமரத்தடியில் படுத்துக் கொண்டு உருண்டு கொண்டிருப்பார். மனையாள் அவ்வப்போது விரட்டி விடுவார். பக்கத்து காலி மனைக்குள் சென்று விடுவார். ஆனால் இன்றைக்குப் பார்த்து வீட்டுக்குள் வந்து விட வேறு வழி இல்லை.

பரலோக பிராப்தி கொடுத்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். 

அதற்குள் நண்பர் தீயணைப்பு துறைக்கு அழையுங்கள் என்று சொன்னார். அழைத்தேன். அவர் பாம்பு பாதுகாப்பாளர்கள் என்று சொல்லக்கூடிய ஆட்களின் தொலைபேசி எண்ணைக் கொடுக்க, அழைத்தேன். அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று சொன்னார்கள். படம் பிடித்து, வாட்சப்பில் அனுப்பி வைத்தேன். இரண்டு பசங்க வந்தார்கள். விக்னேஷ் மெதுவாக சாக்கு ஒன்றினை விரித்து வைத்து, அதற்குள் பாம்பினை நேக்காக தள்ளி விட, சாக்குக்குள் சென்றது பாம்பு. அதைக் கொண்டு போய் மருதமலை காட்டில் விட்டு விடுகிறேன் என்றுச் சொல்லி சென்று விட்டார் விக்னேஷ்.

வீடியோவைப் பாருங்கள். திக்கென்று திடுக்கிடும் அளவுக்கு பெரிய பாம்பு.

அடுத்த பிரச்சினை, மோட்டார். எனது தோழி அனுப்பி வைத்திருந்த இபி வேலை செய்பவர் வந்து ஃபியூசை பார்த்தார். நான் போட்ட ஃபியூஸ் போயிருந்தது. சிறிய கம்பி தாங்காது என்று சொல்லி இரண்டு காப்பர் கம்பிகளை இணைத்து போட, மோட்டார் ஓடியது.

இதற்கிடையில் வெங்காய சாம்பாரில் வதக்கப்பட்ட வெங்காயம் கண்ணாடி போல கரைந்து விட, எங்கடா வெங்காயத்தைக் காணவில்லையே என சாப்பிடும் போது தேடிக் கொண்டிருந்தேன்.

கண்ணாடிவிரியனுக்கும் வெங்காயத்துக்கும் ஆகாது போல.

Wednesday, April 29, 2020

காயங்களின் கதாநாயகன் – ஜோசப்


முதலில் இந்தப் பாடலைப் பார்த்து விடுங்கள். பின்னர் படிக்கச் செல்லலாம்.

இது விமர்சனம் அல்ல. படம் பார்த்த போது எனக்குள் உண்டான எண்ணங்கள். விமர்சனம் என்றால் ஒப்பீடு. ஒப்பீடுகள் ஒரு சில இடங்களில் சிலாகிக்க முடியாது. எங்கு விமர்சனம் செய்ய வேண்டுமோ அங்கு அவசியம் கருதி விமர்சிக்க வேண்டும். சினிமா விமர்சனம் என்பது கத்தி மீது நடப்பது போல. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் வாழ்ந்து கொண்டிருப்போம். அதற்கேற்ற அறிவுதான் இருக்கும். அதை வைத்து சரியான விமர்சனத்தை எழுத முடியாது. ஒவ்வொருவருக்கும் இருக்கும் அறிவின் தன்மையைப் போல அவரவர்களின் விமர்சனம் வரும். ஆனால் இது எல்லாவற்றையும் கடந்தது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவை விமர்சிக்க முடியாது. திட்டனும். ஏனென்றால் இன்று வரைக்கும் கிழவர்கள் குமரிகளை அதுவும் ரக ரகமான பாவைகளை காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கைதி திரைப்படம் பார்த்தேன். கதாநாயகியே இல்லை. படம் நன்றாக ஓடியதாக கேள்விப்பட்டேன். கார்த்தியின் ஹீரோயிசத்தை சகித்துக் கொண்டால் ரசிக்க முடியும்.

நாமெல்லாம் பிறரின் ஹீரோயிசத்தைப் படித்து வளர்ந்தவர்கள் தானே. முளைக்கும் போதே தவறான வழிகாட்டல். அது காடு செல்லும் வரை தொடர்கிறது.

இந்த உலகில் ஒரே ஒரு அப்துல் கலாம் தான் இருக்க முடியும். அவரைப் போல வாழ்க்கையை இன்னொருவர் வாழவே முடியாது. ஆனால் நாமோ அவரைப் போல, இவரைப் போல என பேசி தன் சுயத்தை அழித்துக் கொள்கிறோம்.

இனி படம்.

கொலை நடந்த வீடு. எஸ்.பி யாரோ ஒருவருக்காக காத்திருக்கிறார். அவர் தான் இந்த ஜோசப். பழைய ஸ்கூட்டரில் வருகிறார். கொலை நடந்த இடத்தை ஒவ்வொரு பகுதியாக பார்வை இடுகிறார். பேசுகிறார். கொலையாளியைக் காட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விடுகிறார்.

ஆக்ஸிடெண்ட் என்று போனில் அழைக்கிறார் ஒருவர். ஹாஸ்பிட்டலில் ஸ்டெல்லா படுத்து இருக்கிறார். ஸ்டெல்லா இவரின் மனைவி. அழைத்தது ஸ்டெல்லாவின் இரண்டாவது கணவர்.

ஸ்டெல்லா உடனான வாழ்க்கை விரிகிறது. காவியம் போல. இடையில் ஒரு கிளைக்கதை. ஜோசப்பிற்கு முன்னால் காதலி ஒருத்தி உண்டு. அந்தக் காதல் நிறைவேறவில்லை. அவளை அவர் போலீஸாகி வேலை பார்க்கும் போது, ஒரு கொலை விசாரணைக்குச் சென்ற போது அழுகிய பிணமாகப் பார்க்கிறார்.

அதன் பாதிப்பில் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்கிறார். ஸ்டெல்லா ஜோசப் இன்னொரு பெண்ணுடன் சகவாசம் வைத்திருப்பதாக தவறாகப் புரிந்து கொண்டு மகளை ஜோசப்பிடம் விட்டு விட்டு சென்று விடுகிறார். இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் ஜோசப் திருமணம் செய்யாமலே வாழ்கிறார்.

ஸ்டெல்லாவுக்கு மூளைச்சாவு ஏற்படுகிறது. உடலுறுப்புகள் தானம் கொடுக்கப்படுகிறது. ஜோசப் ஸ்டெல்லா ஆக்சிடெண்ட் ஆன இடத்தைப் பார்வையிடுகிறார். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டறிகிறார். அவரின் மகளும் இதே போல ஆக்சிடெண்டில் சிக்கி உயிரிழக்கிறார். அப்போது ஸ்டெல்லா இன்னொருவரின் மனைவி. அப்போது இருவரும் மகளின் உடலுறுப்புகளைத் தானம் செய்ய அனுமதிப்பார்கள். அடுத்த ஆக்ஸிடெண்ட் மரணம் ஸ்டெல்லா.

முதன் முதலாக காதலித்தவரும் கொலையாகிறார். மகளும், மனைவியும் இறந்து போகின்றார்கள். தன் மனவலியை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார் இப்படத்தில். அவரின் வலியை நாம் உள்ளுக்குள் உணரலாம்.

கொலைகளுக்கான காரணத்தைக் கண்டறிகிறார்.

தன்னையே, தன் உயிரை சாட்சியாக்கி விட்டு சாகிறார். கொலையாளிகள் சிக்குகிறார்கள்.

படம் முடிந்தது.

முதல் காதல் – மரணம் வரை மறையாத உணர்வு. ஜோசப் ஏழை என்பதற்காக அக்காதலை இழக்கிறார். காதலியோ இன்னொருவருடன் வாழ்கிறார்.

இரண்டாவது வாழ்க்கை. முதல் காதலியின் மரணத்தின் வலியால் மனைவியை இழக்கிறார். அதை அவளிடம் தாமதமாகச் சொல்கிறார். இருந்தும் என்ன பயன்? அவள் வேறொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெண்கள் அவசர புத்திக்காரர்கள் என்பார்கள். ஆண்களின் உணர்வுகள் சினிமாத்தனமானவை அல்ல. ஒரு முழுமையான ஆண் தன் ஆசாபாசங்களைக் குறைத்துக் கொள்வான் காலத்தின் சூழலுக்கு ஏற்ப. ஆனால் பெண்களில் பலர் அவ்வாறு இருப்பதில்லை.

இன்றைக்கும் என் காதல் மனைவி தன் மகளிடம் ”உங்கப்பா, முன்ன போல இல்லை” என சொல்லிக் கொண்டிருப்பார்.. எனக்குள் ஆயாசம் தான் ஏற்படும். எப்போதும் சினிமா கதாநாயகர்களைப் போல காதலித்துக் கொண்டிருக்க முடியுமா?

மகள் பெரிய பெண்ணாகி விட்ட நாள் முதல் கொண்டு, மனைவியின் முகத்தை காதலுடன் பார்க்க் கூட முடியவில்லை. என் மனைவியின் மீதான காதல், என் மகளின் மீது அன்பாக மாறிப் போனது. அரும்பு மீசை தழுவ மகனைப் பார்க்கும் போது என்னால் வேறொரு பெண்ணை பார்க்கவே முடியவில்லை. வயது கூட கூட, உணர்வுகளும் மாற்றமடைகின்றன. ஆனால் பெண்களோ…??? அவர்களின் உணர்வுகளோ? என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது. அவர்கள் என்றைக்குமே உணர்ச்சிக் கொந்தளிப்பு கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள் தூங்கும் எரிமலை போல.

ஜோசப் பெரிய பெண்ணாகிய தன் மகளை அழைத்துக் கொண்டு, தன் முன்னாள் மனைவி இன்னொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டின் வாசலில் விட்டு வருவார். அப்போது ஸ்டெல்லாவைப் பார்ப்பார். 

அந்தக் காட்சியைப் பார்த்த போது எனக்குள் எழுந்த வேதனையை என்னவென்று சொல்வது. பெண்களால் எப்போதுமே உண்மையானவைகளை அறிந்து கொள்ளவே முடியாதா? அந்தக் காட்சி என் மனதுக்குள் நின்று கொண்டு இரண்டு நாட்களாக பாடாய் படுத்தியது. அவசரம் ஸ்டெல்லாவுக்கு. ஜோசப் கடைசி வரையில் இன்னொரு பெண்ணை நினைத்துக் கூட பார்க்காமல் வாழ்வார்.

ஸ்டெல்லாவுடன் ஜோசப்பின் வாழ்க்கை ஒரு பாடலில் விரியும் அழகான ஆண் மயில் பெண் மயிலை ஈர்க்க விரிக்கும் இறகுகளைப் போல. ஒரு காட்சியில் ஸ்டெல்லா குளித்து விட்டு, கூந்தலில் எண்ணை மிளிரும் அழகோடு, பின்னாலே மல்லிகைச் சரத்தைச் சூடிக் கொண்டு, ஜோசப்பை திரும்பி பார்த்து, ஒரு பார்வை பார்ப்பார். அய்யோ….!!! இன்னும் அந்தப் பார்வையின் காதலை மறக்க முடியவில்லை. இயக்குனர் கலாரசிகன். என்ன ஒரு காட்சி? பாடல் இருக்கிறது யூடிப்பில் கீழே பாருங்கள். சொக்கிப் போவோம்.

ஆண்கள் எப்போதுமே காயங்களோடு தான் வாழ்வார்கள். ஆம் பெண்கள் தங்களிடம் இருக்கும் பல ஆயுதங்களால் ஒவ்வொரு ஆண்களையும் வீழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் வீசும் ஒவ்வொரு ஆயுதங்கள் ஏற்படுத்தும் காயங்கள் என்றைக்குமே ஆறாத தழும்பாய் ஆண்களிடம் பதிந்து விடும். நிராயுதபாணியான ஜோசப் இரண்டு பெண்களின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு முடிவில் தன்னையே அழித்துக் கொள்வார்.

சர்ச்சுகளில் ஒளி வீசிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆண்களின் நினைவுகள் வந்துவிடும்.

ஜோசப்பின் வாழ்க்கை முழுவதையும் நம்முள் உணரலாம். அற்புதமான படைப்பு. எழுதிக் கொண்டே போகலாம். நான் ரசித்தவைகளை எழுத எழுத நான் படத்துக்குள் மூழ்கி விடுவேனோ என்ற பயம் ஏற்படுகிறது. 

என்னை ஈர்த்த அற்புதமான படங்களில் இது ஒன்று.

காயங்களின் கதாநாயகனாக ஜோசப்.

வாழ்க்கையின் அபத்த நாடகங்களை இந்த ஜோசப் திரைப்படம் ஒரு துளியாய் மின்னலடிக்க வைத்திருக்கிறது.

இயக்குனருக்கு என் பாராட்டுக்கள். ஜோஜு ஜார்ஜ் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க நினைக்கிறேன். பார்க்கலாம் காலம் கனியட்டும்.

அமைதியாக அமர்ந்து கொண்டு, இந்தத் திரைப்படத்தை அவசியம் பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்று அறியலாம்.

பல வகைகளில் நாமெல்லாம் காயங்களோடு அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காயங்கள் இல்லாத மனிதர்கள் இவ்வுலகில் உண்டா?

ஆம் நண்பர்களே….!

பாரதி சொன்னான் பாருங்கள்.

காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

ஒரே ஒரு வலியோடு செத்துப் போவது மேல் அல்லவா?

Tuesday, April 28, 2020

கொரானா சொல்லப்படாத உண்மைகள்


அமெரிக்காவில் பத்து லட்சத்துக்கும் அதிகமாக கொரானாவில் பாதிப்படைந்து, அதில் 50000 பேர் உயிரிழப்பு நடந்திருக்கிறது என்கிறது செய்தி. இதை நம்பலாம். ஏனென்றால் அங்கு ஓரளவு பத்திரிக்கை முதலாளிகள் தைரியசாலிகள்.

ஆனால் தமிழகத்திலோ, இந்தியாவிலோ வரக்கூடிய செய்திகளை நம்பக் கூடிய அளவுக்கு மீடியாக்கள் இதற்கு முன்னால் உண்மையான செய்திகளை வெளியிடவில்லை. அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் சொன்னார்கள்.

கோவையில் உண்மையை வெளியிட்ட சிம்ப்ளிசிட்டி இணைய பத்திரிக்கையின் நிர்வாகி கைது அதை வெளிக் கொணர்ந்து இருக்கிறது. ஊருக்கு உண்மையைச் சொன்னால் கைது. தமிழக அரசின் கண் அசைவுகளுக்கு ஏற்ப தான் பத்திரிக்கைகளும், டிவிக்களும் செய்திகளை வெளியிடுகின்றன என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

என்ன உண்மை என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சொல்லுங்களேன் என்று கேட்க தோன்றும். அந்தளவுக்கு தரவுகளை என்னால் திரட்ட முடியாது. செய்தி தாள்களில், இணையங்களில், அரசு உத்தரவுகளில் வரக்கூடிய ஒரு சில செய்திகளை படிக்கும் போது பூனைக்குட்டி வெளியில் வந்து விடுகிறது. உண்மையை மறைக்கலாமே தவிர முற்றிலுமாக தவிர்க்க முடியாது. அது உண்மையின் இயல்பு. பொய் பல அலங்காரங்களுடன் வெளியிடப்படும் போது, அந்தச் செய்தியில் உண்மை எங்கோ ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டு விடும். அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அம்மா உணவகம் மூலம் இலவச உணவு அளிக்கப்படுகிறது என்கிறது அரசு. அதைக் கிண்டல் செய்து கார்ட்டூன் வரைகிறது ஆர்.;பி.ஐ.இயக்குனரின் பத்திரிக்கை துக்ளக். மக்களுக்குப் பதிலாக திமுக என எழுதி இருக்கிறார்கள். எழுத்துப் பிழை அல்ல. கருத்துப் பிழை. உண்மை மக்கள் பட்டினியாக கிடக்கிறார்கள் என்பது.
நேற்று முதலமைச்சர்களுடன் பிரதமர் பேசிய போது, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் தொற்று அதிகரிக்கும் எனச் சொன்னதாக, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாகச் செய்திகள் படிக்க கிடைக்கின்றன. அப்போது இன்னும் இரண்டு மாதங்களுக்கு லாக் டவுன் இருக்கலாம் என சிந்தனை வருகிறது.


கேரளா முதலமைச்சர் பி.எம்முக்கு லெட்டர் எழுதுகிறேன் எனச் சொல்லி, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்களால் எங்களுக்கு எந்த வித நன்மையும் இல்லை என்பதற்காக அவர் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லையோ என நினைப்பு வருகிறது.

கொரானா டெஸ்டிங்கை இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கிறோம் என தமிழக அரசு அறிவிக்கிறது. அப்போது அரசு அறிவிக்கும் தொற்று எண்ணிக்கை சரியானதாக இருக்காது என அறிவு சொல்கிறது. தொற்று எண்ணிக்கை எவ்வளவு எனத் துல்லியமாக அறிவிக்க டெஸ்ட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் தொற்று எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும்? ஆக தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் ஒரு முடிவுக்கு வர வேண்டி உள்ளது.

பிரதமர் மோடி அவர்கள், பசியோடு இருப்பவர்களுக்கு உதவுங்கள் என்று ஏழு கட்டளைகளைப் பின்பற்றும்படி ரேடியோவில் பேசுகிறார். ஆக மத்திய அரசு மக்களுக்கு உதவாது என்று சொல்லாமல் சொல்கிறார் என்று தெரிகிறது.

நாங்கள் வரியை மட்டும் வசூலிப்போம். அதை குறித்த காலத்துக்குள் மாநில அரசுக்கு கொடுக்க மாட்டோம். மக்கள் செத்துப் போனாலும் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனால் பெரிய நிறுவனங்கள் நடத்தும்  முதலாளிகளுக்கு வட்டி, வரிகளுக்கு தள்ளுபடி வழங்குவோம் என்று சொல்கிறாரோ என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

எக்கனாமி நன்றாக இருக்கிறது என்று பேசுகிறார். நாமும் நம்புகிறோம். ஆனால் இந்தியாவில் மியூட்சுவல் ஃபண்ட் பிசினஸ் செய்யும் டெம்பிள்டான் நிறுவனத்திற்கு 50000 கோடி நிவாரணம் அறிவிக்கிறது ஆர்.பி.ஐ. நன்றாக இருக்கிறது எக்கனாமி என்று ஒரு பக்கம் பேசி முடிப்பதற்குள், இந்த செய்தி வெளி வருகிறது. மியூட்சுவல் ஃபண்ட்ஸ் அடிவாங்கினால் மொத்தமாக ஷேர் மார்க்கெட் படுத்து விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை பின் ஏன் டெம்பிள்டானுக்கு ஆர்.பி.ஐ. நிவாரணம் வழங்குகிறது? ஆக இந்தியப் பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என தெரிகிறது. இனி பிரதமர் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்று அறிவு ஆராய்ச்சி செய்கிறது.
தமிழகத்தை பி.ஜே.பி தான் ஆள்கிறது என்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்பார்கள். பால்பாக்கெட் கெட்டுப் போனவுடன், அதை சி.எம்க்கு டிவீட் செய்கிறான். ஆஃப்டர் ஆல் ஒரு கூத்தாடிக்கு வீட்டுக்கே பால் பாக்கெட் கொண்டு போய் கொடுக்கப்படுகிறது. வாங்கியவன் பேசாமல் இருந்திருக்கலாம். வேண்டுமென்றே அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, அதை டிவீட் போடுகிறான். ஒரு டிவீட்டுக்கு அரசு எனக்கு எவ்வாறு வேலை செய்கிறது எனப் பாருங்கள் என தற்பெருமைக்காக, கேவலப்படுத்துகிறோம் என்று தெரிந்தே அதைச் செய்கிறான் அவன். இப்போது நம் தமிழகத்தின் முதலமைச்சருக்கு நெட்டில் வேறு பெயர் வைத்து அழைக்கிறார்கள். இந்தச் சம்பவம் உண்மையில் சென்ஸார் போர்டில் உறுப்பினராக இருக்கும் ஒரு கூத்தாடிக்கு இந்த அரசு பயந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆக பி.ஜே.பி தான் தமிழகத்தை ஆள்கிறது என்ற செய்தியில் உண்மை இருக்கிறது என்று நம்பிட வேண்டியிருக்கிறது.
இப்படித்தான் வெளியிடப்படும் செய்திகளில் இருக்கும் பொய்களைக் களைந்து உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் இதே கதைதான். ஏதோ இந்தியாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைத்து விட வேண்டாம்.

ஒரு நண்பர் என்னிடம், அரசு கொரானா இல்லை என்று அறிவித்த பிறகு, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று கேட்டார்.
கொரானாவுக்கு மருந்து இருக்கிறது என்று உறுதியாக தெரியும் வரையில் அனுப்புவதில் எனக்கு உவப்பில்லை. ஒரு வருடம் லீவ் போட்டு விட்டால் போச்சு. அரசுக்கு கொரானாவில் செத்தார் என்பது அது அறிவிக்கும் எண்ணிக்கையில் ஒரு எண் கூடும். அவ்வளவுதான். அது அவர்களுக்கு எண் மட்டுமே. ஆனால் நமக்கோ அது ஒரு உயிர். நம் வாழ்வின் துடிப்பு. நம் வாழ்க்கை. டிப்ளமேட்ஸ், அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் பிறரின் வாழ்க்கை? யாருக்கு யார் உத்தரவாதம் தர முடியும்? நாம் தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இனி என்னதான் செய்வது? பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நம் எதிர்காலம் என்னவாகும்?

பசிக்கு உணவு அதற்காக உழைப்பு, உடலுக்கு உடை, இருக்க ஓர் இடம். இது போதும். கடவுள் மனிதனை இயற்கையோடு ஒன்றி வாழத்தான் படைத்தார். காசு சம்பாதிக்க அல்ல.

பின்னே இந்த அரசியல்வாதிகளை என்ன செய்யலாம்? இனி வரும் காலங்களிலும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடலாம். எவனாது அரசு இயந்திரத்தை இயக்க வேண்டுமே?

நமக்குத்தான் தைரியம் இல்லையே. கேள்வி கூட கேட்க மாட்டோமே? தெருவில் இறங்கி நிற்க கூட தைரியமில்லையே? எக்கேடு கெட்டால் தான் நமக்கு என்ன? கூனிப் போய் விட்டது மனசும் உடம்பும் நமக்கு.

ஆக, அரசு தன்னால் இயன்றதைச் செய்யும். அது எல்லோருக்குமானதாக இருக்காது. மக்கள் தான் தங்களை காத்துக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் சுடுகாடு. மக்கள் உயிருடன் இருந்தால் ஓட்டுப் போட்டு ஜன நாயகத்தை நிலை நாட்டலாம். வரி கொடுக்கலாம். உயிருடன் இல்லாது செத்துப் போனால் அது அரசின் புள்ளி விபரங்களுக்கு உதவும். இத்தனை பேர் உயிருடன் உள்ளார்கள். இத்தனை பேர் இறந்து விட்டார்கள் என்று அரசு கணக்குகளை டிவியில் வெளியிடும். நிச்சயமாக இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கும். உண்மைக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகமோ அதிகம்.

நீங்கள் புள்ளி விபரங்களில் எதுவாக இருக்க விரும்புகின்றீர்கள் என்பது உங்களின் அறிவுக்கு உட்பட்டது.

ஆகவே நண்பர்களே, இதுவும் கடந்து போகும் என்ற எதிர்மறைச் சிந்தனையில், விதி இதுதான், கடவுளின் விருப்பம் இது, இயற்கையின் சீற்றம் இது என்று வசதிக்கு ஏற்றபடி சிந்தித்து முடிவெடுப்போம்.

குறிப்பு : செய்திகளை உற்றுக் கவனியுங்கள். உண்மையை உணர்ந்து கொள்வோம். நம்மையும், நம் உறவுகளையும், நண்பர்களையும் காப்பாற்றுவோம்.

வாழ்க நலமுடன்…வளமுடன்…!!