குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, April 2, 2020

கொரானா ரசம் செய்வது எப்படி?


கோவையில் கொரானா பரவல் அதிகரித்து வருவது திகைக்க வைக்கிறது. கோவை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வெகு சிரத்தையாக கையாள்பவர்கள். தெருக்கள் எல்லாம் ஆள் அரவமற்று கிடக்கின்றன. கடைகளில் சொல்லும்படி கூட்டம் இல்லை. இருந்தாலும் கொரானா அதிகம் பரவிக் கொண்டிருக்கிறது மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், இன்றைய பத்திரிக்கைச் செய்தி அப்படித்தான் சொல்கிறது. மனது பெரும் கவலையில் சிக்குகிறது.

அன்பு நண்பர்களே…!

இந்த நேரம் நம்மையும், நம் நண்பர்களையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய தருணம். வெகு கவனமாக இருங்கள். நேற்றிலிருந்து இன்னும் 7 நாளைக்கு யாரும் வீட்டை விட்டு எந்த காரணத்துக்காகவும் வெளியில் வருவதை இயன்ற அளவில் நிறுத்துங்கள். ஓடிக் கொண்டிருந்த வேளையில் அமைதியாக இருப்பது உடலளவில், மனதளவில் பாதிப்பினை உண்டாக்கும். ஆனால் நம் ஓட்டத்திற்கு இது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓய்வு என்று நினைத்துக் கொள்ளுங்கள். உள்ளத்தையும், உடலையும் இரும்பாக்குங்கள். வரும் காலம் இன்னும் சவாலான காலகட்டமாய் இருக்கும். அதை எதிர் நோக்கிட மனபலமும், உடல் பலமும் தேவை.

உடலளவில் கொரானா பாதிப்பை தடுக்கும் வலிமை கொண்ட ரசம் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த ரசம் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சரியாக வருமா எனத் தெரியவில்லை. இருப்பினும் கொஞ்சமாய் முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள் என்னவென்று படித்துக் கொள்ளுங்கள்.

கைப்பிடி அளவு துவரம்பருப்பு
மஞ்சள் தூள் சிட்டிகை அளவு

மேற்கண்ட இரண்டையும் குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் (கடாய்) மூன்று தக்காளியை நான்காக வெட்டிப் போடவும், நான்கு பச்சை மிளகாயைக் கீறி போடவும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை நன்கு துருவி வாணலியில் போடவும். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடவும். கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் பெருங்காயத்தூள் ஆகியவற்றைப் போட்டு, இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இஞ்சி வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

பிறகு பருப்பை எடுத்து நன்கு மசித்து, இந்த தக்காளி வெந்த கலவையுடன் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் ரசப்பொடி சேர்த்து கிளறி விடவும். நுரை கட்டி வரும் போது கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.

ஒரு முழு எலுமிச்சைப் பழம் ஒன்றினைப் பிழிந்து சாறு எடுத்து அதனை இறக்கி வைத்த ரசத்தில் சேர்க்கவும்.

அடுத்து ஒரு சிறிய தாளிப்புக் கரண்டியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், சிவப்பு மிளகாய் வற்றல் இரண்டு, மீண்டும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டி கலக்கி விடவும்.

வெகு அருமையான சுவையில் இஞ்சி, லெமன் ரசம் தயார். தாளிப்பு நெய்யில் செய்தால் தான் ரசத்தின் தன்மை சரியாக வரும். இல்லையெனில் பித்தச் சூடு அதிகரித்து விடும். நெய் இல்லையெனில் இந்த ரசம் செய்ய வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Picture Courtesy : Google

இனி தேங்காய் துவையல் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

அரை மூடி தேங்காயை துருவியோ அல்லது பற்களாகவோ எடுத்துக் கொண்டு, அதனுடன் ஆறு சிவப்பு மிளகாய், கொஞ்சமே கொஞ்சம் புளி, நான்கு பூண்டு பற்கள், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்புச் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.

இந்த ரசத்துக்கு தேங்காய் துவையல் சேர்த்துக் கொள்வது இன்னும் சிறப்பு. துவையலில் தாளிப்பு, எண்ணெய் இல்லாததால் அனைவரும் சாப்பிடலாம்.

இப்போது இரண்டும் தயாராகி விட்டது.

தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். தட்டில் சுடு சாதத்துடன் ரசம் சேர்த்து கையால் நன்கு தளர பிசைந்து கொள்ளுங்கள். சோறு ரசத்தில் கலந்து இருக்க வேண்டும். நன்கு பிசைவது முக்கியம். ரசம் அப்போது தான் சாதத்துடன் கலக்கும்.

ஒரு வாய் ரசம் சாதம், ஒரு கிள்ளு தேங்காய் துவையல் எடுத்து, அருகில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு வாயும், மனைவிக்கு ஒரு வாயும் ஊட்டி விடுங்கள். பிறகு உங்களுக்கு.

வாழ்க்கை இந்த ரசம் சுவைப்பது போல சுவைக்கும்.

நம் வாழ்க்கை நமக்காக அல்ல நண்பர்களே…!

நாம் பிறருக்காக வாழ படைக்கப்பட்டவர்கள் என்பதை உணருங்கள். கொடுப்பதில் இருக்குமின்பம் பெருவதில் இல்லை. கொடுக்க கொடுக்க, பிறருக்குக் கொடுப்பதற்காகப் பெருகிக் கொண்டே இருக்கும் அது எதுவாக இருந்தாலும்.

அதற்காக நபிகள் நாயகம் வாழ்க்கை போல இல்லாமல், நமக்கும் கொஞ்சம் வைத்துக் கொண்டு, பிறருக்கும் கொடுக்கலாம் அளவோடு என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்க வளமுடன்..! நலமுடன்…!

Tuesday, March 31, 2020

காவக்காரர்கள்

கிராமங்களின் எல்லைப்புறமாய் கருப்புசாமி கோவில் இருக்கும். ஊர் காவல் தெய்வம் என்பார்கள்.  அந்தக் காலங்களில் ஒவ்வொரு ஊருக்கும் காவல் இருக்க, கையில் கம்புடன், பந்தத்தை ஏந்தியபடி ஊர் எல்லைகளில் காவல் இருப்பார்கள் என படித்திருக்கிறோம்.

காவல்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஊரிலிருந்து அவர்களுக்குத் தேவையானவை அனைத்தும் கொடுக்கப்படும். காவல்காரர்களாய் இருப்பவர்கள் சாமிகளாய் வணங்கப்பட்டார்கள்.

இதோ, இன்று தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள் நம் காவல் தெய்வங்கள். தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் கொரானாவை பரவ விடாமல் தடுக்க, ஐந்தறிவு படைத்த மனிதர்களுக்குப் புரிய வைப்பதற்காக கையில் தடியுடன் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

நடுவீதிகள், தெரு ஓரங்கள், வீடுகள், நிறுவனங்கள் என ஊன், உறக்கம் இன்றி 24 மணி நேரமும் அவர்கள் வேலை செய்கிறார்கள். வெயில், பனி, இரவு எனப் பாராமல் நின்று கொண்டிருக்கின்றார்கள். 

ஒருவர் கண்களில் கண்ணீருடன் வேண்டுகிறார். ஒருவர் பயமுறுத்தி தெருவுக்கு வராதே என்கிறார். ஒருவர் போதாத புத்திகாரர்களுக்கு பிரம்படி கொடுக்கிறார். 

இரவில் வீட்டுக்குச் சென்று தெருவில் கோணிப்பை விரித்து தூங்கி விட்டு, வீட்டின் பின்புறமாகச் சென்று குளித்து, துணிகளைத் துவைத்து, குடும்பத்தைப் பார்த்து விட்டு மீண்டும் காவல் பணிக்குத் திரும்புகிறார்கள்.

24 மணி நேரமும் பணி. மனசும், உடம்பு ஓய்வெடுக்க இயலா நிலையில் அவர்கள் படும் துயரங்கள், மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் இதயத்தில் ரத்தத்தை வரவைக்கும்.

அன்பு காவல்தெய்வங்களே...!

உங்கள் அனைவருக்கும் மனித சமூகம் சார்பாக எனது வணக்கத்தையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் காவலாய் இருக்கும் சூழலை எம்மைப் போன்றவர்கள் தான் உருவாக்கினோம். இனி அது நடக்காது.

உங்கள் தேவைகளை நிறைவேற்றிடவும், தர்மத்தின் தலைமகனாய் தலை நிமிர்ந்து வாழ்ந்திடவும், சட்டத்தையும், தர்மத்தையும் காக்கும் காவல்காரர்களாய் நிமிர்ந்து நடந்திட நாங்கள் நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

எங்களை எப்போதும் காவல்காத்து வரும் தெய்வங்களான உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிய உதவியாக இனி அதைச் செய்வோம்.

சுய நலமும், ஜாதியும், மதமும் இனி எங்களைப் பீடித்து, தீயவர்களையும், கொடியவர்களையும், சுய நலகும்பல்களையும் கண்டுணர்ந்து இருக்கிறோம். அவர்களை ஆட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி, நல்லவர்களை, வல்லவர்களை, மனிதாபிமானம் மிக்கவர்களை, மக்கள் நலத்தில் சுய நலமின்றி பொது நலமிக்க நல்லோர்களையும் தேர்ந்தெடுக்கிறோம்.

தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் நலமுடனும், வளமுடனும் வாழ எல்லாம் வல்ல இயற்கைச் சக்தியை வணங்கி பிரார்த்திக்கிறோம்.

பல்லாண்டு வாழ்க எங்கள் தெய்வங்களே....!


Monday, March 30, 2020

சைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி?


வீட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி நல்ல சத்தான உணவு சமைப்பதில் நம் தமிழர்கள் கில்லாடிகள். அப்படியான ஒரு குழம்பு தான் இந்த சைவ ஈரல் குழம்பு.


ஈரலுக்குத் தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு – ஒரு டம்ளர்
கொஞ்சம் உப்பு

மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:
தேங்காய் கால் மூடி
கசகசா – 1 ஸ்பூன்

குழம்பு வைப்பது எப்படி?

பச்சைப்பயற்றினை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரையளவு உப்புச் சேர்த்து, இட்லி தட்டில் மாவினை ஊற்றி வேக வைக்கவும். பதினைந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். வெந்த இட்லிகளை பார்த்தால் ஈரல் போலவே இருக்கும். அதனை நறுக்கிக் கொள்ளவும்.

அரை மூடி தேங்காய் பூவுடன், ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து வதக்கி அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி ஒரு துண்டு, பத்துப் பற்கள் பூண்டினைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு துண்டு பட்ட, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதனுடன் இரண்டு தக்காளி நறுக்கியதைச் சேர்த்து கிளறவும். தக்காளி வதங்கியவுடன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் மல்லித்தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் சோம்பு தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து கிளறி விட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பாதியாக குழம்பு வற்றியவுடன், தேங்காய் அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் போது, வெட்டி வைத்த பாசிப்பயறு இட்லி துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும்,

முடிவில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும்.

மல்லித்தழை சேர்த்து கிளறி விடவும்,

சூடான சாதம், சூடான இடியாப்பம், அல்லது சப்பாத்தி ஆகியவைகளுக்கு மிகச் சரியான சைடு டிஸ். ஈரல் குழம்பு போலவே சுவை இருக்கும். அந்த பாசிப்பயறு துண்டுகள் மசாலாவில் ஊறி ஈரல் போலவே இருக்கும். மிகச் சரியான சரிவிகித குழம்பு இது.

முயற்சித்துப் பாருங்கள்.


உலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)

நீதிபதி சங்கருக்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை. இந்தக் கொரானா செய்த வேலையால் அவரின் இமயமலைப்பயணம் சீரழிந்து போனது பற்றி அவருக்குள் புழுங்கினார்.

சரியாக 22.03.2020 இந்தியா முழுக்க 144 தடை விதித்தது மத்திய அரசு. வேறு வழியே இல்லாமல் இமயமலை ஆன்மீக பயணம் கேன்சல் செய்யப்பட்டது. 

அய்யோ...அய்யோ என மனதுக்குள் வெம்பினார் நீதிபதி சங்கர். அருமையான சான்ஸ் போச்சே என நொந்தார். கொரானா என்ற பெயரைக் கேட்டாலே காண்ட் ஆகினார். 

பூஜா ஹெக்டேவை நினைத்து நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். 

“ஏய்! கொரானாவே, நானென்ன கேட்டேன். ரஜினிகாந்த் செல்வது போல ஒரு ஆன்மீகப் பயணம். இமயமலைக்கு. உதவிக்கு பூஜா ஹெக்டே. வேறு என்ன எதிர்பார்த்தேன்? தியானம் செய்தேனா? முதலமைச்சர் பதவி கேட்டேனா? இல்லை ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கேட்டேனா? எதுவும் இல்லையே. அட்லீஸ்ட் கவர்னர் போஸ்டாவது கேட்டிருக்கேனா? இல்லையே. இரண்டு நாள் இமயமலைச் சுற்றுப் பயணம் தானே கேட்டேன். அதற்காகவா என்னை இந்தப் பாடு படுத்துகிறாய். இரு உன்னை கூண்டில் ஏற்றி தூக்கு தண்டனை தராமல் விடப்போவதில்லை. மருத்துவ உலகம் உன்னை ஒழிக்கட்டும். அதுவரையில் நான் சும்மா இருக்கப் போவதில்லை. சட்டம் உன்னை விடவே விடாது” என தன் மனதுக்குள் கருவினார்.

அந்த நேரம் பார்த்து கோவை சரவணம்பட்டி போலீஸ் மூலம் இந்த வழக்கு வந்தது. உடனே விசாரிக்கப்படும் என உத்தரவு போட்டு நீதிமன்றத்தில் உட்கார்ந்து விட்டார்.

கொரானாவை கூண்டுக்குள் ஏற்றி தூக்கில் போட அவரால் ஆன சட்டத்தின் வழியை அவர் செயல்படுத்த துணிந்து விட்டார். ஆகவே முகத்தில் மாஸ்கை கட்டியபடி சட்டப்பணி ஆற்ற கோர்ட்டுக்கு வந்து விட்டார் மாண்புமிகு நீதிபதி.

இந்த இமயமலை டீலிங்கைக் கேள்விப்பட்ட எதிர்கட்சி உதவிதலைவர் தன் மாமா மகன் மூலம் நயன்தாராவை ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தார். நீதிபதி அவர் பாட்டுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து விட்டால்,  நம்மால் ஜெயிலில் கிடக்க முடியாதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பூஜா ஹெக்டே நீதிபதியின் உள்ளம் கவர்ந்த கள்ளி என்பதை இவருக்கு யாரும் சொல்லவில்லை. 

நீதிபதி நயன் தாராவை கிழட்டு மூதி எனச் சொல்வது அவருக்குத் தெரியாது.  நல்லவேளை, இந்த டீலிங்கைச் சொல்லி இருந்தால், இமயமலை டீலிங்கை விட்டு விட்டு உடனடியாக கைது வாரண்டு பிறப்பித்து இருப்பார். 

அதற்குள் கொரானா வந்து எல்லாவற்றையும் கொலாப்ஸாக்கி விட்டது. எதிர்கட்சித் தலைவருக்கு நல்ல நேரம் தப்பித்துக் கொண்டார்.

இது எதுவும் தெரியாமல் பூஜா ஹெக்டேவும், நயன் தாராவும் அவரவர் வேலையில் இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த உயர் நீதிமன்ற வக்கீல் அங்கு வந்த வேலனைப் பார்த்து டென்சனார். வேலன் அவராபீசில் கூட்டித் துடைக்கிறவன். அவனிங்கே என்ன செய்கிறான் என குழம்பினார் ராஜ்.

கொரானாவுக்கு ஆதரவாக வாதாட வேலன் ஆஜராகி இருப்பதை கோர்ட்டில் இருந்த அனைவரும் வச்ச கண்ணின் இமை மூடாமல் பார்த்தனர். மீடியாக்கள் வேலன் முகத்தை ஜூம் செய்தன. நீதிபதி சங்கர் கடுப்போடு வேலனைப் பார்த்தார். அங்கு பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடுவதைப் போல தோன்ற, மீண்டும் மீண்டும் எரிச்சலானார்.

”கணம் நீதிபதி அவர்களே, எனது கட்சிக்காரர் கொரானாவுக்கு ஆதரவாக வாதாட அனுமதி வழங்கியமைக்கு எனது நன்றிகள் கோடானு கோடியைத் தெரிவித்துக் கொண்டு தொடர்கிறேன்” என்றான் வேலன்.

“ம்.. ஆகட்டும். தொடருங்கள்” என்றார் நீதிபதி.

“சரவணம்பட்டி போலீஸார் பதிந்த குற்றப்பத்திரிக்கையிலே, எனது கட்சிக்காரர் கொரானா மக்களை கொன்று வருவதாகவும்,  பெரும் துன்பத்தைத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதாவது கணம் நீதிமான் பரம்பரையில் தோன்றிய ஆன்மீகத்தில் ஈடுபாடு உடைய நீதிபதி அவர்களே.....” 

இதென்ன கூத்து? ஆன்மீக ஈடுபாடு என்கிறானே இவன்? இவன் ஆளும்கட்சி வக்கீலா? நம்ம டீலு இவனுக்கு எப்படித் தெரியும்? டவாலி போட்டுக் கொடுத்து விட்டானா? இல்லை ஆளும்கட்சியின் ராஜதந்திர வேலையா? எனத் தெரியவில்லையே எனக் குழம்பினார் நீதிபதி.

இது எதுவும் தெரியாமல் வேலன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..


”எம் கட்சிக்காரர் கொரானா அவர் பாட்டுக்கு சைனாவில் இருந்தார். அவராகவா இந்தியாவிற்கு வந்தார்? இல்லை உங்களைக் கேட்கிறேன். அவராகவா இந்தியாவிற்கு வந்தார். இல்லையே. அவர் சைனாவில் இருந்தார். சைனாவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தது கேரளாவைச் சேர்ந்த ஒருவர். அவரை உள்ளே விட்டு விட்டு, வேடிக்கை பார்ப்பது அரசாங்கம். அது மட்டுமல்ல, அவரின் இயல்பு என்னவோ அதைப் போலத்தான் அவர் இப்போதும் இருக்கிறார். அவரை தன் உடலுக்குள் விழ வைத்து, அவரின் வேலையை அதிகப்படுத்துவது நம்மைப் போன்றவர்கள். நம்மால் அவர் இரவு பகல் தூங்காமல் வேலை செய்கிறேன் எனப் புலம்புகிறார். அவர் யாரையும் கொல்லவும் இல்லை. கொலை செய்யவும் இல்லை.”

டிவியில் பார்த்துக் கொண்டிருந்த புள்ளிங்கோ குருப்பைச் சேர்ந்தவர்கள் உடனடியாக கொரானா புள்ளிங்கோ அமைப்பை உருவாக்கி டிஷர்ட்டுக்கு லோகோவைத் தயார் செய்தனர்.

ஒரு சிலர் தன் வக்கீலிடம், கொரானாவுக்கு ஆதரவாக எங்களையும் சேர்த்து விசாரிக்கும்படி மனுச் செய்யும்படி கேட்க, வழக்குகள் ஏதுமின்றி வீட்டுக்குள் கோவை தங்கவேல் எழுதிய அரிசி ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வக்கீல்கள் சுறுசுறுப்பாயினர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அரசாங்க வக்கீல், டெல்லி வக்கீல் அமித்தை நக்கலாகப் பார்த்தார். அமித்துக்கு கொலை, கொள்ளை, அடிதடி என்றால் புரியும். இந்த கொரானா வழக்கு பற்றி தலையும் புரியாமல், வாலும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.

புதிய தலைமுறையில் பிரதிவாதி கொரானா நல்லவரா? கெட்டவரா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது.



வேளைக்குப் பிறகு தொடரும்....

Sunday, March 29, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)


அந்த வளாகம் பரபரப்பாய் இல்லை. முகத்தில் மாஸ்க் கட்டியபடி அந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர் இருவர்.  

மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டன. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் நீதிபதி சங்கர் வந்தார்.

டவாலி தன் கையில் இருக்கும் குச்சியை தள்ளிப் பிடித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தும் பயம் அவனுக்கு.

வழக்கு எண் சிபி1/2020, வாதி எப்படிச்சாவேன், பிரதிவாதி கொரானா என்று சத்தமாக அழைத்தான் டவாலி.

காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர் ஆகியோருடன் எப்படிச்சாவேன் வாதி அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

வாதியின் வழக்கறிஞர் அமித் டெல்லியில் இருந்து ரகசியப் பயணமாய் தனி பிளைட் பிடித்து வந்திந்தார்.

பல டிவி சேனல்களின் கேமராக்கள் நீதிமன்றத்தை உற்று நோக்கின. நீதிபதிக்கு சினிமாவின் மீதும், சினிமா நடிகை பூஜா ஹெக்டேவின் மீது அபார மோகம். அதனால் இந்த வழக்கை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதற்காக அனுமதி வழங்கி இருந்தார்.

டிவி ஆட்களும் எவன் வந்து தும்முவானோ, எப்படி வந்து ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில் இருந்ததால், தெருத்தெருவாய் அலைவதை விட, அறைக்குள் அமர்ந்து கொண்டிருக்கலாம் என்பதற்காக, உடனடியாக இந்த லைவ் புரோகிராமிற்கு ஆதரவு தெரிவித்து கேமராக்களையும், மைக்கையும் கொண்டு வந்து நீட்டி விட்டார்கள்.

போன மாதம் எதிர் கட்சி அரசியல் தலைவர் மீது, ஆளும் கட்சி சி.யெம்முக்காக வக்கீல் சொட்டையனால் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்தார் நீதிபதி சங்கர். ஆளும் கட்சி சார்பில் ‘என்ன வேண்டுமானாலும் செய்து தர தயார்’ என அரசு வழக்கறிஞர் பன்னி மூலம் செய்தி தரப்பட்டது.

சங்கர் போனவாரம் டி.ஜேன்னு ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஹீரோயினைப் பார்த்ததும் அவரின் அல்லக்கை துடியாய் துடித்த வேதனை தாளாமல், ;கொஞ்சம் பொறு உனக்கு ஏதாவது வழி பிறக்கும்’ என சமாதானம் செய்து கொண்டார்.

’என்ன வேண்டுமானாலும்’ செய்தி காதுக்கு வந்ததும், டவாலி மூலம் பன்னிக்கு இமயமலையில் வழக்கு தொடர்பாக ஆன்மீக டிஸ்கசனுக்கு ஏற்பாடு செய்தால் அரஸ்ட் வாரண்ட் ரெடி என்று தகவல் தரப்பட்டது.

மறு நிமிடமே, பன்னி மூலம் டிஸ்கஸனுக்கு நாள் குறிக்கப்பட்ட விஷயம் நீதிபதிக்கு டவாலி வழியாக தெரிவிக்கப்பட்டது. அந்த நாள் தான் 22.03.2020.

நீதிபதியின் அல்லக்கை துடியாய் துடிக்க ஆரம்பித்தான். ’பொறுத்தார் பூமி ஆள்வார் என உனக்குத் தெரியாதா தம்பி. பொறுத்திரு. கடமையை முடிப்போம். பின்னர் கச்சேரியை வைப்போம்’ என்று சமாதானப்படுத்தினார் நீதிபதி. 

டிஸ்கஸனில் நடிகையின் அதை ஒரு கடி கடித்து விட்டு தான் அடுத்த வேலை உனக்கு என அல்லக்கையை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார்.

வாதியின் வழக்கறிஞர் ஒரு மாதமாக ரெஸ்ட்டில் இருந்தார். ஆகவே இது என்ன வழக்கு என புரிந்து கொள்ள இயலாமல் கசகசப்பாய் சரவணம்பட்டி காவல் அலுவலக ஏட்டு எழுதிய எஃப்.ஐ.ஆரை படித்துக் கொண்டிருந்தார்.

பிரதிவாதிக்கு ஆதரவாக ஆஜர் ஆக யார் வரப்போகிறார்கள் என்று இது வரையிலும் தெரியவில்லை. அரசின் வழக்கறிஞருக்கு எரிச்சலோ எரிச்சல். வழக்குப் போட்ட வாதி எப்படிச்சாவேனை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

உலகமே டிவியின் முன்னால் உட்கார்ந்திருந்தது. கொரானாவுக்கு ஆதரவாக யார் ஆஜராகி வாதாடப்போகின்றார்கள் எனத் தெரியாமல் கண் இமை மூடாமல் கேமராக்கள் வழியே கேமராமேன்கள் பார்த்துக் கொண்டிருக்க, வளாகத்துக்குள் கார் ஒன்று வந்து நின்றது.


(சினிமா உலகிற்கு கலைச் சேவை செய்து, கலைமாமனி, பத்மஸ்ரீ போன்ற விருதுகளை எதிர்காலத்தில் வாங்கப் போகும் கலைத்தாய் பெற்ற மரகதம் பூஜா ஹெக்டே இவர் தான்)

இந்தக் கொரானா வழக்கு தன்னால் தான் நீதிமன்ற விசாரணைக்கே வந்தது என்றுத் தெரியாமல் பூஜா ஹெக்டே பெடிக்கியூர், மெனிக்கியூர் செய்து கொண்டிருந்தாள்.

விளம்பர இடைவேளை முடிந்ததும் தொடரும் வழக்கு விசாரணை…..


முக்கியமான குறிப்பு:
இது நகைச்சுவைக்காக எழுதப்படுகிற நாவல். இதன் கான்செப்ட் உரிமை எனக்கு மட்டுமே. மற்றபடி இது எவருக்கும் எதிரான நாவல் இல்லை. இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நாவல் எழுதும் போது புளொவில் வந்தது. ஆகவே எவராவது மனம் கோணினால் தாங்களே நேராக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த நாவலில் வரும் சம்பவங்களும் யாரையும், எவரையும் குறிப்பிடுவன இல்லை.

Saturday, March 28, 2020

அரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி

சாலையில் அடிபட்டுக் கிடப்பவர்களைக் கண்டும் காணாதது போல வேலைக்குச் சென்ற உலக மகா கனவான்களை இயற்கை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கும் நிகழ்வினை நடத்திக்காட்டுகிறது இயற்கை.

நீங்கள் தான் சக மனிதன் மீது இரக்கம் கூட காட்டாமல் முகம் திருப்பிச் செல்வீர்களே, இப்போது எல்லோரும் வீட்டுக்குள்ளே இருங்கள் என்று சொல்கிறார் இறைவன்.

நேரத்தைப் பார்த்தீர்களா? நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, பிறர் நன்மைக்காக ஒவ்வொருவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்த இறைவனின் செயல் எப்படி இருக்கிறது பாருங்கள்.

எங்கே முயற்சித்துப் பாருங்களேன் வீட்டை விட்டு வெளி வர. தோலை உறித்து தொங்கப் போட்டு விடுவார்கள்.

இயற்கை மீறல். அழிவு என்பதன் அர்த்தம் கொரானா.

அன்பு, இரக்கம் எல்லாம் பணத்தின் முன்பு, நாகரீகத்தின் முன்பு காணாமல் போனது. இப்போது மீள் உருவாக்கம் நடக்கிறது. மனிதர்கள் திருந்த வேண்டும். இல்லையெனில் திருத்த வாய்ப்பு அளிக்கப்படும். திருந்தவில்லை எனில் அழிக்கப்படுவார்கள்.

நம்மை வாழ வைத்த சமூகத்திற்கு நாம் குறைந்த பட்சம் ஏதாவது செய்ய வேண்டும். சக மனிதர்கள் மீது அன்பு வையுங்கள். துரோகம் செய்யாதீர்கள். ஏமாற்றாதீர்கள். பொறாமைப் படாதீர்கள்.

நல்ல எண்ணங்களை மனதுக்குள் நிரப்புங்கள். அன்பினை பகிருங்கள்.

இனி அரிசி ரொட்டி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

அக்கா ஜானகி எனக்கு அடிக்கடி செய்து தரும். நேற்று அம்மணியிடம் சொல்லி செய்து தரச் சொன்னேன். மிக அருமையாக இருந்தது. அதன் பக்குவம் பற்றிச் சொல்கிறேன். செய்து உண்ணுங்கள்.

ஒரு டம்ளர் புழுங்கல் அரிசி
ஒரு டீஸ்பூன் சோம்பு
கொஞ்சம் சின்ன வெங்காயம்
நான்கைந்து பச்சை மிளகாய்
உப்பு

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் நைசாக அரைத்து எடுக்கவும்.

இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

மாவை கொஞ்சம் எடுத்து உப்பு டேஸ்ட் பார்க்கவும்.

தோசைக்கல்லை எடுத்து சூடாக்கி, கொஞ்சம் எண்ணை சேர்த்து அதன் மீது அரிசி உருண்டை எடுத்து கையால் ரொட்டி போல தோசைக்கல்லின் மீது வைத்து தட்டவும். ஓரளவுக்கு ரொட்டி போல வந்ததும், அதன் மீது நல்லெண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். அடுப்பை மெதுவாக எரிய வைக்கவும்.

ரொட்டி வேகும் போது சோம்பு, அரிசி, சின்ன வெங்காயம் சேர்ந்து வேகும் வாசனை அடுப்படியை மூழ்கடிக்கும்.

நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். இதற்கு சைடு டிஸ் தேவை இல்லை. சுவையோ சுவையாக இருக்கும். ஆரோக்கியம் கூட.

முயற்சித்துப் பாருங்கள். 

விரைவில் கொரானா ரசம் பற்றிய பதிவு எழுதுகிறேன்.

Friday, March 27, 2020

மனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை

ஊழல் செய்தவன் வைத்திருக்கும் பணமும், பணமே இல்லாதவனின் நிலையும் இன்றைக்கு ஒன்றே ஒன்று தான். 

உயிர் பயம். எல்லோருக்கும் ஒரே பயம். உயிர் மீதான ஆசை.

அரசியல்வாதிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி கிடக்கிறார்கள். 

பிரதம மந்திரியும், மந்திரிகளும் வாயில் துணி கட்டிக் கொண்டு மீட்டிங்க் போடுகின்றார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லை.

யாரிடம் நோய் கிருமி ஒட்டி இருக்கும் என கணிக்கத் தெரியாத நிலை. மூன்றடி தள்ளி உட்கார்ந்திருக்கிறார்கள். சக மனிதர்கள் மீதான நம்பிக்கை அற்றுப் போனார்கள் தலைவர்கள் எனும் வினோதங்கள்.

ராஜதந்திரிகள் எங்கே போனார்கள் ? விலா எலும்பு ஆட்கள் எங்கே?

ஜாதி எங்கே? மதம் எங்கே? ஆண் எங்கே? பெண் எங்கே? கோவில்கள் எங்கே? சர்ச்சுகள் எங்கே? மசூதிகள் எங்கே?  பூஜைகள் எங்கே? பிரார்த்தனைகள் எங்கே? தொழுகைகள் எங்கே ?நாடெங்கே? மொழி எங்கே? யாகங்கள் எங்கே? ஒருவரையும் காணவில்லை.

அதர்மத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்காரர்கள் பீதியின் பிடியில் சிக்கி வீதியில் நின்று கொண்டிருக்கிறார்கள். யாரிடமிருந்து பரவும் என்று தெரியாத நிலையில் கதி கலங்கி நிற்கிறார்கள். 

கிளை, வட்டம், ஒன்றியம், மாவட்டங்கள் எல்லோரும் வீட்டிக்குள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். கரை வேட்டிகள் கலங்கி நிற்கின்றன. இவர்கள் எல்லோரும் இப்போது எங்கே போனார்கள் என்று தேடிப்பாருங்கள்....

உலகெங்கும் நீதிமன்றங்கள் அரசியல்வாதிகளின் படுக்கையறைகளாகிய கொடுமைகளை ஒவ்வொருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். உலகிற்கே நீதி சொன்ன தமிழ் நாட்டில் துரோகம் வழக்கமானது. சட்டம் ஒழிக்கப்பட்டது. 

அரசின் உத்தரவுக்கு ஏற்ப நீதிபதிகள் நீதி வழங்கினார்கள். சட்டம் அழிக்கப்பட்டது. தர்மம் கொலை செய்யப்பட்டது.  

எல்லோருக்கும் ஒவ்வொரு நியாயம். அது பற்றிய ஆதாரங்களை தேடிப் பிடித்து, நாம் நம்பிக்கொண்டிருக்கும் நியாயத்துக்கு வக்காலத்து பேசிக் கொண்டிருந்தோம்.

ஃபேஸ்புக்கில், டிவிட்டரில் கமெண்ட் போடுவதை எதிர்ப்பாய் காட்ட வைக்கப்பட்டோம்.  உலக அரங்கில் டிவிட்டர், ஃபேஸ்புக் இரண்டும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சாளரம் வீசின. அரசு அலுவலர்கள் அடங்கிப் போனார்கள். இல்லையென்றால் அடக்கப்பட்டார்கள். அதர்மம் தலை விரித்து ஆடியது.

மீடியாக்காரர்கள் ஒவ்வொருவரும் ஊழலின் ஒட்டு மொத்த விசிறிகளாய் மாறினார்கள். அவர்கள்ள மதம், இனம், மொழி, அரசியல், கட்சி கண்ணாடிகள் வழியாக செய்தி வெளியிட வேண்டியவர்கள் ஆனார்கள். 

உலக மனிதர்கள் அனைவரும் யாரோ ஒருவனின், ஒரு கூட்டத்தின் ஆசைக்காக மாறினார்கள். மாற்றப்பட்டார்கள். இது எதுவும் தெரியாமல் நாமெல்லாம் தர்மம் இது, பாவம் இது, புண்ணியம் இதுவென வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருந்தோம். 

ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயமாய் மாறி மனதுக்குள் மிருகங்களாய் மாறினோம். தோற்றத்தில் நாகரீக மனிதர்களாய் நடித்துக் கொண்டிருந்தோம்.

கடமையை நாம் செய்யத் தவறினோம். தன் இயல்பு மறந்தோம். காசேதான் கடவுள் என்று அலைந்தோம். வெளி நாடு வாழ்க்கை இனித்தன நமக்கு. ஆனால் இப்போது வெளி நாடு என்றாலே அலறுகிறோம். என்ன ஒரு விசித்திரம் பாருங்கள். ஒரு மாதம் முன்பு வரை இப்படி ஒரு நிலை வரும் என்று கனவு கூட கண்டிருக்கமாட்டோம். ஆனால் எல்லாமும் நடக்கிறது. மனிதர்கள் சக மனிதர்களை அழிக்க ஆயுதங்களை உருவாக்கினார்கள். அவைகள் இப்போது என்ன செய்கின்றன? கொரானாவின் மீது உலக போலீஸ் அமெரிக்கா அணுகுண்டைப் போடுமா? 

கடவுள் இன்றும் நம்மைக் கைவிடவில்லை. 

அவர் நம் முன்னால் விதித்த கட்டளை இருக்கிறது. 

சுய கட்டுப்பாடும், சுய ஒழுங்கும், சமுதாயத்தின் மீதான அன்பும் காட்டப்படவில்லை எனில் எல்லோரும் அழிக்கப்படுவீர்கள் என்கிறார் கடவுள்.

அதர்மத்தை வேடிக்கை பார்ப்பதை விட்டு விடுங்களென்று ஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் விடுத்திருக்கிறார் கடவுள் எனுமியற்கை.

மனிதர்களிடத்தில் அதர்மத்தின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்க, அதிகரிக்க இறைவன் மனிதர்களுக்கு பாடம் புகட்டி விரும்பியதன் விளைவு தான் கொரானா.

இனியும் திருந்தவில்லை எனில் முற்றிலுமாய் பூமியில் இருந்து துடைத்து எறியப்படுவோம் என்பதனை எவரும் மறந்து விடாதீர்கள். நம் வாரிசுகளும் சொத்துக்களும் ஒன்றுமே இல்லாமல் தூசியாகிப் போவார்கள்.

தர்மத்தைக் காக்க துணிவு கொள்ளுங்கள்.

அன்பை விதையாய் விதைப்போம். அதை அன்பு மலர் மலரும் மரமாய் வளர்த்தெடுப்போம்.

உலகிற்கு தேவை மனிதாபிமானம் மிக்க தலைவர்கள். அவர்களை நாம் தேர்ந்தெடுப்போம் கட்சி பேதங்கள் இன்றி.

உலகிற்கு அன்பினை பரிசளிப்போம். 

போனதெல்லாம் போகட்டும் இனி வரும் காலம் வசந்தமாய் மலரட்டும்.

Saturday, February 15, 2020

கணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி? (18க்கு மேல் மட்டும்)

நேற்று காலையில் ஒரு வேலையாக வெளியில் வந்த போது சாலையின் நடுவில் அணில் ஒன்று அடிபட்டு துடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று கடந்து விட்டேன். மனது கேட்கவில்லை, உயிரோடு இருந்தால் தூக்கி அந்தப் பக்கமாய் விட்டு விடலாம். இல்லையென்றால் வீட்டுக்கு எடுத்துக்கு போய் கோதையிடம் திட்டு (சுகமோ சுகம்) வாங்கலாம் என நினைத்துக் கொண்டு வண்டியைத் திருப்பிக் கொண்டு அதன் அருகில் வந்தேன். 

(அது என்னவோ தெரியவில்லை, என் மனையாள் கோபம் கொள்ளும் போது வெகு அழகாய் இருக்கிறாள். நானும் மகளும் அவளை காலையில் ஏதாவது சொல்லி வம்பு இழுப்பதும், அவள் கோபம் கொள்வதும் ஊடல் கொண்ட அவளுடன், பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றவுடன் முயங்குவதும் இப்படியே செல்கிறது வாழ்க்கை. இப்போதெல்லாம் அவள் என் பெண் நண்பர்களைப் பற்றி அதிகம் விசாரிக்கிறாள். பெண்களுக்குச் சந்தேகம் உடன் பிறந்த தமக்கை போல)

வண்டி செல்லும் போது உருவான காற்றினால் அதன் வால் ஆடியதைக் கண்டு அது உயிரோடு இருப்பதாய் நினைத்து விட்டேன். 

அய்யகோ.. !

அது செத்துப் போய் விட்டது.

சட்டென்று மனதுக்குள் கவிழ்ந்த பாரத்தால் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. என் படுக்கை அறையின் சன்னலோரம் தினமும் ஒரு அணில் கொய்யாமரத்தில் குதித்து ஓடி, சுவர் மீது உட்கார்ந்து தலையை அப்படியும், இப்படியுமாய் திருப்பிக் கொண்டிருக்கும். எனக்கு அவன் நினைவில் வந்து விட, உள்ளம் துடியாய் துடித்தது. அவனாக இருக்குமோ? இருக்காது என ஓரமாய் துளிர்த்தது நம்பிக்கை. அணில் என்றவுடன் ராமர் நினைவுக்கு வந்து விடுகிறார்.

ராமபிரானுக்கு மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து கோவில் கட்ட நீதியை குழியில் போட்டு புதைத்த கதையை பாரதம் கண்டிருக்கிறது. அடியேனுக்கு தர்மம் மட்டுமே கண்ணில் தெரியும். பிறவெல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒன்றுமில்லாதவை. ஆகவே அயோத்தியில் ராமர் கோவில் என்பது தர்மத்திற்கு விடப்பட்ட சவால் என்றே கருதுவேன். அவர்கள் கோவிலை இடித்தார்கள் ஆகையால் நாம் மீண்டும் கட்டுகிறோம் என்ற அபத்தவாதம் ஏற்கவியலாது.

ஒரு அதர்மத்துக்கு இன்னொரு அதர்மம் என்றால் உலகில் ஒருவர் கூட உயிரோடு இருக்க முடியாது. 

ராமபாணம் துளைத்த வாலி தன் நெஞ்சிலிருந்து பிடுங்கிய அம்பில் ராமன் பெயர் கண்டு, அவனுக்குள் எழும்பிய ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள் உண்டு.  தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்பார்கள். அதன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டால் விடை கிடைக்கும். ஒரு சிறிய மறைப்பு மட்டுமே என் முன்னால் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது மறைந்து விட்டால் மனித வாழ்க்கையின் சூட்சுமம் விளங்கி விடும். இன்ப துன்பம் பற்றிய காரண காரியங்கள் தெரிந்து விடும். அது எப்போது நடக்குமோ தெரியவில்லை.

நெடுவாசல் (ஹைட்ரோகார்பன் நெடுவாசல்) மாணிக்கதேவர் (என் அப்பா) மழை பெய்யவில்லை என்றால் இன்றும் என்னோடு வைத்திருக்கும் ராமாயாணம் புத்தகத்தை வாசிப்பாராம். வாசித்து முடிக்கையில் மழை பெய்யும் என்று அப்பாவின் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது பழங்கதை. என் அப்பாவை ஒரு நாள் கூட அப்பா என்று அழைக்கவில்லை. அப்படி ஒரு பாசம் எனக்கும் என் அப்பாவுக்கும். இனிமேல் எனக்கு இனியொரு அப்பாவா வரப்போகிறார்? அப்பாவின் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், என் காலம் முடிந்ததும் இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறேன். எல்லோருக்கும் கிடைத்த அப்பாவின் அன்பு எனக்கு கிடைக்காமலே போய் விட்டது. அம்மா? அன்பு????? அடியேன் இந்த விஷயத்தில் துரதிர்ஷ்டத்தின் குழந்தை.

ஆனால் என் குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. வைக்கவும் மாட்டேன். என் மகனோ, மகளோ இதைப் போன்ற பதிவு எழுதக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன்.



ராமர் மீது அதீத பக்தி கொண்ட அணில் ஒன்று, லங்காவுக்குச் செல்ல வானரங்கள் பாலம் கட்டிக் கொண்டிருந்த போது, அவருக்கு உதவ முடிவெடுத்து, கடலுக்குள் விழுந்து நனைந்து, கடலோரம் சென்று உடலை மணலில் பிரட்டி, தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணலை பாறைகளின் இடுக்குகளில் உதிர்த்துக் கொண்டிருந்ததாம். அதைக் கண்ட ராமன் அதை அன்போடு கையில் எடுத்து அதன் முதுகில் தடவிக் கொடுத்தாராம். அதனால் அதன் மீது ராமர் கோடு விழுந்ததாம் என்றுச் செவி வழிக் கதை ஒன்று உண்டு. 

அணில்கள் சத்தம் ஒரு வித கீச் குரலில் அபஸ்வரம் மாதிரி இருக்கும். இப்போது தாளம், சுருதி,லயமில்லாமல் வரும் சினிமா பாடல்கள் போல. அதன் சுறுசுறுப்புக்கு இணையாக வேறு எந்த பிராணியையும் சொல்ல முடியாது. இந்த அணில்களை குறவர்கள் கவட்டியால் அடித்து குடலைப் பிடிங்கி தோளில் தொங்க வைத்துக் கொண்டு செல்வதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

எனக்கு திடீரென்று மஞ்சு நினைவுக்கு வந்து விட்டாள். மஞ்சு மஞ்சளாய் ஜொலிக்கும் குறத்திப் பெண். வாரா வாரம் கீரமங்கலத்திலிருந்து ஊசி,பாசி விற்க வருவாள். வீட்டுக்கு தவறாது வருவாள். அடியேன் அவளைப் பார்ப்பதற்காகத் தவமாய் தவமிருப்பேன். பழைய சோறு போட்டுக் கொடுப்பார்கள். ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு, அவள் கஞ்சி சோற்றினை அள்ளிச் சாப்பிடும் அழகே அழகு. அவளை விட்டு ஒரு நொடி கூட அகல மாட்டேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. குட்டைப்பாவாடையில் அவளின் நடை அழகு சுண்டி இழுக்கும். இடையில் நெளிந்து செல்லும் தாவணி அவளின் முன்னழகை மறைக்க முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். மஞ்சள் கிழங்கு போல நிறம் அவளுக்கு. 

அவளின் கணவன் அவளை விட்டு விட்டுச் சென்று விட்டானாம். நான் அவளிடம் கேட்டேன், ”என்னைக் கட்டிக் கொள்கிறாயா?” என. சிரித்தாள். முல்லைப் பற்களின் வரிசையில் மனது சொக்கிப் போகும். கன்னத்தில் விழும் குழியில் இதயம் விழுந்து துடித்துக் கொண்டிருக்கும்.

”உன் அம்மாவும், அக்காக்களும் உயிரோடு என்னைக் கொளுத்தி விடுவார்கள்” என்றாள். கல்லூரிக்குச் செல்லும் முன்பு ஒரு வருடம் வீட்டில் இருந்த போது அவளின் வாரா வாரம் வருகை நின்றதே இல்லை. கல்லூரிக்குச் சென்ற பிறகு இரண்டொரு முறை அவள் தங்கி இருந்த குறவர் குடிசைகளுக்குச் சென்று அவளைத் தேடினேன். கிடைக்கவில்லை.


நான் நடப்பதாக இருந்திருந்தால் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்று இயமலைப் பக்கமாய் குடிசையைப் போட்டுக் கொண்டு அவளை விட்டு அகலாமல் அவளுடனேயே இருந்து இன்பமாக வாழ்ந்து இருப்பேன். வீட்டில் இரண்டு மணி நேரம் இருப்பாள். அம்மா ஏதாவது வாங்குவார்கள். தங்கைக்கு கண்மை, கிளிப் என. சோகத்துடன் செல்வாள்.  எனக்கோ கரையில் தூக்கிப் போட்ட மீனாய் உள்ளம் கிடந்து துடிக்கும். அவள் வரும் நாளன்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பேன். அந்த இரண்டு மணி நேரம் இருக்கிறதே, அதைப் போல நாட்கள் இனி என்றும் வரப்போவதில்லை. 

“மஞ்சு, நீ இப்போது எங்கே இருக்கிறாயோ தெரியவில்லை. உன் மீது அறியா வயதில் நான் கொண்ட காதல் இன்னும் என் நெஞ்சில் கல்லாய் சமைந்து கிடைக்கிறது. மீண்டும் மனிதனாய் பிறந்து உன்னோடு சேரும் நாள் வருமா எனத் தெரியவில்லை. உன் நினைவுகளுடன் நான் நடத்தும் அபத்தமான நாடகத்தின் விளைவைப் பார்த்தாயா மஞ்சு. எதையோ எழுத வந்து உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உன் அழகிய முகத்தில் என்றும் ஈரமாய் தெரியும் உன் விழிகளின் கருவிழிக்குள் சென்று விட இதயம் துடிக்கிறது மஞ்சு. உன் அழகான மை பூசிய கண் இமைக்குள் மறைந்து போய் விட துடியாய் துடித்துக் கொண்டே இருக்கிறது மனசு மஞ்சு”

”மஞ்சு...! மஞ்சு....! உன் மீது கொண்ட நான் கொண்ட காதலால், என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை அன்பே. உன் நினைவுகளுடன் உள்ளம் கரைந்து போய் விட்டது.”

அன்பு நண்பர்களே தலைப்பின் கதையை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன். 

Thursday, February 13, 2020

நிலம் (62) - வீடு கட்டப் போறீங்களா? இதைக் கொஞ்சம் படியுங்க

வீடு என்பது இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த வார்த்தை. வேறு எந்தச் சொல்லுக்கும் இல்லாத விசேஷங்கள் பல உண்டு இந்தச் சொல்லுக்கு. வீடு என்பது எளிதில் கடந்து போகும் சொல் அல்ல. உணர்வு, வாழ்க்கை, வரலாறு என இந்தச் சொல்லின் பின்னால் மறைந்து கிடப்பவை அனேகம். வீடு என்பது ஒருவரின் வரலாறு மட்டும் அல்ல. சூரிய உலகில் பூமி எப்படி மனிதர்களுக்கு ஆதாரமோ அதைப் போல வீடு, ஒவ்வொரு மனிதர்களின் ஆதாரம். வீடின்றி மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. 

வீடுகளுக்கு இலக்கணம் ஒன்றே ஒன்று தான். மறைப்பு. அது பத்து அடி அளவில் இருக்கலாம். குடிசையாக இருக்கலாம். மாளிகையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது வீடு தான். வீடு முழுமை அடைவது நல்ல தகப்பன், தாய், பிள்ளைகளால் மட்டுமே. யோசித்துப் பார்த்தால் வீடு பிள்ளைகளுக்காகத்தான் இருக்கும். தான் மட்டும் வாழ ஒருவர் வீடு கட்ட மாட்டார். தன் பிள்ளைகள், மனைவிக்காக, உறவினர்களுக்காக, அந்தஸ்துக்காக என்று பல காரணிகள் இருப்பினும் பிள்ளைகள் முதல் காரணமாக இருக்கும்.

சம்பாதித்து, வீடு கட்டி வாழ்வது என்பது சமூக அந்தஸ்து என முன்னாட்களில் கருதப்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை. காலம் மாற மாற வீடு மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டிருக்கின்றது.

பொருளாதாரத்தை முன்வைத்து சமூக அந்தஸ்து இப்போது முன்னிலைப் படுத்தப்படுகிறது. வல்லவர்களை முதன்மை மனிதர்களாக கருத ஆரம்பித்திருக்கிறது சமூகம். அவர்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் சரி, அது பற்றிய பிரக்ஞை சமூகத்தின் பால் பெரிதாக எடுபடுவதில்லை. பணம் இருந்தால், அவன் உயர்ந்தவன் என கருத ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற மனிதர்கள் தங்கள் நல்லியல்புகளை இழக்க ஆரம்பித்து விட்டார்கள். நல்லியல்புகள் மறைய மறைய, சமூகத்தில் குற்றங்களும், அக்கிரமங்களும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. பிறரின் வார்த்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை, சந்தோஷத்தை இழப்பதில் மனிதனுக்கு நிகர் மனிதன் மட்டுமே.

மனிதர்கள் எப்போதும் தன் வயத்தில் சிந்திப்பது இல்லை. யாரோ ஒருவரின் சிந்தனைக்கு உட்பட்டு தான் தனது செயல்களையும், சிந்தனைகளையும் கொண்டிருக்கிறார்கள். ஒரு இந்து தனக்கான வாழ்க்கையை சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருக்க முடியும். கட்டுப்பாட்டை மீற வேண்டுமானால் பெரும் தனக்காரனாக இருந்தால் தான் சாத்தியமாகும். இப்படியான சூழலில் ஒருவன் வீடு கட்டி வாழ்வது என்பது எதன் அடிப்படையில் என்றொரு கேள்விக்கு விடையைத்தான் கீழே எழுதி இருக்கிறேன். இதுதான் உண்மை. இதுதான் எதார்த்தம். மன்னர் கட்டிய கோட்டைகள் சிதிலமடைந்து கிடப்பது கண்முன்னாலே இருக்கும் சாட்சி. இதை மறந்து விடாதீர்கள். என்றைக்கும் இது உங்கள் நினைவிலிருக்க வேண்டிய உண்மை.

எனது அனுபவத்தில் ஒருவரின் வீடு பற்றிய சம்பவத்துக்கு வரலாம்.

சமீபத்தில் எனது நண்பரின் வேண்டுகோளுக்காக விற்பனைக்கு வந்திருக்கும் வீடு ஒன்றினைப் பார்வை இடச் சென்றிருந்தேன். வீட்டின் உரிமையாளரை வரச் சொல்லி இருந்தார் நண்பர். வீடு அல்ல அது. மாளிகை. ஒவ்வொரு சதுர அடியையும் செதுக்கி இருந்தார் உரிமையாளர். 

இது என் அறை, இது மகனுக்காக, மகள்களுக்காக என அவர் காட்டிய ஒவ்வொரு அறைகளிலும் பணம் கொட்டப்பட்டிருந்தது. நகரின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள அந்த வீடு தூசு படிந்து காணப்பட்டது. பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் வசிக்க மகனும் மகளும் மறுத்து விட்டார்கள். 

என் ரசனை வேறு, அப்பாவின் ரசனை வேறு என்றுச் சொல்லி வேறு வீடு கட்டிச் சென்று விட்டார்கள். கோடிகளைக் கொட்டி யாருக்காக கட்டினாரோ அவர்களுக்கு அந்த வீடு பிடிக்கவில்லை.  மனைவிக்கோ இவ்வளவு பெரிய வீட்டினைக் கட்டி மாளவில்லை என சலிப்புத் தட்டி விட, அவரின் கனவு வீடு அவரின் முன்னால் நின்று சிரித்தது. பார்த்துப் பார்த்து கட்டிய வீடு இப்போது விற்பனைக்கு வந்து விட்டது. அவர் அந்த வீட்டின் மீது கொண்ட அன்பு, ஆர்வம் விலை சொல்லும் போது கண்ணீராக வழிந்தது.

நான் வேறு, என் கனவுகள் வேறு. என் வாரிசுகளின் கனவு வேறு தங்கம். இதைப் புரிந்து கொள்ள இத்தனை ஆண்டுகாலம் பிடித்து விட்டது. இவ்வளவு பெரிய வீட்டினைக் கட்டியதற்கான செலவில் பாதியை வங்கியில் வைத்திருந்தால் இன்றைக்கும் ஏதாவது கொஞ்சம் வருமானம் வந்து கொண்டிருக்கும். அறிவு அப்போது வேலை செய்யவில்லை. உணர்ச்சிதான் என் அறிவை மழுங்க அடித்து விட்டது என்றார். 

இன்றைய காலத்தில் பொருளாதாரத்தை மிகத் துல்லியமாக கணித்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. படாடோபம் அழிவைத் தரும். சேமிப்பு நிம்மதியைத் தரும் என்று புரிந்து கொள்ள வேண்டும். முதலீடு என்பது எதிர்காலத்தில் வளர்ந்து இருக்க வேண்டும்.

வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களுக்கு அவ்வீடு, முதலீட்டில் 4 சதவீதம் கூட சம்பாதித்து தருவதில்லை என்பது புரிவது இல்லை. புதிய வீடு பழைய வீடாகும், செலவுகள் வந்து கொண்டே இருக்கும் என்று புத்திசாலிகளுக்குப் புரியும். அக்கிரமம் செய்து சம்பாதிப்பவர்களின் கதை வேறு. அவர்களின் கதையே வேறு. பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்களைப் பற்றி இங்கு சொல்கிறேன். வீடு கட்டி வாடகைக்கு விடலாம். அது 20 பர்செண்டேஜ் லாபம் தருமென்றால். முதலீடு குறைவாக இருத்தல் அவசியம், அந்த முதலீட்டின் மூலம் வரக்கூடிய வருமானம் நிறைவானதாக இருக்க வேண்டும். 

அதற்கு என்ன செய்யலாம் என இனி எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

உங்களுக்காக வீடு கட்ட வேண்டும். அவ்வீடு நீங்கள் அர்த்தத்துடன் வாழ்வதற்காக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் செலவுகள் வந்து மிரட்டுவதாக இருக்க கூடாது. கடன் வாங்கி வீடு கட்ட கூடாது. எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் வீடு கட்டவே கூடாது என்று பல கூடாதுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவு கூடாதுகளைக் கருத்தில் கொண்டு வீடு கட்டினால் மிகச் சந்தோசமாக வாழலாம். அது சாத்தியமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முடியாதது என ஒன்று இவ்வுலகில் உண்டா? டீக்கடைக்காரர் நாட்டை ஆளும் காலம் இது என்பதை மறந்து விடாதீர்கள். அவர் முடியாது என்று நினைத்திருந்தால் பிரதமராக முடிந்திருக்குமா?

பல முடியாதுகளை முடியும் என்ற கனவுகளோடு நாங்களும் உங்களுடன் பயணிக்க இருக்கிறோம். வீடு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவு. 

காலங்கள் மாற மாற வீடும், அதைப் பற்றிய தேவைகளும் மாறக்கூடும். ஆனால் மனிதர்கள் என்றைக்கும் அதே ஆசா பாசங்களுடன், தேவைகளுடன் தான் பிறக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.  மனிதர்களின் மாறாத அந்தக் குணங்களுடன் இயைந்து வீடு இருப்பின் அதை விட சந்தோஷம் வேறொன்றும் இருக்காது அல்லவா?

வாழ்க வளமுடன்....!

Friday, February 7, 2020

இறகா? சிறகா?

கோவை, சிவானந்தா மில் சாலையில் வாகனங்களின் பெருக்கம் அதிகமாகி விட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் இருந்த கீரைத் தோட்டம் காணாமல் போய், பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் குளிர்ச்சியாக இருந்த இடங்கள் வெப்பத்தால் சுடுகிறது. 

மூன்றாவது தெருவின் மூலையில் அழுக்கேறி கிடக்கும் குப்பைத்தொட்டியில் கிடைக்கும் உணவை உண்டு, அவ்விடத்திலேயே தங்கி ஒரு நாய் சில குட்டிகளை ஈன்று வளர்த்து வருகிறது. தாய் நாயின் உடம்பெல்லாம் வங்கு பிடித்தது போல இருக்கும். ஆனால் குட்டிகள் ஒவ்வொன்றும் அழகோ அழகு. வீட்டில் ஏற்கனவே இரண்டு லேப்ராடர்கள் இருப்பதால் இவைகளுக்கு இடம் கொடுக்க முடியாது. நினைத்தாலும் நடக்காது. அம்மணி ஓகே சொல்லனும்.

தினமும் அக்குட்டிகளை பார்ப்பது வாடிக்கை. 

காலை ஒன்பதரை இருக்கும். அத்தெருவினைக் கடக்கும் போது சிறு செவலைக் குட்டி, வாலை ஆட்டியபடி ஒருவரின் காலைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவர் மேரி பிஸ்கட் கட்டு ஒன்றினைப் பிரித்து, கால்களால் புற்களைச் சமப்படுத்தி, அதன் மேல் வைத்தார். 

“இந்தா, சாப்பிடு” என்றார்.

அச்சிறு குட்டி, வாலை ஆட்டிக் கொண்டு, அவசர அவசரமாக பிஸ்கட்டுகளை விழுங்கியது. அவர் குட்டையாக இருந்தார். நெற்றியில் விபூதி பூசி இருந்தார். கண்களில் கருணை. அக்குட்டி பிஸ்கட் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்து நகர்ந்தேன். மனதுக்கு இதமாய் இருந்தது. 

ஜீவகாருண்யம். உலகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் உணர்ச்சி.

சக உயிர்களின் மீதான கருணை எல்லோருக்குள்ளும் உண்டு. ஆனால் அவர்கள் வெளிக்காட்டுவதில்லை. வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் தெய்வமாய் வணங்கப்படுகிறார். எத்தனை எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் துயரப்படுபவர்களுக்கு பொருளாகவும், பணமாகவும் கொடுக்கிறார்கள். பிறரின் துயரம் கண்டு உள்ளம் துடிப்பவர்கள் மனிதர்கள். கண்டும் காணாது செல்பவர்கள் மிருகங்கள்.

ஆந்திராவில் ஒரு ஏழைப் பாட்டி ரூ.2.50க்கு தோசை கொடுக்கிறது. கோவையில் சாந்தி கேண்டீன் 10 ரூபாய்க்கு அறுசுவை உணவு கொடுக்கிறது. அவர் பணத்தைப் பார்த்து விட்டார். புகழையும் அடைந்து விட்டார். இவை எதுவும் அவருக்கு எதையும் தரப்போவதில்லை. பணக்காரர்களிடம் பெயரும், புகழும் பெற்றதனால் கிடைக்கப்போவது ஒன்றும் இல்லை. சாந்தி கேண்டீன் சண்முகம் அவர்களுக்குள் பொங்கி வழிந்து கொண்டிருப்பது ஜீவகாருண்யம்.

கலெக்டரிடம் பல ஹோட்டல்காரர்கள் புகார் கொடுத்தனராம். ”விலை குறைத்து தான் கொடுப்பேன், விலை இல்லாமலும் கொடுப்பேன் , அது என் விருப்பம்” எனச் சண்முகம் சொன்னதாகச் செவிவழிச் செய்தி. ஜீவகாருண்யத்தையும் அரசாங்கம் தடுக்கும் என்பது நிதர்சன உண்மை.

மீண்டும் ஒரு ஹோலோஹாஸ்ட்டை (ஜெர்மனியில் ஹிட்லர் உருவாக்கிய வதைக்கூடம்) உருவாக்க நினைப்பவர்கள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம். அரசியல் மக்களுக்கானது அல்ல என்பதை காலம் மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. கலிபுருஷன் அழிவு நடனம் ஆடுகிறான்.

(இன்று உலகையே வேவு பார்க்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியவர்களின் மூதாதையர்களான ஜூவிஸ்கள் இவர்கள். இவர்களைப் படுகொலை செய்த மாபெரும் தலைவர் ஹிட்லர்)

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, அனைத்து உலக நாடுகளும் வேடிக்கை தான் பார்த்தன. இலங்கையில் குருடூ ஆயில் இருந்திருந்தால் அமெரிக்கா தலையிட்டு இருக்கும். நேச நாடுகள் போர்ப்படைகளை அனுப்பி இருக்கும். ஐ.நா. பொருளாதார தடை விதித்திருக்கும். ஜனநாயகத்தைப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் உலக நாடுகளும், பத்திரிக்கையாளர்களும், அமைப்புகளும் கதறி இருப்பார்கள். அழிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் உலகமே வாளாயிருந்தது. வேடிக்கை பார்த்தன. தமிழும், தமிழர்களும் உலகில் வாழவே முடியாத, கூடாத உயிரினமாக மாறிக் கொண்டிருக்கிற அவலம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.



(இலங்கை தமிழர்களின் இனப்படுகொலைகள்)

சமையற்கட்டில் இன்று அடியேனுக்கு காய்கறிகள் நறுக்கும் வேலை இல்லை. காலையில் காலச்சுவடில் வெளிவந்திருந்த ’ரேமண்ட் கார்வரின்-இறகுகள்’ சிறுகதையைப் படிக்க ஆரம்பித்தேன்.  இட்லியும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத தக்காளிச் சட்னியும் சாப்பிட்டு விட்டு (எவன் இந்தத் தக்காளியைக் கண்டுபிடித்தானோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் தக்காளி, தக்காளி. இது இல்லாத உணவு இல்லையென்று ஆகிவிட்டது) படுக்கையில் படுத்துக்கொண்டே கதையை  படிக்க  ஆரம்பித்தேன்.

உள்ளூர் சரக்கே விற்பனை ஆகவில்லை, இதில் வெளி நாட்டுச் சரக்கை எங்கே விற்பது என்பார்கள். அடியேனுக்கு வெளி நாட்டு நாவல்கள், சிறுகதைகள் மீது ஈர்ப்பே இருந்ததில்லை.

தமிழக எழுத்தாளர்கள் பெண்களின் கவட்டிக்குள்ளிருந்தும்,  ஜாதிய புனைவுகளிலுருந்தும், ஏழைப் புனைவுகளில் இருந்தும் வெளிவராத நிலையில், வெளி நாட்டுக்காரர்கள் புதிதாக என்ன எழுதி இருக்கப்போகின்றார்கள் என்ற நினைப்பு.

ஏனோ தெரியவில்லை இன்றைக்கு வெளி நாட்டு எழுத்தாளரின், அக்கதையைப் படித்தேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. படித்து முடித்ததும் இனம் புரியாத ஒரு உணர்வு என்னைப் பீடித்தது. இதற்குள் மனைவி, “என்னங்க, என்ன யோசிக்கிறீங்க? என்ன ஆச்சு?” எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பொன்னிறக்கூந்தல் ஃபிரானும், அவள் கணவன் ஜேக்கும், தன்னுடன் வேலை செய்யும் பட்டின் வீட்டிற்கு விருந்துக்குச் செல்கிறார்கள். பட்டின் மனைவி ஓலா. ஃபிரானுக்கும் ஜேக்கிற்கும் குழந்தை இல்லை. பட் வீட்டில், பட்டின் அவலட்சனமான குழந்தை ஹெரால்டை இருவரும் பார்க்கிறார்கள். வீடு திரும்பிய பிறகு ஃபிரானும் ஜேக்கும் கலவி கொள்கிறார்கள். குழந்தையோடு வாழ்கிறார்கள். அதன் பிறகு ஜேக் பட்டின் வீட்டிற்குச் செல்லவில்லை. ஜேக்கும், பட்டும் அலுவலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

அக்கதையில் வரும் ஒரு சிறு பகுதியைப் படியுங்கள்.

”பட்டை இப்போதும் தொழிற்சாலையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கிறோம். நான் விசாரித்தால் அவனும் ஓலா, ஹெரால்டைப் பற்றிச் சொல்கிறான். ஜோயி இப்போது இல்லையாம். ஒருநாள் இரவு தூங்குவதற்கு மரத்துக்குப் பறந்து சென்ற அது, அப்புறம் காணவேயில்லை, திரும்பி வரவேயில்லை. அதற்கும் வயதாகிவிட்டிருந்தது. ஆந்தைகள் அதன் கதையை முடித்துவிட்டிருக்கும். பட் தோளைக் குலுக்கிக் கொள்கிறான். சாண்ட்விச்சைக் கடித்துக்கொண்டே, “நீ இப்போது ஹெரால்டைப் பார்க்கவேண்டுமே. ஒருநாள் அவன் அமெரிக்கன் புட்பாலில் லைன்பேக்கராக விளையாடத்தான் போகிறான், பார்த்துக்கொண்டேயிரு,” என்கிறான். நான் ஒப்புதலாகத் தலையை அசைத்துக்கொள்கிறேன். நாங்கள் இன்னமும் நண்பர்கள்தாம். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அவனிடம் எதைப்பற்றிப் பேசுவதென்பதில் கவனமாக இருக்கிறேன். அது அவனுக்கும் தெரிகிறது. இப்படி இருக்கவேண்டாமே என்றுதான் அவனும் நினைக்கிறான். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.”

(நன்றி:காலச்சுவடு, ரேமண்ட் கார்வர், ஜி.குப்புசாமி)

இக்கதையில் வரும் ஜோயி என்கிற மயில் ஹெரால்டோடு விளையாடும். கருப்பு கலரில், கைப்பெருசில், அவலட்சமான குயிலுக்கு இனியகுரலைக் கொடுத்த இறைவன், அழகிய நீண்ட தோகைகளை விரித்தாடும் போது, காண்பவரின் உள்ளத்தைக்கொள்ளை கொள்ளும் அழகின் உருவமான மயிலுக்கு கர்ண கடூரமான குரலைக் கொடுத்திருக்கிறான். ஏன் இந்த வேறுபாடு? இயற்கைப் படைப்பின் ரகசியம் அது.

அவலட்சனமான குழந்தையின் தகப்பனான பட்டிடம் ஜேக், ஹெரால்டைப் பற்றி விசாரிப்பதைத் தவிர்க்க நினைக்கிறான். பட்டிற்கு ஹெரால்ட் மகன். அவலட்சணமானவன். இருப்பின் அவன் மகன்.

அவர்களுக்குள்ளான தயக்கங்கள் அழகு பற்றிய உளவியல் பிரச்சினையாக இருக்கிறது. ஜேக்கின் மன நிலையும், பட்டின் மன நிலையையும் என்னுள் உணர முடிந்தது. அதை நிகழ்த்தியது இறகுகள் கதை. வெறும் வார்த்தைகள் தான். ரேமண்ட் படிப்பவரின் மனதுக்குள் கதை மாந்தர்களின் உள்ளத்தை உணர வைத்திருக்கிறார். நீண்ட நேரமாக நானும் பட்டைப் போலவும், ஜேக்கைப் போலவும் உணர்ந்தேன்.

திடீரென இறகுகள், சிறகுகள் என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன என எனக்குள்  ஒரு கேள்வி எழுந்தது.

ஆமாம், பறவைகளுக்கு இருப்பது இறகா? சிறகா? எந்த வார்த்தைச் சரி?

உங்களுக்குத் தெரியுமா?

* * *

விடை : சிறகு - இறகுகளின் தொகுதி