குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, July 4, 2019

தரம் கெட்ட ஆசிரியர்கள்

திருமூலரின் திருமந்திரத்தைப் படித்து அறிந்தவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். 'நீயே கட உள்' என்று சொல்லி விட்டார். யார், யார், எப்படி, எவ்வாறு திருடுவார்கள், பொய் சொல்வார்கள், அயோக்கியர்களின் இலக்கணம் பற்றி விரிவாக எழுதி வைத்திருக்கிறார். அதையெல்லாம் படித்தீர்கள் என்றால் தப்பித்து விடலாம். 

ஆன்மீகவாதிகள் மட்டும் இல்லையென்றால், அமைதியாக இருக்கும் இந்த உலகம் என்பதினை அறுபது எழுதுபதுகளில் இருக்கும் அனுபவசாலிகள் புரிந்து கொள்வார்கள்.

உடனே, 'நீ மட்டும் உனது பிளாக்கில் எவரோ ஒரு சாமியாரின் போட்டோவை வைத்திருக்கிறாயே அது மட்டும் என்னவாம்?' என்று கேட்கத் தோன்றும். அவ்வாறு கேட்கவில்லை என்றால் தான் அது அதிசயம். எனது குரு ஏழைகளுக்கு உணவிட்டவர். நோய்களுக்கு மருந்து கொடுத்தவர். மலைவாழ் மக்களுக்கு ஏராள உதவி செய்தவர். இன்றைக்கு மதம் சார்ந்து அவர் எவருக்குமான உபதேசங்களை வழங்க வில்லை. தியானம், உணவு இரண்டு மட்டுமே அவருக்கான உபதேசமாக இருக்கிறது இன்றும். 

எளிமை, அமைதி, ஆனந்தம், அருட்பாதுகாப்பு ஆகியவை கிடைக்கிறது. அவரின் ஜீவ சமாதியில் மனது ஆர்பாட்டம் அற்று அமைதியடைகிறது.  மனம் அமைதியானால் எல்லாமும் கிடைத்திடும். அதுவே வெற்றியின் முதல் படி என்று நினைக்கிறேன். ஆகவே அவர் என்னைச் சுற்றிலும் இருக்கிறார் என்பதாக நினைக்கிறேன். எனது குரு அமைதியானவர். அது ஒன்றே அவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் வரம் என நினைக்கிறேன். ஆகவே அவரின் புகைப்படம் எனது பிளாக்கில் இருக்கிறது. 

நிற்க.

நான் விவேகானந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது, முழு ஆண்டுத் தேர்வு நேரங்களில் தலைமை ஆசிரியர் என்னிடம் கணிணி புத்தகங்களைக் கொடுத்து நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தருமாறு கேட்பார். ஆனால் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வராது. ஏனென்று விசாரித்தால் எந்தப் புத்தகக் கம்பெனி அதிக டிஸ்கவுண்ட் தருகிறதோ அதற்குத்தான் ஆர்டர் என்றொரு நியதியை பள்ளியில் வைத்திருந்தார்கள். தனியார் பள்ளி நடத்துவது என்பது அவ்வளவு சிறப்பானதல்ல. ஆனால் வெற்றி சூட ஒரு சில வழி முறைகள் உள்ளன. வருடத்தின் ஆரம்பித்திலேயே கல்லா கட்டி விட வேண்டியது. இல்லையென்றால் பள்ளியை இழுத்து மூட வேண்டியதுதான். 

ஒரு கோடி முதலீடு என்றால் பல கோடிகள் வருமானம் வர வேண்டும். இல்லையென்றால் பள்ளி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதைத்தான் தனியார் பள்ளிகள் தொடர்ந்து செய்கின்றன. இதில் என்ன ஒரு அயோக்கியத்தனம் என்றால், பள்ளி தொடங்க அனுமதி பெற பொதுச் சேவை நிறுவனம் இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. பொதுச் சேவையை தனியார் தங்களது குடும்பத்துக்கு மட்டும் செய்வார்கள் என்பது எழுதப்படாத விதி. இன்னொரு விதி இருக்கிறது. ஆந்திராவில் எனது நண்பரின் பல்கலைக்கழக நிறுவனர் தன் மகனை அதே காசால் இழந்து இன்றைக்கு அய்யய்யோ, அம்மம்மா என்று திக் பிரமை பிடித்தலைகிறார். எத்தனை பெற்றோர்களின் சாபத்தை வாங்கிக் குவித்தார். பணம் இருக்கிறது ஆள வாரிசு இல்லாமல் போனார். இதன் பெயர் தலைவிதி.

ஒரு முறை அரிசிக்கு வரி விதிக்கப்போகிறேன் என்று பீதியைக் கிளப்பி ஒவ்வொரு அரிசி ஆலை முதலாளிகளிடமிருந்து கோடியைக் குவித்த ஒருவர் இன்றைக்கு கல்லறையாகிக் கிடைக்கிறார். கவனிக்க ஆள் இல்லை. நினைத்துப் பார்க்க கூட எவரும் இன்றி ஆத்மா அரபிக் கடலோரம் அலைந்து கொண்டிருக்கிறது.

சஞ்சிகை என்றொரு இலக்கிய இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. தனியார் பாடப்புத்தகங்கள் நிறுவன வரிசையில் மதுபென் என்றொரு கம்பெனி இருக்கிறது. இந்தியாவெங்கும் கிளைகள் உண்டு. நான்காம் வகுப்புக்கு சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியைச் சேர்ந்த ஜீவிதா என்பர் அந்தப் புத்தகத்தை எழுதியதாக முன்பக்கத்தில் இருக்கிறது. அவர் என்ன எழுதி இருக்கிறார் என்பதை கீழே இருக்கும் படத்தில் படித்துத் தெரிந்து கொள்க. 






அந்த ஆசிரியை மனதில் உண்மைக்கும் சற்றும் தொடர்பில்லாத விஷயத்தைப் பற்றி எழுதுகிறோமே என்ற சங்கடம் கொஞ்சம் கூட இல்லை. பிரட்டு விஷயத்தைப்  பாடப்புத்தகமாக்கி மாணவர்களிடம் கொண்டு செல்லும் இவரைப் போன்ற ஆசிரியரை என்ன செய்யலாம்? இப்புத்தகத்தைக் கொஞ்சம் கூட ஆராய்ச்சி செய்யாமல் வெளியிட்ட நிறுவனத்தின் தன்மையும், அவர்களின் வியாபாரத்தினையும் என்னவென்று சொல்வது?

ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன், திருமூலரைப் படித்தவர்கள் என.. ஆகவே ஆன்மீகம் என்றொரு போர்வையில் நடக்கும் வியாபார தந்திரங்களில் மாணவர்களையும் மூளைச் சலவை செய்து விட்டால் இன்னும் வசதியாக இருக்குமே, கடைசி வரை சிந்திக்க விடாமல் செய்து, அடிமையாகவே வைத்திருக்கலாமே என்ற நாசகார திட்டத்திற்கு அந்த ஆசிரியை உடன்பட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.


மேலே இருக்கும் வீடியோவில் அந்த ஆசிரியையும், யுடர்ன் சானல்காரரும் பேசிய ஆடியோ இருக்கிறது. எந்த அளவுக்கு அந்த ஆசிரியை விவரம் கெட்டதனமாக இருக்கிறார் என்பதையும், அவர் எழுதிய புத்தகத்தை மாணவர்கள் படிக்க கொடுக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் மாணவர்களின் சிந்தையில் என்னவாக இது பதிவாகும்? என நினைத்துப் பாருங்கள்.

ஆன்மீகம் எதுவும் தருவதில்லை மனிதனுக்கு என்பதை எந்தக் காலத்திலும் மனிதன் புரிந்து கொள்ளப் போவதில்லை. அவனின் துன்பத்துக்கும் துயரத்திற்கும் யாரோ ஒருவர் தான் காரணம் என்று நினைக்கும் எண்ணம் எப்போது அவனை விட்டு நீங்குகிறதோ அன்றைக்குத்தான் அவன் மனிதனாக மாற முடியும்.

ஒரு பொறம்போக்கு ஜோசியக்காரனால் ஓட்டல் சரவணபவன் அண்ணாச்சி ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார். ஜோசியக்காரனுக்கு காசு கிடைத்து விட்டது. அதுதான் உண்மை. பெரும்பான்மையான ஜோசியக்காரர்கள் பலன் சொல்வார்கள், பலிக்கவில்லையே என்று கேளுங்கள். உடனே அது உனது கர்ம பலன் என்றுச் சொல்லித் தப்பித்து விடுவார்கள்.

பானை செய்யும் குயவன் களிமண்ணை எடுத்து சக்கரத்தில் வைக்கும் போது பானையா, சட்டியா என முடிவு செய்வான். பெரும்பாலான மனிதர்கள் அவன் விட்ட வழி என்று கூறிக் கொண்டு திரிவார்கள். திட்டமிடாமலும், குறிக்கோளும் அற்றவர்களின் கடைசிப் புகலிடம் தான் கடவுள். இந்து மதம் அற்புதமான வழிகாட்டி. அதன் பாதையின் முடிவிடம் வெற்றிடம். அதை உணர்ந்து கொள்வதற்குள் பரலோகப் பிராப்தி அடைந்து விடுகிறார்கள் அனேகர்கள். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஏனோ தானோ என பாடம் எழுதும் ஆசிரியர்களைத் ‘தரம் கெட்ட ஆசிரியர்கள்’ என்று தான் சொல்ல வேண்டும்.

நன்றி : சஞ்சிகை இதழ்

Thursday, June 13, 2019

சில பெண்கள் சில மாதிரி

எனது பசங்க படிக்கும் பள்ளியில் ஒரு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பெண் டைட் லெக்கிங்க் மற்றும் டைட் டிஷர்ட்டில் பள்ளிக்கு வந்திருக்கிறார். பள்ளியின் செயலாளர் அக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். 

பள்ளியில் சுடிதார், துப்பட்டா மற்றும் அனுமதி. அடலசண்ட் வயதில் காதல், கத்தரிக்காய் என்று அரற்ற ஆரம்பித்து விடுவார்கள் என்பதால், உடையினால் இனக்கவர்ச்சி உண்டாகி விடக்கூடாது என்பதிலும், ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள்.

அப்பெண் குழந்தையின் அம்மா, செயலாளரைச் சந்தித்து "நான் சம்பாதிக்கிறேன், என் குழந்தை என்ன டிரெஸ் வேண்டுமானாலும் போட்டுக்கிட்டு வரும், உங்களுக்கு அதைத் தடுக்க அனுமதி இல்லை" என்றெல்லாம் கத்தி இருக்கிறார். செயலாளர் கூலாக "உங்கள் குழந்தைக்கு டிசி தருகிறேன், நீங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னவுடன் சென்று விட்டார். மறு நாள் டைட் லெக்கிங்க் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்திருக்கிறது அப்பெண் குழந்தை. மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

அப்பெண் குழந்தையின் தாய் என்ன விதமானவர் என்பதைப் பற்றி எனக்கு மனக்கிலேசம் உண்டானது. தான் வாழாத ஒரு வாழ்க்கையை, தான் போட முடியாத உடையை தன் பெண் குழந்தைக்குப் போட்டு அழகு பார்க்க நினைக்கிறாரா? இல்லை திறந்து காட்டு சீசேசம் கணக்காக சினிமாப் பெண்களைப் போல தன் பெண்ணை மாற்ற நினைக்கிறாரா? வயதுக்கு வந்த ஒரு பெண்ணை, வக்கிரமாக உடை உடுத்திச் செல் எனச் சொல்லும் அம்மாவை, என்ன சொல்வது? இதைத்தான் வாழ்க்கை என்று உணர்ந்திருக்கிறாரா அவர்? ஏன் இப்படி மாறிப்போனார்கள்? என யோசித்தால் கண் முன்னே ‘சினிமா’ வந்து நிற்கிறது.

சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகில் மூன்றுச் சாலை முக்கு இருக்கிறது. காளப்பட்டியிலிருந்து இருந்து வரும் சாலையில் ஓசிடி (OCT) என்று நோட்டீஸ் போர்டு ஒட்டிய காரின் பின்னால் நின்றிருந்த போது சத்தி சாலையில் வேகமாக ஒரு அரசு பயனியர் பேருந்து வந்தது. இடையில் ஒருவர் கிழக்கே இருந்து பைக்கில் சாலையை நொடியில் கடக்க, அதற்குள் ஓசிடி காரினை ஓட்டி வந்த பெண் விருட்டென காரினை நகர்த்த, பேருந்து ஓட்டுனர் பதறிக் கொண்டு பிரேக் போட்டார். நான் போகாமல் நின்றிருந்தேன். ஓட்டுனர் என்னை போகச் சொல்லி, அந்தக் காரைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். காருக்குள் பெண் இருந்ததைக் கவனித்தேன். அந்தக் கார் ஓட்டிய பெண், ஏதோ பெரிய சாதனையைச் செய்தது போல சிரித்துக் கொண்டு ஓட்டிச் சென்றது. பெண்கள் என்றால் பொறுமை என்பார்கள். ஆனால் அந்தப் பெண் ஹிஸ்டீரியா பிடித்தது போல காரை ஓட்டிச் செல்கிறது. 

பேருந்து வந்த வேகத்திற்கு மோதினால் பல், சில்லு எல்லாம் சிதறி இருக்கும். கார் ஓட்டுகிறேன் பேர்வழி என பல பெண்கள் சாலையில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். லாரி சென்றால் அதனை நேரம், இடம் கணித்து கடப்பது இல்லை. அதன் பின்னாலே ஓட்டிச் செல்வதும், பின்னால் வரும் கார்களுக்கு வழியும் கொடுப்பதும் இல்லை. சாலைகளில் பைக்கில் செல்லும் இளம் பெண்கள், காற்றில் முடி பறக்க விண்ணில் விமானம் ஓட்டுவது போல ஓட்டுகின்றார்கள். பல தடவைகள் சாலைகளில் பார்த்திருக்கிறேன். அடிபட்டு தெரு நாய் போல விழுந்து கிடப்பதை. ஸ்டைல் என்கிற பெயரில் இவர்களின் அழிச்சாட்டியும் கோவையில் எல்லை தாண்டிச் செல்கிறது.

விஜய் டிவியில் நடனம், பாட்டு, நகைச்சுவை, ஆட்டம் பாட்டம் என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரியங்கா என்கிற ஒரு பெண் செய்யும் அஷ்டகோணல்கள், அவரின் ஆபாச பேச்சுக்கள் பெண்களின் மீதான பிம்பத்தை உடைக்கின்றது. பிரியங்கா போலவும் திவ்யதர்ஷிணி போல ஒரு பெண்ணையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என எந்த நல்ல தகப்பனும், தாயும் நினைக்க மாட்டார்கள். முகம் சுழிக்கும் இரட்டை அர்த்தப் பேச்சுக்கள், சினிமா ஹீரோக்கள் வந்தால் கட்டிப்பிடித்டுஹ் கன்னத்தில் முத்தம் கொடுப்பது என அவர்களின் நடவடிக்கைகள், அவர்களைப் பெற்றவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதை அவர்கள் மறக்கவில்லை. எல்லாம் சகஜம் என்பது போல மாறிப் போனார்கள். என்னை படுக்க அழைத்தார்கள் என வாய்ப்புகள் இல்லாத காலங்களில் ‘மீ டூ’ போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

திவ்யதர்ஷினி ஒரே ஒரு படத்தில் தனுஷுடன் நடித்தார். அடுத்து டைவோர்ஸ். ரஜினியின் இரண்டாவது பெண் தனுஷை இயக்கினார். அடுத்து டைவோர்ஸ். அமலாபால் ஒரு படத்தில் தனுஷுடன் நடித்தார். டைவோர்ஸ்.  ஏன் டைவோர்ஸ் என்று கேட்டால் வேலை முடித்து வீட்டுக்கு வருவதில்லை. பார்ட்டிகளுக்குச் சென்று குடித்து விட்டு, கூத்தடித்து விட்டு வீட்டுக்கு வருவது போன்ற சில்லரைத்தனமான செயல்களால் இவர்கள் டைவோர்ஸ் பெறுகிறார்கள். இதற்கு காரணமாக சில நடிகர்கள் இருக்கின்றார்கள். புருஷன்களோடு இருந்தால் நினைத்த நேரத்துக்கு அழைக்க முடியாதே? ஆகவே ஏதேதோ சொல்லி, புகழ்ந்து டைவோர்ஸ் பெற வைத்து, பின்னர் ஆடிக் களைத்து விட்டு கழட்டி விட்டு விடுவார்கள். புரியும் போது எல்லாம் முடிந்து போகும். கழண்டு போய், தோல் சுருங்கிப் போனால் சினிமாவில் நாய் கூட சீந்தாது. சினிமா மாய உலகம் இல்லை. அது கிரிமினல்கள் நிறைந்த துரோக உலகம். நாமெல்லாம் நினைப்பது போல சாதாரண விஷயம் அல்ல. அது பெரும் புதை குழி. டிவி அதை விட பெரும் மீள முடியாத மரணக்குழி. 

இதையெல்லாம் அறியாத பெண் பிள்ளைகள் சினிமாவில் இன்ஸ்டண்ட் புகழ் பெற நினைக்கின்றார்கள். ஆண்கள் உடனடி ஹீரோக்களாக மாறத் துடிக்கின்றார்கள்.

சினிமாவில் தான் ஜாதி மற்றும் அரசியல் அதிகம். கமல்ஹாசன் தன் படங்களில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் நடிக்க வைப்பார். அதற்கு கலை எனச் சொல்வார். ஏன் பிறருக்கு அதெல்லாம் இருக்காதா? கமல்ஹாசன் படங்களில் ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, கிரேஸி மோகன் என தன் இனத்தின் ஆட்களுக்குதான் முன்னுரிமை தருவார். இவர்கள் கமலைப் பற்றிப் பேசி, பேட்டி கொடுத்து ஒரு வெற்றுப் பிம்பத்தை உருவாக்குவார்கள். கமலுக்கு பணம் கொடுத்து படம் எடுக்கச் சொல்பவனை தேடினாலும் காட்ட மாட்டார்கள். அடுத்தவன் பணத்தில் அட்ரா சக்கை என தாளம் போடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான்.

சினிமா ஜாதியால் மட்டுமே இயங்குகிறது. மூன்று, நான்கு க்ரூப்கள் இருக்கின்றன. அவர்களை மீறி எவராவது புதியதாக வந்தால் போச்சு. ஒன்றாகச் சேர்ந்து மொத்தமாக அழித்து விடுவார்கள். அந்தளவுக்குப் புனிதர்கள் நிரம்பியது தமிழ் சினிமா உலகம்.

ரஜினி சிகரெட் புகைப்பது, தீக்குச்சியை பெண்களின் உடையில் உரசி, சிகரெட்டைப் பற்ற வைப்பது போன்ற நடிப்புகள், சார்லி சாப்ளினைப் பார்த்து காப்பி அடித்தது. ஆனால் பாருங்கள். ரஜினி கண்டக்டராக இருக்கும் போது சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப் போட்டது போலவும், அதைப் பார்த்த பாலச்சந்தர் அவரை சினிமாவுக்கு கொண்டு வந்து நடிக்க வைத்தது போலவும் செம பில்டப்பைக் கொடுத்தார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ரஜினி சார்லி சாப்ளினைப் பார்த்து காப்பி அடித்து நடித்தார் என்பது மட்டுமே. இன்றைக்கு என்னால் பல சாட்சியங்களைக் காட்ட முடியும்.

தமிழக இளைஞர்கள் ரஜினி ஸ்டைல் என்றுச் சொல்லி தங்கள் நுரையீரல்களை சிகரெட் புகையினால் நிறைத்தார்கள். ரஜினியை கொண்டாடினார்கள். இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுதப் புகுந்தால் வேறு மாதிரி ஆகி விடும். சினிமாவில் நல்லவர்கள் நிறைய உண்டு. ஆனால் தீயவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இதோ நாமெல்லாம் நல்ல நடிகர் என்று நினைத்து ரசிக்கும் ஒரு நகைச்சுவை நடிகரைப் பற்றி வந்துள்ள செய்தி. படியுங்கள். ரசியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். நன்றி சினிக்கூத்து. இது ஒரு சாம்பிள் மட்டுமே. இதைப் போல பல உண்மைகள் உண்டு.






இவரைப் போல நல்லவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

நல்ல பெண்களைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். தான் நாறித்தான் போவேன் எனும் பெண்களைப் பார்க்கக் கூட அனுமதிக்காதீர்கள். சமூகம் தான் மனிதனுக்கு கேடயம். அது சீரழிந்தால் மனிதனும் அழிவான்.

13/06/2019-2.50PM

Saturday, June 8, 2019

பானபத்திர ஓலாண்டியே உமக்கு ஒரு கடிதம்

பானபத்திர ஓலாண்டியே, 

அனேக நமஸ்காரங்களுடன் கோவையிலிருந்து தங்கவேல் எழுதுகிறேன். எனது இந்தக் கடிதம் உம்மை எட்டாது என்று எமக்குத் தெரியும். இந்தக் கடிதத்தை எமக்கு எழுந்த அறச்சீற்றத்தினால் எழுதுகிறேன். உம்ம சினிமா (மெல்லிசைப்பாடல்களை) எவர் பாடினாலும் காசு கொடுத்து விட்டுத்தான் பாட வேண்டுமாமே? நீதிமன்றத்தில் வழக்குப் போட்டீர்களாம். கோர்ட்டும் உமக்கு பணம் கொடுக்காமல் எவரும் பாட்டுப் பாடக்கூடாது எனத் தீர்ப்புச் சொல்லி இருக்கிறதாம். 

எதுக்கு உமக்கு காசு கொடுத்துப் பாட வேண்டும் என உம்ம காலை நக்கி வயிற்றை நிரம்பச் செய்து கொள்ளும் இசை அடிப்பொடிகளின் பேட்டிகளையும் அடியேன் கண்டேன். 

உம்மை, எம் தமிழர்கள் தங்கள் அறியாமையால் இசைக்கடவுள் என்றார்களே!  அதனால் உமக்கு ஏதும் கணம் ஆகி விட்டதா?  இருக்கட்டும் பானபத்திரரே.

அமுதமாய்ப் பெருகு மான ந்தக் கடலாம்
இதய மாஞ்சிறு குகைதனி லோர்பொறி
உதித்த பிரணவத் தாலே யுருவாய்
ஊமையா மெழுத்தா யோதொணா மறையாய்
மனமெனு மாசான் வளர்கனல் மூட்ட
உசுவாச நிசுவாசப் பெருங்காற் றுண்டாய்
மந்தாத் தொனியாய் மனத்திடைத் தோன்றி
மார்பு காண்டம் வரவரப் பெருத்து
மலர்நாசி நாக்கு மகிழுதடு தந்தம்
தாடையா மைந்தின் திறத்தல் மூடல்
விரிதல் குவிதல் வளைதல் நிமிர்தல்
எனவிவ் வறு தொழிலாற் பிறந்து 
பலபல தொனியாய்ப் பலபல வெழுத்தாய்
நலந்தரு மறையாய் நாட்டிய கலையாய்
பற்றிய சுவாலைப் படர்ந்தன கிளைத்துச்
சுற்றிய தாலே சூட்ச மறிந்து
ஓத முடியா வுயர்நாத மாச்சே
நாதமே முக்கலை நாதமூ வெழுத்து
நாதமே முக்குணம் நாதமே முப்பொருள்
நாதம் மூவுல காகி விரிந்து
நாதமாம் பரத்தில் லயித்தது பாரே

நாதம் பரத்தில் லயித்திடு மதனால்
நாத மறிந்திடப் பரமு மறியலாம்

சங்கீத சாஸ்திரத்தில் வழங்கி வரும் பன்னிரெண்டு சுரங்களையும், இருபத்து நான்கு சுருதிகளாகவும் நாற்பெத்தெட்டு தொண்ணூற்றாறு போன்ற நுட்ப சுருதிகளாகவும் பிரித்து கானம் செய்திருக்கிறார்கள். அவைகளே நாளது வரையும் அனுபவித்திலிருக்கின்றன. 

பூர்வ இசைத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பெரு நாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இசை நுணுக்கம், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சங்கீதத்திற்கு முக்கிய ஆதாராமாகிய சுரங்களையும், சுருதிகளையும், நுட்ப சுருதிகளையும், இராகமுண்டாக்கும் முறையையும் நுட்பமாகச் சொல்கின்றன.

பூர்வ தமிழ் மக்கள், சுரங்களையும், சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அனுசரித்துப் பாடிவந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்பட்டிருக்கின்றன. அதன் வழியாக தொடர்ந்து வந்த தீட்சிதர்களும், பாகவதர்களும் இசைக்கோர்வைகளைப் பாடினார்கள் 

நன்றி : கருணாமிர்த சாகரம் - தமிழ் இசை நூல்

தமிழிசையிலிருந்து உருவான ஆதி இசைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றிப் போட்டு, எவர் எவரோ உருகி உருகி ரசித்து உருவாக்கிய வாத்தியங்களை வாசிக்க வைத்து இசைக்கோர்வையை உருவாக்கயவருக்கு காப்பிரைட் பேச என்ன தகுதி இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆதி இசைக்கோர்வையை பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால் அதை இன்னொருவர் பாடக்கூடாது என்றுச் சொல்ல தகுதி வேண்டுமல்லவா?

நாதம் என்பது கடவுள். ஒலியிலிருந்துதான் எல்லாமும் ஆரம்பம். ’ஓம்’ என்ற நாதம் தான் எல்லாவற்றுக்குமான ஆரம்பம் என்று அறிவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த ’ஓம்’ இலிருந்து பிரிந்த இசையை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்றுச் சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை எந்தச் சார்பும் இன்றி புரிந்து கொள்ள முயலுங்கள்.

பானபத்திர ஓலாண்டி அவர்களே, உமக்கும், உம்மை அணுக்கி, கழுவிக் குடிக்கும் இசைப்பண்ணர்களும் மேலே இருக்கும் ‘கருணாமிர்த சாகரம்’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கும் பத்தியைப் படித்துப் பாரும். உம்மால் மிகச் சிறந்த மெல்லிசை மன்னர் என்று அழைத்தவர்களின் வாரிசின் நிலைமை இன்றைக்கு எவ்வாறாயிருக்கிறது என்று உமக்குத் தெரிந்திருக்குமே! இசையை விற்றவர்களும், சாராயக்கடை நடத்தியவர்களின் வாரிசுகளும் பிச்சை எடுத்து திரிகின்றனர். இந்திய இளைஞர்களின் கனவு நாயகன் ஆனானப்பட்ட விஜய் மல்லையா கதியையும், காந்தக்குரலால் தமிழர்களைக் கட்டிப் போட்ட தியாகராஜபாகவதரின் நிலையும் அறிந்திருப்பீர்களே....!

தமிழர்களின் பாடலைப் பாட்டமைத்ததிற்கு காசு வாங்கி சொகுசாய் வாழ்ந்து விட்டு, போதாது போதாது என்றலையும் உம்மை பானபத்திர ஓலாண்டி என அழைப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மதுரை இசைக்கடவுள் அந்தப் பானபத்திரனை ஓட ஓட விரட்டி அடித்தது போல இசைக்கடவுள் உம்மையும் அடித்து விரட்ட வேண்டாமென்று அந்த நாதச் சக்கரவர்த்தியை வேண்டிக் கொள்கிறேன். 

என் எதிர்ப்பை உமக்குத் தெரிவிக்க, இணையவெளியில் எழுதி இருக்கிறேன். எனது இந்தப் பதிவில் ஏதாவது தவறு இருப்பின் சுட்டுக. திருத்திக் கொள்ளத் தயராக இருக்கிறேன்.

என்னை வாழ வைத்த என் முன்னோர்களுக்காகவும், இனி வாழப்போகும் இளையோர்க்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனக்காக அல்ல. என்னை வாழ வைத்த சமூகத்தின் பிரதிநிதியாக எம் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். அதைத் தவிர எமக்கும் உமக்கும் எந்த வித வாய்க்கா வரப்புத் தகராறு இல்லை.

08/06/2019 6.03பி.எம்.

Thursday, June 6, 2019

காமிக்ஸ் நினைவுகள்

சின்னஞ்சிறு வயதில், ஒரு குக்கிராமத்தில் பிறந்த எனக்கு படிப்பென்றால் திகட்டாத அல்வா சாப்பிடுவது போல. பிட்டுப் பேப்பரைக் கூட எடுத்துப் படித்து விடுவேன். நான்காம் வகுப்பு படிக்கையில் காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகமானது. எனது வகுப்புத் தோழன் நைனா முகம்மது, பேராவூரணி பஸ் ஸ்டாண்டில், அவன் அத்தா வாங்கி வரும் ராணி காமிக்ஸை பள்ளிக்கு கொண்டு வருவான். எல்லோருக்கும் இலவசமாய் படிக்கத்தருவான். ஆனால் எனக்கு மட்டும் 10 பைசா வாங்கிக் கொண்டுதான் படிக்கத் தருவான். ஏன் அவன் இவ்வாறு செய்தான் என்பதை என்னால் அப்போது விளங்கிக் கொள்ள முடியவில்லை.

எனது மச்சான் பிரான்சிஸ்காசன் (தமிழன்) மற்றும் அவனுடன் ஒரு சிலர் குரூப்பாக இருப்பார்கள். அவனுக்கு நைனா முகமது இலவசமாய் படிக்கக் கொடுப்பான். அணவயல் கணேசன் வாத்தியாருக்குத் தெரிந்தால் முதுகில் பிரம்பால் கோடு போட்டு விடுவார். எந்த வாத்தியாருக்கும் தெரியாமல் புத்தகத்துக்கு இடையில் வைத்துக் கொண்டு அந்த க்ரூப் மட்டும் படிப்பார்கள்.  அதை அவ்வப்போது எனக்கு காட்டி, என்னிடமிருந்து காசைப் பறித்து விடுவார்கள். மந்திரவாதி மாண்ட்ரேக், ஜேம்ஸ்பாண்ட், மாடஸ்தி போன்றவர்கள் எனக்கு அப்படித்தான் அறிமுகமானார்கள். 



வீட்டின் முன்னே இருக்கும் சலுவா மாமியின் மகன் முபாரக் எனக்கு நிறைய நாவல்கள், காமிக்ஸ் தருவான். அதற்குப் பதிலாக என்னிடம் ஏதாவது எழுதும் வேலை வாங்கிக் கொள்வான். வீட்டுப்பாடமோ அல்லது ஏதாவது எழுதித் தரச்சொல்லிக் கேட்பான். எழுதிக் கொடுப்பேன். 

ஆறாம் வகுப்புப் படிக்கும் போது வீரப்ப தேவர் மகன் மாரிமுத்து வீட்டுக்கு படிக்கச் செல்வதுண்டு. அங்குதான் மர்ம மனிதனின் மந்திரக்குகை போன்ற திகில் கதைகள் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. மாரிமுத்து என்னை அந்தப் புத்தகங்களைப் படிக்க விடமாட்டான். இரவில் பேய் வரும் என்றுச் சொல்லி பயம் காட்டுவான். மாரிமுத்துவின் அக்காக்கள் பாரதியும், அகிலா ஆகிய இருவரும் படிக்கும் மாலைமதி, ராணிமுத்து போன்ற புத்தகங்கள் கிடைத்தன. மாரிமுத்துவும் நானும் நல்ல நண்பர்கள் ஆனோம். அங்கு நிறைய புத்தகங்கள் கிடைக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருப்பேன். மாமாவுக்கு தெரியாமல் தான் படிக்கணும். மாமாவுக்குத் தெரிந்தால் போச்சு.

இதற்கிடையில் ராவுத்தர் கடை கசாலி எனக்கு அறிமுகமானான். அவனிடம் இருந்து அம்புலிமாமா, அலாவுதீனின் அற்புத விளக்கு, 1000 இரவுக்கதைகள் போன்ற புத்தகங்கள் படிக்க கிடைத்தன. இப்படியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் பத்தாம் வகுப்பின் போது ஆலம் அறிமுகமானான். அவன் வீட்டில் இரண்டு புத்தக அலமாரிகள் இருந்தன. அவற்றுக்குள் அடுக்கப்பட்ட புத்தகங்கள் பல இருந்தன. உமர் முக்தார் கதை அங்குதான் கிடைத்தது. இரவு பகல் பாராமல் உமர் முக்தார் புத்தகத்தைப் படித்தேன். நீண்ட காலங்களுக்குப் பிறகு கடந்த வருடம் அந்தப் புத்தகம் மீண்டும் கண்ணில்பட, வாங்கிக் கொண்டு வந்து, மீண்டும் இரவு பகல் பாராமல் படித்தேன். மனையாள் அப்படி என்ன இருக்கு அந்தப் புத்தகத்தில் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அன்றைய புரிதலுக்கும் இன்றைய புரிதலுக்கு எத்தனை வித்தியாசங்கள்?

கல்லூரி சென்றேன். ராஜேஷ்குமார், சுபா போன்ற மூன்றாம் தர நாவல் ஆசிரியர்களிடமிருந்து விலகி கல்கி, கி.ரா, தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் இலக்கிய தரிசனம் கிடைத்தது. பூண்டி புஷ்பம் கல்லூரியின் நூலகம் எனக்கு அற்புத புதையலாக கிடைத்தது. நாளொன்றுக்கு ஒரு புத்தகம் வீதம் படித்துக் கொண்டே இருப்பேன். அதே சமயம் கணிணி பாட்ப்பிரிவும் படித்துக் கொண்டிருப்பேன். கல்லூரி நேரம் தவிர பெரும்பான்மை நேரம் புத்தகங்களுடனே செல்லும்.

அதற்கடுத்தாக கரூர் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கு கணிணி ஆசிரியராகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஐந்து வருடங்களாக அனேக புத்தகங்கள் படிக்க கிடைத்தன. அங்கு ஆன்மீக தொடர்பான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. எனக்குப் புரியவே புரியாது. ஆனாலும் படித்து வைப்பேன். புரிந்து கொண்டுதான் படிக்க வேண்டுமெனில் நடக்கிற விஷயமா? அல்லது நானென்ன ஆர்.பி.ராஜநாயஹமா? சாதாரண தங்கவேல். 

எனக்குள் ஒரு நிராசை இருந்து கொண்டே இருந்தது. ராணி காமிக்ஸின் அத்தனை புத்தகங்களும் படிக்கவில்லையே என்ற ஏக்கம் தான் அது. சமீபத்தில் 1 முதல் 100 வரையிலான ராணி காமிக்ஸ் புத்தகங்களை ஸ்கேன் செய்து இலவசமாய் யாரோ ஒரு புண்ணியவான் நெட்டில் போட்டிருந்தார். அத்தனை வருட ஏக்கம் இப்போது தீர்ந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு புத்தகங்களைப் படித்து விடுகிறேன். அது மட்டும் இன்றி இன்னும் நிறைய சிறார் புத்தகங்களை அந்தப் புண்ணியவான் ஸ்கேன் செய்து நெட்டில் விட்டிருக்கிறார். ஒன்றையும் விடாமல் இறக்கிப் பதிவு செய்து கொண்டேன். அந்த புண்ணியவானுக்கு நன்றி.

காமிக்ஸ் புத்தகங்கள் டிவி இல்லாத நாட்களில் கண் முன்னே படம் காட்டின. அதனால் உண்டான் ஈர்ப்பு அதன் மீதான பற்றுதலை அதிகமாக்கின. காமிக்ஸ் கதைகள் எல்லாம் வீர சாகசங்கள் நிறைந்தவை. அந்தப் புத்தகங்கள் தான் எனக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்தன என்று இன்றைக்கு என்னால் உணர முடிகிறது. காமிக்ஸ் ஹீரோக்கள் சாகாவரம் பெற்றவர்கள். அவர்கள் எந்த ஒரு சூழலிலும், சிக்கலான நேரங்களிலும் தப்பி விடுவார்கள். அவர்கள் பழைய விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. அடுத்து என்ன என்று அதிரடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த ஹீரோயிசமானது அதீதமானது. எதார்த்தத்துக்கும் அதற்கும் வெகுதூரம். ஆனால் ஹீரோக்களின் இயல்பு என்பது தொடர் முயற்சி. முடிவில் வெற்றி. அந்த ஹீரோக்களின் இயல்புதன்மை என்னிடம் ஒட்டிக் கொண்டது.

சமூக வாழ்க்கையில் மனிதர்கள் என்ற போர்வையில் உலாவும் சுய நலவாதிகளின் சித்து விளையாட்டுக்களில், விபரம் தெரியாமல் சிக்கிக் கொண்டு பொருளையும், நேரத்தையும் இழந்து விடும் போதெல்லாம், மனது வலித்தாலும், சோர்ந்து போகாது. மீண்டும் அடுத்த வேலைக்கு தயார் ஆகி விடும் இயல்பு என்னிடம் இருக்கிறது.

இதுவரையிலும் நான் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் எல்லோரும் என்னுடன் சிறிதுகாலம் பயணிப்பார்கள், காணாமல் போவார்கள். அதனால் எனக்கு வருத்தம் ஏற்படுவது இல்லை. இங்கு எல்லாமே கொடுத்துப் பெறுவது, அல்லது பெற்றுக் கொண்டு கொடுப்பது மட்டும் தான். மனிதன் சார்பு நிலை கொண்டவன். பெறுவதும்,கொடுப்பதும்தான் வாழ்க்கை. யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு விளங்கி விடும். இது வாழ்க்கை. இந்த வாழ்க்கையை வாழ ஒரு சில குணங்கள் மனிதர்களுக்குத் தேவை. 

அப்படியான மிக முக்கியமான குணங்களில் ஒன்று தோல்வியில் துவளாமை. அதை எனக்கு காமிக்ஸ் ஹீரோக்கள் கற்றுக் கொடுத்தார்கள். என் பிள்ளைகளுக்கு நான் காமிக்ஸ் நிறைய வாங்கிக் கொடுக்கிறேன். பள்ளிப் பாடங்களுக்கு இடையில் படிக்கின்றார்கள். ஒரு முறை மகள் நிவேதிதா ஒரு பாடத்தில் இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டாள். அவளை என்னால் எளிதாக சமாதானப் படுத்த முடிந்தது. எளிதில் புரிந்து கொள்கிறாள். ரித்திக்கும் இந்த வயதில் பெரிய மனிதத்தன்மை உடையவனாக இருக்கிறான். 

ஆன்மீக புத்தகங்கள் கோவில்களுக்கும், கோவில்களை ஆளும் ஆட்களுக்கு வருமானத்தை பெற்றுத் தருகின்றன. இழப்பது ஆன்மீகத்தை நம்புகிறவன் மட்டுமே. மனை அமைதி தேடி கோவிலுக்குச் சென்றால் அங்கு நம்மிடமிருப்பவைகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. இதுதான் உண்மை. 

இன்னும் சொல்லப்போனால் ஆன்மீகமும் தோல்வியில் துவளாமையைத்தான் சொல்கின்றது. அதற்கு பல்வேறு கதைகளை கடவுள்களின் வடிவில் வைத்திருக்கிறது. அக்கதைகளைப் புரிந்து கொண்டு அதன் வழி நடப்பது என்பது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். நாம் மஹாபாரத தருமரைப் போல வாழவே முடியாது. நகுலனைப் போல இருக்க நினைத்துப் பார்க்கவே முடியாது. அதெல்லாம் சுயசார்பு வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. 

இங்கு வல்லவன் மட்டுமே வாழ்வான். அந்த வல்லவன் பிம்பத்தை காமிக்ஸ் புத்தகங்களில் வரும் ஹீரோக்கள் உருவாக்குகின்றார்கள். அதன் வழி அவர்கள் நடக்கின்றார்கள். அந்த பிம்பங்கள் நமது உள்ளத்தில் அந்த எண்ணத்தை உருவாக்குகின்றன.

காமிக்ஸ் என்று எளிதாக கடந்து விடுகிறோம். அந்த காமிக்ஸ் ஹீரோக்களின் தன்மை மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுந்து விட்டால் வாழ்க்கையை எளிதாக கடக்கலாம். நீட் தேர்வில் மார்க் வாங்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவர்களை எல்லாம் பார்க்கையில் அவர்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் வருவதில்லை. அவர்கள் சமூகத்தில் வாழவே தகுதியற்றவர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு சாதாரண சிலந்திக்கு இருக்கும் முயற்சி கூட ஆறறறிவு படைத்தவர்களிடம் இல்லாது போவது சமுதாயத்தின் பார்வையால் உண்டாகும் அனர்த்தம். திருடனைத்தான் திறமைசாலி என்கிறது இந்தச் சமுதாயம். ஏனென்றால் சமுதாயமும் சேர்ந்து திருடுகிறது. திருடனுக்குத்தான் திருடனைப் பிடிக்கும்.

மருத்துவம், அதுவும் அலோபதி மருத்துவம் போன்ற கொலைகார தொழில் இந்த உலகில் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது. ராணுவ வீரன் எதிரியை சுட்டுக் கொன்று விடுகிறான். சடுதியில் விடுதலை. இப்போதைய நவீன மருத்துவம் என்கிற பெயரில் மருத்துவம் செய்யும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுதல் என்கிற வைத்திய முறை இருக்கிறதே அதை விட கொடுமையான நரகம் இப்பூவுலகில் வேறு இல்லை. 

நண்பர்களே, உங்கள் குழந்தைகளுக்கு வீழ்ந்தாலும் எழுந்து நிற்கும் அந்தக் குணத்தைக் கற்றுக் கொடுக்க, நல்ல நல்ல காமிக்ஸ் புத்தகங்களைப் பரிசளியுங்கள். டிவி கார்ட்டூன்கள் அறிவை வளர்ப்பதில்லை. புத்தகங்கள் நினைவுகளை உருவாக்கி, உள்ளத்துக்குள் பதிய வைக்கின்றன. 

மீண்டும் சந்திப்போம் விரைவில்.....!

06/06/2019-1.43பி.எம்.

Tuesday, May 28, 2019

நிலம் (53) - மலிவு விலை வீடுகள் என்றால் என்ன?

எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிகழ்வுகள் இந்த ஆண்டு தமிழகத்திற்கு நடந்திருக்கும். குழப்பமான சூழல் தமிழகத்தில் நிலவியதால் உருவானது இந்த நிலை. நண்பர்களே, இந்தியா பிஜேபிக்காக மாற்றப்பட்டு விட்டது. இனி அந்த அமைப்பை உடைக்க முடியாது. உடைக்க பெரும் விலை கொடுக்க வேண்டும். பெரும் புத்திசாலிகள் பின்னால் இருக்கின்றார்கள். அந்த புத்திசாலிகள் இந்தியாவை பகுதி பகுதியாகப் பிரித்து, தடைகள் ஒவ்வொன்றையும் நீக்குகின்றார்கள். தமிழகத்தில் அதிமுகவில் ஆரம்பித்தது. அடுத்து திமுக என நீளும் அவர்களின் திட்டங்கள். இது தான் நடக்கப் போகிறது என நாமெல்லாம் நம்பும்படி ஒரு செயல் நடக்கும். ஆனால் எதற்கும் தொடர்பில்லாமல் இன்னொரு செயலை சத்தமில்லாமல் செய்து விடுவார்கள். உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியாவில் இனி எதிர்காலத்தில் அரசியல் மக்களின் ஆசைப்படி நடக்காது. மக்கள் ஓட்டுப்போடுவார்கள். அது உரியவர்களுக்கு சென்று சேர்ந்ததா என்றெல்லாம் கேள்விகள் கேட்க முடியாது. இந்திய மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் அதிகாரமிக்க அமைப்புகளின் டிசைன் மாற்றப்பட்டு விட்டது. அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில் கட்டுப்படுத்தபடும். மீறுபவர்கள் பதவியில் இருக்க முடியாது. ஆகவே இந்தியா அமெரிக்கா போல மாற்றப்பட்டு விட்டது என்பதை அறிக. அமெரிக்காவில் டிரம்ப் அதிபர் என்று நம்புகிறார்கள் அல்லவா அதே போல இந்தியாவில் மோடி பிரதமர் என்று நாம் நம்ப வேண்டும்.

நம்புவதில் நமக்கு என்ன சிக்கல் இருக்கப் போகிறது. ஆகவே நம்பி விடுவோம்.

நல்லது. இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏழு ஆண்டுகளில் நடக்கும் ஆட்சியின் பலனை மக்கள் அனுபவிப்பார்கள். ஊழல் பேர்வழிகள் மொத்தமாக துடைத்து வீசப்படுவார்கள். மாநிலம் சார்ந்த சிறு கட்சிகள் அழிக்கப்படும். அல்லது ஓரங்கட்டப்பட்டு முகவரி இன்றி ஆக்கப்படுவார்கள். துரோகிகளின் கணக்கு நேராக்கப்படும். நல்லவைகளை எதிர்பாருங்கள். மக்கள் நலன் சார்ந்த, மதம் சார்ந்த நிகழ்வுகள் இனி மலரும் எந்த தடையுமின்றி. இன்னொரு மதம், மற்றொரு மதத்தை விழுங்க முடியாது. இந்தியா இந்து ராஜ்ஜியம் என்பதை எவரும் மறந்து விடாத சூழல் உருவாகும்.

மக்கள் மகிழ்வுடன் இருந்தால் அதுவே போதுமானது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்து, பசி இல்லாத இந்தியன் என்றொரு நிகழ்வு நடந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடியவரை இந்த அதிபுத்திசாலிகளால் ஒன்றும் செய்ய முடியாது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்கால தமிழகம் இந்தியாவின் மணி மகுடத்தில் சுடராய் திகழும். அதிமுக, திமுக இல்லாத அற்புதமான ஆட்சி நடக்கும் என நம்புங்கள். நம்பிக்கையே வாழ்க்கை. நல்லவற்றை நினைத்துப் பார்ப்பதில் என்ன சங்கடம் வரும்? நல்லது நடக்கும்.

சரி போகட்டும் விடுங்கள். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

இனி வரும் காலங்கள் ஒவ்வொருக்கும் வீடு குறைந்த விலையில் கிடைக்கும் சூழல் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில் நன்கு வளர்ச்சி பெறும் பெருத்த லாபம் இன்றி. அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் உத்தரவாதத்தை ஜி.எஸ்.டி கவுன்சில் கூடிய போது உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வரி விகிதங்கள் 01/04/2019லிருந்து அமுலுக்கு வரும் என அறிவித்திருக்கின்றார்கள்.

அது சரி, மலிவு விலை வீடு என்றால் என்ன? என்று கேட்கத் தோன்றுகிறது.

மாநகராட்சி நகரங்களில் 968 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும், பெரும் நகரங்களில் 645 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும் அல்லது 45 லட்சம் மதிப்பு கொண்ட வீடுகள் மலிவு விலை வீடுகள் என்று கருதப்படும். இந்த வீடுகளுக்கு முன்பு 8% சதவீதம் வரி இருந்தது. இனி அது 1% சதவீதமாக இருக்கும்.

இதர வீடுகளுக்கு 12% சதவீத வரியிலிருந்து குறைந்து 8% சதவீதமாக இருக்கும் என கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நண்பர்களே, இனி உங்களின் கனவாகிய வீடு நனவாக சாத்தியங்கள் அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பயன்படுத்த முயற்சியுங்கள்.

மலிவு விலையில் இரண்டு படுக்கை அறை கொண்ட இயற்கை சார்ந்த, காற்றாடி இல்லாத, ஏசி இல்லாத, பகலில் விளக்குப் போடாத வீடுகளை கட்டிக் கொடுக்கலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கான வடிவமைப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

குளிர் பிரதேசங்களில் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் மூனார், ஆலப்புழா ஆகிய இடங்களில் ஓய்வு இல்லங்கள் எனது அடுத்த புராஜெக்ட். மிகக் குறைந்த விலை, வலிமையான இயற்கை வீடுகள் என அதன் அமைப்புகள் இருக்கும்படி இருக்கும். உதாரணமாக ஊட்டியில் 25 லட்சத்தில் ஓய்வு இல்லம். அந்த வீட்டின் மூலம் மாதம் வருமானம் வரக்கூடியவாறு இருக்க வேண்டும் என்பது எனது ஆவல். இந்தச் சொத்துக்களின் லீகல் அனைத்தும் முன்பே சரி பார்க்கப்பட்டுதான் உங்களிடம் வரும். 

விரும்புவர்கள் தங்களின் தேவையை எனது இமெயிலில் தெரிவித்து விடுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் இடத்தை பார்க்கும்படியும், வீடு வாங்கினால் அந்த வீட்டினைப் பார்க்கும்படி வசதிகளும் செய்து தரப்படும்.

மிகக் குறைந்த சரியான முதலீடு. எதிர்காலத்தில் நல்ல வருமானம், அமைதியான வாழ்க்கை என்பது அனைவரின் ஆவல். அந்த ஆவலை அடியேன் மூலம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் அருள் வழங்கட்டும்.

வாழ்க வளமுடன்....!

Monday, May 20, 2019

கொதிக்கும் கோயம்புத்தூர் கொஞ்சம் கீரை மசியல்

மூன்றாண்டுகளுக்கு முன்பு கணபதியிலிருந்து விநாயகபுரம் பெருமாள் கோவிலைக் கடக்கும் போது சிலீர் காற்று உடலைத் தழுவும். மாலையில் மின் விசிறி தேவையில்லை. விடிகாலையில் குளிரில் நடுக்கம் எடுக்கும். காலை ஏழு மணி போலத்தான் வெயில் வரும் போது, கொஞ்சம் சூடு கிடைக்கும். ஒரு மழை பெய்தால் வீடே சில்லிட்டுப் போகும். வாசலிலும், வாசல் வேப்பமரத்திலும் மயில்களும், குருவிகளும் தவமிருந்து கொண்டிருக்கும். போரில் தண்ணீர் வழிந்து வெளியேறும். இப்படியான கோவை விளாங்குறிச்சி இப்போது இரவிலும்,பகலிலும் தகிக்கிறது. சூட்டில் உடல் வியர்த்து பிசுபிசுக்கிறது.

முன்பெல்லாம் வெயில் இருந்தாலும் சுடாது. ஆனால் இப்போது உடல் சூடு அடைகிறது. காற்று வீசினாலும், அனல் போல கொதிக்கிறது. ஏன் இவ்வாறு ஆனது?

மனிதனின் பேராசை. தான் வாழும் மண்ணை பாழ்படுத்தி, கொடுமை செய்யும் அக்கப்போர்.

வீட்டிலிருந்து 1000 அடியில் ஒன்றரை ஏக்கரில் கீரை போட்டிருந்தார் ஒரு அம்மா. அரைக்கீரை, பாலக்கீரை இரண்டும் எப்போதும் கிடைக்கும். கோடையானாலும், மழையானாலும் கணபதியிலிருந்து விளாங்குறிச்சி செல்வோரும், சேரன் மா நகர் செல்வோரும் வண்டியை நிறுத்தி கீரை வாங்கிக் செல்வர். எனக்கும் தினமும் கீரை கிடைத்துக் கொண்டிருந்தது. பாலக்கீரையும், அரைக்கீரையும் அற்புதமான சுவையில் இருக்கும். பாலக்கீரைக்கு மருந்து அடித்துக் கொண்டிருப்பார். அதைப் பார்க்கையில் கொஞ்சம் பதறினாலும் வேறு வழி இன்று அடிக்கடி உணவில் பாலக் கீரைக் கடைசலும், அரைக்கீரை பொறியலும் இடம் பெறும்.

இந்தக் கீரைச் சமையலில் கவனிக்க வேண்டிய ஒரு சில அம்சங்கள் உண்டு. பெண்களின் கைப்பக்குவம் என்று ஒரு கதையை அவிழ்த்து விடுவார்கள். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஏமாறுவதோ தெரியவில்லை. கைப்பகுவமும் இல்லை, புண்ணாக்கும் இல்லை. கொஞ்சம் கவனமும், சமையலில் சேர்க்கப்படும் பொருட்களின் தன்மையும் பழகப் பழக அவர்களுக்குப் புரிந்து விடும். எதை சிறிய அளவில் சேர்க்க வேண்டும், எதை அதிகரிக்க வேண்டுமென்ற அறிவு வந்து விடும். அதான் பரிசோதனை எலியாக ஆண்கள் கிடைத்து விடுகின்றார்களே? சோதனை செய்து பார்த்து, பார்த்து தெரிந்து கொள்வார்கள். உடனே கைப்பக்குவம் என்று கதையளந்து விடுவார்கள். பெண்களுடனே பொய்களும் அவர்களின் அழகு போல வந்து விடும். 

எனக்குப் பிடித்தது தண்டுக் கீரை, சிறு கீரை. இதில் எல்லாவற்றிலும் ராணி முருங்கைக்கீரை.  அம்மா, வீட்டின் பின்புறம் இருக்கும் மரத்திலிருந்து ஆய்ந்து, உருவி, சுத்தப்படுத்தி அதனுடன் கொஞ்சம் பருப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், புளி சேர்த்து தாளிதம் போட்டு, சீரகத்துடன் கொஞ்சம் பூண்டை இடித்து அரைத்து சேர்த்து வைத்து தரும் முருங்கையிலை ரசம் இருந்தால் நான்காள் சாப்பாடு சாப்பிடுவேன். கீரையின் வாசமும், சீரகத்துடன் சேர்ந்து பருப்பின் ருசியும் எந்த ஹோட்டலிலும் கிடைக்காத சுவையில் அள்ளும். மூன்று வேளையும் கீரை ரசம் இருந்தாலும் தொட்டுக்கொள்ள துணைவி இன்றி ஜரூராக உள்ளே செல்லும்.

கோவை முருங்கைக்கீரை நாற்றமெடுக்கிறது. முருங்கைக் கீரை வாங்கும் போது இலைகள் விரைத்துக் கொண்டு இருந்தால் தூக்கி குப்பையில் போட்டு விடவும். கையால் கீரைக்குள் அலையும் போது பஞ்சு போல இருக்க வேண்டும். வாசம் வர வேண்டும். அது தான் நல்ல முருங்கைக் கீரை. இயற்கையில் கிடைக்கும் ஆர்கானிக் கீரை இது மட்டுமே. இதர கீரைகள் அனைத்தும் உரம் போடப்பட்டு வளர்க்கப்பட்டவை.

முருங்கைக்கீரை பொறியல் என்று ஒன்று உண்டு. சுடுசாதத்தில் பொறியலைச் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் ஆஹா. இந்தப் பொறியலில் பொருமா என்றொரு மசாலாவை சேர்க்க வேண்டும். அதைச் சேர்த்து செய்த பொறியலின் சுவைக்கு சைனாவை பாகிஸ்தானுக்கு எழுதிக் கொடுக்கலாம். இல்லையெனில் நயன் தாராவை மீண்டும் சிம்புவுக்கு ஜோடி சேர்த்துப் படம் எடுத்து பன்னாடையாகலாம். அந்த ருசிக்கு அப்படி ஒரு மகத்துவம்.

எனக்கும், மகள் நிவேதிதாவுக்கு கீரை கடைசல் என்றால் கொள்ளை பிரியம். ஆனால் இந்த தண்டுக்கீரை மட்டும் அடிக்கடி கிடைப்பதில்லை. தண்டுக்கீரையை சுத்தம் செய்து, தண்ணீரில் நன்கு அலசி விட்டு, சட்டியில் போட்டு அதனுடன் ஐந்தாறு சின்ன வெங்காயத்தை நறுக்கிம்  நான்கைந்து பூண்டு பற்களை தட்டி, அதனுடன் இரண்டு பச்சை மிளகாயை கீறிப் போட்டு, கொஞ்சமே கொஞ்சமாய் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். கீரை நன்கு வெந்தவுடன், மத்தில் நன்கு கடைந்து கொள்ள வேண்டும். கடைசியாக கொஞ்சம் சீரகத்தை நசுக்கி ஒரு கடைசல் விட்டு, உப்புச் சேர்த்தால் போதும். மிக்சியில் கூழாக்கி, மாவாக்கி, வடகமாக்கி, பருப்புச் சேர்த்து குழம்பாக்கி உண்பதில், கீரையின் உண்மைச் சுவை காணாமல் போய் விடும். இப்படி ஒரு தடவைச் சாப்பிட்டுப் பாருங்கள். கீரையின் சுவை நாக்கின் அடியில் பதுங்கும். 

சமீபத்தில் இந்திய பிரபலமான ஒரு ஆன்மீகப் பெரியவர் ஒருவரை, நிலம் தொடர்பான ஆலோசனைக்காக, அவரின் அழைப்பின் பேரில் சந்திக்கச் சென்றிருந்தேன். அங்கு கிடைக்கும் காய்கறிகளும், கீரைகளும் வார்த்தைகளில் விவரிக்க கூடிய தன்மையானவை அல்ல. இயற்கையின் கொடைகள் அவை. அதனை விவசாயம் செய்பவர்கள் கூட பூச்சி மருந்தோ, உரமோ கூட போடுவதில்லை. அப்படியான ஒரு அற்புதமான பூமி அது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறார்கள் அந்தப் பகுதியினர். ஆனால் நாம் கோவையில் சாப்பிடும் உணவுகளை ஒரே ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம். அத்தனையும் விஷம்.

கீரைப் புராணம் இத்துடன் முடிந்தது.

ஒன்றரை ஏக்கரில் அந்தப் பெண்மணி விவசாயம் செய்து வந்தது. பச்சைப் பசேல் என இருக்கும் அந்தப் பகுதி. வீட்டின் பின்புறம் மாட்டுக்குத் தீவனப்பயிரும், சோளமும் விதைத்திருப்பார்கள். அவைகள் இரண்டு வருடமாக காணாமல் போயின. குளிர்ச்சியும் போய் விட்டது. வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள், வாசலில் பெரும் வேப்பமரம் இருந்து வீடு ஓவன் போல கொதிக்கிறது. உடலுக்குச் சூடு பெரும் கேட்டினைத் தருகிறது. சூடு தாளாமல் அடிக்கடி ஏசி அறைக்குள் செல்ல வேண்டி இருக்கிறது. ஏசி சூரியனை விடச் சூடு கொண்டது. உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பிக்கிறது.

அடிக்கடி சளித் தொல்லை. மாதம் தோறும் மருத்துவமனை செல்ல வேண்டி வருகிறது. ஆரோக்கியமில்லா வாழ்வு, அயர்ச்சியை உருவாக்குகிறது. யாரோ ஒரு புண்ணியவான் அந்த விவசாய நிலத்தில் ஷெட் போட்டு பிசினஸ் செய்கிறான். விவசாயத்தை அழித்து பிசினஸ். தோட்டக்காரரும் என்ன செய்வார்? காசு தானே இங்கு எல்லாம். பணமில்லா வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? ஒன்றரை ஏக்கர் கீரைத் தோட்டம் வழங்கிக் கொண்டிருந்த ஆரோக்கியத்தை ஒரு பிசினஸ் செய்பவர் அழித்தார். அவர் மட்டும் வாழ பிறரைக் கொல்கிறார் கொஞ்சம் கொஞ்சமாக.

இதைத்தான் அற்புதமான, நாகரீகமான வாழ்க்கை என்கிறார்கள் நவ நாகரீகமானவர்கள்.

மழையும், காற்றும் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதை சென்னை அனுபவிக்கிறது. ஆள்பவர்களும், அவர்களுக்கு கூட நிற்கும் அரசு அலுவலர்களும் அயோக்கியவான்களாக இருந்தால் அவர்களிடம் சத்தியாகிரஹம் பேசுவதில் பயனில்லை என்பதை எப்போது இந்த மக்கள் உணர்கின்றார்களோ அப்போது தான் விடியல் வரும்.


Saturday, May 4, 2019

எது சிறந்த வாழ்க்கை?

அன்பு நண்பர்களே,

வணக்கம். நீண்ட நாட்களாகி விட்டன எனது வாழ்வியல் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு. காலச் சூழலும், வாழ்க்கைச் சூழலும் மனதுக்கு இனிமையானதாக இருந்திருப்பின், என்னுள்ளத்தில் பொங்கி வரும் உணர்வுகளை எழுதுவேன். பணிச் சூழலும், வாழ்க்கைச் சூழலும் இல்லாத ஒன்றைத் தேடி ஓடச் செய்கின்றன. 

ஓஷோவின் புத்தகத்திலே படித்தேன் இப்படி.

ஏதோ ஓர் நாட்டிலே ஒரு புத்தர் கோவில் இருக்கிறதாம். கோவில் என்றால் உள்ளே சிலை இருக்க வேண்டுமல்லவா? ஆனால் அந்தக் கோவிலில் புத்தர் சிலை இல்லை. கோவிலுக்குச் செல்வோர் ’எங்கே புத்தர்? எங்கே புத்தர்?’ என்று கேட்பார்களாம்.

அங்கிருக்கும் புத்த பிட்சுகள் என்ன சொல்லி இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்களேன். விடையைக் கீழே தருகிறேன். யோசித்துக் கொண்டே தொடருங்கள்.

எனக்கு அரசியலில் அனேக நண்பர்கள் உண்டு. நீதித்துறையிலும் அதிக நண்பர்கள் உண்டு. அரசியலில் இருக்கும் ஒரு நண்பரின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் என்னை சிலிர்க்க வைக்கும். பரம்பரைப் பணக்காரர் அவர். பணத்துக்கு பஞ்சம் இல்லை. அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்தார். சமீபத்தில் அவரின் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தேன்.

அவரின் இப்போதைய தலைவரை நல்லவர், எளிமையானவர் என்றெல்லாம் விளித்திருந்தார். சிரிப்பு தான் வந்தது.

அந்த நண்பருக்கு சில கேள்விகள் கேட்க மனது ஆலாய்ப் பறக்கிறது.

இந்தியாவின் ஆன்மா அதன் அரசியலமைப்புச் சட்டம். அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் இருப்பிடம் சட்டசபைகள். ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தவர்களுக்கு பதவியும், முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தவர்களின் பதவிகளையும் பிடுங்கிக் கொண்டு, சட்டத்தை தன் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நோக்கி அரக்கச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கின்றார்களே அவர்களில் ஒருவரைத்தான் நீங்கள் அவ்வாறு சொன்னீர்கள். உங்கள் கையில் கட்டி இருக்கும் சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ணக்கயிறுகளை எந்த நம்பிக்கையில் கட்டி இருக்கின்றீர்களோ அந்த நம்பிக்கையை உங்களுக்கு கொடுத்தவர் எவரோ அவர் இப்படியானவர்களுக்கு என்ன பரிசு தருவார்? என அறிவீர்களா? பதிலை நீங்களே உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

நீங்களும், நானும், ஏன் உங்களால் வல்லவர், நல்லவர், எளிமையானவர் என்று விளித்திருப்பவரும் கால ஓட்டத்தின் முன்பு காணாமல் போவோமே, ஆனால் இந்தியாவை ஆளும் அரசியலமைப்புச் சட்டம் என்றும் இருந்து கொண்டே இருக்குமே, அதைக் கேலிக்குறியதாக்கி மகிழும் சிறு குழுவும் நாளைக்குள் என்ன எந்த நொடியில் வேண்டுமானாலும் காணாமல் போவார்களே, அவர்களையா நீங்கள் உயர்த்துகின்றீர்கள்? ஆனால் நீங்கள் அப்படியானவர் இல்லையே? ஏன் இந்த மாற்றம்? ஏனோ??? ஏனோ???? உங்களின் அறம் என்னவாயிற்று? வாடகைக்கோ அல்லது வட்டிக்கோ விட்டிருக்கின்றீரா?

இந்தியாவை ஆன்மீக நாடு என்று சொன்னால் அந்த ஆன்மீகம் சொல்லித் தந்த, கவுரவர்களின் கயமைத்தனத்தின் முடிவினை மறந்தீரா? இராவணன் தூக்கிச் சென்று சிறை வைத்த சீதாவைப் போல, எம் இந்தியத் தாயை தமிழகத்தில் ஆளும் ஆட்கள், ஆளுக்கு ஆள் கற்பழித்துக் கொண்டிருக்கின்றார்களே அவர்களுக்கு ராவணனின் கதி நடக்காது என்றா நினைத்தீர்கள்? சுத்தமாக துடைத்து எடுக்கப்படுவார்கள். அந்தக் கூட்டத்தில் நீங்கள் இருக்க வேண்டாமென்பது என் ஆவல்.

கடவுள் என்னைப் பொறுத்தவரை முரண்பாடுகளின் மொத்த உருவமானவர். புரியும் படி சொல்ல வேண்டுமெனில் அவர் இன்பமாகவும் இருக்கிறார், துன்பமாகவும் இருக்கிறார். அவர் இருளாகவும் இருக்கிறார், வெளிச்சமாகவும் இருக்கிறார். அவர் உங்கள் கயிறுக்குள் தன்னைக் கட்டிக் கிடக்கவில்லை. அவரின் முரண்பாட்டின் விளையாட்டுப் பொம்மைகள் தான் நீங்களும், நானும், உங்களின் அந்த எளியவரும்.  ( நன்றி ஓஷோ)

உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொருவரின் இறுதியையும், மழையையும் எங்கே எப்படி என நடத்துபவன் அவனே. ஃபானிபுயலால் தமிழகம் நீரால் நிறையும் என்று கனவு கண்டாரே உங்களின் அந்த எளியவர். புயலின் தாக்கத்தால் இன்னும் அனேக கோடிகளை டெண்டரில் அள்ளலாம் என்று கனவு கண்டார்களே உங்களின் எளியவர்கள். ஒரு நிமிடத்தில் அது சென்ற பாதையைப் பார்த்தீரா? முடிந்தால் உங்களின் அவரை அதை மாற்றச் சொல்லித்தான் பாருங்களேன். சடுதியில் மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்களை வீட்டுக்கு விரட்டுபவரை மாற்றி அமைக்கச் சொல்லிப் பாருங்களேன். ரத்தத்தின் சூடும், பதவியின் நாற்காலியும் இருக்கும் வரை ஆடுவார்கள். ஆட விட்டு மொத்தமாக பிடுங்கி விடுவார் உங்களின் கையில் கட்டி இருக்கும் கயிற்றுக்கு நம்பிக்கை கொடுப்பவர்.

ஆகவே உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அந்த அறத்தினை கொஞ்சம் வெளியில் உலாவ விடுங்கள். கானல் நீரான நமது வாழ்க்கையில் கொஞ்சமேனும் உண்மையாக இருந்து விட்டுப் போகலாமே? 

உங்களை நான் நிரம்பவும் மதிக்கிறேன். அதற்காகத்தான் இந்தப் பத்திகள். நீங்கள் என்னை மதிக்கின்றீர்களா இல்லையா? என்னை பொருட்டாக கருதுகின்றீர்களா? என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. நான் சொல்வதைச் சொல்லத்தான் செய்வேன். கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்.

நண்பர்களே, எங்கெங்கோ சென்று விட்டேன். மன்னித்தருள்க. உங்களின் பொன்னான நேரத்தின் ஒரு சில நொடிகளைத் தின்று விட்டன எனது இந்த முழுமையற்ற வார்த்தைகள். மன்னிக்கவும். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

ஒரு யூடிப் சானலில் பார்த்தேன். யாரோ ஒரு பையன் சாலையோரத்தில், செருப்புத் தைக்கும் ஒருவரையும், நெருப்பில் வெந்து ஆறிய முகத்தோடு அருகில் அமர்ந்திருந்த அவரின் மனைவியையும் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக கீழே...!




மிகப் பொறுமையாக இந்த வீடியோவை பாருங்கள். மனது நெகிழும். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு உங்களின் வாழ்க்கையை முன் பதிவுகளை கழட்டி ஓரமாக வைத்து விட்டு, நமது வாழ்க்கையையும், இந்த எளிய கணவன், மனைவியின் வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எது உண்மையான தாம்பத்தியம என்பது புரிய வரும்.

நீண்ட நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு பிள்ளைப் பேற்றுக்கு வந்த மனைவியை தன் பிள்ளையுடன், மீண்டும் அழைத்துச் செல்ல விரும்பிய கணவனின் ஆசையை மறுத்த மாமியாரால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதான் பணக்காரத் தாம்பத்தியம். இவர்களின் வாழ்க்கையில் அன்பு எங்கே இருக்கிறது?

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியின் காதலனுடன் பிரேக் அப்பாம். விகடன் செய்தி. காதலன் சொந்த சம்பாத்தியம் செய்யவில்லையாம், பெற்றோரின் உதவியால் தான் வாழ்கின்றானாம், அது ஸ்ருதிக்குப் பிடிக்கவில்லையாம். காதல் பிரேக் அப். உலகம் கொண்டாடுகிறது. விகடன் செய்தி வெளியிட்டு மகிழ்கிறது. அவர்கள் ஏன் பிரேக் அப் செய்தார்கள் என ஸ்ருதியின் நண்பர்கள் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்? இது என்ன மாதிரியான காதல்? (என் படத்தை வெளியிட மறுத்தால், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கண்ணீர் விட்டவரை தலைவன் என ஓட்டுப் போடுகின்றார்கள் தமிழகத்தில். இதை விட வெட்கக்கேடான செயலும் இவ்வுலகில் உண்டா? யோசிக்கும் திறனற்றாப் போனார்கள் தமிழர்கள்?)

காதல் என்பது என்ன என்பதற்கான டெஃபனிஷன்கள் என்னிடம் பல உண்டு. இதுதான் காதல் என்று சொல்ல முடியாது. ’ஏக் துஜே கேலியே’ காதல் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். தேவதாஸ் காதலெல்லாம் படத்தோடு சரி. அதுதான் உண்மை என நம்பிக் கொண்டு சென்றால் வாழ்க்கை நக்கிக் கொண்டு போய் விடும்.

பிறந்தாய், வளர்ந்தாய், உருவானாய், பிறக்க வைத்தாய், வளர வைத்தாய், சென்று சேர்வாய் - இயற்கை மனிதனுக்கு விதித்தது இதுதான். இதற்கிடையில் நடப்பவை எல்லாம் வெற்று நாடகம். காட்சி கலைந்ததும் காணாமல் போய் விடுவோம். உங்களையும், என்னையும் சுற்றி இருப்பது எதுவும் இல்லாத ஒன்றிலிருந்து பிறப்பெடுத்தவை. எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று விடும். அது உங்களின் அருமை பிள்ளையானாலும் சரி, அழகான மனைவியானாலும் சரி, கடவுளுக்கு நிகர் தந்தை, தாயானாலும் சரி.

சரி முன் பத்தியில் கோவிலில் புத்தர் சிலை ஏன் இல்லை என்பதற்கான பதில் கீழே.

”இந்த தூய்மையான, வெறுமையான மெளனமான இடமே புத்தர்”

இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கை இனிதாய் கழியும்.

உங்களுக்கும், எனக்கும் எக்ஸ்பைரி தேதி குறித்தாகி விட்டது நண்பர்களே.....!

இதை என்றைக்கும் மறந்தும் மறந்து விடாதீர்கள்.

ஒரு பொண்ணு நெனச்சா திரைப்படப்பாடலும், அதன் வரிகளும் உங்களுக்காக.

" உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உனை இங்கு காணாததால் உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசாததால் இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் இதயமே இதயமே உருகுதே உருகுதே நிழலினில் தொடரும் தொடரும் எனது ஜீவனே உறவுகள் வளரும் வளரும் எனது தேவனே விழி சிந்தும் ராகம் ஒன்று உனை நாடுதே எதிர்காலம் நீயே என்று தினம் கூடுதே கண்மணியே கண்மணியே மனம் இங்கு மயங்கிடுதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உனை இங்கு காணும் வரை உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசும் வரை இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் சாலையில் சோலையில் காலையில் மாலையில் நிதம் ஒரு புதுமை பழகும் எனது ராஜனே இனியதும் இளமை குலவும் எனது தேவியே வசந்தத்தின் தேசம் எங்கும் வலம் போகலாம் வருகின்ற காலம் தோறும் சுகம் காணலாம் இரவுகள் மலருதே அமுதங்கள் பருகிடவே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உனை இங்கு காணும் வரை உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசும் வரை இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன்"



விரைவில் சந்திப்போம் நரலீலையில்....!

- 04/05/2019

Wednesday, May 1, 2019

நிலம் (52) - பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையம் செல்லுமா?

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலாளிதான். அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். தொழிலாளி இன்றி பெரும்பான்மை உலகியல் இயக்கம் நடக்காது. அந்த வகையில் மாந்தர் வாழ்வியல் சக்கரங்களை தொழிலாளிகள் சுழல வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

சரி விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

சமீபகாலமாக சுப்ரீம் கோர்ட் பவர் ஆஃப் அட்டர்னி மூலமாக கிரையமோ அல்லது வேறு ஏதாவது ஆவணமோ எழுதப்பட்டு அதன் மூலம் சொத்துக்களின் உரிமை மாற்றம் செய்வது செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்ததாக ஒரு செய்தி வாட்ஸ்சப் மூலம் பலருக்கும் பரிமாறிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்த தீர்ப்பு ஒரு வழக்கிற்காக வழங்கப்பட்டது. அந்த வழக்கில் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை செய்யப்பட்டது செல்லாது என்பது தீர்ப்பு என நினைக்கிறேன். அந்த தீர்ப்பினைத் தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்தால் ஏதாவது ஒரு பதிவில் இணைத்து விடுகிறேன். ஆனால் முழுமையான விசயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்தப் பதிவு எழுதி இருக்கிறேன்.


(இதுதான் எனக்கும் வாட்சப்பில் வந்த செய்தி)

இது பற்றிய உண்மைதான் என்ன? என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். 

சொத்துரிமை மாற்றம் மற்றும் ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி சட்டம் 1882ன் படி பகுதி 5 மற்றும் 54ல், ஜிபிஏ (GPA) மூலம் ஒரு அசையாச் சொத்தின் உரிமையை வேறொருவருக்கு அட்டர்னி மாற்றலாம் எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆகையால் அந்த வகையான உரிமை மாற்றம் செல்லும் ஒன்றுதான் என்பதில் எவருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.

இதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் தேவையில்லை. ஆனால் இந்தப் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையமோ அல்லது லீசோ கொடுக்கப்படும் போது பெரும்பாலானவர்கள் கவனிக்க தவறும் ஒரு சில அம்சங்கள் உள்ளன. அவைகளை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அதைக் கவனிக்காது விட்டால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் உரிமை மாற்றம் ஏற்பட்டிருப்பது செல்லாது போய் விடும் ஆபத்து உள்ளது. அது என்ன அம்சம் என்பதை எழுத இயலாது. உருவாக்கப்படும் ஆவணங்களைப் பொறுத்து வேறுபடும் என்பதால் பொதுவாக குறிப்பிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்ரீம் கோர்ட் அரசாங்கத்துக்கு புதிய சட்டம் இயற்றுங்கள் எனவும், பவர் ஆஃப் அட்டர்னி பற்றிய தெளிவான சட்டம் அவசியம் என்பதற்கான அவசியத்தையும் குறிப்பிட்டது. ஒரு சில இணைய தளங்கள் தலைப்பினை தவறாக குறிப்பிட்டு விட்டன. அதனால் பலரும் கிலி பிடித்தலைந்தார்கள் என்பது உண்மை. ஆகவே அது பற்றிய கவலைகளை விட்டு விடவும். ஆனால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை மாற்றம் செய்யப்படும் போது வெகு கவனமாக இருத்தல் அவசியம். அதற்கு தகுந்த அட்வைஸ்சர்களை அணுக வேண்டியது அவரவர் கடமை.

சுப்ரீம் கோர்ட் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பால் மட்டுமே தீர்ப்பு வழங்கும் அமைப்பு. அதற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. ஒரு சில விஷயங்களுக்கு அது சட்டத்துக்கு உட்பட்டு சில உத்தரவுகளை பிறப்பிக்கலாம். சட்டம் என்பது பல வித உள் விஷயங்கள் உடையவை. வெகு நுணுக்கமானவை. இது பற்றிய ஒரு பதிவினை முன்பே எழுதி இருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் விடுபட்டது வெகு நுணுக்கமான விஷயம் ஆகும். இதை எழுதி இருக்கிறேன். தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எல்லாம் வல்ல கில்லாடிகளுக்கு சட்டத்தினை உடைக்கும் வழி முறைகள் தெரியும். உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் கீழே விகடனில் வந்துள்ள ஒரு செய்தியை அளிக்கிறேன். சட்டத்தின் ஓட்டைகள் மூலம் எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதைத்தான் சட்டத்தின் ஓட்டைகள் என்கிறார்கள். ஓட்டை என்றால் ஏதோ பானை, ஓட்டை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

நெடுஞ்சாலைத் துறையில் அடேங்கப்பா ஊழல்! - எடப்பாடி பழனிசாமி மீது ‘பகீர்’ புகார் - ஜூனியர் விகடன் - 01.05.2019ல் ( நன்றி ஜூனியர் விகடன்) 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ‘யாரை முதல்வராக்குவது’ என்று கூவத்தூரில் கூடி விவாதித்தபோது, எல்லா அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் ‘சமாளிக்கும்’ அளவுக்கு சமத்தர் என்றுதான் எடப்பாடியைத் தேர்வு செய்தது சசிகலா அண்ட் கோ. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எடப்பாடி அந்தளவுக்கு செல்வத்தையும், செல்வாக்கையும் வைத்திருந்ததுதான் காரணம்!

முன்பு எல்லாம் அரசு ஒப்பந்தப் பணிகள் என்றால், 10 சதவிகிதம், 15 சதவிகிதம் என்று அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷன் வெட்ட வேண்டியிருக்கும். அ.தி.மு.க ஆட்சியில் குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, இந்த கமிஷன் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. உடனே, பணிகள் நியாயமாக நடக்கின்றன என்று ஆச்சர்யப்பட வேண்டாம். பழைய ஒப்பந்ததாரர்களுக்கு பெரும்பாலும் பணிகள் தரப்படுவதே இல்லை. பெரும்பாலும் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களே ஒப்பந்தங்களை ‘பறிமுதல்’ செய்துவிடுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டும் இதுதான்.

ஏற்கெனவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்த வழக்கை, சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அசராமல் இப்போது, 652 கோடி ரூபாய் மதிப்புகொண்ட ஒரு சாலை ஒப்பந்தத்தில் பிரமாண்டமான ஊழல் அரங்கேறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘பழனி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டச் சாலைகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கமான மதுரை நிறுவனம் ஒன்றுக்கு, விதிமுறைகளை வளைத்துக் கொடுத்துள்ளனர். இதில் முதல்வரின் அரசியல் உதவியாளரான மணியானவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது’ என்பதே அந்த குற்றச்சாட்டு.

பெயர் குறிப்பிட விரும்பாத சாலை ஒப்பந்ததாரர்கள் சிலர், “சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்த அழைப்பு மார்ச் 5-ம் தேதி விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விவரங்களை ஆன்லைனில் மார்ச் 22-ம் தேதிதான் பதிவேற்றம் செய்துள்ளனர். முன்அனுபவம் குறித்த தகவல்கள் ஏப்ரல் 1-ம் தேதிதான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்க மே 2-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயித்துள்ளனர். முன் அனுபவம் உட்பட முழுமையான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு 45 நாள்கள் அவகாசத்துக்கு பின்னரே ஒப்பந்தத்தை திறக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் ஏப்ரல் 1ம் தேதி கணக்குப்படி முதல் 30 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான விதிமீறலாகும்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதைக் கணக்கிட்டு முன்கூட்டியே ஒப்பந்த அழைப்பை விடுத்தவர்கள், நடத்தை விதிமுறைகள் முழுமையாக விலக்கப்படுவதற்கு முன்னதாகவே, இறுதி நாள் கெடுவையும் குறித்துள்ளனர். ஏன் இந்த அவசரம்? பெரும்பாலான சாலை ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் தேர்தல் முனைப்பில் இருக்கும் போது, சந்தடியில்லாமல் வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன. இதில் ஆர்.ஆர். தவிர்த்து மற்ற இரண்டும் டம்மி நிறுவனங்கள். விதிமுறைகளைத் தளர்த்தி, முதல்வருக்கு நெருக்கமான மதுரை ஆர்.ஆர். இன்ஃப்ரா கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றவர்களிடம், “எல்லா ஒப்பந்தங்களும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படுவதாகவும், இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பே இல்லை எனவும் முதல்வர் தெரிவித்திருக்கிறாரே?” என்றோம்.

“கிடையாது. கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தங்களில், வெறும் 30 கோடிக்குதான் ஆன்லைன் மூலமாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதி எல்லாம், டெண்டர் பெட்டியில்தான் போடப்பட்டன. சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்தம்கூட ஆன்லைனில் கோரப்படவில்லை. டெண்டர் பெட்டியில் போட நாங்கள் செல்லும்போது, குண்டர்களாலும் அதிகாரிகளாலும் தடுக்கப்படுகிறோம். (இது ஒரு ஓட்டை)

மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்த அழைப்புகளில், இயந்திரங்கள் உரிமைகளுக்கான சான்றாவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சாலைப் பணியை மேற்கொள்ள இருபது ரோடு ரோலர்கள் இருப்பதாகக் கணக்கு காண்பித்தால் போதுமானது. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத் துறையின், சாலை ஒப்பந்தங்களில் இயந்திரங்கள் இயங்கு நிலையில் இருப்பதற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர்தான் தரவேண்டும். அவர் யாருக்கும் தரமாட்டார். அமைச்சர் கைகாட்டும் நிறுவனத்துக்கு மட்டுமே தரச்சான்றிதழ் அளிக்கப்படும். மற்ற நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்பில் செல்லும் அவலம் எல்லாம் இங்கு அரங்கேறுகிறது. (இது இன்னொரு ஓட்டை)

ஒப்பந்தம் கோரும் நிறுவனத்தின் நிகர மதிப்பு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் மொத்தத் தொகையில் 20 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், பழனி கோட்ட சாலைகளைப் பராமரிக்க விடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில், இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. 652 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, குறைந்தது 15 கோடியாவது கட்டியிருக்க வேண்டும். ஒப்பந்தம் எடுக்க விரும்பும் ஒரு நிறுவனம், ஒப்பந்தத்தில் கோரியுள்ள பணிகளைப் போன்று பல பணிகளை முன் அனுபவமாக முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்த வகையில் மட்டும் சராசரி ஆண்டு வரவு - செலவுக் கணக்கு, ஒப்பந்த தொகையில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால், பழனி கோட்ட ஒப்பந்தத்துக்கு 260.87 கோடி ரூபாய் வரவு - செலவுகொண்ட பணியை செய்துமுடித்த அனுபவத்தைக் கொண்ட நிறுவனம்தான் ஒப்பந்தம் எடுக்க முடியும். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஆண்டு வரவு செலவு 227.12 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, முன்அனுபவ விதி 25 சதவிகிதமாக தளர்த்தப்பட்டு, 163.05 கோடிக்கு வரவு செலவு இருந்தாலே போதுமானது எனத் தகுதி குறைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.(இது சட்டமீறல், இதை கோர்ட் மூலம் நிரூபித்து டெண்டரையும் டெண்டர் கொடுத்தவரையும் டரியலுக்கு உட்படுத்தலாம்)

இதுபோன்ற பெரிய பணிகளைத் தவிர்த்து, சிறிய ஒப்பந்தங்களுக்கும் 17 சதவிகிதம் கமிஷன் தர வேண்டியிருப்பதாகவும் கூறும் ஒப்பந்ததாரர்கள், ‘‘எந்த ஒப்பந்தப்பணியை எடுத்தாலும், ஆட்சி மேலிடத்துக்கு மொத்த ஒப்பந்தத் தொகையில் 17 சதவிகிதம் கமிஷனாகக் கொடுக்கவேண்டும். அதிகாரிகளுக்கு ஏழு சதவிகிதம், உள்ளூர் அரசியல் பிரமுகர் மற்றும் போலீஸுக்கு இரண்டு சதவிகிதம், ஜி.எஸ்.டி ஐந்து சதவிகிதம் என 31 சதவிகிதத் தொகை இப்படியே போய்விடும். மீதமிருக்கும் 69 சதவிகிதத்தில்தான் பணி செய்யவேண்டும். அதிலும் லாபம் போக, 50 சதவிகிதத் தொகையில்தான் பணியே நடக்கிறது. இதில் எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்? இந்த கமிஷனுக்காகவே 100 கோடி ரூபாய் பெறுமான வேலைக்கு, 200 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் விடப்படுகிறது. விதிமுறைகளுக்கேற்ப நிறுவனங்களைத் தேர்வு செய்யாமல் நிறுவனங்களுக்கேற்ப விதிமுறைகளைத் தளர்த்துவதுதான் இங்கு நடக்கிறது’’ என்றனர். (இந்த கமிஷன் பிரச்சினையை எளிதாக சரிசெய்யலாம். ஆனால் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் அரசியல் செய்ய முடியாது. அரசும் இயங்காது. ஊழல் என்பது வலிக்காமல் செல்லமாக கிள்ளுவது போல இருக்க வேண்டும். ஆனால் இப்போது ஊழல் என்பது பெரும் பள்ளமாக தோண்டி பலருக்கும் தெரிய செய்யப்படுகிறது. ஊழல் இன்றி ஒரு அரசு இயங்க முடியுமா? என்றால் நான் அடித்துச் சொல்வேன் இயங்கவே இயங்க முடியாது. ஊழல் பற்றிய டெஃபனிஷன்கள் பல உண்டு. வாரிசுகளுக்கு பணி வழங்குவது கூட என்னைப் பொறுத்தவரை ஊழல்தான். யாரோ ஒருவரின் தகுதி அவ்விடத்தில் வாரிசு என்கிற முறையில் மறுக்கப்பட்டு விடுகிறது என்பதுதான் உண்மை)

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம், மதுரை பி.ஆர்.பி கிரானைட்ஸ் பழனிசாமியின் உறவுக்காரரான ராமு என்பவருக்கு சொந்தமானது. குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், “எல்லா டெண்டர்களும் ஆன்லைன் மூலமாகவே செய்யப்படுகின்றன. யார் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஒப்பந்தம் அளிக்கமுடியும். தரமில்லாத இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட நிறுவனம் தகுதியுள்ளதா என்பதைக் கண்காணிக்கவுமே தரச்சான்றிதழ் கோரப்படுகிறது. யாருக்காகவும் விதியைத் தளர்த்தவில்லை. இதில் முறைகேடு நடக்கவாய்ப்பில்லை என நீதிமன்றமும் கூறியுள்ளது’’ என்றனர். (இது சட்டம், அதன் ஓட்டைகளை முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ளேன்) சம்பந்தப்பட்ட ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவன தரப்பும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.  

ஊழலுக்கு வழி வகுப்பதாகக் கூறப்படும் தமிழக நெடுஞ்சாலைத்துறையில், தரச்சான்றிதழ் கோருவது தொடர்பாக மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம், “செருப்புக்கேற்ப காலை வெட்டுகிற கதையாக, தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, விதிகளைத் தளர்த்துகின்றனர். முன்பெல்லாம், சாலை புதுப்பிப்புப் பணி என்றாலும், புதிய சாலை போட வேண்டும் என்றாலும் அந்தந்த கோட்டப் பொறியாளர் மதிப்பீடு செய்து, மாநிலத் தலைமைக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டு அந்தக் கோட்டப் பொறியாளரின் கண்காணிப்பில் பணிகள் நடக்கும். பணிக்கான தொகையும் குறைவாக இருக்கும். இப்போது, 38 கோட்டங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் வேலையைத்தான் அரசு செய்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது” என்றார்.

ஊழல் நடக்கிறதென்பது ஊர் உலகத்துக்கே தெரிகிறது. யாரால், எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என்றுதான் தெரியவில்லை!

- ந.பொன்குமரகுருபரன்

குறிப்பு: சிவப்பு வண்ணத்திலும், ஊதா வண்ணத்திலும் இருப்பவை எனது குறிப்புகள். 

Friday, April 12, 2019

நிலம் (51) - சப்டிவிஷன் சர்வே எண்களில் ஏமாற்றுகிறார்கள்

பூமி - மனிதர்களின் அத்தனைக்குமான உன்னதம். காற்று, உணவு, உடை இப்படி எல்லாவற்றிற்கும் காரணமான இயற்கைக் கடவுள். அது தன்னைத் தானே ஒரு முறை குலுக்கிச் சிலிர்த்தால் தற்போதைய இந்தியாவின் உன்னத உத்தம பிரதமரும், அம்பானியும், அதானியும் காணாமல் போவர். சாதிகள் போகும், சண்டைகள் போகும், அதிகார மமதை போகும், எல்லாமும் போயே போய் விடும். தான் மட்டுமே உண்மையானவன் என்பது போல, ஒரு பெண்ணிடம் தன் அயோக்கியத்தனத்தைக் காட்டி, அதிகாரத்தினை அடையத் துடிக்கும் அற்பத்தனத்தை, அயோக்கியத்தனத்தை ஆம்பளைத்தனம் என்கிறார்கள் பலர்.

இயற்கையின் முன்னே மனிதர்கள் பதர்களை விடச் சிறியவர்கள். ஆனால் பாருங்கள்! ஒரு ஜான் அளவு இருக்கும் வயிற்றுக்கு, தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை என்னென்ன கொடுமைகள் செய்கின்றார்கள் இவர்கள் என. மலைகளை உடைக்கின்றார்கள், ஆறுகளை தடுத்து தண்ணீரை உறிஞ்சுகின்றார்கள், சாயத்தைக் கலந்து பூமிக்குள் மோட்டார் வைத்து செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்(திருப்பூரில்), இப்படி பூமியை சித்தரவதை செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்ப மனிதர்கள்.

மனித தன்மை கொஞ்சமாவது இருந்தால் ஆற்றில் கிடக்கும் மண்ணை அள்ளி விற்று தன் சுகத்துக்காகவும், பிள்ளைகளுக்கும் சொத்தினைச் சேர்த்து வைப்பார்களா? எல்லாவற்றையும் விற்று, பலரைப் பட்டினி போட்டு சாகடித்து, தான் மட்டும் வாழ்ந்து உயிரோடா இருக்கப் போகின்றார்கள்? என்றைக்கு மனிதன் பிறந்து விழுந்தானோ அன்றைக்கே அவனுக்கு எக்ஸ்பைரி தேதி குறித்தாகி விட்டது. அந்தத் தேதி தெரிந்தால் எந்த அறிவிலிகளும் இத்தனை ஆட்டம் ஆடாதுகள். தேதி தெரியாது. ஆட்டம் போடுகின்றதுகள்.

எத்தனை எத்தனை மதங்கள் இருந்தாலும், எத்தனை எத்தனை நல்ல நூல்கள் இருந்தாலும், கடவுள்கள் இருந்தாலும் மனிதன் தனது வயதான காலத்தில் தான் உணர்கின்றான். எதைச் செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்ற அறிவு இன்றி, இறுதியில் தன் கைமீறி நடக்கும் அத்தனைக்கும் தானும் ஒரு காரணம் என எண்ணி வெம்புகிறான் திரு.அத்வானி போல.

அன்பைத் தவிர, சக மனிதன் மீதான அன்பைத் தவிர இந்த உலகில் வேறு ஏதாவது ஒன்று பெரிதா? சொல்லுங்கள் நண்பர்களே!!!!

சுயமோகிகளாலும், இந்த வாழ்க்கை நிரந்தரம் என எண்ணிக் கொண்டிருக்கும் அற்பர்களாலும் எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் ஏமாற்றப்பட்டு, அல்லல்பட்டு அயராது உழைத்த பொருளை இழந்து, வேதனையில் விழுந்து, மனம் நொந்து போய் இறந்து போகின்றார்கள். 

மீபத்தில் என்னிடம் ஒரு அன் அப்ரூவ்ட் மனையின் சொத்து அப்ரூவலுக்காக வந்தது. தினக்கூலி ஏழை அவர். அவரின் கனவு ஒரு வீடு. அவ்வளவு தான். எளிமையான அவரின் வீட்டு மனையினை அப்ரூவல் செய்வதற்காக, ஆன்லைனில் பதிவு செய்து அப்ரூவலுக்கு லோக்கல்பாடிக்குச் சென்ற போது இந்த மனை பதிவு செய்யப்பட்டிருக்கும் சர்வே எண்ணுக்கு உரித்தான ஆவணங்களைக் கொண்டு வரும் படி கேட்டிருக்கின்றார்கள்.

என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது என்று அவரிடமிருந்த ஆவணங்களைக் காட்டி இருக்கிறார். ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். ஒன்றும் புரியாமல் என்னிடம் வந்தார்.

லோக்கல்பாடியில் அவரின் மனைக்கான மூல ஆவணங்களைக் கேட்டிருக்கின்றார்கள். அவரிடம் இருந்த ஆவணங்களில் அவர் மனை அமைந்திருக்கும் சர்வே எண் இல்லை. விஷயம் விளங்கியதா? ஆனால் பிளான் இருக்கிறது. மூலப்பத்திரங்களை ஆய்வு செய்த போது கிரையம் பெறாத ஒரு பகுதியை சேர்த்து மனையாக போட்டு விற்பனை செய்திருக்கிறார்கள். இவரும் ஒரு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் மனையைக் கிரையம் செய்திருக்கிறார். வக்கீலும் சரி பார்த்துதான் கொடுத்திருக்கிறார்.

வக்கீல் மூல ஆவணங்கள், பட்டாக்கள், கிரையம் ஆவணம், மேப் இவைகளை ஆராய்ந்து இருக்கிறார். எல்லாம் சரிதான். ஆனால் மனை இருக்கும் இடம் வேறொருவருக்கு உரித்தானது என்பதைக் கண்டறிய மறந்து போனார். அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும் எனக் கேட்கத் தோன்றும். அது அனுபவத்தில் வரக்கூடியது. மூளை சூடாகி கொதி கொதியென கொதிக்கும். கவனம் சிறிது பிசகினாலும் தவறாகிப் போகும். ஷார்பான புத்தியுடன் அமைதியான இடத்தில் அமர்ந்து ஆவணங்களை ஆராய்ந்து சரி பார்க்க வேண்டும்.

தனக்கு உரிமையில்லாத இடத்தில் மனை போட்டு விற்றிருக்கின்றார்கள். மனை விற்றவரை இனிப் பிடிக்க முடியுமா? அது சாத்தியமில்லாத ஒன்று. ஒரே வழி வழக்குப் போடுவது மட்டுமே. அவரின் உழைப்பு? அவரின் கனவு? அவரின் வாழ் நாள் ஆசை? எல்லாமும் பறிபோனது.

இந்த மனையில் நடந்திருக்கும் உள்குத்து என்ன தெரியுமா? தவறான சப்டிவிஷனைக் காட்டி மனையினை விற்றிருக்கின்றார்கள். ஆனால் மனை அமைந்திருந்த இடம் வேறு ஒருவருடையது. இதிலும் ஒரு கோல்மால் வேலை நடந்திருக்கிறது. யாரையோ சரிக்கட்டி அந்த சப்டிவிஷனுக்கான பட்டாவில் தன் பெயரையும் சேர்ந்திருக்கிறார் அந்தக் கில்லாடி ஆள்.

சப்டிவிஷன் ஆகும் போது க.ச. எண்.100 என்பது 100/1,2,3 என இடத்துக்கு தக்கவாறு, கிரைய ஆவணத்துக்கு ஏற்றபடி மாற்றம் செய்வார்கள். மேலும் உபபிரிவுகள் 100/3ஏ1, 3ஏ2,3ஏ3 என்று பிரியும். இந்த சப்டிவிஷன்கள் பிரிபடும் போது இல்லாத ஒருவரை பட்டாவில் ஏற்றி பல்வேறு கூத்துகளை அரங்கேற்றுவார்கள் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் ஆட்கள். அவர்களுக்கு பணம். நிலத்தின் உரிமையாளர்களுக்கு துன்பம். பிறரின் துயரம் தானே இன்னொருவருக்கும் வருமானம்.

இடிந்து போய் உட்கார்ந்திருந்தார் என் முன்னே. ”ஏதாவது செய்யுங்களேன் தங்கம்” என்று அரற்றினார். வேதனைதான் உள்ளத்தில் நிறைந்தது. அவருக்கு நியாயம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அவரின் மகிழ்ச்சியான முகத்தை விரைவில் பார்க்கும் நாள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். பெரும் போராட்டம் தான். இருக்கட்டும் போராடிப் பார்த்து விடலாம் என முடிவு செய்து கொண்டு, “கவலை வேண்டாம், சரி செய்து விடலாம்” என்று அவரைத் தேற்றி அனுப்பினேன்.

ஆகவே நண்பர்களே, டிடிசிபி அப்ரூவல் மனைகள் என்றாலும், அன் அப்ரூவ்ட் மனைகள் என்றாலும், நிலங்கள் என்றாலும் சரி கவனமாய் இருங்கள். கவனமாய் இருங்கள். 

வாழ்க வளமுடன்.....!

Friday, April 5, 2019

நிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன?

நிலம் தொடர் 50வது பாகத்தை எழுதுகிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. காலம் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. கணிணி ஆசிரியனாக வாழ்க்கையைத் துவங்கியவன் இன்றைக்கு ரியல் எஸ்டேட் தொழிலே மூச்சாக இருப்பதற்கு, காலத்தை மட்டுமே காரணம் சொல்வேன். 

இந்த துறையில் அனுபவப்பாடம் பயின்றது வில்லன்களிடம். மக்களை எப்படி ஏமாற்றலாம் என நினைத்த வில்லத்தனமானவர்களிடம் தொழில் கற்றேன். எதைச் செய்யக்கூடாது என்று முதலில் தெரிந்து கொண்டேன். பின்னர் எது சரி எனப் புரிந்து கொண்டேன். யார் யாருக்கு என்னென்ன தெரியுமோ அந்த அறிவினை வைத்துக் கொண்டு இந்தத் தொழிலைச் செய்கின்றார்கள். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் அதுவல்ல. அது ஒரு கடல். பல அரசுத் துறைகளால் கட்டுப்படுத்தப்பட்ட மர்மங்கள் மண்டிக் கிடக்கும் மாயக்கடல்.

இதற்கென பல தனித்தனியான துறைகள் இருக்கின்றன. நில ஆவணங்கள் பதிவு செய்வது, அரசு ஆவணங்களை உருவாக்குவது, அளப்பது என இதற்கே இரண்டு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறைகளும் தனக்கென தனித்தனி ஆவணங்களை வைத்திருக்கின்றன. அந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு நிலத் தொழில் செய்வது சாத்தியமா? நிச்சயம் சாத்தியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

புரியும்படிச் சொன்னால் இந்திய சாலை அமைச்சகம் கூட நிலத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சாலை விரிவாக்கத்துக்கு நிலம் எடுத்தால் அதை ரெவின்யூ ரெக்கார்டில் கொண்டு வர எத்தனை காலம் பிடிக்கும் என உங்களுக்குச் சொல்லித் தெரியாத ஒன்றில்லை. ஏர்போர்ட் அத்தாரிட்டி மூலமாக கூட ஒரு நிலத்தின் ஆவணம் மாற்றப்படலாம் என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது.

வங்கிகளில் லீகல் ஒப்பீனியன் பார்ப்பார்கள். அது சரியானதுதான் என்று என்னிடம் வாதிடுவார்கள். வக்கீல்கள் எப்படி லீகல் பார்ப்பார்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் கொடுக்கும் ஆவணங்களை வைத்து சரி பார்ப்பார்கள். அவரிடம் அனைத்து டிபார்ட்மெண்ட்களின் ஆவணங்கள் இருக்குமா? என்றால் இருக்காது. நாம் கொடுக்கும் ஆவணங்களை வைத்துக் கொண்டு  அவர் சரி பார்ப்பார். ஆனால் உண்மை என்ன?  பல துறைகளில் பங்கெடுத்துக்கு இருக்கும் ஆவணங்களை அவர் எப்படி சரிபார்ப்பார்? இயலாது அல்லவா? ஒரு வாங்குபவரால் அத்தனை ஆவணங்களைத் திரட்ட முடியுமா? அது அவ்வளவு எளிதானதும் அல்ல. விற்பவர் தன்னிடம் இவ்வளவு தான் ஆவணங்கள் இருக்கின்றன என்பார். இருக்கும் ஆவணங்களை வைத்துக் கொண்டு சரி பார்ப்பது மட்டுமே இயலும். 

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, பெரும்பான்மையான தமிழக நிலங்களின் விபரங்களைச் சேகரித்து வைத்து இருக்கிறேன். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு நிலங்களை அலசி விட நீண்ட வருடங்களாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வருகிறேன். கடின உழைப்பின் காரணமாக இதைப் போன்ற ஆவணங்களைத் தேடித் தேடி அலைந்து திரிந்து டிஜிட்டலாக்கி பாதுகாத்து வருகிறேன். உதாரணமாக ஒரு நிலத்தை வாங்கி சைட் போட்டு விற்கலாம் என முடிவு செய்கின்றீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அந்த நிலம் சைட் போட தகுதியானது தானா எனக் கண்டறிய எளிதில் முடியாது. அதை ஒரு நிமிடத்தில் கண்டறிய தேவையானவைகள் என்னிடம் இருக்கின்றது. இப்போது புரியும் என நினைக்கிறேன்

கோடிக்கணக்கில் பொருள் முதலீடு செய்யும் போது இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு, எதிர்கால சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வது வாங்குபவர்களிடம் இருக்கிறது. கவனம் தேவை ! அவ்வளவுதான்.

இப்படி நான் ஆவணங்களை வகைப்படுத்திக் கொண்டு வரும் போது மானிய நிலங்கள் என்ற சொல்லை அடிக்கடி கேட்க ஆரம்பித்தேன்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது இந்தியாவில் இருந்த நிலங்களை எல்லாம் முன்னர் இருந்தவாறே பதிவு செய்து வைத்திருந்தார்கள். ஆங்கிலேயே முறைப்படிதான் இன்றைய நில அளவுகள் தொடர்கின்றன. அவ்வப்போது அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றன.

இந்திய அரசு விடுதலை பெற்ற போது, திருவாரூர் ஆதீனத்தில் இருந்து ஒருவர் டெல்லி சென்று திருப்பதிகப் பாடல்களைப் பாடி மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இருந்து செங்கோலைப் பெற்று நேருவிடம் கொடுத்தார் எனவும், அது பற்றிய ஒரு புகைப்படம் திருவாரூர் மடத்தில் இருப்பதாகவும் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். அன்றைய இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்திய மக்களின் பிரதி நிதியான நேருவிடம் இப்படித்தான் மாறியது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது நான்கு போர் விமானங்களும், கொஞ்சம் ராணுவ வீரர்களும், இந்தியா முழுவதும் பசியும், பட்டினியும் தான் இருந்தனவாம். ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தான் இன்றைய இந்தியாவை உருவாக்கியது. இதில் பல்வேறு இடைத் துரோகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் நீங்கள் “நரலீலைகள்” நாவலில் படித்துக் கொள்ளுங்கள்.

பிஜேபியின் மோடி இன்றைக்கு எதெற்கெடுத்தாலும் காங்கிரஸைக் குற்றம் சாட்டி, எதிர்மறையாகப் பேசிக் கொண்டிருக்க காரணம் அந்த காங்கிரஸ் தான். உலகமே இருண்டு கிடப்பதாய் நினைத்துக் கொண்டு கோயபல்ஸ் வசனங்களை வீசிக் கொண்டிருக்கின்றார்கள் பிஜேபியினர். இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். உண்மையைப் பற்றிப் பேசும் போது, பொய் எதிரில் வந்து விடுகிறது. அது போகட்டும் அரசியல் அந்தப் பக்கம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் பதிவு செய்த நில ஆவணங்களில் மானிய நிலங்கள் என்ற பகுதி உண்டு. இதற்கென நில ஆவணத்துறையில் இதற்கென தனி பதிவுகளே உள்ளன. மானியம் என்றால் இலவசம் என அர்த்தம் வரும். இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களே தற்போது அரசு ரயத்துவாரி என்றுக் குறிப்பிட்டு வரி வசூலிக்கின்றது. ரயத்துவாரி என்பது வரி வசூல் நிலங்களைக் குறிப்பது ஆகும்.

1953ல் இனாம் ஒழிப்புச் சட்டம் வந்த பிறகு பெரும்பான்மையான நிலங்கள் ரயத்துவாரிகளாக மாற்றப்பட்டன. அவைகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன. ஒரு சில நிலங்கள் ரயத்துவாரிகளாக்கப்பட்டு வரி பெறாமல் பொது மக்களின் உபயோகத்துக்காக, நன்மைக்காக, ஆன்மீகத்துக்காக விடப்பட்டன. அப்படி ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டதற்கு முன்பு என்னென்ன மானிய நிலங்கள் இருந்தன என்பது பற்றிப் பார்க்கலாம்.

ஒரு வெகு சுவாரசியான தகவல் ஒன்றினைப் பகிரலாம் என நினைக்கிறேன். இன்றைக்கு அக்ரஹாரம் என்றுச் சொல்கின்றார்கள் அல்லவா? அது மானிய நிலத்தைக் குறிக்கும் சொல். பிராமணர்களுக்கு மன்னர்களால் கொடுக்கப்பட்டதுதான் அக்ரஹாரம். இந்த நிலத்திற்கு வரி வசூலிக்கப்படவில்லை. வேதம் சொல்லித் தரவும், வேதங்களைப் பரப்பவும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் இருக்கும் பகுதிதான் அக்ரஹாரம். பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களை பார்க்கும் போது, பிராமணர்களுக்கு ஏன் மானிய நிலம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதன் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது. அது பற்றி இப்போது பேசத் தேவையில்லை.

ராணுவ வீரர், படைத்தளபதி, ஆசை நாயகிகள், தேவதாசி, கலைஞர்கள், நாட்டை ஆண்ட அரசர்களுக்கு, நொடித்துப் போன அரசர்களுக்கு, நாவிதர், தச்சர், சோழியர், வண்ணார், பூசாரி, வெட்டியான், காவல்காரர்கள், தலையாரி ஆகியோருக்கு மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. இது தவிர கோவில், ஆதீனங்கள், மடங்கள், சர்ச்சுகள், மசூதிகள் ஆகியவற்றுக்கும் மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. மேற்படி மானிய நிலங்களை வகைப்படுத்தி இருந்தார்கள். தர்மதாயம், தேவ நாயம், பந்த் விருத்தி, ஸ்தோத்திரியம், ஜாகிர், தேஸ்முக்/தேஸ்பாண்டே, அமாம், நோபந்தம் என்ற பெயர்களில் மானிய நிலங்கள் வழங்கப்பட்டு, வரி இல்லாமல் மானியம் பெற்றவர்கள் பயனடைந்து வந்தார்கள்.

அக்ரஹாரத்தில் கூட சர்வ, பிலுமுக்த, ஜோடி என உட் பிரிவு மானிய நிலங்கள் இருந்தன. இந்த பிரிவுகளுக்கு தக்கவாறு வரி இல்லாமலும், ஒரு முறை வரி செலுத்துவதாகவும், குறைந்த வரி செலுத்துவதாகவும் நிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. கைரதி மானிய நிலங்கள் முஸ்லிம் உலமாக்களுக்கு வழங்கப்பட்டன என ஆவணங்கள் சொல்கின்றன. தமிழகம் முழுவதும் பெரும்பான்மையாக பந்த் விருத்தி மானிய நிலங்கள் தான் இருந்தன. இந்த நிலங்கள் தான் இப்போது இருக்கும் நிலங்கள்.

மேற்கண்ட எல்லா வகையான மானிய நிலங்களையும் 1953க்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் அரசு ரயத்துவாரி என வரி விதிக்கும் நிலங்களாக மாற்றியது. அதன் பிறகு வரி இருந்தாலும் குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு கொடுத்தது. இன்றைக்கு இருக்கும் நிலங்களின் முன் வரலாறு இதுதான்.

தற்போது அரசாங்கம் தேவதாயம், தர்மாதாயம், தசபந்தம், பிரம்ம தேயம், காவல் ஊழியம், கிராம ஊழியம், கைவினைஞர் இனாம் என்பதாகப் பிரித்து நில ஆவணங்களை வகைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

இது தொடர்பான பல்வேற் விஷயங்களை இப்பதிவில் எழுத இயலாது. நீண்டு விடும். அவ்வப்போது எழுதுகிறேன். தொடர்ந்து பிளாக்கினைப் படித்து வாருங்கள்.

பூமி ஒன்றுதான் அதற்குப் பெயர்கள் தான் வேறு வேறு. அரச காலங்கள் தொட்டு, ஜன நாயகம் காலம் வரை நிலம் தான் இருக்கும் இடத்தில் தான் இருக்கின்றன. அதன் பெயர்களும், தன்மைகளும் காலத்துக்கு ஏற்ப மாறுபாடு அடைகின்றன.

மேலும் ஒரு குறிப்பு :

நீங்கள் வரிக் கட்டும் போது பசலி ஆண்டு என்றுச் சொல்கின்றார்கள் அல்லவா? அது என்ன தெரியுமா? அக்பர் காலத்தில் நிலவரி வசூலைப் பிரிக்க பசலி ஆண்டு என ஒரு கணக்கினை உருவாக்கினார்கள். ஷாஜகான் காலத்தில் தென்னிந்தியாவிற்கும் பசலி ஆண்டு வந்து சேர்ந்தது.  அப்போது ஆடி மாதம் 1ம் தேதி பசலி ஆண்டு தொடங்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கக் காலத்தில் ஒரு பசலி ஆண்டு என்பது ஜூலை 1ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30 தேதி வரை என வரையறுக்கப்பட்டு இது காலம் வரை பின்பற்றப்பட்டு வருகிறது.