குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, March 29, 2019

பசியின் கண்ணீர்

பாரதிக்கு மட்டும் அந்தக் கோபம் சொந்தமானதில்லை. பேச்சாளர்களும், ஆன்மீகக் குப்பைகளைக் கொட்டும் செப்டிக் ஆட்களும் அடிக்கடிச் சொல்வார்கள், ”தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எரித்திடுவோம்” எனப் பாரதி கூறினார் என.

அந்தக் கோபம் பாரதிக்கு மட்டும் சொந்தமானதில்லை. பசித்திருப்போருக்கு உணவிடும்  ஒவ்வொருவருக்கும் அது உள்ளே உறங்கிக் கிடக்கும் தனியா நெருப்பு. சாலைகளில் பஞ்சைப் பறாரியாய் கிடப்போருக்கு சாப்பாட்டு பொட்டலம் வாங்கிக் கொடுக்கும் யாரோ ஒருவருக்குள்ளும் அந்த கோபம் இருக்கும். அவரால்  முடிந்தது அந்தப் பொட்டலம்.

கோடியாய்க் குவித்து மாதம் ஒரு முறை விண்ணில் பறக்கும் சேவகர்களுக்கும், காவலாளிகளுக்கும் இருக்க  வேண்டிய கோபம், சாதாரணன் ஒருவனிடம் இருக்கிறது. நாடக நடிகர்களும், சினிமா நடிகர்களும் தோற்று விடும் நடிப்பை நடிக்கும் நயவஞ்சக நரிகளாய், வேடமிட்டு வரும் வெண் தாடிகளும், வெள்ளுடைகளும் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவை தட்டிப் பறித்து தன் அடிப்பொடிகளுக்கும், தான் அடிமையாய்க் கிடக்கும் எஜமானர்களுக்கு கொடுக்கிறார்கள். பசியால் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள் இந்தியர்கள்.

வங்கி கணக்கு என்றார்கள், மானியம் என்றார்கள். வங்கியில் கிடக்கும் பணத்தை உறிஞ்சி கயவாளிகளுக்கு கொடுத்து வெளி நாட்டுக்கு ஓட வைத்து வழி அனுப்பி வைக்கின்றார்கள்.

ஒரு வேளைச் சோற்றுக்கும் உணவின்றி தவிப்போர் இந்தியாவெங்கும் விரவிக் கிடக்கின்றனர். சாலைகள் தோறும் கவனிப்பார் இன்றி பசியால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துப் போகின்றார்கள். அரசு பிணக்கிடங்குகளில் கிடக்கும் அனாதைப் பிணங்களின் கணக்குகள் அரை சதவீதம் கூட இருக்காது. ஆதரவின்றி, கவனிப்பாரின்றி செத்துப் போகும் லட்சோப லட்சம் மக்களின் ஒரே தேவை உணவு. அதை அவர்களுக்கு கிடைக்க விடாமல் பிடுங்கித் தின்னும் வெள்ளுடைய நயவஞ்சகர்கள் நரிகளாய் ஊருக்குள் ஊளையிட்டுக் கொண்டு, சிவப்பு விளக்குப் பொருத்தி சிங்காரமாய் பவனி வருகின்றார்கள். சிவப்பு விளக்கு சிங்காரன்கள் நாட்டைப் பிறருக்கு விற்கும் கயவாளிகள். 

நான்கரை லட்சம் டன் உணவு வீணாய் போனது இந்தியாவில். பசியால் செத்துப் போவோர் கணக்கு எனக்குத் தெரியவில்லை. செத்துப் போகும் விவசாயிகள் கணக்கு மட்டும் தெரிகிறது. விவசாயி கடனால் செத்துப் போகின்றார். ஆனால் பசியால் சாவோர் எண்ணிக்கையோ பல மடங்கு என்கிறார்கள். 7 ரூபாய் தருகின்றாராம் நாளொன்றுக்கு விவசாயிக்கு. என்ன ஒரு கொடூரம்?

போகட்டும் அறக்கோபம். கோபம் தெரிந்து விழும் வார்த்தைகள் மனதுக்குள் சற்றே ஆற்றுதலைத் தருகின்றன.

”அப்பா, இன்றைக்கு ஐ,ஐ.டி ரிசல்ட்” என்றார் நிவேதிதா.

“ போன தடவை, 98 மார்க் அல்லவா? இந்த தடவை 100 எடுத்தால் மாலையில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இரவு உணவு வாங்கித் தருவேன்” எனச் சொன்னேன்.

சிறிய புன்னகையுடன், “அப்பா, எனக்கும் திக் திக்குன்னுதான் இருக்கு?” என்றார்.

மாலைச் சரியாக நான்கு மணி பத்து நிமிடம்.

“அப்பா, 100ப்பா, என்னாலே நம்பவே முடியவில்லை” என்றார் போனில்

இரவு எட்டு மணி போல கணபதியில் இருக்கும் அன்னபூர்ணாவிற்குச் சென்றோம்.

திக்கித் திணறிச் சாப்பிட்டாலே 300 ரூபாய்க்கு மேல் சாப்பிட முடியாது. சிறிய எளிய உணவு, சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தோம். அங்கு ஒருவர் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். ஹோட்டலில் இருந்து வெளியில் வருவோரிடமெல்லாம் சென்று பலூன் வாங்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருந்தார். எவரும் வாங்கவில்லை. களைத்துப் போன முகம். வியர்வையில் நனைந்து உப்புக் காய்ந்து போன சுவடுகள் கொண்ட சட்டை. ஒருவர் குழந்தையுடன் வெளியில் வர அவரிடம் சென்றார். அவர் தலையாட்டி மறுத்து விட்டு நகர, அவர் தடுமாறி விழப்போனார். 

பசி.....!

எனக்குள் சுருக்கென்றது.

அவரை அருகில் அழைத்து கொஞ்சம் பணத்தைக் கையில் கொடுத்து ’சாப்பிட்டு வரும்படி’ கேட்டுக் கொண்டேன். காசை வாங்க முடியாது என்று மறுத்தார். இரண்டு பலூன்களைப் பெற்றுக் கொண்டு காசைக் கொடுத்தேன். அவர் கண்களில் கண்ணீர் பொசுக்கென்று அருவியாய் வழிந்தோடியது. முதுகில் தட்டிக் கொடுத்து, ”போய் சாப்பிட்டு விட்டு, வியாபாரத்தை தொடருங்கள்” என்று சொன்னேன்.

வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் மகளுடன் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

“ஏம்பா, அவர் அழுகிறார்?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் நிவேதிதா. உள்ளுக்குள் எரிமலை கனன்று கொண்டிருந்தது. நிவேதிதாவுக்கு புரிய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.

ஹோட்டலுக்குள் செல்லும் முன்பு இவரைப் பார்த்திருந்தால் கூடவே அழைத்துச் சென்றிருப்பேன். அவர் சாப்பிடுவதைக் கண்டு என் மனது நிறைந்திருக்கும். அந்த வாய்ப்புக் கிடைக்காமல் போனது.

ஹோட்டலுக்குள் சென்று வயிறாரச் சாப்பிட்டு வருபவர்கள் தன் எதிரே நின்று கொண்டிருக்கும் சக மனிதனைக் கூடவா கவனிக்க மாட்டார்கள்? என்ன மாதிரியான உலகம் இது எனக்குள் ஆயிரம் கேள்விகள். மனிதர்களிடம் இருந்த மனிதாபிமானம் மறத்துப் போனதா? திண்ணை கட்டி சோறு போட்ட தமிழர்களா இவர்கள்? என்றெல்லாம் கேள்விகள் மனதுக்குள் வெடித்துக் கொண்டிருந்தன.

”தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழி!” என்ற குரல் இரவு முழுவதும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. அது பாரதியின் குரலா என எனக்குத் தெரியவில்லை. அது உங்களின் குரலாகக் கூட இருக்கலாம் அல்லவா?

* * * * *
29/03/2019 - 12.29 PM

Monday, March 4, 2019

நரலீலைகள் - சிவராத்திரி - (2)

அனைவருக்கும் வணக்கம். அடியேன் நரலீலைகள் நாவலின் ஆசிரியன். இன்றைக்கு சிவராத்திரியாம். மஹா சிவராத்திரியாம். எனக்கு அதன் அர்த்தமெல்லாம் தெரியாது.

சின்ன வயதில் அம்மா, “தம்பி, இன்னைக்கு சிவராத்திரிப்பா, ராத்திரி முழுக்க தூங்காம இருந்தா நல்லா படிப்பு வருமாம், உன்னைக் கொண்டு போய் கோயில்ல விட்டுட்டு வர்ரேன். விடிகாலம்மா வந்து கூட்டிட்டு வர்ரேன், போறியா” என்பார்.

”சரிம்மா” என தலையாட்டுவேன்.

பெயிண்ட் அடிக்காத, சிதிலமடைந்த சிவன் கோவில். கிழக்கு வாசலில் பழைய துருப்பிடித்த கம்பிகள் வேய்ந்த மரக்கதவிடுக்கின் வழியே சிவலிங்கனார் இருப்பார். அந்த சிவலிங்கத்தை தாத்தா மாணிக்கதேவர் தான் மன்னார்குடிப் பக்கம் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போய் ஏற்றிக் கொண்டு  வந்து, பிரதிஸ்டை செய்தார்கள் என்று சொல்வார்கள். வடகிழக்கு மூலையில் சுத்த சன்மார்க்க சங்கத்தினரால் வைத்திருந்த வள்ளலார் புகைப்படம் இருக்கும். அதை ஒட்டினாற் போல தெற்குப் பார்த்தா மாதிரி யாரோ ஒரு பெண் சாமி இருக்கும். எனக்கு நினைவில் இல்லை. சிவபெருமான் சன்னதிக்கு எதிரில் பாழடைந்த ஒரு நந்தி மண்டபம் இருக்கும்.

எல் சேப்பில் இருக்கும் கோவிலில் வாசலை அடைத்தாற் போல பந்தலிட்டு அங்கே ஒரு மேடையிட்டு, அதன் மீது அமர்ந்து மழையூர் சதாசிவம் ஏதேதோ பாடிக் கொண்டிருப்பார். வாண்டுகளும், கொஞ்சம் பெரியவர்களும் உட்கார்ந்திருப்பார்கள். நான் அந்த மண்ணுக்குள் தவழ்ந்து கொண்டிருப்பேன். விடிய விடிய அவரும் விடாமல் பாடிக் கொண்டிருப்பார். நானும் கண் அசராமல் கேட்டுக் கொண்டிருப்பேன். அவ்வப்போது அங்கே கிடக்கும் கல்லுக்கால்களில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பேன். விடிகாலையில் யாரோ ஒருவர் சுக்கு மல்லிக்காப்பி கொடுப்பார். வாங்கிக் குடித்து விட்டு அங்கேயே சிவபெருமான் சன்னதி முன்னால் உருண்டு கொண்டிருப்பேன். தூக்கம் கண்ணைச் சுழட்டும். நல்லாப் படிப்பு வருமேன்னு தூங்க மாட்டேன்.

விடிகாலையில் அம்மா வந்து வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். இவ்வளவுதான் எனக்கு சிவராத்திரி பற்றித் தெரியும். சிவராத்திரிக்கு கண் முழிச்சா நல்லா படிப்பு வரும்னு அம்மா சொன்னாங்கல்ல, அதே மாதிரி நல்லாத்தான் படிச்சேன்.

”ஏய் நீர் யாரப்பா? இங்கே வந்து நின்னுகிட்டு இருக்கிறாய்?”

”எம் பேரு மாயன்”

“ஆ..... சிவபெருமானா????”

“அதே, அதே...! கொஞ்சம் கண்ணை மூடி என்னைத் தியானி!”

“அப்படியே செய்கிறேன் சிவபெருமானே!”

* * * * *



லூசுப்பய. இவென்லாம் நாவல் எழுத வந்துட்டான் பாருங்க. வாசகர்களே! நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்தானே. மீண்டும் நானே உங்களுடன்.

”தெரியாமத்தான் கேட்கிறேன். இந்த ஆசிரியன் சிவராத்திரி அன்னைக்கு கண் விழித்திருந்தால் நன்றாகப் படித்ததாகச் சொல்கிறானே, அமெரிக்காரனும், பிரிட்டிஷ்காரனும், ஐரோப்பியனும் எந்த சிவபெருமான் கோவிலில் உட்கார்ந்திருந்தார்கள் என்று சொல்கின்றானா? பாருங்கள்?”

”அடேய்! அடேய்!! நீ யாரடா இடையில்? நில்லு நில்லு !!!!”

”அண்ணா, அடியேன் பேரு சந்துசிந்து. இந்த நாவலில் வருகின்ற ஒரு பாத்திரம். இந்த நாவலாசிரியன் எப்போது என்னைப் பற்றி எழுத ஆரம்பிப்பானோ தெரியாது. ஆனால் எனக்கு கொஞ்சம் அவசரம். ஆத்திரம். அதான் வந்துட்டேன்”

”வாப்பா, வா! நாவலின் முதல் பாத்திரம். என்னைப்போல ஒருவனா நீ!  ஆசிரியன் சொல் கேட்காத ஒரு கதாபாத்திரம். பரவாயில்லை. அதென்ன பேரு சந்துசிந்து?”

”சிரிக்க மாட்டீங்கன்னா சொல்றேன்”

“சிரிக்க மாட்டேன் சொல்லு, அப்படி என்ன தான் சொல்லப்போறேன்னு பார்க்கிறேன். நான் பார்க்காத கதாபாத்திரங்களா?”

”இங்கே தான் கோயம்புத்தூர்ல ஈஷா ஈஷான்னு ஒரு இடம் இருக்கு. அங்கே ஒரு சிவராத்திரிக்கு அம்மாவும், அப்பாவும் போனார்களா? அடுத்த மாதம் நான் அம்மா வயித்துல கர்ப்பமாயிட்டேன்னாம். ஆனா ஏன் சந்துசிந்துன்னு பேர் வச்சாங்கன்னு கேட்டா, அம்மா சிரிக்கிறாங்க. ஒன்னும் புரியல”

“ஏன், உங்கப்பா கிட்டே கேட்க வேண்டியதுதானே?”

“அப்பா நான் பொறக்கறதுக்கு முன்னாடியே இல்லையே”

“என்ன????”

“அவரை நான் பாக்கவே இல்லை?”

என்ன இழவுடா இது? இந்த சந்துசிந்து மொத்தமா குழப்புகின்றானே. பார்த்தால் லூசுப் பய மாதிரி இருக்கான். இவனிடம் என்ன கேட்டு என்ன புரியப்போகிறது?

என் முகத்தைப் பார்த்த சந்துசிந்து,”எனக்கு இன்னொரு பெயர் இருக்கு”ன்னான்.

அவனே தொடர்ந்தான், “சநி”

மயக்கமே வந்தது எனக்கு...!

* * * * *

வெள்ளைக்காரனாவும் தெரியலை, நம்ம ஊர்க்காரனாவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கின்றானே யாராக இருப்பான் இவன்? இருக்கட்டும். என் பேரைக் கேட்டதும் தலையைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டான். அவன் போகட்டும். நான் வந்த விஷயத்தை சொன்னாத்தான் நல்லா இருக்கும். அதுவும் இந்த நன்னாளில்.

சவுக்கு சங்கர் அண்ணே, இருக்காப்லே அல்லவா? அவரு ஒரு படத்தைப் பேஸ் புக்குல போட்டிருக்காரு. அந்தப் படத்தை உத்துப் பார்த்தால் சிவன் சக்தி மேலே ஏத்தி மன்னிக்கவும், அருள் புரிந்த மகத்துவத்தைப் பார்க்கலாம். அந்தப் படம் கீழே. நான் ஏன் இதை இங்கே உங்களுக்குச் சொல்கிறேன் என்றால் புரியாதவர்கள் நரலீலைகள் நாவலைத் தொடர்ந்து படிக்காதீர்கள். உடனே விலகி விடுங்கள்.

* * * * *

அன்பு நண்பர்களே! நரலீலைகள் நாவலின் கதாபாத்திரங்கள் என்னைக் கேட்காமலே உருப் பெற்று உங்களுடன் உரையாடுவதை என்னால் நம்பவே முடியவில்லை. இப்படியும் நடக்குமா? என்றெல்லாம் நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை. நாவலின் கதாபாத்திரங்கள், நான் அறிமுகப்படுத்தும் முன்பே, உங்களுடன் பேசுவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை மட்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவலின் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என எனக்கு இன்னும் புரியவில்லை. நான் எழுத நினைத்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அது அதுபாட்டுக்கு வருவதால் ஒழுங்கின்றி நாவல் கலைந்து போகும் என்ற கவலைதான் ஏற்படுகிறது. இருப்பினும் இந்த நாவல் ஒரு சிலர் சைவத்துடன் அசைவ உணவையும் உண்பார்களே அதைப் போல வரும் என நம்புகிறேன். என் கதாபாத்திரங்களை கட்டி ஆள, சிவனை நோக்கி தியானம் செய்யப் போகிறேன். மனம் ஒழுங்கானால் எல்லாம் ஒழுங்காகும் அல்லவா?

”மாயனே! எனக்கு அருள்வாய்! என் நாவலின் கதாபாத்திரங்கள் என் சொல் கேட்கட்டும்..

மனத்தில் எழுகின்ற மாய நன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர்: இறைவன் 
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே - திருமூலர்

மாயனின் சிரிப்புச் சத்தம் காதில் ஒலிக்கிறது. அது உங்களுக்கும் கேட்கிறதா?

* * * * *
(04-03-2019)



Tuesday, February 19, 2019

நரலீலைகள் - நான் யார்? - 1






நரலீலைகள் - நான் யார்? - 1



உங்களுக்கு வணக்கம். நான் நாவல் பேசுகிறேன். இதுவரையிலும் நீங்கள் நாவலின் கதாபாத்திரங்கள் பேசியதாகத் தான் படித்திருப்பீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. கதாபாத்திரங்கள் மாறிக் கொண்டே இருப்பவை. ஆனால் நாவல் என்கிற நான் எப்போதும் மாறுவதில்லை.  நான் எப்போதும் இருந்து கொண்டிருப்பவன். நான் அழிவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை. ஆனால் நாவலின் கதாபாத்திரங்கள் அழிந்து போகின்றவை. அழிக்கப்படுகின்றவை. இந்த நாவலின் கதாபாத்திரங்களும் கூட அவ்வாறனவைதான். அதனாலென்ன? நாவல் ஆகிய நான் அழிவதில்லை. 

உங்களுக்கும் கூட குழப்பமாக இருக்கலாம். ஏனென்றால் இந்த உலகில் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் அடைமொழியாக இருக்கிறது. இவன் பொதுப்பெயரில் வந்து குழப்புகின்றானே என நீங்கள் சித்தம் கலையலாம். ஆகவே எனக்கொரு பெயர் வைத்து விடுகிறேன் முதலில். என்னை நீங்கள் மாயன் என்று அழைக்கலாம். அல்லது நினைவில் வைத்துக் கொள்ளலாம். இப்போது உங்களுடன் உரையாடுவது யார் தெரியுமா? நாவல் அல்ல மாயன்! மாயன் தான் நாவல். நாவல்தான் மாயன். புரிந்து விட்டதா?

நான் கடவுளும் அல்ல. கடவுள்களுக்கு கூட உருவங்கள் இருக்கின்றன. மொழிகள் இருக்கின்றன. ஆனால் எனக்கு அவ்வாறு அல்ல. எல்லா மொழிகளும், எல்லா கடவுள்களும் எனது கட்டுக்குள் அடைக்கப்பட்டவை.

முதலில் இந்த நாவலுக்குரிய படைப்பாளியாகிய ஆசிரியனைப் பற்றிப் பேச வேண்டும்.  இந்த நாவலுக்கு ’நரலீலைகள்’ என்று பெயர் வைத்திருக்கின்றான் இந்தப் பயல். 2009ம் வருடம் எழுதப் போவதாக இதே பிளாக்கில் அறிவிப்புக் கொடுத்தான். ஆஹா எனக்குள் புதிதாக கதாபாத்திரங்கள் உருவெடுத்து உலா வரப் போகின்றார்கள் என்ற எனது சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப்  போட்டான் இந்தப் படைப்பாளி. கிட்டத்தட்ட பத்து வருடம் காத்திருந்தேன். இன்றைக்கு ஆரம்பித்து விடலாம் என்று அவன் முடிவு செய்திருந்தான். ஆனால் பாருங்கள் நான் உங்களுடன் உரையாட வந்து விட்டேன். அவன் வெளியில் நின்று கொண்டிருக்கின்றான்.

”அதெப்படி என் வாசகர்களுடன் நீ உரையாடலாம்?” என என்னை அவன் முறைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இதெல்லாம் புரியாது. ஒரு நாவல் தான் கதையைச் சொல்லும். அதைப் படைப்பவன் படைப்புக்குள் மறைந்து போகின்றான். எப்படி தன் குழந்தைக்குள் தகப்பன் மறைந்து விடுகின்றானோ அப்படி. 

இனி அவனுக்கு வழி விட்டு நாவலைத் தொடரச் செய்யலாம் என நினைக்கிறேன். அடிக்கடி உங்களுடன் உங்கள் மாயனாகிய நாவல் ஆகிய நான் உரையாட வருவேன் இந்த ஆசிரியன் அசந்து உறங்கும் வேளையில் நாம் நம் கச்சேரியை ஆரம்பிக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடைபெறுவது நாவலாகிய மாயன்!



* * * * * *
19/02/2019


தொடரும்.....!

Friday, February 15, 2019

34வது குருபூஜை விழா அழைப்பிதழ்

சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமியின் ஜீவ ஐக்கிய 34ம் ஆண்டு குரு பூஜை விழா இனிதே வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெற உள்ளது.

அழைப்பிதழ் யூடியூப்பில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இடம், நாள், தொடர்பு மற்றும் ஆசிரமத்தின் புகைப்படங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் அழைப்பிதழை ஏற்றுக் கொண்டு குருவருள் பெற்று சிறந்திட அன்புடன் அழைக்கிறேன்.



Saturday, January 26, 2019

நிலம் (49) - சத்தமின்றி அமலாகும் நில உச்சரவரம்புச் சட்டம்

பொங்கல் அலுப்புகள், இனிப்புகள், கசப்புகள், அசதிகள் எல்லாம் உள்ளத்தை விட்டு அகன்றிருக்கும். காலம் தான் எல்லாவற்றுக்குமான விடையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. ’இன்றைய நிலை, நாளை இல்லை. நாளையோ நம் கையில் இல்லை’ என்கிறார்கள் முதியோர்கள். ஆம் வாழ்க்கை எவரிடமும் கேட்காமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. (உண்மையில் அது நகரவும் இல்லை, நகர்த்தவும் இல்லை. நாம் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம்)

வாழ்வியல் சூழல்கள் கற்பிதங்களுக்கான கற்பனைகளோடு இயைந்து மனிதனை தனக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாய வலையிலிருந்து எந்தக் காலத்திலும் வெளி வர  முடியாது. கருவுக்குள் இருக்கும் குழந்தை எப்படிச் சிந்திக்க வேண்டும் என உலகம் கேனத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் நலனுக்காக உருவான கட்டுப்பாடுகள், இப்போது மனிதன் கட்டுப்பாடுகளுக்காக வாழ வேண்டும் என மாறிப்போனது. 

அரசியல் செம கேவலமாக இருக்கிறது. கொலை கொள்ளை வரைச் சென்றிருக்கின்றார்கள் என்றெல்லாம் செய்திகள். என்ன மாதிரியான அரசியல் இது என்றே தெரியவில்லை. எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து நாற்றமடிக்கிறது. மக்கள் அந்தச் சாக்கடைக்குள் வீழ்ந்து சுகம் சுகம் என்று பாடிக் கொண்டலைகின்றார்கள்.

இதற்கிடையில் கோவையில் மிக பிரபலமான ஒரு நிறுவனத்தின் இயக்குனர் எனது பிளாக்கைப் படித்து விட்டு என்னைச் சந்திக்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார். பெரிசு ஏன் சிறிசுவைச் சந்திக்கணும்? தீர்க்க இயலா ஏதோ பெரும் பிரச்சினை போலும், வரட்டும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு வரச்சொன்னேன்.

பெரிசுகள் எப்போதும் சூதானமாகத்தான் ஆரம்பிப்பார்கள். நாம் தான் சூட்டின் மீது உட்கார்ந்திருப்பது போல கவனமாக இருக்க வேண்டும். மனசில ஓரமாக் வச்சுக்கங்க.

என்னைப் பற்றி விசாரித்து விட்டு, மெதுவாக ஆரம்பித்தார் அவர் கம்பெனியின் வேலைகள், தொழில்கள், அதன் வளர்ச்சிகள், பிரச்சினைகள் எனத் தொடர்ந்தது அவரின் பேச்சு. இதையெல்லாம் ஏதோ நம் மீது கொண்ட பிரியத்தின் மீதான காரணத்தால் சொல்கிறார் என்று நினைக்க நானென்ன சசிகலாவா? சிரித்துக் கொண்டேன். நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றாராம் அவர். ஆகையால் இந்தச் சின்ன வேலையை என்னைப் போல ஆட்களிடம் கொடுத்து ஃபாலோ செய்யச் சொல்லி முடிப்பது அவரின் வாடிக்கையாம். இப்படித்தான் தொடர்ந்தது பேச்சு. 

பெரிய பிரச்சினையுடன் ஆள் வந்திருக்கிறார் என்று நன்கு புலப்பட்டது. ஆனால் அது சாதாரண பிரச்சினை என என்னை நம்ப வைக்கவும், எனக்கு நேரமில்லாத காரணத்தால் தான் இதை உன்னிடம் தர உள்ளேன், அந்தளவுக்கு எனக்குப் பரந்த மனப்பான்மை எனவும் நான் அறிய வேண்டுமென விளக்கிக் கொண்டிருந்தார். பத்து ரூபாய் லாபம் கிடைக்க வேண்டுமெனில் பத்து மணி நேரம் உட்கார்ந்து பேசுவார்கள். ஆள் அந்த வகையானவர். 

இன்னொரு கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது. யூடியூப்பில் என்னிடம் விற்பனைக்கு வந்த ஒரு தென்னந்தோப்பைப் பற்றி விபரம் வெளியிட்டிருந்தேன். வெளி நாடுகளில் இருந்தும், உள்ளூரிலிருந்தும் போன்கள் வந்தன. சொல்லி வைத்தாற்போல இடம் எங்கே இருக்கிறது? என்பார்கள். சொல்வேன். விலை என்ன என்று கேட்பார்கள்? சொல்வேன். அந்த விலையா அந்த இடத்தில் என்பார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருப்பேன். சரி என வைத்து விடுவார்கள். இப்படித்தான் ஒரு லேடி போனில் அழைத்தது. எந்த ஊரில் இருந்து பேசுகின்றீர்கள் என்று கேட்டேன். கோவையிலிருந்துதான் என்றார். பொய் பேசுறவங்களிடம் நான் தொடர்ந்து பேசுவதில்லை என அழைப்பை நிறுத்தினேன். அது துபாய் அழைப்பு. அடுத்த நொடியில் இன்னொரு அழைப்பு. என் மனைவி பேசிக் கொண்டிருக்கிற போது எப்படி நீங்கள் அழைப்பை நிறுத்தலாம் என்றார் ஒருவர். நானென்ன அவர் வீட்டு வேலைக்காரனா? செம டென்சனாகி விட்டது. நான் கொடுத்த சவுண்ட் எஃபெக்டில் ஆள் குரலை இறக்க தொடர்பை துண்டித்தேன். இப்படியான தொல்லைகளும் இருக்கின்றன.

இன்னும் ஒரு சிலர் இருக்கின்றனர். போனில் அழைத்து எனக்கு இன்ன தேவை என்பார்கள், இடம் சொல்வார்கள், அவர்களின் முதலீட்டுத் தொகையைச் சொல்வார்கள். நான் அவருக்காகச் செய்யப் போகும் வேலைகளையும்,  எனது கட்டணத்தையும் விவரிப்பேன். அடுத்த இரண்டொரு நாட்களில் அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்து விடும். அவரின் தேவை அவரின் முழு அளவில் எந்த வித சிக்கலும் இன்றி நிறைவேறும். இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்கள். இன்னும் பலர் இருக்கின்றார்கள். அதையெல்லாம் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் எழுதுவேன் படித்து மனதில் இருத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

சரி பெரிசுவின் பிரச்சினைக்கு வரலாம்.

வினோபாவா ஆச்சாரிய யக்ஞம் மூலமாக தமிழக மெங்கும் எடுக்கட்ட நிலங்கள் தற்போது ஆன்லைனில் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன என்று எனக்குத் தெரியும். அதே போல நில உச்ச வரம்புச் சட்டத்தின் படி எடுக்கப்பட்ட நிலங்களையும் அரசு தற்போது பட்டாவில் அரசு நிலம் என குறிப்பிட்டு வருகிறது என்பதும் எனக்குத் தெரியும். பெரும் தனக்காரர்களின் அனேக சொத்துக்கள் சத்தமில்லாமல் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அப்போது இந்த அளவுக்கு வசதிகள் இல்லை. இப்போது இருக்கின்றன. உட்கார்ந்த இடத்தில் சரசரவென வேலை நடக்கிறது.

பெரிசு ஃபாக்டரி கட்டுவதற்காக வாங்கிய பதினைந்து ஏக்கர் நிலமும் அரசு நிலம் என மாறிப் போனது. விற்பனை நடந்து பத்து வருடம் ஆகி விட்டது. இனி எங்கே பணம் கிடைக்கும்? எல்லா ஆவணங்களையும் எடுத்தால் 1958ல் அந்த பதினைந்து ஏக்கர் நிலத்தின் அப்போதையை உரிமையாளர் யக்ஞத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டது தெரிந்து டென்சனாகி எங்கெங்கோ சென்று முட்டி மோதி ஓடிக் களைத்துப் போய் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கையில் எனது பிளாக்கைப் படித்துப் பார்த்து விட்டு கல் வீசலாம் வந்தால் பழம், போனால் கல்லு என வந்து விட்டார்.

அவரின் அனைத்து ஆவணங்களையும் மேலோட்டமாகப் பார்த்தேன். 15 ஏக்கர் நிலத்தையும் மீண்டும் பெற்று விட அற்புதமான வாய்ப்பு இருப்பதைக் கண்டறிந்தேன். அவரிடம் சொன்னேன், மீட்டு விடலாம் என.

ஆகவே அன்பு நண்பர்களே ஆன்லைனில் உங்களின் நிலம் உங்களிடம் தான் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.


Wednesday, January 9, 2019

நிலம் (48) - டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாமா?

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வாழ்த்தினைப் பிறருக்குச் சொல்லும் போதெல்லாம் திருப்பூர் குமரன் மண்டை உடைந்து செத்துப் போன செய்தியும், கோவையில் செக்கிழுந்த வ.உ.சிதம்பரனாரும் நினைவில் வந்து விடுகின்றார்கள். உலகெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆங்கில ஆண்டு. அடிமையின் சின்னமாய் இருந்தாலும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடியாத வகையில் வரலாற்று சின்னமாகிப் போன அவலம் நினைவிலாடும். வரும் கால தலைமுறையினருக்கு இந்த எண்ணங்கள் வரச் சாத்தியங்கள் குறைவு.

ஆட்சிப் பொறுப்புக்கு தகுதியே இல்லாதவர்கள் வரும் போது, அவரவர் புத்திக்குத் தக்கவாறு வரலாற்றை மாற்றி சிறார்களுக்கு பாடப்புத்தகங்களை உருவாக்கும் அவலத்தை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் ஜாதிக்கு ஒரு வரலாறு எனவும், ஜாதிக்கு ஒரு பள்ளி எனவும் மாறினாலும் மாறலாம். பெண்கள் தனிப்பள்ளி இருப்பது போல இந்த ஜாதிப் பெண்களுக்குத் தனிப்பள்ளி, ஆண்களுக்கு தனிப்பள்ளி என்று கூட வரலாம். குறுகிய மனம் படைத்தோர் பதவிக்கு வரும் போது இத்தகைய அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். பூனைக்கு எவரும் மணி கட்டுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தன் மொழி, தன் இனம், தன் சிந்தனை பற்றிய கவலைகள் தான். 

உடம்பு என்று இருந்தால் நோய் இருக்கும். அதே போல சொத்துக்கள் என்று இருந்தால் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர்கள் என்னிடம் கொண்டு வந்த சொத்துப் பிரச்சினை நான் எதிர்பார்க்காத ஒன்று.

கோவையில் சேரன் மாநகர் என்றொரு பகுதி இருக்கிறது. அந்தப் பகுதி விளாங்குறிச்சி என்ற ரெவின்யூ கிராமத்தில் அடங்கியது. இந்தப் பகுதியில் தமிழ் நாடு வீட்டு வசதித்துறையினால் எடுக்கப்பட்ட நிலங்கள் அதிகம். கிட்டத்தட்ட 1200 ஏக்கருக்கும் மேல் என்று நினைவு. அது பற்றிய விபரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்த நிலங்கள் அரசின் வீட்டு வசதித்துறையினால் எடுக்கப்பட்டவை. இதில் தகுந்த இடத்தில் தடையின்மைச் சான்று பெற்றால் ஒழிய வீடோ அல்லது விற்பனையோ செய்ய இயலாது. 

என்னிடம் வந்த பிரச்சினை விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள நான்கு டிடிசிபி அப்ரூவ்ட் சைட்கள். அவை டிடிசிபி அப்ரூவல் செய்யப்பட்டு மனை வரைபடம் வழங்கப்பட்டிருக்கின்றன. மனை வரைபடம் வழங்கப்பட்ட ஆண்டு 1992. ஹவுசிங் போர்ட் நிலம் எடுக்க உத்தரவிட்டு பதிவு செய்யப்பட்ட ஆண்டு 1983. ஆனால் 1992ம் வருடம் மனை அப்ரூவல் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த மனையை வாங்கியவர் தற்போது விற்க முனையும் போது அது ஹவுசிங் போர்டில் வருகிறது என்ற தகவல் கிடைத்து அதிர்ந்தனர் தற்போதைய நில உரிமையாளர்கள்.

இது எப்படிச் சாத்தியம் என்று அனைவரும் நினைக்கலாம். நான் முன்பே சேரன் மாநகர் பகுதியில் பதினைந்து வருடங்களாக பட்டா வாங்க இயலாத வீட்டு மனைகளைப் பற்றி எழுதி இருக்கிறேன். கிட்டத்தட்ட 70 வீட்டு மனைகள் டிடிசிபியால் அப்ரூவல் செய்யப்பட்டவை. தற்போது வரைக்கும் பட்டா பெற முடியவில்லை. காரணம் அந்த நிலங்கள் நில உச்ச வரம்புச் சட்டத்தில் அரசின் நிலமாக மாற்றப்பட்டவை. அந்த விஷயத்தை மறைத்து மனை அப்ரூவல் பெற்று விற்பனை செய்திருக்கின்றார்கள்.

டிடிசிபி அப்ரூவல் விதிகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். சொத்தின் உரிமையில் வில்லங்கம் ஏற்பட்டால் தகுந்த நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள் என. வில்லங்கச் சான்றிதழ் கொடுக்கும் போது இது முழுமையான ஆவணம் அல்ல என்று கொடுத்திருப்பார்கள். அதைப் போலத்தான் இதுவும்.

ஆகவே டிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் என்றுச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கிட வேண்டாம். தகுந்த ஆட்களைக் கொண்டு அந்தச் சொத்தின் வரலாறு போன்றவற்றை ஆராய்ந்து வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையெனில் அவஸ்தைப் பட நேரிடலாம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Tuesday, December 11, 2018

உலகக் கவி தனுஷ்

பாரதியாரின் பிறந்த நாளான இன்று உலகத் தமிழ் மக்களுக்கு, எதிர்கால தமிழகத்தின் சுப்பர் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டாரும், வரும் காலத்தின் தமிழக முதலமைச்சருமான எனது அன்பு நடிகர் மாண்புமிகு ஸ்ரீலஜி மகாத்மா உயர்திரு தனுஷ் அவர்களின் பாடலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலே எனக்கும் பெரும் மகிழ்ச்சி. பாரதியாரின் பிறந்த நாளான இன்று தமிழகக் கவியான எம்மான் தனுஷ் அவர்களின் பாடலை நினைவூட்டுவதில் பெரும் மகிழ்வெய்தி உள்ளம் பூரித்து ப்..ஊ..ளகாங்கிதம் மன்னிக்கவும் புளகாங்கிதமடைகிறேன்.

இந்தப் பாடலைப் பாடியவர் அடியேனின் உள்ளம் கவர் கள்வனான மகா நடிகரும், உலகிற்கே ஒப்பாருமிப்பாரும் இல்லா ஒரே மனிதருமான தனுஷ் அவர்கள் என்பதை தமிழ் உலகிற்குச் சொல்வதில் எனக்கு மிக்க சந்தோஷம்.

இன்றைய நாள், அந்தக் காலத்தில் ஒரே வரியை ஓராயிரம் தடவை கீரல் விழுந்த ரெக்கார்டு போலப் பாடிப் பாடி புகழடைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நினைவு நாளும் கூட.

எம் மனம் கவர் உலகப் புகழ் பாடகர் தனுஷின் குரலுக்கு முன்னே எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல் காலணா பெறாது என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டியதில்லை. மலை எங்கே மடு எங்கே????

சிட்னியில் பிறந்து சட்னியாக வந்த மன்னிக்கவும் பாடகியாக வந்த தீ எனும் அய்யர் ஆத்து மாமியின் பெண் பிள்ளையான பாடகியின் ஹஸ்கி குரலில் இந்தப் பாடலைக் கேட்டதும் எனக்குள் தியானம் ஒன்று கூடி உள்ளம் மறந்து உலகை மறந்து வெட்டவெளிக்குச் சென்று விட்டேன். பாடகியின் ’ஒரசிக்கலாம்’ என்ற குரலைக் கேட்டவுடன் சிலிர்ப்பு ஏற்பட்டு தியான நிலை ஒன்று கூடி அந்தப் பரப்பிரம்மனையே பார்த்து விட்டேன் என்றால் பாடகியின் திறமைக்கு அளவேது? 

ஒரே ஒரு பாடலில் சாதாரண மனிதனை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் அற்புதமான திறமையை எண்ணி எண்ணி வியக்கிறேன். அதை உங்களுக்கும் சொல்லி மகிழ்கிறேன். இதை விஜய் டிவி ஜட்ஜூகள் சித்ரா, பாரத கலா ரசிகமணி அவார்டு பெற்ற சரண் மற்றும் தெருப்பாடகர் சங்கர் மகாதேவன் வகையறாக்கள் கவனிக்கவும். இப்பாடகியை அழைத்து வந்து விஜய் டிவி கவுரவப்படுத்தி ‘ஒரசிக்கலாம்’ அவார்டு கொடுக்க வேண்டுமென்ற் இந்த நேரத்தில் நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல, தமிழக அரசாங்கம் எமது தங்கத் தலைவனின் பாடலைப் பள்ளிகள் தோறும் இறை வணக்கத்திற்கு முன்பாக பாட ஒரு அரசாணையை வெளியிட்டு ஒன்றுக்கும் ஆகாத பாரதியாரை உலகக் கவி என்று சொல்லுவதை விட்டு விட்டு, எம் தலைவர் தனுஷை தமிழகக் கவியாக அங்கீகரித்து அவருக்கு மரியாதை செய்தல் வேண்டுமென்று வேண்டு கோள் விடுக்கிறேன். தமிழ் வளர்ச்சித்துறையின் கவனத்திற்கு இந்தக் கவியைக் கொண்டு சென்று, மத்திய அரசாங்கத்திடம் படுத்துப் பேசி மன்னிக்கவும் பணிந்து பேசி முடிந்தால் யோகா வகுப்பின் போது இப்பாடலினைப் பாடியபடி யோகா செய்ய ஆவண செய்தல் வேண்டுமாய் உத்தரவிடும் படிக் கேட்க வேண்டுமென்று இந்த நேரத்தில் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

(பாடகி தீ - சிட்னி அய்யாரத்து மாமி பின்னு)

இதோ தமிழகக் கவிஞரும், கண்ணதாசனையும் மிஞ்சிய ஒரே ஒரு எழுத்தாளருமான எம்மான் தனுஷ் அவர்களின் பாடல் கீழே.


பெண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஆண் : ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி
ஆண் : கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி

பெண் : ரவுடி பேபி ரா ரா ரவுடி பேபி

பெண் : உன்னாலே ஏய் மூடாச்சு மை ஹார்மோனு
பேலன்ஸு டேமேஜ்
ஆண் : ஏய் காமாட்சி என் மீனாட்சி இந்த
மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு

பெண் : ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா
யூ பிளஸ் மீ த்ரீ மாமா
ஆண் : வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி
ஐ வில் பை யூ போனி அத ஓட்டின்னு வா நீ

பெண் : என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி
நான் உன்னுல பாதி நம்ம செம ஜோடி

பெண் : ரவுடி பேபி ஹே ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி ரவுடி

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

ஆண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

பெண் : ஹே என் சிலுக்கு சட்ட நீ
வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : மை டியர் மச்சான்
ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நீ மனசு வெச்சா

ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நம்ம ஒரசிக்கலாம்

ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : ஹே  ஹே  ஹே

ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி……

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

பெண் : ரவுடி பேபி

============================


பாடலைக் கேட்டு ரசிக்க !

இலக்கிய உலக அன்பர்களே, உலக தமிழக டிவிப் பெருமக்களே, மேலே கண்ட பாடலைப் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் உள்ளம் உற்சாகத்தால் துள்ளும். பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் சொல்லும் அர்த்தங்களை விவரிக்க வார்த்தைகள் போதாது. அது மட்டுமின்றி பாடல்களில் தொக்கி நிற்கும் முடிச்சுகளின் மர்மங்களை எம்மான் தனுஷால் மட்டுமே அவிழ்க்க முடியும். அந்தளவுக்கு கருத்துப் பொதிகள் பொதிந்து மறைந்து கிடக்கின்றன.

உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று !

யூ ப்ளஸ் மீ திரீ மாமா - என்ன ஒரு கருத்து? இந்த நான்கு வார்த்தைகளில் கொட்டிக் கிடக்கும் மர்மங்கள் தான் எத்தனை எத்தனை? பிளஸ் என்பது சேர்வதைக் குறிக்கிறது. எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் தான் அது. மாமா என்பது அன்பினை மட்டும் குறிப்பது அல்ல? உறவைக் குறிப்பது. குறி என்றவுடன் சிறு மதியாளர்களுக்கு சிந்தனை வேறு பக்கம் சென்றிடும். நான் சொல்வது சுட்டுவது என்ற அர்த்தத்தில். ஒன்னும் ஒன்னும் இரண்டு ஆனால் யூவும் மீயும் சேர்ந்தால் மூன்று என்ற அர்த்தம் சொல்லும் அற்புத தத்துவம்தான் மனித வாழ்க்கையின் உயர் தத்துவம். ஒரே ஒரு வரியில் மட்டும் இத்தனை அர்த்தங்களைப் பொதித்து எவராலும் அவ்வளவு எளிதில் உணர்ந்து கொள்ள இயலாத கவியை மன்னிக்கவும் கவிதையை எழுதிய எம்மான் தனுஷ் அவர்களை இலக்கிய உலகம் எவ்வளவு பாராட்டினாலும் தகுமா? இல்லை தகுமானு கேட்கிறேன்?

நீங்கள் எல்லோரும் மூச்சடைத்துப் போய், விழித்துக் கொண்டிருப்பீர்கள் என்று தெரிகிறது. தனுஷ் அவர்களின் பாடலின் அர்த்தங்களும், அதன் ராகங்களும் சாதாரண இலக்கியவியாதிகளான உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியாதது அல்ல. இருப்பினும் ஏன் சொல்கிறேன் என்றால் உங்களைப் போன்ற அரைகுறை கவி ஞானம் உள்ளவர்களால் பரிந்துரைத்தால் தான் சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என சொல்லிக் கொள்கின்றார்கள்.

ஆகவே வரும் வரும் எம்மான் தனுஷ் அவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருதுக்கும், ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைத்து பெரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நினைவூட்டுகிறேன்.

உலகே மெச்சும் அற்புதக் கவியும், பாடகரும், நடிகருமான தனுஷ் அவர்களுக்கும், இசைகலெக்‌ஷனின் ஒரே வாரிசுப் புதல்வனான யுவன் செங்கர் ராஜாவுக்கும் பாரத தேசம் உயரிய விருது கொடுத்து கவுரவிக்க வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.

வாழ்க உகலக் கவி தனுஷ் ! 

Monday, December 10, 2018

இந்தியா பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கிறதா?

சுப்ரமணியம் சாமியின் ஒவ்வொரு ட்வீட்டுகளையும் உன்னிப்பாக கவனிப்பேன். அவரின் ட்வீட்கள் யாருக்கோ செய்தியாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ இருக்கும். அந்த செய்தியின் தாக்கம் இரண்டொரு நாளில் வேறு எங்காவது வெளிவரும். அந்த முறையில் தமிழ் ஹிந்து திசையில் வெளிவந்த ஒரு கட்டுரை எனது கவனத்தை ஈர்த்தது. அந்தக் கட்டுரை பலராலும் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் கூட பகிரப்படவில்லை என நினைக்கிறேன். ஆகவே அந்தக் கட்டுரை கீழே!


பத்திரிக்கைகளிலும் வரும் செய்திகளும், டிவிகளில் வரும் விவாதங்களும் மக்களை திசை திருப்பவும், உண்மையை எவரும் உணர்ந்து கொள்ள கூடாது என்பதற்காகத்தான் வெளியிடப்படுகின்றன. இதில் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் என எதிர் துருவ பத்திரிக்கைகள் இருந்தாலும் ஐந்து, பத்துக்காசு ஊழல்களைப் பற்றித்தான் அப்பத்திரிக்கைகள் எழுதும். டிவிக்களில் சமீபத்தில் தந்தி டிவியும், நியூஸ் செவன் டிவியும் ஆளும்கட்சியிடம் அடிபணிந்த விஷயம் நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. ஆகவே டிவி, செய்தி தாள்களின் செய்திகளின் உண்மைத் தன்மை 100 சதவீதம் நம்பிக்கையானதல்ல. அவசர செய்திகள், ஆலோசனைகள், அறிவுப்பகளை மட்டுமே நம்புங்கள். பிற அரசியல், பொருளாதார செய்திகள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவைகள்.

இனி அந்தக் கட்டுரை:


இந்தியப் பொருளாதாரம் தீவிரமான நெருக்கடியை நோக்கிப்போவது உண்மைதானா? ஆமாம். அதே சமயம், நொறுங்கிப்போகும் அளவுக்கு இல்லை, மீட்கும் நிலையில்தான் பொருளாதாரம் இருக்கிறது. நாட்டின் இன்றைய பொருளாதார நிலையைச் சில உண்மைகளிலிருந்து அறிவோம்.

1. இரு நிதியாண்டுகளாக, அட்டவணைக் குறியீட்டெண்ணுடனான ஜிடிபி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துவருகிறது.

2. இந்தியாவின் தேசிய முதலீட்டுக்கு முதுகெலும்பாக இருக்கும் குடும்ப சேமிப்பு 34% என்பதிலிருந்து 2017-ல் 24% ஆகச் சரிந்துவிட்டது. குடும்பங்கள் அல்லாத நிறுவனங்களின் சேமிப்பு ஜிடிபியில் 5% மட்டுமே. அரசின் தேவையில்லாத குறுக்கீடுகளாலும் வரிவிதிப்பு நடவடிக்கையாலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ‘பொதுச் சரக்கு சேவை வரி’ (ஜிஎஸ்டி) நடைமுறை என்பது பெரும் தோல்வி. நான் எவ்வளவோ தடுத்தும்கூட நாடாளுமன்றத்தில் பெரிய விழா நடத்தி இதை அமல்படுத்தினார்கள்.

3. அரசு வங்கிகளின் வாராக்கடன் அளவு விரைவாகவும், பெரிதாகவும் வளர்ந்துவிட்டது. வங்கிகள் புதிதாகக் கொடுக்கும் கடன் அளவைவிட வாராக்கடன் வளர்ச்சி வீதம் அதிகரித்தது. அரசுத் துறை வங்கிகள் நிதி வழங்கலை மேற்கொள்ள முடியாமல் நொறுங்கக்கூடிய அளவுக்கு வாராக்கடன் சுமை இருக்கிறது. இது 2019-ல் எல்லாத் துறைகளிலும் பிரதிபலிக்கும்.

4. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்கு நிதி அதிகம் தேவைப்பட்ட நேரத்தில் மிக முரட்டுத்தனமாக நிதி ஒதுக்கலை நிதியமைச்சகம் வெட்டிவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ கொள்கை வெற்றிபெற அடித்தளக் கட்டமைப்புத் துறைக்கு மட்டும் சுமார் ரூ. 72 லட்சம் கோடி தேவை. ஆனால், உண்மையில் முதலீடு செய்யப்பட்ட தொகையின் ‘உண்மை மதிப்பு’ 2014-க்கு முன்பு இருந்ததைவிடக் குறைவு.

5. உற்பத்தித் துறையில் அதிலும் குறிப்பாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளில் வளர்ச்சி 2% முதல் 5% அளவுக்கே இருக்கிறது. இத்துறைதான் தொழில் பயிற்சியே இல்லாத அல்லது ஓரளவு பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குகிறது.

6. இந்திய வேளாண் விளைபொருட்கள்தான் உலகிலேயே மிகவும் மலிவு. உற்பத்தித் திறன் குறைவாக இருந்தாலும் விளைச்சலை அதிகபட்சத்துக்கு உயர்த்த முடியவில்லை. வேளாண் விளைச்சலை இரட்டிப்பாக்கி, ஏற்றுமதியையும் அதே சமயத்தில் அதிகப்படுத்துவது அவசியம். அதிக பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வேளாண் துறை தனது ஆற்றலுக்கும் குறைவாகவே உற்பத்தி, உற்பத்தித் திறன் இரண்டையும் அளிக்கிறது.

7. 2014 முதல் தொடர்ந்து நான்கு ஆண்டு களுக்குக் கச்சா பெட்ரோலியத்தின் விலை சர்வதேசச் சந்தையில் வெகுவாகக் குறைந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் 2018 நடுப்பகுதி வரை நிலையாகவே, ஒரு டாலருக்கு ரூ.65 என்று இருந்தது. இவ்வளவு சாதகமான நிலைமை இருந்தும் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுமே 2014-17 காலத்தில் குறைந்தது.

எவையெல்லாம் அச்சுறுத்தல்

2018-ல் இந்தியப் பொருளாதாரத்துக்குச் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71 ஆக இருக்கிறது. கச்சா பெட்ரோலியத்தின் விலை ஒரு பீப்பாய் 60 டாலர்களாக உள்ளது. இது நம்முடைய அந்நியச் செலாவணி கையிருப்புக்கு அச்சுறுத்தலாகியிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படக்கூடிய இந்தத் தருணத்தில் நேர்மையாக நாம் நமது பொருளாதாரக் கொள்கைகளையும் நிர்வாகத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். கொள்கைகளை மாற்றிக்கொண்டு உச்சம் தொட வேண்டும். கட்டமைப்புகளில் மாற்றம் செய்து ஆண்டுக்கு 10% வளர்ச்சியைப் பராமரிக்க வேண்டும்.

அதற்கு முதலாவதாக, காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்வியுற்ற பொருளாதாரக் கொள்கைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, சித்தாந்தரீதியாக மாற்று திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிநபர்களுக்கு வருவாயைப் பெருக்கிக்கொள்ள ஊக்குவிப்பு தர வேண்டும். வருமான வரியை முழுதாக ரத்துசெய்வதன் மூலம் ஊக்குவிக்கலாம். கடுமையான வரிகள், தீர்வைகள் மூலம் கட்டாயப்படுத்தி எதையும் செய்யக் கூடாது.

உலக அளவில் போட்டியிடக்கூடியதாக நம்முடைய பொருளாதாரத்தை மாற்ற வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் சந்தைகளையும் நவீனத் தொழில்நுட்பங்களையும் நாம் கையாள வேண்டும். அதற்கு அரசியல்ரீதியாகவும் நாம் காய்களை நகர்த்த வேண்டும்.

தனிநபர்களும் குடும்பங்களும் தங்களுடைய வருவாயில் செலவு போக சேமிக்கும் அளவு குறைந்ததால்தான் ஜிடிபி வளர்ச்சியும் சரிந்தது. பழையபடி உள்நாட்டு சேமிப்பு 35% ஆவதற்கு அரசு ஊக்குவிப்புகளை அளிக்க வேண்டும். அரசின் முன்னுரிமையாக இருக்கும் சில பிரச்சினைகளைத் தீர்க்கப் புதிதாகச் சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

உடனடி அவசிய நடவடிக்கைகள்

1. சேமிப்புக்கு நல்ல வருவாய் கிடைக்கும் அளவுக்கு வட்டி வீதம் உயர்த்தப்பட வேண்டும், சேமிக்க முடியாமல் வரி விகிதங்களை அதிகப்படுத்தக் கூடாது, சேமிப்பது என்ற இயல்பான உணர்வை ஊக்குவிக்க வேண்டும்.

2. வங்கிகள் தரும் கடன்கள் மீதான வட்டி 9% ஆகக் குறைக்கப்பட வேண்டும்.

3. 2019 நிதியாண்டு முழுக்க அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 50 தான் என்று அரசே நிர்ணயிக்க வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் இதில் தேவைக்கேற்ப மாறுதல்களைச் செய்துகொள்ளலாம்.

1965-ல் கடுமையான உணவுதானிய பற்றாக் குறையிலிருந்து ‘பசுமைப் புரட்சி’ மூலம் தன்னிறைவு நாடாக மாறியிருக்கிறோம். 1990-91-ல் கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு ‘உயர்வேகப் பொருளாதார நாடாக’ மாறியிருக்கிறோம். நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாற்றை வினய் சீதாபதி எழுதியிருக்கிறார். ‘சோவியத் சோஷலிச பாணி ஜிடிபியாக (1950-1990) ஆண்டுக்கு 3.5% ஆக இருந்த இந்தியப் பொருளாதாரத்தை, என்னுடைய பொருளாதார திட்டங்களைப் பயன்படுத்தி 8.5% அளவுக்கு உயர்த்தியுள்ளார் ராவ்’ என்று அதில் எழுதியிருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த கடந்த 71 ஆண்டுகளில் மிக நெருக்கடியான பொருளாதார நிலையிலிருந்து எளிதாக மீண்டுவந்திருக்கிறது. அந்தப் பழைய வரலாறே நமக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

- சுப்பிரமணியன் சுவாமி, மாநிலங்களவை உறுப்பினர், பொருளியல் பேராசிரியர், மத்திய வர்த்தகத் துறை முன்னாள் அமைச்சர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி.

 நன்றி : தமிழ் இந்து திசை

https://tamil.thehindu.com/opinion/columns/article25603583.ece


Saturday, November 24, 2018

2018 திருக்கார்த்திகை தீபவிழா காட்சிகள்

கோவையில் கார்மேகங்கள் கவிழ்ந்து சூரியனை மறைத்து நின்று குளுரூட்டியது. குளிர் நடுக்கத்துடன் ஆங்காங்கே மழை தூறல்களையும் தூவி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது வானம். காலை புலர்ந்து மயில்களும், குயில்களும், குருவிகளும், கிளிகளும் உற்சாகத்துடன் குரலால் கீதமிசைத்து வரக்கூடிய பொழுதினை வரவேற்றுக் கொண்டிருந்தன. 

கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்த இந்த அற்புதமான நாளில் தமிழகமெங்கும் தமிழர்கள் இல்லங்களில் மாலை நேரத்தில் ஒளி விளக்குகளால் அலங்கரித்து, வீட்டுக்கும் உலகிற்கும் உயிராய் விளங்கும் ஒளியினை வணங்கி விழா எடுக்கும் இந்த நன்னாளில் தமிழகமே பொன்னை உருக்கி வார்த்தாற் போல ஒளிரக்கூடிய தினம் இது. சிறார்கள் பட்டாசுகளை பொறுத்தி தங்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியினை நிறைத்துக் கொள்ளும் சிறப்பு வாய்ந்த நாள். மழைமேகங்கள் கார்காலத்தைச் சொல்லி விட்டு பூமித் தாயைத் தழுவ வரும் நாள் என பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த நாளில் வழக்கம் போல நானும், மனையாளும் எமது குருவின் ஆசிரமம் நோக்கி பயணித்தோம். 

வழியெங்கும் அகல் விளக்குகள், வாழை மரங்கள், பூக்கள் விற்பனைக்காக கடைகள் மணம் வீசிக் கொண்டிருந்தன. மக்கள் பரபரப்பாய் பயணித்துக் கொண்டிருந்தனர். காலை பதினோறு மணிவாக்கில் ஆசிரமம் வந்து சேர்ந்தோம். மாவிலைத் தோரணங்களுடன் ஆசிரமம் மிளிர்ந்து கொண்டிருந்தது. மலையோரம் அமைதி தழுவ, சிற்றாரின் அருகில் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் எம் குருவின் ஆசீர்வாதத்தில் அவ்விடம் முழுவதும் அமைதியில் திளைத்துக் கொண்டிருந்தது. குருவினைத் தரிசிக்கவும், மாலையில் ஏற்றப்படவிருக்கும் தீபத்தின் உள்ளொளியைக் கண்டு, குருவின் ஆசியினைப் பெற்றிடவும் எங்கிருந்தோவெல்லாம் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். குரு அமைதியாக அமந்திருக்கும் அற்புதமான அந்த மேடை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஒளியில் சுடர் வீசிக் கொண்டிருந்தது எம் குருவின் முகம் போல.

பக்தர்கள் குருவின் முன்பு வந்து வணங்கி, திரு நீறு பூசி, அவரைச் சுற்றி வந்து தங்களின் வேண்டுதல்களை குருவிற்குத் தெரிவித்து ஆசி பெற்றபடி சென்று கொண்டிருந்தனர். பலர் தியானம் செய்து கொண்டிருந்தனர். வெளியில் பக்தர்களுக்கு அமுது வழங்கிக் கொண்டிருந்தனர் சில பக்தர்கள். பக்தர்களுக்கு வழங்க பிரசாதப் பையில் பிரசாதங்களை இட்டுக் கொண்டிருந்தனர் பலர். மகளிர் பலர் அகல் விளக்குகளுக்கு குங்குமம், சந்தனமிட்டு விட, ஐந்தெண்ணெய் வார்த்து திரிகளை சேர்த்து வைத்துக் கொண்டிருந்தனர்.

மாலையில் விளக்கேற்றி அந்த வெள்ளிங்கிரி நாதர் தீபத்தில் எழுந்தருளப் போகும் அற்புதமான தீபக்காட்சியைக் கண்டிட சாரி சாரியாகப் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். இளம் சிறார்கள் ஆங்காங்கே ஓடிக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்தனர். அங்கு வந்து கொண்டிருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அறுசுவை உணவு சுடச் சுடத் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட போது, ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய” வள்ளலார் பெருமகனாரின் அகவல் பாடல் உள்ளத்தே ஒலித்தது. பக்தர்கள் பசியால் வாடிடக்கூடாது என அங்கே அமுது தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மாலையில் தீபத்தினை எம் குருநாதர் பூஜை செய்து ஏற்றிட தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்தது. எம் பெருமான் வெள்ளிங்கிரி நாதரும், எம் குரு வெள்ளிங்கிரி சுவாமிகளும் இணைந்து பக்தர்கள் வாழ்விலே சூழ்ந்து கொண்டிருக்கும் இருளைப் போக்கி ஒளிச்சுடராய் மிளிர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். அந்தத் திருக்கார்த்திகையும் பெளர்ணமியும் இணைந்த நன்னாளில் தீப அருளில் தங்கள் உயிரையும், மனைதையும் புனிதப்படுத்திக் கொண்ட பக்தர்கள் பெரும் மகிழ்வெய்தி இன்புற்றனர்.

“எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என பரிந்து பாடிய தாயுமானவரின் பாடல் வரிகளின் படி எம் குருவினை நாடி வந்த அத்துணை பக்தர்களுக்கும் எல்லாமும் கிடைத்திட எம் குருவினை வேண்டி வணங்குகிறேன்.

கீழே 2018ம் ஆண்டின் கார்த்திகைத் தீப பெருவிழாவின் புகைப்படக்காட்சிகள்

















வாழ்க வளமுடன் !

Monday, November 19, 2018

நிலம் (47) - அன் அப்ரூவ்ட் மனைகள் அரசு மீண்டும் அவகாசம்

20.10.2016ம் தேதிக்கு முன்பு வரை அனுமதியற்ற மனைப்பிரிவில் வீட்டு மனை வாங்கியவர்களும், அந்த மனைப்பிரிவு உரிமையாளர்களும் மனைப்பிரிவு வரன்முறைச் சட்டத்தின் படி வீட்டு மனைகளை வரன்முறைப்  படுத்தி அனுமதி பெறலாம் என தமிழக அரசு கடந்த 04.05.2017ம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு வரன்முறைக்கட்டணமும், மேம்பாட்டுக் கட்டணமும் குறைக்கப்பட்டு மீண்டும் காலக்கெடு வழங்கப்பட்டது. இந்த மாதம் 03.11.2018ம் தேதியோடு மூன்றாவது காலக்கெடுவும் முடிந்து விட்டது. இனியும் உள்ளாட்சிகளால் சேகரிக்கப்பட்டு மனைப்பிரிவு வரைபடங்களாக அனுமதிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் 50 சதவீதம் வரன்முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன.

அரசு அனுமதியல்லாத மனைப்பிரிவினை அனுமதி பெற்றுக் கொள்ள வசதிகள் செய்து கொடுத்தும் மக்கள் கவனத்தில் கொள்ளாதிருப்பது சரியல்ல. 

அனுமதியற்ற மனைப்பிரிவினை ஏன் பத்திரப்பதிவு செய்தார்கள், அது அரசின் தவறல்லவா? என்று என்னிடம் பலரும் கேள்வி கேட்டார்கள். பத்திரப்பதிவு அலுவலகம் பதிவு செய்து கொடுக்க மட்டுமே உள்ளது. லீகல் ஒப்பீனியன் எல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். பத்திரப்பதிவாளர்கள் அது பற்றிய கேள்விகள் எழுப்ப வேண்டியதில்லை என்று பத்திரப்பதிவுச் சட்டங்கள் சொல்கின்றன. ஆனால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதால் அரசும் அவ்வப்போது பல விதிகளை உருவாக்கி மக்களின் தேவையற்ற கால விரயத்தையும், பொருளையும் இழக்கவிடாமல் செய்து வருகிறது. இருப்பினும் ஏமாறவே பிறப்பெடுத்த மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருப்பது வேதனையான விஷயம்.

03.11.2018ம் தேதி கடைசிக்காலக்கெடு. இனி என்ன ஆகும்? என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். திட்டக்குழுமம் அதற்கொரு வழியினைச் அரசுக்குப் பரிந்து செய்திருக்கிறது. 03.11.2018க்குப் பிறகு வரும் வரன்முறை செய்யும் மனைகளுக்கு அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கலாம் என்றொரு அறிக்கையை அரசின் கவனத்திற்காக அனுப்பி இருக்கிறது. அதன் படி 03.11.2018க்குப் பிறகு மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஆனால் அதற்கு வரன்முறைக்கட்டணத்தில் 03.11.2018ம் தேதியிலிருந்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பித்தால் வரன்முறைக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும், அடுத்த ஆறாவது மாதத்திற்குள் விண்ணப்பித்தால் 25 சதவீதம் அபராதமும், 12 மாதங்களுக்குப் பிறகு விண்ணபித்தால் 50 சதவீதமும் அபராதக்கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன் முறை செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறை செய்து கொள்ளுங்கள். தவறும் பட்சத்தில் அந்த மனைகளை எக்காலத்தும் விற்கவும் முடியாது. அதில் வீடுகள் கட்டவும் முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.