குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, June 24, 2017

நிலம் (37) - அரசின் புதிய வழிகாட்டி மதிப்பு

நீதிமன்றங்களின் ஒரு சில தீர்ப்புகள் எனக்குள் பல்வேறு கேள்விகளை உருவாக்கி விடுகின்றன. பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் என்று ஒரு விஷயமே இல்லாத போது பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்ட் மனைகள் என்று விற்பனை நடந்த போது எந்த அரசும், அரசு அமைப்பும் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு பதிவாளரின் வேலை எந்த ஆவணமாக இருந்தாலும் பதிவு செய்து கொடுத்தல் என்பது சட்டம் என்றாலும் இப்போது பதிவாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்கின்றார்கள். ஆவணங்களைக் கேட்கின்றார்கள். அவர்கள் ஏதும் தவறு நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகக் கேட்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

நில வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ற வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டு மனைகளை அப்ரூவல் செய்ய தனி அரசு அமைப்புகள் இருக்கின்றன. இருந்த போதிலும் பஞ்சாயத்து அப்ரூவ்ட் என்றுச் சொல்லி வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டன. இவை அனைத்தும் அரசுக்கும் தெரியும், நீதிமன்றங்களுக்கும் தெரியும். எவரும் நடவடிக்கை எடுத்ததே இல்லை. ஆனால் திடீரென்று பஞ்சாயத்து அப்ரூவ்ட் மனைகள் சட்ட விரோதமானவை என்றுச் சொல்லி மனைப்பதிவினை தடுக்கிறது நீதிமன்றம். பதிவகங்களும் பத்திரங்களை பதிவு செய்ய மறுக்கின்றன. இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டவைகள் சட்டத்திற்குப் புறம்பானவை தானே? அதை என்ன செய்வது? சட்டத்திற்குப் புறம்பாக பதிவு செய்யப்பட்ட அன் அப்ரூவ்ட் மனைகளை அரசு ஒரு ஆணை பிறப்பித்து அப்ரூவ்ட் மனைகளாக மாற்றலாம் என்கிறது. அதற்கும் பல்வேறு கட்டணங்களை விதித்திருக்கிறது. இந்தக் கட்டணங்களைச் செலுத்துவதை விட அப்ரூவல் செய்திருக்கலாம் என்று இப்போது பலரும் நினைக்கின்றார்கள். அது தண்டனை என்றே கருத வேண்டி இருக்கிறது.

விகடனில் அரசின் அதிரடி அறிவிப்பான வழி காட்டி மதிப்புக் குறைப்பு பற்றிய வெளிவந்திருந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதற்காகத்தான் இந்தப் பதிவு.

இனி அந்தப் பதிவினைப் படியுங்கள்:
=====================================

தமிழ்நாடு அரசு, வழிகாட்டி மதிப்பினை 33% குறைப்பதாக பிரம்மாண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால்  பொது மக்களுக்கு இமாலயப் பலன் கிடைக்கும் என்கிற மாதிரி ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அந்த அறிவிப்பின் இறுதியில், இந்த மதிப்புக் குறைவினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஆவணங்களின் பதிவுக் கட்டணம் 1 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகித மாக உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவு விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக ரியல் எஸ்டேட்  துறைக்கு இது மற்றுமொரு சோதனையாக வந்து சேர்ந்திருக்கிறது.

அரசினால் உயர்த்தப்பட்ட பதிவுக் கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதமாகக் குறைக்கப்பட வேண்டும். ஏனென்றால், பொது மக்களுக்கு ஒரு சலுகை வழங்கும்போது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படத்தான் செய்யும். அதை ஈடுகட்ட அதே துறையில் வரி விதிக்கமாட்டார்கள். வேறு ஆடம்பரப் பொருள்கள், மதுபானங்கள் போன்று சில இனங்கள் மீது கூடுதல் வரி விதித்து அந்த இழப்பை ஈடுகட்டுவார்கள். எனவே, பதிவுக் கட்டணத்தை உடனே குறைத்தாக வேண்டும்.

அடுத்து, கட்டடங்களுக்குப் பொதுப்பணித் துறை மதிப்பில் இருந்து 33% சலுகை வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போதுள்ள வழிகாட்டி முறை 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது, முதல் மூன்றாண்டுகளுக்கு அல்லது ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை, சில சமயத்தில் ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். கடந்த 2010-ம் ஆண்டு  வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது  ஓரளவுக்கு நியாயமாக இருந்தது. ஆனால், 2012-ல்  திடீரென்று ஏராளமான இடங்களில் வழிகாட்டி மதிப்பு மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டது. இந்த முறை 5 மடங்கு, 10 மடங்கு, 20 மடங்கு ஏன் அதற்கு மேலும் கூட மதிப்பு உயர்த்தப்பட்டது. இதனால் பதிவுத் துறையின் வருமானம் வீழ்ந்தது. நிர்ணயித்த இலக்கில் பாதிகூட தேறவில்லை. 

பல இடங்களில் விற்பனை விலையைவிட, வழிகாட்டி மதிப்பு மிக அதிகமாக இருந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாகப் பாதிக்கப் பட்டு மாநிலத்தின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து. நடுத்தர வர்க்கத்தினரின் இல்லக் கனவு தகர்க்கப்பட்டது.

இப்போது மனை வாங்கும் எல்லோருக்கும் சின்ன சாக்லேட் தந்துவிட்டு, வீட்டோடு சொத்து வாங்குபவர்களிடம் பிக் பாக்கெட் அடிக்கப்படு கிறது. பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையின்படி, கட்டடங்களின் மதிப்பு 33% குறைக்கப்படவில்லை. முன்புபோலவே உள்ளது. இந்த அறிவிப்பால், மனை வாங்குபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்குக் கிடைக்கும் சலுகை ரூ.630 மட்டுமே. இது அகோரப் பசியால் தவிப்பவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் வேலை.

8.6.17 நிலவரப்படி, முத்திரைக் கட்டணம் 7%, பதிவுக் கட்டணம் 1% எனப் பத்திரப் பதிவுச் செலவு மொத்தம் 8 சதவிகிதமாக இருந்தது. இப்போது, முத்திரை கட்டணம் 7% பதிவுக் கட்டணம் 4 சதவிகிதமாக மொத்தம் 11 சதவிகிதமாக அது உயர்ந்துள்ளது.  

இன்றைக்கு, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மனையில் கட்டப்பட்ட  ரூ.1 லட்சம் மதிப்புள்ள வீட்டோடு சொத்து வாங்குவதாக வைத்துக்கொண்டால், 

சொத்து மதிப்பு -   ரூ.2,00,000

முந்தைய கணக்கீடு :

முத்திரைக் கட்டணம்  -  ரூ. 14,000
பதிவுக் கட்டணம் - ரூ.2,000
மொத்தப் பத்திரப் பதிவுச் செலவு - ரூ.16,000

புதிய கணக்கீடு: 

மனையின் அரசு வழிகாட்டி மதிப்பு 33% குறைக்கப்பட்டதால், ரூ.1 லட்சம் மதிப்புகொண்ட  மனையின் தற்போதைய மதிப்பு ரூ.67,000. அதற்கு 11% பத்திரப் பதிவுச் செலவு ரூ.7,370. ரூ.1 லட்சம் வீட்டுக்கு மொத்தச் செலவு  ரூ.11,000. ஆக மொத்தம்  ரூ.18,370 பத்திரப் பதிவுக்குச் செலவிட வேண்டும். அதாவது, அரசுக்குக் கூடுதல் வருமானம் ரூ.2,370 இதுதான் சலுகை வழங்கும் லட்சணமா? பதிவுத் துறை பற்றிய அறிவிப்பு,  வலது கையால் தந்துவிட்டு இடது கையால் பிடுங்கிக் கொள்வதைப் போலத்தான் உள்ளது.

பொதுவாக, தமிழ்நாட்டில் கட்டடத்தோடு விற்கப்படும் சொத்துகள்தான் அதிகம். அதுவும் கட்டடங்கள் அனைத்தும் ரூ.1 லட்சம் என மதிப்பிட முடியாது. பல லட்சங்கள், கோடி ரூபாய்கள் மதிப்புள்ள கட்டடங்கள்கூட இருக்கின்றன. எனவே, அரசின் அறிவிப்பால், சொத்து வாங்குபவர்களின் செலவுதான் அதிகரிக்குமே தவிர குறையாது. 

மேலும், மனையின் மதிப்பு 33% குறைக்கப்படுவ தால், சொத்தின் மதிப்புக் குறையும். இதனால், கறுப்புப் பணப் புழக்கம் அதிகரிக்கும். உதாரணமாக,   ஒரு மனையை ஒருவர் சில மாதங்களுக்கு முன் ரூ. 1 கோடிக்கு வாங்கியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்குக் குறைவாக அவர் அந்த மனையை விற்கமாட்டார்.  ஆனால், இப்போது பத்திரத்தில் காட்டப்போவது ரூ.67 லட்சம் மட்டுமே. ஆக, ரூ.1 கோடி கைமாறும் நிலையில் ரூ.33 லட்சம் கறுப்புப் பணமாக மாற வாய்ப்புள்ளது.  

ஆகமொத்தத்தில், இந்த அறிவிப்பினால்,  சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் எந்தப் பலனும் இல்லை. யாரை ஏமாற்ற இந்த 33% குறைப்பு அறிவிப்பு என்று தெரியவில்லை. எல்லாம் அந்த ‘சாமி’க்கே வெளிச்சம்!

Posted Date : 06:00 (18/06/2017)
குறைக்கவில்லை... அதிகரித்திருக்கிறார்கள்... தமிழக அரசின் கைடுலைன் வேல்யூ மேஜிக்!
- ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர்

நன்றி : நாணயம் விகடன்

Tuesday, May 16, 2017

பாசக்காரி

சக மனிதனை எந்த வித பிரதிபலனும் இல்லாமல் நேசிக்கும் மனது இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். உறவுகளும் நட்புகளும் எப்போதும் பலனை எதிர்பார்த்து தான் இருக்கும். பலன் இல்லாமல் பிரியமாக இருக்கும் உயிர்கள் இவ்வுலகத்தில் இருக்கவே முடியாது. கொடுத்தால் தான் உறவு. கொடுக்கவில்லை என்றால் பகை தான். 

நாம் ஏன் கடவுளிடம் பக்தியாக இருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். அவரால் நமக்குப் பலன் இருக்கிறது. ஆகவே கடவுளே, தெய்வமே என்றெல்லாம் அவரைப் போற்ற ஆரம்பித்து விடுகிறோம். ஒரு பேச்சுக்கு என வைத்துக் கொள்ளுங்கள். தவறு செய்தால் அடுத்த நொடியே கடவுள் கொல்கிறார் என்றால் மனித குலம் என்ன செய்திருக்கும்? கடவுளையே கொலை செய்து விட முயற்சிப்பார்கள். தவறு செய்கிறார்கள் என்றுச் சொன்னால் அடுத்த நொடி மனிதனுக்குள் இருக்கும் மிருகம் வெளியில் வந்து விடும். அவரவருக்கு அவரவர் சட்டம். அவர்களுக்குத் தெரிந்ததே நீதி. துரியோதனனுக்கு அவன் செய்தது சரி அல்லவா? 

பெண்களின் மீது எனக்கு எப்போதுமே (வழக்கம்தானே என்று நினைக்காதீர்கள்) காதல் அல்ல அன்பு. அன்பு என்பது வேறு. காதல் என்பது வேறு. உடனே திரைப்படங்களில் எழுதப்படும் வசனங்களை நினைவில் கொண்டு வந்து குழப்பிக் கொள்ளாதீர்கள். எதற்கெடுத்தாலும் சினிமா நினைவில் வந்து விடுவதுதான் தமிழனின் பெரும் பலவீனம். 

திருக்குறளையாவது படித்தால் பிரயோஜனம் உண்டு. சினிமா வசனங்களைப் படிப்பதினால், நினைவில் வைத்துக் கொள்வதால் என்ன ஆகப் போகின்றது. ஒரு பிரயோஜனமும் இல்லை. எனக்கு நிறைய நண்பிகள் உண்டு. எனக்கென்று ராமர் கோடு வைத்திருக்கிறேன். அந்தக் கோட்டினை நான் எப்போதும் தாண்டியதில்லை. ஆனால் ஒரு சில பெண்கள் என் வாழ்வில் கடந்து சென்றவர்கள் சுவடுகளை உருவாக்கிச் சென்றிருக்கின்றார்கள். அதீத அன்பு அல்லது எரிச்சல் அல்லது பொறாமையின் காரணமாக மனதுக்குள் கீறி விட்டுச் சென்று விடுவார்கள். அதன் காரணமாக வெகு ஜாக்கிரதையாக இருப்பேன். பெண்கள் பலன் கருதிதான் பழகுவார்கள் என்று மனம் நினைக்கத் தொடங்கி விட்டது. அதன் காரணமாக பல்வேறு உப சிந்தனைகளும் என்னை அவ்வப்போது ஆட்கொள்ளும். ஒரே ஒரு வீடியோ அதை நொறுக்கித் தள்ளியது. 

நேற்றைக்கு முதல் நாள் மாலையில் யூடியூப்பில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எதேச்சையாக ஒரு வீடியோ கண்ணில் பட்டது. முதன் முதலாக பார்த்தேன். என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டது. மனையாள் பதறி விட்டாள். என்ன ஆச்சு? என்று கேட்க வீடியோவைக் காட்டினேன். அமைதியாகி விட்டார்.  நீங்களே பாருங்கள். மனசு நெகிழ்ந்து விடும். பாசக்காரர்களாக இருந்தால் உங்கள் கண்ணில் நிச்சயம் கண்ணீர் துளிர்க்கும். 


பாசக்காரி அல்லவா இவள்? இவளின் அன்புக்கு அந்த நொடியில் அவளுக்கு ஏற்பட்ட அந்த அழுகைக்கு விலை ஏதும் உண்டா? அருகில் உட்கார்ந்திருக்கின்றானே ஒருவன் அவன் எவ்வளவு கொடுத்து வைத்தவன்? இப்படி ஒரு அன்பினை எங்காவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? பெண்கள் அன்பினால் நிரம்பியவர்கள் அல்லவா?


Saturday, May 13, 2017

பாகுபலி 2 - 360ல் ஓர் அலசல்

பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் திரைப்படத்தினை விமர்சனம் செய்பவர்களை பல்வேறு கொடூர வார்த்தைகளால் யாரால் புகழப்படுகின்றார்களோ அவர்களை நன்றி கெட்டு வைது கொண்டு இருக்கின்றார்கள். திரைவிமர்சனம் செய்பவர்களின் எதிர்மறையான விமர்சனங்களைப் படித்து விட்டு பலரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்று அவர்கள் நினைப்பதால் திட்டுகின்றார்கள். ஏன் எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. காக்காய்க்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதால் அவர்கள் இப்படி நிலைகுலைந்து விடுகிறார்கள். இருந்தாலும் உண்மை என்று ஒன்று உண்டல்லவா?

ஹோட்டலில் சாப்பிடப் போகின்றவர்கள் உணவு எப்படி இருக்கிறது, ருசி எப்படி இருக்கிறது, தரம் எப்படி இருக்கிறது என்று பலரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். உணவு நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது என்பார்கள். நன்றாக இல்லையென்றால் நன்றாக இல்லை என்பார்கள். ஆனால் அதற்காக ஹோட்டல்காரர்கள் உணவு நன்றாக இல்லை என்பவர்களை நீயென்ன சமையல் படித்திருக்கின்றாயா? எந்த ஹோட்டலில் வேலை செய்தாய் என்றா கேட்கின்றார்கள்? இல்லையே! ஒரு உணவின் ருசியை சாப்பிட்டுப் பார்த்தால் சொல்லி விடலாம். அதற்காக சமையல் கலைஞனாக இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? விமர்சனங்களை மூன்று நாட்கள் கழித்து எழுதுங்கள் என்கிறார்கள் சினிமாக்காரர்கள். ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஒரு ஹோட்டலில் சாப்பிடச் செல்கிறான் ஒருவன். அவனுக்கு வாந்தி பேதி எடுத்து மருத்துவமனையில் கிடக்கின்றான். அவன் அந்த ஹோட்டலில் சாப்பிட்டதால் தான் வாந்தி பேதி வந்தது என்று சொன்னால் என்ன தப்பு? அவ்வாறு பிறரிடம் சொன்னால் தானே பலரும் தப்பித்துக் கொள்வார்கள். அவ்வாறு உடனே சொல்லாமல் மூன்று நாட்கள் கழித்துச் சொல்லலாமா? இது தவறில்லையா? 

திரைப்படத்தைப் பார்த்ததும் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று படிக்காதவன் கூட சொல்லி விடுவான். ஒரு நாவல் படிக்கிறோம் என்றால் அதை எழுதத் தெரிந்தவனோ அல்லது முன்பே எழுத்தாளனாக இருப்பவனோ தான் விமர்சிக்க வேண்டுமென்றால் அதெல்லாம் நடக்கக் கூடிய ஒன்றா? சினிமாக்காரர்கள் பொதுவில் பேசும் போது நான்கும் சிந்தித்துப் பார்த்து பேச வேண்டும்.

சிந்திக்கும் அளவுக்கு சினிமாக்காரர்கள் ஒன்றும் பெரிய புத்திசாலிகள் இல்லை எனலாம். அவர்களில் மிகச் சிறந்த ஆளுமைகளும் இல்லை. தங்களின் புகழ் மாயையில் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றார்கள். நாங்கள் தான் தமிழ் நாட்டை ஆள்கிறோம் என்பதாக அவர்களுக்கு எப்போதும் ஒரு மமதை உண்டு. இதை விட முட்டாள் தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்பதற்கு காரணம் உண்டு.

எம்.ஜி.ஆரை வைத்து, கலைஞரை வைத்து, ஜெவை வைத்து, விஜயகாந்தை வைத்து சம்பாதிக்க நினைப்பவர்களின்  மேற்கண்டவர்களை உசுப்பேத்தியே அரசியலுக்கு வர வைத்து அரசியலுக்குள் நுழைத்து விடுகின்றார்கள். மேற்கண்ட தலைவர்களால் பிரயோஜனம் இல்லையென்றால் அடுத்த கட்சிக்குத் தாவி விடுவார்கள். அவர்களுக்குத் தேவை அரசியல், அதிகாரம், பணம். அதற்குத் தேவை சினிமாக்காரர்களின் புகழ். தலைவர்கள் தான் அனைத்துப் பழிச்சுமைகளையும் ஏற்பார்கள். அவர்களை அரசியலுக்குள் இழுத்தவர்கள் எதிரிகளாகி விடுவார்கள். சினிமாக்காரர்கள் தன் புகழால் விளையும் எதிர்காலப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினியால் பணமும் புகழும் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என விரும்புவர்களுக்குத்தான் ரஜினி தேவை என்பதை அவர் புரிந்து வைத்திருக்கின்றாரா என்று தெரியவில்லை.

ஒரு சினிமாக்காரர் விமர்சனம் செய்பவர்கள் எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தார்கள்? சினிமா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் விமர்சனம் செய்கின்றார்கள் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார்.  பொது வெளியில் திரைப்படத்தினை மக்கள் பார்ப்பதற்காக வெளியிடுகிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்றுச் சொல்லக் கூடாது என்கிறார்கள். இது என்ன சட்டமோ? அவர்களுக்கான நியாயமோ? தெரியவில்லை.

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா என்னைப் பொறுத்தவரை ஒரு சில தனியார் கூட்டத்தால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை மதிக்காக அமைப்பு. அவர்களுக்கு எந்த வித சட்டமும், விதியும் இல்லை. ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டு கொள்வதில்லை என்பதும் அதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாய் இருக்கின்றன என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சினிமாவின் புகழ் மற்றும் இதர இன்பங்களையும் முன்னிட்டு அரசு தொடர்புடையவர்கள் சினிமாவைக் கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கக் கூடும். 

அடுத்து ஒரு முக்கியமான உளவியல் பிரச்சினை பற்றிப் பார்த்து விட்டு பாகுபலிக்குள் செல்லலாம்.

ஒரு காரில் பார்த்தேன், ”மை டாட் ஈஸ் மை ஹீரோ” - என் தந்தை என் ஹீரோ என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. உலகெங்கும் இருக்கும் பிரச்சினையே இதுதான். அடிமைத்தனத்தினை இப்படித்தான் சொல்வார்கள். என் தந்தை என் ஹீரோ என்பது அடிமைத்தனம். ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட பண்பு நலன்கள் கொண்டவர்கள். ஆனால் அதை எவரும் புரிந்து கொள்வதில்லை. எப்போது என் தந்தை என் ஹீரோ என்று ஒரு சமூகம் சொல்ல ஆரம்பித்ததோ அன்று ஆரம்பித்தது இந்த ஹீரோயிசம் பிரச்சினை. தலைவரிலிருந்து சினிமா ஹீரோ வரை எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள். ஹீரோயிசத்தின் முடிவு என் தலைவர் என்ற அடிமை மனப்பான்மை. ஹீரோ இல்லாமல் எதுவுமே இல்லை என்ற ஒரு மாயையைக் கட்டமைத்து விட்டார்கள். தலைமை, தலைவர், மேலதிகாரி, தந்தை, தாய் என்று எல்லாவற்றிலும் ஹீரோயிசத்தினைக் கொண்டு வந்து திணித்து விட்டார்கள். நாவல் எழுதினால் கூட ஹீரோ, ஹீரோயின் வேண்டும்.

இங்கு யாரும் யாருக்கும் தலைவரும் இல்லை, எவரும் எவருக்கும் தொண்டனும் இல்லை என்பதை மனது புரிந்து கொள்ள மறுக்கிறது. ஆதர்ஷ ஹீரோ அது எதுவானாலும் சரி இங்கிருப்பவர்களுக்கு வேண்டும். அவர் வழி தான் இவர் நடப்பார். அடிமைத்தனத்தில் சுகம் கண்டவர்களுக்கு அதன் அபாயகரமான வழிகாட்டுதலின் அர்த்தம் புரிவதில்லை. அன்புக்கு அடிமையாக இருப்பதும், கடமைக்கு கட்டுப்பட்டு நடப்பதும் வேறு. இது வேறு. இந்த ஆதர்ச ஹீரோயிசம் தான் மனிதனைப் படுகுழிக்குள் தள்ளி புதைத்து விடுகிறது.

இங்கு ஹீரோ, ஹீரோயின் என்று எவரும் இல்லை. இயற்கைதான் ஹீரோ. வாழ்க்கை தான் ஹீரோயின். இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் வாழ்க்கை. நம் முன்னே இருப்பது நம் வாழ்க்கை மட்டும் தான். பிறப்பு எப்படி நம் கையில் இல்லையோ அது போல இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் வாழ்வதே இல்லை. ஆப்பிள் நிறுவன ஸ்டீவ் ஹாக்கின் இறுதிப் பேச்சு என்றொரு மெசேஜ் வாட்சப்பில் வந்து கொண்டிருக்கிறது. படித்துப் பார்த்தீர்கள் என்றால் கொஞ்சமேனும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்னவென்று புரியும்.

அடுத்து மற்றொரு கேனத்தனமான விஷயத்தைப் பற்றியும் பார்த்து விட வேண்டும். விசுவாசம் என்பது அடிமைத்தனத்தின் உச்சகட்டம். சுத்தப் பைத்தியக்காரத்தினத்தின் மற்றொரு வார்த்தை என்னவென்றால் அதன் பெயர் விசுவாசம். ஒருவன் தவறே செய்தால் கூட அதைச் சுட்டிக்காட்டக் கூட அனுமதி மறுக்கும் விசுவாசம் என்கிற வார்த்தை சுத்தப் வேறொரு முட்டாள்தனத்தின் வேறு வார்த்தை..

கதைக்கு வந்து விடுவோம்.

பாகுபலி முதல் பாகத்தின் கதை - கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதாக முடிந்து விட்டது.

உலகே இந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துதான் காத்துக்கிடக்கிறது என்றார் திவ்யதர்ஷினி. சிலம்பாயி பேத்திக்கு பேசக் கத்துக் கொடுக்கணுமா? டிடியின் சின்னப்பத்தாவோ பெரியப்பத்தாவோ எனக்குச் சரியாக நினைவில் இல்லை. அது ஜாக்கெட் போடாது. சிறு வயதில் அழுது அடம் பிடித்து பால்குடிக்க சண்டை போட்டேன் என்பதால் என்னைப் பார்த்தாலே அதற்கு கொஞ்சம் திகில் ஆகி விடும். அது பெயர் தான் சிலம்பாயி. சிலம்பாயி பேச்சு ஆவணத்தில் பிரபலம். டிடி அச்சு அசல் சிலம்பாயி. மரபணு தோற்காது அல்லவா? டிடியின் அப்பா நீலகண்டன் இறப்பதற்கு முன்பு வீட்டுக்கு வந்திருந்த போது டிடியைப் பற்றிச் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார். அருமை பெருமைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்.

டிடி எல்லோரையும் கட்டிக் கட்டிப் பிடித்து கமல் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். பேசாமல் டிடிக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடலாம். விஜய் டிவி அதற்கான வேலையைச் செய்ய வேண்டும். எது எதுக்கோ எவன் எவனுக்கோ விழா எடுக்கிறது விஜய் டிவி. டிடியினால் பிழைத்துக் கொண்டிருக்கும் விஜய் டிவி தன் தொகுப்பாளினிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்து அதை விழாவாக எடுக்கும் என நம்பலாம்.

இரண்டாம் பாகம் பாகுபலியை கோவை மணீஷ் தியேட்டரில் அம்மு, ரித்திக்கின் தொல்லை தாங்காமல் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இத்தனைக்கும் நெட்டில் இருக்கிறது, தேடிப் பிடித்து டவுன் லோடு செய்து பாருங்களேன் என்றால் ’போப்பா’ என்று ஒரு வார்த்தையில் மறுத்து விட்டார்கள்.

சாண்டில்யன், கல்கி ஆகியோரின் வரலாற்றுப் புதினங்களைப் படித்ததினால் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று ஓரளவு யூகித்து இருந்தேன். அந்தளவுக்கு ராஜமெளலி மீது கவனம் இருந்தது. இரண்டாம் பாகத்தின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். எழுத வேண்டியதில்லை.

பாகுபலியின் அறிமுகம் ஹீரோயிசத்தின் வெளிப்பாடு. பல நூறு பேர் சேர்ந்து இழுக்கும் தேரை ஒற்றை ஆளாக இழுத்து வந்து யானை மீது மோத விடுகிறார். மதம் பிடித்த யானை அடங்கிப் போகிறது. என்ன ஒரு ஹீரோயிசம்? ரஜினி 100 பேரை அடிக்கிறார் அதை விடவா என்று நீங்கள் சிரிப்பது புரிகிறது. அதுமட்டுமல்ல ஹீரோவிடம் இருக்கும் கருணை வேறு எவருக்கும் இல்லாத ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. குச்சிக் கால்கள் கொண்ட மன்னன். கருப்புச் சுவடு படிந்த உதடுகள். நடிக்கவே தெரியாத வெற்று வரட்டு முகம். இவர் தான் ஹீரோ. தியேட்டரில் விசிலடிச்சான் குஞ்சுகள் வாயில் விரலை வைத்து விசிலடிக்கின்றார்கள். இதன் காரணம் நம் சமூகம் கட்டமைத்திருக்கும் ஹீரோயிசம்.

தமிழர்கள் எடுத்த அந்தக் கால மன்னர் படங்களை இயக்குனர் பார்த்திருந்தால் இவரை ஹீரோவாக போட்டிருக்க மாட்டார். ஹீரோவுக்கு 25 கோடி என்றும் இயக்குனருக்கு 100 கோடியும் சம்பளமாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்று இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள். உத்தமர்கள் அலுவலகம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 35 கோடி வரியாக இந்தியாவுக்கு கிடைக்குமே?

எம்.ஜி.ஆர் என்ற ஹீரோயிசத்தின் காரணமாக நாம் தமிழ் நாட்டையே ஆளக் கொடுத்திருக்கிறோம். இது தான் ஹீரோயிசத்தினை நம்பியதன் விளைவு. ஹீரோ நன்றாக இருக்க வேண்டும். அதற்கு காமெடியன்களும், இதர அல்லைக்கை நடிகர்களும் ஹீரோவுக்கு உதவ வேண்டும். இதைத்தான் காலம் காலமாக சினிமா சொல்லிக் கொடுத்துக் கொண்டே வருகிறது. மற்றவர்கள் எல்லாம் வாழவே வேண்டாம். ஹீரோ மட்டும் வாழ்ந்தால் போதும். அவர் நூறு அல்ல லட்சம் பேரை வாழ வைப்பார் என ஒவ்வொரு படத்திலும் ஹீரோயிசத்துக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எம்.ஜி.ஆர் தமிழகத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி கொடுத்து விட்டு எத்தனை பேரை பிச்சைக்காரனாக்கி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
\
பாகுபலி கதையில் ராஜிய பரிபாலனத்திற்கு பட்டாபிஷேகம் செய்யும் முன்பு ராஜிய யாத்திரை சென்று விட்டு வா என்கிறார் சகிக்கவே முடியாத முகமும், பாவனையும் கொண்ட ராஜமாதா ரம்யா கிருஷ்ணன். அரியணையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்று கிரைண்டர் குரலில் கத்துகிறார். முதல் பாகத்தில் காலகேயனை வென்றவர் தான் மகிழ்மதியின் மன்னன் என்பதால் பாகுபலி காலகேயனை அடித்து துவைத்துக் கொண்டிருக்கும் போது முதுகிற்குப் பின்னால் இருந்து கொல்கிறான் பல்வாள்தேவன். அதையெல்லாம் விட்டு விட்டார்கள். மன்னனின் கடமை தம் குடிமக்களைக் காப்பது என்பதால், போரின் போது குடிமக்களைக் காப்பாற்றி எதிரியை துவம்சம் செய்த பாகுபலியே மன்னன் என்று அறிவித்து விட்டார் ராஜாமாதா. தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார்.

ராஜமாதா தன் மகனுக்கு வாக்கு கொடுத்தாராம். அதுவும் எப்படி? ஓவியத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பார், அப்பெண்ணை தன் மகன் விரும்புகிறாராம், அவரையே மணமுடித்து வைப்பதாக வாக்குக் கொடுப்பாராம். அந்தப் பெண் சபையில் நான் பாகுபலியைத்தான் விரும்புகிறேன் என்கிறாள். ஆனால் நான் கொடுத்த வாக்கு என்னாவது? ராஜமாதா உடனே உனக்கு பெண் வேண்டுமா? இல்லை ராஜ்ஜியம் வேண்டுமா? என பாகுபலியிடம் கேட்கிறார். பாகுபலி நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன் என்று ராஜ்ஜியத்தை மறுக்கிறார். பல்வாள் தேவனை மன்னனாக்கி, பாகுபலியை படைத்தளபதி ஆக்குகிறார். தொடர்ந்து ”இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்” என்கிறார் ராஜமாதா. இதற்கு முன்புச் சொன்ன சாசனம் என்ன ஆச்சு என்று அவருக்குத் தெரியுமா? இல்லை கதை எழுதிய ராஜமெளலியின் அப்பாவுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. சுத்த நான்சென்ஸ்.

இதுவாவது பரவாயில்லை. மன்னனைக் கொல்ல வந்தார்களாம், இதற்குக் காரணம் பாகுபலி என்கிறார்களாம். உடனே மொட்டையன் சத்தியாராஜை அழைத்துப் பாகுபலியைக் கொல்லச் சொல்கிறார் ராஜாமாதா. ராஜமாதா விசாரிக்க மாட்டார், பிறர் சொல்வதை மட்டுமே கேட்பார் என்று கேனத்தனமான கதை. புல்லரிச்சு புல்லரிச்சு சொரிய ஆரம்பித்து விட்டேன். ராமமெளலியின் கதையை எந்த வார்த்தையால் சொல்லிப் பாராட்டுவது என்றே புரியவில்லை. தன் மகன் பல்வாள் தேவனின் சூழ்ச்சி தெரிந்ததும் தேவசேனாவின் பிள்ளையை மன்னாக்குகிறார். ஆற்றில் விழுந்து ஒற்றைக் கையில் பிள்ளையை தண்ணீருக்கு மேலே பிடித்தபடி இறந்தும் போகிறார். தன் மகன் விட்ட அம்பு முதுகில் தைக்க உயிர் போகிறது ராஜமாதாவுக்கு. பிள்ளை பெரிய ஆளாகி மகிழ்மதியை மீட்கிறார். சிறை வைத்திருந்த அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்.

பாகுபலியும், தேவசேனாவும் ஒரே கையில் மூன்று அம்புகளை வில்லில் வைத்து விடுவார்கள் அல்லவா அது ஒரு கார்ட்டூன் புகைப்படத்தில் வந்தது. அதை அப்படியே சுட்டு விட்டார் இயக்குனர்.

பாகுபலியும், பல்வாளும் பூணூல் போட்டிருக்கிறார்கள். கழற்றி வைத்து சண்டையிடுகின்றார்கள். பூணூல் எந்தளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதையும், பூணூலின் மகத்துவத்தையும் அறிந்தவராக இயக்குனர் இருந்திருக்கிறார் என்பது இந்தப் படத்தின் ராஜதந்திரம்.

1000 கோடி கலெக்ஷன் என்கிறார்கள். அந்த ஆயிரம் கோடி எப்படி எவ்வாறு வந்தது என்று கணக்குக் கேட்டுப் பாருங்கள்? ஒருவர் பதில் சொல்ல மாட்டார். 1000 கோடி வரவு என்றால் என்ன அர்த்தமென்பது சினிமா தயாரிப்பாளர்களுக்கு நன்கு தெரியும், இவர்களுக்கு நன்கு தெரியும் என்பது இந்தியாவின் உத்தமர்கள் அலுவலகமும் அறியும்.

கோவை மணீஷ் தியேட்டரின் டிக்கெட்டில் சீரியல் நம்பர் மட்டுமே இருந்தது. மற்றபடி டிக்கெட்டின் விலை இல்லை, தேதி இல்லை. வேறு எதுவுமே இல்லை. மோடி அவர்கள் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்றார். வெறும் டோக்கனைக் கொடுத்து லட்சக்கணக்கில் காசு வசூலிக்கும் தியேட்டர்களை கண்டு கொள்ளவே இல்லை. அரசியல், சினிமா இரண்டும் கூட்டுக்களவாணித்தனத்தின் குறியீடு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினைக் கேலிக்கூத்தாக்கும் சினிமா அமைப்பினை கண்டு கொள்ளாமல் களவாணித்தனத்தினை அரசு செய்து வருகிறது.

இரண்டரை லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் சாமானியனிடம் வரி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தும் உத்தமர்கள் அலுவலகம் பைசாவுக்கு பெயராத சிறு பேப்பரைக் கொடுத்து வசூல் செய்யும் சினிமாக்காரர்களை ஏன் கண்டுகொள்வதில்லை என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? ரொக்கமாக கையில் காசு வைத்திருந்தால் அபராதம் போடுவோம் என்றார்களே அந்த உத்தரவுகள் எல்லாம் சினிமா தியேட்டர்களுக்குக் கிடையாதா?

சுத்த கொங்குத் தமிழனான சத்தியராஜை கட்டப்பாவின் கேரக்டரை வைத்து நன்றாக செய்திருக்கிறார் இயக்குனர். போதாத குறைக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார் சத்தியராஜ். திரைப்படத்தில் நீ நாய் தான் என்று அடிக்கடிச் சொல்கிறார்கள். கட்டப்பா அதற்கொரு பஞ்ச் டயலாக் அடிக்கிறார். நான் நாய் தான், மோப்பம் பிடித்தேன் என்று. விசுவாசத்தின் பெயர் அடிமை. அடிமைத்தனத்தின் பெயர் அயோக்கியத்தனம். தர்மத்தினை விசுவாசத்தின் பெயரால் அழிப்பது அயோக்கியத்தனம்.

இந்திய அரசியல் தலைவர்களிடம் இல்லாத அரிய விஷயம் விசுவாசம். விசுவாசம் இருந்தால் சாகும் வரை தொண்டன்வாகவே மட்டுமே இருக்க முடியும். எப்போதும் தலைவராக இருக்க முடியாது. பன்னீர் செல்வம் அவர்கள் விசுவாமாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ஹீரோயின் செலக்சனில் முற்றிலுமாகத் தோற்று இருக்கிறார் ராஜமெளலி. முதல் பாகத்தில் ஹீரோயினாக இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாத  உடல் மட்டும் சிவந்த கலரில் இருக்கும் தமன்னாவை என்ன சிந்தனையில் தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக வரும் அனுஷ்காவிடம் இளவரசித்தன்மைக்கான எந்த உடல் மொழியும் இல்லை. இளவரசியின் உடல் தகுதி என்று ஒன்று உண்டு. உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் இதே சினிமாவில் ருத்ரம்மா தேவி என்றொரு படம் வந்தது, அப்படத்தில் ராணாவும் அனுஷ்காவும் ஒரு பாடலில் வருவார்கள். அந்தப் பாடலில் ஒரு சிற்பம் வருமல்லவா அதன் உடல் மொழியைப் பாருங்கள். அதற்குப் பெயர் பெண். சிவப்புத் தோல் எல்லாம் ஹீரோயின் என்றால். இயக்குனருக்கு தமன்னாவும், அனுஷ்காவும் போதும் போல. இயக்குனர் இன்னும் காம்ப்ளானில் இருக்கிறார். இவர் எப்போது காஃபி குடிப்பாரோ தெரியவில்லை. இன்னும் வளரணும் சாரே!

சினிமா கிராபிக்ஸ் சுத்த மட்டம். இதை விட அருமையான கிராபிக்ஸ் எல்லாம் பார்த்திருக்கிறோம். பனைமரத்தினை வளைத்து உயர எம்பி அரண்மனைக்குள் நுழைந்து சண்டை இடுகின்றார்களாம். ஒரு ராஜாவை அவ்வளவு எளிதில் அண்டக்கூட முடியாது. அந்தளவுக்கு அரண் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படத்திலோ போர் என்கிற போர்வையில் காமெடி செய்து கொண்டிருக்கின்றார்கள். கதையில் காமெடி, வசனத்தில் காமெடி, படமாக்கியதில் சொதப்பல் என்று அத்தனையும் சொதப்பி வியாபாரத்தில் மட்டும் வெற்றி அடைந்த ராஜமெளலிக்குப் பெயர் சினிமா வியாபாரி.

அவர் இயக்குனர் அல்ல. கலைஞனும் அல்ல. சட்டத்திற்கும் புறம்பான வழியில் பணம் சம்பாதிக்கு ஒத்துழைக்கும் எவரும் என்னைப் பொறுத்தவரை ..... எழுத விரும்பவில்லை. இதோ புகைப்படத்தில் சாட்சி இருக்கிறது. சாமானியனைக் கட்டுப்படுத்தும் அரசாங்கம் சினிமா என்கிற ஒரு சிறு கூட்டத்தினைக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்கான சாட்சி  இது.



பாகுபலி திரைப்படத்தினைக் கொண்டாடி மகிழும் பல்வேறு உள்ளங்களுக்கு இந்தப் பதிவு வித்தியாசமானதாக இருக்கலாம். இது தான் உண்மை என்பது உங்கள் உள்ளங்களுக்குத் தெரிந்திருக்கும். உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். நம்மைச் சுற்றி நடக்கும் நாடகங்களை. அதனால் நாம் என்னென்ன இழந்திருக்கிறோம் என்பதை. நம் வாழ்க்கையை நாம் வாழ இந்தச் சமூகம் விடுவதே இல்லை. ஒவ்வொரு விஷயத்திற்கு முன்னுதாரணங்களைக் காட்டி பிறர் வழி நடக்க வைக்கும் கொடூரமான சிந்தனையில் சிக்கி இருக்கிறோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். பாதைகள் பல இருக்கலாம். அவைகள் தூரத்தைக் கடந்துச் செல்லத்தானே உதவ வேண்டுமே ஒழிய அதே பாதை தான் வாழ்க்கையாக இருக்கக் கூடாது. பாலம் என்பதும் பாதை என்பதும் கடக்கத்தானே ஒழிய வசிப்பதற்கு இல்லை. நாம் இன்னும் சாலையில் தான் வாழ்கிறோம். அந்தச் சாலையிலிருந்து நாம் வெளியில் வர வேண்டும்.

பாகுபலி போன்ற படங்கள் நம்மிடம் இருக்கும் பணத்தைப் பறித்துக் கொள்கின்றன. நம்மையும் கீழ்மைச் சிந்தனைகளில் சிக்க வைத்து விடுகின்றன. புரியும் தன்மை கொண்டவர்களுக்கு எளிதில் புரிந்து விடும். ஆனால் வெள்ளை மனம் கொண்டவர்களின் கதையை என்னவென்றுச் சொல்வது. பாகுபலி ஆந்திராவின் முதலமைச்சரானால் இதன் அர்த்தம் உங்களுக்குப் புரியலாம். அல்லது புரியாமல் கூடப் போகலாம். நாம் நாமாக இருக்க இது போன்ற மூளை மழுங்கச் செய்யும் படைப்புகளை நிராகரிக்க வேண்டுமென்பது எனது ஆவல்.

நான் இந்தப் பதிவில் எழுதி இருக்கும் விஷயங்கள் பல குழப்பங்களைத் தரலாம். உங்களுக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கலாம். அனைத்துக்குமான பதிலை நீங்களே உங்களுக்குள் தேடிக்கொள்ளுங்கள்.

Thursday, May 4, 2017

சசிகலா சீராய்வு மனு - விடுதலையாவாரா?

சட்டம் பல குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி தப்பிக்கக் கூடாது மன்னிக்கவும் தண்டிக்கப்படக்கூடாது என்கிறது. அது சரியானது தான். குற்றவாளிகளில் பலர் இதில் பல வகைகள் இருக்கின்றன. பரம்பரைக் குற்றவாளிகள், தொழில் முறைக் குற்றவாளிகள், அரசியல் குற்றவாளிகள், பயன் கருதி குற்றம் செய்யும் குற்றவாளிகள், உணர்ச்சிக் குற்றவாளிகள் இப்படி போகின்றன லிஸ்ட். சட்டம் குற்றவாளிகளை திருத்தி நல் வழிப்பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற அற்புதமான விஷயத்தைத்தான் முன்னெடுக்கிறது. மனித உயிரின் மீது கரிசனம் கொண்டவையாகத்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது. 

சசிகலா அவர்கள் தன்னை வழக்கிலிருந்து விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது இதைத்தான் காட்டுகிறது. ஏதாவது வழி இருப்பின் விடுதலை கிடைக்கக் கூடிய சாத்தியங்களைக் காட்டி விடுதலை பெறலாம் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் வசதிகளில் ஒன்று.

பத்திரிக்கைச் செய்திகளில் வெளிவந்த 1991 வழக்கின் தீர்ப்பினை முன்னிறுத்தி சீராய்வு மனுச் செய்திருக்கிறார் என்பது சரியான விளக்கம் தான். ஆனால் இன்னும் இது போன்ற பல தீர்ப்புகள் இருக்கக் கூடும். ஏதாவது ஒரு தீர்ப்புக்குள் இடைச்செருகலாய் சசிகலா அவர்கள் விடுதலையாகும் சாத்தியங்களை ஏதாவதொரு நீதிபதி அலசி இருப்பார். ஒவ்வொரு தீர்ப்பினையும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் சசிகலா அவர்களின் விடுதலைக்கு வித்திடப் போகும் அந்த ஒரு சட்டத்தின் துணுக்கு இருக்கும்.

ஏசிபி மற்றும் பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்திலும் பல்வேறு வழிகள் இருக்கின்றன. இரண்டு சட்டங்களின் படி தீர்ப்பு வழங்கப்பட்டவைகளை கூர்ந்து பார்த்தால் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல பேர் விடுதலையாகி இருக்கின்றனர். பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்தையும், இதுகாறும் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும், அதுமட்டுமின்றி அரசு அதிகாரிகளின் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பலர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புகளையும் படித்தால் 100 அடிச் சாலை திறந்து விடும். சம்பந்தபட்ட வக்கீலின் புத்திசாலித்தனத்தில் இருக்கிறது விஷயம்.

வேறேதேனும் சிக்கல்கள் இல்லாது இருந்தால் சசிகலா அவர்கள் விடுதலையாகி விடுவார் என்றே நினைக்கிறேன். சசிகலா வெளியில் வந்தால் அதிமுக வெகு ஸ்ட்ராங்காக ஆகி விடும் என்றும் நினைக்கிறேன்.

அரசியலும்  சட்டமும் இரயிலின் தண்டவாளப் பாதை போன்றது. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் இரு தண்டவாளங்களும் ஒன்று சேரும். பின்னர் பிரிந்து சென்று விடும். இரயிலின் பாதை போலத்தான் அரசியலும் சட்டமும். 

பார்க்கலாம் விதி என்ன செய்கிறது என்று? 

Monday, May 1, 2017

செப்டம்பர் 31

நேற்றுக் காலையில் ஏழு மணிக்கே வேலை விடயமாக வெளியில் சென்று பத்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தேன். நல்ல வெயில். சூடு தான் பிரச்சினை. கொதிக்கிறது அனல். முக்கியமான வீதிகளில் கம்பங்கூழ் பானைகள் துண்டுகள் கட்டி அமர்ந்திருக்கின்றன. ஒரு முறை திருப்பூர் கோர்ட்டுக்குச் சென்று விட்டு வரும் வழியில் கம்பங்கூழ் குடித்தேன். புளிப்பு உடலெங்கும் புல்லெரிக்க வைத்தது. ஆனால் நண்பரோ அசராமல் அனைத்தையும் குடித்தார். அப்படியே திரும்பக் கொடுத்து விட்டேன். அந்த அனுபவத்தினால் கம்பங்கூழ் என்றால் காத தூரம் ஓடிப் போ என்கிறது மனசு.

நுங்குகள் ஐந்து ரூபாயாம். வெட்டித்தருகின்றார்கள். பதனீ குடித்துப் பார்க்கலாம் என்று கொஞ்சம் வாங்கி வாயில் வைத்தால் சாக்கரீன் சுவை மிளிர துப்பி விட்டேன். ஒரு முடை நாற்றம் வேறு வந்தது. அதில் நுங்கைச் சீவிப் போட்டு மட்டை மட்டையாகக் குடிக்கின்றார்கள். ஆனால் எனக்குத்தான் ஆகவில்லை. நுங்கை வைத்து இப்படி ஒரு பிசினஸ் செய்யலாம் என்பதே ஆச்சரியம் தான். ஆனால் பாருங்கள் வருடம் முழுமைக்கும் நுங்கு கிடைக்கிறது. அதில் தான் ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது. அது என்னவென்று புரியமாட்டேன் என்கிறது.  ஒரு தடவை வீட்டுக்கு வந்த உறவினர் விழா நாட்களில் கோவையில் சாணி விற்றே கோடீஸ்வரனாகலாம் போலவே என்று சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டு வாசலில் தெளிக்க சாணி வாங்க மனையாள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
(திருமணத்திற்கு முன் இப்படி இருந்த நான்)

வீட்டுக்கு வந்து அயர்ந்து போய் படுத்து விட்டேன். வெயிலில் கருவாடு போலக் காய்வது என்பது சாதாரணமா? பசங்க டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதியம் மூன்று மணி போல நீயா? நானாவில் மறதி கணவர்கள் மனைவிகள் என்றொரு தலைப்பில் கணவர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள் பெண்கள். இதெல்லாம் சகஜம் தானே? அதைப் பார்த்து மனையாள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். 

தன் குடும்ப விஷயத்தை, அதுவும் தன் கணவனின் ரகசியத்தை வெளியில் கசிய விடலாமா என்றெல்லாம் தெரியாமல் பிளந்து கட்டிக் கொண்டிருந்தனர். மறதி என்பது மனிதனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்பதில் யாருக்கேனும் எள்ளளவாவது சந்தேகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை உடனடியாக மறந்து விடுங்கள். சந்தேகம் இருக்கவே கூடாது. நல்லது நடந்தால் நினைக்கும் மனது கெடுதல் நினைந்தால் மறக்கத்தான் நினைக்கும் அல்லவா? அதைத் தவறு என்கிறார்கள் இல்லத்தரசிகள். இருக்கட்டும். 

பெண்கள் எப்போதுமே குறை பேசி பழக்கமானவர்கள். நிறையை மட்டும் பார்க்காமல் குறையை மட்டுமே குத்திக் காட்டிக் கொண்டிருப்பார்கள். குறை சொன்னால் தான் நிவர்த்திச் செய்து கொள்ளலாம். ஆகையால் அதுவும் தவறில்லை. சரி கணவனிடம் தானே பேசுகின்றார்கள். தங்கள் தகப்பன், தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளை விட்டு விட்டு வந்திருக்கின்றார்கள். பேசினால் தப்பில்லை. அடித்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். குடும்பத்தின் ஆணி வேர் அல்லவா பெண்கள்? இப்படிச் சரண்டர் ஆகி விட்டாயே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எவன் எவனுக்கோ அடிபணிந்து வேலை செய்யும் போது மனைவியிடம் சரண்டர் ஆவது ஒன்றும் தப்பில்லை என்கிறேன். சரிதானே சரண்டரானவர்களே? அடக்கம் தான் அமைதிக்கு வழி! (தத்துவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது)

காதலின் மோக லாகிரியில் சிக்கி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண், காதலின் உச்சத்தை நுகர்ந்து விட வாழ்க்கையெனும் மோக வளைக்குள் நுழைகின்றாள். வாழ்க்கையின் வாசலில் வசந்தம் தன் அழகான வரவேற்பைத்தரும். அந்த வரவேற்பில் மகிழ்ந்து வாழ்க்கை எனும் வீட்டுக்குள் நுழைந்த பெண், நாளடைவில் காதலின் மோக லாகிரியிலிருந்து விலகி, இயற்கையின் மகத்துவமான தாய்மை எனும் அவதாரமெடுக்கின்றாள். 

கண்ணதாசன் கூட சொல்வார்,”இறைவன் ஒருவனின் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் தாயோ ஒருவனின் ஆத்மாவுக்கும், உடலுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றாள்”. இதை விட ஒரு பெண்ணின் மகத்துவத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

தாய்மையின் உயர்வைக் காட்டும் ஒரு கதையைக் கூட அர்த்தமுள்ள இந்து மதத்தில் எழுதி இருப்பார். கதையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆகவே மனையாளிடம் மதி மயங்கிக் கிடப்பது (இதைத்தான் மறதி என்கிறார்கள்) ஒன்றும் தவறில்லை. 

மனையாளுடன் சேர்ந்து நானும் நீயா நானாவைப் பார்க்க ஆரம்பித்தேன். அதிலொரு பெண்மணி தன் கணவன் தங்கள் கல்யாண நாளைக் கூட நினைவில் வைத்திருப்பதில்லை எனவும், நான் முதன் முதலாக இந்த வீட்டுக்கு வந்தது அந்தத் தேதியில்லையா? அதைக் கூட அவர் மறந்து ஒரு வாழ்த்துக்கூட சொல்வதில்லை என்று வேதனையாகச் சொன்னார். எனக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை. மறக்கவா முடியும் அந்தத் தேதியை?அருகில் அமர்ந்திருந்த மகள், ”அப்பா! உங்கள் கல்யாண தேதி என்னப்பா?” என்று கேட்க, நானும் உடனே வெகு சந்தோஷமாக, ”செப்டம்பர் 31” என்றேன்.

(திருமணத்திற்குப் பிறகு இப்படி ஆகி விட்டேன். கவனிக்க மீசை காணாமல் போய் விட்டது)

மகள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மனைவியோ டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் எழுந்து கடு கடுவென அடுப்பங்கரைக்குள் சென்றாள். ”இந்தக் கோபிநாத்துக்கு ஏன் தான் இந்த வேலையோ தெரியவில்லை? நாசமாப் போறவன் ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமாக, எரிச்சலைக் கிளப்பி விடுகின்றான்” என்று அவரை ஒருமையில் திட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவளுக்கு என்ன ஆனது என்று இதுவரைக்கும் தெரியவில்லை.

நான் தேதி மட்டும் தான் சொன்னேன். அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் கொள்கிறாள் இவள்? ஆமாம் செப்டம்பர் 31 தேதி இருக்கிறது தானே நண்பர்களே? 

Thursday, April 27, 2017

கொளுத்தும் வெயில் குளிரும் நினைவுகள்

கோவையில் இப்படி வெயில் அடிக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் வண்டியில் சென்ற மனையாளின் தோல் சிவந்து வெந்தது போல ஆகி விட்டது. கோவையில் கோடையில் வெயிலாக இருந்தாலும் சுடாது. ஆனால் இப்போது சுட்டெரிக்கிறது. நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆகாரம் குடிக்க வேண்டியதாகி விட்டது. சர்பத் கடைகளைக் கண்டால் மனசு அங்கே இழுத்துச் சென்று விடுகிறது. கவுண்டம்பாளையத்தில் திவ்யா சர்பத் என்றொரு கடை இருக்கிறது. நாற்பது வருடமாக சர்பத் விற்பனை செய்கிறாராம் அந்தக் கடைக்காரர். பதமாக வெயிலுக்கு இதமாக அதிகக் குளிர்ச்சியும் இல்லாமல் சர்பத் போட்டுத் தருகிறார். அந்தப் பக்கம் சென்றால் அவரைடம் எலுமிச்சை சர்பத் குடிக்காமால் நகர்வதில்லை. வெயில் என்றால் இதுதான் வெயில் என்பது போல அனத்து அனத்து என்று அனத்துகிறது.

வீட்டின் முன்னே இருக்கும் வேப்பமரம் கூட ஏனோ ஊடல் கொண்ட காதலி போல உஷ்ணக்காற்றினைத் தள்ளுகிறது. போதாதற்கு வேப்பம்பூவைக் கொட்டுகிறது. தமிழக அரசியலில் நொடிக்கொரு திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. செய்தி டிவிக்களுக்குத் தீனி. நான் சுத்தமாக செய்திச் சானல்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விவாதம் நடந்தால் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. செய்தித் தாளில் அரசியல் செய்திகள் என்றால் நகர்ந்து விடுவேன். துரோகிகளும், சுய நலக் கொடூரர்களும் நிரம்பிய அரசியல் செய்திகளைப் படிப்பதினால் என்ன பிரயோஜனம்? அதுமட்டுமில்லை சினிமா செய்திகளை மொத்தமாக படிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இதுவரை சினிமாச் செய்திகளைப் படித்ததினால் என்ன பலன் என்று யோசித்தேன். நிறுத்தி விட்டேன். காசும் நேரமும் கரியானது மட்டுமே பலன்.









(சிறு வயதில் நான் குளித்து மகிழ்ந்த ஊருக்கே உயிர் கொடுத்து வரும் ஆவணம் கிராமத்தில் இருக்கும் குளங்களும் அதன் பெயர்களும்)

கோடையில் பிச்ச நரிக்குளம் மட்டும் சற்றே தண்ணீர் சுண்டி விடும். ஆவணம் மாரியம்மன் கோவிலின் வாசல் வழியாகத் தெற்கே சென்றால் நான்கு புறமும் கொல்லைகள் சூழந்த, தென்மேற்குப் பகுதியில் காடுகள் நிரம்பிய குளம் தான் அது. குளத்துத் தண்ணீர் சற்றே சந்தனக்கலரில் மாறி இருக்கும். இருந்தாலும் அந்தக் குளத்தில் குளிப்பது சுகம். நடு மத்தியான நேரத்தில் செல்வதுண்டு. தண்ணீரின் மேல் பகுதியில் சூடாக இருக்கும். ஆனால் உள்ளே சிலீரென்று இருக்கும். இரண்டு மணி நேரம் தண்ணீருக்குள் ஆட்டம் போட்டு, நீச்சல் அடித்து கண்கள் ரத்தக் குழம்பாக சிவந்த உடன் தான் வெளியில் வருவதுண்டு.

நானும், வேலைக்காரன் போசும் ஆவணத்தான் குளத்துக்கு கிழக்கே இருக்கும் வயலில் கோடைப்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாருடன் செல்வோம். அது மண்ணெண்ணெய் மோட்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி ஸ்டார்ட் செய்து பிறகு மெதுவாக மண்ணெண்ணெய்க்கு மாற்ற வேண்டும். ஹோசில் தண்ணீர் ஊற்றி நிரப்பிய பிறகு ஸ்டார்ட் செய்தால் குளத்திலிருந்து தண்ணீரைப் பம்ப் செய்து மடையில் கொட்டும். அந்த மடைக்குள் உட்கார்ந்து கொண்டு தலையைப் பம்ப் தண்ணீரில் காட்டி குளிப்பேன். ஜாலியாக இருக்கும். மசங்கும் நேரத்தில் தான் குளத்துக்குச் செல்வதுண்டு. கொக்குகள் ஒற்றைக்காலில் தவமிருந்து கொண்டிருக்கும். மீன்கள் மாட்டினால் கொத்திக் கொண்டு மரங்கள் அடர்ந்து நிரம்பிய ஆறும் குளமும் இணைந்த கரைகளில் இருக்கும் மரங்களில் சென்று அமர்ந்து மீனை ருசித்துக் கொண்டிருக்கும்.

தண்ணீர் இறைக்க குளத்துக்குச் செல்வதென்றால் இளம் தேங்காய் ஒன்றும், வெல்லக்கட்டி, பொட்டுக்கடலை கொஞ்சமும் எடுத்துக் கொண்டு சென்று விடுவோம். தேங்காயைப் பொத்து அதற்குள் பொட்டுக்கடலை மற்றும் வெல்லக்கட்டி இரண்டையும் சேர்த்து, தேங்காய் தண்ணீரோடு சேர்த்து மூடி வைத்துக் கொள்வோம். குளத்தங்கரையில் கிடக்கும் காய்ந்து போன விறகுளைக் கொண்டு வந்து போட்டு எரியூட்டி அதில் இந்தத் தேங்காயைச் சுட்டு எடுத்து ஆற வைத்து ஓட்டினை எடுத்து விட்டு சாப்பிட்டால் அள்ளும். அதன் சுவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மாலை மசங்கும் வேளையில் நன்றாக குளித்து விட்டு, இலேசாகக் குளத்து நீர் குளிர ஆரம்பிக்கும் சமயத்தில் சுட்ட தேங்காயைச் மாட்டு வண்டியின் நுகத்தடியில் அமர்ந்து கொண்டு சிதறும் தண்ணீரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ருசிப்பது என்பது இப்போது நினைத்தால் கூட நடக்கும் காரியமா? அவனவன் லட்சங்களைக் கொட்டி கடற்கரை, இயற்கை கொஞ்சும் இடங்களுக்குச் சென்று வெறுமையாகத் திரும்புகின்றனர். வாழ்க்கையோடு இயைந்து இருக்கும் இது போன்ற மகிழ்ச்சி தரும் உணர்வுகளைக் காசால் பெற்று விட முடியுமா? 

உண்மையில் வயலுக்கு வேலை செய்யத்தான் செல்கிறோம். ஆனால் அந்த வேலையிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது அல்லவா? அது போல எந்த வேலையில் கிடைக்கிறது சொல்லுங்கள்? கணிணியில் உட்கார்ந்தால் உடலும் மனசும் அலுத்துப் போகும். இப்போதைய உடல் உழைப்புகள் எதுவும் விவசாய வேலை தரும் மகிழ்ச்சியைப் போல மகிழ்ச்சியைத் தந்து விட முடியுமா? தோட்ட வேலைக்குச் சென்று திரும்பும் போது கையில் தேங்காய், மாங்காய், கத்தரிக்காய்களைக் கொண்டு வந்து சமைத்து உண்ணும் வேலைக்காரியின் உணவுக்கு முன்னால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் உணவின் சுவை நிற்க முடியுமா?



கிர்லோஸ்கர் தண்ணீர் இறைக்கும் பம்பு செட்

கோடையில் வெயிலுக்கு இதமாக வடக்கித் தெரு சுப்பையாத் தேவரின் கொல்லையில் அருவி போலக் கொட்டிக் கொண்டிருக்கும் பம்பு செட்டிற்கு குளிக்கச் செல்வதுண்டு. அப்போது வழியில் என் நண்பன் பனை மரத்துக் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடத்தில் சென்று ஒரு லிட்டர் கள்ளைக் குடித்து விட்டு, பம்பு செட்டில் ஆட்டம் போட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தால் சூடான சோற்றுடன் கொதிக்கும் மீன் குழம்பினை ஊற்றிக் கொண்டு கவளம் கவளமாக சாப்பிட்ட நாட்கள் இனி வரத்தான் கூடுமா? நிச்சயம் வராது. 

நான்கு சுவற்றுக்குள் கதவைச் சாத்திக் கொண்டு தலையில் மோண்டு ஊத்தும் தண்ணீர் உடலைத் தழுவும் போது ஆற்றுக்குள் குளிக்கும் போது இருந்த சுகம் இல்லை என மனசு முழுக்க ஏக்கம் பரவுகிறது. காவிரி ஆறும், மழையும் வறண்டு போய் வெம்மையானாலும் அந்த இளம் பிராயத்து நினைவுகள் மட்டும் மனதூடே ஊடுறுவும் போது கொஞ்சூண்டு சிலிர்ப்பாக இருக்கத்தான் செய்கிறது.

Thursday, April 20, 2017

கிட்னியில் கல் நீக்க மருந்து

எனது நண்பரின் மகன் திடீர் வயிற்று வலிக்காக மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்த போது ஸ்கேனில் கிட்னியில் கல் இருப்பதாகத் தெரிந்திருக்கிறது. ஆபரேசன் அது இதுவென்று பத்தாயிரத்துக்கும் மேல் செலவாகும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். கிட்னி கல்லை ஆபரேஷன் செய்து எடுத்தாலும் மீண்டும் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்றும் சொல்ல பையனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

வீட்டுக்கு வந்து தந்தையிடம் சொல்லி இருக்கின்றான். அட லூசுப்பயலே, இதுதானா பிரச்சினை, கவலையை விடு, சரி செய்து விடலாம் என்றுச் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு அவருக்குத் தெரிந்த ஒரு நாட்டு மருந்து கொடுப்பவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

600 ரூபாய் விலையாம். அடுத்த இரண்டொரு நாட்களில் கிட்னியிலிருந்த கல் உடைந்து சிறு நீருடன் வெளியேறி இருக்கிறது. பையன் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறான். பத்து எம்.எம். கல் இருந்தாலும் உடைந்து சிறு நீரோடு வெளியேறி விடுமாம். 

சாதாரண கிராமத்தில் இருந்து கொண்டு அந்த நாட்டு மருந்தினை பிரச்சினை இருப்பவருக்கு உடனுக்குடன் செய்து கொடுக்கின்றார்களாம். 

உங்களுக்குத் தெரிந்தவருக்கு கிட்னியில் கல் இருக்கிறது என்றால் என்னை அழைக்கச் சொல்லவும். மருந்து வாங்கித் தர ஏற்பாடு செய்து தருகிறேன். வெளியூரில் இருப்போர்கள் அவசியம் கோவை வர வேண்டும். பார்சலில் மருந்து வாங்கி அனுப்ப இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் நேரில் வர வேண்டுமென்பது கட்டாயம்.

தேவைப்படுபவர்கள் அழைக்கலாம். காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை மட்டுமே அழைப்புகளை எடுக்க இயலும் என்பதைக் கவனத்தில் கொள்க.

Wednesday, April 19, 2017

ரூடோஸ்ஸின் வருகை

எனக்கு நாயென்றால் அப்படி ஒன்றும் பிடிக்காத விஷயமல்ல. அதுவும் ஒரு உயிர் தானே என்றளவில் கொஞ்சம் பிரியம் இருக்கின்றது. எனக்கொரு தோழி நெட்டில் அறிமுகமானவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார். நான் சிரமப்பட்ட காலத்தில் உடனுக்குடன் எனக்கு பணம் அனுப்பி வைத்தார். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், கடைகள் என நல்ல வசதியான பெண்மணி. அங்கிருந்து வருடம் ஒரு தடவையாவது பரிசுகள் வரும். நான் எதுவும் அனுப்புவதில்லை. போன் கூட அவர் தான் செய்வார். இணையத்தில் பேசிக் கொள்வதுண்டு. அவர் ஊரில் நாய்க்கறி பேஃமசாம். அவரிடம் கேட்டேன். அருமையாக இருக்கும் என்றார். அன்றிலிருந்து அவரிடம் பேசுகின்ற போதெல்லாம் செத்துப் போன நாய்கள் அவரின் பின்னே அவரைத் துரத்துவது போல நினைவலைகள் வந்து விடும். விவசாயமெல்லாம் அழிந்து போன பிறகு நாய்க்கறியைத் தின்னாமல் மனுசனையா தின்ன முடியும். எனக்கென்னவோ இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளில் நாய்க்கறி பிரபலமாகி விடும்  போல. நம்ம நாடு போகிற போக்கினைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. 

பிலிப்பைன்ஸுக்கு வா என்று பத்து ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தோடு செல்ல வேண்டும். இப்ப ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

நேற்றைக்கு முதல் நாள். நானும் பையனும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண், அங்கிள் இங்கே மருத்துவமனை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். சரவணம்பட்டி காளப்பட்டி சாலையில் ஒரு மருத்துவமனையைப் பார்த்த நினைவில் இந்தப் பக்கம் என்று கைகாட்டி விட்டேன். கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினால் அந்தப் பெண்கள் தெரிந்தார்கள். அதிலொரு பெண் நடக்கவே முடியாமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். சாலையைக் கடந்து வந்தார்கள். மருத்துவமனையில் டாக்டர் இல்லை. சோர்ந்து போய் விட்டார்கள். அந்தப் பெண்ணைத் தொட்டுப் பார்க்க உடல் கொதித்துக் கொண்டிருந்தது. சரியான காய்ச்சல். வெயில் வேறு அனத்திக் கொண்டிருந்தது. பையனை இன்னொரு பெண்ணுடன் இறக்கி விட்டு விட்டு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இரண்டொரு மருத்துவமனைக்குச் சென்றால் ஒருவரும் இல்லை. ஒரு வழியாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைக் கண்டுபிடித்து அங்கு கொண்டு போய் விட்டேன். மருத்துவர் இருந்தார். மீண்டும் என் பையனும் இன்னொரு பெண்ணும் இருக்கும் இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருப்பினேன். அப்போது அந்தப் பெண், ”ரித்திக், வெயிலில் நிற்காதே, நிழலில் நில்” என்று இரண்டு மூன்று தடவை சொன்னது. எனக்குச் சரியான எரிச்சல். நான் வெயிலில் இவள் தோழியை அழைத்துக் கொண்டு நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பெண்ணுக்கு யார் மீது அக்கரை என்று பார் என்று கடுப்பானது. காலம் மாறுகிறது என்பது பளிச் சென்று புரிந்தது. அப்பெண்ணை மருத்துவமனையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன். நன்றி சார் என்றது அப்பெண். நல்லா இருங்கம்மா என்றுச் சொல்லி விட்டு பையனை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன். நீ பாட்டுக்கு இப்படி உதவி செய்யக் கிளம்பி விடாதே ரித்திக் என்று அவனிடம் சொல்லி வைத்தேன். எதுக்கும் இருக்கட்டும். சரி அடுத்த கதைக்கு வந்து விடுகிறேன்.

சிறுவயதில் செவலை நாயொன்றும், கருப்பு நாயொன்றும் வீட்டில் இருந்தது. செவலை நாய் நல்ல நாய். வீட்டை விட்டு எங்கும் செல்லாது. ஆனால் கருப்பு நாயோ எமகாதக நாய். ஊர் சுற்றி. கையில் இருந்தாலும் கடித்து தின்று விடும். அதை நான் அடித்து துரத்தி விடுவேன். அப்போதெல்லாம் நாய்க்குப் பெயர் வைப்பதெல்லாம் இல்லை. நாயை நாயென்றுதான் அழைப்போம். ஆனால் இப்போதோ வேறு நிலை.  நாய்க்கு வைக்கும் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அது நாயா இல்லை ஆளா என்றொரு குழப்பம் வந்து விடும் எனக்கு. 

இன்றைக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. ரிப்ளை செய்யும் போது அது ஆணா பெண்ணா என்று  குழப்பம் ஏற்பட எதுக்கு வம்பு பேசாமல் டியர் என்று போட்டு விடுவோம் என்று நினைத்து டியர் <அந்த பெயர் போட்டு> மெயில் அனுப்பி விட்டேன். அது ஒரு பெண்ணாக இருந்து நான் ஆணல்ல என்று ஆரம்பித்து அதுவே தொடர்கதையாகி, ஏற்கனவே திருமணமானவன். அதுவும் நாற்பதுகளில் இருப்பதால் நாய் குணம் வேறு வந்து விடும் என்பார்கள். எக்குத்தப்பாக ஆகிவிட்டால் நன்றாகவா இருக்கும்? சரி விஷயத்துக்கு வந்து விடலாம்.

அந்தச் செவலை நாய் ஒரு நாள் வாய் கிழிந்து வந்தது. இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கியது. எதித்த வீட்டுப் பெண்மணி வெங்காய வெடியை கருவாட்டுக்குள் வைத்துச் சுருட்டிப் போட்டு விட்டார். அதை எடுத்துக் கடித்திருக்கிறது. வெங்காய வெடி வெடித்து இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கி விட்டது. இடது பக்க பற்கள் எல்லாம் வெளியில் தெரிந்தது. எனக்குப் பயமாகவும், பாவமாகவும் இருந்தது. சாப்பாடு வைத்தேன். சாப்பிட்டது ஆனால் சோறு இடது பக்கமாக வெளியில் வந்து விட்டது. கொஞ்ச நாளில் அது வாசலில் படுத்திருந்தது. பட்டினியாகவே கிடந்து இறந்து போனது. வீட்டின் பின்புறம் குழி வெட்டி புதைத்து விட்டோம். 

கருப்பு நாயை பஞ்சாயத்திலிருந்து நாய் பிடிக்க வந்தவன் பிடித்துக் கொண்டு போய் விட்டான் போலும். நீண்ட நாட்கள் அதைக் காணவில்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் சும்மாவா? வீட்டுக்கே ஆகாது என்பார்கள். நாயைச் சொல்லவா வேண்டும்? அதுகளுக்கு அப்போது பீட்ச்சா அடச்சே பீட்டா, ப்ளூகிராஸ் மாதிரியெல்லாம் ஆட்கள் இல்லை. இப்போதல்லவா இருக்கின்றார்கள். அவனவன் ஆட்களை ஆடுகள் கழுத்தறுப்பது போல அறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதைக் கேட்க ஆட்கள் இல்லை. நாயை அடித்தாலோ அல்லது மாட்டை அடித்தாலோ கேஸ் போடுகின்றார்கள். சிறு வயதில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது சண்டித்தனம் செய்யும் மாட்டினை சாட்டையால் விளாசி இருக்கிறேன். அப்போது இந்த பீட்டாக்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? மாட்டுக்குப் பதிலாக இவர்கள் நுகத்தடியில் கழுத்தை கொண்டு வந்து நீட்டி வண்டியை இழுப்பார்களா? என்று தெரியவில்லை. என்ன நியாயமோ என்ன சட்டமோ? ஒன்னும் சரியில்லை.

கிரடிட் கார்டுகள், பண அட்டைகள் வந்தாலும் வந்தன. மனிதன் இப்போது பைத்தியம் பிடிக்காத குறையாகத்தான் திரிகின்றான். ஏசியில் ஐந்து நிமிடம் நின்று ஏடிஎம்மில் பணம் எடுப்பது அப்போதெல்லாம் கவுரவம் நிரம்பியது. ஆனால் இப்போதோ ஏடிஎம் என்றாலே அலறல் தான் கேட்கிறது. டெக்னாலஜி வந்தாலும் வந்தது பிடித்தது சனியன். கருப்புப் பணத்தை இனி கண்ணால் கூட பார்க்க முடியாது போலும். ஆனால் அரசியல்வாதிகள் காட்டிலோ மழையோ மழைதான். ஒரு கார் வாங்கலாம் என்றால் நாய்க்கு நாக்குத் தள்ளிய மாதிரி நமக்கு நாக்குத் தொங்கி விடுகிறது. கவுன்சிலர் ஆனவுடனே ஸ்கார்ப்பியோவில் வருகின்றார்கள். என்ன தான் தில்லுமுல்லு செய்வார்களோ தெரியவில்லை. அடுத்தவன் பணத்தில் வாழ்வதுக்கும் ஒரு மச்சம் வேண்டும். மச்சம் மட்டும் இருந்து என்ன ஆகப் போகிறது? புத்திசாலித்தனமும் வேண்டும். மோடி சரியான அரசியல்வாதியாக இருக்கிறார். கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்றார். நாமெல்லாம் நினைத்தோம். அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்டு வந்து விடுவார் என. ஆனால் பாருங்கள் என்ன நடந்தது என்று. இது தான் பிரதமர் மோடி. வெகு புத்திசாலியானவர். திறமையானவர். யாரை எங்கே எப்படி என்ன என்பதெல்லாம் அவரிடம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இது வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் ஆகச் சிறந்தவர் மோடி அவர்கள் தான் என்கிறேன். இப்படி ஒரு ட்விஸ்டை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்களா? நிச்சயமாக இப்படியெல்லாம் நடக்குமா என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். அதுதான் பிளான். அதுதான் திட்டம்.

சரி திரும்பவும் எங்கேயோ போய் விட்டேன். இந்த மூளை இருக்கிறதே அது படுத்தும் பாடு இருக்கிறதே? பெரிய ரோதனை இதோடு. உங்களுக்கும் போர் அடித்திருக்கும் அல்லவா?

இரண்டு நாட்களுக்கு முன்பு ரித்திக் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் போது. அவன் கூடவே குட்டியாக, செவலை நாய்க்குட்டி ஒன்று அவனுடன் வந்து விட்டது. ரித்திக்குக்கு நாய், பூனை என்றால் பிரியம். ஆனால் மனையாளுக்கோ ஆகவே ஆகாது. அப்பா இந்த நாயை வளர்க்கலாமா? என்று கேட்க இரண்டு மாதம் வீட்டில் சும்மாதானே இருக்கின்றார்கள், பொழுது போக்காக இருக்கட்டும் என்றுச் சொல்லி சரி என்றுச் சொல்லி விட்டேன்.

போன மாதம் கருகருவென நாய்க்குட்டி ஒன்றினை வளர்க்கலாம் என்று நினைத்து கவுண்டரிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரும் திரிந்தலைந்து 22 நகங்களுடன் கருப்பு நாய்க்குட்டி ஒன்றினைப் பிடித்து வைத்திருந்தார். எனது நண்பர் நாயை ஓசியில் வாங்கக் கூடாது. யாருக்கும் கொடுக்கவும் கூடாது என்றுச் சொல்லி விட கவுண்டரிடம் வேண்டாம் என்றுச் சொல்லி விட்டேன். அத்தோடு நாய் வளர்க்கும் ஆசை போய் விட்டது. ஆனால் அதுவே வீடு தேடி வருகிறது.

ரூடோஸ் தற்போது

ரூடோஸ் எதிர்காலத்தில்

லேப்ராடர் வகை நாய்க்குட்டி அது. எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை? யார் வளர்த்ததோ தெரியவில்லை? அதற்குச் சாப்பாடு போட்டு, குளிப்பாட்டி, கழுத்திலொரு பட்டியைக் கட்டி, அத்துடன் கயிற்றைக் கட்டி விட்டான் பையன். காலையில் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டி, நாய்க்கடைக்குச் சென்று கழுத்துப் பட்டி, கயிறு வாங்கி வந்து மாட்டி காலையிலும் மாலையில் ஜாக்கிங்க் சென்று கொண்டிருக்கின்றார்கள் ரித்தியும், அம்முவும். இப்போது அது நன்றாக இருக்கிறது. இன்றைக்கு காலையில் பேப்பரைக் கடித்துக் குதறி விட்டது. ஒரு அதட்டுப் போட்டேன். அவ்வளவுதான் அருகிலேயே வரமாட்டேன் என்றது. ஒரு வழியாக சமாதானம் செய்து அதன் பயத்தைப் போக்க வேண்டியதாகி விட்டது.

இதற்கொரு பெயர் வையுங்கள் சாமி என்று கேட்டேன். 

”ரூடோஸ்” என்றார்.  எங்கிருந்தோ வந்தது ரூடோஸ். இப்போது என்னுடன் இருக்கிறது. காலையில் எழுந்ததும் அதனுடன் கொஞ்ச நேரம் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாலையில் அதனுடன் விளையாடுவதும் சந்தோஷம் தருகிறது. ஒரு குழந்தையைப் போல அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

பக்கத்து வீட்டில் சைபீரியன் ஹஸ்கி என்ற பெய்லி (பெயர்) வளர்கிறது. மாலையில் வாக்கிங் செல்லும் போது பெய்லியைப் பார்த்து கர்ண கடூரமாகக் குலைக்கிறது ரூடோஸ். சரியான காமெடி. பயமில்லாமல் குலைத்து விட்டு ஓடோடி வந்து அருகில் அமர்ந்து கொள்கிறது.

பசங்க இருவரும் டிவி பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பு: எல்லா பத்திகளிலும் நாய் வந்திருப்பதைக் கவனிக்கவும். உன் வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறாய் என்பதற்காக ஊர் கதையெல்லாமா அளப்பது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்குத்தான் இந்தக் குறிப்பு.

Thursday, April 6, 2017

அம்முவுக்குச் சொன்ன அப்பத்தாவின் வாழ்க்கை

பத்து வீடு தள்ளி இருக்கும் பள்ளி வாசலிலிருந்து வரும் பாங்கழைப்புக் கேட்டு நான்கரை மணிக்கு எழுந்து குடத்தடிக்குச் சென்று குளிர்ந்த நீரை எடுத்து முகம் கழுவி விட்டு, அடுப்புச் சாம்பல் எடுத்து பல் துலக்கி, வாய் கொப்பளித்து விட்டு, கட்டுத்தறிக்குச் சென்று சவுக்கில் பின்னப்பட்ட கூடையில் சாணியை வழித்து எடுத்து குப்பைக்கிடங்கில் கொட்டி விட்டு, அதில் கொஞ்சம் சாணியை எடுத்துக் கொண்டு வந்து வாளியில் வைத்து தண்ணீர் ஊற்றி கையால் தெளிக்கும் அளவுக்குக் கரைத்து வாசலுக்குக் கொண்டு வந்து பதவிசாக தெளித்து விட்டு, வாளியை ஓரமாக வைத்து விட்டு, ஒரு ஏக்கர் நிலப்பரப்பு முழுவதும் கொட்டிக் கிடக்கும் இலை தழைகளையும் குப்பைகளையும் பெருக்கிக் குப்பைக் கிடங்கில் சேர்த்து விட்டு நிமிர்ந்து கட்டுத்தறிக்குச் செல்லும்.

கட்டுத்தறியில் கட்டிக் கிடக்கும் மாடுகளுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை உருவி எடுத்து வந்து தீனி போட்டு விட்டு, வீட்டுக்குள் நுழைந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டுபோய் குடத்தடியில் போட்டு விட்டு அதில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து விட்டு, அடுப்படிக்கு வந்து அடுப்புச் சாம்பலை ஒரு தட்டில் வறண்டி எடுத்து வைத்து விட்டு சோத்துப் பானையில் முக்கால் திட்டம் தண்ணீர் எடுத்து அடுப்பின் மீது வைத்து விறகை எடுத்து அடுப்பினுள் வைத்து அதனுள்ளே பதவிசாக தீக்குச்சி உரசி விறகைப் பற்ற வைத்து விட்டு குடத்தடிக்கு வரும்.

சாம்பலில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கையில் தேங்காய் நாரை எடுத்துச் சேர்த்து வைத்துக் கொண்டு சாம்பலைத் தொட்டுக்கொண்டு அத்தனை பாத்திரங்களையும் விருட் விருட் என்று துலக்கி தண்ணீர் விட்டு அலசி சுத்தமாகக் கழுவி எடுத்து அடுப்பங்கரைக்குள் நுழைந்தால் அடுப்பில் இருந்த உலைப்பானையில் தண்ணீர் தளதளவென்று கொதித்துக் கொண்டிருக்கும்.

இரண்டு படி அரிசி எடுத்து தண்ணீர் ஊற்றி கழுவி, கழனித் தண்ணியை மாட்டுப்பொக்கையில் விட்டு களைந்தெடுத்த அரிசியைக் கொண்டு வந்து உலையில் போட்டு விட்டு, பக்கத்து அடுப்பினை மூட்டி அதில் முதல் நாள் மீந்திருந்த குழம்புகளைச் சுட வைத்து இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் காய்கறிகளை எடுத்து நறுக்கி பொறியலோ அல்லது கூட்டோ செய்து விட்டு, வடகம், மிளகாய் வத்தல்களை பொறித்து எடுத்து வைத்து விட்டு, அதற்குள் வெந்த சோறுப்பதம் பார்த்து கஞ்சியை வடித்து விட்டு, ஈரத்துணியில் சோற்றுப்பானையைச் சுற்றிலும் துடைத்து பிருமனையின் மீது வைத்து விட்டு, வீடு எல்லாம் கூட்டிப் பெருக்கி குப்பையை அள்ளி குப்பைக்கிடங்கில் சேர்த்து விட்டு நிமிரும்.

கதறும் மாட்டின் கன்றினை அவிழ்த்து விட்டு, மடியில் பால் சுரந்ததும் கன்றினைக் கட்டிப் போட்டு கொஞ்சம் பாலைக் கரந்து கொண்டு வந்து அடுப்பில் வைத்து சுட வைத்து விட்டு, மோர்ப்பானையை எடுத்து மத்தை வைத்து கரகரவென கடைந்து திரளும் வெண்ணையை வழித்தெடுத்து, அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மகன் தங்கத்தின் வாயில் வெண்ணெய் உருண்டையில் கொஞ்சம் போட்டு விட்டு மோரை எடுத்து பாத்திரத்தில் வைத்து விட்டு பெரிய தவளைப் பானையை எடுத்து அதில் சோற்றினைப் போட்டு மோர் ஊற்றி உப்புச் சேர்த்து வயக்காட்டில் வேலை செய்பவர்களுக்கு கஞ்சியை தயார் செய்து, தொட்டுக்கொள்ள வெந்தய மாங்காய் ஊறுகாய், அடமாங்காய், மிளகாய் வத்தல், வடகம் எடுத்து வைத்து, பனை ஓலை நறுக்கை ஆள் கணக்குக்குத் தகுந்தாற் போல எடுத்து கட்டி வைத்து விட்டு, வீட்டு ஆட்களுக்கு சோறு போட்டு கொடுத்து விட்டு தலையில் சும்மாடு வைத்து தவளைப் பானையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இடுப்பில் கூடையில் சைடு டிஷ் வகையறாக்களுடன் காலில் செருப்பு கூட இல்லாமல் ஐந்து கிலோ மீட்டர் தூரமிருக்கும் வயலுக்குச் செல்லும்.

வயலில் இருந்து திரும்பி வரும் போது கையோடு காய்கறிகளோ அல்லது மீனோ அல்லது நண்டோ இருக்கும். மீன் இருந்தால் அதை சிலாம்பு நீக்கி தலையை அரிந்து, சட்டியில் போட்டு உப்புச் சேர்த்து உரசி, தண்ணீர் விட்டு அலசி, வெள்ளிக்கம்பி போல மின்னும் மீனுடன் அடுப்பங்கரைக்குள் நுழைந்து கைப்பக்குவத்தின் மகிமையில் வீடே மணக்கும் மீன் குழம்போ அல்லது காய்கறிக் குழம்போ தயார் செய்து வைக்கும்.

வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வேலைக்காரர்களுக்கு சோறு போட்டு மீன் குழம்பினை ஊற்றிக் கொடுக்க அவர்களும் வயறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு ’போய்ட்டு வாரேன், தேவச்சியாரே!’ என்றுச் சொல்லி விடை பெறுவர். 

பள்ளி சென்று வீட்டுக்கு வந்து ஆட்டம் போட்டு விட்டு கிணற்றடிக்குச் சென்று பொக்கையில் இருக்கும் தண்ணீரில் குளித்து விட்டு மாலை மயங்கும் நேரத்தில் வாசலில் உட்கார்ந்தால் மணக்கும் மீன் குழம்போடு சாப்பாடு கொண்டு வந்து வைத்துச் சாப்பிடச் சொல்லும். சாப்பிட்டு விட்டு பாடப் புத்தகத்தை விரித்து வைத்து படித்து விட்டு எட்டு எட்டரைக்கெல்லாம் தூங்கப் போய் விடுவேன்.

மறு நாள் காலையில் பாங்கழைக்கும் நேரத்தில் அருகில் அம்மா இல்லாததைக் கண்டு திரும்பிப் படுப்பேன்.

காய்ந்து போன இலைச்சருகுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் ’வரட், வரட்’ சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். விடிகாலைக் குளிர் தூக்கம் சுகமானது. தாலாட்டுவது போல அம்மா கூட்டிப் பெருக்கிக் கொண்டிருக்கும் சத்தம் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும்

Thursday, March 30, 2017

நிலம் (36) - பட்டா நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவது எப்படி

மரத்தை ரம்பம் போட்டு அறுத்தா வெட்டி போடலாம். இவரு மரத்தை எப்படி வெட்டுவது என்று சொல்லித்தரப் போகின்றாரா? என்று நீங்கள் நினைக்கலாம். இப்படியெல்லாம் ரூல்ஸ் இருக்கிறதா என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மெனக்கெட்டு எழுதுகிறேன். யாரோ ஒருவருக்காவது உபயோகப்பட்டால் அதை விட சந்தோஷம் வேறில்லை. இந்தத் தலைப்பின் வீரியத்தைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுத்தான் புரிய வரும்.

சென்னைப் பக்கம் ஒரு நகரத்தில் எனக்குத் தெரிந்த நல்ல வசதியானவர் புதியதாக காம்ப்ளக்ஸ் ஒன்றினை வாங்கினார். அதைச் சுத்தப்படுத்தி புதிய பெயிண்ட் அடிக்க காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார். பெயிண்டர் பெயிண்ட் அடிக்கும் போது காம்பளக்சின் சுவற்றில் சாலையோரமிருந்த மரத்திலிருந்து இரு சிறிய கிளைகள் முட்டிக் கொண்டிருந்திருக்கின்றன. பெயிண்டர் அருவாளால் இரண்டடிக்கு வெட்டிப் போட்டு விட்டு பெயிண்ட் அடித்திருக்கிறார். வெட்டிப்போட்ட கிளையை எதிரில் இருந்த ஹோட்டல்காரர் எடுத்து எரித்து விட்டார். பெயிண்ட் அடித்து முடித்து விட்டார்கள். அடுத்த இரண்டு நாட்களில் விஏஓவிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. தாசில்தார் எப்படி முன் அனுமதி பெறாமல் கிளையை வெட்டினீர்கள் என்றும் எஃப்.ஐ.ஆர் போடப் போகின்றோம் என்றுச் சொல்ல இவர் ஒன்றும் புரியாமல், நானெங்கே வெட்டினேன் என்று குழம்பி விசாரித்திருக்கிறார். மேற்படி சம்பவம் தெரிய வர இவருக்கு ஒன்றும் புரியவில்லை.

சாலையோர மரம் நம் கட்டிடத்தின் சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கிறது. அதை பெயிண்ட் அடிக்க இரண்டடிக்கு வெட்டினால் அது பிரச்சினையாகி உள்ளதே என்று விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். காம்ப்ளக்ஸின் எதிரில் இருந்த ஆட்டோகாரர்கள் அதை போட்டோ எடுத்து ஆர்.டி.ஓ வரை கம்ப்ளைண்ட் கொண்டு சென்றிருக்கின்றார்கள். தாசில்தான் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டார். இதற்கிடையில் அந்தப் பகுதி கவுன்சிலர் வேறு வீட்டுக்கு வந்து இவரை மிரட்டி இருக்கிறார். மரம் வெட்ட வேண்டுமெனில் என்னிடம் பர்மிஷன் கேட்டு அல்லவா வெட்டி இருக்க வேண்டும் என்று சொல்ல இவர் பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது என எம்மை அணுகினார். அதைத் தொடர்ந்து சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து சரி செய்து கொடுத்தோம்

இப்போது மரத்தினை வெட்டினால் என்ன ஆகும் என்று உங்களுக்குப் புரிந்திருக்குமே?

நிலம் உங்களுடையதாகவே இருக்கலாம். அதில் உள்ள மரமும் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அதை வெட்ட வேண்டுமெனில் கட்டிங்க் ஆர்டர் பெற வேண்டும் என்பது விதி. யாரும் புகார் கொடுக்காதவரைக்கும் பிரச்சினையில்லை. புகார் கொடுத்தால் வம்புதான் வரும். பூமியில் வசிக்க மட்டுமே நமக்கு உரிமை உள்ளது. வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டும், வரி கட்ட வேண்டும். பூமிக்கு கீழ் எது இருந்தாலும் அது அரசுக்கு மட்டுமே சொந்தம். புரிகிறதா உங்களுக்கு இப்போது? 

மனிதன் இந்தப் பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தான் உண்மை. பிச்சைக்காரன் கூட தனக்குக் கிடைக்கும் பிச்சைப் பணத்தைச் சேர்த்து வைத்தான் என்றாலும் அதற்கும் வருமான வரி கட்ட வேண்டும். இதுதான் நிதர்சனம். இதுதான் உண்மை.

உலகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கிறது. இதை உருவாக்கியவன் மனிதனே. எவரும் புதிதாக வந்து இப்படியான கட்டமைப்பினை உருவாக்கவில்லை. எல்லா பிரச்சினைக்கும் மனிதனே காரணம். அவனே கேள்வி, அவனே பதில்.