குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, May 4, 2017

சசிகலா சீராய்வு மனு - விடுதலையாவாரா?

சட்டம் பல குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி தப்பிக்கக் கூடாது மன்னிக்கவும் தண்டிக்கப்படக்கூடாது என்கிறது. அது சரியானது தான். குற்றவாளிகளில் பலர் இதில் பல வகைகள் இருக்கின்றன. பரம்பரைக் குற்றவாளிகள், தொழில் முறைக் குற்றவாளிகள், அரசியல் குற்றவாளிகள், பயன் கருதி குற்றம் செய்யும் குற்றவாளிகள், உணர்ச்சிக் குற்றவாளிகள் இப்படி போகின்றன லிஸ்ட். சட்டம் குற்றவாளிகளை திருத்தி நல் வழிப்பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற அற்புதமான விஷயத்தைத்தான் முன்னெடுக்கிறது. மனித உயிரின் மீது கரிசனம் கொண்டவையாகத்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது. 

சசிகலா அவர்கள் தன்னை வழக்கிலிருந்து விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது இதைத்தான் காட்டுகிறது. ஏதாவது வழி இருப்பின் விடுதலை கிடைக்கக் கூடிய சாத்தியங்களைக் காட்டி விடுதலை பெறலாம் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் வசதிகளில் ஒன்று.

பத்திரிக்கைச் செய்திகளில் வெளிவந்த 1991 வழக்கின் தீர்ப்பினை முன்னிறுத்தி சீராய்வு மனுச் செய்திருக்கிறார் என்பது சரியான விளக்கம் தான். ஆனால் இன்னும் இது போன்ற பல தீர்ப்புகள் இருக்கக் கூடும். ஏதாவது ஒரு தீர்ப்புக்குள் இடைச்செருகலாய் சசிகலா அவர்கள் விடுதலையாகும் சாத்தியங்களை ஏதாவதொரு நீதிபதி அலசி இருப்பார். ஒவ்வொரு தீர்ப்பினையும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் சசிகலா அவர்களின் விடுதலைக்கு வித்திடப் போகும் அந்த ஒரு சட்டத்தின் துணுக்கு இருக்கும்.

ஏசிபி மற்றும் பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்திலும் பல்வேறு வழிகள் இருக்கின்றன. இரண்டு சட்டங்களின் படி தீர்ப்பு வழங்கப்பட்டவைகளை கூர்ந்து பார்த்தால் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல பேர் விடுதலையாகி இருக்கின்றனர். பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்தையும், இதுகாறும் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும், அதுமட்டுமின்றி அரசு அதிகாரிகளின் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பலர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புகளையும் படித்தால் 100 அடிச் சாலை திறந்து விடும். சம்பந்தபட்ட வக்கீலின் புத்திசாலித்தனத்தில் இருக்கிறது விஷயம்.

வேறேதேனும் சிக்கல்கள் இல்லாது இருந்தால் சசிகலா அவர்கள் விடுதலையாகி விடுவார் என்றே நினைக்கிறேன். சசிகலா வெளியில் வந்தால் அதிமுக வெகு ஸ்ட்ராங்காக ஆகி விடும் என்றும் நினைக்கிறேன்.

அரசியலும்  சட்டமும் இரயிலின் தண்டவாளப் பாதை போன்றது. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் இரு தண்டவாளங்களும் ஒன்று சேரும். பின்னர் பிரிந்து சென்று விடும். இரயிலின் பாதை போலத்தான் அரசியலும் சட்டமும். 

பார்க்கலாம் விதி என்ன செய்கிறது என்று? 

Monday, May 1, 2017

செப்டம்பர் 31

நேற்றுக் காலையில் ஏழு மணிக்கே வேலை விடயமாக வெளியில் சென்று பத்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தேன். நல்ல வெயில். சூடு தான் பிரச்சினை. கொதிக்கிறது அனல். முக்கியமான வீதிகளில் கம்பங்கூழ் பானைகள் துண்டுகள் கட்டி அமர்ந்திருக்கின்றன. ஒரு முறை திருப்பூர் கோர்ட்டுக்குச் சென்று விட்டு வரும் வழியில் கம்பங்கூழ் குடித்தேன். புளிப்பு உடலெங்கும் புல்லெரிக்க வைத்தது. ஆனால் நண்பரோ அசராமல் அனைத்தையும் குடித்தார். அப்படியே திரும்பக் கொடுத்து விட்டேன். அந்த அனுபவத்தினால் கம்பங்கூழ் என்றால் காத தூரம் ஓடிப் போ என்கிறது மனசு.

நுங்குகள் ஐந்து ரூபாயாம். வெட்டித்தருகின்றார்கள். பதனீ குடித்துப் பார்க்கலாம் என்று கொஞ்சம் வாங்கி வாயில் வைத்தால் சாக்கரீன் சுவை மிளிர துப்பி விட்டேன். ஒரு முடை நாற்றம் வேறு வந்தது. அதில் நுங்கைச் சீவிப் போட்டு மட்டை மட்டையாகக் குடிக்கின்றார்கள். ஆனால் எனக்குத்தான் ஆகவில்லை. நுங்கை வைத்து இப்படி ஒரு பிசினஸ் செய்யலாம் என்பதே ஆச்சரியம் தான். ஆனால் பாருங்கள் வருடம் முழுமைக்கும் நுங்கு கிடைக்கிறது. அதில் தான் ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது. அது என்னவென்று புரியமாட்டேன் என்கிறது.  ஒரு தடவை வீட்டுக்கு வந்த உறவினர் விழா நாட்களில் கோவையில் சாணி விற்றே கோடீஸ்வரனாகலாம் போலவே என்று சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டு வாசலில் தெளிக்க சாணி வாங்க மனையாள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
(திருமணத்திற்கு முன் இப்படி இருந்த நான்)

வீட்டுக்கு வந்து அயர்ந்து போய் படுத்து விட்டேன். வெயிலில் கருவாடு போலக் காய்வது என்பது சாதாரணமா? பசங்க டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதியம் மூன்று மணி போல நீயா? நானாவில் மறதி கணவர்கள் மனைவிகள் என்றொரு தலைப்பில் கணவர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள் பெண்கள். இதெல்லாம் சகஜம் தானே? அதைப் பார்த்து மனையாள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். 

தன் குடும்ப விஷயத்தை, அதுவும் தன் கணவனின் ரகசியத்தை வெளியில் கசிய விடலாமா என்றெல்லாம் தெரியாமல் பிளந்து கட்டிக் கொண்டிருந்தனர். மறதி என்பது மனிதனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்பதில் யாருக்கேனும் எள்ளளவாவது சந்தேகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை உடனடியாக மறந்து விடுங்கள். சந்தேகம் இருக்கவே கூடாது. நல்லது நடந்தால் நினைக்கும் மனது கெடுதல் நினைந்தால் மறக்கத்தான் நினைக்கும் அல்லவா? அதைத் தவறு என்கிறார்கள் இல்லத்தரசிகள். இருக்கட்டும். 

பெண்கள் எப்போதுமே குறை பேசி பழக்கமானவர்கள். நிறையை மட்டும் பார்க்காமல் குறையை மட்டுமே குத்திக் காட்டிக் கொண்டிருப்பார்கள். குறை சொன்னால் தான் நிவர்த்திச் செய்து கொள்ளலாம். ஆகையால் அதுவும் தவறில்லை. சரி கணவனிடம் தானே பேசுகின்றார்கள். தங்கள் தகப்பன், தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளை விட்டு விட்டு வந்திருக்கின்றார்கள். பேசினால் தப்பில்லை. அடித்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். குடும்பத்தின் ஆணி வேர் அல்லவா பெண்கள்? இப்படிச் சரண்டர் ஆகி விட்டாயே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எவன் எவனுக்கோ அடிபணிந்து வேலை செய்யும் போது மனைவியிடம் சரண்டர் ஆவது ஒன்றும் தப்பில்லை என்கிறேன். சரிதானே சரண்டரானவர்களே? அடக்கம் தான் அமைதிக்கு வழி! (தத்துவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது)

காதலின் மோக லாகிரியில் சிக்கி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண், காதலின் உச்சத்தை நுகர்ந்து விட வாழ்க்கையெனும் மோக வளைக்குள் நுழைகின்றாள். வாழ்க்கையின் வாசலில் வசந்தம் தன் அழகான வரவேற்பைத்தரும். அந்த வரவேற்பில் மகிழ்ந்து வாழ்க்கை எனும் வீட்டுக்குள் நுழைந்த பெண், நாளடைவில் காதலின் மோக லாகிரியிலிருந்து விலகி, இயற்கையின் மகத்துவமான தாய்மை எனும் அவதாரமெடுக்கின்றாள். 

கண்ணதாசன் கூட சொல்வார்,”இறைவன் ஒருவனின் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் தாயோ ஒருவனின் ஆத்மாவுக்கும், உடலுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றாள்”. இதை விட ஒரு பெண்ணின் மகத்துவத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

தாய்மையின் உயர்வைக் காட்டும் ஒரு கதையைக் கூட அர்த்தமுள்ள இந்து மதத்தில் எழுதி இருப்பார். கதையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆகவே மனையாளிடம் மதி மயங்கிக் கிடப்பது (இதைத்தான் மறதி என்கிறார்கள்) ஒன்றும் தவறில்லை. 

மனையாளுடன் சேர்ந்து நானும் நீயா நானாவைப் பார்க்க ஆரம்பித்தேன். அதிலொரு பெண்மணி தன் கணவன் தங்கள் கல்யாண நாளைக் கூட நினைவில் வைத்திருப்பதில்லை எனவும், நான் முதன் முதலாக இந்த வீட்டுக்கு வந்தது அந்தத் தேதியில்லையா? அதைக் கூட அவர் மறந்து ஒரு வாழ்த்துக்கூட சொல்வதில்லை என்று வேதனையாகச் சொன்னார். எனக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை. மறக்கவா முடியும் அந்தத் தேதியை?அருகில் அமர்ந்திருந்த மகள், ”அப்பா! உங்கள் கல்யாண தேதி என்னப்பா?” என்று கேட்க, நானும் உடனே வெகு சந்தோஷமாக, ”செப்டம்பர் 31” என்றேன்.

(திருமணத்திற்குப் பிறகு இப்படி ஆகி விட்டேன். கவனிக்க மீசை காணாமல் போய் விட்டது)

மகள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மனைவியோ டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் எழுந்து கடு கடுவென அடுப்பங்கரைக்குள் சென்றாள். ”இந்தக் கோபிநாத்துக்கு ஏன் தான் இந்த வேலையோ தெரியவில்லை? நாசமாப் போறவன் ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமாக, எரிச்சலைக் கிளப்பி விடுகின்றான்” என்று அவரை ஒருமையில் திட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவளுக்கு என்ன ஆனது என்று இதுவரைக்கும் தெரியவில்லை.

நான் தேதி மட்டும் தான் சொன்னேன். அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் கொள்கிறாள் இவள்? ஆமாம் செப்டம்பர் 31 தேதி இருக்கிறது தானே நண்பர்களே? 

Thursday, April 27, 2017

கொளுத்தும் வெயில் குளிரும் நினைவுகள்

கோவையில் இப்படி வெயில் அடிக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் வண்டியில் சென்ற மனையாளின் தோல் சிவந்து வெந்தது போல ஆகி விட்டது. கோவையில் கோடையில் வெயிலாக இருந்தாலும் சுடாது. ஆனால் இப்போது சுட்டெரிக்கிறது. நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆகாரம் குடிக்க வேண்டியதாகி விட்டது. சர்பத் கடைகளைக் கண்டால் மனசு அங்கே இழுத்துச் சென்று விடுகிறது. கவுண்டம்பாளையத்தில் திவ்யா சர்பத் என்றொரு கடை இருக்கிறது. நாற்பது வருடமாக சர்பத் விற்பனை செய்கிறாராம் அந்தக் கடைக்காரர். பதமாக வெயிலுக்கு இதமாக அதிகக் குளிர்ச்சியும் இல்லாமல் சர்பத் போட்டுத் தருகிறார். அந்தப் பக்கம் சென்றால் அவரைடம் எலுமிச்சை சர்பத் குடிக்காமால் நகர்வதில்லை. வெயில் என்றால் இதுதான் வெயில் என்பது போல அனத்து அனத்து என்று அனத்துகிறது.

வீட்டின் முன்னே இருக்கும் வேப்பமரம் கூட ஏனோ ஊடல் கொண்ட காதலி போல உஷ்ணக்காற்றினைத் தள்ளுகிறது. போதாதற்கு வேப்பம்பூவைக் கொட்டுகிறது. தமிழக அரசியலில் நொடிக்கொரு திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. செய்தி டிவிக்களுக்குத் தீனி. நான் சுத்தமாக செய்திச் சானல்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விவாதம் நடந்தால் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. செய்தித் தாளில் அரசியல் செய்திகள் என்றால் நகர்ந்து விடுவேன். துரோகிகளும், சுய நலக் கொடூரர்களும் நிரம்பிய அரசியல் செய்திகளைப் படிப்பதினால் என்ன பிரயோஜனம்? அதுமட்டுமில்லை சினிமா செய்திகளை மொத்தமாக படிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இதுவரை சினிமாச் செய்திகளைப் படித்ததினால் என்ன பலன் என்று யோசித்தேன். நிறுத்தி விட்டேன். காசும் நேரமும் கரியானது மட்டுமே பலன்.









(சிறு வயதில் நான் குளித்து மகிழ்ந்த ஊருக்கே உயிர் கொடுத்து வரும் ஆவணம் கிராமத்தில் இருக்கும் குளங்களும் அதன் பெயர்களும்)

கோடையில் பிச்ச நரிக்குளம் மட்டும் சற்றே தண்ணீர் சுண்டி விடும். ஆவணம் மாரியம்மன் கோவிலின் வாசல் வழியாகத் தெற்கே சென்றால் நான்கு புறமும் கொல்லைகள் சூழந்த, தென்மேற்குப் பகுதியில் காடுகள் நிரம்பிய குளம் தான் அது. குளத்துத் தண்ணீர் சற்றே சந்தனக்கலரில் மாறி இருக்கும். இருந்தாலும் அந்தக் குளத்தில் குளிப்பது சுகம். நடு மத்தியான நேரத்தில் செல்வதுண்டு. தண்ணீரின் மேல் பகுதியில் சூடாக இருக்கும். ஆனால் உள்ளே சிலீரென்று இருக்கும். இரண்டு மணி நேரம் தண்ணீருக்குள் ஆட்டம் போட்டு, நீச்சல் அடித்து கண்கள் ரத்தக் குழம்பாக சிவந்த உடன் தான் வெளியில் வருவதுண்டு.

நானும், வேலைக்காரன் போசும் ஆவணத்தான் குளத்துக்கு கிழக்கே இருக்கும் வயலில் கோடைப்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாருடன் செல்வோம். அது மண்ணெண்ணெய் மோட்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி ஸ்டார்ட் செய்து பிறகு மெதுவாக மண்ணெண்ணெய்க்கு மாற்ற வேண்டும். ஹோசில் தண்ணீர் ஊற்றி நிரப்பிய பிறகு ஸ்டார்ட் செய்தால் குளத்திலிருந்து தண்ணீரைப் பம்ப் செய்து மடையில் கொட்டும். அந்த மடைக்குள் உட்கார்ந்து கொண்டு தலையைப் பம்ப் தண்ணீரில் காட்டி குளிப்பேன். ஜாலியாக இருக்கும். மசங்கும் நேரத்தில் தான் குளத்துக்குச் செல்வதுண்டு. கொக்குகள் ஒற்றைக்காலில் தவமிருந்து கொண்டிருக்கும். மீன்கள் மாட்டினால் கொத்திக் கொண்டு மரங்கள் அடர்ந்து நிரம்பிய ஆறும் குளமும் இணைந்த கரைகளில் இருக்கும் மரங்களில் சென்று அமர்ந்து மீனை ருசித்துக் கொண்டிருக்கும்.

தண்ணீர் இறைக்க குளத்துக்குச் செல்வதென்றால் இளம் தேங்காய் ஒன்றும், வெல்லக்கட்டி, பொட்டுக்கடலை கொஞ்சமும் எடுத்துக் கொண்டு சென்று விடுவோம். தேங்காயைப் பொத்து அதற்குள் பொட்டுக்கடலை மற்றும் வெல்லக்கட்டி இரண்டையும் சேர்த்து, தேங்காய் தண்ணீரோடு சேர்த்து மூடி வைத்துக் கொள்வோம். குளத்தங்கரையில் கிடக்கும் காய்ந்து போன விறகுளைக் கொண்டு வந்து போட்டு எரியூட்டி அதில் இந்தத் தேங்காயைச் சுட்டு எடுத்து ஆற வைத்து ஓட்டினை எடுத்து விட்டு சாப்பிட்டால் அள்ளும். அதன் சுவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மாலை மசங்கும் வேளையில் நன்றாக குளித்து விட்டு, இலேசாகக் குளத்து நீர் குளிர ஆரம்பிக்கும் சமயத்தில் சுட்ட தேங்காயைச் மாட்டு வண்டியின் நுகத்தடியில் அமர்ந்து கொண்டு சிதறும் தண்ணீரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ருசிப்பது என்பது இப்போது நினைத்தால் கூட நடக்கும் காரியமா? அவனவன் லட்சங்களைக் கொட்டி கடற்கரை, இயற்கை கொஞ்சும் இடங்களுக்குச் சென்று வெறுமையாகத் திரும்புகின்றனர். வாழ்க்கையோடு இயைந்து இருக்கும் இது போன்ற மகிழ்ச்சி தரும் உணர்வுகளைக் காசால் பெற்று விட முடியுமா? 

உண்மையில் வயலுக்கு வேலை செய்யத்தான் செல்கிறோம். ஆனால் அந்த வேலையிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது அல்லவா? அது போல எந்த வேலையில் கிடைக்கிறது சொல்லுங்கள்? கணிணியில் உட்கார்ந்தால் உடலும் மனசும் அலுத்துப் போகும். இப்போதைய உடல் உழைப்புகள் எதுவும் விவசாய வேலை தரும் மகிழ்ச்சியைப் போல மகிழ்ச்சியைத் தந்து விட முடியுமா? தோட்ட வேலைக்குச் சென்று திரும்பும் போது கையில் தேங்காய், மாங்காய், கத்தரிக்காய்களைக் கொண்டு வந்து சமைத்து உண்ணும் வேலைக்காரியின் உணவுக்கு முன்னால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் உணவின் சுவை நிற்க முடியுமா?



கிர்லோஸ்கர் தண்ணீர் இறைக்கும் பம்பு செட்

கோடையில் வெயிலுக்கு இதமாக வடக்கித் தெரு சுப்பையாத் தேவரின் கொல்லையில் அருவி போலக் கொட்டிக் கொண்டிருக்கும் பம்பு செட்டிற்கு குளிக்கச் செல்வதுண்டு. அப்போது வழியில் என் நண்பன் பனை மரத்துக் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடத்தில் சென்று ஒரு லிட்டர் கள்ளைக் குடித்து விட்டு, பம்பு செட்டில் ஆட்டம் போட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தால் சூடான சோற்றுடன் கொதிக்கும் மீன் குழம்பினை ஊற்றிக் கொண்டு கவளம் கவளமாக சாப்பிட்ட நாட்கள் இனி வரத்தான் கூடுமா? நிச்சயம் வராது. 

நான்கு சுவற்றுக்குள் கதவைச் சாத்திக் கொண்டு தலையில் மோண்டு ஊத்தும் தண்ணீர் உடலைத் தழுவும் போது ஆற்றுக்குள் குளிக்கும் போது இருந்த சுகம் இல்லை என மனசு முழுக்க ஏக்கம் பரவுகிறது. காவிரி ஆறும், மழையும் வறண்டு போய் வெம்மையானாலும் அந்த இளம் பிராயத்து நினைவுகள் மட்டும் மனதூடே ஊடுறுவும் போது கொஞ்சூண்டு சிலிர்ப்பாக இருக்கத்தான் செய்கிறது.

Thursday, April 20, 2017

கிட்னியில் கல் நீக்க மருந்து

எனது நண்பரின் மகன் திடீர் வயிற்று வலிக்காக மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்த போது ஸ்கேனில் கிட்னியில் கல் இருப்பதாகத் தெரிந்திருக்கிறது. ஆபரேசன் அது இதுவென்று பத்தாயிரத்துக்கும் மேல் செலவாகும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். கிட்னி கல்லை ஆபரேஷன் செய்து எடுத்தாலும் மீண்டும் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்றும் சொல்ல பையனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

வீட்டுக்கு வந்து தந்தையிடம் சொல்லி இருக்கின்றான். அட லூசுப்பயலே, இதுதானா பிரச்சினை, கவலையை விடு, சரி செய்து விடலாம் என்றுச் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு அவருக்குத் தெரிந்த ஒரு நாட்டு மருந்து கொடுப்பவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

600 ரூபாய் விலையாம். அடுத்த இரண்டொரு நாட்களில் கிட்னியிலிருந்த கல் உடைந்து சிறு நீருடன் வெளியேறி இருக்கிறது. பையன் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறான். பத்து எம்.எம். கல் இருந்தாலும் உடைந்து சிறு நீரோடு வெளியேறி விடுமாம். 

சாதாரண கிராமத்தில் இருந்து கொண்டு அந்த நாட்டு மருந்தினை பிரச்சினை இருப்பவருக்கு உடனுக்குடன் செய்து கொடுக்கின்றார்களாம். 

உங்களுக்குத் தெரிந்தவருக்கு கிட்னியில் கல் இருக்கிறது என்றால் என்னை அழைக்கச் சொல்லவும். மருந்து வாங்கித் தர ஏற்பாடு செய்து தருகிறேன். வெளியூரில் இருப்போர்கள் அவசியம் கோவை வர வேண்டும். பார்சலில் மருந்து வாங்கி அனுப்ப இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் நேரில் வர வேண்டுமென்பது கட்டாயம்.

தேவைப்படுபவர்கள் அழைக்கலாம். காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை மட்டுமே அழைப்புகளை எடுக்க இயலும் என்பதைக் கவனத்தில் கொள்க.

Wednesday, April 19, 2017

ரூடோஸ்ஸின் வருகை

எனக்கு நாயென்றால் அப்படி ஒன்றும் பிடிக்காத விஷயமல்ல. அதுவும் ஒரு உயிர் தானே என்றளவில் கொஞ்சம் பிரியம் இருக்கின்றது. எனக்கொரு தோழி நெட்டில் அறிமுகமானவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார். நான் சிரமப்பட்ட காலத்தில் உடனுக்குடன் எனக்கு பணம் அனுப்பி வைத்தார். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், கடைகள் என நல்ல வசதியான பெண்மணி. அங்கிருந்து வருடம் ஒரு தடவையாவது பரிசுகள் வரும். நான் எதுவும் அனுப்புவதில்லை. போன் கூட அவர் தான் செய்வார். இணையத்தில் பேசிக் கொள்வதுண்டு. அவர் ஊரில் நாய்க்கறி பேஃமசாம். அவரிடம் கேட்டேன். அருமையாக இருக்கும் என்றார். அன்றிலிருந்து அவரிடம் பேசுகின்ற போதெல்லாம் செத்துப் போன நாய்கள் அவரின் பின்னே அவரைத் துரத்துவது போல நினைவலைகள் வந்து விடும். விவசாயமெல்லாம் அழிந்து போன பிறகு நாய்க்கறியைத் தின்னாமல் மனுசனையா தின்ன முடியும். எனக்கென்னவோ இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளில் நாய்க்கறி பிரபலமாகி விடும்  போல. நம்ம நாடு போகிற போக்கினைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. 

பிலிப்பைன்ஸுக்கு வா என்று பத்து ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தோடு செல்ல வேண்டும். இப்ப ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

நேற்றைக்கு முதல் நாள். நானும் பையனும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண், அங்கிள் இங்கே மருத்துவமனை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். சரவணம்பட்டி காளப்பட்டி சாலையில் ஒரு மருத்துவமனையைப் பார்த்த நினைவில் இந்தப் பக்கம் என்று கைகாட்டி விட்டேன். கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினால் அந்தப் பெண்கள் தெரிந்தார்கள். அதிலொரு பெண் நடக்கவே முடியாமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். சாலையைக் கடந்து வந்தார்கள். மருத்துவமனையில் டாக்டர் இல்லை. சோர்ந்து போய் விட்டார்கள். அந்தப் பெண்ணைத் தொட்டுப் பார்க்க உடல் கொதித்துக் கொண்டிருந்தது. சரியான காய்ச்சல். வெயில் வேறு அனத்திக் கொண்டிருந்தது. பையனை இன்னொரு பெண்ணுடன் இறக்கி விட்டு விட்டு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இரண்டொரு மருத்துவமனைக்குச் சென்றால் ஒருவரும் இல்லை. ஒரு வழியாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைக் கண்டுபிடித்து அங்கு கொண்டு போய் விட்டேன். மருத்துவர் இருந்தார். மீண்டும் என் பையனும் இன்னொரு பெண்ணும் இருக்கும் இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருப்பினேன். அப்போது அந்தப் பெண், ”ரித்திக், வெயிலில் நிற்காதே, நிழலில் நில்” என்று இரண்டு மூன்று தடவை சொன்னது. எனக்குச் சரியான எரிச்சல். நான் வெயிலில் இவள் தோழியை அழைத்துக் கொண்டு நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பெண்ணுக்கு யார் மீது அக்கரை என்று பார் என்று கடுப்பானது. காலம் மாறுகிறது என்பது பளிச் சென்று புரிந்தது. அப்பெண்ணை மருத்துவமனையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன். நன்றி சார் என்றது அப்பெண். நல்லா இருங்கம்மா என்றுச் சொல்லி விட்டு பையனை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன். நீ பாட்டுக்கு இப்படி உதவி செய்யக் கிளம்பி விடாதே ரித்திக் என்று அவனிடம் சொல்லி வைத்தேன். எதுக்கும் இருக்கட்டும். சரி அடுத்த கதைக்கு வந்து விடுகிறேன்.

சிறுவயதில் செவலை நாயொன்றும், கருப்பு நாயொன்றும் வீட்டில் இருந்தது. செவலை நாய் நல்ல நாய். வீட்டை விட்டு எங்கும் செல்லாது. ஆனால் கருப்பு நாயோ எமகாதக நாய். ஊர் சுற்றி. கையில் இருந்தாலும் கடித்து தின்று விடும். அதை நான் அடித்து துரத்தி விடுவேன். அப்போதெல்லாம் நாய்க்குப் பெயர் வைப்பதெல்லாம் இல்லை. நாயை நாயென்றுதான் அழைப்போம். ஆனால் இப்போதோ வேறு நிலை.  நாய்க்கு வைக்கும் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அது நாயா இல்லை ஆளா என்றொரு குழப்பம் வந்து விடும் எனக்கு. 

இன்றைக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. ரிப்ளை செய்யும் போது அது ஆணா பெண்ணா என்று  குழப்பம் ஏற்பட எதுக்கு வம்பு பேசாமல் டியர் என்று போட்டு விடுவோம் என்று நினைத்து டியர் <அந்த பெயர் போட்டு> மெயில் அனுப்பி விட்டேன். அது ஒரு பெண்ணாக இருந்து நான் ஆணல்ல என்று ஆரம்பித்து அதுவே தொடர்கதையாகி, ஏற்கனவே திருமணமானவன். அதுவும் நாற்பதுகளில் இருப்பதால் நாய் குணம் வேறு வந்து விடும் என்பார்கள். எக்குத்தப்பாக ஆகிவிட்டால் நன்றாகவா இருக்கும்? சரி விஷயத்துக்கு வந்து விடலாம்.

அந்தச் செவலை நாய் ஒரு நாள் வாய் கிழிந்து வந்தது. இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கியது. எதித்த வீட்டுப் பெண்மணி வெங்காய வெடியை கருவாட்டுக்குள் வைத்துச் சுருட்டிப் போட்டு விட்டார். அதை எடுத்துக் கடித்திருக்கிறது. வெங்காய வெடி வெடித்து இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கி விட்டது. இடது பக்க பற்கள் எல்லாம் வெளியில் தெரிந்தது. எனக்குப் பயமாகவும், பாவமாகவும் இருந்தது. சாப்பாடு வைத்தேன். சாப்பிட்டது ஆனால் சோறு இடது பக்கமாக வெளியில் வந்து விட்டது. கொஞ்ச நாளில் அது வாசலில் படுத்திருந்தது. பட்டினியாகவே கிடந்து இறந்து போனது. வீட்டின் பின்புறம் குழி வெட்டி புதைத்து விட்டோம். 

கருப்பு நாயை பஞ்சாயத்திலிருந்து நாய் பிடிக்க வந்தவன் பிடித்துக் கொண்டு போய் விட்டான் போலும். நீண்ட நாட்கள் அதைக் காணவில்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் சும்மாவா? வீட்டுக்கே ஆகாது என்பார்கள். நாயைச் சொல்லவா வேண்டும்? அதுகளுக்கு அப்போது பீட்ச்சா அடச்சே பீட்டா, ப்ளூகிராஸ் மாதிரியெல்லாம் ஆட்கள் இல்லை. இப்போதல்லவா இருக்கின்றார்கள். அவனவன் ஆட்களை ஆடுகள் கழுத்தறுப்பது போல அறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதைக் கேட்க ஆட்கள் இல்லை. நாயை அடித்தாலோ அல்லது மாட்டை அடித்தாலோ கேஸ் போடுகின்றார்கள். சிறு வயதில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது சண்டித்தனம் செய்யும் மாட்டினை சாட்டையால் விளாசி இருக்கிறேன். அப்போது இந்த பீட்டாக்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? மாட்டுக்குப் பதிலாக இவர்கள் நுகத்தடியில் கழுத்தை கொண்டு வந்து நீட்டி வண்டியை இழுப்பார்களா? என்று தெரியவில்லை. என்ன நியாயமோ என்ன சட்டமோ? ஒன்னும் சரியில்லை.

கிரடிட் கார்டுகள், பண அட்டைகள் வந்தாலும் வந்தன. மனிதன் இப்போது பைத்தியம் பிடிக்காத குறையாகத்தான் திரிகின்றான். ஏசியில் ஐந்து நிமிடம் நின்று ஏடிஎம்மில் பணம் எடுப்பது அப்போதெல்லாம் கவுரவம் நிரம்பியது. ஆனால் இப்போதோ ஏடிஎம் என்றாலே அலறல் தான் கேட்கிறது. டெக்னாலஜி வந்தாலும் வந்தது பிடித்தது சனியன். கருப்புப் பணத்தை இனி கண்ணால் கூட பார்க்க முடியாது போலும். ஆனால் அரசியல்வாதிகள் காட்டிலோ மழையோ மழைதான். ஒரு கார் வாங்கலாம் என்றால் நாய்க்கு நாக்குத் தள்ளிய மாதிரி நமக்கு நாக்குத் தொங்கி விடுகிறது. கவுன்சிலர் ஆனவுடனே ஸ்கார்ப்பியோவில் வருகின்றார்கள். என்ன தான் தில்லுமுல்லு செய்வார்களோ தெரியவில்லை. அடுத்தவன் பணத்தில் வாழ்வதுக்கும் ஒரு மச்சம் வேண்டும். மச்சம் மட்டும் இருந்து என்ன ஆகப் போகிறது? புத்திசாலித்தனமும் வேண்டும். மோடி சரியான அரசியல்வாதியாக இருக்கிறார். கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்றார். நாமெல்லாம் நினைத்தோம். அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்டு வந்து விடுவார் என. ஆனால் பாருங்கள் என்ன நடந்தது என்று. இது தான் பிரதமர் மோடி. வெகு புத்திசாலியானவர். திறமையானவர். யாரை எங்கே எப்படி என்ன என்பதெல்லாம் அவரிடம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இது வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் ஆகச் சிறந்தவர் மோடி அவர்கள் தான் என்கிறேன். இப்படி ஒரு ட்விஸ்டை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்களா? நிச்சயமாக இப்படியெல்லாம் நடக்குமா என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். அதுதான் பிளான். அதுதான் திட்டம்.

சரி திரும்பவும் எங்கேயோ போய் விட்டேன். இந்த மூளை இருக்கிறதே அது படுத்தும் பாடு இருக்கிறதே? பெரிய ரோதனை இதோடு. உங்களுக்கும் போர் அடித்திருக்கும் அல்லவா?

இரண்டு நாட்களுக்கு முன்பு ரித்திக் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் போது. அவன் கூடவே குட்டியாக, செவலை நாய்க்குட்டி ஒன்று அவனுடன் வந்து விட்டது. ரித்திக்குக்கு நாய், பூனை என்றால் பிரியம். ஆனால் மனையாளுக்கோ ஆகவே ஆகாது. அப்பா இந்த நாயை வளர்க்கலாமா? என்று கேட்க இரண்டு மாதம் வீட்டில் சும்மாதானே இருக்கின்றார்கள், பொழுது போக்காக இருக்கட்டும் என்றுச் சொல்லி சரி என்றுச் சொல்லி விட்டேன்.

போன மாதம் கருகருவென நாய்க்குட்டி ஒன்றினை வளர்க்கலாம் என்று நினைத்து கவுண்டரிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரும் திரிந்தலைந்து 22 நகங்களுடன் கருப்பு நாய்க்குட்டி ஒன்றினைப் பிடித்து வைத்திருந்தார். எனது நண்பர் நாயை ஓசியில் வாங்கக் கூடாது. யாருக்கும் கொடுக்கவும் கூடாது என்றுச் சொல்லி விட கவுண்டரிடம் வேண்டாம் என்றுச் சொல்லி விட்டேன். அத்தோடு நாய் வளர்க்கும் ஆசை போய் விட்டது. ஆனால் அதுவே வீடு தேடி வருகிறது.

ரூடோஸ் தற்போது

ரூடோஸ் எதிர்காலத்தில்

லேப்ராடர் வகை நாய்க்குட்டி அது. எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை? யார் வளர்த்ததோ தெரியவில்லை? அதற்குச் சாப்பாடு போட்டு, குளிப்பாட்டி, கழுத்திலொரு பட்டியைக் கட்டி, அத்துடன் கயிற்றைக் கட்டி விட்டான் பையன். காலையில் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டி, நாய்க்கடைக்குச் சென்று கழுத்துப் பட்டி, கயிறு வாங்கி வந்து மாட்டி காலையிலும் மாலையில் ஜாக்கிங்க் சென்று கொண்டிருக்கின்றார்கள் ரித்தியும், அம்முவும். இப்போது அது நன்றாக இருக்கிறது. இன்றைக்கு காலையில் பேப்பரைக் கடித்துக் குதறி விட்டது. ஒரு அதட்டுப் போட்டேன். அவ்வளவுதான் அருகிலேயே வரமாட்டேன் என்றது. ஒரு வழியாக சமாதானம் செய்து அதன் பயத்தைப் போக்க வேண்டியதாகி விட்டது.

இதற்கொரு பெயர் வையுங்கள் சாமி என்று கேட்டேன். 

”ரூடோஸ்” என்றார்.  எங்கிருந்தோ வந்தது ரூடோஸ். இப்போது என்னுடன் இருக்கிறது. காலையில் எழுந்ததும் அதனுடன் கொஞ்ச நேரம் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாலையில் அதனுடன் விளையாடுவதும் சந்தோஷம் தருகிறது. ஒரு குழந்தையைப் போல அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

பக்கத்து வீட்டில் சைபீரியன் ஹஸ்கி என்ற பெய்லி (பெயர்) வளர்கிறது. மாலையில் வாக்கிங் செல்லும் போது பெய்லியைப் பார்த்து கர்ண கடூரமாகக் குலைக்கிறது ரூடோஸ். சரியான காமெடி. பயமில்லாமல் குலைத்து விட்டு ஓடோடி வந்து அருகில் அமர்ந்து கொள்கிறது.

பசங்க இருவரும் டிவி பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பு: எல்லா பத்திகளிலும் நாய் வந்திருப்பதைக் கவனிக்கவும். உன் வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறாய் என்பதற்காக ஊர் கதையெல்லாமா அளப்பது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்குத்தான் இந்தக் குறிப்பு.

Thursday, April 6, 2017

அம்முவுக்குச் சொன்ன அப்பத்தாவின் வாழ்க்கை

பத்து வீடு தள்ளி இருக்கும் பள்ளி வாசலிலிருந்து வரும் பாங்கழைப்புக் கேட்டு நான்கரை மணிக்கு எழுந்து குடத்தடிக்குச் சென்று குளிர்ந்த நீரை எடுத்து முகம் கழுவி விட்டு, அடுப்புச் சாம்பல் எடுத்து பல் துலக்கி, வாய் கொப்பளித்து விட்டு, கட்டுத்தறிக்குச் சென்று சவுக்கில் பின்னப்பட்ட கூடையில் சாணியை வழித்து எடுத்து குப்பைக்கிடங்கில் கொட்டி விட்டு, அதில் கொஞ்சம் சாணியை எடுத்துக் கொண்டு வந்து வாளியில் வைத்து தண்ணீர் ஊற்றி கையால் தெளிக்கும் அளவுக்குக் கரைத்து வாசலுக்குக் கொண்டு வந்து பதவிசாக தெளித்து விட்டு, வாளியை ஓரமாக வைத்து விட்டு, ஒரு ஏக்கர் நிலப்பரப்பு முழுவதும் கொட்டிக் கிடக்கும் இலை தழைகளையும் குப்பைகளையும் பெருக்கிக் குப்பைக் கிடங்கில் சேர்த்து விட்டு நிமிர்ந்து கட்டுத்தறிக்குச் செல்லும்.

கட்டுத்தறியில் கட்டிக் கிடக்கும் மாடுகளுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை உருவி எடுத்து வந்து தீனி போட்டு விட்டு, வீட்டுக்குள் நுழைந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டுபோய் குடத்தடியில் போட்டு விட்டு அதில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து விட்டு, அடுப்படிக்கு வந்து அடுப்புச் சாம்பலை ஒரு தட்டில் வறண்டி எடுத்து வைத்து விட்டு சோத்துப் பானையில் முக்கால் திட்டம் தண்ணீர் எடுத்து அடுப்பின் மீது வைத்து விறகை எடுத்து அடுப்பினுள் வைத்து அதனுள்ளே பதவிசாக தீக்குச்சி உரசி விறகைப் பற்ற வைத்து விட்டு குடத்தடிக்கு வரும்.

சாம்பலில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கையில் தேங்காய் நாரை எடுத்துச் சேர்த்து வைத்துக் கொண்டு சாம்பலைத் தொட்டுக்கொண்டு அத்தனை பாத்திரங்களையும் விருட் விருட் என்று துலக்கி தண்ணீர் விட்டு அலசி சுத்தமாகக் கழுவி எடுத்து அடுப்பங்கரைக்குள் நுழைந்தால் அடுப்பில் இருந்த உலைப்பானையில் தண்ணீர் தளதளவென்று கொதித்துக் கொண்டிருக்கும்.

இரண்டு படி அரிசி எடுத்து தண்ணீர் ஊற்றி கழுவி, கழனித் தண்ணியை மாட்டுப்பொக்கையில் விட்டு களைந்தெடுத்த அரிசியைக் கொண்டு வந்து உலையில் போட்டு விட்டு, பக்கத்து அடுப்பினை மூட்டி அதில் முதல் நாள் மீந்திருந்த குழம்புகளைச் சுட வைத்து இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் காய்கறிகளை எடுத்து நறுக்கி பொறியலோ அல்லது கூட்டோ செய்து விட்டு, வடகம், மிளகாய் வத்தல்களை பொறித்து எடுத்து வைத்து விட்டு, அதற்குள் வெந்த சோறுப்பதம் பார்த்து கஞ்சியை வடித்து விட்டு, ஈரத்துணியில் சோற்றுப்பானையைச் சுற்றிலும் துடைத்து பிருமனையின் மீது வைத்து விட்டு, வீடு எல்லாம் கூட்டிப் பெருக்கி குப்பையை அள்ளி குப்பைக்கிடங்கில் சேர்த்து விட்டு நிமிரும்.

கதறும் மாட்டின் கன்றினை அவிழ்த்து விட்டு, மடியில் பால் சுரந்ததும் கன்றினைக் கட்டிப் போட்டு கொஞ்சம் பாலைக் கரந்து கொண்டு வந்து அடுப்பில் வைத்து சுட வைத்து விட்டு, மோர்ப்பானையை எடுத்து மத்தை வைத்து கரகரவென கடைந்து திரளும் வெண்ணையை வழித்தெடுத்து, அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மகன் தங்கத்தின் வாயில் வெண்ணெய் உருண்டையில் கொஞ்சம் போட்டு விட்டு மோரை எடுத்து பாத்திரத்தில் வைத்து விட்டு பெரிய தவளைப் பானையை எடுத்து அதில் சோற்றினைப் போட்டு மோர் ஊற்றி உப்புச் சேர்த்து வயக்காட்டில் வேலை செய்பவர்களுக்கு கஞ்சியை தயார் செய்து, தொட்டுக்கொள்ள வெந்தய மாங்காய் ஊறுகாய், அடமாங்காய், மிளகாய் வத்தல், வடகம் எடுத்து வைத்து, பனை ஓலை நறுக்கை ஆள் கணக்குக்குத் தகுந்தாற் போல எடுத்து கட்டி வைத்து விட்டு, வீட்டு ஆட்களுக்கு சோறு போட்டு கொடுத்து விட்டு தலையில் சும்மாடு வைத்து தவளைப் பானையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இடுப்பில் கூடையில் சைடு டிஷ் வகையறாக்களுடன் காலில் செருப்பு கூட இல்லாமல் ஐந்து கிலோ மீட்டர் தூரமிருக்கும் வயலுக்குச் செல்லும்.

வயலில் இருந்து திரும்பி வரும் போது கையோடு காய்கறிகளோ அல்லது மீனோ அல்லது நண்டோ இருக்கும். மீன் இருந்தால் அதை சிலாம்பு நீக்கி தலையை அரிந்து, சட்டியில் போட்டு உப்புச் சேர்த்து உரசி, தண்ணீர் விட்டு அலசி, வெள்ளிக்கம்பி போல மின்னும் மீனுடன் அடுப்பங்கரைக்குள் நுழைந்து கைப்பக்குவத்தின் மகிமையில் வீடே மணக்கும் மீன் குழம்போ அல்லது காய்கறிக் குழம்போ தயார் செய்து வைக்கும்.

வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வேலைக்காரர்களுக்கு சோறு போட்டு மீன் குழம்பினை ஊற்றிக் கொடுக்க அவர்களும் வயறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு ’போய்ட்டு வாரேன், தேவச்சியாரே!’ என்றுச் சொல்லி விடை பெறுவர். 

பள்ளி சென்று வீட்டுக்கு வந்து ஆட்டம் போட்டு விட்டு கிணற்றடிக்குச் சென்று பொக்கையில் இருக்கும் தண்ணீரில் குளித்து விட்டு மாலை மயங்கும் நேரத்தில் வாசலில் உட்கார்ந்தால் மணக்கும் மீன் குழம்போடு சாப்பாடு கொண்டு வந்து வைத்துச் சாப்பிடச் சொல்லும். சாப்பிட்டு விட்டு பாடப் புத்தகத்தை விரித்து வைத்து படித்து விட்டு எட்டு எட்டரைக்கெல்லாம் தூங்கப் போய் விடுவேன்.

மறு நாள் காலையில் பாங்கழைக்கும் நேரத்தில் அருகில் அம்மா இல்லாததைக் கண்டு திரும்பிப் படுப்பேன்.

காய்ந்து போன இலைச்சருகுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் ’வரட், வரட்’ சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். விடிகாலைக் குளிர் தூக்கம் சுகமானது. தாலாட்டுவது போல அம்மா கூட்டிப் பெருக்கிக் கொண்டிருக்கும் சத்தம் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும்

Thursday, March 30, 2017

நிலம் (36) - பட்டா நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவது எப்படி

மரத்தை ரம்பம் போட்டு அறுத்தா வெட்டி போடலாம். இவரு மரத்தை எப்படி வெட்டுவது என்று சொல்லித்தரப் போகின்றாரா? என்று நீங்கள் நினைக்கலாம். இப்படியெல்லாம் ரூல்ஸ் இருக்கிறதா என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மெனக்கெட்டு எழுதுகிறேன். யாரோ ஒருவருக்காவது உபயோகப்பட்டால் அதை விட சந்தோஷம் வேறில்லை. இந்தத் தலைப்பின் வீரியத்தைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுத்தான் புரிய வரும்.

சென்னைப் பக்கம் ஒரு நகரத்தில் எனக்குத் தெரிந்த நல்ல வசதியானவர் புதியதாக காம்ப்ளக்ஸ் ஒன்றினை வாங்கினார். அதைச் சுத்தப்படுத்தி புதிய பெயிண்ட் அடிக்க காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார். பெயிண்டர் பெயிண்ட் அடிக்கும் போது காம்பளக்சின் சுவற்றில் சாலையோரமிருந்த மரத்திலிருந்து இரு சிறிய கிளைகள் முட்டிக் கொண்டிருந்திருக்கின்றன. பெயிண்டர் அருவாளால் இரண்டடிக்கு வெட்டிப் போட்டு விட்டு பெயிண்ட் அடித்திருக்கிறார். வெட்டிப்போட்ட கிளையை எதிரில் இருந்த ஹோட்டல்காரர் எடுத்து எரித்து விட்டார். பெயிண்ட் அடித்து முடித்து விட்டார்கள். அடுத்த இரண்டு நாட்களில் விஏஓவிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. தாசில்தார் எப்படி முன் அனுமதி பெறாமல் கிளையை வெட்டினீர்கள் என்றும் எஃப்.ஐ.ஆர் போடப் போகின்றோம் என்றுச் சொல்ல இவர் ஒன்றும் புரியாமல், நானெங்கே வெட்டினேன் என்று குழம்பி விசாரித்திருக்கிறார். மேற்படி சம்பவம் தெரிய வர இவருக்கு ஒன்றும் புரியவில்லை.

சாலையோர மரம் நம் கட்டிடத்தின் சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கிறது. அதை பெயிண்ட் அடிக்க இரண்டடிக்கு வெட்டினால் அது பிரச்சினையாகி உள்ளதே என்று விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். காம்ப்ளக்ஸின் எதிரில் இருந்த ஆட்டோகாரர்கள் அதை போட்டோ எடுத்து ஆர்.டி.ஓ வரை கம்ப்ளைண்ட் கொண்டு சென்றிருக்கின்றார்கள். தாசில்தான் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டார். இதற்கிடையில் அந்தப் பகுதி கவுன்சிலர் வேறு வீட்டுக்கு வந்து இவரை மிரட்டி இருக்கிறார். மரம் வெட்ட வேண்டுமெனில் என்னிடம் பர்மிஷன் கேட்டு அல்லவா வெட்டி இருக்க வேண்டும் என்று சொல்ல இவர் பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது என எம்மை அணுகினார். அதைத் தொடர்ந்து சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து சரி செய்து கொடுத்தோம்

இப்போது மரத்தினை வெட்டினால் என்ன ஆகும் என்று உங்களுக்குப் புரிந்திருக்குமே?

நிலம் உங்களுடையதாகவே இருக்கலாம். அதில் உள்ள மரமும் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அதை வெட்ட வேண்டுமெனில் கட்டிங்க் ஆர்டர் பெற வேண்டும் என்பது விதி. யாரும் புகார் கொடுக்காதவரைக்கும் பிரச்சினையில்லை. புகார் கொடுத்தால் வம்புதான் வரும். பூமியில் வசிக்க மட்டுமே நமக்கு உரிமை உள்ளது. வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டும், வரி கட்ட வேண்டும். பூமிக்கு கீழ் எது இருந்தாலும் அது அரசுக்கு மட்டுமே சொந்தம். புரிகிறதா உங்களுக்கு இப்போது? 

மனிதன் இந்தப் பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தான் உண்மை. பிச்சைக்காரன் கூட தனக்குக் கிடைக்கும் பிச்சைப் பணத்தைச் சேர்த்து வைத்தான் என்றாலும் அதற்கும் வருமான வரி கட்ட வேண்டும். இதுதான் நிதர்சனம். இதுதான் உண்மை.

உலகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கிறது. இதை உருவாக்கியவன் மனிதனே. எவரும் புதிதாக வந்து இப்படியான கட்டமைப்பினை உருவாக்கவில்லை. எல்லா பிரச்சினைக்கும் மனிதனே காரணம். அவனே கேள்வி, அவனே பதில்.

Monday, March 27, 2017

வாளை மீன் கருவாட்டு வறுவல்

என் சிறு வயதில் கவுச்சி சுத்தமாகச் சாப்பிட மாட்டேன். என்னவோ தெரியவில்லை இது நாள் வரையிலும் கோழிக்கறி சாப்பிட்டதே இல்லை. எனக்குக் கோழி வாசம் சுத்தமாகப் பிடிக்காது. மீன் குழம்பு, நண்டுக் குழம்பு வகையறாக்களைத் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டேன். கருவாடு என்றால் அய்யோ அம்மா என்று அலறி விடுவேன்.

கீரமங்கலத்துக்குப் படிக்கச் சென்ற பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட ஆரம்பித்தேன். எனக்குப் பிடித்த உணவு என்றால் முருங்கைக்கீரைக் குழம்பும், வாழைப்பூ பொறியலும், வெந்தய மாங்காய் ஊறுகாய், சுடுசோற்றில் மோர் சேர்த்தக் கஞ்சியும்தான். கல்லூரி சென்ற பிறகு மட்டன், மீன், நண்டு, இறால் என்று சாப்பிட ஆரம்பித்தேன். சாம்பாரைச் சாப்பிட்டு சாப்பிட்டு மக்கிப் போன நாக்குக்கு டிபரண்டாக கிடைத்தால் விடுமா? புகுந்து விளையாட ஆரம்பித்தேன்.

என் ஊரில் இன்றைக்கு தமிழகமெங்கும் பிரபலமான வஞ்சிரம் மீனை தொட்டுக்கூடப் பார்க்க மாட்டார்கள். சுவையற்றுச் சப்பட்டின்னு இருக்கும். பன்னா மீன், தட்டக்காரா, பொடி மீன்கள், வாவல் மீன், பச்சை முறல் மீன், கணவாய் மீன்கள் தான் பிரபலம். எனக்கு ரொம்பவும் பிடித்தது முறல் மீன் தான். திட்டமாக மிளகாயும், புளியும் சேர்த்து வைத்தால் இந்த மீன் சுவையை அடித்துக் கொள்ள எதுவும் இல்லை.  இந்த மீன் வறுவல் அள்ளும். 


இந்த மீன் பெயர் தான் முறல் மீன். பச்சை முறல் மீன் குழம்புக்கும் வறுவலுக்கும் ஏற்றது. கண்ணாடி மாதிரி இருக்கும்.

மஞ்சள்பொடி, சோம்பு, பூண்டு, மணத்துக்கு சின்ன வெங்காயம் கொஞ்சம், மிளகாய்ப் பொடி சேர்த்து மசாலா அரைத்து மீன் மீது கொட்டிக் கிளறியவுடனே (மறக்காமல் உப்புச் சேர்த்துக் கொள்ளவும்) வறுவல் செய்யலாம். இப்போதெல்லாம் மீனை மசாலா சேர்த்து வெயிலில் கருவாடாகக் காய வைத்து அதன் பிறகு பொறிக்கின்றார்கள். கொடுமை அப்படி ஒரு கொடுமை. மீன் கருவாடாகி அதை வறுத்தால் மீன் சுவையா கிடைக்கும்?

கோ 45 அரிசிச் சோற்றுடன் எந்தக் குழம்பைச் சேர்த்துச் சாப்பிட்டாலும் சுவை அள்ளும். இப்போது சாப்பிடுகின்றோமே பொன்னி அரிசி அது மாதிரி சுவை கெட்ட அரிசி வேறு எதுவும் இல்லை. ஐஆர் 20 அரிசி கூட பரவாயில்லை ரகம் தான். கோ 45 அரிசியைக் குழைய வைத்து அதில் முருங்கைக் கீரை பருப்புக் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

பழைய சோற்றினை உருண்டைப் பிடித்து அதில் ஒரு குழியை கட்டை விரலால் அழுத்தி தட்டக்கருவாட்டுக் குழம்பில் கிடக்கும் வாழைக்காயை எடுத்து வைத்து கொஞ்சூண்டு குழம்பை அதில் ஊற்றி அப்படியே வாய்க்குள் வைத்தால் அதை விட எந்த ருசியும் கிட்டே நிற்காது. தங்கராசு வயலுக்குச் சென்று விட்டு வந்தால் குண்டான் நிறையைக் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வந்து இப்படித்தான் சாப்பிடுவான். எனக்கும் தருவான். வீட்டில் எவராவது பார்த்தார்கள் என்றால் என் தோல் உரிந்து விடும். யாருக்கும் தெரியாமல் அவனிடம் ஒரு வாய் வாங்கிக் கொள்வேன்.


(வாளை மீன் கருவாடு)

சரி வாளை மீன் கருவாடு எப்படி செய்வது என்றுச் சொல்லித் தருகிறேன். கருவாடு கிடைத்தால் செய்து சாப்பிட்டுப் பார்க்கவும். வாளை கருவாட்டில் உடம்பின் பகுதியை மூன்று அங்குல சதுரமாக கட் செய்து கொள்ளவும். கொஞ்சூண்டு சுடுதண்ணீரில் அமிழ்த்தி அலசிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்த பிறகு இந்த வாளைக் கருவாட்டுத்துண்டுகளை அதில் சேர்க்கவும். எண்ணெயில் நன்கு பொறிந்து உடைய ஆரம்பிக்கும். கவலைப்பட வேண்டாம். கருவாடு தூள் தூளாக உதிரி உதிரியாக மாற வேண்டும். 

கருவாடு உடைந்து கொழ கொழவென மாறி பின்னர் உதிரி உதிரியாக மாறும். அப்போது கொஞ்சூண்டு சோம்பு அதனுடன் கொஞ்சம் வெங்காயம் சேர்த்து இடித்து அதை எடுத்து இந்தக் கருவாட்டுடன் சேர்க்கவும். கொஞ்சூண்டு மிளகாய்ப் பொடியைத் தூவி சுருளச் சுருள வதக்கவும். பொறு பொறுவென வரும். அதுதான் பக்குவம். அடுப்பை அணைத்து வாணலியில் இருந்து உதிரான கருவாட்டினை பக்குவமாய் கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதில் முள் இருக்கும், கருவாடு வறுபட வறுபட முட்கள் எல்லாம் வெளியில் வந்து விடும். அதை எடுத்து எறிந்து விடாதீர்கள். அதற்கும் ஒரு பயன் இருக்கு.

கருவாடு வறுக்கும் போது வாயில் இருந்து வடியும் ஜொள்ளை வாய்க்குள்ளே அடக்கிக் கொள்ளவும். இதுதான் வெகுமுக்கியம். இல்லையென்றால் வாணலி நாறிப் போய் விடும்.

தட்டில் கொஞ்சம் சுடுசோற்றினைப் போட்டு நாசமாப் போன ஜெர்சிப்பசு மாட்டின் தயிரைக் கொஞ்சூண்டு எடுத்து சூட்டோடு சூடாகச் சேர்த்து கொஞ்சம் கல் உப்பை எடுத்து சோற்றில் போட்டு கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து மெதுவாக கையால் பிசைந்து கொள்ளவும். எல்லாம் முடிந்ததா?

இப்போது ஒரு கவளம் தயிர்ச்சோறு அதன் பிறகு கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் மூன்றையும் ஒன்றாக்கி வறுத்து வைத்திருக்கும் கருவாட்டில் கொஞ்சம் எடுத்து நடு நாக்கில் வைக்கவும். அடுத்து என்ன? இனிமேல் படிக்கவா போகின்றீர்கள்.

சாப்பிட்டு முடித்து விட்டீர்களா? தட்டில் சோறும் இருக்காது, கருவாடும் இருக்காது. ஆனால் கருவாட்டு முள் இருக்குமே அதை மறந்து விடாதீர்கள். அப்படியே ஓரமாக எடுத்து வைத்த வெங்காயத்தை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள். சவுக் சவுக்கென கருவாட்டு வாசத்தோடு வெகு அருமையாக இருக்கும். அடுத்து முள்ளை ஒவ்வொன்றாக எடுத்து இரு விரல்களால் பிடித்துக் கொண்டு நாக்கில் வைத்து தடவினால் மிச்ச சொச்ச கருவாட்டின் சுவையும் நாக்கில் சேர சொல்லவா வேண்டும்? அனுபவித்துப் பாருங்கள். அழகான மச்சினிச்சி முகமும் மறந்து போகும். மறக்காமல் மச்சினிச்சிக்கு கொஞ்சம் அனுப்பி வைத்து விடுங்கள். மச்சினிச்சி இல்லாதவர்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள்.

வாளை மீன் கருவாட்டு வறுவலும் சுடச்சுட தயிர்சோறும் சாப்பிட்டுப் பாருங்கள். நிச்சயமாகச் சொல்கிறேன் அமிர்தத்தை மிஞ்சி விடும் இந்த உணவின் ருசி!

தாத்தாவும் கருவாடும்

என்னைப் பார்க்க வந்திருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். உணவு நேரம் வந்ததும் ’சாப்பிடலாம்’ என்றுக் கேட்ட போது ’இன்று அம்மாவாசை நாளானதால் வீட்டில் தான் உணவு’ என்றார்.

”என்ன காரணம்?” என்றேன்.

“முன்னோர்கள் நினைவு நாளாக ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் உணவு படைத்து அதில் கொஞ்சம் எடுத்து காக்காய்க்கு வைத்து அது உண்ட பிறகு தான் சாப்பிடுவேன், பழக்கமாயிடுச்சு” என்றார்.

“முன்னோரா? அது யாரு?” என்றேன்.

“கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா, அம்மா, பாட்டி இவங்களெல்லாம் தான் சார், எனக்கும் தாத்தாவுக்கு இருந்த உறவு எனக்கு மட்டும் தான் சார் தெரியும், அதைப் பற்றி மாதத்தில் ஒரு நாளாவது நினைத்துப் பார்க்கலாம் அல்லவா? அதனால் தான் சார், ஏதோ என்னால் முடிந்த உணவுகளை அவர்களுக்குப் படைத்துச் சந்தோஷமடைகிறேன்” என்றார்.

எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் கிட்டத்தட்ட 35 வருடம். இனிமேல் இவர்களைப் போன்றோரைப் பார்ப்பது அரிதாகி விடும். வாக்குக் கொடுத்திட்டேன், மாற்றிப் பேச முடியாது என்றுச் சொல்பவர்களையும் இனிமேல் பார்க்கவே முடியாது. காலம் அழித்துச் சென்ற நற்குணவாதிகளைக் காண்பது அரிதிலும் அரிதாகி விடும்.

தாத்தா மாணிக்கதேவர் மலேஷியாவின் சிறையிலிருந்து விடுதலை பெற்று ஊருக்கு வந்த பிறகு விவசாய வேலை தொடர்ந்து செய்து வந்தார். கலப்பையைக் கூட எப்படி பிடிக்க வேண்டும் என்று தெரியாதாம். மிகுந்த பிரயாசையின் பால் விவசாயத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவர் வயலுக்குச் செல்வதுண்டு. ஆனால் வேலைகளைச் செய்ய அவரின் மகன்களும் வேலையாட்களும் இருந்தனர்.

அவருக்கு வேலை என்றால் என்னைப் பள்ளியில் தூக்கிக் கொண்டு போய் விடுவது, பின்பு அழைத்து வருவது மட்டும்தான். கடைத்தெருவுக்குப் போய் சூரியன் பீடி வாங்கிக் கொண்டு டீக்குடித்து விட்டு வருவார். அவரின் படுக்கை வெகு சுத்தமாக மடித்து வைக்கப்பட்டிருக்கும். தலையணையின் பின்னே பணம் வைத்திருப்பார். மடியில் வேறு பணம் வைத்திருப்பார். தோளில் எப்போதும் ஒரு துண்டு இருந்து கொண்டே இருக்கும். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெற்றுடம்பில் தோளில் துண்டுடன் நடமாடுவார். கடைக்குச் செல்லும் போது சட்டை போட்டுக் கொள்வார். விடிகாலையில் எழுந்து கொள்வார். வேப்பங்குச்சியில் பல் துலக்கி முகம் கழுவி விட்டு கடைத்தெரு சென்று வருவார்.

ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பணம் எடுத்தார் என்றால் வீடே கலகலவென இருக்கும். அத்தனை பணத்தையும் அம்மாவிடம் கொடுத்து விடுவார். அவர் செலவுக்கு கையில் கொஞ்சம் வைத்திருப்பார். வாரம் தோறும் வாளைக்கருவாடு, சுறாக்கருவாடு, நெத்திலிக் கருவாடு போன்ற பல கருவாட்டு அய்ட்டங்களை பேராவூரணிச் சந்தையில் வாங்கிக் கொண்டு வருவார்.

எப்போதும் சுடுசோறுதான் சாப்பிடுவார். எல்லாம் சுடச்சுட இருக்க வேண்டும். காலையில் சுடுசோற்றில் தண்ணீர் விட்டு தொட்டுக்க சோம்பும் வெங்காயமும் சேர்த்து எண்ணெயில் வறுத்த கருவாட்டுத் துண்டை எடுத்துக் கடித்துக் கொண்டே குடிப்பார். அடியேன் அவரருகில் இருந்தால் கஞ்சியின் கடைசி தண்ணீர் சோற்றுடன் இருக்கும். அதைக் குடிக்கத் தருவார். ஒரு கடி கருவாடு, ஒரு வாய் கஞ்சித்தண்ணி என்று குடிப்பேன். நான் பெரியவனாகும் வரையிலும் இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

தோளில் இடதுபக்கமாய் தூக்கி வைத்துக் கொள்வார். நரைத்துப் போன தலைமுடியை இருக பற்றி இருப்பேன். ஏதாவது கதை சொல்லிக்கொண்டே வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வருவார். இரவுகளில் அவரின் படுக்கையில் படுத்து தூங்கி விடுவேன். தூக்கிக் கொண்டு போய் எனது படுக்கையில் படுக்க வைப்பார். ஆசை ஆசையாய்ப் பெற்ற மகளின் பேரன். என் தங்கையை அப்படிக் கவனிப்பாரா என்று தெரியாது. ஆனால் என் மீது அவருக்குப் பிரியம் சாஸ்தி.

அவரின் தம்பி சுப்பையாதேவர் கவனிப்பாரின்றி உணவு கிடைக்காமல் அழுது அழுதே இறந்து போனார். இரவுகளில் அவருக்கு இட்லி வாங்கிக் கொண்டு போய் கொடுத்து விட்டு வருவார். நான் இரவுகளில் சுப்பையாத்தேவரின் மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாமல் ரகசியமாக உணவுகளைக் கொண்டு போய் அவரருகில் வைத்து விட்டு வருவதுண்டு. கத்திக் கத்தியே உடலெல்லாம் புண் வைத்துச் சீழ் பிடித்து இறந்து போன தம்பியைப் பற்றி அவருக்கு மீளொண்ணாத் துன்பம் இருந்தது. உணவு தருகிறோம் என்று தெரிந்தால் சுப்பையாத்தேவரின் மகனுக்கும் மருமகளுக்கும் ஆகாது. சண்டைக்கு வந்து விடுவார்கள். கண் முன்னே தன் தம்பி பட்ட பாட்டை காணச் சகிக்காது அந்தப் பக்கமே போக மாட்டார். அந்தளவுக்கு அவரின் தம்பி வெயிலிலும் மழையிலும் மாட்டு வண்டிக்கு கீழே கிடந்த தென்னை தட்டியிலும் வைக்கோல் மீது விரித்த படுக்கையிலும் கிடந்துச் செத்துப் போனார்.

அடுத்த ஒரு மாதத்தில் திடீரென அவருக்கு உடல் சரியில்லாமல் போய் விட்டது. ஜமாலிடம் தான் காட்டினார்கள். கிட்னி பெயிலியர் ஆகி விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லி விட்டார். வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். கிட்னி மாற்றலாம் என்று கேட்ட போது என் காலம் முடிந்து விட்டது இனி நான் இருந்து என்ன செய்யப்போகிறேன். செலவு செய்து சொத்து அழித்து விடாதீர்கள் என்று மறுத்து விட்டார்.

வைகுண்ட ஏகாதசி அன்று காலையில் அமைதியாக படுக்கையில் படுத்திருந்தார். நான் தான் கடைசியாகப் பால் ஊற்றினேன். அம்மா என்னை அழைத்துக் காலைப் பிடித்துப் பார் என்றார்கள். கால் சில்லிட்டது. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக சில்லிட கண்கள் திறந்தபடி வாய் வழியாக உடம்பின் உயிர் வெளியேறியது. அவரருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அழுகை வந்தது. கொஞ்ச நேரம் அழுதேன்.

அவர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையில் இருந்த போது அவருக்குக் கொடுத்த பச்சைக் கலர் ராணுவச் சட்டை இருந்தது. அதை எடுத்துப் போட்டுக் கொண்டேன். தாத்தா கொடுத்த கத்தியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். அவரை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் தட்டில் அவர் குடித்து விட்டு மீதம் வைத்திருக்கும் கஞ்சியும் கருவாடும் என் நினைவில் வந்து விடும். இன்றைக்கு சுத்த சைவமாக இருப்பதால் தாத்தாவுக்குப் பிடித்த சுறாக்கருவாட்டையோ அல்லது வாளைமீன் கருவாட்டையோ செய்து வைக்க முடியவில்லை. அது ஒன்று தான் எனக்கு கொஞ்சம் மனக்கஷ்டமாக இருக்கும்.

உங்கள் தாத்தாவுடன் உங்களுக்கான உறவு எப்படி இருந்தது? என்னைப் போல தாத்தாவுடன் விளையாடுவதுண்டா? அவரை எப்போதாவது நினைத்துப் பார்ப்பீர்களா?

Friday, March 17, 2017

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு

”என்னங்க? வைத்தியரு இருக்காரான்னு கேட்டு போன் வந்துச்சு?”

“என்னா? வைத்தியரா? யாரது?”

“தெரியலிங்க, அவரு வந்தவுடனே அழைக்கச் சொல்றேன்னுச் சொல்லிட்டேன்”

இனி இவள் நக்கல் வேற தாங்க முடியாதே என்று நினைத்து முடிக்கவில்லை அதற்குள் போன் வர ”வைத்தியர் சம்சாரம் பேசுகிறேன்” என்று ஆரம்பித்தாள் மனையாள்.

யாரோ ஒருவர் எதைப் படிச்சாரோ என்னத்தைப் புரிஞ்சுக்கிட்டாரோ தெரியவில்லை. வைத்தியரு இருக்காருன்னு அழைச்சிருக்காரு போலன்னு நினைச்சுக்கிட்டு அவரைத் திரும்பவும் அழைத்தேன். மனதுக்குள் ஒரு குஷி இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் இடித்தது. அவர் ஏன் என்னை வைத்தியர் என்று அழைத்தார்? ஒரு வேளை புற்று நோய்க்கு மருந்து பற்றி எழுதி இருந்தேனே அதற்காக இருக்குமோ என்று கூட நினைத்தேன்.

எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் பிரச்சினை தேடி வரும் போல. பிளாக்கில் என்ன எழுதி இருக்கிறேன் எனப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துப் போனார் போல என்னை வைத்தியர் என்று அழைத்தவர். இது ஒன்று தான் பாக்கி இருக்கிறது. இனி அந்த வேலையையும் செய்து விட வேண்டியதுதான்.

என்னிடம் அருமையான மூட்டு வலி நிவாரணிக்கான தைலம் ஒன்றின் செய்முறை இருக்கிறது. இனிமேல் அதைத் தயாரித்து விற்பனை செய்து விட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்த எனக்குத் தலை கிறுகிறுக்காத குறைதான் போங்கள்.

அதைச் சொன்னால் நீங்கள் இரண்டு நாளாவது விட்டு விட்டு சிரித்துக் கொண்டே இருப்பீர்கள் என்பதால் சொல்லி விடுகிறேன். அவருக்கு ஒரு பெண் பழக்கமாம். அவருக்கும் அதுவுக்கும் நல்ல பிரண்ட்ஷிப் சென்று கொண்டிருந்ததாம். அதுக்குத் திருமணமாகி குழந்தைகள், கணவர் எல்லாம் இருந்தாலும் இவர் கூட நல்ல பிரண்ட்ஷிப்பாம். திடீரென்று அது இவருடன் பேசவில்லையாம். என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். அதை இவருடன் பேச வைக்க வேண்டுமாம். இதுதான் அவரின் பிரச்சினை. இவருக்கு நான் மருந்து கொடுக்க வேண்டும். இவர் என்னை என்ன நினைத்து வைத்தியர் என்று அழைத்திருக்கிறார் என்று இப்போது தெரிந்திருக்குமே?

ஆமாம், அதே தான். வசிய மருந்து வைத்தியர். மருந்து கொடுப்பவரெல்லாம் வைத்தியர் தானே? கேப்பிடேஷன் கட்டணம் கொடுக்காமல், நீட் எழுதலாமா கூடாதா என்றெல்லாம் யோசிக்காமல் அதுமட்டுமல்ல கல்லூரிக்கே போகாமல் எப்படி வைத்தியர் என்று அழைக்கப்படுகிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்? அவனவன் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து வைத்தியராகின்றான்கள். ஆனால் நானோ ஒரே ஒரு பதிவு எழுதியதன் காரணமாக வைத்தியராகி விட்டேன். 

மதுரை சூரியன் எஃப். எம் ரேடியோவிலிருந்து சுடன் பால் என்பவர் எனது மாந்திரீக வைத்திய அனுபவத்தைப் பற்றி பேட்டி எடுத்து ஒளிபரப்பினார். அன்றிலிருந்து ஆரம்பித்தது வினை. என் தொடர்பு எண்ணை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சத்தியம் செய்து வாங்காத குறையாகக் கேட்டுக் கொண்டேன். கையில் அடித்தா சத்தியம் செய்தேன், சும்மா வாயால் தானே சொன்னேன் என்று நினைத்து கொடுத்து விட்டார் போல சுடன்ன்ன்ன் பால்..!

யார் யாரோ போன் போட்டு  உங்களைப் பார்க்க வரணும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். ஆசிரமத்திற்குச் சென்றேன் அங்கு ஒருவர் என்னை உங்களது சிஷ்யனாக்கிக் கொள்ளுங்கள் என்று படுத்த ஆரம்பித்தார். அந்தக் கலை உங்களிடமிருந்து அழிந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் சிஷ்யனாகச் சேர விரும்புகிறேன் என்று அனத்த ஆரம்பித்தார். அவரிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன். 

மதுரையில் இருந்து ஒருவர் அழைத்து புலம்ப ஆரம்பித்தார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகளாம். வெல்டிங்க் பட்டறை வைத்திருந்தாராம். கண் தெரியவில்லையாம். இப்போது டெய்லரிங் யூனிட் போட்டு தொழில் செய்கிறேன் சார், இருந்தாலும் கடன் கட்டி மாளவில்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கிறது என்னை எப்படியாவது இந்தப் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கதற ஆரம்பித்தார். அவரின் அனத்தல் தாங்க முடியாமல் அவருக்கு கடன் பிரச்சினை மற்றும் தொழில் மந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர ஒரு உபாயத்தைச் சொல்லிக் கொடுத்தேன். என்ன ஆனதோ தெரியவில்லை? போனும் வரவில்லை. சரியாகி விட்டால் சந்தோஷம்.

இப்போது நினைத்துக் கொள்ளுங்கள். பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு இடத்தில் சொல்வாரே? 

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு!