குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, May 19, 2016

வரி எனப்படும் கற்கதரு



இந்தியாவில் எத்தனையோ உலகை உலுக்கிய ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா முடங்கிப் போய் விடவில்லை. இந்த ஊழல்களில் தமிழர்கள் பங்கு பெற்றிருக்கும் ஊழல்கள் தான் ஆகப் பெரிது. ஒவ்வொரு விஷயத்திலும் தமிழர்கள் தமக்கென்று ஒரு முத்திரைப் பதித்துக் கொண்டே வருகின்றார்கள். ஊழலிலும் அப்படித்தான் முத்திரைகளைப் பதிக்கின்றார்கள். இந்த ஊழல்கள் என்று மட்டுமில்லை மாநில அரசுகள், மாநகராட்சிகள், ஊராட்சிகள், அரசு அலுவலர்கள் என்று அது ஒரு தொடர் இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆரம்பித்த ஊழல்கள் இதுவரையிலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. ஜனநாயகம் என்கிற பெயரால் வாக்காளர்களை ஓட்டுப்போட அழைக்கும் அதிகாரங்கள், ஓட்டுப் பெற்று ஜெயித்த பிறகு வாக்காளர்களை வேற்று கிரக வாசிகள் போல நடத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. பொதுமக்களுக்கு சேவை செய்ய இருக்கும் அரசும், ஜனநாயகம் தொடர்பான அத்தனை அமைப்புகளும் சேவை செய்வதாக நடிக்கின்றன. 

மக்களுக்கு பணி செய்ய வேண்டுமென்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்கள் மக்கள் எஜமானர்களாக மாறி, யாரால் நம் குடும்பம் வாழ்கிறதோ அவர்களையே மிரட்டி காசு பறிக்கும் கூட்டமாக மாறிக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

இதை மாற்றுவதற்கு மக்களால் எதுவும் செய்யமுடியாது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசியல் உருவாக்கி வைத்திருக்கிறது. அந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் தனி மனிதனின் வாழ்க்கை முடிந்து விடும். 

அரசை தனி மனிதன் கேள்வி கேட்க முடியாதவாறு சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சட்டத்தின் பாதுகாவலர்கள் கேள்வி கேட்பவனை கேனயனாக்கி விடுவார்கள். 

இந்திய அரசியலமைப்பு என்று மட்டுமல்ல உலக அரசியலும் இப்படித்தான் இருக்கின்றன. இதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துபவர்களை ஜெயிலில் தூக்கிப் போட்டு விட்டு, கொஞ்ச காலம் முடிந்தவுடன் வெளியில் விட்டு நோபல் பரிசுகளைக் கொடுத்து வீட்டில் உட்கார வைத்து விடுவார்கள்.

இது உலகம் அழியும் வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். யாராலும் எதையும் மாற்றி விட முடியாது. மாற்றமும் அரசியலில் வரவும் முடியாது. அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரு கட்சி இந்தியாவை ஆள்வதுதான் நான் மேலே சொல்வதற்கு சாட்சி. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த இந்தியப் பிரதமர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் வருவார். பிஜேபி நிச்சயமாக வெற்றி பெறவே பெறாது. இதுதான் ப்ரீ பிளான் (முன்பே திட்டமிடல்). இதற்கு பல்வேறு காரணிகள் உண்டு.

இத்தனையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது மக்களின் வரிப்பணம். எது நடந்தாலும் நடக்கவில்லையென்றால் மக்களிடமிருந்து அரசுகள் பெரும் வரிப்பணம் என்றைக்கும் குறைவதே இல்லை. கற்பகதருவாய் கொட்டிக் கொண்டிருக்கும் வரிப்பணத்தை முன்னிருத்தியே கட்சிகள் உருவாகின்றன. ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால் ஊழல் மட்டும் மாறுவதே இல்லை. அந்தக் கற்பகதருவை அள்ளிடத்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அடித்துக் கொள்கின்றன. 

இதை மாற்றிட முடியுமா என்றால் முடியவே முடியாது. மக்களின் வாழ்க்கை யை அவ்வாறு சிக்கலில் கொண்டு வைத்திருக்கின்றது அரசியல். உழைக்கும் மக்களின் ஒவ்வொரு துளி வியர்வையிலும் ஒரு கால் துளி அரசுக்கு வரியாய்ச் செல்கிறது. இந்த வரி எனும் அருவியினால் தான் இந்திய அரசு எந்த வித சுணக்கமும் இன்றி தொடர்ந்து நடைபோடுகிறது. எத்தனையோ ஊழல்கள் நடந்தாலும் நடையில் தளர்ச்சி இல்லை. எந்த ஒரு கட்சியாலும், அமைப்பினாலும் இந்த பிரச்சினையைச் சரி செய்யவே முடியாது. அது நிச்சயம் முடியவே முடியாது. ஆனால் ஊழலில் பங்கு கொள்ளலாம். அதற்கு அர்பணிப்பும் திறமையும் வேண்டும்.

நல்லவனாய் இரு என்கின்றன ஆன்மீகச் சந்தைகள். எண்ணற்ற நூல்கள், நன்னெறியைப் போதிக்கின்றன. ஆனால் அரசியல் தனி மனிதனை திருடனாக இரு என்கிறது. அதுதான் அரசியல் என்கிறது அது.

ஆனால் தர்மம் என்கிற ஒன்று இவ்வுலகில் உண்டு. 

* * *




Friday, May 13, 2016

வருஷம் ஆறு லட்சம் கோடி மக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது



பிசினஸ் ஸ்டாண்டு பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. இந்தியக் கல்விச் சந்தையின் மதிப்பு வருடா வருடம் உயர்ந்து கொண்டே செல்கிறதாம். மக்களிடமிருந்து கல்விக்கு என்று செலவழிக்கும் தொகை வருடம் ரூபாய் ஆறு லட்சம் கோடி என்பது தான் அந்தச் செய்தி  சொல்லும் உண்மை.

இந்திய மக்களிடமிருந்து தனியார் முதலாளிகள் கல்வி என்ற பெயரில் ஆண்டுக்கு ஆறு இலட்சம் கோடி வசூல் செய்து தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்கிறார்கள். இந்த ஆறு இலட்சம் கோடி இந்திய மக்களிடமே இருந்தால் அமெரிக்காவினை மிஞ்சும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. 

அது மட்டுமல்ல இந்திய மருத்துவத்துறையில் வருடம் ஒன்றுக்கு புரளக்கூடிய பணம் மட்டும் 12 லட்சம் கோடிக்கும் மேல் என்கிறது இந்தியா பிசினஸ் எனும் பத்திரிக்கை செய்தி. ஆக வருடம் கல்விக்கும் மருத்துவத்துக்கும் 18 லட்சம் கோடி ரூபாயை இந்திய மக்கள் செலவு செய்கிறார்கள். அத்தனை பணமும் மக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது என்பதுதான் உரைக்கும் உண்மை.

அது மட்டுமல்ல நமக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, நாட்டை நிர்வகிக்க நாம் கொடுக்கும் வரிப்பணம் என்பது வேறு. அது எத்தனை லட்சம் கோடி என்பது நினைவுக்கு வரவில்லை.

வரியை விடுங்கள், கல்வி மருத்துவத்திறகான இத்தனை பணமும் இந்தியர்களிடம் இருந்தால் ஒவ்வொரு வீட்டிலும் பென்ஸ் காரல்லவா நிற்கும்? இந்தியாவில் பசி, பஞ்சம், பட்டினி, ஏழை என்று யாரையாவது காட்டத்தான் முடியுமா?

இத்தனைக்கும் காரணம் யார்? யோசித்துப் பாருங்கள்.

நம்மிடம் இருக்கும் பணத்தை நயவஞ்சக் கூட்டமொன்று கொள்ளை அடித்து கொழுத்துப் பெருத்து கூடி கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளும், ஏழைகளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எவனாவது பேசுகின்றானா? 

நம்மிடமிருந்து பெறும் பணத்திலும் கொள்ளை அடித்துக் கொழுத்து திரியும் அரசியல்வாதிகளின் பொய்யை நாம் என்று புரிந்து கொள்ளப் போகின்றோம் என்று தெரியவில்லை. 

ஒரு அரசியல்வாதியின் பையன் தன் காரை முந்திச் சென்ற காரில் இருந்தவரைச் சுட்டுக் கொல்கிறார். ஒரு சினிமாக்காரன் குடித்து விட்டு வீடில்லாமல் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரேற்றிக் கொன்று விட்டு, கொலையே செய்யவில்லை என்று தீர்ப்பு பெறுகிறான். ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளிவந்த காரணத்தால் பணியாளர்கள் நெருப்பு வைத்துக் கொள்ளப்படுகிறார்கள். நம் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறும் மக்கள் பணியாளர்கள் மக்களை மதிப்பதே இல்லை. 

இதுவா ஜனநாயகம்? இதுவா அரசு நடத்தும் விதம்? இவர்களா இந்திய மக்களின் நல்வாழ்வுக்கு  உழைக்கப் போகின்றார்கள்? அத்தனையும் வேஷம்.

மக்கள் சேவைக்குத்தானே வருகின்றார்கள் அரசியல்வாதிகள்? அப்புறம் ஏன் அடித்துக் கொள்கிறார்கள்? யார் ஆட்சியில் இருந்தால் என்ன? இவர்கள் ஏன் தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றார்கள்? 

அதிகாரமும், பணப்பசியும், பதவி வெறியும் கொண்டலையும் இவர்களை இந்திய மக்கள் என்றைக்குப் புரிந்து கொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை.

இந்தியாவை நேசிக்கும் ஒரு தலைவனை இந்திய மக்கள் என்றைக்குத் தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள் என்பதும் தெரியவில்லை.

இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்கள். இந்தியாவின் உண்மை நிலையினைச் சொல்லும் அற்புதமான பாடல், இந்திய தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சில் ரத்தம் வடிய வைக்கும் பாடல். 

என்ன செய்யப்போகின்றோம் நாம்? 




* * *
செய்தி உதவி :


Tuesday, May 10, 2016

கிளைகளை வெட்டாதீர்கள் வேர்களை வெட்டுங்கள்


முல்லா நஸ்ருதீன் இந்தியா வந்திருந்த போது அவருக்கு மிகுந்த பசி எடுத்திருந்தது. இமயமலையின் வாயிலாக இந்தியாவுக்குள் நுழைந்த இடத்தில் ஒருவன் அழகான கூடையில் நீண்ட சிவப்பான பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த முல்லாவுக்கு அந்த அழகிய சிவப்பு வண்ண பழங்களைச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. பசியும் மிகுந்த காரணத்தினால், அந்தப் பழக்கூடைக்காரனிடம் சென்று விலையைக் கேட்டார்.

“ஒரு கூடைப் பழம் இரண்டே பைசா” என்றான் அவன்.

அந்தக் கூடையை விலைக்கு வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார் முல்லா.

அது செம காரம்.

அவரின் கண்களிலிருந்து கண்ணீராய்க் கொட்டியது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் சொன்னான். “என்ன செய்து கொண்டிருக்கின்றீர்? அது மருத்துவ குணம் கொண்ட பழம். சில நோய்களுக்கு ஒன்றோ அல்லத் இரண்டோ சாப்பிட வேண்டும். நீங்கள் என்னடாவென்றால் எல்லாப் பழங்களையும் சாப்பிடுகின்றீர்களே? செத்து விடப்போகின்றீர்கள். அல்லது உங்களக்கு பைத்தியம் பிடித்து விடும்”

முல்லா சொன்னார்,” எது வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால் நான் இரண்டு பைசா கொடுத்து வாங்கி இருக்கிறேன், ஆகவே முழுமையாகச் சாப்பிட்டே ஆக வேண்டும்”

* * *

கிளைகளை வெட்டாதீர்கள், வேர்களை வெட்டுங்கள் என்றுச் சொன்னவர் யோக்கா. நாம் இன்னும் கிளைகளை மட்டுமே வெட்டிக் கொண்டிருக்கிறோம். வேர் எது? கிளை எது என்பது பற்றிய புரிதலில்லாதவர்களுக்கு எதை வெட்டுவது என்பது புரிவதில்லை.

* * *
ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Saturday, May 7, 2016

நிலம் (18) - பவர் மூலம் விற்கிரைய ஒப்பந்தம் பற்றிய பிரச்சினை

சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மேல் முறையீட்டுக்கு வந்திருந்தது. 

அந்த வழக்கு என்னவென்றால், சொத்தின் உரிமையாளரிடமிருந்து பொது அதிகார ஆவணம் எழுதி வாங்கியவர் வேறொரு நபருக்கு சொத்தினை விற்பதற்காக விற்கிரைய ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து கொடுத்து சொத்தின் விலையில் முக்கால் வாசி பெற்று விடுகிறார்.

விற்கிரைய ஒப்பந்தகாலம் ஒரு வருடம். ஆனால் ஒரு வருடம் முடிவில் பொது அதிகார முகவர் சொத்தினை எழுதிக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஒப்பந்தம் செய்தவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். சொத்தின் உரிமையாளர் பொது அதிகார ஆவணத்தை ரத்துச் செய்கிறார்.

விற்கிரைய ஒப்பந்தத்தின் படி சொத்தினைக் கிரையமும் செய்யமுடியவில்லை. பொது அதிகார முகவர் ஆவணமும் ரத்தும் செய்யப்பட்டு விட்டது. பிரச்சினை நீதிமன்றத்துக்கு வந்து விட்டது.

கீழ் நீதிமன்றங்களில் நடத்தப்பட்ட வழக்குகளின் தீர்ப்புரைகள் மாறி மாறி வந்தன. அதைப் பற்றி இங்கே எழுத ஆரம்பித்தால் குழம்பி விடுவீர்கள் என்பதால் சாரத்தை மட்டும் எழுதுகிறேன்.

பொது அதிகார ஆவணம் எழுதிக் கொடுத்தாலும் சொத்தின் உண்மையான உரிமையாளராக பவர் பெற்றவர் ஆக மாட்டார். எந்த நேரத்திலும் பவர் ரத்துச் செய்யப்படலாம். ஆனால் பவர் வாங்கியவர் எழுதிக் கொடுத்திருக்கும் ஒப்பந்தத்தை சொத்தின் உண்மையான உரிமையாளர் செயல்படுத்தியே ஆக வேண்டும். எனக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. 

இருப்பினும் ஒரு சில ஓட்டைகளும் இருக்கின்றன. புத்திசாலி வக்கீல் அதனைப் பயன்படுத்துவார்.

மேற்கண்ட பிரச்சினைக்கு நீதிமன்றம் தெளிவான தீர்ப்பினை வழங்கியது.

விற்கிரைய ஒப்பந்தம் செய்தவர், அந்தச் சொத்தினை குறிப்பிட்ட காலத்துக்குள் கிரையம் செய்திட தயாராக இருந்ததை நிரூபித்த காரணத்தால் அந்தச் சொத்தினை சொத்தின் உரிமையாளர் மீதித் தொகையினைப் பெற்றுக் கொண்டு கிரையம் செய்து கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. 

விற்கிரைய ஒப்பந்தம் போட்டு விட்டோம் இனி சொத்து எனக்குத்தான் என்று நினைத்து விடக்கூடாது என்பதை நினைவில் கொள்க என்பதற்காகத்தான் இந்தப் பதிவினை எழுதி இருக்கிறேன்.

இதைப் போன்ற ஏதேனும் வழக்குகள் வந்தால், கோர்ட்டில் வழக்கு நடந்தால், அது இன்னும் முடியாமல் இருந்தால் தொடர்பு கொள்ளவும். விரைவில் வழக்கை முடித்து தீர்வு பெற உதவுகிறேன்.

*  *  *


சிற்றலையும் பேரலையும் பேசிக் கொள்கின்றன

”ஐயோ நான் எவ்வளவு அற்பமானவன், என்னை அந்தப் பெரிய அலைகள் பாய்ந்து வந்து அமுக்கி அழித்து விடுகின்றனவே” என்று மிகவும் வருத்தப்பட்டது ஒரு சிற்றலை.

அப்போது ஒரு பெரிய அலை பாய்ந்து வந்தது.

“ஐயோ!” என்று அலறியது சிற்றலை.

“உன் முகத்தை நீ பார்த்ததில்லையா, உண்மையான உன் முகத்தை?” என்று கேட்டது பேரலை.

”இல்லை, நான் யார்? நான் ஒரு அலைதானே?” என்று கேட்டது சிற்றலை.

“ நீ அலைதான், ஆனால் அலை உன் வடிவமல்ல. அது ஒரு தற்காலிக வடிவம், நீ தண்ணீர்”

“தண்ணீரா?”

“ஆம், தண்ணீர். என்னைப்போல, என் வடிவமும் ஒரு தற்காலிக வடிவம்தான். அடிப்படையில் நானும் தண்ணீர்தான் உன்னைப்போல. வீணாக நீ கவலைப்படுகிறாய். குழப்பமடைகிறாய். உன் உண்மையான நிலையை, அடிப்படையை உணர்ந்தால் அச்சம் இல்லை, அவலம் இல்லை”

“அப்படியா? நீயும் நானும் ஒன்றா?”

“ஆம்! மாபெரும் இயற்கையின் வெவ்வேறு தற்காலிக வடிவங்கள். அடிப்படையில் எல்லாம் ஒன்றே. கவலை விடு” என்றது பேரலை.

* * *

படித்தீர்களா? விஷயம் அவ்வளவு தான். எனக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்திருந்த காலம். மனிதர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடன் பேசிக் கொண்டிருப்பவர் எதற்காகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றொரு கேள்வியை என் முன் வைத்தேன். அதே போல நானும் இன்னொருவருடன் எதற்காகப் பேசுகிறேன் என்றும் என்னையே கேட்டுக் கொண்டேன். இதே கேள்வியை ஒவ்வொரு ஆட்களையும் பார்த்து வைத்தேன். மனிதர்களை மட்டுமல்ல என்னையே நான் அறிந்து கொள்வதற்கும் எனது இந்தக் கேள்விகளே போதுமானவைகளாக இருந்தன. 

மனித வாழ்வு பொருளை முன்வைத்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் இன்னொரு மனிதனைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழலைக் கட்டியமைத்திருப்பது சக மனிதனின் பாதுகாப்புக்குத்தான். கோவிலுக்குச் சென்றாலும் பொருள் செலவழிப்பதற்கு இதுவே காரணம். பொருள் சார்புடைய வாழ்க்கைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. மனிதனை இன்னும் கட்டிப்போடுவது குடும்பத்தின் சாரல்களான பந்தம், பாசம், உறவுகள். அனைத்து ஒவ்வொன்றாய் விட்டுப் போய் விடும் என்று காலம் மாற மாற ஒவ்வொருவருக்கும் புரிந்து விடும்.

இந்தப் பொருள் மட்டும் இல்லையென்றால் சிற்றலை பேரலை தத்துவம் மனிதனுக்கு எளிதில் விளங்கி விடும். மாயா உலகமல்லவா? கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கிறது இந்தப் பொருள். 

விட்டு விலக சாத்தியமே இல்லை. நீங்களும் நானும் தண்ணீர் தான் என்பதை புத்தி சொல்கிறது. ஆனால் மனசுக்கு அது புரியாது. புரிந்தாலும் புரியாது போய் விடும்.

* * *

Friday, May 6, 2016

மனிதனின் இரண்டு முகங்களும் ஒரு ஜென் கதையும்

ஒரு மதுச்சாலையில் ஒருவன்
தனக்குள்ள உறுதியான வைராக்கியம் பற்றி
பெருமையடித்துக் கொண்டான் :

“மதுவை இனித் தொடவே மாட்டேன்” என்றான்.

ஆனால் அன்று மாலையே
அங்கே வந்து விட்டான்.

எல்லோரும் கேட்க, இப்படி உரக்கச் சொன்னான்:

“நான் என் மன வைராக்கியத்தை விடப் பலமானவன்!
நான் முழுதும் போராடி என் வைராக்கியத்தைத்
தோல்வியடைச் செய்து விட்டேன்.
இரண்டு மடங்கு மதுவைக் கொடு!”

(நன்றி : ஓஷோவின் ஒரு கோப்பைத் தேநீர் )

இதை ஓஷோ ஒரு மனிதனின் சுய வஞ்சனை என்கிறார். எந்த ஒரு செயலையும் அவன் நியாயப்படுத்திக் கொள்கிறான் என்கிறார் ஓஷோ.

* * *

அடுத்து ஒரு ஜென் கதை.  இந்தக் கதை உங்களுக்குப் புரிந்து விட்டால் !



கடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன மீனுக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்.

’கடல், கடல் என்று பேசிக் கொள்கிறார்களே, அப்படியென்றால் என்ன?’ என்பது தான் அந்தச் சந்தேகம். அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு பெரிய மீனிடம் சென்று,

“கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது?” என்று கேட்டது.

“அதுதான் உன்னைச் சூழ்ந்திருக்கிறது. அதற்குள் தான் நீ இருக்கிறாய்!” என்றது பெரிய மீன்.

“ஆனால் அது எனக்குத் தெரியவில்லையே!” என்றது சின்ன மீன்.

“நீ அதற்குள் இருப்பதால் தான் உனக்குத் தெரியவில்லை. நீ பிறந்ததும் கடலில். வாழ்ந்து கொண்டிருப்பதும் கடலில். உன்னைச் சுற்றி இருப்பதும் கடல். உனக்குள் இருப்பதும் கடல். உனது தோலைப் போல் அது உன்னை விட்டு நீங்காமல் சூழ்ந்திருக்கிறது. நீ பிறந்து வாழ்ந்து மறையப் போவதும் இந்தக் கடலில் தான். அதற்குள் இருப்பதால் அது தெரியவில்லை” என்றது பெரிய மீன்.

* * *

இந்த ஜென் கதை புரிந்து விட்டால் வாழ்வில் படும் துயரங்களில் இருந்து மனிதன் விடுதலை பெற்று விடுவான். புரியவில்லை என்றால் அடுத்து ஒரு அருமையான கதையொன்றினை வெளியிடப் போகிறேன். அந்தக் கதை சொல்லும் உங்களுக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.

ஜென் கதைக்கு முன்பு இருக்கும் கவிதை உங்களின் மனதை நிச்சயம் கீறி விட்டிருக்கும். சுய நிந்தனையில் மனிதனை விட மிகவும் உயர்ந்தது எதுவுமே இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. அந்த சுய வஞ்சகத்தன்மையினால் அவன் இழப்பது தன் வாழ்க்கையை என்று அவர் என்றைக்குமே உணருவது இல்லை.

கவிதை மனிதனின் ஒரு முகத்தையும், ஜென் கதை மனிதனின் அறியாமை எனும் முகத்தையும் காட்டுகிறது. இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

* * *


குருநாதரின் பேரருள் - உண்மைச் சம்பவம்

எனது குரு நாதர் ஜோதி ஸ்வாமி குழந்தைகள் இருவரையும் வெள்ளிங்கிரி ஆண்டவர் அருள் பாலிக்கும் ஏழாம் மலைக்கு அழைத்துச் சென்று வரக் கோரியிருந்தேன். சுவாமியும் அதற்கொரு தகுந்த நாளினைச் சொல்வதாகச் சொல்லி இருந்தார். கடந்த செவ்வாய்கிழமையன்று ரித்திக் நந்தாவும், நிவேதிதாவும் வெள்ளிங்கிரி ஆண்டவரின் அருள் பெறுவதற்காக மலையேறுவதற்கு ஆசிரமம் அழைத்துச் சென்றேன். 


எனக்கு எப்போதுமே தண்ணீரும், பசுஞ்சோலைகள் நிறைந்த இடமும் நிரம்பவும் பிடிக்கும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கேரளா சென்று வருவதுண்டு. சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் ஆசிரமத்தின் பின்புறம் வளைந்தோடும் நொய்யல் ஆற்றில் சுவாமியுடன் உதவியோடு அவ்வப்போது குளிப்பது உண்டு. செவ்வாய் அன்றைக்கு நானும், குழந்தைகள் இருவரும், சாமியுடன் ஆற்றில் உடம்பு சூடு குறைய குளியலை முடித்து விட்டு ஆசிரமம் சென்றோம்.

சுவாமியைத் தரிசித்து விட்டு, உணவு அருந்த அமர்ந்திருந்த போது ஒரு வாளிப்பான வாலிபர் ஒருவர் முகமெல்லாம் சிரிப்போடு அனைவருக்கும் கேட்டுக் கேட்டு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். ஓடியாடி ஆசிரம பணிகளைச் செய்து கொண்டும், சுவாமியைத் தரிசிக்க வந்தவர்களுக்கு உணவு பரிமாறியும் துருதுருவென திரிந்து கொண்டிருந்தார்.

ஆசிரமத்திலிருந்து பசுமடத்திற்கு வரும் வழியில் சாமியிடம் அவர் பற்றி விசாரித்தேன். 

“ஆண்டவனே, அவருக்கு நுரையீரலில் பிரச்சினை, கிட்னி பெயிலியர் என்று இன்னும் ஒரு சில மாதங்களே உனக்கு இருக்கிறது என்றுச் சொல்லி மருத்துவர் அனுப்பி விட்டார். அவருக்கு எந்த வித கெட்டபழக்கமும் கிடையாது. திருமணத்திற்கும், அதற்குபிறகு பிறக்கும் குழந்தைக்கும் kuuta பொருள் சேர்த்து வைத்திருக்கிறார். இடையில் உடல் நிலை சரியில்லாத போது மருத்துவரிடம் காட்டி இருக்கிறார்.  ஏகப்பட்ட ஸ்கேன் அது இதுவென்று எடுத்துப் பார்த்து நுரையீரல் பாதிப்பு, கிட்னியில் ஒன்று போச்சு என்றுச் சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நிலையில் யார் மூலமாகவோ ஆசிரமத்திற்கு வந்தார்.

யாருக்கு எத்தனை நாள் என்பதை அந்த ஆண்டவர் தான் முடிவு செய்யனும், குரு நாதரிடம் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்லுங்கள். ஒன்றும் ஆகாது. பதினைந்து நாட்கள் சென்று எல்லா டெஸ்டும் செய்து விட்டு ஆசிரமத்திற்கு மீண்டும் வாருங்கள் என்று சொன்னேன். வருத்தத்தோடு சென்றார். எல்லா டெஸ்டுகளையும் மீண்டும் எடுத்துப் பார்த்தால் அனைத்து சரியாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். உடனே இங்கு வந்து விட்டார். அதுதான் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்” என்றார்.

”சரிங்க சாமி, ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது உடம்பு தேய்ப்பதற்கு மண்ணை எடுத்தேன். நீங்கள் வேண்டாமென்று தடுத்தீர்கள். அடுத்த நொடியில் எனது கையில் புத்தம் புதிய பீர்க்கின் குடல் கிடைத்தது. அதை வைத்து தேய்த்துக் குளித்தேன். மீண்டும் அதைக் காணவில்லை. அப்போது அது எப்படி வந்தது என்றும் எப்படிப் போனது என்றும் எனக்குத் தோன்றவில்லை. இப்போது கேட்கிறேன், அது எங்கிருந்து வந்தது?  எங்கே போனது எனச் சொல்லுங்கள்”

“அதுவா ஆண்டவனே, சொல்கிறேன்” என்றார்.


Tuesday, May 3, 2016

நிலம் (18) - அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கிடைக்குமா?

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 20.02.2015ம் வருடம் வெளியான ஒரு தீர்ப்பு பல்வேறு மக்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கியது. இந்தியாவில் வீடில்லா ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் முழுமையான தீர்வு என்பது எப்போது கிடைக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது. அரசு அறிவிக்கும் வீட்டு திட்டங்களைச் செயல்படுத்தும் தகுதியில் உள்ளவர்களின் சுய நலப் போக்கால் பலருக்கும் வீடு கட்டுவது பெரும் கனவாகவே இருந்து வருகிறது.

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போருக்கு வீடு கட்டும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு குறைந்த வட்டியில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்ட கடனும் அளிக்கிறது. இத்தனை வசதி வாய்ப்பும் இருந்தும் அதைச் செயல்படுத்திட பெரும் பிரயத்தனங்களை மக்கள் செய்ய வேண்டி உள்ளது. அவ்வளவு எளிதில் இவ்வகைத் திட்டத்தினை செயல்படுத்திட முடிவதில்லை. பல்வேறு ஆவணங்கள், அலைச்சல்கள் என்று அன்றாடம் கூலி வேலைக்குச் செல்வோருக்கு சாத்தியமில்லாத திட்டங்களாகத்தான் இவ்வகைத் திட்டங்கள் இருந்து வருகின்றன. 

இந்த நிலையில் ஏதோ ஒரு அரசு புறம்போக்கில் வீடு கட்டி 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்தால்,  அதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்கள் இருந்தால் தமிழக அரசின் சட்டத்தில் இடமுண்டு என்று வழக்கு எண். எம்.பி(எம்.டி) 1 / 2015 மற்றும் மேல்முறையீட்டு வழக்கு எண்.டபிள்யூ.பி(எம்.டி)1649/2015 மனுதாரர் வள்ளியம்மாள் தொடர்ந்த வழக்கில் மதுரைக் கிளை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.பி.ராஜேந்திரன் அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல அரசு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்போருக்கு ஒரு முறை வரன்முறை செய்யப்பட்டு, வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் பல்வேறு மாறுதல் செய்யப்பட்டன. அது தொடர்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது. இருப்பினும் அந்த உத்தரவு 2015ம் வருடம் வரை நீட்டிப்பும் செய்யப்பட்டது. அது பற்றிய அரசாணையை நீங்கள் கீழே படிக்கலாம். ஆகவே அடுத்து ஆட்சிக் கட்டிலில் ஏறும் அரசு ஏதாவது பட்டா வழங்க கால நீட்டிப்புச் செய்தால் புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருவோர் அந்த அரசாணையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு பட்டா பெற்றுக் கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு என்னை அணுகவும். உதவ முயற்சிக்கிறேன். 








Sunday, May 1, 2016

நிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்

சமீபத்தில் கொடைக்கானலுக்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். நண்பருக்கு வேண்டிய குடும்பத்தாரின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தினசரி வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

நண்பர் அவர்களிடமிருந்து சில ஆவணங்களை என்னிடம் கொடுத்து பார்வையிடச் சொன்னார். அனைத்தும் ஒரிஜினல் சொத்துப் பத்திரங்கள். அனைத்தையும் படித்துப் பார்த்தேன். அந்தக் குடும்பத்தின் தாத்தாவால் சுய சம்பாத்தியத்தால் கிரையம் பெற்று, வாங்கப்பட்ட பூமிகள் ஏக்கர் கணக்கில் இருந்தன. பட்டாவும் அவரின் தாத்தா பெயரில் இருந்தன. அந்தப் பூமிகளின் தற்போதைய நிலைமை என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக எனது லேப்டாப்பை உயிர்ப்பித்தேன். அந்தச் சொத்துக்கள் அனைத்தும் கோடிகள் மதிப்புக் கொண்டவை.

நிறைய பொருட்செலவுகள் செய்து பல மாவட்டங்களின் நில தொடர்புடைய ஆவணங்களை கணிணியில் வைத்திருப்பதால், இருக்குமிடத்திலிருந்தே எளிதில் அந்த பூமிகளின் தற்போதைய நிலையை அறிய நேர்ந்தது.

தற்போதைய சொத்துப் பத்திரம் வேறொரு பெயரில் இருந்தது. பட்டாவோ மற்றொருவர் பெயரில் இருக்கிறது. ஏன் இந்தப் பிரச்சினை என்று கண்டுபிடிப்பதற்காக அந்த ஆவணங்களின் நகல்களைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பி விட்டேன்.

1986ம் வருடம் நில அளவையின் போது புதிய சர்வே எண்கள், பட்டா எண்கள் வழங்கிய போது பல்வேறு முறைகேடுகளும், தவறுகளும் ஏற்பட்டன. உரிமையாளர் பெயர்களும் மாற்றப்பட்டன. அந்த நேரத்தில் நடந்த பல்வேறு குளறுபடிகளால் நில உரிமையாளர்களின் பல சொத்துக்களின் பட்டாக்கள் மாற்றப்பட்டன. போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டு பல சொத்துக்களை பலர் பறித்துக் கொண்டனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு மாத காலம் ஆயிற்று. 1986ம் ஆண்டு கால கட்டத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதை அறிந்தேன். மூலப் பத்திரங்கள் இல்லாமல் பல ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தேன். அனைத்து ஆவணங்களையும் தகுந்த முறையில் சேர்த்து அவர்கள் தான் உரிமையாளர்கள் என்பதை ஒரு ரிப்போர்ட்டாக தயார் செய்து அவர்களிடம் கொடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை விவரித்தேன். 

அந்தக் குடும்பமே கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்களே தகுந்த இடத்தில் முறையிட்டு சொத்தினைப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். அவர்கள் இனி கோடீஸ்வரர்கள். 

எனக்குரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு மன நிறைவுடன் வீடு திரும்பினேன். அன்று மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.

உங்கள் பாட்டனார் சொத்து ஆனால் எவரோ உரிமை கொண்டாடி வருகின்றார்களா? கவலையே பட வேண்டாம். அனைத்து ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வாருங்கள். சரியான தீர்வினைத் தருகிறேன்.

கோர்ட்டில் தீர்ப்பு பெற்று உங்கள் சொத்தினைப் பறித்துக் கொண்டார்களா? கவலை வேண்டாம். அந்தச் சொத்தினை மீண்டும் பெற்று விடலாம். அனைத்துக்கும் சட்டப்படியான தீர்வுகள் உண்டு.

அது மட்டுமல்ல உங்கள் சொத்தில் எந்த வித பிரச்சினை இருந்தாலும் சரி, ஆவணத்தின் நகல்களை எனக்கு அனுப்பி வையுங்கள். சரியான தீர்வினைக் கண்டுபிடித்து சரி செய்து விடலாம்.

உங்கள் சொத்தினை யாரோ ஒருவர் ஆக்கிரமித்து இருக்கின்றாரா? கவலை வேண்டாம். அவரை சட்டப்படி வெளியேற்றி விடலாம். உங்கள் சொத்தினை மீட்டு விடலாம். அதற்குரிய ஆவணங்களின் பிரதிகளுடன் என்னைச் சந்தியுங்கள்.

பிரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Friday, April 29, 2016

திருச்சி ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோவில் அருகில் வீட்டு மனைகள் விற்பனைக்கு

தமிழகத்தின் மத்திய பாகத்தில் அமைந்துள்ள திருச்சி மாநகரிலே அமைந்துள்ள ஸ்ரீரங்கம் வழியாகப் பாய்ந்தோடும் காவிரித்தாயின் மடியிலே எருந்தருளி இருக்கும் சுவாமி ஸ்ரீரங்கநாதப்பெருமானின் கோவில் சன்னதியிலிருந்து 7 நிமிடம் பொடி நடையில் அடைந்து விடும் தூரத்தில் (சுமார் 600 மீட்டர்), கொள்ளிடத்துக் கரை அருகில் செல்லும் சாலையின் வலது புறமாய், யாத்ரி நிவாஸ் தங்குமிடத்தின் அருகிலே சாலை வசதியுடன் அமைந்திருக்கிறது எமது வீட்டு மனைகள். கோவிலின் கிழபுறம் சன்னதியிலிருந்து சடுதியில் நடந்து சென்று சேரும் தூரத்தில் அமைந்திருக்கிறது. 

இந்த இடத்தினை கூகுள் மேப்பில் காண விரும்பினால் இந்தப் புகைப்படத்தினை கிளிக் செய்து பார்த்தீர்கள் என்றால், படத்தின் பச்சை வண்ணம் இட்டிருக்கும் பகுதிதான் எமது மனைகள் இருக்கும் பகுதி. சாலைகள் அனைத்தும் அரசுச் சாலைகள்.


கூகுள் மேப்பிற்குச் சென்று  10.865110, 78.696000 இந்த அளவீடுகளை உள்ளீடு செய்து பார்த்தீர்கள் என்றால் இடத்தின் படம் மிகத் தெளிவாய் தெரியும்.

30 அடிச் சாலை வசதியுடன் தனித் தனி மனைகளாக விற்பனைக்கு வைத்திருக்கிறேன். மிகவும் குறைந்த விலை. உடனடிக் கிரையம், வீடுகள் வேண்டுவோருக்கு தரமான வீடுகள் கட்டித்தரப்படும்.

தமிழகத்தின் பூலோக சுவர்க்கமான ஸ்ரீரங்கத்திலே, அதுவும் ஸ் ரங்கன் கோவில் அருகிலும், காவிரியாற்றின் கரையோரமாகவும் வீடுகள் கட்டி அமைதியாக வாழ விரும்புவோருக்கு அற்புதமான இடம் அது.

மிகவும் குறைந்த அளவு மனைகளே இருக்கின்றன. விரைந்து தங்களுக்கான இடத்தினை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

வீட்டு மனைகளின் அளவுகளையும், விலையையும் தெரிந்து கொள்ள அல்லது வீட்டு மனையினைப் பார்வையிட விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

அழைக்க : 96005 77755 
மேலும் மேலதிக விபரங்களுக்கு : covaimthangavel@gmail.com

- அன்புத் தோழன் - கோவை எம் தங்கவேல்