குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, May 30, 2013

மனிதன் எப்படி வாழ வேண்டும்?


பூமியில் பிறப்பெடுத்த மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது. ஆனால் விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்த கன்றுக்கு பசு தயாரானதும் பசு வேறு கன்று வேறு என்றாகி விடும். அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன.

ஆனால் மனிதப் பிறவியை எடுத்துக் கொண்டால் குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்து அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

வளர்வதற்குப் பெற்றோர் உதவி தேவை

படிப்பதற்கு ஆசிரியர் உதவி தேவை

சந்ததிக்கு பெண்ணின் உதவி தேவை

இப்படி அவனின் ஒவ்வொரு நொடியிலும் பிறரிடமிருந்து அவன் பெற்றுக் கொள்வது அதிகம். ஆனால் தற்போதைய கலிகாலத்தில் பெற்றுக் கொள்பவன் பிறருக்கு கொடுக்க மறுக்கிறான். அதை பணம் என்ற அளவுகோலை கொண்டு நான் ஏன் கொடுக்க வேண்டும்? என்று விதண்டாவாதமாய் கேள்வி கேட்கின்றான். அப்படிக் கேள்வி கேட்போருக்கு ஒரு செய்தி இதோ.

எனது மாஸ்டர் என்னிடம் சொன்ன ஒரு உண்மைச் சம்பவம்.

மாஸ்டர் அவரின் நண்பரின் கடைக்குச் சென்றிருந்த போது அழகிய யுவதி ஒருவர் வந்து 500 ரூபாய்க்குப் பென்சில் பேனாக்கள் வாங்கிச் சென்றிருக்கிறார். 

நண்பர் மாஸ்டரிடம்”இப்பெண்ணைப் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாய் தெரிகிறதா?” என்று கேட்டிருக்கிறார்.

”ஒன்றும் தெரியவில்லையே” என்றார் மாஸ்டர்.

“இப்பெண் எப்போது சாகும் என்று தெரியாது. முற்றிய நிலையில் புற்றுநோயால் அவதிப்படுகிறார். ஆனால் அப்பெண்ணின் முகத்தில் அதற்கான ஏதாவதொரு அறிகுறி தெரிகிறதா? இந்தச் சூழலிலும் வெறும் 5000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். வாங்கும் சம்பளத்தில் 500 ரூபாயை தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய அனாதை விடுதிக்கு பென்சில், பேனாவாக வாங்கிக் கொடுத்து வருகிறார் “ என்றார் மாஸ்டரின் நண்பர்.

மேலே இருக்கும் சம்பவத்தைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. 

மாஸ்டர் தொடர்ந்து, ”மனிதன் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். இங்கு நாம் பெற்றிருப்பது எதுவுமே நம்முடையது அல்ல. நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் நமக்கு கொடுத்துச் சென்றது. மனிதன் அதை மறந்து வாழ்கிறான். அதனால் துன்பத்தில் உழல்கிறான்” என்றார்.

அப்பெண்ணின் நன்றி மறவாமையை நினைத்து எனக்கு ஒரு நிமிடம் சந்தோஷமாய் இருந்தது. அவரின் உடல் நிலையை நினைத்து மனம் கனக்கிறது.
-

Monday, May 27, 2013

குல்மொஹர் மரங்களில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன

விடிகாலைப் பொழுதில் தினம்தோறும் வீட்டின் அருகில் மயில்கள் அகவிக் கொண்டிருக்கும். அச்சத்தம் எனக்கொரு ஆர்வத்தைக் கொடுக்கும். கிட்டத்தட்ட இருபது மயில்களுக்கு மேல் இருக்குமென்று எண்ணுகிறேன். அதில் இரண்டு மயில்கள் எனது மருத்துவ நண்பரின் வீட்டின் மீது நின்று வெடுக் வெடுக்கென்று தலையை அங்குமிங்குமாய் திருப்பிக் கொண்டிருக்கும். மிக வேடிக்கையாக இருப்பினும் அவற்றின் அழகு என்னை குதூகலத்தில் கொண்டு போய் தள்ளி விடும். பூக்கள் விரிந்தாற் போல ஒரு மகிழ்ச்சி எனக்குள்ளே பரவும். பூக்களை நாமெப்போதும் ரசிப்பதில்லை. பூக்கள் என்றவுடன் பெண்கள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். ஆகையால் உண்மையான பூக்களை நாம் ரசிப்பது இல்லை. எனினும் அது யாருக்காகவோ பூத்துக் கொண்டே இருக்கின்றன.

வாழ்க்கையும் அவ்வாறுதான். ஆனால் அதை வாழத்தான் எவருக்கும் நேரமில்லை. அல்லது தெரியவில்லை. எல்லோரும் அதை வெகு சிக்கல்களுக்குள்ளாக்கி பின் துயரத்தில் வீழ்கிறோம்.

வசியம் என்பதைப் படித்து விட்டு, என்னை அழைக்கும் நபர்கள் எவரும் தன் வாழ்வினைப் பற்றிய படிதல் இல்லாமலிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம் என்று தெரியவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தெரியுமா? 

பாதை ஒன்று தெரிகிறது. அதில் நடக்க ஆரம்பிக்கிறோம். தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறோம். ஏன் நடக்கிறோம், எதற்காக நடக்கிறோம் என்பதெல்லாம் தெரியாது. நமக்கு முன்னே இருப்பவர் நடக்கிறார். நானும்  நடக்கிறேன் என்பார்கள். இப்படித்தான் இருக்கும் அவர்களின் வாழ்க்கை.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறது அல்லவா? புரியாதவர்களுக்கு ஒன்றும் சொல்வதிற்கில்லை.

குல்மொஹர் மரங்களில் பூக்கள் அழகாய் பூத்திருக்கின்றன. ஒரு இலைகளைக் கூட காணமுடியவில்லை. வெறும் பூக்கள் தான் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அழகாய் உங்களுக்கு ஒன்றினைச் சொல்ல விரும்புகின்றன. 

அதைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கை அழகானது. அதை அர்த்தமுடன் வாழ முயலுங்கள்.

அன்பைத் தவிர வேறெதுவும் வளர்வதில்லை. அது கொடுத்தால் கூடிக் கொண்டே செல்லும். இன்னும் பெருகி வழிந்து கொண்டே இருக்கும். எவரெல்லாம் அன்பில் நனைகிறார்களோ அவர்களுடன் இறைவன் இருப்பான் என்கிறார் எனது மாஸ்டர். அன்பினைக் கைக்கொள்ளுங்கள். இறைவன் உங்களின் சொற்களில் வந்து நிற்பான்.

வாழ்க வளமுடன்

Wednesday, May 15, 2013

நேர்மைக்கு முன்னால்


சமீபத்தில் சவுக்கு இணையதளத்தில் நேர்மையே உன் விலை என்ன?என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அக்கட்டுரை இந்தியாவின் தற்போதைய நிலையை சரியாகச் சுட்டிக்காட்டி இருந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கும் கார்ப்பொரேட் கம்பெனிகாரர்களின் மன அசைவுக்கு ஏற்பத்தான் அரசியலும், நாடும் அசையும். இதைத் தெரிந்து கொண்டவர்கள் பிசினஸ் புள்ளிகளாக மாறுகிறார்கள். தெரியாதவர்கள் நேர்மை பேசி விரக்தியில் விழுவார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு என்பவர்கள் ஜெயிக்கின்றார்கள். அதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் தோல்வியைத் தழுவுகின்றார்கள். இது கார்ப்பொரேட் தத்துவம். வாழ்வியல் தத்துவம் வேறு. எந்த ஒரு கார்ப்பொரேட்டும் ஒரு காலத்தில் வீழ்ச்சியைத் தான் சந்திக்கும். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கழுகாகி விட முடியாது அல்லவா? இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம். இப்போது விஷயத்திற்கு வரலாம்.

கலிகாலம் வந்து விட்டதே, உன் பொருள் என் பொருள், என் பொருள் உன் பொருள் என்று சண்டை சச்சரவுகள் இல்லாமால் வாழ்ந்து வரும் மனிதர்களிடையே எப்படிப் பிரச்சினையை உருவாக்குவது என்று கவலைப்பட்டார்களாம். பளபளவென மின்னும் தங்கக் கட்டிகளை தெருவில் இறைக்க அன்றிலிருந்து மனிதனுக்குள் தனக்கு என்ற ஆசை வேர்விட்டு பிரச்சினை துளிர் விட்டு இன்றைக்கு அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கும் வரை வந்து விட்டது.

இப்படியான காலகட்டத்திலும் தர்ம தேவதையின் தவப்புதல்வர்கள் இப்பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு தர்ம தேவையின் தவப்புதல்வனின் கதை தான் இது.

திருச்சியில் மிகப் பெரிய கார்ப்பொரேட் கம்பெனி ஒன்று இருக்கிறது. அக்கம்பெனியின் முதலாளி பெரும் தனக்காரர். எவரையும் மதிப்பது கூட இல்லை. பணமிருந்தால் போதும் எவனையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற எள்ளல் கொண்டவர் அவர். இப்படிப்பட்ட தடித்தனம் மிக்க அவர் திருச்சியின் பிரதான சாலையில் இடமொன்றினை வாங்கினார். வாங்கியவுடன் இரண்டடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி விட்டு, நான்கு மாடிகளைக் கட்டி விட்டார். 

கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் இந்த சட்டமீறலைக் கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கச் சென்ற போது, அவரை அலுவலகத்திற்குள் விடவே இல்லை. கேட்டிற்கு வெளியில் இருக்கும் செடியின் மீது உன் நோட்டீஸை ஒட்டி விட்டுப் போ என்று எகத்தாளமாய் எக்காளாமிட்டிருக்கிறார் முதலாளி. அதிகாரி நேர்மைக்கு பெயர் போனவர். தர்ம தேவதையின் வாரிசு. என்ன அவமானப்படுத்தினாலும் தன் கடமையைச் சரிவரச் செய்யும் தன்னம்பிக்கைக்காரர். அடுத்த சில நாட்களில் பொக்லினைக் கொண்டு வந்து அத்துமீறிக் கட்டப்பட்டிருந்த இரண்டு மாடிகளை இடித்து தள்ளி விட்டுச் சென்று விட்டார்.

பணமிருந்தும், புகழ் இருந்து, அதிகாரவர்க்கத்தினரின் துணை இருந்தும் கட்டிட இடிப்பினை அவரால் தடுக்க முடியவில்லை. அவரால் செய்ய முடிந்தது என்ன தெரியுமா? அந்த கார்ப்பொரேஷன் அதிகாரிக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான். இதை அவர் தனது வெற்றி என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கும் சேர்ந்து மிகப் பெரிய ஆப்பினைச் சொருகினார் அந்த அதிகாரி.

மாற்றலாகிப் போன இடத்தில் அவருக்கு நெருக்கமான ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியைச் சந்தித்து இருக்கிறார். ஐயேயெஸுக்கு ஆச்சரியம். திருச்சியில் இருந்தவர் திடீரென இங்கு வந்து விட்டாரே என்ன காரணம் என்று கேள்வி கேட்க, அவர் விவரத்தைச் சொல்லி இருக்கிறார். அந்த ஐ ஏ எஸ் தன் நண்பரை மாற்றம் செய்த அந்த கார்ப்பொரேட் முதலாளிக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். 

அடுத்த ஒரு வாரத்தில் அந்த நிறுவனத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்து. அத்தனை அக்கவுண்டுகளும் லாக் செய்யப்பட்டது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. திக்பிரமை பிடித்தவர் போலாகி விட்டார். முதலாளிக்குத் திகில் பிடித்து விட்டது. கிலி பிடித்தாட்ட ஆள் பீதியில் உறைந்து போனார். கோடிக்கணக்கான ரூபாய்க்கு கணக்குக் காட்ட வேண்டுமே? என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். தர்மம் நின்று கொல்லும் என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும்.

எந்த ஒரு போலியும் நேர்மைக்கு முன்னே தூசிக்குச் சமமானது என்பதை அனுபவத்தில் அந்த முதலாளி நிச்சயம் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.


Friday, May 3, 2013

என்ன செய்வீர்கள்?

நானும் இல்லத்தரசியும் மெடிக்கலுக்கு மருந்து வாங்கச் சென்றிருந்தோம். பையன் விளையாடும் போது தலையில் இடித்துகொண்டான். தலையில் புசுக்கென்று வீங்கிக் கொண்டது. சரியான டென்ஷன். இல்லத்தரசி மருந்தகத்தில் நின்று கொண்டிருந்தாள். நானோ தகிக்கும் வெயிலில் நின்றிருந்தேன்.

அப்போது என் வண்டிக்கருகில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. 

“சார், வண்டிக்கு எங்கே வீல் போட்டீர்கள்?” என்று கேட்டார்.

வெயிலி இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டே, அவருக்கு விபரங்களைச் சொன்னேன்.

“யாருக்கு சார்? “ என்று கேட்டேன்.

”என் பெண்ணுக்கு சார் ! மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டாள். என்னென்னவோ செய்து பார்த்தோம். எங்கெல்லாமோ ட்ரீட்மெண்ட் பார்த்தோம். ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு காலை எடுக்க வேண்டியதாகி விட்டது” என்றுச் சொல்லி கண்கலங்கினார்.

அடுத்து அவர் சொன்னது, “பையனுக்கு மூளைக்காய்ச்சல் வந்து இடுப்புக்கும் கீழ் செயலிழந்து விட்டது”.

கேட்ட எனக்கு திகீர் என்றது. அவருக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்தேன். அவரின் மனவலி எனக்குள் பரவியது. அவருக்கு கோடிகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது. இருப்பினும் என்ன செய்வது? 

ஏன் இப்படி ஆனது அவருக்கு என்று எனக்குப் புரியவில்லை.

எத்தனை கோடிகள் இருப்பினும், எத்தனை அதிகாரத்தில் இருப்பினும், நாட்டின் உயர்ந்த பட்ச பதவியில் இருப்பினும் பிள்ளைகளுக்கு என்று வந்து விட்டால் அந்தக் கோடிகளால் என்ன செய்ய முடியும்? அதிகாரத்தால் என்ன செய்ய முடியும்? கையைக் கட்டிக் கொண்டு அழுதுதான் புரள வேண்டும்.

பிரதமர் நண்பராக இருந்தாலும் அவரால் என்ன சாதிக்க முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். இதுதான் வாழ்க்கை. இது தான் உண்மை. ஆனால் எவரும் அதைப் புரிந்து கொள்வதே இல்லை.

வழியில் செல்லும் போது எவனாவது காரில் இடித்து விட்டால் அவ்வளவுதான். குதி குதியென்று குதிப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் அடிமுட்டாள்கள் என்று கருத வேண்டும்.

ஒரு நிமிடம் யோசியுங்கள். ஒரு தத்துவம் புரியும். இதோ ஒரு சித்தரின் பாடல் உங்களுக்காக.

தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ குதம்பாய் நாடி வருவதுண்டோ

போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான் வருமோ குதம்பாய் சாம்போது தான் வருமோ

காசினி முற்றாயுள் பைவசம் ஆயினும்
தூசேனும் பின்வருமோ குதம்பாய் தூசேனும் பின்வருமோ

உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்
பெற்றார் துணையாவரோ குதம்பாய் பெற்றார் துணையாவரோ

மெய்ப்பிணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பிணி ஏதுக்கடி குதம்பாய் பொய்ப்பிணி ஏதுக்கடி

விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் மண்ணாசை ஏதுக்கடி

சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
யானையும் நில்லாதடி குதம்பாய் யானையும் நில்லாதடி

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்கா தழியுமடி குதம்பாய் தங்கா தழியுமடி

கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வராதடி குதம்பாய் கூடவே வராதடி

- குதம்பைச் சித்தர்




Thursday, March 7, 2013

நிலம் (1) - நிலத்தை திருட முடியுமா?


எல்லா டாக்குமென்டுகளும் சரியாக இருக்கின்றன. வரி கட்டுகிறோம். நிலத்தின் அனுபவ பாத்தியமும் நம்மிடம் இருக்கிறது. நாம் தான் நிலத்தின் உரிமையாளர் என்று நம்பிக்கையோடு இருப்போம். எல்லா அனுபவ உரிமையும் நம்மிடம் இருந்தாலும் நம் நிலத்தை வேறொருவர் விற்க முடியுமா? என்று கேட்டால் ஆம் என்று சொல்ல முடியும். எப்படி சாத்தியம் என்கின்றீர்களா? 

இதோ எங்களிடம் வந்த ஒரு வழக்கின் விபரம் உங்களுக்காக.

சமூகத்தில் பிரபலமான ஒருவரின் நிலம் அது. தற்போதைய விலையோ கோடானுகோடி. அப்பிரபலம் காலமாகி விட அவரின் குடும்பத்தாருக்கு நிலம் இருக்கும் இடம் தெரியும். அத்துடன் விட்டு விட்டார்கள்.இப்படியான ஒரு சூழலில் வில்லாதி வில்லன் ஒருவன் இந்த நிலத்தின் மீது கண் வைக்கிறான். காரியங்கள் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்கின்றன.

அந்த இறந்து போன பிரபலத்தின் தாத்தாவின் பெயரும், வில்லாதி வில்லனின் தாத்தாவின் பெயரும் ஒன்றாக இருக்கிறது. இனிஷியலும் ஒன்றே. வில்லாதி வில்லன் அந்த நிலத்தை தன் தந்தையின் நிலம் என்றுச் சொல்லி, கோர்ட்டில் அதன் உரிமையாளர் என்று ஆர்டரும் வாங்கி விடுகிறான். அதன் பிறகு அந்த நிலத்தை வேறொருவரிடம் விற்றும் விடுகின்றான். நிலத்தின் உண்மையான உரிமையாளர் அவ்விடத்தில் இல்லாத காரணத்தால் அந்த நிலத்தை விற்று, அதை பிளாட் போட்டு விற்று விடுகின்றார்கள்.

இந்தச் சூழலில் பிரபலத்தின் வாரிசுகள் நிலத்தைப் பார்வையிட வந்த போது, வில்லாதி வில்லன் செய்து வைத்திருக்கும் வில்லத்தனத்தை அறிகின்றார்கள். எங்குச் சென்றாலும் அத்தனை டாக்குமெண்டுகளும் முற்றிலுமாய் மாற்றப்பட்டு இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். (வழக்கு முடிய எத்தனை ஆண்டுகாலம் ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்) 

எப்படி இப்பிரச்சினையில் இருந்து வெளிவருவது? 

நிலம் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்குமா? 

இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் நம்மிடம் இந்தப் பிரச்சினை வருகிறது.

இந்தப் பிரச்சினையில் உண்மையான உரிமையாளரின் உரிமையை எப்படிக் கண்டுபிடித்து நிலை நாட்டுவது?

அதை சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து நிலத்தினை மீட்டெடுக்க உதவினோம். 

குறிப்பு : ரெவன்யூ சர்வே ரெக்கார்டு என்பது வெகு முக்கியமான நிலம் சம்பந்தப்பட்ட அரசு ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளர்களின் பெயர்கள் இந்த ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தவறும் பட்சத்தில் இது போல பிரச்சினைகள் வரக்கூடும். எதிர்காலத்தில் நிலம் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்கின்றார்கள். ஆகவே நிலம் வைத்திருப்போர் அவசியம் கவனிக்க வேண்டியது இந்த ஆவணம்தான். வேறேதேனும் உதவிகள் தேவைப்பட்டால் என்னை அழைக்கவும். ஆலோசனைகள் நிச்சயம் தருவேன்.

Wednesday, March 6, 2013

புரியும் புதிர் ஒன்று


மனித வாழ்க்கையின் ரகசியம் 100 சதவீதம் என்றால் அதில் அரை சதவீதத்தைக் கூட அறிவியலாலும், பிற எந்த புற விஞ்ஞானத்தாலும் இது காறும் அறிந்து கொள்ள முடியவில்லை. இயற்கை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குள் தான் சக்தியே பிறக்கிறது. விலக்கல், ஈர்ப்பு சக்திகளிடையே பிறக்கிற மின்சாரம் மாயையிலிருந்து பிறக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் பொய் தோற்றங்களான ஏற்றம் இறக்கம், நன்மை தீமை, இன்பம் துன்பம், இரவு பகல் போன்ற மாயையிலிருந்து பிறப்பவை தான் மனித குல வாழ்வு. இந்த பொய் தோற்றங்கள் எப்போது ஒரு மனிதனை பாதிக்காது இருக்கின்றதோ அன்று அவன் படைப்பின் ரகசியத்தை அறிந்தவனாகின்றான். மனிதன் தன் வாழ்வு நிரந்தரமானது என்று நினைக்கிறான். ஆனால் அவனது வாழ்வு முடிதற்குரியது. அதை அவன் அறிந்திருந்தாலும் அவனைச் சுற்றி இருக்கும் மாயை அவனை அந்த உண்மையை அறியாவண்ணம் விலக்கி வைக்கின்றது.

வாழ்க்கை எனும் புதிரை விஞ்ஞானத்தால் விடுவிக்க முடியாது. இந்தச் செய்தி நம்பிக்கை இல்லாவிட்டால் உண்மையிலேயே பயங்கரமானதாகும். மனிதனின் எண்ணத்திற்கு முன்னால் இதுவரை வைக்கப்பட்ட நிலையான புதிர்களில் தலையானது வாழ்க்கை என்ற புதிரே - மார்கோனி

இந்திய ஆன்மீகப் பாரம்பரியத்தின் முக்கிய யோகியான பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை ஒன்று.

அவர் இந்தியாவில் வித்யாலயா நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு சிறிய மான் குட்டி ஒன்றினை அவர் வளர்த்து வந்தார். அது அவருடனே வசித்து வந்தது. இப்படியான ஒரு நாளில் விடிகாலையில் பணி நிமித்தமாய் வெளியில் செல்லவதற்கு கிளம்பிய யோகியார், மான் குட்டிக்கு காலையில் உணவினைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். வித்யாலத்தில் பயின்று வந்த மாணவன் ஒருவன் அந்த மான் குட்டிக்கு மீண்டும் உணவளித்து விடுகிறான். அதன் காரணமாய் மான்குட்டி நோய்வாய்ப்பட்டு, படுத்தே இருந்திருக்கிறது. மாலையில் வித்யாலயாவிற்கு வரும் சுவாமி மான் குட்டியின் உயிர் ஊசலாடுவதைக் கண்டு வேதனையுறுகிறார். இறைவனிடம் வேண்டுகிறார். 

இறை அன்பின் காரணமாய் இறையின் மீது பற்றுக் கொண்டவர்களின் வேண்டுதலுக்கு இறைவன் உடனே செவி சாய்ப்பான் என்பது ஞானிகளுக்குத் தெரியும். “இறைவா, இம்மான் குட்டியின் உயிரைக் காத்து அருளுக” என்று பிரார்த்தித்த யோகியாரின் அன்றிரவு கனவில் அவருக்கு திருப்பம் ஒன்று ஏற்பட்டது.

அவரின் கனவில் வந்த அந்த மான் குட்டி, “சுவாமி, நான் இந்த உடலை விட்டு நீங்க விரும்புகிறேன், உங்கள் பிரார்த்தனை எனது விருப்பத்திற்கு இடையூறாய் இருக்கிறது” என்றது. திடுக்கிட்டு விழித்தெழுந்த யோகியார் மாபெரும் உண்மையை புரிந்து கொள்கிறார்.

நீங்களும் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? புரியாதவர்கள்  மீண்டும் படியுங்கள்.

இன்னும் வரும் ..... 
கட்டுரை ஆக்கத்திற்கு உதவி : ஒரு யோகியின் கதை ( நன்றி )

சித்த வாழ்க்கை


மனித உயிர்கள் உருவான நாளில் இருந்து இந்த நாள் வரையிலும் கோடானு கோடிபேர் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். மனித சமூகம் அத்தனை நபர்களையும் நினைவில் வைத்துக் கொண்டாடியதில்லை. பாரதம் மட்டுமல்ல உலகெங்கும் நன்னெறிகளைப் போதித்தவர்களையும், நல்லவைகளைச்  செய்தவர்களையும், கொடுங்கோலர்களையும் தான் உலகம் மறவாமல் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. ஏன் இப்படி? லோகாயதாய வாழ்க்கை நெறிகளில் பொருள் தேடும் வாழ்க்கையைத்தான் மாயை வாழ்க்கையின் அர்த்தமுள்ளதாக காட்டும். பணமில்லை என்றால் வாழ்க்கையில்லை என்கிறது லோகாயதாய வாழ்க்கை. இந்த வாழ்வின் பின்னால் செல்பவர்களை உலகம் மறந்து விடுகிறது.பொருள் பற்றிய எந்த வித பிரக்ஞையும் இன்றி வாழ்ந்தவர்கள் பின்னால் தான் பொருளைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். நாட்டை ஆளும் அரசனின் அவையிலே காவி உடை உடுத்தியவருக்குத்தான் முதல் மரியாதை.. அங்கு செல்வத்திற்கு இடமில்லை. அருளுக்கு மட்டுமே இடமுண்டு.

”கையில் ஒரு பைசா பணமில்லை. அதனால் எனக்கு வருத்தமில்லை. ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது அதனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. நாளைக்கு எனக்கு பணம் தேவை. ஆனால் என்னிடத்திலோ பைசா இல்லை. அவன் எங்கிருந்தோ பணம் வாங்கிக் கொடுப்பான். அது கடனாகக் கூட இருக்கலாம். அக்கடனைக் அவன் தான் கட்ட வேண்டும். இல்லையென்றால் அந்த அவமானம் அவனுக்குத்தான். இதுதான் சித்த வாழ்க்கை” என்றார்  எனது நண்பர்.

கிட்டத்தட்ட 90 கோடிக்கும் மேல் சொத்து அவருக்கு இருந்தது. வக்கீல் தொழில் செய்து வந்தார். வக்கீல்களுக்கு எப்போதுமே உண்மை பேச முடியாது. உண்மைக்கு எதிராய் தான் இருக்க முடியும். ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே உண்மை பேசலாம். ஆனால் பெரும்பாலும் உண்மைக்கு எதிராய்த்தான் தொழில் செய்ய முடியும். இப்படியான ஒரு தருணத்தில் இந்த வக்கீலுக்கு “காதறுந்த ஊசியும் வராது கடைக்கே” என்ற வாக்கியம் பட்டினத்தாருக்கு ஞானத்தை விழித்தெழச்செய்தது போல அவருக்கும் உண்மைக்கு எதிரான தொழில் விழிப்பு நிலையைத் தர, வீடு விட்டு குடிசையில் வாழ ஆரம்பித்தார். அங்கும் அவரின் உறவுகள் செல்ல ஆரம்பிக்க, யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்று விட்டார். நீண்ட நாட்கள் சென்றன. காசியிலிருந்து வக்கீலின் குடும்பத்தாருக்கு அழைப்பு வர, அங்குச் சென்று  பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் வாழ அருகதையற்ற ஒரு அறையில் வாழ்ந்து இறையடி சேர்ந்திருக்கிறார் அந்த வக்கீல். கோடி கோடியாய் சொத்து இருந்தும் ஏன் அவர் இப்படியான ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். மனித வாழ்வின் விடையே அவர்தான்.

மனிதனிடம் இருக்கும் எல்லாமும் அவனிடமிருந்து சென்று விடும். மனிதனுடன் என்றும் இருப்பது அவன் செய்த தர்மம் மட்டுமே.

இன்னும் வரும் .....

Sunday, January 27, 2013

கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன்


அன்றைக்கு வெள்ளிகிழமை. முட்டம் நாகேஸ்வரரையும், முட்டத்து வாளியம்மனையும் தரிசித்து வரலாம் என்று ஆலாந்துறை புறப்பட்டேன்.  தன் வாழ்நாளில், விபரம் தெரிந்த நாள் கொண்டு காசைக் கையால் தொடாமலே வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ‘சத்குரு ஞானி வெள்ளியங்கிரி சுவாமிகள்” அவர்களைத் தரிசித்து வாருங்கள் என்ற நண்பரின் அறிவுரையின் படி, முட்டம் நாகேஸ்வரர் ஆலயத்திலிருந்து செம்மேடு வழியாக பூண்டி வெள்ளியங்கிரி ஆலயம் செல்லும் வழியில், வன காளியம்மன் ஆலயத்தின் இடதுபுறம் செல்லும் வழியில் சென்றேன். வலது புற பாதை வழியாகச் சென்றால் ஈஷா யோக மையம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இடதுபுறச் சாலையில் சென்றால் புளியமரங்கள் நிரம்பிய காடு தென்படுகிறது. அங்கிருக்கும் பதி வரை செல்லும் சாலை அங்கேயே முடிந்து விடுகிறது. சத்குருவின் ஜீவ சமாதிக்கு ஒற்றை அடிப்பாதைச் செல்கிறது. அதில் சென்று ஆஸ்ரமத்தை அடைந்தேன்.

சத்குருவின் ஜீவ சமாதியில் வேலை நடந்து கொண்டிருந்தது. தியானம் செய்ய முடியவில்லை. செல்லும் அனைவருக்கும் உணவளிக்கின்றார்கள். ஜீவசமாதியின் அருகில் செல்ல முடியவில்லை. கல் பதிக்கின்றார்கள். அடுத்த வாரத்திற்குள் வேலைகள் நிறைவு பெறும் என்றார்கள். ஜோதி சுவாமி, அருண், சீனிவாசன் ஆகியோரிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.

ஈஷாயோகமையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கி வரலாம் என்று சென்றேன்.செல்லும் வழியில் தென்பட்ட ஒருவரை நிறுத்தி ஈஷா யோகமையம் செல்லும் சாலைதானே இது என்று விசாரித்தேன். அது வேறு பாதை என்றுச் சொன்னார். பைக்கை திருப்பியவுடன், “இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள், பக்கத்தில் தான் வெள்ளியங்கிரி சுவாமி திருக்கோவில் இருக்கிறது, கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன் ” என்றார்.

சுற்றிலும் காடு, அதன் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் கருமை படர்ந்த தார்ச்சாலை. கணேசர் அடிக்கடித் தென்படுவார் என்ற எச்சரிக்கை வேறு மனதுக்குள் நிழலாட திக் திக் நெஞ்சுடன் வெள்ளியங்கிரிக்கு பயணமானேன்.

ஏழுமலை தாண்டி இருக்கும் பூண்டி வெள்ளியங்கிரி சுவாமி கோவிலின் அடிவாரத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று சேர்ந்தேன். வருடத்தின் ஒரே ஒரு நாள் நடக்கும் பூப்பந்தல் விழாவாம் அன்று. நல்ல தரிசனம். ஆலயத்தில் தீபம் அருளி, மலர்களும், பூக்களும், பிரசாதமும் தந்தார்கள். சத்குருவைத் தரிசிக்கச் சென்றால், அவர் இறைவனைத் தரிசிக்க அனுப்பி வைத்து விட்டார். பூண்டி கோவிலுக்குச் செல்லும் நினைப்பே என்னிடத்தில் இல்லை. எல்லாம் சத்குருவின் ஆசீர்வாதம்.

நிறைவுடன் திரும்பிய வழியில் மையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். இதோ கீழே இருக்கும் படத்தில் இருப்பவர்தான் வெள்ளியங்கிரி சுவாமி.



வெள்ளியங்கிரி சுவாமி ஆஸ்ரமத்திற்கு அருகில் இருக்கும் பதியில் வசிக்கும் கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும்,  மலைகளில் அலைந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு, கோவை டவுனிற்குள் வந்து சித்த மருந்துக் கடைகளிடம் மூலிகைகளைக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு போய் சமைத்து அவர்களுக்குத் தருவாராம். மனிதனுக்கு என்றுமே தீரவே தீராத பிணி “பசிப்பிணி” அல்லவா. 

பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கோ அல்லது மையத்திற்கோ செல்பவர்கள் நான்கைந்து நிமிடங்கள் ஆற்றங்கரையோரத்தில் அமைதியாய் அமைந்திருக்கும் வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவ சமாதியில் அமர்ந்து தியானம் செய்து விட்டுச் செல்லுங்கள். வற்றவே வற்றாத மூலிகை ஆற்றில் ஆர தீர குளித்து விட்டுச் செல்லுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். 

ஆஸ்ரமம் செல்ல விரும்புபவர்கள் இப்போது ஆஸ்ரமத்தில் தங்கி இருக்கும் ஜோதி சுவாமியிடம் பேசி விட்டுச் செல்லுங்கள். இவர் திடீரென்று குகை, மலை என்று சென்று விடுவார். நீங்கள் அங்குச் சென்றால் ஒருவாய் தண்ணீராவது தர ஆள் வேண்டுமே அதற்காகத்தான் சொல்கிறேன். அது மட்டும் காரணமல்ல. அங்குச் செல்பவர்களுக்கு உணவளிக்கின்றார்கள். சொல்லாமல் சென்று விட்டால் அளவோடு சமைக்கும் உணவை நமக்கு அளித்து விடுவார்கள். தொலைபேசி எண் : 98948 15954. 



Thursday, January 17, 2013

நம்பினால் நம்பலாம்

மனையாளும், குழந்தைகளும் பொங்கல் விழாவிற்காக சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். எனக்குப் இது போன்ற பாவனை விழாக்கள், சடங்குகள் இவற்றில் எல்லாம் நம்பிக்கைகள் இல்லாது போய் விட்டது. அனுபவம் தந்த பாடம் இது. இதைப் பெறுவதற்கு நான் கொடுத்தது அனேகம்.

கலாச்சாரத்தின் மீது நான் கொண்டிருக்கும் பிடிப்பானது அதிகம். அது மனிதனுக்கு நல் வாழ்க்கைக்கு உதவுகிறது என்பதால்.அதன் காரணமாய் மனிதர்கள் சமூகத்தின் மீது பற்று வைக்கும் இவ்வகை விழாக்கள் பல்லாண்டுகளாய் தொடர்ந்து வர, குழந்தைகள் மனதில் அவை பதிய வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதன் காரணமாய் இவ்வகை விழாக்களை விமரிசையாக கொண்டாடும் கிராமத்தை நோக்கி குழந்தைகளை அனுப்பி வைத்தேன்.

தனிமை என்பது எப்போதும் மனிதனுக்கு உள்ளுணர்வைத் தூண்டி விடும் அற்புதத்தின் தருணம். நான்கு நாட்களின் தனிமை தந்த உற்சாகம் இன்னும் ஒரு வருஷத்திற்கு இருக்கும். அப்படியான தனிமையின் ஊடே கோவையின் ரேஸ்கோர்ஸில் அமர்ந்திருந்தேன்.

அழகான நடைபாதை. அழகிய யுவன்களும், யுவதிகளும், வாழ்க்கையில் பெரும்பகுதியைக் கடந்து விட்டவர்களும் நடந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது கிட்டத்தட்ட அறுபது வயது மிக்க முதியவர் ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்தார். வந்ததும் என்னிடம் பேச ஆரம்பித்தார்.

“ மனிதனுக்கு எப்போதும் ஒரு கூட்டம் துணையாக இருக்க வேண்டும். அது நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருப்பின் நலம். கோபத்தை விடுத்து இப்படிப்பட்ட நல்ல நண்பர்களை யார் யாரை எந்தெந்த வட்டத்தில் வைக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு அதன் படி அவர்களை வரிசைப்படுத்தி உங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துங்கள்” என்றார்.

அவர் சொல்லிய கருத்து என்னைக் கவர்ந்தது. சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். 

அடுத்த நொடி அவர் அங்கிருந்து சென்று விட்டார். யார் அவர் ? தெரியாது. எதற்காக என்னிடம் அவர் பேசினார்? தெரியாது. விடை தெரியாத எத்த்னையோ கேள்விகளுடன் இவரும் ஒரு கேள்வியாய் மனதில் பதிந்து விட  ரேஸ்கோர்ஸ் குளிர ஆரம்பித்தது. 

நடைபாதையில் மேலும் பலர் நடந்து கொண்டிருந்தனர். ரேஸ் கோர்ஸ் சாலை வட்டவடிமாய் இருந்தது. சுற்றிலும் மரங்களும் இருந்தன.

* * *

Wednesday, January 16, 2013

துண்டு


கிராமத்தானுக்கு துண்டு என்பது நண்பன். வெயிலில் உழும் போது தலைக்கு பாதுகாப்பாகவும், வியர்வையைத் துடைக்கும் போதும், குளிக்கும் போதும் இப்படி துண்டு என்பது அவனுடன் ஒட்டிப் பிறந்த உறுப்பாகவே இருக்கும். இதே துண்டு விழாக்காலங்களிலும், உறவுகளின் வீடுகளிலும் அவனுக்கு மரியாதையை அளிக்கும். இப்படிப்பட்ட துண்டுக்கு வேறொரு முகமும் உண்டு. 

இந்த ஆண்டு இந்தியாவின் பட்ஜெட்டில் விழுந்த துண்டு 5.13 லட்சம் கோடி. மேலும் மேலும் துண்டு அதிகமாகிக் கொண்டே போகிறது. 

கிராமத்தானுக்கு உதவியாய் இருந்த துண்டு, மரியாதையை அளித்த துண்டு இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலாய் மாறிய அவலம் இருக்கிறதே அதற்கு காரணம் யார் தெரியுமா ?அனைவரின் விரலும் சுட்டும் ஒரே ஒரு நபர் “ பாரதப் பிரதமர்”. 

வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் எக்ஸ்ட்ராவைத் தான் துண்டு என்கிறோம். இந்தியாவிற்கு துண்டு எப்படி விழுகிறது என்பதை திரு க்ருமூர்த்தி அவர்கள் துக்ளக்கில் பதிவு செய்திருக்கிறார். 

அரசின் வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் துண்டு நம்பர் ஒன்.

ஏற்றுமதி செய்யும் மதிப்பை விட இறக்குமதி செய்யும் மதிப்பு அதிகமானால் வர்த்தகத்தில் துண்டு விழுகிறது. இது நம்பர் டூ.

நம்பர் ஒன்னுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதில் நம்பர் ஒன் - மானியம். மானியம் கொடுப்பதினால் அரசின் வரவில் இருந்து செலவழிக்க வேண்டி இருக்கிறது. துண்டு விழுகிறது.

நம்பர் டூ - வரி விலக்கு. அரசுக்கு கிடைக்கக் கூடிய வரவில் பெரும் வெடியை வைப்பது இந்த வரிவிலக்குகள். இதனாலும் துண்டு விழுகிறது.

நம்பர் த்ரீ - இலவசம். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அக்மார்க் அயோக்கியத்தனம். இதனாலும் பெரிய துண்டு விழுகிறது.

வரி வசூலில் காட்டப்படும் மந்தம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதால் அதிலும் ஒரு துண்டு விழுகிறது.

ஆகவே நான்கு துண்டுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் பொருளாதாரக் கழுத்தை நெரிக்கிறது. மக்கள் மூச்சுத் திணற ஆரம்பிக்கின்றார்கள். விலைவாசி உயர ஆரம்பிக்கிறது. மக்கள் துன்பத்தில் உழல ஆரம்பிக்கின்றார்கள்.

நம்பர் டூ துண்டுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஏற்றுமதி இறக்குமதியில் வித்தியாசம் ஏற்படும் போது, உலக அளவில் இந்திய ரூபாய்க்கு இருக்கும் மதிப்புக் குறைகிறது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் நாம் குறைவான ரூபாய் கொடுத்தால் போதுமானது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் அதிக ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த அதிக ரூபாயும் துண்டாய் மாறி விடுகிறது.

இப்படி விழுந்து கொண்டே செல்லும் துண்டினைச் சமாளிக்க கடன் வாங்குகிறது அரசு. கடனுக்கு கொடுக்கும் வட்டியும் ஒரு துண்டு. இப்படியே எல்லாத் துண்டுகளும் ஒன்று சேர்ந்து தான் இந்தியாவின் நடப்பாண்டு பற்றாக்குறை 5.13 லட்சம் கோடி ரூபாய் ஆகி விட்டது. 

இந்த துண்டு விழாமல் தடுக்க எஸ்.க்ருமூர்த்தி சில கருத்துக்களை எழுதி இருக்கிறார்.

1. வரியை உயர்த்த வேண்டும்.
2. வரிச்சலுகைகளை நீக்கிட வேண்டும்.
3. ஓட்டுக்காக வழங்கப்படும் இலவசங்களை ஒழித்திட வேண்டும்.
4. மானியங்களை முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தான் இந்தியாவின் கழுத்தை நெறிக்கும் துண்டினை எடுக்க முடியும் என்கிறார் அவர்.

துண்டு எப்பேர்பட்ட வேலைகளைச் செய்கிறது என்று பாருங்கள். நாம் என்னவோ துண்டினை வெகு சாதாரணமான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

 நன்றி : துக்ளக் மற்றும் எஸ்.க்ருமூர்த்தி அவர்கள். (க்ருவிற்கு காரணம் இருக்கிறது)

திரு சுப்புவிற்கு ஒரு கேள்வி விரைவில்