குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, August 22, 2012

ஆதியில் இறைவன் வாக்கியமாய் இருந்தார்


குரு வாழ்க !
குருவே துணை!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பன ந்தானா? பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? - வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றாம் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலோ - நித்தம் விதிதொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம் - மகாகவி பாரதி

சித்தன் பாரதியின் பாடல்கள் புரியாத ஒன்றையும் புரிய வைத்திடும் செதுக்கல்கள். எதுவும் உண்மையில்லை, எல்லாமே சொற்பனம் என்கிறார். இப்பாடலை மூன்று நான்கு முறை தொடர்ந்து படியுங்கள். பாரதி ஒரு சித்தன் என்று உணர்வீர்கள்.

பெருவெடிப்பில் நிகழ்த்தப்பட்ட அற்புதத்தின் பேராற்றல் துண்டு துண்டாய் சிதறிய போது, ’எப்போதான் விடியுமோ, என்றைக்குத்தான் வருவானோ’வால் மனித வாழ்க்கைத் துவங்கிய அன்று முதல் இன்று வரை விரிவடைந்து கொண்டே செல்லும் வெடிப்பின் துகள்கள் ஒன்று சேரும் நாளுக்கு அடுத்து சிவத்தலம் தெரியும். வெடித்தவை பேராற்றல் ஈர்ப்பினால் மீண்டும் ஒன்று சேரும், பின்பு வெடிக்கும். 

மனித குல நன்மைக்கு,அண்டக்கல்லைத் தாண்டிச் சென்று திரும்பி வந்த மூவர் மட்டுமே இன்றைக்கும் மனித குலத்தின் அடையாள விருட்சமாய் திகழ்ந்து நிற்க, மனித கூட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது அந்த எல்லையின் எல்லைக்குள் தஞ்சமடைய.

பேராற்றலும், பெருமையும் உடைய நாட்டின் மகாராஜா அவர். அவரின் கொடையின் கீழ் சுகம், துக்கம், இன்பம், துன்பம் என்பனவற்றின் ஆட்சியின் கீழ் மனித குலம் வாழ்ந்து வந்தது. இந்த மகாராஜாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அழகின் தத்துவமாய், அறிவின் சிகரமாய் திகழ்ந்த அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் ஒரு விபரம் கிடைத்தது.

21ம் வயதில் இக்குழந்தை சன்னியாசம் போய் விடும். ஆசையாய் பெற்ற மகவு இப்படிப்போக எந்த தகப்பனுக்குத்தான் மனது வரும். வேறொருவரிடம் கேட்டபோது அரண்மனைக்குள் வைத்தே வளர்த்து வாருங்கள், அந்த வயது வரும் வரைக்குள் என்று பாசிட்டிவ் அப்ரோச் கான்செப்ட் கிடைத்தது மன்னருக்கு. அதன் படி வாழ்க்கையின் அத்தனை சுகமும் அந்தக் குழந்தைக்கு அரண்மனைக்குள்ளே கிடைக்க ஆரம்பித்தன.

21 அகவையில் வீட்டின் வாயிலுக்கு வந்த மகாராஜாவின் மகன் கண்களில் பட்டது ஒரு சவ ஊர்வலம். ஒரு சவ ஊர்வலம் மன்னாதி மன்னனின் தவப்புதல்வனை சன்னியாசம் கொள்ள வைத்தது. (ஏன்?) எல்லாவற்றையும் உதறிவிட்டு கிளம்பினார். அவர் புத்தர். எத்தனை எத்தனையோ புத்திசாலிகள், முனிவர்கள், அறிவாளிகள், உறவினர்கள் எல்லோரும் அவரை திரும்ப அழைக்கச் சென்றனர். சென்ற எவரும் வீடு திரும்பவில்லை. ஏன் ? மூவரில் சிவத்தலம் சென்று திரும்பிய சித்தார்த்தனின் அருட்வளைவில் சிக்கினர். ஆசையை துற என்றார் சித்தார்த்தன்.

மூவரில் ஒருவர் சித்தார்த்தன். மற்ற இருவர் யார்? 

ஓம் என்ற வார்த்தைக்குள் அகரம், உகரம், மகரம் மூன்றும் மறைந்து கிடக்க “ஆதியில் இறைவன் வாக்கியமாய் இருந்தார் ”.

குருவின் ஆசீர்வாதப்படி -

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


Tuesday, August 21, 2012

தென்னாடுடைய தமிழனே

சமீபத்தில் தேனியில் எடுக்கப்பட்ட டிஎன்யே(DNA) டெஸ்ட்டில் உலகின் மூத்த டிஎன்யே இது என்று செய்தி வந்திருக்கிறது. தமிழன் தான் உலகின் மூத்த குடி என்று அர்த்தம் ஆகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழ் நாடு தான் உலகத்தில் வேறு எங்கும் இல்லாத சீதோஷ்ண நிலை கொண்ட பூமி. வேறு இடங்களில் ஒன்று குளிர் அதிகமாய் இருக்கும். அல்லது வெப்பம் அதிகமாய் இருக்கும். மழை அதிகமாய் இருக்கும். ஆனால் நான்கு காலங்களும் மனிதர்கள் வசிக்கத் தகுந்த பூமியாக இருப்பது தமிழகம் தான். இப்படிப்பட்ட பூமியில் வசிப்போரின் சிந்தனைகள் தான் உலகிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் வாழ்வியல் நெறிமுறைகள்.

தமிழர்களின் அறிவுக்கும் திறமைக்கும் முன்னால் எந்த மனிதர்களும் ஈடு கொடுக்கவே முடியாது. வாழ்வியல் நெறி சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, கொடூரமானாலும் சரி, வீரமானாலும் சரி, தியாகமானாலும் சரி. எல்லாவற்றிலும் தமிழர்களுக்கு நிகர் தமிழர் தான். அப்பேர்பட்ட தமிழர்கள் வாழும் புண்ணிய பூமி நம் தமிழகம். தென்னாடு என்றழைக்கப்படும் ஆன்மீக பூமியில் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள். எங்கு நோக்கினும் கோவில் விழாக்கள், பூஜைகள், புனஸ்காரங்கள் என்று ஆண்டு முழுமையும் கோவில் விழாக்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும். கோவில் விழாக்கள் இல்லையென்றாலும் குடும்பங்களில் சுபகாரியங்கள் நடந்து கொண்டே இருக்கும். தமிழர்கள் ஒன்று கூடிக் கொண்டே இருப்பார்கள். ஆன்மீகத்தில் தழைத்து, அறத்தில் திளைத்து வாழும் மனித கூட்டம் தான் தமிழர்கள் கூட்டம். தமிழர்கள் தியாக உணர்வும், நன்றியுணர்ச்சியும் உள்ளவர்கள்.

எத்தனை எத்தனை புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும் அவைகள் எல்லாம் தமிழர்கள் வாழ்வியலில் புதை பொருளாய், மறை பொருளாய் மறைந்து கிடக்கும். எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. வானவியலில் இருந்து, மரணமில்லா பெருவாழ்வு வரை தமிழர்களிடம் அத்தனைக்கும் விடை கிடைக்கும். அதுவும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் இருக்கின்றன.

தமிழகத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் மறைந்து, புதைந்து போய் கிடைக்கும் மெய்ஞான அறிவியலில் ஒரு சதவீதம் கூட மேல் நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லை. சித்தர்களுக்கெல்லாம் தலைவர் சுப்ரமண்யர் என்பார்கள். அப்பேர்ப்பட்ட சித்தர்கள் பூமியில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, இப்போதிருக்கும் எந்த சயின்ஸ் உபகரணங்கள் இன்றி உடம்பின் அத்தனை ரகசியங்களையும் சித்தர்கள் பாடி வைத்திருக்கின்றார்கள். இதெல்லாம் எப்படி அவர்களுக்குச் சாத்தியமாயிற்று என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளவே முடியாத மர்மம் தான் நம் முன்னே நிழலாடும். பிண்டோற்பத்தி பற்றிய ஒரு பாடல் கீழே,

கேளப்பாமனமான வாயுகூடி
கெடியானசித்தமா காசம்பொங்கி
வேளப்பா ஆங்கார சிகாரமிஞ்சி
மேவுதற்குப்பெண்மேலே மோகமாகும்
நாளப்பா ஐந்துக்கும் மலமேதென்றால்
நலம்பெறவே சொல்கின்றேன் நன்றாய்க்கேளு
தனியானநாதத்தில் பானன்தானே
தானென்றவிந்துவினிற் சமானன்கூடும்
தனியானசித்தத்தில் வியானன்சேரும்
 நானென்ற ஆங்காரம் கர்ச்சிப்போடே
கலந்து நிற்கும் உதானனப்பா கண்டுகொள்ளு
வேனென்றபத்துமொன்றாய் மனதுங்கூடி
மேவியவன்கலந்துவந்து விழுகும்போது
மானென்றமெளனபர வசமேயாஅவாள்
மருவுகின்ற பெண்ணுக்கும் முறைதன்கேளே

இப்படிப் போய்க் கொண்டே இருக்கிறது இப்பாடல். கருத்தரிக்கும் விதம் பற்றி விவரித்துச் செல்லும் பாடல்களை எங்கனம் உருவாக்கினார்கள்? ஆராய்ச்சிகள் செய்தார்களா? அதெல்லாம் அந்தக் காலத்தில் எப்படிச் சாத்தியமாயிற்று என்று கேள்விகளை முன்வைத்தால் மனதின் முன்பு மாபெரும் புதிர் முடிச்சொன்று வந்து நின்று நம்மை ஏளனம் செய்யும். உலகில் புரியாத எத்தனையோ மர்மங்கள் இருக்கின்றன. இதுவரையிலும் வெஸ்டர்ன் சயின்ஸால் மனித உடம்பில் உயிர் எங்கே இருக்கிறது என்று ஆதாரபூர்வமாய் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் சித்தர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

யோகிகள், சித்தர்கள் பரம்பரை நம் தமிழர்களின் வாழ்வியலில் தான் உண்டு. வேறு எங்கேனும் தேடினாலும் கிடைக்கவே கிடைக்காது இப்பேர்பட்ட மனித குல வரலாறு. இப்படிப்பட்ட நம் தமிழர்களின் வரலாற்றில் இன்னும் கண்டுபிடிக்க முடியாத, புரிந்து கொள்ள இயலாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அந்த விஷயங்களில் எனக்குத் தெரிந்த ஏதேனும் அனுபவப் பூர்வமாய் உணர்ந்த சில விஷயங்களை எழுத முயல்கிறேன். அதுவும் எனது ஆன்மீகக் குருவின் அளப்பறிய அன்பின் காரணமாக. அவரின் கட்டளைக்கு இணங்க அவரின் வழிகாட்டுதல்கள் படி எழுதுவேன்.

மனிதர்கள் தானாக பிறப்பதில்லை. தானாக வளர்வதில்லை. அவர்கள் பிறக்கவும், வளரவும் சக மனிதர்களின் உதவி தேவை. ஓவ்வொரு மனித உயிர்களின் கடமை பிற உயிர்களுக்கு உதவுவது மட்டுமே. அனுபவமும், அறிவும், உழைப்பும் பிறருக்காக வாழ வேண்டும். அந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை.

ராஜ ராஜசோழனும் வாழ்ந்தான், மன்னாதி மன்னர்களும் வாழ்ந்தார்கள் பெரும் பொருளாதாரத்துடன், அழிக்கவே முடியாது பலத்துடன். இன்றைக்கு அவர்கள் எங்கே? காலம் கொடுக்கும், எடுக்கும், கொடுக்கும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Thursday, August 16, 2012

அட்டகத்தி திரைப்படம்

அழகான, அற்புதமான ஒரு பாசச் சந்திப்பின் பின்பு நானும் எனது நண்பரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கோவை சிங்காநல்லூரில் இருக்கும் அம்பாள் சினி தியேட்டர் கூட்டத்தால் நிரம்பிக் கொண்டிருந்தது. நண்பர், அட்டகத்தி பார்ப்போமா என்றார். 

தியாகராஜர் காலத்திலிருந்து இன்று வரை காதல் காதல் காதல் என்றே தமிழ் சினிமா உலகம் படமாய் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. தமிழனுக்கு காதல் செய்வதே முழு முதல் தொழிலாய் மாறி இருக்கிறது. சிறிய வயதில் இருந்து உனக்கு20 எனக்கு 40 என்பது வரையும், முதல் மரியாதை காதல் என்பதாகவும் தமிழ் சினிமா உலகம் காதல் போதையில் ஊறி ஊறி அதிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சின்னஞ் சிறு குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் குஷி படத்தில் இயக்குனர் காதலைக் காட்டி தன் இயக்குனர் திறமையை வெளிப்படுத்தினார். அந்த வகையில் வந்த மற்றொரு படம் தான் அட்டகத்தி.

விடலைப் பருவத்தில் பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்க முயல்வோம் அல்லவா அதை ஹீரோ செய்கிறார். ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டே செய்கிறார். ஒரு பெண் கூட அவரைக் காதலிக்கவே இல்லை. இடைவேளைக்குப் பிறகு கல்லூரி செல்லும் ஹீரோ முன்பு தன்னை அண்ணன் என்றுச் சொல்லிய ஹீரோயினை மீண்டும் சந்திக்கிறார். ஹீரோயினின் சில சைகளை கண்டு அவள் தன்னைக் காதலிக்கிறார் என்று நினைத்து அவளின் மீது காதல் கொள்கிறார். முடிவில் பார்த்தால் தன் பெயரைக் கொண்ட வேறொருவரை அவள் திருமணம் செய்து கொள்கிறாள். விரக்தி அடையும் ஹீரோவை ஒரு பிச்சைக்காரன் என் பெண்ணைக் கட்டிக்கோ என்றுச் சொல்லும் போது ஹீரோ சிரிக்கிறார். அப்புறம் அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கிறது. 

அட்டகத்தியை கீழே வரும் பாடலில் அடக்கி விடலாம்.

”ஆள்வார்ப்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா, ஒரே காதல் ஊரில் இல்லையடா” - என்ற கமல்ஹாசனின் பாடல் தான் படத்தின் ஒன் லைன்.

ஒரு காலத்தில் காதல் காதல் என்று உருகி உருகிக் காதலித்த கமல்ஹாசன் தான் (தேரே மேரே பீஜ்ஜுமா பாடல் நினைவில் இருக்கிறதா உங்களுக்கு) மேலே இருக்கும் பாடலைப் பாடி இருக்கிறார்.

காலம் மாறுகிறது. மாறிக் கொண்டே இருக்கிறது. காதலுக்கு ஒவ்வொரு காலத்திலும் டெஃபனிஷன் மாறிக் கொண்டே வருகிறது.

படத்தின் முதல் பாதி சுவாரஸியமாய் இருக்கிறது. அடுத்த பாதியை சொதப்பி விட்டார் இயக்குனர் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. அடுத்த பாதியை பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கிளைமேக்ஸ் சோகமாய் இருக்கப் போகிறது என்றார். படத்தின் அடுத்த அடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கப் போகிறது எனபதையும், கிளைமேக்ஸை எளிதில் ஊகித்து விடும் திரைக்கதையும் படத்தின் பிளாக்மார்க்.

காலத்தால் அழிக்கவே முடியாத எத்தனையோ பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். ரீமிக்ஸ் கூட பழைய பாடல்கள் இன்றைக்கும் ஹிட் அடிக்கின்றன. கானா பாடல்களில் புரட்சி செய்த இசையமைப்பாளர் தேவா இன்றைக்கு இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் இளையராஜா இருக்கிறார். இன்றைக்கும் அவரின் பாடல்கள் தான் ஹிட்டோ ஹிட். இப்படத்தின் பாடல்கள் பற்றி எழுத ஒன்றுமில்லை. பின்னணி இசை சுமார் ரகம். கிடாரின் இசைக் கோர்ப்பு எரிச்சலைத் தருகிறது. குப்பத்து களத்தில் கிடார் இசையும், ஆங்காங்கே சில பழைய ட்யூன்களும் வருகின்றன. படத்தில் ஒட்டவே ஒட்டாத, தனியாக தெரிகிறது.

காதல் படங்களையும், ரவுடியிசத்தையும், ஒரே ஆள் நூறு பேரை அடிக்கும் படங்களையும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகப் பெருமக்கள் மாறாத வரை இப்படியான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

ஏன் இது போன்ற படங்களே வந்து கொண்டிருக்கின்றன என்று யோசித்தால் ஒரு காரணம் தெளிவாய் தெரிகிறது.

பிரம்மனுக்கு அடுத்தபடியாக, ஒரு தாய்க்கு அடுத்த படியாக இருக்கும் படைப்பாளியான இயக்குனர்கள், ஹீரோ வரும் போது மெய்பொத்தி எழுந்து நின்று சலாம் போடும் போக்கினை மாற்றாத வரை எந்த ஒரு படைப்பும் முழுமையானதாக இருக்க முடியாது. 

* * *

Monday, August 13, 2012

6000 வருட பழமையான முட்டம் நாகேஸ்வரர் - முத்து வாளியம்மன்


எனது நெருங்கிய நண்பரொருவரின் உதவியால் ஆடிட்டர் ஒருவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. பிசினஸ் விஷயமாய் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஜோசியம் பார்ப்பதாகச் சொன்னார். திருமணம் ஆன நாளில் இருந்து இது வரை நான் ஜோசியம் பார்க்க  சென்றதில்லை. என்  நெருங்கிய நண்பர்கள் சிலர் தான் எனது ஜாதகத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது ஏதாவது பிரடிக்‌ஷன் சொல்லி வந்தார்கள். முதன் முதலாய் நானும் மனைவியும் ஆடிட்டரை ஜோசியம் சம்பந்தமாய் சந்தித்தோம்.

இன்று காலையில் மூன்று பேரிடம் பிசினஸ் பற்றிப் பேசி இருப்பீர்கள் சரியா? என்றார். மிகச் சரியாக ஆம் என்றேன். அதில் ஒருவர் உங்களை ஏமாற்றுகிறார் என்றார். அவரையும் கண்டு கொண்டேன் மிகச் சமீபத்தில். கடந்த காலம், நிகழ்காலம், வரும் காலம் படமாய் கொட்டுகிறார் ஆடிட்டர். அசந்து போய் விட்டேன். என் வாழ்க்கையில் நடந்த இதுகாறும் எவரும் அறியாத சில சம்பவங்களை அவர் கோடிட்டுக் காட்ட அசந்து தான் போய் விட்டேன். ஜாதகக் கணிப்பில் இப்படியும் சொல்ல முடியுமா என்ற பிரமிப்பு சூழ்ந்தது. நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்து விட்டோம்.

மற்றொரு நாள், என்னை காளஹஸ்தி சென்று வரும்படிச் சொன்னார். அதற்கான நடைமுறைச் சிக்கல்கள் பற்றிச் சொன்ன போது, சரி பரவாயில்லை கோவை, ஆலந்துறையில் இருக்கும் முத்து வாளியம்மன் கோவிலுக்குச் சென்று வாருங்கள் என்றார். பல கோவை நண்பர்களிடம் இக் கோவில் பற்றி விசாரித்தேன். ஒவ்வொருவரும் ஒரு மாதிரிச் சொன்னார்கள். கோவில் இருக்குமிடமும் சரியாகத் தெரியவில்லை. காட்டுக்குள் இருக்கிறது என்றார் ஒருவர். கிராமத்திற்குள் இருக்கிறது என்றார் மற்றொருவர். இப்படியே சில பல விபரங்கள் கிடைத்தாலும் அது முழுமையானதாக இல்லை. சரி என்னவானாலும் பரவாயில்லை, ஆலந்துறை சென்று விசாரிப்போம் என்று கருதிக் கொண்டு கிளம்பினேன். 

வட்டத்தில் கால் வாசியை வெட்டினால் எப்படி இருக்கும் அப்படியான பூமிக்குள் நுழைந்தேன். மூன்று பக்கம் மலைகள் சூழ இருந்த ஆலந்துறையைக் கண்டுபிடித்து, அப்படியே செம்மேடு வழியாக மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் “முத்து வாளியம்மனும், முட்டம் நாகேஸ்வரரும்” இவர்கள் குடிகொண்டிருக்கும் கோவிலையும் கண்டு கொண்டேன். சுற்றி வர மலை, பச்சைப் பசேல் செடிகள், மலையில் ஆங்காங்கே வெள்ளியை உருக்கி வார்த்தது போல நீர் வீழ்ச்சிகள், மேகங்கள் தழுவும் மலை முகடுகள், சில்லென்று காற்று, அவ்வப்போது தூறல்கள் என்று இயற்கை அன்னையின் அருள் தவழும் அற்புதமான இடம். மனச் சஞ்சலம் சுத்தமாய் அவ்விடத்தில் நம்மை விட்டு நீங்கி விடுகின்றது. சில்லென்று சூழ் நிலையில், மனம் ஒன்றிப் போய் இருவரையும் தரிசித்து விட்டு வந்தேன்.  

தடையால் நிற்கும் காரியங்கள், திருமணங்கள், முன்னோர்கள் செய்த பாவங்களால் அவஸ்தைப்படுவோர், துன்பத்தில் உழல்வோருக்கு அற்புத மனச் சாந்தியையும், ஆனந்தத்தையும் அருள்கிறார்கள் இருவரும். இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா யோக மையம் இருக்கிறது. 

ஆறாயிரம் வருடங்களுக்கும் மேலாக இருவரும் இவ்விடத்தில் இருக்கின்றார்கள் என்றார் ஆடிட்டர். முத்துவாளியம்மனுடன் பிறந்தவர்கள் தான் மதுரை மீனாட்சியும், கன்னியாகுமரி அம்மனும். 

ராகு, கேது பரிகார ஸ்தலம். ராகு காலத்தில் சிவனுக்குப் பால் அபிஷேகம் செய்கின்றார்கள். கறந்த பசும் பால் தான் கொண்டு செல்ல வேண்டும். பல ஆதீனங்களும் மடத்தினரும் ஒன்று சேர்ந்து இக்கோவிலை புதுப்பொலிவு பெறச் செய்திருக்கின்றார்கள்.

ராகு கேது பரிகாரம் தேடுபவர்கள் “முத்து வாளியம்மனிடமும், முட்டம் நாகேஸ்வரரிடமும்” செல்லலாம். நிச்சயம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும். நிறைவேற்றியே தீருவார்கள்.

உங்களுக்கு அய்யன், அம்மன் அருள் வழங்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன். வாழ்க வளமுடன் !

- கோவை எம் தங்கவேல்

Monday, August 6, 2012

ட்ராகுலாக்கள் உண்மையாக இருக்கலாம்




(சூரியனைச் சுற்றி ஏற்பட்ட அற்புத வளையம் )

என்றைக்கும் இளமை, மரணமில்லா வாழ்க்கைதான் அறிவியல் உலகின் முன்னால் இருக்கும் மிகப் பெரும் சவால். 

சிதம்பரம் நடராஜரின் சிலையின் உதவியால், சாதாரண மனிதரால் உணர்ந்த, பலரால் உணர முடியாத ஹிக்ஸ் போசான் அணுவைக் கண்டுபிடித்து விட்டாலும் மனிதன் என்றைக்கும் இளமையாய் வாழவும், மரணமே இல்லாத நிலையை அடையவும் இன்றைக்கும் எந்த அறிவியல் அறிஞராலும் எந்த வித கண்டு பிடிப்பையும் கண்டு பிடிக்க முடியவில்லை. சித்தர்களின் நூல்களில் மரணமே இல்லாத வாழ்க்கை வாழ குறிப்புகள் இருக்கின்றன என பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதைக் கண்டுபிடிக்கக் கூட ஏதாவது ஒரு வெளி நாட்டுக்காரன் வர வேண்டும் போல. 

மருத்துவ உலகில் அபார வளர்ச்சி அடைந்தாலும் இயற்கை புதுப் புது நோய்களை உருவாக்கி மனித குலத்தை ஒட்டு மொத்தமாய் மேலுலகம் அனுப்பிக் கொண்டு வருகின்றது. இயற்கையை வெல்ல மனிதனால் என்றைக்குமே இயலாது என்பதுதான் இதுவரை மாற்ற முடியாத உண்மையாக இருந்து வருகிறது.

ஆனாலும் மனித குலம் என்றும் இளமையாய் வாழ பல்வேறு வழிகளை ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதில் ஒன்றுதான் டிராகுலா. இரத்தம் குடிக்கும் காட்டேறிகள் என்றும் சொல்லலாம்.

இளமையான உடல்களின் ரத்தத்தைக் குடித்தால் என்றும் இளமையோடு வாழலாம் என்று இரவில் இளமையானவர்களைத் தேடிப் பிடித்து கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றன ரத்தக்காட்டேறிகள் ஹாலிவுட்டின் பல படங்களில். இக்கருத்தில் உண்மை இருக்கிறதா என்று அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ததில் ஒரு உண்மை புலப்பட்டது.

இளம் வயதுடையவர்களின் இரத்தத்தில் “டெல்டா” என்று புரோட்டின் அதிக அளவில் உருவாகி காயங்கள், இரத்த அணுக்களை புதுப்பித்து, சரி செய்து உடம்பை மேலாண்மை செய்து பொலிவுடன் திகழ உதவுகின்றன என்று கண்டுபிடித்தார்கள். இந்த “டெல்டா” முதியவர்களின் இரத்தத்தில் குறைந்த அளவு காணப்படுவதையும் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.

முதிய வயதுடைய எலி ஒன்றையும், இளமையான எலி ஒன்றையும் பிடித்து இரத்தங்களை மாற்றி மாற்றிச் செலுத்தியதில் முதிய எலியின் செயல்பாடுகள் அதிகரித்து இருந்ததையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி சொல்லும் விஷயம் என்னவென்றால் இளமையான ரத்த அணுக்கள் முதியவர்களின் உடம்பில் மாற்றங்களைச் செய்கின்றன என்பதுதான். 

அதாவது ட்ராகுலாக்கள் உண்மையாக இருக்கலாம் என்று நம்பக்கூடிய சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன.



உதவி : ஹிஸ்டரி டிவி சானல்

-




Wednesday, August 1, 2012

தமிழ் சினிமாவில் புத்திசாலிகளின் பிசினஸ்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில புரட்சிகள் நடக்கும். திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வரின் வாரிசுகள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி சர்ச்சைகளையும், வெற்றிகளையும் குவித்தனர். கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் இறங்கி வெற்றிகளைக் குவித்தன(உண்மையா என்று தெரியவில்லை). ஆனால் பெரும்பாலான கார்ப்பொரேட் நிறுவனங்களின் சினிமாக்கள் தோல்வி அடைந்தன என்பதுதான் உண்மை. சன் க்ரூப்பின் முதல் படம் மட்டுமே பெருத்த லாபத்தைக் கொடுத்தது என்று சினிமா இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள்.

கார்பொரேட் நிறுவனங்களின் சட்டங்கள், திட்டங்கள், செயலாக்கங்கள் எதுவும் அதுவும் தமிழ் சினிமா உலகத்தில் பெரிய வெற்றியைத் தந்திட முடியாது. ஹாலிவுட் சினிமாவின் உருவாக்கம் போல தமிழ் சினிமாவில் பெரும் நிறுவனங்கள் சாதிக்க வாய்ப்புகள் சுத்தமாக இல்லை.

கிட்டத்தட்ட 31 சாட்டிலைட் சானல்கள், ஏழு பத்திரிக்கைகள், 48 எஃப் எம் சானல்கள், ஒரு விமான நிறுவனத்தை நடத்தும் சன் குழுமத்தினால் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. இதை விட பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தற்போது ஏதும் இல்லை. சமீபத்தில் தான் சினிமாவின் பெரிய சாதனையாளர் ஒருவர் “கார்ப்பொரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் நின்று விட்டது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று பேசினார்.

சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்கள்தான் அதிகம் இழந்திருக்கின்றார்கள். ஆனால் டெக்னீசியன்களும், நடிகர்களும் பெரும்பான்மையானவர்கள் எவரும் பொருளாதார இழப்பினைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.

சினிமாவில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அழிவைத்தான் சந்தித்திருக்கின்றார்கள் என்றுச் சொல்வார்கள். ஆனால் சிலர் சினிமாவை தன் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமான பிசினஸ்ஸாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

சன் குழுமத்தின் மூலம் நில மோசடியில் கைதான சக்சேனா அவர்கள் தற்போது படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்திருக்கின்றார். அவரின் பேனரில் தினத்தந்தியில் “சாருலதா” படத்தின் பெயர் பளிச்சிடுகிறது. ஏற்கனவே இருக்கும் சினிமா அனுபவத்தில் வெகு எளிதாக இந்த பிசினஸ்ஸை அவரால் வெற்றிகரமாக நடத்தி விட முடியும். ஏரியாவிற்கு ஐம்பது லட்சம் லாபம் கிடைத்தால் போதுமே. அதைத்தான் இவரைப் போன்றவர்கள் தற்போது செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

எஸ்.ஆர்.எம் குழுமத்தின் வேந்தர் டிவி சார்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் நல்ல விலைக்கு வாங்கப்பட்டு, நல்ல லாபத்தோடு விற்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தமிழகத்தின் பெரிய பஸ் கம்பெனி ஒன்று சினிமா வியாபாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றார்களாம்.

புத்திசாலிகளின் பிசினஸ் இப்படித்தான் இருக்கும்.

கதை கேட்க வேண்டியதில்லை, இயக்குனருடன் சண்டை பிடிக்க வேண்டியதில்லை இப்படி பலப்பல தயாரிப்புப் பிரச்சினைகள் இல்லாமல் சினிமாவில் பிசினஸ் செய்து லாபம் ஈட்டுவது என்பது புத்திசாலிகளின் பிசினஸ்தானே.

- கோவை எம் தங்கவேல்


Thursday, July 26, 2012

தமிழ்நாட்டில் நிலநடுக்கம் வருமா?


காமெடியில் பல வகை உண்டு. அதில் ஒரு காமெடி சாமியார்கள் என்போர் செய்வது. ஆன்மீகத்தில் பற்றும், தினமும் தியானம் செய்வதையே வாழ்க்கையாக வைத்திருக்கும் சாமியார் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு மயக்கம் வராத குறைதான். 

இப்போதெல்லாம் டிவிடி, பென் டிரைவ், சிடி, நெட் என்றாலே அலறி அடித்து ஓடும் பல சாமியார்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு சில சாமியார்கள் ஆன்மீகத் தொண்டுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல ஆன்மீகத்தையே வியாபாரமாய் செய்து வரும் பல நிறுவன சாமியார்களையும் பார்த்து வருகிறோம். சாமியார் ஒருவரின் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள, சாமியாரின் அன்பர் ஒருவர் 10,000 கேட்டார். எதற்கெடுத்தாலும் கட்டணம், எதையெடுத்தாலும் காசு என்று இன்றைக்கு கோவில்கள் எல்லாம் காசு வசூல் செய்யும் கணக்கப்பிள்ளை மடமாக மாறிக் கொண்டிருக்கின்றன. பத்தாயிரம் கொடுத்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டால் தான் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும் என்றுச் சொல்கின்றார்கள். 

காசு கொடுத்தால் தான் கடவுளையே தரிசிக்க முடியும் என்கிற கலிகாலத்தில் வசித்துக் கொண்டிருக்கும் போது,  நம் சாமியாரையெல்லாம் நம்பி விட மனது இடம் கொடுக்கவில்லை.

இருப்பினும் அவர் சொன்ன ஒரு விஷயம் தான் மனதை போட்டு அறுக்கிறது. விரைவில் தமிழகத்தில் நில நடுக்கம் வரப்போகிறது என்றார். கேட்ட எனக்கு திக்கென்றது. என்ன சாமி கெட்டதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்களே என்று எரிந்து விழுந்தேன். அதற்கு அவர் ஒரு மோனப் புன்னகையை பரிசாய் அளித்தார்.

அவனவன் கோடி கோடியாய் கொட்டி மாடி மாடியாய் கட்டி வைத்திருக்கின்றார்களே, அப்படி நில நடுக்கம் வந்தால் அய்யோ நினைத்தாலே திகீரென்றது. சாமியாரை எரிச்சலுடன் பார்த்து விட்டு கொடூரமாய் முறைத்து விட்டு வந்து விட்டேன். போதாதற்கு இத்தனை நாளுக்குள் என்று வேறுச் சொல்லி டெரரைக் கிளப்பினார்.

இப்படி ஒரு அனுபவம் எனக்கு. பார்ப்போம் சாமியார் சொன்னது நடக்குமா என்பதை. ஆனால் மனசோ அது நடக்கவே கூடாது என்று வேண்டுகிறது.

திருட்டுச் சம்பவம் நடந்த பிறகு போலீஸ் பிடித்து உள்ளே போட்ட பிறகு தான் திருடர்களை, ஊழல்வாதிகளை, கொலைகாரர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ஆனால் உண்மையில் கொலைகாரர்களாய் சிலர் பவனி வருகின்றார்கள். அவர்கள் யார் என்று தானே கேட்கின்றீர்கள்?

நேற்றைக்கு முதல் நாள் இரவு எட்டு மணியளவில் நானும், மனையாளும் ஒரு வேலை நிமித்தமாய் டவுன்கால் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். மரக்கடை பக்கமாய் வந்து கொண்டிருக்கும் போது எதிரே அரசு பஸ் ஒன்று வந்தது. டிரைவர் லைட்டை டிம் செய்து பலமுறை போட்டு சிக்னெல் காட்டிக் கொண்டே வர, அந்த டவுன் பஸ் டிரைவர் லைட்டைப் போட்டா எனக்கென்ன ஆச்சு என்பது போல, பஸ்ஸைக் கொண்டு வந்து கோவில் முனையில் நிறுத்திக் கொண்டு விட்டார். 

எனது கார் டிரைவர் குதி குதியென்று குதித்தார். அந்த பஸ் டிரைவரோ எனக்கென்ன ஆச்சு என்பது போல நின்றிருந்தார். பஸ்ஸுக்குப் பின்னே இருபது  கார்கள், பைக் என்று டிராபிக் ஜாம் ஆகி விட்டது. பத்து நிமிடம் ஆகிவிட்டது காரை பின்னால் எடுத்து பாதை விட்டு வெளியில் வர.

திமிர் தனம் என்றால் அரசு டிரைவர்களில் சிலருக்கு ஓவராக இருக்கிறது. இப்படிப்பட்ட ஆசாமிகளால் பைக்கில் செல்லும் பலர் பரலோக பிராப்தியை அடைந்து விடுகின்றார்கள். எதிர்பாராத ஆக்சிடென்ட் என்றுச் சொல்லி இப்படியான கொலைகார கம்மனாட்டிகள் தப்பி விடுகின்றார்கள். 

அதுமட்டுமா, ஆக்சிடெண்ட் கிளைம் என்கிற விஷயத்தில் ஒவ்வொரு மாவடத்திலும் சில குறிப்பிட்ட வக்கீல்கள் செய்யும் செயல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டம் கட்டி இருக்கிறது. செத்துப் போன பிணத்தினையும் வைத்துக் காசு சம்பாதிக்கு ஜெகஜ்ஜாலக் கில்லாடிகள் இந்த வக்கீல்கள். இன்ஸூரன்ஸ் கிளைமிற்கு டாக்டருக்கு காசு, வக்கீலுக்கு காசு, ஏஜென்சியை சரிக்கட்ட காசு என்று அனைத்தையும் வக்கீலே செய்து கொண்டு உண்மையில் கிடைக்க வேண்டிய இன்ஸூரன்ஸ் அமவுண்டில் பாதியைக் கொடுத்து விட்டு, மீதியை ஆட்டயப்போடும் அகில உலக கில்லாடி வக்கீல்கள் இந்தியாவெங்கும் இருந்து கொண்டுதானிருக்கின்றார்கள். கரூரில் ஒரு வக்கீல் மாட்டினார். அதன்பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை.

மனிதனுக்கு மனிதனே எதிரியாய் நிற்கின்றார்கள். மனிதனை வழி நடத்த வேண்டிய ஆன்மீகமோ “காசைக் கொடு காசைக் கொடு” என்று கொள்ளை அடிக்கிறது. 

இது கலிகாலம் என்பதைத் தான் இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றனவோ தெரியவில்லை.

- கோவை எம் தங்கவேல்





Monday, July 23, 2012

அம்மாவின் சமையல் எப்படி இருக்கும்?

கோவையின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றின் முதலாளி எனது நண்பர். எப்போதாவது அவரைச் சந்திக்கும் நேரத்தில் சுவாரசியமான பல விஷயங்களைச் சொல்வார்.

கோவையில் சனி அல்லது ஞாயிறுகளில் ஹோட்டல்களில் காசு வாங்கிப் போடவும், பில் போடவும் நேரமிருக்காது என்றார். பெரும்பாலான குடும்பங்கள் ஞாயிறுகளில் ஹோட்டல்களில் தான் சாப்பிடுகின்றன என்றார். மூலைக்கு மூலை ஹோட்டல்களாகவே இருப்பதன் மர்மம் எனக்கு அப்போதுதான் பிடிபட்டது.

கோவையின் திருச்சி ரோட்டில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் கேண்டீனில் ஒரு நாள் சாப்பிடுவோர் எண்ணிக்கை 7000 என்று எழுதி இருந்தது. சுமாராக 10,000 பேருக்கும் மேல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கேண்டீனுக்கு எதிரே இருக்கும் மருந்துக் கடையில் பில் போடுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் நிற்க வேண்டும். எந்த மருத்துவரிடமும் டோக்கன் இல்லாமல் செல்ல முடியாது. ஹோட்டல்களில் கூட்டம் கூடக் கூட மருத்துவர்களுக்கு வருமானம் கொட்டிக் கொண்டிருக்கும்.

பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் இல்லாமல் குழந்தைகள் வளர்வது எதிர்கால சமூகத்திற்கு மிகப் பெரும் தீங்கினைத் தரப் போகின்றது. நேற்றைய தினத்தந்தியில் “உஷாரையா உஷாரு” பத்தியில் பணக்கார குடும்பத்தில் பிறந்த பெண் மாணவிகள் சிலர் வகுப்பறையில் தண்ணீருடன் வோட்கா கலந்து குடித்திருக்கின்றார்கள் என்றும், வீட்டில் அப்பா தன் நண்பர்களோடு மது அருந்துவதையும், அவ்வப்போது அம்மாவும் மது அருந்துவதையும் பார்த்துப் பார்த்து, அந்த மாணவிகள் மதுவிற்கு அடிமையாக மாறி குடித்து வந்திருக்கின்றார்கள் என்று எழுதி இருக்கிறது.

சென்னையில் இருந்து போனில் அழைத்த பதிவர் ஒருவர், பெண்கள் அழகாய், மினுமினுக்க, தக்காளியாய் பளபளக்க வொயின் குடிக்கின்றார்கள் என்றுச் சொல்லி விட்டு, முடிவாய் இப்போதைக்கெல்லாம் திருமணம் செய்து கொள்வதை நினைத்தாலே பயமாய் இருக்கிறது என்றார்.

குறவைமீனும், சின்னஞ்சிறிய கெழுத்தி மீனையும் வைத்து, மாங்காய் போட்டு, அம்மியில் அரைத்த மிளகாயுடன், புளிப்பும் சேர எனது அம்மா வைத்த மீன் குழம்பின் சுவையை இதுகாறும் வேறு எந்த ஹோட்டல்களிலும் நான் சாப்பிட்டதே இல்லை. அம்மாவின் அன்போடு தயார் செய்யப்பட்ட உணவின் சுவையை எந்த ஒரு ஹோட்டலும் எப்போதும் தந்து விட முடியாது. 

பசும்பால் தயிரைக் கடைந்து கொண்டிருக்கும் போது பொங்கி வரும் வெண்ணெய் திரளை வழித்து எடுத்து நடு நாக்கில் வைத்து விடும் அம்மாக்கள் அந்தக் கால அம்மாக்கள் எல்லாம் நினைவுகளோடு நினைவுகளாய் பதிந்து  போய் கிடக்கின்றார்கள். இன்றைய அம்மாக்கள் டிவி பெட்டியில் சமையல் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு “டோர் டெலிவரி” ஹோட்டல்களில் உணவுகளை ஆர்டர் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

காலங்களுக்கு ஏற்ற உணவு எது, காலையில் என்ன உணவு சிறந்தது, மாலையில் என்ன உணவு நல்லது, எந்தெந்தப் பொருளை எந்தெந்த உணவுடன் சேர்த்துச் சமைக்க வேண்டுமென்பதெல்லாம் இன்றைய அம்மாக்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவே முடியாது. காரணம் உடம்பின் மீதும், உணவின் மீது அக்கறை இன்றி கண்டதைத் தின்று விதி வந்த அன்றைக்குச் சாவோம் என்று பொறுப்பற்று வாழும் வாழ்க்கையை “ நாகரீகம்” என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாகரீகம் என்பதை உடையிலும், ஒப்புக்கும் பெறாத பாவணைகளிலும், உணவுகளிலும் இருக்கிறது என்று நம்புகிறார்கள் இன்றைய மாந்தர்கள்.

மெக்டொனால்டின் ஒரு வருட வருமானம் 23 பில்லியன் டாலர்கள். உலகிலேயே அதிக அளவு இறைச்சியை பதப்படுத்தி, பிராண்டட் பெயரில் விற்கும் இந்த உணவகத்தின் உணவுகள் எதுவும் உடலுக்கு நல்லதைச் செய்வதில்லை என்று பல இணையதளங்களில் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இன்றைக்கும் இந்த மெக்டொனால்டின் விற்பனை உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றதே ஒழிய குறையவில்லை.

அம்மாவின் சமையல் எப்படி இருக்கும் என்று இனி வரும் குழந்தைகளுக்குத் தெரியப்போவதில்லை. வளரும் சந்ததிகளுக்கு மெக்டொனால்ட், சரவணபவன்கள் தான் அம்மாக்களாகத் தெரியும். அன்பினைக் கூட நாகரீகத்தின் பெயரால் மாற்றமடைய வைத்த இன்றைய அம்மாக்களின் செயல் மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும்.

- கோவை எம் தங்கவேல்

Sunday, July 22, 2012

அரசையும் மக்களையும் ஏமாற்றும் தனியார் மருத்துவமனைகள்


குழந்தைகள் படிக்கும் பள்ளியின் செக்யூரிட்டியின் கண்கள் கலங்கி இருந்தன. விசாரித்தேன். அவர் மனைவிக்கு கர்ப்பைப்பையில் கட்டி வந்து விட்டது என்று புலம்பினார். ஆபரேசன் செய்ய ஆகும் செலவை நினைத்து கலங்கிப் போயிருந்தார். அவரிடம் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் பற்றிச் சொல்லி உடனடியாக காப்பீட்டு அடையாள அட்டை பெறும்படியும், அதன் வழி முறைகள் பற்றியும் விளக்கம் கொடுத்து விட்டு வந்தேன். நான்கு நாட்கள் கழிந்து, வழியில் சந்தித்த செக்யூரிட்டி காப்பீட்டு அட்டை பெற்று விட்டதாக சொன்னார். அதன் பிறகு நடந்த விஷயம் தான் பதிவெழுதக் காரணம்.

சிகிச்சையின் போது காப்பீட்டு அட்டை இருக்கிறதா என்று கேட்ட தனியார் மருத்துவமனை, காப்பீட்டு அட்டையுடன் சென்றவுடன் திகிலைக் கிளப்பி இருக்கின்றார்கள். காப்பீட்டு திட்டத்தில் கர்ப்பை ஆபரேசன் செய்யலாமாம். கர்ப்பையில் இருக்கும் கட்டியோடு சேர்த்து ஆபரேசன் செய்ய முடியாதாம். அதாவது கர்ப்பப்பையை நீக்க வேண்டும். கட்டி இருப்பதால் அது வேறு நோயாம். என்ன ஒரு லொள்ளு பாருங்கள். படிக்காதவர்கள் என்றால் இந்த பகல் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள் தலையை மொட்டை அடிப்பதையே வழக்கமாய் வைத்திருக்கின்றார்கள்.

அரசு பணம் கொடுக்கிறது, அதை வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கக் கூட தனியார் மருத்துவ மனைகளுக்கு கசக்கிறது. இலவசமாய் சிகிச்சை கொடுக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளோ உடனடி சிகிச்சைக்கு மறுக்கின்றன.

இது பற்றி சில நிரூபர்களிடம் பேசிய போது தனியார் மருத்துமனைகள் பல சிகிச்சை செய்யாமலே போலி குடும்ப அட்டைகளை வைத்துக் கொண்டு கட்டணங்களை வசூல் செய்து கொள்கின்றார்கள் என்றுச் சொன்னார்கள். 
அரசு மருத்துவமனைக்கு ஈசிசிஜி எடுக்கச் சென்றிருக்கிறார். 30 நாட்கள் கழித்து வரும்படி சீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தாங்க முடியாத வலியுடன், நோயின் உச்சத்தில் இருப்பவருக்கு 30 நாட்கள் கழித்து ஈசிசி எடுக்க வாருங்கள் என்கிறார்கள். ( 30 நாட்களுக்குள் மேலுலகம் சென்று விடுவார் என்று அப்படிச் சொல்லி இருப்பார்கள் போல). இதே அரசியல்வாதிகளாகவோ அல்லது அரசு அலுவலர்களாகவோ இருந்தால் உடனடியாக ஈசிசிஜி எடுத்திருப்பார்கள். படிக்காதவர், பாமரன் என்றால் அரசு மருத்துமனைகள் கூட எப்படி நடந்து கொள்கின்றன என்று பாருங்கள். இது கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது. 

பணமில்லாதவன், ஏழை பாழைகளுக்கு சிகிச்சை பெற வழி வகைகள் செய்தால் கூட அதைக்கூட மறுக்கும் இந்த வகை மருத்துவமனைகளை என்னவென்றுச் சொல்வது? இவ்வளவிற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு உள், வெளி நோயாளிகளில் 20 சதவீதம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உத்திரவாதத்தில் தான் அரசு அனுமதி அளிக்கிறது.

இதையெல்லாம் சரி செய்ய முடியாதா? என்று கேட்டால் நிச்சயம் செய்ய முடியும். டெக்னாலஜி வளர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் இந்தவகை ஏமாற்றுக்களை முற்றிலுமாக நீக்கி, நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை கிடைக்க அரசு ஏற்பாடு செய்யலாம். 

அரசு சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இதை அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டுமென்பதற்காக எழுதி இருக்கிறேன். 

காப்பீட்டு திட்ட அட்டை பெறுவது எப்படி?

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் இதற்கென தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதற்கென தரப்படும் அப்ளிகேஷனை பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வருட வருமானச்  சான்றிதழ் பெற்று, மீண்டும் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு சென்றால் அங்கு புகைப்படம், ரேகை முதலியன எடுத்து அடையாள அட்டை எண் கொடுக்கின்றார்கள். வருட வருமானம் ரூபாய் 72,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். குடும்ப அட்டையை சான்றிதழ் கொடுக்க வேண்டும். 

http://www.cmchistn.com/index.html - இந்த முகவரியில் என்னென்ன நோய்க்கு சிகிச்சை கிடைக்கும் என்று விரிவாக இருக்கிறது. மேலும் விபரம் வேண்டுமெனில் அழைக்கவும் : Toll Free Number:  1800 425 3993 

- கோவை எம் தங்கவேல்

Tuesday, July 3, 2012

அம்மா என்றால் அசிங்கம்




மகளை அழைக்கச் சென்று வீடு திரும்பிய மனைவியின் முகம் பேயறைந்தந்தது போல இருந்தது. பள்ளியில் ஏதோ பிரச்சினை போலும் என்று நினைத்துக் கொண்டே விசாரித்தேன். பிரச்சினை பள்ளியிலோ அல்லது குழந்தைகளாலோ அல்ல.

மகளுடன் படிக்கும் தோழியை அழைக்க பாட்டி ஒருவரும் மனைவியுடன் செல்வாராம். நேற்றைக்கு கோவையில் லேசாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆகவே குடை எடுத்துக் கொண்டுதான் பள்ளிக்குச் சென்றார்கள்.

பள்ளி விட்டதும் பாட்டி தன் பேத்தியையும், மனைவி என் மகளையும் அழைத்துக் கொண்டு கேட் தாண்டி நான்கு அடி தூரம் வந்திருப்பார்களாம். பாட்டியின் மகன் காரில் வந்திருக்கிறார். காரில் அவருடன் மனைவி மட்டும் இருந்தாராம். காரை நிறுத்தி தன் மகளை மட்டும் ஏற்றிக் கொண்டவர், பாட்டியை நடந்து வா என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டாராம். பாட்டிக்கு கண்ணில் கண்ணீர் துளிர்த்து நின்றதாம். 

“ஐந்து வயதில் கணவர் இறந்து போய் விட்டார். இவனை படித்து ஆளாக்குவதற்கு இருந்த சொத்தையெல்லாம் விற்று படாத பாடு பட்டு படிக்க வைத்து வேலையையும் வாங்கிக் கொடுத்தேன். என்னதான் சொல்லுங்க, கணவன் இருந்தால் என்னை இப்படி விட்டு விட்டுப் போவாரா? ஏதோ உசிர் இருக்கும் வரை அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதான்” என்று சொல்லி அழுதிருக்கின்றார்.

என் மனைவி ஏதோதோ சொல்லி சமாளித்து அவரை ஆறுதல் படுத்தி இருக்கிறார். 

ஆசை ஆசையாய் பெற்று வளர்த்து கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி படிக்க வைத்து, நேரத்திற்கு உணவு கொடுத்து, வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து வரும் பிள்ளைகளில் நூற்றுக்கு 99 சதவீதம் மேலே கண்ட மகனைப் போலத்தான் இருக்கின்றார்கள்.

ஏன்?

எல்லாவற்றுக்கும் ஒரு பெண் தான் காரணம்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

எனது குடும்பத்தில் என் சின்னம்மா பசங்க மூவர். என்னுடன் சேர்த்து நால்வர். நால்வரும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு ஒரே கொண்டாட்டம் தான். மட்டன், சிக்கன், முட்டை என்று கூத்தும் கும்மாளமுமாய்த் தான் இருக்கும். 

முதல் குழந்தையின் போது மனைவி வாமிட் எடுத்துக் கொண்டே இருப்பாள். அதை வாங்கிக் கொண்டு போய் வெளியில் கொட்டி தண்ணீர் கொடுத்து, அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவது நடுத்தம்பி.

மூத்த தம்பி பிரவசத்தின் போது மருத்துவமனையிலேயே என் அம்மாவுக்குத் துணையாகவும், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு செல்வது என்று இருப்பான். 

இப்படி இருந்தவர்கள் இன்றைக்கு வருடத்திற்கு ஒரு முறை என்னுடன் பேசுவது அரிது. காரணம் அவர்களின் திருமணம்.

சரியாகச் சொன்னால் பெண்கள். மூவரும் மூன்று திசைகள். மெட்டீரியல்ஸ் வாழ்க்கைக்கு அடிமைப்பட்டுப் போன நுகர்வுப் பெண்களாய் வாழ்க்கையில் ஆசைக்கும், நிதர்சனத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் அற்பங்களாய் இருக்கின்றார்கள்.

வாழ்க்கையின் நிதர்சனம் புரிவது ஐம்பது வயதுக்கும் மேல். அப்போது எவராலும் ஏதும் செய்ய இயலாது. இயலாமையால் வெந்து வெந்து வேதனைப்படத்தான் முடியும்.

பாட்டியின் மகனுக்கும் இதே சூழல் வரத்தான் செய்யும். அப்போது வருந்தி என்ன ஆகப் போகின்றது. சாகின்ற வரையில் தன் மகனைப் பற்றி நினைத்து நினைத்து வேதனையில் அல்லவா அப்பாட்டி இறந்து போகும்? 

கணவன் இல்லையென்றால் மனைவியும், மனைவி இல்லையென்றால் கணவனும் கேட்பாரற்றுப் போவார்கள் என்பதுதான் நிதர்சனம். எத்தனை அன்பாக பிள்ளைகள் இருந்தாலும் அது எதற்குமுதவாது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்