குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, July 26, 2012

தமிழ்நாட்டில் நிலநடுக்கம் வருமா?


காமெடியில் பல வகை உண்டு. அதில் ஒரு காமெடி சாமியார்கள் என்போர் செய்வது. ஆன்மீகத்தில் பற்றும், தினமும் தியானம் செய்வதையே வாழ்க்கையாக வைத்திருக்கும் சாமியார் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு மயக்கம் வராத குறைதான். 

இப்போதெல்லாம் டிவிடி, பென் டிரைவ், சிடி, நெட் என்றாலே அலறி அடித்து ஓடும் பல சாமியார்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு சில சாமியார்கள் ஆன்மீகத் தொண்டுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல ஆன்மீகத்தையே வியாபாரமாய் செய்து வரும் பல நிறுவன சாமியார்களையும் பார்த்து வருகிறோம். சாமியார் ஒருவரின் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள, சாமியாரின் அன்பர் ஒருவர் 10,000 கேட்டார். எதற்கெடுத்தாலும் கட்டணம், எதையெடுத்தாலும் காசு என்று இன்றைக்கு கோவில்கள் எல்லாம் காசு வசூல் செய்யும் கணக்கப்பிள்ளை மடமாக மாறிக் கொண்டிருக்கின்றன. பத்தாயிரம் கொடுத்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டால் தான் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும் என்றுச் சொல்கின்றார்கள். 

காசு கொடுத்தால் தான் கடவுளையே தரிசிக்க முடியும் என்கிற கலிகாலத்தில் வசித்துக் கொண்டிருக்கும் போது,  நம் சாமியாரையெல்லாம் நம்பி விட மனது இடம் கொடுக்கவில்லை.

இருப்பினும் அவர் சொன்ன ஒரு விஷயம் தான் மனதை போட்டு அறுக்கிறது. விரைவில் தமிழகத்தில் நில நடுக்கம் வரப்போகிறது என்றார். கேட்ட எனக்கு திக்கென்றது. என்ன சாமி கெட்டதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்களே என்று எரிந்து விழுந்தேன். அதற்கு அவர் ஒரு மோனப் புன்னகையை பரிசாய் அளித்தார்.

அவனவன் கோடி கோடியாய் கொட்டி மாடி மாடியாய் கட்டி வைத்திருக்கின்றார்களே, அப்படி நில நடுக்கம் வந்தால் அய்யோ நினைத்தாலே திகீரென்றது. சாமியாரை எரிச்சலுடன் பார்த்து விட்டு கொடூரமாய் முறைத்து விட்டு வந்து விட்டேன். போதாதற்கு இத்தனை நாளுக்குள் என்று வேறுச் சொல்லி டெரரைக் கிளப்பினார்.

இப்படி ஒரு அனுபவம் எனக்கு. பார்ப்போம் சாமியார் சொன்னது நடக்குமா என்பதை. ஆனால் மனசோ அது நடக்கவே கூடாது என்று வேண்டுகிறது.

திருட்டுச் சம்பவம் நடந்த பிறகு போலீஸ் பிடித்து உள்ளே போட்ட பிறகு தான் திருடர்களை, ஊழல்வாதிகளை, கொலைகாரர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ஆனால் உண்மையில் கொலைகாரர்களாய் சிலர் பவனி வருகின்றார்கள். அவர்கள் யார் என்று தானே கேட்கின்றீர்கள்?

நேற்றைக்கு முதல் நாள் இரவு எட்டு மணியளவில் நானும், மனையாளும் ஒரு வேலை நிமித்தமாய் டவுன்கால் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். மரக்கடை பக்கமாய் வந்து கொண்டிருக்கும் போது எதிரே அரசு பஸ் ஒன்று வந்தது. டிரைவர் லைட்டை டிம் செய்து பலமுறை போட்டு சிக்னெல் காட்டிக் கொண்டே வர, அந்த டவுன் பஸ் டிரைவர் லைட்டைப் போட்டா எனக்கென்ன ஆச்சு என்பது போல, பஸ்ஸைக் கொண்டு வந்து கோவில் முனையில் நிறுத்திக் கொண்டு விட்டார். 

எனது கார் டிரைவர் குதி குதியென்று குதித்தார். அந்த பஸ் டிரைவரோ எனக்கென்ன ஆச்சு என்பது போல நின்றிருந்தார். பஸ்ஸுக்குப் பின்னே இருபது  கார்கள், பைக் என்று டிராபிக் ஜாம் ஆகி விட்டது. பத்து நிமிடம் ஆகிவிட்டது காரை பின்னால் எடுத்து பாதை விட்டு வெளியில் வர.

திமிர் தனம் என்றால் அரசு டிரைவர்களில் சிலருக்கு ஓவராக இருக்கிறது. இப்படிப்பட்ட ஆசாமிகளால் பைக்கில் செல்லும் பலர் பரலோக பிராப்தியை அடைந்து விடுகின்றார்கள். எதிர்பாராத ஆக்சிடென்ட் என்றுச் சொல்லி இப்படியான கொலைகார கம்மனாட்டிகள் தப்பி விடுகின்றார்கள். 

அதுமட்டுமா, ஆக்சிடெண்ட் கிளைம் என்கிற விஷயத்தில் ஒவ்வொரு மாவடத்திலும் சில குறிப்பிட்ட வக்கீல்கள் செய்யும் செயல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டம் கட்டி இருக்கிறது. செத்துப் போன பிணத்தினையும் வைத்துக் காசு சம்பாதிக்கு ஜெகஜ்ஜாலக் கில்லாடிகள் இந்த வக்கீல்கள். இன்ஸூரன்ஸ் கிளைமிற்கு டாக்டருக்கு காசு, வக்கீலுக்கு காசு, ஏஜென்சியை சரிக்கட்ட காசு என்று அனைத்தையும் வக்கீலே செய்து கொண்டு உண்மையில் கிடைக்க வேண்டிய இன்ஸூரன்ஸ் அமவுண்டில் பாதியைக் கொடுத்து விட்டு, மீதியை ஆட்டயப்போடும் அகில உலக கில்லாடி வக்கீல்கள் இந்தியாவெங்கும் இருந்து கொண்டுதானிருக்கின்றார்கள். கரூரில் ஒரு வக்கீல் மாட்டினார். அதன்பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை.

மனிதனுக்கு மனிதனே எதிரியாய் நிற்கின்றார்கள். மனிதனை வழி நடத்த வேண்டிய ஆன்மீகமோ “காசைக் கொடு காசைக் கொடு” என்று கொள்ளை அடிக்கிறது. 

இது கலிகாலம் என்பதைத் தான் இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றனவோ தெரியவில்லை.

- கோவை எம் தங்கவேல்





Monday, July 23, 2012

அம்மாவின் சமையல் எப்படி இருக்கும்?

கோவையின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றின் முதலாளி எனது நண்பர். எப்போதாவது அவரைச் சந்திக்கும் நேரத்தில் சுவாரசியமான பல விஷயங்களைச் சொல்வார்.

கோவையில் சனி அல்லது ஞாயிறுகளில் ஹோட்டல்களில் காசு வாங்கிப் போடவும், பில் போடவும் நேரமிருக்காது என்றார். பெரும்பாலான குடும்பங்கள் ஞாயிறுகளில் ஹோட்டல்களில் தான் சாப்பிடுகின்றன என்றார். மூலைக்கு மூலை ஹோட்டல்களாகவே இருப்பதன் மர்மம் எனக்கு அப்போதுதான் பிடிபட்டது.

கோவையின் திருச்சி ரோட்டில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் கேண்டீனில் ஒரு நாள் சாப்பிடுவோர் எண்ணிக்கை 7000 என்று எழுதி இருந்தது. சுமாராக 10,000 பேருக்கும் மேல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கேண்டீனுக்கு எதிரே இருக்கும் மருந்துக் கடையில் பில் போடுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் நிற்க வேண்டும். எந்த மருத்துவரிடமும் டோக்கன் இல்லாமல் செல்ல முடியாது. ஹோட்டல்களில் கூட்டம் கூடக் கூட மருத்துவர்களுக்கு வருமானம் கொட்டிக் கொண்டிருக்கும்.

பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் இல்லாமல் குழந்தைகள் வளர்வது எதிர்கால சமூகத்திற்கு மிகப் பெரும் தீங்கினைத் தரப் போகின்றது. நேற்றைய தினத்தந்தியில் “உஷாரையா உஷாரு” பத்தியில் பணக்கார குடும்பத்தில் பிறந்த பெண் மாணவிகள் சிலர் வகுப்பறையில் தண்ணீருடன் வோட்கா கலந்து குடித்திருக்கின்றார்கள் என்றும், வீட்டில் அப்பா தன் நண்பர்களோடு மது அருந்துவதையும், அவ்வப்போது அம்மாவும் மது அருந்துவதையும் பார்த்துப் பார்த்து, அந்த மாணவிகள் மதுவிற்கு அடிமையாக மாறி குடித்து வந்திருக்கின்றார்கள் என்று எழுதி இருக்கிறது.

சென்னையில் இருந்து போனில் அழைத்த பதிவர் ஒருவர், பெண்கள் அழகாய், மினுமினுக்க, தக்காளியாய் பளபளக்க வொயின் குடிக்கின்றார்கள் என்றுச் சொல்லி விட்டு, முடிவாய் இப்போதைக்கெல்லாம் திருமணம் செய்து கொள்வதை நினைத்தாலே பயமாய் இருக்கிறது என்றார்.

குறவைமீனும், சின்னஞ்சிறிய கெழுத்தி மீனையும் வைத்து, மாங்காய் போட்டு, அம்மியில் அரைத்த மிளகாயுடன், புளிப்பும் சேர எனது அம்மா வைத்த மீன் குழம்பின் சுவையை இதுகாறும் வேறு எந்த ஹோட்டல்களிலும் நான் சாப்பிட்டதே இல்லை. அம்மாவின் அன்போடு தயார் செய்யப்பட்ட உணவின் சுவையை எந்த ஒரு ஹோட்டலும் எப்போதும் தந்து விட முடியாது. 

பசும்பால் தயிரைக் கடைந்து கொண்டிருக்கும் போது பொங்கி வரும் வெண்ணெய் திரளை வழித்து எடுத்து நடு நாக்கில் வைத்து விடும் அம்மாக்கள் அந்தக் கால அம்மாக்கள் எல்லாம் நினைவுகளோடு நினைவுகளாய் பதிந்து  போய் கிடக்கின்றார்கள். இன்றைய அம்மாக்கள் டிவி பெட்டியில் சமையல் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு “டோர் டெலிவரி” ஹோட்டல்களில் உணவுகளை ஆர்டர் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

காலங்களுக்கு ஏற்ற உணவு எது, காலையில் என்ன உணவு சிறந்தது, மாலையில் என்ன உணவு நல்லது, எந்தெந்தப் பொருளை எந்தெந்த உணவுடன் சேர்த்துச் சமைக்க வேண்டுமென்பதெல்லாம் இன்றைய அம்மாக்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவே முடியாது. காரணம் உடம்பின் மீதும், உணவின் மீது அக்கறை இன்றி கண்டதைத் தின்று விதி வந்த அன்றைக்குச் சாவோம் என்று பொறுப்பற்று வாழும் வாழ்க்கையை “ நாகரீகம்” என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாகரீகம் என்பதை உடையிலும், ஒப்புக்கும் பெறாத பாவணைகளிலும், உணவுகளிலும் இருக்கிறது என்று நம்புகிறார்கள் இன்றைய மாந்தர்கள்.

மெக்டொனால்டின் ஒரு வருட வருமானம் 23 பில்லியன் டாலர்கள். உலகிலேயே அதிக அளவு இறைச்சியை பதப்படுத்தி, பிராண்டட் பெயரில் விற்கும் இந்த உணவகத்தின் உணவுகள் எதுவும் உடலுக்கு நல்லதைச் செய்வதில்லை என்று பல இணையதளங்களில் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இன்றைக்கும் இந்த மெக்டொனால்டின் விற்பனை உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றதே ஒழிய குறையவில்லை.

அம்மாவின் சமையல் எப்படி இருக்கும் என்று இனி வரும் குழந்தைகளுக்குத் தெரியப்போவதில்லை. வளரும் சந்ததிகளுக்கு மெக்டொனால்ட், சரவணபவன்கள் தான் அம்மாக்களாகத் தெரியும். அன்பினைக் கூட நாகரீகத்தின் பெயரால் மாற்றமடைய வைத்த இன்றைய அம்மாக்களின் செயல் மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும்.

- கோவை எம் தங்கவேல்

Sunday, July 22, 2012

அரசையும் மக்களையும் ஏமாற்றும் தனியார் மருத்துவமனைகள்


குழந்தைகள் படிக்கும் பள்ளியின் செக்யூரிட்டியின் கண்கள் கலங்கி இருந்தன. விசாரித்தேன். அவர் மனைவிக்கு கர்ப்பைப்பையில் கட்டி வந்து விட்டது என்று புலம்பினார். ஆபரேசன் செய்ய ஆகும் செலவை நினைத்து கலங்கிப் போயிருந்தார். அவரிடம் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் பற்றிச் சொல்லி உடனடியாக காப்பீட்டு அடையாள அட்டை பெறும்படியும், அதன் வழி முறைகள் பற்றியும் விளக்கம் கொடுத்து விட்டு வந்தேன். நான்கு நாட்கள் கழிந்து, வழியில் சந்தித்த செக்யூரிட்டி காப்பீட்டு அட்டை பெற்று விட்டதாக சொன்னார். அதன் பிறகு நடந்த விஷயம் தான் பதிவெழுதக் காரணம்.

சிகிச்சையின் போது காப்பீட்டு அட்டை இருக்கிறதா என்று கேட்ட தனியார் மருத்துவமனை, காப்பீட்டு அட்டையுடன் சென்றவுடன் திகிலைக் கிளப்பி இருக்கின்றார்கள். காப்பீட்டு திட்டத்தில் கர்ப்பை ஆபரேசன் செய்யலாமாம். கர்ப்பையில் இருக்கும் கட்டியோடு சேர்த்து ஆபரேசன் செய்ய முடியாதாம். அதாவது கர்ப்பப்பையை நீக்க வேண்டும். கட்டி இருப்பதால் அது வேறு நோயாம். என்ன ஒரு லொள்ளு பாருங்கள். படிக்காதவர்கள் என்றால் இந்த பகல் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள் தலையை மொட்டை அடிப்பதையே வழக்கமாய் வைத்திருக்கின்றார்கள்.

அரசு பணம் கொடுக்கிறது, அதை வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கக் கூட தனியார் மருத்துவ மனைகளுக்கு கசக்கிறது. இலவசமாய் சிகிச்சை கொடுக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளோ உடனடி சிகிச்சைக்கு மறுக்கின்றன.

இது பற்றி சில நிரூபர்களிடம் பேசிய போது தனியார் மருத்துமனைகள் பல சிகிச்சை செய்யாமலே போலி குடும்ப அட்டைகளை வைத்துக் கொண்டு கட்டணங்களை வசூல் செய்து கொள்கின்றார்கள் என்றுச் சொன்னார்கள். 
அரசு மருத்துவமனைக்கு ஈசிசிஜி எடுக்கச் சென்றிருக்கிறார். 30 நாட்கள் கழித்து வரும்படி சீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தாங்க முடியாத வலியுடன், நோயின் உச்சத்தில் இருப்பவருக்கு 30 நாட்கள் கழித்து ஈசிசி எடுக்க வாருங்கள் என்கிறார்கள். ( 30 நாட்களுக்குள் மேலுலகம் சென்று விடுவார் என்று அப்படிச் சொல்லி இருப்பார்கள் போல). இதே அரசியல்வாதிகளாகவோ அல்லது அரசு அலுவலர்களாகவோ இருந்தால் உடனடியாக ஈசிசிஜி எடுத்திருப்பார்கள். படிக்காதவர், பாமரன் என்றால் அரசு மருத்துமனைகள் கூட எப்படி நடந்து கொள்கின்றன என்று பாருங்கள். இது கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது. 

பணமில்லாதவன், ஏழை பாழைகளுக்கு சிகிச்சை பெற வழி வகைகள் செய்தால் கூட அதைக்கூட மறுக்கும் இந்த வகை மருத்துவமனைகளை என்னவென்றுச் சொல்வது? இவ்வளவிற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு உள், வெளி நோயாளிகளில் 20 சதவீதம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உத்திரவாதத்தில் தான் அரசு அனுமதி அளிக்கிறது.

இதையெல்லாம் சரி செய்ய முடியாதா? என்று கேட்டால் நிச்சயம் செய்ய முடியும். டெக்னாலஜி வளர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் இந்தவகை ஏமாற்றுக்களை முற்றிலுமாக நீக்கி, நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை கிடைக்க அரசு ஏற்பாடு செய்யலாம். 

அரசு சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இதை அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டுமென்பதற்காக எழுதி இருக்கிறேன். 

காப்பீட்டு திட்ட அட்டை பெறுவது எப்படி?

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் இதற்கென தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதற்கென தரப்படும் அப்ளிகேஷனை பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வருட வருமானச்  சான்றிதழ் பெற்று, மீண்டும் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு சென்றால் அங்கு புகைப்படம், ரேகை முதலியன எடுத்து அடையாள அட்டை எண் கொடுக்கின்றார்கள். வருட வருமானம் ரூபாய் 72,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். குடும்ப அட்டையை சான்றிதழ் கொடுக்க வேண்டும். 

http://www.cmchistn.com/index.html - இந்த முகவரியில் என்னென்ன நோய்க்கு சிகிச்சை கிடைக்கும் என்று விரிவாக இருக்கிறது. மேலும் விபரம் வேண்டுமெனில் அழைக்கவும் : Toll Free Number:  1800 425 3993 

- கோவை எம் தங்கவேல்

Tuesday, July 3, 2012

அம்மா என்றால் அசிங்கம்




மகளை அழைக்கச் சென்று வீடு திரும்பிய மனைவியின் முகம் பேயறைந்தந்தது போல இருந்தது. பள்ளியில் ஏதோ பிரச்சினை போலும் என்று நினைத்துக் கொண்டே விசாரித்தேன். பிரச்சினை பள்ளியிலோ அல்லது குழந்தைகளாலோ அல்ல.

மகளுடன் படிக்கும் தோழியை அழைக்க பாட்டி ஒருவரும் மனைவியுடன் செல்வாராம். நேற்றைக்கு கோவையில் லேசாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆகவே குடை எடுத்துக் கொண்டுதான் பள்ளிக்குச் சென்றார்கள்.

பள்ளி விட்டதும் பாட்டி தன் பேத்தியையும், மனைவி என் மகளையும் அழைத்துக் கொண்டு கேட் தாண்டி நான்கு அடி தூரம் வந்திருப்பார்களாம். பாட்டியின் மகன் காரில் வந்திருக்கிறார். காரில் அவருடன் மனைவி மட்டும் இருந்தாராம். காரை நிறுத்தி தன் மகளை மட்டும் ஏற்றிக் கொண்டவர், பாட்டியை நடந்து வா என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டாராம். பாட்டிக்கு கண்ணில் கண்ணீர் துளிர்த்து நின்றதாம். 

“ஐந்து வயதில் கணவர் இறந்து போய் விட்டார். இவனை படித்து ஆளாக்குவதற்கு இருந்த சொத்தையெல்லாம் விற்று படாத பாடு பட்டு படிக்க வைத்து வேலையையும் வாங்கிக் கொடுத்தேன். என்னதான் சொல்லுங்க, கணவன் இருந்தால் என்னை இப்படி விட்டு விட்டுப் போவாரா? ஏதோ உசிர் இருக்கும் வரை அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதான்” என்று சொல்லி அழுதிருக்கின்றார்.

என் மனைவி ஏதோதோ சொல்லி சமாளித்து அவரை ஆறுதல் படுத்தி இருக்கிறார். 

ஆசை ஆசையாய் பெற்று வளர்த்து கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி படிக்க வைத்து, நேரத்திற்கு உணவு கொடுத்து, வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து வரும் பிள்ளைகளில் நூற்றுக்கு 99 சதவீதம் மேலே கண்ட மகனைப் போலத்தான் இருக்கின்றார்கள்.

ஏன்?

எல்லாவற்றுக்கும் ஒரு பெண் தான் காரணம்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

எனது குடும்பத்தில் என் சின்னம்மா பசங்க மூவர். என்னுடன் சேர்த்து நால்வர். நால்வரும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு ஒரே கொண்டாட்டம் தான். மட்டன், சிக்கன், முட்டை என்று கூத்தும் கும்மாளமுமாய்த் தான் இருக்கும். 

முதல் குழந்தையின் போது மனைவி வாமிட் எடுத்துக் கொண்டே இருப்பாள். அதை வாங்கிக் கொண்டு போய் வெளியில் கொட்டி தண்ணீர் கொடுத்து, அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவது நடுத்தம்பி.

மூத்த தம்பி பிரவசத்தின் போது மருத்துவமனையிலேயே என் அம்மாவுக்குத் துணையாகவும், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு செல்வது என்று இருப்பான். 

இப்படி இருந்தவர்கள் இன்றைக்கு வருடத்திற்கு ஒரு முறை என்னுடன் பேசுவது அரிது. காரணம் அவர்களின் திருமணம்.

சரியாகச் சொன்னால் பெண்கள். மூவரும் மூன்று திசைகள். மெட்டீரியல்ஸ் வாழ்க்கைக்கு அடிமைப்பட்டுப் போன நுகர்வுப் பெண்களாய் வாழ்க்கையில் ஆசைக்கும், நிதர்சனத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் அற்பங்களாய் இருக்கின்றார்கள்.

வாழ்க்கையின் நிதர்சனம் புரிவது ஐம்பது வயதுக்கும் மேல். அப்போது எவராலும் ஏதும் செய்ய இயலாது. இயலாமையால் வெந்து வெந்து வேதனைப்படத்தான் முடியும்.

பாட்டியின் மகனுக்கும் இதே சூழல் வரத்தான் செய்யும். அப்போது வருந்தி என்ன ஆகப் போகின்றது. சாகின்ற வரையில் தன் மகனைப் பற்றி நினைத்து நினைத்து வேதனையில் அல்லவா அப்பாட்டி இறந்து போகும்? 

கணவன் இல்லையென்றால் மனைவியும், மனைவி இல்லையென்றால் கணவனும் கேட்பாரற்றுப் போவார்கள் என்பதுதான் நிதர்சனம். எத்தனை அன்பாக பிள்ளைகள் இருந்தாலும் அது எதற்குமுதவாது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, June 27, 2012

கரிசல் மண் திரைப்படத்தின் மனதை மயக்கும் பாடல்


மிகச் சமீபத்தில் எனது ஊர் பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், சினிமா பட இயக்குனருமான சுப. தமிழ்வாணன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

இவர் தற்போது “கரிசல் மண்” என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். பேராவூரணி பகுதி, கீரமங்கலம், பைங்கால், வேமங்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இளையராஜாவிடம் வேலை செய்து கொண்டிருந்த திரு யானிதேஷ் என்ற புது இசையமைப்பாளர் தன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றும், நீங்கள் அவசியம் திரைப்படப் பாடல்களை கேட்டு கருத்துச் சொல்ல வேண்டுமென்றும் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை முதன் முதலில் ஒரு திரைப்படப்பாடலைக் கேட்கின்ற போது மனது பட்டென்று பாடலோடு ஒட்ட வேண்டும் என்று நினைப்பேன். அத்தகைய பாடல்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவில் வெளியிடப்படுகின்றன.

எனது தாத்தா மாணிக்கதேவர் இந்திய தேசிய ராணுவத்தில் வேலை செய்து, பின்னர் கைதாகி மலேசியா சிறையில் இருந்து வெளிவந்த போது வானொலிப் பெட்டி ஒன்றினை வாங்கி வந்திருந்தார். அதை நான் வெகு பத்திரமாக பாதுகாத்து வந்தேன். பெண்கள் கல்லூரி ஒன்றில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக பணி புரிந்து விட்டு, பத்து நாள் லீவில் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

1997ம் வருடம் என்று நினைக்கிறேன். படப்பைக் கற்கள் பதிந்த வீட்டு வாசலில் குளிர் காலமொன்றின் சூரியன் உதிக்காத பொழுதில் செய்தி கேட்பதற்காக வானொலியை ஆன் செய்த போது, இளையராஜாவின் காதலுக்கு மரியாதை படத்தின் “என்னைத் தாலாட்ட வருவாளா?” பாடலை முதன் முதலாய் கேட்க நேர்ந்தது. வானொலி என்பதால் அதே பாட்டை அடுத்த தடவை உடனடியாக கேட்க இயலாதே. கேட்ட பொழுதே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது பாடலும், ராகமும்.

அப்பாடலைக் கேட்பதற்காகவே வாக்மென் வாங்கி, கேசட்டில் அப்பாடலைப் பதிவு செய்து பலமுறை கேட்டிருக்கிறேன்.


அவரிடம் நிச்சயம் கேட்கிறேன் என்றுச் சொல்லி இருந்தேன். தற்போது வரக்கூடிய திரைப்படப்பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டுவதே இல்லை. அத்தி பூத்தாற்போல ஏதோ ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் பதிகின்றன. 

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் ”ஏண்டி கள்ளச்சி” என்ற பாடல் என்னை அமைதியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதே போல நினைத்தாலே இனிக்கும் படத்தின் “அழகாய் பூக்குதே” என்ற பாடலு என்னைக் கவர்ந்த சமீபத்திய பாடல்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படியான ஒரு பாடலை “கரிசல் மண்” படத்தில் கேட்க நேர்ந்தது. நீங்களும் கேட்டு விட்டு பாடல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். அபுதாபியைச் சேர்ந்த பாடகி வந்தனா இப்பாடலைப் பாடி இருக்கிறார். இயக்குனர் சுப.தமிழ்வாணனும், இசையமைப்பாளர் யானி தேஷ்க்கும், பாடகி வந்தனாவிற்கும், பாடலாசிரியர் சுப்ரமணிய நந்தி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ அந்தப் பாடல்


- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, June 25, 2012

என்ன சொல்ல ஒன்றும் புரியவில்லை

பாஸ்போர்ட் ரினீவல் வந்து விட்டது. முதன் முதலில் பாஸ்போர்ட் எடுக்க ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து ஒரு வருடம் ஏமாந்த கதையெல்லாம் நினைவுக்கு வந்து இனி என்ன பாடோ தெரியவில்லையே என்று திகிலடித்தது பாஸ்போர்ட் ரினீவல்.

அவினாசி சாலையில் இருக்கும் புதிய இடத்து பாஸ்போர்ட் ஆஃபீசுக்குச் சென்றால் அங்கு ஆன்லைனில் பதிவு செய்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வர வேண்டுமென்று சொன்னார்கள். ஆஹா வேலை எளிதாக இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு பாஸ்போர்ட் தளத்திற்குள் நுழைந்தால் ஆரம்பித்தது வினை.

இரண்டு நிமிடம் கழித்து தான் திரை வரும். ஒரு வழியாக முதன் முதலாய் பதிவு செய்து, எல்லா விபரங்களையும் பதிவு செய்து, மீண்டும் அப்லோட் செய்தால் மாலை நான்கு மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் பெறுங்கள் என்ற செய்தி கிடைக்க, மூன்று மணிக்கே இணையதளத்தை திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தால் “அடேய் பயலே என்னிடமா? “ என்று எதுவுமே கிடைக்க வில்லை. இப்படியே நான்கு நாட்கள் சென்றன. எரிச்சலில் கஸ்டமர் கேருக்கு போன் செய்து விசாரித்தால் நேரிடையாகச் செல்லுங்கள் என்றார்கள்.

அப்ளை செய்த அடுத்த நாள் பாஸ்போர்ட் கையில் வந்து விட்டது. மத்திய அரசின் அலுவலகமான பாஸ்போர்ட் ஆஃபீஸ் அசத்தலாய் இருக்கிறது. அட்டகாசமான சர்வீஸ் வழங்குகிறார்கள். எல்லாமே கணிணி மயம்.

வாசலில் செக்யூரிட்டி ஒரு பெண். சுடிதாரில் மிரட்டிக் கொண்டிருந்தார். பார்க்க படு ரகளையாய் இருந்தது. அலுவலகத்தின் உள்ளே போன் சனியன் தான் பெரிய பிரச்சினையாய் இருக்கிறது. என்ன சொன்னாலும் கேட்காத சில மனிதர்களுடன் அங்கு சிலர் போராடினார்கள். அரை மணி நேரம் கூட செல் போனை அணைத்து வைக்க முடியாத அற்பங்களை அங்குதான் பார்த்தேன்.

பாஸ்போர்ட் ரினீவல் செய்ய சில டிப்ஸுகள்.

1) இருப்பிட அடையாளத்திற்கு இரண்டு ஆவணங்கள்
2) ஐடெண்டிக்கு இரண்டு ஆவணங்கள்
3) திருமணமானால் கண்டிப்பாக அஃபிடவிட்
4) கல்விச் சான்றிதழ்கள் 
5) முந்தைய பாஸ்போர்ட்

போட்டோ தேவையில்லை. அவர்களே விரல் ரேகை, போட்டோவெல்லாம் எடுத்து விடுகின்றார்கள்.

பாஸ்போர்ட் அலுவலகம் போல மா நில அரசு அலுவலகங்களும் இருந்து விட்டால் மக்கள் சிரமம் இன்றி தங்கள் வேலைகளை முடித்துக் கொள்வார்கள். அரசு செய்ய வேண்டும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, May 29, 2012

ஐபிஎல் 420 கிரிக்கெட் - தினமணி தலையங்கம்

அடியேன் ஏப்ரல் 16-20, 2012 பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் முதன் முதலாய் எழுதிய கட்டுரையின் பெயர் “ஐபிஎல் 420 கிரிக்கெட்”. கட்டுரை வெளிவந்த புதிதில் பல நண்பர்கள் சும்மாவாச்சும் எழுதி இருக்கின்றீர்கள் என்று என்னிடம் “கருத்து” தெரிவித்தார்கள். அவர்களுக்கெல்லாம் சிரிப்பையே பதிலாக்கினேன்.

அதைத் தொடர்ந்து வெளி வந்த ஐபில் சூதாட்டம், மது, மாது கொண்ட்டாட்டங்களைக் கண்டு, “கருத்து” தெரிவித்த நண்பர்களே “என்னப்பா, அப்படியே நடக்கிறது” என்று மீண்டும் “கருத்து” தெரிவித்தார்கள்.

இன்றைய தினமணி தலையங்கமும், அடியேனின் கட்டுரையின் கருத்தும் ஒன்றாய் இருப்பதை பாருங்கள். ஐபிஎல் கருப்புப் பண முதலைகளின் பிசினஸ் ஏரியாவாக இருப்பதையும், கிரிக்கெட் கிரிக்கெட் என்று மக்கள் ஏமாந்து முட்டாளாக இருப்பதையும் படித்து, அதில் எவராவது ஒரு சிலராவது  உணர்ந்து திருந்துவார்கள் என நம்புகிறேன்.

-ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்.


தினமணியில் வெளியான 28.05.2012 தலையங்கத்தின் லிங்க்


அடியேனின் கட்டுரை 

ஐபிஎல் 420 கிரிக்கெட்

இந்தியாவில் 1990க்குப் பிறகான அரசியல் உலகில் பணம் சம்பாதிப்பதை பிரதானமாக அரசியல்வாதிகள் நினைக்க ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டார்கள். தங்களுக்கு என  தனியாகவும், தான் சார்ந்த கட்சியின் பெயராலேயும் பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தனர். இந்திய ஊழல்களின் ஆரம்பம் 1990க்குப் பிறகே சூடு பிடிக்க ஆரம்பித்தன. பொது நலத்தின் போர்வைக்குள்ளே சுய நலத்தின் நரி புகுந்தது. அரசியலிலில் நாகரீகம் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போனது. கொள்கைகள், கோட்பாடுகள், கட்டுப்பாடுகள் எல்லாம் மாற்றத்துக்கு உரியனவாய் மாறிப் போயின. பதவி இருந்தால் பத்து மட்டுமல்ல பத்து லட்சம் கோடியும் கிடைக்கும் என்று சமூகத்தில் எண்ணங்கள் ஊன்ற ஆரம்பித்தன. கட்சிப் பதவிக்கு கோடிகளைக் கொட்டி சீட் வாங்க ஆரம்பித்தார்கள். சமூகம் பணம் இல்லாத நல்லவனுக்கு கொடுக்கும் மரியாதையை விட, பணமுள்ள கெட்டவனுக்கு கொடுக்க ஆரம்பித்தது. ஊழலின் அசைக்க முடியாத புல் விதை இங்கு விதைக்கப்பட்டது.

மஹாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்திற்கு அழைக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த வேலையையும், குடும்பத்தையும் துறந்து களத்துக்குள் இறங்கிய இந்தியர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று ஓட்டுப் போட “பணம்” பெற்றுக் கொள்ளும் சுய நல இந்தியர்கள் இருக்க காரணம், பதவி வெறியும், எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க துடிக்கும் நபர்கள்தான் காரணம்.

முன்பு காந்தியின் எண்ணமும் செயலும் பொது நலத்தை முன்னிறுத்தி இருந்தது. பொது மேடையில் சுய நல பரப்புரைகள் இடம் பெறாது. இன்றோ அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்றால் வரிசை கட்டி சாலைகளில் பறக்கும் கார்கள் என்ன? சாலையோரம் நடப்படும் ட்யூப் லைட்டுகள் என்ன, கொடிகள் என்ன, தோரணம் என்ன? ஆட்டம் என்ன பாட்டம் என்ன என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இவ்வளவு பணத்தைக் கொட்டி செலவு செய்து விட்டு, பதவிக்கு வந்த பிறகு சும்மாவா இருப்பார்கள். தவறு செய்பவர்களுக்கு ஓட்டுப் போட்டு அனுப்பி வைக்கும் இந்தியர்களின் அறிவுக் கூர்மையை என்னவென்று மெச்சுவது? மாறிப் போன மக்களால் ஊழல் இந்தியாவின் முகமாய் மாறிப் போனது. இந்தியா என்றால் ஊழல், ஊழல் என்றால் இந்தியா என்றாகிப் போனது.

ஊழல் செய்து பணம் சம்பாதித்தால் மட்டும் போதாது என்று அந்த ஊழல் பணத்தையே முதலீடாக்கி மேலும் மேலும் கொள்ளை கொள்ளையாய் வசூலிக்க வேண்டுமென்ற இவ்வகை ஊழல்வாதிகளின் ஆசையை நிறைவேற்ற வந்தது தான் இந்தியன் ப்ரீமியர் லீக் என்கிற ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட்.

ஐபிஎல் டி20  கிரிக்கெட் எப்படி ஊழல்வாதிகளின் விளையாட்டாய் மாறியது என்பதைச் சுருக்கமாய் இனி பார்ப்போம்.

என் ஆர் ஐ என்றுச் சொல்லக்கூடிய வெளி நாடு வாழ் இந்தியர்கள் அதாவது வெளி நாடுகளில் வசித்து பிசினஸ் செய்து பணம் சம்பாதிக்கும் இந்தியர்கள், அப்பணத்தை எளிதில் இந்தியா கொண்டு வரும் படியான இந்தியப் பொருளாதார விதிகள் வெகு ஜாக்கிரதையாக வகுக்கப்பட்டன. இந்த விதிகளைப் பயன்படுத்திக் கொண்டும், இந்தியா சில நாடுகளுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் படியும் என் ஆர் ஐ பிசினஸ் மேன்களைப் பினாமியாக வைத்துக் கொண்டு பெரும்பான்மையான கறுப்புப் பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும், சில நாடுகளின் வழியாக கருப்புப் பணத்தை மூலதனமாய் மாற்றிக் கொண்டு, இந்தியாவில் பிசினஸ் செய்ய, இந்த ஐபிஎல் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தனர். டி20 கிரிக்கெட் விதிகளில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராய் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பெரும்பான்மையான அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளும் தங்கள் கறுப்புப் பணத்தை வெகு எளிதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலீடு செய்கின்றனர். திரு லலித் மோடியும், திரு சசி தரூரும் கொச்சி அணியில் செய்த தில்லுமுல்லுகளை நீங்கள் செய்தித்தாள்களில் படித்திருக்கலாம்.

டி20 கிரிக்கெட் மூலமாய் மிகப் பெரிய லாபம் கிடைக்குமா என்று சந்தேகிப்பீர்கள். ஸ்டார் டிவி ஒரு போட்டி ஒளிபரப்பிற்கு 40 கோடி கட்டணம் கொடுத்து ஏலமெடுத்து இருக்கிறது. இந்த நாற்பது கோடியை இரண்டு மணி நேரத்தில் எப்படி எடுப்பார்கள் என்று ஒரு நிமிடம் கணக்குப் போட்டுப் பார்த்தால் ஒளிந்திருக்கும் ரகசியம் புலப்பட ஆரம்பிக்கும். ஒளிபரப்பிற்கான உரிமை, கட்டண உரிமை போன்றவற்றில் மட்டும்தான் வருமானம் வரும் என்று அப்பிராணிகள் நினைக்கக் கூடும். அது ஒரு சிறிய வருமானம் என்றால் மிகப் பெரிய வருமானம் வரும் வழி ஒன்று டி20 கிரிக்கெட்டில் இருக்கிறது.

விளையாட்டில் வெற்றி பெற்றால் பரிசுகள் கிடைக்கும். தோற்றால் ஒன்றும் கிடைக்காது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் டீம்களின் ஓனர்களுக்கு தோற்றாலும், வெற்றி பெற்றாலும் கோடி கோடியாய் ரகசியமாய் கொட்டும். தன் டீம் தோற்பதற்காகவா இத்தனை கோடிகளை கொட்டி விளையாட்டு வீரர்களை விலைக்கு வாங்குவார்கள்? யோசித்துப் பாருங்கள் காரணம் உங்களுக்கு நன்கு புரியும். இன்னும் புரியவில்லை என்றால் தொடர்ந்து படியுங்கள். சில ஐபி எல் கிரிக்கெட் டீம்கள் ஜெயிக்கவே இல்லையே எப்படி அவர்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள்? அதற்கு எப்படி பணம் வருகிறது என்று கேட்டுப் பாருங்கள். விபரம் தெரியும். இது ஒன்றும் பத்து ரூபாய் கத்தரிக்காய் வியாபாரம் இல்லை. இது ஒரு விதமான சித்து விளையாட்டு வியாபாரம். பணமிருப்போர் உல்லாச அறைகளிலே அழகிகளின் மடிகளில் படுத்துக் கொண்டு விளையாடும் சூதாட்டம் தான் 420 மன்னிக்கவும் டி20 கிரிக்கெட்.

தோற்றாலும் பணம் எப்படிக் கொட்டும் என்று இன்னும் புரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கம்.  ஷாருக்கான் ஏன் கிரிக்கெட் டீமை வாங்க வேண்டும்? அவர் டீம் தோற்றால் நஷ்டமாகுமே?  நஷ்டமானால் போட்ட காசு புஸ்ஸாகிவிடுமே? கிரிக்கெட் மீதிருக்கும் ப்ரியத்தாலா ஷாருக்கான் ஐபிஎல் டீமை வாங்கினார்? நிச்சயமாக இருக்கவே முடியாது. போடும் பணம் இரட்டிப்பு அல்ல பல மடங்கு அதிகமாக வந்தால் தான் அல்லவா பணக்காரர்கள் முதலீடு போடுவார்கள். இல்லையென்றால் அந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பார்களா? ஆகவே பெரும் பணம் முதலீடு செய்யப்பட்டால் சாதாரணமாய் கிடைக்கும் வருமானத்தை விட மிக அதிக வருமானம் கொட்டும் என்பதற்காகத்தானே முதலீடுகளை கொட்டுகின்றார்கள். உடனே ஷாருக்கான் துபாயில் வாங்கி இருக்கும் இந்தியர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வில்லா உங்களுக்கு நினைவில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

கிரிக்கெட்டை முன் வைத்து உலகமெங்கும் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்தச் சூதாட்டத்தை யாருக்கும் தெரியாமல், வெகு சாமர்த்தியமாக, ரகசியமாக இந்தியாவில் தொடர்ந்து நடத்திக் கொண்டு தான் வருகின்றார்கள். உலகப் போலீஸ் இண்டர் போலால் கூட கண்டுபிடிக்க முடியாது என்று இச்சூதாட்டத்தை நடத்துபவர்கள் மார்தட்டிக் கொள்வார்கள்.

சூதாட்ட ரகசியத்தை இப்போது பார்க்கலாம். எக்ஸ் என்ற டீம் எல்லாப் போட்டிகளிலும் ஜெயித்துக் கொண்டே வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது பலரும் பெட் கட்டுவார்கள். பெரும் பணம் குவியும். எக்ஸ் அணிதான் ஜெயிக்கும் என்று ஏகப்பட்ட பேர் கிரெடிட் கார்டு மூலமும், இன்னபிற உண்டிகள் மூலமும் பணத்தைக் கொண்டு போய் கொட்டுவார்கள். மிகப் பெரும் பணம் வசூல் ஆனது தெரிந்தவுடன் சூதாட்டத்தின் அடுத்த வேலை ஆரம்பிக்கும். யாரோ ஒருவர் ஒய் என்ற அணி ஜெயிக்கும் என்று பெட் கட்டுவார். எக்ஸ் தோற்றால் ஒய்யுக்கு அத்தனை பணமும் வந்து விடும் அல்லவா? அதற்கேற்ப சிக்னல்கள் தண்ணீர் பாட்டில்கள் மூலமாகவோ, காயமடைந்து விட்டார் என்பதாகவே, கணுக்கால் உடைந்து விட்டது என்பதாகவோ சம்பந்தப்பட்ட பிளேயருக்குக் கொண்டு செல்லப்படும். முடிவில் எக்ஸ் தோற்று ஒய் ஜெயிக்கும்.  எக்ஸ் ஜெயிக்கும் என்று பணம் கட்டியவர்களின் பணம் ஹோகயா ஆகி விடும். ஒய் மீது பணம் கட்டியவர்களிடமிருந்து தோற்ற அணியின் அதாவது எக்ஸுக்கு பேசப்பட்ட பங்கு சென்று சேரும்.

இப்படியெல்லாம் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கு ஒன்றினை மீண்டும் நினைவு படுத்துகிறேன். விலை கொடுத்து வாங்கப்படும் விளையாட்டு வீரர்கள், அணியின் முதலாளி சொல்வதைக் கேட்பார்களா  இல்லை கேட்கமாட்டார்களா?  என்பதற்கான விடையில் இருக்கிறது டி20 கிரிக்கெட் 420 கிரிக்கெட்டான மாறியதன் காரணம்.

ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்பது போல அரசியல் புகுந்த இடம் ஊழலாகிப் போகும் என்பதற்கு பவித்திரமான விளையாட்டும் மாறிப் போனது. வெறும் பதினோறு நாடுகளில் விளையாடப்படும் கிரிக்கெட்டை பணம் கொழிக்கும் கற்ப தருவாய் மாற்றிக் காட்டி, அதையும் ஊழல் மயமாக்கியதோடு இல்லாமல் இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றனர் அரசியல்வாதிகளும், சில சுய நலமிகளும். டி20 கிரிக்கெட்டினை ஊழல் செய்ய உருவாக்கப்பட்ட விளையாட்டாய் மாற்றி விட்டார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாய் கிரிக்கெட் மாறி இருக்கிறது. வரப்போகும் வரலாற்றுப் பக்கங்களில் கிரிக்கெட் என்பது “திருடர்களின் விளையாட்டாய்” பதியப் படத்தான் போகிறது. உண்மை காற்றுப் போல. அது ஒரு நாள் புயலாய் மாறும் போது பொய் என்ற நாற்றமெடுக்கும் தோற்றம் கரைந்து போய் விடும். டி20 ஐபிஎல் ஊழலுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு என்பது வரலாற்றில் பதியப்படும். அப்போது மக்களெல்லாம் “இப்படி ஏமாந்து விட்டோமே?” என்று பெருமூச்செறிவார்கள் என்பது நிச்சயம்.

அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டும், காதில் ரேடியோவை வைத்துக் கொண்டும், இணைய தளங்களில் டி 20 கிரிக்கெட்டின் ரிசல்ட்டைக் கவனித்துக் கொண்டும், அது பற்றிய கமென்டுகளை பேசிக் கொண்டும், விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர் என்றுச் சொல்லி புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களை ஏமாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை கோடி மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்போரை புத்திசாலிகள் என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்னதான் ஊழலாக இருந்தாலும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் என்பது மிக நல்ல வியாபாரம் என்ற உண்மையை நான் உங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

-     கோவை எம் தங்கவேல், கோயமுத்தூர் ( 30/03/2012)

Friday, May 25, 2012

ஹெல்த் ட்ரிங்க்ஸினால் கேன்சர் வரலாம்


உடம்பு முடியாமல் மருத்துவமனையில் இருப்போரைப் பார்க்க செல்வோர் ஒரு காலத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில் இல்லாமல் செல்ல மாட்டார்கள். கண்ணாடி பாட்டிலில் தனக்கே உரித்தான நறுமணத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில் ஒவ்வொரு நோயாளிகளின் தலைப்பக்கமாய உட்கார்ந்திருக்கும். அந்த அளவுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ் ஹார்லிக்ஸ் ஒரு காலத்தில் மக்களிடையே மிகப் பிரபலமாய் இருந்தது. 

என் மனைவியின் சிறு வயதில் தூக்கி வைத்துக் கொஞ்சிய பக்கத்து குழந்தை ஐந்தாவது வயதில் கேன்சரால் இறந்து போய் விட்டது. பால் குடி மறந்ததும் அக்குழந்தைக்கு காய்ச்சிய பசும்பாலில் பிரபலமான (ஹார்லிக்ஸ் அல்ல) ஹெல்த் ட்ரிங் ஒன்றினை கலந்து கொடுத்து வந்திருக்கின்றார்கள். குழந்தையும் நன்றாக கொழு கொழுவென வளர்ந்திருக்கிறது. எல்லோரும் குழந்தையைப் பாரு “சேட்டு வீட்டுக் குழந்தை போல” இருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். பெற்றோர்களுக்கு பெருமையாக இருந்தது.

சாப்பாடு கொஞ்சம், ஹெல்த் ட்ரிங் அதிகமாய் கொடுத்து வளர்க்கப்பட்ட அக்குழந்தை திடீரென தன் ஐந்தாவது வயதில் நோயில் விழுந்திருக்கிறது. டெஸ்ட் செய்து பார்த்த போது கேன்ஸர் பாதிப்பு இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

எனது குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யும் ஒரு பெண் டாக்டரிடம் ”குழந்தை கள் ஒல்லியாகவே இருக்கின்றார்களே அவர்களுக்கு ஏதாவது ஹெல்த் ட்ரிங்க்ஸ் கொடுக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “எக்காலத்திலும் குழந்தைகளுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ் நிச்சயம் வேண்டவே வேண்டாம், அதற்குப் பதிலாக முட்டை, பால், இறைச்சி, மீன், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுங்கள்” என்றுச் சொன்னார்.

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கான பதில் வேறு எங்கிருந்தோ கிடைத்தது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உணவின் மூலமாகவே கிடைக்க வேண்டும். ஆனால் அது ஹெல்த் ட்ரிங்ஸ் வழியாக கிடைக்கிறது என்றால் அதன் பின் விளைவுகள் இப்படித்தான் ஆகும்.

சவுத் அமெரிக்காவில் மக்களால் அருந்தப்பட்ட ஒரு ஹெல்த் ட்ரிங்கினால் கேன்ஸர் வந்திருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தியாவில் மருத்துவ உலகை கட்டுப்படுத்தக் கூடிய அமைப்புகள் ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாய் இருப்பதால் ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ன விதமான பின் விளைவுகளை உருவாக்கும் என்று கண்டு பிடிக்க முடியாது. அதைப் பற்றிய விழிப்புணர்ச்சி பலர் இறந்த பிறகுதான் உருவாகும். 

அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விளம்பர மோகத்தில் திளைப்பதால் வரக்கூடிய பின் விளைவுகளைக் கண்டு கொள்ளாமல் விளம்பரப் படுத்தப் படும் ஒவ்வொரு பொருளையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடம்பு நன்றாக இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். நம் தமிழ் கலாச்சாரத்தில் உடல் நோவுக்கு என்று ஏகப்பட்ட பின் விளைவுகள் அற்ற மருந்து உணவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை அறிந்து கொண்டு உடலைக் காத்து உள்ளத்தை பாதுகாத்து நலமுடன் வாழ்க.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, May 22, 2012

சின்னப்புள்ள(1)


தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு ஆரம்ப எல்லையிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு எல்லையின் ஆரம்பத்திலும் இருக்கும் ஊர்தான் ஆவணம் கைகாட்டி. அம்மாவின் பிறந்தகம். குழந்தைப் பருவத்திலிருந்து கல்லூரி வயது வரை ஆவணத்தில் தாய் மாமன் வீட்டில் தான் வளர்ந்து வந்தேன். தாய்மாமா அருணாசலத்தின் மீசையைப் பார்த்தாலே ஒன்றுக்கு போய் விடும். தேவர்மகன் கமலஹாசன் மீசை வைத்திருப்பார். ஆவணத்துப் பன்னண்டாக்குளத்தில் மாமா குளிக்கச் சென்றார் என்றால் குளக்கரையே சோப்பு நுரையால் அதகளப்படும். மாமா தலையில் ஷாம்பூவாய் போட்டு தலைமுடி கொட்டிப் போனதுதான் மிச்சம். ஆனால் மீசை மட்டும் எமகிங்கரர் போல வைத்திருப்பார். மீசைக்கென்று தனியாக சீப்பு வேறு. காவிரி ஆற்றின் கிழக்குப் புறமாய் அகண்டு போய் கிடக்கும் இந்தக் குளம். ஏன் பண்ணண்டாக்குளம் என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. விசாரிக்கணும். குளத்தின் மேற்குப் புரத்தில் பலவகை மரங்களும், கிழக்குப் புறமாய் வயல்வெளிகளும், தெற்குப் பக்கமாய் மாயன்பெருமாள் கோவிலுமாய் வடிவமற்று இந்தக் குளம் இருக்கும். தண்ணீர் நிரம்பி இருக்கையில் கடல் போல காட்சியளிக்கும். 


இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. ஏதோ ஒரு தினத்தில் சைக்கிளில் குளிக்க அழைத்து சென்றிருந்தார்.  தேய்த்து தேய்த்து அரை மணி நேரம் எனது கைகால்கள் எல்லாம் சிவந்து போயின. குளிக்க வந்த குத்தூசு ராவுத்தர், "அருணாலம் விடுடா பய பயந்துறப்போறான்" என்றுச் சொல்ல அதன் பிறகு அரைகுறை மனதோடு விட்டார். அதுதான் அவர் கூட கடைசியாகக் குளிக்க போனது. சொரியும் சொரியில் உடம்பே புண்ணாய்ப் போய் விடும்.

போன வாரம் மாமா போன் செய்திருந்தார். ’பேரன் பேரன்னு தூக்கத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறது அக்கா, பேரன் நாட்டுக் கோழி வேணும்னு கேட்டானாம், பத்து பதினைந்து கோழிகள் வீடு முழுக்க திரிந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து, பேரன் வந்துட்டானா உன் கழுத்தைப் பிடிச்சு திருகிறுவேன்’ என்று தானா பேசிக் கொண்டிருக்கிறது என்றார். ’உடம்புக்கு வேற முடியவில்லை’ என்றுச் சொன்னார். ’உடனே பையனை அனுப்பி வை’ என்று கேட்டுக்கொண்டார். மறுநாள் மாலையில் அப்பத்தாவிடம் சென்று விட்டான் பையன். அவ்வளவுதான். உடம்பு முடியாமல் படுத்துக் கிடந்த அம்மா எழுந்து கொண்டாராம். 

கோழிகளின் கழுத்து திருகப்பட்டு குழம்பு, வறுவல்கள் ஆனது. மீன், நண்டு, இறால் என்று ஒரே அதகளம். தோட்டத்தில் மாம்பழம், நொங்கு, இளநீர், பலாப்பழம் என்று அடுத்தடுத்த மேட்டர்கள். செம்மறி ஆட்டு ஈரல் கறிக்குழம்பானது. ஆட்டுக்கால் பாயாவானது. கறி வறுவல் ஆனது. பையனும் பெண்ணும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் ஆனந்தப்பட்டார்கள். அடிக்கடி போன் செய்யும் எனது பெண்ணிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை. பெண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் போல. இருபது வருடம் பெத்து வளர்த்த பெற்றோர்களை விட்டு விட்டு ஒரு வருடமோ இரண்டு வருடமோ பழகும் பையனோடு திருமணம் செய்துகொண்டு போய் விடுகின்றார்கள் சில பெண்கள்(அடியேனின் கதை). எதிர் காலத்தில் அரேஞ்ச்டு மேரேஜ் இருக்காது என்றே நினைக்கிறேன். இது பற்றி எனது நண்பரின் அனுபவம் ஒன்று இருக்கிறது. அதை வேறு இடத்தில் சொல்கிறேன். 

கோவையில் அடியேனோ காலையில் முட்டைக்கோஸ் பொறியல், சாம்பார், மணத்தக்காளி வற்றல் குழம்பு, சாதம், கீரை என்று வியர்த்து விறுவிறுத்து சமையலறையில் கிடந்தேன். இரவில் தோசையும் ஏதாவதொரு சட்னியும். காலையில் வைக்கும் குழம்பு, பொறியல்களை மதியம் சூடு செய்து கொள்ள வேண்டும். இடையில் க்ரீன் டீ வேறு போட்டுக் கொள்ள வேண்டும். வீடு துடைத்து, போட்டிருக்கும் துணிகளைத் துவைத்துக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன். 

சமைக்கும் போது ஒரு ஸ்பெஷல் துவையல் செய்தேன். மிக நன்றாக இருந்தது. ஸீரோ பெர்சண்டேஜ் ஆயில் துவையல் அது. பேச்சிலர்ஸ்ஸுக்கு ஏற்றது. தனியாக இருக்கும் கணவன்களுக்கும் ஏற்றது. முயற்சித்துப் பாருங்களேன்.

கொஞ்சம் தேங்காய் துறுவல்
இரண்டு மேஜைக்கரண்டி துவரம் பருப்பு
இரண்டு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு
ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை
ஆறேழு புதினா தழைகள்
கொஞ்சூண்டு மல்லித்தழை
கொஞ்சூண்டு கருவேப்பிலை
ஒரே ஒரு பூண்டு
துளியூண்டு பெருங்காயம்
கொஞ்சூண்டு உப்பு
எடுத்துக்கொண்டு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தை (கட்டிப் பெருங்காயம் நல்லது) எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்தேன். மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாய் அல்லாது கொஞ்சம் நைஸாக அரைத்தேன். வழித்தெடுக்கும் போது கமகமவென மணம் வீசியது. தேவையான உப்பைச் சேர்த்துக் கொண்டேன்.

சுடுசாதத்தில் மோர் விட்டு, சைடிஸ்ஸிற்கு இந்தத் துவையல். சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தம். 

சுடுசாதத்தில் பசு மோர் விட்டால் கமகமவென மணக்கும். சிறுவயதில் அம்மா கொத்தரவங்காய் வற்றல், சோற்று வடகம், மோர் மிளகாய் வற்றல், ஆதண்டங்காய் வற்றல் பொறித்து தருவார்கள். ஒரு தட்டுச் சோறு சாப்பிடுவேன். 

ஆமாம், ஆதண்டங்காய் வற்றல் சாப்பிட்டு இருக்கின்றீர்கள் தானே? கோவையில் ஏதோ ஒரு  பழமுதிர் நிலையத்தில் கிடைக்கிறது என்றார்கள். எங்கே என்று தெரியவில்லை. செலரி வாங்கலாம் என்று பார்க்கிறேன். இதுவரை அகப்படவில்லை. கோவையில் செலரி கிடைக்கும் இடம் என்று தெரிந்தவர்கள் முடிந்தால் சொல்லுங்கள்.

பையனும் பெண்ணும் சந்தோஷமாய் இருக்கின்றார்கள், அம்மா சந்தோஷமாய் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். மனதுக்கு இதமாய் இருந்தது.

இதற்கிடையில் அங்கு பையனால் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. போன் வந்தது. ”யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்” என்கிறான் என்றார் மனையாள். ”அவனிடம் போனைக் கொடு” என்றேன்.

“அப்பா, நான் இப்போதே கோயமுத்தூர் வரணும்” என்றான் பையன்.

- விரைவில் தொடரும்

ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Thursday, May 17, 2012

புதிய சாட்டிலைட் சேனல்



எஸ் ஆர் எம் கல்லூரி நிறுவனர் திரு பச்சை முத்து அவர்களால் தொடங்கப்பட்ட ‘புதிய தலைமுறை’ பத்திரிக்கை பரவலாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. திறமைசாலிகளுக்கு மதிப்புக் கொடுத்த காரணத்தால், நல்ல கட்டுரைகள் வெளிவந்தன. ஆரம்பத்தில் நல்ல விஷயங்களோடு வெளியான பத்திரிக்கை, போகப் போக சலிப்புத் தட்ட ஆரம்பித்து விட்டது. காரணம் புரியாமல் குழம்பிய போதுதான், புதிய தலைமுறை சாட்டிலைட் செய்திச் சானல் வெளிவந்தது. பத்திரைக்கை பத்தோடு பனிரெண்டானது. டிவி சானல் எல்லோரும் சன் டிவியை விட அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார்கள். ஆனால் எனக்கொன்றும் அவ்வளவு பிரமாதமாய் இருப்பது போல தெரியவில்லை. இந்தச் சானலில் அதிகப் பிரசங்கித் தனமான செய்திகளும், சும்மா ஒப்பேற்றுவது போல நிகழ்ச்சிகளும், எல்லாம் தெரிந்த மேதாவித்தனமான வார்த்தைப் பிரயோகங்களும் வெளிப்பட்டன. 

எந்த ஒரு செய்திக்கும், நிகழ்ச்சிக்கும் நிறைவு என்ற ஒன்று உண்டு. அதை இவர்கள் கொடுக்கவே இல்லை. சானலில் வெளியாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிறைவற்ற தன்மையைக் காணலாம். மேலும் இவர்கள் அரசியல் பின்புலம் அற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கின்றார்கள். இந்தச் செய்தி சானலை உலகப் புகழ் பெறும் வகையில் நடத்தலாம். ஆனால் அதற்கான எந்த ஒரு முஸ்தீபும் புதிய வடிவும், நிகழ்ச்சிகளும் இதுவரை வரல்லை. 

இந்தப் பக்கமும் இல்லை அந்தப் பக்கமும் இல்லை நடு நிலை என்கிறார்கள்.’ஒப்புக்குச் சப்பாணி’ என்று தானே அர்த்தம் வரும். எது வரினும் உண்மையை உரக்கச் சொல்வோம் என்று புதிய தலைமுறை செய்திகள் வெளியிடாதவரை இதுவும் ஒரு சானலாகத்தான் இருக்கும். 

நேற்று நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் சொன்னார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிலர் வருவர். அவர்களால் இண்டஸ்ட்ரி புத்துணர்ச்சி பெற்று பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். சினிமா உலகினர் சுறுசுறுப்பாய் உழைப்பர். திமுக குடும்பம் சினிமாவில் ஈடுபட்ட காரணத்தால் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. அதே போல டாக்டர் சீனிவாசன், ரித்தீஷ் போன்றோரால் நிறைய தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. காசைப் பற்றியோ, படத்தின் தரம் பற்றியோ கவலைப்படாமல் இவர்களைப் போன்றோர் எடுத்து தள்ளிய சினிமாக்களினால்  சினிமா தொழிலாளர்கள் இரவும் பகலும் உழைத்தார்கள். இப்படிப் போன்றோர் தமிழ் சினிமாவிற்கு அடிக்கடி வந்து செல்வர். அது போன்றே தமிழ் சினிமா உலகில் எஸ் ஆர் எம் க்ரூப்பும் ஈடுபட இருக்கின்றார்களாம்.

சானல்கள் இல்லாத காலத்தில் படம் நன்றாக இல்லையெனில் தயாரிப்பாளார் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சாலையில் போக வேண்டியதுதான். ஆனால் தற்போது டிவி சானல்கள், எஃப் எம் ரேடியோக்கள், வெளி நாட்டு உரிமை, டப்பிங் உரிமை, வேற்றுமொழி உரிமை என்கிற பல்வேறு விஷயங்களினால் போட்ட காசுக்கு பங்கம் வந்து விடாமல் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக் கொண்டனர். திமுக ஆட்சியில் இருக்கும் போது அரசியல் அதிகார பலத்தால் சன் டிவியும், கலைஞர் டிவியும் தாங்கள் விரும்பிய விலைக்கு திரைப்படங்களை வாங்கினார்கள் என்கிறார்கள். திமுக ஆட்சியின் முடிவிற்குப் பிறகு தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீ ஆரோக்கியமானதாக மாறி இருப்பதாகவும் பேசிக் கொள்கின்றார்கள். பெரும் பணத்தினை முதலீடுகளாய் போட்டு திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மேலும் பல தமிழ் சாட்டிலைட் சேனல்கள் வருவது மன ஊக்கத்தினை தரும். போட்டி அதிகமிருக்கும் இடத்தில் நல்ல விலை கிடைக்கும் அல்லவா? 

சன், ராஜ், விஜய், கலைஞர், ஜெயா டிவிக்களின் சாட்டிலைட் உரிமைக்கான போட்டிக்கு மேலும் ஒரு சாட்டிலைட் சேனல் வரப்போகின்றதாம். எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் “வேந்தர் தொலைக்காட்சி” விரைவில் மலர இருக்கின்றதாம்.அவர்கள் பெரும் விலை கொடுத்து அரவான் திரைப்படத்தை வாங்கி இருப்பதாகவும், சகுனி படத்தின் விநியோக உரிமையுடன் சாட்டிலைட் உரிமையையும் வாங்கி இருப்பதாகவும் தமிழ் சினிமா உலகிலும், பத்திரிக்கை உலகிலும் பேசிக் கொள்கின்றார்கள். விரைவில் புதிய தலைமுறை செய்திச் சானலில் இது பற்றிய விளம்பரங்கள் வெளியாகலாம். 
திரைப்பட விநியோகஸ்தராகவும், டிவி சானல்களாகவும் மாற இருக்கும் ‘புதிய தலைமுறை’ குழுமத்தினர் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.

- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்