குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 26, 2011

ரிலையன்ஸின் திமிரும் கண்டுகொள்ளாத மத்திய தொலைத்தொடர்பு துறையும்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தாரின் இணையத் தொடர்பை பயன்படுத்தி வரும் பலருக்கும் யூடியூப் மற்றும் சில ஃபைல் சேரிங் வெப்சைட்டுகளை பயன்படுத்த முடியாது. காரணம் இவர்களின் தயாரிப்பில் வெளியான “டான் டூ” என்ற திரைப்படம் வெளியான பிறகு ஃபைல் சேரிங் வெப்சைட்டுகளை தடை செய்தால் திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியாது என்பதால் இச்செயலைச் செய்திருக்கின்றார்கள். 

வெப்சைட்டை தடை செய்ய இந்திய அரசு மட்டுமே உத்தரவிட முடியும் என்கிற போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இத்தகைய செயல் “வாடிக்கையாளருக்கான் துரோகம்” ஆகும். 

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் இதுவரை ஏதும் செய்யவில்லை. இந்திய அரசின் வேலையை ரிலையன்ஸ் செய்து கொண்டிருக்கிறது. பேசாமல் காங்கிரஸ் அரசுக்கு ரிலையன்ஸ் அரசு என்று பெயர் சூட்டி விடலாம். நேற்று, கஸ்டமர் கேரில் கேட்ட போது, கம்ப்ளைண்ட் கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

இது பற்றிய செய்திகளை கீழே இருக்கும் இணைப்பில் பாருங்கள்.


இது பற்றி சிலரின் கருத்துக்களை கீழே பார்க்கலாம்


இந்தியா கார்ப்பொரேட் கம்பெனிகளின் முதலாளிகளின் கை விரல் அசைவுக்கு ஏற்ப ஆட்சி செய்யப்படுகின்றது என்பதை மீண்டும் உறுதி செய்கிறது ரிலையன்ஸின் போக்கு.

- அன்புடன் 
கோவை எம் தங்கவேல்

குழந்தைகளை தடம் மாறச் செய்யும் சினிமா



( இது நாட்டுச் சுரைக்காய் )


( இது நீளச் சுரைக்காய், சப்பென்றிருக்கும்)



வரதராஜபுரம் சந்தைக்குச் செல்ல வேண்டி இருந்ததால், சிங்கா நல்லூர் டூ ஹோப்ஸ் காலேஜ் சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராபிக்கினால் நிற்க வேண்டி இருந்தது. என்னவென்று விசாரித்தேன். அலாஃப்ட் ஹோட்டலில் “விஜய்” வந்திருக்கிறார் என்றார்கள். சாலையின் இருமருங்கிலும் கும்பல்.  மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சில பெரியவர்கள் நின்று கொண்டிருந்தனர். படக்குழுவினரின் வேன்களுக்கு காவல்துறையினர் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். வேன்களும், கார்களும் மெதுவாக ஊர்ந்தன. சினிமாக்காரர்களுக்கு சமூக பிரக்ஞை இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய புகுந்தோம் என்றால் எதிரிகளைத் தான் சம்பாதிக்க வேண்டும். 

உண்மையைப் பேசக்கூட பெரும் தயக்கம் இருக்கும் காலகட்டம் இது. வாய்மூடி மவுனியாய் இருப்பவன் புத்திசாலி. உண்மையைப் பேசுபவன் “பிழைக்கத் தெரியாதவன்”. 

பதிவர்கள் “ராஜபாட்டை” திரைப்படம் பைசாவுக்கு பிரயோசனம் இல்லை என்கிறார்கள். தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. ஆனால் டிவிக்களில் ”ராஜபாட்டை” திரைப்படம் ஆஹா ஓஹோ என்று ஓடுவதாய் நடிகர் விக்ரம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.விக்ரம் வந்தால் அவரைப் பார்க்க கூடும் கூட்டத்தாரை நினைத்துப் பாருங்கள். ரசிகர்களை நடிகர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்பது தான் உண்மை. “ஒஸ்தி” திரைப்படம் ஊத்திக் கொண்டது என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் டிவிக்களில் “ஒஸ்தி” பிரமாதமான வசூல் என்கின்றார்கள். மீடியாவைப் பற்றி எழுதிய பதிவை இப்போது நினைத்துப் பாருங்கள். மக்களை ஏமாற்றும் செயலைச் செய்து வரும் மீடியாக்களின் “தீவிரவாதப் போக்கினை” நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் 15 வயதுப் பெண்ணை, அவரின் உறவினர் தூக்கில் தொங்க வைத்திருக்கிறார். இப்பெண் பலபேருடன் இணைந்து இல்லீகல் ஆக்டிவிட்டீஸ்ஸில் ஈடுபட்டு, அதை எம் எம் எஸ் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் பெருத்த அவமானம் ஏற்பட்டிருப்பதாக இப்பெண்ணைக் கொன்றவர் பேட்டி அளித்திருக்கிறார். கோவையில் பதினைந்து வயதுப் பையன் தன் சக வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கி இருக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு பத்தியில் மன நல மருத்துவர்கள் மாதம் பத்திலிருந்து பதினைந்து கிளையண்டுகள் இது போன்ற கம்ப்ளைண்டுடன் வருகின்றார்கள் என்கிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சமூக கட்டுப்பாடுகள் மீதான வெடிகுண்டுகளை பிரபல ஹோட்டல்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. இனி வரும் காலங்களில் எட்டாம் வகுப்பு மாணவிகள் ஹாஸ்பிட்டல்களில் கருக்கலைக்க வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். உலகிற்கே முன்னுதாரணமான “தமிழ் கலாச்சாரம்” நாளை இப்படியான சம்பவங்களைப் பார்க்கத்தான் போகின்றது.

ஏன் இப்படி சமூகம் மாறியது? இதற்கு சுட்டு விரலை மட்டுமல்ல கையை மொத்தமாக நீட்ட வேண்டிய இடம் “ சினிமாக்காரர்கள்” மற்றும் “மீடியாக்கள்”. ஏன் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். 

வெள்ளி தோறும் வரதராஜபுரம் சந்தைக்கு முருங்கைக்கீரை வரும் என்பதால் நானும் மனையாளும் அங்குச் சென்றோம். ஆச்சரியமாக குண்டுச் சுரைக்காய் ஒன்றைப் பார்த்தேன். நீளமான பெரிய உருளை வடிவ சுரைக்காய் சப்பென்றிருக்கும்.

ஊரில் அம்மா அழகான சுரை விதையை ஊன்றி வைப்பார்கள். அதன் மீது பிய்ந்து போன சாணி எடுக்கும் தட்டுக்கூடையை கவிழ்த்து வைப்பார்கள். நாளடைவில் வெளிவரும் சுரைக்கொடி படர்ந்து பூ விட்டு, பிஞ்சாய் காய்த்துத் தொங்கும். காலையில் அப்பிஞ்சு சுரைக்காய் ஒன்றினைப் பறித்து பொறியல் செய்து தருவார்கள். சுடுசோற்றில் மோர் ஊற்றி அதனுடன் இச்சுரைக்காயைச் சாப்பிட “அமிர்தம்”. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகியது நாட்டுச் சுரைக்காயைப் பார்த்து. 

சந்தையில் அதைப் பார்த்ததும் அம்மாவின் சமையல் நினைவுக்கு வந்து விட்டது. ஒரு கட்டு முருங்கைக் கீரை ஐந்து ரூபாய் என்றார் பாட்டி.

மறு நாள், பிரான் வாங்கி வந்து சுரைக்காயுடன் சேர்த்து மனையாள் குழம்பு வைத்துக் கொடுத்தாள். நாட்டுச் சுரைக்காயுடன் பிரான் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அது ஒரு வித்தியாசமான சுவை.


இந்தச் சுரைக்காய் பற்றி கீழே இருக்கும் முக்கியமான விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். 

என்ன இருக்கு?

நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.


யாருக்கு நல்லது?

எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம். யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.


என்ன பலன்கள்? 

இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.



ஒரு சுவைக்காக பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டிய “ நாகரீக” காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது வருத்தம் தான் ஏற்பட்டது.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Saturday, December 24, 2011

சசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன?





தினமலரில் தினமும் சசிகலா பற்றிய கட்டம் கட்டிய செய்திகள். தினமணியில் அதிகமாய் ஒன்றையும் காணவில்லை. ஜூனியர் விகடனில் சசிகலா பிரச்சினை, நக்கீரனில் இன்னும் பிளாக்குகளில் எல்லாம் சசிகலா போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டார். சசிகலா கும்பல் களையெடுக்கப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் பரபரப்பாய் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.டீக்கடைகள், கட்சிகள், பத்திரிக்கைகள் என்று மனிதர்கள் இருக்கும் இடமெல்லாம் பரபரப்பான செய்தி “சசிகலா பெயர்ச்சி”.

இத்தனை பரபரப்பாய் பேசப்படும் செய்தியில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று கேட்டால், யாருக்குமே தெரியாது. உண்மைப் பிரச்சினை தான் என்ன?

ஜெயலலிதா அவர்களுக்கும், சசிகலா அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை ஏதோ இவர்கள் தினமலர், தினமணி, ஜூனியர் விகடன், நக்கீரன் பத்திரிக்கை முதலாளிகளை அழைத்து வந்து விலாவரியாகச் சொன்னது போல எழுதுகின்றார்கள்.

இருவருக்கும் மட்டுமே தெரிந்த உண்மையை, எதுவும் தெரியாத இவர்களை கலந்து கட்டி எழுதுவது தான் “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்கிறார்கள். 

என்ன பிரச்சினை என்பதை இருவரும் யாரிடமும் சொல்லப் போவதுமில்லை, அது பிரச்சினையாய் உருவெடுத்து தமிழ் நாட்டை அழிக்கப்போவதும் இல்லை. எதுவுமே நடக்கப் போவதில்லை. ஆனால் ஏதேதோ நடக்கப் போவதாக எழுதுகின்றார்கள். நடந்து கொண்டிருப்பதாய் எழுதுகின்றார்கள். 

ஏன் இப்படி என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மையான பத்திரிக்கைகளுக்கு முதலாளியாய் இருப்பவர்கள் ஹேஸ்யங்களை உண்மைகளாய் உருவகப்படுத்துகின்றார்கள். அதன்மூலம் தன் இருப்பை பிறருக்கு கவனப்படுத்துகின்றார்கள். அந்த இருப்பின் மூலம் தன் அதிகாரத்தை பிறரிடம் திணிக்க முற்படுகின்றார்கள். மீடியாக்கள் இதைத்தான் செய்கின்றன. இதற்குப் பெயர் பிழைப்புவாதம். மற்றொரு பெயர் “ பத்திரிக்கை தீவிரவாதம்”. 

இத்தகைய முதலாளிகள் தான் உண்மையான ”தீவிரவாதிகள்”. மக்களிடம் பீதியைக் கிளப்புவது, உண்மையற்ற செய்திகளை உண்மை என்பது போல எழுதுவது, மக்களிடம் குழப்பத்தை உருவாக்குவது, நடக்காத ஒன்றை நடந்தது போல எழுதுவது போன்ற இழிசெயல்களை பத்திரிக்கைச் சுதந்திரம் என்கிற பெயரில் எழுதுகின்றார்கள். இவ்வகை தீவிரவாதிகளிடமிருந்து மக்கள் வெகு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். 

தினசரிகளைப் படிப்போரும், இதழ்களை படிக்கும் போதும் சுயசிந்தனை கொஞ்சம் தேவை.

ஜெயலலிதா, சசிகலா பிரண்டாக இருந்தபோதும், இருவரிடமும் பிரச்சினை என்கிறபோதும் யாருக்கும் பணமோ வேறு ஏதோ வரப்போவதில்லை. இந்தச் செய்தியால் தமிழக மக்களுக்கு எள்ளளவு பிரயோசனமும் இல்லை.

உழைக்க வேண்டும். அதனால் வாழ வேண்டும். இதை விடுத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை பற்றி பேசினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? தீமைதான் பரிசாய் கிடைக்கும். 

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்


Friday, December 23, 2011

பெரும்பான்மையான திரைப்படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன?











எல்லோருக்கும் பிடித்தமான பொய் உலகம் “சினிமா”. சினிமாவில் வெற்றியடைவோர் இல்லவே இல்லை. தோல்விதான் முடிவில். அது யாராக இருந்தாலும் சரி. படைப்பாளிகள் அனைவரும் வெற்றியடைகின்றார்களா என்றால் நிச்சயம் இல்லை. ஏன் இல்லை?

கலைஞர் டிவியில் திரைப்பட பிதாமகன், புரட்சியாளர் திரு பாரதிராஜாவின் “அப்பனும் ஆத்தாளும்” என்ற தொடரில் நடிகை சுகன்யா தாவணி போட்டுக் கொண்டு இளமை வேடத்தில் நடித்தார். நம்பினால் நம்புங்கள். எனக்கு திரு பாரதி ராஜாவின் நம்பிக்கையின் மீது சந்தேகமே வந்து விட்டது. கர்வமும், தானென்ற நினைப்பும் எந்த ஒரு படைப்பாளிக்கும் வந்து விட்டால் இது போன்ற அவலக்காட்சிகளைத் தான் படம் பிடிக்க முடியும்.

இயல்பு மாறும் எந்த ஒரு படைப்பும் முடிவில் தோல்வியைத் தரும் என்பதில் பாரதி ராஜாவும், பாலச்சந்தரும் விதிவிலக்கல்ல என்பதற்கு கண்களால் கைது செய் திரைப்படமும், பொய் திரைப்படமும் உதாரணம்.

இயல்பு மாறாத திரைப்படங்கள் வெற்றியைத் தந்தே தீரும். நாடோடிகள் திரைப்படத்தின் கதை மாந்தர்கள் கதையோடு ஒன்றியவர்களாய், கதைக்களம் நடிகர்களோடு ஒன்றியதாய் இருந்தது. 

மைனா படத்தின் காட்சிகள் ஆக்கமும், ஆடுகளம் திரைப்படத்தின் காட்சிகளும் வெகு இயல்பாய் படத்தின் கதைக்கும், நடிகர்களுக்கும், களத்திற்கும், இசைக்கும், உரையாடலுக்கும் எந்த வித மன அதிர்ச்சி வேறுபாடின்றி இருந்தன. 

இருட்டில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகனுக்கு திரைப்படம் ஆரம்பித்த அடுத்த சில நொடிகளில் அவனின் இருப்பு திரைப்படத்திற்குள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் படம் தோல்விப் படம் என்றுச் சொல்வதை விட படைப்பாளி தோற்று விட்டான் என்று அர்த்தமாகிவிடும்.

கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ஓடுவதில்லை. ஓட வைக்கப்படுகின்றன. இவர்களுக்கான மார்க்கெட்டுகள் என்று எதுவுமே இல்லை. ஆனால் உருவாக்கப்படுகின்றன. இதற்கு சாட்சியாய் ரஜினி, கமல், சூர்யா, விஜய, அஜித் என்று காட்ட இயலும். ஆனால் இவர்களைத் தான் பெரும் நடிகர்கள் என்று காட்டுகின்றன மீடியாக்கள் (போலிகளின் ராஜ்ஜியத்தில் பத்திரிக்கை உலகம் இருக்கிறது)

திரைப்பட ரசிகனை தன் படைப்பிற்குள் இழுத்துக் கொள்ளாத எந்த ஒரு படைப்பும் வெற்றி அடையாது. தன் நடிப்பு எனும் மாயவலைக்குள் ரசிகனைக் கட்டிப் போடாத எந்த ஒரு நடிகனும் “சோப்” விற்கும் விளம்பர மாடலாக மட்டுமே நிலைக்க முடியுமே தவிர, நடிகனாய் பரிணமளிக்க முடியாது. இதற்குத் தேவை கர்வமற்ற, தானென்ற நினைப்பற்ற படைப்பாளிகளும் அவருக்கு உதவி செய்யும் சினிமாவைக் காதலிக்கும் டெக்னீஷியன்களும். கோடிகளில் சம்பளம் வாங்கும் “சோப்புக் கலைஞர்கள்” இது போன்ற படைப்பாளிகளுக்குத் தேவையே இல்லை.

தொழிலைச் சரியாகச் செய்தால் “பணம்” தானாக வரும் என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்.

Thursday, December 22, 2011

போலிகள் நடமாடும் புனைவுலகம்

இன்றைய செய்தித்தாள் ஒன்றில் எழுதும் எவையும் உண்மை என்று நினைக்காதீர்கள் என்ற அர்த்தத்தில் ஒரு பத்தி வெளியாகி இருக்கிறது. எது உண்மை, எது பொய் என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்தால் பரவாயில்லை.

நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சிகள் புகுந்தால், கிடைக்கும் பலன்களைப் பற்றி பிரஸ்தாபிக்க ஒன்றுமில்லை. அது நம்பிக்கையின் பால் கட்டப்பட்டிருக்கும் இரும்புக் கோட்டையின் கதவுகளைத் திறக்கும் அளவுக்கு பலமான ஆராய்ச்சியாக இருந்தாலும் கூட.

சாகித்ய அகாதமி பெற்ற “காவல் கோட்டம்”  பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எதிர்க்கப்பட்டது என்கிறது ஒரு செய்தி. ஜெயமோகன் அந்த நாவலை ஆதரித்தார் என்கிறது மேலும் ஒரு செய்தி. இது பற்றிய விமர்சனங்கள் இனி இணைய பக்கங்களில் அள்ளிக் கொட்டப்படும். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இது வரையில் தார்மீக ரீதியிலான, தர்க்க ரீதியிலான, மனிதாபிமான வகையிலான, நீதி சார்பான, சுயச்சார்பற்ற எழுத்துக்கள் எவையேனும் எழுத்துலக பிரம்மாக்கள் நாங்கள் என்றுச் சொல்லக்கூடிய அல்லது நடிக்கக் கூடியவர்களால் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஒரு நிமிடம் மனச் சுத்தியுடன் யோசித்துப் பாருங்கள். நிச்சயம் இல்லை.

ஏன் இல்லை என்று கேட்டால் “கொன்று போடுவார்கள்” என்பார்கள். கொல்வதற்காக சித்தாங்களும், வேதாந்தங்களும், உண்மைகளையும் மறைப்பேன் என்கிற புனைவுலகத்தாருக்கு என்ன பெயர் வைக்கலாம்?

புனைவுலகில் நடமாடும் போலிகள் முற்றிலும் சுயச்சார்பு உடையவர்களாய், சுய சிந்தனையை வருமானம் பெறக்கூடிய வகையில் மாற்றி, மக்களை தாங்கள் எழுதுவது “உண்மை” என்று நம்பும்படிச் செய்வதில் வல்லவர்கள். எழுத்து ஒரு தவம் என்பார்கள். ஆனால் இன்றைய பத்திரிக்கைகளைப் படித்துப் பாருங்கள். அது எங்காவாது, எவராலாவது எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட கருத்துக்களின் வாந்திகள் என்பது புரியவரும்.

ஒரு சமூகம் தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள, அதன் மக்களால் அதன் மொழியால் உருவாக்கப்படும் படைப்புகள், சேகரிப்புகள், ஒழுங்குகள், நடைமுறைகள், விழாக்கள் போன்றவை உதவும். இவ்வகைப் புதுப்பித்தலில் புனைவுலகத்தாரின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் பெரும். இன்றைய தமிழ் உலக மக்கள் முகவரி அற்று, கண்டதே காட்சி கொண்டதே கோலம், எல்லாமே இன்பமயம் என்கிறதாய் மாறி நிற்க புனைவுலகப் போலிகள் தான் மிகவும் முக்கிய காரணிகளாய் நிற்கின்றார்கள்.

சூதும், வாதும், பொய்யும், புரட்டும், களவும், திருட்டும் கொண்டலையும் போலிகளிடமிருந்து தமிழர்கள் மட்டுமல்ல உலக மக்கள் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள பெரும் தன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எப்படி நடக்கும், எங்கு நடக்கும், யார் முன்னெடுத்துச் செல்வார் என்பதெல்லாம் காலம் தான் சொல்ல வேண்டும்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, December 20, 2011

விடைகள் தவறாகவே வரும் கணக்குகள்



அரசியல் இன்றி இவ்வுலகம் அணு அளவு கூட இயங்காது. ஆனால் அரசியலில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்றால் அரசியல் கணக்குகள் எதுவும் மிகச் சரியான விளைவுகளை அல்லது விடைகளைத் தருவதே இல்லை. இவ்வகைக் கணக்குளின் விடைகள் முற்றிலும் தவறானதாகவே முடிந்து போய் விடும்.

நேருவின் காஷ்மீர் கணக்கு, இந்திரா காந்தியின் ப்ளூ ஸ்டார் கணக்கு, ராஜீவ் காந்தியின் அமைதிப்படைக் கணக்கு, சஞ்சய் காந்தியின் அரசியல் கணக்கு, 2ஜியில் திமுகவின் கணக்கு, சினிமாவில் சன் குழுமத்தாரின் கணக்கு என்று நமக்குத் தெரிந்த பல கணக்குகளின் விடைகள் அனைத்தும் கணக்குப் போட்டவர்களுக்கு எதிராய் திரும்பியது வரலாறு.

அரசியல் என்பது ஆற்று வெள்ளம் மாதிரி. பதவிகள் என்பது அதில் மிதக்கும் துரும்பு மாதிரி. ஆனால் பதவி என்ற அந்தஸ்து வரும் போது கூடவே மூளை நோயும் வந்து விடும். யோசிக்க மறக்க வைக்கும் நோயை பதவி கூடவே கொண்டு வந்து விடும்.

2ஜியில் எளிதாய் தப்பி இருக்கலாம். அதாவது எந்த ஒரு ஊழலையும் சத்தமே இல்லாமல், யாருக்கும் தெரியாமல் செய்யலாம். ஆனால் பதவியில் இருப்பவர்களுக்கு அந்தளவுக்கு யோசிக்கவே முடியாது. வழக்குகளில் இருந்து  வெகு எளிதாய் வெளியேறலாம் அது கொலைக் குற்றமாய் இருந்தாலும் கூட. அதற்குத் தேவை ஒன்றே ஒன்று தான் புத்திசாலித்தனம். அந்தப் புத்திசாலித்தனம் பதவியில் இருப்போரிடத்தில் இருக்கவே இருக்காது. அல்லக்கைகளிடம் கூட காண முடியாது. 

மக்கள் போடும் கணக்கு எப்படித் தவறாகிறது என்பதை இப்போது பார்த்து விட்டு இப்பதிவை முடிக்கலாம்.

தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அவன் மக்களோடு மக்களாய் வாழ்ந்தவனாய் இருக்க வேண்டியது முதல் படி. அடுத்து அவன் மனிதாபிமானம் மிக்கவனாய் இருத்தல் வேண்டும். அடுத்து எதையும் பகுத்தறிவு செய்து பார்ப்பவனாய் இருத்தல் வேண்டும். மக்களின் நன்மையை உத்தேசிப்பவனாய் இருத்தல் வேண்டும். ஆனால் இன்றைய எந்த ஒரு அரசியல்வாதியும் அப்படி இருக்கின்றார்களா? என்று ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள் உங்களுக்குத் தெரியும் அரசியல். 

நல்லது செய்வார் என்றெண்ணி யாருக்கு ஓட்டுப் போடுகின்றார்களோ அவர்களின் தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதால் மக்களின் நல்லது கணக்கு முடிவில் தவறான விடை தருகிறது. அதன் காரணமாய் அடுத்தவர் தேர்வாகின்றார்கள். போடக்கூடிய கணக்கில் தவறு இருக்கும் போது விடை என்ன சரியாகவா வந்து விடும் ?

அரசியல் என்பது மாயக்கயிறு. அதில் தலைவர்களெல்லோரும் ஊசலாடும் பொம்மைகள். மக்கள் பொம்மைகளின் ஆட்டங்களை வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள். தங்கள் உரிமை பரிபோவதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல் மயங்கிக் கிடக்கும் மடமைகள்.

அரசியல் பற்றிப் பேசி வீணாய் பொழுதினைப் போக்க வேண்டாம் என்பதற்குத்தான் இப்பதிவு. இனி இன்னும் பலப் பல செய்திகளை உங்களுடன் பகிர்வேன். அதுவரை தொடர்ந்திருங்கள். 

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

Thursday, December 8, 2011

மையலும் காதலும்

உதயணனன் - வாசவதத்தை கதை தெரியுமா உங்களுக்கு?  ஐங்குறு காப்பியத்தில் ஒன்றான பெரும்கதையின் கதாமகன் தான் உதயணன். இசைக்கு மயங்காதோர் யாதுமில்லை இவ்வுலகிலே என்பதற்கு உதாரணமாய் தன் ”கோடபதி” என்னும் யாழ் இசையால் வெறி கொண்ட யானையைக் கூட மயக்கும் திறமை கொண்டவன் இந்த உதயணன். இந்த உதயணனுக்கு மனைவிகள் ஏராளம். ஆனால் அவனின் முதல் மனைவியும், காதலியுமானவள் “வாசவதத்தை” என்பாள். பொதுமையை அவன் மணமுடிக்க காரணமே அவள் வாசவதத்தையைப் போன்று இருந்தாள் என்பதற்காகத்தான் என்று  நா.பார்த்தசாரதி “வெற்றி முழக்கம்” என்ற நூலில் எழுதியிருக்கிறார். காதல் என்பது வேறு. மையல் என்பது வேறு. மையலைக் காதலாய் கருதுவதால் கொலைகள் நடக்கின்றன. விவாகரத்துக்கள் நடக்கின்றன.

சினிமாக்களில் இன்றைய காதலை “பார்த்தவுடனே உள்ளுக்குள் பொங்கி வரணும்” என்ற முறையில் வரையறுக்கின்றார்கள். பார்த்தவுடனே பொங்கி வருவது காதல் அன்று அதன் பெயர் மையல்.  மையலைத் தான் இன்றைய உலகம் “காதல்” என்கிறது. மையல் கொண்டால் அதன் முடிவு எரிச்சல் தரும். ஒரே மனது ஒன்பதாய் மாறுவதும் மையலின் முடிவில்தான்.

மையல் வந்ததும் பற்றி எரிய வைப்பதும், மையல் தீர்ந்ததும் இல்லாதவைகளை எல்லாம் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதும் மனதுதான். அனிச்சை செயலாய் காற்றுக்கு ஒதுங்கும் துணியை இழுத்து விடும் பெண்ணின் கையும், மையலும் ஒன்றே !

மையல் கொண்ட காதல் எப்படி இருக்கும் என்பதற்கு உங்களுக்கு ஒரு நீண்ட கவிதையை படிக்க அளிக்கிறேன். இக்கவிஞனின் கவியோட்டத்தின் ஊடே நீங்கள் நுகரப் போகும் அந்தத் தன்மைதான் “மையல்”.
இதோ அந்தக் கவிதை வரிகளின் இணைப்பு -> சலனம் - ஜேவியர் தாசையன்

காதல் என்பது என்ன தெரியுமா? 

பிரதிபலன், குற்றம், குறை பாராமல் அப்படியே ஏற்றல். எங்கே உங்கள் மனதினை ஒரு முறைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்ப்போம். உங்களிடம் இருப்பது என்னவென்று?


- இனிய வணக்கங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, November 29, 2011

பள்ளியறையின் மிச்சமே வாழ்க்கையின் தத்துவம்

அறுவடைக் காலமது. வயலில் வடகாட்டிலிருந்து வந்த வேலையாட்கள் கதிரறுத்து, நெல் தூற்றி மூட்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஜோசப் வாத்தியாரிடம் டியூசனுக்குச் சென்ற நானும், என் தங்கையும் ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி விடுவோம். அன்றைக்கு எட்டு மணி வரையிலும் வராது கண்டு, வீட்டிற்கு நெல்மூட்டை கொண்டு வந்த வேலையாட்களுடன், உறவினர்கள் சேர்ந்து தேட ஆரம்பித்து விட்டனர்.

நாங்கள் இருவரும் நாட்டியக் குதிரை ஸ்பெஷல் கேள்விப்பட்டிருப்பீர்களே, குதிரைக்கார வி எஸ் எம் ராவுத்தர் வீட்டில் “பாசமலர்” திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம். வீட்டில் நடந்த களேபரம் எதுவும் தெரியவில்லை. வெளி நாட்டிலிருந்து வந்த வீடியோ பிளேயரில் படம் போட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் டிவி என்பது பெரிய அதிசயம்.

இந்திராகாந்தி இறந்த போதும், எம் ஜி ஆர் இறந்த போதும் என் நண்பனின் வீட்டில் இருக்கும் டிவியில் நேரடி ஒளிபரப்பினைப் பார்த்தோம். கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேல் இருப்பார்கள். எம் ஜி ஆருக்கு கூட்டம் அதிகம் என்றுப் பேசிக் கொண்டது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து மாமாவிடம் பூவரசன் கம்பால் நான்கு அடிகள் வாங்கிக் கொண்டோம். வேலைக்கு வந்தவர்கள் மாமாவின் கோபத்தைச் சரி செய்தார்கள்.தங்கைக்குத்தான் தடித்துப் போய் விட்டது. அடுத்த ஒரு வாரத்தில் மாமா ஆபீசில் லோன் போட்டு பெரிய டயனோரா டிவி ஒன்றினைக் கொண்டு வந்து விட்டார். கருப்பு கலரில் இரண்டு பக்கமும் திறக்கும்படியான பிளாக் அண்ட் வொயிட் டிவி அது. படத்தினைக் கீழே பார்த்துக் கொள்ளுங்கள்.



எனக்கு சிலோனின் ரூபவாகினிதான் பிடிக்கும். ஊர் கடற்கரையோரம் இருந்ததால், சிலோன் ரேடியோவும், எப்போவாவது ரூபவாஹினி டிவியும் கிடைக்கும். அவ்வப்போது தமிழ் நாடகங்கள் கூட போடுவார்கள். படம் பிரிண்ட் செய்தாற்போல இருக்கும்.

டிவி ஆபரேட்டராய் மாறிய பின்பு வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் படம் பார்க்க கூட்டம் கூடும். மளிகைக் கடை செட்டியாருக்கு கிரிக்கெட் என்றால் பைத்தியம். கடையை யாராவது பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, கிரிக்கெட் நாட்களில் வீட்டுக்கு வந்து டிவி போடச் செய்து என்னை எரிச்சல் படுத்துவார். ஆனாலும் அவர் கொண்டு வந்து தரும் மேரி பிஸ்கட், பட்டாணி, பேரீச்சைக்கு ஆசைப்பட்டு நானும் கிரிக்கெட் பார்ப்பதுண்டு. செட்டியார் மாமாவின் நண்பர் வேறு என்பதால் மறுக்கவெல்லாம் முடியாது. இந்த அன்பினால் அவரின் கல்லாப்பெட்டிக்கு காவலனாய் கோடை விடுமுறையில் அவரிடம் வேலைக்குச் சென்றதுண்டு. மாதம் 50 ரூபாய் கொடுத்தார். அத்துடன் தினமும் இலவச இணைப்பாய் ரொட்டிகளும், பேரீச்சையும் ஒரு பள்ளிக்கூடப் பையும் கொடுத்தார்.

இப்படியான நாட்களில் எங்கள் வீட்டுக்கு இடது பக்கமாய் மரக்காட்டுக்குள் இருந்த ஒரு வீட்டின் பெண்மணி அடிக்கடி டிவி பார்க்க வருவார். எம் ஜி ஆர் பாடல் என்றால் அவருக்கு உயிர். விபரம் தெரியாத வயதில் அவர் சொல்லியது எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. “வீட்டுக்காரனுடன் படுத்துக் கொண்டிருக்கும் போது, நான் எம் ஜி ஆரைத்தான் நினைச்சுக்குவேன்” என்றார் அந்தப் பெண்.


சாகித்ய அகாடமி பரிசு பெற்ற திரு நீல பத்ம நாபன் அவர்களின் பள்ளிகொண்டபுரம் நாவலைப் படிக்க நேர்ந்த போது, நாவலின் பிரதான கதாபாத்திரமான அனந்தன் நாயரின் வாழ்க்கையை எழுத்தின் மூலம் உணர்ந்தேன்.


கதை ஒன்றும் முக்கியமில்லை. கதாபாத்திரப் படைப்பின் மூலம் உலக வாழ்வியலை அலசுதல் என்பதுதான் முக்கியமானது. இந்த நாவலின் ஹீரோவான அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயனி வேறொருவருடன் ஓடிப் போய் விடுவாள். அனந்தன் நாயரின் வீழ்ச்சி இங்கு ஆரம்பமாகிறது. ஒரு நாள் வாழ்க்கையோடு அவரின் கதை நினைவுகளின் சொச்சமாய் எழுத்தாய் வரும் போது வெளிப்படும் நிதர்சன உண்மைகள் பலவும், சிந்தித்துப் பார்க்கையில் மனிதன் தனக்குள்ளே போட்டுக் கொண்ட அவிழ்க்க முடியா முடிச்சுக்கள் ஒவ்வொன்றிற்கும் அவனே காரணமாய் இருப்பதினை நீல பத்ம நாபன் வெகு அழகாய் வெளிப்படுத்தி இருப்பார். மனிதனின் வீழ்ச்சிக்கும், உயர்வுக்கு அவனே காரணம் என்பதை இந்தப் பள்ளிகொண்டபுரம் நாவல் வெளிப்படுத்தி இருக்கிறது. 

இளம் வயது வாலிபன் ஒருவன் வரப்போகும் முதுமை காலத்தினை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால், பொருள் சார்ந்த ஆடம்பர வாழ்க்கையின் மிச்சத்தை அவனால் நிச்சயம் உணர முடியும். மனிதனாகப் பிறந்த எவருக்கும் முதுமை வந்தே தீரும் என்கிற போது, இன்றைக்கே வாழ் என்கிற உணர்ச்சி ததும்பும் இன்பம் தரும் வாழ்க்கை என்பது போலியானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி ஆணுக்கு வாழ்க்கை என்பது திருமணப் பந்தத்தின் மிச்சமாய் கண் முன்னே நடமாடும் வாரிசுகளை வைத்துத் தான் தொடரும். உடலிச்சை மீதான ஆர்வம் பின்னர் மயங்கிக் கிடக்கும் பாச வலைக்குள் வாரிசுகளிடம் சிக்கிய பின்புதான் முழுமையடைகிறது. 

பள்ளிகொண்டபுரம் நாவலைப் படித்த போது மேலே நான் சொன்ன பெண்மணியின் கூற்றும், நம் வாழ்க்கையின் தத்துவமே பள்ளியறையின் மிச்சமாய் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.  நேரமிருந்தால் ஒரு முறை வாசித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான நாவல்தான் “பள்ளிகொண்டபுரம்”.

இந்த நாவல் பற்றி திரு ஜெயமோகன் எழுதியிருக்கும் பத்தியினை நீங்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். 


- கோவை எம் தங்கவேல்

* * * * *

Monday, November 28, 2011

அக்கினிப் பிஞ்சுகள் வளர்கின்றன

பெரியாரின் வாசகம் ஒன்றினை எனக்கு முன்பு சென்று கொண்டிருந்த ஒரு கால் டாக்ஸியில் படித்தேன். “தானாக உருவாக முடியாத மனிதன், தனக்காக வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது”. திராவிட நாடான தமிழகத்தில் பெரியாரின் சிந்தனைகளை இக்கால இளைஞர்கள் படித்து அறிய யாரோ ஒரு இயக்கத்தார் கோர்ட்டில் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. கால் டாக்ஸியில் ஒரு மாபெரும் தமிழகப் புரட்சியாளனின் சிந்தனையைப் படிக்கும் அவலம் என்னைத் தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு கிட்டாமல் போக வேண்டுமென்று பெரியார் மறுத்த அந்த கடவுளிடம் விண்ணபிக்கிறேன்.

இவ்வாறான அரசியல் வித்தைகள் நிரம்பிய இந்தியாவில், சமீப காலத்தில் செய்திச் சானல்கள்  அமைச்சர் ஒருவருக்கு சீக்கிய சகோதரன் ஒருவர் கன்னத்தில்  விட்ட அறையினை அடிக்கடி ஒளிபரப்பின. விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அந்த இளைஞன் ஜெயிலில் கிடக்கிறார். இந்த இளைஞரை அடிக்க அமைச்சரின் கட்சிக் கூட்டத்தார் முண்டியடித்ததையும் சானல்கள் காட்டின. தனி மனிதன் செய்தால் குற்றம், அதே கட்சிக் காரன் செய்தால் போராட்டம் என்கிறது இந்திய அரசியலைப்புச் சட்டம். இப்படி ஒரு நகைப்புக்கிடமான சட்டங்கள் இந்தியாவை ஆள்வது கண்டு எரிச்சல் தான் ஏற்படுகிறது.

இந்திய அரசியல்வாதிகள் எவரும் மக்களின் மீது அபிமானம் கொண்டவர்களாய் இல்லை. எவருக்கும் இங்கே அக்கறை இல்லை. அதன் பிரதிபலன் தான் அரசியல்வாதிகள் மீதான அடி உதைகள். இனி வரும் காலங்களில் அரசியல்வாதிகளுக்கு மாபெரும் ஆபத்தினை மக்கள் உருவாக்கப் போகின்றார்கள் என்பதை ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்ற மக்கள் சொல்லாமல் சொல்கின்றார்கள். காவல்துறையினர் இன்றி எந்த ஒரு அரசியல்வாதியும் தெருவில் நடமாட முடியாத நிலையில் தங்களின் பொதுவாழ்க்கையினைச் சகதிக்குள் திணித்துக் கொள்கிறார்கள். 

ஒரு எம் எல் ஏ (இவர் லண்டனில் “வணக்கம் லண்டன்” என்ற நிகழ்ச்சியை நடத்தியதை சானல் ஒன்று வெளியிட்டது ) தொகுதிப் பக்கமே வரவில்லை என்று எஸ் எம் எஸ் தட்டி அது அவரின் கவனத்திற்கு வந்து, அடித்துப் பிடித்துக் கொண்டு தொகுதிக்குள் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. மக்களுக்கு சேவை என்றால் அது மக்களின் பணத்தினைக் கொள்ளை அடிப்பது என்ற புதுவகையான சித்தாந்தத்தை அரசியல்வாதிகள் உருவாக்கியதன் விளைவுகளை அவர்கள் அனுபவித்தாக வேண்டிய தருணத்தில் நிற்கின்றார்கள்.

அரசியல்வாதிகள் பஞ்சுப் பொதிகளை போன்றவர்கள். அடி விழாமல் தப்பித்துக் கொள்ள தற்போதைக்கு வேண்டுமானால் முயலலாம். ஆனால் இளைஞர் கூட்டத்தில் ஒரே ஒருவன் பொங்கி எழுந்தான் என்றால் அவன் சின்னஞ் சிறு அக்கினிப் பிஞ்சாய் மாறி நிற்பான். அதுமட்டுமல்ல அவனைக் கொண்டே பல அக்கினிகள் உருவாகும். பஞ்சுப் பொதிகள் மீது அக்கினிப் பிஞ்சுகள் பட்டால் என்ன ஆகும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். 

கடைசியில் போகின்ற வழிக்கு கூட கோடி கோடியாய் கொட்டி வைத்து இருக்கும் தங்க கட்டிகள் கூட வராது. அக்கினிப் பிஞ்சுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பஞ்சுப் பொதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்


* * * * *

Thursday, November 24, 2011

சாகித்ய அகாதமி பரிசு நூல் - கார்மேகம்


படிப்பதென்பது அலாதியான இன்பம் தரும் தனிப்பட்ட ஒரு உலகம். அவ்வுலகில் நீண்ட நாளாக வாசம் செய்ய நேரம் கிடைக்கவில்லை. தற்போதைய பவர் கட் கிட்டத்தட்ட 5 மணி நேரம். காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் என்று மின்சாரம் போய் வருகிறது. மின்சார ஊழியர்கள் எந்த வேலையைச் செய்கிறார்களோ இல்லையோ, பவர் கட் செய்வதை மிக மிகவும் சரியாய் செய்கின்றார்கள். வாங்கும் காசுக்கு ஏற்ற வேலை.

தேர்தல் காலங்களில் மட்டும் காணாமல் போகும் ‘பவர் கட்’ தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் வருவது எப்படி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இதெல்லாம் புரிந்து கொள்ள முடியாத அரசியல் மர்மம். அது எதற்கு நமக்கு. இந்த பவர் கட்டையும் ஏதாவது பிரயோசனமாய் மாற்ற வேண்டுமே என்ற கவலைக்கு தீர்வாய் வந்தது வீட்டுக்கு அருகில் இதுகாறும் மறைந்து இருந்த ஒரு அரசு நூலகம். உறுப்பினர் அட்டையும் பெற்றுக் கொண்டேன். 925 ராசியான நம்பரா என்று நியூமராலஜி நண்பரிடம் விசாரிக்க வேண்டும்.

இந்த சாகித்ய அகாதமி என்கிறார்களே, அது ஏதோ அவார்டு கொடுக்கின்றதாமே என்றெல்லாம் “இலக்கியவாதிகள்” எழுதி இருப்பதைப் படித்த தினத்திலிருந்து எனக்குள் ஒரு ஆசை கிளர்ந்திருந்தது. அவ்வப்போது தோன்றி மறையும் அந்த ஆசை நூலகத்தில் உறுப்பினர் ஆனவுடன் பூதமாய் எழுந்தது பிற நூல்களைப் பார்க்கும் ஆசையைத் தடுத்தது. சாகித்ய அகாதமியின் செலக்‌ஷனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சித்தேன்.

கையில் சிக்கியது “சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஜி.விவேகானந்தன் என்ற கேரளாக்காரரின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் கார்மேகம்”.

நான்கு மணி நேர பவர் கட்டினை சாகித்ய அகாதமியின் தேர்வின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள செலவழித்தேன். மொழிபெயர்ப்புச் சரியில்லை என்றால் நாவலின் லட்சணம் வீட்டிற்கு ஒன்பது வாசல் வைத்தது போலாகி விடும் என்பதை இந்த நூலின் மூலமாய் தெரிந்து கொண்டேன். அந்தளவுக்கு தட்டையான மொழி பெயர்ப்பு. மூலம் நன்றாக இருந்திருக்கலாம். அதை இந்த ஜென்மத்தில் படிக்க முடியாது. ஒரு மொழியை தெரிந்து வைத்துக் கொண்டே தமிழர்களின் நூல்களைப் படிக்க முடியவில்லை. மலையாளம் வேறு கற்றுக் கொண்டால் என்ன ஆவது?

இனி கதை : பிரபாகரனுக்கு தன் மனைவியின் மூலம் குழந்தை பிறக்கவில்லை என்ற கவலை. அதைப் புரிந்து கொண்ட மனைவி மாலதி, தன் உதவியால் படிக்கும் தன் தங்கை சாந்தாவை தன் கணவனுக்கு கட்டி வைக்கின்றார். இதற்கு சாந்தாவின் அம்மாவும் உடந்தை. ஒரு வழியாக பிரபாகரனுடன் சாந்தாவிற்கு முதலிரவும் நடக்கிறது. அதன்பிறகு உண்டான ஈகோவினால் மாலதி தன் அம்மா வீட்டுக்குச் செல்ல, சாந்தாவை கவனிக்க மறக்கிறார் பிரபாகர். காரணம் வயது வித்தியாசம். கோபம் கொண்ட சாந்தா அம்மா வீட்டுக்கு வந்து விட, மாலதி மீண்டும் கணவனுடன் வந்து தங்க, மாலதி கர்ப்பவதியாகின்றாள். சாந்தாவின் அம்மா, அதாவது மாலதியின் அம்மா சாந்தா இனி என்ன செய்வது என்று கேட்க, என் மீது பாசமிருக்கா என்றெல்லாம் ஆலாபனை செய்து தன் கணவனைக் கட்டிக் கொள்ள வைத்த தங்கையை, அதை அவளே முடிவு செய்யட்டும் என்கிறாள் மாலதி. வெறுத்துப் போன சாந்தா இரண்டு மாதங்களாய் தாய் வீட்டில் இருந்தும் கவனிக்காத பிரபாகரன், தங்கையைக் கண்டுகொள்ளாத மாலதி இவர்களுக்கிடையே மனத்துன்பம் அடையும் சாந்தா, தற்கொலை செய்து கொள்கிறாள். இது தான் கதை.

மாலதி தன் தங்கையை தனக்காக தியாகம் செய்யச் சொல்கிறாள். இந்தக் கதையின் மூலம் நாம் முக்கியமான படிப்பினை அறிந்து கொள்ள வேண்டும். பாத்திரமறிந்து பிச்சையிடு என்பார்களே அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். தியாகம் யாருக்காசச் செய்கிறமோ அவர்களுக்கு அதைப் பெற தகுதியும் வேண்டும், யாருக்காக தியாகம் செய்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தியாகம் என்ற பெயரால் ஏமாற்றப்பட நேரிடும். உலகில் “ஏமாளிகள்” அதிகம். ஏனென்றால் அவர்களைத் தியாகிகள் என்கிறார்கள். தியாகிகளின் இன்றைய நிலை பென்சன் என்பதுதான் முடிவு.

சாகித்ய அகாதமி விருதுக்கு இக்கதை தேர்ந்தெடுக்கப்பட்ட காரணம் தான் இன்னும் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை எனக்குப் புரியாத இக்கதை தேர்வாளர்களுக்குப் புரிந்திருக்குமோ? தெரியவில்லை. உலகில் தெரிந்து கொள்ள முடியவே முடியாத விஷயங்கள் தானே அதிகம். சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற இன்னும் பல நூல்களைப் படித்துப் பார்த்து எழுத முயற்சிக்கிறேன். தற்போதைக்கு சாகித்ய அகாதமி ஏதோ எரிச்சல் தான் இருக்கிறது. தகுதி உடையவர்களை சமூகம் அங்கீகரிக்க வேறு விதிகள் வைத்திருக்கும் போல.

- கோவை எம் தங்கவேல்
24/11/2011 - 11 .26 ஏஎம்.

* * * * *