குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, July 20, 2011

விதவிதமான சாப்பாட்டு மேஜைகள் வரிசை

அன்பு நண்பர்களே,

இதோ உங்களுக்காக விதவிதமான சாப்பாட்டு மேஜைகளின் அணி வரிசை. இப்படியெல்லாம் மேஜைகள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றும் வரிசைகள் இவை. 
















Tuesday, July 19, 2011

வாழ்க வளமுடன் - பழனி

திருப்பத்தூரிலிருந்து கோவைக்கு வந்து, சிஎன்சி ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டிருக்கும் திரு பழனி அவர்களுக்கு இன்று பிறந்த நாள். மிஸ்டர் பழனி கடுமையான உழைப்பாளி. சின்னஞ்சிறு வயதில், இளமைப் பருவத்தில் கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் இளைஞன்.


புது உடை உடுத்தி, மகிழ்ச்சியுடன் சாக்லேட் கொண்டு வந்து கொடுத்து, “சார், இன்றைக்கு எனது பிறந்த நாள் சார் !” என்று சொன்னார். 

”அன்பு பழனி, நீங்கள் நல்ல நலமோடு, ஆரோக்கியத்தோடு, மகிழ்ச்சியாய் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் “


Monday, July 18, 2011

பிஎஸ்என்எல் எரிச்சலூட்டும் நிறுவனம்



பியெஸ்ஸென்னில் புது இண்டெர்னெட் கனெக்‌ஷன் எடுக்க பீளமேடு டெலிபோன் எக்சேஞ்சை அணுகினேன். யாரிடமோ ஒரு பெண்மணி பேசினார், முகவரி கேட்டார் சொன்னேன். அங்கே தற்போது கனெக்‌ஷன் கொடுக்க இயலாது என்றுச் சொல்லி, பேசாமல் டேட்டா கார்டுக்குப் போய் விடுங்கள் சார் என்றார். அதற்கு யாரைப் பார்க்கணும் என்றேன். சம்பந்தப்பட்டவர் வெளியில் சென்றிருக்கிறார், பிறிதொரு நாள் வாருங்களேன் என்றார்.

என்ன சொல்ல முடியும்? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம். இதே ஏர்டெல், ரிலையன்ஸ், டாடாவாக இருந்தால் ஒரு போன் போட்டால் போதும், வீடு தேடி வந்து அப்ளிகேஷன்ஸ், கட்டணம் வசூலித்துச் செல்வார்கள். ஆனால் பியெஸ்சென்னில் மட்டும் ஏன் இந்தப் பிரச்சினை வருகிறது?

இணையத்தில் பதிவு செய்த உடன் ஒரு யெஸ்ஸெம்மெஸ் வந்தது. அதில் ஒருவரின் மொபைல் எண் கொடுத்து, அவர் உங்களைத் தொடர்பு கொள்வார் என்றார்கள். இதுவரையில் அவர் அழைக்கவே இல்லை. நானே முயன்று பார்த்தேன். யாரோ ஒருவர் வீட்டிற்கு வந்து, பள்ளம் தோண்ட வேண்டும் சார், காண்ட்ராக்டர் இல்லை என்றார். அவர் எப்போதுதான் வருவார் என்றேன். தெரியாது சார். ஆனால் விரைவில் சொல்கிறேன் சார் என்றார். தொடர்ந்து நானே பள்ளம் தோண்ட ஏற்பாடு செய்யட்டுமா என்றேன். அதெல்லாம் முடியாது சார். காண்ட்ராக்டர்தான் பள்ளம் தோண்டி, வயர் போட வேண்டுமென்றுச் சொல்லி விட்டு போயே போய் விட்டார். வேறு வழி இன்றி தனியாரிடம் இணைய இணைப்புப் பெற வேண்டியதாகி விட்டது. இதே போன்று ஒவ்வொரு கஸ்டமரும் தனியாரிடம் சென்று கொண்டிருந்தால், பின் ஏன் பியெஸ்ஸென்னல் இருக்க வேண்டும்? தேவையற்ற செலவுகள் ஏன்? தொலைத்தொடர்புத் துறையை தனியாரிடம் ஒப்படைத்து விடலாமே?

எனது வீட்டின் பக்கத்து வீட்டில் பியெஸ்ஸென்னல் டெலிபோன் இருக்கிறது. ஆனால் என் வீட்டிற்கு கொடுக்க பள்ளம் தோண்ட வேண்டுமென்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை. எத்தனை நாள் ஆகும் போன்ற விபரங்களைக் கூட சொல்ல மறுக்கின்றார்கள்.

தனியார் நிறுவனங்கள் லாபங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பியெஸ்ஸென்னலோ நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றுச் சொல்கின்றார்கள்.

தனியாரிடம் ஒரு போன் அழைப்பில் புது கனெக்‌ஷன் கிடைக்கிறது என்கிறபோது, அரசாங்க நிறுவனத்தில் ஏன் அவ்வாறு நடக்கவில்லை? என்ன காரணம்?  எங்குப் பிரச்சினை இருக்கிறது? என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப சில முடிவுகளை எடுக்கவில்லை என்றால் பியெஸ்ஸென்னல் விரைவில் முழுகிப் போய்விடும் ஆபத்து நிகழத்தான் போகிறது.

மாண்புமிகு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு கபில்சிபல், இது போன்ற மக்களுக்கு எரிச்சல் தரும் சேவைப் பிரச்சினைகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்தப் பதிவு இமெயில் செய்யப்படுகிறது. என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பதிவு மூலம் தெரிவிக்கிறேன்.


Sunday, July 17, 2011

செம்பருத்தியும் சில நினைவுகளும்


மக்களை ஏமாற்றும் டீலர்கள் பற்றிய பதிவிற்கு பல நண்பர்கள் யார் அந்த டீலர்கள் என்றுச் சொன்னால் பரவாயில்லை என்று கேட்டிருக்கின்றார்கள். சில பல பிரச்சினைகளால் பப்ளிக்காக பெயர்களை வெளியிட இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏமாறக்கூடாது என்பதற்காகவும், இது போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை அதே பதிவில் எழுதி இருப்பதை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு, அதன்படி செயல்பட்டாலே தப்பித்துக் கொள்ளலாம்.

கம்பெனி தரும் கமிஷனை விட பல மடங்கு அதிகம் லாபம் வைத்து விற்பவர்களைத்தான் நான் எழுதி இருந்தேன் என்பதையும் இவ்விடத்தில் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தி.ஜானகி ராமனின் “செம்பருத்தி” நாவலைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மூன்று நாட்கள் விடாமல் படித்து முடித்தேன். நாவலின் வெற்றி என்பது நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பாதிப்பை படிப்பவரின் மனதுக்குள் உருவாக்கி விடுவதுதான். சமீபகால எழுத்தாளர்கள் பலரின் நாவல்களை நான் படித்திருக்கிறேன். இது போன்ற பாதிப்பை அந்த நாவல்கள் எனக்குள் ஏற்படுத்தவில்லை. தி.ஜானகி ராமன் அவர்கள் எனக்குள் உருவாக்கிய ”கேரக்டர் பாதிப்பினை” இந்தக் கால எழுத்தாளர்களின் படைப்புகள் இதுகாறும் உருவாக்கிடவில்லை.

செம்பருத்தியில் வரும் சட்ட நாதனும், அவனின் மனைவியான புவனாவும் ஜானகி ராமனின் சொற்கள் வழியே மனதுக்குள் உருவமாய் உருவானார்கள். அவர்களின் எண்ண ஓட்டமும், கதை நகரும் தொனியும், என் புற உலகினை முற்றிலுமாய் மறக்கச் செய்து கதையுடனே என்னை இழுத்துக் கொண்டு சென்றது. வாசகனை நாவலுக்குள் இழுத்து, அவனுடனான புற உலக நினைவுகளை மறக்கச் செய்து, நாவலுக்குள் மூழ்க வைத்து விடும் கலை திரு ஜானகி ராமனின் எழுத்துக்கு இருக்கிறது. இவரைப் போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளை இதுகாறும் நான் படிக்கவில்லை. (பாஸ்கி ! உங்களுக்கு அப்படியான நாவலாசிரியர்கள் ஏதேனும் தெரிந்தால் தெரிவியுங்களேன் )

எனது இளம் பிராய காலத்தில், கல்லூரி நாட்களில் ”செம்பருத்தி” நாவலை  படித்த நினைவுகள் எழும்பின. அப்போது ”காதலித்த பெண் அண்ணனை திருமணம் செய்ததும், அண்ணன் இறந்ததும் காதலனைக் கட்டிப் பிடித்ததுமான” பாலியல் சம்பவங்களே எனக்குள் பதிந்திருந்தன. வயதுக் கோளாறு அல்லவா? அதையெல்லாம் இன்றைக்கு நினைத்த போது புன் சிரிப்பொன்றே பதிலாய் எனக்குள் பூத்தது.

”செம்பருத்தியில்” நுண்ணிய ஒரு பிரச்சினையை ஜானகி ராமன் எழுப்பி இருப்பார். அதைப் பற்றிப் பேசும் முன்பு கதையின் கரு என்னவென்று பார்க்கலாம். சட்ட நாதனுக்கு அண்ணன் இருவர். மூத்தவர் திருமணமானதும் வெளியூரில் செட்டிலாகி விடுவார். இளையவர் உறவுகள், குடும்பம் என்று வாழ்பவர். இளைய அண்ணனின் சம்பாத்தியத்தில் சட்ட நாதன் கல்வி பயின்று வரும் கால கட்டத்தில், ஆசிரியராய் இருந்தவரின் மகளின் மீது காதலை வளர்த்துக் கொள்வான்.ஆனால் அக்காதல் நிறைவேறாது. இளைய அண்ணனுக்கு மணம் பேசி முடித்து விடுவர். தான் காதலித்த பெண், அண்ணனின் மனைவியாகி விடுவதை மனதுக்குள் வைத்து மருகுவான் சட்ட நாதன். இளைய அண்ணன் திடீரென்று காலராவால் காலமாகி விட அண்ணி விதவையாவார். ஆனால் இளைய அண்ணனின் விருப்பப்படி புவனாவைத் திருமணம் செய்து கொள்வார் சட்ட நாதன். புவனாவிடம் தன் காதல் அனுபவத்தைச் சொல்லி தன்னை நியாயவான் என்று நிரூபிப்பார்.தன் மனைவியிடம் ஆண்கள் உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பது தவறானதோ என்று சட்ட நாதன் பிற்காலத்தில் நினைக்கும் படி ஆகி விடும்.  கதை இத்தோடு முடியவில்லை. படு ரகளையான பல முடிச்சுகள், தத்துவ விசாரணைகள் இருக்கின்றன.  நுண்ணிய பிரச்சினை என்றுச் சொன்னேன் அல்லவா அது என்னவென்றால் மனத்தின் புரிதல்கள் காரணத்தை முன்னிட்டு வருவதில்லை என்பதும், அது சுற்று சூழல்களாலும் வரக்கூடியது என்பதும்தான்.

வாழ்க்கையின் சில புரிபடாத சூட்சுமங்களில் இவ்வகையான குடும்பத்தினரின் மனபுரிதல்கள் சில நேரங்களில் மட்டுமே இன்பத்தை வழங்கும். பெரும்பான்மையான சமயங்களில் பெரும் மனத்துன்பத்தை தந்து விடும். இதை உணர்ந்து, தனக்குள்ளான விசாரணை செய்து உணரும் பக்குவத்தினை ஆண்களும், பெண்களும் பெற வேண்டும். அவ்வகையான புரிதல்கள் இந்த நாவல் வாசிக்கும் போது எனக்குக் கிடைத்தன. நண்பர்களுக்கும் அவ்வகையினான புரிதல்கள் கிடைக்க வேண்டுமென்பதற்குத்தான் இந்தப் பதிவு எழுதப்படுகிறது.

சில பேரின் வாழ்க்கை அவர்களின் கடைசிக் காலம் வரை துன்பமாகவே கழிந்து போய் விடும். அதையே அவர்கள் தங்களுக்கான இன்பமாய் கருதி விடும் இயல்பும் நாளடைவில் உண்டாகி விடும். இந்த நாவலில் குஞ்சம்மாளை ஜானகிராமன் அவ்வாறே உருவாக்கி விட்டார். ஏன் இந்தக் கதாபாத்திரம் துன்பத்தினை மட்டுமே ஏற்று வாழ்ந்தது என்பதை, நம் வாழ்க்கையோடு சேர்த்துப் பார்க்கும் போது, கடவுளின் மீதான நம்பிக்கை கூடுகிறது.

படைப்பாளிகள் என்போருக்கு கடின மனது இருக்குமோ என்பதை ஜானகி ராமனும் தன் எழுத்தின் வழியே சொல்கிறார் போலும். பிரம்மனின் படைப்பிலும் ஜானகி ராமனின் கதாபாத்திரங்களைப் போன்றோரை நாம் பார்த்து வருகிறோம் அல்லவா?

உங்களுக்கு நேரமிருந்தால் ”தி.ஜானகி ராமனின் செம்பருத்தியை” வாசித்துப் பாருங்கள். ஏதேனும் உங்களுக்குப் புரிய வரலாம். 

அன்பும் நட்பும் உங்களிடம் என்றைக்குமே நிரந்தர வாசமாகட்டும்.

-பிரியமுடன் 
கோவை எம் தங்கவேல்


Saturday, July 16, 2011

உதவி கோரிய கடித்ததை முன்வைத்து

நேற்று காலையில் மெயில்களைப் படித்து வருகையில் யாரோ ஒரு பெண் தன் குடும்பப் பிரச்சினை பற்றி எழுதி எனக்கு அப்பிரச்சினையில் இருந்து தீர்வு சொல்லுங்கள் என்று மொபைல் எண்ணையும் கொடுத்திருந்தார். ஏதோ பத்திரிக்கைக்குச் அனுப்ப வேண்டிய மெயிலை எனக்கு அனுப்பி விட்டாரே என்று நினைத்தேன்.

தனி மனித வாழ்வில் உறவுகளுக்கிடையான பிரச்சினை என்பது மிகவும் சென்சிடிவானது. அதில் பிறர் தலையிடுவது என்பது வேறுபல பிரச்சினைகளை தலையிடுபவருக்கு உருவாக்கி விடும் என்பது நான் பல அனுபவங்களின் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன். இப்படித்தான் ஒரு முறை எனது நெருங்கிய தோழி ஒருவருக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தேன். தோழி தன் உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். தன் சம்பளத்தில் பெரும்பான்மையானதை தன் உறவினருக்குச் செலவு செய்து வந்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது. இப்படியான நிலையில் என் மூலம் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தனர். பெண் பார்க்கும் படலம் முடிந்து, மாப்பிள்ளை வீட்டாரை அனுப்பி வைத்து விட்டு, தோழியின் உறவினருடன் பேசிக் கொண்டிருந்த போது, அந்த உறவினர் ” நீங்கள் அவளை வைத்திருக்கின்றீர்கள்” என்று பட்டென்றுச் சொன்னார். என்னுடன் வந்த என் மனைவிக்கும், எனக்கு திகீர் என்றது.

அவர்களுடன் என்ன பேச முடியும் என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம். என் தோழியின் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஏதும் பேசாமல் திரும்பி வந்து விட்டேன். அதன் பிறகு தன் தோழியின் சம்பளப் பணம் கிடைக்காமல் போய் விடும் என்பதாலும், தோழிக்குப் பெரிய இடத்தில் திருமணமாகி விடுமே என்ற பொறாமையினாலும் அந்த உறவினர் அப்படி நடந்து கொண்டார் என்று கேள்விப்பட்டேன். தோழி தனியாய் வந்து, தற்போது திருமணம் முடித்து நன்றாக இருக்கிறார். சில நுண்ணிய பிரச்சினைகள் உறவுகளில் இருக்கும். ஆகவே வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அந்தச் சம்பவத்தில் இருந்து புரிந்து கொண்டேன்.

கணவன் மனைவி உறவானது பல்வேறு அகமுடிச்சுகளைக் கொண்டது. அம்முடிச்சுகளை போடுவது இருவர் தான், அவிழ்ப்பதும் இருவர் தான். இதில் பிறருக்கு என்ன வேலை இருக்கிறது? ஆகவே அந்தப் பெண் நிதானமாய் யோசித்து, தன் கணவன் எதனால் பிற பெண்ணை நோக்குகிறான் என்பதை ஆராய்ந்து, உணர்ந்து அதைச் சீர்படுத்த முயல வேண்டும். 

பொறுமையும், நிதானமும், ஆராய்ந்து தெளியும் பக்குவமும் இருந்தால் தான், இது போன்ற பிரச்சினைகளை எளிதில் தீர்க்கலாம். அந்தப் பெண்ணுக்கு கடவுள் மேற்படி சக்திகளை வழங்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நாளை “ செம்பருத்தி” வாழ்வியல் சூட்சுமத்தின் ஒரு ரகசியத்தைப் பற்றிப் பார்க்கலாம்.


Sunday, July 3, 2011

மக்களை ஏமாற்றும் எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள்

பத்தாண்டுகளுக்கு முன்பாக வாங்கிய வீடியோகான் ஃப்ரிட்ஜ் தன் ஆயுளை முடித்துக் கொண்டது. கம்ப்ரஷர் மாற்றலாமா என்ற யோசனையை நிராகரித்து, புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றினை வாங்கி விடலாம் என்று முடிவெடுத்தேன்.பத்து நாட்களுக்கும் மேலாய் இணையங்களை அலசி ஆராய்ந்து, ஏகப்பட்ட விசாரணைகள் செய்து ஒரு வழியாய் ஒரு கம்பெனியின் ஃப்ரிட்ஜை வாங்கலாம் என்று முடிவெடுத்து, கடைகளில் விசாரணைப் படலத்தை ஆரம்பித்தோம்.

கோவையில் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் கடைகள் ஒவ்வொன்றிலும் விசாரணையை ஆரம்பித்தவுடன் மிகப் பெரும் அதிர்ச்சியை சந்தித்தேன். இணைய தளங்களில் ஒரு விலை, ஷோரூம்களில் ஒரு விலை என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் வித்தியாசம் இருந்தது. ஏற்கனவே தயாரிப்பாளர்கள் 30 பர்சண்டேஜ் கமிஷன் வழங்குகிறார்கள். அதற்கு மேலும் நான்காயிரம், ஐந்தாயிரம் என்றால் வரக்கூடிய லாபம் தயாரிப்பாளர்களை விட, விற்பனையாளருக்கு கிடைக்கிறது என்பது தான் என் அனுபவத்தில் கண்ட ஸ்பெஷல் செய்தி.

அதுமட்டுமா, ஆளைப் பார்த்து பொருளுக்கு விலை சொல்லும் கலாச்சாரத்தை ஒவ்வொரு கடையிலும் கண்டேன்.அசந்து போய் விட்டேன். கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல், பகல் கொள்ளையை விட மோசமானதாய் மேற்படி கோயமுத்தூர் எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள் சிலர் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். மக்களின் உழைப்பை உறிஞ்சும் இவ்வகை டீலர்களுக்கிடையில் ஏதோ சில பேராவது நாணயத்தோடு தொழில் செய்பவர்கள் இருப்பார்களே அவர்களைத் தேடலாம் என்று ஒரு நாள் மாலையில் கண்டு பிடித்தேன்.

கிட்டத்தட்ட நான் விசாரித்த ஃப்ரிட்ஜை பிரபல எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள் சொன்ன விலையிலிருந்து 5000 ரூபாய் குறைவாக, புத்தம் புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றினை வாங்கினேன் வெகு நேர்மையாக தொழில் செய்யும் அந்த டீலரிடமிருந்து. கடந்த பத்து வருடத்திற்கு முன்னால் அவரிடம் தான் ஃப்ரிட்ஜை வாங்கி இருந்தேன். அந்த ஃப்ரிட்ஜ் கடந்த பத்து வருடங்களாய் எந்த வித பிரச்சினையும் தராமல் வேலை செய்தது. டீலரிடம் மேற்படி விஷயத்தைப் பகிர்ந்து கொண்டு, அவர் கம்பெனி கொடுத்த ரிசீப்டைக் காட்டிய போது மகிழ்ச்சியா மேலும் தள்ளுபடி கொடுத்தார்.

ஒரு ஃப்ரிட்ஜ்க்கு 5000 ரூபாய் எக்ஸ்ட்ராவாக வைத்து விற்பனை செய்கிறார்கள் என்றால், ஒரு நாளைக்கு கோவையில் எத்தனை ஃப்ரிட்ஜுகள் விற்கின்றார்கள் என்பதையும், எவ்வளவு பணத்தை மக்களிடமிருந்து திருடுகிறார்கள் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கோவையிலே இவ்வளவு திருட்டு என்றால் பிற ஊர்களில் எல்லாம் கணக்கெடுத்துப் பார்த்தால் தலையே சுற்றும்.

இந்த வகைத் திருட்டிலிருந்து தப்பிப்பது எப்படி என்று நினைப்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பொருள் வாங்கும் போது விலை குறைவான பொருட்களை வாங்க முயலுங்கள். நேற்றைக்கு எல்சிடி பிரபலமாய் பேசப்பட்டது. இன்றைக்கு எல்யிடி, த்ரீடி என்றுச் சொல்கிறார்கள். 60,000 ரூபாய் கொடுத்து வாங்கிய எல்சிடி டிவியை மாற்ற வேண்டுமென்று நண்பரின் வீட்டில் பிரச்சினையாகி விட்டது. எந்தப் பொருள் என்ன பயன் என்று முடிவு செய்தவுடன், வெப்சைட்டுகளில் தேடிப்பார்த்து அதன் விலையினை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு டீலரிடம் செல்லுங்கள். சில ஆயிரமாவது மிச்சமாகும்.


Monday, June 27, 2011

இப்படியும் சில மனிதர்கள்

இந்தப் பையன் மூன்று மாதக் குழந்தையாக இங்கு வந்தான். இன்றைக்கு ஆறு வயதாகி விட்டது என்றார் ஃபாதர். பையன் ”வணக்கம் சார்” என்றான். நேற்றைக்கு எனது நண்பரும், ஃபாதருமானவருடன், அவரின் குடும்பத்தார் நடத்தும் அனாதை விடுதிக்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 70 குழந்தைகள் அங்கு பராமரிக்கப்பட்டு, கல்வி கற்க அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் மலர்ச்சி, மகிழ்ச்சி தெரிந்தது. சந்தோஷமாய் விளையாடுகிறார்கள், படிக்கின்றார்கள். நல்ல போஷாக்குடன் இருக்கின்றார்கள். சுத்தமாய் இருக்கின்றார்கள். மிக ஆச்சரியம் தந்த விஷயம் இது. 

ஆரம்பகாலத்தில், கீரைக்கட்டினைத் திருடிக் கொண்டு வந்து, கடைந்து குழந்தைகளுக்கு கொடுப்போம் என்றார் ஃபாதர். குழந்தைகளின் பசி அழுகையைத் தாங்காமல், இரவில் தென்னைமரம் ஏறி தேங்காய்களைத் திருடி வந்து சாப்பிடக் கொடுப்பேன் என்றார் அவர்.

இப்போதெல்லாம் அனாதை இல்லங்கள் நடத்துவது என்பது எளிதானது அல்ல என்றார். பெண் குழந்தைகளைப் பராமரிக்க ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றுச் சொன்னார். தினசரி 1000 ரூபாய் வேண்டுமென்றார். எங்கிருந்தோவெல்லாம் குழந்தைகளுக்குச் சாப்பாடு வருகிறது. உடைகளும் வருகின்றன. யார் யாரோ தன் உழைப்பினைத் தந்து ஆதரவற்றவர்களுக்கு உணவும், உடையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

கோடி கோடியாய் மனச்சாட்சியே இல்லாமல் கொள்ளை அடிப்பவர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள். பிறருக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சிலரும் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை நினைக்கையில், இறைவனின் திட்டம் என்னவாக இருக்க முடியும் என்றுப் புரிந்து கொள்ள முயலவில்லை.

இந்த விடுதிக்கு உதவி செய்ய விரும்புவோர் மெயில் அனுப்பவும். மேலதிக தகவல்களைத் தந்து உதவுகிறேன்.

Saturday, June 25, 2011

நோய் ஏன் வருகிறது ?

150 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டலாம். காற்றைக் கிழித்துக் கொண்டு படு வேகமாய் பைக்கில் பறக்கலாம். ஆகாய விமானத்தில் சாகஜம் செய்யலாம். ஓடலாம், பாடலாம், ஆடலாம் எல்லாம் செய்யலாம். எதுவரையிலும் என்றால் உடல் நலம் கெடும் வரையில்.

பலரும் சொல்லக் கேட்டிருப்போம் ”நல்லாத்தான் இருந்தாரு, திடீரென்று படுத்துட்டாரு”. ஏன் திடீரென்று படுத்து விட்டார்? காரணம் ஏதும் இல்லாமலா இருக்கும்? நிச்சயம் இருக்கும். என்ன தான் மருத்துவம் செய்தாலும் சிலருக்கு உடம்பு நோய் தீரவே தீராது. அதற்கொரு காரணத்தை நம் முன்னோர் பாட்டொன்றில் சொல்லி இருக்கின்றார்கள்.

பஞ்சமாபா தகர்க்கும் பழிதனை நினைப்பவர்க்கும்
கெஞ்சியே மருந்துசெய்து கேடுகள் நினைப்வர்க்கும்
அஞ்சிடா வஞ்சகர்க்கும் அநியாயக்கா ரருக்கும்
நஞ்சினும் கொடியவர்க்கும் நாடியபிணி தீராதே

இப்படி ஒரு பாடல் வைத்திய சார சங்கிரகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மேற்படி ஆட்கள் எல்லாம் கெடுதல் செய்வதையே தொழிலாய் வைத்திருப்பதால், உடம்பைப் பேண மாட்டார்கள். உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி நன்றாக இருக்கும் வரை ஆடிக் கொண்டிருப்பவர்கள், எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும் போது நோய் வாய்ப்பட்டு விடுவார்கள். தீர்க்கவே முடியாத நோய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, செய்த வினையோடு எதிரே நின்று கொண்டிருக்கும்.

வினையைப் பற்றிக் கண்ணதாசன் தன் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் விரிவாக எழுதி இருக்கிறார்.

நோய் எதிர்ப்புச் சக்தி ஏன் குறைகிறது? உடம்பிற்கு நோய் ஏன் ஏற்படுகிறது. இரண்டு வழிகளால் தான் நம் உடல் நோயால் பீடிக்கப்படுகிறது. ஒன்று காற்று மற்றொன்று உணவு. நம் உடலுக்குள் செல்பவை இவை மட்டும் தானே ?

செல்லும் காற்றையும், சாப்பிடும் உணவினையும் சரி செய்தால் நோய் விட்டுப் போய் விடும் அல்லவா? ஆனால் அதை இன்றைய காலத்தில் யார் செய்கின்றார்கள்? 

மணமணக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ், மட்டன் மசாலா கிரேவி, செட்டி நாடு சிக்கன் வறுவல் என்று சாப்பிடுவோர் என்றாவது ஒரு நாள் மட்டும் தானே சாப்பிடுகிறோம், அதனால் ஒன்றும் தொந்தரவு வராது என்று தனக்குள்ளே நினைத்துக் கொள்வார்கள்.

உண்மை என்ன தெரியுமா? உடம்பிற்கு ஒவ்வாத உணவு உண்ணப்பட்ட பிறகு, அதன் விஷத்தன்மையை உடம்பிலிருந்து வெளியேற்ற உடம்பு மாபெரும் போராட்டத்தை நிகழ்த்தும். கத்தி, ரத்தம் எல்லாம் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி தான் அந்தப் போராட்டத்தை நிகழ்த்தும். இப்படியே நாள் தோறும் போராடிக் கொண்டே வந்தால், உடம்பின் ஸ்பேர் பார்ட்ஸின் நிலை என்னவாகும் என்பதை நீங்களே யோசித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

நோய் வரக்காரணம் காற்றும், உணவும். இதைச் சரி செய்தால் நோய் ஏன் வருகிறது???

நம் உடம்பு ரசாயணத்தினால் ஆன ஒரு கூட்டுக் கலவை. இறைவனின் அற்புதப் படைப்பு. அதை ஒழுங்காகப் பேணி வந்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும். கண்டதைத் தின்று திரிந்தால் வரும் விளைவுகளுக்கு மருத்துவர் பொறுப்பாக மாட்டார்.

ஒரு கணம் சிந்திப்பீர்.

Monday, June 20, 2011

வாழும் சங்ககால மன்னன் செங்கண்ணனின் தாய்

புறநானூறு பாடிய மன்னர்களில் ஒருவன் கணைக்கால் இரும்பொறை, கோச்செங்கண்ணான் என்ற மன்னனிடம் போரில் தோற்று சிறைப்பட்டிருந்தான். சிறையிலிருந்த காலத்தில் பாடிய பாடல் புற நானூற்றில் இருக்கும் 74 வது “குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்” என்ற பாடலை நாம் பிள்ளைப் பிராயத்தில் படித்திருப்போம். இரும்பொறை மன்னாக இருந்து போரில் தோற்றுச் சிறைப்பட்டவன். தண்ணீர் தாகமெடுத்த காரணத்தால், சிறைக்காவலனிடம் தண்ணீர் கேட்க, அவன் நேரத்தே கொண்டு வந்து கொடுக்காத காரணத்தால், தண்ணீரே குடிக்காமல் செத்த மானமுள்ள வீரன் இரும்பொறை. கதை இவரைப் பற்றியதல்ல. சோழ மன்னன் செங்கண்ணான் பற்றியது.

இவனுககு ஏன் செங்கண்ணன் என்ற பெயர் வந்தது தெரியுமா? செங்கண்ணனின் தாய் நிறைமாதக் கர்ப்பிணி. ஜோசியக்காரர் இன்னும் சிறிது நேரம் கழித்துப் பிறந்தால், பிறக்கும் குழந்தை தரணியாள்வான் என்றுச் சொல்லி இருக்கிறார். ஆனால் பிரசவ வலி வந்து விட்டது. குழந்தை பிறந்து விடும் போல இருக்கிறது. இன்னும் சிறிது நேரம் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றாள் கோச்செங்கண்ணானின் தாய். 

பிரசவ வலி என்பது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உலுக்கி எடுக்கும் கொடூரமானது. பிறப்புறுப்பு வழியாக குழந்தை வெளியேற உடம்பே அதிர அதிர அமிலத்தில் ஊறிய உடம்பாய் வலியில் துடிதுடிக்கும் அந்த நேரத்தின் வலியை சுகப்பிரசவமடைந்த பெண்கள் உணருவார்கள். அப்படிப்பட்ட வலியில் துடித்த செங்கண்ணானின் தாய் தன்னை தலைகீழாக கட்டி தொங்க விடச் சொல்கிறாள். உயிரே போய் விடும் என்று கணவனும், பிறரும் துடிக்கின்றார்கள். என் உயிர் பெரிதல்ல. என் மகன் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதற்கான என் உயிரையும் நான் இழப்பேன் என்கிறாள் அந்த தமிழச்சி.

தலைகீழாக கட்டித் தொங்கவிடப்படுகிறாள் அந்த தாய். நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரம் வந்ததும் கீழே இறக்கப்படுகிறாள். குழந்தையும் பிறக்கிறது. அக்குழந்தையின் கண்கள் இரண்டும் கொவ்வைப் பழம் போல சிவந்திருக்கிறது. என்னை ஆளும் செங்கண்ணை உடைய எங்கோச் செங்கண்ணான் என்றுச் சொல்லி முடித்து தன் குழந்தை தரணி ஆள தன்னுயிரை விடுகிறாள் அவள். அவள் அப்படி சொன்னதாலே மன்னனின் பெயர் செங்கண்ணன் என்று ஆனது.

தாயின் தியாகத்தால் கண்களிரண்டும் செவந்து போன காரணத்தால் இம்மன்னன் செங்கண்ணான் என்று பெயர் பெற்றான். தமிழகத்தில் ஆயிரம் சிவன் கோவில்களைக் கட்டிய பெருமை உடையவன் இந்த மன்னன்.

தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் மகன் தரணியாள வேண்டுமென்று நினைக்கும் தாய் இருந்த புண்ணிய பூமி தமிழர்கள் பூமி.

தன் மகன் இறந்த பிறகும் அவன் எழுதி வந்த பிளாக்கை தொடர்ந்து எழுதி, அவன் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கும், அன்பின் உருவமான தாய் ஒருவரின் பிளாக்கை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 


அன்பும், தியாகமும், பாசமும் நிரம்பிய இது போன்ற தாய்கள் இருப்பதால் தான், நம் பூமி இன்றைக்கும் பசுமையாக இருக்கிறது போலும். நான் தமிழனாய் பிறந்ததில் பெரும் பெருமையடைகிறேன்.

* * *


Saturday, June 18, 2011

டாஸ்மாக்கால் அழியும் குடும்பங்கள் - உண்மைக் கதை

விடிகாலையில் உழவர் சந்தைக்கு காய் வாங்குவதற்காக மழையில் நனைந்து கொண்டே மனையாளுடன் சென்றேன். மழை அரும்புகள் சாரையாய் பூமியைத் தழுவிக் கொண்டிருந்தன. ”பூமி தன்னைத் தானே குளிர்விக்கிறது போலும் கோதை” என்றேன். வழக்கம் போல, ”ஓ அப்படியா?” என்று பதில் வந்தது.

செல்வ விநாயகர் கோவிலைத் தாண்டும் போது பார்வை அவரை நோக்கிச் செல்ல, அங்கு அவருக்கே ஏதும் இல்லாத நிலை போல. மார்கழி மாதம் வந்தால் பொங்கல், பிரசாதம் என்று களையாக இருப்பார் பிள்ளையார். நானும் வாரா வாரம் பிள்ளையாரை நேசமாகப் பார்க்க ஆரம்பித்தேன். இனிப்பு பொங்கல் சூடாய் கிடைக்கும். சில சமயம் சுண்டலும் தருவார்கள். எந்த பாரியாளின் கைப்பக்குவத்திற்கும் எட்டாத சுவையாக இருக்கும் பிரசாதம். 

இப்போதெல்லாம் பிள்ளையார் கோவிலில் அதிகம் கூட்டம் காணாது. இடது பக்கமாய் இருக்கும் கலைஞர் படிப்பகத்தின் திண்ணையில் ஒன்றிரண்டு பேர் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். மழையினால் இன்றைக்கு ஒருவரையும் காணோம்.

சந்தையின் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பெண் தலை மீது பிளாஸ்டிக் பை சிவப்பாய் மாட்டப்பட்டிருந்தது. எப்போது பார்த்தாலும் மலர்ந்த பூவை  நூலோடு கோர்த்துக் கொண்டே இருப்பார் அந்தப் பெண்.பைக்குளுக்கு டோக்கன் வாங்கும் பாட்டி எப்போதும் புன்னகையுடனே இருப்பார். அவரைப் பார்த்து சிரிப்பொன்றினை சிந்து விட்டு, வண்டியை கீரைக்கார கவுண்டர் இருக்குமிடம் விட்டேன்.

”மழை வந்து இன்னிக்கு வியாபாரத்தை கெடுத்துப் போச்சுங்க” என்றார்.

“மழை வந்தாலும் சங்கடம், வல்லேன்னாலும் சங்கடம் தான் போல” என்று சொல்லிவிட்டு, ”நவாப்பழத்தை பசங்ககிட்டே கொடுத்தேன்னா, அவங்க உருட்டி விளையாடுறாங்க” என்றேன்.

கேட்டு விட்டு சிரி சிரியென்று சிரித்தார். உழவர் சந்தை நவாப்பழம் ஒன்றும் அப்படிச் சுவையாக இருப்பதில்லை.கொஞ்சம் துவர்ப்பு தட்டுது. ஆசையாக் கேட்டேன்னு கவுண்டரு பறிச்சிக் கொடுத்தாரு. அதுல இரண்டைக் கொண்டு போயி பிள்ளையளுக்கு கொடுங்கோன்னு சொன்னாரு. அந்தப் பழத்தை வாங்கி பசங்க, கீழே பளிங்கு போல உருட்டி விளையாட ஆரம்பிச்சுட்டானுங்க. 

வியாபாரம் ஒன்னும் சரியில்லை. கூட்டமும் குறைவாத்தான் இருந்தது. எதிர்த்த கடைக்காரர் அழுகிப் போன பூசணிக்காய குப்பைத் தொட்டிக்குள்ளே தூக்கி போட்டுக்கிட்டு இருந்தாரு. கருவேப்பிலை விக்கிற அம்மாவைக் காணல. 

”அண்ணன் மருமவன் ஆக்சிடெண்டில செத்துப் போனாரு இல்லைங்களா, அந்தப் புள்ள மருந்தைக் குடிச்சிட்டு, குழந்தைக்கும் கொடுத்துட்டு இப்போ குழைந்தையும் செத்துப் போச்சுங்க.அந்தப் புள்ளய மட்டும் காப்பாத்திட்டோம். என்ன ஏன் காப்பாத்துறீங்க. நான் செத்துத்தான் போவப்போறேன்னு சொல்லிகிட்டு இருக்குன்னாரு” கவுண்டரு.

போனவாரம் சந்தைக்கு போன போது, ”லாரி சந்துக்குள்ளே இருந்து வந்த குடிகாரன் ஒருத்தன் கவுண்டர் அண்ணன் மருமகன் மீது வண்டிய ஒரே தாட்டா தாட்டிட்டானாம்.ஆளு ஸ்பாட்லே அவுட்டுங்கன்னாரு கவுண்டரு. அடப்பாவமேன்னு கேட்டுக்கிட்டு வந்தேன். இந்தவாரம் இப்படி ஒரு செய்தி.

'ஆக மொத்தம் ஒரு குடும்பமே காலி. யாரோ ஒரு குடிகாரப் பய குடிச்சிட்டு வந்து எதுக்க வந்தவன் மேல மோதி கொன்னுட்டான். ஊரு முழுக்க எங்கன பாத்தாலும் டாஸ்மாக் கடை. குடிச்சவன் செத்தான்னா அதை அவன் விதின்னு சொல்லலாம். குடிக்காதவன் குடிச்சவன்னால சாகுறானே அதை என்னன்னு சொல்லுறது? யாரைக் குத்தம் சொல்லுறது. இன்னிக்கு ஒரு குடும்பமே காணமா போச்சே அதுக்கு யாரைக் குத்தம் சொல்லுறது? என்ன உலகம்டா இதுன்னு என்னென்னவோ மனசுக்கு வந்து போச்சு.'

'இந்தப் புள்ளைக்கி அறிவு எங்க போச்சு, புருஷன் செத்தா என்ன இப்போ? புள்ளை இருக்குல்லே, நாளொன்னைக்கு லட்சம் லட்சமா டைவோர்ஸ் வாங்குற இந்தக் காலத்துல இப்படி ஒரு புள்ளையான்னு' மனசுக்குள்ளே தோணுச்சு. 

வண்டியில மனையாள கூட்டிக்கிட்டு வரும் போது, பிள்ளையார் கோவிலைப் பார்த்தேன். கர்ப்பக் கிரகத்துக்குள்ளே உட்கார்ந்திருந்தார். வாசலில் யாருமில்லை. அய்யரு மட்டும் சோகமா உட்கார்ந்திருந்தார்.  ஏனோ முகம் தெரியாத அந்த ஆக்சிடெண்ட் ஆன மகராசன் மனசுக்குள் வந்து போனார்.

* * *