குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 22, 2009

நரலீலைகள்

சாதனையென்ற சத்தம்

சாதனை என்ற சொல்லை மனிதர்கள் அனைவரும் கேட்டிருப்பார்கள். சாதனையின் பால் ஈர்க்கப்பட்ட மனிதன் மதி மயங்கி, மனம் குறுகி, இயக்கம்மாறி, வழி தெரியாமல், இது தான் வழி, இது தான் சாதனை என்றோடிக் களைத்தபிறகு திரும்பிப் பார்த்தானென்றால் அவன் முன்னே வெட்டவெளியாய் கடந்துபோன காலம் நகைக்கும். விரக்தி நிலையில் மனம் வெதும்பி, ஆயாசமாய், அனைத்தும் முடிந்து போய் விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து குமைந்துகுழப்பமுறுவான்.

அந்தச் சொல்லின் சத்தம் மூளையின் ஏதோ ஒரு நரம்புக்குள் சிக்கி உடம்பெங்கும்அதிர்வுகளை கிளப்பிக் கொண்டேயிருக்கும். ஒலியின் வேகம் தாங்காமல் மனம்அதனோடு கூட ஓடி ஓடி சத்தமடங்கும் வேளையிலே அவனைச் சுற்றும் வெளிப்பேய்களிடமிருந்து தப்பிக்க இன்னும் வேகமாக ஓடுவான். ஓடுவான்... வாழ்க்கையின் எல்லைக்கே. ஆம் எல்லைக்கே ஓடி முடிப்பான் சாதனையின்ஓட்டத்தை.

என்ன தான் வாழ்க்கை, என்ன இருக்கிறது வாழ்வில் என்று புரியாமல், சாரம்புரியாமல், சூட்சுமம் தெரியாமல், எங்கெங்கோ ஓடி, ஓடிக் களைத்து, இளைப்பாறவும் முடியாமல் உயிரை விடுவான்.

அந்த மனித வாழ்க்கையின் ஓட்டங்களில் பங்குபெற்ற பீமாவின் ஓட்டத்தையும், அவனோடு கூட ஓடி வந்த சில ஓட்டக்காரர்களின் ஓட்டத்தையும் நரலீலைகள் என்ற தலைப்பில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

வழக்கம் போல உங்களின் அன்பான உள்ளத்தில் எனக்கும் ஒரு இடத்தை தந்துஅருள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.

Wednesday, December 9, 2009

கொடூர மனம் படைத்த மருத்துவர்

ஏம்மா, உனக்கு அறிவு இருக்கா? படிச்ச ஆள் தானே நீ? உன் புருஷனுக்கு சொல்ல வேண்டாம்? உனக்கு என்ன அவ்வளவு அவசரம்? என்று கேட்க, எதிரே உட்கார்ந்திருந்த பெண் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

இப்போது பாரு, குத்துது குடையுதுன்னு வந்து நிற்கிறாய் என்று மேலும் அர்ச்சித்திருக்கிறார் அந்த மருத்துவர்.

ஊசியைப் போட்டுக் கொண்டு புருஷன் வீட்டுக்குப் போகாமல் எங்கோ சென்று விட்டாள் அந்தப் பெண்.

வீட்டில் தேடோ தேடென்று தேடியிருக்கின்றார்கள். நிறைமாதக் கர்ப்பிணி பெண் வேறு. காய்ச்சல் அடித்ததற்காக ஊசி போட்டுக்கொள்ள டாக்டரைப் பார்க்க வந்தவள் வீடு திரும்பவில்லை என்றதும் வீட்டிலுள்ளவர்களுக்கு எப்படி இருக்கும்? இரண்டு வயதுக் குழந்தை வேறு இருக்கிறது. அம்மாவைக் காணாமல் கதறி இருக்கிறது.

என்ன பிரச்சினை? ஏன் திடீரென்று காணவில்லை என்பது தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து உறவினர்கள் வீடுகளிலெல்லாம் தேடியிருக்கின்றார்கள். கிடைக்க வில்லை. மறு நாள் காலையில் பெண்ணின் தூரத்து உறவினர் ஒருவர் போனில் அழைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இப்பெண்ணை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்திருப்பதாக சொல்ல, அடித்துப் பிடித்துக் கொண்டு அவளைப் பார்க்க பறந்தோடியது அக்குடும்பம்.

என்னவென்று விசாரித்ததில், டாக்டர் இந்தப் பெண்ணைக் கண்டமேனிக்கு திட்டியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. இரண்டு வருடம் முடிவதற்குள் அதற்குள் எதுக்கு அடுத்த குழந்தை உண்டானாய் என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதனால் மனம் உடைந்த அந்தப் பெண் தற்கொலைக்கு முயல, எதேச்சையாக அவளைப் பார்த்த உறவினர் பார்த்து தடுத்திருக்கிறார். இல்லையென்றால் குழந்தையோடு அப்பெண் செத்துப் போய் இருப்பாள். மருத்துவருக்கு வேலை நோய்க்கு மருந்து கொடுப்பது. பிணியாளரிடம் பரிவோடு பேசுவது. ஆனால் இந்த மருத்துவர் செய்த வேலை இருக்கிறதே அதை என்னவென்று சொல்வது? அயோக்கியத்தனம், அக்கிரமச் செயல். அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அயோக்கியத்திருடன். ஏன் இவரைத் திருடன் என்று சொல்கிறேன்? காரணம் இருக்கிறது.

மதியம் ஒரு மணிக்கு வந்து பேஷண்டுகளைப் பார்ப்பதும், மாலை ஆறு மணிக்கு மேல் வந்து இரவு பத்து மணி வரை பிறருக்கு மருத்துவம் செய்து வருகிறார். மேலும் அரசு மருத்துவமனையிலிருந்து மருந்துகளைக் கொண்டு வந்து கொள்ளை விலைக்கு பிறருக்கு ஊசியும் போடுகிறார் என்றெல்லாம் இவரைப் பற்றிச் சொல்கின்றார்கள். அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு வெளியிலும் சம்பாதிக்கிறார். மருத்துவமனையிலிருந்து ஏழைகளுக்கு மருத்துவமும் பார்ப்பது இல்லைபோலும். இந்த மருத்துவர் திருடன் தானே? நீங்களே சொல்லுங்கள்.

பிறருக்கு துன்பமிழைப்பதும், பிறரின் மனத்தை காயப்படுத்துவதும் சில அரசாங்க மருத்துவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது. சட்டம் தண்டிக்காது என்பது தெரிந்த ஒன்று. ஆனால் தெய்வம் தண்டிக்கும். தண்டித்தே ஆகும்.

தெய்வம் நின்று கொல்லாது. உடனே கொல்கிறது. இவருக்கு தெய்வத்தால் கொடுக்கப்படும் தண்டனை எனக்கு தெரிய வந்தால் எழுதுவேன்.

ஆடும் வரை ஆடட்டும். ஆண்டவன் அடக்கியே தீருவான்.

Sunday, December 6, 2009

Manashosting, Consumer Court, Karnataka Chief Minister

மே மாதம் ஒன்றாம் தேதி மனாஸ் ஹோஸ்டிங் என்ற கம்பெனியிலிருந்து குறைந்த விலைக்கு அதிக Web Space தருகிறார்கள் என்ற ஆசையினால் ரூபாய் 1100 கட்டி Plesk 11 GB Web Space வாங்கினேன். அதனுடன் MSSqlDatabase இலவசம் என்றார்கள். குதி போட்டுக் கொண்டு வாங்கிய பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

டேட்டா பேஸ் ஆக்டிவேட் செய்ய இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போன் செய்ய வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒருமாதம் சென்ற பிறகுதான் டேட்டாபேஸ் பாஸ்வேர்ட், கண்ட்ரோல் பேனல் கொடுத்தார்கள். டேட்டாபேசை அப்லோட் செய்ய முனைந்தால் நம்பவே மாட்டீர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனது. என்னிடமிருந்து பணம் பெற்ற பின் அவர்களின் நடவடிக்கையே மாறிவிட்டது. சரியான ரகளை செய்தார்கள். ஏகப்பட்ட அனுமதிகளை தர மறுத்தார்கள். ISAPI SOFTWARE INSTALL செய்ய அனுமதி கேட்டதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார்கள். கிட்டதட்ட ஐந்து மாதம் சென்று விட்டது.

கம்ப்ளெயிண்ட் டிக்கெட் பதிவு செய்யுங்கள் என்பார்கள். பதிவு செய்தால் பதிலே வராது. பெங்களூரில் இருக்கும் கம்பெனிக்கு போன் பண்ணியே வாழ்க்கை வெறுத்துப் போச்சு. சரி ஹெச்டிஎமெல் வெப் சைட்டையாவது அப்லோட் செய்யலாமென்று எண்ணி டொமைன் பெயரை வேறு பெயரில் மாற்றித்தரும்படி கேட்டதற்கு ஒரு மாதம் பதிலே இல்லை. நானும் பலமுறை டிக்கெட் அனுப்பி வைத்தேன். பலனில்லை. போனில் அழைத்து கத்து கத்து என்று கத்தினேன். கண்டுக்கவே மாட்டேனுட்டானுங்க. எங்களை என்னடா செய்யமுடியும்னு அவர்களின் நடவடிக்கைகள் கேட்காமல் என்னைக் கேள்வி கேட்டது. வேறு ஒருவராக இருந்தால் போனா போவுது என்று விட்டு விடுவார்கள். ஆனால் நான் அவ்வாறு அவர்களை விடுவதாக இல்லை.

மனதுக்குள் திட்டத்தினை வகுத்துக் கொண்டு, இவர்களை ஒரு கை பார்ப்பது என்று முடிவு கட்டிக் கொண்டேன். வேறு மாற்று வழி இல்லாத சூழ் நிலையில் கன்ஸ்யூமர் கோர்ட்டின் கதவினைத் தட்டினேன். இணையத்தில் ஆன்லைனில் கம்ப்ளெயிண்ட் புக் செய்தேன். அவர்களும் கம்பெனிக்கு மெயில் ஒன்றினை அனுப்பி வைத்தார்கள்.

விட்டேனா பார் என்று கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு மெயில் ஒன்றினையும் அனுப்பி வைத்தேன். இந்த மாதிரி உங்கள் மாநிலத்தில் இருக்கும் கம்பெனி என்னை சீட்டிங் செய்கிறார்கள் என்று விபரமாக எழுதி ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி வைத்தேன். நம்பவே மாட்டீர்கள். சீஃப் மினிஸ்டரிடமிருந்து பதிலும் வந்தது. பிரச்சினையை கன்சர்ன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்ற மெயிலைப் பார்த்ததும் படு ஜாலியாகி விட்டது. மனாஸ் ஹோஸ்டிங்குக்கு காப்பி ஒன்றையும் அனுப்பி வைத்தேன்.

அவ்வளவுதான். முடிந்தது பிரச்சினை. அலறினார்கள் அலறி. போனில் பெரிய ரகளை செய்து விட்டேன். மீடியா, பிம், சியெம், பிரசிடெண்ட்,பத்திரிக்கைகள், சைஃபர் கிரைம் என்று அனைவருக்கும் கம்ப்ளைண்டு செய்யப் போகிறேன் என்றவுடன் ஏகப்பட்ட மன்னிப்புகளை கேட்டுக் கொண்டார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது. கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு நன்றி தெரிவித்து மெயில் ஒன்றினை அனுப்பினேன்.

ஆனால் இவர்களால் ஏற்பட்ட போன் செலவு, மன உளைச்சலுக்கு என்ன செய்வது? அதுதான் தெரியவில்லை.

இந்திய அரசியல் சட்டத்திலும் இதே பிரச்சினை இருக்கிறது. இன்றைக்கும் எண்ணற்ற விசாரணைக் கைதிகள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை விசாரணை முடிந்து கைதி விடுதலை செய்யப்பட்டால் இத்தனை நாட்கள் சிறையில் இருந்ததுக்கு என்ன சொல்லப் போகிறது சட்டம்? எந்த வித முகாந்திரமும் இன்றி சிறைத்தண்டனையை அனுபவித்தருக்கு சட்டம் தரப்போகும் விடை தான் என்ன? தொலைந்து போன வாழ்க்கையை திருப்பித் தருமா சட்டம். கடந்து போன நாட்களை திரும்பவும் அந்த விசாரணைக் கைதிக்கு தருமா சட்டம்?

என்றைக்கு சட்டம் இதைப் போன்ற சட்டத்தின் கொடுமைகளை நீக்குகிறதோ அன்று தான் அரசியலமைப்புச் சட்டம் - ஜன நாயகத்தன்மை கொண்டது. அதுவரை சட்டமும் ஒரு கொடுங்கோலன் தான்.

Wednesday, December 2, 2009

ஏனோ மனிதன் பிறந்து விட்டான்

பனித்திரை என்ற திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் சொல்வது அனேகம். சமூகம் இந்தளவுக்கு கேடு கெட்டதாய் ஆக ஏதோ சிலரின் தன்னலப் போக்குதான் காரணம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்.

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமையெனும்
பனித் திரையாலே மூடுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
மறு நாள் அவனே ஏசுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டு விட்டான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

Thursday, November 26, 2009

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை முன்வைத்து !

ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் நாவல் சமீபத்தில் படித்தேன். அந்த நாவலில் ஒரு கேரக்டர், அதன் பெயர் முத்தம்மை. அவலட்சனமானவள். முத்தமாளுக்கு வேலை பிச்சை எடுப்பது. அவளுக்கு பிள்ளை பிறக்க வைத்து, அந்தப் பிள்ளைகளை பெற்று பிச்சைக்கு விடுவதுடன், அந்தப் பிள்ளைகளை வேறு ஆட்களுக்கு விற்றும் விடுவார் பண்டாரம்.

முத்தம்மையோடு அகோரமானவர்களை இணைய விடுவது (அரேஞ்டு மேரேஜ்ஜுகள் நினைவுக்கு வருகிறது) அதன் காரணமாய் பிறக்கும் உருப்படிகளை வைத்துப் பிச்சை எடுப்பது போன்ற சம்பவங்களை நாவலில் எழுதி இருப்பார்.

நாவலின் கடைசியில் முத்தம்மையோடு இணைய விடுவது அவள் பெற்ற பிள்ளையை. படிக்கவே படுபயங்கரமாக இருக்கும் அந்த நாவல் எனக்குள் உருவாக்கிய கேள்விகள் பலப்பல.
அதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் இங்கே.

நாமும் இப்படித்தான் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து முதலாளித்துவ பகாசுர கம்பெனிகளிடம் வேலை என்ற பெயரில் அடிமைகளாய் நம் பிள்ளைகளை விற்கின்றோமா?

நாம் தான் முத்தம்மாளா?


ஜெயமோகன், ஏழாம் உலகம்

காட்டுமிராண்டிகளின் கூட்டம்




ஜூவியில் வெளியான கட்டுரையைப் படித்ததும் ஆண்களின் உருவில் நடமாடும் அயோக்கியர்களை எண்ணி மனம் பேதலித்தே விட்டது.

அந்தக் கட்டுரை கீழே ( நன்றி ஜூவி)



வாய்பேச முடியாத வெகுளிப் பெண் ஒருவரை, எந்த அயோக்கியனோ தொடர்ந்து சீரழித்து கர்ப்பிணியாக்க... கேட்பாரின்றித் தொடர்ந்த இந்த கொடுமையின் விளைவால் இதுவரை நான்கு குழந்தை களைப் பெற்றெடுத்திருக்கிறாள், அந்த பரிதாபப் பெண்! எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' ('நான் கடவுள்' படத்தின் ஒரிஜினல்!) நாவலில்வருவதுபோல், ஒவ்வொரு குழந்தையும் பிறக்கப் பிறக்க இவரிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லப்பட்டது! அந்த நாவல்போல, குழந்தைகள் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இங்கு ஒரே ஆறுதல்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி யில் இருந்து பட்டுக்கோட்டை பிரதான சாலையில் இருக்கிறது பாண்டிசத்திரம். அங்கிருந்து கிழக்கில் இரண்டு கிலோமீட்டர்

தூரம் சென்றால், செம்பியமங்கலம் கிராமம்... இங்குதான் தற்போது நான்காவது குழந்தை யைப் பெற்றிருக்கிறார் சித்ரா என்ற அந்த பேச இயலாத பெண். நாம் அங்கு சென்று விஷயத்தை விசாரித்ததுமே, விஜயா என்பவரின் வீட்டைக் காட்டினார்கள் கிராமத்தினர்.

அவர் வீட்டுக்குப் போனோம். அந்த வீட்டில் ஒரு ஓரமாக சாக்கு விரித்து அதில் சித்ராவை படுக்க வைத் திருந்தனர். கந்தல் துணியாக தாய் சித்ரா சுருண்டிருக்க, ரோஜா குவியலாக ஆண் குழந்தை ஒன்று தாயருகில் கண்மூடித் துயில் கொண்டிருந்தது!

அடைக்கலம் கொடுத்திருக்கும் விஜயாவிடம் பேசினோம். ''இந்தப் பொண்ணு ஊரு நெடும்பலம். அங்கே ஒத்த தெருன்னும் சொல்வாங்க. உண்மையான முகவரி தெரியாது. எங்க ஊரு வீடுகளுக்கு முன்னாடி வந்து நின்னு சோறு கேக்கும். இரக்கப்பட்டு சோறு தண்ணி குடுப்போம். அப்பப்ப இது கர்ப்பம் ஆயிடும். யாரு காரணம்னு கேட்டா, 'அண்ணன், மாமா'ன்னு பொதுவா ஏதேதோ சொல்லும்.

இதுக்கு முந்தி இப்படி இதுக்கு போன இடத்துல ரோடு, வாசல்னு மூணு குழந்தை பிறந்திருக்கு. அப்பல்லாம் பக்கத்துல இருக்கவங்க, அந்தக் குழந்தையைக் குளிப்பாட்டி கொஞ்ச நாள் அவங்க வீட்லலேயே வெச்சிருந்துட்டு, யாராவது குழந்தை இல்லாதவங்க கேட்டா தூக்கிட்டுப் போகச் சொல்லிடுவாங்க. இப்படித்தான் அந்த மூணு குழந்தைகளையும் தோப்புத்துறை, பஞ்சநதிக்குளம், தம்பிக்கோட்டைனு மூணு ஊர்ல இருந்து வந்த குழந்தை இல்லாதவங்க தூக்கிட்டுப் போயிட்டாங்க.

கடந்த பதினேழாம் தேதி ராத்திரி, வயித்தை சாய்ச்சுக்கிட்டு எங்க வீட்டு முன்னாடி வந்துசோத்துக்கு நின்னுச்சு. நானும் சோறு குடுத்தேன். அத சாப்பிட்டுட்டு கொஞ்ச தூரம் போன வுடனே அலறல் சத்தம். பதறியடிச்சு ஓடி வந்து பார்த்தா... வெளியிலயே பிரசவம்! உடனே தாயையும் குழந்தையையும் வீட்டுக்குள் கொண்டுவந்து குளிப்பாட்டி, அவசரத்துக்கு ஒரு துணிய போட்டு மூடி வெச்சிருந்தோம். அப்புறம் காலையில கைப்புள்ளைங்க இருக்குற வீட்டுல போய் சட்டை வாங்கியாந்து, அந்த பச்சைக் குழந்தைக்குப் போட்டு விட்டோம். அந்தப் பொண்ணுக்குத் தேவையான பத்திய சாப்பாடு தயார் பண்ணிக் கொடுத்தோம். இந்த தெருவுல எல்லோருமே வந்து இவங் களைப் பார்த்துக்குறாங்க..!'' என்றார்.

ராஜாத்தி என்பவர் நம்மிடம், ''தெனமும் சாப்பாடு கேட்டு எங்கூருக்கு வர்ற சித்ரா, இடையில சிலநாள் வரமாட்டா. அந்த மாதிரி சமயங்களில்தான் யாரோ பாவிங்க இவளை எங்கேயாச்சும் கொண்டுபோய் வச்சிருந்து தப்பா நடக்கறாங்க போலிருக்கு. கேக்கவும் பாக்கவும் ஆளு இல்ல. அவளுக்கு பேச வேற வராதுங் கறதை எல்லாம் பயன்படுத்திதான் அந்த மிருகங்கள் அவளை இந்த நெலைமைக்கு ஆளாக்கி இருக் கணும். நீங்களாவது இந்தக் குழந்தைக்கு அப்பா யாருன்னு கண்டுபிடிச்சு, ஒண்ணா சேர்த்து வைங்க. அப்படி இல்லைன்னா இந்தப் பொண்ணையாச்சும் ஒரு பாதுகாப்பான இடத்துல தங்க வையுங்க!'' என்றார்.

நாம் வந்திருக்கும் தகவல் அறிந்த செம்பியமங்கலம் கிராம மக்கள் அங்கு கூடியதோடு இதே கோரிக் கையைத்தான் நம்முன் வைத்தனர்.

இதற்கிடையில், அருகிலிருக்கும் எடையூரை சேர்ந்த மாதவன் - தவமணி தம்பதி, 'பிறந்திருக்கும் இந்தக் குழந்தையை நாங்கள் வளர்க்கிறோம்...' என்று கேட்டு, அங்கு வந்து சேர்ந்தனர். நம்மிடம் அவர்கள், ''எங்களுக்குக் கல்யாணமாகி 10 வருஷத்துக்கும் மேல ஆயிருச்சி. குழந்தை இல்ல. எங்ககிட்ட இந்தக் குழந்தையைக் குடுத்தா, எங்க புள்ளையாவே வளர்ப்போம்...'' என்றனர் ஊர்க்காரர்களிடம்.

நாம் சித்ராவிடம் அவருடைய குழந்தை யைக் காட்டி,''இதுக்கு அப்பா யாரு?'' என்றோம். ''அண்ணன், மாமாட்டு அண்ணன்...'' என்ற வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார். ''வா, வந்து காட்டுவியா?'' என்று அழைத்தோம். உடனே அவர், தன் தலைமுடியைப் பிடித்துத் தன்னையே அடித்துக் காண்பித்து, ''அய்... அய்க்ம்...'' (அடிக்கும்?) என்றார். குழந்தையை பக்குவமாகத் தூக்கக்கூட சித்ராவுக்குத் தெரியவில்லை. தவமணிதான் குழந்தையைத் தூக்கித் தாயிடம் கொடுத்துப் பால் கொடுக்க வைத்தார்.

நாம் அன்று மாலை 6 மணிக்கு அங்கிருந்தபடியே திருவாரூர் மாவட்ட கலெக்டர் எம்.சந்திரசேகரனை தொடர்புகொண்டு இந்த அநியாயத்தைத் தவிப்போடு சொன்னோம். பதறிப்போன அவர், ''முதலில் தாயையும் குழந்தையையும் ஹாஸ்பிட்டலில் சேர்த்து விடுவோம். பிறகு மற்றதைப் பார்க்கலாம். நாளை காலை அதிகாரிகளை அங்கு வரச்சொல்கிறேன்!'' என்றார் நிஜமான அக்கறையோடு.

மறுநாள் காலை நாம் மறுபடி அங்கு சென்றோம். திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரம், செம்பியமங்கலத்தில் காத்திருந்து, 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தார். சித்ராவை ஆம்புலன்ஸில் ஏற்ற, குழந்தையைத் தத்தெடுக்க வந்திருந்த மாதவன் - தவமணி தம்பதி, ''நாங்களும் வந்திருந்து பார்த்துக் கொள்கிறோம்...'' எனக் குழந்தையை கையிலேந்திக் கொண்டனர். இதற்குள் கலெக்டர் சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேசிவிட... நாமும் திருவாரூர் சென்றோம். கூடவே திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரமும் வந்தார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், தாயையும் சேயையும் பரிசோதித்துவிட்டு அங்கேயே ஒரு வார்டில் அனுமதித்தனர். நாம் மீண்டும் கலெக்டரிடம் தொடர்பு கொண்டோம். ''மருத்துவர்கள் சொல்லும்வரை சித்ரா அங்கேயே இருக்கட்டும். பிறகு அந்தப் பெண்ணை காட்டூர் அருகிலிருக்கும் இல்லத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டேன். அங்கு அவரை சேர்த்துவிட்டு, அதன் பிறகு குழந்தையைத் தத்துக்கொடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறேன். அதோடு, அந்தப் பெண்ணைக் கேட்டு, அந்த குழந்தைக்கு அப்பா யார் எனக் கண்டுபிடித்து சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கிறேன்....'' என நம்மிடம் உறுதியளித்தார்.

கலெக்டர் சந்திரசேகரனுக்கும், தாசில்தார் சிதம்பரத்துக்கும், தத்து எடுக்கத் தயாராக வந்திருந்த மாதவன் - தவமணி தம்பதிக்கும், யாரோ ஒரு பெண்ணை அநாதை என நினைக்காமல் தன் வீட்டுப் பெண்போல் பராமரித்து வைத்திருந்த விஜயாவுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த செம்பியமங்கலம் கிராம மக்களுக்கும் நமது சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.

'ஏழாம் உலகம் என்பது வேதாளங்களுக்குச் சொந்தம்' என்று தன் நாவலில் சொல்லியிருப்பார் ஜெயமோகன். ஆதரவில்லாத ஒரு பெண்ணிடம் தன் காமவெறியைத் தீர்த்துக் கொள்ளும் அந்த கோழை வேதாளம் என்றைக்குச் சிக்கினாலும் சரி... சட்டம் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டு திரும்பினோம்!


என்ன செய்தாலும் திருந்தாத ஜென்மம் மானிடர் ஜென்மம்.

Saturday, August 8, 2009

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளும் தீர்வும்

பன்றிக்காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன என்பதை பொது மக்களிடமும், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இப்பதிவு.

1) தொடர்ந்து மூக்கில் சளி வருதல்
2) விடாமல் தொடர்ந்து காய்ச்சல் இருத்தல்
3) தொண்டையில் வலி இருத்தல்
4) தொடர்ந்து வயிற்றுக் கழிச்சல்
5) கைகால்களில் வலி இருத்தல்

மேற்படி தொந்தரவுகள் காணப்பட்டால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லவும். மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் இருப்பதாகவும், ஸ்பெஷல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் என்னிடம் போனில் பேசிய அரசு மருத்துவர் சொன்னார்.

இந்தியாவெங்கும் இருக்கும் அரசு மருத்துவ மனைகளும், அதன் தொலைபேசி எண்களையும் கீழே தந்திருக்கிறேன்.

Saturday, August 1, 2009

பெண்கள் - உள்ளமும் அழகும்

டெலிமார்க்கெட்டிங் ரிஜிஸ்ட்ரேஷன் பதிவு செய்வது போன்ற விபரங்களுக்காக ஒரு மொபைல் கம்பெனியின் நோடல் ஆஃபீசருடன் பேச வேண்டிய சூழ் நிலை. அந்த நோடல் ஆஃபீசர் ஒரு பெண். முதலில் நானே பதிவு செய்த விபரம் தவறு என்பதால் கேன்ஷல் செய்து விட்டது நமது அரசாங்கம். பின்னர் மறுபடியும் நோடல் ஆஃபீசரே புதிதாய் பதிவு செய்து எனக்கு அனுப்பி வைத்தார். கையெழுத்திட்ட விண்ணப்பத்துடன் டிடியை இணைத்து மனைவியிடம் கொடுத்து அனுப்பி வைத்தேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நோடல் ஆஃபீசரிடமிருந்து போன். டிடி நம்பர் என்னவென்று டிடி எடுத்த வங்கியில் கேட்டுச் சொல்லவும் என்றார். விசாரித்து சொன்னேன். ஒரு வாரம் சென்ற பிறகு வங்கி குறிப்பிட்டது டிடி நம்பர் இல்லை என்றும் மற்றொரு நம்பர்தான் டிடி நம்பர் என்றும் சொல்கிறார்கள் என்பதால் புதிய பதிவினைச் செய்ய வேண்டுமென்றார். மீண்டும் பதிவு செய்து புது கணக்கைத் இமெயிலில் அனுப்பி வைத்தார். அதை பிரிண்ட் எடுத்து, இன்றைக்கு காலையில் நோடல் ஆஃபீசரிடம் கையெழுத்து இட்ட ஒரிஜினல் விண்ணப்பத்தை அளித்து விட்டு வந்த என் மனைவியிடம் ”சார், எங்களால் மிகுந்த சிரமப்படுகிறார்” என்று தன் வருத்தத்தை தெரிவித்தாராம் நோடல் ஆஃபீசர்.

வண்டியில் வரும் போது, என் மனைவி, ”ஏங்க அந்தப் பெண் ரொம்ப அழகாய் இருக்கிறார்.”

”சிவப்புக் கலரா?”

”ஆமாங்க, அவ்ளோ அழகு, பார்த்திருக்கலாம்” என்றார்.

”அழகு என்பது தோல் கலரில் இல்லை. உள்ளத்தில் இருக்கிறது. ஆள் அழகாய் இருந்தால் மனசு அழகாய் இருக்காது” என்று சொன்னேன்.

ஆள் அழகாய் இருந்தால் உள்ளம் கொடூரமாய் இருக்குமென்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் நானே அனுபவித்தும் இருக்கிறேன். என்னிடம் எத்தனையோ பெண்கள் பழகி இருக்கின்றார்கள். வாத்தியாராக வேலை செய்த காலத்தில் அழகான பெண் பிள்ளைகளின் செயல்களை நேரில் கண்டிருக்கிறேன். அழகாய் இருக்கிறோமென்ற எண்ணத்தின் காரணமாய் கொடூரமாய் நடந்து கொள்வர். இப்படி நான் சந்தித்த எத்தனையோ பெண்கள் அழகினால் கர்வம் கொண்ட சம்பவத்தினையும் அதன் பொருட்டு வாழ்க்கையில் வேதனைகளைச் சந்தித்த கதைகளையும் அறிவேன்.

வீடு வந்து சேர்ந்தோம். கொரியர் வந்திருந்தது. நோடல் ஆஃபீசரே புதிதாய் ரெஜிஸ்டர் செய்து ஈமெயிலில் நேற்று எனக்கு அனுப்பி வைத்த விண்ணப்பத்தை, பிரிண்ட் எடுத்து எனது கையொப்பத்தை பெற கொரியரில் அனுப்பி இருந்தார். என் பொருட்டு அவர் தன்னை சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறார் என்பது புரிந்தது. நோடல் ஆஃபீசர் ஆள் மட்டும் அழகு இல்லை, உள்ளமும் அழகு என்று அந்த நொடியில் உணர்ந்தேன். எவர் ஒருவர் பிறருக்காக தன்னை சிரமத்திற்குட்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்.

இப்போது நோடல் ஆஃபீசரைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது.

Friday, July 24, 2009

தங்கத்தின் விலை குறையுமா ?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. என்ன காரணம் ?

சர்வதேச அளவில் டாலரின் மதிப்பில் சரிவேற்பட்டிருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆபரணத்தங்கத்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் இன்று ரூபாய் 11400க்கு விற்கப்படுகிறது. இது மேலும் உயரக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.

தங்கம் வாங்க விரும்புவர்கள் அத்தியாவசியமான தேவை ஏற்பட்டால் மட்டுமே தங்கத்தை வாங்கும்படியும், உடனடித் தேவை இல்லாதவர்கள் சற்றே பொருத்து விலை குறையும் போதும் வாங்கலாம் என்று ஃபைனான்சியல் அட்வைஸ்ர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உலகளவில் குருடூ ஆயில் சற்றே விலை உயர்ந்து பீப்பாய்க்கு 65.25 டாலராக இருக்கிறது. மேலும் உயரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக மார்கெட் நிலவரங்கள் சொல்கின்றன.

இனி சில கம்பெனிகளின் நிகர வருமானம், நஷ்டம் இவற்றைப் பார்க்கலாம்.

மாருதி சுசுகியின் காலாண்டு நிகர வருமானம் 584 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நிருவனத்தின் வளர்ச்சி விகிதம் 25% ஆகவும் உயர்வு பெற்றிருக்கிறது.

கேஈசி இண்டர்னேஷனல் கம்பெனி மின் உற்பத்திக்கான சுமார் 477 கோடி ரூபாய் பணி ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இண்டியாவின் காலாண்டு நிகர வருமானம் 442 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஏசிசியின் காலாண்டு நிகர வருமானம் 15% வளர்ச்சியுடன் 471 கோடி ரூபாயாகும்.

இண்டோ ஜிஸ்க் நிறுவனத்தின் 9 லட்சம் பங்குகளை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வாங்குகிறது. மொத்த பங்குகளில் இது 20 சதவீதம் ஆகும். முன்பே ஐசிஎல் நிறுவனம் 39.84 சதவீதம் பங்குகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையொப்பமிட்டிருக்கிறது.

மங்களூரி ரிபைனரி காலாண்டு லாபம் 50 சதவீதம் சரிவு பெற்றிருக்கிறது.

Friday, July 17, 2009

அப்பாவுடன் அம்முவின் போராட்டம்.......


படித்துக் கொண்டிருப்பேன். கையில் உருளை சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொண்டு என் தலையருகில் அமர்ந்து கொண்டு கையில் எடுத்த சிப்ஸை வாயில் வைத்து கடித்து விட்டு மீதியை ”அப்பா, ம்.. ”என்று சொல்லி என் வாயில் வைக்கும் அம்மு. நானும் சாப்பிடுவேன். அப்படியே ஒரு பாக்கெட்டையும் காலி பண்ணுவோம் அம்முவும் நானும். இது வழக்கமாக அம்முவுடன் நானும் சேர்ந்து கொண்டு செய்யும் வேலை.

இன்று, ஹோமியோபதி டாக்டரை பார்த்து விட்டு வரும் போது வாங்கி வந்த காராச்சேவைக் கொண்டு வந்து காட்டியது அம்மு. வேலைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அப்புறம் சாப்பிடலாம் அம்மு என்று சொல்லி விட்டேன்.

மாலை நேரம். டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது காராசேவு நினைவுக்கு வர ”அம்மு, காராச்சேவை எடுத்துக்கிட்டு வாரியா, சாப்பிடலாம்”என்றேன். ”அப்பா, அப்போதே சாப்பிட்டு விட்டேனே” என்றது அம்மு. ”அப்படியாம்மா” என்று சொல்லிபடி டிவியில் மூழ்கி விட்டேன்.

ரித்திக் பள்ளியில் இருந்து வந்ததும் சேவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ”ஏதுடா இது?” என்றேன்.

”கிச்சனில் இருந்ததுப்பா” என்று ரித்திக் சொல்ல எனக்கு கோபம் வந்து விட்டது. ”அம்மு இனிமேல் என்னிடம் பேசாதே” என்று சொல்லி கோபத்துடன் மனைவியிடம் ”உன் மகளை என்னிடம் பேசக்கூடாது என்று சொல்லு” என்று கோபமாக கத்தினேன்.

அவ்வளவுதான். உடனே அம்மு அருகில் வந்து மூக்கை முகத்தில் வைத்து தேய்த்தது. நான் தள்ளி விட்டேன். முத்தம் கொடுத்தது. முகத்தை திருப்பிக் கொண்டேன். மேலே ஏறி உட்கார முனைந்தது. ”என்னிடம் வராதே” என்று கோபத்தில் இறைந்தேன். பயந்து விட்டது. அம்முவின் அம்மாவிடம் ”ஏய் அம்முவிடம் சொல்லி என்கிட்டே வரக்கூடாது என்று சொல்” என்று கத்தினேன்.

கையில் சாப்பாட்டைத் தட்டைக் கொண்டு வந்து அருகில் அமர்ந்து ”அப்பா ஊட்டி விடு” என்றது. நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். அப்போது பார்த்து, நண்பரிடமிருந்து போன் வர, மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

என்னிடம் பேசக்கூடாது என்றும், நான் மட்டும் தான் அப்பாவிடம் பேசுவேன் என்றும், நீ அப்பாவுடன் பேசாதே என்றும் சண்டை போட அம்மாவுக்கும் அம்முவுக்கும் தகராறு வந்து விட்டது. என்ன சொல்லியும் நான் கேட்கவில்லை என்றவுடன் ”அப்பா, கால் வலிக்குது, வலிக்குது” என்று அழ ஆரம்பித்தது. நானொன்றும் சொல்லவில்லை என்பதால் எழுந்து போய் அம்மாவிடம் மீண்டும் சண்டை போட , மனைவி என்னிடம் வந்து ”ஏங்க இப்படிச் செய்றீங்க?” என்று கேட்க, நான் காராச்சேவு பிரச்சினையைச் சொல்ல சிரி சிரியென்று சிரித்தாள். அம்மு மறந்து விட்டது என்றும் அதனால்தான் முடிந்து விட்டது என்று சொல்லி இருக்கிறது என்றும் சொல்ல எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

உடனே இருவரும் ராசியாகி விட்டோம். ஒரு வழியாக அம்முவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வாழ்க்கையின் சுவாரசியமான தருணங்கள் இவைதான். மனித குலம் இப்படிப் பட்ட சந்தோஷங்களினால் தான் இன்றும் ஏதோ நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.

குழந்தைகள் வாழ்க்கையினை அர்த்தப் படுத்தும் அற்புதங்கள் என்பதை இந்த அற்புதமான தருணத்தில் மீண்டும் உணர்ந்தேன்.