குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, November 19, 2008

சொர்க்கமே என்றாலும்....

இப்பாடலை எனது மனம் கவர்ந்த பதிவர் ஒருவருக்காக இங்கு பதிவிடுகிறேன்.




அனானிமஸின் கமெண்ட்ஸ்சுக்காக பழைய போட்டோவை இணைத்துள்ளேன். இந்த போட்டோவில் ஒரு விஷயமிருக்கிறது. என் மனைவியால் மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எனது புகைப்படங்களிலேயே இது தான் அழகாய் இருப்பதாக அவளிடம் சொல்வேன். அதற்கு அவளின் பதில் : கணவர் எந்த போஸில் அழகாய் இருப்பார் என்று மனைவிக்குத் தான் தெரியும்.

Tuesday, November 18, 2008

நடமாடும் தெய்வங்கள்

இன்று காலையில் வீட்டுக்கு வெளியே ஜீப் சத்தம் கேட்டது.

” என்னம்மா சத்தம் ? “
“ மூன்று மாத பிள்ளையை கொன்று போட்டிருக்கிறார்களாம்” என்றார் மனைவி.
“ என்ன ? “
“ ஆமாங்க.. யாருன்னு தெரியலை. போலீஸ் வந்திருக்காங்க” என்றார் மனைவி

பொக்கை வாய்ச் சிரிப்பும், பிஞ்சு விரல்களும், பால் வழியும் வாயோடு சிரிக்கும் குழந்தையையா கொன்று இருக்கிறார்கள்.
பிஞ்சுப் பாதங்களால் நெஞ்சில் உதைத்தால் பிறவிப்பயன் நிறைவேறுமே. நடமாடும் இயற்கையின் அற்புதமல்லவா குழந்தை. இறைவனின் படைப்பில் உயிரோடு மானிடருக்கு கிடைக்கும் சொர்க்கமல்லவா குழந்தை. வீட்டுக்கு வரும் நடமாடும் கடவுள்தானே குழந்தைகள்.....

நெஞ்சம் கனத்து, கண்ணீரில் நனைந்தது கண்கள்.

பிள்ளை இல்லா அன்னை ஒருத்தியின் குரலில் வெளிப்படும் வேதனையினைக் கவனியுங்கள்.

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
கனிந்த விட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா
கண்ணீரில் வாடுதடா....

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

பெற்றெடுக்க மனமிருந்தும் பிள்ளைக்கனி இல்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை
சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டி தாலாட்டும் பேரு மட்டும் இல்லை
பேரு மட்டும் இல்லை

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

வேண்டுமென்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பார்
வெறுப்பவருக்கும் மறுப்பவருக்கும் அள்ளி அள்ளித் தருவார்
ஆண்டவனார் திருவுள்ளத்தை யாரறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
யார் அறிவார் கண்ணே

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

* * * * *

எப்படியடா உங்களுக்கு இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. பாவிகளா... பாவிகளா....

துள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்



ஹாட்சாட், லெபனான் பாப் பாடகி நான்ஸி அஜ்ரமின் குரல் - பாடலைக் கேட்டால் மனசு ஆற்றிலிருந்து வெளியே குதித்த மீனாய் துள்ளித் துள்ளி குதிக்கும்.

உடம்பிலொரு மின்சார உணர்ச்சி கிளம்பி தலை முதல் கால்வரை கிறுகிறுக்க வைத்து விடும்.

டயல் அப் வாசகர்களுக்காக எம்பிதிரி வடிவில் கேட்டு மகிழுங்கள்.

Wednesday, November 5, 2008

ஊட்டி சென்று வந்த கதை - 3

போட் ஹவுசில் அன்றைய தினம் நிறைய மக்கள் குவிந்திருந்தார்கள். ஆளாளுக்கு மொபைல் போன், கேமராக்களுடன் தான் திரிகிறார்கள். மனிதர்களுக்கு தன் இருப்பை உலகுக்கு காட்ட வேண்டுமென்ற ஆவல்(ஆதிக்க மனப்பான்மையாக இருக்குமோ?). ஃபோட்டோக்களாக எடுத்துக் கொண்டிருந்தனர். சுற்றுலா வந்ததன் நோக்கத்தை முற்றிலுமாக மறந்து விட்ட மனிதப் பிறவிகள். இயற்கையை அதன் அமைதியோடு மனதுக்குள் உணர்ந்தால் தான் அதன் மகத்துவம் புரியும். ஆனால் இவர்கள் செய்த காரியங்கள் புற அழகிற்கும், நாக்குச் சுவைக்கும் அடிமையாய்ப் போன மனித அகதிகள் போன்றவர்கள் இவர்கள் என்பதனை உணர்த்தின.





சுற்றி வர கடைகள். எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம். அமைதியான, அழகான அந்த இடத்தை வணிக அரங்கம் போல உருமாற்றியிருந்தார்கள். மக்கள் கடைகளில் குவிந்திருந்தார்கள். சோளம், ஐஸ் கிரீம் என்று தின்பண்டங்களின் விற்பனை சூடு பறந்தது. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் நேற்றைய குழந்தைகளும் இன்றைய குழந்தைகளும் வீல் வீல் என்று சத்தமிட்டபடி விளையாடினார்கள். தம்பியின் வற்புறுத்தல் காரணமாக போட்டில் ஏறினேன். வீல் சேர் அனாதையாக நின்றது.

தூரத்தில் இருந்து வீல் சேரைப் பார்த்தேன். ”வீடு வரை உறவு. வீதி வரை மனைவி. காடு வரை மக்கள். கடைசி வரை யாரோ“ கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது. சில இடங்களில் சில தேவையற்றுப் போகும். மனிதனும் தன் வயதான காலத்தில் மற்றவருக்கு பயனில்லாப் பொருளாய் ஆகிவிடுகிறான். உலகம் பொருள் சார்ந்த வாழ்க்கையின் பால் நடைபோடத் துவங்கி விட்ட காரணத்தால், மனித உணர்வும், உணர்ச்சியும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. அவை மனோ தத்துவ மருத்துவர்களால் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. புறவுணர்வு வாழ்க்கையின் பால் மூழ்கிக் கிடக்கும் மனிதனுக்கு அகவுணர்வு வாழ்க்கையின் மகத்துவம் புரிதலில்லை. அதை சில ஆன்மீகவாதிகள் என்போர் காசாக்கி வருகின்றனர். அவ்விடத்திலும் கூட்டமுண்டு. அவ்விடமும் வணிக அரங்காக மாற்றமடைந்திருக்கும். ஏனென்றால் உலக மாந்தர்கள் நுகர்வோர் வாழ்வினை மட்டுமே நாகரீகத்தின் உச்சக்கட்டமாக நினைக்கின்றார்கள். இவர்களின் பொழுது போக்கு மல்டி பிளக்சுகளிலும், உயர்தர ஹோட்டல்களிலும் ஒளிந்து கிடக்கிறது. அங்குச் செல்லத் தேவையான பொருளாதாரத்திற்காக தன் வாழ்வையே பலியாக்கும் விட்டில் பூச்சிகளாய் இன்றைய மனிதர்கள் உலா வருகிறார்கள்.

அமைதியான தண்ணீர். பச்சை நிறத்தைப் பிரதிபலித்தது. சுற்றிலும் மரங்கள். தண்ணீரில் படகுகள் மிதந்தன. வாழ்க்கையில் மனிதர்கள் மிதப்பது போல. படகும் மக்களை சுமந்து கொண்டு தண்ணீரில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. மக்கள் தன் மக்களை சுமப்பது போல.

தனி போட் எடுத்துக் கொண்டு நானும், தம்பியும், எனது மனைவியும், தம்பி மனைவியும், என் மகள் மற்று மகனுடன் போட்டில் பயணித்தோம்.

வலிந்து வலிந்து போட்டைத் தள்ளும் மனிதரைப் பார்த்தேன். உள்ளம் நிலை கொள்ள வில்லை. வலித்தது. ஒரு ஜாண் வயிற்றுக்காக கைகள் வலிக்க வலிக்க, மூச்சுத் திணற திணற கால்களை உதைத்துக்கொண்டு கண்கள் வெளிவரும் அளவுக்கு இரு கைகளாலும் துடுப்பினால தண்ணீரைத் தள்ளிக் கொண்டு வந்தார். மனதுக்குள் வலித்தது. மனித வாழ்க்கை இவ்வளவு குரூரமானதா ?

ஏன் ???????????????????????????????????????????????????????????

Monday, November 3, 2008

சந்தவை தயாரிப்பில் நான்

ஒரு மாலை நேரம்.கணிப்பொறியில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தேன். கிரைண்டர் சத்தமிட்டது. ச்சே இவளுக்கு எப்ப பாரு இதே வேலை. எரிச்சலாக இருக்க, கதவை சாத்த முயற்சித்த போது, அம்மணி ( அதாங்க என் மனைவி)

"என்னங்க இங்க வாங்க " என்று அழைக்க,

ச்சே இவளுக்கு இதே வேலையாப் போச்சு எப்ப பாரு எதையாவது சொல்லி மூடை கெடுத்து விட்டு..ச்சே ச்சே. எதுக்குடா கல்யாணம் பன்னினோம் என்று ஒரே வெறுப்பா இருந்தது. வேறு வழி இல்லாததால் அழைப்புக்கு உடன்பட வேண்டியதாகி விட்டது.கோர்ட்டு சம்மன் எல்லாம் தூசு பண்ணிடலாம். ஆனா இந்த அம்மணிகள் உத்தரவு இருக்கே கேட்டவுடன் குலை நடுங்க செய்கின்றன..

" எதுக்கு வரச் சொன்னே " கோபத்துடன் நான்.
" இதை பிடிச்சு திருகுங்க " என்றாள். எனக்கு சரியான கோபம். வேலையைக் கெடுத்து விட்டாளே என்று.
" இதுக்கா கூப்பிட்டே , ஏன்டி உசுரே எடுக்கிறே "
" உஸ், பேசாம சொல்லுறதை செய்யுங்க " என்றாள். பார்வையா அது. அப்படி ஒரு கொடூரமய்யா அது..
அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். ஹிட்லராம் ஹிட்லர். அவனெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. இந்த அம்மணிகள் தானய்யா கொடுங்கோலர்கள். மனசாட்சியே இல்லாத இடி அமீன்கள்.

சமயலறையில் ஒரு வஸ்து இருந்தது. மாமியார் உபயமாம். மாமியார்கள் தானைய்யா எமன். ஏற்கனவே ஒன்று தலைமீது ஏறீ உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடுது. இதுல இது வேற. பார்க்க ஸ்பீல்பெர்க் படத்தில் வருமே ஒரு இயந்திரம், பூமிக்குள் இருந்து வெளியே வந்து ஆட்கள் எல்லாம் பிடித்து முழுங்குமே, மூனு காலு கூட இருக்குமே, அது போல இருந்தது.

இடியாப்ப உரல் பாத்து இருக்கீங்களா ? அது போல தான் இருந்தது அந்த வஸ்து. ஆனா அதை மூன்று கால்களுக்கு இடையில் பொருத்தி மேலே திருகு போல இருந்தது அதை திருகினால் உரலுக்குள் சென்று அழுத்துகிறது. உரலுக்குள் மாவை வைத்தால் பிழிந்து கம்பி போல வெளியே தள்ளுகிறது.

அம்மணி இட்லி போல (எங்க வீட்டு இட்லி வைத்து தான் எல்&டி பெரிய பெரிய கட்டிடம் எல்லாம் கட்டுறாங்க) இருந்ததை எடுத்து உரலுக்குள் வைத்து

" ம், திருகுங்க " என்றாள்.

ராணுவ உயர் அதிகாரி கூட இப்படி எல்லாம் உத்தரவு போட மாட்டார்களய்யா. அங்கே வேலை பிடிக்கலைன்னா ராஜினாமா செய்து விடலாம். இங்கே முடியுமா ? விதி.. யாரோ நம்ம மன்றத்துல கல்யாணம் செய்யபோறதா எழுதி இருந்தாங்க . சமயம் பார்த்து அது நினைவுக்கு வர, அவரை நெனச்சு பாவமா இருக்க, நொந்தபடி அந்த கம்பியை பிடித்து திருகினால், அட நொக்காமக்கா, இட்லியா அது இல்லை வெள்ளை குண்டா. திருகவே முடியலை. கையெல்லாம் எரிச்சல் வர, ஆம்பளை இல்ல, முக்கி முக்கி ( சத்தம் வெளியே தெரியாமல் தானய்யா )ஒரு வழியா திருகி முடிக்க, வெள்ளை வெளேரென்று அது கீழே இருந்த தட்டில் சுருள் சுருளாக விழுந்தது. அதற்குள் எனக்கு வேத்து விருவிருத்து போயிருச்சு.

ஒரு வழியா இருந்த வெள்ளை குண்டுகளை எல்லாம் உரலுக்குள் திணித்து அம்மணி " ம்... " என்று உத்தரவு இட நான் விக்கி விதிர்த்து முக்கி முனகி கை எரிச்சல் பட பிழிந்து முடித்தேன்.

அருகில் அமர்ந்து இந்த சமையல் போரை பார்த்துக்கொண்டு இருந்த என் ஒன்றரை வயசு மகளுக்கு தட்டில் அந்த சந்தவையை போட்டு கொடுக்க, கீழே அமர்ந்து கொண்டு சிறிய கையால் எடுத்து வாயில் வைத்து ஒரு உறிஞ்சு உறிய, வாய்க்குள் வைத்து மென்றபடி என்னை பார்த்து சிரித்தது. கை எரிச்சல் எல்லாம் போயே போச்சு...

இது தான் வாழ்க்கையா ?

ஆமா சந்தவை எப்படி தயாரிப்பது என்று உங்களுக்கு சொல்லனும் இல்லையா...

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - இரண்டு கப்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசியையை மூன்று மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து, ஏலக்காயை மறக்காமல் போட்டு நைசாக ( சந்தனம் போல ) அரைத்து எடுத்து, கடைசியில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துகொண்டு, இட்லி பாத்திரத்தில் குழியில் ஊற்றி பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் எடுத்து, சூடாக அந்த வஸ்துவுக்குள் வைத்து பிழிந்தால் சூடான மணமான சந்தவை தயார். இதனுடன் தேங்காய் பால் அல்லது சட்னி சேர்த்து சாப்பிட்டால் அருமை...

--------------------------------------------------------------
05-08-2007 அன்று தமிழ் மன்றத்தில் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு
--------------------------------------------------------------

Sunday, November 2, 2008

சங்கரா மீன் குழம்பு

உழவர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிய பிறகு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். கூடவே மனைவியும், மகளும். மீன்கடையில் அழகழகாக மீன்களை அடுக்கி வைத்திருந்தனர். சனிக்கிழமை கவுச்சி சாப்பிடாமல் இருங்கள் என்ற எனது அஸ்டாராலஜிஸ்ட் நண்பரின் கட்டளையினை இன்று ஒரு நாள் மீறித்தான் பார்ப்போமே என்று மனைவியிடம் மெதுவாக அம்மணி, இப்படி இப்படி என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய, முறைத்தாள்.

சரணாகதி தத்துவத்தை உதிர்த்தேன், வேறு வழியின்றி மீன் சமைத்துத் தர சம்மதித்தாள். சட்டத்தையும் சில சமயம் வளைத்து விடலாமல்லவா? எங்கள் வீட்டுச் சட்டம் வயிற்றுக்காக சற்றே வளைந்து கொடுத்தது. அதனால் கிடைக்கப்போவது மீன் குழம்பு.

சங்கரா மீன் வாங்கிக் கொண்டிருக்கும் போது அருகில் அடுக்கி வைத்திருந்த நண்டு சோகமாக என்னையே பார்ப்பது போல தோன்றியது. எனக்கு ஒரு வழக்கமிருக்கிறது. யாரேனும் சோகமாக முகத்தை வைத்திருந்தால் எனக்கு பார்க்க பொருக்காது.உடனடி நிவாரணம் செய்ய முற்படுவேன். அந்த வழக்கத்தின் காரணமாக நண்டின் சோகத்தை போக்க விரும்பினேன். அம்மணியை நோக்கி ஒரு ரொமாண்டிக் லுக் விட, அடுத்த நிமிடம் நண்டும் மெனுவில் சேர்ந்தது.

உள்ளுக்குள் ஒரே கும்மாளம். ஆகா இன்னிக்கு மீன் குழம்பும், நண்டு வறுவலும் கிடைக்கப்போவதை எண்ணி எண்ணி மனசு எக்காளமிட்டது.

மீன் குழம்பினை எப்படிச் செய்வதுன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க..

கொஞ்சம் தளர நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை கிளறி விட்டு, அதனோடு சிறிய வெங்காயம் மற்றும் நடுவில் கீறிய இரண்டு பச்சை மிளகாயையும் போட்டு வெங்காய வாசம் போகும் வரை வதக்கி அத்துடன் தட்டி வைத்த பூண்டும், இரு நறுக்கிய தக்காளியுடன் துளியூண்டு உப்பும் சேர்த்து வதக்கிய பிறகு மல்லித்தூள், மிளகாய்தூள் சேர்த்து வாசம் போகும் வரை, அதாவது எண்ணெய் மசாலிவிலிருந்து பிரியும் வரை வதக்கிய பிறகு புளி சேர்த்து நன்கு கொதிக்க வைத்த சாற்றில் சங்கரா மீனைச் சேர்த்து இரு கொதி விட்டு இறக்கி வைத்து மேலே மல்லித்தழை தூவி, சிறிது நேரம் சென்ற பிறகு சுடு சோற்றில் குழம்பினை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கம் அவ்விடத்தில் இருக்கும்.

இப்போ நண்டு வறுவல் எப்படிச் செய்வதுன்னு சொல்றேன்.

அரை மூடி தேங்காய், நான்கு பல் பூண்டு, இரண்டு வெங்காயம், அரை டீஸ்பூன் சோம்பு, நான்கு சிவப்பு மிளகாய் இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டு அத்துடன் கழுவிய நண்டினை சேர்த்து பிசைந்து தேவையான அளவு உப்புச் சேர்த்து வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் மசாலாவுடன் இருக்கும் நண்டினை சேர்த்து ஒரு கிளறு கிளறி மூடி வைத்து விடவேண்டும். சிறிது நேரத்தில் நண்டு வெந்து விடும். மசாலா நன்கு சிவக்கும் வரை பிரட்டி எடுத்தால் வாசம் ஊரையே தூக்கும்.
அந்த மசாலாவின் சுவையே தனி. எந்த நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காத அருமையான சுவை.

கிடைக்கப்போகும் மீன் குழம்பும், நண்டு வறுவலும் எண்ணங்களில் விரவ, வண்டியை விரட்டினேன்.

”ஏங்க, வெங்காயம், பூண்டு, தக்காளி நறுக்கி தருகின்றீர்களா” என்று மனைவி கேட்க, வேறு வழி. மீன் குழம்பு வேண்டுமே, நண்டு வறுவல் வேண்டுமே. மறுக்க முடியுமா? (நேரம் பார்த்து காரியத்தை நடத்திக் கொள்வது இப்படித்தான் போலும். தலையணை மந்திரமாக இருக்குமோ??)

சின்ன வெங்காயம் உரித்து இரண்டாக வெட்டினேன். பூண்டினை தோல் உரித்து வைத்தேன். தக்காளிகளை சிறிய சிறிய பீஸ்களாக நறுக்கி வைத்தேன். தேங்காயை திருகி எடுத்து வைத்தேன்.

முக்கால் மணி நேரத்தில் நண்டு மசாலாவின் வாசனையும், மீன் குழம்பு வாசனையும் என்னைச் சூழ்ந்தது. சாப்பாடு தயார் என்றார் மனைவி. இன்று ஒரு கட்டு கட்டி விட வேண்டுமென்று நினைத்தபடி அறையிலிருந்து வெளி வந்தேன்.

மூன்று தட்டுகளில் சூடாக சாதம் எடுத்து வைத்தார். மகனும், மகளும் ”அப்பா நண்டினை எடுத்துக் கொடு “ என்றார்கள். பிள்ளைகள் இருவரும் சாப்பிடட்டும் பின்னர் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றுச் சொல்லி விட்டு, நண்டு மசாலாவைச் சோற்றில் சேர்த்து பிசைந்து ஊட்டி விட்டேன். நண்டின் சதையினை எடுத்து ஊட்டி விட்டேன். ஆர்வமாக “ அப்பா நல்லா இருக்கு” என்று சொல்லியபடியே சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும், நாங்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தோம். ரித்தியும், அம்முவும் நல்லா சாப்பிட்டாஙகல்ல என்று சொல்லியபடி மீன் குழம்பினை சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டேன். அதிகம் சாப்பிட இயலவில்லை. மனைவியோ ஒரு கரண்டி சாதத்தைக் கூட சாப்பிடவில்லை. பிள்ளைகள் இருவரும் சாப்பிட்ட அழகும், அவர்களின் சந்தோஷமும் இருவருக்கும் சாப்பிட்ட நிறைவினைத் தர, நண்டும் மீன்குழம்பும் சட்டியில் இருந்தன, ஆனால் எங்களுக்குத்தான் சாப்பிடப் பிடிக்கவில்லை.

Friday, October 31, 2008

அன்னை இந்திராகாந்தி

இந்தியாவின் இரும்புத் தலைவி. ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இந்திராகாந்தி அவர்கள் இறந்து விட்டார் என்று பள்ளியில் விடுமுறை விட்டார்கள். ஆனால் நாளை காலை அவசியம் அனைவரும் வந்து விட வேண்டுமென்று உத்தரவு.

மறு நாள் காலை ஆஜர். என் மூன்று சக்கர வண்டியில் இந்திராகாந்தி அவர்களின் புகைப்படத்தை முன்புறம் இணைத்து மாலைகள் போட்டு, வண்டி முழுவதும் பூக்களால் தோரணம் அமைத்தார்கள். வண்டிக்குள் நான். வண்டியைத் தள்ள இரு தோழர்கள். என் பின்னால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அணி வகுத்தார்கள். கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம். ஊர்வலம் சென்றது. வழியில் யார் யாரோ சாலையில் விழுந்து கும்பிட்டார்கள். ஊர்வலத்தை எங்கள் ஊர் கடைத்தெருவில் முடித்தோம். நான் வீடு வந்து சேர்ந்து விட்டேன். எனக்குப் பெருமையாக இருந்தது. பள்ளியே என் பின்னால் வந்தது அல்லவா. மாலையில் இந்திராக் காந்தி அவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி குளத்தில் குளித்து விட்டு வந்தது எங்கள் ஊர்.

வாழ்ந்தால் அவர் மாதிரி வாழனும். மக்கள் இந்திராக்காந்தி அவர்களின் மேல் காட்டிய அன்பினை நினைத்தால். எங்கோ ஒரு பட்டிக்காட்டு மக்கள் அவர் மீது காட்டிய வெறித்தனமான பாசம்.. மனிதர்கள் பாசத்தால் கட்டப்பட்டவர்கள்.
இப்பதிவை எழுத காரணமாயிருந்தவர் : திவ்யா. நன்றி திவ்யா.

Wednesday, October 29, 2008

சாருவுக்கு கடவுளின் மொழி கட்டுரைக்காக எழுதிய கடிதம்

என் வசத்திலேயே இல்லை

வாத்தியாரே....

நான் இன்று என் வசத்திலேயே இல்லை. நான்ஸி அஜ்ரமின் குரலோடு மிதந்து கொண்டிருக்கிறேன். மிதந்து கொண்டிருக்கிறேன். காற்றோடு காற்றாக.. காற்றின் ஊடே மிதந்து கொண்டிருக்கிறேன். மனசு லேசாகி விட்டது. கண்ணை மூடினால் இசைவெள்ளம் என்னைச் சூழ்கிறது. மிதக்கிறேன்.. மிதக்கிறேன்..

என் மனசுக்கு இதமாய் ஹிந்துஸ்தானி இசையும், புல்லாங்குழலும் அதன் தனி இசையும் எங்கோ ஒரு அத்துவானக் காட்டில் ஒற்றையாய் பறந்து கொண்டிருக்கும் என் மனதில் கேட்கும் இசையாய் சிலிர்ப்பினை உண்டாக்கும். பிறந்து பத்து நாளேயான வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பின் இசை போன்ற அனுபவத்தையும், பரவசத்தையும் தருகிறார் நான்சி அஜ்ரம். என் தாயின் மடியில் தலை வைத்து உறங்கும் அந்த வேளையில் அவளின் விரல்கள் தலைமுடிக்குள் அலைந்து கொண்டிருக்கும் போது உயிரையே தடவும் உணர்ச்சி உருவாகும். அவ்வித உணர்ச்சியினை உண்டாக்குகிறது நான்ஸி அஜ்ரமின் குரல். என் அன்பு மகளின் இதயத்துடிப்பினையே இதுவரை இசைக்கெல்லாம் இசையாக நினைத்திருந்தேன்.என்னைத் தாலாட்ட என் மனைவியின் நெஞ்சின் துடிப்பு ஒன்றே போதுமானதாயிருந்தது. அந்த வரிசையில் நான்ஸி அஜ்ரமின் பாடல்கள் சேர்ந்து விட்டன. நான்ஸி அஜ்ரமை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்.

காதல்... காதல்... காதல்...
காதல் போயின் சாதல்.......... என்றான் பாரதி.

அவன் சொல்ல வந்த அர்த்தம் புரியவில்லை. இன்று தான் புரிந்து கொண்டேன்.

காதலின் வேதனையை நான்ஸி அஜ்ரம் பாடும் தொனி சித்ரவதைகள் எல்லாவற்றிலும் முதலிடத்தைப் பிடிக்கும் என்று என்னுள் உணர நேர்கிறது. சமீபத்தில் ஹாஸ்டல் என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. மனிதர்களைச் சித்ரவதைப் படுத்தும் படம். வேதனை... வேதனை... வேதனை... எழுத்தில் எழுத இயலா வேதனை... படமாக்கியிருக்கும் விதம் மனதில் ரத்தம் சொட்ட வைக்கும். சித்ரவதையின் உச்ச கட்டமாய் சிலிர்த்து நிற்கும் உடம்பு..... கூர்மையான ஊசியை வைத்து நறுக் நறுக்கென இதயத்தைக் குத்தி, இதயத்தில் இருந்து வழியும் சூடான ரத்தம் வழியும் போது உண்டாகும் வலியினை விட உச்சகட்டமானது நான்ஸி அஜ்ரமின் காதல் வேதனைக் குரல்.

காதல் கொண்டுள்ள மனிதன் தான் வேதனை உலகின் உச்சகட்ட வேதனையை அனுபவிக்கிறான்.... ரத்தமின்றி, ஆயுதமின்றி மனிதனை சித்ரவதை செய்யும் காதல் தான் அணு ஆயுதத்தை விட கொடுமையான ஆயுதம் என்பதில் வியப்பேதும் இல்லை.

அன்பன்,
தங்கவேல் மாணிக்கம், கோயமுத்தூர்.

Tuesday, October 28, 2008

நான்ஸி அஜ்ரமின் பாடல் எம்பி3 வடிவில்...

நான்ஸி அஜ்ரமின் பாடலைக் எம்பி3 வடிவில் கேட்க.... கேட்க......

கடவுளின் மொழி:நான்ஸி அஜ்ரம்:சாரு நிவேதிதா

என் இனிய நண்பர், எழுத்தாளர் சாரு நிவேதிதா இன்று காலையில் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார்.

”தங்கம், அடுத்து வரும் கட்டுரைக்கான பாடல் தொகுப்பு இவைகள். அதற்கான வேலைகளை ஆரம்பிக்கின்றீர்களா ?”

எண்ணிப் பார்த்தேன். கிட்டத்தட்ட இருபது பாடல்கள். அட நொக்காமக்கா, இன்னிக்கு பெண்டு நிமிரப் போகுது என்று நினைத்தபடி, பாடல்களை ஒவ்வொன்றாக கேட்கத் துவங்கினேன்.




நான்ஸி அஜ்ரமின் இந்தப் பாடலைக் கேட்டேன். மெய் மறந்தேன். செல் போன் ரிங்காகி விட்டது இந்தப் பாடல். அண்ணனைக் கூப்பிட்டு போனுக்கு ரிங்க் பன்னுங்கள் என்று சொன்னேன். நான்ஸி அஜ்ரம் பாடினாள். காற்றில் மிதந்தேன். மிதந்தேன்...

பசி மறந்தோடியது. குளிக்கும் அறைக்குள் நுழைந்தேன். என்னைச் சுற்றி சுற்றி நான்ஸி அஜ்ரமின் குரல்கள் ஆரவாரித்தன.

குளியலை அரைகுறையாக முடித்து விட்டு வெளி வந்தேன். மனைவி புரூட்டை எடுத்துக் கொண்டு வந்தாள்.

”எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது” என்று சொல்லிய படி கணிணி அறைக்குள் நுழைந்தேன்.

”ஏங்க, பைத்தியம் பிடிச்சிருச்சா உங்களுக்கு“ என்றாள்.

சிரித்தேன். நான்ஸி அஜ்ரமின் குரலைக் கேட்க கேட்க என்னை மறந்தேன். இதோ நான்ஸி அஜ்ரம் தன் காதலனுக்காக பாடிக் கொண்டிருக்கிறாள்.

பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். சாரு அவர்களுக்கு நன்றி...