குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, October 21, 2008

ஊட்டி சென்று வந்த கதை 1

சென்னையில் பில்டர்ஸ் தொழில் பார்க்கும் தம்பியின் அழைப்பு. நாளைக்கு வீட்டுக்கு வருகிறேன். ஊட்டி போகனும். கார் ரெடி பண்ணி வை என்றான். கூடவே அவன் அம்மணியும் வருவதாகச் சொன்னான்.

கோவையில் டிராவலிங் கம்பெனியில் கார் வாடகை பேசினேன். நாள் ஒன்றுக்கு 800 ரூபாய். 12 மணி நேரக் கணக்காம். கிலோ மீட்டருக்கு 6.50 ரூபாய். ஏசி என்றால் ஒரு ரூபாய் அதிகம். டிரைவருக்கு நாள் ஒன்றுக்கு 150 மற்றும் சாப்பாட்டு செலவு நம்முடையது. ஆக நாள் ஒன்றுக்கு 1600+150+100 சேர்த்து 1850.00ரூபாய். அதை விடுத்து கிலோமீட்டருக்கு காசு வேறு. 300 கிலோமீட்டர் தூரத்துக்கு 2250.00 ரூபாய் தனி. மூன்று நாட்கள் 5550ம் 2250ம் சேர்த்தால் 7800 ரூபாய் காருக்கு மட்டும் செலவாகும். அசந்து விட்டேன். அட நொக்கா மக்கா, இங்கே இருக்கும் ஊட்டிக்குச் சென்று வர மூன்று நாளுக்கு கிட்டத்தட்ட எட்டாயிரம் ரூபாயா ?

எனது நண்பர் வேறொரு கார் கம்பெனியை அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கார் கம்பெனியில் வாடகைக்கு கார் எடுத்த விபரத்தைக் கீழே பார்க்கவும். இதயமே நின்று விடும். படித்துப் பாருங்கள். டிராவலிங்க் கம்பெனிகள் எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்று பாருங்கள். இந்தக் கார் கம்பெனியில் கார் எடுக்க வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்ளவும். நம்பர் தருகிறேன். பயன்படுத்திக் கொள்ளவும்.

டாட்டா இண்டிகோ, ஏசி கார். நாள் ஒன்றுக்கு (24 மணி நேரம்) 1450 ரூபாய் வாடகை. டீசல் செலவு நம்முடையது. கார் வரும்போது டீசல் நிரப்பி வரும். காரை விடும்போது டீசலை நிரப்பிக் கொடுக்க வேண்டும். டிரைவர் பேட்டா, சாப்பாட்டு செலவு கிடையாது. இது தான் நான் வாடகை பேசி எடுத்த காரின் வாடகை விபரம். முதல் நாள் பத்தரைக்கு கிளம்பி மூன்றாம் நாள் நான்கு மணிக்கு வீடு திரும்பியதால் வாடகையும் டீசலும் சேர்த்து ஊட்டிக்குச் சென்று வந்த கார் செலவு 3995.00 ரூபாய். கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் மிச்சமானது.

தம்பியும் அவன் மனைவியும் விடிகாலையில் வீட்டில் ஆஜர். டேய் கிளம்புடா என்றான். அடேய் விளங்காத பயலே.. உனக்குதானடா ஹனிமூன் டிரிப். தனியாப் போயிட்டு வா என்றேன். முடியாது என்று மறுத்து விட்டான். சப்ளையர் ஒருவர் மதியம் பதினொன்றரைக்கு சந்திக்க வருவதாக கூறியிருந்தார். எல்லாம் சொல்லிப் பார்த்தேன். முடியாது என்று மறுத்துவிட்டான். மகள், மகன், மனைவி, தம்பி, தம்பி மனைவியுடன் ஊட்டிக்குப் பயணம்.

வழியில் டீ கூட குடிக்கவில்லை. வயிற்றைப் பிரட்டிவிடுமென்று தம்பி தடுத்து விட்டான். இரண்டரை மணி நேரத்தில் ஊட்டியை அடைந்தோம். மிகவும் நல்ல ஹோட்டலாக செல்லுங்கள் என்று டிரைவரிடம் சொன்னேன். அவர் சென்ற இடம் ஹோட்டல் நஹர். காரிலேயே உட்கார்ந்து கொண்டேன். நீங்கள் சாப்பிட்டு வாருங்கள். எனக்கு தயிர்சாதம் கட்டி வாருங்கள். காரிலேயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன். தம்பி விடவில்லை. காரின் பின்புறம் டிக்கியில் மடித்து வைத்திருந்த சக்கர நாற்காலியினை எடுத்து வந்து உட்கார வைத்து ஹோட்டலின் உள்ளே அழைத்துச் சென்றான்.



நான் எங்கும் செல்வது கிடையாது. காரணம் என் உடல் பிரச்சினை. முடிந்த அளவுக்கு மறுத்து விடுவேன். சாருதான் என்னை முதலில் வெளிக் கொணர்ந்தவர். ஒரு நாள் சாரு என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது தங்கம், வீல்சேர் இருக்கிறதா உங்களிடம் என்று கேட்டார். இல்லை சார். நான் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்றேன். அடப்பாவி என்று அதிர்ந்தார். இதை அவர் நண்பர் நிக்கியிடம் சொல்லி இருக்கிறார். அவர் உடனே செக்கை நீட்டியிருக்கிறார். அடுத்த ஒரு வாரத்தில் மனுஷ்யபுத்திரனிடமிருந்து சக்கர நாற்காலி வந்திறங்கியது.

இப்படிப்பட்ட வசதிகள் இருப்பது தெரியாமல் கல்லூரிப்படிப்பின் போது தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரம் கல் ரோட்டில் தவழ்ந்து சென்று படித்தது நினைவுக்கு வந்தது. மழை பெய்தால் சகதியில் தான் தவழ்ந்து போவேன். கட்டிடத்தின் வெளிப்புறமாய் இருக்கும் பைப்பில் கால்களையும், கைகளையும் கழுவிக்கொண்டு மாடி ஏறுவேன்.

சக்கர நாற்காலி வந்தவுடன் எனக்கு கால் முளைத்து விட்டதாய் கருதினேன். அதற்கு காரணம் சாரு நிவேதிதாவும், அவரின் நண்பர் நிக்கியும் மனுஷ்யபுத்திரன் ஆகிய மூவரும். சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்த போது சக்கர நாற்காலி வெகுவாக உதவியது. ஊட்டியில் சக்கர நாற்காலியின் பயனால் போட்டிங்க், வாக்கிங் என்று இயற்கையை என்னுள் உணர முடிந்தது. எங்கு சென்றாலும் சாருவும், நிக்கியும், மனுஷ்யபுத்திரனும் கூடவே வருவதாகவே இருக்கும். சாரு, நிக்கி மற்றும் மனுஷ்யபுத்திரன் மூவருக்கும் நன்றிகள்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். சாப்பாட்டில் உப்பும், மணமும் இருந்தது. சுத்தம் இருந்தது. சுவை எங்கே??? தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அது தான் பெரிய ஹோட்டலின் நிலமை போல. ஊறுகாய் மட்டும் சுறுக்கென இருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மனைவி கண்ணில் ஜாடை காட்டினார். அடிப்பாவி. அதற்குள்ளாகவா ? என்று நினைத்து கண்ணாலேயே மிரட்டினேன். அருகில் தம்பி உடகார்ந்திருந்தான். எதிரில் தம்பி மனைவி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் மனைவியை மிரட்டிதை தம்பி மனைவி பார்த்து விட என்ன ? என்ன ? என்று விசாரிக்க அப்போதான் எனக்கு உண்மை தெரிந்தது. எனக்குப் பின்னாலே ஒரு ஜோடி உட்கார்ந்து இருந்தது. அந்தப் பெண் சரியான அழகு. மாநிறத்தில் கைகளில் மெஹந்தி போட்டு பார்க்க படு அசத்தலாக இருந்தாள் போலும். என் மனைவிக்கு அவளை உடனடியாக என்னிடத்தில் காட்ட வேண்டும் என்ற ஆவல். விஷயத்தைக் கேள்விப்பட்ட நான் மெதுவாக (சபை நாகரீகம் !) திரும்பினேன். அந்தப் பெண்ணின் நெஞ்சின் மீது பார்வை பதிந்தது. திக்கென்றது. இதென்னடா வம்பு பார்வை அங்கே போவுது என்றபடி தலையைத் திருப்பி விட்டேன். அந்த அம்மணி மார்பைக் காட்டும்படி டிரெஸ் செய்திருந்தார். பார்ப்பவரின் பார்வை அங்கே செல்வது இயல்பு. நாகரீகம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள் என்னென்ன விளைவுகளை உண்டு பண்ணுகிறது என்று நினைத்தபடி,

மெதுவாக தம்பியின் காதைக் கடித்தேன். அவன் அலட்டிக் கொள்ளாமல் திரும்பிப் பார்த்தான். சென்னையில் இருக்கிறான் அல்லவா ? இதைவிட எதையெதையோவெல்லாம் பார்த்திருப்பான் போல. சாப்பிட்டு முடித்த பின்னர்
லாட்ஜில் இரு அறைகள் எடுத்தோம். சற்று நேரம் ஓய்வுக்குப் பின்னர் போட் ஹவுஸ் சென்றோம். அங்கு மக்கள் கூட்டம். போட்டிங் வர மறுத்தேன். தம்பி விடவில்லை. மறுபடி வீல்சேரில் அமரவைத்து போட்டிங் அழைத்துச் சென்றான். அவ்விடத்தில் என் தகப்பனாய் மாறி விட்டான் என் தம்பி. மகனும், மகளும் அருகருகே நடந்து வந்தனர். இடது பக்கம் மனைவி, வலது பக்கம் தம்பி மனைவி. சேரைத் தள்ளியபடி தம்பி. தம்பியின் பின்புறமாய் டிரைவர். மக்கள் எங்களை வேடிக்கை பார்த்தனர்.

தொடரும்.............

Saturday, October 18, 2008

சூர்யவம்சம் - பாடல்

எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலாசிரியரும், இயக்குனரும், இசையமைப்பாளரும் ஒருங்கே ஒரு கோட்டில் இணைந்ததன் விளைவு இந்தச் சுவையான பாடல்.

Saturday, October 11, 2008

கந்தசாமி முத்துவைக் கலங்க அடித்த கதை

முக்கியமான வேலையாக வெளியில் சென்ற போது எதிரே வண்டியில் கந்தசாமி.

”எங்கேப்பா தங்கம்?”

“வண்டி சரி பண்ணனும், அதான்“ இழுத்தேன்.

”சரி நானும் வருகிறேன்“ சொல்லியபடி என்னுடன் மெக்கானிக் ஷாப்புக்கு வந்தார்.

மெக்கானிக் முத்து தீபாவளிக்கு வாங்கிய பேண்ட் சர்ட்டினைக் காட்டினார். மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்தவனாகிய அடியேன் வழக்கம்போல விலை பற்றிக் கேட்க,

“ஜீன்ஸ் 1200, சர்ட் 800 “ என்றார் முத்து.

அசந்து போனேன். 1200 எனது ஒரு மாத நெட் வாடகை. 800 ஒரு மாத மளிகை சாமான் பட்ஜெட். கந்தசாமி என் முகத்தைப் பார்க்க, நானும் பார்க்க பெருமூச்செறிந்தேன்.

”தங்கம், உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” வில்லங்கத்தை அங்கேயே ஆரம்பித்தார் கந்தசாமி.

ஏதாவது வில்லங்கமா சொல்லி ஏதாவது பிரச்சினையைக் கொண்டு வந்து விடப்போகிறார் என்றெண்ணி பயந்து கொண்டே ஈனஸ்வரத்தில் “ சொல்லுங்க”

”இந்த ஜீன்ஸ் விலை 300 ரூபாய் இருக்கும். சர்ட்டின் விலை 250 ரூபாய் இருக்கும். ஆனா பாரு, 1450 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குறாங்க மக்கள்” என்றார்.

அதிர்ச்சியாகி ”என்ன கந்தசாமி, ஒரேயடியாய் கபடி ஆடுறீங்க” என்றேன்.

இதைக் கேட்ட முத்துவோ அதிர்ச்சியில் சிலையாகி விட்டிருந்தார்.

”ஆமாப்பா, நான் டெக்ஸ்டைல் துறையில் வேலை பார்த்தது தான் உனக்குத் தெரியுமே. ஐந்து டாலர், எட்டு டாலருக்கு மேலே ஜீன்ஸ் பேன்டெல்லாம் கிடையாதுப்பா. அவ்வளவு தான் அடக்க விலை. வெளி நாட்டுக்கு இன்வாய்ஸ் அனுப்பும்போது பார்த்திருக்கிறேன். சரக்கு அனுப்பும் கம்பெனிக்கு 20% லாபம் சேர்த்துதான் விலை குறிப்பிட்டிருப்பார்கள்”

“அப்போ, 250 லிருந்து 400 வரைதான் என்று சொல்கின்றீர்களா? “ என்றேன்.

”ஆமாப்பா. அவ்வளவுதான் விலை. பிராண்டுக்கு என்று ஒரு விலை சேர்த்து வெளி நாட்டுக்காரன் கொள்ளை கொள்ளையா அடிக்கிறான்கள். நம்ம ஊரு ஜவுளி கடையெல்லாம் நாளுக்கு ஒரு நடிகையை வைத்து விளம்பரம் செய்யுறாங்க. அதுக்கெல்லாம் எப்படி காசு வரும். இதோ இப்படித்தான்”

நம்பமுடியாமல் அவரையே பார்த்தேன்.

முத்துவோ புலம்ப ஆரம்பித்தார். ”அழுக்கு உடையோடு கஷ்டப்பட்டு, ஸ்பேனர் பிடித்து உழைத்துச் சம்பாதிக்கிற காசையெல்லாம் இப்படித் திருடுறாங்களே” என்று புலம்ப ஆரம்பித்தார்.

வந்த வேலை முடிந்த திருப்தியில் கந்தசாமி என்னை மெக்கானிக் ஷாப்பில் விட்டு விட்டு கிளம்பினார்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிவிட்டது முத்துவின் நிலை.

Friday, October 10, 2008

கந்தசாமியுடன்(10.10.2008)

கந்தசாமி என்ற எனது நண்பர். அடிக்கடி விதண்டாவாதமாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். அவரின் பேச்சினைக் கேட்டால் ரத்தம் கொதிக்கும்.

ஆனால் நான் அப்படி இல்லை. பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டு எனக்கு என்று இருக்க வேண்டுமென அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். என்ன அர்த்தமென்றால், சில பாம்புகளுக்கு தலையில் விஷம் இருக்குமாம். சில பாம்புகளுக்கு வாலில் விஷம் இருக்குமாம். நடுத்துண்டில் விஷம் ஏதும் இருக்காதாம். அதைச் சாப்பிட்டால் பிரச்சினை இருக்காது. இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் இருக்குமிடத்திற்கு தகுந்த வாறு மாறிக்கொள்ள வேண்டுமென்பது தான். அய்யா அப்படித்தான். ஆனால் கந்தசாமி இருக்காரே அவர் ஒரு விதமான கேரக்டர். வேலை பார்ப்பது ஒரு மில்லில். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். பேச ஆரம்பித்தாப் எப்போதும் மற்றவர்களை குறைச் சொல்லிக்கொண்டிருப்பார். விதண்டாவாதமாக ஏதாவது சொல்லி வைப்பார். வேறு வழி. எனக்கு எழுத வராது என்பதால் அவர் சொன்ன சில விதண்டாவாதங்களை நினைவுக்கு கொண்டு வந்து எழுதி வைக்கிறேன். பிடித்திருந்தால் படித்து வைக்கவும்.

கந்தசாமியிடம் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவ்வளவும் அத்துப்படி. விஷய ஞானமுள்ளவர். அவருக்கு இப்போதைய தலையாய பிரச்சினை மின்சார வெட்டு. என்னைப் பார்க்கும்போதெல்லாம் கொந்தளிப்பார்.

” என்னப்பா இது. இப்படியெல்லாம் பேசுகிறாய் “ என்றால் போதும் தொலைந்தேன். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். எதிர்த்து ஏதாவது சொல்லபோனால் கொலை வெறியுடன் கருத்துக்கள் அம்புகளாய் சீறும். இப்படிப்பட்ட ஆளிடம் நட்புத் தேவையா என்றால் எனக்குத் சொல்லத் தெரியவில்லை. மனிதர் ரொம்ப நல்லவர். பேச்சுதான் ஒரு மாதிரியாய் இருக்கும்.

அப்படித்தான் நேற்று அவரைச் சந்தித்த நேரத்தில், ஒரு விஷயம் சொன்னார். ”தமிழ் சமூகத்திற்கு சுரனையே இல்லை”.

”என்னப்பா திடீரென்று இப்படி பாய்கிறாய் ? “

“ஆமாம் தங்கம். தமிழகம் என்றால் சினிமா. சினிமா என்றால் தமிழகம். சரிதானே ?”

ஏதோ வில்லங்கமாக வரப்போகிறது என்ற யோசனையுடன் ஆமோதித்து வைத்தேன்.

“பின்னே என்னப்பா, கிழவர்கள் காதலையெல்லாம் ரசிக்கிறார்கள் தமிழர்கள். அதுவும் பொருந்தாக் காதல். கிழவனும் குமரியும் “ என்றார்.

“ ஏய்... நீ எங்கே வருகிறாய் என்று தெரிகிறது. இப்படியெல்லாம் சத்தமா பேசி வைக்காதே.. பின்னி பெடலெடுத்து விடுவார்கள்”

சிரி சிரியென்று சிரித்தார். மனதுக்குள் என்னனென்ன நினைத்தாரோ தெரியவில்லை. நான் மெதுவாக அவரிடமிருந்து கழண்டு கொண்டேன்

Wednesday, October 8, 2008

உயிர்கள் படும் வேதனை

எனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சொன்ன சில விஷயங்கள் என் மனதை அம்பு போல் துளைத்து விட்டது. விஷயம் இதுதான். மாட்டுச் சந்தைகளில் மாடுகள் ஏலம் போடுவது பெரிய திருவிழா மாதிரி நடக்கும். மீடியாக்களில் செய்திகள் வெளியிடுவார்கள். அந்த மாட்டுச்சந்தைகளில் மாடுகளை மனிதர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அதை வார்த்தைகளில் சொல்வது எளிதல்ல. சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன்.

1. பல் போன மாடுகளுக்கு, இறந்த மாட்டின் பற்களை எடுத்து வந்து, கோணி ஊசியால் துளை போட்டு அந்த பற்களை பதிப்பார்களாம். மாட்டின் விலை பற்களை வைத்துக் கணக்கிடுவார்கள்.

2. மாட்டின் கால்களை கட்டி போட்டு விட்டு அதன் வாலை பிடித்து கடித்து வைப்பார்கள் முழுவதும். மாட்டை தொட்டவுடன் துள்ளுவதற்காக. ஏனென்றால் மாடு இளமையாக இருப்பதாக காட்டி அதிக விலை விற்க வேண்டுமென்பதற்காக.

3. முட்டும் மாட்டின் கொம்புகளில் விடாமல் அடித்துக்கொண்டே இருப்பார்கள். வலி தாங்காமல் அந்த மாடு முட்டாது.

4. மாட்டின் வயிறு புடைத்தது போல் இருக்க, மோட்டார் மூலம் தண்ணீரை வலுக்கட்டாயமாக செலுத்துவார்கள். புடைத்த வயிறுடன் காட்ட வேண்டுமென்பதற்காக.

5. மாடு வாங்கும் போது சுழி முதன்மையாக இருக்கும். வேண்டாத சுழி இருக்கும் மாட்டை, கட்டி போட்டு நெருப்பை பத்த வைத்து கோதுமை மாவின் உதவியால் சுழி இல்லாதவாறு செய்து விடுவார்கள்.

மாடாய் பிறந்து வளர்ந்து மனிதனுக்கு எல்லா உதவிகளையும் செய்து, அவன் செய்யும் கொடுமைகளை எல்லாம் தாங்கி அதன் பின்னர் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு அவன் வயிற்றுக்குள்ளே பிரியாணியாக செல்லும் மாடுகளை நினைத்தால் ...

இதை விடவா மனிதன் துன்பப்படுகிறான்... சொல்லுங்கள்...

இலவச புத்தகங்களின் தொகுப்பு

ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, எப்போது வருமென்று காத்திருந்து புத்தகங்கள் படித்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு. உலக மொழிகளில் வெளிவந்த சில புத்தகங்களை இந்தத் தளத்தில் வரிசைப்படுத்தி இருக்கின்றனர். ஆங்கிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபத்திரண்டாயிரம் புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழ் மொழியில் ஒன்றும் இல்லை. படிக்க விரும்பும் நண்பர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் டவுன்லோடு செய்து பின்னர் படித்து வையுங்கள்.

http://www.gutenberg.org

Monday, October 6, 2008

உங்களில் யார் பிரபுதேவா ?

ஸ்ரீதர் - டான்ஸ் மாஸ்டரின் மேற்பார்வையில் உங்களில் யார் பிரபுதேவா நடனப் போட்டிக்குத் தேர்வானவர்களுக்கு நடனப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு துரதிர்ஷடமான நேரத்தில் விஜய் டிவியைப் பார்க்க நேர்ந்தபோது கண்களில் பட்டது இந்தக் காட்சி.

சல்சா என்பது ஒரு வகை நடனமாம். மேல் பகுதி உடம்பு ஆடாமல் இடுப்பு மட்டும் அசைய வேண்டுமாம். மைக்கில் இன்ஸ்டரக்‌ஷன் கொடுத்தவாறு ஆடிக்காட்டினார் ஒருவர். கிட்டத்தட்ட நூறு ஆண்களும் பெண்களும் இருக்கும். தனித்தனியாக ஆடினர். ஸ்ரீதர் மைக்கில் அடுத்து யாருக்கு யாரெல்லாம் பிடிக்குமோ அவரவர்கள் ஜோடியாய் நின்று ஆட வேண்டும் என்றார்கள். ஹி..ஹி... அவனவன் கிடைத்தது சான்ஸ் என்று இடுப்பில் ஒரு கை. தோளில் ஒரு கை என்று அணைத்துப் பிடித்தவாறு ஆட ஆரம்பித்தார்கள். பின்புறங்கள் அழகாக ஆடிக்கொண்டிருந்தன. அதில் ஒரு சிறுவன் வேறு மாட்டிக் கொண்டான். வெட்கத்தில் அவனுக்கும் ஒரு ஜோடி கிடைக்க இடுப்பை ஆட்டினான்(டான்ஸ்ப்பா!).

விடிகாலையில் எழுந்து குளிரில் குளித்து மட மடவென மடிப்புக் கலையாத சட்டைப் போட்டு சைக்கிளில் அரக்கப் பரக்க மிதித்து அவள் வருவதற்கு முன்பே சென்று காத்திருந்து அவள் வரும் வரை அவளுக்காக உருகி உருகி வந்தவுடன் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கிறாளா என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் அவளைப் பார்த்தும் பார்க்காதவாறு அவளையேக் கவனித்து காதல் செய்து, கட்டிலில் கண்ணாமூச்சி விளையாடிய காலமெல்லாம் மலை ஏறிப் போச்சு.

சின்னத்திரை மீடியாக்கள் இன்று ஜோடிகளை சேர்த்துச் சேர்த்து ஆட விட்டுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் எனக்கு ஒரு எழுத்தாளர் சொன்ன கருத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

அந்த எழுத்தாளர் பெயர் : ஜேம்ஸ் ஜாய்ஸ்
நாவலின் பெயர் : A PAINFULL CASE
கருத்து : ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உறவு தவிர்த்து வெறும் சிநேகிதம் மட்டும் சாத்தியமில்லை.
உதவி : திரு ஆர்பி.ராஜநாயஹம்

உடனே அம்மா, அக்கா, தங்கை என்று ஆரம்பிக்க கூடாது. மனசுக்கு பட்டுச்சு எழுதிவிட்டேன். குறிப்பு : எனக்குள் இருக்கும் கலாச்சாரக்காவலனின் ஆசை இது. வேறு வழியின்று எழுதி தொலைக்க வேண்டிய கட்டாயம். எழுதிவிட்டேன்.

அன்பு மகனுக்கு கடிதம் (7) தேதி : 5.10.2008

ரித்திக், நீ முதன் முதலாய் எங்களை விட்டு விட்டு உனது மாஸ்டருடன் கராத்தே காம்படீஷனில் கலந்து கொள்ள செல்கிறாய். வாழ்த்துக்கள். அந்தக் குழுவிலேயே நீதான் சிறுவன். உன்னை பனிரெண்டு வயதுக்குள்ளே இருப்போருடன் போட்டியிட வைப்பார்கள். வெற்றி என்பது உலகில் வேறு வகையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். நீ கராத்தே பழக வேண்டுமென்று நினைத்தற்குக் காரணம் உனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் வரவேண்டுமென்பதற்காகத்தான். தற்காப்புக் கலையில் நீ சிறந்து விளங்க வேண்டுமென்பதற்காகத்தான்.




ஆறு வயதில் உனக்கு பல அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதன் முதலாய் உன்னை மாஸ்டருடன் அனுப்பி வைத்தேன். உன்னை எல்லோரும் பாராட்டினார்கள். மெத்த மகிழ்ச்சி.

சமூகத்திற்கு சிறந்த சேவை செய்ய வேண்டும். உன்னால் இவ்வுலகம் பயன்பெற வேண்டும். பெற்றால் இப்படிப் பட்ட பிள்ளையைப் பெற வேண்டுமென்று உலகே சொல்ல வேண்டும். அப்போது தான் நானும், உன் அம்மாவும் பட்ட துன்பங்கள் தீரும்.

வாழ்த்துக்கள் ரித்தி...

அன்பு அப்பா

Wednesday, September 24, 2008

இந்தியாவில் நடந்த பார்ட்டி ஒன்றின் சில புகைப்படங்கள்

யூ டியூப்பில் பாடல்களை தேடிக்கொண்டிருந்த போது, பெங்களூரில் மிகப் பெரிய கம்பெனி ஒன்றினால் நடத்தப்பட்ட பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்று கிடைத்தது.

சும்மா பார்த்து வையுங்க...

ஆத்துக்குள்ளே...

பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள். நானும் என் சின்னம்மாவின் பையனும் மாலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்றோம்.
அன்று பார்த்து, ஆற்றில் தண்ணீரை நிறுத்தி விட்டிருந்தார்கள்.

சரின்னு குளத்தில குளிக்கலாம்டான்னு சொல்லிகிட்டு ஆற்றின் படியில் உட்கார்ந்தேன். ஆற்றில் அங்கங்கே தண்ணீர் குளம்போல கிடந்தது. தண்ணிக்குள் எதுவோ கிடப்பதுபோல தோன்ற டேய் அங்கே பாருடா தண்ணிக்குள்ளே என்னமோ கிடக்குன்னு தம்பிக்கிட்டே சொல்ல,
அண்ணே பாம்பா இருக்கப்போவுதுன்னு சொன்னான். பாம்பு தண்ணிக்குள்ளே என்னடா பன்னும். வேற என்னமோடான்னு சொல்ல, இருவரும் ஆற்றுக்குள் இறங்கினோம்.

சற்றுத் தொலைவிலேயே நின்று கொண்டு உத்து உத்துப் பாத்துக்கிட்டு இருக்கும்போது மீனு ஒன்னு துள்ளி விழுந்துச்சு. பாலு(தம்பி பெயர்) என்னன்னு பாத்துடனும்டான்னு சொல்லிக்கிட்டே யோசிச்சோம். மெதுவாக அந்தப் பள்ளத்துக்குப் பக்கத்துல இன்னுமொரு பள்ளத்தைத் தோண்டி வாய்க்கால கையால வெட்டி தண்ணிய வடிய விட்டா அங்கே ஒரு மீன் புதையலே இருந்தது.

அள்ளுடா அள்ளுடான்னு குளிச்சிட்டு துவட்ட வச்சிருந்த துண்டில மீனை அள்ளிக் கட்டினோம். இரண்டு துண்டுகளும் நிறைஞ்சிடுச்சி. குளிக்கிறதாவது ஒன்னாவது. நேரா சைக்கிளை விட்டோம் வீட்டுக்கும்.

அம்மாட்டே கொடுத்தோம். எங்கேடா புடிச்சிட்டு வந்தீங்கன்னு அம்மா கேக்க விபரத்தை சொல்லிட்டு மீண்டும் ஆத்துக்குப் பக்கத்தில இருந்த குளத்தில குளிக்க வந்தோம். பார்த்தா ஆத்துக்குள்ளே ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தாங்க.

குளத்தில கண்ணு செவக்க செவக்க ஆட்டம் போட்டு விட்டு வீட்டுக்கு வந்தால் சுடுசோறு, மீன் குளம்பும் தயரா இருந்துச்சு.

குடத்தடியில இருந்த மாமரத்து மாங்காயும், மாங்காய் கொட்டையும் குளம்புக்குல மிதக்க, காரமும், புளிப்புமாய் இரண்டு தட்டு சோத்தை வயித்துக்குள்ளே தள்ளினோம்.

அன்று சாப்பிட்ட மீன் குழம்பை நெனச்சு நெனச்சு நெஞ்சு கனக்கிறது.