குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 9, 2008

மேகமும் மறைக்க முடியுமா சூரியனை ?

சாரு நிவேதிதா மூலம் அறிமுகமானவர் ராஜநாயஹம். அவரைப் பற்றி லியர் மன்னன் என்ற கட்டுரையினை www.charuonline.com ல் எழுதினார் சாரு. எனது MARK ADMAN என்ற அட்வர்டைசிங் கம்பெனியின் வேலைக்காக ராஜ நாயஹத்தை அனுகலாம் என்று கருதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரின் பேச்சு என்னை ஏதோ ஒரு வகையினில் ஈர்த்தது.

சந்திக்க வேண்டுமென்ற ஆவல் மனதினுள். நேற்று அதற்கான நேரம் கிடைக்க, எனது நண்பருடைய மாமனாரின் காரை எடுத்துக் கொண்டு திருப்பூருக்குப் பயணம் செய்தேன். கையில் ஹெச்பியின் டச் ஸ்கீரின் லேப்டாப். டாட்டா இண்டிகாமின் பிளக் அண்ட் சர்ப் இணைய கனெக்‌ஷன். பென் டிரைவுடன் அவரை சந்தித்தேன். ஆனால் என் செல்போன் நோக்கியா 1100. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

திருப்பூர் சென்று சேரும் வரையில் ஐந்து தடவை போன் செய்து விட்டார். அவரது பையன் கீர்த்தி எதிரில் வந்து வழிகாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ராஜ நாயஹம் காரில் இருந்து முதன் முதலாய் பார்த்தேன். அசல் ஹீரோ தான். வயசு என்னவென்றே கண்டு பிடிக்க முடியவில்லை. அது எனக்கு தேவையுமில்லை. அவரின் டிரஸ்ஸிங்க் சென்ஸ் – என்னை ஒரு நிமிடம் அவரின் மேல் பொறாமை கொள்ளச் செய்து விட்டது.

சரளமான பேச்சு. புதிய விஷயங்களை கண்டால் ஆச்சரியப்படுவது. குடும்ப விஷயம் மற்றும் இன்ன பிற பேசினோம். நான் எதற்கு அவரைப் பார்க்கச் சென்றேனோ அதை மறந்து விட்டேன். பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சாப்பாடு தயார் சாப்பிடலாம் என்றார்கள் ராஜ நாயஹத்தின் துணைவியார்.

அதற்கு முன்பு லேப்டாப்பை ஆன் செய்து அவரையும் என்னையும் சேர்த்து படம் எடுத்துக் கொண்டேன். புகைப்படம் ஒன்றினையும் எடுத்துக் கொண்டேன்.
(நானும் தமிழன் தான் என்பது உங்களுக்கு நினைவுக்கு வருவது எனக்கு தெரிகிறது. என்ன செய்ய ? பழக்க தோஷம் விடுமாட்டேன் என்கிறது). லேப்டாப்பை பார்த்து அவருக்கு ஒரே ஆச்சரியம் தான். சின்னக் குழந்தை போல ஆச்சரியம் அடைந்தார்

தமிழில் பிளாக் இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றார். யாகூவில் மட்டும் பிளாக் இருப்பதாகவும் சொன்னார். நான் தமிழில் பிளாக் தயார் செய்து தருகிறேன் என்றேன். அப்படியா என்று ஆச்சரியப்பட்டார். இதென்ன பிரமாதம் என்று சொல்லியபடி சரியாக இருபது நிமிடத்தில் அவருக்கான பிளாக்கை உருவாக்கினேன். www.rprajanayahem.blogspot.com மனிதருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்படி ஒரு குதூகலம் முகத்தில். ஏதேதோ கேள்விகள் கேட்டார். சொன்னேன். பிறகு சாப்பாடு.

மட்டன் வறுவல் – எங்க வீட்டு அம்மனி செய்வதைப் போல வெகு டேஸ்ட். சாம்பார் ( அவரைக்காய் ), ரசம் என்ன ஒரு சுவை.. வாழை இலையில் சூடான சாதத்துடன் அப்படி ஒரு வித்தியாசமான கலவையுடன் நிறைவான சாப்பாடு. நான் அதிகம் சாப்பிடமாட்டேன் என்பதால் அளவோடு நிறுத்திக் கொண்டேன்.

நானோ பிசினஸ் பேசுபவன். என் நேரமும் அதே சிந்தனையாக இருப்பவன். அவரோ இலக்கியவாதி. அவரின் மூச்சே இலக்கியமாகத்தான் இருக்கும். மிக நன்றாக பாட்டுப் பாடுவார் என்று சொன்னார். தினமலரில் அவரின் பேட்டி பார்த்தேன். கி.ராஜநாரயணன், அசோகமித்திரன், கோணங்கி, சாரு நிவேதிதா என்று பலராலும் பாராட்டப்பட்டவர். வெளி நாட்டு இலக்கியத்தில் அவரின் அறிவுத்திறன் உச்சம். நானோ அவரின் உலகத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதவன். இருப்பினும் எனக்கேற்றவாறு பேசினார் அவர்.

இப்படி எல்லாம் நல்ல மனிதர்கள் உலகில் வாழ்கிறார்கள் என்று அவரைச் சந்தித்த பின்புதான் அறிந்து கொண்டேன்.

அவரைக் காணமல் போக வைக்க பிரமப் பிரயத்தனங்கள் நடக்கின்றன என்று அவரின் பேச்சு மூலம் தெரிந்து கொண்டேன். இலக்கிய உலகில் மிக முக்கியமான் இடத்தில் இருக்கும் அவர் சரியான ஆதரவு இன்றி வாடுபவர். இன்றைய உலகில் இணையம் இன்றி வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. அதன் பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் இலக்கியவாதி அவர்.

பூப்போல பாதுகாக்கணும் என்று நினைத்திருக்கிறேன். அவரின் எழுத்துக்களை உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களிடம் சென்று சேர்க்க வேண்டுமென்பது என் ஆவல். முயற்சிகள் ஆரம்பித்து விட்டன. விரைவில் புதுப் பொலிவுடன் RPராஜநாயஹத்தின் எழுத்துக்கள் இணைய உலகில் பைனரி எண்களாய் டிஜிட்டல் வடிவத்தில் மிதந்து கொண்டிருக்கும்.

தமிழ் இலக்கிய உலகில் அவருக்கான தடம் மிக அழுத்தமாகப் பதிக்கப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

Thursday, June 5, 2008

ஏமாளி மக்களா நாம் ?

பணவீக்கம் என்பது என்ன ?

கடந்த வருடம் இதே தேதியில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருள் இந்த வருடம் 110 ரூபாய் விற்றால், 10% பண வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். வெளி நாட்டு இணையதள செய்தி ஒன்று இந்தியாவின் பணவீக்க விகிதம் 10 சதவீதத்தை தொட்டு விட்டதாக சொல்கிறது. ஆனால அரசு 7.8% என்று சொல்கிறது. எது உண்மை ? செய்தி சொல்லுவதா ? இல்லை அரசு சொல்லுவதா ? தெரியவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலை இப்போது அதிகப்பட்சமாக உயர்ந்து இருக்கிறது. இனிமேலும் பணவீக்க விகிதம் உயரத்தான் போகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. காங்கிரஸ் அரசு ஓட்டு பெறுவதற்காக விலையேற்றத்தை தள்ளி வைத்து விட்டு, கர்நாடகத்தில் தோற்றபின் அதிரடியாக விலையேற்றம் செய்கிறது. யாருக்கு இப்போ நஷ்டம்? ஒரு சாதாரண ஓரளவு படித்த குடும்பப் பெண் நிதி நிலைமைக்கு ஏற்ப செலவை சரி செய்வாள். அது கூட தெரியாமல் சரியான நேரத்தில் விலையேற்றாம் செய்ய மறுத்து விட்டது காங்கிரஸ் அரசு. பலன்... கடுமையான விலையேற்றம். அடுத்த ஆட்சி பிஜேபி தான் என்று காங்கிரஸ்காரர்கள் கட்டியம் செய்து அதன் படி நடக்கின்றார்கள்.. வரட்டும் .. பிஜேபி.... அவர்களாவது ஏதாவது செய்கிறார்களா என்று பார்க்கலாம்.

அரசின் அடுத்த கேடு கெட்டதனம் ஒன்று இருக்கிறது. அதைச் சொன்னால் அதிர்ச்சி தான் வரும். இந்தச் செய்தியினை நான் ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்து அதிர்ந்தே போனேன். அரசின் இந்த கேடு கெட்ட தனத்துக்கு அளவே இல்லையா... எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா ? அதுவும் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் தான் அடிக்கின்றார்கள். என்ன அது என்று கேட்க தோன்றுகிறது அல்லவா ? சொல்கிறேன்... கேளுங்கள்....

ஒரு லட்ச ரூபாயை பேங்கில் போட்டால் வட்டி வருஷத்துக்கு 8500 ரூபாய் தருகிறது வங்கி. இந்த வட்டிக்கு 1% வரி போடுகிறது அரசு. சரி அதனால் என்ன என்கின்றீர்களா. இதே பணத்தை பங்குச் சந்தையில் போட்டால் வரும் வருமானத்துக்கு வட்டி இல்லை. இது எப்படி இருக்கிறது பாருங்கள்.. பண முதலாளிகளுக்கு வரும் வருமானத்தில் வட்டி இல்லை. மிடில்கிளாஸ் மக்களின் பாடுபட்டு சேர்த்த பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு. எரிச்சலா இல்லை உங்களுக்கு....

மிடில்கிளாஸ் மக்கள் யாராவது பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வார்களா.. மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பணம் பாதுகாப்பாய் இருக்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு அடாவடியாக அரசு மிடில் கிளாஸ் மக்களின் தலையினை உருட்டி சம்பாதிக்கிறது. கோடிகளில் புழங்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலாளிகள் வரிப்பணம் கட்ட வேண்டாமாம். வாயையும் வயிற்றினையும் கட்டி காசு சேர்த்து வைக்கும் மிடில்கிளாஸ்ஸின் பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு...

எதற்கு என்று கேட்கின்றீர்களா ? அரசியல்வாதிகளின் சம்பளத்தை உயர்த்தவும், சட்டசபையினிலும், நாடாளுமன்றத்திலும் கூச்சலும் குழப்பமும் செய்யவும் தான். ஆனால் படிக்காசு எல்லாம் பத்திரமாக அவர்களுக்கு சென்று சேர்ந்து விடும்.

கட்டிடம் கட்டும் சித்தாளின் கூலி, வயலில் வேலை பார்க்கும் பெண்ணின் கூலியினை உயர்த்த யாராவது இதுவரை குரல் கொடுத்து இருப்பார்களா ? சொல்லுங்கள்.... ப

பணவீக்கம் அதிகமானால் அதிகச் செலவு செய்ய வேண்டுமே ? என்ன செய்வது... சம்பளத்தில் பண வீக்கத்துக்கு ஏத்தவாறு அதிகம் கொடுப்பார்களா ? கேளுங்கள் ? யாராவது வாயைத் திறக்கனுமே ? அரசியல் வாதிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்..

பணவீக்கம் உயர்ந்தால் பேங்கில் போடப்படும் பணத்துக்கும் 7.8% பணவீக்கம் விகிதப்படி பணம் கொடுத்தால் அல்லவா பொதுமக்கள் சமாளிக்க முடியும். இலலையெனில் பணவீக்க விகிதத்துக்கு ஏற்றபடி சம்பளமும் உயர்த்தப்பட வேண்டும் அல்லவா ? யார் தான் செய்வார்கள் ?

சொல்லனும்னு தோணுச்சு சொல்லிவிட்டேன்...

Friday, May 30, 2008

கள்ளும் நானும்.....

இந்தக் கள் இருக்கே.... அதன் சுவையும் போதையும் ஒரு அலாதியான விஷயம்.

சின்ன வயதில் எங்க வீட்டு வேலைக்காரர் அம்மாவிடம் என்னை தோப்புக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு கிடைத்த பின்பு, மாட்டு வண்டியில் பயணம் செய்தோம். தோப்பில் 20 தென்னை மரங்களும், 30 பலா மரங்களும் இடையிடையே கொய்யா மரங்களும் இருக்கும். வடக்குப் பக்கமாக ஒரு அகன்ற கேணி ஒன்றும் உண்டு. அதில் மாடுகளைக் கட்டி ஏற்றம் இறைக்க ஆரம்பித்தார் ஜெயராஜ். பெரிய அகன்ற பாத்திரம் போல ஒரு தொட்டியினை கிணற்றுக்குள் இறக்கி தண்ணீரை நிறைத்து அதை மேலே இழுத்து அடிப்புறம் பிளாஸ்டிக் டியூப்பினை கயிற்றால் இழுத்தால் தண்ணீர் வாய்க்காலில் கொட்டி அப்படியே சென்று நிலக்கடலை பயிறுக்குள் பாயும். பார்க்க பார்க்க பரவசமாய் இருக்கும். வாய்க்காலின் மேல் உட்கார்ந்து கொண்டு அந்த தண்ணியில் கையை வைத்தால் சிலீரென்று இருக்கும். அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும்.

அப்போது தென்னையில் கள் இறக்க ஆள் ஒருத்தர் வந்தார். ஜெயராஜ் ஓடிப்போய் ஒரு மரத்துக் கள்ளினை வாங்கி வந்து,
” இதைக் குடிடா “ என்று சொல்ல நான் மறுத்தேன்.
”அம்மா அடிக்கும் “
” உடம்புக்கு நல்லதுடா தங்கம். கொஞ்சமா குடி “
“ வேணாம் ஜெயராசு... ”
“ அம்மாட்டே நான் சொல்லுறேன். நீ குடிச்சுப்பாரு “
தயக்கத்துடன் கள்ளை வாங்கி வாயருகில் கொண்டு செல்ல புளிச்ச வாடை அடிக்க, முகத்தை சுளித்தேன்.
“ ஒன்னும் பண்ணாது. குடி ... “ என்று மீண்டும் சொல்ல

கண்ணை மூடிக்கொண்டு அரை லிட்டர் அளவுக்கு குடித்து வைத்தேன். கள்ளைக் குடித்ததும் முன்பே வாங்கி வைத்திருந்த இட்லியும், காரச் சட்டினி, தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து பிரித்து வைத்தார். காரச் சட்டினியுடன் இட்லி தேவாமிர்தமாக இருக்க, சுவைத்து ரசித்து சாப்பிட்டேன்.

பச்சை வாழை இலையில் சிவப்பாய் காரச்சட்டினி, வெள்ளை கலரில் இட்லி மஞ்சள் கலரில் சாம்பார் என்று அந்தக் கலர் காம்பினேஷனே பார்க்க நவீன ஓவியம் போல இருக்கும்.

பலா மரத்தடியில் வைக்கோலை போட்டு துண்டு விரித்து வைத்து இருந்தார். அதில் சென்று படுத்தேன். ஆரம்பித்தது சோதனை...

போதை.. தலை சுற்ற என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை. பக்கத்து தோட்டத்தில் இருந்த தக்காளிச் செடியில் பழுத்து இருந்த தக்காளிப் பழங்களை பறித்தும், வெண்டை, கத்தரிக்காய்களை பிடிங்கி எறிந்தும் ரகளை பண்ணியிருக்கிறேன். ஏதோ செய்து ஜெயராசு என்னை படுக்க வைத்தார் போலும். தூங்கிவிட்டேன்.

மாலையில் அம்மாவிடம் பக்கத்து தோட்டக்காரர் விஷயத்தை போட்டு உடைக்க, அம்மாவின் தம்பியான மாமாவின் பிரம்படி ஒன்று கிடைத்தது. தாத்தாதான் தடுத்தார் மேலும் பிரம்படி கிடைக்காமல். ஜெயராசுக்கு திட்டு விழுந்தது.

ஆனால் அந்தக் கள்ளு சுவையாகத்தான் இருந்தது.....

Monday, May 26, 2008

ஹாக்கர்ஸால் தாக்கப்படும் செல்போன்கள்

எஸ் எம் எஸ் மூலம் ஹாக்கர்ஸ் செல்போன் பயன்படுத்துபவர்களின் தகவலை திருடி விடுகிறார்கள். இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் என்று வரும் எஸ் எம் எஸ்க்களை உடனே அழித்து விடவும். இல்லையென்றால் அந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் செல்போனின் தகவல்கள் அனைத்தையும் அந்த மெசேஜ் அனுப்பியவரை சென்று சேரும். இன்கமிங், அவுட்கோயிங் அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள். இல்லையெனில் ஐடிடெண்டியினை அழித்து விடுவார்கள்.

உங்கள் புருஷனுக்கு ஆக்ஸிடென்ட், இந்த ஆஸ்பிட்டலில் சேர்த்து இருக்கிறோம். ஹாஸ்பிட்டல் செலவுக்கு பணம் எடுத்துக் கொண்டு இந்த முகவரிக்கு உடனே வரவும் என்ற மெசேஜ் கிடைத்து அரக்க பரக்கச் சென்று அந்தப் பெண்ணை வழிமறித்து பணத்தை சுவாகா செய்த நிகழ்ச்சி எல்லாம் நடந்திருக்கிறது.

ஜாக்கிரதை...

Saturday, May 24, 2008

விமர்சகர்களுக்கு கேள்விகள்

சினிமா விமர்சனம் தமிழ் உலகில் பரபரப்பானது. சினிமாவினைப் பற்றிய விமர்சனம் போதை
தரும் என்பதால் அதை விட்டு விடுகிறேன். இலக்கிய உலகத்துக்கு வந்தால் அப்பப்பா
எத்தனை எழுத்துக்கள். எத்தனை விமர்சனங்கள்.

எண்ணி அறிய இயலா பிளாக்குகள். அத்தனையிலும் விமர்சனம். விமர்சனம். அந்த
எழுத்தாளர் அதில் இப்படி எழுதியிருக்கிறார். ஆனால் வாழ்வில் வேறு எப்படியோ இருக்கிறார்.
இன்னொருவரின் கதையினை திருடி விட்டார். இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது
என்று இன்னும் வகைப்படுத்த முடியாத அளவுக்கு விமர்சனங்கள்.

அத்தனையும் படிக்க உட்கார்ந்தால் பயித்தியக்காரனும் தெளிந்து விடுவான்.
இங்கு பயித்தியக்காரன் ஒருவன் தான் சுயபுத்தியோடு இருக்கிறான்.

காப்பி அடித்து எழுதுகிறார் என்று விமர்சனம் எழுதுகிறார்கள்.
ஏனய்யா விமர்சனம் எழுதும் வித்தகா நீயே உன் அப்பாவோ இல்லை அம்மாவின் காப்பி தானய்யா ? இந்த லட்சனத்தில் விமர்சனம் எழுதுகிறாய்.

இன்னும் ஒரு அபத்தம் நடக்கிறது பிளாக்குகளில். ஒருவரின் கதை புரியவில்லை என்றால் உடனே அய்யோ அம்மா என்று அலறி புடைத்து சமூக காவலாளி வேஷம் போட்டு எழுத்தா அது புண்ணாக்கு அது இதுவென்று எழுதுவது...

விமர்சகா, உனக்கு விளங்க வில்லை என்றால் மேலேயும் கீழேயும் பொத்திக் கொண்டு போகனும். அதற்கு எழுதியவனை விமர்சிப்பது உன்னுடைய அறியாமையை காட்டும். அதாவது நீ புத்தி இல்லாதவன் என்று நீயே உன்னை விமர்சிப்பது தான் அது.

படி. ரசி... பிடிக்கவில்லை எனில் ஒதுக்கு. அதை விடுத்து விமர்சனம் என்ற பெயரில் அலறுவது குறை சொல்லுவது, கூட்டம் போட்டு திட்டுவது, ஏன் உனக்கு இந்த வேலை ?

மற்றவனை பற்றி விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார். பின்னர் எழுத துவங்கு.

Thursday, May 22, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 4 (22.5.2008)

ரித்தி, உன் அம்மா வரும் ஜூன் மாதம் உனக்குப் பிறந்த நாள் என்று சொன்னாள்.
பிறந்த நாள் பற்றி உனக்கு சிலவற்றைச் எழுதலாமென்று நினைக்கிறேன்.
ஒரு மனிதனின் பிறப்பு மற்ற மனிதர்களால் நினைவில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
காமராஜர் பற்றி வரும் நாட்களில் நீ படிப்பாய். காந்தி, நேரு பற்றியும் படிப்பாய்.
இவர்களின் பிறந்த நாள் எப்படி மற்றவர்களால் கொண்டாடப்படுகிறதோ
அதைப் போல உனது பிறந்த நாளும் மற்றவர்களால் கொண்டாடப்பட வேண்டும்.

உனது பிறப்பு உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உபயோகமாய் இருக்க வேண்டும்.

பிறந்த நாளின் போது உன்னிடம் கேட்க நினைத்தாலும் உனக்கு புரிந்து கொள்ள முடியாது என்ற காரணத்தால் கடிதம் எழுதுகிறேன். எப்போவாவது நேரம் இருந்தால் உன் அப்பாவின் கடிதங்களை படித்து பார்.

நீ மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தூய ஆடை அணிந்து, தினமும் பாலீஷ் செய்யப்பட்ட ஷூ அணிந்து உன் அம்மா அன்பாக பார்த்து பார்த்து சமைத்த உணவினை கையில் எடுத்துக் கொண்டு செல்கிறாய்.இங்கிலீஷில் பாட்டு சொல்கிறாய். சாப்பிடும் போது கைத்துண்டை மடியில் வைத்துக் கொள்கிறாய். நாசூக்காக பேசுகிறாய். கண்களால் சிரிக்கின்றாய்.

உனது கராத்தே மாஸ்டர் சொல்லுகின்றார். கராத்தே பழகும் போது ஸ்டெப் போட்டு விட்டு அவர் முகத்தை பார்ப்பாயாம். அவர் புன்னகைப்பாராம். நீயும் சிரித்து விட்டு அடுத்த ஸ்டெப் போட்டுக் காட்டுவாயாம். சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவார். அன்பு மேலிட உன்னை தன்னுடன் அணைத்துக் கொள்வார்.

ஜூனியர் மாஸ்டர் நீ எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பதாகவும், மனதைக் கொள்ளை அடித்து விடுவதாகவும் சொன்னார். உன்னால் முடியவில்லை என்றால் போதும் என்று சொல்லிவிட்டு விலகி வந்து விடுவாயாம்.

ரித்தி, ஆம் நீ செய்யும் மேனரிஷங்கள் அழகானதாய் இருந்தால் பார்ப்போரும், உன்னுடன் பழகுவோரும் உன்னை நேசிப்பார்கள்.

எங்கோ வந்து விட்டேன் இல்லை. விஷயத்துக்கு வருகிறேன்.

உனக்கு பள்ளிக் கட்டணமாக பள்ளி ஆரம்பிக்கும் போது ஆயிரக்கணக்கிலும், மாதம் தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் கட்டி வருகிறேன். என்னால் முடியும். ஆனால் உன்னை ஒத்த சிறுவர்கள் பலரும் அழுக்கு அறையிலும், சுகாதாரமற்ற உடைகளும் அணிந்து புளியங்கொட்டை அரிசி சாப்பாட்டினையும், பாதி அளவே இருக்கும் முட்டையினையும் சாப்பிடவும் பள்ளிக்கு வருகிறார்களே தெரியுமா உனக்கு.

கல்வி உனக்கு ஒரு மாதிரியும், மற்றவர்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கிறது ரித்தி. அதனால் வாழ்க்கை தொலைப்போர் எண்ணற்றவர்.

நாளை நீ இந்த நாட்டை ஆளும் வாய்ப்பை பெற்றால் வணிக நோக்கத்தில் நடத்தப்பட்டு வரும் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒழித்து விடு. இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவின் சொத்து என்று சட்டம் இயற்று. இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்று சட்டமியற்று. கல்விக்கு கட்டணமே இல்லை என்று செய்.

செய்வாயா ரித்தி..


உன் அன்பு அப்பா...

Sunday, May 18, 2008

சினிமா சில கருத்துக்கள்

சினிமா சாக்கடை என்று பொதுவாக சொல்கிறோம். காரணம் கேட்டால் பெண்களைத் தான் கை காட்டுவோம். ஏனெனில் பெண்களை வீட்டுக்குள் வைத்து பொத்தி பொத்தி அவளை சொத்தாக்கி விட்ட சமூகத்தில் வளர்ந்து வந்ததால் அப்படித்தான் சொல்லுவோம்.

பெண்களை வீட்டுக்குள் வைத்து அவளை ஒரு சொத்தாக கருதி, முக்கியத்துவம் கொடுக்கும் நமது சமூகம், அந்தப் பெண் அவுத்துப் போட்டு ஆட வரும் போது ஏற்படும் மன அதிர்ச்சியில் கொழுப்பு பிடித்தவள், விபச்சாரி என்று எளிதாக சொல்கிறது.

விபச்சாரம் ! ஆண் இன்றி விபச்சாரம் இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம். பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் என்று. அதை விட்டு விடலாம். சில பெண்கள் இருக்கலாம். அவர்களை நிம்போமேனியாவாக கருதி விட்டு விடலாம்.

ஆணுக்கு தேவை பெண். கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்ட ஆணின் அந்தரங்க ஆசையினை நிறைவேற்ற வேண்டிய தருணத்தில் அங்கு பெண் தேவைப் படுகிறாள். அதற்கு அங்கு ஒரு பெண் விபச்சாரி ஆக்கப்படுகிறாள்.

சினிமாவில் பெண்கள் அவுத்து போட்டு ஆடுவதால் தான் தமிழ் நாட்டில் இந்த அளவுக்கு பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. இல்லை எனில் தினமும் கற்பழிப்பு தான் நடக்கும்.

ஆணின் வக்கிரங்களுக்கு வடிகாலாய் பெண்ணின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியுமா ?

சினிமா கதாநாயகிகள் ஆண்களின் காமம் எனும் எரியும் நெருப்பில் எரிக்கப்படும் விறகுகள் ஆவார்கள். அவர்களின் சமூக சேவை எவராலும் செய்ய இயலாத மாபெரும் தியாகம் என்பேன். காரணமும் உண்டு. சமீபத்தில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்தைப் படிக்க நேர்ந்தது. அதில் ஆட்ரி ஹெர்பனைக் காதலித்த ஒருவரின் அனுபவமும் அதனால் அவரின் வாழ்க்கையில் நேர்ந்தவைகளையும் சுவையாக சொல்லி இருந்தார். ஒவ்வொரு மனிதனின் ரகசிய காதலியாக இருப்பவர்கள் நடிகைகள். அவர்கள் திரையில் வந்து சிரிக்கும் போதெல்லாம் அவளைக் காதலிக்கும் ஆணின் மனசுக்குள் ஏற்படும் உணர்வினை எழுத்தால் எழுதிவிட முடியாது. சிலரின் காம இச்சைகளை தீர்த்து வைப்பதும் நடிகைகளே.. இப்படி ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாய் இருக்கும் நடிகைகளை விபச்சாரி என்று சொல்லுவது எந்த வகையில் நியாயம் என்பது தான் எனக்கு புரியவில்லை.

பணம் கிடைக்கிறது. அதனால் தான் நடிக்கின்றார்கள் என்று விவாதம் செய்வது இங்கு பொருத்தமற்றது. ஏன் ஆண்கள் எவரும் விபச்சாரத்தை விட மிக மோசமான ஏமாற்று வித்தை, செப்படி வித்தைகள் ஏதும் செய்து பணம் சம்பாதிக்கவில்லையா ? ஏன் அரசியலை விட கொடுமையான தொழிலையா நடிகைகள் செய்து விட்டார்கள்.

சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களின் புகழ், பெருமை அனைத்தும் பெண்களின் உடம்பின் மீது எழுப்பபடும் கோட்டை. இல்லை என்று எவராலும் மறுக்க முடியுமா ? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்.. தற்போதைய ஹீரோக்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ், சிம்பு என்று புகழ் பெற்று இருக்கும் நடிகர்கள், நடிகைகள் இன்றி படம் எடுப்பார்களா ? இல்லை அதில் தான் நடிப்பார்களா ? அப்படி எடுத்தால் எவனாவது சினிமாவுக்குத் தான் செல்வானா ?

விபச்சாரிகள் என்று சொல்லி நடிகைகளை அழைப்பதை விட்டு விட்டு அவர்களின் வாழ்க்கை எண்ணற்ற ஆண்களின் காம வடிகாலுக்காக அழிக்கப்படுகிறது என்ற உண்மையினை ஒரு கணமேனும் எண்ணிப் பார்த்தால் அது அவர்களுக்கு செய்யும் பெரிய உபகாரமாக இருக்கும்.

Wednesday, May 14, 2008

அன்பு மகனுக்கு கடிதம் 3 ( 14.05.2008)

ரித்தி, இன்று உனக்கு சில முக்கியமான விஷயங்களை சொல்ல இருக்கிறேன்.

முதலில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இதன் அர்த்தம் என்னவென்றால், யாரேனும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ நீ தீங்கேதேனும் செய்தால் அது திரும்பவும் உனக்கு தீங்காய் வந்து முடியும் என்பது.

இதற்கு என்ன ஆதாரம் என்று நீ கேட்பாய் என்பது எனக்கு தெரியும். விஷயத்துக்கு வருகிறேன். திபெத் என்ற நாட்டினை பற்றி உனக்குச் சொல்ல வேண்டும். சீனா திபெத்தை ஆக்ரமித்து திபெத்தியர்களை அவர்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்த போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளியது சில நாட்களுக்கு முன்பு. கேட்பார் யாரும் இல்லை. கேட்டாலும் சீனா எவரையும் மதிப்பதும் இல்லை.

ஆனால் நடந்தது என்ன இப்போது ? இரு நாட்களுக்கு முன்பு சீனாவில் படு பயங்கரமான நில நடுக்கம் வந்து 10 ஆயிரம் சீனர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள். கடவுள் என்பவனின் தண்டனை இருக்கிறதே அது படு பயங்கரமாக இருக்கும். சீனாவினை எப்படி தண்டித்து இருக்கிறார் பார் மகனே.... தர்மம் சூட்சுமமானது என்பார்கள். இறைவனின் தர்மம்
இப்படி இருக்கிறது...

இது தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று சொல்லுவது.

புரிந்து விட்டதா கண்ணே...? ஆதலால் எவர் ஒருவருக்கும் நீ தீங்கு செய்ய நினைக்காதே...


இன்னும் ஒரு விஷயம் கண்ணே .. !

கடந்த ஞாயிறு அன்று அன்புமணி ராமதாஸ் அவர்கள் ( இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்)
தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு " IF THE HEALTH MINISTER CAN'T DO THIS, WHO CAN ? " அதன் சாரம்சத்தை தருகிறேன். ஒரு மில்லியன் என்று சொன்னால் பத்து லட்சம் என்று அர்த்தம். ஒரு பில்லியன் என்று சொன்னால் 100 லட்சம் என்று அர்த்தம்.

ஒரு மில்லியனுக்கும் மேலே புகையிலையினால் இந்தியாவில் மனிதர்கள் சாகின்றார்கள் என்றும், 15% பள்ளிக் குழந்தைகள் புகையிலையினை பயன்படுத்துகிறார்கள் என்று உலக ஆரோக்கிய நிறுவனத்தின் ஆராய்ச்சியில் சொல்லி இருப்பதாக எழுதியிருந்தார்.
மேலும் அந்த ஆராய்ச்சியில் 52% இளைஞர்கள் சினிமாக்களை பார்த்த பின் தான் புகை பிடிக்க ஆரம்பிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். புகையிலை தயாரிப்பு கம்பெனிகளால் உலக அளவில் மூன்று மில்லியன் மக்கள் இறப்பதாகவும் சொல்கிறார்.

தெற்காசிய நாடுகளில் தயாராகும் சாராயத்தில் 65% இந்தியாவில்தான் குடிக்கிறார்களாம். 15 வருடத்திற்கு முன்பு 900 மில்லியன் லிட்டர் அளவுக்கு தயாரிக்கப்பட்ட சாராயம் இன்று 2.3 பில்லியன் லிட்டராக உயர்ந்து இருக்கிறதாம். சாரயம் குடிப்பவர்களின் ஆவரேஜ் வயது 28 லிருந்து 19 வயதாக வேறு குறைந்து இருக்கிறதாம். மேலும் இது 19லிருந்து 15 வயதாக இன்னும் 5 அல்லது 7 வருடத்திற்குள் குறைந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்களாம்.

இந்தியாவில் இறக்கும் மூன்றில் இரண்டு பங்கு மனிதர்கள் நான்கு வகையான கொலைகாரர்களான சாராயம், புகையிலை, போதை மருந்துகள் மற்றும் ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய உணவுகள் இவற்றினைப் பயன்படுத்துவதால் கொல்லப்படுவதாகவும் சொல்கிறார். சாரயத்தினால் தனி மனிதன் மட்டும் பாதிக்காமல் அவனது குடும்பமே பாதிக்கப்படுவதாகவும் சொல்கிறார்.

உலக் ஆரோக்கிய நிறுவனம் இந்தியா கேன்சர் என்ற புற்று நோய், டயாபடீஸ், கார்டியோ வஸ்குலர் எயில்மெண்ட்ஸ் மற்றும் மெண்டல் டிஸ்ஆர்டர் நோயின் பிடியில் விழ ஆரம்பித்துள்ளதாக முன்பே எச்சரித்து உள்ளதாகவும் சொல்கிறார். மேலும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் இன்ன பிற என்று எழுதியிருக்கின்றார்.

இதெல்லாம் உனக்கு ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் எதிர்காலத்தில் நீ எப்படி வருவாயோ எனக்குத் தெரியாது.

உனக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பதவி கிடைத்தால் ( அதற்கு நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் ) உடனடியாக சாராயம், புகையிலை, போதை மருந்துகள் மற்றும் தீமை விளைவிக்கும் உணவுப் பொருட்களை தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூடி விடு,
கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தையும் இயற்றி விடு. ஏனெனில் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்களும் கொலை செய்பவர்களே..

என் அன்பு மகனே... உனக்கு வாய்ப்பு கிடைத்தால் செய்வாய் என நினைக்கிறேன். செய்வாய் தானே...

உன் அன்பு அப்பா.....

Monday, May 12, 2008

மகனுக்கு கடிதம் - 2 ( 12.05.2008)

ரித்தி, எப்போ பார்த்தாலும் விளையாட்டு, கார்ட்டூன் சானல் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு கோபமாக வருகிறது. சத்தம் போட்டால் முகத்தை அப்படி ஒரு பாவமாய் வைத்துக் கொண்டு விடுகிறாய். அதிலுமின்றி ஒரு சிரிப்பு வேறு. அப்படியே கோபத்தை குறைத்து விடுவாய் நீ.....







நேற்று கராத்தே மாஸ்டரின் உதவியாளர் உன்னை ரொம்பவும் தான் பாரட்டி விட்டார். ” பேசவே மாட்டேன் என்கிறான் “ ரித்தி என்றார்
மேலும்
“ எதற்கெடுத்தாலும் சிரிப்புதான், போதும் என்று சொல்லி பயிற்சியினை நிறுத்தினான்” என்றார்.
” நல்லா வளர்த்து இருக்கீங்க சார்” என்று எனக்கு வேறு பாராட்டு. இருந்தாலும் நீ இன்னும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆவல்.

நல்ல பெயர் என்றால் இப்படி இல்லை மகனே ! கீழே படி உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

பூவுலகில் ஒரு நேரத்துக்கு கூட உணவில்லாமல் இருக்கும் எத்தனையோ உன்னுடைய சகோதரர்கள் சகோதரிகள் செத்து கொண்டு இருக்கின்றார்கள். உன் சகோதரிகள் உடுத்த உடையின்றி இருக்க இடமின்றி அல்லாடுகின்றனர். மருத்துவ வசதிகள் இன்றி அனு தினமும் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உன் பாட்டிகளும், தாத்தாக்களும் ஆதரவின்றி நிராதரவாய் நிற்கின்றனர். அவர்களை காப்பாற்றுவாயா என் அன்பு மகனே...

உனக்கு பசி எடுத்தால் ஊட்டி விட உன் அம்மா ஓடோடி வருவாளே, அது போல நீயும் உன் சகோதர சகோதரிகளுக்கு உணவிட்டு வளர்ப்பாயா ? நல்ல துணிகளை வாங்கி கொடுத்தும் அவர்களுக்கு இருக்க இடமும், நல்ல உணவும், மருத்துவ வசதியும் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வாயா ?

உன் சகோதரி அம்முக்குட்டி அழுதால் துடித்துப் போவாயே, அது உனக்கு நினைவில் இருக்கிறதா ?

பாவமில்லையா பக்கத்து வீட்டு பாப்பாவும் தம்பியும்... அவனையும் அப்படி கவனித்துக் கொள்வாய் தானே.... நீ சாப்பிடும் போது எல்லோரும் சாப்பிட்டு இருப்பார்களா என்று ஒரு துளியாவது நினைத்துப் பார்ப்பாயா ? இப்போதைக்கு இது போதும் மகனே...

Saturday, May 10, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 1 நாள் 10.5.2008

இன்று காலையில் கராத்தே கிளாசுக்கு அழைத்துச் சென்றேன் அல்லவா ? மாஸ்டர் ஆறு மணிக்கு வாருங்கள் என்று நேற்றே அழைத்ததுதான் உனக்கு தெரியுமே. நாம் சரியாக ஆறு மணிக்கு சென்று விட்டோம். ஆனால் மாஸ்டர் வரவில்லை. அப்போது நீ என்னிடம் “ அப்பா, எனக்கு பால் வாங்கித் தருகிறாயா ? ” என்று கேட்டாய்.

பேக்கரியில் டீ கொடுத்தவர் நீ டீ குடிக்க முயற்சித்து சூட்டால் முகம் சுளிப்பதைக் கண்டு, அருகில் வந்து ” சூடா இருக்கா, ஆற்றி தரவா ” என்று கேட்க நீ சிரிப்புடன் முறுவலித்ததை பார்த்த அவர் அன்புடன் உன் தலையினை கோதி விட்டு ஆற்றி எடுத்து வந்து கொடுத்தார் அல்லவா ? அதைப் போல அனைவரிடமும் அன்பான பார்வையுடன், லேசான புன்னகையுடன் அணுகி வா. அனைவரும் உன்னை நேசிப்பார்கள். மனிதர்கள் அன்புக்கு ஏங்குபவர்க்ள். அனைவரிடம் அன்புடன் பேசு. ஆதரவாக இரு. எல்லோரும் உன்னை விரும்புவார்கள்.

ஏழு மணிக்கு மாஸ்டர் வந்து விட்டார். அவருக்கு நேரம் கிடைக்காது. அவர் லேட்டாக வருவார். அவருக்கு எண்ணற்ற பணிகள். ஆதலால் அவர் நேரத்துக்கு வர இயலாது.

ஆனால் நீ, சரியான நேரத்திற்கு சரியான இடத்துக்கு சொன்ன இடத்தில் இருக்க வேண்டும். டைம் மேனேஜ்மெண்ட் என்று சொல்லுவார்கள் ஆங்கிலத்தில். நேரத்தை ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாய் கழிக்க வேண்டும்.

என்ன செய்வாய் தானே...

உன் அன்பு அப்பா....