குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வசியம். Show all posts
Showing posts with label வசியம். Show all posts

Thursday, January 12, 2017

வாசகர் கடிதத்திற்கு பதிலும் வசியப் பிரச்சினையும்

திரு. தங்கவேல்,

நான் உங்கள் கட்டுரைகளை கடந்த சில நாட்களாக படித்தேன், எளிமையான, இயல்பான நடை. சற்றேக்குறைய அனைத்து கட்டுரையும் நமது வாழ்க்கையின் சுவாரசியமான நிகழ்வுகள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுகொடுக்கும் பாரம்பரிய விளையாட்டுகள், TV பாதிப்புகள், தங்களுக்கும் பாம்பிற்கும் உள்ள பந்தம்(!) மற்றும் பல சட்ட விளக்கம் அனைத்தும் பல பல தலங்களுக்கு இழுத்து செல்கிறது. இருந்தாலும் திருவாதிரை உங்களுக்கு ருத்திரம் மாதிரி தான் தெரியுது? நானும் நேற்று முழுவதும் விரதம் இருந்து என் ஆதரவை தெரிவித்து விட்டேன்.

இந்த Blog தவிர வேறு எங்கேயும் எழுதுகிறீர்களா? இந்த அனுபவ பதிவுகள் மற்றும் ஆலோசனை பல நபர்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதே என் அவா. 

வாழ்த்துக்கள்

Babu


அன்பு பாபு அவர்களுக்கு,

மிக்க நன்றி. கடிதம் மகிழ்வைத் தந்தது. என் பிள்ளைகள் அதனைப் படித்தார்கள். அம்முவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. பையன் வழக்கம் போல மவுனச் சாமியாராக இருந்தான். மனையாளோ கடுப்படித்துக் கொண்டிருந்தார். ”என்னை வம்பு இழுக்காமல் உங்களுக்குப் பொழுது போகாதே” என்றார். “ உன்னுடன் வம்பு இழுக்காமல்,  பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்டேவா வம்பு இழுக்க முடியும்? விளக்குமாத்தாலே பிச்சுப்புடுவாங்க, அது உனக்கு உசிதமா?” என்று கேட்டேன்.  முறைத்தபடி சென்று விட்டார். 

சாரு ஆன்லைனில் சாருவின் கட்டுரைகளைப் படித்து சரி செய்து பதிவேற்றிய காலத்தில் எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்ததுதான் எனது பிளாக். தத்தித் தடுமாறி வார்த்தைகளைக் கோர்த்து எழுத ஆரம்பித்து எட்டு வருடங்களாக தொடர்ந்து எழுதி வருகிறேன். பனிரெண்டு நாடுகளில் படிக்கின்றார்கள் என்று விசிட்டர்ஸ் லிஸ்ட் காட்டுகிறது.

மலேசிய பத்திரிக்கையில் புனைப்பெயரில் காட்டமான அரசியல் கட்டுரைகள் எழுதினேன். தற்போது நிறுத்தி விட்டேன். பரபரப்புச் செய்தி இதழில் எழுதினேன். ஆழம் பத்திரிக்கையில் எழுதினேன். திண்ணையில் எழுதினேன். சிறு இதழாசிரியனாக இருந்து மூன்று இதழ்களில் எழுதினேன். இப்போது மலைகள் டாட் காமில் எழுதுகிறேன். எனது பிளாக்கைப் பற்றி தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது.

ஆனாலும் பிளாக்கில் தொடர்ந்து எழுதி வருகிறேன். எழுத எவ்வளவோ இருக்கின்றன. லெளகீக வாழ்க்கைக்கு முன்னால் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு விடுவதால் அனைத்தையும் எழுத இயலவில்லை. எழுத்து இன்னும் வசமாகவில்லை. படிப்பவர்களுக்கு ஏதாவது ஒரு உபயோகம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தேவையற்ற சொரிதல்களை எழுதுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

வெகுஜன பத்திரிக்கைகளுக்கு சிபாரிசு முக்கியம். இல்லையென்றால் வெளியிடமாட்டார்கள். தோல் சிவப்பாக அழகாக இருந்தால் (உதாரணம் தமிழச்சி) பெண்பிள்ளையாக இருந்தால் உடனடியாக வெளியிட்டு ப்ரிவியூவும் எழுதுவார்கள். நான் ஆணாகப் போய் விட்டேன். 

வெகு ஜன பத்திரிக்கைகளில் ஆக்கங்கள் வெளியாகி கிடைக்கும் புகழினால் ஒரு கரண்டி தோசை மாவு கூட வாங்க முடியாது என்பதால் ஆர்வமில்லை. விகடன், குமுதத்தில் ஆக்கங்கள் வெளியாகினால் தலையில் இல்லாத கிரீடத்தைச் சுமப்பது போல என்னால் நினைக்கமுடியாது. வெற்றுப் புகழ் மாலைகளினால் ஒரு புண்ணாக்கும் கிடைக்காது. 

இருப்பினும் பிளாக் எழுதுவதினால் ஒரு சில சுவாரசியங்கள் நடக்கின்றன.

எழுத ஆரம்பித்த நாளில் இருந்து பல அழைப்புகள், கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்ன ஒன்று? வசியமை கேட்டுத்தான் அதிக அழைப்புகள் வந்த வண்ணமிருக்கின்றன. ஆரம்பத்தில் அதைப் பற்றி எழுதி இருக்கிறேன் என்றுச் சொல்லிப் பார்த்தேன். எவரும் கேட்பதாக இல்லை. பிறகு ’ஒரு டப்பா ஒரு இலட்சம், உடனடி பலன், பணத்தை அக்கவுண்டில் கட்டுகின்றீர்களா?’ என்று கேட்க ஆரம்பித்தேன். ஓடிப்போனார்கள். பிளாக்கில் இலவசமாய் படிக்க கிடைப்பது போல வசியமருந்தும் இலவசமாய் கிடைக்கும் என்ற நப்பாசையில் இரவு பகல் பாராது அழைக்க ஆரம்பித்தனர். இப்போது கொஞ்சம் அழைப்புகள் குறைந்திருக்கின்றன.

வெளி நாட்டிலிருந்து 60 வயது பெரியவர் ஒருவர் வசியமை கேட்டு அழைத்திருந்தார். பேச ஆரம்பித்தவுடன் அவரிடம் விஷயத்தைக் கறந்து விட வேண்டுமென்ற ஆவலில் விசாரித்தேன். ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. அவருடன் பள்ளிப்படிப்பின் போது கூடப்படித்த பெண் மீது காதல் கொண்டாராம். ஆனால் அக்காதல் நிறைவேறவில்லையாம். இப்போது அப்பெண் அவரின் வீட்டருகில் இருக்கின்றாராம். மேட்டர் செய்ய வேண்டுமாம். இப்படித்தான் சொன்னார் ஆள். எனக்கு எப்படியெல்லாம் பிரச்சினை வருகிறது பார்த்தீர்களா? 

இவரைப் போலவே ஒரு பெண் உங்கள் ப்ளாக் அருமையாக இருக்கிறது என்று பாராட்டி எழுதினார். போனில் பேசினார். இது என்னடா வம்பாப்போச்சு என்று நினைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன். கடைசியில் வசிய மை கிடைக்குமா என்று கேட்க ஆரம்பித்தார். மாமா பையனை வசியம் செய்ய வேண்டுமாம். அவன் இந்தப் பெண்ணைக் காதலித்து மேட்டர் முடித்து விட்டு எஸ்கேப்பாகி விட்டானாம். இப்போது வேறு பெண்ணைக் காதலிக்கின்றானாம். பெரிய மனது வைத்து உதவி செய்ய வேண்டுமென்று கேட்க ஆரம்பித்தார். 

கோவையில் மாந்திரீகர் ஒருவர் சினிமா பிரபலங்களுக்கு வசிய மை விற்றே கோடிக்கணக்கில் சம்பாதித்தார் என்று ஏதோ ஒரு பிளாக்கில் எழுதி இருந்தார்கள். அது போல நாமும் ஆரம்பித்து விடலாமா என்று கூட யோசித்தேன். மாதம் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கல்லா கட்டி விடலாமென்று கூட நினைத்தேன். மனசு ஒப்பவில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வசிய மை உண்மைதானா? என்று கண்டுபிடிக்க ஆர்வம் ஏற்பட்டது. பல புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பல வசிய மை ஆட்களைச் சந்தித்து பேசினேன். மதி முக்கால் மந்திரம் கால் என்று தான் அனைவரும் சொன்னார்கள். ஃபேஸ்புக்கில் கூட அந்த மூலிகையை வைத்தால் வசியம், அதை இப்படிச் செய்தால் வசியம் என்று எழுதி வருகின்றார்கள். இதெல்லாம் உண்மையா என்று அறிய முயற்சித்தேன். ஒரு கண்றாவியும் இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை என்று கண்டு கொண்டேன். 

தேடினால் கிடைக்கும் என்பார்களே அதைப் போல ஒரு மந்திரவாதி எனக்கு அந்த வித்தையைக் கற்றுக் கொடுத்தார். மருந்தும் தேவையில்லை. மண்ணாங்கட்டியும் தேவையில்லை. சிறிய விஷயம் தான். யார் கற்றுக் கொடுத்தாரோ அவரே என்னிடம் பரீட்சித்துக் காட்டினார். அசந்து தான் போனேன். மூன்றாவது நாளில் எவரை வசியம் செய்ய விரும்புகிறோமோ அவரே வந்து காதலைச் சொல்லி விடுவார். அந்தளவுக்கு அந்த வசிய வித்தை களேபரமானது. கற்ற பிறகு பரீட்சித்துப் பார்க்க எனக்கு ஆர்வமில்லை. நம்மைப் போன்றே ஆசா பாசங்கள் ஆசைகள் கொண்டு ஜீவனை ஆசைக்காக அழிப்பது எவ்வளவு கொடூரமானது என்று நினைக்கையில் இது போன்ற வித்தைகளின் மீது எரிச்சல்தான் வந்தது. சக மனிதனை அழித்துதான் சந்தோஷம் பெற வேண்டுமா? தேவையே இல்லை அல்லவா? ஆகையால் அந்த விஷயம் அத்தோடு முற்றிற்று.

நிலம் பற்றிய தொடர் பல பேருக்கு உபயோகப்படுகிறது என்று நினைக்கிறேன். பலரும் அணுகி தங்கள் சொத்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். பட்டா மாறுதல், சொத்துக்களின் ஆவணம், காணாமல் போன சொத்துக்களை மீட்பது போன்றவைகளுக்காக அணுகுகின்றார்கள். முடிந்தவரை செய்துகொடுக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் ஒரு வாசகர் கம்பெனி ஆரம்பித்து விடுங்கள். நான் இன்வெஸ்ட் செய்கிறேன் என்று தொடர்ந்து பேசி வருகிறார். பணம் பல விஷயங்களைக் கொன்று போடும் தன்மை மிக்கது. செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று யோசனையில் இருக்கிறேன். நம்பி வருகின்றவர்களுக்கு ஏதும் தவறு நடந்து விட்டால் அதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. 

வாசகராய் வந்து இப்போது எனது தோழராக மாறிய ஒருவர் வாழ்க்கையில் எனது பிளாக் மாறுதலை ஏற்படுத்தி உள்ளது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த பிளாக் எழுதுவதன் பலன் இப்படித்தான் இருக்கின்றன. படிப்பவர்களுக்கு ஏதாவது உருப்படியாக தகவலோ அல்லது மன நெகிழ்வோ, சந்தோஷமோ ஏற்பட வேண்டுமென்பது தான் எனது நோக்கம். அந்த வகையில் உங்கள் கடிதம் அதைக் கட்டியம் கூறுகிறது. மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து படியுங்கள். சந்தோஷமாக வாழுங்கள். அது ஒன்றே எனக்குப் போதுமானது.

Monday, October 24, 2011

காதல் என்பது என்ன?


”சார், எனக்கொரு பிரச்சினை, நீங்கள் தான் உதவ வேண்டும்” என்றது போன் குரல்.

“என்னவென்று சொல்லுங்கள், என்னால் ஆன உதவியைச் செய்ய முயல்கிறேன்” என்றேன்.

"சார், நான் சிங்கப்பூரில் இருக்கும் பெண் ஒருத்தியை காதலித்தேன். அப்பெண்ணும் என்னைக் காதலித்தாள். எனக்கு அங்கு வேலை கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். என் அப்பா, அம்மாவிடம் கூட பேசி இருக்கிறாள். நானொரு சேல்ஸ் மேன். இப்படியான நாட்களில் ஒரு நாள் அவள் கூட சின்ன சண்டை ஆகி விட்டது. மேலும் அத்துடன் அவள் என்னுடன் பேசவே இல்லை. நானும் என்னென்னவோ முயற்சிகள் செய்துபார்த்தேன். விடாமல் சில சுலோகங்களைச் சொன்னால் நினைப்பது நடக்குமென்றுச் சொன்னார்கள். அவ்வாறு சொல்லியும் பார்த்தேன். இதுவரை எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. கோவில் கோவிலாய் ஏறி இறங்குகிறேன். அவள் இன்னும் என்னுடன் பேசவில்லை. ஒருமுறை என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது, என்னைத் திருமணம் செய்தால் உனக்கு நன்மை, ஆனால் எனக்கு என்ன நன்மை என்று கூட கேட்டாள். அதையெல்லாம் நினைவில்  வைத்துக் கொள்ளாமல் அவளை சின்சியராக லவ் பண்ணினேன். இதுவரை அவளிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை” என்றார் படபடப்பாக.

”சரி, இதற்கு நான் என்ன உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?” என்றேன்.

”சார், நெட்டில் தேடிய போது உங்களின் பதிவைப் படித்தேன்” என்றார்.

அவர் எங்கே வருகிறார் என்று புரிந்து கொண்டேன். அவரிடம், “ நான் மந்திரவாதியுமில்லை, வசியமும் உண்மையில்லை “ என்று சில விளக்கங்களைச் சொல்லி கட் செய்தேன்.

எனக்குத் தெரிந்த ஒரு பையனின் நண்பன் பதினைந்து வயதுப் பெண்ணைக் காம வயப்படுத்தி வேறு ஊருக்கு வர வழைத்து விட்டான். பெண்ணின் பெற்றோர் படிக்காதவர்கள் என்பதால் ஒரு வழியாகச் செட்டில் செய்தார்கள். பெண் யாரோ ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கப்பட்டு செத்துக்கொண்டிருக்கிறாள். அதே பையன் மீண்டும் ஒரு பெண்ணை (வயதுக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை என்றான் நண்பன்) காம வயப்படுத்தி, அழைத்துக் கொண்டு ஓடி மீண்டும் அடிதடி ரகளையாகி பஞ்சாயத்தில் வந்து முடிந்திருக்கிறது. 

என் வீட்டின் அருகில் இருக்கும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுமி ஒருத்தி, கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் நனைந்து கொண்டே, யாரோ ஒரு கல்லூரி மாணவனுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பற்றி விசாரித்தேன். அவளுக்கு இது இரண்டாவது பாய் பிரண்டாம். காதல் எப்படி புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

காதல் என்பது என்ன?  என்பது பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்வதால் வரும் வினை இது. சினிமாக்களில் காதல் என்பது ”காதலைக் காட்டுதல்” என்ற வகையில் வருவது. காதல் காட்டப்படுவது அல்ல வாழ்ந்து காட்டுவது. சினிமாக் காதலுக்கும் நிஜ காதலுக்கும் 10000 மடங்கு வித்தியாசம் உள்ளது. அதை உண்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சொல்லித் தெரிய வேண்டுமென்றால் அது காதலே அல்ல.

வசியம், மாந்திரீகம் பற்றி பலமுறை எழுதி விட்டேன். இனிச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும் குறுக்கு வழியில் இன்பம் தேடும் சிலர் இருக்கும் போது, போலிச் சாமியார்கள் ஏமாற்றுவது நிற்கப் போவதில்லை. 

மனித குலத்தில் சினிமாக்களும், மீடியாக்களும் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் மிகக் குறைந்த அளவே வாழும் காலம் உள்ள மனிதன் வாழ்வில் மிகப் பெரும் அழிவுகளை உருவாக்கி வருகின்றன. புரிந்து கொண்டிருப்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். புரியாதவர்கள் மேற்கண்ட பையனைப் போல அலைவார்கள்.

வாழ்க நலமுடன், வளமுடன்

* * *


Thursday, September 29, 2011

யாரோ ஒரு பெண்ணின் தொலைபேசி அழைப்பிற்கான பதில்


(பிளாக் மேஜிக் என்றுச் சொல்லக்கூடிய மந்திரங்கள் எல்லாம் ஏமாற்று வேலை என்பதைப் பல அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்லி இருக்கின்றன. ஆனால் மனித குலம் இன்றும் ஏமாற்றுக்கலையான மந்திர, வசியங்களை நம்பிக் கொண்டிருப்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைப் பற்றிய சிறிய விளக்கம் தான் இது )

நேற்று மதியம் சென்னையில் இருந்து ஒரு பெண் போனில் தொடர்பு கொண்டாள். ”எனக்கொரு உதவி வேண்டும் சார், செய்வீர்களா” என்றார். அவரைப் பற்றிச் சொல்லும் படி கேட்டேன்.

இரண்டு வருடமாய் ஒருவரைக் காதலித்து வந்திருக்கிறார். அந்தக் காதலர் இவரைக் காதலித்துக் கொண்டே வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். அதைத் தெரிந்துகொண்ட இப்பெண் காவல்துறை வரையும் சென்றிருக்கிறார். பலரிடமும் அவரின் காதலருடன் சேர உதவி செய்யும் படி கேட்க, எவரும் உதவி செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்றார். இன்னும் கொஞ்சம் விசாரிக்க, நான் எழுதிய மந்திரம், வசியம் என்பதை அவர் சொல்ல, அப்பெண் எங்கு வருகிறார் என்று புரிந்து கொண்டேன். 

வசியம் போட்டாவது அவரின் காதலரை வேறொரு பெண்ணிடமிருந்து பிரித்து, அவருடன் சேர்த்து வைக்க முயல்கிறார் அவர் என்பதை அறிந்து கொண்டேன். அடப்பாவமே என்று தோன்றியது.

நீங்கள் இன்னும் 40 வருடம் உயிரோடு இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த 40 வருடத்தில் 10 வருடம் தூக்கத்திலும், இன்னும் 5 வருடங்கள் டிராவல், துணி, சமையல் இவற்றில் போய் விடும். மீதி இருக்கும் காலம் தான் உங்களுடையது. உங்களை விலக்கி வைத்திருப்பவர்களை நீங்கள் விலக்கி விடுங்கள்.

உங்களை வேண்டாமென்று நினைக்கும் ஒருவருடன் நீங்கள் எப்படி சந்தோஷமாய் வாழ முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். 

சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, ஓரமாய் இருவர் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே சென்றிருப்பீர்கள் அல்லவா, அதைப் போல உங்களுக்கு நடந்த சம்பவங்களை கடந்து போய் விடுங்கள். 

வீட்டின் சமையலறையில் வைத்திருக்கும் குப்பைத் தொட்டியை தினமும் கிளீன் செய்யவில்லை என்றால் எப்படி நாற்றமடிக்கும். அதே போல மனதில் கடந்து போன நிகழ்ச்சிகளின் குப்பையை வைத்திருந்தீர்கள் என்றால் நாற்றமடிக்கும் அல்லவா? வீசி எறியுங்கள்.

உங்கள் அம்மா, அப்பாவிடம் சொல்லி நல்ல பையனாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழுங்கள்” என்றுச் சொல்லி கட் செய்தேன்.

மந்திரம் கால் மதி முக்கால் என்றுச் சொல்வார்கள். மந்திரத்தில் மாங்காய் வர வைக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். மந்திரம் என்பதெல்லாம் இக்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. எனக்குத் தெரிந்த பல கிராமங்களில் மந்திரம் செய்வோர் “வசிய மருந்து” என்றுச் சொல்லி ஒரு வஸ்துவைக் கொடுப்பார்கள். அது வயிற்றுக்குள் சென்றால், சாப்பிட்டவன் கதி அதோகதியாகி விடும். யார் மருந்து போட்டார்களோ அவர்களுக்கு மதி மயங்கி, மருந்து போட்டவர்கள் சொல்வதை எல்லாம் செய்ய மாட்டார்கள் என்றுச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சகோதரியே, வாழும் காலம் கொஞ்சம் தான். உங்களைப் போன்ற பெண்கள் ஆக்கச் சக்திகள். உயிரைப் படைக்கும் பிரம்மாக்கள் நீங்கள். கடவுளுக்கு ஒப்பானவர்கள். நீங்கள் பலரை வாழ வைக்க வேண்டும். பழி வாங்க நினைக்கக் கூடாது. பெண் என்பவர் இல்லையென்றால் பூமியே இல்லை. மனிதர்களும் இல்லை. சில கேடுகெட்ட ஆண்கள் இருக்கத்தான் செய்வார்கள். தீயவர்கள் இல்லையென்றால் உலகமே இயங்காது சகோதரி. நல்லவர்களும் வேண்டும், தீயவர்களும் வேண்டும். அப்போது தான் உலகத்தின் சமன்பாடு சரியாகும் சகோதரி. நீங்கள் தவறான முடிவுக்குச் செல்ல வேண்டாம் சகோதரி.

தினமும் கடவுளை ஒரு முறையாவது நினைப்பேன். அப்போது அவரிடம் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன். என்றாவது ஒரு நாள் நீங்கள் என்னிடம் சந்தோஷமாய் வாழ்கிறேன் சார் என்றுச் சொல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

வாழ்க வளமுடன் சகோதரி !

பிரியங்களுடன், ஆசீர்வாதங்களுடன்,
சகோதரன் கோவை எம் தங்கவேல்

* * *