குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Thursday, May 4, 2017

சசிகலா சீராய்வு மனு - விடுதலையாவாரா?

சட்டம் பல குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி தப்பிக்கக் கூடாது மன்னிக்கவும் தண்டிக்கப்படக்கூடாது என்கிறது. அது சரியானது தான். குற்றவாளிகளில் பலர் இதில் பல வகைகள் இருக்கின்றன. பரம்பரைக் குற்றவாளிகள், தொழில் முறைக் குற்றவாளிகள், அரசியல் குற்றவாளிகள், பயன் கருதி குற்றம் செய்யும் குற்றவாளிகள், உணர்ச்சிக் குற்றவாளிகள் இப்படி போகின்றன லிஸ்ட். சட்டம் குற்றவாளிகளை திருத்தி நல் வழிப்பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற அற்புதமான விஷயத்தைத்தான் முன்னெடுக்கிறது. மனித உயிரின் மீது கரிசனம் கொண்டவையாகத்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது. 

சசிகலா அவர்கள் தன்னை வழக்கிலிருந்து விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது இதைத்தான் காட்டுகிறது. ஏதாவது வழி இருப்பின் விடுதலை கிடைக்கக் கூடிய சாத்தியங்களைக் காட்டி விடுதலை பெறலாம் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் வசதிகளில் ஒன்று.

பத்திரிக்கைச் செய்திகளில் வெளிவந்த 1991 வழக்கின் தீர்ப்பினை முன்னிறுத்தி சீராய்வு மனுச் செய்திருக்கிறார் என்பது சரியான விளக்கம் தான். ஆனால் இன்னும் இது போன்ற பல தீர்ப்புகள் இருக்கக் கூடும். ஏதாவது ஒரு தீர்ப்புக்குள் இடைச்செருகலாய் சசிகலா அவர்கள் விடுதலையாகும் சாத்தியங்களை ஏதாவதொரு நீதிபதி அலசி இருப்பார். ஒவ்வொரு தீர்ப்பினையும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் சசிகலா அவர்களின் விடுதலைக்கு வித்திடப் போகும் அந்த ஒரு சட்டத்தின் துணுக்கு இருக்கும்.

ஏசிபி மற்றும் பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்திலும் பல்வேறு வழிகள் இருக்கின்றன. இரண்டு சட்டங்களின் படி தீர்ப்பு வழங்கப்பட்டவைகளை கூர்ந்து பார்த்தால் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல பேர் விடுதலையாகி இருக்கின்றனர். பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்தையும், இதுகாறும் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும், அதுமட்டுமின்றி அரசு அதிகாரிகளின் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பலர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புகளையும் படித்தால் 100 அடிச் சாலை திறந்து விடும். சம்பந்தபட்ட வக்கீலின் புத்திசாலித்தனத்தில் இருக்கிறது விஷயம்.

வேறேதேனும் சிக்கல்கள் இல்லாது இருந்தால் சசிகலா அவர்கள் விடுதலையாகி விடுவார் என்றே நினைக்கிறேன். சசிகலா வெளியில் வந்தால் அதிமுக வெகு ஸ்ட்ராங்காக ஆகி விடும் என்றும் நினைக்கிறேன்.

அரசியலும்  சட்டமும் இரயிலின் தண்டவாளப் பாதை போன்றது. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் இரு தண்டவாளங்களும் ஒன்று சேரும். பின்னர் பிரிந்து சென்று விடும். இரயிலின் பாதை போலத்தான் அரசியலும் சட்டமும். 

பார்க்கலாம் விதி என்ன செய்கிறது என்று? 

Monday, May 1, 2017

செப்டம்பர் 31

நேற்றுக் காலையில் ஏழு மணிக்கே வேலை விடயமாக வெளியில் சென்று பத்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தேன். நல்ல வெயில். சூடு தான் பிரச்சினை. கொதிக்கிறது அனல். முக்கியமான வீதிகளில் கம்பங்கூழ் பானைகள் துண்டுகள் கட்டி அமர்ந்திருக்கின்றன. ஒரு முறை திருப்பூர் கோர்ட்டுக்குச் சென்று விட்டு வரும் வழியில் கம்பங்கூழ் குடித்தேன். புளிப்பு உடலெங்கும் புல்லெரிக்க வைத்தது. ஆனால் நண்பரோ அசராமல் அனைத்தையும் குடித்தார். அப்படியே திரும்பக் கொடுத்து விட்டேன். அந்த அனுபவத்தினால் கம்பங்கூழ் என்றால் காத தூரம் ஓடிப் போ என்கிறது மனசு.

நுங்குகள் ஐந்து ரூபாயாம். வெட்டித்தருகின்றார்கள். பதனீ குடித்துப் பார்க்கலாம் என்று கொஞ்சம் வாங்கி வாயில் வைத்தால் சாக்கரீன் சுவை மிளிர துப்பி விட்டேன். ஒரு முடை நாற்றம் வேறு வந்தது. அதில் நுங்கைச் சீவிப் போட்டு மட்டை மட்டையாகக் குடிக்கின்றார்கள். ஆனால் எனக்குத்தான் ஆகவில்லை. நுங்கை வைத்து இப்படி ஒரு பிசினஸ் செய்யலாம் என்பதே ஆச்சரியம் தான். ஆனால் பாருங்கள் வருடம் முழுமைக்கும் நுங்கு கிடைக்கிறது. அதில் தான் ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது. அது என்னவென்று புரியமாட்டேன் என்கிறது.  ஒரு தடவை வீட்டுக்கு வந்த உறவினர் விழா நாட்களில் கோவையில் சாணி விற்றே கோடீஸ்வரனாகலாம் போலவே என்று சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டு வாசலில் தெளிக்க சாணி வாங்க மனையாள் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
(திருமணத்திற்கு முன் இப்படி இருந்த நான்)

வீட்டுக்கு வந்து அயர்ந்து போய் படுத்து விட்டேன். வெயிலில் கருவாடு போலக் காய்வது என்பது சாதாரணமா? பசங்க டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். மதியம் மூன்று மணி போல நீயா? நானாவில் மறதி கணவர்கள் மனைவிகள் என்றொரு தலைப்பில் கணவர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள் பெண்கள். இதெல்லாம் சகஜம் தானே? அதைப் பார்த்து மனையாள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். 

தன் குடும்ப விஷயத்தை, அதுவும் தன் கணவனின் ரகசியத்தை வெளியில் கசிய விடலாமா என்றெல்லாம் தெரியாமல் பிளந்து கட்டிக் கொண்டிருந்தனர். மறதி என்பது மனிதனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்பதில் யாருக்கேனும் எள்ளளவாவது சந்தேகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை உடனடியாக மறந்து விடுங்கள். சந்தேகம் இருக்கவே கூடாது. நல்லது நடந்தால் நினைக்கும் மனது கெடுதல் நினைந்தால் மறக்கத்தான் நினைக்கும் அல்லவா? அதைத் தவறு என்கிறார்கள் இல்லத்தரசிகள். இருக்கட்டும். 

பெண்கள் எப்போதுமே குறை பேசி பழக்கமானவர்கள். நிறையை மட்டும் பார்க்காமல் குறையை மட்டுமே குத்திக் காட்டிக் கொண்டிருப்பார்கள். குறை சொன்னால் தான் நிவர்த்திச் செய்து கொள்ளலாம். ஆகையால் அதுவும் தவறில்லை. சரி கணவனிடம் தானே பேசுகின்றார்கள். தங்கள் தகப்பன், தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளை விட்டு விட்டு வந்திருக்கின்றார்கள். பேசினால் தப்பில்லை. அடித்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். குடும்பத்தின் ஆணி வேர் அல்லவா பெண்கள்? இப்படிச் சரண்டர் ஆகி விட்டாயே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எவன் எவனுக்கோ அடிபணிந்து வேலை செய்யும் போது மனைவியிடம் சரண்டர் ஆவது ஒன்றும் தப்பில்லை என்கிறேன். சரிதானே சரண்டரானவர்களே? அடக்கம் தான் அமைதிக்கு வழி! (தத்துவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது)

காதலின் மோக லாகிரியில் சிக்கி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண், காதலின் உச்சத்தை நுகர்ந்து விட வாழ்க்கையெனும் மோக வளைக்குள் நுழைகின்றாள். வாழ்க்கையின் வாசலில் வசந்தம் தன் அழகான வரவேற்பைத்தரும். அந்த வரவேற்பில் மகிழ்ந்து வாழ்க்கை எனும் வீட்டுக்குள் நுழைந்த பெண், நாளடைவில் காதலின் மோக லாகிரியிலிருந்து விலகி, இயற்கையின் மகத்துவமான தாய்மை எனும் அவதாரமெடுக்கின்றாள். 

கண்ணதாசன் கூட சொல்வார்,”இறைவன் ஒருவனின் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் தாயோ ஒருவனின் ஆத்மாவுக்கும், உடலுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றாள்”. இதை விட ஒரு பெண்ணின் மகத்துவத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

தாய்மையின் உயர்வைக் காட்டும் ஒரு கதையைக் கூட அர்த்தமுள்ள இந்து மதத்தில் எழுதி இருப்பார். கதையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆகவே மனையாளிடம் மதி மயங்கிக் கிடப்பது (இதைத்தான் மறதி என்கிறார்கள்) ஒன்றும் தவறில்லை. 

மனையாளுடன் சேர்ந்து நானும் நீயா நானாவைப் பார்க்க ஆரம்பித்தேன். அதிலொரு பெண்மணி தன் கணவன் தங்கள் கல்யாண நாளைக் கூட நினைவில் வைத்திருப்பதில்லை எனவும், நான் முதன் முதலாக இந்த வீட்டுக்கு வந்தது அந்தத் தேதியில்லையா? அதைக் கூட அவர் மறந்து ஒரு வாழ்த்துக்கூட சொல்வதில்லை என்று வேதனையாகச் சொன்னார். எனக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை. மறக்கவா முடியும் அந்தத் தேதியை?அருகில் அமர்ந்திருந்த மகள், ”அப்பா! உங்கள் கல்யாண தேதி என்னப்பா?” என்று கேட்க, நானும் உடனே வெகு சந்தோஷமாக, ”செப்டம்பர் 31” என்றேன்.

(திருமணத்திற்குப் பிறகு இப்படி ஆகி விட்டேன். கவனிக்க மீசை காணாமல் போய் விட்டது)

மகள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மனைவியோ டிவி பார்த்துக் கொண்டிருந்தவள் எழுந்து கடு கடுவென அடுப்பங்கரைக்குள் சென்றாள். ”இந்தக் கோபிநாத்துக்கு ஏன் தான் இந்த வேலையோ தெரியவில்லை? நாசமாப் போறவன் ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமாக, எரிச்சலைக் கிளப்பி விடுகின்றான்” என்று அவரை ஒருமையில் திட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவளுக்கு என்ன ஆனது என்று இதுவரைக்கும் தெரியவில்லை.

நான் தேதி மட்டும் தான் சொன்னேன். அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் கொள்கிறாள் இவள்? ஆமாம் செப்டம்பர் 31 தேதி இருக்கிறது தானே நண்பர்களே? 

Thursday, April 27, 2017

கொளுத்தும் வெயில் குளிரும் நினைவுகள்

கோவையில் இப்படி வெயில் அடிக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் வண்டியில் சென்ற மனையாளின் தோல் சிவந்து வெந்தது போல ஆகி விட்டது. கோவையில் கோடையில் வெயிலாக இருந்தாலும் சுடாது. ஆனால் இப்போது சுட்டெரிக்கிறது. நாளொன்றுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆகாரம் குடிக்க வேண்டியதாகி விட்டது. சர்பத் கடைகளைக் கண்டால் மனசு அங்கே இழுத்துச் சென்று விடுகிறது. கவுண்டம்பாளையத்தில் திவ்யா சர்பத் என்றொரு கடை இருக்கிறது. நாற்பது வருடமாக சர்பத் விற்பனை செய்கிறாராம் அந்தக் கடைக்காரர். பதமாக வெயிலுக்கு இதமாக அதிகக் குளிர்ச்சியும் இல்லாமல் சர்பத் போட்டுத் தருகிறார். அந்தப் பக்கம் சென்றால் அவரைடம் எலுமிச்சை சர்பத் குடிக்காமால் நகர்வதில்லை. வெயில் என்றால் இதுதான் வெயில் என்பது போல அனத்து அனத்து என்று அனத்துகிறது.

வீட்டின் முன்னே இருக்கும் வேப்பமரம் கூட ஏனோ ஊடல் கொண்ட காதலி போல உஷ்ணக்காற்றினைத் தள்ளுகிறது. போதாதற்கு வேப்பம்பூவைக் கொட்டுகிறது. தமிழக அரசியலில் நொடிக்கொரு திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. செய்தி டிவிக்களுக்குத் தீனி. நான் சுத்தமாக செய்திச் சானல்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். விவாதம் நடந்தால் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. செய்தித் தாளில் அரசியல் செய்திகள் என்றால் நகர்ந்து விடுவேன். துரோகிகளும், சுய நலக் கொடூரர்களும் நிரம்பிய அரசியல் செய்திகளைப் படிப்பதினால் என்ன பிரயோஜனம்? அதுமட்டுமில்லை சினிமா செய்திகளை மொத்தமாக படிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இதுவரை சினிமாச் செய்திகளைப் படித்ததினால் என்ன பலன் என்று யோசித்தேன். நிறுத்தி விட்டேன். காசும் நேரமும் கரியானது மட்டுமே பலன்.









(சிறு வயதில் நான் குளித்து மகிழ்ந்த ஊருக்கே உயிர் கொடுத்து வரும் ஆவணம் கிராமத்தில் இருக்கும் குளங்களும் அதன் பெயர்களும்)

கோடையில் பிச்ச நரிக்குளம் மட்டும் சற்றே தண்ணீர் சுண்டி விடும். ஆவணம் மாரியம்மன் கோவிலின் வாசல் வழியாகத் தெற்கே சென்றால் நான்கு புறமும் கொல்லைகள் சூழந்த, தென்மேற்குப் பகுதியில் காடுகள் நிரம்பிய குளம் தான் அது. குளத்துத் தண்ணீர் சற்றே சந்தனக்கலரில் மாறி இருக்கும். இருந்தாலும் அந்தக் குளத்தில் குளிப்பது சுகம். நடு மத்தியான நேரத்தில் செல்வதுண்டு. தண்ணீரின் மேல் பகுதியில் சூடாக இருக்கும். ஆனால் உள்ளே சிலீரென்று இருக்கும். இரண்டு மணி நேரம் தண்ணீருக்குள் ஆட்டம் போட்டு, நீச்சல் அடித்து கண்கள் ரத்தக் குழம்பாக சிவந்த உடன் தான் வெளியில் வருவதுண்டு.

நானும், வேலைக்காரன் போசும் ஆவணத்தான் குளத்துக்கு கிழக்கே இருக்கும் வயலில் கோடைப்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாருடன் செல்வோம். அது மண்ணெண்ணெய் மோட்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி ஸ்டார்ட் செய்து பிறகு மெதுவாக மண்ணெண்ணெய்க்கு மாற்ற வேண்டும். ஹோசில் தண்ணீர் ஊற்றி நிரப்பிய பிறகு ஸ்டார்ட் செய்தால் குளத்திலிருந்து தண்ணீரைப் பம்ப் செய்து மடையில் கொட்டும். அந்த மடைக்குள் உட்கார்ந்து கொண்டு தலையைப் பம்ப் தண்ணீரில் காட்டி குளிப்பேன். ஜாலியாக இருக்கும். மசங்கும் நேரத்தில் தான் குளத்துக்குச் செல்வதுண்டு. கொக்குகள் ஒற்றைக்காலில் தவமிருந்து கொண்டிருக்கும். மீன்கள் மாட்டினால் கொத்திக் கொண்டு மரங்கள் அடர்ந்து நிரம்பிய ஆறும் குளமும் இணைந்த கரைகளில் இருக்கும் மரங்களில் சென்று அமர்ந்து மீனை ருசித்துக் கொண்டிருக்கும்.

தண்ணீர் இறைக்க குளத்துக்குச் செல்வதென்றால் இளம் தேங்காய் ஒன்றும், வெல்லக்கட்டி, பொட்டுக்கடலை கொஞ்சமும் எடுத்துக் கொண்டு சென்று விடுவோம். தேங்காயைப் பொத்து அதற்குள் பொட்டுக்கடலை மற்றும் வெல்லக்கட்டி இரண்டையும் சேர்த்து, தேங்காய் தண்ணீரோடு சேர்த்து மூடி வைத்துக் கொள்வோம். குளத்தங்கரையில் கிடக்கும் காய்ந்து போன விறகுளைக் கொண்டு வந்து போட்டு எரியூட்டி அதில் இந்தத் தேங்காயைச் சுட்டு எடுத்து ஆற வைத்து ஓட்டினை எடுத்து விட்டு சாப்பிட்டால் அள்ளும். அதன் சுவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மாலை மசங்கும் வேளையில் நன்றாக குளித்து விட்டு, இலேசாகக் குளத்து நீர் குளிர ஆரம்பிக்கும் சமயத்தில் சுட்ட தேங்காயைச் மாட்டு வண்டியின் நுகத்தடியில் அமர்ந்து கொண்டு சிதறும் தண்ணீரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ருசிப்பது என்பது இப்போது நினைத்தால் கூட நடக்கும் காரியமா? அவனவன் லட்சங்களைக் கொட்டி கடற்கரை, இயற்கை கொஞ்சும் இடங்களுக்குச் சென்று வெறுமையாகத் திரும்புகின்றனர். வாழ்க்கையோடு இயைந்து இருக்கும் இது போன்ற மகிழ்ச்சி தரும் உணர்வுகளைக் காசால் பெற்று விட முடியுமா? 

உண்மையில் வயலுக்கு வேலை செய்யத்தான் செல்கிறோம். ஆனால் அந்த வேலையிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது அல்லவா? அது போல எந்த வேலையில் கிடைக்கிறது சொல்லுங்கள்? கணிணியில் உட்கார்ந்தால் உடலும் மனசும் அலுத்துப் போகும். இப்போதைய உடல் உழைப்புகள் எதுவும் விவசாய வேலை தரும் மகிழ்ச்சியைப் போல மகிழ்ச்சியைத் தந்து விட முடியுமா? தோட்ட வேலைக்குச் சென்று திரும்பும் போது கையில் தேங்காய், மாங்காய், கத்தரிக்காய்களைக் கொண்டு வந்து சமைத்து உண்ணும் வேலைக்காரியின் உணவுக்கு முன்னால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் உணவின் சுவை நிற்க முடியுமா?



கிர்லோஸ்கர் தண்ணீர் இறைக்கும் பம்பு செட்

கோடையில் வெயிலுக்கு இதமாக வடக்கித் தெரு சுப்பையாத் தேவரின் கொல்லையில் அருவி போலக் கொட்டிக் கொண்டிருக்கும் பம்பு செட்டிற்கு குளிக்கச் செல்வதுண்டு. அப்போது வழியில் என் நண்பன் பனை மரத்துக் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடத்தில் சென்று ஒரு லிட்டர் கள்ளைக் குடித்து விட்டு, பம்பு செட்டில் ஆட்டம் போட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தால் சூடான சோற்றுடன் கொதிக்கும் மீன் குழம்பினை ஊற்றிக் கொண்டு கவளம் கவளமாக சாப்பிட்ட நாட்கள் இனி வரத்தான் கூடுமா? நிச்சயம் வராது. 

நான்கு சுவற்றுக்குள் கதவைச் சாத்திக் கொண்டு தலையில் மோண்டு ஊத்தும் தண்ணீர் உடலைத் தழுவும் போது ஆற்றுக்குள் குளிக்கும் போது இருந்த சுகம் இல்லை என மனசு முழுக்க ஏக்கம் பரவுகிறது. காவிரி ஆறும், மழையும் வறண்டு போய் வெம்மையானாலும் அந்த இளம் பிராயத்து நினைவுகள் மட்டும் மனதூடே ஊடுறுவும் போது கொஞ்சூண்டு சிலிர்ப்பாக இருக்கத்தான் செய்கிறது.

Wednesday, April 19, 2017

ரூடோஸ்ஸின் வருகை

எனக்கு நாயென்றால் அப்படி ஒன்றும் பிடிக்காத விஷயமல்ல. அதுவும் ஒரு உயிர் தானே என்றளவில் கொஞ்சம் பிரியம் இருக்கின்றது. எனக்கொரு தோழி நெட்டில் அறிமுகமானவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார். நான் சிரமப்பட்ட காலத்தில் உடனுக்குடன் எனக்கு பணம் அனுப்பி வைத்தார். பள்ளி, கல்லூரி, ஹாஸ்டல், கடைகள் என நல்ல வசதியான பெண்மணி. அங்கிருந்து வருடம் ஒரு தடவையாவது பரிசுகள் வரும். நான் எதுவும் அனுப்புவதில்லை. போன் கூட அவர் தான் செய்வார். இணையத்தில் பேசிக் கொள்வதுண்டு. அவர் ஊரில் நாய்க்கறி பேஃமசாம். அவரிடம் கேட்டேன். அருமையாக இருக்கும் என்றார். அன்றிலிருந்து அவரிடம் பேசுகின்ற போதெல்லாம் செத்துப் போன நாய்கள் அவரின் பின்னே அவரைத் துரத்துவது போல நினைவலைகள் வந்து விடும். விவசாயமெல்லாம் அழிந்து போன பிறகு நாய்க்கறியைத் தின்னாமல் மனுசனையா தின்ன முடியும். எனக்கென்னவோ இந்தியாவில் இன்னும் கொஞ்ச நாளில் நாய்க்கறி பிரபலமாகி விடும்  போல. நம்ம நாடு போகிற போக்கினைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. 

பிலிப்பைன்ஸுக்கு வா என்று பத்து ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தோடு செல்ல வேண்டும். இப்ப ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

நேற்றைக்கு முதல் நாள். நானும் பையனும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண், அங்கிள் இங்கே மருத்துவமனை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். சரவணம்பட்டி காளப்பட்டி சாலையில் ஒரு மருத்துவமனையைப் பார்த்த நினைவில் இந்தப் பக்கம் என்று கைகாட்டி விட்டேன். கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினால் அந்தப் பெண்கள் தெரிந்தார்கள். அதிலொரு பெண் நடக்கவே முடியாமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தார். சாலையைக் கடந்து வந்தார்கள். மருத்துவமனையில் டாக்டர் இல்லை. சோர்ந்து போய் விட்டார்கள். அந்தப் பெண்ணைத் தொட்டுப் பார்க்க உடல் கொதித்துக் கொண்டிருந்தது. சரியான காய்ச்சல். வெயில் வேறு அனத்திக் கொண்டிருந்தது. பையனை இன்னொரு பெண்ணுடன் இறக்கி விட்டு விட்டு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இரண்டொரு மருத்துவமனைக்குச் சென்றால் ஒருவரும் இல்லை. ஒரு வழியாக மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைக் கண்டுபிடித்து அங்கு கொண்டு போய் விட்டேன். மருத்துவர் இருந்தார். மீண்டும் என் பையனும் இன்னொரு பெண்ணும் இருக்கும் இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருப்பினேன். அப்போது அந்தப் பெண், ”ரித்திக், வெயிலில் நிற்காதே, நிழலில் நில்” என்று இரண்டு மூன்று தடவை சொன்னது. எனக்குச் சரியான எரிச்சல். நான் வெயிலில் இவள் தோழியை அழைத்துக் கொண்டு நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பெண்ணுக்கு யார் மீது அக்கரை என்று பார் என்று கடுப்பானது. காலம் மாறுகிறது என்பது பளிச் சென்று புரிந்தது. அப்பெண்ணை மருத்துவமனையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன். நன்றி சார் என்றது அப்பெண். நல்லா இருங்கம்மா என்றுச் சொல்லி விட்டு பையனை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன். நீ பாட்டுக்கு இப்படி உதவி செய்யக் கிளம்பி விடாதே ரித்திக் என்று அவனிடம் சொல்லி வைத்தேன். எதுக்கும் இருக்கட்டும். சரி அடுத்த கதைக்கு வந்து விடுகிறேன்.

சிறுவயதில் செவலை நாயொன்றும், கருப்பு நாயொன்றும் வீட்டில் இருந்தது. செவலை நாய் நல்ல நாய். வீட்டை விட்டு எங்கும் செல்லாது. ஆனால் கருப்பு நாயோ எமகாதக நாய். ஊர் சுற்றி. கையில் இருந்தாலும் கடித்து தின்று விடும். அதை நான் அடித்து துரத்தி விடுவேன். அப்போதெல்லாம் நாய்க்குப் பெயர் வைப்பதெல்லாம் இல்லை. நாயை நாயென்றுதான் அழைப்போம். ஆனால் இப்போதோ வேறு நிலை.  நாய்க்கு வைக்கும் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அது நாயா இல்லை ஆளா என்றொரு குழப்பம் வந்து விடும் எனக்கு. 

இன்றைக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது. ரிப்ளை செய்யும் போது அது ஆணா பெண்ணா என்று  குழப்பம் ஏற்பட எதுக்கு வம்பு பேசாமல் டியர் என்று போட்டு விடுவோம் என்று நினைத்து டியர் <அந்த பெயர் போட்டு> மெயில் அனுப்பி விட்டேன். அது ஒரு பெண்ணாக இருந்து நான் ஆணல்ல என்று ஆரம்பித்து அதுவே தொடர்கதையாகி, ஏற்கனவே திருமணமானவன். அதுவும் நாற்பதுகளில் இருப்பதால் நாய் குணம் வேறு வந்து விடும் என்பார்கள். எக்குத்தப்பாக ஆகிவிட்டால் நன்றாகவா இருக்கும்? சரி விஷயத்துக்கு வந்து விடலாம்.

அந்தச் செவலை நாய் ஒரு நாள் வாய் கிழிந்து வந்தது. இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கியது. எதித்த வீட்டுப் பெண்மணி வெங்காய வெடியை கருவாட்டுக்குள் வைத்துச் சுருட்டிப் போட்டு விட்டார். அதை எடுத்துக் கடித்திருக்கிறது. வெங்காய வெடி வெடித்து இடது பக்கம் தோல் கிழிந்து தொங்கி விட்டது. இடது பக்க பற்கள் எல்லாம் வெளியில் தெரிந்தது. எனக்குப் பயமாகவும், பாவமாகவும் இருந்தது. சாப்பாடு வைத்தேன். சாப்பிட்டது ஆனால் சோறு இடது பக்கமாக வெளியில் வந்து விட்டது. கொஞ்ச நாளில் அது வாசலில் படுத்திருந்தது. பட்டினியாகவே கிடந்து இறந்து போனது. வீட்டின் பின்புறம் குழி வெட்டி புதைத்து விட்டோம். 

கருப்பு நாயை பஞ்சாயத்திலிருந்து நாய் பிடிக்க வந்தவன் பிடித்துக் கொண்டு போய் விட்டான் போலும். நீண்ட நாட்கள் அதைக் காணவில்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் சும்மாவா? வீட்டுக்கே ஆகாது என்பார்கள். நாயைச் சொல்லவா வேண்டும்? அதுகளுக்கு அப்போது பீட்ச்சா அடச்சே பீட்டா, ப்ளூகிராஸ் மாதிரியெல்லாம் ஆட்கள் இல்லை. இப்போதல்லவா இருக்கின்றார்கள். அவனவன் ஆட்களை ஆடுகள் கழுத்தறுப்பது போல அறுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதைக் கேட்க ஆட்கள் இல்லை. நாயை அடித்தாலோ அல்லது மாட்டை அடித்தாலோ கேஸ் போடுகின்றார்கள். சிறு வயதில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது சண்டித்தனம் செய்யும் மாட்டினை சாட்டையால் விளாசி இருக்கிறேன். அப்போது இந்த பீட்டாக்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? மாட்டுக்குப் பதிலாக இவர்கள் நுகத்தடியில் கழுத்தை கொண்டு வந்து நீட்டி வண்டியை இழுப்பார்களா? என்று தெரியவில்லை. என்ன நியாயமோ என்ன சட்டமோ? ஒன்னும் சரியில்லை.

கிரடிட் கார்டுகள், பண அட்டைகள் வந்தாலும் வந்தன. மனிதன் இப்போது பைத்தியம் பிடிக்காத குறையாகத்தான் திரிகின்றான். ஏசியில் ஐந்து நிமிடம் நின்று ஏடிஎம்மில் பணம் எடுப்பது அப்போதெல்லாம் கவுரவம் நிரம்பியது. ஆனால் இப்போதோ ஏடிஎம் என்றாலே அலறல் தான் கேட்கிறது. டெக்னாலஜி வந்தாலும் வந்தது பிடித்தது சனியன். கருப்புப் பணத்தை இனி கண்ணால் கூட பார்க்க முடியாது போலும். ஆனால் அரசியல்வாதிகள் காட்டிலோ மழையோ மழைதான். ஒரு கார் வாங்கலாம் என்றால் நாய்க்கு நாக்குத் தள்ளிய மாதிரி நமக்கு நாக்குத் தொங்கி விடுகிறது. கவுன்சிலர் ஆனவுடனே ஸ்கார்ப்பியோவில் வருகின்றார்கள். என்ன தான் தில்லுமுல்லு செய்வார்களோ தெரியவில்லை. அடுத்தவன் பணத்தில் வாழ்வதுக்கும் ஒரு மச்சம் வேண்டும். மச்சம் மட்டும் இருந்து என்ன ஆகப் போகிறது? புத்திசாலித்தனமும் வேண்டும். மோடி சரியான அரசியல்வாதியாக இருக்கிறார். கருப்புப் பணத்தை மீட்கிறேன் என்றார். நாமெல்லாம் நினைத்தோம். அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்டு வந்து விடுவார் என. ஆனால் பாருங்கள் என்ன நடந்தது என்று. இது தான் பிரதமர் மோடி. வெகு புத்திசாலியானவர். திறமையானவர். யாரை எங்கே எப்படி என்ன என்பதெல்லாம் அவரிடம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். இது வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் ஆகச் சிறந்தவர் மோடி அவர்கள் தான் என்கிறேன். இப்படி ஒரு ட்விஸ்டை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்களா? நிச்சயமாக இப்படியெல்லாம் நடக்குமா என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள். அதுதான் பிளான். அதுதான் திட்டம்.

சரி திரும்பவும் எங்கேயோ போய் விட்டேன். இந்த மூளை இருக்கிறதே அது படுத்தும் பாடு இருக்கிறதே? பெரிய ரோதனை இதோடு. உங்களுக்கும் போர் அடித்திருக்கும் அல்லவா?

இரண்டு நாட்களுக்கு முன்பு ரித்திக் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வரும் போது. அவன் கூடவே குட்டியாக, செவலை நாய்க்குட்டி ஒன்று அவனுடன் வந்து விட்டது. ரித்திக்குக்கு நாய், பூனை என்றால் பிரியம். ஆனால் மனையாளுக்கோ ஆகவே ஆகாது. அப்பா இந்த நாயை வளர்க்கலாமா? என்று கேட்க இரண்டு மாதம் வீட்டில் சும்மாதானே இருக்கின்றார்கள், பொழுது போக்காக இருக்கட்டும் என்றுச் சொல்லி சரி என்றுச் சொல்லி விட்டேன்.

போன மாதம் கருகருவென நாய்க்குட்டி ஒன்றினை வளர்க்கலாம் என்று நினைத்து கவுண்டரிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரும் திரிந்தலைந்து 22 நகங்களுடன் கருப்பு நாய்க்குட்டி ஒன்றினைப் பிடித்து வைத்திருந்தார். எனது நண்பர் நாயை ஓசியில் வாங்கக் கூடாது. யாருக்கும் கொடுக்கவும் கூடாது என்றுச் சொல்லி விட கவுண்டரிடம் வேண்டாம் என்றுச் சொல்லி விட்டேன். அத்தோடு நாய் வளர்க்கும் ஆசை போய் விட்டது. ஆனால் அதுவே வீடு தேடி வருகிறது.

ரூடோஸ் தற்போது

ரூடோஸ் எதிர்காலத்தில்

லேப்ராடர் வகை நாய்க்குட்டி அது. எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை? யார் வளர்த்ததோ தெரியவில்லை? அதற்குச் சாப்பாடு போட்டு, குளிப்பாட்டி, கழுத்திலொரு பட்டியைக் கட்டி, அத்துடன் கயிற்றைக் கட்டி விட்டான் பையன். காலையில் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டி, நாய்க்கடைக்குச் சென்று கழுத்துப் பட்டி, கயிறு வாங்கி வந்து மாட்டி காலையிலும் மாலையில் ஜாக்கிங்க் சென்று கொண்டிருக்கின்றார்கள் ரித்தியும், அம்முவும். இப்போது அது நன்றாக இருக்கிறது. இன்றைக்கு காலையில் பேப்பரைக் கடித்துக் குதறி விட்டது. ஒரு அதட்டுப் போட்டேன். அவ்வளவுதான் அருகிலேயே வரமாட்டேன் என்றது. ஒரு வழியாக சமாதானம் செய்து அதன் பயத்தைப் போக்க வேண்டியதாகி விட்டது.

இதற்கொரு பெயர் வையுங்கள் சாமி என்று கேட்டேன். 

”ரூடோஸ்” என்றார்.  எங்கிருந்தோ வந்தது ரூடோஸ். இப்போது என்னுடன் இருக்கிறது. காலையில் எழுந்ததும் அதனுடன் கொஞ்ச நேரம் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாலையில் அதனுடன் விளையாடுவதும் சந்தோஷம் தருகிறது. ஒரு குழந்தையைப் போல அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

பக்கத்து வீட்டில் சைபீரியன் ஹஸ்கி என்ற பெய்லி (பெயர்) வளர்கிறது. மாலையில் வாக்கிங் செல்லும் போது பெய்லியைப் பார்த்து கர்ண கடூரமாகக் குலைக்கிறது ரூடோஸ். சரியான காமெடி. பயமில்லாமல் குலைத்து விட்டு ஓடோடி வந்து அருகில் அமர்ந்து கொள்கிறது.

பசங்க இருவரும் டிவி பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறார்கள்.

குறிப்பு: எல்லா பத்திகளிலும் நாய் வந்திருப்பதைக் கவனிக்கவும். உன் வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறாய் என்பதற்காக ஊர் கதையெல்லாமா அளப்பது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்குத்தான் இந்தக் குறிப்பு.

Monday, March 27, 2017

வாளை மீன் கருவாட்டு வறுவல்

என் சிறு வயதில் கவுச்சி சுத்தமாகச் சாப்பிட மாட்டேன். என்னவோ தெரியவில்லை இது நாள் வரையிலும் கோழிக்கறி சாப்பிட்டதே இல்லை. எனக்குக் கோழி வாசம் சுத்தமாகப் பிடிக்காது. மீன் குழம்பு, நண்டுக் குழம்பு வகையறாக்களைத் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டேன். கருவாடு என்றால் அய்யோ அம்மா என்று அலறி விடுவேன்.

கீரமங்கலத்துக்குப் படிக்கச் சென்ற பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட ஆரம்பித்தேன். எனக்குப் பிடித்த உணவு என்றால் முருங்கைக்கீரைக் குழம்பும், வாழைப்பூ பொறியலும், வெந்தய மாங்காய் ஊறுகாய், சுடுசோற்றில் மோர் சேர்த்தக் கஞ்சியும்தான். கல்லூரி சென்ற பிறகு மட்டன், மீன், நண்டு, இறால் என்று சாப்பிட ஆரம்பித்தேன். சாம்பாரைச் சாப்பிட்டு சாப்பிட்டு மக்கிப் போன நாக்குக்கு டிபரண்டாக கிடைத்தால் விடுமா? புகுந்து விளையாட ஆரம்பித்தேன்.

என் ஊரில் இன்றைக்கு தமிழகமெங்கும் பிரபலமான வஞ்சிரம் மீனை தொட்டுக்கூடப் பார்க்க மாட்டார்கள். சுவையற்றுச் சப்பட்டின்னு இருக்கும். பன்னா மீன், தட்டக்காரா, பொடி மீன்கள், வாவல் மீன், பச்சை முறல் மீன், கணவாய் மீன்கள் தான் பிரபலம். எனக்கு ரொம்பவும் பிடித்தது முறல் மீன் தான். திட்டமாக மிளகாயும், புளியும் சேர்த்து வைத்தால் இந்த மீன் சுவையை அடித்துக் கொள்ள எதுவும் இல்லை.  இந்த மீன் வறுவல் அள்ளும். 


இந்த மீன் பெயர் தான் முறல் மீன். பச்சை முறல் மீன் குழம்புக்கும் வறுவலுக்கும் ஏற்றது. கண்ணாடி மாதிரி இருக்கும்.

மஞ்சள்பொடி, சோம்பு, பூண்டு, மணத்துக்கு சின்ன வெங்காயம் கொஞ்சம், மிளகாய்ப் பொடி சேர்த்து மசாலா அரைத்து மீன் மீது கொட்டிக் கிளறியவுடனே (மறக்காமல் உப்புச் சேர்த்துக் கொள்ளவும்) வறுவல் செய்யலாம். இப்போதெல்லாம் மீனை மசாலா சேர்த்து வெயிலில் கருவாடாகக் காய வைத்து அதன் பிறகு பொறிக்கின்றார்கள். கொடுமை அப்படி ஒரு கொடுமை. மீன் கருவாடாகி அதை வறுத்தால் மீன் சுவையா கிடைக்கும்?

கோ 45 அரிசிச் சோற்றுடன் எந்தக் குழம்பைச் சேர்த்துச் சாப்பிட்டாலும் சுவை அள்ளும். இப்போது சாப்பிடுகின்றோமே பொன்னி அரிசி அது மாதிரி சுவை கெட்ட அரிசி வேறு எதுவும் இல்லை. ஐஆர் 20 அரிசி கூட பரவாயில்லை ரகம் தான். கோ 45 அரிசியைக் குழைய வைத்து அதில் முருங்கைக் கீரை பருப்புக் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

பழைய சோற்றினை உருண்டைப் பிடித்து அதில் ஒரு குழியை கட்டை விரலால் அழுத்தி தட்டக்கருவாட்டுக் குழம்பில் கிடக்கும் வாழைக்காயை எடுத்து வைத்து கொஞ்சூண்டு குழம்பை அதில் ஊற்றி அப்படியே வாய்க்குள் வைத்தால் அதை விட எந்த ருசியும் கிட்டே நிற்காது. தங்கராசு வயலுக்குச் சென்று விட்டு வந்தால் குண்டான் நிறையைக் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வந்து இப்படித்தான் சாப்பிடுவான். எனக்கும் தருவான். வீட்டில் எவராவது பார்த்தார்கள் என்றால் என் தோல் உரிந்து விடும். யாருக்கும் தெரியாமல் அவனிடம் ஒரு வாய் வாங்கிக் கொள்வேன்.


(வாளை மீன் கருவாடு)

சரி வாளை மீன் கருவாடு எப்படி செய்வது என்றுச் சொல்லித் தருகிறேன். கருவாடு கிடைத்தால் செய்து சாப்பிட்டுப் பார்க்கவும். வாளை கருவாட்டில் உடம்பின் பகுதியை மூன்று அங்குல சதுரமாக கட் செய்து கொள்ளவும். கொஞ்சூண்டு சுடுதண்ணீரில் அமிழ்த்தி அலசிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்த பிறகு இந்த வாளைக் கருவாட்டுத்துண்டுகளை அதில் சேர்க்கவும். எண்ணெயில் நன்கு பொறிந்து உடைய ஆரம்பிக்கும். கவலைப்பட வேண்டாம். கருவாடு தூள் தூளாக உதிரி உதிரியாக மாற வேண்டும். 

கருவாடு உடைந்து கொழ கொழவென மாறி பின்னர் உதிரி உதிரியாக மாறும். அப்போது கொஞ்சூண்டு சோம்பு அதனுடன் கொஞ்சம் வெங்காயம் சேர்த்து இடித்து அதை எடுத்து இந்தக் கருவாட்டுடன் சேர்க்கவும். கொஞ்சூண்டு மிளகாய்ப் பொடியைத் தூவி சுருளச் சுருள வதக்கவும். பொறு பொறுவென வரும். அதுதான் பக்குவம். அடுப்பை அணைத்து வாணலியில் இருந்து உதிரான கருவாட்டினை பக்குவமாய் கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதில் முள் இருக்கும், கருவாடு வறுபட வறுபட முட்கள் எல்லாம் வெளியில் வந்து விடும். அதை எடுத்து எறிந்து விடாதீர்கள். அதற்கும் ஒரு பயன் இருக்கு.

கருவாடு வறுக்கும் போது வாயில் இருந்து வடியும் ஜொள்ளை வாய்க்குள்ளே அடக்கிக் கொள்ளவும். இதுதான் வெகுமுக்கியம். இல்லையென்றால் வாணலி நாறிப் போய் விடும்.

தட்டில் கொஞ்சம் சுடுசோற்றினைப் போட்டு நாசமாப் போன ஜெர்சிப்பசு மாட்டின் தயிரைக் கொஞ்சூண்டு எடுத்து சூட்டோடு சூடாகச் சேர்த்து கொஞ்சம் கல் உப்பை எடுத்து சோற்றில் போட்டு கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து மெதுவாக கையால் பிசைந்து கொள்ளவும். எல்லாம் முடிந்ததா?

இப்போது ஒரு கவளம் தயிர்ச்சோறு அதன் பிறகு கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் மூன்றையும் ஒன்றாக்கி வறுத்து வைத்திருக்கும் கருவாட்டில் கொஞ்சம் எடுத்து நடு நாக்கில் வைக்கவும். அடுத்து என்ன? இனிமேல் படிக்கவா போகின்றீர்கள்.

சாப்பிட்டு முடித்து விட்டீர்களா? தட்டில் சோறும் இருக்காது, கருவாடும் இருக்காது. ஆனால் கருவாட்டு முள் இருக்குமே அதை மறந்து விடாதீர்கள். அப்படியே ஓரமாக எடுத்து வைத்த வெங்காயத்தை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள். சவுக் சவுக்கென கருவாட்டு வாசத்தோடு வெகு அருமையாக இருக்கும். அடுத்து முள்ளை ஒவ்வொன்றாக எடுத்து இரு விரல்களால் பிடித்துக் கொண்டு நாக்கில் வைத்து தடவினால் மிச்ச சொச்ச கருவாட்டின் சுவையும் நாக்கில் சேர சொல்லவா வேண்டும்? அனுபவித்துப் பாருங்கள். அழகான மச்சினிச்சி முகமும் மறந்து போகும். மறக்காமல் மச்சினிச்சிக்கு கொஞ்சம் அனுப்பி வைத்து விடுங்கள். மச்சினிச்சி இல்லாதவர்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள்.

வாளை மீன் கருவாட்டு வறுவலும் சுடச்சுட தயிர்சோறும் சாப்பிட்டுப் பாருங்கள். நிச்சயமாகச் சொல்கிறேன் அமிர்தத்தை மிஞ்சி விடும் இந்த உணவின் ருசி!

Friday, March 17, 2017

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு

”என்னங்க? வைத்தியரு இருக்காரான்னு கேட்டு போன் வந்துச்சு?”

“என்னா? வைத்தியரா? யாரது?”

“தெரியலிங்க, அவரு வந்தவுடனே அழைக்கச் சொல்றேன்னுச் சொல்லிட்டேன்”

இனி இவள் நக்கல் வேற தாங்க முடியாதே என்று நினைத்து முடிக்கவில்லை அதற்குள் போன் வர ”வைத்தியர் சம்சாரம் பேசுகிறேன்” என்று ஆரம்பித்தாள் மனையாள்.

யாரோ ஒருவர் எதைப் படிச்சாரோ என்னத்தைப் புரிஞ்சுக்கிட்டாரோ தெரியவில்லை. வைத்தியரு இருக்காருன்னு அழைச்சிருக்காரு போலன்னு நினைச்சுக்கிட்டு அவரைத் திரும்பவும் அழைத்தேன். மனதுக்குள் ஒரு குஷி இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் இடித்தது. அவர் ஏன் என்னை வைத்தியர் என்று அழைத்தார்? ஒரு வேளை புற்று நோய்க்கு மருந்து பற்றி எழுதி இருந்தேனே அதற்காக இருக்குமோ என்று கூட நினைத்தேன்.

எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் பிரச்சினை தேடி வரும் போல. பிளாக்கில் என்ன எழுதி இருக்கிறேன் எனப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துப் போனார் போல என்னை வைத்தியர் என்று அழைத்தவர். இது ஒன்று தான் பாக்கி இருக்கிறது. இனி அந்த வேலையையும் செய்து விட வேண்டியதுதான்.

என்னிடம் அருமையான மூட்டு வலி நிவாரணிக்கான தைலம் ஒன்றின் செய்முறை இருக்கிறது. இனிமேல் அதைத் தயாரித்து விற்பனை செய்து விட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்த எனக்குத் தலை கிறுகிறுக்காத குறைதான் போங்கள்.

அதைச் சொன்னால் நீங்கள் இரண்டு நாளாவது விட்டு விட்டு சிரித்துக் கொண்டே இருப்பீர்கள் என்பதால் சொல்லி விடுகிறேன். அவருக்கு ஒரு பெண் பழக்கமாம். அவருக்கும் அதுவுக்கும் நல்ல பிரண்ட்ஷிப் சென்று கொண்டிருந்ததாம். அதுக்குத் திருமணமாகி குழந்தைகள், கணவர் எல்லாம் இருந்தாலும் இவர் கூட நல்ல பிரண்ட்ஷிப்பாம். திடீரென்று அது இவருடன் பேசவில்லையாம். என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். அதை இவருடன் பேச வைக்க வேண்டுமாம். இதுதான் அவரின் பிரச்சினை. இவருக்கு நான் மருந்து கொடுக்க வேண்டும். இவர் என்னை என்ன நினைத்து வைத்தியர் என்று அழைத்திருக்கிறார் என்று இப்போது தெரிந்திருக்குமே?

ஆமாம், அதே தான். வசிய மருந்து வைத்தியர். மருந்து கொடுப்பவரெல்லாம் வைத்தியர் தானே? கேப்பிடேஷன் கட்டணம் கொடுக்காமல், நீட் எழுதலாமா கூடாதா என்றெல்லாம் யோசிக்காமல் அதுமட்டுமல்ல கல்லூரிக்கே போகாமல் எப்படி வைத்தியர் என்று அழைக்கப்படுகிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்? அவனவன் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து வைத்தியராகின்றான்கள். ஆனால் நானோ ஒரே ஒரு பதிவு எழுதியதன் காரணமாக வைத்தியராகி விட்டேன். 

மதுரை சூரியன் எஃப். எம் ரேடியோவிலிருந்து சுடன் பால் என்பவர் எனது மாந்திரீக வைத்திய அனுபவத்தைப் பற்றி பேட்டி எடுத்து ஒளிபரப்பினார். அன்றிலிருந்து ஆரம்பித்தது வினை. என் தொடர்பு எண்ணை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சத்தியம் செய்து வாங்காத குறையாகக் கேட்டுக் கொண்டேன். கையில் அடித்தா சத்தியம் செய்தேன், சும்மா வாயால் தானே சொன்னேன் என்று நினைத்து கொடுத்து விட்டார் போல சுடன்ன்ன்ன் பால்..!

யார் யாரோ போன் போட்டு  உங்களைப் பார்க்க வரணும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். ஆசிரமத்திற்குச் சென்றேன் அங்கு ஒருவர் என்னை உங்களது சிஷ்யனாக்கிக் கொள்ளுங்கள் என்று படுத்த ஆரம்பித்தார். அந்தக் கலை உங்களிடமிருந்து அழிந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் சிஷ்யனாகச் சேர விரும்புகிறேன் என்று அனத்த ஆரம்பித்தார். அவரிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன். 

மதுரையில் இருந்து ஒருவர் அழைத்து புலம்ப ஆரம்பித்தார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகளாம். வெல்டிங்க் பட்டறை வைத்திருந்தாராம். கண் தெரியவில்லையாம். இப்போது டெய்லரிங் யூனிட் போட்டு தொழில் செய்கிறேன் சார், இருந்தாலும் கடன் கட்டி மாளவில்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கிறது என்னை எப்படியாவது இந்தப் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கதற ஆரம்பித்தார். அவரின் அனத்தல் தாங்க முடியாமல் அவருக்கு கடன் பிரச்சினை மற்றும் தொழில் மந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர ஒரு உபாயத்தைச் சொல்லிக் கொடுத்தேன். என்ன ஆனதோ தெரியவில்லை? போனும் வரவில்லை. சரியாகி விட்டால் சந்தோஷம்.

இப்போது நினைத்துக் கொள்ளுங்கள். பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு இடத்தில் சொல்வாரே? 

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு!

Monday, February 27, 2017

மன்னித்து விடு - கொடூரத்தின் மனப்பான்மை

அஹமத் புக்காதீர் - எனக்குப் பிடித்த அரபி பாடகர். அவரின் லாஸ்ட் ப்ரீத் பாடல் தான் நெடுவாசல் கிராமத்தின் கடைசி மூச்சு என்கிற வீடியோவின் பின்னனியாக ஒலிக்கிறது. மனதை உருக்கும் அற்புதமான குரல். டன்டனக்க டனக்கு நக்கா கும்மு கும்மு இசை கருவிகள் இல்லாமல் வெறும் ஹம்மிங்க் சவுண்டுடன் அழுத்தப்பட்ட ஸ்ருதியுடன் அற்புதமாக உருகி இருப்பார்.

இதோ அந்தப் பாடல். 



மான் வகையறாக்கள் அஹமத் புக்காதீரைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதைத் தமிழில் கொண்டு வருவதுதான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்திருக்கும் போல. இவர்கள் எல்லாம் அப்படியே காப்பி அடிப்பதில் மன்னர்கள் அல்லவா? 

அஹமத்தின் ஃபர்கிவ் மீ என்றொரு அற்புதமான பாடலை கீழே இருக்கும் இணைப்பில் கேளுங்கள். படத்தொகுப்பு கண்ணீரை வரவழைத்து விடும். ஆனால் இப்பாடலில் இருக்கும் க்ரூரம் கொடுமையானது. பாடலைப் பாருங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும். பிச்சை போடுவது கூட க்ரூரம் என்கிறேன் நான். ஒரு சில விஷயங்கள் மனித தன்மை கொண்டதாக இருந்தாலும் இரக்கம் என்பது பிறரின் மீது செலுத்தும் ஆகப் பெரிய குற்றச் செயல் என்றே நினைக்கிறேன்.

தன் மானத்தைக் கீறி விடும் எந்த ஒரு மனிதாபினச் செயலானாலும் அது க்ரூரமே ! 


எனக்கு இதைப் போன்ற அனுபவங்கள் பல ஏற்பட்டன. ஒரே ஒரு தடவை பேருந்தில் தட்டுத் தடுமாறி ஏறி உட்கார்ந்தேன். அருகில் இருந்த ஒருவர் 100 ரூபாயைக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார். புரிகிறதா எனது இந்த பதிவின் அர்த்தம். இதைத்தான் கொடூரம் என்கிறேன்.

Thursday, February 23, 2017

எங்கே சென்றாயோ நீ?

நேற்றுக்கு முதன் நாள் இரவு நாளை ”திருப்பூர் வரைக்கும் போய்ட்டு வரலாமா? வக்கீல் உடனே வரச்சொல்கிறார்” என்றார் என் நண்பர். வெயில் அதிகமானதாலும் பணியும் அதிகமானதாலும் உடல் அயர்ச்சியடைந்திருந்தது. உண்மையில் நேற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. நண்பர் ஆறு வருடங்களுக்கு முன்பு வழக்கொன்றினைத் தொடுத்திருந்தார். 

வழக்கில் தொடர்புடையவரை அழைத்து இருவருக்கும் பொதுவாக ’பஞ்சாயத்து’ செய்து வைக்க முயன்று கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக வழக்கு விபரங்கள், தற்போதைய நிலை பற்றி விசாரிக்கச் சென்றால் சரியாக நேற்று வாய்தா தேதி. இரண்டாவது அழைப்பாக வர பதினைந்து நாட்கள் வாய்தா பெற்றுக் கொண்டு திருப்பூரிலிருந்து கிளம்பினோம். இனி இருவருக்குமான பஞ்சாயத்து மிச்சம் இருக்கிறது. யாருக்கும் சங்கடம் வராமல் நேர்மையாகச் செய்து கொடுக்க வேண்டும். 

ஏழு வருடங்களாக நடக்கும் பிரச்சினை ஏதோ ஒரு நொடியில் சரி செய்யப்பட்டால் நல்லதுதானே. மனிதர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க கொஞ்சூண்டு கவனம் தேவை. இல்லையென்றால் இது போன்ற பஞ்சாயத்துக்கள் தேவையற்ற எதிரிகளை உருவாக்கி விடும் ஆபத்து மிகுந்தவை. கத்தி மீது நடப்பது போலத்தான் இது. கொஞ்சம் பிசகினாலும் வெட்டி விடும்

திருப்பூரில் வெயில் 100 ஃபாரன்ஹீட்டைத் தொட்டது. எங்கெங்கும் காய்ந்து கிடந்த செடி கொடிகள் கண்ணில் பட்டன. காற்று உடலைச் சுட ஆரம்பித்தது. கண்கள் மசமசக்கத் தொடங்கின. பெட்டி பெட்டியாக காங்கிரீட் கட்டடங்கள் மட்டுமே தெரிந்தன. ஆனால் பச்சைகள்?? திருப்பூர் வெயிலில் பார்பிக்யூவில் வைக்கப்பட்ட மட்டன் போல வறுபட ஆரம்பித்தேன். நண்பர் காரை விரட்டிக் கொண்டிருந்தார். காரில் ஏசி இல்லை. வரும் வழியெங்கும் வெயிலின் தாக்கம் குறையவே இல்லை. அவினாசி வந்து சேர்ந்தோம். அங்கும் கொதித்துக் கொண்டிருந்தது. செல்பேசியில் கால நிலை அளவுகள் எகிறிக் கொண்டிருந்தது. கருவலூர் வழியாக கோவில்பாளையத்துக்கு வந்த பிறகு தான் வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. சிலுசிலுவென காற்று தன் சூட்டினைக் குறைக்க ஆரம்பித்தது.

ஏதோ ஒரு இடத்தில் கண்ணில் குட்டை  ஒன்று தென்பட்டது. அதில் தண்ணீர் கிடந்தது. அதைப் பார்த்ததும் தான் மனதுக்குள் கொஞ்சமே கொஞ்சம் சிலுசிலுப்பேற்பட்டது.

என் சிறு வயதில் நன்கு நினைவில் இருக்கிறது. தீபாவளி அன்றைக்கு வெடி வெடிக்க முடியாது. வானம் கொட்டிக் கொண்டே இருக்கும். மழையில் நெற்மணிகள் நனைந்து போய் விடும். மழை எப்போதும் பெய்து கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் தேங்கிக் கிடக்கும் குட்டைகளில் தவளைகளின் “டொர்ராங் டொர்ராங்” சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆலங்கட்டி மழையில் அடி வாங்கி இருக்கிறேன். வாசலில் வந்து கொட்டும் வெண்பனிக்கட்டிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து விழுங்கி இருக்கிறேன். கொட்டிக் கொண்டிருந்த மழை நான் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதை என்னால் உணர முடிகிறது.

குறுவை, சம்பா சாகுபடிகள் இப்போது இல்லை. கோடைச் சாகுபடியும் இல்லை. குளங்கள் பொறுக்குத் தட்டிக் கிடக்கின்றன. ஆடு மாடுகளைக் காணமுடியவில்லை. பசும் புற் தரைகளைக் கூட காணவில்லை. மரங்கள் வெப்பத்தில் வாட்டியவை போல சோம்பிக் கிடக்கின்றன. குளிக்கும் தண்ணீரில் நுரையே வருவதில்லை. உப்புச் சேர்ந்து தண்ணீரின் அமுது அழுக்காகிக் கிடக்கிறது.

என் வயதொத்தவர்கள் உங்கள் நினைவுகளைப் பின்னே ஓட்டிப் பாருங்கள். நம் வயதில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் பெய்த மழை இப்போது பெய்கிறது எனத்  தோன்றுகிறதா? இல்லை அல்லவா? ஆக நம் முன்னே ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது.

நம்மை விட்டு வெகுதூரம் போய் விட்டது மழை. தண்ணீரோ பூமியின் அடியாளத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டது. தண்ணீர் இல்லாமல் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். இனி குளிப்பது என்பது கூட எவராலும் முடியாது போய் விடும் போல. குடிக்கவே தண்ணீர் இல்லாமல் குளிப்பது எங்கே. டிவிக்களில் உடல் துர்நாற்றப்போக்கிகளின் விளம்பரங்கள் அதிகமாகின்றன.

மனித குலத்தை அழிக்கும் ஆயுதமாக தண்ணீர் நம் முன்னே நின்று கொண்டிருக்கிறது. காலம் தப்புவதற்குள் சரி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

வீடெங்கும் ஒரு மரத்தையோ தெருவெங்கும் மரங்களை வளர்த்து மழைக்கு அழைப்பு விடுப்போம். தண்ணீரைச் சேகரித்து வைக்க ஏற்பாடுகளைச் செய்வோம். 

இல்லையெனில் நம் வருங்கால சந்ததியினர் நாசா புதிதாக கண்டுபிடித்த கிரகங்களுக்கு செல்ல நேரிடும். ஜோசியக்காரர்களுக்கு கணக்குப் பிழையாகி விடும் ஆபத்தும் ஏற்பட்டு விடும். புதிய கிரகங்கள் புதிய கணக்குகள் என்றால் கொஞ்சம் சங்கடம் தானே???

Wednesday, February 15, 2017

புத்திசாலி சாமர்த்தியசாலி ஒரு நீதிக்கதை

புத்திசாலிகள் வெற்றிபெறுவதில்லை. சாமர்த்தியசாலிகளே வெற்றி பெறுகின்றார்கள். இரண்டு நபர்களை உதாரணமாகச் சொல்லலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புத்திசாலியானவர். நம் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் புத்திசாலி மட்டுமல்ல சாமர்த்தியசாலியும் கூட. அறிவு மட்டும் இருந்தால் பணியாளராக இருக்கலாம் . சாமர்த்தியமும் இருந்தால் முதலாளியாக இருக்க முடியும் என்பதற்கு இவர்களே சாட்சி.

சாமர்த்தியசாலிகளைப் பற்றிய ஒரு நீதிக்கதை உண்டு. அதை இப்போது படியுங்கள். 

ஒரு ஊரில் புத்திசாலி பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்குச் சொந்தமாகப் பெரிய ஆட்டு மந்தைக் கூட்டம் இருந்தது. நிலங்களும் பெரிய அளவில் இருந்தன.  அவன் ஆடுகளை வளர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல, அவைகளின் தோலுக்காகவும், கறிக்காவும் தான் வளர்த்து வந்தான். அவன் பணக்காரனாக இருந்தாலும் மகா கருமி. அவன் நிலத்தைச் சுற்றிலும் வேலி போட அவனுக்கு விருப்பமில்லை. வேலி போட்டால் செலவு அதிகமாகும் என்ற நினைப்பு. 

அந்த ஆடுகளில் ஒரு சில புத்திசாலிகள் இருந்தன. அவைகள் இவன் தங்களைக் கொன்று பிழைக்கின்றான் என்றும் பேசிக் கொண்டன. அதனால் கூட பல ஆடுகள் அருகில் இருக்கும் காடுகளுக்குத் தப்பிச் சென்றும் விட்டன. அடிக்கடி ஆடுகள் வேலி தாண்டிச் சென்றும் விடும். இதன் காரணமாக அவனுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டன.

இந்தப் புத்திசாலி பணக்காரன் செலவும் ஆகக்கூடாது, ஆடுகளும் தப்பித்துச் செல்லக்கூடாது, இதற்கொரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தான்.

ஒரு நாள் அனைத்து ஆடுகளையும் அழைத்து அவைகளிடையே பேச ஆரம்பித்தான்.

ஆடுகளுக்கு எப்போதும் இறப்பே வராது என்றும், அதன் தோல்களை நீக்கும் போது வலியே ஏற்படாது என்றும், அதனால் அவைகளின் உடல் நன்கு பாதுகாக்கப்பட்டு, மீண்டும் தோல் வளர்ந்து எப்போதும் சாவதே இல்லை என்றும் அவைகளுக்கு நம்பிக்கை ஊட்டி வசியப்படுத்தினான்.

ஆட்டு மந்தைக் கூட்டத்தின் மீது அவன் அளவற்ற அன்பு கொண்டுள்ளதாகவும், அவைகளின் நன்மைக்காக உலகில் இருக்கும் அத்தனை நலன்களையும் அவைகளுக்குச் செய்து வருவதாகவும், அந்த ஆடுகளின் நன்மையைத் தவிர வேறு எதையும் அவன் சிந்திப்பதே இல்லை என்றும், அவன் அவைகளுக்கு நல்ல எஜமானனாக இருப்பதாகவும் விவரித்துப் பேசினான்.

அவைகளுக்கு எந்தக் காலத்திலும் துன்பம் ஏற்படவே ஏற்படாது என்றும், அவைகளுக்குத் துன்பம் ஏற்படவே கூடாது என்பதற்காக அவன் தன் வாழ் நாளையே தியாகம் செய்து பணி செய்து வருவதாகவும் பேசினான். அப்படி அவைகளுக்குத் துன்பம் ஏற்பட்டு விட்டால் அது தான் உயிரோடு இருக்கும் வரையில் நடக்காது என்றும் வீராவேசமாகப் பேசினான்.

அதுமட்டுமல்ல அந்த ஆடுகளில் பல ஆடுகளே இல்லை என்றும் அவைகளும் நாளை நல்ல எஜமானனாகும் தகுதி உடையவை என்றும், பல ஆடுகள் சிங்கங்கள் என்றும், பல ஆடுகள்  புலிகள் என்றும், பல ஆடுகள் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்றும், பல ஆடுகள் தியாகமே உருவான தொண்டர்கள் என்றும் ஆடுகளையே ஆடுகள் இல்லை என்ற தோற்றத்தினை உருவாக்கினான். அவன் பேசியதைக் கேட்ட ஆடுகள் தங்களை ஆடுகளே இல்லை என நம்ப ஆரம்பித்தன.

அவன் பேசப் பேச ஆடுகளுக்கு அவன் மிக நல்ல எஜமானன் என்று தோன்றின. அவைகள் அவனை நம்பின. அன்றிலிருந்து எந்த ஒரு ஆடும் வேலி தாண்டிப் போவதில்லை. அவன் நிலத்துக்குள்ளேயே வசித்து வர ஆரம்பித்தன. அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடாக கொன்று தோலை உரித்து, கறியை விற்பனை செய்து சுகமாக வாழ்ந்து வந்தான்.

அந்த ஆடுகள் தாங்கள் கொல்லப்படுவதையோ, தாங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையோ அறிந்திருக்கவில்லை. தங்கள் எஜமானன் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தன.

கதையைப் படித்து விட்டீர்களா?

இந்தக் கதையில் வரும் ஆடுகள் யார்? அந்த சாமர்த்தியசாலியும் புத்திசாலியுமான எஜமானன் யார் என்று உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். ஆகவே.... !!!




Friday, February 10, 2017

எப்பொழுதும் எந்த நொடியும் சந்தோஷமாக வாழ்வது எப்படி?

போன் வருகிறது. பிள்ளை கீழே விழுந்து விட்டான். அடிபட்டு விட்டது என்கிறது அது. மனசுக்குள் திடுமென்று பயம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. எண்ணங்கள் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று அலைபாய மனதுக்குள் பாரம் அடுத்து அடுத்து ஏற்றப்பட்டுக் கொண்டே முடிவில் பெரும் துன்பகரமனதாக வேதனையில் விழுந்து வெம்மி விடும். பையனை நேரில் பார்க்கும் வரை வேதனையில் மனது வெந்து சாகும். அவனை நேரில் பார்த்தால் சின்ன அடி தான் என்றவுடன் மனசு லேசாகி விடும். அவ்வளவு நேரம் துயரப்பட்ட மனசு பட்டென்று லேசாகி சந்தோஷமாகி விடும். காரணம் அறியாமல் உண்மை தெரியாமல் மனது தனக்குள்ளேயே தவறான முடிவு எடுத்து துயரப்பட ஆரம்பித்து விடும். 

மனம் எப்போதுமே உண்மையை உணர்ந்து கொள்ளாது. மனதுக்கு முதல் எஜமான் உணர்ச்சிகள் தான். உணர்ச்சியின் பிடியில் சிக்கிய மனம் முழு உடலையும் ஆட்டுவிக்கிறது. கோபம் கொள்ளச் செய்கிறது. அழச் செய்கிறது. உண்மையை மறைத்து விடுகிறது. இறந்தகாலத்துக்குச் சென்று எதிர்காலத்துக்குச் சென்று இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி துயரத்தில் ஆழ்த்தி விடுகிறது.

இறந்த காலமும் இல்லை
எதிர்காலமும் இல்லை
இந்த இரு இல்லாமைகளுக்கிடையில்தான் மனம்
இருக்கிறது
அதனால் தான் துன்ப துயரங்கள்

மனதால் வாழ்வது துயர வாழ்க்கை
வேதனை மிகுந்த நரகம்
மனமே நரகம் தான்

சட்டென இதை உணர்ந்தால்
புதிய வாசல் பிறக்கும்
அது நிகழ்வின் தீர்ப்பு
இயல்பின் திறப்பு இது.

இருக்கிற ஒரே காலம் நிகழ்காலம் மட்டுமே
இருப்பதே அதுதான்
அதில் நீ இரு, அப்போது நீ விடுதலையடைவாய்
அதில் வாழ்க, அதுவே பரவசம்!

நன்றி : ஓஷோ - ஒரு கோப்பை தேநீர் புத்தகத்திலிருந்து ஒரு கவிதை

நான் சொல்ல வந்தது இதுதான். எது நடந்தாலும் என்ன நடந்தாலும் நடந்ததை அழித்து விட்டு புதிதாக ஆரம்பிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. நடந்து விட்டது இனி என்ன செய்யலாம்? நடந்து விட்டதை நமக்கு சாதகமாக பிறருக்கு பாதகம் ஏற்படா வண்ணம் சரி செய்ய முடியுமா? என்று மட்டும் தான் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டால் வாழ்க்கையின் போக்கு நிச்சயமாக மாறிப்போய் விடும். தட்டுத்தடுமாறி இப்பாதைக்கு மாறி விடுங்கள். எதையும் எளிதாக வெற்றி கொள்ளலாம்.

ஏதேனும் புரியவில்லை என்றால் மெயில் அனுப்பவும். விவரித்து எழுதுகிறேன்.

Friday, February 3, 2017

இந்தியாவின் அசைக்கமுடியாதவர்கள்

மலைகள் இணைய இதழின் 115வது இதழுக்காக அடியேன் எழுதிய “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்” என்றொரு கட்டுரை வெளியாகி உள்ளது. படித்துப் பாருங்கள். நான் எழுதியது உண்மை என்று நீங்கள் உணர்ந்தால் ஆசிரியர் சிபிசெல்வன் அவர்களுக்கு ஒரு மெயிலை அனுப்புங்கள்.


கட்டுரையை வெளியிட்டு ஆசிரியருக்கு நன்றிகள்.

கெணத்தடிப்பாம்பு - சிறுகதை

மலைகள் இணைய 114 இதழில் வெளியான கிணத்தடிப்பாம்பு என்கிற சிறுகதை இங்கு வெளியிடுகிறேன். ஆசிரியர் சிபிச் செல்வனுக்கு நன்றிகள் பல. மலைகள் இணையப்பக்க இணைப்பு : http://malaigal.com/?p=9735

இனி சிறுகதையை தொடர்ந்து படிக்கவும்:-

சாயங்காலம் பள்ளிக்கொடத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது கெணத்தடியில் ஆட்கள் குறைவாக இருந்ததைப் பார்த்தேன். வீட்டுக்கு வடக்கே இரண்டு தெரு தாண்டி கிழ மூலையில் பெரிய கெணறு ஒன்னு நாலு பொறமும் தண்ணி இறைக்க சகடைகள் தொங்கியபடி இருக்கும். மரத்தினால் செய்யப்பட்டிருக்கும் இந்த சகடைகள் மீது கயித்தப் போட்டு தண்ணி எறைக்கனும். கட கடவென சவுண்டு விட்டுக்கிட்டு சுத்தும் சகடைகள். வெத்து வாளி உள்ளே போவதும் தண்ணி வாளி வெளியே வருவதுமாய் பொழுதன்னைக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கும். யாராவது குளிச்சிக்கிட்டும், துணி தொவைச்கிட்டும், தண்ணி எடுத்துக்கிட்டும் இருப்பாங்க.

குளிக்கிறதுக்கும் துணி தொவைக்கிறதுக்கும் அந்தப் பகுதிப் பெண்கள் பொழுது மசங்கின நேரத்தில் அந்தக் கெணத்துக்குச் செல்வார்கள். பாவாடையை மார்பின் மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு கெணத்திலிருந்து நீர் எறைச்சு மேலே ஊத்திக் கொண்டு குளிப்பார்கள். கெணத்துக்கு குளிக்கச் செல்வதற்கு முன்பே சீவக்காயை வடிச்ச கஞ்சியோடு சேர்த்து குழப்பி தலையில் தடவி கொண்டை போட்டுக் கொள்வார்கள். குளிச்ச பின்னாடி வழுவழுன்னு மின்னும். கையோடு அழுக்குத் துணியையும், உப்புச்சவக்காரத்தையும் கொண்டு போவார்கள். அவங்க குளிக்கும் போது ரவுண்டா முட்டை மாதிரி இருக்கும் மைசூருசாண்டல் மேல்சோப்பு வாசம் அடிக்கும்.

கல்யாணம் ஆனவர்கள் கையோடு வாளியில் துவைக்க துணிகளையும்,. குழந்தைகளையும் அழைத்துச் சென்று வாளியில் தண்ணி எறைச்சு சிண்டுகளைக் குளிப்பாட்டி இடுப்பில் துண்டைக் கட்டி விட்டு தலையை காயவைன்னுச் சொல்லி விடுவார்கள். துணிகளைத் தொவச்சு பிழிஞ்சு வாளியில எடுத்து வெச்சுட்டு குளிப்பார்கள். அதுவரைக்கும் சிண்டுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், குளிக்கிற தண்ணி வழிஞ்சோடும் வாய்க்காப் பக்கமாக கால்களை நனைச்சுக்கிட்டும் அம்மாகிட்டே திட்டு வாங்கிக் கொண்டும் பராக்குப் பார்த்தபடி கழிப்பார்கள்.

அது பொதுக்கெணறு. யாரு வேண்டுமானாலும் தண்ணி எடுத்துக் கொள்ளலாம். சைக்கிளில் ரெண்டு பக்கமும் செப்புக் குடத்தைக் கட்டிக்கிட்டு ட்ரிப்அடிப்பார்கள் ஆண்கள். வேலையாட்களுக்கு தண்ணி சுமக்கிறது பெண்டு நிமித்தும் பெரிய வேலை. எல்லா வீட்டிலும் கெணறுகள் இருக்காது. ஒரு சில வீடுகளில் தான் கெணறு இருக்கும். வற்றவே வற்றாத தண்ணீர் அமிர்தமென சுரந்து கொண்டே இருக்கும் கெணறுகள் எங்கள் வீட்டிலும் இருந்தன.

கைகாட்டி கொல்லையில் ஒரு கெணறு இருந்தது. தண்ணீர் வற்றிப்போகவே போகாது. ஏற்றமிரைத்து தான் விவசாயம் நடக்கும். நெலக்கல்லை தான் அதிகம் பயிர் செய்வார்கள். உளுந்து, துவரை, மரவள்ளிக்கிழங்கு போடுவார்கள். கொல்லையைச் சுத்தியிலும் தென்னமரமும், பலாக்காய் மரமும் இருக்கும். இந்தக் கெணத்துத் தண்ணீ உப்புகரிக்கும். தென்ன மரத்துக்கும், பயிர்களுக்கும் ஏத்தம் போட்டு எறைச்சு தண்ணி ஊத்தனும். கல்லைக்கு வாய்க்காலில் வரும் தண்ணியை தட்டு வெச்சு விசிறி அடிக்கணும். தரை நனையனும். வடக்குக் கொல்லை சோம்பி வீட்டுக்காரரு போரைப் போட்டாரு. கெணத்து தண்ணீயெல்லாம் காணாமப் போச்சு.

வடக்கித் தெரு கெணத்துத் தண்ணிக் கொஞ்சம் சப்பைமாதிரி இருக்கும். குளிக்க மட்டும்தான் பயன்படும். ஆனால் எங்கள் வீட்டுக் கெணத்துத்தண்ணி குடிக்க டேஸ்டா இருக்கும். தெக்கித் தெருவிலிருந்தெல்லாம் தண்ணி கொண்டு போக தவலைப்பானை, கொடமெல்லாம் கொண்டு வந்து விடுவார்கள். இரும்பு பூட்டையில் தொங்கிக் கொண்டிருக்கும் வாளியில் இறைத்து நிரப்பிக் கொண்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு செல்வார்கள். அம்மா யாரையும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

கெணத்துக்கு உறை கொண்டு வந்து போட்டார்கள். மழை பேஞ்சா கெணத்து வாய் மண்ணெல்லாம் கரைஞ்சு போய் அகன்று விடும். கெணத்து வாயைச் சுத்திலும் ரவுண்டு ரவுண்டா புல் தரையைச் செதுக்கு அடுக்கி வைக்கணும். இருந்தாலும் வாய் அகண்டு போயிடும். வீட்டில் செமண்டு உரையை வாங்கி வந்து பதினெஞ்சு அடிக்கு போட்டு விட்டார்கள். அடிக்கடி கெணத்துக் கயிறு அறுந்து போகும். ரப்பர் கயிறு வாங்கி வந்து போட்டார்கள். இந்த ரப்பர் கயிறு பூட்டையில் சிக்கிக் கொண்டு இறைக்க முடியாது.

மழை பேஞ்சுடுச்சின்னா கெணத்தில் தண்ணீ நெறஞ்சு கிடக்கும். கையாலே தொடலாம். வழிந்தோடும். தண்ணி சுண்ணாம்பு கலந்த மாதிரி இருக்கும். கொஞ்ச நாளுல பளிங்கு மாதிரி ஆயிடும். தண்ணீ குறைஞ்சாத்தான் அம்மா வடக்கித் தெருக் கெணத்துக்கு குளிக்க அழைத்துச் செல்வார்கள். அந்த வடக்கித் தெரு கெணத்தடியைச் சுற்றிலும் நான்கடி அகலத்துக்கு சிமெண்ட் போட்டு பார்டரு கட்டி தண்ணி போக வழி வைத்திருந்தார்கள். மூன்று துவைக்கும் கல்லும் கட்டி இருந்தார்கள். அவ்வப்போது சண்டைகள் நடக்கும். கொஞ்ச நேரம் தான் சத்தமாக்க் கேட்கும். ஆம்பளைங்க யாரும் அந்தப் பக்கம் போக மாட்டாங்க. குளியலும் துவைத்தலும் முடிந்ததும் ஆரவாரமின்றிக் கிடக்கும். வடக்கித்தெரு சுப்பைத்தேவர் வீட்டுப்பக்கமாய் குளிக்கிற தண்ணி, துவைக்கிற தண்ணி வடிந்து போகும். அவர் வாழை போட்டிருந்தாரு. அந்த வாழைகளும் சவுக்காரத்தண்னி, சீயக்காய் தண்ணீ, வடிச்ச கஞ்சித் தண்ணி, மஞ்சத்தண்ணியெல்லாம் குடிச்சு வளமா வளந்து கொலை கொலையா தள்ளுச்சு.

சவுக்காரத்தண்ணி வாழைக்காய்னு சொல்லி ராவுத்தப்பய வெலையைக் குறைச்சுப்பிட்டான் குட்டியம்மாஎன்று சாயங்காலமா வீட்டு வந்த சுப்பையாத்தேவர் அம்மாகிட்டே புலம்பிக்கிட்டு இருந்தார். கைகாட்டியில ஏலக்கட வச்சிருக்கிற ராவுத்தருக்கு இந்த வெஷயத்தை எவனோ போய் சொல்லிப்புட்டான்என கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.

போன வாரம் வடக்கித் தெரு கெணத்துக்குள்ளே பாம்பு விழுந்துடுச்சுன்னு பேசிக்கிட்டாங்களேண்ணே, பாம்பைப் பிடிச்சாச்சா?” என அம்மா கேக்க ”அதையேன் கேக்கிற குட்டியம்மா! சம்முகம் வாத்தியாரு பொண்டாட்டி கெணத்துல தண்ணி எடுக்கப் போயிருக்கா, வாளியோடு தலையை நீட்டிகிட்டு பாம்பு வந்ததைப் பார்த்தவ கத்துன கத்துல ஊரே கூடிடுச்சு. அவளுக்கு பாம்பப் பார்த்துப் பயமா? என்னமா நடிக்கிறாங்கறே. பத்தடி நீளமெருக்கும். தண்ணிக்குல கிடந்து ஊருது. நல்லபாம்பு மாதிரி தெரியுது. எவனும் கிட்டக்கே போக மாட்டேங்குறானுங்க. இன்னும் எடுக்கலை இந்த சனிக்கிழமை ஊருல கூட்டம் போட்டு தான் ஆளை அனுப்பனும்னு அருணாலம் சொன்னான்” என்றார்.

இனி அந்தப் பக்கம் எவரும் போக மாட்டார்கள். வடக்கித் தெரு சுப்பையாதேவரு வாழைகளுக்குத்தான் சிரமம். சவுக்காரத் தண்ணி கெடக்காம வாடிப்போய்டும். தெக்கிவீடு சலுவா வீட்டில ரெண்டு கெணறு இருக்கும். சப்பைத்தண்ணின்னு. யாரும் சீந்த மாட்டாங்க. கைலி மாதிரி லுங்கியைக்கட்டிக்கிட்டு மேலே துண்டைப் போட்டுக்கிட்டு திரியும் சலுவாகிட்டே தண்ணி எரைச்சுக்கிறேன்னு எவரும் போய் கேக்கமாட்டாங்க. ராவுத்தரு வீட்டுல போய்த் தண்ணி எடுக்கறதான்னு வீராப்பு.

மேக்கால கொலுசு வீட்டில ஒரு கெணறு இருந்துச்சு. பூமியோட பூமியா ரெண்டு பக்கமும் கவட்டைக் கம்புல பெரிய மரச்சகடை மாட்டிக் கிடக்கும் கெணத்தைச் சுத்தியும் செடியும் கொடியும் மரமுமாய் இருக்கும். பாம்பு கீம்பு வந்துரும்னு அந்தக் கெணத்துப் பக்கமும் யாரும் போக மாட்டாங்க.

வீட்டுக்கு வீடு கெணறு இருந்தாலும் எங்க வீட்டுக் கெணத்துத்தண்ணி மாதிரி டேஸ்டுஎங்கேயும் இல்லைன்னுச் சொல்லிக்கிட்டே தெனமும் குடிக்கத் தண்ணி வேணும்னு சொல்லிக்கிட்டு வந்துகிட்டே இருப்பாங்க. பெரிய மாமரத்தடி நெழலு குளுகுளுன்னு இருக்கும். தண்ணி எடுக்க வர்ரவுங்க நெழல்ல உக்காந்து ஊர்க்கதை உலக கதையெல்லாம் அம்மாகிட்டே பேசிட்டுதான் கெணத்துல தண்ணி எறைக்கவே போவாங்க. அம்மாவும் அவங்கிட்டேப் பேசிக்கிட்டே ரெண்டு மூனு குடம் தண்ணியை வீட்டுக்கு கொண்டு வந்துடுவாங்க.

மார்கழி மாசம் வந்துச்சுன்னா குளிரு பின்னும். வாசப்பக்கம் வந்தா பல்லு தந்தியடிக்கும். பள்ளிக்கொடத்துக்குப் போக குளிக்கணும்கிறதை நெனச்சாலே சில்லிடும். சூரியன் கொஞ்சமா வெளிய வந்து தலையை நீட்டியவுடனே கிணத்துல தண்ணி எறைச்சு பொக்கையில நெப்பி வைச்சுக்கிட்டு குளிச்சா வெது வெதுன்னு இருக்கும். சூரியன் வாரதுக்கும் குளிக்கிறதுக்கும் ஸ்கூலுக்குப்போறதுக்கும் இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருக்கும். அவசர அவசரமா மோத்தண்ணிச் சோறை மாங்காய் ஊறுகாயோட தின்னுட்டு பைக்கட்டை எடுத்துக்கிட்டு பிரேயர் ஆரம்பிக்கிறதுக்குள்ளே போய்ச் சேர்வது பெரும்பாடா இருக்கும். தை ஒன்னாம் தேதி வந்துடுச்சுன்னா குளிரு கொஞ்சம் குறையும். இருந்தாலும் மார்கழி மாசக் குளிரு குளிருதான்.

கோடைகாலமென்று நினைக்கிறேன். சாயங்காலமா குளிக்கலாம்னு கெணத்தடிக்குப் போய் தண்ணி இறைக்கப்போனா உள்ளே கருகருவென பாம்பு நெளியுது. அம்மாகிட்டே வந்து சொன்னேன். மறு நாள் தட்டுக்கூடையில வைக்கோலப் போட்டு உள்ளே கட்டித் தொங்க விட்டாங்க. வேடிக்கைப்பார்க்க கருவேல மரத்தடியில இருந்த திண்டுல உக்கார்ந்திருந்தேன். அம்மா கெணத்தடிப்பக்கமா வரவே கூடாதுன்னுட்டாங்க. கூடையை மேலே கொண்டு வந்தா பாம்பு குதிக்குமுன்னு சொல்லியிருந்தாங்க. பயத்துல தான் தள்ளி உக்காந்திருந்தேன். ஆட்கள் சுற்றிலும் நின்று கொண்டு ஒரு ஆள் கயிறை இழுக்க மெதுவா தட்டுக்கூடை மேலே வந்தது. அதில் கயிற்றில் சுற்றிக் கொண்டு பனிரெண்டு நீளத்துக்குப் பாம்பு கூடையில இருந்த்தைப் பாத்து விட்டு ஆளுக எல்லாம் தெரிச்சு ஓடுனாங்க. கயித்தை மரத்துல கட்டிப்புட்டு கம்பை எடுக்க ஓடுனாங்க. அந்தப் பாம்பு அதுக்குள்ளே சீறிக்கிட்டு ஒரே தாண்டு. சரியா நான் உக்காந்திருந்த திண்டுக்கிட்டே விழுந்துச்சு. பயத்துல நான் கத்துன கத்துல பாம்பு வக்கப்போரு ஓரமா வேகமாகச் செல்ல ஒரு ஆளு ஓடி வந்து கம்பால ஒரே அடி. நடுங்கிப் போயிட்டேன். அத்தப் பெரிய கருகரு நாகப்பாம்பை பக்கத்துல பாத்தா சிரிப்பா வரும்? அம்மா என்னைத் திட்டிகிட்டே இருந்தாங்க. அதுதான் கடைசி. அந்தப் பாம்பைப் பார்த்ததுக்கப்புறம் கெணத்தடிப்பக்கமே போவதில்லை. வீட்டின் அருகில் இருக்கும் பொக்கைத்தண்ணியில தான் குளிப்பேன்.

டமிலா டமிலா

தலைப்பைப் பாத்ததும் ஏதோ வெளி நாட்டுப் பொண்ணு பேருன்னாதானே நினைச்சீங்க? இது அந்தமாதிரிக் கதை இல்லை. இது வேற கதை. அந்த லூசு பிரண்டு திடீருன்னு வந்துட்டான்.  அதுவும் விடிகாலையிலேயே வந்து உக்காந்துக்கிட்டான். அவனொரு பக்கம் இருக்கட்டுமுன்னு நெனச்சுக்கிட்டு பல்லு விளக்க பல்பொடியை எடுத்தேன்.

”கையிலே என்ன வைத்திருக்கிறாய்?” எனக் கேட்டான்.

“சதுரகிரி ஹெர்பல்ஸ் பற்பொடி” என்றேன்.

“என்ன தீடீரென்று பற்பொடிக்கு மாறி விட்டாய்?”

“என்னமோ தெரியலை, இந்த ஸ்டூடண்டுக போராட்டத்திலருந்து வெளி நாட்டுக்காரன் பொருளை வாங்கறதுன்னா கஷ்டமா இருக்கு?”

“ஓ....அப்படியா?????” என்று கேட்டு சிரித்தான்.

“ஏண்டா சிரிக்கெரே” என்றேன் கோபமாக.

“ஏண்டா தங்கம்? அந்தப் போராட்டத்துல கலந்துகிட்டவங்க எத்தனை பேருடா வேஷ்டி கட்டியிருந்தாங்க? எத்தனை பொண்ணுங்க தாவணி போட்டிருந்தாங்கன்னு பாத்தீயா?” என்றான் நக்கலுடன்.

ஏதோ வில்லங்கமா பேசப்போறானோ என்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“தங்கம்! அந்த போராட்டக்காரங்கள்ள எத்தனை பேரு தமிழ்ல கையெழுத்து போடுறாங்கன்னு கேட்டுப்பாரேன்” என்றான்.

கையிலிருந்த ஹெர்பல் பொடியை கீழே வைத்தேன். 

அதைப் பார்த்ததும்  “டமிலா....! டமிலா....!” என்று உரக்கச் சொல்லி சிரிக்க ஆரம்பித்தவன் எழுந்து சென்று விட்டான்.

எனக்குத்தான் ஒரு மாதிரியாக இருந்தது. நினைவு தெரிந்த நாளில் இருந்து ஆங்கிலத்தில் தான் கையெழுத்துப் போடுகிறேன். 

சதுரகிரி ஹெர்பல்ஸ் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

அவன் யார்? என்று உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் அவன் யாரென்று உங்களுக்குப் புரிந்து  இருக்குமே?

Wednesday, February 1, 2017

சிவன்கோவில் புளியமரம்

அமைதியான விடிகாலைப் பொழுது. மயிலொன்றின் அகவல் சத்தம் கேட்டு விழித்தேன். மூச்சு சரியாக ஓடிக் கொண்டிருக்கிறதா என்று கவனித்து விட்டு எழுந்தேன். பிள்ளைகள் இருவரும் இன்னும் சிறிது நேரத்திற்குள் எழுந்து கொள்வார்கள். விடிகாலை பொழுதின் அமைதி அவர்களுக்கு நற்சிந்தனை, ஊக்கம், சிறந்த செயல்பாடு ஆகியவற்றினைத் தரும் என்பதற்காக சிறு வயதிலிருந்தே ஐந்து மணிக்கு எழுந்து கொள்ள பழக்கப்படுத்தினோம். விடுமுறையானாலும் விடிகாலை ஐந்து மணி தான். இன்னும் கொஞ்ச நாட்களில் நான்கரை மணிக்கு பழக்கப்படுத்தி விட வேண்டும். இரவு ஒன்பதரைக்கு தூங்கச் செல்லவும் பழக்கப்படுத்தி இருக்கிறேன். 

அமைதியான காலைப் பொழுதின் துவக்கத்திலே படிப்பதையும், அலுவலக வேலைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து விடுவது வாடிக்கை. நாளொன்றுக்கு சிவில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் படித்து விடுவது வாடிக்கை. அள்ள அள்ளக் குறையாத அற்புதமான சட்ட விளக்கங்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என அசத்தும் தீர்ப்புகளைப் படிக்கவில்லை என்றால் எனக்கு நாளே ஆகாது. அதை முடித்து விட்டால் ஏகப்பட்ட கடமைகள் வரிசை கட்டி நிற்கும். ஒவ்வொன்றாய் முடித்து வர இந்த விடிகாலை ஒழுங்கமைவுச் செயல்கள் அன்றைய தொடர் பணிகளை எந்த இடையூறும் இன்றி செவ்வனே செய்து வர உதவிடும்.

நிசப்தம் மணிகண்டனின் வலைப்பூவை தினமும் படித்து விடுவதுண்டு. தன் வேலையையும் செய்து கொண்டு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை செம்மைப்படுத்தி உதவி வரும் மனப்பாங்குடன் இப்படியான ஆட்கள் பூமியில் அவதரிப்பது அரிதிலும் அரிது. மணிகண்டனை நினைக்கையில் மனது இளகி விடும். அந்த வகையில் தினமும் அவரின் பிளாக்கை படித்து விடுவது வாடிக்கையாகிப் போனது.

இன்றைக்கு அவரின் ஆளுமைன்னா என்னன்னு தெரியுமா? என்ற பதிவினைப் படித்து விட்டு கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். மனம் சலனமற்று இருந்தது. சிந்துவின் மனதை என்னால் உணர முடிந்தது. ஆணாக நான் என் உடலால் பட்ட துயரங்களை விட பெண்ணான அந்தப் பெண் பெரும் துயரங்களை அனுபவித்திருப்பார். வார்த்தைகளால் விவரித்து விட முடியாத வலிகள் அவை. என்னாலும் விவரித்து விட முடியாது. வலிகள் தரும் வேதனையை விட விவரிப்பது என்பது மிக அதிக வலியைத் தரும். இந்த உலகில் வலியும், வேதனையும், துன்பமும் இல்லாதவர்கள் தான் ஏது? ஒவ்வொருவரின் வலி அவரவருக்கு மட்டுமே சொந்தம். ஆறுதலான வார்த்தைகள் வேண்டுமெனில் சிறிது வலியைக் குறைப்பது போலத் தெரியலாம். ஆனால் உண்மையில் அது குறைவதே இல்லை. அவரவர் வலியை அவரவர் அனுபவித்துதான் ஆக வேண்டும். பிள்ளைகளானாலும் சரி, மனைவியானாலும் சரி. நம் வலியை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியுமா? முடியாது.

சிந்துவின் “எல்லோருக்கும்தான் துக்கம் இருக்கு...எனக்கு இருக்கிற துக்கம்தான் பெரிய துக்கம்ன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்...உங்க துக்கம்தான் பெருசுன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க..இல்லையா?” இந்த வார்த்தைகள் உண்மைதான். துக்கம் என்பது சாதிப்பதற்கான ஊன்றுகோல். வாழ்க்கையைக் கடந்து செல்வதற்கான பாதை. வாழ்வின் நிதர்சனத்தை சுட்டிக்காட்டும் சுட்டி. வாழ்வின் நிலையாமையை வெளிப்படுத்தும் வெளிச்சம். துக்கமும் துயரமும் துன்பமும் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை.

ஒவ்வொருவருக்கும் துக்கமும், தாழ்வு மனப்பான்மையும் இருந்து கொண்டே தான் இருக்கும். சமூகச் சூழல், பொருளாதாரச் சூழல் ஆகியவற்றை முன்னிருத்தி ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு நொடியில் துக்கமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் அவர்கள் வாழ்ந்து முடியும் வரை. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது.

எப்போதுமே ஊனமுற்றவனாக இருக்கிறேன் என்ற சிந்தனை வந்ததே இல்லை. என்னிடம் ஒரு சிலர் ”எப்படி சார் சமாளிக்கின்றீர்கள்?” என்பார்கள். ”உங்களால் ஓட முடியும், நடக்க முடியும் என்னால் அது இரண்டும் முடியாது அவ்வளவு தான் விஷயம்” என்றுச் சொல்லி முடித்து விடுவேன்.

சிந்துவின் அச்சீவபிள் டார்க்கெட்டை அவர் அடைந்து விட்டார் என்றால் அவரை வளர்த்த அந்த முகம் தெரியாத பெரியவர்களை விட நான் தான் அதிக சந்தோஷம் அடைவேன். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும். 

தடம் மாறிச் சென்று கொண்டிருக்கிறது. இதோ இணைப்புத்தடம் வந்து விட்டது.

ஐந்தாம் வகுப்பு வரை ஆவணம் அரசினர் துவக்கப்பள்ளியில் தான் படித்தேன். மாமா அப்பள்ளியில் பணி செய்து கொண்டிருந்தார். தரையில் போடப்பட்டிருக்கும் குட்டைப்பலகையில் அமர்ந்து தான் கல்வி. அனவயல் கணேசன் வாத்தியார் தான் பிரபலம், கணக்கு வாத்தியார். வாய்ப்பாட்டு சொல்லவில்லை என்றால் பின்புறம் பழுத்து விடும், உள்ளங்கைகள் இரண்டும் சிவந்து விடும். வாசகம் என்றொரு தோழன் இருந்தான். கணேசன் வாத்தியார் மூன்றாம் வாய்ப்பாடு சொல் என்றால் நன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு வரிசை தப்பி விடும். கால்சட்டையிலேயே ஒன்றுக்குப் போய் விடுவான். கைகாட்டியிலிருந்து வரும் விச்சாணி எனும் சிவசுப்ரமணியனுக்கு கால்களும், கைகளும் உதறெலெடுக்க ஆரம்பித்து விடும். ஒரு சில நாட்களில் உப்பு நீர் அபிஷேகத்தையும் நடத்தி விடுவான். விச்சாணி செய்திருக்கும் ஒரு செயல் ஆஹா ரகம். மனிதன் என்றால் மனிதன் அவன் தான். ஏலக்கடை மற்றும் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டும் விவசாயமும் செய்து வருகின்றான்.

துவக்கப்பள்ளிக்கு வடபுறம் சேரிக்குச் செல்லும் தார்ச்சாலை. சாலையின் வடபுறம் குடை போல பரந்து விரிந்து கிடந்த புளியமரம் ஒன்று இருந்தது. மரத்தின் நேர் மேற்கே சற்று வடபுறமாக சிதிலமடைந்து கிடந்த சிவன் கோவில் ஒன்றும் இருந்தது. அந்தச் சிவன் கோவிலில் இருக்கும் ஆவுடையார் சிலையை என் தாத்தா மாணிக்கதேவர் தான் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு தஞ்சாவூர் பக்கம் சென்று வண்டியில் கொண்டு வந்து சேர்த்தாராம். கம்பி போட்ட கதவுக்குப் பின்னால் பெரிய உருவத்துடன் கருகருவென இருப்பார் சிவனார்.  விழா நாட்களில் மாலையும் சந்தனமுமாகச் ஜொலிப்பார். பிற நாட்களில் தனி வாசம் தான். 



இந்தப் புளியமரத்தின் அடியில் தான் விவசாய வேலைகள் பலவும் நடக்கும். கதிர் அடிப்பது, நெற்மணிகளைத் தூசி இன்றி காற்றிலாட்டி சுத்தம் செய்வது, நெற்மணிகளைக் காய வைப்பது. கதிர் அடித்து போர் போட்டு வைத்து பின்னர் போர் அடித்து நெற்மணிகளைச் சேர்ப்பது, அவித்த நெற்மணிகளைக் கொண்டு வந்து காய வைப்பது, எள் அடிப்பது, தூசி தட்டி சுத்தம் செய்வது போன்ற அனைத்து வேலைகளும் இந்த மரத்தின் அடியில் தான் செய்வார்கள். நல்ல இனிப்பு புளியங்காய்கள் கிடைக்கும். பழங்களும் இனிக்கும். 

பள்ளியில் இடைவேளை விட்டால் போதும். மாணவர்கள் அனைவரும் அந்த மரத்தடிக்கு விளையாடச் செல்வதுண்டு. சிலர் மரமேறி உயரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். ஒரு சிலர் பளிங்கு வைத்து லாக் விளையாடுவர்கள். பெண்கள் நொண்டியாட்டம் விளையாடுவார்கள். கபடி விளையாடுவார்கள். ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிலர் அதன் பெருத்த வேர்களுக்கிடையில் துண்டு விரித்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் தாயம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒரு சில கிராமத்துப் பெண்கள் தரையில் பல்லாங்குழி பறித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில மாணவர்கள் கிட்டி விளையாடுவார்கள். பள்ளியில் மணி அடித்ததும் கூடுகளுக்குள் சென்று சேரும் பறவைகள் போல வகுப்புகளுக்குள் சென்று சேர்ந்து விடுவார்கள். அடியேனும் நாள் தவறாது நண்பர்களுடன் விளையாடச் செல்வதுண்டு.

புளியமரத்தின் நேர் வடக்கில் தூண்டிக்காரன் கோவில் உள்ளது. ஆள் உயரத்தில் குதிரையில் கையில் வாளுடன் முறுக்கிய மீசையுடன் தூண்டிக்காரன் உட்கார்ந்திருப்பார். கோவிலை ஒட்டி புதுக்குளம் இருக்கிறது. தூண்டிக்காரன் கோவிலின் நேர் மேற்கே பின்புறமாக பிடாரி அம்மன் கோவில் இருக்கிறது. இங்கு தான் ஊர் திருவிழாவின் போது முளைப்பாரி கொட்டி, பிடாரி அம்மனுக்கு ஆடு வெட்டி பலி கொடுத்து விழா எடுப்பார்கள். 

ஆவணம் கிராமத்து மக்களைத் தாயைப் போல அரவணைத்து ஆதரவளித்தது அந்தப் புளியமரம். சாதாரண மரமில்லை அது. பத்து ஆட்கள் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவு பெரியது. பெரிய பெரிய கிளைகள் விரிந்து கிடந்தன. அந்தப் புளியமரம் இப்போது அங்கு இல்லை. அது எப்போது வளர ஆரம்பித்தது என்ற வரலாற்றினைச் சொல்ல எவரும் இல்லை. அந்த மரம் பூமியிலிருந்து வெளிவந்து எண்ணற்றோருக்கு உதவிகளைச் செய்தது. காலம் மாற மாற அம்மரமும் காணாமல் போனது.

நேற்று விடிகாலையில் சிவன் கோவிலும், புளியமரமும் நினைவிலாடின. எழுதுவது போல கனாக்கண்டேன். எனக்கு விளையாட இடம் கொடுத்தது அந்தப் புளியமரம். அதன் நிழலில் நான் சந்தோஷமாக விளையாடினேன். அதன் நிழலில் மறைந்து போன சிவபக்தர் வேலாயுதனார் திருச்சிற்றம்பலம் சிவபெருமானைப் பற்றி வீச்செழுத்தில் எழுதிய ஆசிரியப்பா பாடல்களை அச்சுக் கோர்ப்பதற்காக, எனது அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுக்க இடமளித்தது அந்தப் புளியமரம். அவ்வப்போது பச்சைப்புளியங்காய்களை தின்னக் கொடுத்தது அது. அந்தப் பள்ளிக் கூடத்தில் படித்து முடித்து இன்றைக்கு சுமார் 30 வருடங்கள் கடந்து விட்டன. அந்த மரம் செய்த உதவியை நான் மறந்து விட்டேன். அதுவாகவே எனக்குள் இருந்து கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டது இன்றைக்கு. அந்தப் புளியமரத்தினை ஊர்க்காரர்கள் மறந்து இருக்கலாம். ஆனால் நான் மறக்கவில்லை. அது என்னை மறக்கவும் விடவில்லை. 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு 

(குறள் 110 - அதிகாரம்: செய்நன்றி அறிதல்)

மேலே கண்ட குறள் உங்களுக்குப் புரியும் தானே? 


Thursday, January 26, 2017

மனித வாழ்க்கையும் சூட்சும மஹாபாரதமும்

ஒரு வழியாக இந்த வருட ஆரம்பத்தில் மாணவர்களினால் பலரின் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்து விட்டது. மக்களிடையே வரவேற்பு பெற்ற இளம் மாணவர்கள் புதிய அரசியல் கட்சியை உருவாக்கலாம். மாவட்டம் வாரியாக நல்ல செயல் தலைவர்களை உருவாக்கலாம். கட்சியை நிர்வகிக்க கண்காணிக்க அதிகாரம் பெற்ற அமைப்பினை உருவாக்கலாம். அந்த அமைப்புக்கு தகுந்த நேரிய சீரிய செயல் திறமையும் புத்திசாலித்தனமும் மிக்க முதிய இளைஞர்களை நியமிக்கலாம். இது நல்ல தருணம். தமிழகத்தின் மாற்றுக் கட்சிக்கு ஏற்ற தருணம். இந்த தருணத்தை விட்டு விடாது தமிழர்களின் எதிர்காலத்திற்காக புதிய கட்சியினை உருவாக்கினால் வெறுத்துப் போய் இருக்கும் தமிழர்கள் தானாகவே புதிய கட்சியை அங்கீகரித்து விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட சகுனிகளும், சாணக்கியன்களும் இருக்கின்றார்கள். இந்த இருவரை விட மீடியா என்றொரு அரக்கனும் உண்டு. அதை விட ஜாதி என்ற அணுகுண்டும் இருக்கிறது. இவற்றை எல்லாம் விட சுய நலம் என்றொரு தீயசக்தியும் உண்டு. 

இவைகளைச் சரி செய்திட அல்லது சந்தித்திட நல்ல திட்டங்களும், நல்லவர்களும் இருந்தால் கட்சியை உருப்படியாக தயார் செய்து விடலாம். மாணவர்கள் செய்வார்களா என்று பார்ப்போம். அந்த ஒரு மலர்ச்சி தமிழகத்தில் மலருமா? ச.சாக்கள் விடுவார்களா? என்று தெரியவில்லை. திமுகவும், அதிமுகவும் மாறி மாறி மாணவர்களின் போராட்டத்தை மெச்சிக் கொண்டிருக்கின்றன. இதுதான் சரியான சமயம். அவசரப்படாமல் அட்சர சுத்தமான தெளிவான செயல்முறைகளுடன், கொள்கைகளுடன் ”இளைய தமிழர் கழகம்” உருவாகட்டும். அது நாளைய தமிழகத்தை உண்மையான தமிழர்களைக் கொண்டு மக்கள் சேவையைச் செய்யட்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் ஆசை. நிறைவேறுமா என்பது காலத்தின் கைகளில் உள்ளது.

அரசியலில் நொடிக்கு நொடி மாற்றங்கள் உண்டு. இப்போதைய முதல்வரும் அப்படியான முறையில் ஆட்சிக்கு வந்தவர் தான். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அரசியலில் பாலபாடம். அவலை விட்டு விட்டு எதார்த்தத்துக்கு வந்து விடலாம்.

”வாழ்க்கை சிக்கலாக இருக்கிறதே? மனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன செய்வதென்றும் புரிபடவில்லை” என்று சுப்ரமணியக்கவுண்டர் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரிடம் ஒரு சிறிய விளக்கத்தைக் கொடுத்தேன். அது உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். 

”மஹாபாரதத்தில் நல்லவர்கள் ஐந்து பேர் தீயவர்கள் நூற்றி ஒருவர். நல்லவர்களுக்கு உதவி செய்ய மனித வடிவில் கிருஷ்ணன். தீயவர்களுக்கு உதவிட சகுனி. சகுனியின் சிந்தனை எப்போதும் கிருஷ்ணனின் மீது. கிருஷ்ணனின் சிந்தனை எப்போதும் சகுனியின் மீது. யார் என்ன செய்வார்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்பது தான் இருவரின் நோக்கமாக இருந்தது. கிருஷ்ணன் நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காக்க போராடினான். சகுனியோ நல்லவர்களை ஒழித்திட மட்டுமே சிந்தித்தான். 

இந்த உலகம் இயங்குவதே தீயவர்களால் தான். உலகெங்கிலும் நல்லவர்களே இருந்தால் அரசியல் இருக்காது. அரசாங்கம் இருக்காது. ராணுவம் இருக்காது. எல்லைகள் இருக்காது. இத்தனையும் இருப்பது தீயவர்களால் தான். 

பூமி ஒன்றே ஒன்றுதான். ஒருபுறம் இருளும் ஒரு புறம் வெளிச்சமும் இருப்பது இயற்கை. அது போலத்தான் நல்லவர்களும் தீயவர்களும் இந்தப் பூமியில் இருப்பது. வாழ்க்கையின் மூலாதாரமே இந்தப் போராட்டம் தான். இந்தப் பிரிவினர் இல்லையென்றால் உலகம் தன் இயக்கத்தை நிறுத்தி விடும்” என்றேன்.

”ஆமாங்க, ஆமாங்க, சரியாச் சொன்னீங்க!” என்று ஆமோதித்தார்.

“சரி கவுண்டரே! இப்போது மனிதர்களை மஹாபாரதத்தை வைத்து எப்படி புரிந்து கொள்வது எனச் சொல்லித்தருகிறேன்” என்றேன்.

“சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று பரபரத்தார்.

”ஒரு கல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கல் நீங்கள். அந்தக் கல்லைச் சுற்றிலும் உங்களுக்கு உறவினர்களாக இருப்பவர்களை ஒவ்வொரு கல்லாக வைத்துக் கொண்டே வாருங்கள். எல்லா உறவினர்களையும் கல் வடிவில் வைத்து விட்டீர்களா? இப்போது ஒவ்வொரு உறவினர்களின் இயல்புகளை உங்களுக்குத் தெரிந்த வகையில் ஆராயுங்கள். அவர்களை மஹாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒப்பிடுங்கள். வெகுசரியான ஒப்பீடும் உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் புரிந்துகொள்ளவும் இயலும். எந்தக் கல் உங்கள் அருகில் இருக்கவேண்டும். எந்தக் கல் உங்களை விட்டு விலகி இருக்க வேண்டும். நீங்கள் எந்தக் கல்லிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது புரிந்து விடும். உங்கள் வாழ்க்கையில் யார் உங்களுக்குச் சகுனி என்பதும் தெரிந்து விடும்” என்றேன்.

“மஹாபாரதம் கதை அல்ல. அது சொல்வது வாழ்க்கையின் சூட்சும ரகசியங்களை. குரான் சொல்வதும் அதேதான். பைபிள் சொல்வது அதே தான். ஆனால் இவ்வுலகில் அலங்காரங்களும், புனைவுகளும் தான் புரிந்து கொள்ளப்படுகின்றன. சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள மறந்து விடுகின்றார்கள். நம் ஆன்மீக பேச்சாளர்கள் இருகின்றார்களே அவர்கள் தானிந்த இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள விடாமல் கதைகளைச் சொல்லிச் சொல்லி மனிதனை மயக்கத்திலேயே வைத்திருக்கின்றார்கள். அவர்கள் பாக்கெட்டுக்கு பணம் போக வேண்டும். பேசியே கெடுக்கும் கூட்டத்திலிருந்து வெளிவந்து விடுங்கள். இல்லையென்றால் மூளையைக் கழுவி உங்களிடமிருந்து உருவி விடுவார்கள்.

பாலத்தின் மீது வீடு கட்டாதே என்றொரு பதிவினை எழுதி இருந்தேன். அதைப் படித்தீர்கள் என்றால் பைபிள் சொல்லும் சூட்சுமம் புரியும். தமிழர்களைப் பொறுத்த வரை மஹாபாரதத்தை வைத்து தங்கள் வாழ்க்கையின் போராட்டம் எதை நோக்கி பயணிக்கிறது, யார் யாரெல்லாம் நமக்கு தீய செயல்களைச் செய்பவர்கள் என்பவைகளை எளிதில் கண்டு கொள்ளலாம். அவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம்”

”குறைவான நல்லவர்கள் அதிகமான தீயவர்கள். தீயவர்களின் நோக்கம் நல்லவர்களை அழிப்பது. நல்லவர்களின் நோக்கம் தீயவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது. இதுதான் வாழ்க்கைப் போராட்டம். இந்தப் போராட்டம் ஒவ்வொரு மனிதனின் சூழலுக்கு ஏற்ப அமைந்திருக்கும் தீய எண்ணங்களைக் கொண்டவர்களை எதிர்கொள்வதுதான்”

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். 

”கவுண்டரே! ஜோதிடத்தில் ஒரு கணக்கு உண்டு. எந்த ராசிக்காரருக்கு நட்பு ராசி யார்? பகை ராசிகள் யார்? சமமான ராசிகள் யார் எனச் சொல்வார்கள். அதை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் விஷயம் உங்களுக்குப் புரியும்” என்றேன்.

“அப்படிங்களா?” என்று கேட்டவர் தன் ராசியையும் தன் குடும்பத்தினர் ராசியையும் சொல்ல ஆச்சரியம் அவர் குடும்ப உறுப்பினர்களின் ராசியும் அவரின் ராசியும் ஒன்றுக்கு ஒன்று ராசியானவை. அசந்து போய் விட்டார்.

எந்தக் குடும்பத்தில் பிரச்சினை இருக்கிறதோ சரியான ஜாதகத்தின் படி உள்ள ராசியை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் விவரம் புரியும். எனக்கும் என் மகனுக்கு ராசிக்கு பகையாக அல்லவா இருக்கிறது என்ன செய்யப்போகின்றேன் என்று குழம்பி விடாதீர்கள். ஒதுக்கி வைத்து விடாதீர்கள். அது உங்களின் விதி. இதனைச் சரிசெய்ய ஒரு சூட்சுமம் இருக்கிறது. அதைச் செயல்படுத்தினால் குடும்ப உறவுகள் பலமடையும். அப்பனுக்கும் பிள்ளைக்கும் பிரச்சினை. அண்ணனுக்கும் தங்கைக்கும் சண்டை என்போர்கள் தங்கள் ராசியை ஆராய்ந்து பாருங்கள். இந்தக் கணக்கு ஒத்துப் போய் விடும்.

தங்கம், ஏதோ ஜோசியக்காரரை நம்பிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். எனக்கு நண்பனாக இருந்த ஒரு ஜோசியக்காரன் என்னை வைத்து அவன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான். இந்தக் காரியத்துக்காகத்தான் அவன் கல்யாணமே செய்தான். ஆகவே ஜோசியக்காரர்களை நம்புவதையும், எல்லாவற்றையும் அவர்களிடம் ஒப்புவிப்பதையும் முதலில் நிறுத்தி விடுஞ்கள்.

ஒரு ஜாதகத்தை ஆராய பலன் சொல்ல கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஆகும். பலன் சொல்பவர்களுக்குப் பிரச்சினை வரும். அதையும் சரி செய்து கொள்ளும் முறை தெரிந்தவர்களால் கணிக்கப்படும் ஜாதகம் தான் சரியானது. நொடியில் பலன் சொல்லும் ஜாதகம் பிசினஸ். எதுவும் நடக்காது. வாக்கில் சுத்தமில்லாதவர்கள் சொல்வது ஜாதகம் கணிப்பது அல்ல என்பது எனது அனுபவம். இது சரியா? இல்லையா? என்பதெல்லாம் ஒவ்வொருவரின் அனுபவத்தில் உள்ளது.

இதோ கீழே  நட்புராசிகள் பகை ராசிகளின் லிஸ்டை பீமராஜையர் தனது பிளாக்கில் எழுதி இருந்தார். அந்த விபரமும் அவரது பிளாக்கின் இணைப்பும் உள்ளது. இது ஒரு கணக்கு. இதையே பிடித்துக்கொண்டு தொங்க வேண்டாம். சரகலையைப் பயின்றவர்களுக்கு கிரகங்கள் வேலையே செய்யவிடாமல் தடுக்கும் ஆற்றல் உண்டு. ஆகவே கணக்கினை ஆராயுங்கள். சரியாக இருக்கிறதா? என்று புரிந்து கொள்ள முயலுங்கள்.

1.மேஷ ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
சிம்மம், தனுசு, மேஷம், மிதுனம், கும்பம்.
பகை ராசிகள்: கன்னி, மகரம், கடகம்.
2.ரிஷப ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
கன்னி, மகரம், மீனம், ரிஷபம், கடகம்.
பகை ராசிகள்: சிம்மம், தனுசு, கும்பம்.
3.மிதுன ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
துலாம், கும்பம், மேஷம். சிம்மம், மிதுனம்.
பகை ராசிகள்: விருச்சிகம், மகரம், மீனம்.
4.கடக ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம், கன்னி.
பகை ராசிகள்: துலாம், தனுசு, கும்பம், மேஷம்.
5.சிம்ம ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
தனுசு, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்.
பகை ராசிகள்: மகரம், ரிஷபம், மீனம், விருச்சிகம்.
6.கன்னி ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
மகரம், ரிஷபம், கன்னி, கடகம், விருச்சிகம்.
பகை ராசிகள்: மேஷம், தனுசு, கும்பம்.
7.துலாம் ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
கும்பம், மிதுனம், துலாம், சிம்மம், தனுசு.
பகை ராசிகள்: மீனம், மகரம், கடகம்.
8.விருச்சிக ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
மீனம், கடகம்,கன்னி, மகரம், விருச்சிகம்.
பகை ராசிகள்: கும்பம், மிதுனம், சிம்மம்.
9.தனுசு ராசிக்காரர்களுக்கு. நட்பு ராசிகள்:
மேஷம், சிம்மம், தனுசு, கும்பம், துலாம்.
பகை ராசிகள்: ரிஷபம், கன்னி, கடகம், மீனம்.
10.மகர ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
ரிஷபம், கன்னி, மகரம், மீனம், விருச்சிகம்.
பகை ராசிகள்: மேஷம், சிம்மம், மிதுனம், துலாம்.
11.கும்ப ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
மிதுனம், துலாம், தனுசு, மேஷம், கும்பம்.
பகை ராசிகள்: கடகம், விருச்சிகம், கன்னி, ரிஷபம்.
12.மீன ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம், மகரம்.
பகை ராசிகள்: மிதுனம், துலாம், சிம்மம், தனுசு.
நட்பு பகை ராசிகளைத்தவிர மற்ற ராசிகள் சம ராசிகள் என்று அறியவும்.
நன்றி :பீமராஜய்யர்

குறிப்பு: இந்த உலகத்தின் மிகப்பெரிய வியாபாரப் பொருள் என்னதெரியுமா? தெரிந்தால் எனக்கு மெயில் அனுப்பவும். தெரியவில்லை என்றால் பொறுத்திருங்கள். விவரமாக எழுதுகிறேன்.