குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Wednesday, January 11, 2017

திருவாதிரை விரதம்

அம்மு பிறந்த பிறகு தான் திருவாதிரை விரதம் பற்றித் தெரிய வந்தது. தஞ்சை வடிகால் பகுதியிலிருக்கும் எங்களூரில் திருவாதிரை விரதத்தை செட்டியார்கள் தான் பிடிப்பார்கள் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். எங்களூரில் திருவாதிரை என்றால் என்ன என்று கேட்பார்கள். முதன் முதலாக மாமியார் வீட்டிலிருந்து ஏழு கறி கூட்டும் திருவாதிரைக் களியும் வந்தது. புத்தம் புதிய சுவையில் முதன் முதலாக சுவைப்பதால் வெகு அருமை என்றுச் சொல்லி விட்டேன். மெதுவாகப் பேசும் வழக்கமே இல்லையாதலால் சற்றே உரக்கச் சொல்லி அது மாமியார் காதிலும் விழுந்து விட்டது. மனையாள் முறைத்துக் கொண்டிருந்தார். அவரவருக்கு சில பிரச்சினைகள் இப்படி உண்டாகி விடுகின்றன. உண்மையைக்கூட உரத்துச் சொல்லி விட முடியாத ஒரு சில தருணங்களில் இதுவும் ஒன்று.

இப்படித்தான் நான் குடும்பத்தோடு உறவினர் ஒருவர் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்றிருந்தேன். மட்டன் குழம்பும், ஆம்லேட்டும் மனையாள் செய்திருப்பார் போல. மதியம் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உறவினர் மட்டன் குழம்பு அருமை அதை விட ஆம்லேட் சூப்பர் என்று ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார். ஆண்கள் எப்போதும் மாறுவதே இல்லை. 

இரவு உணவின் போது  மட்டன் குழம்பை தொட்டு இட்லியோடு நாக்கில் வைத்தேன். நம்பவே மாட்டீர்கள். தீக்கங்குவை எடுத்து நாக்கில் வைத்தது மாதிரி இருந்தது. அவ்வளவு மிளகாய்ப்பொடி. உறவினர் கண்களில் கங்கை கொட்டிக் கொண்டிருந்தது. மதியம் நன்றாக இருக்கிறது என்றுச் சொன்ன மட்டன் குழம்பு இரவில் சரியில்லை என்று எப்படிச் சொல்வது? மாட்டிக் கொண்டார். எனக்கல்லவோ தெரியும் விஷயம்? உறவினரின் மனைவி ’சப்புக்கொட்டிக்கிட்டா சாப்பிடுகிறாய்’ என்று மிளகாயைக் கொட்டி குழப்பி வைத்து விட்டார். 

எதை எங்கு எப்படிச் சொல்கிறோம் என்பதில் தான் வித்தையே இருக்கிறது. மனையாளின் உறவினர் வீட்டில் சாப்பிடப் போய் சப்பாத்தியும் குருமாவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி விட்டேன். பைக்கில் வீடு வந்து சேரும் வரை இடுப்புச் சதை கன்னிப் போய்க் கிடந்தது. வீட்டுக்கு வந்து எரிச்சல் தீர களிம்பை எடுத்து தடவலாம் என்று நினைத்து மகளிடம் வெகு நிதானமாக ’களிம்பை எடுத்து வா’ என்றுச் சொன்னேன். பய மக, விக்ஸை எடுத்து வந்து தர நானோ ஏதோ நினைப்பில் எடுத்து எரிச்சல் வந்த இடத்தில் தடவ உடம்பெங்கும் எரிச்சலுடன் வலியும் சேர்ந்து பரவ சப்பாத்தியும் குருமாவும் போன இடம் தெரியவில்லை. அத்தோடு முடிந்த அந்த உறவினர் வீட்டுக்குச் செல்வது. ஆனால் மனையாள் சென்று வருவார். அங்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவிர்த்து விடுவேன். எதற்கு வம்பு? என் மகள் இருக்கிறதே சரியான வம்புப் பேர்வழி. நான் அங்கு ஏதாவது சொல்லி இடுப்புக் கிள்ளப்பட அம்மு ஆசிட்டைக் கொண்டு வந்து ஊற்றி விடும். திட்டவா முடியும்? வேதனை எனக்கல்லவோ?

இப்படியான ஒரு சில அனுபவங்களின் காரணமாக இப்போதெல்லாம் சைகை காட்டி விடுவதுண்டு. இருந்தும் ஒரு இடத்தில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன். அதை எழுதினால் வேறு ’ரசப்பார்வை’ வந்து விடும் என்பதால் விட்டு விடுகிறேன். நானென்ன சாருவா? மதனகாமராஜா கதை எழுத?

இன்றைக்கு விடிகாலை மூன்று மணிக்கே துயிலெழுந்து விட்டேன். துயிலெழும்போதே சரகலைப்படி மூச்சு எந்தப் பக்கம் ஓடுகிறது என்று கவனித்து அது சரியில்லை எனில் சரி செய்துதான் எழுவேன். இல்லையென்றால் எனக்கு அன்றைய நாள் சரியான ரகளையான நாளாக போய் விடும். சரகலையை ஓரளவு தெரிந்திருப்பதால் இப்போதெல்லாம் கொஞ்சம் ஃப்ரீயாக இருக்க முடிகிறது.

நேற்றே எனது அய்யர் நண்பரை அழைத்து திருவாதிரை எப்போது ஆரம்பிக்கிறது எத்தனை மணிக்குள் சாமி கும்பிட வேண்டுமென்று விசாரித்துக் கொண்டிருந்தார் மனையாள். 

காய்கறிகள், முட்டைக்கோஸ் மற்றும் உருளை பட்டாணி கூட்டு, தக்காளி, வெங்காயம், இஞ்சி, மிளகாய் எல்லாம் சுத்தம் செய்து தேங்காய் திருகி எடுத்துக் கொடுத்து விட்டு காலைக் கடன்களை முடிந்து வெளி வந்தால் அடுப்பில் சட்டியேற்றி சமைப்பது என்ற பெரிய வேலையை நிரம்பவும் துன்பப்பட்டு துயரப்பட்டு வியர்க்க விறுவிறுக்க சமைத்துக் கொண்டிருந்தார் மனையாள். ஏழு மணிக்குள் எல்லாம் தயார்.

பூஜை அறைப்பக்கம் போகவே இல்லை. தீபத்தட்டு வெளியில் வர தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டேன். கையில் மஞ்சள் கயிறு கட்டப்பட்டது. நாம் கழுத்தில் கட்டுவோம். திருவாதிரை அன்றைக்கு நம் கையில் கட்டுவார்கள். 

சாப்பிட உட்கார்ந்தோம். உப்பு, ஊறுகாய், அப்பளம், முட்டைக்கோஸ் பொறியல், உருளை பட்டாணிக்கூட்டு, திருவாதிரைக் களி, ஏழு கறிக் கூட்டு பரிமாறப்பட்டது. 

”அப்பா, களி எப்படி இருக்கிறது?” என்று அம்மு கேட்க நானோ எப்போதும் போல வேறு எங்கோ இருக்கிறோம் என்ற நினைப்பில் “சூப்பரா இருக்கு அம்மு!” என்றுச் சொல்லி விட்டேன். 

“அம்மு! இதே வாய் தான் சொல்லுச்சு எங்க அம்மா செய்யுற களிதான் சூப்பரா இருக்குன்னு” என்றார் மனையாள்.

மனதுக்குள் திகீர் என்றது. இதைத்தான் திருடனுக்கு தேள் கொட்டுவது என்பார்களோ என நினைத்துக் கொண்டேன். எத்தனை ஆண்டுகளானாலும் ’வெச்சு செய்யுறதுன்னு’ இதைத்தான் சொல்வார்கள் போல. பதினோறு வருஷமாச்சு நான் அந்த வார்த்தைகளைச் சொல்லி. எத்தனை வருடம் ஆனாலும் தான் என்ன? வாயிலிருந்து வெளியேறின வார்த்தைக்கு ஒரு வலிமை எப்போதும் உண்டல்லவா? 

ஆகவே நண்பர்களே! சொல்வதைச் சொல்லி விட்டேன். எங்கு எதை எப்படிப் பேசுகிறோம் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.

திருவாதிரைக் கொண்டாடி விட்டீர்கள் தானே??? சிவனுக்கு உகந்த நாளாம் இது. மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று வாருங்கள்.

Tuesday, January 10, 2017

தொலைக்காட்சியின் கொடூரம்

வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக கவனித்தால் அப்பொருள் ஏதோ ஒரு தொலைக்காட்சி வழியாக நமக்குள் புகுந்து வீட்டுக்குள் வந்து இருக்கும். துணி துவைக்கும் சோப்பிலிருந்து சானிட்டரி நாப்கின் வரை ஒவ்வொரு பொருளும் டிவி மூலமாகத்தான் விற்கின்றார்கள். டிவி என்பது பொழுதுபோக்கு என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. அது ஒரு மார்க்கெட்டிங்க் சாதனம். அதுமட்டுமா அந்த மார்க்கெட்டிங்க் செய்யும் டிவியை நாமே விலைகொடுத்து வாங்கி மாதா மாதம் அதற்கு சம்பளம் வேறு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். யாரோ ஒருவரின் பொருளை விற்பதற்கு நாம் செலவு செய்து ஏமாந்து கொண்டிருக்கிறோம். வீட்டிலுள்ள பொருட்களின் அவசியத்தினை யோசித்துப் பார்த்தால் தேவையில்லாத பொருட்கள் தான் வீடு நிறைய கிடக்கும். வாங்கிய நொடியிலிருந்து அப்பொருளின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

ஆறு இலட்ச ரூபாய் போட்டு வாங்கும் காரின் விலை, வாங்கிய அடுத்த நொடியில் குறைந்து விடுமா இல்லையா? கார் பயன்படுத்தத்தான் வாங்குகிறோம் ஆனால் அதன் மதிப்பு? அதுமட்டுமா காரைத் தொடர்ந்து அதற்கு பொண்டாட்டிக்குச் செய்யும் செலவை விட அதிகமல்லவா செலவழிக்கின்றோம். யோசித்துப் பாருங்கள். காருக்கு ஆகும் செலவு கொஞ்சமா நஞ்சமா? 

ஒரு ரூபாய் செலவு செய்தால் அதன் பயன் என்ன என்று யோசித்துப் பாருங்கள். அந்த ஒரு ரூபாயைச் சம்பாதிக்க நாம் படும் பாடு என்ன என்று நினைத்துப் பாருங்கள். கையில் காசு இல்லாமல் இருக்கும் போது தான் காசு சம்பாதிக்க நாம் என்னவெல்லாம் இழந்திருக்கிறோம் என்று புரியவரும். 

எனக்கொரு தோழி இருக்கிறார். வாரம் தோறும் நகைக்கடை செல்பவர். டிசைனர் சாரி தான் உடுத்துவார். ஒரு நாள் அவரைச் சந்தித்தபோது காட்டன் சேலையில் எளிமையாக இருந்தார். கண்கள் விரிய அவரை நோக்கிய போது புரிந்து கொண்டு, ”தங்கம், ஒரு நாள் இருப்பந்தையாயிரம் ரூபாய்க்கு சேலை எடுத்து அணிந்து கொண்டு திருமண விழாவிற்குச் சென்றேன், பெருமையாக இருந்தது. எல்லோரும் என்னைப் பார்க்கின்றார்கள் என்று தற்பெருமை தாங்க முடியவில்லை. படியில் ஏறிக் கொண்டிருந்த போது கால் வழுக்கி விழுந்தேன். அந்தச் சேலை நார் நாராகக் கிழிந்து விட்டது. அத்தோடு அனைவரும் வேடிக்கைப் பார்க்கும்படி கேவலமாகப் போய் விட்டது. அங்கு வந்திருந்த ஒரு பாட்டி 250 ரூபாய்க்கு ஒரு காட்டன் சேலை வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தால் இந்த அசிங்கம் தேவையா? ஊர் முழுக்க உன் உடம்பைப் பார்த்து விட்டார்களே, இந்தச் சேலையை புத்திசாலிப் பெண் எவராவது வாங்குவாரா? என்று கேட்டார். எனக்கு அந்த நொடியில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. என்னதான் தேய்த்து தேய்த்துக் குளித்தாலும் குளித்து முடித்த அடுத்த நொடியிலிருந்து நம் உடம்பு நாற ஆரம்பித்து விடுகிறது தங்கம். வீட்டுக்கு வந்து பீரோவைத் திறந்து கணக்கெடுத்துப் பார்க்கிறேன் கிட்டத்தட்ட அரை கோடி ரூபாய்க்கு புடவைகள். எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் நாராய் கிழிந்து போய் விடும். நிலம் வாங்கிப் போட்டிருந்தாலும் விலை ஏறி இருக்கும். ஏதோ உபயோகமாக இருக்கும். ஆனால் இந்தப் புடவைகளால் எனக்கு என்ன பயன்? யோசித்தேன், இதோ இப்போது நீங்கள் பார்க்கும் நான், அனுபவம் தான் கற்றுக் கொடுக்கிறதுப்பா!” என்றார்.

இந்த டிவியைப் பற்றி எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சிறிய வயதில் டியூசன் சென்று விட்டு வரும் போது வி.எஸ்.எம். ராவுத்தர் வீட்டில் பாசமலர் படம் ஓடிக் கொண்டிருந்தது. கருப்பு வெள்ளை டிவியில் டெக் போட்டு தீன் மியூசிக் கடையில் கேசட் எடுத்து வந்து அந்த வீட்டிலிருந்தோர் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் வேண்டா விருந்தாளியாகச் சென்று படம் பார்க்க உட்கார்ந்து கொண்டேன். ஆயிற்று மணி ஒன்பது. ஏழு மணிக்குள் வீட்டுக்கு திரும்பி வரும் பையனைக் காணவில்லை என்று ஊர் முழுக்க வலை வீசி தேடி இருக்கின்றார்கள். டியூசன் வாத்தியார் ஜோசப் வீட்டுக்கு ஆள் சென்று விசாரித்து வந்திருக்கின்றார்கள். வீட்டில் பெரிய ரகளை நடந்து கொண்டிருப்பது தெரியாமல் நான் படம் முடிந்து வந்து சேர்ந்தேன். அருகிலிருந்து பூவரசு மரத்துக் குச்சியை பிடுங்கி எடுத்து விளாசு விளாசுன்னு விளாசிவிட்டார் மாமா. 

அடுத்த ஒரு வாரத்தில் டயனோரா டிவி வந்து விட்டது. பெரிய ஆண்டனாவிலிருந்து வயர் போட்டு கருப்பு நிறத்தில் கதவுகள் கொண்ட டயனோரா டிவிக்கு புதிய மேஜை ஒன்று அடித்து அதில் வைத்து விட்டார்கள். அடியேன் தான் டிவி ஆபரேட்டர். 

கபடி விளையாடுவது, பம்பரம் விடுவது, பல்லாங்குழி ஆடுவது, தாயக்கட்டை உருட்டுவது,  பட்டம் விடுவது, மீன் பிடிக்கச் செல்வது, நவாப்பழம் பறிக்கச் செல்வது, தட்டான் பிடிப்பது, பொன் வண்டு பிடிப்பது, ஒளிந்து விளையாடுவது இப்படி அனைத்து விளையாட்டுக்களையும் டிவி தனக்குள் இழுத்துக் கொண்டது. பள்ளி, டியூசன் விட்டு வீடு வந்ததும் டிவி. 1991 வாக்கில் மதியம் போல சன் டிவி ஆரம்பிப்பார்கள். பதினோறு மணி வரை டிவி பார்ப்பேன். படிப்பதில்லை, தட்டைப் பார்த்துச் சாப்பிடுவதில்லை. இப்படி பல வேலைகள் அனைத்தும் டிவியின் முன்னாலே முடங்கிப் போயின. கிணற்றடியில் நானே தயார் செய்திருந்த தோட்டம் தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து போய் கருகிப் போயின. அந்தளவுக்கு டிவி என்னை ஆக்ரமித்திருந்தது. இது நாள் வரை யோசித்துப் பார்க்கிறேன் டிவியால் நான் பெற்றது என்ன என்று ஒரு எழவும் புரியமாட்டேன் என்கிறது. டிவியால் எனக்கு என்ன நன்மை கிடைத்தது என்று யோசித்தால் என் மீதே எனக்கு எரிச்சல் வருகிறது. எவ்வளவு முட்டாளாய் இருந்து விட்டோம் இத்தனை நாளாக என்று மீண்டும் மீண்டும் எரிச்சல் வருகிறது. 

எல்லா வீட்டிலும் முக்கிய அங்கத்தினராக டிவி மாறிப் போய் விட்டது. எங்களூர் பக்கம் சித்தி சீரியலில் ஒரு பெண் இறந்து போனதற்காக பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது குளத்தில் குளித்து விட்டு வந்தார்கள் என்றுப் பேசிக் கொண்டார்கள். புருஷன்கள் எவரும் ஒன்பது மணி வரை வீட்டுப்பக்கம் செல்வதில்லையாம். ஊரெல்லாம் கருப்பு வயர்கள் தொங்கின. வீடெல்லாம் டிவிக்கள். மாலை நேரங்களில் பெண்கள் எவரும் வீட்டை விட்டு வெளியில் வருவதே இல்லை. நகரங்களில் சொல்லவே வேண்டாம்.

பிள்ளைகள் கார்ட்டூன் சானல்களில் உட்கார்ந்து விட்டார்கள். பெண்டுகள் நாடகம் பார்க்கின்றன. இளசுகள் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்து விடுகின்றார்கள். வயதானவர்கள் காலையிலிருந்து இயற்கை மருத்துவத்திலிருந்து பழைய சினிமா பாடல்கள் வரை பார்க்க ஆரம்பித்து டிவியின் முன்னால் தங்கள் உடல் நலத்தையும், வாழ்க்கையையும் முடக்கி விட்டார்கள். இனி டிவி இல்லாமல் எவரும் வாழவே முடியாது என்கிற நிலைக்குச் சென்று விட்டார்கள். இறைவனைக் கூட டிவியில் பார்த்து விடுகின்றார்கள். கோவில்களுக்குச் செல்லும் வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன.

அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள். டிவியினால் நாம் பெறுவது என்ன? பொழுது போக வேண்டுமா? ரேடியோவை ஆன் செய்து திருச்சி ரேடியோ கேளுங்கள். மறந்தும் எஃப்.எம்மைக் கேட்டு விடாதீர்கள். காதுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி நாளடைவில் உங்கள் காது ஜவ்வினைக் கிழித்து மருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்கள். ரேடியோ மிர்ச்சி செந்தில் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து தன்னுடன் நடித்த பெண்ணைக் காதலித்து இப்போது அந்தப் பெண்ணை டிவியில் நடிக்க வைத்து பணம் சம்பாதிக்கிறார். எஃப். எம்மைக் கேட்ட நீங்கள் கேனயர்களாக இருப்பது மட்டுமல்ல நேரத்தையும் இழந்து இருக்கின்றீர்கள். எனக்கு எப்போது எஃப். எம் ரேடியோ கேட்டுப் பழக்கமே இல்லை. 

டிவியில் விவாதம் ஆரம்பித்த காலத்தில் பார்ப்பதுண்டு. இப்போது செய்தி சானல்கள் பக்கம் திரும்புவதே இல்லை. தினசரி படிப்பதுண்டு, வாரப்பத்திரிக்கைகள் படிப்பதுண்டு. அத்துடன் நிறுத்தி விடுகிறேன். அவ்வப்போது டிஸ்கவரி சானல், ஆங்கில மொழி படங்கள் (அதுவும் சப்டைட்டில் இருந்தால் தான்) பார்க்கிறேன். குழந்தைகளும் அப்படியே. வீட்டில் நாடகம் பார்க்க மாட்டார்கள். புத்தகம் படிப்பதுண்டு, பசங்களுக்கு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துப் படிக்கவும், பம்பரம் விடுவது, தாயம் விளையாடுவது, தோட்ட பராமரிப்பு என்று பழக்கப்படுத்தி உள்ளேன். 

பெண்களுக்கு முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். சுத்த பைத்தியக்காரத்தனமான நிகழ்ச்சி என்று ஒன்று இருந்தால் அது சமையல் நிகழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை. செஃப் தாமோதரன் சமையல் குறிப்புகளைப் பின்பற்றினால் விரைவில் எமலோகத்திலிருந்து உங்களுக்கு ஓலைதான் வரும். செஃப் வெங்கடேஷ் பட்டின் குறிப்புகளைப் பின்பற்றி சமைத்தீர்கல் என்றால் மருத்துவமனைகள் உங்களை வா வா என வரவேற்க ஆரம்பிக்கும். வீட்டில் நம் காலத்தில் எப்படி சமைத்து உண்டார்களோ அதைப் போல சமைத்துக் கொடுங்கள்.

தொலைக்காட்சி பெட்டி எனும் கொலைக்காட்சிப் பெட்டியை அவ்வப்போது திறப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அது உங்கள் குடும்பத்தின் நலத்தையும் குடும்பத்தையும் கொன்றொழித்து விடும் என்பதை மறவாதீர்கள்.

Thursday, January 5, 2017

பாம்பு உடன் பயணம்

வாசலின் வடமேற்கு மூலையில் மண்வெட்டி இருந்தது. அதை எடுக்கச் சென்ற போது அதன் கீழே சுருண்டு கொண்டு படுத்திருந்தது அது. கட்டம் கட்டமாக நல்ல தடியாக இருந்தது. அலறிய அலறலில் அந்தப் பாம்பு பரலோகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பத்து வயதில் முதன் முதலாக தனியாக பாம்பு பார்த்த அனுபவம் மனதுக்குள் பயத்தினை எழுப்பி விட்டு விட்டது. பாம்பின் மீது அன்றிலிருந்து பயம் தொடர ஆரம்பித்தது.

வீட்டுக்கு மேல்புறம் செடி கொடிகள் மண்டிய நிலம் இருந்தது. அதன் வடமேற்கு மூலையில் பாம்புப் புற்றொன்று இருந்தது. அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டேன். பாம்புப் புற்று இருந்த இடத்திற்கு வடபுறம் என் வகுப்புத் தோழன் பழனிவேலின் தென்னந்தோப்பு இருந்தது. யாரும் அந்தப் பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் அந்தப் பாம்பு புற்றுக்குள் நாகங்கள் இருக்கின்றன என்று சொல்லக் கேள்வி.

ஒரு முறை வீட்டின் பின்புறத்தில் மாடுகள் கட்டி இருக்கும் வேப்பமரத்தடியைத் தாண்டி இருக்கும் முருங்கைமரத்தின் அருகில் காரப்பழம் மரம் இருந்தது. அதில் பழம் பறிக்கச் சென்றேன். அந்த இடத்தில் சிறிய எலுமிச்சை செடி ஒன்றிருந்தது. அதன் அருகில் ஏதோ அசைவது போலத் தெரிந்தது. தூர இருந்தபடி கல்லைத் தூக்கி அந்தப் பகுதியில் வீசினேன். திடீரென்று தலையைத் தூக்கி படமெடுத்து மிரட்டியது நாகப்பாம்பு. அவ்விடத்தில் இருந்த அடியேனை அடுத்த நொடி காணவில்லை. வீட்டுக்குள் வியர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திருந்தவனுக்கு, ”உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது” என்ற திட்டு கிடைத்தது. நானா அதுகளைத் தேடிப்போய் வம்பிழுக்கிறேன். அதுகள் அல்லவா என்னுடன் வம்பிழுக்க வருகின்றன? 

நல்ல மழை பெய்து வீட்டின் வடபுறமுள்ள கிணற்றின் வாய் வரைக்கும் தண்ணீர் நிரம்பி இருந்தது. அந்த தண்ணீர் பால் போல இருக்கும். குளிப்பதற்கு தண்ணீர் இறைக்கச் சென்ற போது அதற்குள் நல்ல நீளமான அது குளியல் போட்டுக் கொண்டிருந்தது. பூட்டைக்கயிற்றில் தட்டுக்கூடையை வைத்து அதன் மீது வைக்கோல் போட்டு உள்ளே விட்டபோது நீச்சல் அடித்தது போதும் என்று கருதி தட்டுகூடையில் ஓய்வெடுக்க வந்து விட்டது. மெல்ல கயிற்றை மேலே கொண்டு வந்தார்கள். அது நான் எங்கிருக்கிறேன் என்று பார்த்ததோ என்னவோ தலையைத் தூக்கி ஒரு படத்தை எடுத்து ஒரே குதி, தூரமே இருந்த என்னருகில் வந்து விழுந்தது அந்தப் பாம்பு. முடிகள் சில்லிட்டன எனக்கு. இப்போது நினைத்தாலும் அதே கதைதான். படத்தின் வியூபாயிண்டில் ஏதோ கோளாறு ஏற்பட வேறுபக்கமாய் வேகவேகமாகச் சென்றது. அதற்குள் ஒரே போடு. தோலை மட்டும் தனியாக உரித்துக் கொண்டு சென்று விட்டார் பாம்பு பிடிக்க வந்தவர். 

கோவை வீட்டின் முன்புறம் வேப்பமரம். முன்னாலே இரண்டு தென்னைமரங்கள், பின்புறம் இரண்டு தென்னை மரங்கள், கொய்யாமரம், கருவேப்பிலை, மருதாணிச் செடிகள் என்ற தோட்ட எஃபெக்டில் இருக்கும் வீட்டைச் சுற்றிலும் அதுகள் ராஜ்ஜியம் தான் அதிகம்.

நானும் மனையாளும் வெளியில் சென்று வீடு திரும்பினோம். வாயில் கம்பிகளில் ஒருவர் தொங்கி கொண்டிருந்தார். எதிர்த்த வீட்டுப்பையன் அதை பரலோக பிதாவிடம் அனுப்பி வைத்தான்.

வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். பத்து பனிரெண்டு அடி இருக்கும். ஊர்ந்து வந்து அப்படியே வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்புறமாகப் போனது. நான் உட்கார்ந்திருக்கிறேன் என்ற பயமெல்லாம் அதுக்கு இருந்ததா என்று தெரியவில்லை. பெட்ரூம் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு மயில்கள் ஆட்டம் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த பனிரெண்டடி ஜீவன் வேலியோரம் இருந்த இண்டு இடுக்குகளில் தலையை நீட்டி எதையோ தேடிக் கொண்டிருந்தது. பசங்களை அழைத்துக் காட்டினேன். நாங்கள் பார்ப்பதை கொஞ்சம் கூட சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

மனையாள் மேல் நிலைத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற மோட்டார் போடச் செல்லும் போது அருகிலிருக்கும் சின்னக் குச்சியின் மீது ஏறி தலையை நீட்டி அம்மணியைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் எங்கோ சென்று விட்டது. பயத்தில் முகமெல்லாம் வெளிறிப் போய் வெடவெடத்துக் கொண்டிருந்தார்.

இரவு பால்காரர் பால் ஊற்ற வரும் போது சின்னஞ் சிறிய அதுவை அம்மணி தெரியாமல் மிதித்தே முக்தி அடைய வைத்து விட்டார். அது என்ன பாம்பு? மிதித்ததால் விஷம் ஏதும் பட்டிருக்குமோ என்ற பயத்திலே இருந்தார். நானோ தூங்குவதாக பாவனை செய்து கொண்டு இரவுகளில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.

சமீபத்தில் மனையாளுக்கு கையில் பிராக்சர் ஏற்பட்டதால் பூச்சியூர் வைத்தியரிடம் வாரா வாரம் சென்று வந்து கொண்டிருந்தோம். வைத்தியரைப் பார்த்து விட்டு வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதிக்குச் சென்று வருவது வாடிக்கை. ஆசிரமத்திற்குச் செல்லும் போது அங்கு வரும் மெய்யன்பர்களுக்கு உணவு சமைக்க கொஞ்சம் காய்கறிகளை வாங்கிச் செல்வேன். கடந்த மாதம் கையை நீவி விடுவதற்காக பூச்சியூர் சென்றோம். ஆசிரமத்திற்காக வடவள்ளி உழவர் சந்தையில் கொஞ்சம் காய்கறிகளை வாங்கிக் கொண்டு பூச்சியூர் சென்றோம். 

பூச்சியூர் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து கொண்டு ஹோண்டா ஆக்டிவாவின் பின் சீட்டைத் திறந்து காய்கறிகளை சீட்டின் அடியில் வைக்கலாம் என்று நினைத்து திறந்தபோது சீட்டின் லாக் செய்யுமிடத்தில் சுருண்டு படுத்திருந்தது அது. வீட்டிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம். அந்தப் பாம்பு என்னுடன் கூடவே வந்திருந்திருக்கிறது. ஆடவில்லை அசையவில்லை. நிஷ்டையில் இருந்தது அது. கொஞ்சம் அதிர்வு ஏற்பட்டாலும் பாம்புகள் வெளியில் சென்று விடும். ஆனால் இந்தப் பாம்போ யோகத்தில் இருந்தது. மனதுக்குள் சிலீர் என்றது.  

அங்கிருந்த சலூன்காரர் கம்பினைத் தூக்கிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும், ”அய்யோ அது சுருட்டை” என்றுச் சொல்லி தூரப்போய் விட்டார். பின்னர் வயதான போலீஸ்காரர் அதன் நிஷ்டையைக் கலைத்து வெளியில் தூக்கிப் போட்டு மோட்சத்துக்கு அனுப்பி வைத்தார். மனையாள் பதறிக் கொண்டிருந்தார். அந்த சிலீர் ஏற்பட்ட பிறகு நடுக்கமாக இருந்தது. அந்தச் சுருட்டை இருக்கிறதே தலையைத் தூக்கி ஒரு சீறு சீறி விட்டு செல்லமாய் கடித்து வைப்பாராம். கடுமையான விஷம் கொண்டவராம் அந்தச் சுருட்டை. 

ஆக்டிவாவை சர்வீஸ் செய்து பாலீஸ் போட்டுக் கொண்டு வந்து விட்டேன். ஆனாலும் தினமும் வண்டியை எடுக்கும் போது சுருட்டையின் நினைவு வருவதும் பின் சீட்டினை திறந்து பார்ப்பதுமாய் இருக்கிறேன். 

காதலி மட்டும் தான் எப்போதும் நினைவிலிருப்பாள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்? என்று தினமும் நினைத்துக் கொள்வதுண்டு. பாம்பென்றால் படையே நடுங்குமாம். நானென்ன சுண்டைக்காய்!

Wednesday, January 4, 2017

மருத்துவக் கொள்ளைகள்

மலைகள் டாட் காம் இணையத்தின் 113 இதழில் அடியேனின் ’மருத்துவக் கொள்ளைகள்’ கட்டுரை வெளியாகி உள்ளது. கீழே இருக்கும் இணைப்பினை கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.


தொடர்ந்து எனது ஆக்கங்களை வெளியிடும் மலைகள் இணைய இதழுக்கும், ஆசிரியர் சிபிச் செல்வனுக்கும் மிக்க நன்றி.

தட்டான்களும் வண்ணத்துப்பூச்சிகளும்

வீட்டின் எதிரில் பெரிய ஓட்டு வீடு. யாரோ ஒரு தேவரின் வீடு. அதை முஸ்லிம் ஒருவரிடம் விற்று விட்டு தெற்கே குடி போய் விட்டார். வீட்டு வாசலின் இடது பக்கமாக மூன்று நாவல் மரங்கள் இருந்தன. ஒன்று முஸ்லீம் வீட்டாருக்கு பாகம். இன்னொன்று வீட்டின் இடது பக்கமாய் இருக்கும் மாமாவுக்கு பாகம். மேற்கு பக்கத்தில் இருக்கும் மரம் என் தாத்தாவுக்கு பாகம்.
எதிர் வீடு பெரிய கட்டு வீடு. கிழக்குப் புறத்தில் ஒருவர் குடியிருந்தார். மேல்புறத்தில் ஆசாரி குடியிருந்தார். அவருக்கு மூன்று ஆண் பசங்க. அதில் ஒருவன் என்னோடு படித்தான். எங்கே படித்தான்? படிக்கிறேன் பேர்வழி என புத்தகமட்டையைத் தூக்கிக் கொண்டு திரிந்தான். ஆசாரி வீட்டின் எதிரே பெரிய மாமரம் ஒன்று அகல விரிந்து கொண்டிருந்தது. அதன் நிழலில் தான் ஆசாரி மர வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்.
எதிர் வீட்டுக்கு தென்புறமாக சலுவாவின் வீடு. கிழக்குப் பார்த்த வீடு. அங்கு அதிகம் பேர் வாழ்ந்தார்கள். சலுவா தான் எதிர் வீட்டையும் வாங்கினார். சல்வா வீட்டுக்காரர் மலேசியாவில் வேலை பார்த்தார். அவருக்கு நிறைய பெண்களும், ஆண்களும் இருந்தனர்.
நாவல் மரத்தில் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்து தொங்கும். குருவிகளும் இன்னபிற பறவைகளும் விடாது சத்தம் எழுப்பியபடி பழங்களை ருசிக்க வந்து விடும். கல் வாசலில் நாவல் பழங்கள் வந்து விழும். மண் ஒட்டாது இருப்பதால் அடிக்கடி நான் அவைகளை எடுத்து தின்பதுண்டு. மண்ணில் விழுந்தால் அதை நாசூக்காக எடுத்து விட்டு சாப்பிடுவதுண்டு. இருந்தாலும் மண்ணும் வயிற்றுக்குள் சென்று விடும். அதையெல்லாம் நாக்கு கண்டு கொள்வதே இல்லை.
ருசி என்று வந்து விட்டால் மண்ணாவது ஒன்னாவது? இரவுகளில் வவ்வால்கள் வந்து நாவல் பழங்களைக் கொத்துக் கொத்தாகச் சப்பி போட்டு விட்டு சென்று விடும். ஒரு முறை வடக்கித் தெருவில் இருக்கும் ஒருவரைக் கொண்டு வந்து மரத்தைச் சுற்றி வலைகளைக் கட்டி வைத்து விட்டோம். மூன்று வவ்வால்கள் மாட்டின. அதை வறுவல் செய்ய அறுக்கும் போது தான் அருகில் இருந்து பார்த்தேன். அதன் கலரும் மூஞ்சியும் சகிக்காது.
அன்றிலிருந்து எனக்கு வவ்வால்களைக் கண்டாலே ஆகாது. நான் ஆவலுடன் சாப்பிடும் நாவல் பழங்களை அவைகள் தின்று விடுவது ஒரு காரணம். மரத்தில் இருந்து பழங்களை உலுப்பி எடுத்து தண்ணீரில் அலசி கொஞ்சம் உப்புத்தூள் தூவி குலுக்கி வைத்து விட்டு அரை மணி நேரம் சென்று எடுத்துச் சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். சட்டி சட்டியாகச் சாப்பிட்டிருக்கிறேன்.
ஆசாரி வீட்டில் விசேசம் போல. வாசலில் பந்தல் போட்டார்கள். பந்தலில் அழகான ஓலைகள் தொங்க விடப்பட்டன. ஒலிப்பெருக்கியை வைத்துப் பாடல் போட ஆரம்பித்தார்கள். பெரும் சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இன்னும் இரண்டு நாட்களுக்கு ஒலிபெருக்கிகள் விடாது பாடல்களை ஒலித்துக் கொண்டிருக்கும். தீன் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் தான் வருவார்கள். கருப்பு கலரில் இருக்கும் தட்டுகளிலிருந்துதான் பாடல்கள் ஒலிக்கும். நான் சென்று பார்த்து வருவதுண்டு.
ஆச்சரியத்தில் விழிகள் பிதுங்கியபடி தட்டையான கலர் படங்கள் பதிந்த கவருக்குள் இருக்கும் தட்டுகளை எடுத்து எடுத்துப் பார்ப்பதுண்டு. மைக் செட்டுக்காரர் பக்கத்தில் உட்கார்ந்து இருஎன்றுச் சொல்லி விட்டு பீடி குடிக்கப் போய் விடுவார். கிராம போன் பாடி முடித்ததும் மீண்டும் ஒரு தட்டை எடுத்து மாட்டி நானே பாட விடுவேன். நான் சரியாகச் செய்கிறேனா என்று மைக் செட்டுக்காரர் மேற்பார்வை பார்ப்பார். குஷியாக இருக்கும். அம்மாவிடம் வந்து, ”அம்மா, இது நான் போட்ட பாட்டு எப்படி இருக்கு?” என்று பெருமிதமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
ஆசாரி வீட்டு விசேசத்தில் இரவுகளில் பளீரென்று வெளிச்சம் அடிக்கும் ஒரு வஸ்துவை நான் பார்த்தேன். அதுதான் பெட்ரோமாக்ஸ் லைட். விஸ் என்ற சத்தத்துடன் ஒளி வீசிக் கொண்டிருக்கும். பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கும். அதில் ஒளி வீசும் பகுதி ஒன்றிருக்கும். அதன் பெயர் மேன்டில். வலை போன்றிருக்கும். மண்ணெண்ணெய் தான் எரிபொருள். ஒரு லிட்டர் பிடிக்கும். ஆனால் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும். விசேசங்கள் என்று வந்து விட்டால் கடைத்தெருவில் இருந்து வாடகைக்கு கொண்டு வந்து இரவுகளில் வைத்து விடுவார்கள்.
எங்கள் வீட்டிலும் சலுவா வீட்டிலும் தான் கரண்ட் இருக்கும். நான்கு பல்புகள் அவ்வளவுதான் வீடு முழுமைக்கும். டியூப் லைட் ஒன்று இருந்தது. அது நீண்ட நாட்களாக எரிவதில்லை. அம்மா வீடு கூட்டிப் பெருக்கும் போது கரண்ட் மீட்டரில் ஒரு அடி வைப்பார். அது ஏன் என்று ரொம்ப நாட்களுக்கு முன்பு வரை தெரியாது. பின்னர் தெரிந்த பிறகு அம்மாவின் சிக்கனத்தை நினைத்துச் சிரித்துக் கொள்வேன். அதை தொட்டுக்கிட்டு விடாதேடா, புடிச்சுக் கொன்னுடும்என்று என்னிடம் சொல்லி வைப்பார். அது எனக்கு எட்டாது. அதனால் அதைத் தொட்டுப்பார்ப்பது பார்ப்பதோ அல்லது அது என்னைப் புடிச்சுக்கொல்வதோ ஆகாத காரியம்.
நான் தான் தட்டான்கள், வண்ணாத்துப்பூச்சிகள், பொன்வண்டுகளைப் பிடித்துக் கொண்டு வந்து கொன்று கொண்டிருந்தேனே? அவ்வப்போது கரட்டான்களை வேறு கொலைகள் செய்து கொண்டிருந்தேன்.
வீட்டின் இடது புறமிருந்த கொல்லையில் தும்பைச் செடிகள் அதிகம் இருக்கும். கடுகு போன்ற ஒரு செடியும் இருக்கும். அது பெயர் என்னவென்றுதான் தெரியவில்லை. தும்பைப்பூவில் தேன்குடிக்க வரும் வண்ணாத்துப்பூச்சிகளை சத்தமே காட்டாமல் உட்கார்ந்து அமுக்கிப் பிடித்து விடுவேன். மூன்று தும்பைச் செடிகளைப் பிடித்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வண்ணாத்துப் பூச்சி வந்து அமரும் போது ஒரே அமுக்கு. அது செத்தே போய் விட்டோம் என்று மயக்கத்தில் இருக்கும். பிடித்து விடுவேன். அதைக் கொண்டு வந்து அதன் பின்புறம் நூலைக் கட்டிப் பறக்க விடுவேன். சிலதுக்கு பின்புறம் நூலோடு வந்து விடும். வெறும் தலையோடு பறந்து போய் விடும். எனக்குத்தான் எரிச்சலாக இருக்கும். மீண்டும் பிடிக்க வேண்டும். தட்டான்களில் நூல் கட்டுவது என்பது பெரும்பாடு.
வீட்டு வாசலில் பறக்கும் தட்டான்களைப் பிடிப்பதே பெரும் கலையம்சம் பொருந்தியது. பெரிய துண்டாக வைத்துக் கொண்டு சத்தமே காட்டாமல் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அருகில் பறக்கும் போது ஒரே அடி. துண்டுக்குள் சிக்கி விடும். சில தட்டான்கள் செடிகளில் உட்காரும் போது சத்தமே காட்டாமல் அதன் வாலைப் பிடித்து அமுக்கி விடுவேன்.
மாமா பையன் விட்டியன் தான் பொன்வண்டுகளையும் அதுகள் சாப்பிடும் இலைகளையும் கொண்டு வந்து தருவான். அதன் கழுத்தில் நூலைக் கட்டி ஒரு சுற்றுச் சுற்றினால் சும்மா விர்ரென்று சுற்றும். ஆனால் அதன் கழுத்தில் மட்டும் விரலை வைத்து விடக்கூடாது. ஒரே கடி என்று விட்டியன் என்னை பயமுறுத்தி வைத்தான். நானா அடங்குவேன். கையில் துணியைச் சுற்றிக் கொண்டு விரலை வைப்பதுண்டு. பொன்வண்டு மஞ்சள் கலரில் முட்டைபோடும். இதெல்லாம் விளையாட்டு எனக்கு.
எங்களூரில் ஆட்டக்குதிரைகளை வியெஸெம் ராவுத்தர் வளர்த்து வந்தார். அந்தக் குதிரை எம்.ஜி.ஆர் படத்தில் கூட நடித்திருக்கிறது என்றார்கள். நான் டியூசன் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது வியெஸெம் ராவுத்தர் வெள்ளைகலரில் இருக்கும் குதிரைக்கு ஆடச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். வேடிக்கைப் பார்ப்பதுண்டு. ஒரு தாம்பாளத்தட்டில் கால்களை வைத்து ஆடிக் கொண்டிருக்கும் அந்தக் குதிரை. ராவுத்தர் கையில் சாட்டை ஒன்று இருக்கும். சாட்டையால் ஒரு விளாசு விளாசுவார்.
குதிரை கனைத்துக் கொண்டே கால்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கும். முஸ்லிம் வீட்டு விசேசங்களில் மாப்பிள்ளை முகம் முழுவதும் சரம் சரமாய் தொங்கும் பூக்களை அணிந்து கொண்டு குதிரை மீது வருவார். குதிரையின் முன்னே பெட்ரோமாக்ஸ் லைட்டுகளை தலை மீது வைத்துக் கொண்டு ஆட்கள் செல்ல பாண்டு வாத்தியங்களுடன் ஊர்வலம் சலுவா வீடு வரைக்கும் வந்து திரும்பிச் செல்லும்.
அம்மா என்னைத் திட்டி விட்டால் அருவாளைத் தூக்கிக் கொண்டு வீட்டின் இடது புறம் இருந்த நீண்டு வளர்ந்த பனை மரத்தின் அடியில் இருந்த மஞ்சமினா மரத்தினை வெட்டிச் சாய்த்து விடுவேன். அது வளரும் வரை எனக்கு கோபம் வராது. மீண்டும் கோபம் வந்தால் மீண்டும் வெட்டிக் குதறிவிடுவேன். அந்த மரமும் விடாது துளிர்ப்பதும் நான் கோபம் வந்தால் வெட்டுவதுமாய் எனக்கு விபரம் தெரிந்த நாள் வரைக்கும் தொடர்ந்தது. கல்லூரிக்குச் சென்ற பிறகு அந்த மஞ்சமினா மரம் வளர்ந்து படர்ந்து நின்றது. மாமா ஒரு நாள் அதையும் வெட்டி விட்டார். வீட்டைச் சூழ்ந்த கொடத்தடி மாமரம், காசாலட்டு, பெரிய மாமரம், பாவக்காய் மாமரம், தேத்தாமரம், வேப்பமரங்கள் எல்லாம் கவர்மெண்டு போட்ட ஆழ்துளைகுழாயினால் பட்டுப் போயின. இப்போதும் ஊருக்கு அந்தக் ஆழ்துளைக் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் ஊரெங்கும் இருந்த பச்சை காணாமல் போய் விட்டது அத்துடன் தட்டான்களும், வண்ணத்துப்பூச்சிகளும், பொன்வண்டுகளும், பெட்ரோமாக்ஸ் லைட், கிராம போன் மற்றும் ஆட்டக்குதிரையும் தான்.
மலைகள்.காமில் 112 வது இதழில் வெளியான கட்டுரை. அடுத்த இதழ் வெளிவந்து விட்டதால் பிளாக்கில் வெளியிடுகிறேன். நன்றி சிபிச்செல்வன். 

Monday, January 2, 2017

பல்லாங்குழி தாயம் பம்பரம்

அரையாண்டு விடுமுறையில் பசங்க இருவருக்கும் உருப்படியாக ஏதாவது கற்றுக் கொடுக்கலாம் என்ற நினைப்பில் பல்லாங்குழி, தாயம், பம்பரம் ஆகியவை வாங்கிக் கொடுக்க முயன்றேன். 

பல்லாங்குழியை கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கி விட்டேன். ஆனால் புளியங்கொட்டைக்கு எங்கே போவது?  முள்ளங்காடு வனத்தில் மரத்துக்கு மரம் திரிந்து குரங்குகள் தின்று போட்ட புளியங்கொட்டைகளை பொறுக்கி எடுத்து வந்தேன்.  சொரசொரப்பான பல்லாங்குழியை தேய்க்கும் காகிதம் வைத்து தேய்த்து அதில் வார்னீசு அடித்து காய வைத்து ஒரு வழியாக பெண்ணுக்கும் பையனுக்கும் சொல்லிக் கொடுத்தேன்.

ஒரு வாரமாக காலையிலிருந்து இரவு வரை டிவி ஆஃப் செய்து இருந்தது. இருவரும் டிவி பக்கம் போகவே இல்லை. அடுத்து தாயக்கட்டைக்கு அலைந்து திரிந்து ஏதோ ஒரு ஸ்டோரில் பிடித்து விட்டோம். பிறகு தாயக்கட்டங்கள் உருவாக்கி விளையாடக் கற்றுக் கொடுத்தேன். தாயம் தாயம் என்று ஒரே சத்தம்.

செம்மேட்டில் பசங்க பம்பரம் சுற்றிக் கொண்டிருந்தார்கள். விசாரித்து இரண்டு பம்பரங்களை வாங்கிக் கொண்டு வந்து சுற்றி விடலாம் என்று முயற்சித்தால் தலைகீழாக சுற்றியது. மனையாளோ நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள். பசங்க இருவரும் என்னப்பா இது? என்று கேள்வி கேட்டு டென்சன் படுத்திக் கொண்டிருந்தார்கள். கடையில் பம்பரக்கயிற்றை சிறிதாக நறுக்கிக் கொடுத்து விட்டான். அதைக் கண்டுபிடித்து சற்றே நீளமான கயிறாக எடுத்து சுற்றி விட்டால் ’உம்..உம்’ என்று சத்தத்துடன் பம்பரம் அருமையாக சுற்றியது.

பசங்க இருவரும் பம்பரம் சுற்றி விட முயற்சித்து காலையில் ஆரம்பித்து மதியம் போல பம்பரம் விட பழகிக்கொண்டனர்.

ஒரு வழியாக மூன்று விளையாட்டுக்களையும் பசங்களுக்கு கற்றுக் கொடுத்த சந்தோஷம். வீட்டில் கார்ட்டூன் சானலும் ஓடவில்லை, டிவியும் ஓடவில்லை. அதுபாட்டுக்கு இருந்தது. தெருவில் நின்று பம்பரம் விட்டுக் கொண்டிருந்தார்கள். 

நிவேதிதா பம்பரம் விடுவது எப்படி என்று சொல்லித் தரும் வீடியோ கீழே.


உங்கள் பசங்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.  நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் எத்தனையோ இருந்தன. எனக்குத் தெரிந்து இவை மூன்றும் நான் அடிக்கடி விளையாடியவை. கிட்டிப்புள், பளிங்கு விளையாட்டுக்களைக் கற்றுத் தர வேண்டும். 

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Saturday, December 31, 2016

கரையை நோக்கிப் பயணிக்கும் அலைகள்

அலைகள் - இந்த வார்த்தையைப் படித்தவுடனே உங்களுக்குள் தோன்றி இருக்கும். 

உயரமான, தாழ்வான, மிகத்தாழ்வான, மிக மிக உயரமான அலைகள் கடற்கரை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு அலைகளும் கரையை அடைந்து ஆக்ரோசமெல்லாம் இல்லாமல், வெறுமென நீராக சலம்பி பின் மீண்டும் கடலுக்குள்ளே சென்று மறைந்து விடுகின்றன. அடுத்த அலை வருகிறது. அதன் பின்னாலே அலைகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே கரையைத் தேடி வந்து கொண்டே இருக்கின்றன. கரை வந்தவுடன் சிறுத்துப் போய் ’உஷ்’ என்றாகிறது. பின்னர் கடலுக்குள் சென்று வந்த இடம் தெரியாமல் மறைந்து போகிறது.

காற்று விடாமல் அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. அலைகள் கரையை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. மனித வாழ்க்கையும் அலைகளும் ஒன்று தான். 

புகழ், பதவி, அதிகாரம் இருந்தும் தன் உடலை தான் சொன்னபடி கேட்க வைக்க இயலாமல் ஒருவர் கரைந்தே போனார். உலக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவரின் மகளின் வாழ்க்கை இன்று கோர்ட்டில் வந்து நிற்கிறது. அவர் நடத்தி வரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்ற செய்திகள் வருகின்றன. இதெல்லாம் எதைச் சுட்டிக் காட்டுகிறது? 

ஓடம் தண்ணீரில் தான் செல்ல முடியும். அந்த தண்ணீர் தான் ஓடத்தை வழி நடத்தும், அந்த ஓடம் தண்ணீருக்குள் மூழ்கி விட வேண்டுமா? இல்லை கரையைத் தொட்டு விட வேண்டுமா என்பதை முடிவு செய்வது காற்றும், தண்ணீரும் தான். அந்த ஓடம் எந்தப் பக்கமாக பயணிக்க வேண்டும் என்பதை மட்டுமே நாம் முடிவு செய்ய இயலும். ஆனால் பயணம் செய்தே ஆக வேண்டும். தண்ணீருக்குள் இருக்க முடியாது. ஓடம் சென்று சேர வேண்டிய இடம் கரை.

அதிகாரமும், பணமும், புகழும் எந்த மனிதனுக்கு எதையும் தரப்போவதில்லை. வெற்று மாயை! பணமும் வந்த இடம் தெரியாமல் சென்று விடும். புகழோ - வெற்றுக்கூச்சலும், வெறும் ஈகோவும் தான் தரும். அதிகாரம் அயோக்கியத்தனம் செய்ய வைக்கும். ஒன்றுமே இல்லாத வாழ்க்கையில் எல்லாமும் இருப்பதாக நினத்துக் கொண்டிருப்பது ஏமாளித்தனமானது.

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனியானவன் தான். அவனவன் வலி அவனுக்கு மட்டுமே. அதை பிறர் அனுபவிக்க முடியாது. எத்தனை உற்றார் உறவினர்கள் இருந்தாலும் தான் என்ன? வலியை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்களா? அருமை பெருமையாக வளர்த்த அம்மா அப்பா மறைந்தவுடன் அவர்களுடனேவா பிள்ளைகள் இறந்து போகின்றார்கள்? இல்லையே? உறவுகள் நிதர்சனம் என்று நினைப்பது முட்டாள்தனம். உறவுகளின் பயன் பாதுகாப்புக்கு மட்டுமே.

2016 ஆம் ஆண்டின் கடைசி நாள் இன்றைக்கு. கடந்து வந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்ற திட்டமில்லாமல் வாழ்ந்த வாழ்க்கைப் பாதைக்கு ஒரு வழி கிடைத்தது. இந்தப் பாதையில் சென்றால் வாழ்க்கைப் பயணத்தை சிரமமில்லாமல் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்த வருடம் இது. கணிணி, ஏற்றுமதி இறக்குமதி, டிரேடிங்க், விளம்பரத்துறை என்று அலைந்து கொண்டிருந்தவனுக்கு இதுதான் உன் பாதை என 2016 காட்டிக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை மிக அழகாகப் புரிய வைத்தது 2016. இந்த வயதில் இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்த வரமாகவே நினைக்கிறேன்.

உறவுகள், நட்புகள், வியாபாரங்கள் என்றால் என்ன அதன் முழு அர்த்தம் என்ன? மனிதர்களை படிப்பது எப்படி? என்றெல்லாம் அறிந்து கொள்ள முடிந்த வருடம் 2016. எந்த ஒரு உறவும், நட்பும், வியாபாரமும் பலனின்றி இல்லை என்பதினை சம்மட்டியால் அடித்துச் சொல்லியது 2016.

ஆன்மீக வாழ்க்கையில் இதுவரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத சூட்சுமான பாதையை அனுபவத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. தொட்டும் தொடாமலும், விட்டும் விடாமலும், இருந்தும் இல்லாமலும் இருப்பதைப் பற்றி பாடமே கிடைத்தது இந்த 2016ல். நோக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்பதை அட்சர சுத்தமாக அதன் சூத்திரத்தை புரிந்து கொள்ள வைத்திருக்கிறது 2016. 

நானும் ஒரு அலைதான். கரையைத் தேடி விரைந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் ஒரு அலைதான். நீங்கள் எனக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ கரையைத் தேடி விரைந்து கொண்டிருக்கின்றீர்கள். நாம் அனைவரும் சென்று சேரும் இடம் கரைதான். கரையில் உங்களின் உயரமும், எனது உயரமும் கலைந்து நாம் நீராகி விடுவோம். கடலுக்குள் கலந்து விடுவோம்.

விடைபெறட்டும் 2016. அது வந்த வேலையை நிறைவாகச் செய்து விட்டு செல்லப்போகின்றது. அதற்கு நாம் விடை கொடுப்போம்.

அடுத்து வரப்போகும் 2017ல் நாம் அன்பாயிருப்போம், அமைதியாக இருப்போம். ஆனந்தமாக இருப்போம். 

2017ஆம் ஆண்டில் எதார்தத்தை உணர்ந்து கொண்ட வாழ்க்கையினை வாழலாம் வாருங்கள்!  கோபம் வேண்டாம், பொறாமை வேண்டாம், சூது வேண்டாம். எதனாலும் நம் வாழ்க்கை சிறப்படைய போவதில்லை. அன்பாயிருத்தலாலும், அமைதியாக இருத்தலாலும் நாம் அடைவது ஆனந்தமே!

Thursday, December 29, 2016

பகவான் ராமகிருஷ்ணரைப் பிடிக்காது

மாமனார் மருமகன் பதிவு என்னாயிற்று என்று கேட்கத்தோன்றும். எழுத இன்னும் ’மூடு’ வரவில்லை. அதற்குள் எனக்குள்ளே குருதேவர் வந்து உட்கார்ந்து விட்டார். குருதேவர் பகவான் ராமகிருஷ்ணர் மீது கொஞ்சம் வருத்தமும் எனக்கு உண்டு. இந்த விஷயத்துக்குள் போகும் முன்பு கொஞ்சம் முன்னுரை பார்த்து விடலாம்.

தற்போது மெகாடிவியில் காலையில் பேசிக் கொண்டிருக்கின்றாரே பதினென் கவனகர் கனக சுப்புரத்தினம் இவரின் நெருங்கிய நண்பர் சுப்பிரமணியம். சரியான கலகக்காரர். கனக சுப்புரத்தினத்தையும் சந்திக்க வைத்தார். ஒரு மாலை நேரம் கனக சுப்புரத்தினம் அவர்களின் மகளையும், கனக சுப்புரத்தினத்தையும் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 23 என்று நினைவு. கரூரில் அந்தப் பெண் படித்துக் கொண்டிருந்தார். சரியான அழகி அந்தப் பெண். கூந்தல் மூன்றடி நீளம் இருந்தது. கனக சுப்புரத்தினம் என்னிடம் ஏதோ புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவ்வளவு தான் நினைவில் இருக்கிறது.  உன்னை நாளைக்கு முக்கியமான ஒரு நபரைச் சந்திக்க அழைத்துச் செல்கிறேன் என்றுச் சொல்லி கரூர் ராமகிருஷ்ண ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஆசிரமத்தில் சுவாமி ஆத்மானந்தாவை அறிமுகப்படுத்திய போது சுவாமி நீங்கள் இங்கேயே தங்கி பணி செய்து வருகின்றீர்களா என்று கேட்க, நானும் ஆமோதித்தேன். இரண்டாம் நம்பர் அறையில் என்னைத் தங்கச் சொன்னார். ஒரு துண்டினை என்னிடம் கொடுத்தார். என்னை அறையில் விட்டு விட்டு அடுத்த வாரம் வந்து சந்திக்கிறேன் என்றுச் சொல்லி விட்டுச் சென்றார் சுப்பிரமணியம். இந்த சுப்பிரமணியம் கரூர் நுகர்வோர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஆத்மானந்தா சுவாமி மீது வழக்குப் போட்டவர். இத்துடன் சுப்பிரமணியம் புராணம் முடிந்தது. 

ஆசிரமத்தில் இரண்டாம் நம்பர் அறையில் என்னுடன் சின்னமனூரிலிருந்து அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் மீது மாறாப்பற்றுக் கொண்டு சன்னியாச வாழ்க்கைக்குச் செல்ல முயன்று கொண்டிருந்த பிரதர் முருகன் என்னோடு தங்கி இருந்தார். மாணிக்கவாசகம் பிரதர், குண்டு பசுபதீஸ்வரானந்தா, தற்போது கரூரில் தனி ஆசிரமம் வைத்துக் கொண்டிருக்கும் யோகேஸ்வரானந்தா, கிருஷ்ணானந்தா, பாலகிருஷ்ணானந்தா ஆகிய சன்னியாசியாசிகளுடன் தங்கி இருந்தேன். 

அவ்வப்போது விஸ்வ ஹிந்து பரிஷத்துடன் பரிச்சயம் கொண்டு ஊர் ஊராக சென்று இந்து மதத்தைப் பரப்பி வந்த சதாசிவானந்தா மற்றும் திருச்சி, திருப்பராய்த்துறை தபோவனத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட குகானந்தா மற்றும் கருப்புச்சாமி(இவர் பெயர் மறந்து விட்டது, இவர் தான் என்னைத் திருமணம் செய்து கொள், சாமி என்றும் எவரும் இல்லை என்றுச் சொன்னவர்) ஒருவரும் ஆசிரமத்தில் தங்கி இருந்தனர்.

கோயமுத்தூர் பள்ளப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் இரண்டு சாமியார்கள், கோட்டைப்பாளையத்தில் இருந்த ஆசிரமத்தில் இருக்கும் இரண்டு சாமியார்கள் என பல இடங்களில் இருந்த பள்ளிகளையும் ஆசிரமத்தினையும் நிர்வகித்து வந்த சாமியார்களுடன் தங்கி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கரூர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் மேல் நிலை வகுப்பு கணிணி ஆசிரியராகவும், கரூர் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரியின் கணிணித்துறையின் மேலாளராகவும் பணியாற்றி வந்தேன். அதுமட்டுமின்றி கல்லூரிப் பெண்களுக்கு கணிணி வகுப்பு மற்றும் கணிணி சர்வீஸ் ஆகியவற்றையும் செய்து வந்தேன்.

பாலகிருஷ்ணானந்தா ஆசிரமத்தின் இரண்டாம் கட்ட தலைமை நிலையில் இருப்பவர். கணக்கு வழக்குகளைக் கவனிப்பவர். இவருக்கும் எனக்கும் சுத்தமாக ஆகாது. ஏனென்றால் இவர் என்னை பலவிதங்களில் துன்புறுத்தி வந்தார். நான் அடிக்கடி ஆத்மானந்தா சுவாமியைச் சந்திக்கச் சென்று வருவேன். இவருக்கு அது பிடிக்காது. ஆத்மானந்தா சுவாமி பல்வேறு சம்பவங்களையும், கதைகளையும் என்னிடம் சொல்லுவார். மூன்று மணி நேரம் வரை கூட இருவரும் பேசிக் கொண்டிருப்போம். சில நேரம் இரவு ஒரு மணி ஆகி விடும். பேச்சு சுவாரசியத்தில் நேரம் போவதையே மறந்து விடுவார். நானும் தான்.

பாலகிருஷ்ணானந்தா மட்டும் அல்ல அங்கிருக்கும் பல சாமியார்களுக்கும் இதன் காரணமாக என் மீது எரிச்சல். இவனிடம் சாமி என்னதான் பேசுகிறார் என்று. ஆனால் நான் எதையும் கண்டு கொள்ளவே மாட்டேன். சாப்பிட மட்டுமே தெரிந்த பசுபதி சாமியார் என்னைக் கொலை வெறியுடன் தான் பார்ப்பார். இரவில் சாமிக்கு நெல்லிக்காய் ஜூஸ் வரும். அந்த ஜூஸ் எனக்கும் தரவேண்டும். பசுபதி சாமிக்கு இந்த விஷயத்தில் என் மீது கோபம் வரும். ஒரு நாள் ஒரு டம்ளர் மட்டும் தான் இருக்கிறது என்றுச் சொன்னார். உடனே சாமி அதை இரண்டாகப் பிரித்து எனக்கும் கொடுத்து விட்டார். அதைக் கண்டு பசுபதிக்கு கோபமோ கோபம். அந்த ஜூஸில் என்ன விசேஷம் தெரியுமா? பாதிக்குப் பாதி தேன், காய்ந்த நெல்லி வற்றலின் ஜூஸ் இரண்டும் கலந்து இருக்கும். சாமிக்கு கொடுப்பது போல எனக்கும் தர வேண்டுமே அந்தக் கடுப்பு அவருக்கு. 

பஞ்சத்துக்கு சாமியாரனவர் இவர். பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாராம் இந்த பசுபதி. அவரை ஆசிரமத்திற்கு அழைத்து வந்து தீட்சை கொடுத்த பிறகு சாப்பாடே கதி என உண்டு கொழுத்து அரை யானை சைசுக்கு பெருத்திருந்தார். அவருக்கு காவியை வேறு கொடுத்து சாமியாராக்கி படா ரகளை செய்து கொண்டிருந்தார் ஆத்மானந்தா சாமி. அடியாள் மாதிரி தான் இருந்தார். இவருக்கு ஆசிரமத்தில் ஒரே ஒரு வேலை இருந்தது. கரூர் பசுபதீஸ்வரானந்தருக்கு காலையில் பாலும் பூஜை பொருட்களைக் கொண்டு சென்று பூஜை செய்து வர வேண்டும். மற்றபடி பெரிய சாமிக்கு அவ்வப்போது மோர், ஜூஸ், உணவு பரிமாற வேண்டும். பிற நேரங்களில் சக ஆட்களுடன் வன்மத்தை வளர்த்துக் கொண்டு இருப்பார். சர்க்கரை நோய் வந்து தஞ்சாவூர் கரந்தையில் இருக்கும் பால்சாமி மடத்தில் கிடந்து செத்துப் போய் விட்டார் என்று கேள்விப்பட்டேன்.

ஆசிரம வாழ்க்கையைப் பற்றி தனியாகப் புத்தகமே போடும் அளவுக்கு சம்பவங்கள் இருக்கின்றன. முடிந்தால் எழுதுகிறேன்.

என்னை விடிகாலை ஆரத்திக்கு வரச்சொல்வார் பாலகிருஷ்ணானந்தா. ஒரு வாரம் சென்றேன். சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனக்கு ராமகிருஷ்ணரைப் பிடிக்கவே பிடிக்காது. விவேகானந்தரையோ அறவே பிடிக்காது. அகம்பாவம் பிடித்தவர் போலத் தெரிந்தார். சாரதா தேவி அம்மையாரின் மீதும் எந்தப் பற்றும் இல்லை. ஆகவே சும்மா போய் உட்கார்ந்து பாட்டுப்பாடவும் ஆரத்தியில் கலந்து கொள்ளவும் எரிச்சலாக இருந்ததால் நான் போவதை நிறுத்தி விட்டேன். இதை ஆத்மானந்தா சுவாமியிடம் சொல்லி விட்டு நான் பாட்டுக்கு தூங்கி விடுவேன்.

என்னைத் திருத்துவதற்காக ‘ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார் ஆத்மானந்தா சுவாமி. அதில் சமாதி என்று எழுதி இருந்ததைப் படித்ததும் எனக்கு சுத்தமாக விளங்கவே இல்லை. என்னடா இது சமாதி அது இதுன்னு இந்த ராமகிருஷ்ணர் சுத்த லூசுத்தனமானவராக இருக்கின்றாரே என்ற சிந்தனை. செத்துப் போனால் தானே சமாதி ஆக முடியும். உயிரோடு இருக்கும் போது சமாதி நிலைக்குப் போய் விட்டார் என்று கதை பேசுகின்றார்களே, ஆளும் வேறு அசிங்கமாக இருக்கின்றார் என்று எண்ணிக் கொண்டு சும்மாவாச்சும் இரண்டு தொகுதிகளையும் படித்து வைத்தேன். புரியவே இல்லை. இருந்தாலும் ராமகிருஷ்ணரை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.

சென்னையில் உள்ள இராமகிருஷ்ணர் மடத்தின் கிழக்குப் பகுதியில் கட்டப்பட்டிருக்கிறதே யுனிவர்சல் டெம்பிள் அதன் திறப்பு விழாவின் போது பேலூர் மத்திலிருந்து வந்த தலைவர் விவேகானந்தரின் நேரடி சீடர் ரங்கநாதனந்தர் அவர்களிடம் பல ஊர்களிலிருந்தும் வந்த பெரும் கோடீஸ்வரர்களுடன் மந்திர தீட்சையும் பெற்றுக் கொண்டேன். இந்த டெம்பிளுக்கு கரூர் ஆத்மானந்தா சுவாமி நன்கொடை வழங்கி உள்ளார். ஆத்மானந்தா சுவாமி எனக்கு பல்வேறு வழிகளில் பல விஷயங்களை உணர்ந்து கொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் காலமோ என்னை லெளகீக வாழ்க்கைக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.

முன்னுரை முற்றிற்று.

இரண்டு வாரங்களுக்கு முன்பு முள்ளங்காடு வெள்ளிங்கிரி சுவாமி ஆசிரமத்திற்கு வழக்கமாகச் சென்றிருந்த போது சாமி பயன்படுத்திய டெஸ்கில் அழுக்கான கசங்கிய பழைய புத்தகத்தைப் பார்த்தேன். எடுத்துப் பிரித்தால் ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் இரண்டாம் தொகுதி. சாமியிடம் படித்து விட்டுத்தருகிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். ஒரு நாளைக்கு இரண்டு பக்கத்துக்கு மேல் என்னால் படிக்கவே முடியவில்லை. பகவான் ராமகிருஷ்ணரின் சமாதி பற்றிப் படித்ததும் மனசு அங்கேயே நின்று விடுகிறது. தொடர்ந்து நகரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது. மனது அந்த இடத்தில் அடங்கி அமைதியாகி விடுவதால் தொடர்ந்து படிக்க முடிவதில்லை.

ஆனால் புத்தி மட்டும் ஒரு விஷயத்தை யோசிக்க ஆரம்பித்த காரணத்தால் பகவான் மீது சற்று வருத்தமும் ஏற்பட்டது. அது என்னவென்றால் தான் மட்டுமே சமாதி நிலையினை அடைந்து விட்டு விவேகானந்தரை மட்டும் கர்மயோக வீரத்துறவியாக்கி விட்டாரே என்பதுதான். இதற்கு ஏதாவது காரணம் இருக்கக்கூடுமா என்ற கேள்வி எனக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது.

போன வாரத்தில் மனையாளின் கையை நீவி விடுவதற்காக தொண்டாமுத்தூர் போகும் வழியில் இருக்கும் பூச்சியூர் சிங்கிரிபாளையம் வைத்தியரிடம் சென்று விட்டு ஆசிரமத்திற்குச் சென்றோம்.

ஆசிரமத்திற்கு கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகச் சென்று கொண்டிருந்தாலும் அருகில் இருக்கும் வீரகாளியம்மன் கோவிலுக்கோ அங்கிருக்கும் சித்தர் சாமிகளின் ஜீவ சமாதிக்கோ செல்ல முடியவில்லை. திடீரென்று இன்றைக்கு சித்தர் சாமியின் ஜீவசமாதிக்குச் சென்று வருவோம் என்று என்னையும் மனையாளையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

இந்த சித்தர் சாமி அகோரி வழியில் வந்தவர். இவர் வெள்ளிங்கிரி மலை மீது அமர்ந்து தியானம் செய்த போது ஜீவன் ஒடுங்கி சமாதி நிலைக்குச் சென்று விட்டாராம். அவர் மீது தேனீக்கள் கூடு கட்டி விட்டன. அதைக் கண்டு பிடித்தவர்கள் பால் கொண்டு அவரின் சமாதி நிலையைக் கலைத்து மீட்டனராம். அதன் பிறகு பாதாள உலகிலிருந்து வெளிவந்திருந்த மூர்த்தமான அழியாப் பேரழகி வீரகாளியம்மனுக்கு கோவில் எழுப்பி அம்மனின் அருகில் சமாதி நிலையில் அமர்ந்து விட்டார் இந்த சித்தர்.  இந்த சித்தர் சாமி வெள்ளிங்கிரி சாமியைப் பார்த்து ’மகன் வந்து விட்டான், இனி எனக்கு இங்கு என்ன வேலை?’ என்றுச் சொல்லிக் கொண்டிருப்பாராம்.

வனத்துக்குள் இருக்கிறது இந்த வீரகாளியம்மன் கோவில். கோவிலுக்கு வடகிழக்கு மூலையில் ஜீவசமாதிக்குள்ளே அமர்ந்து கொண்டிருக்கின்றார் சித்தர். அவரைத் தரிசித்து அங்கு அமர்ந்திருந்த போது ஜோதி ஸ்வாமியிடத்திலே பகவான் ராமகிருஷ்ணரைப் பற்றியும் அவர் மீதுள்ள வருத்தத்தையும் சொன்னேன்.

”கடவுளே! அந்தக் காலத்தில் இருந்த சூழல் அப்படி. கர்மயோகியாக விவேகானந்தர் உருவாக வேண்டிய கால நிர்பந்தம் அது. தான் பெற்ற சமாதி நிலையை குருதேவர் அவருக்கும் அளித்திருந்தால் விவேகானந்தர் சாமியாராக இருந்திருப்பார். அதனால் யாருக்கும் எந்த பிரயோஜனும் இல்லாது போயிருக்கும். ”எழுமின், விழிமின், உழைமின்” என்று இந்திய மக்களைப் பார்த்து வீர உரை ஆற்றி வீரத்துறவியாக மாறியதன் காரணமாகத்தான் பாலகங்காதர திலகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை விடுதலை பெற வைக்க சுதந்திரப் போராட்ட வீரர்களாக பரிணமளித்தனர். அதற்கு காரணமாக இருந்தவர் விவேகானந்தர். இனி நூற்றாண்டுகளுக்கு இந்தியர்களுக்குத் தெய்வம் ‘பாரதமாதா’ என்றுச் சொல்லி விட்டுச் சென்றார் வீரத்துறவி விவேகானந்தர். அதற்கு விதையிட்டவர் குருதேவர்” என்றார். எனக்குள் இருந்த வருத்தம் பட்டென்று வெடித்துச் சிதறியது.

Wednesday, December 28, 2016

மாமனார் மருமகன்

உலக மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் அதற்கென்று சில காரியங்களைச் செய்தால் தான் அந்த மாபெரும் சிம்மாசனம் கிடைக்கும். கிடைத்த சிம்மாசனத்தை தக்க வைக்க பெரும் போராட்டங்களை செய்தால்தான் அந்த அடையாளம் தொடர்ந்து நீடிக்கும். இல்லையென்றால் நாளடைவில் மறந்து போவார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சினிமாக்காரர்களுக்கு முதல் சிம்மாசனம் கிடைக்கும்.

சினிமாவை தன் வாழ்வியலோடு வாழ்க்கைப் பாதையாக மாற்றிய சமூகம் இந்த உலகில் உண்டென்றால் அது நம் தமிழகம் தான். ஆந்திராவையும் விட்டு விட முடியாது. சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் நாட்டை ஆள வந்து விடுகின்றார்கள். நாட்டையே தூக்கிக் கொடுத்து விடும் அளவுக்கு சினிமா ஹீரோக்களுக்கு சிம்மாசனம் கொடுத்திருக்கிறோம்.

சினிமாவில் ஹீரோ போடும் சட்டை,  அவர் தலைமுடியில் செய்யும் மாற்றம், ஹீரோயின் கட்டும் சேலை முதற்கொண்டு தமிழ் சமுதாயம் விடாது தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள். தன் பிள்ளைகள் இன்னார் ரசிகன் என்று சொன்னால் புளகாங்கிதமடைகின்றார்கள். அந்தளவுக்கு சினிமாவுக்குள் தங்கள் வாழ்க்கையை புகுத்திக் கொண்டிருக்கும் சமூகம் தமிழர் சமூகம்.

தானும் கெட்டு தன் தலைமுறைகளையும் கெடுத்து அழிவின் பாதைக்குத் தள்ளிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு சமூகம் தமிழர் சமூகம் மட்டுமே. இதில் எவருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டமிடவும். பதில் தருகிறேன். (கம்யூனிஸ்ட்வாதிகள் ஏன் சினிமா ஹீரோ கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவதைப் பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டேன் என்பது எனக்குப் புரியவே இல்லை. கம்யூனிஸம் என்பது சினிமாத் தொழிலாளிகளுக்கு இல்லையா?)

எழுத்தாளர்களுக்கு அந்த சிம்மாசனம் கிடைத்து விடுமா? என்றால் இதுவரைக்கும் யாருக்கும் கிடைக்கவில்லை. சினிமாவில் வசனம் எழுதலாம், சில கில்லாடி எழுத்தாளர்கள் சினிமா இயக்குனர்களானாலும், ஹீரோக்களுக்கு கிடைக்கும் சிம்மாசனம் போல அவர்களுக்குக் கிடைத்து விடுவதில்லை.

இரண்டு வருடங்களாக சாரு நிவேதிதாவின் எழுத்தினை முதல் வாசகனாகப் படித்து, பதிவேற்றி வந்த பழக்கத்தின் காரணமாக சுயசரிதைத் தன்மையான எழுத்துக்களே எனக்கு வசமாகி இருக்கின்றன. ஆனால் அந்த சுயசரிதை தன்மை எழுத்துக்களை எழுத்துலகம் அங்கீகரிப்பதில்லை என்பதை கொஞ்ச காலமாக அனுபவித்து வருகிறேன். மனதை வருடும் சம்பவங்களாக பல பத்திரிக்கைகளைக்கு எழுதி அனுப்பினேன். அனைத்தும் திரும்பி வந்து விட்டன. ஒரு பத்திரிக்கை ஆசிரியர் போனில் அழைத்து நீங்கள் எழுதுவது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இது எழுத்து வடிவமல்ல என்றுச் சொல்லி நான் எழுதும் சுயசரிதைத் தன்மையான பதிவுகளை சிறுகதைகளாக்குவது எப்படி என்று விவரித்தார். ஆச்சரியமாக இருந்தது. 

(சாரு நிவேதிதாவின் பழைய இணைய வடிவமைப்பு பக்கம்)

சுயசரித பதிவுகளைப் படிக்கும் போது எழுதுபவர்களுடன் மன நெருக்கம் உண்டாகும் உணர்ச்சி இருக்கும். சிறுகதை படிக்கும் போது வெளியில் இருந்து வாசிப்பது போல இருக்கிறதே என அவரிடம் வினவினேன். அந்த உணர்ச்சி வேறுபாடு எழுதப்படும் போக்கில் இருக்கும் குறை என்றுச் சொன்னார்.

என்னை ஒரு நாவலைப் படிக்கச் சொன்னார். அந்த நாவல் பா.சிங்காரத்தின் ’புயலிலோ ஒரு தோணி’ மற்றும் ’கடலுக்கு அப்பால்’. மூன்று வாரங்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்படியே உள் இழுத்துக் கொண்டு விடுகிறது அந்த நாவல். மீள நேரமாகின்றது. 

தமிழக நாவல் வரிசையில் இந்த நாவல் எவராலும் மறக்கமுடியாத நாவல் என்றாலும் பா.சிங்காரத்தை பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியவே தெரியாது. ஆக மக்களின் மனதில் எப்படி எழுதினாலும் சிம்மாசனம் என்பது கிடைக்காது என்பது தெரிந்து போயிற்று.

ஒரு நண்பர் சொன்னார், தங்கம் எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது. அதில் சிறந்தவர் ஜெயமோகன் பின்னர் ராமகிருஷ்ணன். உட்லாக்கடி எழுத்துக் கணக்குப்படி எழுதுபவர்கள் கமர்ஷியல் எழுத்துக்காரர்கள். ஒரு சிலர் ஏதோ ஒரு பவுண்டேஷனிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதுவார்கள். அவர்கள் ஒன்றிரண்டு புத்தகங்களோடு நின்று போவார்கள்.

பல வெற்றிகரமான எழுத்தாளர்களைப் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் அனைவரும் வருமானத்துக்கு குறைச்சல் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். இல்லையென்றால் ஏதாவதொரு கட்சி, பெரும் பணக்காரன் ஆகியோர்களை நண்பர்களாய் வைத்திருப்பார்கள். இந்தக் கணக்குச் சரியாக இருந்தால் தான் தொடர்ந்து எழுத முடியும். லெளகீக வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளா வண்ணம் இருப்பவர்களால் தான் தொடர்ந்து எழுதி வெற்றிகரமாக வலம் வர முடியும். 

அதன் படி இப்போது தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் என்று (வேறு எவரும் எழுதினால் எளிதாக படைப்புச் சரியில்லை என்று மறுதலித்து விடுவதும், ஏதோ இவர்கள் தான் எழுத்துலகத்தின் கடவுள்கள் போல கருதிக் கொண்டு பிற எழுத்தாளர்களை விமர்சிக்கும் காமெடியும் தொடர்ந்து எழுத்துலகத்தில் நடைபெற்றுக் கொண்டே வருவதை நாமெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்) கருதிக் கொள்வோர்கள் உண்டல்லவா? என்றும் சொன்னார்.

நண்பரின் கூற்றுப்படி பார்த்தால் ஏதோ ஒரு பின்புலம் இருப்பவர்களால் தான் எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்தப் பின்புலங்களின் மனசு நோகா வண்ணம் எழுத வேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சினிமாவுக்குள் அரசியல் என்றால் எழுத்துலகில் அதை விடப் பெரிய அரசியல் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவனின் குழந்தையை இன்னொருவன் பார்த்து கண் இப்படி இருக்கிறது, கால் இப்படி இருக்கிறது, கலர் சரியில்லை என்று விமர்சிப்பது போலத்தான் பிறரின் படைப்பை விமர்சிப்பது. அதை எவரும் புரிந்து கொள்வார் இல்லை. அவரவர் குழந்தை அவரவருக்குப் பெரிது. இதில் குறையென்ன காண்பது?  ஆக எழுதுவதில் ஒரு கணக்கு இருக்கிறது என்பது புரிந்தது. அந்தக் கணக்கின் விடையைப் போட்டு விட்டால் எழுத்துலகத்தின் கடவுள்களில் நாமும் ஒருவராக மாறி விடலாமா என்று யோசித்தால் வரிசை கட்டி நம் முன்னே நிற்கும் எழுத்தாளர்களைப் பார்த்தால் திகிலடிக்கிறது. நாமாவது அந்த வரிசைக்கு வருவதாவது? சாத்தியமே இல்லாத சாத்தியம். இருந்தாலும் ஒரு நப்பாசை. நரி திராட்சைக்கு ஆசைப்பட்டது போல.

ஆகையால் நானும் பலப் பல புத்தகங்களைப் படித்து மெருகேற்றி சிறுகதைகள் எழுத ஆரம்பிக்கலாம் என்று உட்கார்ந்தால் தொடர்ந்தாற் போல நான்கு பக்கங்களுக்கு மேல் எழுதவே முடியவில்லை. எழுதியதை மீண்டும் படித்துப் பார்க்கும் போது, பாதிக்குப் பாதி காணாமல் போய் விடுகிறது. இப்படியே தொடர்ந்து விடிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை முயற்சிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆறு மணிக்குப் பிறகு காய்கறி நறுக்கிச் சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அன்றைய உணவு ஈயமாகி விடுகிறது.

அதன் பிறகு லெளகீக வாழ்க்கைப் பயணத்தின் தொடர்ச்சி நிகழ ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை மீண்டும் இதே கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மலைகள் இணைய இதழில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார்கள். இனி தொடர்ந்து பல இதழ்களில் வெளியிடலாமென்பதற்காக உலகத் தரத்துடன் (உலக  நாயகன் பாதிப்பு) எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொரு பக்கம் ஓஷோவும், பா.சிங்காரமும், சுஜாதாவும், ஜட்ஜ் பலராமய்யாவின் முப்பு குரு விஷயமும் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி விகடன் குழுமத்தின் வயிற்றெரிச்சல் செய்திகள் வேறு இழுத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே மாமனார் மருமகன் பதிவை இன்னொரு நாள் எழுதுகிறேன். 

இணையத்தில் படித்த இந்தக் கவிதையோடு இந்தப் பதிவை முடித்து வைக்கிறேன். இருந்தாலும் அந்த எழுத்துக்கடவுள்கள் வரிசை மட்டும் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கிறது. குஷ்பூவுக்கு கோயில் கட்டியது போல எவராவது ஒருவர் எனக்கு ஏதோ ஒரு மூலையில் கல்லாவது வைத்து மஞ்சள் தடவி அதன் மீது குங்குமம் வைத்து வழிபடமாட்டாரா என்ற ஆசை துரத்து துரத்துவென துரத்திக் கொண்டிருக்கிறது.

கொற்றவை சிம்மாசனம் (கவிதை)
------------------------------------------------------

சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

சிந்தையில் சிகரத்தைச் செலுத்தி நல்லறிவுடன்
பாட்டனும் பூட்டனும் பேசிய தமிழ்மொழி
அகரத்தின் ஆனிவேரில் ஓல்கா செம்புகழுடன்
பட்டினியில் பட்டறிவு பூசிய செம்மொழி
வென்றிட போர் விதம் பலவுண்டு
தலை நின்றிட சொற்குணம் கைகொண்டு
நித்தய நற்சோறு காணோம் இன்று

கலையில் கரைந்தவை நிற்பவை நிலைத்தவை
ஏட்டிலே வெடித்தவை கற்றவை சுரந்தவை
பாட்டிலே படர்ந்தவை கொற்றவை கொணர்ந்தவை
போரிட்டு முடித்துவை தூற்றிட தொடர்ந்து செய்
சிகப்பு கம்பளம் சிம்மாசனம்
சிதரடிக்கும் நட்சத்திரம் சிம்ம சொப்பணம்
செந்தமிழ் கொற்றவை கூர்வாளடா
நுனி நாக்கில் ஆங்கிலத்தைக் கொண்டாளடா

நன்றி: பூந்தளிர் ஆனந்தன்

Sunday, December 18, 2016

மலைகள் இணையத்தில் தட்டான்களும் வண்ணாத்துப்பூச்சிகளும்

மலைகள் இணைய பத்திரிக்கையில் முதன் முதலாக ”தட்டான்களும் வண்ணாத்துப் பூச்சிகளும்” அனுபவப் பதிவு வெளியாகி உள்ளது. சின்னஞ்சிறு வயதிலே பதியக்கூடிய விஷயங்கள் எத்தனை காலம் கடந்தாலும் மறந்து விடுவதில்லை. அதை எழுத்தில் வடித்து பொதுவெளியில் வெளியிடும் போது அதே போன்ற அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு மனதிலே சிலிர்ப்புத் தோன்றும். இறந்து போன காலத்துக்கு நினைவலைகள் சென்று மீளும். அந்த வகையில் கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். பலரும் மிக அருமையாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். ஆத்ம திருப்திக்காவும், சிறிய வயதில் செய்யும் தவறுகளில் விளையக்கூடிய அனர்த்தங்களையும் அலசி ஆராயவும், சரிப்படுத்திக் கொள்ளவும் தான் எழுதுகிறேன்.

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக பிளாக்கில் தொடர்ந்து எழுதி வருகிறேன். திண்ணை இணைய பத்திரிக்கையில் இரண்டு பதிவுகள் வெளிவந்திருக்கின்றன. பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் தொடர்ந்து அரசியல் பற்றி எழுதினேன். புனை பெயரில் அதிரடிக்கும் பல்வேறு கட்டுரைகளை இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதினேன். ஆழம் இதழில் ஒரு கட்டுரை வெளியானது. குறுஞ்செய்தி பத்திரிக்கையில் எழுதினேன். இருப்பினும் பிளாக்கில் எழுதுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. காரணம் நானே ராஜா, நானே மந்திரி என்கிற வகையில் யாருக்கும் கைகட்டி, குனிந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான்.

மலைகள் இணைய இதழில் வெளியான பதிவினைப் படிக்க இங்கே சொடுக்கவும் உங்கள் மவுசை.

தட்டான்களும் வண்ணத்துப் பூச்சிகளும் - மலைகள் இணைய இதழில் வெளியான அனுபவப் பதிவு.


நன்றிகள் : சிபிச் செல்வன்

Friday, December 16, 2016

நாமக்கரும்பின் சுவையும் சேமக்கலத்தின் ஓசையும்

மார்கழி ஒன்றாம் தேதியன்று நான்கரை மணிக்கே தாதர் சேமக்கலத்தினை அடித்துக் கொண்டே சங்கு ஊதிக் கொண்டு வருவார். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்தெழுவார்கள். மார்கழி மாதம் தோறும் தினமும் சேமக்கலத்தினை இசைத்துக் கொண்டே சங்கு ஊதிக்கொண்டு பாட்டும் பாடிக்கொண்டு வருவார் தாதர். 

வாசல் தெளித்து, பெருக்கி விட்டு, சில்லிடும் குளிர் நிறைந்த விடிகாலைப் பொழுதில் தாமரைப் பூக்கோலம் போட்டு, மார்கழி முதல் நாள் அன்று பசுஞ்சாணியில் பிள்ளையார் பிடித்து அதன் தலை மீது அருகம்புல் சொருகி, பிள்ளையாருக்கு விபூதி சாற்றி, குங்குமம் இட்டு, சூடம் காட்டி சாமி கும்பிடுவார்கள். அன்றைக்கு சங்கு ஊத வேண்டும். படாதபாடு பட்டு சங்கினை ஊதுவேன். கோலம் முழுமையும் பரங்கிப்பூக்கள் சாணி உருண்டையின் மீது பூத்திருக்கும்.

கோவில்களில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். பொங்கலுக்கு இன்னும் இத்தனை நாள்கள் இருக்கின்றன என எண்ணிக் கொண்டே ஒவ்வொரு நாளும் கழியும். அறுவடை முடிந்து வயல்களில் உளுந்து விதைத்திருப்பார்கள். தினம் தோறும் புதுப்புதுக் கோலங்கள் போடப்படும். பெரும்பாலும் இந்த காலத்தில் தான் தினமும் கோவிலுக்குச் சென்று வருவார்கள். அடியேன் வீட்டின் வடக்குப் பக்கமாய் இருக்கும் பழைய சிவன் கோவிலில் மழையூர் சதாசிவம் அவர்கள் பாடும் தேவாரப்பாடல்களையும், தெய்வீகப்பாடல்களையும் கேட்பதற்குச் சென்று வருவேன். பொங்கல் தருவார்கள்.

மார்கழியில் பெரும் சோதனை ஒன்று நடக்கும். குளிப்பதற்கு பிச்சனரிக் குளத்துக்குச் செல்வேன். குளிரில் பற்கள் எல்லாம் தந்தியடிக்கும். குளத்துக்குள் செல்வதற்குள் நடு நடுங்கி விடும். ஆனால் உள்ளே சென்று விட்டால் குளத்து தண்ணீர் வெதுவெதுப்பாய் இருக்கும். வெளியில் தான் குளிரடிக்கும். குளித்து முடிக்கையில் வெயில் வந்து விடும். குளித்து விட்டு தலை துவட்டி வரும் போது வெயிலில் காய்ந்து கொண்டே வருவது ஒரு சுகம்.

வீடு வந்து சேர்ந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்று வருவேன். மறு நாள் போடப்படும் கோலத்தினை வீட்டில் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாலையில் ஐயப்பன் கோவில்களுக்குச் செல்பவர்களின் பஜனைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும். சூடான சுண்டலும், பொங்கலும் கிடைக்கும். காலையில் சாமி தரிசனம், மாலையில் பஜனைகள் என்று மார்கழி முடியும் வரை சந்தோஷம் கரைபுரண்டோடும். 

வீட்டில் மாடுகளுக்கு புதிய கயிறுகள், நெற்றியில் கட்டும் கயிறுகள் வாங்கி வருவார்கள். பொங்கலுக்கு வீட்டுச் சுவற்றின் மீது சுண்ணாம்பு தடவ கிளிஞ்சல்களை வாங்கி வந்து கணக்கான தண்ணீர் சேர்த்து குழைய வேகவிட்டு மூடி வைப்பார்கள். காவிக்கட்டியை குசவன் கொண்டு வந்து கொடுப்பான். பொங்கல் அன்று வெள்ளையும் காவியும் வரி வரியாக பட்டை தீட்டுவார்கள். கொட்டாச்சியில் செய்த அகப்பையை ஆசாரி கொண்டு வந்து தருவார். வண்ணான், அம்பட்டன் ஆகியோருக்கு வருடக் கூலியாக நெல் அளந்து கொடுப்பார்கள். தாதர் மார்கழி முடிந்ததும் வந்து கூலியை நெல்லாக வாங்கிக் கொள்வார்.

புது அரிசியை அரைத்து புடைத்து பொங்கலுக்கு தயார் செய்வார்கள். வீட்டில் காய்த்திருக்கும் பரங்கிக் காய்களில் பொங்கலுக்கு என்று சில காய்களை ஒதுக்கி வைத்திருப்பார்கள். 

மார்கழி மாதம் முழுவதும் வரப்போகும் பொங்கலுக்கான முன்னேற்பாடுகளாய்தான் தெரியும். வருடத்தில் ஓர் முறையே கிடைக்கும் சர்க்கரைப் பொங்கல், அதனுடன் பதினோறு வகை காய்கறிகள், வெண் பொங்கலோடு கலந்து சாப்பிடப்போகும் சாம்பாரின் சுவைக்காக நாக்கு ஏங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமல்ல பொங்கலன்று கிடைக்கப்போகும் நாமக் கரும்பின் தித்திப்பு இருக்கிறதே அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

நாமக்கரும்பு கரு நீல நிறமாய் இருக்கும். இடையே பச்சை வண்ணக் கோடுகள் இருக்கும். இதன் சுவையை அடித்துக் கொள்ள வேறு எந்தக் கரும்புக்கும் தகுதியே இல்லை. பொங்கலன்று மாமா வாங்கி வரும் மஞ்சள் கொத்தின் வாசம் இருக்கிறதே அதன் வாசம் என்னை மயக்கியே விடும்.

மூன்று வாழை இலைகள் போட்டு அதன் மீது பொங்கல், காய்கறிகள், சாம்பார், வாழைப்பழம், தேங்காய் துருவல், வெல்லம், பால், தயிர் சேர்த்து படையலிட்டு சூரியனுக்குப் படைத்து விட்டு சாப்பிடுவது என்பது சிலிர்ப்புத் தரும் புதிய அனுபவம், அடுத்த ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் மீண்டும் அந்த அனுபவத்தைப் பெறுவதற்கு. விழா அவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என ஏங்க வைக்கும் நாள்களாக இருந்தன.

இன்னும் 29 நாட்கள் தான் பொங்கல் வரப்போகின்றது. பனி படர்ந்த விடிகாலைக் குளிரில் மாட்டு சாணத்தின் வாசத்தோடு கோலமிடும் காட்சிகளும், பொங்கலிடும் காட்சிகளும், கோவில்களும், பாடல்களும், இசையும், மாடுகளின் கழுத்தில் இருக்கும் மணிகளின் ஓசைகளும் கண்களுக்குள் விரிகின்றன. 

Wednesday, December 14, 2016

ஆலங்கட்டி மழை

கோவையில் கடுமையான குளிர். உடல் சில்லிடுகிறது. ஆனால் மழைதான் வரமாட்டேன் என்கிறது. நேற்று காலையில் விளாங்குறிச்சிப்பக்கம் நனையும் அளவு தூறல் விழுந்தது. பின்னர் நாள் முழுதும் மேகமூட்டமாய் இருந்தது. அவ்வப்போது வெளியில் வந்து கருக்கி கலைந்து கொண்டிருந்த மேகங்களைப் பார்ப்பதும் பின்னே வீட்டுக்குள் செல்வதுமாய் இருந்தேன். ஆளை அடிக்கும் மழை பெய்தால் நன்றாக இருக்கும். மழை பெய்யும் போது கையை நீட்டிக் கொண்டு சேரில் அமர்ந்து கொள்வதுண்டு. கொட்டும் மழையை ரசிக்க ஒரு மனசு வேண்டும். ஆனால் வானமோ ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன பணக்காரன் ஏழை கதை போல ஏமாற்றிக்கொண்டிருந்தது.

அது என்ன கதை என்கின்றீர்களா? சொல்கிறேன்.

ஒரு நரி பெரிய ஆடு ஒன்றுடன் நட்புக் கொண்டதாம். நரி ஆட்டுடன் நட்புக் கொள்ள பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஆட்டில் இரண்டு பெரிய கொட்டைகள் தொங்கிக் கொண்டிருப்பதை நரி பார்த்து விட்டது. அது எப்போதாவது வெளியில் விழுந்து விடும். நன்றாகச் சாப்பிடலாம் எனவும் அது எப்போது விழுமோ தெரியாது ஆகவே ஆட்டுடன் நட்புக் கொண்டு அதன் பின்னாலே திரிந்தால் கொட்டைகள் இரண்டும் விழும்போது சாப்பிட்டு விடலாம் என்ற ஆசையில் அதனுடன் சுற்றிக் கொண்டிருந்தது. கொஞ்ச காலம் சுற்றிக் கொண்டிருந்து விட்டு கொட்டைகள் எப்போது விழுவது நாம் எப்போது சாப்பிடுவது? என்று நினைத்துக் கொண்டே ஆட்டுடனான நட்பை விலக்கிக் கொண்டு சென்று விட்டது. ஆட்டின் கொட்டைகள் எப்போது விழுவது எப்போது நரி சாப்பிடுவது? நடக்கின்ற காரியமா? இதே போலத்தான் பணக்காரனுடன் நட்புக் கொள்வதும் அவன் உதவுவான் என்று நினைப்பதும். கதை புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். மழை இப்போதெல்லாம் பணக்காரன் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. 

மழையும் இதே கணக்காக கோவையில் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கின்றது. என் நினைவுகளில் ஊடாட தொடங்கின மழைக்கால அனுபவங்கள்.

ஆவணம் கிராமத்தில் கொஞ்சம் வயக்காடுகள் உள்ளன. என் சிறு வயதிலெல்லாம் சைக்கிள் அல்லது மாட்டு வண்டிகளில் தான் பயணம் செய்யலாம். இப்போது இருப்பது போல வீட்டுக்கு இரண்டு மோட்டார் வாகனங்கள் அப்போதெல்லாம் இல்லை. உரம் போட, மருந்து அடிக்க, களை பறிக்க இப்படி சனி அல்லது ஞாயிறுகளில் வேலை இருந்தால் நானும் வண்டியோடு வயலுக்குச் செல்வதுண்டு. பண்ணண்டாம் குளத்திலிருந்து வரும் தண்ணீரை வயலுக்கு அருகில் மடையை உயர்த்தி கட்டினால் தண்ணீர் தேங்கி வயலுக்குள் செல்ல ஆரம்பிக்கும். பயிர்களுக்குள் நடந்தால் கணுக்கால் அளவு தண்ணீர் இருக்க வேண்டும் அப்போதுதான் உரம் போடலாம். மருந்து அடிக்க தண்ணீர் கொஞ்சம் குறைவாக இருக்க வேண்டும். 

வயல் வரப்புகளில் உளுந்துச் செடி இருக்கும். எலிகள் வயலுக்குள் நுழைந்து நெற்கதிர்களைக் கடித்திடா வண்ணம் இந்த உளுந்தங்காய்கள் எலிகளுக்கு உணவாய் மாறும். தப்பிப் பிழைத்தவைகளை ஆய்ந்து வீட்டுக்கு கொண்டு வந்து வெயிலில் காய வைத்து உளுந்தை பிரித்து எடுக்க வேண்டும். கொத்துக் கொத்தாய் கருப்புகலரில் உளுந்தங்காய்கள் இருக்கும். 

வண்டியில் இருந்து இறங்கியதும் வயலோரமாய் செல்லும் கிளை ஆற்றில் கண்கள் சிவக்கச் சிவக்க ஆட்டம் போடுவேன். கரையில் மண் வரப்புச் செய்து அதில் தண்ணீரை வழி மாற்றி பின்னர் ஆற்றில் செல்ல விடுவது எனது வாடிக்கை. மீன் குஞ்சுகள் மாட்டும் என்று எதிர்பார்ப்பேன். ஒன்று கூட சிக்காது. மாமா இருந்தால் நடக்காது. அமைதியாக உட்கார்ந்து கொள்ளவில்லை என்றால் முதுகு பழுத்து விடும். போஸ் இருந்தால் ஆட்டம் அதிகமாகி விடும். அவன் உரம் போட்டு வரும் வரை ஆட்டம்தான். 


இது போன்ற ஏதோ ஒரு நாளில் வயலுக்குச் சென்றிருந்த போது மழை கொட்ட ஆரம்பித்தது. மழையோடு உரமிட்டால் தண்ணீரில் சென்று விடும் என்பதற்காக உரம் போடவில்லை. வண்டியின் கீழே உட்கார்ந்து கொண்டான் போஸ். ஆனால் நானோ ஆற்றுக்குள் அமிழ்ந்து கொண்டேன். தலை மீது சுள் சுள்ளென்று மழை கொட்ட ஆற்று நீர் வெது வெதுப்பாக இருக்க மழையில் நனைந்து கொண்டே தண்ணீருக்குள் அலைந்து கொண்டிருந்தேன். மழை விடுவதாகத் தெரியவில்லை. போஸ் உரத்தை மூட்டையாகக் கட்டி மேலே தார்ப்பாயைச் சுற்றி வைத்து விட்டு வீட்டுக்குப் போகலாம் என்றுச் சொன்னான். பசி வேறு வர வண்டியில் அமர்ந்து கொண்டேன். துண்டைத் தலையின் மீது போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். 

வண்டிமாடுகள் அசைந்து கொண்டிருந்தன. மழையோ கொட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மழை நிற்க சில்லென்ற காற்று வீசியது. மீண்டும் படபடவென்று மழை கொட்ட அதனுடன் வெள்ளையாக ஏதோ விழுந்தது. பனிக்கட்டி போல இருந்தது. ஆலங்கட்டி மழைடா என்றான் போஸ். திடு திடுவென கொட்டியது. வலித்தாலும் எடுத்துக் கைகளில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது வாயில் போட்டுக் கொள்வேன். சில்லென்று இருக்கும். மழையில் நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

எட்டாவது படிக்கும் போது ஆலங்கட்டி மழையில் சிக்கியதுண்டு. அதன் பிறகு இதுவரையிலும் ஆலங்கட்டி மழையை நான் பார்க்கவே இல்லை. மழை பெய்கிறது. நானும் நனைகிறேன். ஆனால் ஆலங்கட்டியைத்தான் காணவில்லை. ஆலங்கட்டி என்று ஏன் அழைக்கின்றார்கள் என்று தெரியவில்லை. 

Monday, December 12, 2016

விதை முளைக்க உமி தேவையில்லை

ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே மதத்தின் வழி அடையாளப் படுத்தப்படுகின்றான். எவரும் தப்ப முடியாது. பெயராலோ, இனத்தாலோ அல்லது எதுவோ ஒன்றாலோ அவன் இன்னவன் என்கிறபடி அடையாளப் படுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்படுகிறான். மதங்கள் பிறப்பதற்கு முன்பு மனித வாழ்வு இப்படி இல்லை. அவன் வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்தான். 

எப்போது மதங்கள் உருவானதோ அப்போதே அவன் வாழ்க்கையை இழந்தான். 

அவனைச் சுற்றி மதங்கள் வழிபாடுகள் என்ற சிறைக்கம்பிகளை வைத்துச் சிறைப்படுத்தின. இனி அவன் எந்தக் காலத்திலும் சிறையிலிருந்து வெளி வர முடியாது. அந்தச் சிறை அவனுக்கு கடும் துன்பத்துடன் கூடிய மரணத்தை மட்டுமே பரிசளிக்கும். வாழ்க்கை அவனை விட்டு தூர ஓடி விட்டது. இயற்கையாக மலர வேண்டிய மரணத்தை துன்பகரமாக்கி துயரத்தில் ஆழ்த்தி கொன்று விடுகிறது. மதம் என்பது அனுபவம், முன்னாள் சென்றவர்களின் வழிச் சுவடுகள் இன்றி ஒவ்வொரு மனிதனும் தனியாகத்தான் பயணம் செல்ல வேண்டும் என்கிறார் ஓஷோ.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள் கடுமையான மன அழுத்தமேற்பட மன அமைதிக்காக வண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றேன். உறவுகள், நட்புகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தொழில் செய்பவர்கள் என பலராலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றோமே இது என்ன விதமான உலகம் என்று புரிந்து கொள்ள முடியாமல் திணறினேன். முகத்துக்கு முன்னால் ஒரு பேச்சு முதுகுக்கு பின்னால் வேறொரு பேச்சு பேசுகின்ற நண்பர்களால் மனது வெம்மையாகி புழுங்கியது. பல்வேறு உடலியல் சிக்கல்களில் இருக்கும் எனக்கே மனச்சாட்சியை இழந்து துரோகங்கள் இழைக்கப்படுகிறபோது ஏற்படும் அதிர்வுகளில் மனம் சிக்கி சிதிலமடைந்து கொண்டிருந்தது. வாழ்வியல் சிக்கல்களை அவிழ்க்கும் முடிச்சு தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். எது வாழ்க்கை எனப் புரியாமல் எனக்குள் சிதறிக் கொண்டிருந்தேன்.

சிங்கா நல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் செல்லும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டிருந்தது. பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று ’டீ சாப்பிடலாம்’ என்று நினைத்துக் கொண்டு உள்ளே வண்டியை விட விஜயா பதிப்பகத்தின் புக் ஸ்டால் இருந்தது. அதில் காட்சிப்படுத்தியிருந்த புத்தகத்தில் ஓஷோ கைகளை நீட்டியபடி நின்று கொண்டிருந்தார். எனது கல்லூரி காலத்தில் ஓஷோவின் ’ஒரு கோப்பை தேநீர்’ புத்தகம் கிடைத்தது ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டின் ஓரமாக வண்டியில் அமர்ந்துகொண்டு புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தேன். 

வீட்டுக்கு வந்தும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். மனிதர்களைப் புரிந்து கொண்டேன். வாழ்க்கையை புரிந்து கொண்டேன். மதங்களைப் புரிந்து கொண்டேன். எல்லாம் வெளிச்சமானது போலத் தெரிந்தது. 

நேற்று ஓஷோவின் பிறந்த நாள். அவர் உண்மையைப் பட்டவர்த்தமாகச் சொன்னதால் 22 நாடுகள் சேர்ந்து விரட்டின. விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். ஆனால் அவரின் உண்மையோ இன்றும் பேசிக் கொண்டே இருக்கிறது. எனக்கு வெளிச்சத்தை உணர வைத்த அவரை நினைத்துப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

எல்லா மதங்களையும் அவர் ஆராய்ச்சி செய்தார். அதன் பலாபலன்களை விவரித்தார். இந்து மதத்தை பூசாரிகளின் ஆதிக்கம் நிறைந்தது அங்கு கடவுளே இல்லை என்றார். முஸ்லிம் மதத்தை விமர்சித்தார். கிறிஸ்து மதத்தை மரணக் குறியான சிலுவையை வணங்கும் மதம் என்று காட்டமாக விமர்சித்தார். பிறப்பும் இறப்பும் இயற்கையானது. இடைப்பட்ட வாழ்வில் வாழ்க்கைத்தானிருக்கிறது. அதை மனிதன் வாழ வேண்டும் என்றார். 

மதம், இனம், மொழி, தேசம் என்கிறவை எல்லாம் மனிதனுக்கான தளைகள். அவைகளால் மனிதன் சிறைப்படுகின்றானோ ஒழிய அவன் வாழ்க்கை சின்னப்படுத்தப்படுகிறதோ ஒழிய அவனுக்கு நன்மை தருவதில்லை என்கிறார். தனி மனித பிரச்சினைகளுக்கு இவையே காரணம் என்று சாடுகிறார்.

ஜைன மஹாவீரர், புத்த மதங்களையும் தத்துவங்களையும் அவர் அலசி ஆராய்ந்தார். முடிவில் எல்லோராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஜென் என்பது மனிதனுக்கானது என்று விவரித்தார். 

ஜென் மதமும் அல்ல சித்தாந்தமும் இல்லை அது எதுவுமே இல்லை என்றார். எதுவுமே இல்லாத ஒன்று தான் மனிதனுக்கு முழுமையான வாழ்க்கையைத் தருகிறது என்றார்.

சலனமற்ற, சிந்தனையற்ற மன நிலையை எவனொருவன் அடைகின்றானோ அவன் இந்த சமூக வாழ்க்கையிலிருந்து வெகு எளிதாக தன்னை மீண்டெடுத்து தனக்கான வாழ்க்கையை வாழ்வான் என்று தனது உரைகள் மூலம் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் ஓஷோ.

மனிதனின் தற்போதைய வாழ்க்கையை அவர் ஒரு கதை மூலம் விவரிக்கிறார். இதோ கதை!

முல்லா நஸ்ருதீனின் சமாதியில் ஒரு பெரிய மரக்கதவு பொருத்தப்பட்டுள்ளது. அது அடைத்துப் பூட்டப்பட்டிருக்கிறது. யாரும் அதற்குள் நுழைய முடியாது கதவின் வழியாக. அது அவருடைய கடைசி வேடிக்கை. அந்தச் சமாதிக்கு நான்கு சுவர்களே இல்லை. வெறும் பூட்டிய கதவு மட்டுமே. முல்லா நஸ்ருதீன் தம் சமாதியை எப்படி அமைத்தாரோ, அப்படித்தான் ஒவ்வொருவரும் தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர் அறியாமலேயே! வாழ்க்கை பாதுகாப்பின்மையானது. அது தான் நிதர்சனம். அதை உணர்ந்து கொள்ள வேண்டும். விஷயம் அவ்வளவுதான். 

அதிகாரம், பதவி, பணம், இறையருள், ஆத்மபலம் ஆகியவைகளால் உருவான கதவினால் பூட்டப்பட்டிருக்கும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைப்பதே எவ்வளவு அனர்த்தம்? இது மட்டுமல்ல மனிதன் தான் அறிவாளி என்று நினைத்துக்கொள்வதுதான் ஆகப் பெரும் முட்டாள் தனமானது. 



ஒவ்வொரு மனிதனும் மதத்தின் வழியாக நின்று கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றான். எதார்த்தமான வாழ்க்கை வாழாமல் நெறி முறைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இறந்து போய் விடுகிறான். ஒரு கதை ஒன்று உங்களுக்காக ஓஷோ சொல்லி இருக்கிறார்.

ஓர் இருண்ட இரவில், ஒரு பக்கிரி பாழ்கிணற்றின் ஓரமாகப் போய்க் கொண்டிருந்த போது, அபயக்குரல் கேட்டு எட்டிப் பார்த்தார். “என்ன ஆச்சு?” என்று கிணற்றுக்குள் பார்த்துக் கேட்டார். “ஐயா, நான் ஓர் இலக்கணப் புலவன். துரதிர்ஷ்டமாக உள்ளே விழுந்து விட்டேன், வழி தெரியவில்லை, அதனால் தான், இப்போது நகர முடியவில்லை” என்றார் உள்ளே கிடந்தவர்.

“இரப்பா! ஒரு ஏணியும் கயிறும் கொண்டாறேன்” என்றார் பக்கிரி.

“ஒரு நிமிடம்! உங்கள் பேச்சு இலக்கணப் பிழை. அதை நான் திருத்தி விடுகிறேன்” என்றார் உள்ளே விழுந்தவர்.

”ஏணியையும், கவுத்தையும் விட அது முக்கியம்னா, நான் நல்லாப் பேசக் கத்துக்கிற வரை நீ அங்கேயே கெட!” என்றுச் சொல்லி நகர்ந்தார் பக்கிரி.

(பிரேம் உங்களுக்குப் புரிகிறதா?)

ஓஷோ உண்மையின் உரைகல். எதார்த்தமான வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான உரைகளை ஓஷோ வழங்கி இருக்கிறார். அவரை நாம் பின் தொடர வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றிய அவரின் கருத்துக்களை புரிந்து கொள்ளலாம். அதன் உண்மையை ஆராயலாம், எது சரி எது தவறு என்ற முடிவெடுக்கலாம். நாமும் புதிதாகச் சிந்திக்கலாம். அதன் தொடர்ச்சியாக வெளிச்சமடையலாம். 

ஒவ்வொருவருக்குள் வெளிச்சம் ஏற்பட வேண்டும். அதுவே உண்மையான வாழ்க்கை!

குறிப்பு : ஜெயமோகன் அவர்கள் தனது பிளாக்கில் தமிழ் இந்துவில் எழுதப்பட்ட கட்டுரையைப் பதிவேற்றி இருந்தார். விசித்திர புத்தர் என்று தலைப்பிட்டிருந்தார். ஓஷோ அடையாளப்படுத்தப்படுவதைத்தான் உடைத்தார். ஓஷோ புத்தரையே சின்னாபின்னமாக்கினார். புத்தமதத்தை கேள்விகளால் துளைத்தெடுத்தார். ஜைன மதத்தின் ஆணி வேரையே அசைத்தார். ஓஷோ வந்து சென்றவர். புத்தரல்ல!

அதுமட்டுமல்ல ஓஷோவின் கேலியும் கிறுக்கும் இன்றைய நவீன ஊடங்களில் விரவிக்கிடக்கின்றன என வெட்டி அரட்டையும் அர்த்தமில்லா பதிவுகளையும் கொண்ட நவீனமய விளம்பர உத்திகளை தன்னகத்தே அடக்கிய இணையதள ஊடகங்களும் கருத்துக்களும் ஓஷோவின் உடைத்தல்களும் ஒன்றானவை என்பது போல எழுதி இருப்பது சரிதானா? என்றொரு கேள்வியை எனக்குள் எழுப்பி இருக்கிறது. 

Wednesday, December 7, 2016

வாழ்க்கை சொல்லும் நியதி - ஜெயலலிதா அம்மா

நேற்று இரவு 7 மணி வரை டிவி முன்பு உட்கார்ந்து விட்டேன். ஆறாம் வகுப்புப் படிக்கும் போது என நினைவு. இந்திரா காந்தி அம்மையார் சுடப்பட்டார் என்ற ரேடியோ தகவல் வர நான் படித்த ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் உடனடியாக லீவு விட்டு விட்டார்கள். ஆனால் கண்டிப்பாக மறு நாள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் பள்ளியின் சார்பாக அமைதி ஊர்வலம் நடத்தப்படும் என்று வாத்தியார்கள் சொல்லி இருந்தார்கள். 

மறுநாள் பள்ளிக்குச் சென்ற போது ஹெச்.எம். என்னை அழைத்து ஊர்வலத்தின் முனையில் மூன்று சக்கர வண்டியில் தான் போட்டோவை வைத்து அலங்கரித்து செல்ல இருக்கிறோம் என்றுச் சொன்னார். அதன்படி சைக்கிளில் அம்மையார் இந்திராவின் போட்டோவை முன்புறம் வைத்து பூக்களால் அலங்கரித்து நடுவில் அடியேன் உட்கார ஊர்வலம் கிளம்பியது. பின்னால் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் வரிசையாக வந்தனர். வழியெங்கும் மக்கள் சைக்கிள் முன்பாக வீழ்ந்து வணங்கினர். சிலர் கும்பிட்டனர். ஒரு சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். ஆவணம் கடைத்தெரு தாண்டி பள்ளி வாசல் வழியாக கைகாட்டி வரை சென்று ஆலமரங்கள் இருக்கும் பகுதியில் இருந்த டிவைடரைச் சுற்றிக் கொண்டு திரும்பவும் ஆவணம் கடைத்தெருவுக்கு வந்து போட்டோவைக் கழற்றி, அங்கு கொடிக்கம்பினருகில் வைக்கப்பட்டிருந்த அம்மையார் இந்திராவின் போட்டோவின் முன்பு அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர் மறைவின் போது இதே போன்று அமைதி ஊர்வலத்தில் முனையில் அடியேனின் சைக்கிளில் போட்டோ வைத்து கலந்து கொண்டேன். மதியம் போல ஐயோபி பேங்க் அருகில் இருந்த முஸ்லிம் ஒருவரின் வீட்டில் இருந்த பிளாக்கண்ட்வொயிட் டிவியில் லைவ் ரிலே பார்த்தேன். சிறிய வயதில் எனக்கு எம்.ஜி.ஆரின் மறைவும், இந்திராவின் மறைவும் மனதுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திடவில்லை. ஆனால் ஜெவின் மறைவு பெரும் மனத்துன்பத்தைத் தந்து கொண்டே இருந்தது. 

நேற்றைக்கு முழுமையும் மனதுக்குப் பாரமாக இருந்தது. சாப்பிடக்கூட முடியவில்லை. சிறிய வயதில் வீட்டுக்குள்ளும்,  மாட்டு வண்டியிலும் புகைப்படமாக பார்த்து வளர்ந்தவன். மனதுக்குள் பதிந்த அதீத ஆளுமையாக இருந்தார். தாய் மாமா அம்மாவின் பக்தர். அவரின் வளர்ப்பு நான். மாமாவைப் போலவே அம்மாவின் மீது பேரன்பு கொண்டவன்.

சாதாரண மனிதர்கள் விதி என்பார்கள். நானும் அதைத்தான் நம்புகிறேன். விதி அவருக்கான வாழ்க்கையை முற்றிலுமாய் ஆக்கிரமத்திருந்திருக்கிறது. அவரின் ஒவ்வொரு செயலிலும் அவருக்கான விதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. எப்படி என்றுச் சொல்கிறேன்.

எம்.ஜி.ஆர் மறைவின் போது தனியாளாக நின்று கொண்டிருந்தவரை கடைசி நிமிடத்தில் ராணுவ வண்டியில் ஏற விடாமல் விரட்டியது. எதிர்கட்சித் தலைவராக இருந்த போது சட்டசபையில் தாக்கப்பட்டது. முதலமைச்சரான போது தத்து எடுத்த நிகழ்வின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டது. கும்பகோணத்தில் சாமி கும்பிடப்போன இடத்தில் கூட விதி தன் விளையாட்டைக் காட்டியது. இரண்டாம் முறை முதலமைச்சரானபோது பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் பதவி போனது, பின்னர் மீண்டும் முதலமைச்சரானது. முதலமைச்சராய் இருந்த போது கைதானது. இதோ தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சரான போது ஆயுள் முடிந்தது.

அவரின் வாழ்க்கை நமக்கு பல்வேறு உண்மைகளைச் சொல்கிறது. எதுவும் எவருக்கும் முழுமையாக கிடைத்து விடுவதில்லை. அதிகாரம், புகழ் அனைத்தும் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை இல்லாமல் இருந்தார். அவரின் ஒவ்வொரு மகிழ்வான தருணத்திலும் தொடர்ந்து துன்பங்களும் அவருக்கு வந்து கொண்டே இருந்தன. இன்பத்தையும் துன்பத்தையும் அவர் ஒன்றாகவே அனுபவித்து வந்துள்ளார். 

அவர் தனக்காக வாழவே இல்லை. பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த உண்மையான அம்மா அவர் மட்டுமே.